முத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை

வாசலில் இருந்த ஒற்றைத் தூணைப் பிடித்துக் கொண்டு நின்றுகொண்டு முத்தாபாய் காத்திருக்கிறாள். யாருக்காக என்று அவளுக்கே தெரியாது. அதற்குள் உள்ளே இருந்து அம்சவேணியின் குரல் கேட்டது.

“முத்தா, வாசலுக்குப் போயாச்சா?” “ஆமாம்மா, இங்கதான் நிக்கறேன்” “ஐஞ்சரை மணிக்கெல்லாம் வரவேண்டியது; காப்பித்தண்ணியைக் குடிக்க வேண்டியது; முகம் கழுவி பௌடர் பூசிக்கிட்டு தலையை வாரிப் பூ வைச்சுக்கிட்டு சரியா ஆறு மணிக்கு வாசல்ல போயி அந்தத் தூண் எங்க உழுந்திடப் போவுதுன்னு அதைப் புடிச்சிக்கிட்டு நிக்க வேண்டியது; ஏழு மணிக்கு தான் வருவ”

நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த சேதுராமனின் காதிலும் விழுந்தது. “ஏங்க நான் சொல்றது காதுல விழுந்ததா?” “தெனம்தான் சொல்ற; அவளுக்கு ஏதோ பராக்கா இருக்கு; அதான் போயி நிக்கறா; உடு” ”ஏன் உள்ள ஒக்காறது? டிவி பாக்கறது?” “ஏழு மணிக்கப்பறம்தான் பாக்கறாள; ரொம்ப நேரம் பாத்தா அதுக்கும்தான் எதாவது சொல்ற” அம்சவேணி ஏதும் பதில் சொல்லவில்லை.

இரவு சிற்றுண்டிக்கு சப்பாத்தி செய்ய மாவு பிசைய உட்கார்ந்தாள். தண்ணீரை ஊற்றி, உப்புப் போட்டுக் கொண்டே, ”கால்தான் வலிக்காதோ” என்றாள். “வலிச்சா ஒக்காந்துக்கிட்டுப் பாப்பா; நீ கவலப்படாத” “அப்படி என்னதான் பாக்கறா?” “நீ வேற, மாடி கட்டியிருந்தாலும் அங்க நின்னு சீதா மாதிரி பாக்கலாம்” “அது யாரு சீதா?” ஜனகன் பொண்ணு, மிதிலையில மேல் மாடத்துல நின்னு பாத்தா. அப்பதான ராமன் வந்தான்.

“இந்த வக்கணப் பேச்சுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல; கதை எழுதி விருது வாங்கினா போதுமா? மேடையிலப் பேசினா எல்லாம் வந்துடுமா?” “இப்ப என்னா வரணும்ற?” “எனக்கு ஒண்ணும் வர வாணாம். ஒரே ஒரு பொட்டிக் கடையைத்தான் வச்சிக்கிட்டு இருக்கோம். இந்தப் பொண்ணக் கரையேத்தற வழியைப் பாருங்கன்னு சொல்றேன்” “ஏன் போன வாரம் கூடத்தான் ஒருத்தன் வந்தான்” “சரி, வந்தவங்ககிட்ட அப்படிச் சொல்லணுமா?” “வேற வழி?”

“ஒடையார! அருமையான ஜாதகம் இது. மூல நட்சத்திரம்; ஆண் மூலம் அரசாளும்னு சொல்வாங்க; பையன் செதம்பரத்துல பாங்கில இருக்கான். நம்ம பொண்ணும் புவனகிரிதான? வேலையை மாத்திக்கினா மாத்திக்கலாம். இல்லன்னா அங்கேந்தே தெனம் வந்துட்டுப் போலாம்.” என்றார் திருமணத் தரகர் சொக்கலிங்கம். ”சரி சொக்கு, அவங்க ஜாதகம் பாத்துட்டாங்களா?” “அவங்க பாத்துட்டாங்களாம்; நீங்க சரின்னு சொன்னா அடுத்தவாரம் பொண்ணு பாக்கக் கூப்பிடலாம்”.

சேதுராமன் வழக்கமாகப் பொருத்தம் பார்க்கும் ஜோசியரிடம் போய்ப் பார்த்தார். பொருத்தமாக இருந்தது. சொன்னபடி அடுத்தவாரம் வந்தது. பையனுடன் அப்பா, அம்மா, அண்ணன், தரகர் சொக்கு என்று நான்கு பேர் வந்தனர். முத்தாபாய் தழையத்தழைய பச்சை வண்ணச் சேலையுடன், அளவான நகைகளுடன், நெற்றியில் திலகத்துடன், தட்டில் இனிப்பும் பலகாரமும் எடுத்து வந்து கொடுத்தாள். பார்த்தாலே பிடித்துப் போகும் அமைதியான அழகு உண்டு அவளிடத்தில்.

‘என்னாடா, நல்லாப் பாத்துக்க” என்று அண்ணன் கேலி பேசினான். இனிப்பைத் தின்றுகொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். ”மாப்பிள்ளைக்குப் பொண்ணப் புடிச்சுப் போச்சு” என்றார் சொக்கு. “அப்பறம் என்ன? நீங்கதான் பொண்ணக் கேக்கணும்?” என்றார் பையனின் அப்பா. முத்தாபாய் எழுந்து உள்ளே செல்ல அம்சவேணியும் சென்றாள். “எங்களுக்குப் புடிச்சிருக்குது; எங்களுக்குப் புடிச்சிருந்தா முத்தாபாயிக்கும் புடிச்ச மாதிரிதான்” என்றார் சேதுராமன்.

“ம்.. மேல சொல்லுங்க; அடுத்து நிச்சயம்தான்” என்றார் பையனின் அப்பா. சற்று நேரம் எல்லாரும் பேசாமல் இருந்தனர். மின்விசிறிக் காற்றில் மாட்டப்பட்டிருந்த காலண்டர் ஆடிக்கொண்டிருந்தது. சேதுராமன் ஆரம்பித்தார். “நான் சொல்றேன்னு நீங்க தப்பா நெனச்சுக்கக் கூடாது?” “அதெல்லாம் பரவாயில்ல எதுவானாலும் சொல்லுங்க” என்றார் பையனின் அப்பா.

“ஒண்ணும் இல்ல; இந்த வீடுதான் எங்களுக்கு இருக்கற ஒரே சொத்து. நான் ஒரே ஒரு பொட்டிக்கடையை வச்சு ஓட்டிக்கிட்டிருக்கேன். முத்தாவுக்கு வேல கெடச்சதால இப்ப கொஞ்சம் சமாளிச்சிக்கிட்டிருக்கேன். அவ இல்லாட்டா சங்கடம்தான். அதால நீங்கப் பெரிய மனசு செஞ்சு கல்யாணம் ஆயிட்டா கூட மாசம் பத்தாயிரம் அவ எங்களுக்குக் கொடுக்கச் சம்மதிக்கணும்” கேட்ட பையனின் அப்பாவின் முகம் மாறியது. அவர் சொக்குவைப் பார்த்தார்.

சொக்கு சேதுராமனைப் பார்த்தார். இதை ஏன் என்னிடம் முன்கூட்டியே சொல்லவில்லை என்று சொக்குவின் பார்வை கூறியது. “இதைக் கல்யாணம் ஆனதுக்கப்பறம் சொன்னா சரியா இருக்காது, அதாலதான் முன்னாடியே சொல்லிட்டன்” என்றார் சேதுராமன். “ஆமாங்க. ஒங்களுக்கும் ஒரே பொண்ணுதான? இதெல்லாம் சகஜம்தான்” என்று பையனின் அப்பா சொல்ல, பையனின் அம்மாவோ, “எல்லாம் நல்லா முடியட்டுங்க; நாங்களும் ஜாதகப் பொருத்தம் பாத்துட்டு சொல்றோம்” என்றார்’

“அப்ப நீங்க பொருத்தம் பாக்கலியா” என்று சேதுராமன் கேட்டார். “இல்லீங்க” என்று பதில் வந்தது. அவர்கள் கிளம்பிச் சென்றபின், ‘ஏன்யா சொக்கு? அவங்க ஜாதகம் பாத்துட்டாங்கன்னு சொன்னியே” என்று கேட்டார் சேதுராமன். “ஆமாம், அப்ப அப்படித்தான் சொன்னாங்க” ”இப்ப ஏன் இத மாதிரி பேசறாங்க” “புரியலீங்களா? அவங்களுக்கு இஷ்டம் இல்லன்னு அர்த்தம்; அது சரிங்க, நீங்க ஏன் மாசாமாசம் பணம் குடுக்கணுன்ற விசயத்த எங்கிட்ட சொல்லல?”

”சரி பொண்ணு புடிச்சிருந்தா சொல்லிக்கலாம்னு நெனச்சிருந்தேன்” அதற்குள் உள்ளிருந்து வந்த அம்சவேணி “இனிமே பொண்ணு பாக்கறதுக்கு முன்னாடியே சொல்லிப்புடுங்க” என்றாள்.

”அப்பாவை நினைத்தாலும் பாவமாய் இருந்த்து முத்தாபாய்க்கு, “நாமளும் கல்யாணம் ஆயிப் போயிட்டா அவரு எப்படிக் குடும்பத்தை நடத்துவாரு? நான் படிச்சு முடிக்கறவரை கூட கடை நல்லா ஓடிக்கிட்டிருந்ததுதான்; அப்பறம் இந்த மாலு எல்லாம் வந்திச்சா? அதால அப்பாவோட கடை போல இருக்கறப் பொட்டிக்கடையெல்லாம் படுத்துடுத்து. அப்பாவோட நிபந்தனைக்கு யாராவது ஒரு ராமன் இல்ல; ராவணன் கூடவா வரமாட்டான்?” என்றெல்லாம் நினைத்துக் கொண்டு முத்தாபாய் காத்திருக்கிறாள்.

தனியார் பள்ளியின் பேருந்து ஒன்று போகும். ‘ணங்’ ’ணங்’ என்று வாணலியைத் தட்டி ஓசை எழுப்பியபடி நிலக்கடலை விற்பவன் வண்டியைத் தள்ளிக்கொண்டு போவான். ராயல் என்ஃபீல்டு வண்டியில் ஒருவர் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போவார். இதெல்லாம் கிழக்கேயிருந்து வருபவை. மேற்கேயிருந்து நான்கு எருமை மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற சிறுவர் திரும்புவார்கள். காக்கைக் கூட்டமொன்று பறந்து வந்து எதிரே செல்லும் மின்கம்பிகளில் உட்கார்ந்து சற்று நேரம் ஓய்வெடுப்பது போல இருந்து பின் மீண்டும் பறந்து செல்லும். இந்த ஐந்து வினைகளும் சற்று முன்பின் நடக்கும். எல்லாம் அந்த ஆறுமணியிலிருந்து ஏழு மணிக்குள்தான். அதன்பின் முத்தா பாய் உள்ளே செல்வாள்.

கடந்த வாரம் மதியம் அலுவலகத்தில் உணவு வேளையில் உடன் பணியாற்றும் கோபால் கேட்டது ஞாபகம் வந்தது. “என்னா முத்தா, இந்த தடவையும் வழக்கம் போலத்தானா?” என்று கேட்டான் சிரித்துக் கொண்டே. “ஆமா, ஆமா” “என்னா கண்டிஷன் பெயிலா?” “இல்ல, கண்டிஷன் ஜெயில். ஆமா ஒங்களுக்கு யாரு சொன்னது? சொக்கலிங்கம் எங்கத் தெருவிலதான் இருக்காரு. காலை நடையிலச் சந்திப்போம். வருத்தமாத்தான் சொன்னாரு அவரும்.”

“சரி, அவரு ஒங்களுக்கு என்னா சொன்னாரு” “நல்ல ஜாதகம் அமையலன்னாரு” “சீக்கிரம் ஆனா ஒங்க அம்மாவுக்குக் கொஞ்சம் நிம்மதி” “ஆமா அவங்களுக்கும் வயசாயிக்கிட்டே வருது” “ஏன் ஒங்க அண்ணன் அக்கா, தங்கச்சி யாரும் பாக்க மாட்டாங்களா?” “நான் எப்பவும் தனிமையிலே இனிமை காண்பவன்” என்றான் அவன் சிரித்துக் கொண்டே. ”என்னப் போலத்தான்” என்றாள் அவளும்.

இரண்டு நாள்கள் கழித்து வழக்கம்போல முத்தாபாய் காத்திருக்கிறாள். கடையை சற்றுச் சீக்கிரம் மூடிவிட்டு வந்த அப்பா உள்ளே சென்றதும், “முத்தா, கொஞ்சம் இங்க வந்துட்டுப் போ” என்றார். அவளுக்கு ஆச்சரியம். அப்பா எப்பொழுதும் அழைக்கவே மாட்டார். அவளுக்கு வருகைப் பதிவேட்டில் இன்னும் தள்ளுவண்டிக்காரனும், ஹெல்மெட்காரரும் பாக்கி இருந்தனர். ஆனால் இதுவரை கூப்பிடாத அப்பா கூப்பிடுவதால் உள்ளே போனாள்.

உள்ளே போனதும் “அம்சா; நீயும் இங்கக் கொஞ்சம் வா” என்று மனைவியையும் அழைத்தார். அவள் வந்து நின்றாள். முத்தாபாய் நாற்காலியில் உட்கார்ந்தாள். ‘ஏம்மா, கோபாலுன்றது யாரும்மா?” “என்கூட வேல செய்யறவருப்பா; ஏம்பா?” “இன்னிக்கு அவன் மதிய நேரத்துலக் கடைக்கு வந்தான். இந்த ஊருதானாம். “ஆமாம்பா; நம்ம சொக்கு வராறே? அந்தத் தெருவுலதான் இருக்காரு”

“ஏங்க எதாவது தகராறா?” என்றார் அம்சவேணி. “தகராறெல்லாம் ஒண்ணுமில்ல; முத்தாவைப் பொண்ணு கேக்க வந்தான் அவன்.” முத்தாபாய்க்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. “நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல்லியே? அப்பா அம்மா இத எப்படி எடுத்துக்கப் போறாங்க”ன்னு நினைத்தாள். ”அவன் ஒரே பையனாம். அவனோட அவன் அம்மா மட்டும்தான் இருக்கங்களாம்; சொக்கு எல்லாம் சொன்னாராம். எல்லாத்துக்கும் ஒத்துக்கறனாம். ஏம்மா. ஒங்கிட்ட ஏதவது கேட்டானா?”

“இல்லப்பா, சாப்பிடும் போது ரெண்டு பெரும் ஒண்ணா ஒக்காந்து சாப்பிடுவோம், அதான். அப்பதான் எப்பவாவது குடும்ப விஷயங்கள் பேசிக்கறது உண்டு அவ்வளவுதான்” “சரி சொல்லுங்க; அவனும்தான் இவளைப் பாத்திருக்கான். இவளுக்கும் அவன் குடும்பத்தைப் பத்தித் தெரிஞ்சிருக்கு; எல்லாத்துக்கும்தான் ஒத்துக்கறான்” என்றார் அமசவேணி. சற்று நேரம் பேசாமல் இருந்த சேதுராமன் பட்டென்று, ”ஆனா அவன் நாயுடுப் பையனாண்டி. நாம எப்படிக் கொடுக்கறது? இல்லனு சொல்லிட்டேன்” என்றார்.

“சரி, இதுவும் கூடல” என்று சொல்லிக்கொண்டே அம்சவேணி உள்ளே செல்ல முத்தாபாய் வாசலில் போய்க் காத்திருக்கிறாள். மறுநாள் மதிய உணவு வேளையில் கோபாலுவும் முத்தாபாயும் ஒன்றாகத்தான் சாப்பிட்டார்கள். ஆனால் பேச்சு மிகமிகக் குறைவாக இருந்தது. அப்பா கேட்டதைப் பற்றி அவளும் கேட்க வில்லை, அவனும் பேசவில்லை. ஒருவரை ஒருவர் இதுநாள்வரை பார்த்த பார்வைக்கும் இன்று பார்க்கும் பார்வைக்கும் வேறுபாடு இருப்பதை இருவருமே உணர்ந்தனர்.

நான்கைந்து நாள்கள் கழித்து சொக்கலிங்கம் ஒரு நாள் சேதுராமனின் வீட்டிற்கு வந்தார். “பையனுக்கு அப்பா விருத்தாசலத்துல பெரிய மளிகைக்கடை வச்சிருக்காரு. அது தவிர ரெண்டு கடைங்க கட்டி வாடகைக்கு உட்டிருக்காங்க; பையனுக்குப் படிப்பு ஏறல. அதால அவனையும் கடையிலயே ஒக்கார வச்சுக்கிட்டாரு. இவன்தான் பெரியவன். அடுத்தவன் காலேசுலப் படிச்சுக்கிட்டிருக்கான். ரெண்டு பொண்ணுங்களையும் ஒண்ணு மாயவரத்துல, இன்னொண்ணு பாண்டிச்சேரியிலக் கட்டிக்கொடுத்துட்டாங்க”

சொக்கலிங்கம் கூறிக் கொண்டே போக, “நான் முன்ன சொன்னதெல்லாம் சொல்லிட்டயா?” ”சொல்லிட்டேங்க; அதுக்கும் ஒத்துக்கிட்டாங்க” கேட்டுக்கொண்டிருந்த அம்சவேணிக்கும் சேதுராமனுக்கும் இந்த இடம் முடிந்து விடும் என்னும் நம்பிக்கை ஏற்பட்டது. ”என்னா சொல்ற? முத்தா வரச் சொல்லலாமா?” என்று சேதுராமன் கேட்டார். “பாப்பாவை ஏங்கக் கேட்டுக்கிட்டு; இந்த ரெண்டு மூணு தடவையா அதக் கேட்டுக்கிட்டா சொன்னீங்க? என்றார் சொக்கலிங்கம். ‘ரெண்டு மூணா? ஏழெட்டு இருக்கும்? என்று கூறவில்லை. மனத்தில் நினைத்துக் கொண்டாள் முத்தாபாய். மாப்பிள்ளையே பெண்பார்க்க விருத்தாசலத்திலிருந்து காரை ஓட்டிக் கொண்டு வந்தான். அவனுடைய அப்பா, அம்மா, அக்கா, அக்கா கணவர் என்று அனைவரும் காரிலேயே வர, சொக்கலிங்கம் மட்டும் முன்கூட்டியே வந்து காத்திருந்தார். அனைவர் முன்னாலும் குனிந்த தலை நிமிராமல் வந்து உட்கார்ந்து விட்டுப் போனாள் முத்தாபாய்.

அவர்கள் சென்றபிறகு “ஏண்டி மாப்பிள்ளையை சரியா பாத்தியாடி?” என்றாள் அம்சவேணி. “பாத்தேம்மா” “இல்லியே, நீ குனிஞ்ச தலையை நிமிரவில்லையே” “இல்லம்மா; பாத்தேன்” என்று சொன்னாள் முத்தாபாய். “இந்த எடம் முடிஞ்சுடும்னு நெனக்கறேன். மாப்பிள்ளை ராஜாவாட்டம் இருக்காண்டி” என்றாள் அம்சவேணி. ”அதற்கு ராணியைத்தானே பார்க்கவேண்டும்” என் நினைத்துக் கொண்டாள் முத்தாபாய். சென்றவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.

சேதுராமனும் அம்சவேணியும் கவலைப் பட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு நாள் சொக்கலிங்கம் வந்தார். அப்பொழுதுதான் அலுவலகத்திலிருந்து வந்திருந்தாள் முத்தாபாய். இன்னும் காத்திருக்கும் இடத்திற்குச்செல்லவில்லை. “சொல்லு சொக்கு; நல்ல சேதிதான? என்னா சொன்னாங்க?” என்றார் சேதுராமன். அம்சவேணியும் முத்தாபாயும் கூர்ந்து கேட்டனர்.

“நல்ல சேதிதாங்க; ஆனா பவுனுதான் கூட அஞ்சு சேத்துக் கேக்கறாங்க” ”ஏம்பா நம்ம நெலைக்குப் பத்தே அதிகம்பா. இன்னும் கூட அஞ்சுன்னா? இப்ப விக்கற வெலைக்கு ரெண்டு லட்சம் ஆகுமே” சேதுராமன் அம்சவேணி முகங்களில் கவலை மேகங்கள் குடிகொண்டன. முத்தாபாய் இறுகிப் போய் நின்றுகொண்டிருந்தாள். “அதுக்கும் அவங்களே வழி ஒண்ணு சொன்னாங்க” ”என்னாவாம்?” “அவங்களுக்குத் தெரிஞ்ச ஒறவுக்காரரு ஒருத்தர் இருக்காராம். அவருக்கு இந்த ஊட்டை ரெண்டுலட்சரூபாய்க்குப் போக்கியம் போடலான்னு சொல்றாங்க”

”அப்பறம் அதை மூக்க என்னா வழி? கல்யாணத்துக்கப்பறம் சீர் செனத்தின்னு எல்லாம் வந்திடுமே” என்றார் சேதுராமன். “இதெல்லாம் மொதல்லயே சொல்லக்கூடாதா அவங்க? சரி. ம்….இதுவும் தட்டிப் போச்சா. கெடக்கட்டும்; அவ தலையெழுத்து” என்று வருத்தமுடன் சொல்லிக்கொண்டே போனார் அம்சவேணி. முத்தாபாயும் வெளியே சென்று காத்திருக்கிறாள்.

நான்கைந்து நாள்கள் கடந்தன. சேதுராமன் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்தவர் வீட்டு வாசலில் முத்தாபாயைக் காணாமல் திகைத்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.