திகிரி சிறுகதை தொகுப்பு – துரோகிக்கப்படும் பெண்கள் – ஜான் மேரி கட்டுரை

ஆன்மாவை சுமந்து திரியும் வெற்று உடலே நாம். ஆன்மாவின் விழிப்புநிலை என்பது அரிதாகவே நடக்கும்; அது அவரவர் தேடலின் பொருட்டு நடப்பவை. நடந்த சம்பவத்தை வெறும் சம்பவமாக எழுதாமல் அதை புனைவுகள் மூலம் கதையாக நம் கண் முன் காட்சிப்படுத்துகையில் ஒரு மின்னல் தாக்கியது போல் இந்த வெற்று உடலில் இருக்கும் ஆன்மா விழிக்கும். அது வெறும் விழிப்புநிலை மட்டும் அல்ல அது தொடர்ந்து நமக்குள் கேள்வியாகவும், அழுகையாகவும், நேசக் குரலாகவும், நாம் நமக்கென்ன என்று கடந்து வந்த சில சம்பவங்களின் தீராத குற்றணர்வின் குரலாகவும் என பல ஒலிகளாக நம் அகமனக் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்படி விழிப்புநிலை தரும் எழுத்துக்களே ஒரு எழுதாளனின் வெற்றி.

 

போகன் சங்கரின் ‘திகிரி’ நான் வாசிக்கும் அவருடைய முதல் சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பு முழுக்க சமூகத்தாலும், ஆண்களாலும் வஞ்சிக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட பெண்களின் குரல்களாக எதிரோலிக்கிறது. ரத்தமும் சதையும் உணர்ச்சியும் அற்ற வெற்று உடலாகவே பார்க்கப்படுகிறார்கள் “சிறுத்தை நடை” தவிர மற்ற ஏழு கதைகளும் சமவெளியில் நடப்பவை

 

“தீட்டு” கதையில் ஒரு பெண்ணின் உடல் பண்டப்பொருட்களாக சமூகத்தில், தனிமனித வாழ்கையில் எப்படியெல்லாம் பார்க்கப்படுகிறது என்பதைச் சித்தரிக்கிறது. வேலைக் கேட்டு போகும் இடத்தில் அவளின் மெலிந்த, போஷாக்கு குன்றிய, அழகுகுன்றிய உடலால் கொண்டமையால் நிராகரிக்கப்படுகிறாள். தன் ஆச்சி இறக்கும் தருவாயில் பணத்துக்காக உதவி கேட்டு போகும் இடத்திலும் பணத்தை கொடுத்து அவள் உடலை உடல் துஷ்பிரயோகம் செய்ய முயற்ச்சிக்கிறான் அவளது முதலாளி. அந்த தருணத்தில் அவள் “தீட்டாயிருச்சண்ணே” என்று சொல்லும் இடத்தில் ஒரு பெண்ணின் வலியைக் உணர்விதுச் செல்கிறார் போகன். கொன்று புசிக்காமல் உயிருடன் பிய்த்து திண்ணும் ஓநாய் கூட்டத்தின் நடுவில் தவிக்கும் உயிர் போலவே கோமதி தவிக்கிறாள். கோமதியின் அக்கா பற்றிய சிறிய குறிப்புக்குகூட அவளது உடல் ஈர்ப்பு சார்ந்த சமூகத்தின் பார்வையை தனிக்கதையாக உணர்விக்கக் கூடியது.

 

 

“சிறுத்தை நடை” கதையில் சமவெளியில் வசிப்பவர்களின் மனநிலையும் மலை பிரதேசத்தில் வசிப்பவர்களின் மனநிலையும் ஒன்று போல் இல்லை என்பதை பூடகமாக சித்தரிக்கிறது. சமவெளியில் இயல்பான கொண்டாட்ட சூழலில் வசித்த பெண் மலை பிரதேசத்துக்கு வருகிறாள். தன் ரசனைக்கு நேர் எதிராக உள்ள கணவன் அங்கு வாழும் மக்கள் அச்சூழல் அவளுக்கு மர்மமாக இருக்கிறது ஒரு நாட்டு ரோஜா செடியை அவள் அங்கு நடுகிறாள் அது மர்மமான பூஞ்சையால் தாக்கப்பட்டு காய்ந்து விடுகிறது. நாட்டு ரோஜா மலைகாட்டு பகுதியில் தாக்குப் பிடிப்பதில்லை என்று சாக்கோ சொல்லுமிடம் அக்கதையில் வரும் பெண்ணை ரோஜா செடியாகக்கூட படிமப்படுத்தி வாசிக்கும் சாத்தியத்தை தந்துவிடுகிறது. அவளையும் அறியாமல் அவள் வீட்டு வேலைகாரன் அவளை புணர்ந்து கொள்கிறான். ஒரு பெண்ணாய் மற்றவர்களால் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்படுகிறாள். சாக்கோ ஒருவன் மட்டும் தான் மனிதனாக தெரிகிறான். ஸ்காட்லெட்டுடன் நட்பு கொண்டதினால் அவன் அதிகார வர்கத்தினரால் கொல்லப்படுகிறான். இறப்புகளும், துரோகங்களும் பெண்ணை மையப்படுத்தி பின்னப்பட்டுள்ளது.

 

“முகம்” கதையில் ஒரு ஆண்ணின் பார்வையில் பெண் என்பவள் எப்படி என்று சொல்லப்படுகிறது கதையின் ஆரம்பத்தில் இறந்த பெண்ணின் ஆவி வருகிறது. அவள் இறந்து நூறு வருடங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவளின் இறப்பிற்கு அவளுடைய தந்தையோ, உடன் பிறந்தானோ, பர்த்தாவோ, காமுகனோ,அரசனோ இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கதையின் நாயகன் அந்த பெண்ணின் ஆவியை ஒரு பாலத்தில் பார்க்கிறான். மிரண்டு போய் ஒரு வீட்டின் முன் அமர்கிறான். அப்போது தமிழ்ச்செல்வியை சந்திக்கிறான்; அவள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிறாள். அவள் போலீஸ் அதிகாரியை ஒருவனை கொன்று விட்டு தலைமறைவாக வாழ்கிறாள் பின்பு அவளும் சுட்டு கொல்லப்படுகிறாள். வீட்டுக்கு வரும் கதை நாயகன் தொட்டிலில் உறங்கும் தன் பெண் குழந்தையை கையில் ஏந்தி பார்க்கிறான் இறந்த பெண்ணின் கண்களும்,தமிழ்ச்செல்வியின் கண்களும் தன் குழந்தையின் கண்களும் ஒன்றும் போல் இருப்பதாக பார்க்கிறான். வழிவழியாக பெண்களின் வலிகளும் துயரங்களும் தொடர்வதாக சொல்லப்படுகிறது. அவர்களின் எல்லா முகமும் ஒருபுள்ளியில் இணைவது போன்ற பொதுச் சித்திரத்தை தந்துவிடுகிறது.

 

 

“திகிரி” சாவை கை தொடும் தூரத்தில் பார்க்கும் ஒரு மனிதனின் மனநிலை பற்றின கதை. ஒருவர் சாவின் பயத்தில் உள்ளார். மருந்துகள் எடுக்கிறார். அதன் பக்க விளைவாக குடும்பம் மேல் விலகல் வருகிறது. மகள் மேல் இருந்த பிரியமும் போய் விட்டது. இப்பொழுது சமணர்களைக் காண மலைக்கு போகிறார். ஒரு பெண்ணை காண்கிறார். அவள் ஒரு தொல் கதையின் எச்சம். அவள் தன் கதையை சொல்கிறாள் இவரிடம்.அதில் வரும் படைவீரன் தான் நீ என்று. அதன் தொடர்ச்சியாத்தான் நீ இருக்கிறாய் என்று.அந்த நேரத்தில் சமணர் கோயிலில் அவருக்கு ஒரு விடுதலை கிடைக்கிறது.
“அறியாமையை வழிபடுகிறவர்கள் இருளில் ஆழ்கிறார்கள்”என்றார்.
”அறிவை வழிபடுகிறவர்கள் இன்னமும் ஆழ்ந்த இருளில்” என்றார். ”உங்கள் ஈசோபநிஷதம்”
மழைத்துளிக”

 

 

“நாகப் படம்” இத்தொகுப்பில் உள்ள எல்லா கதைகளை விடவும் இதுவே தனித்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன்.ஒரு கலைஞன் தன் கலைக்காக தன்னை மட்டும் அல்ல தன்னை சார்ந்தவற்றையும் இழந்து ஒரு படைப்பை தருகிறான்.நிர்வாணம் சிறந்த மருத்துவமாக கருதப்படுகிறது.மனித உடலை தவிர உலகில் அழகான விஷயம் கிடையாது. மனிதனை மட்டுமே கடவுள் அவரது சாயலில் படைத்தார். அப்படி படைக்கப்பட்ட உடலை ஒரு கலையாக பார்த்து தன்னை அதில் முழுமையாக அற்பனிப்பவர்கள் ஓவியர்களும் , சிற்பிகளும் மட்டுமே.கோவில்களில் காணப்படும் சிற்பங்கள் அனைத்திலும் கலைஞனின் ஆத்மார்த்த அற்பனிப்பும் உழைப்பும் வெளிப்படும். கோவில்களில் காணப்படும் சிற்பங்களில் பெரும்பாலும் பெண் உருவச்சிலையே காணப்படுகிறது.ஆனால் கிரேக்க வீதிகளில் காணப்படும் சிலைகளின் அதிகபட்ச அழகு ஆணின் உடலில்தான் வெளிப்படுகிறது.இக்கதையில் குழந்தை பருவத்தில் ஒருவன் வீட்டின் வறுமை காரணமாக தன் அம்மாவாள் ஓவியர் ஒருவரிடம் விட்டு செல்லப்படுகிறான்.பிறகு திருமண பருவத்தை எட்டியதும் அவன் அம்மாவாள் பெண் பார்க்கப்பட்டு குருவிடம் போராடி சம்மதம் வாங்குகிறாள் பெண் பார்க்க குரு தானும் வருவதாக கூறுகிறார் அங்கு பெண்ணை பார்த்ததும் ஆசான் திகைத்து நின்றுவிட்டார்,”மகனே இவளே உனது பெண் என்கிறார்.பிறகு திருமணம் நடக்கிறது.அவன் தன் சொந்த ஊருக்கு வந்த பின் குருவின் வாழ்வு தடம் மாறுகிறது அவர் இறக்கும் தருவாயில் தன் சிஷ்யன் வீட்டின் முன்பு வந்து இருக்கிறார்.தோற்றத்தில் முற்றிலும் வேறொருவராக அவர் தன் சிஷ்யனிடம் கடைசியாக நான் ஒரே ஒருமுறை உன் மனைவியைப் படம் வரைந்து கொள்கிறேன் என்றும் அது தன்னை குணப்படுத்தும் என்றும் கூறுகிறார் அவன் முதலில் அதிர்ந்து பேச்சிழந்து போனாலும் சம்மதிக்கிறான் அதன் பிறகு அவர் மூன்று ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்ததாகவும் நிறைய வரைந்தார் எனவும் கதை முடிகிறது

 

“ஆடை” கதையில் இடதுசாரிதுவ மரபில் இருந்து வந்த ஒரு கேரளத்து பெண் புரட்சி பேசும் சித்திக்கை காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள்.இருவருக்கும் குழந்தை பிறக்கிறது வேலை நிமித்தமாக இஸ்லாமிய நாட்டுக்கு செல்கிறான் அங்கு போனதும் சித்திக் கலாவை படுதா போடுமாறு கட்டாயப்படுத்துகிறான் அவன் சொல்வதை இவள் கேட்க மறுக்கவே அவள் நடத்தை கெட்டவள் குழந்தை அவனுக்கு பிறக்கவில்லை என்று அவளை பழிச்சொல்கிறான்.அதன் பிறகு இருவரும் பிரிந்துவிடுகின்றனர்.பிறகு ஒரு பயணத்தில் கலா கிருஷ்ணனை சந்திக்கிறாள் கிருஷ்ணன் புத்தக வாசிப்பாளனாக இருக்கிறான் இருவரும் புத்தகங்களை பற்றி கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர் பிறகு ஒருநாள் கலாவின் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போகின்றது கிருஷ்ணன் உதவி செய்ய மருத்துவமனைக்கு செல்கிறான். மருத்துவமனையில் கலாவின் அப்பா அவளை பற்றி தவறுதலாக சொல்லவும் கிருஷ்ணன் என்ன செய்வது என்று பதட்டத்துடன் நீண்ட நாட்களுக்கு பிறகு புகை பிடிக்கிறான். கள்ளுக்குடிக்கலாம் என்றும் நினைக்கிறான்.உடலை அதிகம் தாண்டாத உறவாக மட்டுமே இருக்கும் என்றும் புத்தகங்களை பற்றி மட்டுமே பேசிக் பிரிந்துவிடும் ஒரு உறவாக இருக்கும் என்று கிருஷணன் நினைக்கிறான்.கலா தன் குழந்தையை பற்றி சொல்லும் போது பண உதவி கேட்டுவிடுவாள் என்ற அச்சத்தில் கிருஷ்ணன் அதை நீயும் உன் குடும்பமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறான்.அதற்கு கலா பண உதவி உங்களிடம் கேட்கவில்லை அறிவுரை தான் கேட்டேன் என்று சொன்னதும் கிருஷ்ணனுக்கு குற்றணர்வு ஏற்படுகிறது. அவன் பேருந்தில் வரும்போது ஒரு கனவு காண்கிறான் அதில் கிருஷ்ணனின் ஆடையை அணிந்து கொள்ளுமாறு கலா தருகிறாள். இங்கு “ஆடை” என்பது எதையும் எதிர்பார்க்காமல் இந்த சமூகத்துக்கு எது தேவையோ அதை பொருட்படுத்தாமல் உதவ வந்த கிருஷ்ணன் இப்போது அதையெல்லாம் அணிந்து கொண்டு போங்கள் என்று கலா சொல்வதாக பொருள்படுகிறது.ஒரு பெண் தன் சுயத்தை இழந்து பழிச்சுமத்தப்பட்டு குடும்பத்திலும் சமூகத்திலும் வேசியாக, துரோகியாக,நக்சல்லாக,
பார்க்கப்படுகிறாள் அவள் உணர்வு நசுக்கப்படுகிறது.

 

“ஜெயமோகனின் கள்ளக்காதலி” தலைப்பே பகடையாக ஆரம்பிக்கின்றதே என்று எனக்கு தோன்றியது. மணி ஒரு கதைச்சொல்லி ஞாபக மறதி அவர் வீட்டின் முன் ஒருநாள் ஒரு பெண் வந்து நிற்கிறாள் யார் என்று மணி கேட்க ஜெயமோகன் என்று அந்த பெண் கூறுகிறாள் யாரு எழுத்தாளர் ஜெயமோகனா என்று கேட்கிறார் இல்லை உங்கள் நண்பர் ஜெயமோகன் என்று சொன்னதும் இருபது வருடங்கள் முன்பு தன் நண்பர் ஜெயமோகனை மணிக்கு நினைவு வருகிறது.அவர் ஒரு போதகராய் உள்ளார் மணி ஜெயமோகனுக்கு புத்தகங்கள் கொடுப்பது உண்டு அதனால் அவருக்கு புத்தகங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது. ஜெயமோகனுக்கு ஒரு பெண் துணை ஏற்படுகிறது அவருக்கு இவள் தான் அனைத்தும் செய்கிறாள் இவள் தான் அவரை புரிந்து கொண்டதாகவும் நினைக்கிறார் இது ஜெயமோகன் மனைவிக்கு தெரியவரவே கள்ள உறவு என்று அடித்து விரட்டப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் அங்கு அவருக்கு துணையாக இருக்கும் பெண் அழுவதை பார்த்து முகம் சுழிக்கிறார் ஏனெனில் அவரை பொறுத்தமட்டில் பெண்களின் கண்ணீர் பொய்யானவை “ஏவாளின் கண்ணீர்!” என்று திரும்பிக்கொள்கிறார்.பிறகு மணி கதை ஒன்றை வாசித்து காண்பிக்கிறார் அதில் ஒரு ஆண் தன் பெண்ணை ஒவ்வொரு அங்கமாக கை வைத்து அவள் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளை கூட நேசிக்கிறேன் அவற்றை புலர்மழையைப் போல பரிசுத்தமானது என்று கூறுகிறான்.இவற்றை கேட்டதும் போதகருக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது அந்த பெண்ணின் அனைத்து தீமைகளையும் எல்லா பிரச்சனைகளுடனும் அவளை ஏற்றுக்கொள்கிறார்.பிறகு ஜெயமோகன் தன் கள்ளகாதலியுடன் வடமாநிலம் சென்று ஊழியம் செய்கிறார்.அங்கு சென்றதும் மணிக்கு கடிதம் எழுதுகிறார் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருப்பதாக

 

 

திகிரி போகன் சங்கரின் மூன்றாவது கதைத்தொகுப்பு ஒரு ஆண்ணின் பார்வையில் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வலிகள், சொல்லப்பட்டிருக்கிறது.

இவருக்குள் இருக்கும் கவிஞன் கதைகளின் இடை இடையே வெளிப்படும் சில வரிகளில் தெரிகிறது. அவை வர்ணித்து காட்சிபடுத்தும் விதம் அழகு. தன் மீது சுமத்தப்படும் பொறுப்புகளிலிருந்தும் கடமைகளிலுந்தும் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்வில் இருந்து பெண்கள் விலகிவிடாமல் போராடுகின்றனர் போகனின் கதைகளில் வரும் பெண்கள்.

ஒரு சிறுகதை தொகுப்பு என்பது ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கதைக்கரு கொண்டு ஒரு கதையில் இருந்து அடுத்த கதைக்கு செல்லும் போது அது முற்றிலும் வேறொரு உலகம் வேறொரு அனுபவத்தையும், மனநிலையும் தந்தால், அது பன்முக வாசிப்பு சாதியத்தைக் கூட்டும். இத்தொகுப்பிலுள்ள கதைகளின் கருக்கள் ஒரே வகையில் இருப்பதால் என் எதிர்பார்ப்பை இத்தொகுப்பு பூரணப்படுத்தவும் இல்லை. ஆடை,முகம்,தீட்டு, சிறுத்தை நடை போன்ற கதைகளில் வரும் கதைமாந்தர்கள் கதை சொல்லப்படும் விதம் வேறாக இருந்தாலும் பெண்களின் வலி ஒரே விதமாக சொல்லப்படுகின்றது. பெண் வலியை அனுபவிக்கிறாள் அதற்கு காரணம். ஆண் என்பதே மையக் கருத்து. இத்தொகுப்பின் தலைப்பு கதையான திகிரி கதையும் , நாகப்படம் கதையும் மட்டுமே வேறொரு உலகத்தையும் கதை கருவையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.