தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன் போல கண்ணன் இன்றும் அஞ்சலகம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி விட்டான். கடந்த பத்து நாள்களாகத் தொடர்ந்து நடக்கும் படையெடுப்பு இது. சென்னை இயக்குநர் அலுவலகத்திலிருந்து நெருங்கிய தொடர்புடைய ஒருவர் உத்தரவு போட்டாகிவிட்டது என்று பதினைந்து நாள்களுக்கு முன் தகவல் சொல்லி அனுப்பினார். அதிலிருந்தே இன்றைக்கு வருமோ என்று நாள்தோறும் அவன் சென்று கொண்டிருக்கிறான்.
காலையில் எழுந்திருக்க வேண்டியது. குளித்துச் சிற்றுண்டி முடித்துக் கிளம்பிவிட வேண்டியது. அவன் அம்மா கூட, “ஏண்டா வந்தா கொண்டுவந்து கொடுக்கப் போறாரு; தெனம் போயிட்டு வரணுமா” என்று சொல்லியும் பார்த்து விட்டார். முதல் படைப்பை அச்சில் பார்ப்பது, முதல் முதல் நீச்சல் கற்றுக் கொண்டு தனியே நீச்சல் அடித்துக் குளிப்பது, முதல் முதல் மிதிவண்டியை யார் துணையுமில்லாமல் செலுத்துவது, முதல் முத்தம் இவையெல்லாம் போல முதல் முதல் வேலை கிடைக்கும் உத்தரவைத் தன் கையில் தானே வாங்குவது மிக மகிழ்ச்சி என அவன் நினைத்ததில் தவறொன்றுமில்லை.
அவன் இல்லத்திலிருந்து அஞ்சலகம் நடந்து செல்லும் தொலைவுதான். ஆனால் காதலிக்குக் காத்திருக்கும் காதலனுக்குக் காலம் மிகவும் நீண்டுகொண்டே போவது போலத் தொலைவும் நீள்கிறதே என் எண்ணினான். தமிழ் படித்தவனுக்கு உவமை கூட அதே போக்கில்தானே வரும். அவன் தெருவின் கடைசிக்குப் போய் வலப்புறம் திரும்பினால் ஐநூறு மீட்டர் தொலைவில் ஒரு விநாயகர் கோயில் இருக்கும். அதோடு அத்தெரு முடியும். பின் இடப்பக்கம் திரும்பிச்செல்ல வேண்டும். அத்தெருவின் இறுதியில்தான் அஞ்சலகம் இயங்கி வருகிறது.
இன்றைக்கு என்னவோ இந்த விநாயகரைச் சுற்றிச்செல்ல வேண்டும் எனத் தோன்றியது. சுற்றும்போது, “புள்ளயாரே! இன்னிக்கு உத்தரவு வந்திட்டா நாளைக்கு மூணு சுத்து சுத்தறேன்” என்று வேண்டிக்கொண்டான். பெரும்பாலும் இவனைப் போன்று வேலையில்லாமல் இருப்பவர்கள், சில வணிகர்கள், கடிதம் இன்று கண்டிப்பாய் வரும் எனத் தெரிந்தவர்கள் என்று ஒரு கூட்டம் அஞ்சலகத்தில் எப்போதும் காத்திருக்கும். ஆனால் யாரும் உள்ளே செல்ல மாட்டார்கள். அந்தந்தத் தெருவிற்கு வரும் அஞ்சல்காரர்கள் அஞ்சலகத்திற்கு எதிரில் இருக்கும் வீடுகளின் வராந்தாக்களில் கடிதங்களுடன் வந்து உட்கார்ந்து கொள்வார்கள்.
பெரும்பாலும் தொடர்ந்து வரும் அஞ்சலகப் பணியாளர்கள் அவரவர் தெருவில் உள்ளவர்களை அறிந்திருப்பர். எனவே பதிவுத்தபால், பணவிடை தவிர மீதி உள்ளவற்றை அங்கேயே வந்து கேட்பவர்களிடம் தந்துவிடுவார்கள். இதனால் அவர்களுக்குச் சுமையும் குறையும். இவனைப் பார்த்தவுடனேயே, “கண்ணா, இன்னிக்கு ஒனக்கு வந்திருக்கு” என்று அரசு முத்திரை இடப்பட்ட ஓர் உறையைக் கொடுத்தார். வாங்கிக் கொண்டுவந்தவன் சற்றுத் தள்ளி நின்றுகொண்டு பிரித்தான். உத்தரவுதான் இயக்குனர் அலுவலகத்திலிருந்து வந்திருந்தது. மகிழ்ச்சியால் அவன் உள்ளம் துள்ளிக் குளித்தது. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள பக்கத்தில் யாருமே இல்லையே என எண்ணினான். ஓட்டமும் நடையுமாய் வீட்டிற்குச் சென்றான். நுழையும் போதே, ”அம்மா எனக்கு உத்தரவு வந்தாச்சு” என்றான். “அப்பாடா; இன்னிக்காவது வந்ததே” என்றார் அம்மா. அதற்காகவே காத்திருந்தவர் போலத் தோட்டத்திலிருந்து குளித்துவிட்டு வந்த அப்பா “என்னா ஊர்லப் போட்டிருக்காங்க” என்று கேட்டார்.
”மாதனூர்னு போட்டிருக்கு” அம்மா, ”எங்க இருக்கு அந்த ஊரு” என்று கேட்கக் கண்ணன் “மதுரை மாவட்டமாம்; திருமங்கலம் பக்கத்துல” என்றான். அப்பாவின் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது. அவர் கேட்டார். “நீ படிச்சு முடிச்சு எத்தனை வருஷம் இருக்கும்” “அஞ்சு வருஷம் ஆயிடுச்சுப்பா” ”பாரு கண்ணா; தமிழ் படிச்சு முடிச்சவனுக்குத் தமிழ்நாட்டில வேலை கெடைக்க அஞ்சு வருஷம் ஆயிருக்கு?” “அதுக்கு இவன் என்னா செய்வான்” என்றார் அம்மா.
“ஏன் இவன் கூடத்தான் மைக்கப் புடிச்சுக்கிட்டுக் கத்தினான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழில் படிக்கறவங்களுக்கு மொதல்ல வேலை கொடுப்போம்னு. இல்லையான்னு கேளு” “ஆமாம்பா; அதெல்லாம் தேர்தல் நேரத்துல சொல்றதுதான?” “ஆமாண்டா கண்ணா, நெறவேத்தற மாதிரி சொல்லணும்’ சொன்னவரு கூடப் போய்ச் சேந்துட்டார். இப்ப இந்த ரெண்டு வருஷத்துல என்னா நடந்துச்சு?” கண்ணனுக்கு அரசியல் ஆர்வம் வரக்காரணமே அவன் அப்பாதான்.
கண்ணன் பள்ளியில் படிக்கும்போதே மேடையில் நன்கு பேசப் பழகிவிட்டிருந்தான். அவனுடைய தமிழ் ஆர்வத்தைப் பார்த்துதான் கண்ணனின் அப்பா அவனைத் தமிழ் படிக்கவைத்தார். படிப்பை முடித்தவுடன், “போடா நூலகம் போ! நெறைய எடத்துலப் படிப்பகம் நடத்துறாங்க இல்ல; அங்க வர்ற தெல்லாம் போய்ப் படி. வேலை கெடக்கலேன்னு வீட்லயே இருந்தா சோம்பல்தான் வரும்” என்றார் அவர்.
படிப்பகங்கள் பலவற்றுக்கும் போய் வந்தவன், ”அப்பா அங்க வர்றதெல்லாம் கட்சிங்க இதழ்களா இருக்கு” என்றான். ”இருக்கட்டுமே! அரசியல் செய்தியும் தெரியட்டுமே!” என்றவர், மேலும் “ஒனக்கு எது புடிக்குதோ அந்தக் கட்சியிலச் சேந்தாக்கூட நான் ஒண்ணும் சொல்லமாட்டேன். நல்லபடியா பொழுது போகணும்” என்றார் சிரித்துக் கொண்டே. எதிர்பாராமல் அவனும் ஒரு கட்சியில் சேர்ந்து மேடைகளிலும் பேச ஆரம்பித்தான். என்னென்ன பேச வேண்டுமெனக் கட்சி சொல்லிக் கொடுத்தது.
தேர்தல் மேடைகளில் கட்சியின் வாக்குறுதிகளைக் கண்ணன் அள்ளி வீசினான். அவன் விருப்பப்படி அவன் சேர்ந்த கட்சியே ஆட்சிக்கு வந்தது. ஆனாலும் தேர்தல் பேச்சுகள், வாக்குறுதிகள் என்பது வேறு, அரசாங்க நடைமுறைஎன்பது வேறு என்று பின்னர்தான் அவன் தெரிந்து கொண்டான். தேர்தல் வாக்குறுதிகள் என்பது அந்த நேரத்தில் வாக்குகள் பெறவே என்று அவனுக்குக் கட்சி மேலிடம் உணர்த்த அவன் நொந்து போனான்.
“கண்ணா என்னா ஊருன்னு சொன்ன?” என்று கேட்டார் அம்மா. “அதாம்மா மாதனூரு; ஏம்மா?” ”இல்ல. எங்கியோ கேட்ட பேரா இருக்குதுன்னு பாக்கறேன்” அப்பா உடனே, “ஏண்டா இங்க லால்குடி, இல்லன்னா சமயபுரம் பக்கத்துல எடம் இல்லியாமா?” ”தெரியலப்பா” “ஏன்னா கிட்டக்க இருந்தா வாராவாரம் வரலாம்; இப்ப மாசம் ஒரு தடவைதான் வர முடியும்” அதற்குள் அம்மா, “டேய், ஞாபகம் வந்திருச்சு” என்று கூறிச் சிரித்தாள். அப்பா கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு அவளை வியப்புடன் பார்த்தார். அவரே கேட்டார், ‘எங்க இருக்கு?” “எங்க இருக்குன்னு எனக்குத் தெரியல” “அப்பறம் என்னா” “இல்லீங்க; நாங்கள்ளாம் சின்ன வயசுல ஒரு பாட்டுப் பாடுவோம்” ”எப்பம்மா” “ஒளிஞ்சிக்கற வெளயாட்டு வெளையாடுவோம் இல்ல; அப்பதான்”
அப்பா இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா தொடர்ந்தார். ”அப்ப கண்டுபிடிக்கறவன் செவுத்துப் பக்கம் திரும்பிக்கிட்டுக் கண்ணை மூடிக்கிட்டு, “மாதனுருப் போவலாம்; மலையேறக் கூடாது; ஆதனூருப் போவலாம்; ஆத்துலக் குளிக்கக் கூடாது; போதனூருப் போவலாம்; பொய்சொல்லக் கூடாது; வாதானூருப் போவலாம் வழி கேக்கக் கூடாது”ன்ற பாட்டை மூணுதடவை சொல்லணும். அதுக்குள்ள ஒளிஞ்சிக்கறவங்க எல்லாரும் ஓடிப் போய் மறைஞ்சிக்கணும்” என்று கூறி முடித்தார்.
“அந்த மாதனூர்தானா இது” என்று கேட்டுச் சிரித்தார் அப்பா. “அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க” என்று அம்மாவும் கீழே குனிந்து கொண்டு சிரித்தார். ஒரு சில நாள்களுக்குப் பின் இருவர் முகத்திலும் சிரிப்பு வந்தது குறித்து கண்ணனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அவன் தந்தைக்கு ஓய்வூதியம் வருவதால் குடும்பம் ஓடுவதில் தடையேதும் இல்லை. அவரும் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர்தாம். இருந்தாலும் தமிழ்க்கல்லூரியில் படித்து அதற்குப் பிறகு ஒரு பயிற்சியும் முடித்து வேலை கிடைக்காமல் கட்சி, இலக்கியம் என்று சுற்றிக் கொண்டிருந்தவனைப் பார்த்து இருவருக்கும் மன ஒரத்தில் வலி எப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருந்தது.
அப்பா அந்தக் காலத்து ஆள். அதனால் அவர் கண்ணனிடம். “நீ திங்கக்கெழமை வேலையில சேரணும் இல்ல; அதால இங்கேந்து ஞாயித்துக்கெழமை காலையிலேயே கெளம்பிடு. திருச்சி போயி மதுரை வண்டி மாறிப் போய் மாலையிலதான் சேருவ” என்றார். ”சரிப்பா” என்றான் கண்ணன்.
பெரம்பலூரிலிருந்து கிளம்பும்போதே காலை மணி ஒன்பது ஆகிவிட்டது. மதுரை போய்ச்சேரும்போது இரண்டாகி விட்டது. அங்கேயே ஒரு விடுதியில் மதிய உணவை முடித்துக் கொண்டான். உணவுண்ட விடுதியிலும் பேருந்து நிலையத்திலும் விசாரித்ததில் திருமங்கலம் போய்த்தான் போக வேண்டும் என்றார்கள். எனவே திருமங்கலம் செல்லும் வண்டியாகப் பார்த்து ஏறிக் கொண்டான்.
திருமங்கலத்தில் விசாரித்ததில் அங்கிருந்து மாதனூர் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. தெரிந்தது. நடந்துதான் போக வேண்டும். இல்லையெனில் ஆட்டோ வைத்துக் கொண்டு போகலாம். மாலை மணி நான்காகி இருந்தது. நிறுத்தத்தின் பக்கத்திலிருந்த ஒரு தேநீர்க்கடைக்குச் சென்றான். அங்கு தேநீர் குடித்துக் கொண்டிருக்கும்போதே “மாதனூர் எப்படிங்கய்யா போகணும்?” என்று கேட்டான். “இப்படியே ரோட்லயே அரை மைலு போனீங்கன்னா வடக்கே ஒரு மண்சாலை போகும்; இங்கிருந்தே ஆட்டோவுலப் போயிடுங்க” என்று சொல்லியவர். “அதோ அவரு கூட மாதனூருப் போக வழிதான் கேட்டாரு” என்றார்.
கடைக்காரர் காட்டியவர் எழுந்து வந்தார். கண்ணனைப் போலவே தோளில் ஒரு பையும், கையில் ஒரு பெட்டியும் வைத்திருந்தார். கண்ணனும் அவரும் வெளியில் வந்தனர். தன் பெயர் கேசவன் என அறிமுகப்படுத்திக் கொண்டார். இருவரும் பேசிக்கொண்டே ஆட்டோ பிடிக்கச் சற்று நடந்து சென்றனர். கேசவன் மாதனூர் பள்ளியில் கணக்காசிரியராகப் பணியில் சேர வந்திருப்பவர் என்பது தெரிந்தது. ஆட்டோக்காரர் அடிக்கடி மாதனூருக்குச் சவாரி போவார் என்பது அவர் பேச்சில் தெரிந்தது. “தம்பிங்களா! ஒங்களக் கொண்டு போயி ஊர்த்தலைவரு ஊட்ல உடறேன். அவரு பாத்துத் தங்க எடம் சாப்பாடு வசதியெல்லாம் செய்வாரு” என்றார்.
“அங்க ஓட்டலு எல்லாம் இருக்குதில்ல” என்றான் கேசவன். ”அதெல்லாம் கெடையாதுங்க; ரெண்டு டீக்கடை இருக்குங்க, அப்பறம் ஒரு இஸ்திரி போடற கடை; சின்னதா மளிகை, ஷாப் சாமான் எல்லாம் விக்கற பொட்டிக்கடை மூணு இருக்குங்க; அதான்; சுத்தமான கிராமமுங்க; திருமங்கலத்துக்குதான் எல்லாத்துக்கும் வரணும்” கண்ணனும் கேசவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆட்டோ வடக்கே மண்சாலைக்குத் திரும்பியதும் சிறிய மலை ஒன்று தெரிந்தது. “அதோ தெரியுது பாருங்க மலை. அது அடியிலதான் ஊரு இருக்கு” என்றார் ஆட்டோக்காரர்.
ஆட்டோக்காரர் விவரம் சொன்னதும் ஊர்த்தலைவர், “வாங்க தம்பிங்களா” என்று வரவேற்றார். மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. அப்பொழுது ஒருமுறை குளித்திருப்பார் எனத் தெரிந்தது. வயது ஐம்பது இருக்கலாம். தலையில் நிறைய முடிகள்; பின் நோக்கி வாரப்பட்டிருந்தன. மார்பில் புலிநகம் கோர்த்த பவுன் சங்கிலி ஆடியது. சுத்தமான எட்டுமுழ வெள்ளை மல் வேட்டி கட்டி மேலே ஒரு துண்டை போர்த்திக் கொண்டிருந்தார். இரு கைகளின் மணிக்கட்டுகளிலும் பல வண்ணக் கயிறுகள் கட்டிக் கொண்டிருந்தார்.
ஆட்டோக்காரர் சென்றபின் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார். வீடு அந்தக் காலத்து ஓட்டு வீடு. நடுவில் கூடமும் நான்கு பக்கங்களிலும் தாழ்வாரமும் இருந்தன. ஒரு பக்கத் தாழ்வாரத்தில் நிறைய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “ஒக்காருங்கப்பா; இதுல தமிழு யாரு? கணக்கு யாரு” என்று கேட்டதும் இருவருக்கும் வியப்பு ஏற்பட்டது. ”என்னாப்பா ஆச்சரியமா இருக்கா? ரெண்டு நாளு முன்னாலதான் ஹெட்மாஸ்டர் வந்து ரெண்டு பேரை புதுசா போட்டிருக்காங்க; கணக்குக்கு ஒருத்தரு, தமிழுக்கு ஒருத்தருன்னு சொல்லிட்டுப் போனாரு” என்றார்.
உடனே கண்ணன் எழுந்து, ”அப்ப ஐயாவுக்கு நாங்க வர்றது முன்னாடியே தெரிஞ்சிருக்கு” என்றான் சிரித்துக்கொண்டே. அவர் உடனே அவனைப் பார்த்து, ”தம்பி, ஐயான்னு சொல்றதால நீங்கதான் தமிழ் படிச்சவருன்னு நெனக்கறேன். ஒங்க பேரு என்ன?’ ”என் பேரு கண்ணன்” என்றவன் ”இவருதான் கேசவன்; கணக்கு எடுக்க வந்திருக்காரு” என்றான். உடனே அவர் சிரித்துக் கொண்டே, “ஓ! ரெண்டு பேரும் பெருமாளுங்களா? நானும் கோவிந்தராஜுதான்; ஊர்ல கோவிந்தன்னு கூப்பிடுவாங்க” என்றார். பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் மனைவி இருவருக்கும் காப்பி கொண்டுவந்தார். அவரும் ”வாங்க வாங்க ரெண்டு பேரும்” என்று வரவேற்றார்.
காப்பியை ஆற்றிக் கொண்டே, “ஐயா ஒங்க புள்ளங்க….”என்று இழுத்தான் கண்ணன். “ரெண்டு பேருப்பா; ஒருத்தன் கோயம்புத்தூரு; இன்னொருத்தன் திருச்சி. ரெண்டு பேரும் கல்யாணம் ஆயிக் குழந்தை குட்டிகளோட இருக்காங்க; பதினைஞ்சு நாளுக்கொரு தடவை காருல வந்திடுவாங்க” என்றார் கோவிந்தன். “போன வாரம் கூடத் திருவிழாவுக்கு வந்திருந்தாங்க” என்று சொல்லிவிட்டு அவர் மனைவி உள்ளே சென்றார். கோவிந்தன், “சரி, வாங்க ஒங்க வீட்டைப் பாக்கலாம்?” என்று எழுந்தார். “எங்க வீட்டுக்கா?” என்று கேட்டான் கேசவன்.
அவர் வீட்டுக்கு எதிரே இருந்த ஒரு சிறிய வீட்டைத் திறந்தார். அது ஒட்டுப் போட்டுக் கட்டிய மாடி வீடு. ஒரு சமையலறையும், இரு அறைகள் இருந்தன. “கண்ணா! புதுசா வேலைக்கு வந்து சேர்றவங்க தங்கறதுக்குன்னே இதைக் கட்டினேன். பள்ளிக் கூடம் கொண்டுவந்திட்டாப் போதுமா? வந்து வேலை செய்யறவங்க தங்க வசதி செய்யணும்ல? மொதல்ல வர்றவங்க இங்கதான் தங்குவாங்க. அப்பறம் வசதிக்குத் தகுந்தாற்போல மதுரையிலேந்து இல்லன்னா திருமங்கலத்துலேந்து வருவாங்க” என்று சொல்லிக் கொண்டெ தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
தோட்டத்துக் கதவைத் திறந்த உடனே காற்றுப் பிய்த்துக் கொண்டு வந்தது. “அப்பா: காற்று வேகமா வீசுதே” என்றான் கேசவன். “ஆமா பின்னாடியே மலை இருக்குதில்ல; ராத்திரி கூட தூக்கம் வர்ற வரை ஒங்க ரூம்ல இருக்கற கயித்துக் கட்டிலுங்கள வாசல்ல போட்டுப் படுத்துக்கலாம் கொஞ்சநேரத்துல குளிர் வந்துடும்; அப்ப உள்ள போயிடலாம். நானும் வெளியிலதான் கொஞ்சநேரம் படுப்பேன்” என்றார். அவர். அவர் வீட்டின் பின்னால் மலை எழுந்து நின்று அவர்களைப் பார்ப்பது போல இருந்தது.
தோட்டத்தில் கிணறு இருந்தது. கோடியில் கழிப்பறை இருந்தது. அறைகளில் இருந்த மின்விசிறிகளைப் போட்டார். ஒவ்வோர் அறையிலும் கதவு போட்ட அலமாரியும் மேசை நாற்காலிகளும் இருந்தன. ”எல்லாமே சரியாச் செஞ்சிருக்கீங்க” என்றான் கேசவன். ”தம்பி! நாலு வருஷமா போராட்டம் நடத்தித்தான் இதை ஐஸ்கூலாக்கி இருக்கோம். போன வருசம்தான் பத்தாவது வந்தது. பணம் கட்டிப் பத்து வருஷமாயிடுச்சு. அமைச்சர் சிபாரிசெல்லாம் எடுபடல; கடைசியில எல்லாரையும் கூட்டுக்கிட்டுய் போயி திருமங்கலத்துல சாலை மறியல்னு ஒக்காந்துட்டேன். அப்பறம்தான் விடிவுகாலம் பொறந்தது. வற்றவங்க இங்க என்னா வசதின்னு கேக்கக்கூடாதில்ல” என்றார் கோவிந்தன்.
அவ்வப்பொழுது மழை பெய்வதற்கு இவரைப் போல ஊருக்கு ஒருவராவது இருப்பதுதான் காரணமோ என்று நினைத்தான் கண்ணன். “கதவு தொறந்தே இருக்கட்டும் ஊடு புடிச்சிருக்குல்ல” என்று கேட்டார் கோவிந்தன். “புடிச்சிருக்கா? என்னாங்க நீங்க? இந்தக் கிராமத்துல எங்க தங்கறதுன்னு கவலைப்பட்டேன். இது தேவலோகம் போல இருக்கு” என்றான் கேசவன்.
“அப்படியா தம்பி; தேவலோகம் பாத்திருக்கீங்களா” என்று அவர் சிரிக்க கண்ணனும் கேசவனும் கூடச் சேர்ந்து சிரித்தனர். ”ஊர்ல ரெண்டு டீக்கடை இருக்கு; காலையில அங்க போயிக் குடிச்சுங்க; அப்பறம் ஒரு ஊட்ல சொல்லிடறேன்; டிபன் காலைக்கும், ராத்திரிக்கும் வந்திடும். மதியத்துக்குச் சாப்பாடு வந்திடும் ஆனா சைவச் சாப்பாடுதான்; பள்ளிக் கூடம் நம்ம தெருவுக்கு அடுத்த தெருவுதான்” என்று கூறிச்சிரித்தார் கோவிந்தன்.
கண்ணனுக்கும் கேசவனுக்கும் மாதனூர் கிராமம், பள்ளி இரண்டுமே பிடித்து விட்டது. ஆசிரியர்கள் அனைவருமே இவர்களை விட மூத்தவர்கள். எல்லாரும் கோவிந்தன் சொன்னதுபோல மதுரை அல்லது திருமங்கலத்திலிருந்து வந்தனர். பத்து நாள்களில் கண்ணனும் கேசவனும் நெருக்கமாகி விட்டனர். கோவிந்தனும் அவர்களின் குடும்ப விவரங்கள் அறிந்து கொண்டார். அந்த சனி ஞாயிறுகளில் கண்ணனும் கேசவனும் சொந்த ஊருக்குச் சென்று வந்தனர். கேசவனுக்கு சமயபுரம் என்று இருந்தது இருவரும் சேர்ந்து செல்ல வசதியாயிருந்தது.
இப்படியே ஒரு மாதம் ஓடியது. ஒரு நாள் பௌர்ணமி. நிலா பால் போலக் காய்ந்து கொண்டிருந்தது. தூக்கம் வரும் வரை மூவரும் கட்டில்களை நெருக்கமாகப் போட்டுக் கொண்டு அரசியல், சினிமா, சமயம் சார்ந்தவற்றப் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அன்றும் அதுபோலப் பேசிக்கொண்டிருந்தனர். காற்று மெல்லியதாக சில்லென்று வீசிக் கொண்டிருந்தது. கோவிந்தன் வளர்க்கும் நாய் சுற்றிச் சுற்றி வந்து காற்று வரும் திசை நோக்கி முகத்தை வைத்துப் படுத்துக் கொண்டது.
“இன்னும் கொஞ்ச நேரத்துலயே குளிர ஆரம்பிச்சிரும் போல இருக்கு?” என்றான் கேசவன். ”ஆமாம் தம்பி மலைக்காத்துல்ல” என்றார் கோவிந்தன். ”இந்த மலைக்கு என்னாங்க பேரு?” என்று கேட்டான் கண்ணன். “பொதுவா இந்த மலையை மாதனூரு மலைன்னு சொல்வாங்க; ஆனா…..” “ம்…..சொல்லுங்க” ”இந்த ஊரு பெரியவங்க காட்டேரிக் கன்னி மலைன்னு சொல்வாங்க” “ஐயோ; பேரக் கேட்டாலே பயமாயிருக்க” என்றான் கேசவன். “ஆமாங்க; இதுல யாரும் ஏறவே கூடாதா?” என்றான் கண்ணன்.
”ஏன் யாராவது சொன்னாங்களா” “இல்லீங்க; இந்த ஊருன்னு சொன்னதுமே என் அம்மா மாதனுரு போனாலும் மலையேறக் கூடாதுன்னு அவங்க சின்ன வயசில பாடின ஒரு பாட்டைச் சொன்னாங்க” என்று பதில் சொல்லிய கண்ணன் அந்தப் பாட்டை முழுதும் பாடிக் காண்பித்தான். கோவிந்தன் சிரித்தார். ”இப்படி ஒரு பாட்டு இருக்குன்னு இந்த ஊருலக் கூட யாருக்கும் தெரியாது. பரவாயில்லயே; ஒங்க ஊரு வரை வந்திருக்க?” என்றார். ”அதாலதாங்கக் கேட்டேன்” “என்னவோ தெரியலப்பா; மலை மேல ஒரு சாமி இருக்குன்னு சொல்றாங்க” “நீங்க போயிப் பாத்திருக்கீங்களா” என்றான் கேசவன். அவனுக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது என்பது அவன் கேள்வியிலிருந்து தெரிந்தது.
“இல்ல தம்பி, இந்த ஊருல யாரும் சாமி கும்பிடன்னு போக மாட்டாங்க; ஆடு மாடு மேய்க்கறவங்க யாராவது போயிட்டு வந்து சொல்வாங்க அங்க ஒண்ணும் இல்ல. மூணு கல்லுதான் இருக்குன்னு” கண்ணனுக்கு இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. “மேல போக எவ்ளோ நேரம் ஆகுமுங்க” என்றூ கேட்டான். ”மாடு மேய்க்கறவங்க சொன்னதுதான் ஒரு ரெண்டு மணி நேரம் ஆகுமாம்” கேசவன் கேட்டான் “வெளியூர்க்காரங்க ஏறலாம் இல்லியா?” ”போவலாம்; ஆனா அதிகமா யாரும் போனதில்ல; யாராவது ஆராய்ச்சி அது இதுன்னு வந்திட்டுப் போவாங்க; அவங்களும் அங்க ஒண்ணும் இல்லீங்கன்னுதான் சொன்னாங்க”
“ஏண்டா நீ ஏறப் போறியா” என்றான் கண்ணன். “டேய்’ போட்டுப் பேசும் அளவிற்கு இருவருமே நெருக்கமாகி விட்டார்கள். ”ஆமாண்டா; வர்ற சனி ஞாயிறுதான் ஊருக்குப் போறதில்லையே; சும்மா ஏறிட்டு வரலாமே” “நீ சொன்னா சரிதான்; ஏறிட்டு வரலாம்; ஏங்க நீங்க என்னா சொல்றீங்க?” “ஒண்ணும் பயமெல்லாம் இல்ல தம்பி; வெயிலுக்கு முன்னால போயிட்டுத் திரும்பிடுங்க; அடிவாரமே ரெண்டு மைலு இருக்குமாம். கையிலத் தண்ணி பாட்டிலு, பிஸ்கட்டு எல்லாம் கொண்டு போங்க”
“வாங்க வாத்தியாருங்கள்ளாம் எங்கக் கிளம்பிட்டீங்க. தண்ணி பாட்டிலு, பிஸ்கட் கேக்கறீங்க” என்று கேட்டார் தேநீர்க் கடைக்காரர். இவரிடம் சொல்லலாமா என்பது போலக் கேசவன் கண்ணனைக் கண்களால் பார்க்க ”சொல்லு” என்று கண்ணன் ஜாடை காட்டினான். “சும்மாதான இருக்கோம்; மலை ஏறிப் பாக்கலாம்னு போறோம்” “எந்த மலையில” “இங்க வேற எந்த மலை இருக்கு; இந்த மாதனூரு மலையிலத்தான்”
அவர் ஒன்றும் பேசவில்லை. கண்ணாடித் தம்ளர்களை வெந்நீர் ஊற்றிக் கழுவ முனைந்தார். கழுவி இருவருக்கும் தேநீர் கொடுத்தார். “கேட்டீங்க; ஒண்ணும் பதிலே சொல்லலியே” அவர் சற்று சும்மா இருந்ததைப் பார்த்துக் கேசவன் என்னென்னவோ நினைத்தான். கண்ணனைப் பார்த்தான். கண்ணன் தண்ணீர்ப் பாட்டில்களையும் பிஸ்கட்டுகளையும் எடுத்ததைப் பார்த்த அவர், “என்னா ஏதும் பிரார்த்தனையா” “அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க; சும்மாதான இருக்கோம்; போயிப் பாக்க்கலாமேன்னுதான்”
“அப்படியா ஜாக்கிரதையாப் போயிட்டு வாங்க” என்றார். “ஏங்க இப்படிச் சொல்றீங்க?” “ஒண்ணும் இல்ல; யாராவது வழி காட்டினா நல்லது; இல்லன்னா வழி தவறிப்போயிடும். அடிவாரம் வரை மண்ரோடு நல்லா இருக்கும். மலைமேலப் பாதை கெடையாது, சில எடத்துலப் பாறை மேலகூட ஏறிப் போகணுமாம்; வேற ஒண்ணும் பயமில்ல; ஆட்டுக்காரங்க சொன்னாங்க” என்றார்.
இருவரும் கிளம்பினார்கள். கிளம்பி விட்டார்களே தவிர இருவர் மனத்திலும் இனம் தெரியாத ஒரு பீதி இருந்தது. ஆனால் ஒருவருக்கொருவர் எதுவும் சொல்லிக் கொள்லவில்லை. கேசவன் கைக்கடியாரத்தைப் பார்த்தான். ”மணி ஏழு ஆயிட்டுது பாத்தியா? இன்னும் சீக்கிரமே கெளம்பி இருக்கணும்” “ஏண்டா தேநீர் குடிச்சுட்டுதான கெளம்பணும்” ”சரி வேகமா நட” “ஓடறதுக்கா போறோம்” “எல்லாத்தையும் பாத்து ரசிக்கணும்னா மெதுவாதாண்டா போவணும்” அரை மணி நடந்திருப்பார்கள். மலை போய்க்கொண்டே இருப்பது போலத் தெரிந்தது.
வழியில் இருபுறமும் கருவேலமரங்கள் அடர்த்தியாய் இருந்தன. அரசின் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் நடப்பட்டவை இப்போது மரங்களாக வளர்ந்து அந்த இடமே காடாக மாறி விட்டிருந்தது, அம்மரங்களில் பல பறவைகள் கூடு கட்டி இருந்தன. மரங்களிலிருந்து கீழே விழும் காய்களை ஆடுகள் கூட்டம் கூட்டமாகத் தின்று கொண்டிருந்தன. காட்டைத் தாண்டும்போது பாதை சற்று வளைந்து வலப்புறம் திரும்பிற்று. இப்போது கேசவன் திரும்பிப் பார்த்தான். “டேய், நாம வந்த வழியே காணோம் பாரு” என்றான்.
“ஆமாண்டா, சுத்தமா மறைஞ்சு போயிடுச்சு” இப்போது வெட்டவெளியாக இருந்தது. ஆங்காங்கே மூன்றடி உயரத்திற்குச் சிறுசிறு புதர்கள் தோன்றியிருந்தன. ஒவ்வொரு புதரும் ஏதோ சண்டை போட்டுக் கொண்டது போலத் தள்ளித் தள்ளியே இருந்தன. ஒரு புதரிலிருந்து மற்றொரு புதருக்கு நரிகளும்., முயல்களும் ஓடிக்கொண்டிருந்தன. இப்போழுது சாலை இடப்புறம் திரும்பியது. ”என்னா அருமையா இருக்குடா” என்றான் கண்ணன். நடுவில் மண்சாலை ஆறு போல ஓட இருகரைகளாக அடர்த்தியான மரங்கள் காடு போல வளர்ந்து இருந்தன. மாமரம், தேக்க மரம், பூவரச மரம் இவற்றுடன் சில வேப்ப மரங்களும் இருந்தன. பறவைகளின் கூச்சல் வானைப் பிளந்தது.
நேர்க்கோடு போல சாலை இருந்ததால் சற்றுத் தொலைவில் உள்ளவையும் மங்கலாகத் தெரிந்தன. திடீரென்று கேசவன் “அதோ பாருடா” என்று மெல்லிய குரலில் காட்டினான். சற்றுத் தொலைவில் சாலையின் ஓரத்தில் மரத்தடியில் ஏதோ வெண்மையாய் ஒரு மூட்டை கிடப்பது போல இருந்தது. “என்னடா பயமா இருக்கா” என்றான் கண்ணன். “பயம் ஒண்ணும் இல்ல” “அப்பறம் என்ன? ஏதோ மாதிரி பேசற? “அதெல்லாம் ஒண்ணுமில்ல”
பேசிக்கொண்டே அருகில் சென்றதும்தான் அந்த மூட்டை ஒரு கிழவர் எனத் தெரிந்தது. அவர் பக்கத்தில் நீண்ட ஒரு கழி கிடக்க, அவர் கீழே தரையில் குனிந்து கோடுகள் கிழித்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார். இருவரும் அவரைப் பார்த்தும் பார்க்காதது போலப் போகலாம் என அவரைத் தாண்டும் போது, “ஏன் புள்ளங்களா? பாத்தும் பாக்காத மாதிரிப் போறீங்களே? மலை ஏற அவ்வளவு அவசரமா?” என்று அவர் கேட்டது காதில் விழுந்தது.
இருவரும் நின்றுவிட அவர் தன் பக்கத்தில் இருந்த பித்தளைத் தூக்கை எடுத்துக் கொண்டு, எழுந்து அருகில் வந்தார். “ஏம்பா அப்படி ஆச்சரியமாப் பாக்கறீங்க? இங்க வேற எதுக்கு வயசுப் புள்ளங்க போவாங்க?” என அவர் கேட்டதும்தான் கேள்வி பதில் இரண்டையும் அவரே சொல்லிக் கொள்வது தெரிந்தது. ”நீங்க இங்க என்னா செய்யறீங்க தாத்தா” என்று கேட்டான் கேசவன். “நான்தாம்பா முனுசாமி; இங்க ஆடு மாடு மேய்க்கறவன்”” அப்படீங்களா? எங்க ஆடு மாடு ஒண்ணையும் காணோம்” என்றான் கண்ணன். ”எல்லாத்தையும் காட்டு உள்ள ஓட்டி விட்டிருக்கேன். சூரியன் மேக்க உழும்போது அதுங்க இதே எடத்துக்குத் தானே வந்திடும். எல்லாரும் ஊட்டுக்குப் போயிடுவோம். சரி கெளம்புங்க”
இருவரும் ஆச்சரியப்பட்டனர். “எங்க தாத்தா” என்றான் கண்ணன், “மலை ஏறத்தான்” “நீங்களுமா” “ஏன் என்னால முடியாதுன்னு நெனக்கறீங்களா? மூணு பேரும் வேணா ஓடுவமா? யார் மொதல்ல வராங்கன்னு பாத்திருவோம்” ”அதெல்லாம் வேணாம் தாத்தா, வாங்க” என்றான் கேசவசன். யாரும் பேசவில்லை. மரங்களில் இருந்து பறக்கும் பறவைகளைப் பார்த்துக்கொண்டே கண்ணனும் கேசவனும் சென்றனர். ஒரு மயில்கூட ஒரு மரத்தில் இருந்தது. இவர்களைப் பார்த்ததும் வரவேற்பது போல அகவியது. ”இந்த மாதனூரு மலையில மிருகம் ஏதாவது இருக்கா தாத்தா” என்று கேட்டான் கேசவன்.
“அதெல்லாம் ஒண்ணும் கெடையாது. மொசலு, பாம்பு, நரி சின்னச்சின்னதா எலிங்க, காட்டுப் பன்னிங்க இதான் இருக்கு; இன்னொரு தடவ மாதனூரு மலைன்னு சொல்லாதீங்க; மலை கோச்சுக்கும்; இதும் பேரு காட்டேரி கன்னி மலை.” கண்ணன் உடனே கேட்டான். “ஏன் தாத்தா அந்தப் பேரு?” “தம்பி, அது பெரிய கதை.” “சொல்லுங்க தாத்தா?” என்றான் கேசவன் ஆர்வமுடன்.
“அந்தக் காலத்துல இந்தத் திருமங்கலம் சமீனு ரொம்பப் பெரிசா இருந்திச்சு. சுத்துப் பட்டுல இருக்கற பத்துப் பாஞ்சு சமினுங்க எல்லாம் இது கீழ அடக்கம். மதுரையே இதுக்குக் கப்பம் கட்டிச்சு. ஆண்ட சமீன்தாருங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க; சனங்கக்கிட்ட வரி கொஞ்சமா வசூல் செஞ்சு நல்லதையே செஞ்சாங்க; அதால சமீந்தாரை எல்லாரும் ராசா ராசான்னுதான் கூப்பிட்டாங்க; அவருக்கு ஒண்ணுன்னா உசிரையும் கூடக் குடுப்பாங்க”
ராஜபூபதின்னு ஒரு சமீன்தாரு இருந்தாரு. அவரு தங்கமானவரு. அவரு பொண்டாட்டி கோமளவல்லி. அவங்களும் சனங்க மேல ரொம்பப் பிரியமானவங்க. என்னா ஒரு கொற என்னான்னா அவங்களுக்கு ஆண்வாரிசு இல்ல; அவருக்கப்பறம் ஆம்பளப் புள்ள இருந்தாத்தான சமீன்தாரா வரமுடியும். ஆனா அந்தக் கவலையைத் தீக்கறதுக்கு ஒரு பொம்பளப்புள்ள இருந்திச்சு.
அதும் பேரு மரகதம். அந்தப் புள்ளக்குக் கல்யாணம் ஆயிடுச்சான்னா அதுதான் அடுத்த சமீந்தாருன்னு ஒரு வழக்கம் இருந்திச்சு. அதுக்கு என்னா செய்வாங்கன்னா எந்த சமீன்லயாவது கல்யாணம் ஆகறதுக்கு ரெண்டு மூணு புள்ளங்க இருந்தா அதுல ஒரு பையனப் பாத்து வச்சுக் கல்யாணம் செஞ்சிடுவாங்க. அந்தப் பையனும் இங்கியே தங்கிடுவான்.
ஆனா இந்தப் பொண்ணு விசயத்துலு ஒரு சங்கடம் இருந்திச்சு. பொண்ணு பாக்கறதுக்கு அப்படியே ரதி மாதிரி இருக்கும். செவப்புன்னா அந்த மாதிரி செவப்பு எங்கியுமே பாக்க முடியாது. அழகுன்னா அப்படி ஒரு அழகு. எட்டயபுரம், சிங்கம்புணரி, ராமநாதபுரம், பாளையங்கோட்டைன்னு எல்லா சமீன்லேந்தும் புள்ளங்க வந்து பாத்தாங்க. பொண்ணோட திருமங்கலம் சமீனே வருதுன்னு எல்லாருக்கும் சந்தோசம்தான். ஆனா எல்லாரும் சொன்ன ஒரே கொறை, பொண்ணு ஒரே குண்டு. பாத்துட்டுப் போனவங்க சொன்னதும் தப்பில்ல. மரகதம் கொஞ்சம் என்னா அதிகமாவே குண்டுதான்.
ஒடம்பு செவப்பா இருந்து முகம் நல்லா அழகா இருந்து என்னா பிரயோசனம்னு சொன்னாங்க. அதிலும் எட்டயபுரம் சமீன்தாருப் பையன் “எங்கூருலப் பட்டணப்பிரவேசம் செய்யணும்னா பல்லக்கு தூக்க யாருமே வரமாட்டாங்க”ன்னு சொல்லிச் சிரித்ததுதான் பூபதிக்கும் கோமளவல்லிக்கும் ரொம்ப வருத்தமாப் போச்சு. போரூர்லேந்து வந்தவன் ஏதாவது வைத்தியம் செஞ்சு பொண்ணை எளைச்சு வையுங்க; அடுத்த நாளே நான் வந்து கட்டறேன்” என்றான்.
பூபதி ஒடனே அவரு சமீன்லேந்து மட்டுமில்ல கேள்விப்பட்ட எடத்திலேந்து எல்லாம் வைத்தியரை வரவழச்சுப் பாத்தாரு. அவங்களும் வந்து அரண்மனையிலேயே தங்கினாங்க. தெனம் மூலிகை கொண்டுவந்து அறைச்சுக் குடுத்தாங்க. என்னென்னமோ சூர்ணம், லேகியம் மருந்தெல்லாம் குடுத்தாங்க. அப்படியே ஒரு வருசம் ஓடிப் போச்சு. பட்டணத்துலேந்து வெள்ளைக்கார வைத்தியரை வரவழச்சாங்க. அவரும் வந்து பாத்து ஒரு வருசம் என்னென்னமோ செஞ்சு பாத்தாரு. தெனம் ஓடச்சொன்னாரு. மருந்து மாத்திரை எதுலயும் ஒடம்பு எளக்கல. முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.
ஒரு நாளு வெளியூர்லேந்து ஒரு சாமியாரு வந்தாரு. ஒரு அம்பது வயசிருக்கும். நல்ல செவப்பான ஒடம்பு. தேக்குமரம் போலக் கட்டை. கண்ணில அப்படி ஒரு தேஜஸ். நெத்தி முழுசும் விபூதி பூசியிருந்தாரு. தோள்ல ஒரு பச்சை மூட்டை;. கால்ல மரத்தாலான கொறடு. கையில அவரு ஒசரத்துக்கு ஒரு பூண் போட்ட கழி. அரண்மனைக்குப் போனவரு அங்க வாசல்ல எல்லாரும் கிண்ணம் வச்சுக்கிட்டு வரிசையா நிக்கறதைப் பாத்து என்னா விசயம்னு கேட்டாரு. எங்க ராசா அவரு பொண்ணு எளைக்கணும்னு நாப்பத்தெட்டு நாளைக்கு சோறு போடறாருன்னு சொன்னாங்க. பொண்ணைப் பத்திப் பூரா கேட்டு தெரிஞ்சிக்கிட்டாரு. வரிசையிலக் கடைசியிலப் போயி நின்னாரு. எல்லாரும் போனபின்னாடி இவரு சும்மா வந்து நிக்கறதப் பாத்த சேவகருங்க ‘என்னா வேணும்’னு கேட்டாங்க. ‘ராசாவைப் பாக்கணும்’னு சொன்னாரு. ’புதுசா வந்திருக்கற சாமியாரு சொன்னாரு’ன்னு ராசாக்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனாங்க.
அங்க போயி. ”ராசாகிட்டத் தனியா பேசணும்”னு சொன்னாரு. “நான் ”எல்லாத்தையும் கேள்விப்பட்டேன். பொண்ணைப் பாக்கணும்”னு சொன்னாரு. பொண்ணு வந்தவுடனே அவரே இம்மா குண்டான்னு அசந்து போயிட்டாரு. கைரேகையெல்லாம் நல்லாப் பாத்தாரு. அப்பறம் “நீ போம்மா”ன்னு அனுப்பிட்டாரு. ராசாவையும் ராணியையும் வச்சுக்கிட்டு, “ரேகையைப் பாத்தா இது காட்டேரி செய்யற வேலைன்னு தெரியுது. நான் என்னா சொன்னாலும் செய்வீங்களா”ன்னு கேட்டாரு. “சாமி நீங்க எது சொன்னாலும் செய்வோங்க எப்படியாவது எளச்சுடணும்’ எங்க சமீனுக்கு நல்ல காலம் பொறக்கணும்னு கோமளவல்லி சொன்னாங்க”
”ஒரு பத்து நாளு இது அரண்மனையை உட்டு வெளியில வந்து என்னோடத் தங்கணும். தெனம் ஒக்காறவச்சுப் பூசை செய்யணும். ஒண்ணும் பயப்படறமாதிரி பூசையெல்லாம் இல்ல. சாதாரண பூசைதான். பலியும் இல்ல. ஆனா ஒருத்தரு கண்ணுலயும் படக் கூடாதுன்”னு சொன்னாரு. எங்க தங்கலாம்னு கேட்டதுக்கு இந்த மலையிலயே தங்கலாம். இன்னிக்கே போயி மலையில பாதி தூரத்துல எனக்கு ஒரு ஆசிரமும் பொண்ணுக்குத் தங்க ஒரு குடிசையும் கட்டிடு. தெனம் காலைல அடிவாரத்துல தேனு, பாலு பழம்லாம் நெறைய ரெண்டு வேளை சாப்பிடறமாதிரி வச்சுடு. சூரியன் உழறதுக்குள்ள ராத்திரி சாப்பிடப் பாலும் கோதுமை அப்பங்களும் வச்சுடு. நான் தெனம் கீழ வந்து எடுத்துக்கிட்டுப் போவேன்.
மரகதம் மொதல்ல பயந்தாலும் சாமியாரு தொணை இருக்கார்லன்னு ஒத்துக்கிட்டா. மலையிலேந்து ஏற எறங்க நாலு வழி இருக்கு. அந்த வழியில எல்லாம் சமீன்தாரு சரியான காவலு போட்டுட்டாரு. மூணாம் நாளு சாமியாரு மொதல்லியே போயிட்டாரு. மரகதத்தைப் பல்லக்கில ஏத்திக்கிட்டு ராசாவும் ராணியும் கொண்டு போயி உட்டுட்டு வந்தாங்க. அன்னிக்குப் பூரா சாமியாரு நெறய சிவனைப் பத்தி, பெருமாளைப் பத்திக் கதையெல்லாம் சொல்லிக்கிட்டிருந்தாரு. மறுநாள் சூரியன் வர்றதுக்குள்ள போயி பக்கத்துல இருக்கற அருவியிலப் போயிக் குளிச்சுட்டு வரச்சொன்னாரு.
அவ வந்ததும் சாமியாரு போயிக் குளிச்சுட்டு வந்து மரகதத்தை ஆசிரமத்தில ஒக்காற வச்சு மண்ணால சிவலிங்கம் செஞ்சு பூசை செஞ்சாரு. அப்பறம் ஆகாரமா தேனு பழமெல்லாம் எவ்ளோ வாணா தின்னுனு சொன்னாரு; தின்னு முடிச்சதும் சின்னதா ஒரு மூலிகை உருண்டை கொடுத்து ஒரே வாயில முழுங்கிட்டுத் தண்ணி குடிக்கச் சொன்னாரு. போயிப் படுத்துக்க; பயமா இருந்தா இந்தக் கத்தியை வச்சுக்கன்னு குறுவாள் ஒண்ணு கொடுத்தாரு. எதுக்கும் இருக்கட்டும்னு அதைத் தலை அடியில வச்சுக்கிட்டு மான் தோலில் போயிப் படுத்தவ அப்படி ஒரு தூக்கம் தூங்கிட்டு சூரியன் உழும்போதுதான் முழிச்சா. மறுபடியும் காலைல செஞ்ச மாதிரி பூசை. ஆகாரம்; மூலிகை உருண்டை; தூக்கம்.
அஞ்சாம் நாளு ”ஒனக்கு இப்ப எப்படித் தெரியுது”ன்னு கேட்டாரு. “சட்டையெல்லாம், வளையலு எல்லாம் கழலுது சாமி. எளைக்க ஆரம்பிச்சுட்டேன்”னு வெக்கத்தோட மரகதம் சொன்னா. “ஆனா சாமி, தூக்கம்தான் நல்லா வருது; எங்க அரண்மனையிலக் கூட அப்படி வராது”ன்னா. “மலைக் காத்து வருதில்ல; அதான்”னு சொன்னாரு. ஒம்பதாம் நாளு மரகதம் குளிக்கச்சத் தண்ணியிலப் பாத்து நாமதானான்னு ஆச்சரியப்பட்டா. அந்த அளவுக்கு மெல்லிசாப் போயிட்டா. அன்னிக்கு ராத்திரி ஒரு கரடி வந்து அவ தூங்கச்சே மேல வந்து படுத்த மாதிரி இருந்திச்சு. தள்ளத் தள்ள ராத்திரி பூரா போகவே இல்ல.
காலையில சாமியாருக்கிட்ட சொன்னா எதாவது கனா கண்டிருப்பன்னு சொல்லிட்டாரு. பத்தாம் நாளு ராத்திரி தூங்கக் கூடாதுன்னு இருந்தா. ஆனா அவள மீறித் தூங்கிட்டா. இருந்தாலும் கரடி வந்து போனதைக் கண்டு புடிச்சுட்டா; அவருகிட்டச்சொன்னா அவரே பயந்துட்டாரு. காலையிலப் பல்லக்கோட வந்த ராசாவுக்கும் ராணிக்கும் மரகதத்தைப் பாத்துட்டு அடையாளமே தெரியல; ஒரே சந்தோஷம் அவங்களுக்கு. ”அவரு குளிச்சுட்டுப் பூசை செஞ்சுட்டு வராறாம். நம்மப் போகச் சொல்லிட்டாரு”ன்னு மரகதம் சொன்னா.
”அவரைப் பாத்துச் சொல்லிட்டுப் போனாதான மரியாதை”ன்னு கோமளவல்லி சொன்னாரு. ”அவரு சொன்னதை மீறினா அவருக்குக் கோவம் வந்திரும்னு மரகதம் சொன்னதால எல்லாரும் கெளம்பினாங்க. மத்தியானம் சாமியாரு வரல; சேவகருங்க போயித் தேடிக் கண்டுபுடிச்சா அவரு அருவிக்கரையிலே மயங்கிக் கெடக்காரு. பாத்தா முதுகிலக் கத்திக் குத்து உழுந்திருக்கு. தூக்கி வந்து காயத்துக்குக் கட்டுப் போட்டாங்க; ஒரே வார்த்தைதான் சொன்னாரு. ”காட்டேரி வந்து குத்திடுச்சு” அவ்ளோதான் பூட்டாரு.
முனுசாமி இருந்ததால் வழி எளிதாக இருந்தது. ஆனால் மலை உச்சிக்குச் சென்று பார்த்தபோது கேசவனுக்கும் கண்ணனுக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சி இருந்தது. மூன்று கற்கள்தாம் இருந்தன. மலை உச்சியிலிருந்து பார்த்தால் இயற்கையின் விருந்து அழகாகக் காட்சியளித்தது. பிஸ்கட்டு. தண்ணிப் பாட்டில் எல்லாம் காலி. முனுசாமி ஒன்றும் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் எப்பொழுது விலகினாரென்றும் தெரியாமல் சட்டென்று அவர் விலகிவிட்டார். அவருக்கு வழியெல்லாம் தெரியும் இங்கியே பழகினவருதான” என்று கோவிந்தன் சொல்ல இருவரும் இறங்கிவந்து விட்டனர்.
”பரவா இல்லியே, சீக்கிரம்தான் வந்துட்டீங்க; வழி தெரிஞ்சுதா” ஊர்த்தலைவர் கேட்டார். முனுசாமின்னு ஒரு பெரியவரு அவருதான் வழி காட்டினாரு” என்றான் கண்ணன். கேட்டவருக்கு ஆச்சரியம். யாரும் வராத மலையிலயும் ஒங்களுக்கு வழிகாட்ட ஆளு கெடச்சிருக்கு” என்றார் அவர்.
மறுநாள் மதியம் பதினோரு மணி இருக்கும். பள்ளியிலிருந்து ஒரு மாணவன் வந்து, கணக்கு வாத்தியாரும், தமிழய்யாவும் பள்ளிக்கூடத்துக்கு வரலியாம்; என்னான்னு ஹெட்மாஸ்டரு கேட்டுட்டு வரச்சொன்னாரு” என்றான்.
கோவிந்தனுக்கு ஒரே ஆச்சரியமாய் இருந்தது. உடனே எதிர் வீட்டுக்குப் போனார். கதவு உள்புறம் தாழிடப் பட்டிருந்தது. தட்டிக் கொண்டே, “கண்ணா. கேசவா” என்று உரக்கக் குரல் கொடுத்தார். பதிலே இல்லை. சன்னல் கதவுகளும் சாத்தப்பட்டிருந்தன. கை வலித்ததால் வீட்டின் உள்ளே இருந்து உலக்கை கொண்டு வந்து கதவை இடித்தார். மாணவனும் “சார், சார்” என்று கத்தினான்.
சற்று நேரம் கூச்சலிட்டு இடித்த பின்னர் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கேசவன்தான் வந்து திறந்தான், கலைந்த தலையுடனும், சிவந்த கண்களுடனும் ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு இருந்தான். ஆனாலும் அவன் உடம்பு லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. ”வாங்க” என்று மெல்லிய குரலில் கூப்பிட்டவன், ”ரெண்டு பேருக்கும் ரொம்பக் காய்ச்சலுங்க” என்று கூறி உள்ளே சென்றான்.
உள்ளே சென்று பார்த்தால் கண்ணனும் கழுத்துவரை இறுக மூடிக்கொண்டு தூங்குவது போல இருந்தான். அருகில் சென்றாலே உடம்பு அனல் அடித்தது. “கண்ணா, கண்ணா” என்று கோவிந்தன் குரல் கொடுக்க அவன் கண் விழித்தான். ஏதோ முனகுவது போலக் கேட்டது. தலைவர் குனிந்து அவன் வாயருகே காதைக் கொண்டு போன போது மெதுவாகக் “காட்டேரி, காட்டேரி” என்று கண்ணன் முனகுவது கேட்டது.