டோக்கியோவிலிருந்து நான்கரை மணி நேர பயணத்தில் மட்சுமோத்தோ வந்தடைந்தாகிவிட்டது. இடையில், இரண்டு முறை ஹைவே பார்க்கிங்கில் நிறுத்தி தேனீர் அருந்தியிருந்தேன். மட்சுமோத்தாவிலிருந்து தக்காயமா மலைக்கு செல்லும் வழியில் விரைந்துக்கொண்டிருந்தது கார். இரு பக்கமும் மலை சரிவில் மேப்பிள் மரங்களின் இலைகள் பழுத்து சிவப்பு நிறமாக மாறத்தொடங்கியிருந்தது. நவம்பர் மாதத்திற்க்கான குளிர், பசுமையான மலையில் ஏறத்தொடங்கியவுடன் இன்னும் அதிகமானது. காரின் வெப்பமூட்டும் கருவியில் இன்னும் வெப்பத்தை ஏற்றினேன்.
டோக்கியோவிலிருந்து கிளம்பும்போது எந்த திட்டமும் இல்லை. திருமணம் போன்ற பந்தங்கள் இல்லாது இருப்பதின் வசதிகள் இவை. ஆனால், இப்போதெல்லாம் தனிமை அலுத்துபோனதாய் ஒரு உணர்வு. மட்சுமோத்தோவின் அழகு கவனத்தை கலைத்தது. விடிகாலை பெய்த மலையில் மரக்கிளைகள் எங்கும் நனைந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது. இங்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. சென்றமுறை வந்தபோது சிவா கூட வந்திருந்தார்.
சிவாவை எங்கே முதலில் சந்தித்தோம்? தோக்கியோ அருகே இருக்கும் சிம்பாசி ரயில் நிலையத்தில், ஒரு திங்களன்று காலை, விபத்தால் ரயில்கள் நின்றுபோய் அலுவலகத்திற்க்கு தாமதமாக வருவதாக செய்தி அனுப்பியபடி நின்றபோது அருகில் வந்தார்.
நீங்க தமிழா?
பெரும்பாலும், இப்படி விசாரிப்புகள் வருவதில்லையே!. கையில் வைத்திருந்த கரையும் நிழல்கள் புத்தகம் ஞாபகத்தில் வந்து, புன்னகைத்தேன்.
என் பெயர் சிவநேசன். மலேசியாவிலிருந்து வந்திருக்கேன். இங்கே வந்து இரண்டு மாசமாயிடுச்சு இன்னும் ஒரு மணி நேரம் டிராவல் செஞ்சு ஆபிசுக்கு போகணும். என்ன இப்படி திடீர்ன்னு ட்ரெயன் நின்னுடுச்சு?
ஓ இர்ண்டு மாசமா இப்படி நடக்கலையா?
இல்லையே? ஏன்?
இல்லை. யாரோ ஒரு நபர், ட்ரெய்ன் முன் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டார். இனி, பாடி எடுத்து முடிக்கிற வரைக்கும் ட்ரெய்ன் போகாது.
ஏன், இப்படி செஞ்சுகிட்டாரு? கேட்டபின் அந்த கேள்வி என்னிடம் கேட்பதின் அபத்தம் புரிந்து, புன்னகைத்தார்.
வாங்கண்ணே கோப்பி சாப்பிடலாம், என்றார் இருவரும் அருகிலிருந்த காபி ஷாப்புக்குள் நுழைந்தோம். வசதியான ஒரு மூலையில் இடம் கிடைத்தவுடன், அவரே இருவருக்கும் கப்புசீனோ வாங்கி வந்தார்.
திங்கள்கிழமையே இப்படி ஆயிடுச்சே?
பெரும்பாலும் திங்கள்கிழமைகளில்தான் இப்படி விழுவார்கள். போன வெள்ளி மாலை வேலை இழந்திருக்ககூடும். இன்று காலை, வீட்டிலிருந்து எப்போதும் போல் அலுவலகத்துக்கு கிளம்பி, ஸ்டேசன் வந்தவுடன், செல்லுமிடம் ஒரு பெரிய கேள்வியாக முன்நிற்க, ரயில் முன் பாய்ந்துவிடுவார்கள்.
ஆனால், இது ஆயிரக்கணக்கான நபர்களுக்கு இப்போ பிரச்சினையாயிடுச்சே அண்ணே?
ஏதோ, சமூகத்தை முடிந்த வகையில் பழிவாங்கிட்ட திருப்தி அவருக்கு கிட்டும்தானே.
புன்னகைத்தார், சிவநேசன். ஆனா ஒரு வேலை போனால் என்ன ஆகிவிடபோகிறது? இதற்க்கெல்லாம் தற்கொலைதான் தீர்வா? என்ன முட்டாள்தனம் இது?
இல்லை ஒரு வேலை போனதால் தற்கொலை இல்லை. ஏதோ ஒரு வகையில் நாம் இந்த சமூகத்துக்கு பொருந்தவில்லை என்று நினைக்கிறார்கள். அதுதான் அவர்களை இந்த முடிவுக்கு துரத்துகிறது. தவிர, தங்களுடைய எஜமானை காப்பாற்ற முடியாமல் தோல்வியைத் தழுவிய சாமுராய்கள் வயிற்றை கிழித்துக்கொண்டு உயிர் இழக்கும் அராகிரி போன்ற உதாரணங்களும் இவங்க வரலாற்றில் இருக்கு.
சிவா, தொடர்ந்தார். எனக்கு என்னவோ, நம்மளை மாதிரி ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை வர்றதில்லைன்னு தோணுது. நம்மாள ஆனதை செஞ்சோம், அப்படியும் விழுந்துட்டோமா? அது தலைவிதி என்று போட்டுட்டு வாழ்க்கையை தொடர முடியும். இங்கே எல்லாத்துக்கும் நாமதான், நாம மட்டும் தான் காரணம்ன்னு நெனைக்கிறாங்க இல்லீங்களா?
இருக்கலாம் என்றேன் மையமாக.
சிவநேசன் மலேசியாவில் வாழும் நான்காம் தலைமுறை தமிழர். அவருடைய முன்னோர்கள் நாகப்பட்டினம் அருகே இருந்து மலேசியா சென்றவர்கள். சிவாவிற்கு வரலாறு குறித்து இருந்த ஆர்வம் என்னை நெருக்கமாக உணர செய்தது.
வாரவிடுமுறைகளில் சந்தித்தோம். சிவா ஒரு கைத்தேர்ந்த சமையல்காரர்.
வெள்ளி இரவுகளில் சாப்பிட அழைப்பார். செல்வதற்க்கு முன்பே சமையலை முடித்திருப்பார். மதுவுடன் அமருவோம். சிவா நிறைய குடிப்பதில்லை. இரண்டு ரவுண்டுகள் போனவுடன், பாடத் தொடங்கிவிடுவார். பெரும்பாலும் ராஜாவின் சோக பாடல்கள். சிலவேளைகளில் கண்ணீல் நீர் வழியுமளவிற்க்கு அந்த பாட்டின் சோகத்தில் ஆழ்ந்துவிடுவார். பொதுவாக, நல்ல உரையாடல்காரர். அவர் வளர்ந்த கம்பம், கள்ளுக்கடைகள், சண்டைகள் என உரையாடல் நீளும் இரவுகளில் அங்கேயே உறங்கிவிடுவேன். அதிகாலையிலே எழுந்து, குளித்து, பட்டையாக விபூதி பூசி, ”கற்பனை என்றாலும் கற்சிலையென்றாலும்” பாடலை உரக்க ஒலிக்க வைப்பதுதான் அவருடைய ஒரே பிரச்சினை.
அப்படி ஒருநாள் இரவு குடித்திருக்கும்போது, கேட்டார்.
ஏண்ணே, நீங்க இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலை?
ஷோபா நினைவில் எழுந்தாள். ஊரில் ஒரு காதல் இருந்துச்சு. பிறகு அது பிரியுறமாதிரி ஆயிடுச்சு. இனி இங்கேயே பார்த்துடலாம்ன்னு இருக்கேன்.
அட, ஜப்பானிய காதலி உண்டா? அதான் அண்ணே இவ்வளவு நல்லா இந்த மொழி பேசுறீங்க என்று சிரித்தார் சிவா
உண்மையில் ஷோபாவிற்கு பின் இந்த ஏழு வருட தோக்கியோ வாழ்க்கையில் ஏறக்குறைய காதல் போல் சில உறவுகள். எதுவும் நிலைக்கவில்லை. பீத்தோவனின் ஐந்தாம் சிம்பெனி, யமாசாக்கி விஸ்கி, நாவல்கள் என விடுமுறை நாட்கள் முடிவுபெறும். சிலவேளைகளில் இலக்கில்லாத பயணங்கள். நெருங்கிய நண்பர்களின் குடும்ப வாழ்க்கை எதுவும் உற்சாகமூட்டுவதாய் இல்லை. தனியாக வாழ பயந்து திருமணம் செய்துக்கொண்டு, பின்பு அப்படி செய்துக்கொண்டதாலயே வெளி இழந்து, அதிலிருந்து விடுவித்துக்கொள்ள துடிக்கும் நபர்கள் கலவரத்தைதான் ஏற்படுத்தினார்கள்.
”கவர் பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக்கொண்டே
ஆப்பதினை அசைத்திட்ட குரங்கதனைப் போலே”
கதைதான்.
அந்த வருட விடுமுறைக்கு மலேசியாவிலிருந்து அவரது குடும்பம் வந்திருந்தது. ஒரு நாள் சாப்பிட கூப்பிட்டிருந்தார். சிவாவின் மனைவி, நீல நிற ஜீன்ஸ் , மேலே வெள்ளை டாப்ஸ் போட்டிருந்தார். கழுத்தை சுற்றி மப்ளர் போல் போட்டிருந்த சால். வெளியே வந்து, வாங்கண்ணா என்றார். ப்ரியாவின் கண்கள் பெரியவை. சுருள் கேசம், அழகான சிரிப்பு. மலேசியாவின் வங்கி ஒன்றில் பணிபுரிவதாக ஏற்கனவே சிவா சொல்லியிருந்தார். ப்ரியா, ஒவ்வொரு வார்த்தைக்கும் புன்னகைத்தார். சிவாவின் மகன் அரவிந்த் ஓடிவந்து அம்மாவின் காலை பற்றிக்கொண்டு நின்றான். அம்மாவை போலவே லட்சணம். சமையல் சிவா செய்தது போலவே சுவை.
குடும்பம் அங்கிருந்த இரண்டு வாரமும் சிவா விடுமுறையெடுத்து ஊர் சுற்றி காண்பித்தார். இருந்த ஒரே நண்பரும் குடும்பத்தோடு ஐக்கியமாகிவிட , அந்த விடுமுறையில் நான் மட்டும் தனியாக சுற்றிக்கொண்டிருந்தேன்.
சிவாவின் மனைவியும், பிள்ளையும் ஊருக்கு திரும்புவதற்கு முதல் நாள், நான் ஒரு இந்திய உணவகத்திற்கு அழைத்திருந்தேன். இருவரும் ஒரே நிறத்தில் உடையணிந்து வந்தனர். ப்ரியாவின் கைகளை கோர்த்துபிடித்திருந்த சிவா, திருமணமாகி ஏழெட்டு வருடங்களுக்கு பிறகும், தனது காதலியை பிரிவதைபோன்ற பரிதவிப்பில் இருந்தார்.
என்ன சிவநேசன், விட்டா நீங்களும் ப்ரியாவோட ப்ளைட் ஏறிடுவீங்க போல இருக்கே?
வெட்கத்துடன் சிரித்தார் சிவா.
”அண்ணா, நீங்களும் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்குங்க. அப்புறம் தெரியும்” என்றார் ப்ரியா.
பிறகு சில மாதங்கள் கழித்து அலுவலகத்தில் இருக்கும்போது, எண் இல்லாது ஒரு அயல் நாட்டு போன் கால் வந்தது. எடுத்தவுடன்,
”அண்ணா, அண்ணா நான் ப்ரியா பேசுகிறேன் “ என்றார். குரலில் தெரிந்த பதட்டம் என்னையும் தொற்றிக்கொண்டது.
சொல்லுங்க, ப்ரியா.. என்ன விஷயம்?
அழத் தொடங்கினார். தயவு செய்து அழாதீங்க. என்னாச்சுன்னு சொல்லுங்க
”அண்ணா, அவருடைய அலுவலகத்திலிருந்து போன் வந்தது. அவர் விபத்தில் செத்துட்டதா சொல்லிட்டு கட் செஞ்சுட்டாங்க. அவருடைய அலுவலக நண்பர்கள் யாரும் போன் எடுக்க மாட்டேங்குறாங்க. இங்குள்ள அலுவலகத்தில் கேட்டால் ஹெச் ஆர் யாரிடமும் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள் என்கிறார்கள். எனக்கு ஒன்னுமே புரியலைண்ணா” என்றார் கேவி அழுதபடி.
நடுக்கத்துடன் அலுவலகத்தில் விடுமுறை சொல்லிவிட்டு உடனடியாக அவர் இருந்த வீட்டுக்கு சென்றேன். வீடு பூட்டீயிருந்தது. எத்தனையோ முறை சென்ற வீடு, அன்றைக்கு புதிதாக துக்கவீட்டுக்கு உரித்தான சவக்களை பூசியிருந்தது. வீட்டு வாசல் முழுவதும் உள்ளே வர கூடாது என்கிற மஞ்சள் நிற டேப் போட்டு சுற்றி வைத்திருந்தார்கள், காவல்துறையினர். வீட்டின் அருகே நின்று மூடியிருந்த சன்னலை உற்று நோக்கினேன். நிலவும், மலரும் பாடுது என்று கண்களை மூடி லயித்து பாடும் சிவநேசன் மனதில் தோன்றினார். பால்கனியில் காய்ந்த அவரது சாரம் காற்றிலாடியது. அருகிலிருக்கும் யாரையும் தெரியாது. இந்த ஊரில் வேறு எப்படியும் தகவல்கள் சேகரிக்க முடியாது. அருகிலிருக்கும் வீட்டுக்கார்களோ, தெருவில் இருப்பவர்களோ யாரும் பேச மறுப்பார்கள்.
அவரது அலுவலகம் குத்துமதிப்பாக தெரியும். ஆனால் அங்கு சென்ற போது எதுவுமே சொல்ல மறுத்தார்கள். அவரது உறவினர்களிடம் மட்டும்தான் பேசுவோம் என்றார்கள். திரும்ப நடந்தபோது, ப்ரியா போன் செய்தார். ”அண்ணா, அவர் ட்ரெய்ன்லே விழுந்துட்டாராம் அண்ணா”..என்றார். திடுக்கிட்டேன்.
இணையத்தில் தேடியதில், சிம்பாசி ரயில் நிலையம் அருகே, இந்தியர் ஒருவர் ரயில் முன் பாய்ந்த தகவல் தெரியவந்தது. நண்பர்களிடம் விசாரித்தால், அது சிவாதான். நாங்கள் இருவரும் முதன்முதலாக சந்தித்த அதே சிம்பாசி ரயில் நிலையத்துக்கு அருகேதான் சிவநேசன் ரயில் முன் பாய்ந்துள்ளார். ஏன் இப்படி செய்தார்? வேலையில் எதுவும் சிக்கலா? வேறு என்ன குழப்பம் என்று எதுவும் புரியவில்லை. அதற்குள் பலமுறை ப்ரியா போன் செய்தபடியே இருந்தார். பாடி ரீசிவ் செய்ய அங்கே வருவதாக இருந்தால் ஏற்பாடு செய்கிறோம். இல்லையென்றால், நாங்களே மலேசியா அனுப்பிவிடுகிறோம் என்று சொன்னதாக கூறினார். தைரியமாக இருங்கள். என்னாலான வகையில் எல்லா உதவிகளையும் செய்கிறேன் என்றேன். மலேசிய தூதரகம் மூலம் மூன்று நாட்கள் கழித்து சிவநேசன் மலேசியாவுக்கு அனுப்பபட்டார்.
என்ன நிகழ்ந்தது? ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்? அரவிந்த என்ன ஆவான்? இப்படி எந்தகேள்விக்கும் விடையில்லை. இரவு தூக்கத்தில் சிவா சோகமாக ”இதயம் ஒரு கோவில்” பாடினார். கூடவே ப்ரியாவின் பெரிய கண்கள். திடீரென்று விழிப்பு வந்து எழுந்தமர்ந்தேன். தண்ணீர் குடித்து வந்து தூக்கம் பிடிக்காமல் கணிப்பொறியை துளாவினேன். முகநூலில் சிவநேசனின் பக்கம் கண்ணில் பட்டது. முதல் பக்கத்தில் சிவநேசனின் கைகளை பிடித்துக்கொண்டு ப்ரியா நின்றிருந்தார். இறுதியாக சிவ நேசனின் முகநூல் நடவடிக்கைகள் தெரிந்தன. சிவாவின் கடைசி நாளில் ”ஒரு உண்மை சொல்லவேண்டும்” என்கிற ஒரு முக நூல் ஐடியின் நட்பு அழைப்புக்கு செவி சாய்த்திருந்தார்.
தக்காயாமாவின் உச்சிபகுதிக்கு வந்துவிட்டதை, தனித்திருந்த வீடுகள் ஞாபகபடுத்தின. காரின் வேகத்தை மட்டுப்படுத்தினேன். வலதுபக்கம் கார்கள் நிறுத்துவதற்கான இடமிருந்தது. அங்கு காரை நிறுத்திவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்தேன். எனக்கு நேர் எதிரே இருந்த பழைய மரவீடு கவனம் ஈர்த்தது. தோட்டத்தில் வளர்ந்திருந்த ஜப்பானிய ககி மரத்திலிருந்து ககி பழங்களை ஏணியில் ஏறி பறித்துக்கொண்டிருந்தார் ஒரு முதியவர். முதியவருக்கு எப்படியும் எண்பது வயதிருக்கும். காக்கி நிற சட்டையும் பழுப்பு நிற பேண்டும் அணிந்திருந்தார். பேண்ட் உடன் இணைத்த நாடா சட்டை மேல் குறுக்காக இணைந்திருந்தது. ஏணியை பிடித்துக்கொண்டிருந்த அவரது மனைவி, கிழவர் சொன்ன ஏதோ ஒரு ஹாஸ்யத்துக்கு, ஒரு கையை இடுப்பில் ஊன்றியபடி ரசித்து சிரித்தார்.