வார இறுதிகளில் மலையேற்றம் செல்வது வழக்கம். இந்த முறை சேர்ந்தார்ப்போல் நான்கு நாட்கள் விடுமுறை வந்ததால் கார் எடுத்துக்கொண்டு தொலைவிலிருந்த ஒரு மலைப்பகுதிக்கு வந்திருந்தேன். இந்த மலைப்பகுதியைத் தேர்வு செய்யக் காரணம் இருந்தது. இந்த மலைப்பகுதியில் வாழ் நாளை நீட்டிக்கும் மூலிகைகள் கிடைப்பதாக பேச்சு வெகு நாட்களாக நிலவிக்கொண்டிருக்கிறது. எனக்கு அந்த ஐடியா பிடித்திருக்கிறது. சாவே இல்லை. வாழ்ந்துகொண்டே இருக்கலாம். எத்தனை வசீகரமான ஐடியா?அப்படி ஒன்று கிடைத்தால் வரம் தான். பூமி போல் ஒரு கிரகத்தை, எல்லையில்லா பிரபஞ்சத்தை ரசிக்க அனுபவிக்க ஒரு மனித ஆயுள் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்? இந்த மலைப்பகுதிக்கு நான் வருவது இதுவே முதல் முறை. காரை நிறுத்திவிட்டு என் தோள்ப்பையை எடுத்துக்கொண்டு உற்சாகமாக மலையை ஒட்டிய வனத்துள் நுழைந்தேன். சற்று நேரம் வனத்துள் ஊடுறுவினேன். சீரான நடை.
சற்று தொலைவில் ஒரு சிறு கூட்டம். நடுவே ஆறடி நீளம், இரண்டடி அகலத்தில் ஒரு குழி. ஒரு பிணத்தைப் புதைத்துக்கொண்டிருந்தார்கள். நான் அருகே செல்லவில்லை. என் கேமராவின் கண்களால் கொஞ்சம் அருகே சென்று அந்தப் பிணத்தின் முகத்தைப் பார்த்தேன். பெண் பிணம். தூங்குவது போலவே தோற்றம் தந்து மனதைப் பிசைந்தது. அந்தப் பெண் அழகாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.
குழி பிறகு மூடப்பட்டது. மலர்கள் தூவப்பட்டன. சிறு கூட்டம் கலைந்தது.
ஒரு உயிரின் மதிப்பு உண்மையில் என்ன? நடந்து செல்கையில் ஆயிரம் கோடி நுண்ணுயிர்களைக் கொல்கிறேன். அவைகள் உயிர்கள் என்றால் உயிரின் மதிப்பு உண்மையில் என்னவாக இருக்க வேண்டும்? ஒன்றுமில்லாமல் இருக்க வேண்டுமா? நுண்ணுயிர்கள் என்பதால் அவைகளின் உயிர்களுக்கு மதிப்பில்லையா? ஏன் இல்லை? அவைகளுக்கு மனிதர்கள் போல் நீளமான வாழ்க்கையும், மனமும் இல்லை என்பதாலா? நமக்கு ஒரு நுண்ணுயிரின் வாழ்க்கை குறித்து என்ன தெரியும்? புழுவின் உயிரை விட, நத்தையின் உயிர் மதிப்பு மிக்கதா? கேள்விகள் என்னைச் சூழ்ந்தன.
மலைப்பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்த போது ஒரு அழகான நீர்வீழ்ச்சியை காண நேர்ந்து, கண நேர உற்சாகத்தில், நீரில் குதித்து, கரையேறி சுற்றும்முற்றும் பார்த்தேன். பார்த்தபடியே நடந்தேன். எங்கும் மரங்கள், செடிகள், கொடிகள். தங்களுக்குள் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் ஒன்றையொன்று மிஞ்சிவிடும் முனைப்பில் தாறுமாறாக குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்து கிடந்தது. சிலவற்றின் அதீத வளர்ச்சியில், சில சிறிய தாவரங்கள் வளர வழியின்றி துவண்டு விழுந்துகிடந்தன. அவைகளை நசுக்கித்தான் அவற்றைவிடப் பெரிய தாவரங்கள் வளர்ந்து கிடந்தன.
‘வெறும் காடு மட்டும்தானா இங்கே‘ என்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அந்த குடிசையின் உச்சந்தலையிலிருந்து புகை மேலெழும்பியது. அது பரந்த ஆகாயத்தின் எல்லையற்ற பரப்பில் மெல்ல தேய்வுற்று ஒன்றுமில்லாமல் போனது.
நான் மெல்ல முன்னகர்ந்தேன். ஒரு மரத்தின் கிளையொன்றில் மறைந்திருந்தபடி ஒருவன் கீழே தவ்வினான். அவன் தவ்விய இடத்தில் ஒரு பெண் நடந்து போய்க்கொண்டிருந்தாள். அவள் மீது அவன் விழ, இருவரும் நிலத்தில் உருண்டார்கள். அவள் திமிர அவன் அவளை இறுகக் கட்டி அணைத்தான். அவள் கைகளை, இறுகப்பற்றிக்கொண்டான். அவள் தன் உடலை உதறினாள். ஆயினும் அவனின் பிடியிலிருந்து அவளால் தன்னை மீட்டுக்கொள்ள முடியவில்லை என்பதை நான் கவனித்தேன். அந்தப் பெண்ணை உற்று கவனித்ததில், அவள் அந்த பிணத்தின் முக ஜாடையை நூறு சதம் கொண்டிருப்பதை உணர்ந்து சற்றே அதிர்ந்தேன்.
எனக்கு அந்த இருவரின் செயல்களில் விபரீதத்தைவிடவும், விகல்பத்தின் பங்கு அதிகமாக இருப்பதாகப்பட, ஒரு பெண்ணின் இளஞ்சூட்டு உடல் ஒரு ஆணை என்னவெல்லாம் செய்யும் என்பது குறித்து நான் அறிந்திருந்ததன் விளைவாக, ஒரு அணிச்சை செயலாக, நான் அவனிடமிருந்து அவளை மீட்கும் பொருட்டு அவர்களை நோக்கி ஓடினேன். அவன் முகத்தில் ஒரு குத்து விட நான் முயல, அவன் அதை முன்பே கணித்திருக்க வேண்டும். அவன் போக்கு காட்டியதில் என் முஷ்டி நிலத்திலிருந்த பாறையொன்றில் மோதி வலித்தது. அவனின் முக அமைப்பே தடிமனாக இருந்தது. அவன் என் இடுப்பின் கீழ் தன் காலால் வைத்து எத்த, நான் நிலைதடுமாறி விழுந்தேன். கண்கள் இருளடைந்தன. ஆபத்திலிருக்கும் ஒரு அழகான பெண்ணைக் காப்பாற்றக்கூட திராணியற்ற நானெல்லாம் என்ன விதமான………………………………………………………………………
நான் எழுந்தபோது, அவனும் அவளும் அங்கே இல்லை. சற்று நேரத்துக்குப் பிறகு அவள் அந்த குடிசைக்குள்ளிருந்து அழுதபடி வெளியே ஓடினாள். அவள் பின்னால் மிக மெதுவாக அவளையே பார்த்தபடி அவன் குடிசையை விட்டு வெளியே வந்தான். அவன் கையில் ஒரு புத்தகம் இருந்தது. அவன் முகத்தில் லேசான களைப்பு தெரிந்தது. இடையை மறைக்கும் ஒரு அங்கி மட்டுமே அணிந்திருந்தான். அந்த அங்கியைப் பற்றிச் சொல்ல வேண்டும். வானவில்லின் அத்தனை நிறங்களும் அந்த அங்கியில் இருந்தது. அவன் உடலெங்கும் அவளின் நகக்கீரல்கள். உள்ளே என்ன நடந்திருக்குமென்று என்னால் ஊகிக்க முடிந்தது. நான் மயங்கியிருக்கக் கூடாது.
அவன் என்னைப் பார்த்தான். எனக்கு அடிவயிற்றில் ஏதோ செய்தது. அவனின் எத்தலை என் உடலென்னும் மாபெரும் நினைவடுக்கு இன்னும் மறக்கவில்லை போலும். அவன் என்னை அண்டினான்.
“உன் பெயர் என்ன?” என்றான்.
“நீலன்” என்றேன்.
மணிக்கட்டைப் பார்த்துவிட்டு, என் பெயர் எழுதி, பக்கத்தில் 5:02 என்று குறித்துக்கொண்டான்.
“சாத்தியமே இல்லை” என்றேன் தீர்மானமில்லாமல்.
அவன் என்னைக் கேள்வியாய் ஏறிட்டான்.
“அவள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதை நான் என் கண்களால் பார்த்தேன். பிறகெப்படி இங்கே?” என்றேன்.
அவன் என்னை ஏறிட்டான். அவனின் கண்கள் இமைக்கவில்லை. கூர்மையான பார்வையால் என் கண்களை ஊடுறுவிப் பார்த்தான்.
“எனக்கு ஒரு உதவியாளன் தேவைப்படவில்லை என்றால் இந்நேரம் நீ……………” அவன் அந்த வாக்கியத்தை முடிக்காமலேயே கடந்து போனான். அவன் திரும்பத்திரும்ப என் அகங்காரத்தை சீண்டுவதாய்த் தோன்றியது. மயங்கக் கூடாத நேரத்தில் மயங்கிவிட்டபிறகு கோபம் எதற்காகும்?
எனக்கு பசித்தது. அவன் உதைத்ததில் இன்னமும் வலித்தது. வயிற்றின் அமிலம் உடலை இன்னும் இன்னும் பலவீனப்படுத்தியது. அவன் குறிப்பறிந்தது போல், ஒரு களிமண்ணாலான தட்டில் பொறித்த முட்டைகளுடனும், வதக்கப்பட்ட கீரையுடனும் வந்தான்.
விருந்தோம்பல். அதுவும், ஒரு பெண்ணிடம் தன் பலத்தை காட்டியவனிடம்.
இந்த இயற்கையின் வினோதத்திற்கு அளவே இல்லையா என்று தோன்றியது. அவனது விருந்தோம்பலை மறுப்பதா ஏற்பதா என்பது ஊர்ஜிதமாக இல்லாமல் இருந்தது.
“நீ புதியவன். ஆனால் அவள் புதியவள் இல்லை.” என்று துவங்கினான்.
‘என்ன சொல்ல வருகிறாய் நீ‘ என்பதாக நான் அவனை ஏறிட்டேன்.
“இதுகாறும் நான் தனியாக இந்தப் பிரதேசத்தைக் கையாண்டுகொண்டிருந்தேன். ஆனால், உன் வருகை, என்னால் அதிகபட்சமாகக் கையாளக்கூடிய எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது. எனக்கு ஒரு உதவியாளன் வேண்டும். அது நீயாக இருக்கலாம் ஆனால், நீ விரும்பினால் மட்டும் தான்” என்றான் தொடர்ந்து.
நான் ஏதும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்தேன்.
“நீ என்னுடன் சேர விரும்பவில்லை எனில், உன்னை அவளாக்கி அவளை நீயாக்கிவிடுவது தான் எனக்கிருக்கும் ஒரே வழி” என்றான்.
“எனக்கு சுத்தமாக எதுவும் புரியவில்லை. கொஞ்சம் தெளிவாகச் சொல்” என்றேன் கெஞ்சும் குரலில்.
“கேள். இந்தப்பிரதேசத்தில் காலம் ஒரு பொறியாக இருக்கிறது. துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்துவிடும். நீ பார்த்தது உண்மை தான். அவள் சில மணி நேரம் முன்பு மரணித்தாள். ஆனால், காலம் அவள் இந்த பிரதேசத்தில் காலடி எடுத்து வைத்த கணத்திற்கே மீண்டதில், அவள் மீண்டுவிட்டாள். இனி மறுபடி மரணிப்பாளா தெரியாது“
அவன் ஏதோ உளறுகிறான் என்றே தோன்றியது எனக்கு. ஒரு சைக்கோவை சந்தித்துவிட்டேன் என்று என் உள்ளுணர்வு சொன்னது. காட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். என் அட்ரினலின் விழித்துக்கொண்டது. இரண்டு முறை விக்கினேன். அவன் தண்ணீர் எடுத்து வர குடிசைக்குள் சென்றான். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி நான் காட்டுக்குள் ஓடினேன். அவன் என்னைப் பின்தொடர்ந்து வரவில்லை. ஏன்?
நான் ஒடிக்கொண்டே இருந்தேன். எப்படியாவது மலையின் விளிம்பை நெருங்கி என் காரை அடைந்துவிட்டால் திரும்பிக் கூட பாராமல் வீட்டுக்கு திரும்பிவிட வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தேன். ஆனால் எவ்வளவோ ஓடியும் மலையின் விளிம்பே தெரியவில்லை. சில சிறு குன்றுகளைக் கடந்தேன். ஒரு குளத்தை அடைந்தேன். உண்மையிலேயே தாகம் எடுத்தது. குளத்தில் தெளிவான நீர் இருந்த பகுதியில் உள்ளங்கையால் நீரள்ளி அருந்தினேன். அவ்வளவு தான் நினைவிருந்தது. சற்றைக்கெல்லாம் என் கண்கள் இருளடைந்தன.
நான் கண்விழித்தபோது எவ்வித சேதாரமும் இல்லாமல் அதே இடத்தில் முழுமையாகக் கிடந்தேன். ஆறொன்று என் பாதையில் வந்தது. உடலெங்கும் அதுகாறும் இருந்த களைப்பும் வியர்வையும் அப்பிக்கிடக்க, உடலைச் சுத்தம் செய்யும் எண்ணத்தில் ஆற்றில் இறங்கினேன். கால் வழுக்கி இடறி விழுந்து நீருக்குள் சில நொடிகள் தொலைந்து, என்னை நானே மீட்டெடுத்து ஆற்றின் மறுபக்கம் கரை ஏறியபோது அந்தக் கரையை அதற்கு முன்பும் எங்கோ பார்த்த நினைவிருந்தது.
தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அந்த குடிசையின் தலையிலிருந்து புகை!
அருகிலிருந்த மரத்தின் கிளையொன்றில் மறைந்திருந்தபடி ஒருவன் கீழே தவ்வினான். அவன் தவ்விய இடத்தில் ஒரு பெண் நடந்து போய்க்கொண்டிருந்தாள். அவள் மீது அவன் விழ, இருவரும் நிலத்தில் உருண்டார்கள். நான் முன்பு கண்ட காட்சிகளையே திரும்பவும் காண நேர்வது என்ன வினோதம்?
நான் இம்முறை அவளை மீட்கும் பொருட்டு அவனிடம் மல்லுக்கு நிற்கவில்லை. திமிறும் அவளை தன் இருகைகளாலும் தூக்கித் தோளில் ஏந்திக்கொண்டு குடிசைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டான். சற்று நேரத்துக்குப் பிறகு அவள் கண்ணீருடன் அந்த குடிசையை விட்டு வெளியேறி ஓடினாள். பின்னாலேயே அவன் வெளியே வந்தான். என்னைப் பார்த்தான்.
“மாலை மணி ஐந்தாகிவிட்டது” என்றான்.
எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. முதலில் அவள் யார்? அவளின் பிணத்தை மண்ணில் இட்டு மூடினார்கள். அவள் உயிருடன் எப்படி எழுந்து வந்தாள்? அவளுக்கு அந்த குடிசையில் அந்த பலவந்தம் முதல் முறை நடந்துவிட்ட பிறகும், மீண்டும் அதே இடத்திற்கு அவள் ஏன் வந்தாள்? மீண்டும் அவன் அவளை ஆக்ரமிக்க அவளே ஏன் வழி செய்தாள்? தான் பலவந்தப்படும் ஒரு வாய்ப்பை அவளே ஏன் அவனுக்கு வழங்குகிறாள்?
“உன்னை உடல் வலுவால் வெல்ல எனக்குத் திராணி இல்லை. ஆனால் இது பாவம். ஒரு பெண்ணை நீ இப்படியெல்லாம்….. ” என்னால் அதற்கு மேல் அதை விவரிக்க முடிந்திருக்கவில்லை..
“கேள். என்னாலும் இதைத் தனி ஆளாக இனியும் தொடர்ந்து செய்ய இயலாது. உதவிக்கு ஒரு ஆள் தேவை. நீ வருகிறாய் எனில், உன்னை அவளாக்க வேண்டியதில்லை“
“அவள் யார்? பேயா? அவள் இறக்கவில்லை என்றால் அவள் பிணம் மண்ணுக்குள் புதைந்ததை நான் என் கண்ணால் பார்த்தேன். அது எப்படி?”
“அவள் இறந்தது உண்மை“
“இறந்தவள் மீண்டு வந்தாளா? பிணங்களை உயிர்ப்பிக்கிறாயா? அல்லது அவள் இரட்டையர்களில் ஒருத்தியா?”
“இரண்டுமே இல்லை. நீ இங்கு வந்தது இரண்டாவது முறை. அதை கவனித்தாயா?”
நான் ஆமோதிப்பாய் தலையசைத்தேன்.
“நீ இன்னும் பல ஆயிரம் முறை இங்கே வரப்போகிறாய். அது தெரியுமா?”
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அது எப்படி சாத்தியம்? அப்படியானால் நான் என் வீடு திரும்பப்போவதில்லையா?
“என்ன உளறுகிறாய்?”
“ஆம். காலம் இங்கே ஒரு பொறியாக இருக்கிறது. அதாவது டைம் ட்ராப். யார் இதை இங்கு இப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை. இங்கே பலர் சிக்குண்டு இருக்கிறார்கள். அந்தப் பெண்ணும் அப்படிச் சிக்கியவள் தான். இதிலிருந்து மீண்டு வெளியே செல்ல வாய்ப்பிருக்கிறது என்று சிலர் துவக்கத்தில் நம்பினார்கள். அவர்கள் இந்தப் பிரதேசத்தின் விளிம்புகளில் எங்கேனும் வெளியேறும் நுழைவாயில் இருக்கிறதா என்று சோதிக்கவும் செய்தார்கள். ஆனால் இதைச்சொல்லும் இக்கணம் வரை ஒருவர் கூட வெளியேறியதில்லை. வெளிச்செல்ல வாய்ப்பில்லை என்று தெரிந்த பிறகு தான் நான் இதைச் செய்கிறேன்.”
“எதை?”
“அவர்களின் நினைவுகளை அழிப்பது“
“என்ன?”
“ஆம். நீ பலவற்றை கவனிக்கவில்லை என்று ஊகிக்கிறேன். வெளியே செல்ல வழியில்லை. திரும்பத்திரும்ப நடக்கும் ஒரே விதமான நிகழ்வுகள். நீ சற்று யோசித்துப்பார். ஏற்கனவே நடந்த ஒன்று திரும்பத்திரும்ப கோடி முறை உனக்கு நடந்தால், உன் மன நிலை எப்படி இருக்கும்? ஒரு நாளின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துவது எது? சுவாரஸ்யம். அது இல்லையெனில் என்னாகும்? அவளுக்கு இறப்பே இல்லை. இங்கிருக்கும் யாரும் முதுமையடையப்போவதுமில்லை. “
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதனால் தான் மண்ணுள் புதையுண்டவள் உயிருடன் மீண்டாளா? அவனிடம் மீண்டும் மீண்டும் சிக்குகிறாளா?
“ஆனால், ஏன் நினைவுகளை அழிக்க வேண்டும்?”
“நீ ஒரு கண்காட்சிக்கு செல்கிறாய். கண்காட்சியின் முடிவில், மீண்டும் கண்காட்சியை முதலிலிருந்து பார்க்கச்சொன்னால், உன்னால் அந்த கண்காட்சியை எத்தனை முறை ரசிக்க முடியும்?”
“இரண்டு மூன்று முறைக்கு மேல் சலித்துவிடும்“
“அதுதான் இங்கும். காலப்பொறியானது இந்தப் பிரதேசத்தில் சிக்குண்டவர்களை மீண்டும் மீண்டும் பார்த்ததையே பார்க்கவும், கடந்ததையே கடக்கவும் நிர்பந்தப்படுத்துகிறது. இதிலிருந்து மீள இரண்டே வழி தான்“
“என்ன அது?”
“ஒவ்வொரு முறை காலப்பொறி மீள்கையிலும், அதை அப்போதுதான் முதன்முதலில் எதிர்கொள்வதாக பாசாங்கு செய்வது. அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல, இந்த பிரதேசத்தில் சிக்குண்ட அனைவருக்கும் நான் தருவது இதைத்தான். ஒவ்வொரு முறை கண்காட்சி முடிந்து மீண்டும் துவங்குகையிலும், அதுகாறும் பார்த்ததையெல்லாம் மறக்கச்செய்துவிட்டால், அந்தக் கண்காட்சி புதியதாக சுவாரஸ்யம் கூட்டுவதாகத்தானே அமையும்?”
நான் ஆமோதிப்பாய்த் தலையசைத்தேன்.
“அப்படிச் செய்வதால், அவளுக்கு இந்தப் பிரதேசத்தின் மீட்சியற்ற செக்குமாட்டுத்தனம் செக்குமாட்டுத்தனமாகவே தெரியாது. அவளைப்பொருத்தவரை, இந்தக் கண்காட்சியை அவள் பார்ப்பது ஒரு முறை தான். தான், முதல் முறையாகத்தான் இந்தக் கண்காட்சியைப் பார்க்கிறோம் என்கிற எண்ணத்தில் அவள் ஒவ்வொருமுறையும் இந்தக் கண்காட்சியை ஒவ்வொரு விதமாய்ப் பார்க்க நான் வழி செய்கிறேன். “
“சரி. புரிகிறது. அது என்ன இரண்டாவது வழி?”
“இந்தக் கண்காட்சியின் அழகில் தொலைந்து விடுவது. அதைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன். அவள் போன்ற எண்ணற்றவர்களை இவ்விதம் கண்காட்சியில் தொலைய வைப்பதே எனது கண்காட்சி ஆகிவிடுகிறது. இவர்களை மேலாண்மை செய்வதிலேயே என் காலம் சுவாரஸ்யமாய்க் கழிகிறது. ஒவ்வொருமுறை அவர்கள் அவர்களுக்கான கண்காட்சிகளை ஒவ்வொரு விதமாக எதிர்கொள்வதை வேடிக்கை பார்ப்பதில், எனக்கு சுவாரஸ்யம் கூடுகிறது. அவள் போல் இப்பிரதேசத்தில் சிக்குண்டவர்கள் ஒவ்வொருவரும் எப்போது இந்த பிரதேசத்தில் நுழைந்தார்கள் என்பதை நான் குறித்து வைத்திருக்கிறேன். அந்த நேரம் வருகையில், அவர்களின் நினைவுகளை நான் அழித்துவிடுகிறேன். இதன் மூலம் காலப்பொறியின் அந்த இழையில் இந்தக் காடு அவர்களுக்கு புதியதாகிவிடும். ஆனால், காட்டுக்கு அவர்கள் புதியவர்களல்ல“
அவன் சொன்னதைக் கேட்க எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. காலப்பொறி அதாவது டைம் ட்ராப் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவெல்லாம் அறிபுனை கிறுக்கர்களின் அதீத கற்பனை என்றே நினைத்திருந்தேன். நிஜமாகவே அப்படி ஒன்றில் நானே சிக்கிக்கொள்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.
“எல்லாம் சரி. ஆனால், நீ இந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேற ஏன் முயற்சிக்கவில்லை? இப்படி இந்தக் காட்டில் காலப்பொறியில் சிக்குண்டு உன் அசலான வாழ்வை வாழமுடியாமல் இருப்பது குறித்து உனக்கு வருத்தமில்லையா?” என்றேன் நான்.
“அசலான வாழ்க்கை என்றால் என்ன? பூமியில் மானுட வாழ்வைச் சொல்கிறாயா?” என்றான் அவன்.
நான் என்ன பதிலுரைப்பது என்று தெரியாமல் ஆமோதிப்பாய்த் தலையசைத்தபடி அவனையே உற்றுப்பார்த்திருந்தேன்.
“உண்மையில் நீ குறிக்கும் அந்த அசலான வாழ்வும் கூட ஒரு வகைக் காலப்பொறிதான் என்பதை உணர உனக்கு இன்னும் என்னவெல்லாம் தேவைப்படும்? என்ன இருந்தால் நீ அதைப் புரிந்துகொள்வாய்? பிறந்து, வளர்ந்து, அடுத்தவனுக்கு ஏதோவோர் வகையில் பயன்பட்டு, அதன் மூலம் பொருள் ஈட்டி, பிள்ளை குட்டி பெற்று, அவர்கள் வளர துணை நிற்பதிலேயே இளமையை வீணாக்கி, முதுமை அடைந்து, இறந்து, மீண்டும் பிறந்து, வளர்ந்து………. பிறப்பை, இந்த பிரதேசத்துள் நுழைவதாயும், இறப்பை காலப்பொறியின் இறுதிக்கட்டமென்றும் எடுத்துக்கொண்டால் மானுட வாழ்வும் இந்தப் பிரதேச வாழ்வும் ஒன்று தான். மானுட வாழ்விலும் நீ இதையே தான் நிகழ்த்துகிறாய். அறுபது வருட வாழ்வை, வெவ்வேறு செயல்பாடுகளால் இட்டு நிரப்பிக்கொள்கிறாய். சிரமேற்கொண்டு உனக்கு நெருக்கமான அர்த்தங்களைக் கொண்டு நிரப்பிக்கொள்ள முயல்கிறாய். அதன் மூலம், வாழ்வனுபவத்தை சுவாரஸ்யமாக்க முயல்கிறாய். அல்லது அடுத்தவர்களை மேலாண்மை செய்வதிலேயே உன் காலத்தை இட்டு நிரப்பிக்கொள்ள முயல்கிறாய். இவையெல்லாவற்றின் நோக்கம் தான் என்ன? காலம் கடத்துவது. அதுமட்டும் தான் நோக்கம். அதையே இந்தக் காட்டுக்குள் மேற்கொள்வதில் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது? ” என்றான் அவன்.
அவன் சொன்ன எதையும் மறுக்க என்னிடம் எவ்வித வலுவான வாதமும் இல்லை என்பதே என்னை பலவீனப்படுத்துவதாக இருந்தது.
வாழ்க்கை என்று எதை நாம் குறிக்கிறோம்? சில மணி நேரங்களே உயிர் வாழும் உருவத்தில் மிகச்சிறியதான பூச்சிகளுக்கு வாழ்வனுபவம் என்னவாக இருக்கிறது? அவ்வாழ்வனுபவத்தில் ஏன் மனித இனம் தேடும் அர்த்தங்கள் இருப்பதில்லை? மேற்கொள்ளும் பயணங்கள் இருப்பதில்லை? ஆனால் அது குறித்தெல்லாம் அந்தப் பூச்சிகள் அலட்டிக்கொள்வதும் இல்லை. இந்த பிரதேசத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட ஒரு தேனீ, தான் பல்லாயிரம் ‘தேனீக்களின் வாழ்வுகளை‘ வாழ்ந்து முடித்த பின்னும் வாழ்ந்துகொண்டிருப்பதை உணர்ந்திருக்குமா?
அதன் பார்வையில், தான் சற்று முன் பூவிலிருந்து எடுத்த மகரந்தத்தை ஏற்கனவே பல்லாயிரம் முறை எடுத்தாகிவிட்டது என்பதை அறியுமா? இவை எதையும் அறியாமல்தான், இவை எதையும் பொருட்படுத்தாமல்தான் தேனியானது இந்தப் பிரதேசத்தில் தன் வாழ்வை வாழ்ந்து முடிக்கிறது. முடிக்கும் தருவாயில் மீண்டும் பிறக்கிறது. அதன் நினைவுகளை அவன் அழிப்பதில்லை. ஏன்? அதன் நினைவுகள் அதற்கு ஒரு பொருட்டே இல்லை. அந்த நினைவுகள், அதன் வாழ்வின் மையமாக இருப்பதில்லை.
நினைவுகள்! ஞாபகங்கள்!
மனிதர்களின் நினைவடுக்கு என்பது தொடர்ச்சியாக, படிப்படியாக, ஒவ்வொரு புள்ளியாகச் சேர்த்து இணைக்கப்பட்ட ஒரு நேர்கோடு. மொழியின் மூலமாக, ஓலைச்சுவடிகளின் வாயிலாக, காகிதங்களின் வாயிலாக, கல்வெட்டுக்களின் வாயிலாக பரிணாம வளர்ச்சி கண்டுவிட்ட ஒரு வெறும் கருவி. அந்தக் கருவியுடன் மனித இனம் தோன்றிடவில்லை. துவக்கத்தில், தேனீயைப்போலத்தான் மனிதனும் தோன்றியிருக்கிறான் என்னும்போது மிகவும் தற்செயலாக, ஒரு வெறும் பக்கவிளைவாகத் தோன்றிவிட்ட, பரிணாம வளர்ச்சி கண்டுவிட்ட ஒரு கருவிக்கு சரியான விலை என்னவாக இருக்க முடியும்? ஒரு விரலின் வீக்கத்திற்காய், ஒரு முழு உடலையும் வீங்க வைப்பதென்பது என்ன விதமான விளைவுகளை உருவாக்கவல்லது?
“இப்போது இந்தப் பிரதேசத்தில் நுழைந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக யாரேனும் இந்தப் பிரதேசத்தில் நுழைந்தபடியே இருக்கிறார்கள். அவர்களை நான் தனியனாகக் கையாள்வது சிரமமாக இருக்கிறது. என்னதான் இது, காலப்பொறியானாலும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், என்னால் எத்தனை பேரைக் கையாள முடியுமென்று ஒரு வரையறை இருக்கிறதல்லவா? அதை நான் எப்படி மீற முடியும்? அதனால் இப்போது எனக்கு உதவி தேவைப்படுகிறது. நீ எந்த வழி செல்ல இருக்கிறாய்? மேலாண்மை செய்து காலம் கடத்த விரும்புகிறாயா? அல்லது, ஒவ்வொருமுறையும் இந்த பிரதேசத்தை புதிதாகப் பார்த்தே காலத்தை கடத்த விரும்புகிறாயா?” என்றான் அவன்.
“ஐயோ கடவுளே! இப்படி ஒரு இக்கட்டில் வந்து சிக்குவேன் என்று கனவிலும் நினைத்திடவில்லை” என்றேன் நான் சோர்வு தழுவிய குரலில்.
“யார் கண்டது? அந்தக் கடவுளே கூட இப்படியொரு இக்கட்டில் சிக்கிக்கொண்டவன் தானோ என்னவோ” என்றான் அவன்.
“நான் மேலாண்மையின் மூலம் காலம் கடத்துகிறேன்” என்றேன்.
“சபாஷ்.. இன்றிலிருந்து நீ என் உதவியாளன். வா ..என்னுடன்” என்றுவிட்டு அவன் என்னை குடிசைக்குள் அழைத்துப்போனான். அணிவதற்கு சில மேலாடைகள் தந்தான். அவைகளிலும் வானவில்லின் அத்தனை நிறங்களும் இருந்தன.
அங்கு வைத்து எப்படி பின் மண்டையின் ஓரிடத்தில் தாக்கி சமீபத்திய நினைவுகளை அழிப்பது என்று கற்றுக்கொடுத்தான். அதையும் மீறி எவரேனும் எதையேனும் நினைவு வைத்திருப்பின் அதை ‘கனவென்றோ‘, ‘அதீதக் கற்பனையென்றோ‘ சொல்லி மூளைச்சலவை செய்யவும் அவனிடம் பயிற்சி பெற்றேன். பிறகு அவன் வைத்திருந்த புத்தகத்தை என்னிடம் நீட்டினான். அதில் அந்த பிரதேசத்திலிருக்கும் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்கப்பட்ட இடமும், நேரமும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிறிது சிறிதாக அந்தப் பிரதேசத்தின் ஒழுங்கு எனக்குப் பழக்கமாகிப்போன ஒரு நாளில் அவன் எதிர்பாராத நேரத்தில் அவனது பின் மண்டையில் ஓங்கி அடித்தேன். அவன் மயங்கி விழுந்தான். நினைவு திரும்பும் போது அவனும் இந்த பிரதேசத்திற்கு புதியவனாகிவிடுவான். அவன் மீது அவன் எனக்களித்த வானவில்லின் அத்தனை நிறங்களும் கூடிய ஆடையை வீசினேன். ஓரினச்சேர்க்கையாளர்களின் குறியீடு எனக்கெதற்கு. நான் தேடியது வாழ் நாளை நீட்டித்துக்கொள்ள ஒரு தீர்வை.
நான் அருகாமையிலிருந்த அந்த மரத்தின் கிளையில் ஏறி அமர்ந்து கொண்டேன். அவள் வரக் காத்திருந்தேன்.
என் மூளையில் திட்டம் தெளிவாக இருந்தது. காலப்பொறிக்குள் இனி நோயும் இல்லை, முதுமையும் இல்லை, மரணமும் இல்லை. உடன் ஒரு பெண் இருப்பின் எத்தனை அழகாய் இருக்கும்? இந்தப் பிரதேசம் காலத்தைத் திகட்டத்திகட்ட வழங்க இருக்கிறது. தர்க்க ரீதியாய்ப் பார்க்கின் இத்தனை நீளமான காலத்தைக் கடத்தத் தேவையான அனுபவத்தை, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவரைக் காட்டிலும், வெவ்வேறு பாலினத்தைப் சேர்ந்த இருவரால் பெறவே அதிகப்படியான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இது உண்மையில்லை என்று எப்படிக்கருத இயலும்? பூமியில் முதன் முதலாய் உதித்தது பெண் இனம். பின் அதுதான் ஆண் இனமென்று ஒன்று உருவாகக் காரணமாகவும் இருந்தது. முற்றிலும் ஒரே பாலினம் நீண்ட நெடுங்காலத்திற்கு சாத்தியமெனில், ஆண் இனம் என்ற ஒன்றே உருவாகியிருக்க வேண்டியதில்லையே.
அவள் வருவாள். அவள் மீது நான் தாவி ஆட்கொள்வேன். அவள் நினைவுகளை நான் அழிக்கப்போவதில்லை. அவள் நினைவுகளை மட்டும் நான் அழிக்கவே போவதில்லை.