நகர்ந்து செல்லும் வீட்டிற்குள்
உள்பக்கமாகப் பூட்டியிருக்கும் கதவுக்கு
சுவற்றின் வண்ணத்தைப் பூசியிருக்கிறார்கள்.
குட்டிக் கதவுகளை சுவர் முழுவதும் வரைந்து
கண்ணாம்பொத்தி ஆடும் குழந்தை
வெளியில் ஒளிந்திருக்கும்
குழந்தையின் தலையைக்
கால்களால் தொடும் ரகசியக் கணத்தில்
சுவரில் வரைந்த குட்டிக்கதவுகள்
பட்டாம்பூச்சிகளாக மாற
இருபுறமும் பறக்கின்றனர்.
வெளியிலிருக்கும் வீடு
இப்படித்தான்
உள்ளே இருக்கும் வீட்டை
நள்ளிரவில் கொஞ்ச ஆரம்பிக்கும்.
நச்சரிப்பு தாளாமல் தள்ளிப்படுக்கும் உள் வீடு
“காணாத சூரிய சந்திர மழைக் கதைகளை
எழுதி எழுதி ஒப்பிக்காதே !
அறைக்கதவுகள்
உடையும்படித் தளும்புகின்றன.
இனி ஒரு போதும்
கதவுகளை அடைக்காமல்
வீட்டை நகர்த்து”
என்கிறது.