பச்சைக்குளம்
ஓரமாய் ஒதுங்குகிறது
கலைகிறது
மிதந்து திசையில்லாமல் நகர்கிறது
நீர் மேல் பாசி.
அத்தனை அலைகழிப்புகளையும்
சமன் செய்து அசைத்தபடி மிதக்கிறது.
பின்னொரு அதிகாலையில்
குளத்தை தன்னடியில் ஔித்தபடி
அசைவற்று நிற்கிறது
அன்றைய முதல் தொடுதலுக்காக.
அம்மையப்பன்
கொல்லிமலையின் முகடுகளில்
அந்தியின் செவ்வொளி தயங்கி நின்று பரவ
தென்மேற்கில் மென்நீலம் விரிகிறது.
அந்த அணையும் சிலநிமிசங்களில்.
நீண்டமலையின் ஒரு உச்சியில்
வானை வாள்கீறிய தடமாய் மூன்றாம்பிறை.