பி. பத்மராஜுவின் “படகின் மேல்” சிறுகதை பற்றி

ஸிந்துஜா

ம்பத்தி நான்கு வருஷங்களுக்குப் பின் பத்மராஜூவை மறுபடியும் சந்திப்பேன் என்று நான் ஒரு பொழுதும் நினைக்கவில்லை. 1967ல் வாசகர் வட்டம் வெளியிட்ட “பாரத நாட்டுப் புதுக்கதைகள்”புத்தகத்தில் பத்மராஜுவின் “பனி மூட்டம்”என்ற கதையைப் படித்துப் பிரமித்தது ஏதோ சமீபத்தில் நடந்தது போல நினைவில் தெளிவாக நிற்கிறது. சமூகம் நிறுவிய மதிப்புகள் கட்டுக்களாக எழுந்து நின்று மனித மனங்களை உணர்வுகளைச்  சீண்டியதைக் காணப் பொறாது எழுந்த எழுத்துக்கள் தமிழிலும் மற்ற மொழிகளிலும் குறிப்பிடத்தக்க முறையில் தம்மை ஸ்தாபிக்க முயன்ற காலகட்டம் அது என்று நினைக்கிறேன். பத்மராஜுவின்  “பனி மூட்டம்” அந்த வகையில் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்து. Jump Cut பாணியை வைத்து எழுதப்பட்டிருந்தது. ஒரு பெண்ணின் மனதை எவரும் அவ்வளவு லகுவில் படித்து விட முடியாது என்பதைப் பனிமூட்டம் உணர்த்த விரும்பியது என்று அன்று தோன்றியது இப்போது மீண்டும் எடுத்துப் படிக்கையிலும் தோன்றுகிறது என்பது படைப்பாளியின் வெற்றியன்றி வேறென்ன? அன்பு காதல் வெறுப்பு கோபம் எல்லாம் வெவ்வேறு வடிவங்களில் ஒருவனை அல்லது ஒருத்தியை மரபுடன் இயைந்து உலகுக்குக் காட்டவே வந்தவை என்னும் பொதுப்புத்தியில் உறைந்து விட்ட நிலைப்பாட்டை மறுப்பதில் எழுத்தாளன் இன்பம் காண்கிறானோ என்ற சந்தேகத்தை எழுப்பும் கதையாக எனக்குப் “பனிமூட்டம்” காட்சியளித்தது.

சமீபத்திய பதாகை இதழில் தி. இரா. மீனாவின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கும் பத்மராஜுவின் “படகின் மேல்” மறுபடியும் ஒரு குறிப்பிடத்தக்க சிறுகதை என்று நான் நினைக்கிறேன். கதைசொல்லி படகில் பிரயாணம் செய்கிறவர். அந்தப் படகில் வழியில் ஒரு ஜோடி ஏறிக் கொள்கிறது. அவன் பெயர் பட்டாலு. ரங்கி என்பது அவள் பெயர். ரங்கி எப்படிப்பட்டவள்  என்கிற சித்திரம் இவ்வாறு கதையில் வருகிறது:

பட்டாலு உன் கணவனா?”  நான் கேட்டேன்.

அவன் என்னுடையவன்!பதிலளித்தாள்.

இவள் சிறுமியாக இருக்கும்போதே அவன் மயக்கிவிட்டான். கல்யாணம் செய்து கொள்ளவில்லை. இப்போது வேறு ஒரு பெண் இருக்கிறாள். அவள் எங்கிருக்கிறாள் ரங்கி?” தொழிலாளி கேட்டார்.

கொவ்வூரில். அவளுக்குச் சின்ன வயது. என்னைப் போல கஷ்டப்பட்டாள், அவள் என்னைவிட மோசமாக இருப்பாள்.”

பின் ஏன் நீ அவனுடன் இருக்கவேண்டும்?” கேட்டேன்.

அவன் என்னுடையவன்எல்லாவற்றையும் விளக்கிவிட்டதைப் போல பதில் சொன்னாள்.

ஆனால் அவனுக்கு இன்னொருத்தி இருக்கிறாளே.”

நான் இல்லாமல் அவனால் என்ன செய்யமுடியும். ஒருவனுக்கு எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அவன் ராஜா. யாரும் அவனைப் போல இருக்க முடியாது. நான் சொல்கிறேன்

இப்படி ஒரு மனநிலை எப்படி ஒரு பெண்ணுக்கு வாய்த்திருக்கிறது என்று ஒரு பிரமிப்பும் ஆச்சரியமும்  ஏற்படுகிறது. தி.ஜா.வின் அம்மணியின்  மீது அவ்வப்போது என் மேல் இடறி விழும் நம்பகத்தன்மையில்லாமை இங்கு விலகி நிற்கிறது.

ரங்கியை இழுத்துக் கொண்டு பட்டாலு ஓடிப் போன போது அவள்  இளமையும், துடிப்புமாக இருந்தாள். ஒரு நாளிரவு குடிசைக்குள் இவளைப் பூட்டி வைத்துவிட்டு குடிசைக்குத் தீ வைத்து விட்டான். இவள் எரிந்து சாம்பலாகும் நிலைக்கு வந்துவிட்டாள். எதற்காக தீ? ரங்கி சொல்கிறாள்:

இப்போது அவனுடனிருப்பவள். என் படுக்கையிலே அவளைப் படுக்க வைத்து, தானும் படுத்துக் கொண்டான். என் கண் முன்னாலேயே! இருவரும் குடித்திருந்தனர். நான் அவள் மேல் விழுந்து பிராண்டினேன். அவன் குறுக்கே புகுந்து என்னை அடித்துக் காயப்படுத்தினான். நள்ளிரவில் அவளை அழைத்துக் கொண்டு எங்கோ போய்விட்டான். திரும்பவும் வந்தான். அவனை வீட்டுக்குள் விடாமல் திட்டித் தீர்த்தேன். கதவருகே விழுந்து குழந்தையைப் போல அழுதான். எனக்கு மனமிளகி விட்டது. அருகில் உட்கார்ந்தேன்.என்னைக் கட்டிக் கொண்டு நெக்லஸைத் தரும்படி கேட்டான். எதற்கென்றேன். அவளுக்காகஎன்றான். அந்தப் பெண் இல்லாமல் தன்னால் வாழ முடியாதென்றழுதான். என் கோபத்திற்கு அளவில்லாமல் போனது. அவனை வெளியே தள்ளி கதவைத் தாளிட்டேன். தட்டிப் பார்த்துவிட்டுப் போய்விட்டான். தூங்க முடியாமல் வெகுநேரம் தவித்தேன் ஒரு வழியாக நான் தூங்கிய பிறகு வீடு தீப்பற்றிக் கொண்டது. அவன் குடிசையை வெளியே பூட்டிவிட்டு தீ வைத்து விட்டான். கதவைத் திறக்க முயற்சித்தேன். இரவு நேரமென்பதால் என் கூச்சல் அக்கம்பக்கத்தவர்களுக்குக் கேட்கவில்லை. மயக்கமானேன். அந்த நிலையில் அக்கம்பக்கத்தவர்கள் என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும். மறுநாள் போலீஸ் அவனைக் கைது செய்தது. ஆனால் அவன் இதைச் செய்திருக்க மாட்டானென்று நான் உறுதியாகச் சொன்னேன். அன்று மாலை வந்து மணிக்கணக்கில் அழுதான். சில சமயங்களில், குடித்திருக்கும்போது அப்படித்தான் அழுவான். ஆனால் குடிக்காத போது அவன் மிக வேடிக்கையானவன். நான் நெக்லஸை அவனிடம் கொடுத்து விட்டேன்.”

பத்மராஜுவின் ரங்கியைப் பார்த்து ஏமாளி என்று எரிச்சல் வருவதில்லை. ஏளனமாகப் பார்க்கத் தோன்றுவதில்லை. வெறுப்போ, பரிதாபமோ இல்லை கசப்போ ஏற்படுவதில்லை. அவளது காதல், அவள் காண்பிக்கும் பரிவு, புரிந்து கொள்ளல் எல்லாமும் அவளது பின்னணிக்கு முன்னால் விஸ்வரூபம் எடுக்கின்றன. புத்திசாலித்தனத்தைப் படிப்பாலல்ல மனதால் கூட ஒருவர் தன்னிடம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று இந்தப் பெண் நிரூபிக்கிறாள். அவள் தன் இழுபறியான வாழ்க்கையைப் பற்றிய புகார் எதுவுமில்லாமல் நிச்சிந்தையாக நடமாடுவது அவள் மீது மிகுந்த மரியாதையை எழுப்புகிறது.

மூல ஆசிரியரின் கட்டுக்கோப்பான நுட்பமான கதையின் உள்ளடக்கம்  சரளமான தமிழில் வந்திருக்கிறது.

(பின் குறிப்பு: மொழிபெயர்ப்பாளர் இதை எழுதுபவரின் உறவினர். பத்மராஜுவின் சிறந்த எழுத்து பற்றி எழுத வேண்டிய உந்துதல் இதைப் பின்னுக்குத் தள்ளி விட்டது)

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.