அஞ்சலி

என்   இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்

தமிழில் : தி. இரா. மீனா

இந்த அழகான பூமியில் எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த காலம் முழுமையும் கழிந்திருக்கிறது. எனக்கு மேலும் கால அவகாசமில்லை. காலமிருப்பது, என்பது அல்லாவிற்கு— கடவுளுக்குத்தான். அவன் காலத்திற்கு முடிவேயில்லை, அது முடிவற்றது; காலம் முடிவற்றது.

இந்த நாள் வரை நான் காலையில் படுக்கையிலிருந்து எழும்போதும், எப்போதும் காலைப் பொழுதாக இருக்காதபோதும் நான் காலத்திற்கு வணக்கம் சொல்கிறேன்; முடிவற்ற காலத்திலிருந்து எனக்கு மேலும் ஒரு நாளை நீட்டித்ததற்கு கடவுளே நன்றி.

இந்து மற்றும் இஸ்லாமிய சந்நியாசிகள்- சூபி ஆகியவர்களுடன் நான் கழித்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன. உண்மையைத் தேடி  நான் அலைந்த நாட்கள் அவை. கடவுள் பற்றிய இணைச்சொற்களை நான் கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். ஏறக்குறைய நிர்வாணத்தோடு உட்கார்ந்து தலை முடியும், மீசையும் வளர, இடையீடின்றி சிந்தனைகளால் சூழப்பட்டிருந்தேன். பத்மாசனம் போட்டு “யோகாதண்டுவை” கையில் வைத்திருப்பதாகப் பாவித்தேன். அனைத்துலகச் சிந்தனைகளையும் நான் மனதிலிருத்தியிருந்தேன். என் தியானத்திலிருந்து மீளும்போது  சூரியன் ,சந்திரன், விண்மீன்கள், பால்வீதி, சூரிய மண்டலம், அண்டம் ஆகியவைகளுக்குக் கேட்கும்படியாக நான் “அஹம் பிரம்மாஸ்மி” என்று முணுமுணுக்கிறேன். அது சூபிக்கள் சொல்லும் “அனல் ஹஃ” (Anal Haq) என்பது தான்.

என்னுடைய “அனர்ஹ நிமிஷம்“ (Anargha Nimisham) தொகுதியில் “அனல் ஹஃ” பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். அன்று நான் இறக்கப் போகிறேன் என்று நினைத்தேன், நான் இல்லாமல் போவேன் என்று நினைத்தேன். இது வரை யதார்த்தம் உன்னையும் என்னையும் கூறாகக் கொண்டிருந்தது; ஆனால் இதற்குப் பிறகு நீ மட்டும்தான் யதார்த்தமாக இருப்பாய். அந்தக் கணம்தான் “அனர்ஹ நிமிஷம்”, விலைமதிப்பற்ற கணம்

எனக்கு மரணம் பற்றிய பயமில்லை. அது உண்மை; நான் மரணத்தை பயமுறுத்துகிறேன் என்பதும் இணையான உண்மைதான். மரணம் தவிர்க்க முடியாதது; அது தன் பட்டியல்களுடன் வரட்டும்.

பிறந்தது முதல் நான் மரணத்துடன் உராய்ந்திருக்கிறேன். ஒரு முறை கடுமையான விஷமுடைய கட்டுவிரியன் என் வலது காலைச் சுற்றிச் சூழ்ந்திருந்தது. இன்னொரு சமயத்தில் நல்ல பாம்பு என் இடது காலில்  தவழ்ந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் பல இரவுகளில் என் வீட்டில் நல்ல பாம்புகள் புகுந்திருக்கின்றன. கடைசி முறை அது மிக அணுக்கமாக வந்தது; நான் ஏறக்குறைய அதை மிதித்து விட்டேன்.

நான் இறந்து விட்டேன். இதற்குப் பிறகு யாராவது என்னை நினவு வைத்திருக்க வேண்டுமா? யாரும் என்னை நினைவு வைத்திருக்கத் தேவையில்லை என்பதுதான் என் அபிப்பிராயம். ஏன் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்? கடந்து போன வருடங்களில் எண்ணிக்கையற்ற கோடிக்கணக்கான மக்கள், ஆண், பெண்கள் இறந்திருக்கின்றனர். யாராவது அவர்களை நினைவில் வைத்திருக்கிறார்களா?

என் புத்தகங்கள் எத்தனை காலம் வாழும்? ஒரு புதிய பூமி உருவாகலாம். கடந்த காலத்தவை எல்லாம் புதியவற்றில் கரைந்து எதுவுமின்றி மறைந்து போகலாம். என்னுடையது என்று நான் சொல்லிக் கொள்ள என்ன இருக்கும்? என்னுடையது என்று சொல்லிக் கொள்ளும் ஓர் இம்மியளவான அறிவையாவது நான் இந்த உலகத்திற்கு அளித்திருக்கிறேனா? கடிதங்கள், சொற்கள், உணர்வுகள்–இவையெல்லாம் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தியிருக்கி்றவைதான்.

இரண்டு மூன்று முறைகள் என் எல்லைக்குட்பட்ட நிலையில் நான் தனியாக நின்று கொண்டு ,முழு நிலா மற்றும் எண்ணற்ற நட்சத்திரங்கள் உருவாக்கியிருக்கும் அச்சமும் மதிப்புமான அழகை கவனித்திருக்கிறேன் அதை உள்ளடக்கத் தவறி, பயத்தில் அழுது ஓடியிருக்கிறேன். அந்தப் பாலைவனத்தோடான முதல் சந்திப்பிலேயே நான் மரணித்திருக்க வேண் டும்..

அது அஜ்மர் அருகேயுள்ள ஏதோ ஓரிடம். நடு மதியப்பொழுது. நான் நடந்து கொண்டிருந்த பாதை பாலைவனத்தின் விளிம்பு. முன்பு அந்தப் பகுதியின் பள்ளங்களில் பாதசாரிகளுக்கு தங்கள் வழியைக் கண்டுபிடிக்க உதவும் வகையில் செம்பாறைக் கற்கள் அடையாளமாக இருந்தன. ஆனால் இப்போது பாலைவனக் காற்றின் வரட்சியால் மண்குவியல்கள் அந்தப் பாறைகளை மூடிவிட்டன. நான் வழி தவறிவிட்டேன். உஷ்ணமும், தாகமும் பொறுக்க முடியாதவையாக இருந்தன.

நான் வலதுபுறத்தை நோக்கிப் போயிருக்க வேண்டும் ;ஆனால் இடதுபக்கம் திரும்பி விட்டேன். இப்போது அந்தப் பாலைவனம் எல்லையற்று என் முன்னால் மிகுந்த வெம்மையோடு நீண்டிருந்தது. சூரியன் இரக்கமின்றி என் தலை மீது கொளுத்திக் கொண்டிருந்தது. திசையின்றி நான் நடந்து கொண்டிருந்தேன். பாதம் மண்ணில் புதைந்தது- அது குளிர்வது போல இருந்தது– சூரியனின் தகிப்பில் நான் எரிந்தேன் — பொறுக்க முடியாத தாகம். சோர்ந்து விழுந்தேன். ஆனால் நான் இப்போது ஒரு பெரிய கரிக்கட்டை துண்டுதான். மையப்பகுதியில்,உள்ளே ஒரு சிறிய சிவப்பு ஒளிவட்டம். அல்லா! அது என்ன?

அதுவும் கூட மறைந்தது. நான் நினைவிழந்தேன். எவ்வளவு நேரம் அந்த உருக்கும் வெம்மையில் கிடந்தேன் என்று தெரியவில்லை. பல மணி நேரமாக இருக்கலாம். நாட்களாக இருக்கலாம்.

அங்கு இறந்து கிடந்தேன் என்று வைத்துக் கொள்ளலாம். பல மணி நேரமாக இருக்கலாம். நாட்களாக இருக்கலாம். எனக்குத் தெரியாது.

அதை நினைத்துப் பார்க்கும்போது ஒரு நகைச்சுவை போல் தெரிகிறது. பூமியில் வாழ்க்கை என்பது ஒரு பெரிய “வேடிக்கைதான்”, கடவுளின் நாடகம்.

வி.கே.என். ஒரு முறை மரணம் பற்றி என்னிடம் கேட்டார். ”கடைசி நிமிடம் வரை அவர் கடத்துகிறார்” என்றேன்.

வைக்கம் முகமது பஷீர் இறந்துவிட்டார். செய்தி வருகிறது. ஏன் அவர் இறந்தார்? எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

பாருங்கள், இப்போது நான் இறந்து விட்டேன். என் இறப்பிற்குத் தகுந்த காரணங்கள் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். முடிவற்ற நேரம் எனக்கு இல்லை என்று நான் சொல்லவில்லையா?

நான் அனைவரையும் வணங்குகிறேன். மாமரத்தையும் வணங்குகிறேன்; பூமியின் எல்லா படைப்புகளையும். அண்டமே—நான் ஏதாவது உனக்குத் தீங்கிழைத்திருந்தால் என்னை மன்னித்துவிடு. எல்லோரும் என்னை மன்னியுங்கள்.

—————————–

நன்றி : Malayalam Literary Survey   April –Sep 1994  Kerala Sahitya Academy

 

 

 

 

விஜய் நம்பீசன்

அஞ்சலி- ஆங்கிலம் (நம்பி கிருஷ்ணன்):

The tiled walls did not in fact
Confine; they wrung from me definition
And made me what I am. Tell me what use

The pills, the fruit, nurse’s disgusted eye
Or Glucose, or molasses. No life is short
That at its centre has this clarity.

– From “Hospital” by Vijay Nambisan

Death has at least this advantage, it intrudes brutally into our indifferent lives and forces us to assume if only for a moment a mantle of humaneness wherein we try to remember someone we once knew. Vijay’s Muse drifted out of IIT Madras, my alma mater to become the unassuming Poet well-beloved in select circles of adoring readers. I too had once drifted in that haloed Institution with the grandiose ambition of being a littérateur. Fortunately, cowardice prevailed and I have managed to trundle along the boring grooves that were predestined for me. But there was a brief period in the early Nineties when I fiercely romanticized Vijay. His first collection of poems along with Jeeth Thayil (Gemini) had just come out and if I remember right, Dom Moraes had written a glowing introduction. I was bowled over by the sheer beauty and understated emotiveness of Vijay’s Madras Central and Grandfather’s Beard. I still remember wandering to and fro with the aforementioned book in my hand, trying to memorize those two poems by rote. I was mildly depressed and wanting to “carry my unwantedness somewhere else” I foolishly tried my hand at writing “a poem like grandfather’s beard”. Vijay had won the first prize at the poetry competition held by British Council and naturally I sent my poems there. How silly of me, to have ignored the warning that stared at me from the poem with its brutal politeness. Obviously, I was one of “those whom poetry disregards” – The poems were ghastly and I was no Vijay Nambisan. But sentimental romanticism dies hard in youth which holds on to its puerile dreams even in its twenties. “If I was not going to be a poet, then at least I should be a journalist like Vijay”, was the next pipe dream I would chase down the rabbit hole for a few months. Vijay used to be a roommate of my friend in Bombay and through him I finally got to talk to Vijay. We had arranged to meet the following month but events intervened and we never got to meet after all. Oddly enough that seems a fitting end to my fiercely romanticized idealization. (“Who needs to burst into fulfillment’s desolate attic?” Right?)

Years later I attempted to capture the magic of those two poems with my clumsy Tamil when I translated them for Solvanam. Today, Vijay “desperate with knowledge, opened wide by drink” seems to have taken his much beloved wantedness somewhere else. I am still the hopeless romantic I was so many years ago, and wish that I had sent my translations to Vijay just so I can imagine his smile as he reads them. RIP Vijay Nambisan.

அஞ்சலி – தமிழில் (நம்பி கிருஷ்ணன், பீட்டர் பொங்கல்):

குறைவளவெனினும் இந்த ஒரு சிறப்பு மரணத்துக்கு உண்டு: நம் சட வாழ்வினுள் மூர்க்கமாய்க் குறுக்கிட்டு, முன்னொரு காலத்தில் நாமறிந்திருந்த ஒருவரை இப்போது மீண்டும் நினைவுகூரச் செய்து ஒரு கணமேனும் நேயவுணர்வுகளை நம் மீது போர்த்துகிறது. விஜய்யின் படைப்பூக்க தேவதை, நான் படித்த அதே கல்லூரி, ஐஐடி மெட்ராஸிலிருந்து விலகி, ஆராதிக்கும் வாசகர் வட்டங்கள் சிலவற்றால் மிகவும் நேசிக்கப்படும் பாவனைகளற்ற கவிஞரானார். இலக்கியவாதியாய் வாழ வேண்டும் என்ற மகத்தான லட்சியத்தில் பிரபாவம் மிக்க அந்த அமைப்பில் நானும் ஒரு காலத்தில் திரிந்திருக்கிறேன். ஆனால் என் நல்லூழ்ப் பயன், கோழைத்தனமே வென்றது- எனக்கென விதிக்கப்பட்ட சலிப்பூட்டும் தடங்களில் வாழ்க்கைச் சக்கரம் இதுகாறும் புரண்டிருக்கிறது.

ஆனால் தொண்ணூறுகளின் துவக்க ஆண்டுகளில் ஒரு சிறு காலம் விஜய்யின் கவிதைகள் உயர்வு நவிற்சி உணர்வுகளால் என் உள்ளத்தைக் கனலெனத் தீண்டின. என் நினைவாற்றல் சரியாக இருக்கிறதென்றால், ஜீத் தாயில் கவிதைகளுடன் அவரது முதல் கவிதை தொகுப்பு (ஜெமினி) அப்போதுதான் பதிக்கப்பட்டிருந்தது, டாம் மொரேஸ் உச்சி முகர்ந்து ஒரு முன்னுரை அளித்திருந்தார். விஜய்யின் ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ மற்றும் ‘தாத்தாவின் தாடி’ போன்ற கவிதைகளின் சன்னமாய்ச் சொல்லப்பட்ட உணர்வெழுச்சிகள் மற்றும் அப்பட்டமான அழகு என்னை நிலைதடுமாறச் செய்திருந்தது. மேற்கூறப்பட்ட புத்தகமும் கையுமாய் நான் அலைந்து திரிந்த நாட்கள் இன்னும் நினைவிருக்கின்றன, அந்த இரு கவிதைகளையும் மனனம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தேன். மித மன அழுத்தத்தில் இருந்த நான், “என் வேண்டாமையை வேறெங்கோ கொண்டு செல்ல” விரும்பி நான் முட்டாள்தனமாக, “தாத்தாவின் தாடி” போன்ற ஒரு கவிதை எழுத முயற்சித்தேன்.

பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய கவிதை போட்டியில் விஜய் முதல் பரிசு வென்றிருந்தார். எனவே நானும் இயல்பாகவே என் கவிதைகளை அதற்கு அனுப்பினேன். என்ன ஒரு முட்டாள்தனம் என்று இப்போது தோன்றுகிறது, என் முன்னிருந்த கவிதையின் மூர்க்க நற்பாங்கு தெளிவாகவே எனக்கு விடுத்த எச்சரிக்கையை நான் அலட்சியப்படுத்தியிருந்தேன். “கவிதைக்கோர் பொருட்டாய் இல்லாதவர்களில்” நானும் ஒருவன்- என் கவிதைகள் முகத்தை வெளிறச் செய்வன, நானொன்றும் விஜய் நம்பீசன் அல்ல. ஆனால் இளமைப்பருவத்தின் மிகையுணர்ச்சி கலந்த உயர்வு நவிற்சிமைகள் அவ்வளவு சீக்கிரம் அழிவதில்லை, அது தன் இருபதுகளிலும் சிறுபிள்ளைத்தன கனவுகளைக் கைவிடுவதில்லை. நான் கவிஞனாக முடியாதென்றால், குறைந்தபட்சம் விஜய் போல் ஒரு பத்திரிக்கையாளனாவது ஆக வேண்டும் என்ற பகல்கனவு அடுத்த சில மாதங்கள் நான் என்னைத் தொலைத்துக் கொள்ளும் ஆகாயக் கோட்டையாக இருந்தது.

மும்பையில் என் நண்பன் ஒருவனுடன் சக அறைவாசியாய் விஜய் இருந்ததுண்டு என்பதால் அவன் மூலம் நான் இறுதியில் அவருடன் பேச முடிந்தது. அடுத்த மாதம் இருவரும் சந்தித்துக் கொள்ளவும் ஆயத்தங்கள் செய்திருந்தோம், ஆனால் வேறு நிகழ்வுகள் குறுக்கிட்டன, என்னால் கடைசி வரை அவரைச் சந்திக்கவே முடியவில்லை. ஆனால் ஒரு வினோதமான வகையில், தீவிர நவிற்சியுணர்வுகளின் ஆதர்சங்கள் இப்படியொரு முடிவுக்கு வருவதும் பொருத்தமாகவே இருக்கிறது (“நிறைவின் வெற்று பரணில் நாம் ஏன் குதிக்க வேண்டும் “, இல்லையா?).

பல ஆண்டுகளுக்குப்பின் போதாமைகள் நிறைந்த என் தமிழில் அந்த இரு கவிதைகளின் மாயத்தையும் கைப்பற்ற முயற்சி செய்தேன்- சொல்வனம். “அறிவின் தீவிரத்தில், குடியால் அகலப் பிளக்கப்பட்ட” விஜய் அவரது மிகவும் விரும்பப்பட்ட அவசிய இருப்பை வேறெங்கோ கொண்டு சென்றுவிட்டது போலிருக்கிறது. அத்தனை ஆண்டுகளுக்கு முன்னிருந்த உயர்வு நவிற்சி உணர்வுகள் திருத்தமுடியாத வகையில் இன்றும் என்னோடு இருக்கின்றன- அவற்றை வாசிக்கையில் அவர் முறுவலிப்பதை என் கற்பனையில் அனுபவிப்பதற்காக என் தமிழாக்கங்களை நான் விஜய்க்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன். விஜய் நம்பீசன், RIP.

oOo

விஜய் நம்பீசன் கவிதைகள் இரண்டு – தமிழாக்கம், நம்பி கிருஷ்ணன்

மெட்ராஸ் சென்ட்ரல்

கருப்பு ரயில் பிளாட்பாரத்திற்குள் வந்து
உஸ்ஸென்று சத்தமிட்டுக் கொண்டே மௌனமாகிறது ,
சூடு செய்யப்பட்ட எஃகிரும்பை நீரிலிட்டதைப் போல.
போர்ட்டர்களிடம் சொல்லுங்கள் அவசரப்படுத்த வேண்டாமென்று:
நல்லது தானே, வெறித்த பயணத்திற்குப் பிறகு
இடர்கள் இன்னமும் சூழ்ந்திருக்க, சற்று நேரம் இளைப்பாறுவது.

நீளமான தண்டவாளங்கள் தொலைவில் சென்று மறைகின்றன.
அங்கே நான் அறிவதற்கு முன்னதாகவே நாளை வந்து சேரும்.
நான் ஒரே சமயம் இரண்டு இடங்களில் இருக்க இயலாதென்பது
அடிவழக்கு. வாருங்கள், நாமிருவரும் சென்று பருகுவோம்
ஒரு கப் கேவலமான டீயை கேவலமான ஓர் உணவகத்தில்.

இளைப்பாறுவது கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் பயணம் விலக விலக
மேலும் மேலும் மெதுவாக. என் தலை சுற்றுகிறது.
இப்போதே சிகரெட் பிடிக்க வேண்டும் என்றெனக்குத் தோன்றவில்லை.
அதற்கெல்லாம் நேரமிருக்கிறது. முதலில் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்
நூறாவது முறையாக, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று.

பர்ஸ் பாக்கெட்டில், வெள்ளை நைலான் பையின்
நேர்த்தியான அடியுறையில் பத்திரங்கள் பத்திரமாக;
புத்தகமும், எனது குறிப்புகளும் வெளியுறையில்;
பழுப்பு நிற பெட்டியும் இருக்கிறது வார்கள் எல்லாம் பாதுகாப்பாக கட்டப்பட்டு.
பயணத்தை தொடங்கிய போது இருந்ததெல்லாம் என்னிடம் இருக்கிறது

வெளியே செல்வதற்காக எடுத்த முதலடிகளின் நினைவும் கூட,
குழப்பத்துடன், ரொம்பவும் குழப்பத்துடன்.
நினைக்கையில் பயமாக இருக்கிறது, நமக்கிவ்வளவு அதிகாரமிருப்பதை:
நம் நிலைகளை மாற்ற, நம் வருதல் பெயர்தல்களை ஆணையிட:
எங்கு வேண்டப்படவில்லை என்பதை அறிந்து
நம் வேண்டப்படாமையை வேறெங்கோ எடுத்துச் செல்ல..

(Madras Central, Vijay Nambisan)

oOo

தாத்தாவின் தாடி

தாத்தாப் பூச்சியை தாத்தாவின் தாடி என்றும் அழைக்கிறார்கள்.
வெள்ளிழைகளுடன் ,வளி வீசும் விதை.
இது போன்ற தாடியை என் தாத்தாவிடம் நான் பார்த்ததே இல்லை.
ஆனாலும் சிறகுகள் முளைத்த காற்றின் இந்த அவதாரம்,
உலகையே தன்னுள் வைத்திருக்கும் இக்கருவாலியின் இதயம்
எங்கும் பரவியிருக்க காற்றை அனுப்பி வைக்கும்..
தாத்தாவின் பார்வையில் ஏதோ ஒன்று அதனிடமும் உள்ளது –
அவர் கூறுவார், அவரால் பாதிக்கப்படாதவர்கள் இருக்கிறார்கள்,
அவரை பாதிக்காதவர்களும் இருக்கிறார்கள்-
அதே போல் இந்த ரகசியமும் (பூமியை வேர்களால் பற்றும்
எந்த பச்சை செடியுடனும் என்னால் இணைத்துப் பார்க்க இயலாத,
அனேகமாக தொட்டுணரக்கூடிய ஒரு விதமான முத்தம் ,
உதட்டால் நான் தொட விரும்பும் அப்படி ஒரு முத்தம்)
மெல்லிய காற்றில் மிதந்து செல்லும், நீங்கள் பார்க்கையில்
அங்கிருக்கும், பார்க்க முடியாவிட்டாலும் உங்களுக்கு
பெரிய நஷ்டம் ஒன்றுமில்லை.

என் கவிதை என் தாத்தாவின் தாடியைப் போல
இருக்க வேண்டும், இளங்காற்றில்
விசாலமாக,மேலே மேகத்தைப் பார்த்து
சிரித்துக் கொண்டு. கவிதையால் பாதிக்கப்படாதவர்கள்
இருக்கிறார்கள்.கவிதை புறக்கணிக்கும் மக்களும்
இருக்கிறார்கள். எனக்கொரு ஆசை, ஒரு கவிதை எழுத வேண்டும்
தாத்தாவின் தாடியைப் போல.

(Grandfather’s Beard, Vijay Nambisan)

நன்றி:  சொல்வனம்

oOo

இளம் இந்திய எழுத்தாளனின் வாழ்வும் காலமும் – விஜய் நம்பீசன் (தமிழாக்கம் – பீட்டர் பொங்கல்)

“மரபும் தனித்திறனும்” என்ற கட்டுரையில் எலியட் எழுதினார்:

“கலைஞனின் தேர்ச்சிக்குத் தக்க வகையில், அனுபவமுறும் மனமும் படைக்கும் மனமும் அவனுள் முழுமையாய் பிரிந்திருக்கும்”.

அதிலும் குறிப்பாய், ஒரு தொழில்முறை பத்திரிக்கையாளனுக்கு, அதிலும் இக்காலத்தில், இந்த இரு மனங்களையும் பிரித்து வைத்திருப்பது அவசியம் மட்டுமல்ல, தவிர்க்க முடியாததும்கூட.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் எழுதப்பட்ட ‘எனிமீஸ் ஆஃப் ப்ராமிஸ்’ என்ற புத்தகத்தில் சிறில் கானலி, இளம் எழுத்தாளன் ஒருவன் ஏன் மிக விரைவில் படைப்பூக்கத்தை இழக்கிறான் என்பதற்கான கூறுகளை அடையாளப்படுத்தினார். அந்தப் பட்டியலை இக்காலத்துக்குத் தக்க வகையில் மேம்படுத்தியாக வேண்டிய நேரம் இது. சம்சாரத்தின் துர்ச்சங்கம் குறைந்து வருகிறது; முன்னைவிட மதுவும் போதை மருந்துகளும் ஆற்றல் வாய்ந்தவையாய் இருக்கின்றன; பத்திரிக்கைத்துறையைத் தொழிலாய்க் கொண்டது என் எழுத்துக்கு உதவியிருக்கிறது. ஆனால் தன்னைக் குறித்து உறுதியாய் இல்லாத ஒரு எழுத்தாளனை அது எப்படி அழிக்கக்கூடும் என்பதை எளிதில் காண முடிகிறது.

மேலும் இளம் இந்திய எழுத்தாளனுக்கு மட்டுமே உரிய சில வினோத பிரச்சினைகள் இருக்கின்றன: அவையனைத்தும் வறுமை சார்ந்தவை- வசதியின்மை, அவனது அறிவாற்றலை உறிஞ்சிக் கொள்ளாமல் அவனை ஆதரிக்கும் பணிகள் ஊதியம் அளிப்பதில்லை;- இந்தியா குறித்த அறிவின் வறுமை, ஏனெனில், பிற மொழிகளில் உள்ள எழுத்தாளர்களுடன் உரையாடுவது கடினமாக இருக்கிறது; – ஒத்த மனம் கொண்டவர்கள் உறவு இல்லாததன் வறுமை, நம் சமூகம் பிளவுபட்டுக் கிடக்கிறது; 1980களின் சிந்தனை வறுமை, கோட்பாடுகளின் வறுமை.

எழுத்தாளன் காரணமாய் இல்லாத வேறொரு குறிப்பிடத்தக்க பாதக நிலை, இந்தியாவுக்கு வெளியே அவனுக்கு வரவேற்பில்லாததும், மேற்கில் பாராட்டப்பட்ட இந்திய எழுத்தாளர்களின் புகழில் ஒரு சிறிதும் நம்மில் பிரதிபலிக்கப்படுவது இல்லை என்பதும்தாம். சோவியத் யூனியன் பிரிந்தவுடன் ருஷ்ய எழுத்துக்கென்று ஒரு புக்கர் பரிசு நிறுவப்பட்டதை இங்கு கவனிக்கலாம்.

ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளரின் வினோதச் சுமை, வேற்று மொழியில் எழுதுவதால், அதுவும் தன்னை ஆட்சி செய்தவர்களின் மொழியில் எழுதுவதால், தன் பின்புலத்துக்கும் சூழலுக்கும் உண்மையானவனாக இருப்பதில்லை என்று அவன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை தாங்கிக்கொண்டுதான் அவன் எழுதியாக வேண்டியிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு எத்தனை அபத்தமானது என்பது முழுமையாய் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

ஆனால் அதே சமயம் ஆங்கிலத்தில் எழுதும் இளம் இந்திய எழுத்தாளனுக்கு ஒரு மாபெரும் சாதக நிலை உள்ளது- அவன் துவக்கத்தில் இருக்கிறான். அவனுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய இலக்கியம் எப்போதும் விரிந்துகொண்டே இருக்கிறது, மேலும் ஆழப்படுகிறது, மேலும் பரவலாய் வாசிக்கப்படுகிறது. நாம் மிகக் குறைவாகவே இது குறித்து உணர்ந்திருக்கிறோம், ஏனெனில் ஒவ்வொரு நாளும் மற்றுமொரு நாள் போல்தான் உள்ளது; ஆனால், நாம் இன்று இன்று இவ்வாறிருக்கிறோம் என்ற எளிய காரணத்தால் நம் கரங்களில் மாற்றத்துக்கான மகத்தான ஆற்றல் உள்ளது.

நம் வேர்களைத் தேடியும் படைப்பூக்க உந்துதல் தேடியும் எத்திசை திரும்புவது என்பது நாளுக்கு நாள் இந்த உலகளாவிய கிராமத்தில் கடினமாகிக் கொண்டு வருகிறது. இது நல்லதுதான், ஏனெனில் இது நம் வளங்களை நோக்கி நம்மைத் திருப்புகிறது, நம்மைப் பற்றி நாம் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாய் இருப்பதை அவசியப்படுத்துகிறது.

நன்றி: The Life and Times of a Young Indian Writer, Vijay Nambisan, Indian Literature, May-June, 1993 

oOo

ஒளிப்பட உதவி – The Hindu

அஞ்சலி

உலக அளவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரு எழுத்தாளர்களை இவ்வாரம் இழந்திருக்கிறோம்.

“Things are never as bad as they seem.” – ‘To kill a Mockingbird’ தன்னுள் உறைந்திருக்கும் துயரைத் தாண்டி வாசகனுக்கு நம்பிக்கை அளிக்கும் நாவல். பெரிய பிரச்சனைகளை எளிமைப்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டாலும், நாவல் அளிக்கும் ஆசுவாசத்தின் கீற்று தேவையான ஒன்றே. “Mockingbirds don’t do one thing but make music for us to enjoy. They don’t eat up people’s gardens, don’t nest in corncribs, they don’t do one thing but sing their hearts out for us,” என்று ஹார்ப்பர் லீ எழுதியது அவரது எழுத்துக்கு மட்டுமல்ல, அனைத்து கலைகளுக்கும் பொருந்தும். லீ மறைந்தாலும் அவரது இசை இலக்கிய உலகை என்றும் நிறைத்திருக்கும்.

 

‘The Library as a Model for Culture: Preserving, Filtering, Deleting & Recovering’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய உரையில், “….A labyrinthine library is the equivalent of our culture…. insofar culture is a system of ideas, values” என்பதாக உம்பர்ட்டோ ஈக்கோ சொல்கிறார். அவர் 30000துக்கும் மேற்பட்ட புத்தங்களை தன் தனிப்பட்ட நூலகத்தில் வைத்திருந்ததாகத் தெரிகிறது. “I have always imagined that Paradise will be a kind of library,” என்று கூறிய போர்ஹெஸ் போலவே ஈக்கோவும் சொர்க்கம் என்பதை நூலகமாகவே உருவகித்திருக்கக்கூடும். தங்கள் சொர்க்கத்தில், ஈக்கோவும், போர்ஹெஸும், பதிப்பிக்கப்பட்ட அனைத்து நூல்களும் முடிவில்லாமல் விரியும் ஏதோவொரு நூலகத்தில், இப்பொது தத்துவமும் இலக்கியமும் பேசிக் கொண்டிருக்கலாம்.

ஒளிப்பட உதவி – Pinterest, Interview

அஞ்சலி கட்டுரை: ராபின் வில்லியம்ஸ் – உயிருள்ள உணர்ச்சிப்பிழம்பு

பாஸ்டன் பாலா

ராபின் வில்லியம்ஸ் என்றதும் அவர் நடித்த கதாபாத்திரங்கள் பலதும் கலந்துகட்டி நினைவிற்கு வந்துபோகிறது. துணையெழுத்துகள் உச்சரிப்பை சொல்லிக் கொடுக்காத, ஆங்கிலத் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்த புதுதில் இவருடைய படங்கள் மட்டும்தான் எனக்கு எளிதாகப் புரிந்தன. என்னால் மனம் விட்டுச் சிரிக்க முடிந்தது. ஜுமாஞ்சி ஆகட்டும், ஹுக் (Hook) ஆகட்டும், அலாவுதீன் ஆகட்டும்… எல்லாமே கோமாளித்தனமும் கிறுக்குத்தனமும் சரி பாதி கலந்து ஜாலியாக இருந்தது.

ஒரு முறை, அலுவலின் மதிய நேரத்தில் சாப்பாட்டுக் கடையின்போது பேசுவதற்கு பொதுவான விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், ‘உனக்குப் பிடித்த சினிமா நடிகர் யார்?’ எனக் கேட்டு வைத்தார்கள். உச்சரிப்பதற்கு எளிமையான பெயர்; அதே சமயம் புகழ்பெற்ற பெயர், எனவே ‘ராபின் வில்லியம்ஸ்’ என்கிறேன். அவர்கள் முகத்தில் அதிர்ச்சியா, குழப்பமா, பயமா எனக் கண்டுபிடிக்க முடியாத அசட்டு உணர்வு. ‘அப்படியா…! உனக்கு வேறு யாருமே கிடைக்கலியா! உனக்கு என்ன பிரச்சினை? சந்தோஷமாகத்தானே இருக்கிறாய்?’ என கரிசனத்துடன் வினவினார்கள். (more…)

அஞ்சலி : குஷ்வந்த் சிங் – வண்ணமயமான வாழ்க்கை

– வெ. சுரேஷ் – 

சென்ற மாதம் மறைந்த மிக மூத்த எழுத்தாளர் (99 வயது!) குஷ்வந்த் சிங் தமிழ் இலக்கிய உலகத்தாரால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை, மறைவின்போதும். அச்சில் வரும் இலக்கியச் சிறுபத்திரிக்கைகளைப் பற்றி அதற்குள் சொல்ல முடியாது, ஆனால் தமிழ் இலக்கியம் சார்ந்த வலைதளங்களைப் பார்க்கும்போது அப்படிதான் தோன்றுகிறது (சொல்வனம் இணைய இதழில் வெங்கட் சாமிநாதன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மற்றபடி அவரைப் பற்றி ஆனந்த விகடனில் தான் எழுதிய கட்டுரை வெளிவரவிருப்பதாக சாரு நிவேதிதா தன் வலைப் பக்கத்தில் அறிவித்துள்ளார்).

நம் வாரந்தர வணிகப் பத்திரிக்கைகள் வழக்கம் போல் அவரைப் பற்றி பொதுபுத்திக்கு எப்போதுமே தெரிய வந்திருந்த செய்திகளையும் அவரது ஏ ஜோக்ஸ் மற்றும் கிளுகிளுப்பான பக்கங்களை வெளியிட்டும் நினைவு கூர்ந்தன. The Ilustrated Weekly ஆசிரியராக அவர் செயல்பட்டு அப்பத்திரிக்கையைப் பிரபலமாக்கியதும் நினைவுகூரப்பட்டது. Train to Pakistan என்ற நாவலின் பெயர் உதிர்க்கப்பட்டதும் வாஸ்தவம்தான். ஆனால், தமிழின் தீவிர இலக்கிய உலகம் அவரை முற்றிலுமாகப் புறக்கணித்தேவிட்டது என்று தோன்றுகிறது. (more…)