தமிழகம் கண்ட காந்தியர்கள் – பாவண்ணனின் ‘சத்தியத்தின் ஆட்சி’ நூல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ

இன்று நம்மில் பல பேர், சுற்றுலா செல்லத் திட்டமிட்டால், வெளி நாடுகளோ, வெளி மாநிலங்களோ செல்லவே விரும்புகிறோம். நம் மாநிலத்திலேயே பார்க்காத இடங்கள் எத்தனையோ இருக்கிறதே என்று நினைப்பதேயில்லை. எந்த ஊரில் இருக்கும் கோவில்களூக்கோ சென்று வருவோம். அவரவர் சொந்த ஊரிலோ, அல்லது அருகிலோ இருக்கும் கோவில்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்றோ, அந்தக் கோவிலிலும் அழகாக உள்ள சிற்பங்களை நின்று ரசிக்க வேண்டும் என்றோ தோன்றுவதேயில்லை. நாம் இங்குதானே இருக்கிறோம்; பார்த்துக் கொள்ளலாம் என்ற மனோபாவமோ அல்லது உள்ளூர் பற்றிய ஒரு அலட்சிய மனப்பான்மையோ என்று பிரித்தறிய முடிவதில்லை. அது போல அண்ணல் காந்தியடிகள் பற்றி நமக்கெல்லாம் தெரியும். காந்தி தேசப் பிதா என்று தெரியும். அதை விட்டால், கோகலே, ..சி. பாரதி என்று மிகப் பிரபலமான தலைவர்கள் பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறோம். காந்தியின் கொள்கைகள் வெற்றி பெற்றது, அவரது அற வழி, சத்தியாக்கிரகப் போரே என்று சொல்கிறோம். ஆனால், காந்தியின் அற வழிப் போராட்டத் திட்டங்கள் இந்திய நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி செயல்படுத்தப்பட்டதற்கு எத்தனையோ மாபெரும் மனிதர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் அப்படியே.காந்தியக் கொள்கைகளை இம்மியளவும் பிசகாமல் சுவீகரித்துக் கொண்டு செயல்படுத்தியிருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் கூட அதிக வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறது.அப்படி செயல்படுத்தியவர்கள் பற்றித் தெரிந்து கொண்டால் கூட அதை ஒரு சாதாரண செய்தியாகக கடந்து போகிறோம். ஆனால், அவர்கள் அந்தந்தப் பகுதியில் இயக்கங்களைக் கட்டியிராவிட்டால், சுதந்திர வேட்கை நாடு முழுவதும் பரவுவதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. அதோடு, காந்தியின் கொள்கைகளான, கிராம சுயராஜ்ஜியம், மது விலக்கு, அந்நியத் துணி பகிஷ்கரிப்பு, சத்தியாக்கிரகம் போன்றவை நாட்டின் மூலை முடுக்குகளில் பரவியிருக்காது. அப்படிப்பட்ட ஆளுமைகளை எல்லோர்க்கும் அறிமுகப்படுத்தும் உயரிய நோக்கத்தோடு, பாவண்ணன் அவர்கள், அத்தகையோரைப் பற்றிய குறிப்புகளையும், ஆவணங்களையும், புத்தகக் குறிப்புகளையும் தேடித் தேடிப் படித்து, அதன் சாராம்சத்தைப் பிழிந்து சிறிய கட்டுரைகளாக எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே சமீபத்தில் வெளி வந்துள்ள அவரது “ சத்தியத்தின் ஆட்சி “ என்ற புத்தகம்.

இந்தத் தொகுப்பை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்ட காரணத்தை பாவண்ணன் அழகாக முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அதுவே ஒரு கட்டுரையின் சுவாரசியத்தைக் கொடுக்கிறது. அவரது நண்பரும், எழுத்தளருமான விட்டல்ராவ், இவரோடு பகிர்ந்து கொண்ட சுவையான சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். சாவி இதழுக்காக மலர் தயாரிக்கும் பணியில் விட்டல்ராவுக்கும் ஒரு பங்கேற்பு கிடைத்தபோது, அவர், சென்னையை மையமாக வைத்தே, ஆழ்வார்பேட்டை மலர், வண்ணாரப்பேட்டை மலர் என் தயாரிக்கலாமே என்ற ஆர்வத்தில், அந்தப் புகுதியில் வசிக்கின்ற சில குறிப்பிடத்தக்க மனிதர்களை சந்தித்து உரையாடி,மலருக்கான கட்டுரைகளைத் தயாரித்தபோது, அது நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்படவேயில்லை. மைசூர் மலர், உதகை மலர் என்று தயாரிப்பதிலேயே ஆர்வம் காட்டப்பட்டது. இந்தச் சிறு பொறியே பாவண்ணனை ஆங்காங்கே தோன்றி மறைந்த காந்தியர்களைப் பற்றித் தொகுக்க வேண்டும் என்ற மன எழுச்சியை அவருக்குக் கொடுத்தது.

காந்தி ஒரு சுதந்திரப் போராளி என்பவர் மட்டுமல்லர். அவர் ஒரு சத்குருவுக்கு ஒப்பானவர். சத்குரு என்பவர் யாருக்கும் எந்த போதனைகளையும் ஓதுவதில்லை. தன் வாழ்க்கை நடைமுறைகள் மூலம், தன் பண்புகள் மூலம், தன் அனுபவங்களிலிருந்து தன் வாழ்க்கையைத் தான் தகவமைத்துக் கொண்டு, தன் வாழ்க்கையே மற்றவர்களுக்குப் போதனையாக அமையும்படிச் செய்பவர். அவர்.வழியாக தங்கள் வாழ்க்கையின் திசையைத் தீர்மானித்துக் கொண்ட ஆளுமைகள் பலர். .வே.சாமிநாதய்யர் தமிழ் நூல்களைத் தேடித் தேடிச் சேகரித்தது போல, பாவண்ணன், காந்திய ஆளுமைகளத் தேடித் தேடிப் படித்து தொகுப்பாக்கியுள்ளார்.

இந்தத் தொகுப்பில், பதினான்கு காந்திய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் உள்ளன. இவர்கள் அனைவரும் காந்தியை ஒரே ஒரு முறை சந்தித்தோ, கடிதத் தொடர்பு கொண்ட பிறகோ உடனே தங்களையும் அப்படி மாற்றிக் கொண்டு இந்த சமுதாய மாற்றத்திற்கும், சுதந்திரத்திற்கும் பாடுபட்டவர்களாகின்றனர்.

பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்ற வார்த்தைகள் கூட அதிகம் புழங்காத அந்தக்காலத்தில்,பெரிய பணக்காரக் குடும்பத்திலிருந்து வெளிவந்து, போராடிய பெண் ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் மூன்று இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சௌந்திரம் அம்மா டி.வி.எஸ். குடும்பத்திலிருந்து வந்த பெண்மணி. அவருடைய இளமை வாழ்க்கை வெகு சீக்கிரமாகவே கருகி விட, அப்போதே அவர் காந்தியின் முன், மறுமணம் செய்து கொண்டார். காந்தியே அதை நடத்தி வைத்தார். காந்தியின் கொள்கையான கிராம சுயராஜ்ஜியம், சுய சார்பு இவற்றை நடைமுறப்படுத்தியதில் இவருக்கு பெரும்பங்குண்டு. பெண்களுக்குக் கைத்தொழில்கள் பயிற்சி மையங்களும், ஆரோக்கியத்தை சொல்லித்தரும் மையங்களும் என் கிட்டத்தட்ட அறுபது மையங்களை இவர் ஏற்படுத்தியிருக்கிறார். இவரது சேவைக்கு சாட்சியாக இன்றும் மதுரையில்,டி.சுப்பலாபுரத்தில் சௌந்திரம் காலனி இருப்பது பெருமைக்குரியது. காந்தியின் வழியைப் பின்பற்றுபவர்கள், நாட்டின் சேவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்களே ஒழிய, தங்களுக்குப் பெருமை தேடிக் கொள்வதற்காக அல்ல அவருக்கு ஒரு சிலை நிறுவ ஒருவர் அனுமதி கேட்டபோது, அதை மறுத்ததோடு, அப்படி சிலை நிறுவினால், தான் அந்தச் சிலை முன்பாக அமர்ந்து உண்ணாவிரதமிருந்து உயிர் விடுவேன் என்றார். புகைப்படத்துக்காக குப்பை தள்ளுவது போல பாவனை செய்து, உடனே அந்த இடத்தில் தனக்கு சிலை நிறுவிக்கொள்ளும் காரியவாதத் தலைவர்கள் இருக்கும் இந்த நாட்டில், சௌந்திரம் போன்ற ஆளுமைகள் நினைந்து நினைந்து போற்றத் தகுந்தவர்கள்.

அது போலவே, கோதைநாயகி அம்மாள், அம்புஜம்மாள். இவர்கள் மூவருமே, ஏதோ சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், தேசிய சேவை என்ற பெயரில் காந்தியுடன் இணைந்தவர்கள் அல்லர். பெண்களுக்கென்று இயற்கையாக நகை, பணம் என்ற ஆசைகளை ஒதுக்கி, வீட்டில் அடைபட்டுக் கிடப்பதே நல்ல பெண்களுக்கு லட்சணம் என்ற கட்டுக்களையெல்லாம் உடைத்து, தம் பகட்டாடை, ஆபரணங்கள் துறந்து, வீதியில் இறங்கிப் போராடியதை மிகச் சாதாரண விஷயமாகத் தள்ளி விட்டுப் போக முடியாது. இந்தப் பெண்மணிகள், தங்கள் கல்வி எல்லாமே கிராமப்புற பெண்களுக்குப் பயன்படும் விதத்தில் காந்திய வழியில் ஆசிரமங்களை நிறுவியிருக்கிறார்கள். அதற்குத் தங்களுக்குச் சொந்தமான இடங்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். மது ஒழிப்பு என்ற காந்தியின் கொள்கைகளச் செயலாற்ற இவர்கள் பெண்களைச் சேர்த்துக் கொண்டு, கள்ளுக் கடைகள் முன்னால் நின்று கொண்டு, கள்ளுக் கடைகளுக்குச் செல்வோரைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தை செய்திருக்கிறார்கள். இதற்காக கள்ளுக்கடை உரிமையாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறார்கள். துணிக்கடைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அந்நியத் துணிகளைப் பகிஷ்கரிபோம் என்று போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதற்காகச் சிறை சென்றிருக்கிறார்கள். அம்புஜம்மாள், தன்னிடம் இருந்த தங்க ஆபரணன்களை அப்படியே காந்தியின் தேசிய சேவைக்கு முழுவதுமாகக் கொடுத்து விட்டார். கோதைநாயகி அம்மாள், சிறந்த பேச்சாளராக இருந்ததோடு, நன்றாகப் பாடும் திறமையும் கொண்டிருந்தார். அவர், கதராடை, மது அருந்தாமை ஆகியவற்றை வலியுறுத்தி மேடைப் பேச்சுகள் பேச ஆரம்பிக்கும்போது, சுதந்திர உணர்வைத் தட்டி எழுப்பும் பாடல்களைப் பாடுவார்.காந்திக்கு மிகவும் பிடித்த குஜராத்திக் கவிஞர் நரசிங்க மேத்தா அவர்கள் எழுதிய வைஷ்ணவ ஜனதோ பாடலை, சங்கு சுப்பிரமணியன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்ததை, கோதைநாயகி அம்மாள் மேடை தோறும் பாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வேதரத்தினம் பற்றிய கட்டுரையில்,உப்புச் சத்தியாக்கிரக போராட்டத்தின்போது, வேதாரணயம் நோக்கிப் போகும் தொண்டர்களுக்கு ஆங்காங்கே மரங்களில் உணவுப் பொட்டலங்கள் கட்டித் தொங்க விட்டிருக்கும் என்ற தகவல் மிகவும் சுவாரசியமானது திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் நிலச்சுவான்தாரர்களிடமிருந்து நிலங்களைப் பெற்று ஏழைகளுக்கு வழங்கினார் .அது போல வேதாரண்யம் அருகில் புயல் தாக்கி, மக்கள் வீடு வாசலை இழந்து நின்றபோது, ராமகிருஷ்ணா மடத்தின் உதவியோடு அவர்களுக்கு வீடுகளைக் கட்டித் தந்தார். இவரோடு உப்புச் சத்தியாக்கிரக் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் நாராயணசாமி ஐயர். சுதந்திரப் போராட்டத்திற்காக தன் சொத்துகள் முழுவதையும் இழந்து விட்டார். 1945 ல், தன் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாகக் கூறி, தன் இரு மகள்களையும் வேதரத்தினத்திடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியை வாசிக்கும்போது, இது சங்க காலத்தில் பாரி மகள்கள், கபிலரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

மற்ற ஆளுமைகளான தி.சே.சௌ.ராஜன், குமரப்பா, ராஜாஜி, மதுரை வைத்திய நாதய்யர், அவனாசிலிங்க செட்டியார் என்று ஒவ்வொருவரப் பற்றியும் வாசிக்கும்போது, சுதந்திரப் போராட்டத்தின் வீச்சு எப்படி இருந்தது என்பதை நம்மால் உண்ர்ந்து கொள்ள முடிகிறது. காந்தியர்கள் எப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மதுரை வைத்தியநாதய்யர், ஹரிஜன மேம்பாட்டுக்காவும், ஹரிஜனங்களும் ஆலயங்களுக்குள் செல்ல வேண்டும் போராட்டம் நடத்தும்போது, மாகாணப் பொறுப்பு வகிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததை ராஜாஜி அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஆலயப் பிரவேசச் சட்டம்,மது விலக்குச் சட்டம், விவசாயிகள் கடன் நிவாரணச் சட்டம் போன்றவற்றை இயற்றியிருக்கிறார். காந்தி தண்டி யாத்திரையை தொடங்கியபொழுது, ராஜாஜி, திருச்சி தி,சே.சௌ.ராஜன் வீட்டிலிருந்து வேதாரண்யம் நோக்கி தன் உப்புச் சத்தியாக்கிரக யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். அதைப் போல, காந்தி சென்னைக்கு வரும்போதெல்லாம் தங்கும் இந்தியன் ரிவ்யூ பத்திரிகையின் ஆசிரியர் ஜி. நடேசன் வீட்டில்தான் கோ.சுவாமிநாதன், காந்தியைச் சந்தித்திருக்கிறார். நடேசன் தான், அம்புஜம்மாள் அவர்களின் தந்தையார் சீனிவாச ஐயங்காரின் வீட்டுக்கு காந்தியை விருந்துக்கு அழைத்து வந்திருக்கிறார். அங்குதான், அம்புஜம்மாள் காந்தியைச் சந்தித்ததும், மன மாற்றமும் நிகழ்ந்தது.

திருப்பூரைச் சேர்ந்த அவினாசிலிங்கம் கோவையில் குருகுல முறையில் ஒரு பள்ளியை நடத்தி வந்தார். காந்தி கோவைப் பகுதிக்கு வரும்போது அங்குதான் தங்குவார். அவினாசி, தமிழ்நாட்டில் காந்தி பயணிக்கும்போது அதிகமாக உடனிருந்திருக்கிறார்.அப்போது தான் கவனித்த சிலவற்றை காந்தியடிகள் பற்றிய குரிப்பாகக் குறித்து வைத்துள்ளார். ஒரு கூட்டம் முடித்து, மதிய உணவு சாப்பிட்டு ஆனவுடன், இலைகளை எடுத்தவர் அப்படியே சிதறலாக போட்டு விடுகிறார். காந்தி அவற்றையெடுத்து குழிக்குள் போட்டு சுத்தம் செய்தார்.இன்னொரு முறை, அவினாசி மழையில் சேற்றில் இறங்கி நடக்கத் தயங்கும்போது காந்தி அதில் இறங்கி நடந்து வருவதைக் கவனித்தார். அவருக்கு காந்தியைக் கூடவே இருந்து அவருடைய பழக்க வழக்கங்களை உற்றுக் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது

அது போல டங்கன் காந்தியைச் சந்திக்கும்போது, அவர்கள் நடந்து வரும் வழியில் பலர் மலம் கழித்துவிட்டுச் சென்றிருப்பார்கள். காந்தி சிறிதும் தயங்காமல், அவற்றை மண்ணில் தள்ளி புதைப்பார்.

தக்கர் பாபா, முழுக்க முழுக்க காந்தியின் ஹரிஜன சேவாவைக் கைக் கொண்டு வாழ்ந்தார். கோ. சுவாமிநாதன், கல்லூரி மாணவராகக் காந்தியடிகளைக் காண வந்தார். சென்னைக்கு காந்தி வரும்போதெல்லாம், அவருக்குக் கூடவே இருந்து ,கூட்டம் நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வது, எழுதும்போது உடனிருந்து உதவி செய்வது என ஒரு சீடன், குருவுக்கு சேவை செய்வது போல செய்தார். ஆனால், கல்லூரி மாணவர்களில் ஆசிரமத்துக்கு அழைத்துப் போவதற்காக அவர் காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப் படவில்லை. தக்க தருணம் வரும்போது நானே அழிப்பேன் என காந்தியடிகள் கூறி விட்டார். காந்தியடிகள் மறைவு வரை அவருக்கு அழைப்பு வரவேயில்லை. காந்தியின் மறைவுக்குப் பிறகு, காந்தியடிகளின் கடிதங்கள், கட்டுரைகள், பேச்சுகள் என் எல்லாவற்றையும் தொகுக்கும் பணி அவருக்குக் கிடைத்தது. அப்போது அவருக்கு வயது 63. அதையே அவர் தனக்கு காந்தி கொடுத்த அழப்பாகவே எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக செய்தார். கிட்டத்தட்ட 50000 பக்கங்கள். ஆனால், அவருடைய அந்த அர்ப்பணிப்பு மிக்க வேலை மிகச் சரியாகக் கண்டு கொள்ளப்படவேயில்லை. காந்தியின் ஆக்கங்களை நூறு தொகுதிகளாகத் தொகுத்தவர் சுவாமிநாதன். நூறவது தொகுதியில் தொகுத்தவர்கள் பட்டியலில் அவருடைய பெயரும் பத்தோடு பதினொன்றாகச் சேர்க்கப்பட்டிருந்தது. அவ்வளவே. வெளியீட்டு விழாவில் எந்தத் தலைவரும் சுவாமிநாதன் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை.தன் பெயரை ஒருபோதும் முன் வைத்துக் கொள்ள விரும்பாத தொண்டர் இவர். இது காந்திய சிந்தனைகளை தன் வாழ்க்கை முறையாகக் கைக் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.

லண்டனிலிருந்து மருத்துவம் பயின்று இந்தியா திரும்பிய தி.செ.சௌ. ராஜன், திருச்சி பகுதியில், கதர்ப்பிரச்சாரம்., மது ஒழிப்பு போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டதோடு, காங்கிரஸுக்கு உறுப்பினர்கள் சேர்ப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டார். அவரி சிறை வாழ்க்கையை அனுபவித்தபோது, சிறையில் பலருக்கு மலத் தொற்று ஏற்பட, இவர் மருத்துவராக இருந்ததால், தானே, பலருக்கும் மல மாதிரியை சோதிக்கும் பணியைச் செய்தார்.அதனால், அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது.அதனால், மருத்துவமனையில் சேர்ந்து சிக்கிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரை, மருத்துவமனையில் வந்து பார்க்க வந்த மாகாண சிறை அதிகாரி அவர் செய்த சேவையைப் பற்றி பாராட்டாமல், உடனடியாக மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட உத்தரவிட்டார். இப்படி எந்த எதிர்பார்ப்புமில்லாமல், துன்பங்களை அனுபவித்த ராஜன் போன்றவர்கள் காந்தி என்ற அந்த ஈர்ப்பு மையத்தில் மட்டுமே நின்றிருந்தார்கள்.

இதைப்போலவே, இங்கிலாந்திலிருந்து வணிக நிர்வாகவியல் படித்து முடித்த இளைஞராக வந்த ஜே.சி.குமரப்பா, தான் எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளைக் காட்டுவதற்காக வந்தவர்தான். ஆனால், காந்தியால் ஈர்க்கப்பட்டு யங் இந்தியாவில் பல கட்டுரைகளை எழுதினார். இங்கிலாந்து அரசு கோடிக்கணக்கில் வரிப்பணத்தை வசூலித்துக் கொண்டு, இன்னும் இந்தியா, இங்கிலந்துக்குக் கடன் பட்டுள்ளது என் அறிவித்தது. குமரப்பா, இங்கிலாந்து, தன் போர்ச் செலவுக் கணக்கையெல்லாம் இதில் சேர்த்துள்ளது என்க் கண்டுபிடித்து அறிக்கை சமர்ப்பித்தார். அத்னால், அவர் சிறை செல்ல நேர்ந்தது. குமரப்பா, பொது நிதி மிகச் சரியாகக் கணக்கு வைக்கப்பட வேண்டும் என்பதிலும், நிதியைக் கையாள்வதிலும் மிகவும் கறாராக இருந்தார். பீகார் நிவாரணப்பணிகள், மற்றும் காந்தி திரட்டிய நிதியை கணக்கு வைத்துக் கொள்வது போன்ற பணிகளை அவர் மிகச் சரியாக செய்து வந்தார். கிராமியத் தொழில்கள், கால்நடைகளின் நல்வாழ்க்கை போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தினார். இப்படி காந்தியின் அடியொற்றித் திறமையாக பணியாற்றியவர் குமரப்பா.

1928 ஆம் ஆண்டு காந்தியடிகள் இலங்கைக்குச் சென்றிருந்தார். அங்கு காந்தியால் கவரப்பட்ட ராஜகோபால், இந்தியா வந்தார். வைத்தியநாதய்யரின் பரிந்துரையின் பேரில் காந்தி ராஜகோபாலை ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார். அந்நியத் துணிகள் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். உப்புச்சத்தியாக்கிரகத்தில் பங்கெடுத்துக் கொண்ட பிறகு, நானூறு மைல்கள் நடைப்பயணமாகவே சென்னை வந்தார். வரும் வழியெல்லாம் மக்கள் சந்திப்பு பிரச்சாரங்களை நிகழ்த்தினார். இவர் தன் வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். அதில் காந்தியடிகள் கண்ணீர் விட்டு அழுத இரண்டு நிகழ்ச்சிகளைப் பதிவு செய்துள்ளார். புரட்சிகர இளைஞர் ஒருவர் சிறைக் கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆங்கிலேய அதிகாரி ஒருவரை சுடுவதற்குப் பதிலாக, வேறொரு அதிகாரியைச் சுட்டு விடுகிறார். இதை எதிர்த்து காநதி அகமதாபாத் காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். யாரும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது அகிம்சைக் கொள்கைகளை தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கே புரிய வைக்க முடியவில்லையே என்று கண்ணீர் விட்டு காந்தி அழுதார்.

மற்றொன்று, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, எங்கு பார்த்தாலும் மத மோதல்கள். ஒரு சீக்கிய கிராமத்தினை பகைக் கும்பல் முற்றுகையிட்டு, அங்கிருந்த 74 இளம்பெண்களை மணமுடிக்கத் திட்டமிட்டனர். அந்தப் பெண்கள் குளித்து வருகிறோம் என்று சொல்லி சென்று, தண்ணீரில் மூழ்கி உயிர் விட்டனர்.உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரே ஒரு பெண்ணை சுசிலா நய்யார் உயிர் பிழைக்க வைத்தார். அப்போதும், காந்தி அகிம்சை வழிக் கொள்கைகளை யாருமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என்று கண்ணீர் விட்டு அழுதார்.

காந்தியோடு பழகும் வாய்ப்போ, இருக்கும் வாய்ப்போ கிடைக்கப் பெற்றவர்கள், தன்னெழுச்சியாக அவரைப் போல தாங்களும் மாறி விடுகிறார்கள். அது அவரது ஆளுமையின் பலத்தையே காட்டுகிறது.அவினாசிலிங்கம், காந்தியுடனான தன் அனுபவங்களை, :நான் கண்ட மகாத்மா” என்று ஒரு நூலாகத் தொகுத்துள்ளார். அதில் குறிப்பிடுகிறார்: அவரிடம் பேசும் விஷயங்களை விட, அவர் நம் மீது காட்டும் அன்பும்,அதன் வழியாக நம் மனத்தில் உருவாகும் எழுச்சியும் மிகமிக முக்கியமானவை. அவரிடம் சென்று வரும் ஒவ்வொரு முறையும், உயர்ந்த லட்சியங்களப் பின்பற்றும் மனவலிமை தோன்றுகிறது.உயர்வான செயல்களில் நம்பிக்கை பிறக்கிறது. சோர்வு அகன்று விடுகிறது. வெறுப்பு மறைந்து விடுகிறது எல்லாவற்றுக்கும் மேலாகநாமும் உயர்ந்த செயல்களைச் செய்து சாதிக்க முடியும் என்கிற எண்ணமும் துணிச்சலும் உருவாகிறது. அதுதான் காந்தியடிகளிடம் இருக்கும் சக்தி அது நம்மையும் அறியாமல் நம்மை உயர்த்துகிறது” என்று குறிப்பிடுகிறார். அவினாசி குறிப்பிட்டுள்ள இந்த வரிகளே காந்தி எப்படி ஒரு காந்த விசையாக இருந்து தன்பால் தொண்டர்களை ஈர்த்திருக்கிறார் என்பதை நமக்கு புரிய வைக்கும்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுமைகள் பற்றிய புத்தகங்களைத் தேடி எடுத்து பாவண்ணன் தொகுத்துள்ளதை வாசித்து இப்படி பல தகவல்களப் பெற்றுக் கொள்ள முடிகிறது. புத்தகங்களையே வாசிக்கும்ஆவல் எழுகிறது. ஒரு சில கட்டுரைகளில் மட்டுமே புத்தகங்களின் பெயர் கிடைக்கின்றன..

இப்படி வெளியில் அறியப்படாத ஆளுமைகளை தெரிய வைப்பதில் ஈடுபட்டிருக்கும் பாவண்ணன் பாராட்டுக்குரியவர். ஒரு கட்டுரை எழுத அவர் எத்தனை நூறு, ஆயிரம் பக்கங்கள் படித்திருக்க வேண்டும் என்ற மலைப்பு எழுகிறது. அடுத்த தொகுதியையும் கொண்டு வரப்போவதாக முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். பாவண்ணன், எப்போதுமே, தான் படித்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அதிக விருப்பமுள்ளவர். தனக்குப் பிடித்த கதைகள், நாவல்கள், கவிதைகள், நல்ல சினிமாக்கள், நல்ல ஓவியங்கள், நல்ல இசை என பலவற்றைப் பற்றியும் கட்டுரைகளாகவும்,, தொகுப்புகளாகவும் கொண்டு வந்திருக்கிறார். அந்த வரிசையில் இப்போது இந்தத் தொகுப்பு. பல தலைவர்கள் பற்றிக் கூட தெரிந்து கொள்ளாத, கொள்ள முடியாத, இருட்டடிப்பு செய்யப்படுகிற இன்றைய சூழலில், தேடித் தேடி அவர் காந்திய ஆளுமைகள் பற்றி தொகுத்திருப்பது மிகுந்த போற்றுதலுக்குரிய செயல்.

சிறப்பான முறையில் வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகத்தினர் பாராட்டுக்குரியவர்கள். அட்டை வடிவமைப்பு சிறப்பு. அட்டையில் பதிதிருக்கும் முகங்களை அந்தந்தக் கட்டுரையின் தலைப்பிலும் பதித்திருந்தால் புரிதலுக்கு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அது போல கட்டுரைத்தலைப்புகளில் அடைப்புக் குறிக்குள் எந்த தலைவர் பற்றியது என்ற பெயரையும் போட்டிருக்கலாம். புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது காந்தியக் கொள்கைகளின் மீது பற்று ஏற்படுவது உறுதி.

 

( சத்தியத்தின் ஆட்சிஆசிரியர்: பாவண்ணன்வெளியீடு : சந்தியா பதிப்பகம், விலை: ரூ. 175/- பக்கங்கள்;176)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.