கவியரசு கவிதைகள் – காற்றை நோக்கி செல்லும் பூ , ​​உயரத்தின் உச்சியில்

காற்றை நோக்கி செல்லும் பூ

ஒவ்வொரு இதழிலும்
பொய்யை வரைவதற்காக
வெகுதூரம் பயணித்து வரும் காற்றின்மீது
அந்தப் பூவுக்கு
கோபம் வருவதே இல்லை

வரைந்த பொய்களை
பிற பூக்களுக்குக்கிடையே
நடித்துக் காட்டும்போது
அது அழுவதும் இல்லை

ஒருமுறை
பொய்யை எழுதும் போது
“நீ எழுதுவது பொய்தானே “
என்று குதித்த பூ
அதற்குப்பிறகு
வண்ணங்களற்ற வெள்ளைப் பாடலை
முனுமுனுக்க ஆரம்பித்தது

மற்றுமொரு நாளில்
பூவுக்காக
நறுமணங்கள் வாங்கி வந்த காற்று
பொய்களின் பருவங்களைக் கடந்து விட்டோம்
இனி வசந்தம் மட்டும்தான்
என மீண்டும் பேச ஆரம்பித்தது

காற்றை இரண்டாகப் பிரித்து
கட்டிக்கொண்ட பூ
“ரெண்டு பேருக்கும் செல்லமாம் ”
என்று சிரித்த போது
காற்று
பூவின் வேர்களில்
துகள்களாக உடைந்தது.

இந்த முறை
காற்று வெறுமனே வந்து
பூவை ஏந்திக் கொண்டு பறக்கிறது
ஒவ்வொரு கைகளாக
பூ நகர்ந்து
காற்று பிறக்குமிடத்துச் ​செல்கிறது.

​​உயரத்தின் உச்சியில்

உயரத்தின் உச்சியில்
வெறுமனே புல் மேய்ந்து கொண்டிருக்கிறது
பெயர் தெரியாத ஆடு

மண்டையோடுகள் தொங்கிக் கொண்டிருக்கும்
கூரான கொடிக்கம்பத்தில்
எனக்கான இடத்தைத்
தேர்வு செய்கிறவன்
கொடியை ஏற்றுமாறு அழைக்கிறான்

என் பெயரை
எதிரொலிக்காத மலைகளை
வெட்டித்தள்ள வேண்டும்.
இல்லாத காற்றை
எப்படிக் கொல்வது ?

வருகின்ற வழியெல்லாம்
என் குருதித் தடங்கள் காய்ந்து விடாமல்
அடைகாக்க வேண்டுமென்றேன்

தேன்துளிகளை நோக்கி
​​விரைந்து செல்கின்றன
தடங்களை அழித்தபடி
நகரும் எறும்புகள்

கரையான் புற்றுகளை உதைத்தவன்
உள்ளிருந்த காகிதக்கூழின்
நறுமணத்துக்குத் தீவைத்துப்
பரவ விடுகிறான்

பயந்து
நான்
பின்னோக்கி இறங்குகிறேன்.
கடலுக்குள் மூழ்குகின்றன
ஏறிய மலைகள்.

2 comments

  1. ‘முணு முணுக்க’தானே!? முனுமுனுக்க என்று வந்திருக்கிறதே?!

    Sent from my iPhone

    >

    1. பூ ரொம்ப உள்ளுக்குள்ளார பாடிக்கிட்டிருக்குமோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.