அகரமுதல்வனின் ‘பான் கீ மூனின் ருவாண்டா’ – நரோபா

நரோபா

 உருவாகி வரும் புதிய அலை ஈழ எழுத்துக்களில் அகரமுதல்வனும் ஒரு முகம். 1992ஆம் ஆண்டு பிறந்த அகரமுதல்வன் இறுதிகட்ட போருக்கு சாட்சியாக இருந்தவர். இதுவரை மூன்று சிறுகதை தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். கவிதை தொகுப்புக்கள், கட்டுரைகள், குறும்படம், ‘ஆகுதி’ அமைப்பின் வழியே இலக்கியச் செயல்பாடுகள் என முனைப்புடன் இயங்கி வருகிறார். பதின்பருவத்தில், பதினாறு- பதினேழு வயதில், விழுமியங்கள் நிலைபெறும் காலத்தில், பெரும் அலைகழிப்புகளையும் துக்கத்தையும் அகரமுதல்வன் ஈழத்தில் எதிர்கொண்டிருக்கிறார். இடப்பெயர்வுகளும், மரணங்களும், துயரங்களும் சூழ்ந்த வாழ்வு. இவை அவருடைய படைப்புலகில் என்ன விதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும்? அவருடைய முந்தைய தொகுப்புக்கள் வாசித்திராத சூழலில் ‘குக்கூ’ சிறுகதை கூடுகைக்காக அவருடைய அண்மைய தொகுப்பான ‘பான் கீ மூனின் ருவாண்டா’ தொகுப்பை வாசித்தேன்.

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ‘பான் கீ மூனின் ருவாண்டா’ பத்து சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு. ‘பான் கீ மூனின் ருவாண்டா’ எனும் பேரில் ஒரு கதை தொகுப்பில் இல்லாதபோதும், சர்வதேச சமூகம் ஈழ இனப் படுகொலைக்கு மவுன சாட்சியமாக இருந்தது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவிக்க இந்த தலைப்பை தேர்ந்துள்ளார். எல்லோரையும் பொறுப்பேற்கச் சொல்கிறார். உங்கள் கரங்களில் குருதிக்கறை உள்ளது பாருங்கள், என நினைவூட்டுகிறார்.

அகரமுதல்வன் எவ்வித ஒளிவு மறைவுமின்றி தன் அரசியல் தரப்பை பிரகடனப்படுத்திவிட்டுதான் படைப்புகளுக்குள் செல்கிறார். தனது வலைப்பக்கத்தில் “ஆயுத சத்தங்கள் அற்று அழிக்கப்படும் இனத்தின் நிதர்சனமாக இனத்தின் தேசிய வாழ்வை வலியுறுத்தும் படைப்புக்களை உருவாக்கி கொள்வதனால் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடூரத்தினை உடைத்தெறியும் சக்தி என் எழுத்துக்களுக்கு இருக்கிறது” என்று எழுதுகிறார். தொகுப்பில், கதைகளைப் பற்றி விமர்சனபூர்வமாக சில கருத்துக்கள் கொண்ட அபிலாஷின் முன்னுரை இடம்பெற்றுள்ளது. அகரமுதல்வனின் கவிதைகளில் பெண்ணுடல் ஈழ மண்ணுக்கான ஒரு உருவகம், என அவர் குறிப்பிடுகிறார்.

அகரமுதல்வனின் புனைவுலகில் என்னை மிகவும் ஈர்த்தது, அவருடைய ஆகச் சிறந்த பலம் என நான் கருதுவது, அவருடைய மொழி. கவிஞன் என்பதால் இயல்பாக மொழியை வளைக்க அவரால் முடிகிறது. “துயிலின் மேடையில் குளம்படிகள் பற்றிய குதிரைகளை இளம் அகதி சவாரி செய்தான்” (பெயர்), ”மேகங்களைப் பிரித்து நிலவைக் களவாடும் சூரத்தனம் நிறைந்தது” (பெயர்) “ஆன்மா களைந்து கிடுகுகளால் மேயப்பட்ட வெற்றுப் பெட்டிகளாயிருந்தன”, “அரக்கனின் கையில் அடைபட்ட பாம்பைப் போல மூச்சைத் திணறினாள்” (கள்ளு). சில நேரங்களில் மொழிரீதியான தாவலின் வழியாக கதைக்கு கூடுதல் மடிப்புகளை அளிக்கிறார். “மரணத்திற்கு பழக்கப்பட்ட ஒரு மாமிசக் காலத்தின் சுவட்டைப் போலிருந்தது அந்தக் கடைத்தெரு”, “சதா சிரித்துக்கொண்டே நம்மைத் தின்று பெருக்கும் யுத்தத்தின் வயிற்றைத்தான் நாம் இனி பூமி எனப் போகிறோம்” (தாழம்பூ).

அகரமுதல்வனின் இத்தொகுதியின் கதைகளை மூன்றாக வகுக்கலாம். போருக்கு பிந்தைய காலகட்ட வாழ்வை சொல்லும் கதைகள்- ‘பெயர்’, ‘தந்தம்’. போரின் ஊடாக சாமானியரின் வாழ்வை சொல்லும் கதைகள் – ‘முயல்சுருக்கு கண்கள்’, ‘இவன்’, ‘கள்ளு’, ‘தீபாவளி’. போராளிகளின் வாழ்வை சொல்லும் கதைகள் – ‘சங்கிலியன் படை’, ‘தாழம்பூ’, ‘கரைசேராத மகள்’, ‘குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார்’.

அகரமுதல்வனின் கதைகளில் ஒருவித வாழ்க்கைச் சரிதைத் தன்மை கொண்ட கதைகள் என “குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார்” “கள்ளு” “தீபாவளி” “இவன்” “கரைசேராத மகள்” ஆகிய கதைகளை அடையாளப்படுத்தலாம். இக்கதைகள் தொய்வின்றி வாசிக்க முடிந்தன. குறுநாவல்களாக, நாவல்களாக விரித்து எழுதத்தக்கவை.

அச்சமூட்டும் இருள் நிறைந்த கதைகளில் “முயல்சுருக்கு கண்கள்” மட்டுமே இத்தொகுதியில் சின்ன சிரிப்புடன், நேர்மறையாக முடியும் கதை. இந்தக் கதையில் புற விவரணைகள், காடும் உடும்பு வேட்டை பகுதிகளும் காட்சிகளாக மனதில் நிற்கின்றன. நேரடியாக போரோ வன்முறையோ இல்லாத கதை, போருக்கு அப்பாலான யதார்த்த வாழ்வை சித்தரிக்கிறது. அதே வேளையில் போர் ஒரு பின்புலமாக சன்னமாக கோடிட்டு காட்டப்படுகிறது. ஆதவியின் தந்தை காட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது நினைவுகூரப்படுகிறது. கிழவர், நாடும் காடும் பறிபோகிறது, என இயக்கத்திடம் முறையிடுகிறார். உடும்பை வேட்டையாட முயலுடன் சென்றவனின் கதை. இந்தக் கதையின் வடிவத்தை தொடர்ந்து கூர்தீட்டி எழுதும்போது மேலான கலைத்தன்மையை அகரமுதல்வனின் கதைகள் அடையக்கூடும். இக்கதையில் சிக்கல் இல்லாமல் இல்லை. மொழிரீதியாக ‘உவமைக் குவியலை’ அளிக்கிறார். அகரமுதல்வன் பயன்படுத்தும் சில உவமைகளில் அவருடைய மரபிலக்கிய தேர்ச்சி புலப்படுகிறது. சில உவமைகள் ரசிக்கச் செய்தாலும், அவை அதீதமாகி வாசிப்பைக் குலைக்கின்றன. சிறுகதை கவிதைக்கு நெருக்கமான வடிவத்தில் இன்று எழுதப்படுகின்றது என்பது என்னவோ உண்மை. அது கவிதையின் மவுனத்தையும், தரிசனத்தையும், வாசக இடைவெளியையும் கைக்கொள்ள வேண்டும்.

“பெயர்” புலம்பெயர் வாழ்வின் அடையாளச் சிக்கலை சொல்லும் கதை. ஈழத்திலிருந்து தப்பி சென்னைக்கு வருகிறான், தன்னை மறைத்துக்கொண்ட ‘இளம் அகதி’. அவனை அழைத்துச் செல்லும் வாகனக்காரர் பெயர் கேட்டபோது கண் கலங்குகிறான். அவர் சென்ற பிறகு ‘இளம் அகதியின் சிரிப்பு அமுங்கி அமுங்கி அந்த அறையில் எழுந்தது,’ எனும் இடம் இக்கதையில் எனக்கு முக்கியமான இடமாகப் பட்டது. தன் அடையாளத்தை அவன் அஞ்சி மறைக்கவில்லை. அதில் ஒரு சிறு விளையாட்டும் சேர்ந்திருக்கிறது. திரளில் தன்னை அமிழ்த்திக் கொள்ள முயல்பவர்களாகவே இருக்கிறார்கள் ‘இளம் அகதியும்’ ‘அகதியானவளும்’. சாதாரணமாக பணி காரணமாக இடம் பெயர்ந்தவர்களுக்கும் அகதிகளுக்குமான வேறுபாடு என்பது கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகளில் உள்ளது. பெயர்ந்தவர்கள் கடந்த காலத்தை மறக்க முயல்கிறார்கள். அகதிகள் அதை இறுகப் பற்றி தங்களுக்குள் பாதுகாக்க விழைகிறார்கள். ஒருவகையில் அவர்களுடைய இறுதி பற்றுகோல் நினைவுகளே. நினைவுகளின் கடந்த காலங்களுக்கும் நிகழ்காலத்திற்கும் இடையேயான ஊசலாட்டத்தால் நிறைந்தது அவ்வாழ்வு.

‘தீபாவளி’ உணர்ச்சிகரமான சித்தரிப்பால் மனதைப் பதறச் செய்த கதை. பதினான்கு முறை தன் வாழ்வில் இடம் பெயர்ந்தவன் கதிர்காமன். இந்திய அமைதிப் படை நிகழ்த்திய குண்டு வெடிப்பில் தன் மனைவியையும் மகளையும் இழக்கிறான். ‘சந்திரா இந்திரா’ என தன் மகளுக்கு பெயரிடுகிறார். ‘குடாநாட்டு வாத்தியார் கடத்தப்பட்டார்’ கதையிலும் ‘எம்.ஜி.ஆர்’ மீதான ஈழ மக்களின் பிணைப்பு வெளிப்படுகிறது. இந்திய அமைதிப் படையின் தாக்குதலின் விளைவாக நேரும் பிஞ்சுக் குழந்தை இந்திராவின் மரணம் வெகுவாக அமைதியிழக்கச் செய்கிறது. தொகுப்பின் இறுதி கதையில் வருவது போல “உலகின் மோசமான நிகழ்வுகளுக்கு கடவுள் காரணமல்ல” என்று சொல்லிவிட முடியுமா எனத் தெரியவில்லை. உணர்ச்சிகளால் சற்று அமைதியிழக்கச் செய்த மற்றொரு கதை என “கரை சேராத மகளை” சொல்லலாம். சாதனாவின் தோற்றம் மனதை தொந்திரவு செய்கிறது. கால்களற்ற, பார்வையற்ற ரத்தக் கன்று போலிருந்தாள். அவளை அந்நிலையில் விட்டுவிட்டு அவளுடைய அன்னை பூ ராணியும் இறந்துவிடுகிறாள்.

“தந்தம்” மற்றும் “குடாநாட்டில் வாத்தியார் கடத்தப்பட்டார்” ஆகிய தொகுப்பின் கடைசி இரு கதைகள் வழுக்கிக்கொண்டு செல்கின்றன. “தந்தம்” துரோகத்தின் கதை. போருக்கு பிந்தைய நெருக்கடிகளை சொல்கிறது. ராணுவத்துடன் இணைந்து முன்னாள் புலிகளை காட்டிக் கொடுக்கிறார்கள். அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சித்திரத்தை அளிக்கிறார். தெளிவத்தை ஜோசெப் ‘குடைநிழல்’ இத்தகைய தலையாட்டியின் செயல்பாடுகளை மிகக் கூர்மையாக சொல்லும். “குடாநாட்டு வாத்தியார் கடத்தப்பட்டார்” மனித வெடிகுண்டுகளாக மாறி கொழும்பில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை. சன்னமான அங்கதம் சம்பவங்களுடன் இழையோடுகிறது. பல கதாபாத்திரங்களும், கலைந்த வடிவமும் கொண்டிருக்கிறது. நாவலாக விரித்தெடுக்கும் வாய்ப்பு கொண்ட களமும்கூட. கதை சொல்லும் முறை கைவரப்பெற்ற கதை என இதை குறிப்பிடலாம்.

“கள்ளு” ஒரு பெண்ணின் மூன்று காதலர்களைப் பற்றிய வாழ்க்கைச் சரிதை கதை. இதில் ஒரு பாத்திரத்தின் பெயர் ‘கண்டி வீரன்’. தன்னை புலி என்று சொல்லிக்கொண்டு அந்நிய நாட்டில் தஞ்சம் புகுந்தவர் என அவரை கிண்டல் செய்கிறார். வேகமாக வழுக்கிச் செல்லும் கதையின் முடிவில் “தாய் நாடுமில்லை, தாய்களுக்கு முலையுமில்லை. யுத்தம் எல்லாவற்றையும் சபித்துவிட்டது” எனும் வரி வலுவாக வெளிப்பட்டது. “சங்கிலியன் படை” கதை என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. நெருங்கியவன் தவறிழைக்கும்போது நீதியை நிலை நாட்ட முடிவெடுப்பவன். பின்புலம் வேறென்றாலும் இக்கதையின் உணர்வு நிலை நமக்கு பழகியதாக உள்ளது. “இவன்” திருடனுக்கு மீட்சி அளிக்கும் கதை. யூகிக்கத்தக்க’ கதையின் முடிவு. தொகுதியின் பலவீனமான கதைகளில் ஒன்று. “தாழம்பூ” கதையும் தேய்வழக்காகிப் போன பேசுபொருளைச் சொல்கிறது. எனினும் இக்கதைகளுக்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. சில மனிதர்களின் நினைவுகளை எழுதுவதன் வழியே மட்டுமே கடந்து செல்லமுடியும். அல்லது அவர்களை நிரந்தரமாக நினைவில் நிறுத்த முடியும்.

இது சென்ற ஆண்டு விருது வழங்கப்பட்ட மலேசிய எழுத்தாளர் சீ. முத்துசாமியின் மண்புழுக்கள் நாவல் குறித்து நான் எழுதியது அகரமுதல்வனின் படைப்புலகிற்கும் பொருந்தும் என தோன்றுகிறது. “பிரித்தானிய எழுத்தாளர் ஹிலாரி மாண்டெல் வரலாற்று புனைவுகள் பற்றி ஆற்றிய ரெய்த் உரையில் முன்னோர்களை நினைவுகூர்வது எத்தனை முக்கியமானது எனக் குறிப்பிடுகிறார். “மனிதராக இருப்பதற்கான மிக நெருங்கிய இலக்கணமாகவே இதைக் கொள்ளலாம், நாம் துக்கம் அனுஷ்டிக்கத் தெரிந்த மிருகங்கள். இனப்படுகொலையின் மிக முக்கியமான குரூரங்களில் ஒன்று வெகுமக்களின் சவக்குழி, நேசத்துக்குரிய, நம்முடன் வாழ்ந்த மனிதர்கள் பெயரிழந்து பிரிக்கமுடியாத மாமிசப் பிண்டத் தொகுப்பாக மாறுதல் அது.” இப்படியான தேவைகள் ஈழ எழுத்திற்கும் இருப்பதாகவே எண்ணுகிறேன்.

அகரமுதல்வனின் கதைகளில் சுய மைதுனமும், காமமும் பல தருணங்களில் வருகின்றன. அவை பெரும்பாலும் சிறிய மனக் கிளர்ச்சிகளுக்கு அப்பால் எதையும் அளிக்கவில்லை. ஆனால் இந்த பயன்பாட்டிற்கு வேறு காரணங்கள் இருக்க முடியுமா என்று இரண்டாம் வாசிப்பில் யோசனை வந்தது. ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 வின்ஸ்டன் ஸ்மித் – ஜூலியா உறவை எண்ணிக் கொண்டேன். ‘பெரியண்ணனின்’ கண்களுக்கு புலப்படாமல் என்ன செய்தாலும், செய்ய முயன்றாலும் அது கலகம் எனக் கருதியவர்கள். மிக இயல்பான உந்துதலால் நிகழும் கலவிகூட ஒடுக்கப்பட்ட சூழலில் அதிகாரத்திற்கு எதிரான கலகமாக இருக்கக்கூடும். அவ்வகையான வாசிப்பை அகரமுதல்வனின் கதைகளுக்கு அளிக்க முடியுமா என்று பரிசீலித்து பார்க்கலாம். “பெயர்” கதையில் அவர்களின் விடுதலை உணர்வும் இளைப்பாறுதலும் தெளிவாகவே வெளிப்படுகிறது. “அகதிகள் புணரும் ரகசியத்தை விடியும் இரவும் பார்த்துவிடக் கூடாது”

இரண்டு கதைகளில், ‘இந்தக் கதை இன்னும் பத்து நிமிடங்களில் முடிந்துவிடும்’, ‘ஏழு நிமிடங்களில் முடிந்து விடும்’, என்றெல்லாம் எழுதுவது ஒரு யுத்தி என்றால், அது துருத்தலாக இருக்கிறது. “மேலும் ’ஈழ ஆதரவு – ஈழ எதிர்ப்பு’ எனும் இருமையை ஒரு கறுப்புக் கண்ணாடியைப் போன்று இக்கதைகள் அணிந்திருக்கின்றன” என்றும் அபிலாஷ் எழுதி இருக்கிறார். அது எனக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. இத்தொகுதியின் பெரும்பாலான கதைகள் வாழ்க்கைச் சரிதை தன்மையுடைவையே. வழமையாக நாம் பழகிவரும் வடிவமான சிறுகதைக்கான இறுக்கமோ கச்சிதமோ அவற்றில் இல்லை. எனினும் புதிய வகைமாதிரியான கதைசொல்லலை நோக்கி செல்கிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும். மேற்கில் வரலாற்று நிகழ்வுகளை ‘கதையாடல்’ (narrative) முறையில் எழுத பத்திரிக்கைத்துறையில் பயிற்றுவிக்கிறார்கள். அவ்வகையிலான முயற்சிகளாக கருதப்படும்போது, இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த தொகுப்பு என்னுள் சில ஆழமான கேள்விகளை எழுப்பியது. எனது வாசிப்புக்கு சவாலாக இருந்தது, அதன் எல்லையை சோதிப்பதாகவும் இருந்தது. காரணம் எனது இலக்கிய நம்பிக்கைகள், வழிமுறைகள் மற்றும் தேவைகள் வேறானவை. வேறு வகையான இலக்கிய படைப்புகளும் இருக்க முடியும், அவை கொண்டாடப்பட முடியும், என்பதை கிரகித்துக்கொள்ள சிரமமாக இருந்தது. எல்லைகளைக் கடப்பதே வாசகனின் கடமை. எதையாவது தவற விடுகிறேனா என்று திரும்ப திரும்ப இக்கதைகளை வாசித்தேன். இறுதிவரை கட்டுரையை திருத்திக்கொண்டே இருந்தேன். ஒரு கதை அல்லது கதையாசிரியர் புதிதாக எதையாவது உருவாக்கிக் காட்ட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. நவீன இலக்கிய வாசகனாக கருத்தியல் பிரதிகளின் மீது எனக்கொரு மன விலக்கம் உண்டு. நவீன இலக்கியம் என்று நான் நம்பும் ஒன்றின் இயல்புகளில் முக்கியமானது, அதற்கு தம்மவர் அயலவர் எனும் இருமையை கடந்து ஒட்டுமொத்த மானுடத்தை நோக்கி விரியும் குரல் இருக்க வேண்டும். குணா கவியழகனின் “அப்பால் ஒரு நிலம்” நாவல் முழுவதும் ஈழப் போராளிகளின் உளவுப் பிரிவின் கதையை சொல்கிறது. வீர வழிபாடு, வழமையான பெண் பாத்திர வார்ப்புக்கள் என்று பயணித்து, நாவலின் இறுதியில் சிங்கள சிப்பாயை தன்னைப் போன்ற ஒரு காதலனாக அடையாளம் காணும் புள்ளியில் நாவல் உச்சம் அடைகிறது. அது நடைமுறை நோக்கில் முட்டாள்தனம்தான், அவனுடைய உயிரையே காவு வாங்கிவிடுகிறது. ஆனாலும் அதில் நம்மவர் அயலவர் இருமைக்கு அப்பால் ஒரு தாவல் நிகழ்கிறது. அதவே அந்நாவலை மேலான பிரதியாக ஆக்குகிறது.

அகரமுதல்வன் அவர் அறிந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு கதைகளை எழுதுகிறார். ஒரு இலக்கிய பிரதியின் பெறுமதி என்பது அது வெளிப்படுத்தும் உண்மைத்தன்மை மட்டும் சார்ந்ததா? ‘உண்மையை’ அப்பட்டமாக சொல்வதால் ஒரு பிரதி மேலான இலக்கிய பிரதியாகிவிட முடியுமா?  பத்திரிக்கைச் செய்திகள் வழியாக அறிந்ததைக்  காட்டிலும் மேலதிகமாக கதை என்ன அளிக்கிறது? அறக் கேள்வியாக, தத்துவ விவாதமாக விரிகிறதா? அகரமுதல்வனின் பாத்திரங்களுக்கு தங்கள் கருத்தியல் சார்ந்து எந்த அறக் குழப்பமும் இல்லை. மனித குண்டுகளாக வெடித்து சிதறும்போதும்கூட “உலகில் மோசமான நிகழ்வுகளுக்கு கடவுள் காரணமல்ல” என்று சொல்ல முடிகிறது. துரோகிகளும், ஒழுக்கமற்றவர்களும், திருடர்களும் மட்டுமே, அவர்கள் அப்படிப்பட்டவர்கள், அதற்காக தண்டிக்கப்பட்டவர்கள், என்பதாலேயே இயக்கத்தை எதிர்த்தவர்கள் என்பதான ஒற்றைப்படை சித்திரம் கதைகளில் காணக் கிடைக்கிறது (‘கள்ளு’, ‘சங்கிலியன் படை’). கலை எல்லாவிதமான ஒற்றைப்படையாக்கத்திற்கும் (stereotyping) எதிரானது என்பது என் நம்பிக்கை. எங்குமே மானுட அகச்சிக்கல்கள், அற நெருக்கடிகள் வெளிப்படவில்லை என தோன்றுகிறது. தலையாட்டியின், கைகாட்டியின் உளம் என்னவாக இருக்கும்? அவனுடைய நெருக்கடிகள் எத்தகையதாக இருக்கும்? துருவப்படுத்தலுக்கு அப்பால் கதை மாந்தர்களின் சிக்கல்ளின் பல அடுக்குகளை, தரப்புகளை பேச வேண்டும். வாழ்க்கை எங்குமே இத்தனை எளிதாக இருமுனைகொள்ளவில்லை எனும்போது அதைப் பற்றி பேசும் இலக்கியமும் அவ்வாறு இருக்க வேண்டும் என்பதுதானே எதிர்பார்ப்பு. மறுபக்கத்தின் மறுபக்கத்தின் மறுபக்கத்தை காட்டுவதே இலக்கியம் என்பதாக ஜெயமோகன் எழுதி இருப்பார்.

‘கண்டி வீரன்’ (ஷோபா), ‘தமிழினி’ ஆகியோர் பற்றிய குறிப்பு கதைகளில் காணக் கிடைக்கிறது. கருத்தியல் ரீதியான விலக்கம் கொண்டோரை விமரிசிக்கும் போக்கு எப்போதும் உள்ளதுதான், ஷோபாவே முத்துலிங்கத்திற்கு அப்படிச் செய்த முன்மாதிரி உள்ளது, என்றாலும் எனக்கு அது உறுத்தலாக இருந்தது. மேலும் கருத்தியலை ஒரு படைப்பாளி கையில் எடுத்தால் தன் மொத்த படைப்பூக்கத்தையும் அதை காபந்து செய்வதற்கே பயன்படுத்துவான் என்றொரு ஐயமும் எனக்குண்டு. கதைகளின் மீதான விமர்சனம் கருத்தியலின் மீதான விமர்சனங்கள் அல்ல. பெரும்பாலான கதைகள் என்னை ஈர்க்காமல் போனதற்கு அவருடைய கருத்தியல் சார்புதான் காரணமா என்றால் இல்லை என்று உறுதியாக சொல்வேன். ஒரு அன்னை போர்க் காலத்தில் தன்னை வன்புணர்ந்த சிங்களச் சிப்பாயை தன் மகளுக்கு முதன்முறையாக தந்தையென அடையாளம் காட்டும் அ. முத்துலிங்கத்தின் ‘வெள்ளிக்கிழமை இரவுகளை’ விடக் கூர்மையான அரசியல் கதையை ஈழ பின்புலத்தில் நான் வாசித்ததில்லை. அ. முத்துலிங்கம் அரசியலற்ற எழுத்தாளர் என பலரால் நிராகரிக்கப்படுகிறார் என்பது வேறு விஷயம். பல கதைகளில் தேய்வழக்காகிப் போன உணர்வுகளை எழுதுவதன் மூலம் தீவிரம் நீர்த்துவிடுகிறது. நம்மை அசைத்துப் பார்க்கும் புதிய சித்திரங்கள் ஏதுமில்லை. பெண்களின் சித்தரிப்புகள் வீரமும் ஈரமும் நிறைந்த அன்னை அல்லது பேதை என்பதற்கு அப்பால் வேறு வகையில் விரியவில்லை (ஓரளவிற்கான விதிவிலக்கு- ‘பெயர்’).

இவை என் ரசனை உருவாகிவந்த பின்புலத்தில் எனக்கிருக்கும் எதிர்பார்ப்புகள். எவ்வகையிலும் இறுதி தீர்ப்பல்ல. ஏனெனில் இவை அதீதமாகவும், தேவையற்றதாகவும் பிறருக்கு இருக்கலாம். புனைவை அளக்கும் உறுதியான அளவை ஏதும் என்னிடம் இல்லை. அகரமுதல்வனின் இத்தொகுதி கதைகள் எனக்கான கதைகள் இல்லை என்பதே என் தரப்பு, அவை கதைகளே அல்ல என்பதல்ல. ஹெரால்ட் ப்ளூம் சொல்வது போல் “இலக்கியத்தில் சமூக நீதிக்கு இடமில்லை” எனும் நம்பிக்கை எனக்கும் உண்டு. அதே சமயம், கருத்தியலையும்கூட மேம்பட்ட கலைத்திறனால் கொண்டு சேர்க்க முடியும் என்பதே என் தனிப்பட்ட நம்பிக்கை. நல்ல வாசிப்பும், மொழியும், வாழ்வனுபவங்களும் கொண்ட அகரமுதல்வன் தனது எல்லைகளை உடைத்து மேலும் பல கதைகளை எழுதுவார் எனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது.

 

One comment

Leave a reply to சுகன்யா ஞானசூரி Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.