காலையில் இருந்த தெம்பு நிறையவே குறைந்து போயிருந்தது. “இன்னுமா லைன்ல நிக்கிறீங்க“. வீட்ல இருந்து போன். “நகரவே இல்லப்பா. அங்கே தான் இன்னும் நிக்கேன். ” என்று சொல்லி மீண்டும் ஒருமுறை கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். எத்தனையோ முறை பார்த்தாகிவிட்டது. “இன்னுமாப்பா” என்று சொல்லி ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகிற சத்தத்துடன் சிரித்தாள். அவளுடைய டிரேட் மார்க் சிரிப்பு.
“வீட்டுக்கு வந்து கத்தரிக்காய் குருமா வச்சி மாவு பிசைஞ்சு பூரிக்கு உருட்டி போட்டு எடுத்துருக்கு. இன்னுமா நகரல“.
“ஆமாம்மா. மெது மெதுவா ஊர்ந்து போகுது ”
” பத்து மணிக்கு ஆரம்பிச்சுடுவாங்க. இது இண்டியன் ஃபங்ஷன் கிடயாது. சீக்கிரம் கிளம்புங்க ” என்று மறுபடி மறுபடிச் சொல்லி காலையில் வீட்டை விட்டுக் கிளப்பினேன். தூரமொன்றும் அதிகம் இல்லை. எதிர் வீட்டின் கொல்லைப்புறம் வழியாகச் சென்று பின்னால் இருக்கும் வேலிக்காட்டைக் கடந்தால் வரும் திடலில் தான் விழா நடக்கிறது. காரில் சென்றால் சுற்று வழி. ஒரு மைல் தூரம் இருக்கும். வண்டியை நிறுத்தி நடக்கவேண்டிய தூரமும் அதிகம்.
எதிர் வீட்டுக்காரர் ராதுல் கட்டுமானத் தொழில் நடத்துபவர். வேலிக்காட்டுக்குள் வழியாக நடந்து செல்ல வசதியாக மரக்கட்டைகளால் பாதை போட்டிருக்கிறார். பாதையின் வலதுபுறம் குளமொன்று உள்ளது. இடது புறம் தான் அந்தக்காடு. குடியிருப்பின் சில குழந்தைகள் சைக்கிளில் வந்து வண்டியை ராதுல் வீட்டில் நிறுத்திவிட்டு இந்த வழியாகத்தான் திடலைத் தாண்டி பள்ளிக்கு நடந்து செல்வார்கள்.
எனக்குத் தெரிந்தவர்கள் நான் இங்கு புதிதாய் குடியேறியபோது ராதுலின் இந்தப் பாதையைப் பற்றி சிலாகித்தனர். கைக்காசை இப்படி யார் செலவழிப்பார்கள்? காசு கொடுத்து அந்தரங்கம் வாங்கும் அமெரிக்காவில் கைக்காசைக் கொடுத்து அந்தரங்கத்தையும் பறிகொடுக்க என்ன தேவை இருக்கிறது? கொல்லையை ஒட்டிய குளத்தை பார்த்தபடியிருக்கும் ஒய்யாரமான பால்கனியை கட்டிய அவரால் ஒரு வேலி போட முடியாதா என்ன?
நாங்களும் ராதுலின் வீடு வழியாகத்தான் இன்று வந்தடைந்தோம். இத்திடல் இன்று வழமைக்கு மாறான உயிர்ப்புடன் தெரிகிறது. விழா ஏற்கனவே ஆரம்பித்து களை கட்டியிருந்தது. நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும்போது எங்களைத் தவிர பக்கத்தில் ஒரு குழு கால்பந்து விளையாடும். இவர்களைத் தவிர ஒன்றிரண்டு பேர் தனியாகவே நாயுடனோ நடந்து கொண்டிருப்பர். எப்பொழுதாவது திடல் பராமரிப்பாளர் வந்து மேற்பார்வை பார்த்துச் செல்வார். பெண்களையோ குழந்தைகளையோ சிறுவர்களையோ பார்க்கமுடியாது. ஆனால் இன்று கிரிக்கெட் திடல் முழுவதும் மக்கட்பெருவெளி. குடும்பம் குடும்பங்களாக மக்கள் அங்கும் இங்கும் நகர்ந்துகொண்டிருந்தனர். எங்கும் பூத்த முகங்கள். ஆரவாரங்கள் மிகுந்து இருந்தது.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கவுன்டி ஏற்பாடு செய்திருந்த முட்டைவேட்டைப் பெருநாள். கால்பந்துத்திடலில் வயதுவாரியாக பிரிக்கப்பட்டிருந்த வேலிகளுக்குள் வண்ண முட்டைகள் சீரற்று பரப்பப்பட்டிருந்தது. எங்கள் வீட்டு சிறுசு “எச்சகச்சம் எச்சகச்சம்” என்று பிரமிப்பைக் காட்டியது. எல்லைக்குக் கட்டியிருந்த வேலியைத் தொட்டு உள்ளே நுழைவதும் வெளியே வருவதுமாக இருந்தாள். வேலிக்குள் தன்னார்வலர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.
அரை மணி நேர இடைவெளியில் ஒவ்வொன்றாகத் திறந்துவிடுவதாக அறிவித்திருந்தனர். “ஏங்க, இன்னும் நேரம் இருக்குல. அதுக்குள்ள ஒரு ரவுண்டு சுத்திட்டு வந்துடலாம்” ன்னு சொல்லி முதலில் நான் நிற்கும் இதே இடத்திற்குத் தான் வந்தோம்.
அப்போதும் இதே போல இங்கு பெரிய வரிசையாக மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். என்ன இங்கே நடக்கிறது என்று தெரிந்துகொள்ள கூட்டத்தை நோக்கி நடந்தோம். அருகே சென்றவுடன் ஒருவர் பலூன் ஊதி குழந்தைகளுக்கு ஊதிக்கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அவரைச் சுற்றி குழந்தைகள் கூட்டம் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தன. ஒரு சிறுவன் கையில் காற்றடைத்த வாளுடன் எங்களை வேகமாகக் கடந்து சென்றான்.
வரிசையில் நிற்கலாம் என்று வரிசையின் கடைசி வரை மெதுவாக நடந்ததும் ” டாட், இட்ஸ் எ பிக் க்யூ. கன் வீ கோ டூ ஃபேஸ் பெயிண்டிங்” என்று எங்கள் வீட்டு பெருசிடமிருந்து ஒரு யோசனை வர அங்கிருந்து நகர்ந்தோம்.
“அப்பாஆஆஆ. நல்லாயிருக்கா!” என்று துச்சலை முகத்தில் வரைந்த வண்ணத்துப் பூச்சியைக் காட்டி உற்சாகத்துடன் கேட்க “சூப்பரா இருக்கும்மா” என்று சொன்னேன். அவள் இன்னும் முழுநேரப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கவில்லை.
ஒரு தடவை முட்டைகளைப் பொறுக்கிவந்த பின்பும் பலூன்காரரைச் சென்று பார்த்தோம். அப்போதும் வரிசை குறைந்தமாதிரி தெரியவில்லை. எங்கள் வீட்டு குழந்தைகளின் சாப்பாடுத்தட்டு மாதிரி. ஒரு மணிநேரம் கழித்து வந்து பார்த்தாலும் சாப்பாடு குறைந்திருக்காது.
குழந்தைகள் ஆட்டைத் தடவிக்கொடுத்து பின் கண்ணாடிக்குள் சுருண்டிருந்த பாம்பிற்கு கை காட்டி “ஹாய் ஹலோ” சொல்லிவிட்டு சிறிது நேரம் சறுக்குமரம் விளையாடினர். தீயணைப்பு வண்டியைச் சுற்றிப் பார்த்தனர். பின்னர் கொஞ்ச நேரம் சாகச வளையம் சுற்றல். விதுரன் நிறுத்தாமல் சுற்றும்பொழுது பக்கத்தில் நின்ற சிறுமி வளையத்தைத் தட்டிவிட்டு சிரித்தது. அவன் மீண்டும் தொடர்ந்தான். பின்னர் அறிவிப்பு கேட்டு முட்டை எடுக்க கூட்டமாய் விரைந்து சென்றனர்.
துச்சலை ஹாலோவீனுக்கு வாங்கிய பூசணிக்காயாய் வடிவிலான பிளாஸ்டிக் வாளியைக் கொண்டு வந்திருந்தாள். மூத்த பையனோ தலையணை உறையைக் கொண்டுவந்திருந்தான். அந்த வாளியிலும் தலையணை உறையிலும் நிறைய முட்டைகள் அள்ளி வந்தனர். “யொம்ப யொம்ப எக்ப்பா” என்ற உற்சாகத்துடன். தூவப்பட்ட எல்லா முட்டைகளும் எடுக்கப்பட்டிருந்தன.
மணிகளை அள்ளி வைத்து தைத்த பை ஒன்றைக் குறிபார்த்து சிறிது தூரத்தில் சாய்த்து வைத்திருக்கும் பலகையில் உள்ள ஏதாவது ஒரு துவாரத்திற்குள் எறியவேண்டும். குடும்பத்தில் எல்லோரும் முயன்றோம். “அம்மா..நீ மட்டும் தான் வின்னர். உனக்கு ஒரு சர்ப்ரைஸ்” என்று சிறுசு சேகரித்து வந்த முட்டைகளில் ஒன்றை எடுத்து நீட்டினாள். அம்மாவோ திடலில் ஒலித்துக் கொண்டிருந்த துள்ளல் இசைக்கு ஏற்றவாறு உடலை அசைத்து சில நடன அசைவுகளைச் செய்து பரிசை வாங்கினாள்.
இதைச் சாக்காக வைத்து முட்டைகளை கொட்டி கடைவிரித்து உடைக்க ஆரம்பித்துவிட்டனர். வழக்கம்போல் குப்பைக்குச் செல்லும் தரத்திலேயே வண்ண மிட்டாய்கள் இருந்தன. இரண்டு முறை கண்ணே மணியேவிற்கு மசியாமல் குரல் சற்று உயர்ந்த பின்னர்தான் முட்டைகள் வாளிக்குள் சென்றது.
கடைசியாக மீண்டும் பலுன் வரிசைக்கு வந்தோம். இன்னும் அதே நீளமான வரிசை. கடைசியாக போய் சேர்ந்துகொண்டோம். பெரிசு நண்பர்களுடன் விளையாடச் சென்றான். சிறிது நேரம் கழித்து “ஏப்பா. இவ தூங்குற மாதிரி இருக்கா. இவள கூட்டுட்டு போய் நான் போய் சமச்சுட்டு இருக்கேன். நீங்க முடிச்சுட்டு வாங்க” என்றுச் சொல்லி மனைவியும் கிளம்பிவிட்டாள். “ எனக்கு பட்டர்பிளைப்பா “ என்று சிறுசு சொல்லிவிட்டு டாட்டா காண்பித்தாள் .
வரிசையில் எனக்கு முன் நின்றிருந்த வயதான அமெரிக்கப் பெண்மணி தன் பேரனைக் கூப்பிட்டு வந்திருப்பார் போலும். அவனும் விளையாடிவிட்டு தண்ணீர் குடிக்க, நொறுக்குத் தீனி சாப்பிட என வந்து வந்து சென்றுகொண்டிருந்தான். “பாட்டி, நான் முடிவை மாத்திட்டேன். எனக்கு ரோபோ வேணும்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
வானம் கூராப்பு போட்டிருந்தது. இதை வைத்து இந்தப் பெண்மணியிடம் ஏதாவது பேச ஆரம்பிக்கலாம் என்றெண்ணி மனதில் வார்த்தைகளை கோர்த்துக்கொண்டிருக்கும்போது பாட்டி என்னிடம் திரும்பி “ஏதாவது சிம்பிளா பண்ணிக் கொடுத்தா வரிசை வேகமாக் குறையும்” என்றாள். நானும் “ஆமா.. குழந்தைங்க என்ன கேட்டாலும் பண்ணிக்கொடுக்குறார் போல” என்று தொடர்ந்தேன். பாட்டிக்கு முன்னாலிருந்து ஒரு குரல் “ஏதாவது பம்ப் வச்சி பண்ணலாம்லா. வாயை வச்சு எவ்ளோ ஊதுவாரு?. “.
எனக்குப் பின்னால் ஒரு தமிழ்க் குடும்பம் வந்து இணைந்தது. அந்தக் கணவர் தொலைபேசியில் “இடத்தைப் போய்ப் பாருங்க முதல்ல. இவ்ளோ கொடுத்து அங்க வாங்கறதுக்கு போருர்ல ஓரளவுக்கு கம்மியா பாக்கலாம். இவன் யான விலை சொல்றான்“. கொஞ்சம் சத்தமாகவேப் பேசிக்கொண்டிருந்தார். “ஓ நீங்க தமிழா? ” என்று பேச்சுக் கொடுக்கலாம். ஆனால் ஏதோ தடுத்துக்கொண்டிருந்தது.
” அப்பா!! ஐ நீட் டு கோ டு தி ரெஸ்ட் ரூம் ” என்று என் பையன் விதுரன் ஓடி வந்தான்.
“கொஞ்சம் பார்த்துக்கிடுறீங்களா! வந்துடறேன் ” என்று பின்னால் திரும்பி அந்தப் பெண்மணியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினோம். வரும்போது ஒரு சிறு புன்னகையைக் காண்பித்து வரிசையில் இணைந்துகொண்டேன். “அப்பா , ஐ நீட் ஸ்வார்ட் “ என்று அவன் தேர்வை மூன்றாவது முறை சொல்லிவிட்டுச் சென்றான் .
சிறு நாய்க்குட்டி, உயரமான ஆரஞ்சு நிற ஒட்டகச்சிவிங்கி, நீண்ட காதுகள் உள்ள முயல், நீண்ட வாலுள்ள குரங்கு, தும்பி, வண்ணத்துப் பூச்சி, குதிரை என திடல் முழுக்க அவரது மூச்சுக்காற்று பல அவதாரங்கள் எடுத்து ஓடிக் களைத்திருந்தது. அந்த ஜீவன்களை நோக்கி குறிவைத்தபடியே இருந்த வேடனின் துப்பாக்கி வெடித்துச் சிதறியது. வாளேந்திய வீரர்கள் இந்த வேடனின் அழுகையை பொருட்படுத்தாது தீவிரமாக வாட்சண்டை புரிந்து கொண்டிருந்தனர். அந்த மூச்சு யாதுமாகி எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தது.
இப்போது நான் காத்து நிற்கும் இதே இடத்தில்தான் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் இரண்டு மணிநேரத்திற்கு மேல் நின்று விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருப்பேன். என் இடதுபுறம் விக்கெட்டுகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் தெரிகிறது. கிரிக்கெட் விளையாடாத ஊரில் கிரிக்கெட் பிட்ச். குஜராத்கார்கள் விளையாடுவதற்காக கவுன்டியிடம் காசு கொடுத்து மண்ணும் கொடுத்து செய்தது. இரு திடல்களுக்கும் மத்தியில் உள்ள சிறிய குடோனில் மண் மூடைகள் அடுக்கி வைத்திருப்பர். பராமரிப்பாளரிடம் கேட்டு மண் வாங்கி கொட்டி இந்தப் பிட்சை பலமுறை சமன்செய்திருக்கிறோம்.
“ஓகே நானும் அப்ப கிளம்பி வரேன். இவளும் தூங்காம நசநசத்துட்டு இருக்கா” என்று மறுமுனையில் தொலைபேசியில் பேசியவள் மீண்டும் திடலுக்கு வந்தாள். அப்போதைவிட வரிசை நீண்டும் தடித்தும் இருந்திருந்தது. முப்பது வருட வீட்டுக்கடனில் ஐந்து வருடம் தவணை ஒழுங்காகக் கட்டியும் கடன் சுமை குறையாமல் இருப்பது மாதிரி வரிசையும் குறையவில்லை. அவளோ வந்தவுடன் வரிசையில் பின்னால் நிற்கும் ஒரு நட்புடன் நின்று கதையளக்க ஆரம்பித்திருந்தாள். கையில் கட்டியிருந்த ஆப்பிள் கடிகாரத்தை பலமுறை பார்த்தாச்சு. கடிகார முட்கள் மட்டுமே நகருகின்றன.
அஞ்சு டாலருக்கு இருபது பலூன் கிடைக்கும். ஆனால் இது மாதிரி விதவிதமா குழந்தைகள் கேட்கிறமாதிரி நம்மால் செய்ய முடியுமா என்ன? ஒரு பலுன்ல செய்ய முடியுற உருவங்கள்தான் செய்வேன் என்று இவரு சொல்லலாம். அஞ்சு பலுன் வரை வச்சு ஒரு வண்டு பண்றாரு. வாங்கிட்டு போற குழந்தைங்க முகத்த பார்க்கனுமே. அதுக்காகத்தான் அவர் இப்படி மினக்கெடுறாரோ.
திடலில் ஒலித்திருந்த பாடல் நிறுத்தப்பட்டு “இன்னும் 15 நிமிடங்களில் விழா நிறைவடைகிறது.” என்று அறிவிப்பு வந்தது. மீண்டும் ஒரு துள்ளல் பாடல். அவரிடம் சென்று பலூன் வாங்கும்போது இரண்டு வார்த்தைகள் பாராட்டி கண்டிப்பாக பேசியாக வேண்டும். இதை மாதிரி மனிதர்களைப் பார்ப்பது அரிது. இப்படி வேலையாய் இருக்கும் அவரிடம் ரொம்ப நேரம் பேச முடியாது. நம்ம பாராட்டு கண்டிப்பாக அவருக்கு ஊக்கமாக இருக்கும்.
ஜனனித்த சில நொடிகளில் ஒரு ஆரஞ்சு நிற ஒட்டகச்சிவிங்கி மரணித்திருந்தது. அற்ப ஆயூள். நான்கு வயதுக் குழந்தைக்கு நேரக்கூடாத துயரம். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பதை சொல்லிப் புரிய வைக்க முடியாத வயது.
அந்த அம்மாவிற்கோ குழந்தை அழுபவதைவிட அவர்களை நோக்கியுள்ள கண்களின் கூர்மைதான் தர்மசங்கடமாக இருந்தது. குழந்தை கீழே உட்கார்ந்து காலை உதைத்து உதைத்து அழுகிறது. சில நிமிடங்களில் பலூன்காரரே ஓடி வந்து இன்னொரு சிவிங்கி கொடுத்துவிட்டு நிற்காமல் ஓடிவிட்டார். இந்த முறை அவளுக்கு கிடைத்தது மஞ்சள் வண்ணச் சிவிங்கி .
சரியாக ஒரு மணிக்கு நன்றி அறிவிக்கப்பட்டு விழா அதிகாரப்பூர்வமாக முடிக்கப்பட்டிருந்தது. ஒலிப்பெருக்கிகளும் அந்தப் பாட்டுப்பெட்டியையும் அதே பகுதியில் இருந்த பாம்புப் பெட்டியையும் அகற்றிக்கொண்டிருந்தனர்.
எனக்குப் பின்னால் இருந்தவர் அப்பொழுதும் தொலைபேசியில் தான் இருந்தார். அவர் இன்னும் நில பரிவர்த்தனை செய்துகொண்டிருந்தார். மனைவியிடம் கிளம்பலாம் என்ற தொனியில் கையைக் காண்பித்து குடும்பத்தைக் கிளப்பிக் கொண்டுசென்றார்.
ஆடு, கோழிகள் இருந்த அந்த பண்ணையும் வண்டியில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. சறுக்கு மரத்திலிருந்து காற்று புடுங்கிவிடப்பட்டது. இன்னும் கொஞ்ச மக்கள் முகப்பூச்சு நிலையத்தில் காத்திருந்தனர்.
கோல்ஃப் வண்டியைப் போன்ற வண்டியில் வந்து இறங்கியவர் பலுன்காரரிடம் ஏதோ பேசினார். பலூன்காரர் பதில் சொன்னவுடன் வண்டியில் வந்தவர் பக்கத்தில் உள்ள நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த கூடாரத்தை அகற்ற ஆரம்பித்துவிட்டார். முகப்பூச்சு நிலையத்தின் கூடாரமும் அகற்றப்பட்டது. ஆனால் அங்கு இன்னும் முகப்பூச்சு நடக்கிறது. அந்த சிறிய வரிசை இன்னும் காத்திருந்தது.
முடிவுக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. எனக்கு பின்னால் இரண்டு ஆட்கள் தள்ளி வரிசையில் இருந்த ஒருவர் குழந்தையிடம் “நேரமாயிடுச்சு கண்மணி!. கிளம்பலாம்” என்றார். குழந்தையோ அடம்பிடிக்க அப்பா மீண்டும் மீண்டும் சொல்ல குழந்தை சமாதானம் அடைந்ததோ இல்லையோ அரை மனதுடன் கிளம்பியது.
பெண்மணி ஒருவர் பலூன்காரரைப் பார்த்து திரும்பி வந்து கொண்டிருந்தாள்.
“எப்போ முடிப்பீங்களாம்”
” அவர் இந்த வரிசை முடியுற வரை ன்னு சொன்னாரு”
கிளம்ப ஆயத்தமான சிலரை இந்த பெண்மணிகளின் உரையாடல் தடுத்து நிறுத்தி இருக்கக்கூடும். பலூன்காரர் நின்றிருந்த கூடாரமும் அகற்றப்பட்டுவிட்டன. பலூன் காரர் கூடாரம் இழந்ததை பொருட்படுத்தாது தொடர்ந்து ஊதுகிறார். திருகுகிறார். முடிச்சிடுகிறார். முகப்பூச்சு வரிசையும் முடிந்துவிட்டது. பலூன்காரர் மட்டும் தான் இன்னும் வேலை செய்கிறார்.
வானவில் ஒன்றைக் கையிலேந்தி வந்தக் குழந்தை “ரெயின்போ ரெயின்போ ” என்று தாவி ஓடி வந்தது. மேகத்தோடு கூடிய வானவில். குறைந்த பட்சம் ஐந்து வண்ணங்கள் இருக்கும். மற்ற எல்லாரும் கிளம்பிய பின்பும் இவருடைய நேர்த்தி குறையவில்லை. கட்டாயம் இது சமரசமற்ற அன்பின் வெளிப்பாடு தான். பொலிந்த முகத்திற்காக இதைச் செய்கிறார் என்றால் வாங்கிச் சென்ற குழந்தைகளுடன் ஓடி விளையாடும் வாய்ப்பும் இல்லையே. அதிகபட்சம் இரண்டு வார்த்தைகள் பேசுகிறார். பொலிவை விதைக்க மட்டுமே செய்கிறார் என்று சொல்லலாம்.
நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால் கவுண்டி காசு ஒன்றும் அதிகமாகத் தருவதில்லை. பின்னர் என்ன தான் ஆதாயம்? தண்ணீராக வியர்வை ஊற்றெடுக்கிறது. அவர் போட்டிருந்த வெள்ளைச் சட்டை தொப்பலாயிருந்தது. அலுவலகத்தில் ஐந்து மணிக்கு சரியாகக் கிளம்பும் ராப் பிரேசன் மனதில் வந்து போனார். அவரிடம் தான் கடமை உணர்ச்சி இல்லையா? சரியாக ஒரு மணிக்கு கூடாரத்தை கழற்ற வந்தாரே அவரிடம்தான் கடமை உணர்ச்சி இல்லையா? பலுன்காரர் வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று யோசிக்காமல் அவர் நின்றுகொண்டிருந்த கூடாரத்தை அகற்றியதால் அவர் கருணையற்றவர் என்று சொல்லமுடியுமா?
“இதுக்காகவா இவ்ளோ நேரம் நின்னோம்” என்று எனக்கு முன்னால் வரிசையில் நின்றிருந்த பாட்டி கேட்க பையன் “இது அம்மாவுக்கு கிப்ட்” என்று சொல்லி அவளுடன் வேகமாக நடந்தான். பெவிலியனில் உட்கார்ந்திருந்தபோது நான் கேட்ட உரையாடல். அவர்கள் கடந்து செல்லும்போது காதில் விழுந்தது. அவனது கையில் பிங்க் நிற இதயம். கொஞ்சம் எளிதான டிசைன் தான்.
வரிசையில் நின்றிருந்த போது பசி காதை அடைத்தது. பேச்சொலிகள் தெளிவற்றுக் கேட்டது. காலையில் சாப்பிட்டது. வயிறு உள்ளிழுத்து நடுக்கம் கொடுத்தது. வெடுக் வெடுக்கென்று துடித்தது. கால் உளைச்சல் ஒருபுறம். பின்னால் தோழமையுடன் பேசிக்கொண்டிருந்த மனைவி இன்னும் திரும்பவில்லை. பொறுமையை இழந்து கோபம் நுழைய ஆரம்பித்திருந்தது. அவளை வரச் சொல்ல கையை அசைத்துப் பார்த்தேன். பேச்சின் ஜோர் அவளை மூழ்கடித்திருந்தது. “பாரு” என்று உரத்த குரலெழுப்பினேன். வேகமாக திரும்பி வருந்தாள். கோபத்தை வெளிக்காட்டாமல் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதை மீறி முகம் சுருங்கியது. வார்த்தையில் சீற்றம் இருந்தது. பசி வந்துவிட்டால் அது தான் பாஸ் . அது நினைக்கிறது தான் நடக்கும் .
“என்னால முடியலப்பா. நீ கொஞ்சம் நிக்கிறீயா. நான் கொஞ்சம் உட்காரப்போறேன்”
“சாரிப்பா. ரேணு பேசிட்டே இருந்தாங்க “.
பெவிலியன் வரும் வழியில் பலூன்காரர் அருகே சிறிது நேரம் நின்றேன் . அவரைச் சுற்றிலும் குழந்தைகள். மீன் ஒன்று செய்து கொண்டிருந்தார். சிறிது ஊதி, பின் வாயிலிருந்து எடுத்து ஒரு திருவு திருவிக் கொண்டிருந்தார். மீண்டும் ஊதல் மீண்டும் திருகல். கடைசியில் மஞ்சள் நிற மீன் ஒன்று உருவாயிருந்தது. கொடுக்கும்போது ஏதோ நகைச்சுவை சொல்லியிருப்பார் போலும். சிரிப்பொலிகள் அலையடித்து நின்றது.
பெவிலியனில் ரேணுவின் வீட்டுக்காரர் ரிஷி அமர்ந்து கையில் தொலைபேசியின் திரையை உற்று பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து கொண்டேன்.
வண்ணத்துப்பூச்சி, வாள் சகிதம் மனைவி குழந்தைகளுடன் பெவிலியன் வந்தார். “அவருக்கு ரெண்டு டாலர் கொடுத்தேன்பா . சரி கிளம்புவோமா ”
“அப்பா! பட்டர்ஃபிளை ஃபேஸ், பட்டர்ஃபிளை பலூன். மேட்சிங் மேட்சிங்”
“சூப்பர் குட்டி.. அழகா இருக்குது. வீட்டுக்கு கிளம்புவோமா”
“மேட்சிங் மேட்சிங் “
ராதுல் வீட்டுப் பாதை வழியில் நடந்து கொண்டிருந்தோம். மழையிலும் வெயிலிலும் கட்டைகள் கிடந்து சிதிலமடைந்து கிடந்தது. பேச்சரவம் கேட்டு புதர்களுக்குள் மேய்ந்து கொண்டிருந்த மான் குடும்பம் ஒன்று கலைந்து ஓடியது. விதுரன் காற்றோடு வாட்சண்டையிட்டுக்கொண்டே வந்தான்.
“விதுரப்பா! பாத்தீயா.. அங்கிள் ஃபெஸ்டிவல் முடிஞ்ச பிறவும் பலூன் ஊதுறதப் பாத்தல. அதுதான்டா அன்பு. அங்கிளுக்கு குழந்தைகள ரொம்ப புடிச்சிருக்கு. அதனால தான் வீட்டுக்கு போகாம இன்னும் அங்கே இருக்காரு. டையர்ட் ஆனாலும் ஊதறத நிப்பாட்டல. அதுதான் பாசம். தேங்க்யூ சொன்னியா? “
ராதுல் வீட்டு உப்பரிகை அதன் முன் விரிந்திருந்த குளத்துடன் அந்தரமாய் இருந்ததை எங்களின் குதூகலம் கலைத்திருக்கும்.
பொலிவு இன்னும் குறையவில்லை. பூரியைச் சாப்பிடும்போது அருகில் வண்ணத்துப்பூச்சி. அதற்கும் பூரி ஊட்டப்படுகிறது. துச்சலை வாசிக்கும் கதையைக் கேட்கிறது. அவளுடன் சமையலறையில் ஒத்தாசை செய்கிறது. கொல்லையில் ஒன்றாக ஊஞ்சல் ஆடுகிறார்கள். “துச் கூட கடைக்கு வறீயா” என்று ஷாப்பிங் வண்டியில் ஏற்றி வைத்து வீட்டுக்குள்ளேயே சுற்றி வருவாள். இரவில் ஒரே படுக்கையில் தூக்கம். நாட்கள் ஆக ஆக பிரிவுத் துயரம் ஏதும் வராதபடி மெதுமெதுவாகக் காற்றிறங்கியது. நெடு நாட்கள் அந்த ரப்பர் துண்டு குப்பைத்தொட்டி செல்லாமல் கிடந்தது.
நெகிழ்ச்சி தந்த போதை குறைய நாட்கள் பிடித்தது. அலுவலகத்தில் நண்பர்களிடம் , பிறந்தநாள் சந்திப்பில், தமிழ்ப்பள்ளியின் வராண்டாவில், வாலிபால் விளையாட்டு முடிவில் என வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பலூன்காரர் பற்றி பேசினேன். பேசப் பேச நெகிழ்வு மங்கி நகைச்சுவையாக மாறியது. வெளியே நகைச்சுவையாகப் பேசினாலும் ஏதோ ஒரு கண்ணி தப்பியுள்ளது போல உள்ளுணர்வு. எங்கோ சுதி பிசகியுள்ளது போன்ற உறுத்தல்.
ஒரு உறக்கமற்ற பின்னிரவில் தான் அது நடந்தது. ஏதேதோ நினைவுகள் வந்து போனது. தண்ணீர் குடிக்க எழுந்தவன் சன்னல் அருகே நின்று கொல்லையைப் பார்த்தேன். சக்குரா மரம் பூக்களை முழுவதும் கொட்டியிருந்தது. தரையில் கிடந்த பூவிதழ்களும் நிலா வெளிச்சத்தை அவதானித்துக்கொண்டிருந்தன. என் நினைவுகள் மீண்டும் அந்தத் திடலில்.
பலூன்காரரும் நீண்ட வரிசையும். கூடாரம் இல்லை. மெதுவாக வரிசை நகர்கிறது. வரிசையில் நின்று கொண்டிருந்த ஆப்பிள் கடிகாரம் கட்டிய அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். மனம் அமைதியை இழந்திருந்தது. வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். சலூன் கடையில் எதிரெதிரே வைக்கப்பட்ட கண்ணாடிகளுக்கு இடையே மாட்டியது போன்ற அவதி. உருவத்திற்குள் உருவம். உருவத்திற்குள் உருவம். முடிவில்லாத நான்கள். எந்த என்னைப் பார்ப்பது, எந்த என்னுடைய குரலைக் கேட்பது என்று தெரியாத குழப்பம். கடைசியாக ஒரு உருவத்தின் குரலில் சம்மதம் அடைந்தேன். அதை அவனிடம் சொல்லவேண்டியதுதான்.
அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூப்பிட்டுப் பார்த்தேன். உதாசீனப்படுத்தினான். கையை அசைத்து அவன் கவனத்தை ஈர்க்க முயன்றேன். என்னை நோக்கி பார்த்த அந்த நொடியில் என் கையின் மணிக்கட்டை காண்பித்து நேரமாகிவிட்டது என்பதுபோல் சைகை காண்பித்தேன். அவனோ கூட்டத்தைக் கை காட்டிக் காண்பித்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். நான் காத்திருந்தது தான் மிச்சம். அதன்பிறகு அவன் என்னைப் பார்ப்பதையே தவிர்த்தான். வரிசையில் இருந்து வெளிவரவேயில்லை.