விளையாட்டாய் – கா.சிவா சிறுகதை

சென்ற வேகத்தில் சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு என் மகன் குமரனை இழுத்துக்கொண்டு அந்த சிறிய க்ளினிக்குக்குள் சென்றான் சீனி. பின்னால் சென்ற நானும் என் மனைவியும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தொடர்ந்தோம். நான்கைந்து பேர் வரிசையாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில்  அமர்ந்து வெவ்வேறு திசைகளில் வெறித்துக்கொண்டிருந்தார்கள்.   டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்த மெலிந்த உடலும்  வெளிறிய நிறமும் கொண்ட இருபது வயது மதிக்கத்தக்க பெண்ணை அணுகி “டாக்டர் இருக்கிறாராம்மா” எனக்கேட்டு அவளின் இல்லையென்ற தலையாட்டலை தொடங்கும் கணத்திலேயே கேட்டான் “எப்ப வருவார்”.

“இன்னும் ஒரு மணி நேரமாகும்”
“நீங்களே ஊசி எதுவும் போடுவீங்களா, கொஞ்சம் எமர்ஜென்சி”
“மாட்டோம், டாக்டர் சொல்றதத்தான் போடுவோம்.இப்ப என்னாச்சு?”
“இந்தப் பையன் கால்ல பாம்பு கடித்துவிட்டது”
அந்தப் பெண் அதிர்ந்து எழுந்தாள்..”அய்ய்யோ ,எப்போ”
“இப்பத்தாம்மா அரைமணி நேரமாச்சு ”
“அண்ணே, பாம்புக்கடிக்கெல்லாம்  சரியான மருந்தெதுவும் இங்கேயில்லை, உடனே அறந்தாங்கியில இருக்கிற ஜி.ஹெச்சுக்கு போங்க. அங்கதான் டெஸ்டு பண்ணிட்டு ஊசி போடுவாங்க.போங்கண்ணே” என்றாள் பதட்டத்துடன்.
“அங்கேயே போறோம். முறி மருந்து எதாவது இருந்தாக் குடும்மா”
“அது மாதிரி எதுவும் இல்லண்ணா, தாமதிக்காம சீக்கிரம் போங்க” எனப் பதறினாள்.

அவளின் பதற்றத்தையும் தனதுடன் சேர்த்தபடி வேகமாக திரும்பி எங்களையும் இப்போது எங்களை வெறித்துபடி அமர்ந்திருந்தவர்களையும்  கடந்து வெளியே சென்று வண்டியில் என் மகனை ஏற்றிக்கொண்டு கிளம்பினான். நாங்களும் தொடர்ந்தோம். இருசக்கர வண்டிகளும் சில கார்களும் எதிர்ப்பட தூசி கிளம்பி முகத்தில் படரும் சாலையில் , பத்து கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அறந்தாங்கியை நோக்கி  சென்றோம்.

வானம் பார்த்த வயல்களால் பேணப்பட்ட நாங்கள் , வயல்களை வானம் கைவிட, நாங்களும் வயல்களை ஒத்தி என்ற பெயரில் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் விட்டுவிட்டு நகரத்திற்குச் சென்று இருபது வருடங்களாகிவிட்டது. முதலில் பொங்கல், தீபாவளி, செவ்வாய், பள்ளி விடுமுறைக்கு என ஊருக்கு வந்து கொண்டிருந்தோம். இப்போது ஒவ்வொன்றாகக் குறைந்து ,  வருடம் ஒருமுறையோ அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையோ என ஆகிவிட்டது.

ஒரு மாதத்திற்கு முன் அதிகாலை விழிக்கும்போதே மழுவய்யனார் நினைவுக்கு வந்தார். ஆச்சர்யமாக இருந்தது, எப்படி இத்தனை ஆண்டுகள் நினைவிலிருந்து மறைந்திருக்க முடியும். ஊரில் இருந்தபோது வாரம் ஒரு தடவை , கண்மாயின் அலை தழுவித் தழுவி மிருதுவான மணற்துகள் மீது கால் தடம் பதிய நடந்து , சுற்றி நிற்கும் ஆறு பனைமரங்களுடனும்  மஞ்சள் மலர் சூடிய ஆவாரஞ் செடிகளுடனும் தனித்திருக்கும் மழுக்கோவிலுக்கு சென்று சாம்பிராணி காட்டி வணங்கி வருவது வழக்கம். கோவிலென எதுவும் இல்லை. கண்மாய்க் கரையின் எல்லையில் நான்கு கருங்கல் தூண்களை ஊன்றி கூம்பாக பிணைக்கப்பட்ட  பனங்கை உத்திரத்தின்மேல் பனையோலை வேய்ந்திருக்கும். எந்த அடைப்பும் இல்லை. காற்று சிறு பிள்ளைகள்போல அந்த குடிலுக்குள் நுழைந்து வெளியேறி விளையாடும். சிலையெதுவும் பதிக்காமல்  அரைமுழ உயரத்தில் முனைகள் மழுங்கிய கல் இருக்கும். அதன்மேல் கொண்டு செல்லும் பூவை போட்டுவிட்டு விழுந்து வணங்கிவிட்டு பசங்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்புவோம். உருவம் எதுவும் இல்லாததால் அவரவருக்கு  பிடித்த மாதிரி தோற்றத்தை மனதில் கற்பனை செய்து கொண்ட  சாமியானதால்  அனைவருக்குமே நெருக்கமானவராக மழுவய்யனார் இருந்தார்.  தேர்வு எழுதப் போகும்போதோ விளையாட்டில் வெல்லவேண்டுமென எண்ணும்போதோ நண்பர்களுடன்   போட்டி போடும் போதோ மனதிலுள்ள கற்பனையுரு அய்யனாரை வேண்டிக் கொள்வோம். ஆனால்,ஊரைவிட்டு வந்தபின்  இருபது வருடங்களாக அவரைப் பார்க்கவேயில்லை. ஏன், நினைவில் கூட எழவில்லை.

இப்போது மனதில் தோன்றியவுடன் ஊருக்கு செல்லவேண்டுமென்ற எண்ணம் உடனேயே எழுந்தது. எப்போதும் உள்ள, விடுப்பு எடுக்க முடியாது, பள்ளிகள் இருக்கின்றன, ரயில் கூட்டமாக இருக்குமென்ற காரணங்களை உள்ளத்தின் உந்துதலைக் கொண்டு ஒருவழியாகக் கடந்து , நேற்று மாலை கிளம்பி காலையில் ஊருக்கு வந்தோம். நாங்கள் முன்பு இருந்த வீடு சிதிலமடைந்து உடைந்துவிட்டதால்    என் அத்தை பையன் சீனுவின் வீட்டில் தங்கினோம். என் அப்பாவின் பிரியமான தங்கை என்பதால் எனக்கும் அத்தையின் மீது அலாதிப் பிரியம். அவர்களின் பையன் சீனுவின் மீதும்தான். நாம் அன்பாயிருக்கும்போது அவர்களால் அசட்டையாக இருக்கமுடியுமா. ஒரே வயதென்பதால் ஊரிலிருந்தவரை ஒன்றாகவே திரிவோம். ஒருவரை மற்றவர் பிரிவதேயில்லை. கோடை விடுமுறையில் நெஞ்சில் சிலாம்பு பாய்ந்துவிடாமல் பனைமரத்தில் ஏறி,  அதிகமாக கருத்திடாத, ரொம்பவும் வெள்ளையாகவும் இல்லாத நுங்கு குலைகளை வெட்டி , வயிறுமுட்ட குடித்துவிட்டு கண்மாய்க்கு சென்று செரிக்கும் வரை ஆட்டம் போட்டுவிட்டு,  கோவைப்பழம் போல கண்கள் சிவக்க வீட்டிற்குவந்து, திட்டும்,  சில நேரங்களில் அடியும் வாங்குவோம்.      சுற்றியுள்ள ஊர்களில் சித்திரைக் கொடை விழாவிற்கு போடப்படும் வள்ளி  திருமணமோ,  அரிச்சந்திர மயான காண்டமோ  எந்த நாடகமாயிருந்தாலும்  விடியும்வரை பார்த்துவிட்டு  யாராவதொருவர் வீட்டில் இருவரும் படுத்துக்கொள்வோம். அப்படிக் கூடவேயிருந்தவனை பிரியவே மாட்டேனென அடம்பிடித்த என்னை  ஊரிலிருந்து  அழைத்துச் செல்வதற்கு அம்மா மூன்றுநாள் பட்டினி கிடந்தார்.

சீனுவுக்கு திருமணமாகி சில வருடங்களாகிறது. இன்னும் பிள்ளையேதும் இல்லை. என் பையனைத்தான் மாப்ளே, மாப்ளே எனக் கொஞ்சியபடி இருப்பான். ஊருக்கு வரும்போதெல்லாம் என்னோடு சுற்றிய இடங்களுக்கெல்லாம் அவனை அழைத்துக் கொண்டு செல்வான். பிரியமாய் இருப்பவர்களிடம் பிள்ளைகளும் ஒட்டிக்கொள்கிறார்கள் எந்தப் புகாரும் இல்லாமல்.
இன்று மதியம் கதிரறுக்கும் வண்டிக்கு சொல்ல பக்கத்து ஊருக்குச் சென்றதால் அவனால் மழுக்கோவிலுக்கு வரமுடியவில்லை. நான் மனைவி, பையனுடன் , விளைந்த மணிகளை வரப்பில் உரசியபடி மெல்ல அசைந்து கொண்டிருந்த அடர்மஞ்சள் நெற்பயிற்கள் காலணியணியாத பாதங்களில் மெல்லிய தடம் பதிக்க,  வரப்புகள் மீது நடந்தோம். ஆங்காங்கே நண்டுகளின் வளைகள் தென்பட்டன. சில நண்டு ஓடுகள் கிடந்தன. “ஓடுகள் மீது கால் வைத்துவிடாதீர்கள்”  என அவர்களை எச்சரித்தபடி நடந்தேன். கால் வைத்தால் ஓடு நொறுங்கி காலில் ஏறிவிடும். தேள் கொட்டியதுபோலக் கடுக்கும்.

வயலைத் தாண்டியவுடன்தான் கண்மாய்.  கண்மாயின் கழிமுகத்தில்தான் கோவில். மணலில் கால் பட்டபோது மனது சில்லென்றிருந்தது. புல்லின் மேல் புதைவது போல பாதம் புதையப் புதைய நினைவுகளெல்லாம் உள்நோக்கிப் போக வேகமாக நடக்க ஆரம்பித்தேன். எந்தக் கால்தடமும் கண்ணில் படவில்லை. யாரும் இந்தப் பாதையில் நடப்பதில்லையெனத் தெரிந்தது. சீனுவிடம் கோவிலுக்கு செல்லவேண்டுமென கூறியபோது “நான் போய் ஆறு மாசமாச்சு” என்றே சொன்னான். அவசர வேலையாக இல்லாமலிருந்தால் அவனும் வந்திருப்பான். காய்ந்துபோய் தரையோடு படர்ந்திருந்த புற்களை தாண்டி கோவிலருகே சென்று பின்னால் வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன். பதினைந்தடி தொலைவில் ஒரு காலை தூக்கியபடி பையன் நிற்க பதற்றம் உடல் முழுக்க தளும்ப மனைவி என்னை கையால்  அழைத்தாள் . என்னவென்று புரியாமல் , வேகத்தில்,  மணலில் கால்புதைய  நான்கே எட்டில் அவர்களை அடைந்தேன்.
“என்னாச்சுடா”
“பாம்பு கடிச்சிடுச்சுங்க..பய கால்ல”
“உண்மையாவா,ஏய்…முள்ளு ஏதாவது குத்தியிருக்குண்டா”
“இல்லப்பா, பாம்புதான்..அதோ கெடக்குது பாருங்க” எனக் கை காட்டிய பக்கம் கடுங்கோபத்துடன் திரும்பிப் பார்த்தேன்.

வெயிலில் காய்ந்து பழுத்துப் படர்ந்திருந்த நண்டுப் புற்களையொட்டி  ஒரு முழ நீளத்திற்கு வளைவளைவான சாம்பல் நிறப்பாம்பு கிடந்தது.  அதைப் பார்த்தவுடனேயே ஏனோ  சட்டென கோபம் தணிந்தது.   ஒரு கணம் கண் இருட்டுவது போல் இருந்தது. பயம்கூடாது .. கூடாது.. மனதிற்குள் சில தடவை கூறிக்கொண்டு அவன் காலை நோக்கினேன். முட்டியிட்டு மணலில் அமர்ந்து அவன் பாதத்தை என் தொடைமேல் வைத்து லேசாக ரத்தம் கசிந்த கடிமுனையை என் இரு கட்டை விரலாலும் அழுத்தினேன்.இரு சொட்டு ரத்தம் வெளிவந்தது.நிறம் எதுவும் மாறவில்லை.  கால் லேசாக நடுங்குவதை கையில் உணரமுடிந்தது.  சுற்றிலும் பார்த்தேன்.  சிறிய வாழை நாரொன்று கிடந்தது. அதில் படிந்திருந்த மணலை உதறிவிட்டு மணிக்காலில் இறுக்கிக் கட்டினேன்.

“தம்பி ,ஒண்ணுமில்லை, பயப்படாதே. கட்டியாச்சு.மேலே ஏறாது. டவுனுக்குப் போயி ஊசி போட்டுக்கலாம் ” என அவனுக்கு கூறுவதுபோல எனக்கும் கூறிக்கொண்டேன்.
“ஏங்க, வீட்டுக்குப் போகலாங்க” என்ற மனைவியிடம் “இவ்ளோ தூரம் வந்துவிட்டோம், சாமியக் கும்பிட்டுவிட்டு போயிடுவோம்.ஒரு அஞ்சு நிமிசம்” எனக் கெஞ்சும் தொனியில் கேட்கவும் அவளால் மறுக்க முடியவில்லை. “கொஞ்சம் பொறுத்துக்கடா, தம்பி”  என மகனிடம் கூறியபோது , அவன் முகத்தில் தோன்றிய  உணர்வுகள் வலியினால்தான் என்றே நம்பினேன்.  நான் உடனே கிளம்பாததற்கு ” ஒரு காரியத்திற்கென்று செல்லும்போது என்ன தடை வந்தாலும் அதை முடிக்காமல் திரும்பக்கூடாது ”  என என் அம்மா அவ்வப்போது கூறியிருந்தது  மட்டும் காரணமல்ல ,  உருத்தெரியாமல் மாறியிருந்த அணுக்கமானவரின் இணக்கமான  விழிகளென,  மனதாழத்தின் ஓரத்தில் , பயம் தேவையில்லையென துளி  நம்பிக்கையை தக்கவைத்த  அந்தப் பாம்பின் விழிகளும்தான்.

கோயிலையடைந்து,  அவர்கள் இருவரும் தரையிலேயே நிற்க நான் மட்டும்  என் முட்டியளவிற்கு இருந்த திண்டின்மீது ஏறினேன். அந்தக்கல் காற்று மோதி மோதி இன்னும் கொஞ்சம் மழுங்கியிருப்பதாகத் தோன்றியது. கொண்டுவந்த பூவை சாமி மீது லிங்கத்தின் மீது போடுவதுபோலப் போட்டு கம்ப்யூட்டர் சாம்பிராணியை பற்ற வைக்க தீப்பெட்டியை பொருத்தினேன்.மூன்றாவது குச்சியையும் சுழன்றடித்த காற்று அணைத்தது.  இம்மாதிரியான தருணங்களில் தெய்வங்கள்மேல் தோன்றும் புகார்கள் ஏதும் மனதில் தோன்றவில்லை.  திரும்பி மனைவி முகத்தைப் பார்க்க எழுந்த எண்ணத்தை  அடக்கியபடி குனிந்து ஒடுங்கியமர்ந்து இன்னும் நான்கு குச்சிகளுக்குப் பிறகு   கற்பூரத்தை முதலில் கொளுத்தினேன். சாம்பிராணியையும் கொளுத்தி நிற்க வைத்தவுடன் தொட்டு வணங்கி , கீழே வந்து மண்ணில் முழு உடலும் படிய வணங்கினேன். மண்ணையே எடுத்து நெற்றியில் பூசிக்கொள்ள அவர்களும் அப்படியே செய்தார்கள்.வேகமாக திரும்பி நடக்கையில் அந்த இடத்தைக் கடக்கையில்  ஒருகணம் கூர்ந்து நோக்கினேன். அது அதே இடத்திலேயே கிடந்தது. ஏன் அதை அடிக்க வேண்டுமென்ற வெறி மனதில் எழவில்லை என எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. வரும்போதே தொலைபேசியில் சீனுவிடம் பேசினேன். பதற்றம் குரலிலேயே தெறித்தது. பார்க்கப் போனவரைப்  பிறகு பார்த்துக்கொள்ளலாம் என   உடனே வீட்டிற்கு வந்து பக்கத்து வீட்டிலிருந்த ஒரு வண்டியையும் வாங்கி தயாராக வைத்திருந்தான் மருத்துவரைப் பார்க்க டவுனுக்கு போவதற்காக.

சீனுவின் வண்டியை ஒட்டியபடியே பின் தொடர்ந்தேன். மனைவி, “ஏங்க, பயலோட காலு வீங்கற மாதிரி இருக்குங்க ” என்றதும் கவனித்து பார்த்தபோது சாதாரணமாக நரம்பு தெரியும் பாதத்தில் சற்று பூசினாற்போல மேடிட்டிருப்பது தெரிந்தது. குரலில் பதட்டம் தெரியாதவாறு “அதெல்லாம் ஒன்னுமில்லை” என்றேன்.

வண்டியின் பின்னால் அமர்ந்து சீனுவின்   வயிற்றை இரு  கைகளாலும் இறுக்கிக்கொண்டு , மயக்கம் கொண்டதைப்போல அவன்  முதுகில் தலையை  சாய்த்தபடி செல்லும் மகனைப் பார்த்தபோது,  சீனு என் முதுகில் சாய்ந்தபடி இதேபோல் வந்தது நினைவுக்கு வந்தது. சென்னைக்கு சென்று  ஆறு மாதத்திற்குப் பிறகு  ஒன்பதாம் வகுப்பு கோடை விடுமுறைக்கு , முதல் முறையாக  ஊருக்கு வந்தபோது என்னிடம் அவன் பேசவேயில்லை. முதல்ல   இரண்டு நாட்களுக்கு , என் கண்ணிலேயே படவில்லை. பிறகு பார்த்தபோதும் விலகி விலகியே சென்றான். அவனைப் பார்ப்பதற்காகவே இவ்வளவு தூரம் வந்தவனை தவிர்த்தபோது முதலில் கோபமும் வெறுப்பும்தான் வந்தது. பிறகுதான், அன்பால்தான் இப்படி நடந்துகொள்கிறான் என்பது புரிந்தது. நானே அவனைப் பார்ப்பதற்காக சென்றேன்.

கிணற்றுக் கொல்லையில் இருப்பதை தெரிந்துகொண்டு அங்கே போனேன். தரையோடு இருக்கும் கிணற்றுக்குள்  நாலைந்து பேர்  குதித்து குளித்துக்  கொண்டிருக்க, இருவர்,  கிணற்றின் உட்புறமாக சுற்றி கீழிறங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த  படிக்கல்லில்  அமர்ந்து சிறிய வாளியில் பசும் மஞ்சளாய் தளும்பிய  தண்ணீரை மொண்டு உடம்பில் ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.  கிணற்றின் ஓரமாக நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை , அவன் அறியாத மாதிரி அருகில் சென்று சட்டென்று கிணற்றுக்குள் தள்ளிவிட்டேன். அவனுக்கு நன்றாக நீச்சல் தெரியுமென்பதால்தான் அதை செய்தேன். ஆனால் , அதை அவன் எதிர்பார்க்காததால், குதிப்பதுபோல இல்லாமல் பக்கவாட்டில் உடலில் அடிபடுமாறு விழுந்தான். அதோடு படிக்கல்  ஒன்றின் மீதும் மோதிக்கொண்டான். ரத்தம் லேசாக வெளிவருமளவிற்கு  அவன் அடிபட்டதை பார்த்தபோது திகைத்துவிட்டேன். எதுவும் புரியாமல் அப்படியே நின்றேன். நீருக்குள் இருந்தவர்கள்தான் அவனை தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவர்களின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு உடனே டவுனில் இருக்கும் மருத்துவமனைக்கு போகுமாறு கூறினார்கள். உடல் தளர மயக்கமாக இருந்தவனை என் பின் அமரவைத்து அருகே கிடந்த பனை நாரால் எங்கள் இருவரையும் இணைத்துக்கட்டி வேகமாகப் போகச் சொன்னார்கள். முன்பக்கம் சற்று குனிந்தபடி மேடுபள்ளங்களில் மட்டும் சாய்ந்துவிடாமல் மெதுவாகவும்  மற்ற இடங்களில் வேகமாகவும் சென்று மருத்துவமனையை அடைந்தேன். அங்கிருந்தவர்களின் உதவியோடு உள்ளே கொண்டுபோய் படுக்க வைக்கப்பட்டவனை சோதித்துப்  பார்த்த மருத்துவர் “அதிர்ச்சியாலதான் மயக்கமாயிருக்காரு.  நீருக்குள் இருந்த கல் என்பதால் பெரிய காயம் உண்டாகவில்லை. கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவார்”  என்றார் ஊசி போட்டபடி.

அறந்தாங்கி ஜி.ஹெச்சின் பெரிய நுழைவு வாயிலுனுள் நுழைந்து, அருகில் நின்றுகொண்டிருந்த காவலரிடம் “எமர்ஜென்சி எங்கே ” என விசாரித்துச்  செல்ல நானும் கூடவே சென்று வண்டியை நிறுத்திவிட்டு சோர்வாக சாய்ந்திருந்த குமரனை கைதாங்கியபடி இறங்கவைத்து உள்ளே அழைத்துச் சென்றேன். சத்தம் கேட்டு நிமிர்ந்த செவிலியிடம் “பையனை பாம்பு கடித்துவிட்டது, ஒருமணி நேரமாச்சு, கொஞ்சம் வேகமா பாருங்கம்மா ” என்று கேவலாகச் சொன்னேன். பரிதவித்தபடி என் பின்னால் நின்ற சீனுவையும் மனைவியையும் ஒருமுறை நோக்கிவிட்டு, பையனை அருகில் இருந்த நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு வேகமாகச் சென்று அடுத்த அறையில் இருந்த மருத்துவரை அழைத்து வந்தார். மருத்துவர் வந்த வேகத்தை பார்த்தபோது விபரம் சொல்லியிருப்பார் எனத் தெரிந்தது.

“பாம்புதான்னு தெரியுமா”
“ஆமா, டாக்டர்”
“ஏன்னா, சிலர்  பூச்சிகள் கடிச்சதை பாம்புதான் கடிச்சிடுச்சுனு பயந்து வருவாங்க, நீங்க பாம்பை பார்த்தீங்களா, எப்படி இருந்தது ”
”  பாம்புதான், ஒரு முழ நீளத்துல சாம்பல் கலரா இருந்துச்சு, நானே பார்த்தேன் சார்” கேட்டபடியே காலை அழுத்திப் பார்த்தார்.
“சார், மணிக்கட்டை நல்லா இறுக்கமா கட்டிட்டேன், இப்ப கால் வீங்கியிருக்கிறதப் பார்த்தா பயமா இருக்கிறது”
“மொதல்ல அந்த கட்ட அவுறுங்க, இந்த கட்டுனாலதான் வீங்கியிருக்கு”  என்றார் கோபமாக.
“ஊசி ஒன்னு போடறேன், அப்பறம் இரத்தத்தை டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு என்னுன்னு பார்க்கலாம். ஏதாவது இருந்தா இரவெல்லாம் தங்கவேண்டியிருக்கும்.    பதட்டப்படாம அப்படி வெளியில உட்காருங்க ” என்று கூறியபடி செவிலியிடம் சென்று பேசினார். கட்டியிருந்த நாரை  அவிழ்த்து கோடுபோல பதிந்திருந்த தடத்தை தடவியபோது குமரன் முனகினான்.  நான் முகத்தை பார்க்கவில்லை.  செவிலி வந்து  ஊசி போட்டுவிட்டு இன்னொரு சிரஞ்ச் எடுத்துவந்து இரத்தம் எடுத்துச் சென்றார்.

சோர்ந்து அமர்ந்திருந்த என்னருகில் வந்தமர்ந்த சீனு “சாமி கும்பிடலாம்னு வந்தவங்களுக்கு இப்படி ஏண்டா நடக்குது ” என விம்மினான். நான் அவனை தோளில் சாய்த்துக் கொண்டபோது அன்றைக்கு இவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அமர்ந்திருந்தது நினைவிலாடியது. மின்னல் வெட்டியதுபோல  அந்தப் பாம்பின் முகம் மனதில் தோன்றியது. என் பையனைக் கடித்த பாம்பை அடிக்கத் தோன்றாதது ஏன் என்பது சற்று புரிவது போலிருந்தது. எதிரில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் என் முகம் தெரிந்தபோது எல்லாம் தெளிவானது. அன்றைக்கு சீனுவை கிணற்றில் தள்ளிவிட்டபோது என் முகமும் விளையாட்டாய் வினை செய்த குழந்தையையொத்த  அந்த பாம்பின் முகத்தைபோலத்தான் இருந்திருக்கும்.   “சாமி,  பாம்பின் உருவில் வந்ததென்று ” யாராவது கூறியிருந்தால் நேற்றுவரை  நான்கூட நம்பியிருக்கமாட்டேன் என்றே தோன்றியது. அதனால், வேறெதும் சொல்லாமல்    “ஒன்றும் பிரச்சனை இருக்காது ” என்று தெளிந்த முகத்துடன்,  நம்பிக்கையாய்க் கூறிய என்னை வியப்போடு பார்த்தார்கள் என் மனைவியும் நண்பனும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.