‘சாரதியிடம் அதே கேள்விகளுடன்’, ‘இருப்பு’ – கமல தேவி கவிதைகள்

கமல தேவி

சாரதியிடம் அதே கேள்விகளுடன்

யுகங்கள்தோறும் கேள்விகள் மாறவில்லையென
கேட்க நினைக்கும் கணம் தோன்றுகிறது…
அதனாலென்ன…
பதில்கள் மாறலாமில்லையா?
“வருவேன்” எனச் சொன்னவன்
அதிகாலை நீலத்திலிருந்து திரண்டு வந்தான்
புன்னகைத்தான்…
மரியாதை கருதி புன்னகைத்துவிட்டு,
ஆக வேண்டியதைப் பார்த்தேன்…சொல் திரண்டது,
“அவமானம், வஞ்சகம், துரோகம்
இவற்றின் முன் என்ன செய்வேன்?”
புன்னகைத்தவனைக் கண்டு “மாயம் வேண்டாமென”
குரலுயர்த்த நினைக்கையில்,
அவன் சுட்டு விரல் நீண்ட திசை பார்த்தேன்,
தன்னியல்பில் இலையுதிர்க்கும் மரம்,
புன்னகைத்துத் திரும்புகையில்
வானத்தின் நீலம் வெளிறி
ஆதவன் கரங்கள் நீட்டத் தொடங்கியிருந்தான்.

oOo

இருப்பு

விளக்குகள் அணைந்த நேரத்தில்
பயணத்திற்கான முதலடியை வைத்தேன்.
திரும்புவது எளிதுதான்,
திரும்பாததைப்பற்றி என்ன சொல்ல
திரும்பவில்லை என்பதைத் தவிர.
மெல்ல அடுத்த அடி.
ஔியின்மையில்
காலமும் இல்லாமலாகுமா?
எடுத்து வைத்த அதே அடியில்
நிற்பதாய் பதட்டப்பட்டு கொண்டேயிருந்தேன்.
காலமற்ற காலத்தில்
தூரம் அர்த்தப்படாத பாதையில்
மிக மெல்லிய ஔிக்கீற்று
முதலில் புள்ளியென்று இருந்தது.
பின் ஔிப்பூவென..!
மலர்தலின் கணத்தை அறிந்த ஒன்றே
காத்திருக்கிறது மலர்தலுக்காக எனில்
சொல்ல என்ன உள்ளது!
அதன் பின்னால்
அனைத்தும் காத்திருப்பதாய் தோன்றியது.

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.