அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

இழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை

“இன்னா இப்பந்தான் போறான்” என்றார் அவர்.

ஆள் தெரியுமளவுக்கு இருட்டு கவ்வியிருந்தது. நான் அவர் கைக்காட்டிய திசையைப் பார்த்தேன். இரண்டு ஆள் செல்லும் அளவு அகலமான ஒரு சிறிய சந்து.அதன் இரண்டு பக்கமும் உயரமான கல்லாலான மதில் சுவர். கடைசியில் ஒரே ஒரு வீடு. வீட்டின் முகப்பில் ஒரு குழல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.அதன் வெளிச்சம் சற்றும் இந்த சந்திற்குள் தெரியவில்லை.நான் ஆவேசமாக சந்திற்குள் ஓடினேன்.இரண்டு எட்டு வைப்பதற்குள் அவனைப் பார்த்துவிட்டேன்.

“நின்னுல தாயோளி” என்று கத்தியவாறு சட்டைக்குள் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு அவனை நெருங்கினேன்.ஆனால் நான் கத்தியது தவறென்று உடனே உணர்ந்துவிட்டேன்.நான் கத்தியை அவன் வயிற்றைப் பார்த்து சொருகவும் அவன் சட்டென்று விலகிவிட்டான்.அவன் போட்டிருந்த பனியனைக் கிழித்தது கத்தி.அவன் சுதாரித்து தன் விரிந்த தோளால் என்னை முட்டித்தள்ளினான்.நான் தடுமாறி தலை தரையிலடிக்க கீழே விழுந்தேன். “லே” என கத்தியவாறு அவன் என் இரு கால்களையும் அதன் முட்டிகளில் பிடித்து என்னைத் தூக்கி மதில் சுவரில் அடித்தான்.என் கையிலிருந்த கத்தி தவறி விழுந்தது.நான் தரையில் உருண்டு கத்தியை எடுக்க முயன்றேன்.அவன் தன் கால்களால் என் கையை மிதித்து தரையில் வைத்து தேய்த்தான்.நான் எழும்ப முயற்சித்தப்பொழுது மீண்டும் என் நெஞ்சில் மிதித்ததை நான் கைகளால் தடுத்தேன்.மீண்டும் காலை ஓங்கியவன் “குடிகாரத் தாயோழி சவுட்டி கொன்னுபோடுவேன், பாத்து எழும்பி ஓடிரு” என்றபடி போனான்.நான் என் கால்களை இழுத்தவாறு அந்த முடுக்கைவிட்டு வெளியே வந்தேன்.

எல் எம் மருத்துவமனையில் நான் லேசாக கண்விழித்தப் பொழுது சிறீதரன் அருகில் இருந்தான். நான் அவனைப் பார்த்து சிரித்தேன்.கைகள் அசைக்கமுடியாதபடி வலியிலிருந்தன.

“என்ன மயித்துக்குல அவன குத்த போனா நீ, உன்னால அவன குத்த முடியுமால, அவன் கபடி ப்ளேயர்லா இரண்டே அடிதான் நீ இங்க வந்து கெடக்கா”

நான் மீண்டும் சிரித்தேன்.

“சிரிக்காதல, எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் இப்பம் எனக்குதான கேவலம்”

“அப்பம் என்னாலதான் உனக்கு கேவலமா”.

“சரில விட்டுத்தள்ளு”

“அவன் செய்தது சரியால ஒனக்கு மெட்ராஸ்ல வெளயாடுயதுக்கு கெடச்ச வாய்ப்ப தட்டி பறிச்சாம்லா”

“மெட்ராஸ் எங்க நிலாவுலையா இருக்கு, இன்னா இங்கதான இருக்கு இந்த மேட்ச் இல்லணா வேற ஒரு மேட்ச், விட்டுத்தள்ளு”

அடுத்தவாரமே சென்னை அருகே இருந்த கல்லூரியில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் அவனை விளையாடச் சொன்னார் கண்ணன் அண்ணன்.

நான் காலையில் வீட்டில் படுத்திருக்கும் பொழுது வெளியே செருப்பை கழற்றும் சத்தம் கேட்டது.சிறீதரன் தான். நான் நடுவில் பெரிய ஓட்டை விழுந்த நார் கட்டிலில் ஓட்டையை கோரைப் பாய் கொண்டு அடைத்து அதில் படுத்திருந்தேன். இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட வீடு. அப்பாவும் நானும் தான். அம்மா இறந்து வெகுநாள் ஆகிவிட்டது. அருகிலிருக்கும் கழிக்கரை க்ளப்பில் காலை நேரப்பயிற்சியை முடித்துவிட்டு வருகிறான்.இருபத்தி நான்கு மணிநேரம் கொண்ட ஒரு நாளில் எனக்கு மிக விருப்பமான இரண்டு மணிநேரம் என்பது சிறீதரன் காலையிலும் மாலையிலும் பயிற்சி முடித்துவிட்டு என்னுடன் வந்து பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரம்தான்.அவன் வெளியே நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.

“லே நரம்பா உள்ள வால”

அது நான் அவனைச் சிறு வயதுமுதலே கூப்பிடும் பட்டப்பெயர். அவன் சிறு வயதில் ஒரு நரம்பளவே உடல் தடிமன் இருப்பான். அவனை நான் நரம்பன் எனக் கூப்பிடுவதற்கு அவன் எப்பொழுதாவது எதிர்ப்பு தெரிவிப்பதுண்டு.நான் உடனே அவனும் நானும் சிறுவயதில் என் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பிப்பேன்.அவன் சிரித்துவிடுவான்.நரம்பன் உள்ளே வந்து எண்ணை வழிந்துகொண்டிருக்கும் எங்கள் வீட்டிலிருந்த ஒரே நாற்காலியில் அமர்ந்தான். நான் மீண்டும் மீண்டும் என் மனதில் ஓட்டிப் பார்க்கும் அந்த மணம்.நரம்பனின் கால்களில் செம்மண்தரையில் விளையாடிய பொழுது ஏறிய மணலும் அவன் முட்டியில் ஏற்பட்ட காயத்தில் வடியும் ரத்தமும் சேர்ந்து வரும் மணம்.அவன் வந்து செல்லும் அந்த ஒரு மணிநேரமும் நான் அதை ரசித்துக்கிடப்பேன்.ஒரு மனித உடல் ஏற்படுத்த இயலும் உச்சக்கட்ட சாத்தியமுள்ள மணம் அது என நான் அறிவேன். ஏனெனில் மனித உடலின் மிக மோசமான நாற்றத்தை நான் மிக அணுக்கமாக அறிவேன். என் உடலிலே அது வீசும். சாயுங்காலம் பெரும்பாலும் நரம்பன் வீட்டிற்கு வந்துவிட்டு போனதும் நான் வேகமாக டாஸ்மாக்கிற்கு சென்று போட்டுவிட்டு வருவேன். வேறு யாரிடமும் பேசுவதில்லை. நேராகச் சென்று குடித்தவிட்டு வந்து முன் அறையில் படுத்துக்கொள்வேன். அப்பா சில நாட்கள் ஏதேனும் செய்து வைத்திருப்பார். அவர் சமைத்திருக்கிறார் என்பதை நான் வீட்டிற்குள் நுழையும் பொழுதே வரும் கரிந்த வாடையைக் கொண்டு அறிந்துகொள்வேன்.அப்படி இல்லையென்றால் பேசாமல் படுத்துவிடுவது வழக்கம். அவர் உள் அறையில் குடித்துவிட்டு படுத்துக்கொள்வார். நான் கட்டிலில் படுத்தவுடன் எனக்கு குமட்டும். நான் ஒவ்வொரு நொடியும் வெறுக்கும் அந்த வாடை, அது என் உடலில் இருந்து வீசும். நான் என் உடலை வெறுப்பேன்.குடித்து குடித்து நடுங்குவதை மட்டுமே செயலாகச் செய்யும் என் கைகள்.சன்னலின் வழியாக வந்து வீழும் நிலவொளியில் தெரியும் நரம்பனின் புகைப்படத்தைப் பார்ப்பேன்.அதில் நரம்பன் என் அம்மாவின் கைகளில் இருப்பான். மிக மிக ஒல்லியாக. நான் நல்ல தடிமனான கைகளுடன் நெஞ்சை திமிற்றியப்படி அந்த கருப்புவெள்ளைப் புகைப்படத்தில் தெரிவேன். என் கைகளை அந்த இளம் இருட்டில் பார்ப்பேன். அந்த திமிறிய சிறிய கைகளில் அவை வளர்ந்தவுடன் தேக்கிவைக்கப்போகும் ஆற்றல் உடைந்து தெறிக்க ஆயத்தமாக இருக்கும். என் மனம் உற்சாகம் கொள்ளும்.கட்டிலில் படுத்தபடி கைகால்களை உரசிக்கொள்வேன். பின் சட்டென குமட்டி வாந்தி எடுத்துவிடுவேன். அப்பா உள்ளிருந்து கத்துவார்.

“லேல வெளிய பேய் கக்கபுடாதா”

நான் பெரும்பாலும் அப்பாவிற்கு பதில் எதுவும் சொல்லவதில்லை. அப்படியே தலையை தொங்க விட்டவாறு உறக்கம். நரம்பன் காலையில் வந்து சிலநேரம் வீட்டைக் கழுவி விட்டுச் செல்வான்.அவன் அருவருப்பெல்லாம் பார்ப்பதில்லை.மிகச்சாதாரணமான ஒரு செயல்பாடாக அது இருக்கும்.

உள்ளே வந்த நரம்பன் “லே நான் அடுத்தவாரம் மெட்ராஸுக்கு போறன் கேட்டியா” என்றான்.

“பொய் சொல்லாதல”

“உண்மையாட்டுதான் சொல்லுகம்ல ,விஜயராஜா காலேஜ்ல மேட்ச்”

“அடிபொழில மக்கா, ஒனக்க ஒடம்பு கபடி வெளயாடுகதுக்கு உள்ள உடம்பாக்கும், கபடிக்கே உண்டான அசைவு உள்ள ஒடம்பு என்னாக்கும் கண்ணண் அண்ணன் சொல்லுவாரு,ஒன்னை ஒரு பயலும் தொட முடியாது கேட்டியா”

அவன் என் கைகளில் ஓங்கி குத்தினான்.

“லே என்னையா குத்துகா, ஒரு அடிக்கு பெலப்பியால, கைய மடக்கி அடிச்சம்ணா நேரா கோமா தான் பாத்துக்க”

“யாரு கோமாக்கு போவா நீயா நானா”

“லே விளையாட்டுக்கு நினைக்காத, அந்த பார்த்திபன ரோட்டுல போட்டு அடிச்சி அவன் நாலு நாளு ஆஸ்பத்திரியில கெடந்தது மறந்துற்றோ”.

“அதெல்லாம் மறக்கல, ஆனா அது எட்டு வருஸத்துக்கு முன்னுக்கு, இப்பம் அவனுட்ட போனா சவுட்டி கொடல பிதுக்கிபுடுவான்”.

“அது சரிதான், அப்பம் நமக்கு கொஞ்சம் கபடி வெளயாட்டு உண்டும்லா. இப்பமும் நான் கிரௌண்டுல எறங்குனா ஒரு பயலும் கிட்ட நின்னுகிட மாட்டான்”.

நரம்பன் சத்தமாக சிரித்துவிட்டான்.

“லே மயிராண்டி,வெளயாட்டுக்கு சொல்லல, நான் இந்த தீவாளிக்கு கழிக்கரை டீமுக்கு ஆப்போஸிற்றா ஒரு டீமு எறக்குயேன் பாரு”.

“செரி செரி, போ எழும்பி வேலைக்கு போற வழியப்பாரு” என்றவாறு எழும்பிப்போனான்.

நரம்பன் சென்னைக்கு சென்று விளையாடி வெற்றிப்பெற்று வந்தான்.ஏற்கனவே குமரிமாவட்ட அளவில் அவன் பெரும் புகழ் பெற்றிருந்தான். அவன் போனஸ் போடும் முறைக்கு உள்ளூரில் தவளைச் சாட்டம் என்ற பெயருண்டு. ஒரு காலைக் கொண்டு போனஸ் கோட்டைத் தாண்டிவிட்டு மறுகாலைத் தூக்கி பின் தப்பித்து நடுக்கோட்டை தொடுவது தான் வழக்கம்.ஆனால் நரம்பன் போனஸ் கோட்டைத் தாண்டியவுடன் இடதுகாலால் ஓங்கி தரையில் மிதித்து தவளை போன்று துள்ளி பறந்து நடுக்கோட்டை அடைந்துவிடுவான்.எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிடும். அவன் பாடிச் சென்றால் போனஸ் போடுவதை தடுப்பதற்கே எதிர் அணிக்கு பெரும் பாடாக இருக்கும்.

அந்த தீபாவளிக்கு முதல் போட்டி நரம்பனின் அழிக்கரை அணிக்கும் நான் உள்ளூர் குடிகாரர்களைச் சேர்த்து அன்று காலை உருவாக்கியிருந்த அணிக்கும் அறிவிக்கப்பட்டது.என்னிடம் இருந்த ஒரு பழைய நிக்கர் ஒன்றை எடுத்துக்கொண்டு திடலுக்கு போனேன்.நரம்பன் துணிமாற்றிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்துவிட்டான்.

“லே, நீ வெளயாட்டுக்குல்லா சொல்லுகாணி நினைச்சேன். எறங்குறியா” என்று சிரித்தான்.

“ஒரு நிக்கர் சட்டை தால”.

அவன் பையைக் குடைந்து ஒரு டீசர்ட்டும் நிக்கரும் தந்தான். நான் அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு ஓடினேன். அப்பா வீட்டில் இல்லை. அவர் ஏற்கனவே கபடி பார்ப்பதற்காக சென்றுவிட்டார்.நான் டீசர்ட்டை தடவிப் பார்த்தேன்.என் உடல் சிலிர்த்தது.நான் ஒவ்வொரு முறையும் கபடியைக் குறித்து பகற்கனவுக் காணும் பொழுதும் அணியும் டீசர்ட். மஞ்சள் நிறத்தில் முன் பக்கம் Kz என்று எழுதியிருக்கும்.பச்சை நிற நிக்கர்.நான் அதை மணத்திப்பார்த்துக்கொண்டேன்.அதை அணிந்துகொண்டு கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டேன்.அப்பொழுது தான் கவனித்தேன். அது என் உடலுக்கு சற்றும் பொருந்தாததாக இருந்தது. மிகப்பெரியது. மெலிந்து சூம்பி நடுங்கிக்கொண்டிருந்த நான் அதை அணிந்தவுடன் ஒரு ஜோக்கர் போலத் தெரிந்தேன். அதை உடனே கழற்றினேன். வீட்டு வாசலில் கிடந்த ஒரு பழைய டீசர்ட்டை எடுத்து அணிந்துகொண்டேன். என் அணியில் விளையாட சம்மதித்திருந்த முத்து வந்தான். நானும் அவனும் சென்று ஏற்கனவே வாங்கி என் வீட்டின் எதிர்புறம் கொட்டி வைக்கப்பட்டிருந்த கல்கூட்டத்திற்குள் மறைத்து வைத்திருந்த மருந்தை போட்டுவிட்டு வந்தோம். என் நடையில் சற்று தள்ளாட்டம் கூடியது. அழிக்கரை அணி ஏற்கனவே ஆடுகளத்தில் இறங்கிவிட்டதால் எங்களுக்கான கடைசி அழைப்பை விடுத்தார்கள்.நானும் முத்துவும் சென்று ஆடுகளத்திற்கு மறுபுறமிருந்த பெரிய புளியமரத்தின் அடியில் குடித்துக்கொண்டிருந்த எங்கள் அணியை சேர்ந்தவர்களிடம் சென்று சேர்ந்தோம்.பின் அனைவரும் ஒரு வரிசை ஏற்படுத்தி ஓடிச்சென்று வழக்கமான கபடி வீரர்கள் செய்வதைப் போன்று களத்தைச் சுற்றி ஓடினோம். கூட்டம் முழுவதும் சிரிப்பலை.

“எல்லாம் பயங்கர ப்ளேயர்மாருல்லா”

“லே ஆளைத் தொடணும் இல்லணா பிடிக்கணும் அப்பந்தா பாயிண்ட், சும்மா க்ரௌண்ட சுத்தி ஓடுனா பாய்ண்ட் கெடயாது பாத்துக்க”.

“ஆமா இவனுவ அஞ்சாறு சுத்து சுத்திட்டு நாங்கதான் ஜெயிச்சோம்ணு சொன்னாலும் சொல்லுவானுவ”.

முத்து சொன்னான் “மக்கா லேசா போட்டது நல்லதா போச்சி கேட்டியா, இல்லணா இந்தத் தாயோழி மக்களுக்க நடுவுல எங்க வெளயாடுயது”.

நான் என் கைகளைப் பார்த்தேன். நடுக்கம் நின்றிருந்தது. நடுவர் விசில் ஊதினார். சற்றென்று என் மனம் கூர்மை கொண்டது.என் கண்கள் எதிர் அணியினரை துல்லியமாக நோட்டமிட்டது.மனம் உந்தியது. அவர்களை என்னால் தொட்டுவிட்டு தப்பிவிட முடியும். அவர்களை என்னால் பிடித்துவிட முடியும். ரைட் போன முத்துவை தடுத்து நிறுத்திவிட்டு நான் துள்ளி எதிர் புறம் சென்றேன்.

“அபோட் அபோட் அபோட்”

என் வாய் தன்னையறியாமல் முனங்கியது.நரம்பன் நடுவில் தான் நின்றான்.நான் துள்ளித் துள்ளிப் பாடினேன்.என்னை என்னால் நம்பமுடியவில்லை.நான் உள்ளே இறங்கி பாடினேன்.பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சம் சிறிதுமின்றி.ஒரு சிறுவனின் உற்சாகத்தோடு. என் மனம் மிக்கூர்மையாக அறிந்தது. அவர்களால் என்னை ஒரு பொழுதும் பிடிக்கமுடியாது. நான் மூன்று பேரைத் தூக்கிச் செல்வேன்.என்ன நடந்தது என்பது சரியாக என் மனதால் கணிக்கமுடியவில்லை. சற்று மறந்தது போலவும் இருந்தது. கூட்டம் சிரிப்பது மட்டும் என் காதுகளுக்கு கேட்டது.நான் கூட்டத்தின் மீது விழுந்து கிடந்தேன். மெல்ல கைகளை ஊன்றி எழும்பினேன். கால்களில் லேசான சிராய்ப்பு, அதில் ரத்தம். நான் மெல்ல நடந்து வந்து குத்தவைக்கும் பொழுது மொத்த அணியும் அவுட்டாகியிருந்தது.அடுத்தமுறை முத்து பாடிச் சென்றான். நான் இங்கிருந்தபடியே அவனைப்பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பாடிச் செல்வதுபோல் கற்பனை செய்து கொண்டேன்.எங்கும் துள்ளாமல் ஓடாமல் மெல்ல மெல்ல நடந்தபடியே பாடினேன். சட்டென்று உள்ளே பகுந்து ஒரு உடல் தொடல். துள்ளி ஓடி நடு கோட்டைத் தொட்டுவிட்டேன்.எல்லாம் தெளிவாகிட்டது போல் ஒரு நொடி. முத்து பிடிகொடுத்துவிட்டான். அழிக்கரை அணியின் அடுத்த வீரன் பாடி வந்தான். நான் என் முறைக்காக காத்திருந்தேன்.திரும்பிச் சென்ற அழிக்கரை அணி வீரனை விரட்டி உள்ளே சென்றேன். கூட்டம் ஆர்பரித்தது.

“மக்கா உடாதல, அவ்வளவுவேரையும் அள்ளுல” என்ற சத்தம்.

நான் நிதானமாக பாடினேன்.

“அபோட் அபோட் அபோட்”.

இடப்புறமிருந்து வலப்புறம் நோக்கி மெதுவாக நடந்தேன். வலப்புறமிருந்து இடப்புறம் மீண்டும் நிதானமாக பாடியபடி வந்தேன்.

“லே குப்பிய தேடுதியா” என்றது ஒரு குரல்.

நான் எதிரே நின்ற வீரர்களின் கால்களைப் பார்த்தவாறு இடதுகைகளை மட்டும் அந்தக்குரல் வந்த திசை நோக்கி அமைதி என்பது போல செய்கை செய்தேன்.சட்டென் உடலில் ஓர் இடி. நான் நடு கோட்டை தொட என் கைகளைத் துளாவினேன்.ஒரு ஆறடி உயரமிருக்கலாம் என்று நினைக்கிறேன். என் கால்களைப் பிடித்து தூக்கியிருந்தார்கள்.என் கைகள் வானத்தில் அலைந்தன. நான் நிதானமாக என்னைத் தூக்கியிருந்த கூட்டத்திலிருந்து இறங்கினேன்.பின் வெளியே சென்றபொழுதுதான் கவனித்தேன் என் பனியன் கிழிந்து தொங்கிக்கொண்டிருப்பதை.

நாங்கள் 42-0 என்ற புள்ளிக் கணக்கில் அழிக்கரை அணியிடம் தோற்றோம்.

நரம்பனுக்கு அடுத்த ஆட்டமிருந்ததால் நான் அவனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தேன்.உள்ளே சென்று கிழிந்துவிட்டிருந்த என் டீசர்ட்டை அடுக்களையில் போட்டுவிட்டு முன் அறைக்கு வந்தேன்.அப்பா குளித்துவிட்டு படுக்கச் சொன்னார்.வழக்கம் போல் அவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் வந்து கட்டிலில் படுத்தேன். ஆளரவம் ஏதுமின்றி ஊரே வெறித்திருந்தது.தொலைவில் கபடி விவரணை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.கூட்டமிடும் கூக்குரல்.நான் அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்தேன்.அது வெளியே இருந்த தெருவிளக்கின் ஒளி ஜன்னல் வழியாக பட்டு மின்னியதில் அம்மாவும் நரம்பனும் மறைந்துவிட்டிருந்தனர்.அந்த உடல் திமிறிக்கொண்டிருக்கும் சிறுவன் மட்டும் தெரிந்தான். முட்டியில் லேசான ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. உடலெங்கும் ஒட்டியிருந்த மணல்.நான் அந்த மணத்தை ரசித்தேன். அதில் திளைத்தபடியே உறங்கிப்போனேன்.

அப்பா விளக்கைப் போட்டவுடன் திடுக்கிட்டு கண் விழித்துக்கொண்டேன்.நான் அப்பொழுது கனவு கண்டுகொண்டிருந்தேன்.அம்மாவுடன் புகைப்படத்திலிருக்கும் உடல் திமுறும் அந்தச் சிறுவனாக நான் கபடி ஆடுகளத்தில் நிற்கிறேன்.அந்தப் படத்தில் போட்டிருக்கும் அதே குதிரை ஒன்றின் படம் போட்ட சிறுவன்.ஒரு மலையைத் எம்பித்தாண்டும் குதிரைப் படம். மலை அதன் கால்களுக்குள் சிறிதாக. மிக மிகச் சிறிதாக.எதிரே திருநைனார்குறிச்சி அணி வீரர்கள்.முழு அணியும் ஆவேசம் கொண்டு நிற்கிறது.என் பக்கமாக நான் மட்டுமே நிற்கிறேன்.நடுவர் தன் கைகளை நீட்டி காற்றில் வீசி என்னைப் போகச் சொன்னார்.நான் பாடிச் செல்கிறேன்.கூட்டம் ஆராவாரமிடுகிறது.

“லே என்னல ஒரு பொடியன் பாடி வாறான், பெலப்பானால” என்கிறான் ஒரு வீரன்.

“பாத்துல அவனுக்கு அடி பட்டுராம்ல, மெதுவா பிடிங்க”

“அபோட் அபோட் அபோட்”

நான் இரண்டுமுறை இடப்பக்கமும் வலப்பக்கமுமாக நடந்தேன்.பின் வேகமெடுத்து ஒருபக்கம் ஒரு ஓட்டம்.போனஸ் கோட்டைத்தாண்டி உள்ளே சென்று ஒரு வீரனைத் தொட்டேன்.அந்த பொடியன தூக்குல என்ற ஒலி.என்னை ஏழு வீரர்களும் சுற்றி வளைத்திருந்தனர்.நான் என் தோள்களால் அவர்களை இடித்தேன். மொத்தமாக ஏழுபேரையும் இழுத்துச்சென்று நடுக்கோட்டைத் தொட்டேன்.கூட்டம் எழுந்து வெறியாட்டம் போட்டது.பெரும் கூச்சல்.பெண்கள் குரவையிட்டனர். அழிக்கரை அணி வீரர்கள் எதிரில் இருந்தனர்.நான் பாடினேன்.

“அபோட் அபோட் அபோட்”

அம்மாவின் புகைப்படத்தில் இருக்கும் தோளின் முறுக்குகள்.என் தோள்களை தட்டிக்கொண்டேன்..ஒரு பொழுதும் ஒருவராலும் தோற்கடிக்கமுடியாத தோள்கள். பனை நார் போன்ற கைகள்.பத்து பேரை ஒரே நேரத்தில் இழுத்துப்போடும் கைகள்.கைகளை சுழற்றிக்கொண்டேன்.நான் நரம்பனை நோக்கிப்பாடினேன்.அவன் இடுப்பைவிட தாழ்வாக இருந்தேன் நான்.

“அபோட் அபோட் அபோட்”

நான் நடுக்கோட்டைப் பார்த்து திரும்பி என் கைகளை தரையில் ஊன்றி என் கால்களை மேலே தூக்கி நரம்பனை பாதத்தால் மிதித்தேன்.அவன் தடுமாறி எல்லைக் கோட்டைத் தாண்டி வெளியில் சென்று விழுந்தான்.என் கால்களை அடுத்த வீரன் கவ்விப்பிடித்துக்கொண்டான்.சட்டென என்னைப் பிடித்து தூக்கிவிட்டனர். நான் ஒரே உன்னில் அவர்களின் கைகளில் இருந்து நழுவிப் பறந்து நடுக்கோட்டைத் தொட்டேன்.பஞ்சு போன்ற கைகள் என்னை தாங்கிக்கொண்டன.நான் நிமிர்ந்து பார்த்தேன். புகைப்படத்திலிருக்கும் அம்மா.கூட்டத்தின் பேரிரைச்சல். அம்மா என்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டாள்.நான் அவள் கைகளை அழுத்திப்பிடித்தேன்.

“லே வலிக்குல, எனக்க மொவனுக்கு என்னா பெலம்” என்றாள்.என் தோள்களை மீண்டும் மீண்டும் தடவிப்பார்த்தாள்.வானவேடிக்கைகள் என் கண்ணைக் கூசின.

அப்பா என்னைப் பிடித்து தூக்கினார். வாயிலிருந்து லேசாக ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

“வயறு என்னல ஆச்சி, சாப்பிட்டுட்டு படுலணி சொன்னம்லா”.

என் வயிறு லேசாக உப்பி ஒரு வித மினுமினுப்பை அடைந்திருந்தது.கண்கள் மங்கின. அப்பா வெளியே ஓடினார்.கபடி நடந்துகொண்டிருந்த இடத்தின் அருகில்

உடைமாற்றிக்கொண்டிருந்த நரம்பனிடம் சென்று கீழே விழுந்தார்.நொடியில் நரம்பன் உள்ளே ஓடி வந்தான்.

“சொன்னா கேக்கான இவன்” என்றவாறு என்னை அவன் மடியில் கிடத்திக்கொண்டான்.வியர்வையும் இரத்தமும் கலந்த அவன் உடலின் மணத்தில் என் மனம் திளைத்தது.முறுக்கேறி தடித்திருந்த அவன் தொடைகளில் நான் என் தலையைச் செம்மையாக வைத்துக்கொண்டேன்.நரம்புகள் புடைத்து திரண்டிருந்த அவன் தோள்களைப் பார்த்தவாறு என் கண்கள் முற்றிலும் மங்கி மூடிக்கொண்டன.

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

 

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, முற்போக்காளர்களிலிருந்து பிற்போக்காளர்கள் வரை, காந்தியவாதிகளும் கோட்ஸேக்களும், ஆன்மீகவாதிகளும் நாத்திகவாதிகளும் என எவ்வித வேற்றுமையுமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேர்மறையாகக் கூவி கூவி கொண்டாடப்பட்ட, எதிர்மறையாகப் பேசி பேசி விமர்சிக்கப்பட்ட, இன்னும் கூட தன்னைப் பற்றி பேச வைக்கக்கூடிய ஒரு மனிதர் உண்டு என்றால் அவர் மகாத்மா என்று அழைக்கப்படும் காந்திஜி மட்டுமே.

பொதுவாக நாம் ஏன் ஒருவரை கொண்டாடுகிறோம்..? பின் எதற்காக அவரை விமர்சிக்கிறோம்..? சில சமயங்களில் தூக்கியெறிந்தும் விடுகிறோம்..? கொஞ்சம் நம் சிந்தனையை அகழ்ந்து பார்த்தோமானால், அதன் காரணம் நமக்கு தெளிவாகவே புரியும்.

நம்மிடம் இல்லாத ஒன்றோ அல்லது நம்மால் செய்ய இயலாத ஒன்றையோ அவர் செய்யும் போது, நாம் அறிந்த மனிதர்களிடமிருந்து தனித்து தெரியும் போது, என இவ்வகையான சூழல்களில் நமக்கு அவர் மீது ஒருவகை பிரமிப்பு ஏற்படுகிறது. அது, அவரைப் பற்றிய நேர்மறையான ஒரு பிம்பத்தை மனதில் விதைத்து விடுகிறது. நாளடைவில், அவரைப் பற்றிய இயல்புகள் தெரிய வரும் போது, அவற்றை ஏற்க இயலாமல், தவிக்கிறோம். பிரமிப்பின் இடத்தில் குழப்பங்களும் சஞ்சலங்களும் ஆக்ரமித்துக் கொள்கின்றன. பின், அவையே ஒரு தெளிவிற்கு வரும் போது ஒன்று வெறுத்து விடுகிறோம் அல்லது அதற்குக் காரணங்கள் தேடி மீண்டும் அப்பிம்பத்திற்குள்ளேயே சிக்கிக் கொள்ள விழைகிறோம்.

ஆக மொத்தம் ஒருவரை அவரது இயல்பான குணங்களோடு ஏற்றுக் கொள்ள மனித மனது எப்போதுமே மறுத்து வந்திருக்கிறது. ஏனெனில், ஒருவரின் இயல்பான குணங்கள், கொண்டாட்டத்திற்கு உரியவை அல்ல என்று நாம் நம்புகிறோம். அசாத்தியமான குணங்களே எப்போதும் கொண்டாட்டங்களுக்கு உரியவையாக இருக்கின்றன. ஆனால், இயல்பான குணங்கள் சாதாரண நிகழ்வுகளில் வெளிப்படும் போது தான் அவை அசாத்தியமாக வெளிப்படுகின்றன என்பதை நாம் சிந்திக்கத் தவறி விடுகிறோம்.

இப்படிப்பட்ட உளவியல் சிக்கலுக்குள் தான் நமது பெரும்பாலான தலைவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அதற்கு காந்திஜியும் விதிவிலக்கல்ல. இவ்வுலகில் காந்திஜி அளவிற்கு விமர்சிக்கப்பட்ட மனிதர் வேறு எவரும் இல்லை. ஆனால், இப்பிம்பங்களையெல்லாம் புறந்தள்ளி விட்டு தனது சத்தியசோதனையின் மூலம் இதுதான் நான் என்று, எவ்வித பாசாங்குகளுமின்றி, எவ்வகை சமரசங்களுமன்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஒரே மனிதரும் காந்திஜி மட்டுமே. அதற்கான மன தைரியமும் அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று.

பிறரை அடக்கி ஆள்வது எவ்வளவு எளிதோ, அவ்வளவு கடினம் தன்னைத்தானே அடக்கி ஆள்வது. அதைத் தான் காந்திஜி தன்னுடைய வாழ்வின் எல்லா காலகட்டங்களிலும் கடைபிடித்து வந்திருக்கிறார். இத்தகைய தன்னாளுமை காட்டுவதும் அவரது துணிவையே.

அதைத் தொடர்ந்த மற்றொரு துணிவான முயற்சியே அவரது பிரம்மச்சரிய பரிசோதனைகள். இதிலும் கூட காந்திஜியின் துணிவு நம்மை அதிசயப்படவும் கூடவே அச்சப்படவும் வைக்கிறது. துணிவின் உச்சம் என்றால், அது அவரது பிரம்மச்சரிய பரிசோதனைகளின் வெளிப்படைத்தன்மையே.

எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய இன்றைய காலத்திலும் கூட, பேச வேண்டிய அவசியம் இருந்தும், ஆனால் நாம் பேச மறுக்கும், தயங்கும் ஒன்று என்றால் அது காமமும் அது சார்ந்த உணர்வுகளும் மட்டுமே. வார்த்தைகளாகவும், உரையாடல்களாகவும், விவாதங்களாகவும் எளிதாகக் கடந்து செல்ல வேண்டிய பாலியல் உணர்வுகள் சீண்டல்களாகவும், வக்கிரங்களாகவும், வன்முறைகளாகவும், வடிகால்களாகவும் வரையறையற்றுப் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பதைக் கண்டும், இன்னும் நமக்கு அதைப் பற்றிய புரிதலோ, அதைப் பேசுவதற்கான துணிவோ வந்து விடவில்லை.

ஆனால், காந்திஜியோ இதில் நமக்கு முன்னோடியாகவே நிற்கிறார். காமம் என்ற வார்த்தையை மறைபொருளாகக் கூட எவரும் பேசுவதற்கு விரும்பாத ஒரு காலகட்டம் அவருடையது. எனில், காந்திஜியின் இத்தகைய துணிவை என்னவென்று வரையறுப்பது..? இவைகளெல்லாம் இணைந்து தான் காந்திஜியை மகாத்மாவாக நிலைநிறுத்தியிருக்கிறது.

காந்திஜியின் அந்திம காலத்தையும், அதில் அவர் செய்த பிரம்மச்சரிய பரிசோதனைகளுமான காலத்தை தனது களமாகக் கொண்டிருக்கிறது சி.சரவணகார்த்திகேயனின் “ஆப்பிளுக்கு முன்” எனும் நாவல்.

இது ஒரு வரலாற்றுப் புனைவு. ஆனால், வாசிக்கும் போது புனைவு என்பதே மறந்து விடுகிறது. அந்த அளவிற்கு வரலாற்றோடு அவரது புனைவு இரண்டறக் கலந்து நிற்கும் நேர்த்தியான எழுத்து நடையில் சரளமாக கொண்டு செல்கிறார்.

மிருதுளா எனும் மநு என்ற சிறுமி, ஜெய்சுக்லாலின் மகள். உடல்நிலை குன்றி இருக்கும் கஸ்தூர்பாவிற்கு உதவியாக ஆகா கான் அரண்மனை சிறைக்கு வருகிறாள். அவருக்கான அனைத்து பணிவிடைகளையும் செய்து, பாவிற்கு அணுக்கமானவளாகிறாள். சிறுமியாக இருந்தாலும் அவரைத் தாயாகத் தாங்குகிறாள்.

அப்போதே, காந்திஜி தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளை ஆரம்பித்திருந்தார். அதில் பாவிற்கு உடன்பாடு இல்லையென்றாலும், அவர் மறுத்து எதுவும் சொல்வதில்லை. அவர் மறுப்புக்கு அங்கு எந்த மதிப்பும் இருக்கப் போவதில்லை என்று நினைத்தாரோ என்னவோ மௌனம் சாதித்தார். அதைப் பற்றிய வதந்திகள் காற்றை விட வேகமாக ஆசிரமத்தில் பரவின. அதனைத் தடுக்கும் பொருட்டு காந்திஜியே தனது பரிசோதனைகள் பற்றிய உண்மையை அவர் வெளிப்படையாக எல்லோருக்கும் அறிவிக்கிறார். விளைவு, அவரது உண்மையின் குணம் அங்கு தூற்றப்பட்டு ஒருவகை அசூயை எல்லோர் மனதிலும் நிலைக்கிறது. ஆனால், அதைப் பற்றிய கவலை அவருக்கு இல்லை.

எவ்வளவுக்கெவ்வளவு தன்னுடைய பரிசோதனைகளில் அவர் தீவிரம் கொண்டிருந்தாரோ, அந்த அளவிற்கு பாவின் உடல்நிலை சீரற்றுப் போக, அவர் இறந்து விடுகிறார். அவரது இழப்பு காந்திஜியை தாக்கியதில் அவர் உடைந்து போகிறார். அவரது உடல்நிலை சீரற்று, பின் மெல்ல மெல்ல சீராகிறது. நாளடைவில் நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.

மநு இப்போது காந்திஜிக்கு அணுக்கமாகிறாள். அவளது எல்லாவற்றிலும் காந்திஜியே பிரதானமாகிறார். கல்வி முதற்கொண்டு எல்லாவற்றையும் காந்திஜியே அவளுக்குக் கற்பிக்கிறார்.

இந்நிலையில் கல்வியின் பொருட்டு, அவள் காந்திஜியைப் பிரிந்து வேறு ஊரில் சில காலங்கள் வசிக்கிறாள். பின்பு, நாளடைவில் அவரிடமே வந்து சேர்கிறாள். அவரது காரியதரிசியாகவும் செவிலியாகவும் மநுவே இயங்கலானாள். முழுக்க முழுக்க அவளைச் சார்ந்தே காந்திஜியும் இயங்கத் தொடங்கினார். இறுதியாக, தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளிலும் மநுவையே ஈடுபடுத்த ஆரம்பித்தார். அவளும் அதற்கு முழுமனதாக தன்னை அர்ப்பணிக்கிறாள்.

அவரது பிரம்மச்சரிய பரிசோதனைகளின் உச்சமான, நிர்வாணமாக பெண்களுடன் ஒன்றாகக் குளிப்பது, நிர்வாணமாக அவர்களுடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்வது என மேலும் மேலும் கடும் சச்சரவுகளை ஏற்படுத்துகிறது. அவரைப் பொறுத்த அளவில் அது ஒரு வேள்வி. மநுவிற்கு அப்பரிசோதனைகளைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லை. அதனால் விமர்சனங்களும் இல்லை. ஆனால், இருவரைப் பற்றிய விமர்சனங்கள் அவளைப் பாதிக்கிறது.

மநுவிற்கு முன் இச்சோதனைகளில் பங்கு கொண்ட சுஷீலாபென், பிரபாவதி, சரளா தேவி, ஆபா, கஞ்ச்சன் போன்ற பதினோரு பெண்களும் அவள் மீது பொறாமை கொண்டு மேலும் வதந்திகள் பரப்புகின்றனர். காந்திஜியின் சொல்படி அதனையும் மநு, புறம் தள்ளுகிறாள்.

இத்தகு நிலை ஆசிரமத்திற்குள்ளும் அரசியல் தலைவர்களுக்குள்ளும் கசப்பை விளைவிக்கிறது. கிருபாளனி, வினோபா பாவே, பட்டேல் ஆகிய தலைவர்கள், பிர்லா போன்ற நண்பர்கள், தேவ்தாஸ் என்கிற மகன், ஆசிரமத்தின் தொண்டர்கள் என அனைத்து புறத்திலும் கடுமையான எதிர்ப்பைப் பெறுகிறார். அதனால் அவரது பிடிவாதம் தளர்ந்தாலும், தொடர்ந்து தனது சோதனைகளை அவர் செய்து கொண்டேயிருக்கிறார்.

மநுவின் மனதில் காதல், திருமண ஆசைகளை பிறர் தூண்டுகின்றனர். ஆனால் அதனாலெல்லாம் அவள் இம்மியும் தளரவில்லை. ஆனால், காந்திஜியைப் பற்றிய அவதூறுகளினால் மனம் சஞ்சலமடைகிறாள்.

இறுதியாக தக்கர் பாபா வருகிறார். காந்திஜி மற்றும் மநு இருவரிடத்திலும் தனித்தனியாக உரையாடுகிறார். சில நேரங்களில் அது விவாதமாகவும் மாறுகிறது. காந்திஜியை விட, மநுவின் பதில்கள் அவருக்கு நம்பிக்கையை அளிக்க, அவள் மூலமாக காந்திஜியின் அச்சோதனை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இதன் பின்னரும் காந்திஜி தனது பரிசோதனைகளை தொடர்கிறார். ஆனால், இந்த முறை வெளிப்படைத்தன்மையை மறைத்து விடுகிறார். ஒருவகையில் அது இரகசியமாக நடக்கிறது, இறுதியாக அதில் வெற்றியும் அடைகிறார்.

காமத்தை வெல்கிறார், நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கிறது, தனது உயிரையும் துறக்கிறார்.

சுதந்திரத்தை நோக்கிய தன்னுடைய செயல்பாடுகளில் எவ்வளவு தீவிரம் கொண்டிருந்தாரோ, அவ்வளவு தீவிரம் தன்னுடைய பிரம்மச்சரிய பரிசோதனைகளிலும் அவர் கொண்டிருந்தார். கூடுதலாக பிடிவாதமும் அதில் நிறைந்திருந்தது. அந்தப் பிடிவாதமே அவரது செயல்களில் வெற்றியைப் பெற்றுத் தருகிறது. ஆயினும் அதுவே அவரது பலவீனமாகவும் சுட்டப்படுகிறது. தன்னைத்தானே ஆள்வது அவரது பலமெனில், பிறரையும் ஆட்டுவிக்கும் மிகச் சராசரியான குணத்தையும் கொண்டிருப்பது அவரது பலவீனமாகக் கூறலாம். அதை இந்நாவல் மிக ஆணித்தரமாக சுட்டுகிறது.

காமம் என்பது உடலின் உணர்ச்சியா..? மனதின் உணர்வா..? அல்லது இரண்டும் கலந்த பிறிதொன்றின் வெளிப்பாடா..? இவற்றில் எதனை காமம் என்று பிரித்தெடுப்பது..? அப்படிப் பிரித்தறிதல் சாத்தியமா..? அவ்வாறு பிரித்தறிந்து விடில் அதனை வெல்வதும் சாத்தியமே. உடலின் நிர்வாணமே காம இச்சையின் முதல் நிலை. அந்த நிர்வாணம் எப்போது நம்மை சலனப்படுத்தவில்லையோ அல்லது உறுத்தவில்லையோ அப்போது நாம் காமத்தை வென்றவராகிவிடுகிறோம், என்பதன் அடிப்படையிலேயே காந்திஜி தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளை மேற்கொண்டு வெற்றி காண்கிறார்.

எந்த ஒன்றையும் உணர்வுப் பூர்வமாக அணுகும் போது அதன் நிறை குறைகள் நமக்குத் தெரிவதில்லை. மாறாக, உணர்வுகளுக்கு இடம் கொடாமல் நாம் அதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் போது அதன் உண்மைத்தன்மையான நேர், எதிர் நிலைகள் நமக்கு புரியும்.

அப்படித்தான் காந்திஜியும் காமத்தை அணுகுகிறார். காமம் உணரப்படும் போது, அதில் தோய்ந்து முழுகவே உந்தித் தள்ளும். எனில், அதை நம்மால் வெல்ல இயலாது. ஆனால், அதை ஆராய்ச்சி நிலையில் வைத்து அணுகினால், அதன் பால் இருக்கும் நமது உணர்வுகள் மாறுபடும். அப்படித்தான் காந்திஜியும் காமத்தை வெல்கிறார்.

இதில் முக்கியமாக சொல்லப்பட வேண்டிய கதாபாத்திரம், மநு. அவள் ஒரு இடத்தில், “காந்திஜியின் இவ்வேள்வியில் நான் ஒரு செயப்படு பொருள்” எனக் கூறுவாள். ஆரம்பத்தில், காந்திஜியிடம் அவரது பிரம்மச்சரிய பரிசோதனை கஸ்தூரிபாவிற்கு திணிக்கப்பட்ட ஒன்றல்லவா..? என்று கேட்கும் துணிவு அவளிடம் இருப்பதையும் கூறுகிறது. ஆனால், உண்மையில் நாவல் முழுக்க அவள் செயப்படு பொருளாகவே வருகிறாள். அவளுக்கென பிரத்தியேகக் குணங்களோ, கோபங்களோ, கருத்துக்களோ என எதுவும் இருப்பதாக நாவல் கூறவில்லை. முழுக்க முழுக்க காந்திஜியின் கைப்பாவை ஆகிறாள் மநு, இல்லையில்லை மனப்பாவை என்று கூறினால் சரியாக பொருந்தும். அந்த அளவிற்கு அவரது மனதின் சிந்தனைகளுக்கு எல்லாம் செயல் வடிவமாகிறாள் மநு. அத்தகைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு நடைமுறையில் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால், காந்திஜியின் வேள்விக்கு மிக வலுவான பாத்திரம் இது மட்டுமே.

தக்கர் பாபாவினுடனான காந்திஜி – மநு இருவருடைய வாத விவாதங்கள் நமது சிந்தனைகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் தர்க்கங்களுக்கும் அருமையான விருந்து. மிக ஆழமாக அழுத்தமாக தெளிவாக செல்லும் விவாதம், அதே நேரம் எவரை நம்மால் மறுக்க முடியும்..? எனும் பிரமிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது. அந்த அளவிற்கு உரையாடல்களில் அறிவின் செறிவும் உணர்வுகளின் நெகிழ்வும் சமமாக பாவிக்கிறது.

வர்ணனைகள் இல்லாத புனைவில் இரசிப்புத்தன்மையின் அளவு எத்தனை சதவீதம் இருக்க முடியும்..? சிறு சிறு அத்தியாயங்கள். சின்ன சின்ன வாக்கியங்கள். அடுத்தடுத்த நிகழ்வுகள், வர்ணனைகள் பெரும்பாலும் இல்லை. இவையெல்லாம் இணைந்து இவ்வரலாற்றுப் புனைவை, வெறும் வரலாறாக மட்டுமே பார்க்க வைக்கிறது அதுவே இதில் பலமும் பலவீனமாகவும் இருக்கிறது.

“காமத்தை கிசுகிசுப்பது உலக வழக்கம். அதில் இந்தியர்கள் இன்னமும் பிரத்யேகம்” என்பது நாவலில் வரும் ஒரு வரி. ஆனால், ஆசிரியர் இந்தியராக இருந்தும் அதை கிசுகிசுக்கவில்லை. மிக விரிவாகவே அலசி ஆராய்ந்திருக்கிறார். உணர்வுப்பூர்வமாகவும், ஆராய்ச்சிப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் என அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்திருப்பதே இதன் பலம்.

காந்திஜியே இதனை நேரடியாக எழுதியிருந்தால் கூட இந்த அளவிற்கு எழுதியிருப்பாரோ என்னவோ, ஆசிரியர் மிகச்சிறப்பாகவே படைத்திருக்கிறார்.

எதற்கும் காலம் என்ற ஒன்று இருக்கிறது. எதையும் விமர்சனத்திற்குள்ளாக்கும் இக்காலம் தான், எல்லாவற்றையும் புரிந்து கொள்ளவும் தயாராக இருக்கிறது. எனில், இந்நாவல் இக்காலத்திற்கான சிறந்த படைப்பு. மகாத்மா – காமம் – நிர்வாணம் – பிம்பம்  என்ற நால்வகை குறியீடுகளையும் நான்கு கோணங்களிலும் நாம் புரிந்து கொள்வதற்கான ஆரம்பத் திறப்பாக இப்படைப்பைக் கொள்ளலாம். அந்த வகையில், “ஆப்பிளுக்கு முன்” மனிதனின் பசிக்கு மிகச் சிறந்த உணவாக இருக்கும் அதே சமயம், அதன் தேவையின் அளவையும் உணர்த்தி விட்டே செல்கிறது.

ஆப்பிளுக்கு முன் : சி.சரவணகார்த்திகேயன்

அழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

உணவே மருந்து என்றொரு கூற்றுண்டு. உடலை வருத்தாமல் அதை மகிழ்விக்கும் உணவை உண்பவர்களுக்கு வேறு மருந்து தேவையில்லை. உணவின் சாறை மருந்தென பிரித்தெடுத்து, அது தேவையான உடலுக்கு வழங்கப்படுகிறது. வாசிப்பை மனதின் ஒருவகை உணவென்று கூறலாம். தத்துவ வாசிப்பு, மனதைக் கூர்மையாக்கி நுண்ணுணர்வுடன் வாழ உதவுகிறது. தத்துவத்தின் சாறை பிழிந்தெடுத்து புனைவென்னும் இனிப்பைக் கலந்து வைத்திருக்கும் மருந்தாக, இமைக்கணம் நாவல் தத்துவத்தின் செறிவுடனான வாசிப்பை வழங்குகிறது. இதை தீவிரமான மனநிலையுடன் மட்டுமே வாசிக்க முடியும். அவ்வாறு வாசிக்க முடிந்தால், மனதின் அடியாளம் வரை உள்ள நோய்மையை அகற்றவும் கூடும் – விடுதலை, அடையும் ஒன்றல்ல. மாறாக தளைகளற்ற இருப்பே அது..

ஜெயமோகனின் வெண்முரசு நாவல் வரிசையில் பதினேழாவது நாவல் இமைக்கணம். பாண்டவர் தரப்பு பாரதப் போருக்கான தயாரிப்புகளில் இருக்கும் நிலையில், கிருஷ்ணன் போரில் நேரடியாக கலந்து கொள்வதில்லை என உறுதியெடுத்திருப்பதால், நைமிஷாரண்யம் என்னும் காட்டில் சென்று தன்னில் ஆழ்ந்திருக்கிறார். திரேதாயுகத்தில், ராமாவதாரத்தின் இறுதியில், யமன் அடைந்த அறச்சிக்கலுக்கு விடை காணும் பொருட்டு, காத்திருந்து, துவாபரயுகத்தின் இறுதியில் நைமிஷாரண்யத்தில் இருக்கும் கிருஷ்ணனிடம் யமன் கேட்கும் கேள்விகளும், அவற்றிற்கு கிருஷ்ணனின் பதில்களும், பதில்களை அடைவதற்கு யமன் அடைந்த அனுபங்களுமாக இமைக்கணம் நாவல் புனையப்பட்டுள்ளது.

மனிதர்கள் அடையும் பெருந்துன்பமும், துன்பத்திலிருந்து மீட்சிக்கான வழிகளுமே இதன் களமாகும். உச்சக்கட்ட துன்பத்தில் உழல்வதை வேள்வி என்றும், அதை யாதனாயக்ஞம் என்னும் சொல்லாலும் இமைக்கணம் குறிப்பிடுகிறது. யாதனா என்னும் சொல்லை தொடர்ந்தபோது, பைரவயாதனா (https://youtu.be/rgDQoGx0czY) என்னும் இந்தக் குறிப்பு கிடைத்தது. இக்குறிப்பின்படி, மரணத்திற்கு முந்தைய கணத்தில், கணநேரத்தில் மனிதர்கள் அவர்களுக்கான அனைத்து கொடுந்துன்பங்களையும் மிகமிக வேகமாக அனுபவித்துத் தீர்ப்பது பைரவயாதனா எனப்படுகிறது. இது வாழ்க்கையின் தளைகளிலிருந்து விடுதலை பெற்று மரணிக்கும் வாய்ப்பை மனிதர்களுக்கு வழங்குகிறது. இமைக்கணத்தின் பேசுபொருளும் கிட்டத்தட்ட இதுவேதான். நைமிஷாரண்யத்தில் கிருஷ்ணனை சந்திக்கும் ஆளுமைகள், கணநேரத்தில் தங்கள் நெடுவாழ்க்கையை வாழ்ந்தறிகிறார்கள். அறிவின் விடுதலையோடு மீள்கிறார்கள்.

இந்த நாவல் பன்னிரண்டு பகுதிகளாகக் விரிந்துள்ளது. முதல் பகுதி ‘காலம்’. காலத்தை நாமறியும் காலத்திலிருந்து விலக்கி உள்ளத்தின் காலமாக விரித்தும் சுருக்கியும், தத்துவக்களத்தை உள்வாங்கும் மனநிலையை இப்பகுதி வாசகனுக்குள் ஏற்படுத்துகிறது. தன் செயலில் எழுந்த அறச்சிக்கலை உணர்ந்த யமன், அதைப் போக்கும்பொருட்டு தன் தொழிலை விடுத்து, தவத்தில் மூழ்குகிறார். இதனால் பூமியில் இறப்பு இல்லாமல் போகிறது. இறப்பிலிருந்து விடுபடும் உயிரினங்கள் முதல் கணத்தில் அதைக் கொண்டாடுகின்றன. ஆனால் அவை இறப்பிலிருந்து விடுபடவில்லை, இறப்பு இல்லாமல் போவதால் அங்கு விடுபடுதல் என்பதற்கான கேள்வியே இல்லை என்பதை அறிவதுடன், இருப்பும் இல்லாமல் போய்விடுகின்றன என்பதை, அந்த நேரத்திலும் தன்னுணர்வை இழக்காமல் இருக்கும் தியானிகன் என்ற புழுவும் பிரபாவன் என்ற பறவையும் அறிகின்றன. தியானிகனும் பிரபாவனும் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் தருணத்தில் அவை அடையும் சிக்கல்களும், விளைவாக அவற்றின் செயல்களும், செறிவான தத்துவம் தொன்மம் குறியீடுகள் ஆகியவற்றின் மூலம் விவரித்து, இந்த நாவலுக்கான களத்தை உருவாக்குகிறது. அனைத்து உயிர்களுக்கும் மரணம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதையும், இறப்பினாலேயே இருப்பு அர்த்தம் கொள்கிறது என்பதையும், இறப்புக்கும் இருப்புக்கும் இடையே உள்ள ஊடாட்டங்கள், செயல்கள், இன்ப துன்பங்கள் மூலம் வாசகனுக்கு உணர்த்துகின்றது. தியானிகனும் பிரபாவனும் தமது கூட்டுச் செய்கையால், கிருஷ்ணனின் மூலம் யமன் தன் சந்தேகத்துக்கான விடையை அடைய முடியும் என்பதை நாரதர் வழியாக யமனை அறியச் செய்து, தன் தொழிலுக்கு மீளச்செய்கின்றன.

இரண்டாம் பகுதி ‘இயல்’. இதில் கிருஷ்ணன் நைமிஷாரண்யத்துக்கு வந்ததை அறிந்த யமன், தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக பூமிக்கு மானுட வடிவில் வருகிறார். மானுட வடிவென்பதால் அவர் எண்ணங்களும் மானுட மொழியிலேயே அமைந்திருக்கிறது. தன் சந்தேகங்களை மானுட மொழியில் வெளிப்படுத்த இயலாத யமன், அவை  மானுட வாழ்க்கையில் என்னவாக நிகழ்கிறதென்பதைக் கொண்டே சொல்வடிவாக்க முடியும் என்பதை அறிகிறார்.

மனிதன் வாழ்ந்த வாழ்வை நனவு மனம் தொகுக்கிறது. கனவு மனம் அவற்றை நினைவுகளாக்குகிறது. ஆழ்மனம் அவற்றை குறியீடுகளாக்குகின்றன. துரியம் அவற்றை இன்னும் செறிவடையச் செய்து மாத்திரைகளாக மாற்றுகின்றன. மனதின் இந்த நான்கு நிலைகளும் சேர்ந்து மனித ஆளுமையை உருவாக்குகிறது. எனவே கிருஷ்ணனைக் கண்டு, தன் ஐயங்களை வினவ தீவிரத்துடன் இருக்கும் மனிதனின் மனதில் புகுந்து, மனதின் நான்கு நிலைகளிலும் கண நேரம் அமைந்து எழுந்தால் அந்த மனிதனாகவே மாறிவிட முடியும் என்று மனித ஆளுமையின் வரையறையை அளித்து, ஒரு மனித மனதின் இந்த நான்கு நிலைகளையும் அறிவதன் மூலம் அந்த ஆளுமையாகவே மாறிவிடமுடியும் என்றும் யமனுக்கு நாரதரால் கூறப்படுவதாக புனையப்பட்டுள்ளது.

அந்தக் கணத்தில் கிருஷ்ணனைக் காண வேண்டும் என்னும் பெருவிருப்புடன் தன் அரண்மனையில் இருந்த கர்ணனின் மனதில் கணநேரம் புகுந்து வெளிவந்த யமன், நைமிஷாரண்யத்தில் கர்ணனாக கிருஷ்ணனின் குடிலுக்குச் செல்கிறார். கர்ணன் இயல் வாழ்க்கையில், ஷத்திரியன் இல்லை என்னும் காரணத்தால் புறக்கணிக்கப்பட்டவன். கிடைக்க வேண்டியவை மறுக்கப்பட்டவன். விரிவான தத்துவ விளக்கங்களின், கனவு நிலைக்காட்சிகளின் மூலம் வாழ்க்கை எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறு இல்லாமல் அவன் விரும்பியபடி இருந்தால், வாழ்வு எவ்வாறு துயரமானதாக பொருளற்றதாக இருக்கும் என்பதையும், இயல் வாழ்க்கையில் இயைந்து செயலாற்றுவதே கர்ணனுக்கான மெய்மையின் வழி என்பதையும் இப்பகுதி விளக்குகிறது.

மூன்றாம் பகுதி ‘ஒருமை’. இயல்வாழ்க்கைக்கான மெய்மையில் மட்டும் நிறைவடையாத யமன், அடுத்ததாக இயல் வாழ்க்கையில் இயைந்து வாழ்ந்து ஆனால் அதைக் கடந்து செல்ல முடியாமல் வருந்தும் பீஷ்மரின் உளத்தில் புகுந்து, பீஷ்மராக நைமிஷாரண்யத்திற்கு வருகிறார். அவருக்கு செயலை யோகமெனச் செய்து அதைக்கடந்து செல்வதற்கான செயல் யோகம் உரைக்கப்படுகிறது.

அடுத்ததாக ‘அறிவு’ என்னும் பகுதியில், தன் ஒற்றை நோக்கத்தில் சந்தேகத்தை அடையும் சிகண்டிக்கு சந்தேகம் போக்கப்பட்டு செயல் ஞானம் போதிக்கப்படுகிறது. ‘விடுதல்’ என்னும் பகுதியில் விதுரராக வரும் யமனுக்கு, தான் கொண்டவையிலிருந்து விடுபட்டு செல்லும் விடுதலை குறித்து உணர்த்தப்படுகிறது. ‘ஊழ்கம்’ என்னும் பகுதியில் சொல் விளைவிக்கும் வியாசருக்கு, சொல் அடங்கும் ஊழ்கம் சொல்லப்படுகிறது. ‘மறைமெய்’ என்னும் அடுத்த பகுதியில், அனைத்தையும் கற்றறிந்த யுதிஷ்டிரருக்கு கற்றறிந்தவற்றிற்கு அப்பால் இருக்கும் மறைஞானம் கூறப்படுகிறது. ‘சுடர்வு’ என்னும் பகுதியில். திரௌபதியின் உள்மன ஆழங்களை அவளுக்கு உணர்த்தி, சுடரொளி போல் கனிவால் அனைத்தையும் ஒளி பெறச் செய்வதன் மூலம் அவளுக்கான மெய்மையை அடைய வழிகாட்டப்படுகிறாள். ‘சொல்’ பகுதியில் வேதம் உரைக்கும் வைதிகர்கள், தாங்கள் உரைக்கும் வேதத்தின் மீதும் இயற்றும் வேள்விகளின் மீதும் கொள்ளும் சந்தேகங்கள் கிருஷ்ணனால் அகற்றப்படுகின்றன. ‘பொருள்’ என்னும் பகுதியில், உதங்கர் என்னும் வேதாந்தி, வேதாந்த தத்துவங்களின் மேல் கொள்ளும் ஐயங்கள் உரிய விளக்கங்களால் அகற்றப்படுகிறது. இறுதியாக ‘முழுமை’ என்னும் பகுதியில் முழுமையடைந்த சுகர் என்னும் முனிவர் வழியாக முழுமையின் இயல்பு யமனுக்கு உணர்த்தப்படுகிறது. இந்த பத்து நிலைகளில் யமன் அறக்குழப்பபத்திலிருந்து முழுமையாக விடுபட்டு யம உலகிற்கு மீண்டு செல்கிறார். நாவலின் இறுதிப்பகுதியான இறைப்பாடலில், முந்தைய பத்து நிலைகளில் கூறப்பட்டவைகள் தொகுக்கப்பட்டு, பகவத்கீதையாக அர்ஜூனனுக்கு கிருஷ்ணனால் உரைக்கப்படுகிறது.

இங்கு உரைக்கப்படும் மெய்மைகள், யமனுக்கு உரைக்கப்படுகிறதா அல்லது, யமனாக வரும் ஆளுமைகளுக்கு உரைக்கப்படுகிறதா என வாசகனுக்கு இயல்பாகவே எழும் சந்தேகம், அவர்கள் தங்கள் ஆழ்கனவில் அவற்றை உணர்ந்தார்கள் என இறைப்பாடல் பகுதியில் யுதிஷ்டிரனாலும் அர்ஜூனனாலும் போக்கப்படுகிறது.

இமைக்கணம் ஆசிரியர் ஜெயமோகன், ”சுத்த அத்வைதம்” என்னும் தத்துவமுறையை தனக்கானதாகக் கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். எனவே இயல்பாகவே இதில் கூறப்பட்டிருக்கும் தத்துவ விளக்கங்கள், அத்வைதத்தை நோக்கியே இருக்கக் கூடும். அதனால் பிற தத்துவ மரபுகளை தங்களுக்கானதாகக் கொண்டவர்களுக்கு இந்த நாவல் ஆர்வமூட்டுவதாக இல்லமலாகலாம். ஆனால் எவ்வித முன்முடிவுகளும் இல்லாமல் இதில் நுழைபவர்கள், குறைந்தபட்ச தத்துவ ஆர்வமுடையவர்களாக இருந்தால், இந்திய மெய்யியல்கள் பெரும்பாலானவற்றின் செறிந்த வடிவத்தையோ அல்லது அவை இருப்பை வகைமை படுத்தியுள்ள முறைகளையோ இங்கு கண்டடைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

தத்துவத்தை களமாக கொண்ட நாவல் என்பதால், புனைவின் சாத்தியங்களால் கதை மாந்தர்களின் வாழ்க்கையின் இடர்கள் மூலம் தத்துவம் பேசப்படுகிறது. புனைவாக கூறப்படுவதால், தத்துவத்தை அதன் வடிவில் வாசிப்பதன் சலிப்பு தோன்றவில்லை. தத்துவத்தின் மேல் சற்றும் ஆர்வமில்லையெனில் இதை ஒரு நாவலாக வாசிக்க இயலாமல் போகலாம். ஆனால் வாழ்க்கையிடர்களுக்கான கருத்தியல் விளக்கங்களே தத்துவம் என்பதை உணரும் வாசகருக்கு, இதில் கூறப்பட்டிருக்கும் பத்து வாழ்க்கைகளின் தரிசனங்கள் மூலம், தன் வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடும் பெரும்பாலான சூழ்நிலைகளுக்கேற்ற கருத்தியல் விளக்கங்களை இமைக்கணத்திலிருந்து பெற முடியும். அந்த வகையில் இதை வாழ்விற்கான வழிகாட்டி எனவும் கொள்ளலாம்.

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த நாவல் அச்சில் வரும்போது கிட்டத்தட்ட எண்ணூறு பக்கங்கள்வரை வரலாம். வெறும் எண்ணூறு பக்கங்களில், பத்து வெவ்வேறு நிலைகளிலிலிருக்கும் ஆளுமைகளின் வழியாக அனைவரின் வாழ்க்கையிலும் சாத்தியமான அனைத்து மெய்யறிதலுக்கான தேடுதல்களையும் மிக விளக்கமாக வேதாந்தத் தத்துவத்தை சாரமாகக் கொண்டு கூறுவதென்பது சாத்தியமில்லாதது. இந்த நாவல் அதைச் செய்ய முயல்கிறது. எனவே ஒவ்வொன்றும் மிகமிகச் செறிவாகவே கூறப்பட்டிருக்கிறது.

வியாசர், கிருஷ்ணனுடனான உரையாடலின் இறுதியில், தன் மகன் சுகன் முழுமையடைந்து விண்மீனாக இருப்பதை தன் அகஉணர்வில் அடைந்த பின், அவற்றை சொற்களாக வெளிப்படுத்துவது, அழகான ஒரு கவிதையாக இந்நாவலில் இடம்பெற்றுள்ளது. அக்கவிதையின் இறுதியில், இந்நாவலின் முதல் பகுதியாக வரும் தியானிகன் பிரபாவன் கதையை எழுதுவதாக வருகிறது. இது கதைக்குள் கதை அமைந்திருப்பதாக தோற்றமளிக்கிறது. மேலும் கனவுக்குள் கனவு, அதற்குள் இன்னுமொரு கனவு எனவும் கதை சுழல்கிறது. இந்த வடிவம், தத்துவத்தை களனாகக் கொண்ட கதையின் மேல் ஆர்வத்தை மேலும் எழுப்புகிறது.

தத்துவம் போதாமையாக எழும் இடங்களையும், அது அடையும் முரண்களையும், முரண்களிலிருந்து விடுபடும் முறைகளையும் இந்த நாவல் ஆங்காங்கு கூறிச் செல்கிறது. உதாரணமாக, ஒரு தத்துவ நிலைப்பாட்டை எடுத்தவன் மெய்யறிவிற்கான வாய்ப்பை முழுவதும் இழந்து விடுகிறான். இது பீஷ்மர்-கிருஷ்ணன் உரையாடலில் வரும் “அறிந்ததைக் கைவிடாமல் அறிபவர் அறிந்ததையே மீண்டும் அறிகிறார்” என்பதிலும், சிகண்டி-கிருஷ்ணன் உரையாடலில் வரும் “மெய்யை தேடுபவர்கள் தேடும் மெய்யை கண்டடைகிறார்கள்” என்பதிலும் விதுரர்-கிருஷ்ணன் உரையாடலில் வரும் ”அறிந்தவை அறிவனவற்றுக்கு முன்சொல்லாக அமைவதன் மயக்கம் சொல்லுக்கு பொருள் அளிக்கும் புலமென்றாகி அனைத்தையும் தானெனக் காட்டுகிறது. முன்னறிவால் வருமறிவு வகுக்கப்படுவதனால் முன்னறிவே அறிவின் எல்லையென்றாகிறது” என்பதிலும் உணர்த்தப்படுகிறது

“அவையில் முன்வைக்கப்படும் தத்துவம் சொல்நுரையையே கிளப்பும். அகத்தே விதையென விழும் தத்துவம் அங்கிருந்து மெய்மையென எழும்” என்னும் விதுரருடனான உரையில் வரும் வாக்கியம், அனுபவமாகாமல் வெறும் உரையாடலாக எஞ்சும் தத்துவத்தின் பொருளின்மையை விளக்குகிறது.

தன்னைவிட பெரியவர்களாக உணர்பவர்களிடம், அகங்காரத்தை முற்றிலும் அகற்றிவிட்டே அணுக வேண்டும் என்பதை சிகண்டியுடனான உரையாடலில் வரும் இந்த வாக்கியத்தை விட தெளிவாகக் கூறிவிட முடியாது. “தன்னுள் ஐயம் கொண்டவன் அறிந்துகொள்ளக்கூடும். ஐயத்தை கவசமென்றும் வாளென்றும் கொண்டவன் வெல்லப்படுவதே இல்லை. தன்னைவிடப் பெரியவற்றால் வெல்லப்படுவதே கல்வி என்பது”

பீஷ்மருடனான உரையாடலில் வரும் இந்த வாக்கியம், வெறும் இருபத்தைந்து வார்த்தைகளுக்குள் மனிதன் தன் செயல்களின் மூலம் வாழ்க்கையின் வலைகளில் முடிவின்றி சிக்கியிருப்பதையும், அதை அறியாமலே முழுவாழ்வையும் முடித்துவி டுவதையும் கூறுகிறது. “பீஷ்மர் “யாதவரே, முடிந்தவரை அகன்றிருக்கிறேன். முழு வாழ்வும் எதையும் செய்யாதிருந்திருக்கிறேன். இருந்தும் இத்தனை கட்டுகளா?” என்றார். இளைய யாதவர் புன்னகைத்தார். “அவ்வாறென்றால் இங்கு ஒவ்வொன்றிலும் தாங்களே சென்று சிக்குபவர்கள் சிக்கியிருக்கும் வலைதான் எவ்வளவு பெரிது!” என்றார் பீஷ்மர். “அறுக்கமுயலாதவரை அந்த வலை இல்லை என்றே இருக்கும்” என்றார் இளைய யாதவர்.”

நாவலின் செறிவான பகுதிகளை மேற்கோள் காட்டுவதென்றால், அதன் பெரும்பகுதியை இங்கு கூற வேண்டியிருக்கும். இதன் செறிவின் காரணமாக, வருங்காலத்தில் இமைக்கணத்திற்கு விளக்க நூல்கள் வெளிவந்தாலும் ஆச்சரியம் இல்லை. வேறு எதற்காக இல்லாவிடிலும், இந்த நாவலை தமிழுக்கு அளித்ததற்காக, வரும் பல நூற்றாண்டுகளுக்கு, ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேனும் ஜெயமோகன் பெயர் வாழ்ந்து கொண்டிருக்கும்.. ஆனால் என்ன, பகவத்கீதை எவ்வாறு விளக்குபவர் சார்ந்திருக்கும் தத்துவமுறைகளுக்கேற்ப விளக்கப்படுகிறதோ அதைப்போலவே அவரவர் எடுத்திருக்கும் தத்துவ நிலைப்பாடுகளுக்கேற்ப இமைக்கணமும் விளக்கப்படலாம்.

இந்தியத் தத்துவங்கள் என்றாலே, பெரும்பாலான கலைச்சொற்கள் சமஸ்கிருதத்தில் இருக்கும். ஆனல் இமைக்கணம் தமிழ் வார்த்தைகளையே உபயோகப்படுத்துகிறது. மிகக்குறைவான இடங்களில் சமஸ்கிருத மூலச் சொல்லை ஒரு முறை கூறி, பின் அதற்கான தமிழ்ச்சொல்லை மட்டுமே உபயோகப்படுத்துகிறது. இது சமஸ்கிருத கலைச்சொற்களுடன் தத்துவ அறிமுகம் பெற்றவர்களுக்கு, சற்றே இடராக இருக்கலாம்.

தத்துவ ஆர்வமுள்ளவர்களின் சிந்தனை முறையை இமைக்கணம் மேலும் செறுவூட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தத்துவ ஆர்வமுள்ளவர்களில் கணிசமானவர்கள் முன்றிவை துறக்க சாத்தியமில்லாதவர்களாக இருப்பார்கள் என்பதும் வேதனையான முரண்.

இமைக்கணம் – ஜெயமோகன்

 

 

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

கடந்த காலத்திலும்,நிகழ் காலத்திலும் மற்றும் எக்காலத்திலும் உள்ள அந்த மாறாத ஒன்றை இலக்கியத்தின் வழியே கண்டடையவேண்டுமெனில்,கவிஞனுக்கு கடந்த காலத்தை பற்றிய அவதானிப்புடன் கூடிய பிரக்ஞை இருக்க வேண்டும் என்கிறார் டி.எஸ்.எலியட். கடந்த காலத்தை விசாரணைக்குட்படுத்தும் வரலாற்று நாவல்கள் வழியே காலதீதமாக உள்ள அந்த ஒன்றை கண்டடைகிறான் வாசகன்;அதே வேளையில் வரலாற்று அறிஞர்கள் போல தரக்கத்தராசு கொண்டு வரலாற்றை தட்டையாக்கி ஒற்றைப்படையாக அறிய முற்படாமல் மனிதர்களை மனிதர்களாக கடந்த காலத்தில் வாழவிட்டு மெய்நிகர் அனுபவங்களை பெற முற்படுகிறான் வாசகன்,எனவே வரலாற்று நாவல் வாசிப்பின் வழியே யார் மீதும் பழி சுமத்தாமல் கடந்த காலத்தைப்பற்றிய மறு பரிசீலனையை வாசகன் மேற்கொள்கிறான்.

அயர்லாந்தின் பஞ்சத்தால் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து இந்தியாவில் பணியாற்றுகிறான் ஏய்டன். சென்னையில் பணியாற்றும் பொது நீலமேகம் இரு தொழிலாளர்களை அடிப்பதை பார்த்து ஐஸ்ஹவுஸ் தொழிலாளர் பிரச்சனையில் ஏய்டன் தலையிடுகிறான்;காத்தவராயன் வழியே இந்தியாவில் நிகழும் பஞ்சத்தின் உண்மையான முகம் ஏய்டனுக்கு தெரியவருகிறது;பஞ்சத்தின் விளைவுகளில் சிறிதளவேனும் மற்ற இருவரும் முயற்சி செய்கிறார்கள். ஏய்டன் செங்கல்பட்டுக்கு பயணம் செய்து பஞ்சத்தை பற்றி பக்கிங்ஹாம்க்கு அறிக்கை அளிக்கிறான். காத்தவராயன் ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்களை கொண்டு இந்தியாவின் முதல் வேலை நிறுத்தப்போரட்டத்தை செய்கிறான்.முரஹரி ஐயங்கார் எளிமையாக ஏய்டனைக்கொண்டே அந்த போராட்டத்தை நிறுத்திவிடுகிறார் மற்றும் வரலாற்று தடயங்களை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுகிறார்.ஏய்டனின் அறிக்கையை கொண்டே ரஸ்ஸல் பல லட்சம் தொழிலாளர்களை அடிமைகளாக கொண்டு மிகப்பெரிய கட்டிட வேலைகளை செய்து லாபம் மீட்டிக்கொள்கிறான்;வெறுப்படைந்த ஏய்டன் தன்னையே சுட்டுக்கொள்கிறான் மண்டையோட்டை குண்டு துளைக்காமல் சென்றதால் ஏய்டன் மீண்டும் உயிர்த்தெழுகிறான். ஒட்டு மொத்தமாக மூன்று அல்லது நான்கு நாட்களில் நிகழும் நிகழ்வுகளால் நாவல் முடிவடைந்துவிடுகிறது.

வரலாற்று நிகழ்வுகளை மையமாக கொண்ட நாவல்களை நமது புரிதலுக்காக நாவல் நிகழும் காலத்தை கொண்டு இரண்டு வித அமைப்பாக பிரிக்கலாம்.

முதலாவது அமைப்பு போரும் அமைதியும் நாவல் போன்று வரலாற்று நிகழ்வுகளை பல மைய கதாப்பாத்திரங்களைக்கொண்டு பெரும் வலைப்பின்னல் கொண்ட ஆடல் களம் போன்று சித்தரித்தல். இந்த அமைப்பில் பல மைய கதாப்பாத்திரங்கள் மற்றும் மிகப்பெரிய காலத்தில் நிகழ்வதால்,எல்லா நிகழ்ச்சிகளும் தொடர்வினைகளாகவும் ஆதியும் அந்தமுமின்றி சுழற்சியாக தெரிகின்றது எனவே இந்த அமைப்பிலிருந்து எக்காலத்திலும் மாறாது சில தரிசனங்களையும்,ஒட்டு மொத்த மானுடத்துக்குரிய சில உயரிய விழுமியங்களையும் வாசகன் கண்டடைகிறான்.

இரண்டாவது அமைப்பு – நாவல் நிகழும் காலம் குறிகிய காலமாக இருத்தல்;இந்த அமைப்பில் ஒரு சில மைய கதாப்பாத்திரங்களைக்கொண்டு ஒற்றை செல்லை நுண்ணோக்கியில் வைத்து ஆராய்ச்சி செய்தல் போன்று அமைத்தல். இந்த அமைப்பில் சில மைய கதாப்பாத்திரம் மற்றும் குறிகிய காலத்தில் நிகழ்வதால் எல்லா நிகழ்வுகளும் நாவலின் மையத்தை நோக்கியே இட்டுச்செல்கின்றன எனவே இந்த அமைப்பிலிருந்து வரலாற்றில் நிகழும் சில உச்ச தருணங்களின் காரணங்களையும்,வரலாற்றின் உச்ச தருணங்கள் மீண்டும் நிகழ அல்லது நிகழாமல் இருப்பதற்கான வாய்ப்புகளையும்,அந்த தருணத்திற்கே உரிய சில தரிசனங்களை வாசகன் கண்டடைகிறான்.

வெள்ளையானை நாவலின் மையப்பகுதி இந்தியாவின் முதல் வேலை நிறுத்தத்தை பற்றியது.இந்த நாவல் இரண்டாவது அமைப்பில் அமைந்துள்ளதால் அதற்கான காரணங்களை தெளிவாக நம்மால் அறியமுடிகிறது. நாம் நமது அறத்தை இழந்துவிட்டதுதான் அதற்கான காரணம் என அறியமுடிகிறது,நாம் அனைவரும் அதற்கு பொறுப்பேற்று எங்கே நாம் நமது அறத்தை இழந்தோம் என்று வாசகனை சுய பரிசீலனைக்கு உட்படுத்துகிறது.


நாவலின் பெரும் பகுதி பஞ்சம்,தலித் அரிசியல் பற்றி இருந்தாலும் நாவலின் ஊடே மேலைநாட்டுக்கல்வி,கிறிஸ்துவ மதம் காலுன்றுதல்,பண்பாட்டு கலப்பு போன்றவற்றையும் நாவல் தொட்டுச்செல்கிறது.எனவே தலித் அரிசியல் மற்றும் பஞ்சத்தை பற்றிய பன்முகம் கிடைக்கிறது.

(பக்:91) “அத்தனைக்கும் மேலாக நீங்கள் எங்களுக்கு உங்களுடைய மொழியில் ஒரு வாசலைத்திறந்து வெளியுலகத்தை காட்டினீர்கள்.எங்களுக்கும் மானுடநீதி கிடைக்க வாய்ப்புண்டு என்று எங்களிடம் முதன்முதலாக சொன்னீர்கள்

தீண்டத்தகாதவர்கள் அல்லது நான்கு வர்ணம் போன்றவை தொன்மங்களிலிருந்து உருவானவை.தொன்மங்கள் பழங்குடி சடங்குகளிருந்து உருவானது. அறச்சமுதாயம் மற்றும் அமைதியான சமுதாயம் உருவாக மற்றும் நிலைநிறுத்த தொன்மங்கள் உதவி புரிகின்றன.

(பக்:191) “அந்த மதச்சின்னங்கள்தான் உண்மையில் இங்கே வாழ்கின்றன.இந்த உடல்கள் அவற்றின் வாகனங்கள்.இவை பிறந்து வந்து அவற்றை ஏந்திக்கொண்டுச்செல்கின்றன”.

(பக்:171) “சில அசட்டுப்பாதரிகள் இவர்களை ஏதாவது சொல்லி மதம் மாற்றி சிலுவை போட்டுவிட்டுச் செல்கிறார்கள்.அதன்பின் திரும்பியே பார்பதில்லை.அவர்களுக்கும் பெயர்கள் மாறுவதோடு சரி வேறெந்த மாற்றமும் நிகழ்வதில்லை

தொன்மங்களில் மாற்றம் நிகழாமல் சமுதாய அமைப்பில் நிலையான மாற்றம் நிகழ்த்தயிலாது.இல்லையேல் முன்னர் விஷ்ணு சிலை இருந்த இடத்தில் தற்போது கிறிஸ்துவின் சிலை மட்டுமே மாற்றமடையும்,அதே சாதி பாகுபாடு மீண்டும் நீடிக்கும்.தொன்மங்களில் மாற்றத்தை தொன்மங்களுக்கு மறு விளக்கமளித்தல்,புது தொன்மங்களை உருவாக்கி அவற்றை தத்துவங்களின் வழியே நிறுவுதலின் வழியே ஏற்படுத்தலாம்.தொன்மங்களின் மாற்றம் ஒட்டு மொத்த சமூகத்தையும் புது ஞானத்தை நோக்கி இட்டுச்செல்கிறது ஞானத்தை நோக்கி இட்டுச்செல்வதுதான் கல்வி.ஞானம் அக விடுதலையை அளிக்கிறது.அந்த ஒரு துளிக்கல்வி காத்தவராயனை சமத்துவத்தை நோக்கி ,கருப்பனை சுதந்திரத்தை நோக்கி செல்லவைக்கிறது

(பக்:320) “எனக்கு கிறித்துவ நம்பிக்கை இல்லை.நான் நம்புவது சுதந்திரத்தையும் சமத்துவத்தையும்தான்.அந்த நம்பிக்கைகள் மீது ஒவ்வொருநாளும் சேறு அள்ளிக் கொட்டப்படுவைதைப் போல உணர்கிறேன்

இதை பார்மர் கூருகிறார்,சமத்துவம் சுதந்திரம் போன்ற தொன்மம் மேலை நாடுகளில் முன்னரே வலுவாக உள்ளது.அந்த தொன்மத்தை அப்படியே நகல் எடுத்தார் போல இங்கு நிறுவ இயலாது அதை இந்தியத்தொன்மத்துடன் இணைத்தால் மட்டுமே இங்கு நிரந்தரமாக நிறுவயியலும்.நாவலில் வரும் காத்தவராயன் உடை போன்று தூரப்பார்வையில் கிறுத்துவன் போன்றும் அருகில் பார்க்கும்போது வைணவன் போன்றும் இரண்டும் கலந்ததாக இருக்கவேண்டும்.


நாவல் முழுவதும் ஏய்டனின் பார்வையில் கூறப்பட்டுள்ளதால் ஏய்டனின் ஆளுமையை பொருத்தும் நாவலை புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது.ஏய்டனின் ஆளுமை என்பது பஞ்சத்தால் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தவன்,கவிதையின்மீது விருப்பமுள்ளவன்,கனவு காண்பவன்,எதிலும் பொருந்தி போகதவன்,கிறித்துவ மதத்தை சார்ந்தவன்,அகச்சிக்கல் உடையவன். அவனுடைய பார்வையிலிருந்து இந்தியத்தொன்மங்களை அணுகும்போது அபத்தமாகவும்,தர்க்கத்திற்கு உட்படாமலும்,பிழையாகவும் தெரிகிறது.

அந்தப்பிழை,அபத்தம்தான் ஒழுங்கு படுத்துவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. பலருக்கு வாய்ப்பு இருந்தும் ஒரு சிலர் மட்டுமே மாற்றத்தை நிழ்த்துகிறார்கள் அதற்கு காரணம் சிலர் மட்டுமே அவர்களுடைய தொன்மத்தின் அர்த்தத்தை ஆன்மாவால் அறிந்துள்ளனர்.அவர்களுடைய தொன்மத்தை முழுமையாக அறிந்தால் மட்டுமே இங்குள்ள பிழையை நீக்க முடியும்.

‘உதாரணமாக கிறிஸ்து மற்றும் சாத்தான் தொன்மம்,கிறித்துவ மதத்தில் உள்ள பழைமையான தொன்மம்.

(பக்:187) “பஞ்சத்தை பார்க்கச் செல்வதில் உள்ள மிகப்பெரிய சாவலே இதுதான்.அது ஒரு பிரம்மாண்டமான சாத்தான்.உங்கள் கண்களுக்குள் ஊடுருவி ஆன்மாவுடன் பேச அதனால் முடியும்

அது நம் தர்க்கபுத்தியை அழிக்கும்.நம்ம அழச்செய்யும் .வாழ்க்கையின் எல்லா அடிப்படைகளையும் நிராகரிக்க வைக்கும்

கடவுளிடம் அதிக அன்பு கொண்டது சாத்தான் தான் ,மனிதனிடம் அதிக அன்பு கொண்டவர் கடவுள் எனவே சாத்தன் மனிதனை வெறுக்கிறது.சாத்தானை கண்டடைந்தவன் கடவுளிடம் நெருங்குகிறான்,கடவுளை அடையவேண்டுமானால் சாத்தனின் அருகில் எப்பொழுதுமிருக்க வேண்டும்.

(பக்:195) “உண்மையான கிறித்தவனாக இருப்பது ஒரு கடமை.ஒரு பெரிய வேலை.அதைச் செய்து கொண்டுருக்கிறேன்

அவரும் என்னைப்போல இதற்க்கு முயற்சி செய்து கொண்டுருந்தவர்தான்.நாங்கள் சக ஊழியர்கள்

மனிதன் பிறக்கும்போது மிருகத்தன்மையுடன் தான் பிறக்கிறான்,மனிதத்தன்மை என்பது தொடர் முயற்சி செய்தல்தான்,மானுடத்தன்மைதான் கிறிஸ்து.

இதை போன்று தொன்மங்களை ஏய்டன்,ஆண்ட்ரு,பாதர் பிரண்ணன் போன்ற ஒரு சிலர் மட்டுமே புரிந்துள்ளனர் அவர்கள் மட்டுமே செயல் புரிகின்றனர்.


தலித் அரசியலை இந்திய தத்துவ பின்புலத்துடன் பின்னி இந்த நாவல் உருவாகி இருப்பதால்,இதற்கான காரணத்தை நமது இந்தியத்தொன்மங்களில் தேடவும் அதற்கான தீர்வை இந்திய தத்துவத்தில் கண்டடையவும் வாய்ப்பளிக்கிறது.

(பக்:382) “அந்த தாக்குதல் நிகழும்போது நான் ஒரு கணம் முரஹரி ஐயங்காரின் முகத்தைப் பார்தேன்.நீங்கள் அதை பார்க்கவில்லை.பார்த்திருந்தால் ஒருபோதும் உங்கள் கொடுங்கனவுகளில் இருந்து அந்த முகம் விலகியிருக்காது

அந்த தாக்குதலை நடத்திய அத்தனை முகங்களும் ஒன்றுபோலத்தான் இருந்தன.கொடூரமான வெறி கொந்தளிக்கும் முகங்கள்.உச்சகட்ட கூச்சலில் அப்படியே நிலைத்துவிட்ட பாவனைகள்.ஆனால் அவரது முகம்.அது வேறுமாதிரி இருந்தது சார்.அது ஒரு உச்சகட்ட பரவசத்தில் இருந்தது சார்.ஒவ்வொரு காட்சியையும் கண்ணாலும் காதாலும் அள்ளி அள்ளிப்பருகி வெறி தீர்பதுபோல.பிறகு நான் நினைத்துக்கொண்டேன்.அங்கே நூற்றுக்கணக்கான உடல்கள் பின்னிப்பிணையும் ஒரு காமக்களியாட்டம் நடந்தால் அதைப்பார்க்கும் முகம் அப்படித்தானிருக்கும்

ஏய்டனின் பார்வையில் பார்க்காமல் இந்தியத் தொன்மங்களின் வழியே பார்க்கும்போது இவையாவும் பிழையாகவும்,அபத்தமாகவும் தோன்றாது .எல்லாம் பிரம்மத்தின் லீலையாகவும்,பௌத்தத்தில் உள்ள தர்மமாகவும் தோன்றும். நீலமேகம்,முரஹரி ஐயங்கார்,நாராயணன் போன்ற யாரும் குற்றமுடையவர்களாக தோன்றாது.அது அவர் அவர்களின் சுதர்மம் எனத் தோன்றும்.

இந்தியத்தொன்மங்களின் வழியே பார்க்கும்போது காத்தவராயன் கண்ணனைப்போன்று ஞானயோகியாகவும்,ஏயிடன் அர்ஜுனைப்போன்று கர்மயோகியாகவும் தோன்றுகிறது.காலச்சுழலில் மீண்டும்மீண்டும் கண்ணனும்,அர்ஜுனனும் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்.


தொன்மங்கள் மலை உச்சியில் கூழாங்கல்லென தவம் புரிக்கின்றன என்றோ ஒருநாள் ஒரு ஆட்டிடையான் கண்டடைகிறான்,கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை.

அழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

தனிமையின் இலக்கியம்.

“ஒருவரை ஒருவர் சித்திரவதை செய்து கொள்வதற்காகத் தான் இந்த மனிதர்களே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.” – தஸ்தயேவ்ஸ்கி.

அள்ள அள்ள குன்றா அமுதம் தரும் வாழ்வின் பல முனைகள் – குறிப்பாக வாழ்வின் இச்சைகளை சமூகக் கட்டமைப்பிற்கேற்ப நேர்பட வாழச்சொல்லும் ஒழுக்க விதிகளினால் ஊடறுக்கப்படும் முனைகள் – இலக்கியத்தின் ஊற்றாக தொடர்ந்து வாய்த்து, காய்த்து கிடக்கிறது. இதன் சாதகங்களை எழுத்தாளரின் மனம் மெல்ல, நேர்மையாய் கைக்கொள்ளும் தோறும் ஒரு செவ்விலக்கியம் நம் அவதானிப்புகளின் முன் இணைந்து கொள்ள தயாராய் முன் வைக்கப்படுகிறது.

நினைவிலிருந்து எழுதப்படும் எந்த ஒரு இலக்கியமும் அதன் சிறப்பான ஒருமை அழகை அடைய – நினைவேக்கம், பால்யம், காலப்பற்று என – சில காரணங்கள் உண்டு. அவை அனைத்தையும் தாண்டி, அடிப்படையில் நினைவுகளே புனைவெழுப்பிடும் கட்டுமானப் பொருட்கள் என்ற உண்மை இலக்கியத்தின் செந்தன்மைகளுக்கு அடிநாதமாகிடுகிறது. இன்று காலையில் நிகழும் நினைவுகள் கூட பொருட்படுத்தும் தோறும் புனைவாகவே வெளிப்படுகிறது. காலம் நீள நீள புனைவின் வீச்சும் அதிகமாகிற வாய்ப்புகளே பெரிதும் நிகழ்கிறது.

‘நிழலின் தனிமை’ நாவல் தமிழின் வெகுமதியாய் திகழ்வதற்குக் காரணம், அது கொண்ட வடிவம், பெரிதும் சிக்கலற்றதாகவும், உண்மைகளைச் சொல்லி இருளை அடையாளம் காட்டும் பண்புடையதாலுமே! உலகின் அதிக நவீன செவ்வியல் படைப்புகளைச் செய்தது தஸ்தயேவ்ஸ்கியாவே இருப்பார். நிழலின் தனிமை, தஸ்தயேவ்ஸ்கியின் நாயகர்களால், கட்டி எழுப்பப்படும் ஒரு இருண்மையின் கதைகளை போலவே உருவாகி நிலை பெற்றிருக்கிறது. அதிகம் புற வர்ணனைகளை பயன்படுத்தாமலும், அகத்தின் தவிப்புகளை பற்றி பேசுவதிலும் அந்த உருசிய இராட்சதனின் படைப்புகளின் தன்மை கொண்டே இருக்கிறது.

இது சிறுகதையா, நாவலா என்ற குழப்பம் ஏதுமெனக்கு ஏற்படவில்லை. மனதின் ஒட்டுமொத்த தொகுப்புகளை உருவாக்கிக் காட்டியதனால், அது வாழ்வை முன்வைத்து நாவலாகவே உருவெடுத்திருக்கிறது. ஆனால், சிகப்பு நிறத்தில் தொடங்கி பழுப்பேறிய கண்கள் வழியே நமக்கு கதை சொல்லி, சாம்பல் நிறத்தில் முடிவதால் அதை ஆசிரியர் சிறுகதையே (சற்றே நீண்ட சிறுகதை – தேவிபாரதி) என சொல்லவும் தயங்கவில்லை. எளிய வாசிப்பு தரும் சிறு ஓடையில் பெரும் காட்சிகள் உருவாகும் பெருநதியின் ஓட்டம்.

சிறிய சுனை போலத் தோற்றம் கொண்ட நீர்பரப்பு, இறங்கியதும் தன் ஆழத்தை விரித்துக் காட்டுவது போல, நாவல் முழுவதும் விரவிக் கிடக்கும், திடுக்கிடல்கள், அவற்றிற்கான இயல்புகளையும், வடிவ ஒருமையைச் சிதைக்காமலும் மினுக்கிடுகின்றன. வருடும் பீலியே சட்டென பறந்து வந்து நம் கண்களைக் கிழிக்கும் தன்மை பெறுவது போல, இந்த சிறுசுனையில் ஒரு பெருநதியின் ஓட்டத்தை பெற முடிகிறது. அது, நம் தோல்விகள், பழியுணர்வு, வஞ்சினம், காமம் என தொடர்ந்து எதிர்மறை பற்றிய கேள்விகளை அல்லது காட்சிகளை எழுப்பும் தோரும் நம் நினைவின் நதியில் வந்து இணைந்து கொள்கிறது.

மகாபாரதம் முதலாய் நிழலின் தனிமை ஈறாய் வைத்து, ஆண்களின் போர்களைக் கணக்கிட்டுப் பார்த்தால், அதில் பெண்களின் ஆற்றல் பெரும்பங்கு வகிப்பது, வியப்பாய் எஞ்சுகிறது. சாரதா, சுலோ, சுகந்தி என நீளும் கதைப் பெண்கள் ஆங்காங்கே தன் உணர்வுகளின் நீட்சியிலேயே வந்து – தன் வலையிலேயே சிக்கிய – சிலந்தி போல என சிக்கித் தவிப்பதும், பேரொலி எழுப்பி அழவேண்டிய தருணங்கள், உலகம் உமிழுமென உணர்ந்தும் தொடரும் ஒழுக்கமீறல்கள், தொடர்ந்து ஆற்றல் கொண்டு எழும் தீராத பழியுணர்வுடனான நடமாடுதல்கள் (அவ்வாறான ஆண்களின் கற்பனைகளில்) ஆகியவற்றிலெல்லாம் எளிய கடந்து செல்லுதலை செய்வதும் பயத்தையும், கருணையையும் ஒன்றாய் அள்ளித் தெளிக்கிறது.

நாவலில் வரும் நாயகனின் பால்யம், பெரும்பாலான பால்ய கதைகள் போலவே தென்பட்டாலும், ஒரு வழக்குமீறிய, பின்வாழ்வின் பதற்றங்களுக்கான விதைகளை ஏந்திய நிலமாகவே உருவாக்கப்பட்டுள்ளதென அவதானிக்கிறேன். வளர்வதும் சிதைவதும் பற்றியவையே அனைத்து இலக்கியமும். நாயகனின் பால்யத்தில் வரும் வின்செண்ட், வெகு சிறப்பாக உருவாக்கப்பட்ட துணைப் பாத்திரம். கருணாகரனின் மீதான பழி, க்ரோதத்தை காட்டிக் கொண்டிருக்கும் நண்பனின் கதைக்கு கைத்தாங்கலாய் ஆறுதல் கொடுத்து விட்டு, அதிலிருக்கும் வன்மத்தின் மயக்கத்திற்கு ஆளாகி புதர்மறைவில் தனிக்காமம் கொள்ளும் மிருகத்தை அச்சிறிய பாத்திரமே உணர்த்தி வென்றிருக்கிறது.

தன்மையில் சொல்லப்பட்டிருக்கும் கதை, அது கதையாடும் விதத்திலும், பிங்க், பழுப்பு, சாம்பல் என வெவ்வேறு நிறங்களைக் கையாண்டிருக்கும் அழகிலும், அதிக நிலக்காட்சிகள் இல்லாதிருப்பினும், குழப்பமான வடிவங்களை கொண்டிருக்கும் அக புற நிலக்காட்சிகளை வடிவம் கொண்டதிலும், மன இருளின் அத்தனை ரகசியங்களையும் வெளிச்சமிடும் ஆகிருதிகளிலும், செவ்வியல் படைப்பாக ஆகியிருக்கும் தனிமையின் நிழல் நாவல் சினிமாவாக எடுக்க உகந்த உன்னதம் என்பது என் துணிபு.

எளிமையான கோபம் நடிக்கப்பட்டு, மெல்ல ஆழமாக வேர்கொண்டு பூதாகரமாய் வளர்ந்து விடுகிறது. அதை, செயலாக்கிட பழியுணர்வு கொண்டு, அதற்கும் தன் சுயநிலை மீதான பற்றுக்கும் இடையிலான தவிப்பு மனிதனை அலைகளின் தொகையாக்கி பார்க்கிறது. தன்னைத் தானே வென்று கொள்ள முனைவெடுத்து, ஒழுக்கமீறல்களின் மூலம் தன்னை உலகம் தனிமையால் சபிக்க வேண்டுமென அருகில் உள்ளவர்களையெல்லாம் தன் அலைகளுக்குள் இழுத்து போட இச்சை கொள்கிறது மனித மனது. ‘நிழலின் தனிமை’ இருளைச் சொல்லும் பொழுதே, தனிமையின் நிழல் தரும் ஆற்றுப்பாட்டையும் சொல்லி செல்கிறது.

தமிழின் இன்றைய இலக்கிய சூழ்நிலையில் தான் வட்டார வழக்குகளின் ஆழத்திலிருந்து எழும் புனைவுகளோ, சங்க தமிழின் சொல்லாட்சிகளுடன் எழும் புனைவுகளோ, காப்பியங்களின் மீளுருவாக்கங்களோ தமிழிலக்கியத்திற்குத் தேவையாகிறது. அவ்வகை புனைவுகள் தமிழுக்கு சீரிய கால இடைவெளிகளில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், நிழலின் தனிமை இவற்றையும் கடந்து ஒரு – தன்மை கதையாடல் முறையில் சொல்லப்படும், வஞ்சம் பற்றிய திகில் நிரம்பிய, வழக்கமான ஆண்பெண் உறவுகளைப் பேசும் – எளிமையான நாவலாக எஞ்சிவிட்டது போல தோற்றம் தருகையிலேயே, அத்தனை வகைமையையும் மிஞ்சியும் நிற்கும் படைப்பாகிறது.

நிழலின் தனிமை – தேவிபாரதி – காலச்சுவடு.