என் முதற் கனவின்
மூலப் பிரதி தேடி
அங்கே வர நினைத்த
அப்பொழுதின் மீது
காலத்தின் அதிகாரம்
சொல்லின் அங்கமான
ஆணவத்தையும் மீறிய
செயலின் பங்கமாகப்
பரிணமித்து
எனைப் பரிதவிக்க விட்டது
ஒரு கொதி வந்ததுமே
காற்று தன் ஒட்டுண்ணியாக
எனைத் தேர்தெடுத்தது
வெப்பம்
கூட்டணிக் கட்சியினரைப் புசித்து
சுவாசம் நீர் தரை கூரை
எனத் தன் ஆதிக்க வெறியை
அரங்கேற்றிக் கொண்டாடிக்
களித்துத் தன் இயல்பில்
தானே சிறந்தது என்றது
அப்போது நான்
குளிரூட்டியற்ற ரயிலறையைத்
தேர்ந்திருந்தேன்
இந்தக் காலத்தின் வலியை
அனுபவிக்கவே என்பதில்
உள்ள அபத்தம்
உண்மைக்குச் சமமாகத்
திரண்டு நின்றதும்
தார்ச் சாலை மேலே
தவிக்கும் கானல் நீரே
தவிக்கும் கானல் நீரை
குடிக்கும் ஏழை விழியே
என்ற
வேர்வைப் போர்வையை
விலக்கியது
காவிரிக் குளிர்
விரித்த வாழை இலையின்
பச்சைப் புன்னகையின்
உயிர்நீர்
அது
எனை ஒரு கணம் மீட்டது
ஒரு கணம் தான்
பின் மீண்டும்
அதே
மாயப்புன்னகை
இத்தனைக்கும் பிறகும்
வீடடைந்த என்னை
உயர்ந்த இந்தத் தென்னை
மரத்தின் மேல் இருந்து பார்க்கிறது
கருகிய ஒரு மேகத்தின் பின்னே இருந்து
உருகிய ஒரு நிலா
பிறகு மழையும் பொழிந்தது என்றால்
அது தானே
இக்கவிதையின் மாய எதார்த்தம்