பரியுடை நன்மான் – வளவ.துரையன் கட்டுரை

ஒரு கருத்தை வெளிப்படையாகச் சொல்லக் கூடாது. ஆனால் அதைச் சொல்லியாக வேண்டும். இந்த நிலையில் அக்கருத்தை மறைபொருளாகச் சொல்லும் வழக்கத்தை நம் முன்னோர் மரபாகவே கடைப்பிடித்து வந்தனர். இதையே மங்கலம், குழுஉக்குறி, இடக்கரடக்கல் என்று இலக்கணம் கூறுகிறது. பெரும்பாலும் துன்பச் செய்தியைத்தான் இப்படி மறைத்துக் கூறினார்கள். செத்தார் என்பதைத் துஞ்சினார், விண்ணுலகு அடைந்தார், காலமானார் என்னும் சொற்களால் இன்றும் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகிறது.

பண்டைய இலக்கியங்கள் இதை இறைச்சி என்றும் குறிப்பிட்டுள்ளன. நவீனத்தில் நாம் படிமம் என்று கூறுகிறோம். சங்க காலத்தலைவி தன் தலைவனுக்கு இழுக்கு நேரும் சொல்லை ஒருபோதும் உரைக்க மாட்டாள். அவன் தவறு செய்தபோதும் அதை வெளிப்படையாகச் சொன்னால் அது அவனின்பால் உள்ள குறையைத் தான் குறிப்பிட்டதாக ஆகிவிடும் எனக் கருதி அதனை மறைத்தே பேசுவாள். ஆனால் அவளிடம் வந்து உரையாடுவோர் அக்குறிப்பை உணரும் தன்மையைக் கொண்டிருந்தனர் என்பதும் தெரிய வருகிறது.

ஐங்குறுநூறு ஓர் அருமையான அகத்துறை இலக்கியம். அதில் தலைவன் ஒருவன் தன் தலைவியைப் பிரிந்து பரத்தையர் இல்லம் சென்று தங்கி விடுகிறான். இது அக்கால வழக்கமாகும். தலைவி தனியே பிரிந்து வருந்திக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது தலைவனிடத்திலிருந்து வந்த சிலர் “அவன் விரைவில் இங்கு வந்து விடுவான் எனக் கூறுகின்றனர். ஆனால் அவன் அவ்வளவு எளிதாக வரமாட்டான் என்பது தலைவிக்குத் தெரியும். அதை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்துப் பேசுகிறாள்.

”அங்கிருக்கும் பரத்தையர் ஊர் முழுதும் தூங்கினாலும் தாங்கள் தூங்காதத் தன்மை கொண்டவர்” என்று மட்டும் கூறுகிறாள். அவர்கள் உறங்காதபோது அவன் எப்படி அவர்களுக்குத் தெரியாமல் வரமுடியும் என்பது மறை பொருளாகும்.

”பரியுடை நன்மான் பொங்குஉளை அன்ன
அடைகரை வேழம் வெண்பூப் பகரும்
தண்துறை ஊரன் பெண்டிர்,
துஞ்சுஊர் யாமத்தும், துயில்அறி யலரே. [வேழப்பத்து—3]

இப்பாடலில் வேழம் என்னும் சொல் வருகிறது. அதற்கு யானை என்று பொருள் கூறுவது வழக்கம். இந்த இடத்தில் வேழம் என்பதற்கு. வேழக்கரும்பு அல்லது கொறுக்கச்சி என்று பொருளாகும். இக்காலத்தில் இது கொறுக்கந்தட்டு என்று வழங்கப்படுகிறது. பத்துப் பாடல்களிலும் இந்த வேழம் குறிப்பிடப்படுவதால் இப்பகுதிக்கு வேழப்பத்து என்றே பெயர் வந்தது. அதேபோல பரி என்பது பெரும்பாலும் குதிரையைக் குறிக்கும் சொல்லாகும். இங்கே மான் என்பது குதிரையைக் குறிக்க பரி என்பது குதிரையின் விரைவைக் காட்டுகிறது. உளை என்பது குதிரையின் தலையில் அணிவிக்கப்படும் சுட்டியாகும். அதுவெண்மையாக இருக்கிறது இப்படித் தமிழ்மொழியின் ஒருசொல் பலபொருள் சிறப்பும் இப்பாடலில் விளக்கப்படுகிறது.

”மிகுந்த விரைவைக் கொண்ட தலைவனின் குதிரையின் நெற்றிச் சுட்டியைப் போல வெள்ளையாகப் பூ பூக்கின்ற வேழம் இருக்கிற குளிர்ச்சியான ஊரை உடையவன் அவன். அங்கு ஊர் தூங்கும்போதும் பெண்டிர் தூங்கமாட்டாரே” என்பது தலைவி கூற்றாகும்.

பரியுடை நன்மான் என்பது தலைவியின் கற்புத் திறத்தைக் காட்டும். அக்குதிரையின் நெற்றிச்சுட்டி போல வேழம் பூ பூக்கும் என்பது பிறமகளிரைக் காட்டும்.

வேழப்பத்தின் இறுதிப்பாடல் மற்றும் ஒரு கருத்தை மறைவாகப் பேசுகிறது.

”அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்,
காம்புகன் டன்ன தூம்புடை, வேழத்துத்
துறைநணி ஊரனை உள்ளி,என்
இறைஏர் எல்வளை நெகிழ்பு ஓடும்மே” என்பது பாடல்.

இதில் ஒரு காட்சி காட்டப்படுகிறது. ”ஆறு சிறிய கால்களையும் அழகிய சிறகுகளையும் உடைய வண்டு, நூறு இதழ்களைக் கொண்ட தாமரைப் பூவில் முட்டைகளை இடுகின்றது. அம்முட்டைகளை அருகில் உள்ள மூங்கில் என்னும் வேழம் அழைக்கிறது”. இக்காட்சியைச் சொல்லி, ”அவற்றை உடைய ஊரைச் சேர்ந்தவன் அவன். அவனையே நினைத்துக் கொண்டிருப்பதால் என் முன்கை வளையல்கள் கழன்று ஓடுகின்றன” என்று தலைவி இப்பாடலில் கூறுகிறாள்.

தன்னை அழகான தாமரைப் பூவில் உள்ள முட்டையாகவும், அதைச்சிதைக்கும் வேழமாகப் பிறமகளிரையும் அவள் மறைவாகப் புலப்படுத்துகிறாள். மற்றொரு பொருளாக, வண்டின் முட்டையாகத் தன் புதல்வனையும், அவனைத் தலைவன் நினைவில் இருந்து பிற மகளிர் மறைப்பதாகவும் கூறவும் வாய்ப்புள்ளது.

ஆக தலைவி, தன் இல்லற வாழ்வுக்கு ஊறு ஏற்படும்போது கூட அதை ஊரார்க்கு வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மறைத்துக் கூறும் திறம் படைத்தவள் என்பதை ஐங்குறு நூறு காட்டுகிறது எனலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.