சீலையம்பட்டி கம்மாயில் இருந்து சின்னமனூர் 4 கிலோ மீட்டர்தான். கம்மாய் கரையில் நின்று பார்த்தாலே சின்னமனூரின் சிவகாமி அம்மன் கோவில் கோபுரம் தெரியும். தென்னைமரங்களுக்கிடையே அதன் கோபுரம் தலை தூக்கிப் பார்க்கும்.கற்கோபுரத்திற்கு வெளிற் மஞ்சள் சுண்ணாம்பு அடித்திருப்பார்கள். லாரியை கம்மாய்க் கரையில் கொண்டு வந்து நிறுத்தினார் மலைச்சாமி அண்ணன். பச்சை நிற முரட்டுத் தார்ப்பாய் போர்த்திக் கட்டப்பட்ட உருளைக்கிழங்கு லோடு லாரியின் பின்னால் இருந்தது. ஆக்ஸிலேட்டரை இரண்டு முறை அழுத்தி லாரியை உறும விட்டு அணைத்தார். அவர் வண்டியை விட்டு இறங்கியதும் லுங்கியை கழட்டி டிரைவர் சீட்டில் போட்டுவிட்டு காக்கி டவுசருடன் கரையோரம் இருந்த புதர்களுக்குள் வெளிக்குச் செல்ல ஊடுறுவினார்.
லாரியின் க்ளீனர் முத்துவேலும் நானும் லாரியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக கரையில் இறங்கினோம். முத்துவேல் லாரியின் இடையில் தொங்கிக்கொண்டிருந்த இரும்பு வாளியைக் கழட்டி எடுத்துக்கொண்டு கம்மாயை நோக்கிச் சென்றான். ஊருக்கு வந்துவிட்டோம் என்ற உணர்வு எனக்கு ஒரு நிம்மதியை கொடுத்தது.. பரந்து விரிந்த கம்மாய் நிரம்பி வழிந்தது.. பொதுவாக தண்ணீர் திட்டுக்களுடன் தான் இந்த கம்மாயை நான் பார்த்திருக்கிறேன்.. அப்பொழுது கம்மாயில் மீன் பிடிக்க டெண்டர் எடுத்தவர்கள் ஆட்களைக் கொண்டு தண்ணீர் திட்டுகளில் சல்லடை போட்டுக்கொண்டிருப்பார்கள்.அப்பொழுதெல்லாம் சிசைக்கிளின் பின்னே கூடையில் துள்ளிக்கொண்டிருக்கும் அயிரை மீன் சின்னமனூர் தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும்..
முத்துவேல் தண்ணீரைக்கொண்டு வந்து லாரியின் கண்ணாடி முகத்தில் விசிறி அடித்தான். “ஊருக்குப் போயிரலாமே.. இங்கன நிக்கிறோம்” என்றேன். “எழவப் பாத்த வண்டிய அப்டியே கொண்டு போக வேண்டாம்னு மலைச்சாமியண்ணே நெனைக்கிறாப்ல.. அதேன்.. லாரிய லேசா கழுவிவிட்டு நாமளும் குளிச்சிட்டு ஊருக்குள்ள போயிறலாம்.. வெளிய கிளிய போறதுன்னா போய்ட்டு அப்டியே ஒரு முங்கு போட்டு வா.. நீதேன் மொதல்ல குளிக்கனும்” என்றான் முத்துவேல். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. இங்கு எதையும் என்னால் மறுத்து பேச முடியாது என்று தோன்றியது. சட்டை பேண்ட்டை கழட்டி போட்டுவிட்டு கம்மாய் நோக்கி சென்றேன். தண்ணீர் வெதுவெதுவென்றிருந்தது. இறங்கி இரண்டு முறை முங்கினேன். வெறும் கையால் உடலைத் தேய்த்துக்கொண்டேன். மலைச்சாமியண்ணன் தூரத்தில் புதர்களுக்குள் இருந்து வருவது தெரிந்தது. நான் வேகமாக தண்ணீருக்குள் முங்கிவிட்டு கரையேறிக்கொண்டேன். மலைச்சாமியண்ணன் கம்மாயில் இறங்கி கால் கழுவிக்கொண்டு வெளியே வந்தார். சட்டையைக் கழட்டி நீட்ட முத்து வேல் போய் வாங்கிக்கொண்டான். மலைச்சாமியண்னன் தண்ணீருக்குள் இறங்கினார். என் துணிகளை ஒரு ப்ளாஸ்ட்டிக் பையில் வைத்து விட்டு வேறு உடை மாற்றிக்கொண்டேன். குளித்த உடம்பு காற்றை குளிராக உணர்ந்தது. மலைச்சாமியண்னன் ஈரமான உடம்புடன் வந்து டிரைவர் சீட்டில் கிடந்த துண்டை எட்டி எடுத்து உடம்பை துடைக்க தொடங்கினார். “பாடிய சின்னமனூருக்கு கொண்டு வருவாங்களா? என்றேன்.. மலைச்சாமியண்னன் “தெரில மணி.. முஸ்லீம்க சடங்கு என்னான்னு நமக்கு தெரியாதுல.. அந்தாளு சொந்தக்காரவுக எல்லாம் சின்னமனூருதேன்.. இவிங்ய இங்கருந்து மெட்ராசுக்கு போறாங்யலா இல்ல பாடிய இங்க கொண்டு வர்றாங்யளான்னு தெரில.. என்றார்.
சென்னையிலேயே வைத்து எல்லா சடங்கும் செய்யப்பட்டு விட்டது என்பது நாங்கள் சின்னமனூர் லாரி ஆபிஸ் சென்றதும் அறிந்துகொண்டோம். .. “பாடி தாங்காதுன்னு சொல்லி மெட்ராசுலயே வச்சு செஞ்சுட்டாங்யலாம்.. இங்கருந்து ஒறவுக்காரவுங்க யாரும் பெருசா போன மாதிரி தெரியல” என்றார் லாரி ஆபீஸ் கணக்காப்பிள்ளை. லாரியில் இருந்து உருளைக்கிழங்கு லோடுகளை கூலி ஆட்கள் இறக்க ஆரம்பித்தனர். சென்னையில் பாரீஸ் கார்னரில் லோடுகள் ஏற்றிக்கொண்டிருக்கும் போது தான் அவரை நான் பார்த்தேன். லாரியின் பின்பக்கம் நின்று பீடி பிடித்துக்கொண்டிருந்தார்.. தங்கவேல் மாமா என்னை கொண்டு போய் அங்கு இறக்கிவிடும் பொழுது பீடியை கீழே எறிந்துவிட்டு வந்து அவர் மாமாவிடம் பேசினார். வெளுத்துப்போன ஒரு வெள்ளைச்சட்டையில் நீலக்கலரில் லுங்கியும் கட்டியிருந்தார். தலையில் ஒரு அழுக்கேறிய குல்லா அணிந்திருந்தார். பல்லெல்லாம் கரையாய் இருந்தது. நாற்ப்பதைந்து வயதிருக்கும். மாமா பெரிதாக எதுவும் அவரிடம் பேசிக்கொள்ளவில்லை. என்னைக்கொண்டுபோய் மலைச்சாமியண்னனிடம் விட்டார். “பஸ்ஸேத்தி விட வேண்டியதுதான இவன.. லாரில ஒக்காந்துகிட்டேதான வரணும்..” என்றார் மலைச்சாமியண்ணன். ” பொங்கலுக்கு பஸ்ஸேல்லாம் புல்லு.. டிக்கெட்டு எதுவும் இல்ல.. என்னா பண்ண சொல்ற… இவனும் காலேஜ்ல ஆறு நாள் லீவு விட்டங்ய.. ஊருக்கு போயே தீருவேன்னுட்டியான்.. எங்காக்கா போன போட்டு எப்டியாவது அனுப்ச்சி விட்ருன்னுட்டாக… அதேன்..” என்றார் மாமா..
லாரியின் க்ளீனர் முத்துவேல் என்னுடன் சின்னமனூர் ஹைஸ்கூலில் படித்தவன்.. என்னைப்பார்த்ததும் மாப்ள என்று கட்டிக்கொண்டான்.. ஊர் போய் சேரும் வரை அவனுடன் பள்ளிக்கதைகள் பேசலாம்.. நான் லாரியில் ஏறி என் பையை கால் மாட்டில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.. முத்துவேல் இன்னும் பத்து நிமிடத்தில் கிளம்பி விடலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றான். நிறைய முறை இது போல் சின்னமனூருக்கும் சென்னைக்கும் லாரியில் போய் வந்திருக்கிறேன்.. மூன்று பேர் லாரியில் சென்றால் இடம் தாராளமாக இருக்கும். சில நேரம் க்ளீனருக்கு பின்னால் கால் நீட்டி படுத்துக்கொண்டும் செல்லலாம்.. ஆனால் அன்று லாரி கிளம்பும் போது அந்த முஸ்லீம்காரர் வந்து வண்டியில் ஏறிக்கொண்டார். கொஞ்சம் நெருக்கி உட்கார்ந்தோம்.. இப்படியே ஐநூரு கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்தபோது ச்செய் என்று இருந்தது.. இன்றைக்கு என எங்கிருந்து இந்தாள் வந்தார் என எரிச்சல் வந்தது. அவர் உடலில் லேசாக ஏதோ வாடை வந்தது என்னை மேலும் எரிச்சல் படுத்தியது.. மனதிற்குள் ஒரு கெட்ட வார்த்தை சொல்லி அந்தளை திட்டிக்கொண்டேன்.. அவர் அடிக்கடி என்னைப்பார்த்து சிரித்தார்.. கரையோடிய பல்லும் அவர் உடலில் அடித்த வாடையும் எனக்கு குமட்டியது.. “யாரு மகென்? என்று கேட்டார்.. நான் பதில் சொல்லாமல் ரோட்டை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.. என் தோளில் தட்டி “யாரு மகென்பா நீயீ? என்றார்.. “சின்னமனூர் தேங்கா ஏவாரி அய்யப்பன் மகென்” என்று முனங்கினேன்.. லாரியின் முறுமல் சத்தத்திலவருக்கு சரியாக கேட்கவில்லை. மேலும் தன் முகத்தை என் முகத்தருகேகொண்டு வந்து “என்னாது?” என்றார்.. அவர் வாயிலிருந்து கடுந்துர்நாற்றமாக பீடி வாடை அடிக்கஎனக்கு அழுகையே வந்துவிடும் போலஅடிக்க இருந்தது.. நான் முத்துவேல் பக்கமாக முகத்தை திருப்பிக்கொண்டேன்.. அவன் ரோட்டை பார்த்தபடி வந்தான்..
சென்னை நெருக்கடியில் லாரி அணத்தியபடி சென்றது. தாம்பரம் தாண்டுவரை கஸ்ட்டம்தான்.. டீசல் புகை வண்டிக்குள் சன்னமாக அடித்தது.. லாரி தாம்பரம் வந்தடையம் போது இரவு பத்துமணி.. வண்டியை மெயின் ரோட்டில் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு மலைச்சாமியண்ணனும் முத்துவேலும் அருகில் உள்ள ஒரு வாழை மண்டிக்கு பணம் வாங்கச் சென்றனர். முஸ்லீம் ஆள் வண்டியை விட்டு இறங்கி கொஞ்சம் முன்னாள் சென்று பீடியை பற்றவைத்துக்கொண்டார். நான் வண்டிக்குள் அமர்ந்தபடியே அவரை பார்த்தேன்.. அவர் கைலியை மடித்துவிட்டுக்கொண்டு பீடியை ஆழ இழுத்தார். அவருடைய பீடி வாடையுடன் சின்னமனூர் வரை செல்ல வேண்டும் என்பதை நினைக்கவே எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது.. பீடியை கீழே போட்டு விட்டு சாலையின் ஓரத்தில் வண்டியின் முன்பாக குத்த வைத்து அமர்ந்தார். அப்படியே வாந்தி எடுத்தார். லேசாக தள்ளாடியவர் தரையில் கையை ஊன்றி மீண்டும் வாந்தி எடுத்தார். எனக்கு லாரியை விட்டு இறங்கி மாமா வீட்டிற்கே சென்றுவிடலாமா என்றிருந்தது.. இல்லையென்றால் மலைச்சாமியண்னன் வந்ததும் எதாவது சொல்லி இவரை தாம்பரத்திலேயே விட்டு விட்டு செல்ல முடியுமா என்றும் யோசித்தேன். குத்த வைத்து அமர்ந்திருந்தவர் எழுந்து நிற்க முயற்சிக்கையில் தடுமாறி அப்படியே பின்னால் சரிந்தார்.. பின் இரண்டு முறை உடலை உலுக்கிக்கொண்டார். அதன்பின் அவர் உடலில் அசைவுகள் எதுவுமில்லை. நான் லாரியில் அமர்ந்தபடி அவரையே பார்த்தேன்.. பின் ஜன்னல் வழியாக மலைச்சாமியண்னனும் முத்துவேலும் வருகிறார்களா என்று பார்த்தேன்.. அவர்கள் எங்கும் தென்படவில்லை..
எனக்கு வண்டிக்கு உள்ளே அமர்ந்திருப்பது கசகசப்பாக இருந்தது. வண்டியை விட்டு இறங்கி வெளியில் நின்று கொண்டேன். விழுந்து கிடந்தவரின் உடலில் எந்த அசைவும் இல்லை. வயிறு ஏறி இறங்கவில்லை என்பதை உணர்ந்தபின்புதான் எனக்கு உறைத்தது. அவர் அருகில் சென்று அண்ணே அண்ணே என்று அழைத்தேன்.. அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லை.. கைகளை தொட்டு அழைத்தேன்.. கைகள் குளிர்ந்து விரைத்திருந்தன. அவரின் கழுத்துக்கு கீழே தொண்டைப்பகுதியில் விரலை வைத்துப் பார்த்தேன்.. இதயத்துடிப்பு இல்லை.. அவர் இறந்துகிடக்கிறார் என்று புரிந்தது. சாலையில் வேகமாக விரையும் வண்டிகளைத்தவிர நடந்து போகிறவர்கள் யாரும் இல்லை.. அவர் தலை புழுதியில் கிடந்தது. தரையில் உட்கார்ந்து அவர் தலையை எடுத்து என் மடியில் வைத்துக்கொண்டு மீண்டும் மூக்கின் அருகில் கை வைத்து பார்த்தேன்.. அவர் இறந்து விட்டார் என் உறுதியாக தெரிந்தது.. ஆனால் எனக்குள் எந்த பய உணர்ச்சியும் எழவில்லை.. மனம் அமைதியாக இருந்தது. எதையும் யோசிக்க முடியவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தேன்..
சாலையின் மறுபக்கத்தில் இருந்து மலைச்சாமியண்ணனும் முத்துவேலுன் சாலையை கடந்து வருவது தெரிந்தது. அவர்கள் அங்கிருந்தே நான் அந்த ஆளை மடியில் கிடத்தி சாலை ஓரத்தில் அமர்ந்திருப்பதை கவனித்திருப்பார்கள்.. “சரக்கப்போட்டு சாஞ்சிட்டாப்லையா?” என்றவாறு மயில்சாமி அண்ணன் அருகில் வந்தார். “இல்லண்ணே செத்துபோயிட்டாப்ல” என்றேன். மலைச்சாமி அண்ணனுக்கு நான் சொன்னது உடனே புரியவில்லை.. என்னாது என்றார்.. ” வண்டிய விட்டு எறங்கி வாந்தி எடுத்தாப்ல… அப்டியே மட்ட மல்லாக்க விழுந்தாப்ல.. வந்து பாத்த ஆள் செத்துப்போயிட்டாப்லண்ணே” என்றேன்.. மலைச்சாமியண்னன் குனிந்து அவரை சோதித்துப்பார்த்து நான் சொன்னதை உறுதி படுத்திக்கொண்டார். உடல் இறுக என் அருகில் வந்து அமர்ந்தார். முத்து வேலிடம் “லேய் வண்டி லோடோட நிக்குதுடா.. என்னடா பண்ண? என்றார்.
முத்துவேல் எஸ்.டி.டி பூத்திற்கு சென்று யார் யாருக்கோ போன் போட்டு இறந்தவரின் சொந்தங்களை தொடர்பு கொண்டு செய்தியை சொன்னான். நான் அவரின் உடலை மடியில் வைத்தபடியே சாலையில் உட்கார்ந்திருந்தேன்.. வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.. அவர் வண்டியை விட்டு இறங்கியதிலிருந்து ஒவ்வொரு விநாடியையும் திரும்ப திரும்ப நினைத்துக்கொண்டிருந்தேன்.. கண் முன் ஒரு மரணத்தை முதன் முதலாக கண்டிருக்கிறேன்.. அவர் இறந்ததை முதன் முதலாக அறிந்தவன் நான். நாளை
முத்துவேல் சாலையை கடந்து அருகில் வந்தான். “ஓனருக்கு போன் போட்டேண்ணே.. லோடபத்தி கவலப்படாம எல்லாத்தையும் இருந்து பாத்து முடிச்சு விட்டு கிளம்பி வாங்கண்ணாப்ல” என்றான். மலைச்சாமியண்ணன் உடலில் இருந்த இறுக்கம் மெல்ல தளர்ந்தது.. பெரு மூச்சு விட்டபடி ஒரு பீடியை எடுத்து பற்றவைத்துக்கொண்டார். இரவு இரண்டு மணி அளவில் ஒரு வெள்ளை மாருதி வேனில் சில முஸ்லீம் ஆட்கள் வந்து இறங்கினார்கள்… எல்லாரும் தலையில் குல்லா போட்டிருந்தனர். எவரும் அவரை பார்த்தவுடன் அழவில்லை.. ஆனால் அவர்கள் அனைவர் முகத்திலும் வேதனை தெரிந்தது. மலைச்சாமி அண்ணன் அவர்களிடம் நடந்ததை மெல்லிய குரலில் விளக்கி சொன்னார். அவர்கள் தங்களுக்கும் நிறைய பேசிக்கொண்டார்கள். இரண்டு பேர் சாலையை கடந்து எஸ்.டி.டி பூத்திற்குள் சென்றார்கள். என் மரத்துப்போன கால்கள் வலிக்க ஆரம்பித்தன. மெல்ல அவரின் தலையை நகர்த்தி தரையில் வைத்துவிட்டு கையூன்றி எழுந்து கொண்டேன். ரத்தம் கீழ் நோக்கிப் பாய கால்கள் கூசி தடுமாறினேன். அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து முஸ்லீம் ஆளை எடுத்துச்செல்ல மேலும் இரண்டு மணிநேரம் ஆனது.
தாராளமான இடவசதியுடன் அமர்ந்து சின்னமனூரை நோக்கி நான் பயணப்பட்டேன்.. முத்துவேலிடம் பள்ளிக்கதைகள் எதுவும் பேசவில்லை. திண்டிவனம் தாண்டியதும் இருக்கும் இடத்தில் ஒரு மாதிரி உடலை கொடுத்து படுத்துக்கொண்டேன். சரியாக தூங்க முடியவில்லை.. களைப்பு இருந்தாலும் மனது அலைபாய்ந்து கொண்டே இருந்தது.. வீட்டிற்கு வந்து மீண்டும் ஒரு முறை ஷாம்பு சோப்பு எல்லாம் போட்டு சுடுதண்ணீரில் குளித்து சாப்பிட்டு விட்டு படுத்த பின்புதான் நல்லுறக்கம் வாய்த்தது. தூங்கி எழுந்து மறுநாள் காலையில் நான் மாடியில் இருந்து கீழே வரும் பொழுது கூடத்தில் சில ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். நடுத்தர வயதில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் அம்ர்ந்திருந்தனர். கீழ வீதியை சேர்ந்த முஸ்லீம் ஆட்கள் என்று தெரிந்தது.. சின்னமனூரில் கீழ வீதியில் மட்டுமே முஸ்லீம்கள் இருந்தனர். அறுபது குடும்பங்கள் வரை இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அம்மா போட்டுத்தந்த காபியை உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள். நான் கூடத்திற்குள் வந்ததும் அம்மா என்னை அறிமுகம் செய்து வைத்தாள். அவர்கள் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு அமைதியாக இருந்தனர். நானும் என்ன சொல்லுவதென்று தெரியாமல் அமைதியாக நின்றிருந்தேன்..
அம்மா “இவென் என்னமோ ஏதோனு ஓடிப்போயி பாக்குறதுக்குள்ள இறந்துட்டாராம்.. என்ன செய்றதுன்னு தெரியாம அவர மடிலயே போட்டு ரோட்ல உக்காந்திட்டு இருந்திருக்கியான்” என்றாள். நான் தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தேன்.. மேலும் சில விநாடிகள் அமைதியாக கழிந்தது. அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் மெல்ல அங்கிருந்து நகர்ந்து உள் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டேன்.. அவர்கள் கிளம்பும் ஓசை கேட்டது.. அவர்கள் முனங்களாக அம்மாவிடம் ஏதோ சொல்லிவிட்டு சென்றார்கள். அம்மா என்னைதேடி அறைக்குள் வந்தாள். “அவங்க என்ன ஏதுன்னு தெரிஞசுக்கத்தான வந்து ஒக்காந்திருக்காங்க.. என்னாச்சுன்னு சொல்ல வேண்டியதுதான.. ” என்றாள். “நான் என்ன சொல்றது.. அதேன் நீ சொன்னில்ல.. அதான் நடந்துச்சு.. அத நான் சொன்னா என்ன நீ சொன்னா என்ன? என்றேன்.. “நீதேன் சொல்லனும்.. வெலாவரியா சொல்லனும்.. அப்பத்தான அவங்களுக்கு புரியும்.. தீடீர்னு செத்து போயிட்டார்னா அவங்களுக்கு எப்டி இருக்கும்” என்றாள். நான் எழுந்து கழிவறைக்குள் சென்றேன்..
அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஒரு கும்பல் வந்தது.. பல வயதினர் கலந்த கும்பல். சிறு பிள்ளைகள் வேறு இருந்தனர். அவர்கள் கூடத்தை நிறைத்து அமர்ந்திருந்தனர். “என்னாச்சுன்னு தெரிலங்க.. குத்த வச்சு உக்காந்து வாந்தி எடுத்தாரு.. நான் என்ன ஏதுன்னு ஓடிப்போய் பாக்குறதுக்குள்ள அப்டியே சரிஞ்சு விழுந்துட்டாரு.. பக்கத்தில யாரும் இல்ல.. என்ன பண்றதுன்னு எனக்கு புரியல.. நெஞ்ச தேச்சு விட்டேன்.. அப்டியே உடம்ப ரெண்டு தடவ உலுக்கினாரு.. ஓடிப்போய் லாரில இருந்து தண்ணிய எடுத்துவந்து வாயில விட்டேன்.. ஆனா அத குடிக்கிறதுக்குள்ள உயிர் போய்டுச்சு” என்றேன். கூட்டத்தில் சில விசும்பல் குரல்கள் எழுந்தன.. பிள்ளைகள் கூட்டத்திற்குள் அங்குமிங்கும் பெண்களிடம் தாவி குதித்து விளையாடின. ஒருவர் பிள்ளைகளை அதட்டினார்.
நான் வெளியே நண்பர்களை பார்க்க சென்றேன். முருகேசனுடன் சேர்ந்து மஹாராஜா கடைக்கு சென்றேன். பொங்கலுக்கு சென்னையிலேயே துணி எடுத்திருக்கலாம். சோம்பேரித்தனம். ஆனால் துணிகள் மஹாராஜாவில் பரவாயில்லை என்றிருந்தது. இரண்டு செட் உடைகள் எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். தர்பார் டீக்கடைக்குள் சென்று அமர்ந்து டீ சொன்னோம். கல்லாவில் நின்றிருப்பவர் மெல்ல அருகில் வந்து உட்கார்ந்து மொய்தீனு உங்க கூட வரும் போதுதேன் மையத்து ஆனாப்லன்னு சொன்னாங்க.. என்னப்பா ஆச்சுங்க” என்றார். நான் மேலோட்டமாக நடந்ததை சொன்னேன்.. “நல்லஆளுதேன்.. ஆனா ஒரு எடத்தில நின்னு வேல பாக்குறது கெடையாது.. ஒண்ணுக்கு ரெண்டு பிள்ளைக.. வளந்து வருதுகடா என்னத்தையாவது பண்ணுன்னு சொல்லிச் சொல்லி மெட்ராசுக்கு தெரிஞ்சவங்க கிட்ட வேலைக்கு அனுப்பி வச்சோம்..இப்ப இப்டி ஆகிபோச்சு” என்று சொல்லிவிட்டு கல்லாவை நோக்கி சென்றார்..
மாலை வீட்டிற்கு வரும் பொழுது ஒரு நூறு பேர் வாசலில் தெருவை அடைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள். என்னை அடையாளம் கண்டு கொண்டு எல்லோரும் என்னை பார்த்தார்கள். என் கால்கள் உறைந்து போனது போல் அப்படியே நின்றது.. வாழ்வில் முதல் முறையாக இத்தனை கண்கள் என்னை மட்டுமே நோக்குவதை உணர்ந்து தடுமாறினேன்.. மிக கூச்சமாக உணர்ந்த போதே நான் இன்று இவர்களுக்கு முக்கியமானவன் என்ற எண்ணம் வந்தது. ஆட்கள் நான் வீட்டிற்குள் செல்வதற்காக வழி விட்டார்கள். நான் கடந்து சென்றதும் மெல்ல சத்தமில்லாமல் என்னை தொடர்ந்து வந்தார்கள். கூடத்திலும் ஆட்கள் நிறைந்திருந்தார்கள். கீழவீதி முழுக்கவே வந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.. நான் கூடத்தில் அமர்ந்திருந்தவர்களை மிதிக்கமால் கால்களை எட்டி வைத்து நடந்து உள்ளறைக்கு சென்றேன்.
அம்மா பின்னாடியே வந்தாள். “ஓடிப்போய் பாத்தேன்.. வாந்தி எடுத்தாரு.. அப்டியே விழுந்து செத்தாருன்னு சொல்லாத.. அத கேக்க அவங்க வரல” என்று முனங்கி விட்டு வெளியே சென்றாள். நான் என்னை நிதானப்படுத்திக்கொண்டேன். ஆழமாக முச்சை இழுத்துவிட்டுக்கொண்டு மீண்டும் கூடத்திற்கு வந்தேன்.. எல்லோரும் என்னை நிமிர்ந்து பார்த்தார்கள். தெருவில் இருந்தோர் வாசலை அடைத்துக்கொண்டும் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டும் நின்றார்கள். ஒரு குழந்தை அழுதது.. அதை ஒரு பெண் தோதோவென சொல்லி சமாதானப்படுத்த முயற்ச்சித்தாள். “மொய்தீன் அண்ணே என்கூடத்தான் லாரில வந்தாரு… எங்கூட பேசிகிட்டேதான் வந்தாரு.. நான் என்ன படிக்கிறேன் எல்லாம் கேட்டாரு.. ” கூட்டத்தில் மூச்சு விடும் சப்தம் தவிர எதுவும் கேட்கவில்லை. அம்மா கண்கள் விரிய என்னை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். ” ரொம்ப கஸ்ட்டபட்டுட்டேன் தம்பி.. இப்பதான் எல்லாம் சரியா போய்ட்டு இருக்குன்னு சொன்னாரு.. பிள்ளைகள பெருசாகிட்டாங்க.. அவுங்களுக்கு செய்ய வேண்டியத செய்யனும்னாரு.. இனி எல்லாத்தையும் மாத்தி நல்லபடியா ஆக்கிடுவேன்னு நம்பிக்கை வந்திருச்சுன்னாரு.. பிள்ளைக மேல உசுரா இருக்கார்னு தெரிஞ்சுது.. படிச்சா பத்தாது.. நம்மள சுத்தி இருக்கவங்கள நல்லா வச்சிக்கனும் தம்பின்னாரு.. நான் ஆமாம்ணேன்னு சொன்னேன்.. ரொம்ப நாள் கூடப்பழகுனவரு மாதிரி சிரிக்க சிரிக்க பேசிட்டு வந்தாரு.. தாமபரத்தில வண்டி நின்னதும் டீ வாங்கித்தர்றேன் வாப்பான்னு கைய பிடிச்சு இழுத்தாரு.. சரிங்கண்னேன்னு சொன்னேன்.. அவருதான் முதல்ல வண்டில இருந்து இறங்கினாரு..” அழுதுகொண்டிருந்த குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு என்னையையே பார்ப்பதை உணர்ந்தேன்.. ஒருகணம் சொல்வதை நிறுத்திவிட்டு பின் மீண்டும் சொல்ல ஆரம்பித்தேன்