போர்க்குணம் கொண்ட ஆடுகள் – ஜிஃப்ரி ஹாஸனின் கதைவெளி – தீரன் ஆர்.எம். நௌஸாத்

ஜிஃப்ரி ஹாஸனின் ஒரு சில புனைவுகளை முக்கியமாக கவிதைகளை நான் ஆங்காங்கே சில சஞ்சிகைகளில் ‘பாலைநகர் ஜிப்ரி” என்ற ஆளடையாளத்துடன் வாசித்திருந்த போதும் அவர் பற்றிய ஒரு ‘நிரந்தர பிம்பம்’ என் மனத்தில் ஏற்பட்டிருக்கவில்லை. அவரது “விலங்கிடப்பட்டிருந்த நாட்கள்” கவிதை தொகுப்பையும் நான் வாசித்திருக்கவில்லை. ஆயின் இரண்டொரு சிறுகதைகளை எதுவரை,மற்றும் பெருவெளி சஞ்சிகைகளில் வாசித்தபோதுதான் ஜிஃப்ரி ஹாஸன் என்ற அவரது இலக்கியப் பிம்பத்தை ஓரளவு உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஜிஃப்ரி ஹாஸன் ஒரு சமூகவியல் பட்டதாரி ஆசிரியர் போர்த்தாக்கமுற்ற ஒரு கிராமத்தில் பிறந்தவர். ஏற்கனவே அவரது ‘அரசியல் பௌத்தம்’ என்ற இலங்கையின் போருக்குப் பின்னரான அரசியலைப் பற்றிப் பேசும் நூல் வெளிவந்துள்ளது. இதுவரை அவரது ஐந்து புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சில சஞ்சிகைகளும் வெளியிட்டுள்ளார். அவரது சமூகவியல் கற்கை நெறி அவரது எழுத்துகளில் வியாபகமாகச் சூழ்ந்து கொடுள்ளது என்பதில் நமக்கு சந்தேகமில்லை. இத் தொகுதியில் ஒட்டு மொத்தமாக அவரது சில நிர்மானிப்புகளை “வேணும்விளையும்” என்று வாசித்த போதுதான் அவரது பிம்பம் பற்றிய என் புரிதல்கள் சில கலைந்து மேலும் சில சேர்ந்து பெறுமதிமிக்க ஒரு புது வடிவம் கிடைப்பதாயிற்று.

02

போர்க்குணம் கொண்ட ஆடுகள் என்ற இம் மேய்ச்சல் வெளியில் நண்பர் ஜிப்ரி ஹாசன் பத்து போர்க்குணம் கொண்ட ஆடுகளை ஓட்டி வந்திருக்கிறார். இவை கொம்புகள் முட்டித் தள்ளுவதையும் இரண்டு கால்களால் உயர்ந்து பாய்வதையும் பற்றிப் பேசவும் எழுதவும் இரசிக்கவும் ஏராளமான சங்கதிகள் உள்ளன.

முடிந்த வரை ஒப்பனைகள் நீக்கிய, மிகையுணர்ச்சி தவிர்த்த, படிமங்கள் அற்ற எழுத்து, ஜிப்ரிஹாசனுடையது. இதனால், பாத்திரங்களின் குனாதிசயக் கலவையை விஸ்தாரமாக விபரிக்க முடியாத ஒரு இடர்பாடு இந்த இடத்தில் ஒரு கதை சொல்லிக்கு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. பாத்திரமே உரையாடல்களில் ஈடுபடும்போது குணாதிசயம் வெளிப்படச் செய்தல் இலகுவான ஒரு மறை உத்தியாகும். மொழியைச் சிதைத்து., கதைகளைச் சிதைத்து., மொழியின் கவித்துவத்தை வெளிப்படுத்துவது என்னும் புதிர்த்தன்மை கொண்டதாகப் புனைவுகளைப் படைக்க முயற்சிக்கும் ஒரு ‘ரண சிகிச்சையை’ ஜிப்ரிஹாசன் செய்து பார்த்திருக்கிறார். இது மீபுனைவுகளின் வெளியை இன்னும் அகலமாகத் திறந்து விடும் என எதிர்பார்க்கலாம்.

கதைசொல்லியையும் கதைக்குள் சேர்த்துக்கொண்டு எழுதக்கூடிய உத்தி இத்தொகுதியிலுள்ள புனைவுகளிலும் ‘தூக்கலாக’ உள்ளன. ஜிப்ரிஹாசன் என்ற கதைசொல்லி புனைவுகளில் ஒரு ‘மறைவார்ப்பாளாராக’ வடிவமைக்கப்பட்டுள்ளார். இது பூஜ்ய பாகைக் கோண எழுத்து முறைக்கு சார்பானது. இந்த முறையை பிடிவாதமாக பேணிக் கொள்ளல் என்பதே அவரது எழுத்தின் ஒரு அசைக்க முடியாத அடையாளமாக உள்ளது. யாருடைய தயவும் இல்லாமல் தன் எழுத்தை மட்டுமே நம்பி நெடுகிலும் தானே கதையைச் சொல்லியும், தானே வாசகனாக இருந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரிய சிரமமான விடயம். மாயப்பொடி தூவும் நடையினருக்கே இது சாத்தியம்.. ஆயினும் அதை இவர் பூஜ்ய பாகைக் கோண எழுத்து முறையில் கச்சிதமாகச் செய்துள்ளார் என்பேன்.

ஜிப்ரிஹாசனின் இந்த உத்தியானது ‘’உனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே எடுத்து கொள்’’ என்ற வாதத்துக்கு வலுச் சேர்த்தாலும்., இது வாசகனுக்கு முழு சுதந்திரம் கொடுத்தாலும், கதைசொல்லியும் உள்ளிருந்தே தன் உணர்வை வாசகனுக்கு ‘’தந்திர ஊசி’’ கொண்டு ஏற்றிவிடுவதை காணமுடிகிறதுமுந்திய நிலையை மறுதலிப்பதாகவும் உள்ளது

…………………தமிழ்ச் சிறுகதைகளில் 98 வீதமானவை அரிஸ்டோடிலிய நியம முறையிலான கதை கூறும் முறையில் அமைந்தவையே. அத்தகைய கதைகள் “தொடக்கம்”, “உச்சம்”, “முடிவு” என அரிஸ்டோடிலிய மூன்று நியம விதிகளையும் கொண்டிருக்கும். கதைகூறும் முறையில் உலகளவில் ஏற்பட்டுள்ள சமகால மாற்றங்கள் மிகக்குறைந்த அளவிலேயே தமிழ்ச் சிறுகதைகளின் எடுத்துரைப்பு முறையில் உள்வாங்கப்பட்டுள்ளன…..” என்று கூறுகிற ஜிப்ரிஹாசன் தன் பல நிர்மானிப்புகளில் இந்த அதி நவீன எடுத்துரைப்பு முறையினைப் பிடிவாதமாகக் கையாண்டுள்ளார்.

எம். ஜி. சுரேஷ் சொல்வது போல “,,,,,,,,,,,,,,,,,நவீனச் சிறுகதைக்கு ஆரம்பம், நடு, முடிவு ஆகிய அம்சங்கள் உண்டு. பின் நவீனச் சிறுகதைக்கு இது கிடையாது. நவீனச் சிறுகதைக்கு மையம் உண்டு. அதாவது கதைக் கரு என்ற ஒன்று உண்டு. பின் நவீனச் சிறுகதைக்கு மையம் என்று எதுவும் இல்லைஇது ஒரு பிரதியை அதன் ஒற்றைத்தன்மையிலிருந்து விடுவிக்கிறது. கலையை அதன் சட்டகத்திலிருந்து வெளியேறி சுதந்திரமாக அலைந்து திரிய அனுமதிக்கிறது. எழுத்தின் பல்வேறு சாத்தியங்களை விரித்துப் போடுகிறது. . “ இக்கூற்று ஜிப்ரிஹாசனின் சில சிறுகதைகளுக்கு நெருக்கமாக வருகிறது

ஜிப்ரி ஹாசனின் எழுத்துகளில் மகா ஆடம்பரங்கள் இல்லை. அதிக இழிந்த மொழி களும் இல்லை தனது கதை, விளக்கம் மற்றும் பல குறிப்பு விபரங்களை முக்கிய பாத்திரங்களின் இயல்புகளை அவற்றின் நடத்தைகள் மூலமே வெளிப்படுத்த முயற்சித்துள்ளார். அதில் பல இடங்களில் வெற்றியும் கண்டுள்ளார். நேரடியாக சொல்லப்படும் சில நிர்மானிப்புகளில் தானும் ஒரு பாத்திரமாக ஆகிவிடுவது அவருக்கு சுலபமாக இருந்துள்ளது.

வெறுமனே கற்பனாவாத வெளிப்படுத்துதல்களில் அவருக்கு சம்மதமில்லை என்பதும் ஒரு புழுவுக்கு சிங்காரமான இறக்கைகள் வைத்துப் பார்ப்பதில் அவர் சமரசம் கொள்ளவில்லை என்பதும் புரிகிறது. மற்றது அவர் தன் கதைகளைத் தேடி விண்வெளிக்குச் செல்லவில்லை. தன்னைச் சுற்றியுள்ள மேய்ச்சல் வெளியிலேயே வேண்டியளவு மேய்ந்துவிட்டு ஆறுதலாக உட்கார்ந்து அசை போட்டிருக்கிறார்.

ஜிப்ரிஹாசனின் கதைப் பிரதிகளை படைப்பு அல்லது புனைவு என்னும் சட்டகத்துள் அடக்கலாமா என்பதிலும் எனக்கு தயக்கம் உண்டு, சம்பந்தப்பட்ட பாத்திரங்களை தேவையானவிடத்து பாவித்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதனாலேயே இவற்றை நிர்மாணிப்புகள் என குறிப்பிட்டேன்.

இனி நண்பர் ஜிப்ரிஹாசன் இத்தொகுதியில் மேய்ச்சலுக்குக் கூட்டி வந்திருக்கும் சில போர்க்குணம் கொண்ட ஆடுகளின் கொம்புகளை கொஞ்சம் சீவிப் பார்க்கலாம்.

03

மண்வாசகம் என்ற புனைவில் ஜிப்ரிஹாசனை நிச்சயமாக நாம் தரிசிக்க முடிகிறது பாலைவனத்துக்குச் செல்லவுள்ள மனிதர்களின் உள்ளார்ந்த இழிநிலை நோக்கு இங்கு பகிரங்கமாகப் பகிரப்பட்டுள்ளது. கானல் நீரும் காணாத கபோதிகள் நிறைவேற்றும் தீர்மானம் சும்மா இருந்த நம்மையும் அடிப்படைவாதிகளாக்குகின்றன

மே புதுன்கே தேசயஎன்ற கதை ஒரு அற்புதமான புனைவு ஆகும். வெறுமனே புனைவு என்று இதனை சொல்ல முடியுமாசம்பவங்கள் என்று சொல்லலாம் சம்பவங்களாக கதையை நகர்த்திச் சென்ற உத்தி இங்கு வெற்றியளித்துள்ளது இடையிடையே தூவியுள்ள மொழி விகடங்கள் புன்முறுவலோடும்மொழிஅவஸ்தைகள் கோபத்தோடும் உட்பாய்ச்சல் செய்துள்ளன உண்மையில் மம்மலி என்ற பாத்திரத்தை நம் தேசத்தின் தமிழ்மொழியில் பணிபுரியும் அரச ஊழியரின் ஒட்டுமொத்தமான ஒரு குறியீடாகவே காண்கிறேன். விகாராதிபதியால் பதிலளிக்க முடியா கேள்விகளுக்கு ஜிப்ரிஹாசனே பதிலளித்து விடுகிறார். ஆத்திரமூட்டும் இந்தப் பதிலை நம்மில் இலகுவாகத் தொற்ற வைக்க ஜிப்ரிஹாசன் எடுத்துக் கொண்ட சொற்கள் மூன்றேமூன்றுதான்இது பௌத்தரின் தேசம் என்றுஆயின் இதற்கு மிகச் சரியான பதில் மே சிங்ஹலே தேஷய என்பதுதான்.

நினைவின் மரணம் என்ற கதையில் திடீரென பெண்ணாக மாறிய ஜிப்ரிஹாசனை விநோதமாகப் பார்க்கிறோம். ஒரு ஆண் படைப்பாளி பெண் என்ற நிலையில் இருந்து கதை சொல்வது ஒரு ‘முரண்அணுகல்’ ஆகும். இதில் பல கதைசொல்லிகள் தோல்வியே அடைந்துள்ளனர;. வாஸந்தி ஆணாக இருந்து கதை சொன்னதை இரசித்த வாசக உலகம் பாலகுமாரன் பெண்ணாக மாறி கதை சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லைஇதே நிலை ஜிப்ரிஹாசனுக்கும் ஏற்பட்டுள்ளது. சில பெண்ணிய நுண்ணுணர்வுகள் ஆண் தன்மை கொண்டு தன்னை அறியாமலே வெளிப்படுதலே இதற்கு காரணம்இக்கதைக்கு எடுத்துக் கொண்ட கரு கூட மிகச் சாதாரணமானதே.

சலீம்மச்சிஎன்ற கதை இன்னொரு சிறப்பான உருவாக்கம் இதில் ஜிப்ரிஹாசன் ஒரு வித்தியாசமான பாத்திரத்தை நமக்கு அறிமுகம் செய்கிறார். மூன்றாம் பாலினமான சலீம்மச்சி போன்ற பரிதாபத்துக்குரிய ஜீவன்கள் ஓரிருவரையாவது நம் வாழ்வில் சந்தித்தே இருப்போம். தமிழ் சினிமாக்களில் இத்தகையோரை ஒரு இழிந்த நகைச்சுவைக்கு பயன்படுத்திக் கொள்வர். ஆயின் அவர்களின் மனவேதனை எவ்வளவு ஆழமானது.. சமூகத்தில் அவர்கள் மீது புரியப்படும் உள வன்முறை எத்துனை கொடுமையானது. சலீம்மச்சியின் பரிதாபகரமான முடிவு கண்டு நாம் அனுதாபப்பட்டாலும் கொடூர உலகிலிருந்து சீக்கிரம் அவன் விடைபெற்றது பற்றி ஒரு நிம்மதி அடைகிறோம் ஜிப்ரிஹாசன் மிக இலாவகமான வகையில் இக்கதையினை நகர்த்திச் சென்ற வகையிலும் அவர் பூசியுள்ள மிகையற்ற ஒப்பனையிலும் கதை உச்சம் பெற்றுவிடுகிறது.

மீதமிருக்கும் கனவுகளின் ஈரம்.. என்பது ஜிப்ரிஹாசனின் இன்னொரு மயிலிறகு. எல்லா பல்கலைக்கழக வாழ்விலும் இப்படி ஒரு மயிறகு கிடைப்பதுண்டு. அது குட்டி போடாமலே கருகுவதுமுண்டு. இப்படி பல கதைகள் படித்தும் கேட்டுமிருந்த போதிலும் ஜிப்ரிஹாசனின் இந்த குண்டூசி அனுபவம் ஒரு இன மாறுபாட்டு காதல்பிரிவாக சுருக்கென்று குத்தும் வலியுடன் உணர முடிகிறது. இதற்கு அவர் தேர்ந்தெடுத்த சொற்சுருக்க நடை பெரிதும் கைகொடுக்கின்றது … ‘’……….இப்படியே போனால் ஒருநாள் குர்ஆனுக்கும் தப்ஸீர் எழுதிவிடுவாள்…’’ என்று ஜிப்ரிஹாசன் கொஞ்சம் மிகை நினைப்பில் நம்மை பயப்படுத்தினாலும், ‘’…………அவளுடனான அந்த உறவில் மிகவும் அபாயகரமான கட்டத்தை நான் அடைந்திருப்பதை அன்றுதான் தீவிரமாக உணர்ந்தேன். அந்த வலியிலிருந்து என்னை மீட்க நான் எப்போதும் நேசிக்கும் இலக்கியத்தாலும் முடிந்திருக்கவில்லை. ……….’’ என்று நம்மை அனுதாபம் கொள்ள வைத்துவிடுகிறார். ஒரு குண்டூசியால் கீறி ஒரு மயிலிறகால் வருடிவிடும் உத்தி இங்கு நம்மை ஈர்க்கவைக்கிறது.

கம்யுனிஸ்ட் என்ற கதை ஜிப்ரிஹாசனின் சிங்களதமிழ் மையல்விசைக் கதையாகும்வளாக வாழ்வில் புகுந்த யாழினியின் வார்ப்புஅவள் மீதான ஒரு ஈர்ப்பை நமக்கு ஏற்படுத்தி மிகுந்த எதிர்பார்ப்புகளோடு கதை நகர்ந்து செல்கையில் திடீரென அவளுக்கும் சுமனதாச சேருக்கும் இடையில் பொத்துக் கொண்டு எழுந்த காதல் யாழினியின் மீதான வார்ப்பில் ஒரு இடறலை தருகிறது தவிரவும் யாழினி சுமனதாச சேரின் வயதை விசாரித்த போது

‘’……….‘ஒருமுப்பத்தஞ்சி’…‘எனக்கு இருபத்திமூணு’ என்றுவிட்டுசிரித்தாள்…..அந்தச்சிரிப்பில் ஒரு குழைவு இருந்தது. ஒருகனவுஇருந்தது. ஒருவெட்கம் தெரிந்தது………………’’

என்று ஜிப்ரிஹாசன் எழுதும் இந்த இடத்திலேயே கதை முடியப் போகும் தரிப்பிடம் தெரிந்து விட்டது.. போர்க்குணம் கொண்ட பெண் ஒரு பூக்குணம் கொண்டவளாய் மாறியதை அறிந்து நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏனெனில் இதுதான் நிஜத்தில் அங்கு நடந்துள்ளது.

இரண்டு கரைகள் ஜிப்ரிஹாசனின் ஒரு இளமைக் கால நட்சத்திரக் கதையாகும். போர்க்காலப் பள்ளிக்கூட நாட்களை அதற்கே உரிய திகிலுடன் கூடிய ஒரு வசீகரத்துடன் சொல்லியிருக்கிறார். தன்னையே இதில் காண்பிப்பதால் அனுபவ நடை கைகொடுக்கின்றது. போர்க்கால இயக்கப் பொறுப்பாளர்களின் நடத்தைகளில் சில விமர்சனங்கள் இருந்த போதிலும் பல நல்ல செயற்பாடுகளும் சினிமாத் தனமான சில சம்பவங்களும் இருக்கத்தான் செய்தன. சிங்களப் பாடசாலை தமிழ் பாடசாலை ஆகியதும் தமிழ் முஸ்லிம் கலவன் பாடசாலை முஸ்லிம் பாடசாலை ஆகியதும் அக்கிராமத்தின் போராதிக்கத்தின் விளைவுகளாகும்.

‘’…………..ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் சந்தரப்பங்களிலிருந்து நாங்கள் தூரமாகிவிட்டிருந்தோம். இப்படியே பலநாட்கள் கழிந்ததில் எங்கள் முகங்கள் ஒருவருக்கொருவர் மறந்துபோயிற்று. பள்ளிக்கூடத்தினுள்ளேயே எங்கள் உறவுகள் மடிந்துவிட்டன. அதற்குள்ளேயே எங்கள் கனவுகளும் மடிந்தன. எங்கள் வாழ்வும் அதன் இயல்பை இழந்து போனது……………….’’ என்று ஜிப்ரிஹாசனோடு சேர்ந்து நாமும் ஆதங்கப்படுகிறோம்

04

….நான் புத்தகங்களின் காட்டில் மூளையை அடகு வைத்தவன்—“ என்று ஜிப்ரிஹாசன் தன்னிலை விளக்கம் தரும் போதும் “………. ஈழப்படைப்பாளிகள் பரந்த வாசிப்பாளர்களாகவும் மனித வாழ்வை நுணுக்கமாக அணுகுபவர்களாகவும் மானுடத்தை முழுதளாவிய அணுகுமுறைக்குட்படுத்துபவர்களாகவும் மாறாதவரை இந்த நிலைமையை மாற்ற முடியாது………..” என்று அவர் விசனிக்கும் போதும் ஒரு எழுத்துப் போராளியாக போர்க்குணம் கொண்ட ஆடாக அவர் உருமாறி வருவது நமக்குப் புரிகிறது.

………புனைபிரதிகளில் புரட்சிகரமான மாற்றங்கள் உள்வாங்கப்படுவதை நான் விரும்புகிறேன். கதைசொல்லிகள் பழைய பல்லவிப் பயணத்தையே நீட்டிக்கொண்டிருக்க வேண்டுமா அல்லது புதிய பாதைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வதா என்பது கதைசொல்லிகளின் சுதந்திரத்தின் பாற்பட்டது.,,’’, என்று தன்பக்க வாதத்தை முழக்கும் ஜிப்ரிஹாசன் சிறுகதைகள் என்ற பெயரால் சொற்சிலம்பாட்டம் ஆடாமல் அளந்தெடுத்த எழுத்துத் துப்பாக்கியால் ‘பட்பட்’டென்று சுட்டு விடுகிற அவரது எழுத்துச் சண்டித்தனத்தை இரசிக்கலாம்.

ஈழத்து சிறுகதை தளம் மீது நண்பர் ஜிப்ரிஹாசன் செய்கிற இந்த எழுத்துப் போர்ப்பிரகடனம் புதிய மேய்ச்சல் வெளிகளை நமக்குத் தரும் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை.. நண்பர் ஜிப்ரிஹாசனுக்கு நமது வாழ்த்துக்கள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.