”நாகராஜன் ரொம்ப திமுரு காட்டிகினு திரியறான்டா” என்று பொருமினான் சிவலிங்கம். “புள்ளு எந்தப் பக்கம் பறந்து வந்தாலும் புடிச்சி இன்னைக்கு அவன் கொட்டத்த அடக்கணும்”
எங்களை எச்சரித்துவிட்டு உத்திக்குழிக்கு நேராக இருபதடி தொலைவில் உறுதியாக நின்றான் சிவலிங்கம். கிரிதரன் இலுப்பை மரத்தின் திசையில் நகர்ந்து சென்றான். தண்டபானி கள்ளிச்செடிக்குப் பக்கத்தில் நின்றுகொண்டான். பெருமாள் கோவில் மதிலுக்கு அருகில் போய் நின்றான் வடிவேலு. நான் அரசமரத்தைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த மண்மேடைக்கு அருகில் சென்று நின்றுகொண்டேன்.
எல்லோருடைய கண்களும் நாகராஜனின் மீதே பதிந்திருந்தன. தன்னைச்சுற்றி வியூகம் வகுத்து நின்றிருக்கும் அனைவரையும் ஒருமுறை கண்ணால் அளந்துவிட்டு உத்திக்குழியைப் பார்த்துக் குனிந்தான் அவன். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கிட்டிக்கோலால் தெண்டி அடித்த கிட்டிப்புள் ஒரு சிட்டுக்குருவி போல காற்றில் விர்ரென பறந்தது.
அது தாவியெழுந்த கோணத்தை வைத்தே என்னை நோக்கித்தான் வருகிறது என்பது புரிந்துவிட்டது. உடனே எல்லோரும் “ஆனந்தா விடாதே ஆனந்தா விடாதே” என்று கூவி எச்சரிக்கத் தொடங்கினார்கள். பதற்றத்தில் கைகால்களெல்லாம் எனக்குப் பரபரத்தன. கண்களை அதன் மீதே பதித்திருந்தேன். ஒரு பறவைபோலத் தாவி அதைப் பிடித்துவிட மாட்டோமா என்று துடித்தேன். அது நெருங்கிவரும் நேரத்தைக் கணித்து சரியான தருணத்தில் கையை உயர்த்தியபடி என்னால் முடிந்த அளவுக்கு உயரமாக எகிறினேன். பிடிக்கு அகப்படாமல் என் கைவிரலுக்கு மேல் இரண்டடி உயரத்தில் பறந்துபோன கிட்டிப்புள் அரசமரத்தில் பட்டென்று மோதித் தெறித்தது. , முதலில் கீழே இருந்த பிள்ளையார் மீது பட்டு உருண்டு சென்று இறுதியாக ஆடுபுலி ஆட்டத்தில் மூழ்கியிருந்த தாடிக்காரரின் தொடையில் முட்டி நின்றது. அவர் எரிச்சலுடன் திரும்பிப் பார்த்து என்னை முறைத்துவிட்டு “போய் வேற பக்கத்துல ஆடுங்கடா” என்றபடி கிட்டிப்புள்ளை எடுத்து வீசினார்.
எல்லோரும் அடித்த தொலைவைவிட நாகராஜன் அடித்த தொலைவு அதிகமானது என்பதால் அவனே வெற்றி பெற்றவனாக அறிவிக்கப்பட்டான். நாங்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவராக அரசமரத்தின் கல்மேடையிலிருந்து உத்திக்குழி வரைக்கும் அவனை முதுகில் சுமந்துசென்று இறக்கினோம். “கிட்டிப்புள் ஆட்டத்துல நம்மள அடிச்சிக்க ஆளே கெடயாது தெரியுமா?” என்று கொக்கரித்தான் நாகராஜன்.
அடுத்த ஆட்டத்தைத் தொடர எங்களுக்கு ஆர்வம் இல்லாததால் மனம் சோர்ந்து கல்மேடைக்கு வந்து அமர்ந்தோம். நாகராஜன் தன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக மேடையின் மற்றொரு மூலையில் கூடை நிறைய அவித்த கடலைக்கூடையோடு அமர்ந்திருந்த ஆயாவிடம் நாலணாவுக்கு கடலையை வாங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தான்.
அந்தக் கல்மேடை மேட்டுத்தெருவும் ஸ்டேஷன் தெருவும் அக்ரஹாரமும் சந்திக்கும் புள்ளியில் இருந்தது. கோலியனூர் சந்தைக்கும் சிறுவந்தாட்டுக்கும் போகக்கூடிய மாட்டுவண்டிகள் அந்த இடத்தில்தான் சற்றே நின்று இளைப்பாறும். புறப்படும்போது வண்டிக்காரர்கள் இரண்டடி உயர கல்கூடாரத்துக்குள் அரையடி உயரத்தில் கருகருவென்றிருக்கும் பிள்ளையாரைப் பார்த்து வணங்கியபடியே காதுகளைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட்டுவிட்டுச் செல்வார்கள். கிழங்கோ கடலையோ விற்கவரும் ஆயாக்கள் நடந்து வரும் வழியில் பறித்துவந்த இரண்டு செம்பருத்திப்பூக்களையோ நந்தியாவட்டைப் பூக்களையோ பிள்ளையார் முன்னால் வைத்து ஒரு துண்டு கற்பூரத்தையும் ஏற்றிய பிறகே வியாபாரத்தைத் தொடங்குவது வழக்கம். கருங்கல் பதிக்கப்பட்டதால் கோடையில் கூட அந்த இடம் குளுமையாக இருந்தது. அதனால் எப்போதுமே நான்கு பேர் படுத்துக்கொண்டும் மூன்று பேர் வேர்ப்புடைப்பில் சாய்ந்துகொண்டும் வம்பு பேசிக்கொண்டிருப்பார்கள்.
மேடையின் விளிம்பில் அமர்ந்து கால்களைத் தொங்கப்போட்டபடி கடலையைத் தின்றுகொண்டே மனம்போன போக்கில் சினிமாக்கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம். சிவலிங்கம் இரண்டு நாட்கள் முன்பு பார்த்த ராமு சினிமாவின் கதையை ஒவ்வொரு காட்சியாக விவரித்தான். ஒவ்வொரு காட்சியும் நம் கண் முன்னால் நிகழ்வதுபோல கதைசொல்வதில் பெரிய கெட்டிக்காரன் அவன். வாய் பேச முடியாத ஒரு சிறுவனாக அவனே எங்களுக்கு முன்னால் நடித்துக் காட்டினான். அவன் பாடிக் காட்டிய துயரம் தோய்ந்த ’பச்சை மரம் ஒன்று’ பாடலின் வரிகளின் ஆழத்தில் நாங்கள் மூழ்கிவிட்டோம். எங்களுக்கு அருகில் ஒருவர் ஈஸ்வரா என்றபடி கையை ஊன்றி எம்பி மேடைமீது அமர்ந்த ஓசையைக் கேட்ட பிறகே எங்கள் கவனம் திசைதிரும்பியது. சிவலிங்கம் சொன்ன கதையின் சுவாரசியத்தில் அவர் எந்தத் திசையிலிருந்து வந்தார், எப்படி வந்தார் என்பதை நாங்கள் கவனிக்கவில்லை.
இரண்டு தோள்களிலிருந்தும் இரண்டு பைகளை இறக்கி வைத்துவிட்டு மூச்சு வாங்கினார் அவர். ஒரு கை அகலத்துக்கு பட்டையாக இருந்த அந்தப் பைகளின் பட்டிகள் விசித்திரமாக இருந்தன. ஒன்று பெரிய பை. மற்றொன்று சின்ன பை. அழுக்கான வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். பரட்டைத்தலை. தாடி வைத்திருந்தார். வெயிலில் முகத்திலும் கழுத்திலும் ஊறி வழிந்த வேர்வையை கழுத்திலிருந்த துண்டை எடுத்து துடைத்துக்கொண்டார்.
“என்ன பாட்டு சொன்ன?” என்று கேட்டார் அவர்.
அப்படி ஒரு கேள்வியோடு எங்கள் உரையாடலுக்கு நடுவில் அவர் குறுக்கிடுவார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. அவரைப் பார்த்தால் சினிமா பார்க்கிற மனிதரைப்போலவே தெரியவில்லை. எங்கோ காட்டிலிருந்து விறகு வெட்டி எடுத்து வந்து சந்தையில் விற்றுவிட்டுத் திரும்பும் கிராமத்தானைப்போலத்தான் இருந்தது.
பதிலை எதிர்பார்த்து அவர் எங்கள் முகத்தைப் பார்த்தபடியே இருந்ததால் சிவலிங்கம் “பச்சை மரம் ஒன்று இச்சைக்கிளி “ என்று முதல் வரியைப் பாடினான்.
”சுசிலாம்மாவும் சீனிவாசும் பாடற பாட்டா?”
“ஆமா”
“சீனிவாசுக்கு ரொம்ப இளகின குரல். சோகத்துக்கு பொருத்தமான குரல் உள்ளவரு. சோகப்பாட்டுன்னாவே சீனிவாசத்தான் போடுவாங்க”
அவருக்கு ஏதாவது தகுந்த பதிலைச் சொல்லவேண்டும் என்று பரபரத்தான் சிவலிங்கம். எனினும் சொல்லெழாவதனாக தவித்தபடி அவரையும் வானத்தையும் மாறிமாறிப் பார்த்தான். எதிர்பாராத கணத்தில் “சந்தோஷமா ஆடிப் பாடற பாட்டு கூட அவர் பாடியிருக்காரே” என்றேன் நான்.
“ஆமா. அதுவும் பாடியிருக்கார். ஆனா அவருக்குன்னு ஒரு தனித்துவம் இருக்குதில்ல, அது சோகப்பாட்டுதான்.”
சட்டென்று என் வேகம் அடங்கிவிட்டது. அவர் என்னை மறுக்காமல் ஏற்றுக்கொண்ட விதம் என்னை ஊமையாக்கிவிட்டது. தொடர்ந்து என்ன பேச என்று தெரியவில்லை.
“பாட்டுல கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயினு ரெண்டு இருக்குது. கீழ் ஸ்தாயி சோகத்துக்கு பொருத்தமா இருக்கும். சீனிவாசு கீழ் ஸ்தாயிலயே இருக்கறவர். அவரால அத ரொம்ப சுலபமா பாடமுடியும். மேல் ஸ்தாயில இருக்கற ஒருத்தர் கீழ் ஸ்தாயிக்கு மெனக்கிட்டு எறங்கிவந்து பாடனாதான் அவுங்களுக்கு சோகப்பாட்டு வரும்”
அவர் என் தோள்மீது கைவைத்து அருகில் இழுத்துக்கொண்டார்.
“நீ மயக்கமா கலக்கமா கேட்டிருக்கியா? அப்படியே மனச உருக்கறமாதிரி இருக்குதில்ல? அது சோகப்பாட்டுதான?”
“ஆமா”
”நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், இந்த மன்றத்தில் ஓடி வரும், யார் சிரித்தால் என்ன எல்லாமே அவர் பாடனதுதான?”
“ஆமா”
“அப்படி ஒரு நூறு பாட்டு இருக்கும். பெரிய சோகக்களஞ்சியம்.”
அவருடைய புன்னகையில் ஏதோ ஒரு வசீகரம் இருந்தது. இவரிடமா வம்பிழுக்க நினைத்தோம் என்று தோன்றியது. அவர் என்னிடம் “உன் பேரென்ன?” என்று கேட்டார்.
“ஆனந்தன்”
அவர் திரும்பி மற்றவர்களைப் பார்த்தார். நான் அவர்களுடைய பெயர்களை ஒவ்வொருவராகச் சொன்னேன்.
“முழுப்பரீட்ச லீவுல இங்கதான் ஆட்டமா?”
நாங்கள் கூச்சத்தோடு ஆமாம் என்று தலையசைத்தோம்.
“அந்த பச்சைமரம் ஒன்று பாட்ட ஒருதரம் நீங்க பாடறீங்களா?” என்று கேட்டேன்.
“ஓ. அதுக்கென்ன? பாடறனே” என்று சிரித்தார். “ஆனா நான் ஒரு பாட்டு பாடனா, நீ ஒரு பாட்டு பாடணும். அந்த ஒப்பந்தத்துக்கு சம்மதம்னா நான் பாடறேன். சரியா?”
நானே வலையை விரித்து நானே மாட்டிக்கொண்டேனே என்று தோன்றியதில் நாக்கைக் கடித்துக்கொண்டேன். நண்பர்கள் எல்லோரும் என்னைப் பார்த்து “ம்னு சொல்லுடா. ம்னு சொல்லுடா” என்று தூண்டினார்கள். சிவலிங்கம் சற்று சத்தமாகவே ”பள்ளிக்கூடத்துல பாட்டுப்போட்டிக்கு பாடனியே தமிழுக்கும் அமுதென்று பேர். அத பாடுடா” என்று சொல்லிவிட்டு முதுகைத் தட்டினான். நான் வேறு வழியில்லாமல் சரியென்று தலையசைத்தேன். “அப்ப நானும் தயார்” என்று அவர் சிரித்தார்.
திரும்பி தனக்கு அருகிலிருந்த பெரிய பையைப் பிரித்தார். அதிலிருந்து என்ன எடுக்கப்போகிறார் என்பதை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருந்தோம். வெள்ளைவேட்டியால் மூடிக் கட்டிய ஒரு மூட்டை அந்தப் பைக்குள் இருந்தது. அந்த மூட்டையையும் பிரித்து அதிலிருந்து அவர் ஆர்மோனியப்பெட்டியை எடுத்தார். பளபளவென அது கரிய நிறத்தில் மின்னியது. அதை எடுத்து தனக்கு எதிரில் வைத்துக்கொண்டு எங்களைப் பார்த்து புன்னகைத்தபடி துடைத்தார். மெதுவாக அவர் துருத்தியை அசைத்தபடி வெண்மையும் கருமையும் கலந்த அதன் வெவ்வேறு மரக்கட்டைகளில் விரல்களை அழுத்திய போது இசை எழுந்தது. ஆறேழு அசைவுகளிலேயே அவர் பச்சைமரம் ஒன்று பாட்டுக்குப் பொருத்தமான தாளத்தைக் கொண்டுவந்துவிட்டார். அவர் பச்சை மரம் ஒன்று பாடத் தொடங்கியபோது எங்கிருந்தோ ஒரு வானொலிப்பெட்டி பாடுவதுபோலவே தோன்றியது. அந்த அளவுக்கு வரிகளுக்குப் பொருத்தமான குரல். எங்களால் அமர்ந்திருக்க முடியவில்லை. தன்னிச்சையாக எழுந்து அவரைச் சூழ்ந்துகொண்டு நின்றோம்.
பாட்டுச்சத்தம் கேட்டதுமே கல்மேடையில் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தவர்களும் நிழலுக்கு அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தவர்களும் உறங்கிக்கொண்டிருந்தவர்களும் எழுந்து வந்து எங்களைச் சூழ்ந்துவிட்டார்கள். அவர் பாடி முடித்ததுமே சந்தோஷத்தில் எல்லோரும் கைதட்டினார்கள்.
“இப்ப நீ. இப்ப நீ” என்று ஒரு சிறுவனுக்குரிய உற்சாகத்துடன் அவர் என் பக்கமாக விரலை நீட்டி புன்னகைத்தார். நான் மெளனமாக தலையைக் குனிந்துகொண்டு அவ்வரிகளை நினைவுகூர்ந்தேன். பிறகு நாணத்துடன் அவரைப் பார்த்து தயார் என்பதுபோல தலையசைத்துவிட்டு குனிந்துகொண்டேன். அவருடைய விரல்கள் உடனே ஆர்மோனியத்தில் கட்டைகளின் மீது படர்ந்து அழுத்தம் கொடுத்து விடுவித்தன. ’தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று நான் தொடங்கினேன். பாடலை முடிக்கும் வரை தலையை உயர்த்தவே இல்லை. இறுதிச் சொல்லுக்குப் பிறகுதான் அவரைப் பார்த்தேன். அவர் குதூகலத்துடன் இரு கைகளையும் மார்பளவுக்கு உயர்த்தி வேகவேகமாகத் தட்டினார். அவரைத் தொடர்ந்து சுற்றியிருந்தவர்கள் அனைவருமே கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
“ஏற்ற இறக்கம்லாம் ரொம்ப நல்லா இருக்குது ஆனந்தா. உனக்கு ரெண்டு ஸ்தாயியும் வருது. அது பெரிய வரம். உண்மையிலேயே நீ பெரிய பாட்டுக்காரன்” என்று என்னை அருகில் வரச்சொல்லி தட்டிக் கொடுத்தார்.
ஒருவர் ஆயாவிடமிருந்து ஒரு மந்தாரை இலை நிறைய கடலையை வாங்கி மடித்து எடுத்துவந்து பாட்டுக்காரர் முன்னால் வைத்து “சாப்புடுங்க சாமி” என்றார். பாட்டுக்காரர் அதை எங்கள் பக்கமாக இழுத்துவைத்து “ம், எடுத்துக்குங்க” என்றார். மேலும் தன்னுடைய தோள் பையைத் திறந்து அதிலிருந்து கொய்யாப்பழங்களை எடுத்து “இந்தாங்க, இதயும் எடுத்துக்குங்க” என்றார்.
எந்த வகுப்பிலிருந்து எந்த வகுப்புக்குச் செல்கிறோம், எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம், எந்தப் பாடம் மிகவும் பிடிக்கும், எங்களுக்கு விருப்பமான பாடல்கள் எவைஎவை என்றெல்லாம் அவர் கேட்கக்கேட்க நாங்கள் பதில் சொல்லிக்கொண்டே இருந்தோம்.
திடீரென அவர் “இங்க இவ்வளவு பெரிய இடம் இருக்குதே, நீங்க இங்க தாராளமா விளையாடலாமே. ஏன் சும்மா இருக்கீங்க?” என்று கேட்டார்.
“நீங்க வரவரைக்கும் விளையாடிட்டுதான் இருந்தோம்.”
“அப்படியா, என்ன விளையாட்டு?”
“கிட்டிப்புள்ளு”
“ஓ, அப்ப யாரு ஜெயிச்சி குதிரை ஏறனது?”
“அவன்தான்” நான் நாகராஜனைச் சுட்டிக் காட்டினேன்.
“சரி சரி. இன்னைக்கு நாம புதுசா பந்து விளையாடாமா?”
நாங்கள் மெளனமாகி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். எங்களிடம் பந்து இல்லை என்பதுதான் காரணம். “ஏன் முழிக்கறீங்க?” என்று கேட்டார் அவர்.
“எங்ககிட்ட பந்து இல்லயே”
அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் “அது ஒரு பிரச்சினையா? பந்த நாம உண்டாக்குவோம் ஆனந்தா” என்றார். உடனே மேடையிலிருந்து கீழே குதித்து உதிர்ந்திருந்த இலைகளையெல்லாம் சேகரித்தார். பக்கத்தில் வேலியோரமாக முளைத்திருந்த செடிகளிலிருந்தும் இலைகளைப் பறித்தார். தரையில் ஒரு அடி உயரத்துக்கும் மேலாக முளைத்திருந்த புற்களையெல்லாம் பிடுங்கியெடுத்தார். பிறகு பையில் வைத்திருந்த ஒரு துண்டில் அவையனைத்தையும் குவித்து அழுத்தி அழுத்திச் சுருட்டி உருட்டி முடிச்சுபோட்டு ஒரு பந்துபோல மாற்றிவிட்டார். ”நல்லா இருக்குதா?” என்று எங்களைப் பார்த்து கேட்டுவிட்டு சிரித்தார்.
நான் அதை வாங்கி உயரமாக தூக்கிப் போட்டுப் பிடித்தேன். அசலாக பந்துபோலவே இருந்தது. நாகராஜனும் வடிவேலும் வாங்கி ஒருவருக்கொருவர் தூக்கிப் போட்டு பிடித்தார்கள்.
“மூனு பேரு இந்த பக்கம் நில்லுங்க, மூனு பேரு அந்தப் பக்கம் நில்லுங்க. நான் நடுவுல. என்னால புடிக்க முடியாத அளவுக்கு ஒரு பக்கத்துலேந்து இன்னொரு பக்கத்துக்கு பந்த தூக்கி போடணும். நான் புடிச்சிட்டா யாரு போட்டாங்களோ, அவுங்க இந்த இடத்துக்கு வந்துடணும். சரியா?”
“இது குரங்கு பந்து ஆட்டம். எங்களுக்கு தெரியுமே”
“அப்பறமென்ன, ஆடுங்க”
மறுகணமே அவர் நடுவில் நின்றுகொள்ள, நானும் சிவலிங்கமும் நாகராஜனும் ஒருபக்கம் நின்றோம். தண்டபானியும் கிரிதரனும் வடிவேலும் மற்றொரு பக்கம் நின்றார்கள்.
பந்து மாறிமாறிப் பறந்தபடி இருந்தது. பாட்டுக்காரர் தாவித்தாவி முயற்சி செய்தார். ஆனால் அவர் ஒரு பந்தைக்கூட தடுத்துப் பிடிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவரைக் கடந்து பறந்துபோனது பந்து. அவர் உண்மையிலேயே குரங்கின் உடல்மொழியில் தாவித்தாவி ஏமாந்தார். பந்து தப்பிப் போகும் ஒவ்வொரு முறையும் ஐயையோ என்று கைகளை உதறியபடி தவித்துச் சிரித்தார். அதைப் பார்க்கப்பார்க்க எங்கள் வேகம் கூடியது. கடைசி வரைக்கும் அவர் ஒருமுறை கூட பந்தை கைப்பற்றவே இல்லை. நாங்கள் வெற்றியில் துள்ளிக் குதித்தோம்.
மேடையில் அமர்ந்திருந்தவர்கள் எங்கள் திசையில் கைகாட்டிப் பேசிக்கொள்வதைக் கேட்டேன்.
“எந்த ஊரு இந்த ஆளு? கிறுக்கு மாதிரி இங்க வந்து இந்த புள்ளைங்களோட ஆடிகினிருக்கான்?”
“யாரோ நாடோடி. புள்ள இல்லாதவன்போல. புள்ளைங்கள பாத்ததும் ஏதோ வேகத்துலயும் பாசத்துலயும் ஆடறான்.”
“உடுங்கய்யா, நம்மாலதான் முடியல. யாரோ ஒருத்தன் செய்யறான். சந்தோஷமா செஞ்சிக்கடா சாமினு உட்டுட்டு போவாம, இதயெல்லாமா ஒரு பேச்சுனு பேசுவாங்க?”
எதிர்த்திசையிலிருந்து தண்டபானி பந்து வீசியபோது அது எங்கள் பிடிக்கும் அகப்படாமல் பறந்து சென்று கல்மேடையில் அவர்கள் முன்னால் சென்று விழுந்தது.
“கண்ணுமண்ணு தெரியாம என்னடா ஆட்டம் வேண்டிக் கெடக்குது? அடக்கம் ஒடுக்கமா ஆடுங்க. இல்லைன்னா வால ஒட்ட நறுக்கிடுவன்” என்று எச்சரித்துக்கொண்டே ஒருவர் தன்னிடமிருந்த பந்தை வீசினார்.
அவர் வீசிய வேகத்தில் துண்டின் முடிச்சு தளர்ந்து அவிழ்ந்து இலைகள் விழுந்து சிதறின. காற்றுபோன பந்துபோல நாங்களும் தளர்ந்துவிட்டோம்.
“அடடா, பிரிஞ்சிடுச்சே” என்றபடி அதை எடுத்துக்கொண்டு பாட்டுக்காரருக்கு முன்னால் போய் நின்றேன். எனக்கு மூச்சு வாங்கியது. அவருக்கும் மூச்சு வாங்கியது. நெற்றியிலும் கழுத்திலும் வேர்வை கோடாக அரும்பியது.
”இன்னைக்கு இது போதும். நாளைக்கு பிஞ்சி போகாத அளவுக்கு கெட்டியா பந்து செஞ்சி வைக்கறேன். அதுக்கப்பறம் விளையாடலாம். சரியா?” என்றபடி சாலையோரமாகச் சென்று துண்டை உதறினார். உள்ளேயிருந்த இலைகள் தரையில் சிதறி விழுந்தன.
மறுபடியும் அனைவரும் மேடைக்குச் சென்று அமர்ந்து பேசத் தொடங்கினோம்.
வெப்பம் தாளாமல் அவர் உடலிலிருந்து வியர்வை வழிந்துகொண்டே இருந்தது. “புழுக்கத்துல வேர்த்துகினே இருக்குது. எங்கனா ஏரியில கொளத்துல எருமைக்கன்னுக்குட்டி மாதிரி கெடந்தா நல்லா இருக்கும்னு தோணுது” என்றார்.
“இங்க பக்கத்துலதான் ஏரி இருக்குது. அதுல குளிக்கலாம்” என்றான் சிவலிங்கம்.
“ரொம்ப தூரமா?”
“அதெல்லாம் இல்ல. அதோ அங்க பனைமரங்கள் வரிசையா தெரியுது பாருங்க. அதுதான் ஏரிக்கரை”
நான் கைகாட்டிய இடத்தை அவர் அப்போதே திரும்பிப் பார்த்துவிட்டார்.
“இப்ப கோடை காலமாச்சே. தண்ணி இருக்குதா?”
“எங்க ஊர் ஏரியில எல்லா காலத்துலயும் தண்ணி இருக்கும்”
“அப்ப கெளம்புங்க போவலாம்” அவர் சட்டென்று ஆர்மோனியத்தைக் கட்டி பைக்குள் வைத்தார். நான் அந்தப் பையை கையை நீட்டி வாங்கி என் கழுத்தில் முன்பக்கமாக தொங்கும்படியாக மாட்டிக்கொண்டேன். சிவலிங்கம் இரண்டாவது பையை எடுத்துக்கொண்டான்.
பாட்டுக்காரர் முன்னால் செல்ல, நாங்கள் அனைவரும் அவரைப் பின்தொடர்ந்து நடந்தோம்.
“ஆளு பெரிய மாயக்காரனா இருப்பான்போல. ஒரு மணி நேரத்துல நம்ம ஊரு புள்ளைங்களைலாம் வாரி தூக்கி தோள்மேல வச்சிகிட்டான்.”
“எந்த ஊருகாரன்னு கூட தெரியல. இங்க வந்ததுமே இங்கயே நாலஞ்சி பரம்பரயா வாழற ஆளுமாதிரி நடந்துக்கறான்.”
மேடையில் அமர்ந்தவர்கள் தமக்குள் எதைஎதையோ பேசிக்கொண்டார்கள்.
ஏரி கடல்போல விரிந்திருந்தது. காற்றில் படபடத்து நெளியும் பட்டாடைபோல சிற்றலைகள் அசைந்தபடி இருந்தன. கரையை ஒட்டி ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. ஏராளமான புதர்கள். ”ஐயோ, இவ்வளவு தண்ணியா? இந்த வெயில் காலத்துலயும் இந்த மாதிரி தண்ணிய பாக்கறதுக்கே சந்தோஷமா இருக்குது” என்றார் பாட்டுக்காரர்.
கரைக்குச் சென்றதும் எல்லோரும் ஆடைகளைக் களைந்தார்கள். பாட்டுக்காரரின் பைகள் இறக்கிவைக்கப்பட்டன. எல்லோரும் வேகவேகமாக ஆடைகளைக் களைந்த சமயத்தில் நான் அமைதியாக நின்றிருந்தேன்.
“ஏன் தம்பி, நீ குளிக்க வரலையா?” என்று கேட்டார் பாட்டுக்காரர்.
“எனக்கு நீச்சல் தெரியாது.”
“ஓ. அப்ப பாட்டுதான் தெரியும். நீச்சல் தெரியாதா?”
“நான் இந்த துணிமணிங்க, பொட்டி எல்லாத்தயும் பாத்துகிட்டு கரையிலயே இருக்கறேன். நீங்க எல்லாரும் சீக்கிரமா குளிச்சிட்டு சீக்கிரமா வாங்க”
அவர்கள் ஒவ்வொருவராக ஏரிக்குள் தாவினார்கள். பாட்டுக்காரர் மல்லாந்து படுத்துக்கொண்டு கைகளை விரித்து நீந்தியபடி வட்டமடித்தார். அதைப் பார்த்ததும் சிவலிங்கமும் மற்றவர்களும் அவரைப் போலவே நீந்திக்கொண்டு அவரோடு வட்டமடித்தார்கள்.
நாகராஜன் மட்டும் தனியாகக் கரைக்கு நீந்திவந்து ஆலமரத்தின் மீதேறி தண்ணீர்ப்பரப்பின் மீது தாழ்வாக வளைந்து சென்ற கிளையின் மீது நடந்து சென்று அங்கிருந்து செங்குத்தாக தண்ணீருக்குள் குதித்தான். உடனே ஊற்றென தண்ணீர் மேலே பொங்கித் தணிந்தது. பாட்டுக்காரர் கைதட்டிச் சிரித்தார். நாகராஜன் தண்ணீருக்குள்ளேயே நீந்தி அவருக்கு அருகில் சென்று நின்றான்.
சிவலிங்கமும் கிரிதரனும் தண்டபானியும் வடிவேலும் ஒவ்வொருவராக கரைக்கு வந்து நாகராஜனின் வழியைப் பின்பற்றி ஆலமரத்தில் ஏறி கிளையில் நடந்து சென்று ஒவ்வொருவராக எம்பிக் குதித்தார்கள்.
சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் தண்ணீருக்குள்ளேயே பிடிக்கிற ஆட்டத்தைத் தொடங்கிவிட்டதுபோலத் தெரிந்தது. ஒவ்வொருவராக தண்ணீருக்குள் மூழ்கி மறைய ஒருவர் மட்டும் ஆளைத் தேடி நான்கு திசைகளிலும் அலைந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் நீச்சலைக் கற்றுக்கொள்ளாமல் போனோமே என்று மனம் வேதனையில் ஆழ்ந்தது. அதையெல்லாம் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று தொடக்கத்திலேயே தடுத்துவிட்ட அம்மாவின் மீது கோபமாக வந்தது.
தண்ணீருக்குள் யாரோ ஒருவர் அகப்பட்டுவிட்டார். ஓவென்ற சத்தத்திலிருந்து உணரமுடிந்தது. பாட்டுக்காரர் சின்னப் பையனைப்போல எல்லோருக்கும் நடுவில் நீந்திக்கொண்டிருந்தார்.
கண்கள் சிவக்கச்சிவக்க நீண்ட நேரத்துக்குப் பிறகு ஒவ்வொருவராக கரைக்கு வந்து சட்டையாலேயே ஈரத்தைத் துடைத்துக்கொண்டு, பிறகு அதையே உதறிவிட்டு அணிந்துகொண்டார்கள். நான் ஆர்மோனியப் பெட்டியை வைத்திருக்கும் பையை கழுத்தில் மாட்டிக்கொண்டேன்.
ஏரிக்கரையில் இறங்கும் நேரத்தில் சிவலிங்கம் என்னைப் பார்த்து “டேய், இந்த ஆர்மோனியப் பொட்டிய கழுத்துல தொங்க உட்டுகினு நடக்கும்போது எப்பிடி இருக்குது தெரிமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.
“எப்பிடி இருக்குது?” நான் ஆச்சரியத்தோடு அவன் பக்கம் திரும்பினேன்.
“நாடோடி படத்துல இந்த மாதிரிதான் ஒரு பொட்டிய கழுத்துல மாட்டிகினு எம்ஜியாரு பாட்டு பாடுவாரு”
“டேய்..” ஆட்காட்டி விரலை அவனை நோக்கி நாணத்துடன் அசைத்தேன்.
“நாடு, நாடு, அதை நாடு, அதை நாடு, அதை நாடாவிட்டால் ஏது வீடு?”
“சிவலிங்கம், இப்ப நீ அடிவாங்க போற?”
“பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு, மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”
நான் அவனைப் பார்க்கவே இல்லை. அவன் பாடுவது எதுவும் என் காதில் விழவே இல்லை என்பதுபோல எங்கோ வேறு திசையில் பார்த்தபடி நடந்தேன்.
பாட்டுக்காரர் சிவலிங்கத்தின் தோளைத் தொட்டு “நீயும் சின்ன பையன்தான? கிண்டல் போதும் விடு. சங்கீதம் கத்துக்கறதுக்கு முன்னால நாம கத்துக்க வேண்டிய விஷயம் இங்கிதம். தெரியுதா?” என்றார்.
அக்கணமே அவன் ஏற்றுக்கொள்வதுபோன்ற புன்னகையுடன் தலையசைத்து நிறுத்திவிட்டான். பிறகு நாணத்துடன் தலைகுனிந்தான்.
கல்மேடைக்கு வந்ததும் ஆர்மோனியப்பெட்டியை இறக்கி வைத்தேன். அவர் அதை துணியில் வைத்துச் சுருட்டி தன் பைக்குள் வைத்துக்கொண்டார்.
“என்னடா வானரங்களா, ஆட்டத்துல யாருக்கும் பசிக்கலயா? வீடுன்னு ஒன்னு இருக்கறதயே மறந்துட்டிங்களா?”
கிழங்கு விற்கும் ஆயா குரல் கொடுத்த பிறகுதான் எங்களுக்கு வீட்டின் நினைவே வந்தது. உடனே மேடையிலிருந்து கீழே குதித்தோம்.
“சாய்ங்காலமா வெயில் அடங்கனதுமே வந்துருவேன், நீங்க இங்கயே இருப்பீங்களா?” என்று பாட்டுக்காரரிடம் கேட்டேன்.
“ஏன் ஆனந்தா, என்ன சங்கதி?”
“அடுத்த வருஷம் பாட்டுப்போட்டியில பாடறதுக்கு எனக்கு ஒரு நல்ல பாட்டு சொல்லிக் கொடுக்கறீங்களா?”
“ஒன்னு என்ன? ரெண்டாவே சொல்லிக் கொடுக்கறன். போய்வா ஆனந்தா”
அதைக் கேட்டதும் எனக்கு போட்டியில் அப்போதே வென்று பரிசைத் தட்டிக்கொண்டு வந்துவிட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.
பாட்டுக்காரர் தானாகவே அருகில் நின்றிருந்த மற்றவர்களிடம் “உங்களுக்கும் கத்துக்கணுமா?” என்று கேட்டார். அவர்கள் உடனே ”ம்ஹூம்” என்று தலையசைத்தார்கள். “பாட்ட காதால கேக்கறதோட சரி. அதுக்கு மேல எந்த ஆசையும் இல்ல”
“ஏன்?”
“நமக்குலாம் ஃபுட் பால், பேஸ்கெட் பால், வாலி பால் மட்டும்தான். இறைக்க இறைக்க ஓடணும். குனியனும். நிமிரணும். மூச்ச இழுத்துக் கட்டி பாடறதுலாம் நமக்கு சரிப்பட்டு வராது” என்று தோளைக் குலுக்கினார்கள்.
பாட்டுக்காரர் சிரித்துக்கொண்டார். செல்லமாக அவர்கள் முதுகில் தட்டினார். நாங்கள் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம். நாகராஜனும் கிரிதரனும் அக்ரகாரத்தின் பக்கம் செல்ல வடிவேலுவும் தண்டபானியும் மேட்டுத்தெருவின் பக்கமாகச் சென்றார்கள். நானும் சிவலிங்கமும் ஸ்டேஷன் தெருவில் இறங்கி நடந்தோம்.
வீட்டுக்குச் சென்று திண்ணையில் உட்காரும்போதே வீட்டுக்குள்ளிருக்கும் அம்மாவை அழைத்து “காலையில மெட்ராஸ் ரயில் போவற நேரத்துக்கு போன ஆளு இப்பதாம்மா உள்ள வரான். எங்க போய் வரான்னு வந்து கேளும்மா. வேப்பூரானாட்டம் எங்கயோ சுத்தி அலஞ்சிட்டு வந்திருக்கான் பாரு” என்று சத்தமுடன் சொன்னாள் அக்கா.
அம்மா வெளியே வந்து “வெயில்ல சுத்தாத, வெயில்ல சுத்தாதனு ஒனக்கு எத்தன தரம்டா சொல்றது? கருத்து கருவாடுமாதிரி வந்து நிக்கற? எங்க போன?” என்றாள்.
“எங்கயும் போவலைம்மா. அங்கதான் அரசமரத்துங்கிட்ட பசங்களோட நெழல்லதான் ஆடிகினிருந்தன்.”
நான் கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து சாப்பிட உட்கார்ந்தேன். தட்டில் சோற்றைப் பார்த்ததுமே பசித்தீ கொழுந்துவிட்டெரிந்தது. நெத்திலி மீன் குழம்பை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டு முடித்தேன்.
“அம்மா, இன்னும் கொஞ்சம் சோறு”
“மீன் குழம்புன்னா ஒன் கொடலு கூட ரெண்டடி நீண்டு போய்டுமே?”
அம்மா சிரித்துக்கொண்டே வந்து சோற்றை வைத்து குழம்பூற்றினாள். “தாராளமா ஊத்தும்மா” என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன். “கொஞ்சமாச்சிம் வெக்கம் இருக்குதா பாரு, ஒம் புள்ளைக்கு? என்ன சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுல உட்டுருவான்” என்று திண்ணையிலிருந்தே பழித்தாள் அக்கா.
கைகழுவிக்கொண்டு திண்ணைக்கு வரும்போதே அம்மா என்னை மடக்கி பக்கத்தில் உட்காரவைத்தாள். “எங்கயும் போயிடாத ராசா? அரிசியும் உளுந்தும் நெறய வந்திருக்குது அரைக்கறதுக்கு. நீதான் அம்மாவுக்கு கொஞ்சம் ஒத்தாசயா ஏந்திரம் சுத்தணும்” என்றாள்.
“ஏன் அக்காவுக்கு என்னாச்சி? நல்லா உலக்கை மாதிரிதான இருக்குது” நான் அவளைப் பார்த்தேன். திண்ணையில் குறுக்காக ஒரு உலக்கையை வைத்துவிட்டு அதன் மறுபக்கத்தில் அவள் பாயில் படுத்திருந்தாள்.
“அவளால ஒக்காந்து அரைக்கமுடியாதுடா தங்கம். அம்மா சொல்ற பேச்ச கேளுடா”
“சரி சரி, சுத்தறன். ரொம்ப கொஞ்சாத. ஆனா அஞ்சி மணிக்குலாம் என்ன விட்டுடணும். அங்க வெளயாடறதுக்கு பசங்க வந்து காத்திட்டிருப்பானுங்க”
சாக்கையும் செய்தித்தாட்களையும் விரித்து அதன் மீது எந்திரத்தையும் உருட்டிச் சென்று வைத்துவிட்டு அம்மா எனக்காகவே காத்திருந்தாள். நான் அக்காவைப் பார்த்து முணுமுணுத்தபடி எந்திரத்தின் அச்சைப் பிடித்து சுற்றத் தொடங்கினேன். அம்மா அரிசியை சீராக குழிக்குள் போட்டபடி இருந்தாள்.
எல்லாவற்றையும் மாவாக்கி, பைகளில் நிரப்பி ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் சென்று கொடுத்துவிட்டு திரும்புவதற்குள் பொழுது சாய்ந்துவிட்டது. சாமிக்கண்ணுக் கவுண்டர் வீட்டைக் கடக்கும்போது குனிந்து அவர் வீட்டுக் கடிகாரத்தில் மணி பார்த்தேன். இரண்டு முள்களும் சேர்ந்து ஒரே குத்துக்கோடாக தெரிந்தது. மணி ஆறு.
கால்களில் ஒட்டியிருந்த மாவுப்புழுதியை எல்லாம் கழுவித் துடைத்துவிட்டு கல்மேடைக்கு ஓடினேன். நெருங்க நெருங்க ஆர்மோனியத்தை இசைக்கும் சத்தம் கேட்டது. நண்பர்கள் ஐந்து பேரும் அங்கே நிற்பதைப் பார்த்தேன். ஓட்டமாக ஓடி மேடை மீது ஏறி நின்றேன். ஆர்மோனியத்தின் மீது பாட்டுக்காரரின் விரல்கள் தன்னிச்சையாக படர்ந்தபடி இருக்க அவர் பிள்ளையாரையே பார்த்துக்கொண்டிருந்தார். பிள்ளையாரின் முன்னிலையில் ஓர் அகல்விளக்கு எரிந்தது. ’சரணம் சரணம் கணபதியே சக்தியின் மைந்தா கணபதியே’ என்று மனமுருகிப் பாடிக்கொண்டிருந்தார் அவர். நான் சிவலிங்கத்துக்கு அருகில் நின்று ”எத்தனாவது பாட்டு?” என்று சைகையால் கேட்டேன். “இதான் முதல் பாட்டு” என்று அவனும் சைகையாலேயே பதில் சொன்னான். நான் பாட்டின் இனிமையில் மூழ்கத் தொடங்கினேன். மேடையில் எங்கள் ஆறு பேரைத் தவிர கிழங்கு விற்கும் ஆயாவும் இன்னும் இரண்டு ஆண்களும் நின்றிருந்தனர். மேட்டுத் தெருவிலிருந்து இரண்டு கிழவர்கள் மெதுவாக நடந்து வந்து சேர்ந்துகொண்டார்கள்.
நான் பாட்டுக்காரரின் கண்களைப் பார்த்தேன். கனிவும் பக்தியும் கலந்த பார்வை. அவர் இந்த உலகத்திலேயே இல்லை. முதல் பாட்டு முடிந்ததுமே ’ஆனை முகத்தான், அரன் ஐந்து முகத்தான் மகன், ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்’ என அடுத்த பாட்டைத் தொடங்கிவிட்டார் அவர். அகல்விளக்கின் சுடரொளியில் பிள்ளையாரின் தந்தத்தின் மேட்டிலும் நெற்றியிலும் பளீரென மின்னுவதுபோல ஒரு கோடு படிந்திருந்தது.
தற்செயலாக என் பார்வை திரும்பிய சமயத்தில் அக்ரகாரத்திலிருந்து நந்தகுமாரை துணைக்கு அழைத்துக்கொண்டு ருக்மிணி மாமி வருவதைப் பார்த்தேன். அவர் கல்மேடையை நெருங்கி படிக்கட்டு வழியாக மேடையில் ஏறி பிள்ளையாருக்கு முன்னால் நின்று கைகுவித்தாள். நீண்ட நேரத்துக்குப் பிறகு தற்செயலாகத் திரும்பும்போது என்னைப் பார்த்து ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தினாள். புன்னகையுடன் நான் மாமிக்கு வணக்கம் சொன்னேன். நந்தகுமாரின் உதடுகளிடையில் ஒரு கோடுபோல புன்னகை பரவி விரிந்தது.
ஆர்மோனியத்தின் இசை மட்டுமே சில கணங்கள் நீடித்தன. மேல்கட்டைகளை மாறிமாறி அழுத்தியபடி அவர் வேறொரு பாட்டை யோசிப்பதுபோலத் தோன்றியது. அடுத்த கணமே அவர் ‘ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன சந்நிபம் லம்போதரம் விசாலாட்சம் வந்தேம் கணநாயகம்’ என்று தொடங்கினார். அந்த அமைதியான பொழுதில் அவர் குரல் எங்கெங்கும் பரவி நிறைந்தது. அக்ரகாரத் தெருவிலிருந்து இன்னும் சிலர் வந்து கூட்டத்தில் நின்றார்கள்.
பாட்டு முடிந்ததன் அடையாளமாக அவர் தன் தோளிலிருந்து ஆர்மோனியத்தைக் கழற்றி கீழே வைத்தார். ருக்மிணி மாமி தன் பூசைப் பையிலிருந்து ஒரு துண்டு கற்பூரத்தை எடுத்து பிள்ளையாருக்கு முன்னால் வைத்து ஏற்றினாள். தீபம் சுடர்விட்டு எரியும்போது அனைவரும் கண்மூடி வணங்கினார்கள். கற்பூரம் எரிந்து முடிந்ததும் ஒவ்வொருவராக பிள்ளையார் முன்னால் விழுந்து வணங்கிவிட்டு இறங்கி நடந்தார்கள். ”ரொம்ப நன்னா பாடறேள். கேக்கறச்சே பகவானே பக்கத்துல வந்து நின்னாப்புல தோணித்து. மனசு அப்படியே அடங்கி சாந்தமாய்டுத்து. தட்டாம இத நீங்க வாங்கிக்கணும்” என்றபடி ருக்மிணி மாமி தன் பையிலிருந்து இரண்டு மாம்பழங்களை எடுத்து பாட்டுக்காரரிடம் கொடுத்தார். பாட்டுக்காரர் அதை புன்னகையுடன் வாங்கி வைத்துக்கொண்டார். கிழங்குக்கார ஆயா, கூடையில் எஞ்சியிருந்த கிழங்குகளை ஒரு மந்தாரை இலையில் வைத்து எடுத்து வந்து பாட்டுக்காரரிடம் கொடுத்தாள். அவர் அதையும் வாங்கி வைத்துக்கொண்டார். எங்களைத் தவிர ஒவ்வொருவராக அனைவரும் அங்கிருந்து கலையத் தொடங்கினார்கள்.
இருள் கவியத் தொடங்கியது. யாரோ ஒருவர் கோவில் வாசலிலிருந்து இறங்கி வந்து பாட்டுக்காரரிடம் “அங்க கோவில் வாசலுக்கு வந்து பாடணுமாம். சொல்லி அனுப்பனா” என்றார். பாட்டுக்காரர் அவரை நிமிர்ந்து பார்த்து “நான் முடிச்சிட்டேனே. இதுக்கு மேல என்ன பாட்டு?” என்று கேட்டார். அவருக்குப் புரியவில்லை. சிறிது நேரம் தடுமாறினார். சரியாகச் சொல்லவில்லையோ என நினைத்து “அங்க வந்து பாடினா நன்னா இருக்கும்னு சொன்னா. ஏதாச்சிம் குடுக்கச் சொல்றேன். வாங்கோ” என்றார். பாட்டுக்காரர் பதிலே சொல்லவில்லை. அவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே “போ போ” என்றபடி சைகை செய்தார். அவர் அதை நம்பமுடியாதவராக விலகிச் சென்றார்.
முற்றிலும் இருள் கவிந்துவிட்டது. ”பிள்ளைகளா, கெளம்புங்க. இருட்டிடுச்சி. இனிமே நீங்க இங்க இருக்கவேணாம்” என்று எங்களிடம் சொன்னார் பாட்டுக்காரர். பிறகு ஒரு பழம், ஒரு கிழங்கை மட்டும் தனக்கென வைத்துக்கொண்டு எஞ்சியவற்றை எங்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டார்.
”எங்க படுத்துக்குவிங்க நீங்க?” என்று பீதியுடன் அவரிடம் கேட்டேன்.
“இங்கதான். பிள்ளையாருக்கு பக்கத்துலயே” என்றபடி அவர் புன்னகைத்தார். என் தோள் மீது கை வைத்து “ஒனக்காக ஒரு பாட்டு யோசிச்சி வச்சிருக்கேன். நாளைக்கு சொல்லித் தரேன்” என்று சொன்னார். அதைக் கேட்டு எனக்குள் சற்றே ஏமாற்றம் படர்ந்தாலும் புன்னகையுடன் சரி என்று தலையசைத்துக்கொண்டேன்.
“இங்க தனியா படுக்க ஒங்களுக்கு பயமா இருக்காதா?”
“நான் தனியா இருப்பேன்னு யாரு சொன்னா? இந்த மரம், இந்த செடி, இந்த மேடை, இந்த பிள்ளையார் எல்லாருமே எனக்கு துணையா இருப்பாங்க. எனக்கு ஒன்னும் பயமில்லை. போய் வாங்க”
மறுநாள் காலையில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு பழைய சோற்றைச் சாப்பிட்டுவிட்டு சட்டை மாற்றிக்கொண்டு கிளம்பினேன். “தொர எங்க கெளம்பிட்டாரு? எந்த ஆபீஸ்ல கையெழுத்து போடப் போறாரு?” என்று கேட்டாள் அக்கா. “நா எங்க போனா ஒனக்கென்ன? நான் ஒன் வழிக்கு வரலை. நீயும் என் வழிக்கு வராத” என்று கறாராகச் சொன்னேன். அவள் உடனே “அம்மா, இங்க வந்து பாரு. எங்கடா போறன்னு கேட்டா ஒனக்கென்னன்னு கேக்கறான்” என்று சத்தம் போட்டு அம்மாவை வரவழைத்துவிட்டாள். “என்னடா சத்தம்? ஒங்க ரெண்டு பேருக்குள்ள என்னடா ஒரே போராட்டமா இருக்குது” என்றபடி அம்மா வந்து நின்றாள்.
“எங்கடா கெளம்பிட்ட?” என்று அம்மா கேட்டாள்.
“வெளயாடறதுக்கும்மா. தண்டபானிலாம் வந்து அங்க காத்துகினிருப்பாங்க. நேத்து சாய்ங்காலமே போவலாம் போவலாம்ன்னு ஆறுமணிக்கு அனுப்பன. அதுக்குள்ள அவுங்கள்லாம் ஆடி முடிச்சிட்டாங்க தெரியுமா?” சொல்லிக்கொண்டு வரும்போதே எனக்கு தொண்டை அடைத்தது. அம்மா ஒன்றும் பேசமுடியாமல் திகைத்து நின்றாள்:.
“சரி சரி போடா. போய்ட்டு சாப்பாட்டு நேரத்துக்கு சரியா வந்துரு.”
நான் தலையசைத்துவிட்டு ஓரக்கண்ணால் அக்காவுக்கு அழகு காட்டிவிட்டு கல்மேடைக்கு ஓடினேன். தொலைவிலிருந்து பார்க்கும்போதே பாட்டுக்காரரும் மற்றவர்களும் சேர்ந்திருக்கும் காட்சி தெரிந்தது. நான் வேகமாகச் சென்று சிவலிங்கத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டேன்.
“இன்னைக்கு காலையிலயே அவர் ஏரியில குளிச்சாராம்டா. இந்தக் கரையிலேந்து அந்தக் கரை வரைக்கும் போய் வந்தாராம்” சிவலிங்கம் ஆச்சரியத்தைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் சொன்னான். நான் “அப்படியா?” என்று கேட்டபடி பாட்டுக்காரரை நோக்கித் திரும்பினேன். “தம் கட்டி நீச்சலடிச்சிகினே போய்ட்டேன். நான் பார்க்காத ஏரியா ஆறா?” என்றார் அவர்.
“அப்ப மத்யானம் குளிக்க முடியாதா?” என்று ஏக்கத்துடன் கேட்டான் சிவலிங்கம்.
“யாரு சொன்னா? ஏரியில காலையில குளிச்சவங்க மத்தியானம் குளிக்கக்கூடாதுனு சட்டம் ஏதாச்சிம் இருக்குதா என்ன? நாம எல்லாருமே போய் மத்யானம் குளிக்கறோம். சரிதானா?”
ஏ என்று மகிழ்ச்சியில் எல்லோரும் சத்தமிட்டோம். அவர் தன் பையிலிருந்து புதிதாக அவர் செய்து வைத்திருந்த பந்து உருளையை எடுத்து வெளியே வைத்தார். உருண்டையாக அது அழகாக பந்து போலவே இருந்தது.
“சரி, இப்ப பந்து விளையாடலாமா, ஆனந்தனுக்கு பாட்டு சொல்லிக்கொடுக்கலாமா?”
நான் உடனே “பாட்டு பாட்டு” என்றேன். மற்றவர்கள் “பந்து பந்து “ என்றார்கள். அவர் சிரித்துக்கொண்டார். “சரி, ஒரு சின்ன பாட்டுதான். அவன் கத்துகிடட்டும். அப்பறமா ஆடலாம்” என்றபடி என்னைப் பார்த்தார்.
நாங்கள் அவர் முன்னால் நெருங்கி உட்கார்ந்தோம். அவர் “தீராத விளையாட்டு பிள்ளை’ என்று தொடங்கினார். அவர் ஒவ்வொரு சரணமாகப் பாடி முடித்ததும் நான் அதைத் திருப்பிப் பாடினேன். மிக எளிய சொற்கள். இரண்டு முறை மீண்டும் மீண்டும் பாடியதுமே மனத்தில் பதிந்துவிட்டது. பழத்தைக் கொடுத்துவிட்டு தட்டிப் பறிக்கிற காட்சியையும் எட்டாத உயரத்தில் தின்பண்டங்களை வைத்துவிட்டு ஏமாற்றும் காட்சியையும் அந்த விவரிப்பிலேயே உணர முடிந்தது. ”இவ்ளோ போதும். இந்தப் பாட்டு ரொம்ப நீளமான பாட்டு. நீ சின்ன பையன்தான? உனக்கு அவ்ளோ வேணாம். சுருக்கமா போதும். சரியா?” என்றபடி அவர் அத்துடன் நிறுத்திக்கொண்டார்.
பாட்டை முடித்ததுமே நாங்கள் பந்து விளையாடத் தொடங்கினோம். பந்துக்காக எம்பிக் குதிக்கும்போதெல்லாம் எனக்கு தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்’ என்னும் வரியே மனத்தில் ஓடியது. அந்தப் பண்டத்துக்கு எம்பிக் குதிப்பவனாகவே நான் என்னை நினைத்துக்கொண்டேன்.
பந்து விளையாட்டு நடந்துகொண்டிருக்கும்போதே மேட்டுத் தெருவிலிருந்து ஒரு ஆயா வந்து பாட்டுக்காரருக்கு வணக்கம் சொன்னாள். அவளுக்குப் பின்னால் ஒரு சிறுவன் நின்றிருந்தான். அவன் முகம் சற்றே கோணலாகி வேறொரு திசையில் பார்ப்பதுபோல இருந்தது.
“என்ன ஆயா?”
ஆயா ஒரு பதிலும் சொல்லாமல் சட்டென்று வளைந்து பாட்டுக்காரரின் பாதங்களில் விழுந்துவிட்டாள். ”ஆயா, என்ன செய்றீங்க? ஏந்திருங்க ஏந்திருங்க” என்றபடி அவளைத் தொட்டு தூக்கி நிறுத்தினார் பாட்டுக்காரர்.
“சாமி, இது என் பேரப்புள்ள சாமி. அம்மா அப்பா இல்லாத புள்ள சாமி. மூள சரியில்ல. நின்னா நின்ன இடம். உக்காந்தா உக்காந்த இடம். அவன் யாருக்கும் சம்பாதிச்சி கிம்பாதிச்சி கொட்ட தேவல. அவன் வேலய அவனா பாத்துக்கற அளவுக்கு கொஞ்சம் மூள இருந்தா போதும் சாமி. நீங்கதான் அவனுக்கு ஒரு வழிய காட்டணும்” ஆயா அழுதுகொண்டே மீண்டும் அவர் காலில் விழப்போனாள்.
பாட்டுக்காரரின் முகத்தில் ஒரு வேதனை படர்ந்தது. ஒன்றும் பேச முடியாமல் ஒருகணம் தலை குனிந்திருந்தார். ஆயாவுக்குப் பின்னால் நின்றிருந்த சிறுவனுக்கு அருகில் சென்று அவனை அணைத்துத் தழுவி முத்தம் கொடுத்தார்.
”அம்மா, நீங்க ஒரு நல்ல வைத்தியர பாருங்கம்மா. அவராலதாம்மா இத குணப்படுத்த முடியும். நான் வெறும் பாட்டுக்காரன். நான் என்னம்மா செய்யமுடியும்?”
“அப்படி சொல்லாதீங்க சாமி. நீங்க பாடனா சாமிக்கு கேக்கும். இந்த புள்ளைக்காக நீங்க சாமிகிட்ட ஒரு பாட்டு பாடணும்.”
அவர் அதைக் கேட்டு பெருமூச்சு விட்டார்.
“சரி, நான் பாடறன். ஆனா நீங்க நல்ல வைத்தியருகிட்ட காட்டணும். அத செய்விங்கன்னு சொன்னாதான் நான் பாடுவேன்”
“செய்றன் சாமி. நிச்சயமா செய்றன்”
பாட்டுக்காரர் அந்தச் சிறுவனை தூக்கிக்கொண்டு கல்மேடைக்குச் சென்றார். பிள்ளையார் முன்னால் உட்காரவைத்துவிட்டு ஆர்மோனியப் பெட்டியை எடுத்தார். அவர் கண்கள் தளும்புவதை என்னால் பார்க்க முடிந்தது. துருத்தியை அழுத்தி கட்டைகளை மீட்டி சுரங்களை எழுப்பினார். ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ’ என்று பாடத் தொடங்கினார். அதைப் பாடி முடிக்கும்போது எல்லோருடைய விழிகளிலும் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. யாரும் எதிர்பாராத விதமாக அவர் ‘எங்கு நான் செல்வேன் ஐயா நீர் தள்ளினால் எங்கு நான் செல்வேன் ஐயா’ என்று தொடங்கிவிட்டார். அதையும் முடித்து ‘தசரதாத்மஜம்’ பாடிய பிறகே நிறுத்தினார். அங்கிருந்த திருநீற்றை எடுத்து சிறுவனின் நெற்றியில் பூசிவிட்டார்.
ஆயா தன் பையிலிருந்து இரண்டு ரூபாயை எடுத்து அவர் காலடியில் வைத்துவிட்டு வணங்கிய பிறகு சிறுவனை அழைத்துக்கொண்டு மேடையிலிருந்து இறங்கினார். மேட்டுத்தெருவிலிருந்து இருபது முப்பது பேர்களுக்கும் மேற்பட்ட ஒரு கூட்டம் வந்து அங்கு நின்றிருப்பதை அப்போதுதான் பார்த்தேன்.
அவர்கள் அனைவரும் ஒரே குரலில் “ஐயா, எங்களுக்காக ஒரு பாட்டு பாடுங்க ஐயா” என்று கேட்டனர். அதைக் கேட்டு அவர் முகத்தில் சற்று முன்னர் திரண்டிருந்த துயரம் மறைந்து புன்னகை அரும்பியது.
“பாட்டுதான? இதோ பாடறேன்” என்றபடி ஆர்மோனியத்தை மீட்டத் தொடங்கினார். அந்த மீட்டல் ஒரு தாளமாக மாறிய கணத்தில் ‘பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது’ என்று பாடல் வரியை இணைத்துக்கொண்டார்.
பாட்டு முடிந்ததும் அனைவரும் நின்ற இடத்திலேயே பாட்டுக்காரரைப் பார்த்து கும்பிட்டபடி தரையில் விழுந்து வணங்கினர். ஒரு சொல்லும் இல்லாமல் பாட்டுக்காரர் அனைவரையும் பார்த்து தலைதாழ்த்தி வணங்கினார். பிறகு ஆர்மோனியப் பெட்டியை இறக்கி துணிக்குள் வைத்து மூடி பைக்குள் வைத்தார். நான் அதை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டேன்.
”பிள்ளைகள் ரொம்ப நேரமா நீச்சலடிக்கறதுக்கு எனக்காக காத்திட்டிருக்காங்க. நான் கெளம்பறேன்?” என்று சொல்லிவிட்டு எங்களோடு வேகவேகமாக ஏரிக்கரைக்கு நடந்தார். மேட்டுத்தெரு மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
போன வேகத்தில் அனைவரும் ஆடைகளைக் களைந்துவிட்டு ஏரிக்குள் இறங்கிவிட்டனர். ஒரே கொண்டாட்டம்.
“உண்மையாவே காலையில நீங்க அந்தக் கரை வரைக்கும் போனீங்களா?” என்று சத்தமாகக் கேட்டான் சிவலிங்கம்.
“ஆமா”
“நடு ஏரில ரொம்ப ஆழமா?”
“ஆமா”
“இப்ப இன்னொரு தரம் போவலாமா?”
“இப்ப வேணாம். வெயில்ல உடம்பு சோர்ந்து போயிடும்.”
அவர்கள் முகம் வாட்டமடைவதைப் பார்த்துவிட்டு “இப்ப நான் உங்களுக்கு ஒரு வேடிக்க செஞ்சி காட்டறன், வாங்க” என்றார்.
வேடிக்கை என்றதும் அவர்கள் முகம் மலர்ந்தது.
“இங்க பாருங்க, நான் இங்க முழுகி அதோ அங்க எழுந்திருப்பேன். பாக்கறீங்களா?” என்று கேட்டார். “உண்மையாவா?” என்று வாயைப் பிளந்தான் வடிவேலு.
“இப்ப பாரு” என்றபடி அவர் தண்ணீருக்குள் முழுகினார். அவர் எந்தப் பக்கம் சென்றிருப்பார் என எல்லோரும் திகைத்துக்கொண்டிருக்கும் போது அவர் ஏற்கனவே சொன்ன புள்ளியில் தண்ணீருக்கு மேலே வந்தார். அதே போல மீண்டும் அங்கே மூழ்கி இந்தப் புள்ளிக்கு வந்து தண்ணீருக்கு மேலே எழுந்தார்.
கண்கள் சிவக்கும் வரைக்கும் தண்ணீருக்குள்ளேயே கிடந்துவிட்டு அவர்கள் மெதுவாக கரைக்கு வந்தார்கள்.
கல்மேடைக்கு வந்ததும் எங்களுக்கு அவர் ஒரு கதையைச் சொன்னார். அதற்குப் பிறகு பையிலிருந்து கொய்யாப்பழங்களை எடுத்து ஆளுக்கொன்று கொடுத்தார்.
மதிய உணவுக்காக அனைவரும் அவரவர் வீட்டுக்குப் பிரிந்து செல்ல, நானும் சிவலிங்கமும் பேசிக்கொண்டே ஸ்டேஷன் தெருவில் இறங்கி வீட்டுக்கு நடந்தோம்.
திண்ணையில் உலக்கையைத் தடுப்பாக்கி மறுபக்கத்தில் அக்கா திண்ணையில் சாய்ந்தபடி தனியாக பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்தாள்.
”என்னக்கா, ஒத்தையில நீயே பல்லாங்குழி ஆடிக்கற?”
சத்தத்தைக் கேட்ட பிறகே அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். சலிப்போடு “என்ன செய்யமுடியும் தம்பி, நீ எப்ப பார்த்தாலும் கூட்டாளிங்க கூட்டாளிங்கன்னு ஏரிக்கரை பக்கமா ஓடிடற? என் கூட வேற யாரு இருக்காங்க ஆடறதுக்கு?” என்று கேட்டாள்.
அவள் பதிலை நான் பொருட்படுத்தவில்லை. அவளிடம் அடங்கிய குரலில் “இன்னைக்கு நான் ஒரு பாட்டு கத்துட்டு வந்திருக்கேன் தெரியுமா?” என்றேன்.
அவள் ஆர்வத்தோடு “பாட்டா, என்னடா பாட்டு?” என்று கேட்டாள்.
“தீராத விளையாட்டு பிள்ளை”
“அப்படின்னா?” என்று என்னை கிண்டலுடன் பார்த்தாள்.
அவளுக்கு முதல் இரண்டு வரிகளை மட்டும் பாடிக் காட்டிவிட்டு “புடிச்சிருக்குதா?” என்று கேட்டேன்.
“ரொம்ப நல்லா இருக்குதுடா தம்பி. ரேடியோவுல பாடறமாதிரி இருக்குது.”
“நாளைக்கி உனக்கு முழுசா பாடிக் காட்டறேன்” என்று சொல்லிவிட்டு “அம்மா அம்மா” என்று ஆவலோடு அழைத்தபடி வீட்டுக்குள் சென்றேன்.
அதற்குள் அக்கா வாசலிலிருந்தே “அம்மா இல்லைடா. தேவி அக்கா வீட்டுக்கு போயிருக்காங்க. அங்க தட்டுல சோறு போட்டு மூடி வச்சிருக்காங்க பாரு. நீயே எடுத்து வச்சிகினு சாப்புடு” என்று சொன்னாள். “சரி சரி” என்று பதில் சொல்லிவிட்டு கைகழுவிக்கொண்டு வந்து சாப்பாட்டைச் சாப்பிட்டு முடித்தேன்.
திண்ணைக்கு வந்து அக்காவுடன் பல்லாங்குழி விளையாடினேன். “டேய், அந்த பாட்ட இன்னொரு தரம் பாடிக் காட்டுடா” என்று கேட்டாள் அக்கா. நான் விளையாடிக்கொண்டே அந்தப் பாட்டின் மூன்று சரணங்களையும் பாடிக் காட்டினேன். “டேய் தம்பி, உண்மையிலயே நீ ரொம்ப நல்லா பாடறடா” என்றாள் அக்கா. அம்மா ஒரு கூடையில் கேழ்வரகோடு வீட்டுக்கு வந்தாள்.
மாலை பொழுது இறங்கியதும் நான் கல்மேடைக்குச் சென்றேன். பிள்ளையாருக்கு எதிரில் ஏராளமான பூக்கள் குவிந்திருந்தன. செம்பருத்தி. நந்தியாவட்டை. மகிழம்பூ. அல்லி. அஞ்சுமல்லி. மூன்று தெருக்களைச் சேர்ந்தவர்கள் பலரும் ஏதோ ஊர்ப்பஞ்சாயத்துக்குக் கூடியிருப்பதைப்போல மேடைக்கு அருகில் நிறைந்திருந்தார்கள். சிலர் உட்கார்ந்திருந்தார்கள். சிலர் மரத்தடிகளில் நின்றிருந்தார்கள். அனைவரும் அமைதியாக பாட்டுக்காரரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். என்னால் கல்மேடைக்கு அருகில் செல்லமுடியவில்லை. மேடையில் தண்டபானி, சிவலிங்கம், நாகராஜன் அனைவரும் நிற்பதைப் பார்த்ததும் பிந்திவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது. என்ன செய்வது என்று தவிப்போடு சுற்றுமுற்றும் பார்த்தேன். அதற்குள் பாட்டுக்காரர் என்னைப் பார்த்துவிட்டார். பக்கத்தில் வா என்பதுபோல கையை அசைத்தார். அதைக் கேட்ட பிறகே எனக்குள் நிம்மதி பிறந்தது. அங்கே அமர்ந்தவர்களின் தோள்களைத் தொட்டுத் தொட்டு நடுவில் வழியை உருவாக்கிக்கொண்டு நடந்து சென்று மேடைக்குச் சென்றுவிட்டேன்.
“என்ன வீட்டுல பாடிப் பாத்தியா?” என்று கேட்டார் பாட்டுக்காரர். அதைக் கேட்டதும் வெட்கம் வந்தது. ஆச்சரியத்தோடு அவரைத் திரும்பிப் பார்த்து “ம்” என்றேன்.
“ஆ. அப்படித்தான் இருக்கணும். அப்பறமா எழுதி வச்சிக்கோ. அப்பதான் நல்லா பாடமாவும். தெனமும் பாடு. பாடப் பாடத்தான் பாட்டு. ஆட ஆடத்தான் ஆட்டம். நீச்சல் வேணாம்னு நிக்கறமாதிரி பாட்ட ஒதுக்கக்கூடாது.”
“ம்”
“இப்ப பாடறியா?”
“இப்பவா?”
அதிர்ச்சியில் திகைப்புடன் நான் அவரைப் பார்த்தேன்.
“ஆமா. இப்பத்தான். பாடு.”
அவர் என் பதிலை எதிர்பார்க்காமலேயே ஆர்மோனியப்பெட்டியை எடுத்து துருத்தியை அழுத்த ஆரம்பித்துவிட்டார்.
“நான்…… இங்க…… எப்பிடி….” என்று சொற்கள் கூடி வராமல் நான் இழுத்தேன்.
“நீதான். இங்கதான். சும்மா ஆரம்பி…..”
அவருடைய புன்னகை எனக்குத் தெம்பைக் கொடுத்தது. நான் திரும்பி என் நண்பர்களையும் பிள்ளையாரையும் பார்த்துவிட்டு மீண்டும் பாட்டுக்காரரின் முகத்தைப் பார்த்தேன். அவர் கண்களை அசைத்துவிட்டு ஆர்மோனியத்தின் மரக்கட்டைகள் மீது விரல்களைப் படரவிட்டார். தரையிலிருந்து ஒரு பறவை சிறகுகளை அசைத்து மேலெழுந்து வட்டமிட்டு வானத்தை நோக்கிப் பறப்பதைப்போல மெல்லிய இசை பொங்கி எழத்தொடங்கியது. நான் ’தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்று தொடங்கி அந்த இசையுடன் சேர்ந்துகொண்டேன். வானத்தில் மேகங்களுக்கு நடுவில் பறப்பதுபோல நான் உணர்ந்தேன். காலையில் அவர் சொல்லிக் கொடுத்த ஏற்ற இறக்கங்கள் எனக்கு துல்லியமாக நினைவில் எழுந்தன. நான் அதுபோலவே பாடினேன். ’மனமகிழும் நேரத்திலே கிள்ளிவிடுவான்’ என்று நிறைவு செய்த பிறகுதான் அங்கு நிறைந்திருந்தவர்களின் முகங்களைப் பார்த்தேன்.
அந்த இசையை மீட்டிக்கொண்டே அதே பாட்டின் தொடர்ச்சியாக அவர் ‘அழகுள்ள மலர்கொண்டு வந்தே’ என்று அடுத்த சரணத்தைத் தொடங்கினார். நான் ஒவ்வொரு சொல்லாக அந்தச் சரணத்தைப் பின்தொடர்ந்தேன். ’பின்னலைப் பின்னின்றிழுப்பான்’ என மற்றொரு சரணத்தையும் அவர் பாடிவிட்டு மீண்டும் தீராத விளையாட்டுப் பிள்ளை வரிக்கு வந்து சேர்ந்தார்.
“பெருமாள் பாட்டு ஒன்னு பாடுங்க” நின்றிருப்போர் வரிசையிலிருந்து ஒரு அம்மா கேட்டார். “பெருமாள் பாட்டாம்மா, பாடிருவோம்மா” என்று சிரித்துவிட்டு ’ஊரிலேன் காணியில்லை உறவுமற்றொருவர் இல்லை’ என்று தொடங்கினார்.
அதை முடிப்பதற்காகவே காத்திருந்த மாதிரி “ஐயா, ஒரு சிவன் பாட்டு’ என்று கேட்டார் ஒரு முதியவர். “சிவன் பாட்டுதான? அந்த சுடுகாட்டு சுடலைக்கு ஒரு வணக்கம் சொன்னாதான நாளைக்கு நம்ம கட்ட வேகும். பாடிருவோம்ய்யா” என்றபடி புன்னகைத்துக்கொண்டே ’சங்கரனைத் துதித்தாடு இனி ஜனனமில்லை’ என்று தொடங்கினார்.
நேற்று எங்களுக்கு அவர் சொன்ன கீழ் ஸ்தாயி, மேல் ஸ்தாயி விளக்கங்கள் அக்கணத்தில் சட்டென தானாகவே என் நினைவுக்கு வந்தன. அவர் குரலில் சட்டென ஒரு தவிப்பும் மன்றாடுதலும் சேர்ந்துகொள்வதைப் பார்த்தேன். என்னவென சரியாகப் புரிந்துகொள்ள முடியாத பாரம் நெஞ்சை அழுத்தியது.
“ஐயா, தாயாரப் பத்தி ஒரு பாட்டு”
“சரிங்கம்மா. அம்மாவுக்கும் ஒரு வணக்கத்த சொல்லிடுவோம்”
’அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம் ஆகம சம்ப்ரதாய நிபுணே ஸ்ரீ’ என்று தலையசைத்துக்கொண்டே பாடினார்.
“முருகருக்கும் ஒரு பாட்டு பாடுங்க சாமி”
“ஆமா. மறந்தே போச்சில்ல. ஆண்டிக்கு இல்லாத பாட்டா? அவன் நம்ம ஆளாச்சே. இப்ப பாடிடுவோம்”
அவர் ஒரு சிறுவனைப்போல நாக்கைக் கடித்தபடி கண்களைச் சிமிட்டியதைப் பார்க்க அழகாக இருந்தது. கண்களை மூடி சில கணங்கள் யோசித்த பிறகு ‘முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்’ என்று தொடங்கினார். ஒரு குன்றில் ஒவ்வொரு படியாக ஏறிச் செல்லும் மயிலைப்போல அவர் குரல் அடுத்தடுத்த உயரங்களுக்குப் போய்க்கொண்டே இருந்தது.
அவர் பாடி முடித்தபோது மரத்தடியில் நிறைந்திருந்தவர்கள் தாமாகவே உணர்ச்சிவசப்பட்டு ‘ஆறுமுகனுக்கு அரோகரா’ என்று குரலெழுப்பியபடி கைதட்டினார்கள். ஒருவர் கூடை நிறைய மாம்பழங்களைக் கொண்டு வந்து அவர் முன்னால் வைத்துவிட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழைப்பழம் என பழங்களைக் கொண்டுவந்து கூடையில் வைத்தார்கள். சிலர் சில்லறை நாணயங்களை வைத்துவிட்டுச் சென்றார்கள். அவர் ஆர்மோனியப்பெட்டியை இறக்கிவைத்துவிட்டு தரையில் உட்கார்ந்துவிட்டார்.
என்னையும் சிவலிங்கத்தையும் அழைத்து பழக்கூடையை எடுத்துச் சென்று அங்கு கூடியிருப்பவர்கள் அனைவருக்கும் ஒவ்வொன்றாக வழங்கும்படி சொன்னார். வடிவேலுவும் நாகராஜனும் ஓடி வந்து கூடையை ஆளுக்கொரு பக்கம் தூக்கிக்கொண்டு நடந்தார்கள். நானும் சிவலிங்கமும் தண்டபானியும் ஒவ்வொரு பழமாக எடுத்து எல்லோருக்கும் கொடுத்தோம்.
“என்னடா ஜெகதலப்பிரதாபா? நீதான் இங்க விநியோகமா?” என்ற குரலைக் கேட்டுத் திரும்பியபோதுதான் அங்கு ருக்மிணி மாமி நிற்பதைப் பார்த்தேன். எனக்கு அவரைப் பார்த்ததுமே மகிழ்ச்சி ஊற்றெடுத்து நெஞ்சை நிரப்பியது. ”இந்தாங்க மாமி” என்று ஒரு பழத்தை அவருக்கும் மற்றொரு பழத்தை அவரை ஒட்டி நின்றுகொண்டிருந்த நந்தகுமாருக்கும் கொடுத்தேன். “ஆத்துப் பக்கம் ஏன்டா வரமாட்டற? ஒருநாள் வாடா” என்றாள் மாமி. தொடர்ந்து “தீராத விளையாட்டுப் பிள்ளையை நானும் கேட்டேன்டா. ஒன் குரல் திவ்யமா இருக்கு. விட்டுடாதடா, பாடிண்டே இரு” என்று சொன்னாள். ”சரிங்க மாமி” என்றபடி அடுத்தவரை நோக்கி நகர்ந்தேன்.
சில்லறைகளை மட்டும் எடுத்து கைக்குட்டையில் வைத்துச் சுற்றி எடுத்துக்கொண்டு மேடைக்குத் திரும்பும் சமயத்தில் அக்ரகாரத்திலிருந்து ஒருவர் வேகமாக பாட்டுக்காரருக்குப் பக்கத்தில் வந்து நின்றார். நேற்று பார்த்த அதே முகம்.
“அங்க வந்து பாடச் சொல்றாங்க.”
பாட்டுக்காரர் புன்னகைத்தபடி “அடடா, இப்பதான முடிச்சேன்” என்றார்.
“எங்களுக்காக இல்லைன்னாலும் சாமிக்காக வந்து பாடலாமே”
“சாமியா, அவர் அங்க மட்டுமா இருக்காரு? அவர் இல்லாத இடம்னு ஒன்னு இருக்கா என்ன? எல்லா இடத்துலயும் இருந்து பாடறதயெல்லாம் கேட்டுகினுதான இருக்காரு.”
அவர் எதுவும் பேசாமல் திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றார். கூடியிருந்தவர்களும் எழுந்து கலைந்துசெல்லத் தொடங்கினர்.
மறுநாள் காலையில் சிவலிங்கம் வீட்டுக்கே வந்துவிட்டான். நானும் குளித்து முடித்து பழைய சோற்றைச் சாப்பிட்டு முடித்துவிட்டு அவனுக்காகக் காத்திருந்தேன். இருவருமாகச் சேர்ந்து கல்மேடைக்குச் சென்றோம்.
தொலைவிலிருந்தே பாட்டுக்காரர் புதுச்சட்டை அணிந்திருப்பதைப் பார்த்தோம். நேற்று அவர் அணிந்திருந்த சட்டை துவைக்கப்பட்டு வேலியோரமாக ஒரு கிளைமீது தொங்கி வெயிலில் உலர்ந்துகொண்டிருந்தது. “டேய், இன்னைக்கும் ஏரிக்கு போய் வந்திருக்காருடா” என்று ரகசியமாகச் சொன்னான் சிவலிங்கம்.
நாங்கள் சென்று மேடையில் உட்கார்ந்திருந்த பாட்டுக்காரருக்கு வணக்கம் சொன்னோம். ”வாங்க வாங்க. வந்துட்டீங்களா” என்று சிரித்தார் அவர். “இவனுங்க இன்னைக்கு ஒங்களுக்கு முன்னாலயே வந்துட்டாங்க” என்று வடிவேலையும் நாகராஜனையும் கிரிதரனையும் சுட்டிக் காட்டிச் சொன்னார். அவர்கள் எருக்கம்பூக்களை ஒரு மாலையாகத் தொடுத்துக்கொண்டிருந்தனர்.
“இந்த மாலை எதுக்கு?” என்று புரியாமல் பாட்டுக்காரரிடம் கேட்டேன்.
”நம்ம புள்ளயாருக்குத்தான்.”
”இன்னைக்கும் ஏரில அடுத்த கரை வரைக்கும் போய் வந்தீங்களா?” என்று ஆவலோடு நான் பாட்டுக்காரரிடம் கேட்டேன். ”ஆமா” என்று தலையசைத்துச் சிரித்தார் அவர்.
“இருட்டா இருக்கும்போதே குயில்சத்தம் கேட்டு எழுந்துட்டேன். இந்த மரத்துக்கு நெறய குயில்ங்க வருது. என்ன மாதிரியான சங்கீதம் தெரியுமா? அந்த குரலுக்கு முன்னால நான் பாடறதெல்லாம் பாட்டே இல்ல. பாட்டுல அந்தத் தாளத்த கொண்டுவர முடியாமதான் நாம வார்த்தைங்கள போட்டு அடச்சிடறோம்”
அவர் கண்களில் படர்ந்த பரவசத்தைப் பார்த்தபோது எதுவுமே தெரியாத எங்களுக்கே பரவசமாக இருந்தது.
ஒருசில நிமிடங்களுக்குள் மேடை நிறைந்துவிட்டது. மண்ணை ஏற்றிக்கொண்டு வந்த இரண்டு வண்டிகளை தொடர்ந்து ஓட்டிச் செல்ல முடியாமல் வண்டிக்காரர்கள் நிறுத்திவிட்டனர். கூட்டத்தைப் பார்த்து மாடுகள் மிரண்டன. நானும் தண்டபானியும் ஓடிச் சென்று மக்கள் கூட்டத்தை ஒதுங்கவைத்து வண்டிகள் செல்ல வழியை ஏற்படுத்திக் கொடுத்தோம்.
எருக்கமாலையைக் கட்டி முடித்ததும் நாகராஜன் அதை எடுத்துச் சென்று பிள்ளையார் கழுத்தில் சூட்டினான். “இப்ப பாரு, நம்ம புள்ளயார் எவ்வளவு அழகா இருக்காரு” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் பாட்டுக்காரர். கூட்டத்திலிருந்து எழுந்து வந்த ஒரு ஆயா தன் மடியிலிருந்த பூக்களையெல்லாம் பிள்ளையார் முன்னால் வைத்துவிட்டு கற்பூரம் ஏற்றி வணங்கினாள். பாட்டுக்காரர் அந்தச் சுடரைத் தொட்டு வணங்கினார். நாங்களும் வணங்கிவிட்டு கீழே தரையில் விழுந்து எழுந்து காதுகளைப் பற்றிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டோம்.
“ம், நாம ஆரம்பிக்கலாமா?” என்று என் தோளைத் தட்டினார் பாட்டுக்காரர். நான் ஆவலோடு சென்று ஆர்மோனியப் பையை எடுத்து வந்து அவருக்கு முன்னால் வைத்தேன். அவர் பிள்ளையார் முன்னால் அமர்ந்து துணிமூட்டையிலிருந்து ஆர்மோனியத்தை எடுத்து முன்னால் வைத்துக்கொண்டார். விரல்கள் அங்குமிங்கும் படரவிட்டு இசையைக் கூட்டினார். ஒருகணம் என்னை அருகில் வருமாறு சைகை காட்டிவிட்டு “அந்தக் குயில் எப்படி கூவிச்சி தெரியுமா?” என்று கேட்டார். நான் “எப்படி?” என்பதுபோல அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் துருத்தியை மெல்ல இழுத்தபடி ஒரு மரக்கட்டையை ஒரு பூவைத் தொடுவதுபோல மெல்லமெல்லத் தொட்டார். அப்போது எழுந்த ஓசை உண்மையிலேயே அங்கு ஒரு குயில் வந்து கூவுவதைப்போல இருந்தது. நம்ப முடியாதவனாக நான் அவர் விரல்களையே பார்த்தேன். அது குயிலின் குரலேதான். ஆச்சரியத்தில் வாய் பிளந்தபடி அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
“அற்புதமா இருக்குது. கண்ண மூடினா குயில்தான் தெரியுது.”
“சங்கீதத்தையே அப்பிடித்தான் கண்டுபுடிச்சாங்க. எல்லாமே ஒரு சேர்மானம்தான். குயில், மயில், ஆடு, காளை, குதிரை, யானை, அன்றில்னு பறவைகளுடைய குரல்களையும் விலங்குகளுடைய குரல்களையும் கூட்டிக் கொறச்சி செய்ற வித்தை. இதான் ராகம் தாளம்.”
குயிலின் குரலோசையிலிருந்தே விடுபட முடியாமல் திகைத்திருந்த என்னை பாட்டுக்காரரின் பேச்சு மேலும் மேலும் பரவசத்தில் ஆழ்த்தியது.
“சரி, இப்ப பிள்ளையாரைப் பத்தி பாடுவோம் என்ன?” என்றபடி மரக்கட்டைகளை அழுத்தி வேறு மாதிரியான இசை எழும்படி செய்தார். சில கணங்கள் கண்களை மூடி ‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்’ என்று தொடங்கினார். அப்புறம் அடுத்தடுத்து ‘அல்லல்போம் வல்வினைபோம்’, ’முன்னவனே யானை முகத்தானே’ ‘களியானைக்கன்றை’ ’மருப்பையொரு கைக்கொண்டு’ என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.
அவர் ஆர்மோனியப்பெட்டியை இறக்கியதும் நேற்று போலவே பலரும் வந்து கூடையில் பழங்களை வைத்துவிட்டுச் சென்றனர். நாங்கள் அங்கிருந்தோர் அனைவருக்கும் அந்தப் பழங்களை உடனடியாகப் பிரித்துக் கொடுத்தோம்.
அக்ரகாரத்தெருவிலிருந்து இரண்டு பேர் வேகமாக கல்மேடைக்கு அருகில் வந்து நின்றார்கள். ஆர்மோனியப்பெட்டிக்குப் பக்கத்தில் இருந்த பாட்டுக்காரரிடம் “இங்க பாடறவரு யாரு?” என்று கேட்டார் ஒருவர். பாட்டுக்காரர் பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்தார். நான் துடுக்காக அவரைப் பார்த்து “பாடறவருகிட்டயே வந்து நீங்கதான் பாடறவரானு கேக்கறிங்க” என்றேன். அதைக் கேட்டு அவர் முகம் சிவந்துவிட்டது. ”சரி சரி” என்று சமாளித்தார். பிறகு ”சரி, கெளம்புங்க” என்று பாட்டுக்காரரைப் பார்த்துச் சொன்னார்.
பாட்டுக்காரர் ”எங்க?” என்று அவரிடம் கேட்டார்.
“ராமசாமி ஐயர் உங்கள கையோட அழச்சிண்டு வரச் சொன்னார்”
“ஏன்?”
“இன்னைக்கு அவா ஆத்துல பெரிய பூஜை நடக்குது. அதுல நீங்க பாடினா நன்னா இருக்கும்ன்னு பிரியப்படறார்.”
“சரி”
“சரின்னு சொல்லிட்டு உக்காந்துண்டா போதுமா? வாங்கோ போவலாம்”
“எனக்கு யார் வீட்டுக்கும் போய் பாடற பழக்கமில்ல தம்பி. நான் சும்மா இப்படி நாடோடியா பாடிட்டே போற ஆள். போய் சொல்லுங்க.”
“அவர் யார்னு தெரியாம நீங்க பேசறேள்னு நெனைக்கறேன். அவர் இந்த அக்ரகாரத்துலயே பெரிய புள்ளி. விழுப்புரம் பெரிய கோர்ட்ல மாஜிஸ்ட்ரேட். இந்த வட்டாரத்துல அவர் பேச்சுக்கு மறுபேச்சே இல்ல.”
பாட்டுக்காரர் எந்த அசைவுமில்லாமல் உட்கார்ந்தபடியே இருந்தார்.
“எழுந்து வாங்கோ”
“தம்பி, நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேனே. நீங்க கெளம்பலாம்”
அந்தப் பதிலைக் கேட்டு அவர் முகம் இருண்டுவிட்டது. அவர் முகம் போன போக்கே சரியில்லை. நான்கு பக்கங்களிலும் மாறிமாறிப் பார்த்துவிட்டு திரும்பிச் சென்றார்.
“சரி, நாம விளையாடற நேரம் வந்துட்டுது. பந்து விளையாடலாமா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நான் உற்சாகமாக தலையசைத்துக்கொண்டே எழுந்தேன்.
மேடையில் அமர்ந்திருந்த கூட்டம் அசைவில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தது. நாங்கள் குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தோம்.
“எங்க ஊருக்கு யாரும் இந்த மாதிரிலாம் வந்ததில்ல சாமி. நீங்க வந்தது ஒரு பெரிய அதிசயம். கடவுளா பாத்து உங்கள அனுப்பி வச்சிருக்காரு. எங்க கஷ்டம் தீர்ற மாதிரி ஒரு பாட்டு பாடுங்க” என்று ஒருவர் எழுந்து சொன்னார். உடனே “ஆமா பாடுங்க” “ஆமா பாடுங்க” என்று பல குரல்கள் எழுந்தன. ”என்ன செய்யலாம்?” என்பதுபோல என்னையும் சிவலிங்கத்தையும் பார்த்தார் பாட்டுக்காரர். “சரி, சாய்ங்காலமா வெளயாடிக்கலாம். பாட்டே பாடுங்க” என்று சொன்னோம்.
பாட்டுக்காரர் ஆர்மோனியத்தை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டார். சில கணங்களிலேயே இசையைக் கூட்டி ’உனது திருவடி நம்பிவந்தேன் எனக்கு ஒருவருமில்லை நான் ஏழை’ என்று பாடத் தொடங்கினார். அந்தக் குரலைக் கேட்கும்போதே நெஞ்சு அடைப்பதுபோல இருந்தது. கண்களில் நீர் தளும்பத் தொடங்கியது. அரசமரத்தைவிட உயரமான உருவத்துடன் யாரோ ஒருவர் அங்கு நின்று எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருப்பதுபோலத் தோன்றி என் உடல் அதிர்ந்தது. அந்தப் பாடல் முடித்ததும் ‘காணாத கண்ணென்ன கண்ணோ வீணான கண்மயில் கண்ணது புண்ணோ’ என்ற பாட்டு தொடங்கியது. கிட்டத்தட்ட அனைவருடைய கண்களும் குளமான நிலையில் ‘கண்டேன் கலிதீர்ந்தேன் கருணைக்கடலை நான் கண்டேன்’ என்று பாடத் தொடங்கினார் பாட்டுக்காரர். அந்த வரிகள் வழியாகவும் ஆர்மோனியத்திலிருந்து பீறிட்ட இசை வழியாகவும் பாய்ந்த ஒரு பரவசத்தில் திளைத்திருந்தேன்.
அந்தப் பாட்டு முடியும் தருணத்தில் அக்ரகாரத் தெருவிலிருந்து இருபதுமுப்பது பேர் கூட்டமாகத் திரண்டு வந்தார்கள். எல்லோருக்கும் முன்னால் வந்தவர் வெள்ளை வெளேரென வேட்டி அணிந்திருந்தார். ஒரு துண்டுமட்டும் தோளில் இருந்தது. நெற்றியுலும் மார்பிலும் தோள்களிலும் திருநீற்றின் பட்டைகள் உலர்ந்து படிந்திருந்தன. கழுத்தில் ருத்திராட்ச மாலை தொங்கியது. அவருக்குப் பக்கத்தில் சற்று முன்னால் வந்து சென்றவர் நின்றிருந்தார்.
சட்டென எனக்குள் ஒரு பயம் படர்ந்தது. என்ன நடக்குமோ என்று மனத்துக்குள் பதறத் தொடங்கினேன். திரும்பி பாட்டுக்காரரைப் பார்த்தேன். அவர் அங்கு எதுவுமே நிகழாததுபோல தன் பாட்டின் உலகத்துக்குள் இருந்தார். ருத்ராட்சமாலை அணிந்தவர் பாட்டு முடியும் வரைக்கும் காத்திருந்து பாட்டுக்காரருக்கு வணக்கம் சொன்னார்.
”நான் ராமசாமி. நீங்க நன்னா பாடறேள்னு கோவில்ல சொன்னா. இன்னைக்கு நம்ம ஆத்துல சத்யநாராயண பூஜை. நீங்க வந்து பாடனா நன்னா இருக்கும்ன்னுதான் அழச்சிண்டு வரச்சொன்னேன். என் மனசில வேற எந்த எண்ணமும் இல்ல. ஆத்துக்கெல்லாம் நீங்க வரமாட்டேள்னு தம்பி வந்து சொன்னான். அதான் நானே கெளம்பி வந்துட்டேன்.”
“உக்காருங்க”
பாட்டுக்காரருக்கு முன்னால் அவர் காலை மடித்து அமர்ந்தார். “அண்ணா நாற்காலி” என்று அவசரமாக எழுந்த குரலை திரும்பியே பார்க்காமல் கையை உயர்த்தி அடக்கினார். அவரைத் தொடர்ந்து வந்தவர்கள் அனைவரும் கீழே அமர்ந்தனர். மேடையில் இடம் கிடைக்காதவர்கள் தரையில் அமர்ந்திருந்த கூட்டத்தோடு அமர்ந்தனர்.
”கங்கையை பாக்க நாமதானே கங்கைகிட்ட போவணும். கங்கையை நம்ம பக்கத்துக்கு இழுக்க நெனைக்கலாமோ. பெரிய தப்பு பண்ணிட்டேன்.”
பாட்டுக்காரர் ஆர்மோனியப்பெட்டியைத் தொட்டு சுருதி கூட்டியபடியே “என்ன பாட்டு வேணும், சொல்லுங்க” என்று கேட்டார்.
“நீங்க சுதந்திரமா எது பாடினாலும் சரி”
ராமசாமி பாட்டுக்காரரின் முகத்திலேயே கவனத்தை குவித்திருந்தார். பாட்டுக்காரர் மெல்ல ‘யாருக்கு பொன்னம்பலவன் கிருபை இருக்குதோ அவனே பெரியவனாம்’ என்று அடியெடுத்து பாடத் தொடங்கினார். பார்வைக்குத் தென்படாத ஒரு பேருருவம் எங்களுக்குப் பக்கத்திலேயே உயர்ந்து நிற்கும் உணர்வை நான் மறுபடியும் அடைந்தேன். அந்தப் பாட்டை முடித்ததுமே அவர் ‘ஆடும் சிதம்பரமோ ஐயன் கூத்தாடும் சிதம்பரமோ’ என்று தொடங்கினார். அதைத் தொடர்ந்து ‘பாதமே துணை ஐயமே’ ‘பாடுவாய் மனமே சிவனைக் கொண்டாடுவாய் தினமே’ ‘வாருங்கள் வாருங்கள் சொன்னேன் நீங்கள் வாயாடாது ஓடி வருவீர் என் முன்னே’ ‘உத்தாரம் தாரும் ஐயே எனக்கு ஒருவருமில்லை நான் பரகதி அடைய’ ‘தில்லையம்பலத் தலமொன்று இருக்குதாம்’ ‘தில்லை வெளியிலே கலந்துகொண்டால்’ ‘ஆடிய பாதத்தைத் தாரும் உம்மைத் தேடி வந்தோம் இதோ பாரும்’ ‘கைவிடலாது காமதேனு அல்லவோ’ என்று பாடிக்கொண்டே சென்றார். எல்லாவற்றையும் பாடி முடித்துவிட்டு புன்னகைத்தபடியே ஆர்மோனியத்தை இறக்கினார்.
நான் ராமசாமியைப் பார்த்தேன். அவர் கண்களிலிருந்து நீர் பெருகி கோடாக வழிந்தபடி இருந்தது. அவருக்கு எவ்விதமான சுய உணர்வும் இல்லை. ஆர்மோனியம் நின்று வெகுநேரத்துக்குப் பிறகே அவர் மனம் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தது. சுற்றி அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தபடி துண்டின் நுனியால் கண்களைத் துடைத்துக்கொண்டார்.
“அந்த நடராஜன அப்படியே கண்முன்னால கொண்டுவந்து நிறுத்திட்டேள். என்ன சொல்றதுனே தெரியலை. வார்த்தயே வரலை. வார்த்தைகள் எல்லாம் எங்கயோ காணாம போய்ட்டமாதிரி இருக்கு. மனசே லேசாய்ட்டுது. நீங்களே இங்க தேடி வந்து பாடனதுலாம் இந்த ஊர் செஞ்ச புண்யம்.”
குரல் இடற ராமசாமி திரும்பினார். யாரோ ஒருவர் முன்னால் வந்து ஒரு மாலையை நீட்டினார். இன்னும் மூன்று பேர் தம்மிடம் இருந்த பழத்தட்டுகளையும் வேட்டி துண்டு வைத்த தட்டையும் எடுத்துச் சென்று ஆர்மோனியத்துக்கு அருகில் வைத்துவிட்டுத் திரும்பினர்.
ராமசாமி மாலையை உயர்த்தி பாட்டுக்காரரின் கழுத்தில் அணிவிக்க கைகளை உயர்த்தினார்.
“ஹா, எனக்கா?” என்றபடி ஒரு கணத்தில் நின்ற இடத்திலிருந்து பின்வாங்கிய பாட்டுக்காரர் “அங்க, அங்க அவருக்கு போடுங்க” என்றபடி பிள்ளையாரின் பக்கம் சுட்டிக் காட்டினார். ராமசாமி மாலையை பிள்ளையாருக்குச் சூட்டிவிட்டு பாட்டுக்காரரைப் பார்த்து புன்னகையுடன் வணங்கினார். பிறகு வணங்கிய நிலையிலேயே மேடையிலிருந்து இறங்கி நடந்து சென்றார்.