(உரைநடை தமிழாக்கம் பீட்டர் பொங்கல்; கவிதை தமிழாக்கம் – நகுல்வசன்)

Image Credit: http://www.poetryfoundation.org
ஈஃப் பன்ஃபுவா (Yves Bonnefoy) இம்மாதத்தின் துவக்கத்தில் மறைந்தார். கடந்த அறுபது ஆண்டுகளின் மிக முக்கியமான, மிகுந்த தாக்கம் செலுத்திய பிரஞ்சு கவிஞர் என்று பலராலும் கருதப்பட்டவர் இவர். உலகோடு நாம் எவ்விதத்திலும் “பொய்க்கலப்பற்ற நெருக்கம்” (“authentic intimacy”) கொள்ளாத வகையில் மொழி நம்மை விலக்குகிறது என்று அவர் நம்பிய காரணத்தால், “நாம் அதைத் தொலைத்துவிட்டோம் என்பதை நினைவுறுத்தவும்“, “பிறரை, அல்லது மரங்களை, அல்லது எதையும் நாம் எதிர்கொள்வது சாத்தியப்படும் கணங்களின்” மதிப்பை நமக்கு நாமே மெய்ப்பித்துக் கொள்ளவும், நமக்கு கவிதை தேவைப்படுகிறது என்றார் அவர். எந்தவொரு அறிவு சார்ந்த குறுக்கீடாலும் களங்கப்படாத “le vrai lieu”- மெய்யுலகம்- ஒன்றை மீளுருவாக்கம் செய்வதற்கான அவரது முயற்சிகளும் மெய்ம்மையை நோக்கிய கோரிக்கையும் பன்ஃபுவாவின் கவிதைகளில் கண்ணுக்குத் தெரியாத இருப்பாய் சூழ்கின்றன. மெய்ம்மையின் இயல்புநிலையில் நிலவிய பூரணத்துவ எச்சங்கள் இன்னும் மண்ணில் எஞ்சியிருக்கின்றன, அவற்றைச் சேகரித்து மீண்டும் கட்டியெழுப்புவதே கவிஞனின் பணி. இருப்பை அடைய வேண்டுமெனில் அதன் இயல்புநிலையில் துலங்கும் குறியீட்டு ஆற்றலை விரயம் செய்யும் கருத்துநிலை சட்டகத்திலிருந்து மொழியை விடுவித்தாக வேண்டும். “சொல்லென்பது இனிமேலும் உள்ளதன் விவரணையுள் நுழைவதல்ல“.
கவிதை மட்டுமே, வடிவத்தில் கவனம் செலுத்தும்போது “சொற்களின் கருத்துநிலை பொருளை மௌனிப்பதால்” கிட்டத்தட்ட தெய்வீகமாயுள்ள தரிசன கணத்தை மீண்டும் உருவாக்கக்கூடியது. கவிதை மட்டுமே, “உலகின் நேரடி நோக்கு” அளிக்கக்கூடியது. La Seconde Simplicité (1961), என்ற தொகுப்பில் உள்ள “The Lights of Brindisi”, என்ற கவிதையில், கவிஞர் காண்கிறார் – மூடப்பட்ட தோட்டச் சுவற்றால் சேய்மைப்படுத்தப்பட்ட இலைகளுக்கு அப்பால், நிஜமற்ற புன்னகை கொண்ட “வெள்ளி’ நிலவுக்கு அப்பால்- தோன்றி மறையும் வேறொன்றின் முத்திரையை, கண்ணுற்ற கணமே அது காணாமற் போகிறது.
ப்ரின்டீசியின் விளக்குகள்
இரவில், ப்ரின்டீசி துறைமுகத்தில்,
தேவதைகள் அகலேந்திப் பறந்து கொண்டிருந்தன, அழல்கள்
அவற்றின் மேல்நோக்கும் முகங்களைக் காட்டின, கடலில்.
-ஓ! நிஜ இலைகளே,
பூட்டிய தோட்டத்தின் சுவர்கள்
உங்களைத் தொலைவிலிருத்தும், எப்போதுமே;
மரங்களின் சிகர வெள்ளியாய்
தலை சாய்த்திருக்கும் நகைமுகமே,
புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே.
ஆனால் இன்றிரவு என்னால் உன்னைப் பார்க்கமுடிகிறது;
நுரையின் முத்திரையே,
கடக்கும் படகு உன்னை விட்டும் செல்கிறது, இரவில்.
(ஆங்கில மொழிபெயர்ப்பு – அந்தோணி ருடால்ஃப், 1966)
நன்றி – Andrew McCulloch, Times Literary Supplement
One comment