எச்சில் புத்தி – உஷாதீபன் சிறுகதை

“நான்தான் ஆரம்பத்துலயே சொன்னனே…நீங்கதான் கேட்கல….“ என்றான் இவன். தான் நினைத்ததுதான் நடந்திருக்கிறது என்பதில் ஒரு சமாதானம். முன் கூட்டிக் கணிப்பது என்பது என்ன அவ்வளவு சாதாரண விஷயமா? அதற்கு ஒரு தனி அனுபவம் தேவைப்படுகிறதே…!

அவர் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு சொன்னார்.

அன்னைக்கு நீங்க சொன்ன போது அது தப்பாத் தெரிஞ்சது சார்…என்ன இப்டி அபசகுனமாப் பேசுறாரேன்னு தோணிச்சு…..இப்பத்தான் அதோட உண்மை புரியுது….

உண்மையில்ல சார்…மகத்துவம்….அதாவது உண்மையோட மகத்துவம்….எல்லாராலேயும் சொல்லிட முடியுமா என்ன? – கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும் அந்தக் கணத்தில் தேவைப்பட்டது.

சரி…பரவால்ல…இனிமேலாவது கவனமா இருங்க….முடிஞ்சா ஒராளை வேலைக்கு வச்சிக்கப் பாருங்க….-படிப்பு வாசனை இல்லாதவனா…அவன்தான் காவல் காக்க லாயக்கு….. – அவர் மறுக்கலாம் என்கிற எண்ணத்தோடேயே இந்த யோசனையைச் சொன்னான். அது அவருக்குக் கட்டுபடியாகாது என்றும் அவனுக்குத் தெரியும்தான்.

நல்ல கதையாப் போச்சு போங்க….வேலைக்கு வேறே ஆள வச்சு இன்னும் நஷ்டப்படுறதுக்கா…? அவனுக்குச் சம்பளம் யாரு கொடுக்கிறது. நமக்கே தாளம்….

சரி…வேண்டாம்…நீங்களே இருந்து கருத்தாப் பாருங்க….வெளி ஆளுகள உட்கார்த்திட்டு பக்கத்துல பாங்குக்குப் போறது, காய்கறி வாங்கப் போறது, கடை கண்ணிக்குப் போறதுன்னு வேண்டாம். டவுனுக்குள்ள இருக்கிற மார்க்கெட்ல புகுந்து காய்களை அள்ளி அப்படி என்ன லாபம் சம்பாதிச்சிடப் போறீங்க.? எதுக்குச் சொல்றேன்னா அந்த நேரம் பார்த்துத்தான் தவறு நடக்கும்… அதனால…

சரிதான்…ஆனா ப்ராக்டிகலா வர்ற போது சில சமயம் அப்டி நடந்து போகுதே…தவிர்க்க முடிலயே…! பக்கத்து டிராவல்ஸ் சுகுமாரத்தான் உட்கார்த்திட்டுப் போறேன்…அவரு நம்ம ஆளுதானே….

உங்க ஆளுதான்….யார் இல்லைன்னு சொன்னது? அவுரு எனக்கென்னன்னு உட்கார்ந்திருப்பாரு….நாலஞ்சு பேர் திடீர்னு புகுந்தா…என்னத்தக் கவனிக்க முடியும்…? அப்படியும் வர்றாங்கல்ல? சேர்ந்து நின்னாலே உள் புறமா என்ன நடக்குதுன்னு தெரியாது…யாராவது ஒராள் பை வச்சிருந்தாலும் போதுமே…எடுத்து செருகிக்கலாமே…! முதல்ல அவன் மட்டும் நழுவுவான்…மத்த ஆளுகதான் இருக்கேன்னு நாம விட்டுடுவோம்…ஆனா சாமான் மொத ஆளோட போயிடும்…என்னா டெக்னிக்ங்குறீங்க….? நம்ப கவனத்த பல வழிலயும் திசை திருப்பி விட்ருவாங்க…இந்த சாமர்த்தியத்த நல்ல வழிக்குப் பயன்படுத்தலாமேன்னு எவன் யோசிக்கிறான்?

அதான் அப்படி எதுவும் போயிருக்குமோன்னு நினைச்சு முழிச்சிக்கிட்டிருக்கேன்…போன வாரம்தான் ஸ்டாக் வந்திச்சு….எடுத்து எண்ணி, ரிஜிஸ்டர்ல வரவு வச்சிட்டுத்தானே ரேக்குல அடுக்கினேன். எனக்குத் தெரியாதா எது போகுது, வருதுன்னு…? கண்ணை மூடிட்டுச் சொல்லுவேன்.. இந்த முதல் ரேக்குலேர்ந்து, அந்தக் கடைசி ரேக்கு வரைக்கும் என்னென்ன புத்தகங்கள், எத்தனையெத்தனை இருக்குன்னு….இவ்வளவு ஏன் பத்திரிகைகள்ல எத்தனை வித்திருக்கு…எத்தனை மீதமிருக்கும்னு இப்ப சொல்லட்டா……..?

அவருக்கான பெருமை என்னவோ சரி. ஆனாலும் அதையும் மீறித்தானே இது நடந்திருக்கிறது.. பொறுப்பாய் இருக்கக் கூடிய ஆள்தான். சில வருஷங்கள் முன் வேறொரு புத்தக அங்காடியில் வேலை பார்க்கும்போதே அவரைத் தெரியும். அதில்தான் பழக்கமானது. அங்கு சில ஆண்டுகள் பெற்ற அனுபவத்தை வைத்துத்தான் இந்தப் புத்தகக் கடையையே துவக்கினார். பக்குவம் அங்கு பெற்றது.

நான் கூட, போயும் போயும் புத்தகக் கடையையா துவக்க வேண்டும்….. வேலைக்குப் போகக் கூடாதா? திரும்பவும் இந்தச் சகதியில்தான் விழ வேண்டுமா? என்றுதான் பரிதாபப்பட்டேன். அதானே பார்த்தேன்…என்னடா அங்க ஆளக் காணமேன்னு…இங்க தனியாக் கடை வச்சாச்சு போல்ருக்கு…? என்றேன் அந்த முதல் நாளன்று. சந்தோஷமாய் அழைத்து உட்கார வைத்து, குளிர்பானத்தை நீட்டினார். முதல் விசிட் என்று வெறுங் கையோடு திரும்பக் கூடாது என சில புத்தகங்களும் வாங்கினேன்.

அழைப்பு விடுத்து நான் வரவில்லை. பஸ்ஸூக்காக அந்த வளாகத்திற்குள் வரப்போக, பேருந்து நிலையத்துக்குள் இவர் கடை திறந்திருப்பது கண்ணில் பட்டது. அட…நம்மாளு….!

இந்த எடத்தை எப்டி ச்சூஸ் பண்ணினீங்க…? யாரு சொன்னா இந்த யோசனையை…? என்றேன்.

பாராட்டுகிறேனா அல்லது மறுக்கிறேனா என்பது தெரியாமல் குழப்பத்தோடு பார்த்தார்.

பயங்கரமான பிஸ்ஸி ஏரியாவாச்சே இது…? என்று மறுபடி வியந்தேன். மனதுக்குள் மெல்லிய கவலை. ரொம்பவும் பரபரப்பும், ஜன நெரிசலும் புத்தகக் கடைகளுக்குப் பொருந்துமா? அமைதியாய் ஒத்தர், ரெண்டு பேர் என்று வந்து போகும் இடமாயிற்றே…? புத்தகங்களுக்கே பிடிக்காதே கூட்டமாய் வந்து மொய்ப்பது…!

அப்ப இடம் கிடைக்கிறது கஷ்டந்தானே….! பிடிச்சனா இல்லையா…? என்றார் பெருமிதத்தோடு. முதல் முறையாக, தனியாக வியாபாரம் துவக்கியிருக்கும் உற்சாகத்தில் இருந்தார். அந்த முதல் நாளில் அவரை சோர்வடையச் செய்யக் கூடாது. கூப்பிட்டு உட்கார வைத்து, உள்ளத்தையும் உடம்பையும் குளிர வைத்து விட்டார். வாழ்த்தத்தான் வேண்டும். வாய் சும்மாயிருந்தால்தானே? பழக்க தோஷம் விடுமா? நாக்கு நுனிவரை வந்ததை அடக்க முடியவில்லை.

பஸ் ஸ்டான்டுக்குள்ளேன்னாலே பிரச்னையாச்சேங்க….? தண்டல் வசூலெல்லாம் இருக்குமே?… தண்ணியடிக்கணும்னா வந்து கையை நீட்டுவானே…! கொடுத்து முடியாதே…?

புஸ்தகக் கடைக்கெல்லாமா வந்து நிக்கிறாங்க…? இது கற்பூர வாசனையாச்சே…!

எந்த வாசனையடிச்சா என்ன? அவனுக்குத் தேவை காசு வாசனை…கிடைச்சவரைக்கும் லாபம்தானே…?

அதெல்லாம் சமாளிச்சிக்கிடலாம் சார்….புத்தகம் வித்தாப் போதும் எனக்கு…அதுதான் இப்போ பெரிய கவலை….!

அப்போ கவலையோடவே கடை திறந்திருக்கீன்னு சொல்லுங்க? – வாய் சும்மா இருக்கிறதா!

சிரித்துக் கொண்டார். நெடுநாளைய வாடிக்கையாளன்…என்னிடம் கோபிக்க முடியுமா? இனிமேல் இவர் கடைக்குதான் வரணும்….அந்தக் கணமே நினைத்துக் கொண்டேன்.

வந்து கொண்டுமிருக்கிறேன். தினமும் எப்படியும் ஒரு விசிட் உண்டு. ஒன்று ஆபீஸ் போகும் போது…அல்லது திரும்பும்போது… மாலையில் ரொம்பவும் கச கசவென்று இருக்கும் அந்தப் பகுதி. பஸ்கள் வந்தமணியமாகத்தான். படு டஞ்ஜன். வெளியேறத் துடிக்கும் பேருந்துகளின் இரைச்சல்…டீக்கடைகளின் ஓயாத பாட்டுச் சத்தம். போதாக் குறைக்கு ஏகப்பட்ட டிராவல்ஸ் வேறு. சொல்லி மாளாது. டூ வீலரை எங்கு நிறுத்துவது என்கிற பிரச்னை பெரிய்ய்ய தலைவலி.. என்ன ஆயிடப் போகுது என்று கிடைக்கும் இடத்தில் போட்டால் வண்டி நம்மளது இல்லை. கண்ணுக்குப் படுவது போல் நிறுத்தணும். இல்லையெனில் கண்டிப்பாக லபக்…

இது என் கடையாக்கும்….என்று உணர்த்துவது போல் சரவணன் கடை முன்னால்தான் கொண்டு நிறுத்துவேன். தள்ளி நின்று போக்குவரத்தை சரி செய்து கொண்டிருக்கும் போலீஸ் கூட தினசரி என்னைப் பார்ப்பதால் ஒன்றும் சொல்வதில்லை. சொல்லிருவானா? எங்கிட்டதானே வந்து நின்னாகணும்!

சார்…ஜி.பி.எஃப் அட்வான்ஸ் போட்டிருக்கேன்…கொஞ்சம் சீக்கிரம் தள்ளி விடுங்க….அர்ஜென்டா பணம் வேண்டிர்க்கு…..

நீங்கதான் எப்பவும் கனமாத்தான இருப்பீங்க…! அர்ஜென்ட் எங்கருந்து வந்திச்சு…?

…அப்டியெல்லாம் இல்ல சார்…நீங்களா என்னமாச்சும் நினைச்சிக்கிடுறீங்க…! எப்பயும் காச்சப்பாடுதான் சார்…

வேறே யாராச்சும் கிறுக்கன்ட்டப் போய்ச் சொல்லுங்க… –

ஆள் மசியாது எனில் பயங்கரக் கடுப்பாகி விடுவார்கள். என்னைக்குடா மாட்டுவான்……! என்கிற கடுப்பு.

நானா மாட்டுற ஆளு…அவிங்ஞதான் என்கிட்ட மாட்டியிருக்கானுங்க…அதான் வச்சுத் தீட்டிக்கிட்டிருக்கேன்….ஏதாச்சும் ஒண்ணு தொங்கல்ல இருந்தாத்தான பிடிப்பு? ஆபீசர்களுக்குச் சொல்லிக் குடுக்கிறதே நாமதானே…? வாடீ…வ்வா…என்னைக்காச்சும் வராமயா போவ….என்ற காத்திருப்பு.

நான்தான் மெமோவுக்கு பதில் கொடுத்திட்டேன்ல சார்…அப்புறம் ஃபைல மூடிற வேண்டிதான…? ஏன் சார் இன்னும் பென்டிங் வச்சிட்டு இழுத்திட்டிருக்கீங்க…? மனசுக்கு நி்ம்மதியே இல்ல சார்….

இந்தப் புத்தி காசக் கைநீட்டி வாங்கறப்ப இருந்திருக்கணும்..பச்சையா மாட்டுனா…? .பதில்ல திருப்தி இல்லீங்க…சார்ஜஸ் போடச் சொல்லி உத்தரவு…செவன்டீன் ஏ…..தயாராயிருங்க….

சார்…சார்…அதெல்லாம் வாணாம் சார்…பெறவு இன்க்ரிமென்ட் கட்டு…அது இதுன்னு போகும்….பார்த்து முடிச்சு விடுங்க….இனிமே எந்தத் தப்பும் நடக்காது…..

அப்போ அப்டில்ல நீங்க எழுதிக் கொடுத்திருக்கணும்…இதெல்லாம் எங்கிட்டச் சொல்லி என்ன புண்ணியம்…? எழுத்துல இருந்தா நானாப் பார்த்து என்னமாச்சும் செய்யலாம்…இதையே சீஃப்கிட்டப் போய்ச் சொல்லுவீங்களா? மாட்டீங்க…இங்கதான் வந்து தொங்கு தொங்குன்னு தொங்குவீங்க…! நானா உத்தரவு போடுற ஆளு? எங்கழுத்த அறுக்கிறீங்க…?

நீங்க நினைச்சா மூடிறலாம் சார்….எல்லாம் உங்க கைலதான் இருக்கு…பார்த்து செய்ய்ய்ங்க….-அந்த இழுவை எதற்கு அடி போடுகிறது என்று எனக்குத் தெரியும். ஆன மட்டும் என்னையும் பழக்குவதற்கு சபதம் எடுத்துக் கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. அது ஒண்ணு மட்டும் எங்கிட்ட இல்லாததுதான் எனக்கு ப்ளஸ்…!

போங்க…போங்க…பார்ப்போம்…. – தொலைஞ்சு போறானுங்க…என்று இரக்கம் மேலிடத்தான் செய்கிறது. லஞ்சத்த எங்க ஒழிக்கிறது? நாமளே ஒழிஞ்சாத்தான் நிம்மதி…!

அதோ அங்கே நிற்கும் போலீஸ்காரருக்கும் அப்படி ஒன்று என்னிடம் பென்டிங்…அதனால்தான் அங்கிருந்தே என் முகத்தை நோக்கி பார்வையாலேயே கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

இங்க கொண்டாந்து புஸ்தகக் கடையை வச்சிருக்காங்ஞ பாரு…கிறுக்கங்ஞ…என்று கறுவிக் கொண்டேயிருக்கறார் மனதுக்குள்.

சரவணனும் என் தினசரி வருகைக்கு ஒன்றும் சொல்வதில்லை. ஆள் வேண்டியிருந்தது. பாதுகாப்பாய் என்னைப் போல் ஒருவர் அவருக்குக் கிடைப்பது கடினம். போலீஸ் டிபார்ட்மென்ட் ஆளாச்சே…! குறைஞ்சது ஒரு மணி நேரத்துக்கும் மேலே இருப்பேனே…! அந்த அடையாளம் போதாதா? மாலை ஆபீஸ் முடித்து வண்டியை எடுத்தேனானால் நேரே இங்கேதான் வந்து இறங்குவேன். கடைக்குள் நுழைந்து ஒரு விசிட். புதிதாய் எதுவும் வந்திருக்கிறதா என்று ஒரு பார்வை. பிறகு வந்து உட்கார்ந்தால் நான்தான் காவல் தெய்வம்…தோன்றி மறையும் இஷ்ட தெய்வம்…!!!

எதையும் ஓசியில் எடுத்துப் படிக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. எல்லாவற்றையும் பணம் கொடுத்துத்தான் வாங்கியிருக்கிறேன். நல்லது கெட்டது என்று அறியாமல், தரமானது, தரமற்றது என்று புரியாமல், கட்டாயம் படிக்க வேண்டியது என்பதை அறுதியிட்டு உணராமல் கண்டமேனிக்கு வாங்கிப் போட்டிருக்கிறேன் வீட்டில். நானே ஒரு கடை போடலாம்தான். அவ்வளவு புத்தகங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் நினைத்த போது நினைத்த புத்தகத்தை எடுத்துப் படிக்கும் ஆர்வம். ஆகையால் யாருக்கும் இரவல் தருவதில்லை. தயவுசெய்து புத்தகம் கேட்காதீர்கள் என்று எழுதியே தொங்க விட்டிருக்கிறேன். அதனாலேயே எனக்கு நண்பர்கள் குறைவு. ஒருத்தனால எந்தப் பிரயோஜனமும் இல்லைன்னா எவன் நெருங்கப் போறான்? படிக்கிற பயபுள்ளைகளும் ஓசி இல்லைன்னா தலை காட்ட மாட்டான்ல….!

எல்லோரும் காசு கொடுத்து வாங்கித்தான் படிக்க வேண்டும் என்பது என் கருத்து.

எல்லாராலேயும் அது முடியுமா சார்…. என்பார் சரவணன்.

நீங்களே இப்படிச் சொன்னா எப்படி? அப்போ உங்க கடையை லெண்டிங் லைப்ரரியா மாத்த வேண்டிதான்…? என்று சொல்லியிருக்கிறேன்.

லெண்டிங் லைப்ரரின்னா அதுல பழைய புத்தகங்கள்தான சார் ரொட்டேஷனுக்குக் கிடைக்கும். இந்த மாதிரி லேட்டஸ்ட்டெல்லாமா கொடுக்கிறாங்க….லம்ப்பாக் கொடுத்து வாங்கிப்புட்டு யாராச்சும் சில்லரைக்கு விடுவாங்களா…? இல்ல மாத வாடகை வாங்கித்தான் கட்டுபடி ஆகுமா…?

நீங்க அந்த புதுமையைச் செய்ய வேண்டிதான்…புத்தம் புதுப் புத்தகங்களை வாங்கி வைத்து லெண்டிங் லைப்ரரி நடத்தும் வாசகர்…ன்னு ஒரு நாளைக்கு உங்களையும் இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துவாங்களே?…நீங்க ஒரு நல்ல வாசகரா இருக்கக் கண்டுதானே இந்த மாதிரி நல்ல நல்ல புத்தகங்களா வாங்கி விக்கிறீங்க….சமீபத்துல வந்ததுன்னு சொல்லிட்டு உங்ககிட்டதானே வந்து நிக்கிறாங்க….அதிகமா காலேஜ் பசங்கள உங்க கடைலதான பார்க்க முடியுது….படிப்படியா இழுத்திட்டிருக்கீங்களே எல்லாரையும்…அதுவே பெரிய சாதனைதான்….வேறே எந்தக் கடைலயும் இந்த சிட்டில இவ்வளவு சீக்கிரம் புதுப் புஸ்தகம் கிடைக்கிறதில்ல….அது தெரியுமா உங்களுக்கு? எல்லாக் கடைக்கும் நாயா, பேயா அலைஞ்சதுனால சொல்றேன்…தரமான வாசகர்களின் முகவரி நீங்க..நீங்கதாங்க சூப்பர் ஸ்டார்….

சரவணனுக்குப் பெருமை தாளவில்லை. அப்புறம் ஏன் சார் லெண்டிங் லைப்ரரி அது இதுன்னு சொல்றீங்க…? நல்லதையே பேசுங்க சார்…இப்பக் கடைசியாப் பேசின மாதிரி….பட்டுப் பட்டுன்னு எதிர்பாராம எதையாச்சும் சொல்லிப்புடறீங்க…மத்தவங்க மனசு சங்கடப்படும்னு யோசிக்கவே மாட்டீங்களா…?

என்னாச்சு…திடீர்னு சீரியஸ் ஆயிட்டீங்க…? ஓ.கே…ஓ.கே….ரிலாக்ஸ்…..நல்லா பழகினவர்ங்கிற உரிமைல பேசுறது இதெல்லாம்…கொஞ்சம் கூடக் குறையத்தான் வரும்….தப்பா தோணிச்சின்னா நிறுத்திக்கிடுவோம்…

இதற்கு சரவணன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. உண்மையிலேயே மனசு சங்கடப்பட்டிருக்கிறார் என்றுதான் தெரிந்தது. இப்பத்தான் கடையத் தொறந்திருக்கிறான் மனுஷன்…அவன்ட்டப் போயி லென்டிங் லைப்ரரியா நடத்துன்னா? கடுப்பாக மாட்டானா? – மனசாட்சி உறுத்தி விட்டதுதான்.

சரி…அத விடுங்க…இப்ப விஷயத்துக்கு வருவோம். எதுக்கு வெட்டிப் பேச்சு…? எத்தன புத்தகம் காணாமப் போச்சு…என்னென்ன போச்சு? எவ்வளவு பைசா? அதப் பார்ப்போம்….ஸ்டாக் ரிஜிஸ்டர எடுங்க…ஒரு அலசு அலசிடுவோம்….- சொல்லிவிட்டு என்னைத் தயார் படுத்திக் கொண்டு உட்கார்ந்தேன்.

எவ்வளவு பைசாங்கிறதப் பிறகுதான் பார்க்கணும்…முதல்ல லிஸ்ட்டை எடுத்திட்டேன்….என்னென்ன புஸ்தகம்னு…ஒவ்வொண்ணுலயும் எத்தனை இருக்குங்கிறதை அலசினாத்தான் எத்தனை போயிருக்குன்னு தெரிய வரும்…..

சேல்சும் ஆகியிருக்குமுல்ல…அது போகத்தானே மீதியப் பார்க்கணும்…? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சொன்னீங்க…மனப்பாடமாச் சொல்வேன்னு….

பில் புக்குப்படி சேல்சு, அப்புறம் இருப்பு, ரெண்டையும் கூட்டி வரவுலர்ந்து கழிக்கணும்….அப்பத்தான் தொலைஞ்சது தெரியும்….! பரவலா பல தலைப்புல போயிருக்கு சார்….புதுசுகள உடனே இறக்கறதும் ஆபத்துதான் போல்ருக்கு…

என்னங்க நீங்க…அத்தனை புத்தகமா போயிருக்கு? அப்டித் திருடுற அளவுக்கு எவன் வந்தான்? நீங்க கடைல இருக்கப்பவேவா இத்தனையும் நடந்திச்சு…இல்ல இல்லாதப்பவா….? நம்பிக்கையா உட்கார்த்தி வச்ச ஆளு.. வித்த .காசை ஆட்டையப் போட்டுட்டானா? புஸ்தகத்தைத் திருடறதுக்குக் கூடவா ஆள் இருக்கான் இந்த நாட்டுல…? எழுத்தத்தான் திருடுறாங்க…எழுதி அச்சடிச்ச புஸ்தகத்தையுமா திருட ஆரம்பிச்சிட்டாங்க?

இது ஒரு நாள்லயோ, ஒரு வாரத்துலயோ நடந்ததில்ல சார்…கடந்த ஒரு மாசத்துக்கும் மேலே அடுத்தடுத்துப் போயிட்டிருக்கு…இப்பத்தான் நானே சுதாரிச்சிருக்கேன்….ராத்திரி கடையை அடைச்சிட்டுப் போனப்புறம் எவனாவது திருடறானோன்ங்கிற அளவுக்கு சந்தேகம் வந்திடுச்சு….! புஸ்தகக் கடையையும் விட்டு வைக்க மாட்டாங்க போல்ருக்கு….திருடிட்டுப் போயி படிச்சாலும் பரவாயில்ல…..ரெண்டு ரூபாய்க்கும் அஞ்சு ரூபாய்க்கும் வித்துப்புட்டு தண்ணியடிச்சிட்டுப் போயிடுவானுங்க சார்…அப்டி ஆளெல்லாம் இருக்கு இந்த ஏரியாவுல……கழுதப் பயலுங்க….

பார்த்தீங்களா…கடைசில நான் சொன்னதுலதான் வந்து நிக்கிறீங்க….ஆரம்பத்துலயே அபசகுனமாப் பேசுறனேன்னு அன்னைக்கு நினைச்சீங்க… இப்போ அதுதான் யதார்த்தமாயிருக்கு….ஒரு சிசிடிவி காமிராவ வாங்கி மாட்டிருவமா…?

ஏன் சார்…இருக்கிறதே ஒரு ரூமு…இதுக்கு காமிரா ஒரு கேடா….? நம்ம கண்ணே காமிராதான சார்….? நிமிர்ந்து பார்த்தா ஆச்சு…! நீங்க வேறே….ஏற்கனவே பணத்தை எறக்கிட்டுத் தவிச்சிட்டிருக்கேன்….

சரி வேண்டாம்….நுழையற இடத்துல ஒரு சின்ன டி.வி. வச்சிடுவோம்…கடையோட நாலு கோணத்தையும் ஆங்கிளாக்கிப் பிரிச்சிட்டம்னா….சி்ன்னச் சின்ன மூவ்மென்ட் கூடத் துல்லியமாத் தெரிஞ்சி போயிடும்…..ஏற்பாடு பண்ணுவமா?

சார்….சார்….விடுங்க சார்….பெரிய எடுப்பால்ல எல்லாத்தையும் சொல்லிட்டிருக்கீங்க…எனக்குத் தாங்காது சார்….

ஓ.கே…யோசிப்போம்…….புலம்பி என்ன பண்ண…ஆக வேண்டியதைப் பார்ப்போம்…..எடுங்க…எடுங்க…..

எத எடுக்க சார்? இனிமே என்னத்தப் பார்க்க?…அதான் டயமாயிடுச்சே….கடையை அடைக்கணும் சார்….நான் கிளம்பி வீடு போய்ச் சேர்றதுக்கே ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆயிடும்…நீங்க டுர்ர்ன்னு கால் மணில போயிடுவீங்க…நா பஸ் பிடிச்சி இறங்கி நடந்தில்ல ஆகணும்…நாளைக்குக் கட்டாயம் வெரிஃபை பண்ணிடுவோம் சார்…..

டவுனிலிருந்து இருபது கி.மீ.-ல் சரவணனின் ஊர். ஒரு வேளை போக, வர வசதியாயிருக்கட்டும் என்றுதான் பஸ்-ஸ்டான்டிலேயே கடை பார்த்தாரோ என்னவோ…எட்டினாற்போல போய் பஸ் ஏறிக் கொள்ளலாம். அவர் போக வேண்டிய பஸ் நிலையத்திற்குள் வந்து நிற்பதைப் பார்க்கலாம். அந்த நிமிடம் கடையை அடைத்தால் போதும். கடைசி பஸ் வரை திறந்திருக்கலாம், காத்திருக்கலாம். அந்த நேரம் வரை எவன் வந்து புத்தகங்களை வாங்குகிறான் என்பதுதான் கேள்வி. பெரும்பாலும் புத்தகக் கடைகள் ராத்திரி எட்டு, எட்டரைக்கெல்லாம் அடைத்து விடுவதுதான். இவர் வசதிக்கு வேண்டுமானால் திறந்து வைக்கலாம். அதான் கண்ணுக்கெதிர்க்க பஸ் வந்து நிற்கிறதே…! நினைத்துக் கொண்டே சரி…அப்போ கௌம்புங்க….நானும் புறப்படுறேன்….என்றவாறே எழுந்தேன்.

…கொஞ்சம் உட்காருங்க….ஒண்ணுக்கிருந்திட்டு வந்துடறேன்….என்றவாறே ஓடினார் சரவணன். அது கொஞ்சம் தள்ளிப் போக வேண்டும். பஸ் ஸ்டான்டில் இருக்கும் கழிவறைக்குள் கால் வைக்க முடியாது. நுழைந்து வெளியேறினால் நேரே ஆஸ்பத்திரிதான். இவர் சற்றுத் தூரம் போய் எங்கோ ஒதுங்கிவிட்டு வருவார். சரி…நம்மாலான உதவி…என்று அமர்ந்தேன்.

பில் புக்கின் நடுவே ஒரு தாள். அதுதான் சரவணன் எடுத்த மிஸ்டு புக்ஸ் லிஸ்டோ…?. மனதுள் பரபரப்பு. எடுத்து ஒரு நோட்டம் விட்டேன். அதிகமொன்றுமில்லை. ஒரு பதினைந்து புத்தகத்திற்குள்தான். ஆனாலும் அது அவருக்கு நஷ்டம்தானே! பணம் போட்டவனுக்குத்தானே தெரியும் அருமை…!

பட்டியலை திரும்பவும். வரிசையாய் நோக்கினேன்… கவனமாய்ப் படித்துக் கொண்டே வந்தேன்.. . அவருக்குத் தெரியாமல் நான் எடுத்துச் சென்ற அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் பெயர் அதில் இல்லவே இல்லை…..!!! எப்படி? ஒன்றே ஒன்றுதானே இருந்தது அது. அதனால் மறந்திருப்பாரோ?

தெரிந்தே, போனால் போகட்டும் என்று எனக்காக விட்டிருப்பாரோ.?. ஏனோ இப்படியொரு சந்தேகம் வந்தது…!!! ஒரு வேளை இந்தப் பட்டியலே எனக்காக, என்னுடைய திருட்டை மறைமுகமாய் எனக்கு உணர்த்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட போலியோ…! நோட்டம் பார்க்கிறாரோ? புத்தகங்கள் திருடு போறது ஒண்ணும் எனக்குத் தெரியாமலில்லை…நா ஒண்ணும் அந்தளவுக்கு மடையனில்லை…! சொல்லாமல் சொல்கிறாரோ?

முன்பு வேலை பார்த்த புத்தகக் கடையில் அவர் சம்பாதித்திருந்த முன் அனுபவம் அத்தனை வீண் போகுமா என்ன? இல்லையென்றால் இந்தச் சின்ன வயதில் தனியே கடை வைத்து நடத்தும் தைரியம் வந்திருக்குமா? – இந்த எண்ணங்களூடே குழப்பமாய் வண்டியில் பறந்து கொண்டிருந்தேன் நான். என்னையறியாத ஒரு படபடப்பில் அல்லது பரபரப்பில் வண்டி வேகமெடுத்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.