1. உங்களைப் பற்றி- பணி/ குடும்பம்/ வசிப்பது
சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடிக்கும் அறந்தாங்கிக்கும் இடையே சிவலாங்குடி என்னும் கிராமத்தில் 1975-ல் பிறந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் இரு மூத்த சகோதரிகள். பத்து வயது வரை அம்மா மற்றும் சகோதரிகளுடன் கிராமத்திலேயே வளர்ந்தேன். தந்தை சென்னையில், தென்னக ரயில்வே தலைமையகத்தில் பணியாற்றினார். அம்மா, சகோதரிகளுடன் சென்னைக்கு 85-ல் வந்தேன். பொறியியலில் பட்டயமும், தமிழ் இலக்கியத்தில் பட்டமும் பெற்றேன். தற்போது தமிழக அரசுப் பணியில் உள்ளேன். மனைவி, மகன், மகள் மற்றும் தாய் தந்தையருடன் சென்னையிலேயே வசிக்கிறேன்.
2. இலக்கிய பரிச்சயம் எப்படி?
சென்னை வந்ததிலிருந்தே ஆனந்த விகடன் மற்றும் தினமணியின் வாசகன். சுஜாதாவின் கட்டுரைகள் மற்றும் வைரமுத்துவின் பெரும்பாலான நூல்களை வாசித்துள்ளேன். தினமணியில் வெளிவந்த நூல் விமர்சனத்தில் விஷ்ணுபுரம் நூல் பற்றி வாசித்து அந்நூலை வாங்கினேன். அந்நூலின் முன்னுரையில் கூறப்பட்ட விஷ்ணு புரண்டு படுப்பதைப் போல என் வாசிப்பும் தடம் மாறியது. அப்போது தினமணிக் கதிரில் வாரம் ஒரு சிறுகதையென வெளியான வண்ணதாசன் சிறுகதைகளும் என் வாசிப்பை மாற்றின. தொடர்ந்து நூலகத்தில் வண்ணதாசனை தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். வண்ணதாசன் கடிதங்கள் நூலின் மூலம் தி. ஜானகிராமனின் உயிர்த்தேன் நூலை அடைந்தேன். இன்றுவரை என் மனதில் இனிமையை ஊறவைக்கும் நூலாக அது உள்ளது ( =ஜெயமோகன் அதை நிராகரித்தபோதும்). இங்கிருந்து பின் சென்று புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன் என வாசித்து வருகிறேன்.
3. இலக்கிய ஆதர்சங்கள்
ஆசிரியராக ஜெயமோகனை ஏற்றுக் கொண்டுள்ளேன். குருவாக வண்ணதாசனை வணங்குகிறேன். தி. ஜானகிராமனிடம் விளக்கிவிட முடியாத ஓர் ஈர்ப்பு எப்போதும் உள்ளது.
என் மனதில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் என் பெரியப்பாவின் குரல் போலவே நாஞ்சில் நாடனின் குரல் எனக்குள் ஒலிக்கிறது.
தேவதேவனை நினைக்காமல் ஒரு நாளும் முடிவதில்லை.
4. எழுத்தாளர் என உணர்ந்தது எப்போது?
எழுத ஆரம்பித்த பின்புதான். என் ஆதர்சங்களைப் படிக்கும்போது இவற்றை படிப்பதே இவ்வாழ்க்கையின் பேறு, அதுவே போதும் என்றே எண்ணியிருந்தேன்.
5. எதற்காக எழுதுகிறேன் என கேட்டால் என்ன சொல்வீர்கள்?
என் கதைகளை என்னால்தான் எழுதமுடியும் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு கதையிலும் என்னையே நான் புதிதாகக் கண்டேன். இப்போது, இன்னும் என் பல முகங்களைக் காணும் சுவாரசியத்திற்காகவே தொடர்ந்து எழுத நினைக்கிறேன்.