நிஜத்தின் சாயலில் மனித வாழ்வை நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் ஏராளம் கற்பனைத் தடைகளோடுதான் இன்றைய மனித வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்வென்பது எப்போதும் அர்த்தங்கள் பற்றிய பிரக்ஞையாக மட்டுமே இருப்பதில்லை. சிலவேளைகளில் நாம் அர்த்தங்களற்ற சொற்களைக் கொண்டு அர்த்தங்களற்ற ஒரு வாழ்வை உருவாக்கிக் கொள்கிறோம். அந்த வாழ்வு நிஜத்தின் எந்தவிதப் பிரக்ஞையுமற்ற ஒரு கனவுலகைப் போன்று சாஸ்வதமானதாக தொடரும்போது வானளாவிய கனவுகளோடு நாம் வலம் வருகிறோம். ஒரு சிறு கணத்தில், கனவுகள் அர்த்தமற்று நீர்த்துப் போகும் ஒரு தருணத்தில் நாம் கட்டியெழுப்பிய கற்பனை உலகம் எந்தக் கரிசனையுமற்று நம்மைக் கைவிட்டு விடுகிறது.
அந்தக் கட்டத்தில் சூழ்நிலையின் நெருக்கடிகளால் ஒவ்வொரு தனிமனிதனும் காயப்படுத்தப்பட்டு விடுகிறான். கடைசியில் அந்த வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் ஒவ்வொரு மனிதனும் இன்று தடுமாறிக் கொண்டிருக்கிறான்.