இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு ஸ்கைப் அழைப்பு இருக்கும். நான்கு அல்லது ஐந்து முக்கியமான நபர்களுடன். பெரும்பாலும் முக்கிய முடிவுகள் எடுப்பதைச் சார்ந்த கலந்துரையாடல்களாக இருக்கும். சில அழைப்புகள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாண்டியும் போகும். அன்றைய அழைப்பும் நீண்டு கொண்டேதான் சென்றது. ஒரு குறிப்பிட்ட கணத்தில் ஏதும் கேட்கவில்லை, ஆனால், வீடியோவில் மற்றவர்கள் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். தன்னுடையை ஹெட்செட் வேலை செய்கிறதா என்று ஒன்றிரண்டு முறை சோதித்துப் பார்த்தும் சரியாகவில்லை. ஹெட்செட்டைக் கழற்றி ஃபோனை நேரடியாக வைத்துக் கேட்டுப் பார்த்தும் பலனில்லை. சரவணனுக்கு வியர்த்துக் கொண்டு வந்தது. கண்கள் லேசாக இருட்டிக்கொண்டு வந்தன. கை விரல்கள் அவனையறியாமல் நடுங்குவதுபோல் தோன்றியது. இருள் படர்ந்து அவனைச் சூழ்ந்து, அவனுக்குள் ஏறி நிரம்பி வழிந்தது போல இருந்தது. அப்படியே கண்மூடி உட்கார்ந்து விட்டான். பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. விரல்கள் தொடர்ந்து நடுங்குவது மட்டுமே தெரிந்தது. சுய நினைவிற்குத் திரும்பி ஒரு பாட்டில் தண்ணீரைக் குடித்தான். ஒரே யோசனையாக இருந்தது. இரண்டு மூன்று நாட்களாக ஒரு வித சோர்வு. எப்போதும் அப்படி இருப்பவனில்லை அவன். அவன் இருக்கும் இடமே கலகலப்பாகத் தான் இருக்கும். ஒரு வழியாக, மிச்சமிருந்த வேலைகளைக் குழப்பத்துடன் முடித்து விட்டு வீட்டிற்குக் கிளம்பினான்.
கதவைத் திறந்த பத்மா, “பிள்ள தூங்குகால்லா, எதுக்கு இப்டி கதவ தட்டுகியோ? வரச்சம மிஸ்டு கால் குடுக்கச் சொன்னேம்லா?” அமுதாவிற்கு மூன்று வயது. தினமும் அப்பா வரும்போது கதவின்பின் ஒளிந்து நின்று ‘அப்பா’ என்று தாவிக் குதிப்பாள்.
பதில் பேசாமல் நேராக குளியலறைக்குச் சென்று ஷவரில் நின்றான். தலை லேசாகச் சுற்றுவது போல இருந்தது. ஏதேதோ எண்ணங்கள், கட்டற்ற வேகத்துடன் எங்கேயோ விரைந்து செல்கின்றன. ஒன்றின் குறுக்காக ஒன்றாக, திடீரென்று மேல்நோக்கி, பின், உள்ளுக்குள் சுற்றிச் சுற்றி, அலை அலையாக. விரல் நடுக்கம் இன்னும் நிற்கவில்லை. பத்மா கதவைத் தட்டுவது எங்கேயோ தூரத்தில் கேட்டது. மெதுவாகச் சென்று கதவைத் திறந்தவன் அவள் தோள் மீது அப்படியே சாய்ந்தான்.
“பிள்ளயாரப்பா..எத்தான், பாத்து பாத்து..என்னத்தான், என்ன செய்யி? எத்தான், தண்ணி குடிக்கேளா” ஓவென அழ ஆரம்பித்து விட்டாள் பத்மா. சரவணனால் கண்களைத் திறக்க முடியவில்லை, அப்படியே சென்று கட்டிலில் உட்கார்ந்து தலையணையில் சாய்ந்து விழுந்தான். ஒன்றுமில்லை என்பது போல பத்மாவைப் பார்த்து கை காட்டினான். அவள் நேராகச் சென்று திருநீறு எடுத்து வந்து பூசிவிட்டாள், வாய் ‘அம்மே நாராயணா, தேவி நாராயணா’ முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
கொஞ்ச நேரத்தில் சரியாகி விட்ட மாதிரி இருந்தது. “பத்மா, வா டாக்டர்ட்ட போலாம்” என்றான். பத்மா அழுகையும் குழப்பமுமாக அவனைப் பார்த்து நின்றாள். ‘காச்சல் வந்தாக் கூட மாத்திர சாப்பிட மாட்டா, நமக்கு ஒண்ணுஞ் செய்யாது கேட்டியா? உள்ள ஓடது மீனு ரத்தம்லான்னு சொல்லுவா, பிள்ளயாரப்பா, இப்ப ஆஸ்பத்திரிக்கு போவோம்னு சொல்லுகாளே, நா என்ன செய்வேன்’
“எத்தான், என்னத்தான் செய்யி, சொல்லுங்கத்தான்”
“ஒண்ணுல்ல, நீ பொறப்படுட்டி மொதல்ல. ஆட்டோக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லு, பைக் வேண்டாம்.” ஆட்டோ வந்தது. ஆஸ்பத்திரி செல்லும் வழியில் பத்மா ஏதேதோ கேட்டுக்கொண்டே வந்தாள். எதையும் கவனிக்காமல் வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டே வந்தான். அமுதா எதுவும் தெரியாமல் அம்மா தோளில் தூங்கிக்கொண்டிருந்தாள். காய்ச்சல் பரிசோதனை செய்து, இரத்த அழுத்தம், எடை, உயரம் குறித்துக் கொண்டு காத்திருக்கச் சொன்னார்கள். சரவணன் எதுவுமே பேசவில்லை. பத்மா அவளுடைய அம்மாவிற்குப் ஃபோன் செய்து அழுது கொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து அவர்களது முறை வந்தது.
டாக்டர் கேட்டார், “சொல்லுப்போ, என்னாச்சி? நீ இந்தப் பக்கமே வர மாட்டியே?”
“இல்ல டாக்டர், ஒரு மாரி தளச்சயா இருக்கு, சாய்ங்காலமானா ஒரே தல சுத்து, கண்ணு ஒரு மாரி இருட்டிட்டே போகு..இன்னிக்கி ஃபோன் பேசும்போ கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணுமே கேக்காம ஆய்ட்டு..” பத்மாவால் உட்கார முடியவில்லை, கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
“ஓ, ஒனக்கென்ன டே தளச்ச இந்த வயசுல, சின்ன ப்ராயத்துல கெதியா இருக்காண்டாமா டே? ஒங்கப்பன் அம்பது வயசுல ரெண்டு மூட அரிசிய அசால்ட்டா தூக்கிப் போட்ருவானே டே! செரி விடு” என்றவர் பத்மாவைப் பார்த்து, “எம்மோ, நீ எதுக்கு அழுக? சும்மா இரிம்மோ. வேறென்ன செய்யி சொல்லுடே?”
“சாப்பிடவும் பிடிக்க மாட்டுக்கு டாக்டர்..கொஞ்சம் சாப்ட்ட ஒடனே வயிறு நெறஞ்சி போன மாதி தோணுது..”
“ம்ம், வேற? ஒழுங்கா தூங்குகியா?”
பத்மா குறுக்கிட்டாள், “இல்ல சார், ஒரு வாரமா இவ்வோ சரியில்ல, ராத்திரி முழிச்சே கெடக்கா, தூக்கத்துல ஒரே பொலம்பக்கம்..”
“செரி, டெம்பரேச்சர் நார்மல், BP இல்ல, சுகரும் இல்லல்லா ஒனக்கு?” டாக்டர் சிறிது யோசித்து குறிப்பேட்டில் ஏதோ எழுதிக் குடுத்தார். “ப்ளட் டெஸ்ட் எழுதிருக்கேன், சுகரும் செக் பண்ணிருவோம், பாத்துட்டு வாப்போ..ஒண்ணும் பயப்படாண்டாம்.”
இரத்த மாதிரி குடுத்து, சர்க்கரை பரிசோதனையும் செய்துவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தனர்.
“எத்தான், ஆபீஸ்ல என்னவாம் பிரச்சனையா, என்ட்ட எதும் மறைக்கேலா? எனக்கு படபடப்பா வருகு..எல்லாவளுக்க கண்ணும் சேந்து எனக்க உயிரல்லா எடுக்கு.”
“ஏட்டி, நீ சும்மா இருக்கியா? ஒண்ணுல்ல, பாப்போம், இரி”
“குடும்பக் கோயிலுக்கு போவோம்னு சொன்னா கேக்கேளா நீங்க? ஓரே வேல வேலன்னு அலஞ்சா! ஒரு நாளு கூட லீவு போட மாட்டியோ, வீட்டுக்கு வந்தாலும் ஒரே ஃபோனு…”
பரிசோதனை முடிவுகள் வந்தன. சர்க்கரை அளவு சரியாகத்தான் இருந்தது. இரத்தப் பரிசோதனை அறிக்கையில் ஹீமோக்ளோபின் அளவு 19 என்று இருந்தது. அடிக்கோடு இடப்பட்டிருந்தது. சரவணன் ஃபோனை எடுத்து அதைப்பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தான். பத்மா என்ன என்ன என்று கேட்டு ‘அம்மே நாராயணா’ சொல்ல ஆரம்பித்தாள்.
…
முடிவுகளைப் பார்த்து டாக்டர் சொன்னார், “தம்பி, ஹீமோக்ளோபின் அளவு பொதுவாட்டு 13லருந்து 15 வர இருக்கணும். ஒனக்கு இப்போ 19 இருக்கு. நெறய காரணம் இருக்கலாம். ஆனா, இப்போ ஒண்ணும் முடிவா சொல்ல முடியாது. ஒரு, ஒரு வாரம் பாப்போம், நெறைய தண்ணி குடி, ஜூஸ், எளனி குடி.”
“செரி டாக்டர், தூக்கமே இல்லயே டாக்டர்” என்று கேட்டான் சரவணன்.
“எதயும் யோசிக்காம ஒறங்குப்போ. அடுத்த வாரம் மறுபடியும் ப்ளட் டெஸ்ட் எடுப்போம், ஒருவேள ஹீமோக்ளோபின் கொறயலன்னா கொஞ்சம் சிக்கல் தான். அத நம்ம அப்ப பாப்போம், என்ன?”
பத்மா அதற்குள் மறுபடியும் அழ ஆரம்பித்திருந்தாள். டாக்டர் அவளைப் பார்த்து, “எம்மோ, நீ அழாம இரி மொதல்ல, ஆபீஸ் போறவனுக்கு நெறைய கொடச்சல் இருக்கும்லா, நீ தைரியமாட்டு இருந்தாத்தான அவனும் கெதியா இருப்பான்.”
பத்மா குனிந்துகொண்டே தலையை ஆட்டினாள்.
“தம்பி, இது ஒரு வேள ‘பாலிசித்தீமியா வெரா’வா இருக்கலாம். அது ஒரு ப்ளட் கண்டிசன் தா, அத நம்ம இப்ப கொழப்பாண்டாம். ஒரு வாரம் கழிச்சு வாப்போ… செரி பாப்போம்.”
….
அன்று இரவு ஒரு நொடி கூட சரவணனால் தூங்க முடியவில்லை. கண்களை மூடியதும் தலை சுற்றுவது போலவும் எல்லாமே இருண்டு வருவது போலவும் ஒரு மயக்க நிலை தொடர்ந்து இருந்தது. வித விதமான எண்ணங்கள் வேறு. ‘பாலிசித்தீமியா பத்தி கூகுள்ல பாக்கும்போ என்னாலாமோ போட்ருந்தானே, கேன்சர்னு கூட ஒரு வார்த்த இருந்துச்சே, ஒரு வேள அப்டி ஆயிட்டா பத்மா என்ன செய்வா? எம் பிள்ளய எப்டி வளப்பா? இன்னும் எத்தன மாசம் இப்டி இருக்கப் போறனோ!’
“எத்தான், எத்தான், என்ன செய்யித்தான்? ஏன் தூங்காம இருக்கியோ?” பத்மாவிற்கு படபடப்பு இன்னும் குறையவில்லை. அவளும் தூங்காமலேயே கிடந்தாள்.
“பத்மா, எனக்கு ஒருவேள கேன்சரா இருக்குமோ? நெட்-ல அப்டிதா போட்ருக்கான். நா போய்ட்டா நீ என்ன செய்வ?”
“எத்தான், இப்டி பேசாதியோ, நா செத்துருவேன்..ஒண்ணுல்லத்தான் உங்களுக்கு..ஒறங்குங்கோ…” என்னதான் மனதை தைரியப்படுத்திக் கொண்டு அவள் சமாளித்தாலும் சரவணன் தூங்கவுமில்லை, அவன் புலம்பல் நிற்கவுமில்லை.
“பாலிசித்தீமியாவா இருந்தா டெய்லி மாத்திர சாப்பிடணும், வாழ்க்க பூரா…செலசமம் அதுவே கேன்சரா மாறுமாம். எலும்புக்குள்ள மஜ்ஜை இருக்குல்லா, அத மாத்துவாங்கலாம்..ரொம்ப பெயின்ஃபுல் ட்ரீட்மென்ட்..பயங்கர செலவாகும்..நமக்கு எங்க அதுக்கு கழியும்! அவ்ளோதான் போல, பிள்ள என்ன பண்ணுவா? அவளுக்கு யாருமே இல்லாம போய்ருமே..’
“எத்தான், நம்ம வேற ஆஸ்பத்திரிக்கு போவோம், நாகராஜ் அண்ணன நாளக்கி வரச் சொல்லுங்கோ, ஒண்ணுல்லத்தான், என்ன பயமுறுத்தாதியோ..”
…
திருவனந்தபுரத்தின் புகழ் பெற்ற மருத்துவமனையில் எல்லா விதமான பரிசோதனைகளும் செய்யப்பட்டன; அடி வயிற்று ஸ்கேன், மார்பு எக்ஸ்-ரே, இரத்தத்தின் நுண்ணிய பகுதிகளை ஆய்வு செய்யும் ஒரு இரத்தப் பரிசோதனை, நரம்பு மண்டலத்திற்கான ஸ்கேன். பாலிசித்தீமியா போன்ற சில நோய்களுக்கு, அவ்வப்போது உடலிலிருந்து ஒரு யூனிட் இரத்தத்தை வெளியேற்றுவார்கள். இல்லாவிடில், இரத்தத்தின் திடத்தன்மை அதிகரித்து உடலின் உள்பகுதிகளில் அடைப்புகள் ஏற்படலாம். உயிரிழப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அந்த இரத்தம் அப்படியே அழிக்கப்படும்.
பரிசோதனை முடிவுகளைப் பார்த்த மருத்துவர் ஹீமோக்ளோபின் அளவு 17.5 இருப்பதாகச் சொன்னார். இருந்தாலும், அந்த முறைப்படி ஒரு யூனிட் இரத்தத்தை வெளியேற்றி சில மாத்திரைகளைச் சாப்பிட்டு ஒரு வாரம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார். அதன்படியே, ஒரு யூனிட் இரத்தம் எடுக்கப்பட்டது.
“எத்தான், அந்த ஆஸ்பத்திரில 19-னு சொன்னான். கிறுக்குப்பயக்க..ஓட்ட மெசின எதயாம் வச்சி செய்வாம் போல..”
சரவணனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும் வித வித எண்ணங்கள் வந்து பயமுறுத்துவது நிற்கவில்லை, அன்றைக்கும் சரியாக சாப்பிட முடியவில்லை. இரத்தத்தின் திடத்தன்மையை கட்டுக்குள் வைக்க தினசரி இரண்டு மாத்திரைகள், பிறகு, நிறைய தண்ணீர், ஜூஸ், இளநீர்..எல்லாம் அதே அறிவுரை தான்…
…
“மாப்ள, என்னடே, கிளி பறந்துருச்சோ? எதயாம் பாத்து பயந்தியால? நீ லேசுல இப்டி ஆக மாட்டியே டே?” நாகராஜ் சரவணனுக்கு நீண்ட கால நண்பன்.
“இல்ல மக்ளே, நாந்தா சொன்னேம்லா..எனக்கே தெரில மக்கா, ஒரே பயம், கேட்டியா? செத்துருவமோ, பிள்ளக்கி என்ன ஆகுமோன்னு..”
“போல லே, எல்லாவனும் சாவ வேண்டியதா, நால்லாம் ஒரு நாளக்கி எத்தன பிரச்சினய தோள்ல போட்டுட்டு சுத்துகேன், உனக்கென்ன ல, பைத்தியாரா…போல, போய் வேலயப் பாரு ல..”
“மக்கா, நா எல்லாருக்கும் ட்ரெய்னிங் குடுக்க ஆளு..நானே சொல்லுகேன் இப்டிலாம் தோணுகுன்னு…”
“செரி, விடு..ஒண்ணு செய்வோம்…நம்ம வடசேரி பள்ளில போய் மொதல்ல ஓதி கயிறு கட்டுவோம், நீ வா..”
லெப்பையிடம் வரிசையில் காத்திருந்து ஒரு பாக்கெட் ஊதுபத்தி, ஒரு எலுமிச்சை பழம் கொடுத்து கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டான். அவர் ஓதி விட்டு அடிக்கடி எச்சில் துப்பி அவன் முகத்தில் ஊதினார். “பயந்தான்..போ..செரி ஆவும்..இன்ஷா அல்லா..”
…
சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் பூசாரித் தாத்தாவிடம் தண்ணீர் தெளித்து கயிறு கட்டினால் எல்லாம் சரி ஆகும் என்று யாரோ சொல்ல, பத்மாவும் சரவணனும் அங்கு சென்றார்கள். பூஜை முடித்து தண்ணீர் சொம்புடன் வெளியே வந்த பூசாரி சரவணனைப் பார்த்த உடனேயே, “இவன் யாம் இப்டி பயப்படுகான்? கயித்தப் பாத்து பாம்புன்னுலா பயப்படுகான்” என்றார். பத்மாவின் முகத்தில் இன்னும் பயம் கூடியது.
கயிறு கட்டுதல் அதோடு முடியவில்லை. சுடுகாட்டு சுடலை மாடன், தாழாக்குடி அம்மன் கோவில், வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில் என்று பல கயிறுகள் சரவணனின் மணிக்கட்டில் ஏறி அவனுக்கு தைரியம் கொடுத்தன. குமரி பகவதி அம்மன் அபிஷேக சந்தனத்தை மூன்று இரவுகள் முகத்தில் பூசிப் படுத்தான்.
அடுத்த வாரம் மீண்டும் திருவனந்தபுரத்தில். இரத்தப் பரிசோதனை செய்தபோது ஹீமோக்ளோபின் 14.5 என்று வந்தது. அவனுக்கு பாலிசித்தீமியா இல்லை எனவும், இது ஒரு வேளை வேலைப் பளுவாலோ, இல்லை ஏதேனும் உளவியல் சிக்கலாகவோ இருக்கலாம் என்றும் மருத்துவர் சொல்ல, சரவணனின் குழப்பம் இன்னும் அதிகமானது.
“பத்மா, டாக்டர் என்ன சொன்னாரு மனசுலாச்சா? எனக்கு ஸ்ட்ரெஸ்ஸாம்..ஆன்க்சைட்டி டிஸ்ஆர்டராம்…நம்ப முடியுதா? செரிதான்…ரைட்டு, பாப்போம்…”
மருத்துவர் சரவணனிடம் நன்றாகத் தூங்க வேண்டும் எனவும், சில நாட்களுக்கு வேலையிலிருந்து விடுப்பு எடுத்து ஓய்வெடுக்கலாம் எனவும் கூறினார். முக்கியமாக, மொபைல் ஃபோன் உபயோகப் படுத்துவதைக் குறைக்க வேண்டும். தேவைப்படும் நேரங்களில் முடிந்த வரை முகத்திற்கு நேராக வைத்து ஃபோனைப் பார்க்க வேண்டும். தலை குனிந்து ஃபோனைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
எல்லாம் முயற்சி செய்தும் சரியான பாடில்லை. இரண்டு வாரங்கள் ஓடின. தினமும் காலை சரியாக 6.17-க்கு முழிப்பு வந்தது. அடுத்த இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு மூளை அதிவேகத்தில் ஓடும்; எண்ணங்களின் பந்தயம்; சில கடந்த நாட்களைப் பற்றி, சில எதிர்காலம் பற்றி, வேலை போய்விடுமோ, படுத்த படுக்கையாகி விட்டால் என்ன செய்வது?, சேமிப்பு பெரிதாக இல்லை, மனநிலை பாதிப்பு என்றால் ஒரு வேளை பைத்தியம் பிடித்து விடுமோ? ஒரு பன்றி தன் குட்டிகளுடன் பரபரத்து ஓடுவது போல அடிக்கடி கனவில் தோன்றியது. சில நேரங்களில் பகலிலும்.
சாப்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போனது. காலை உணவிற்குப் பின் வீட்டு வராந்தாவில் நடக்க ஆரம்பிப்பான், இங்கும் அங்குமாக, ஏதும் பேசாமல், அவ்வப்போது பெருமூச்சுகளாக விடுவான். குழந்தையிடம் விளையாடுவது அறவே நின்று போனது, அவள் அருகே வந்தாலே எரிச்சலில் கத்தினான். பத்மாவையும் முகம் கொடுத்து பார்ப்பதைத் தவிர்த்தான். மாலை நான்கு மணிக்கு மேல் எதுவுமே நடக்காத மாதிரி இயல்பாகப் பேச ஆரம்பிப்பான். இரவு மீண்டும் குழப்ப எண்ணங்கள், பயம், தூக்கமின்மை.
…
நாகராஜனுடன் ஒரு மனநல மருத்துவமனைக்குப் போனான் சரவணன். அது ஒரு நாலுக்கெட்டு வீடுதான். கட்டுப்படுத்த முடியாத ஓர் இளைஞனை கொண்டுவந்த காரிலேயே வைத்து ஊசி போட்டு அமைதிப் படுத்தினார் மருத்துவர். படபடப்பாக அமர்ந்திருந்த சரவணனை உள்ளே வருமாறு அழைக்க, இருவரும் சென்றனர்.
“வாங்க, இரிங்க, யாருக்கு பிரச்சன?” மருத்துவர் ஒரு சோபாவில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டே கேட்டார். அவர் தலைக்கு மேல் ஒரு வெள்ளை நிற பல்பு, கண் கூசும் விதமாக ஒளிர்ந்தது. சரவணன் தன் பிரச்சினையைப் பற்றி விளக்கமாகச் சொன்னான். அடிக்கடி அந்த பல்பு அவனைத் தொந்தரவு செய்வது போல எரிச்சலூட்டியது. மருத்துவர் சரவணனைப் பார்க்காமல் நாகராஜனைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.
“தம்பி, ஆன்க்சைட்டி அண்ட் ஃபியர், அவ்ளோதா..ரெண்டு வருசம் இருக்கும்னு நெனக்கேன், எனக்கு அட்டாக் வந்து ICU-ல இருந்தேன்..செத்துருவேன்னு ஒரே பயம்..மருந்து என்ன மருந்து…நம்ம தான் மருந்து…அந்த பத்து நாள்ல தான் புரிஞ்சு..நம்மலாம் ஒரு மயிரும் இல்லன்னு…இன்னா பாரு, ஜம்முன்னு இருக்கேம்லா…மனசுதா மருந்துப்போ…”
சரவணன் கூர்ந்து கவனிக்க நாகராஜன் மருத்துவரைப் பார்த்து ம்ம், ம்ம் என்று தலையாட்டிக் கொண்டிருந்தான்.
“தம்பி, ஒனக்கு எந்த ஹீரோயின் புடிக்கும் சொல்லு” என்று நாகராஜனைப் பார்த்து சிரித்தார் மருத்துவர்.
“சார்..அது…” கொஞ்சம் வெட்கப்பட்டு, “நயன்தாரா சார்..” என்றான்.
“ஆமா தம்பி, ஜம்முன்னு இருக்கால்லா..அவ பொண்டாட்டியா வந்தா சூப்பரா இருக்கும்லா..”
நாகராஜன் தலையைச் சொரிந்து கொண்டே, “அது நடக்காதுல்லா சார்.” என்றான்.
“அப்பிடிச் சொல்லு…எல்லாவனுக்கும் அவவன் பொண்டாட்டிதான்டே நயன்தாரா, திரிஷா எல்லாம்..வேறென்ன செய்ய முடியும்? அப்டி நெனச்சுட்டே ஓட்ட வேண்டியதான். என் ஃபிரெண்ட் ஒருத்தன் இருக்காம் பாத்துக்கோ, 45 வயசு..பெரிய லாயரு…இன்னும் கல்யாணம் பண்ணல்ல..யாம்லன்னு கேட்டா, ‘ஒரே கருவாட்டு வாட, சீ…சீ..அப்டிங்கான்..சொல்லது மனசுலாச்சா..”
சரவணன் தலையாட்டி சிரிக்க ஆரம்பித்தான். மருத்துவர் இப்போது அவனைப் பார்த்து, “தம்பி ஒரு பலூன்ல ஃபுல்லா தண்ணி புடிச்சி ஒரு நூல்ல கெட்டி வச்சிருக்கேன்னு வய்யி, அத ஒரு சுண்டு சுண்டுனா என்ன ஆவும்?”
சரவணன் யோசித்து, “அது குலுங்கும் சார்” என்றான்.
“ம்ம்..அதுக்க அதிர்வு இருக்குல்லா, எவ்ளோ நேரம் இருக்கும்னு நெனைக்க, சொல்லு பாப்போம்.”
“ஒரு…ஒரு முப்பது செகண்ட் இருக்கும் சார்.” என்றான்.
“தம்பி, நீ சொல்லு..” என்று மருத்துவர் நாகராஜனைப் பார்த்துக் கேட்டார்.
“சார்..ஒரு ரெண்டு நிமிசம் இருக்கும்லா.” என்றான்.
“ம்ம்..சொன்னா நம்ப மாட்டியோ, கொறஞ்சது முப்பது நிமிசம் இருக்குமாம்..நீங்க வேண்ணா கூகிள் பண்ணிப் பாருங்கோ..” இருவரும் மருத்துவரைக் கூர்ந்து கவனித்தனர்.
“அதே மாதி தான நம்ம மனசும்..நயன்தாரா, வேல, சம்பாத்தியம், குடும்பம், சப்பு, சவறு..என்ன மயித்தயெல்லாம்தா மனுசன் சமாளிப்பான்..அதுலயும், கல்யாணம் ஆயிட்டுன்னு வய்யி, பய தொலஞ்சான்..நாந்தா பாக்கேம்லா..வரவன்ல பாதி பேரு குடும்பத்தால சீரழிஞ்சவந்தான்..பொண்டாட்டி…மண்ணாங்கட்டின்னு…வேற வேலயில்லாமத் திரியானுவோ…”
இருவரும் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தனர்.
மருத்துவர் கேட்டார் “எதாம் நடந்திருக்கும்…எப்பயும் மாதி இல்லாம வேறெதாம் செஞ்சுருப்ப..யோசிச்சுப் பாத்து சொல்லு..வீட்ல எதாம் சண்ட கிண்ட போட்டியா?”
சரவணன் கொஞ்ச நேரம் யோசித்து சொல்ல ஆரம்பித்தான், “ம்ம்ம்..ஆமா, சார்…ஒரு மாசம் இருக்கும்னு நெனைக்கேன்..எம் பொண்டாட்டி பாத்ரூம்ல பிள்ளய குளிப்பாட்டிட்டு இருந்தா..பிள்ளன்னா தண்ணில ஜாலியா வெளயாடத்தான செய்யும் ..திடீர்னு ஓ..ஓன்னு பிள்ள அழுகா..இவதான் அடிச்சிருப்பா..எனக்குப் பொதுவா பிள்ளேல யாரும் அடிக்கத பாத்தா மண்ட காஞ்சிரும்..எத்தன தடவ சொன்னாலும் இவ கேக்கதில்ல..பிள்ளயப் போட்டு அடிக்கது..அன்னிக்கி கடுப்புல போயி பாத்ரூம் கதவுல ஓங்கி ஒரு இடி இடிச்சேன்..பயங்கரமா கத்திட்டேன்..கதவு ரெண்டு துண்டாப் போய்ட்டு…எனக்கே ஒரு மாதி ஆய்ட்டு…மூணு நாளா ஒண்ணும் பேசாம இருந்தேன்…
“ம்ம்ம்..பொறவு…”
“பொறவு, அடுத்த வாரம் வேறெதோ சண்டைல அவ ஃபோனப் போட்டு ஒடச்சா..நா கண்டுக்காம அமைதியா வெளில போய்ட்டேன்..பொறவு, சமாதானம் ஆனப்போ..எத்தான், .ஃபோன ஒடச்சதுக்கு நீங்க ஏன் கோவப்படலத்தான்னு கேட்டா..எனக்கே மனசுலாவல…எப்டி நா அமைதியா இருந்தேன்னு..”
“ம்ம்..அதான கேட்டேன்..ஒண்ணும் நடக்காமலா மனசு ஷேக் ஆவும்…பலூன் கததான் கேட்டியா..”
சரவணன் ஏதோ புரிந்தது போல அவரைப் பார்த்தான். முகத்தில் ஒரு தெளிவு தெரிந்த மாதிரி இருந்தது.
“பலூன சுண்டுனா குலுங்கும்லா..நா சொல்லுகது செரி தானப்போ…சொல்லு பாப்பம்…”
“நம்ம சொல்லத தான் நம்ம மனசு கேக்கணும் இல்லயா?..அது என்ன பெரிய மயிரா நமக்கு ஆர்டர் மயிரு போட…நம்ம மனசுக்கு நாமதான் மொதலாளி..இல்லா? ‘Your mind is your instrument. Learn to be its master, not its slave’-ன்னு ஒரு கோட் இருக்கு தெரியுமா?”
சரவணன் தலையை ஆட்டி ஆமோதித்துப் பின் கேட்டான், “டாக்டர்…நீங்க சொல்லது எல்லாம் மனசுலாகு..ஆனா, ஒறங்க முடில, சாப்பாடு எறங்கல…அதான் பயந்துட்டேன்..ஒரே கெட்ட எண்ணம்..எவனாம் செய்வின வச்சிருப்பானோன்னு கூட நெனச்சேன்..”
“அப்டிதா தோணும்ப்போ…சயின்ஸ் படி பாத்தா, நம்ம நெனச்சாலே நமக்கு கேன்சர் வரும்ங்கான்..எல்லா சோக்கேடும் நம்ம கைலதான்..நம்ம தாத்தமாரெல்லாம் எப்டி இருந்தானுகோ…நாலு பொண்டாட்டி வச்சு ராசா மாதி இருந்தானுகல்லா…இன்னொரு மேட்டரும் உண்டு..இது பரம்பரயா கூட வரும்னும் சொல்லுகா..ஒங்க குடும்பத்துல யாருக்காம் இப்டி இருந்திருக்கலாம்..யாரு கண்டா!”
“டாக்டர்..இப்ப என்ன செய்யச் சொல்லுகியோ?”
“தம்பி…நீ சரக்கடிக்கவன் மாதி தெரில…அடிப்பேன்னா நல்லா நாலு நாளு ஒரு டூரப் போடு..இந்தா இருக்காம்லா, இவன் மொடக்குடிகாரந்தான..முழியப் பாத்தா தெரிதே ..இவனக் கூட்டிட்டுப் போ..இந்தா இருக்கு கேரளா..ஒரு ரெசார்ட்ட போட்டு நல்லா குடி..ஒரு மஸாஜப் போடு…நல்லோரு ஓமனக்குட்டி கிட்டுமெங்கில் கொள்ளாமாயிருக்கும்..எல்லா பயம் மயிரும் ஓடிரும்…”
சரவணனும் நாகராஜனும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.
“என்னடா, டாக்டரே இப்டி சொல்லுகாரேன்னு பாக்கியா? இல்லன்னா சொல்லு..ஒனக்கு ஒரு ஆறு, ஏழு மாத்திர தாரேன்..ரெண்டு மாசம் சாப்பிடு…அதுக்கப் பொறவு செரி ஆவும், இல்லன்னா பழகிரும்…ஹிஹிஹி…”
இருவரும் குழப்பத்தோடு மருத்துவரைப் பார்க்க, அவர் தொடர்ந்தார், “செரி, அத விடு..இப்ப என்ன, ரெண்டு வாரம் சோலிக்குப் போலேல்லா..எத்தன நாளக்கி அப்டி இருப்ப? மொதல்ல நீ ஆபீஸ்க்கு போ..ஒனக்குப் பிடிச்ச வேலதான…நூறு பேருக்கு ட்ரெய்னிங் கொடுக்கவம்லா டே நீ? போய் வேலயப் பாரு…வேறென்ன இன்ட்ரெஸ்ட் ஒனக்கு? மியூசிக், டிராயிங், ஏதும் உண்டா?”
“அது..சார்..புக்ஸ்னா உயிரு சார்..நெறைய எழுதணும்னு ஒரு ஆசயும் இருக்கு…”
“பொறவு என்ன டே..போய் நெறைய படி…எழுத ஆரம்பி…வீட்ல மகாலட்சுமி மாதி பொம்பளப் புள்ள இருக்கால்லா..அவ கூட டெய்லி வெளையாடு…ஒண்ணுல்ல கேட்டியா…நம்ம தா மனசுக்கு மாஸ்டர்..என்ன?”
“செரி சார்..”
மருத்துவர் இரண்டு நாட்களுக்கு மட்டும் மாத்திரை எழுதிக் கொடுத்தார். தூக்கம் வருவதற்காகவும், எண்ண ஓட்டத்தைக் குறைப்பதற்காகவும். தினமும் இரண்டு மாத்திரைகளில் கால் அளவு தான். முதல் நாள் இரவு மாத்திரை போட்டதும் அடித்துப் போட்டது போல தூங்கினான் சரவணன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது திடீரென முழிப்பு வந்தது. கண் திறந்து பார்க்க, ஓரடி தூரத்தில் பெரிதாக ஒரு முகம், அவ்வளவு தத்ரூபமாக அவனைக் கூர்ந்து பார்த்தது. பயந்து போய் முகத்தைத் திருப்பிப் பார்க்க, மேசையின் அருகே இருந்த நாற்காலி தலைமுடியை விரித்துப் போட்டு அவனை நோக்கி நகர்ந்து வந்தது. கண்களை இறுக்க மூடி அப்படியே உறங்கி விட்டான்.
அடுத்த நாள் காலை அதே அறிகுறிகள் இருந்தாலும் மனது தைரியமானது போல இருந்தது. இரவில் தோன்றியது KFC லோகோவில் உள்ள முகம் போல இருந்ததாக நினைத்து சிரிப்பு வந்தது. மீதமிருந்த மாத்திரைகளை பரணில் தூக்கிப் போட்டான். நாகராஜனுக்கு ஃபோன் பண்ணி வரச் சொன்னான்.
“மாப்ள, இன்னிக்கு லீவு போட முடியுமா?”
“என்ன மக்கா? எதுக்கு ல?”
“நீ லீவு போடு…வண்டிய எடு..”
நாகராஜன் விடுப்பிற்குச் சொல்லிவிட்டு பைக்கில் அவனை ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.
“நண்பா, வண்டிய நேர திருச்செந்தூருக்கு வுடு…”
“லே, என்ன மக்கா? டக்குன்னு திருச்செந்தூருன்னு சொல்லுக..”
“நண்பா, நீ போ சொல்லுகேன். தலைவர பாத்து ரொம்ப நாள் ஆச்சில்லா..”
“செரி மக்கா..நானும் போணும்னு நெனச்சேன்..செரி போவோம்..
நீண்ட பயணத்தின்போது மனது லேசானது..நீண்ட உரையாடல்கள்..மனதிற்கு நெருக்கமான நண்பனுடன் அங்கங்கே நிறுத்தி சாயா, உளுந்த வடை என…
கோவிலுக்குச் சென்று முருகர் தரிசனம் முடித்து பிரபல மணி ஐயர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, கோவில் மண்டபத்தில் சென்று இருவரும் படுத்து உரையாடலைத் தொடர்ந்தனர். கடல் காற்று உச்சி வெயிலில் சுகமாக இருந்தது. எங்கும் மயிலிறகுகள், நேர்த்திக் கடன்கள்.
“மணி ஐயர் சாப்பாடுன்னா ஒரு சொகந்தாம் மொக்கா..ஆமா, பிள்ளேள் எப்டிருக்கா மொக்கா? பையன் எப்டி படிக்கான்?” என்று கேட்டான் சரவணன்.
“பரவால்ல டே….செம வாயி கேட்டியா? எங்கப்பாவ பாத்து ‘லே, எவம்ல அது? இங்க வால லே’ன்னு சொல்லுகான்..அவனுக்கு ஓரே காரு ஆசதான்..நூறு கார் பொம்ம வச்சிருக்கான் தெரியும்லா…இன்னொரு நாளு சொல்லுகான், ‘அப்பா, நீங்க பிராண்டி குடிக்காதியோ, அடிச்சு தொவச்சிருவேன்’னு..”
“சூப்பர் மக்கா..சின்னவா என்ன சொல்லுகா?”
“நீ தான டே அதுக்கு காரணமே…சண்ட வந்தா போயி கெட்டிப் புடி..எல்லாஞ் செரி ஆவும்னு நீதான சொல்லுவ..அததா ஃபாலோ பண்ணேன்..இந்தா ஒரு வயசு ஆவப் போது..”
“அது செரி, நீ சும்மாவே தொட்டு வெளயாடுவ..”
“மாப்ள, உன்ட்ட சொல்லணும்னு நெனச்சேன் பாத்துக்க..நீ யாம்ல ரெண்டாவது வேண்டாம்னு சொல்லுக?”
“இல்ல மக்கா..வேண்டாம்னு ஒரு தோணக்கம்…ஏன்னு தெரில…”
“இல்ல நண்பா, நாஞ் சொல்லத கேளுல…நீ கமிட் ஆக வேண்டாம்னு நெனைக்க…பெரியவங்க சொல்லது சும்மால்ல மக்கா..ரெண்டு பிள்ளங்க இருந்தா லைஃப் வேற ஒரு டைரக்சன்ல போவும் பாத்துக்க..எம் பொண்டாட்டி என்ன போலீஸ் ஸ்டேசன் வர கொண்டு போனவதான..இப்ப பாரு..சுத்திச் சுத்தி வாரால்லா…நீ நல்லா யோசி மக்கா..இன்னொரு பிள்ள வந்தா நீ இன்னும் ஒழைக்கணும்லா..அதுக்காவே ஓடுவ..லைப் அவ்ளோதான…பத்மாக்கும் மனசுக்குள்ள ஒரு ஆச இருக்கும் பாத்துக்கோ…நீ எதாம் நெனப்பேன்னு சொல்லாம இருப்பா…”
“ஆமா மக்கா..அவா ரெண்டு மூணு தடவ சொன்னா கேட்டியா..”
“அதாம்ல சொல்லுகேன்…அடிச்சு கெளப்பு டே..நம்ம ஃபரூக்குக்கு இப்ப நாலு பயக்க தெரியும்லா…சவத்துப்பய இன்னும் ஒண்ணு வேணுன்னு நிக்கான்…”
“அது செரி..நமக்கு முதுகெலும்பு அத்துரும்டே…பாப்பம்..”
…
அடுத்த ஒரு வாரத்திற்கு சரவணன் தினசரி செயல்களைக் கொஞ்சம் மாற்றிப் பார்த்தான். காலையில் கொஞ்சம் பேட்மிண்டன், பின் ஜெயமோகன் வலைத்தளம்…அலுவலகத்திற்கும் செல்ல ஆரம்பித்தான்..முழுதாக கவனம் செலுத்தி வேலை செய்ய முடியாவிட்டாலும் முடிந்த அளவு சமாளித்தான். மாலையில் தீவிர வாசிப்பு…முக்கியமாக, அதுவரை குறிப்பெடுத்து வைத்திருந்த யோசனைகளை எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்தான். ஒரு வாரத்தில் அவனது முதல் சிறுகதை ‘தனிமையிருள்’ தயார் ஆனது. நண்பர்களின் வாசிப்புக் குழுமத்தில் அதைப் பற்றி ஒரு கலந்துரையாடலும் நடந்தது. வாழ்க்கையில் ஓரளவிற்குப் பிடி கிடைத்து விட்டதாக உணர்ந்தான்.
“பத்மா, உன்ட்ட ஒண்ணு சொல்லணும்…”
“என்னத்தான்…சொல்லுங்கோ..”
“இல்ல..அது…”
“அட…இதெல்லாம் ஓவருத்தான்..உங்களுக்கு வெக்கம்லாம் செட் ஆகல..”
“ம்ம்ம்..அது…அமுதா இப்பல்லாம் ரொம்ப நேரம் தனியா வெளயாடுகால்லா…”
பத்மா சில நொடிகள் எதுவும் பேசவில்லை. அப்படியே சென்று சுவரில் இருந்த பிள்ளையார் போட்டோவின் முன்னால் நின்று கண்களை மூடிக் கொண்டாள்.
One comment