உரை

விமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும் – நரோபா

நரோபா

(விஷ்ணுபுரம் ஊட்டி காவிய முகாமில் மே 6 ஆம் தேதி ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)

தேர்ந்த விமர்சகனின் இயல்புகள் எவை? விமர்சகனின் பங்களிப்புகள் எத்தகையவை? விமர்சகன் தவறும் இடங்கள் எவை? இக்கேள்விகளையொட்டி விமர்சனத்தின் சவால்களையும், முறைமைகளையும் இக்கட்டுரை விவாதிக்க முனைகிறது.

எதற்காக வாசிக்கிறேன்? கலை யாருக்காக? எழுத்தாளன் கருவியா, கர்த்தாவா? இலக்கியத்தின் பயன்மதிப்பு என்ன?- என காலம்காலமாக விவாதிக்கப்படும், இறுதி விடை என ஏதும் எட்டப்படாத, சில கேள்விகளை முதலில் விமர்சகன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அக்கேள்விகளுக்கான விடையைப் பொருத்தே அவனுடைய விமர்சன அளவுகோல் உருவாகிறது.

எதற்காக வாசிக்கிறேன் எனும் கேள்விக்கான விடை ‘இதன் அழகியல் நுட்பங்களில்’ லயிப்பதற்காக என்றிருக்கும்போது என் விமர்சனப் பாணி ரசனை விமர்சனமாகவே இருக்கும். ரசனைப் பாணியை நான் முன்னெடுக்கிறேன் என்பதன் பொருள், மார்க்சிய, கட்டுடைப்பு, நவ-வரலாற்றுவாத, பெண்ணிய மற்றும் இன்னபிற கோட்பாடுகளின் மீதான அக்கறை எனக்கு இரண்டாம் பட்சம் என்பதே. ஒரு படைப்புருவாக்கத்தின் சமூக ஆற்றல்களின் பங்களிப்புகளை அறிந்து கொள்வது ரசனை வாசிப்புக்கு அடுத்தபடியான மேலதிக ஆர்வம் என்ற அளவில் அதற்கொரு இடமுண்டு என்பதையும் மறுக்கவில்லை.

ஹெரால்ட் ப்ளூம் அழகியல் வாசிப்பைத் தவிர பிற அனைத்தையும் வாசிப்பே அல்ல என்கிறார். இலக்கியத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்று காட்டமாகவே சொல்கிறார். பிற வாசிப்புகளை முழுமையாக நிராகரிக்க முடியாது என்பதே நான் அவரிடமிருந்து வேறுபடும் புள்ளி. ஆனால் ஒரு படைப்பின் பெறுமதியை நிலைநாட்ட அது உருவான சமூக, வரலாற்று, அரசியல் பின்புலத்தை காரணமாக முன்வைக்கக் கூடாது. பிரதியின் அழகியல் வாசிப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு அரசியல் காரணங்கள் அதன் இடத்தை நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அழகியல் ரீதியாக சாதாரண படைப்புகள் அரசியல் உள்ளடக்கத்தின் காரணமாக விதந்தோதப்படுவது இலக்கியச் செயல்பாடுக்கு எதிரானது. அழகியல் வாசிப்பிற்கு மேலதிகமாக கோட்பாட்டு சட்டகங்களை பயன்படுத்தும்போது அது வாசிப்பை மேன்மை செய்யும் வாய்ப்பு உண்டு. நவீன மனிதன் எப்படி உருவாகி வருகிறான், அவனுடைய கவலைகள் எத்தகையவையாக உள்ளன, என்பதை சமூக வரலாற்று சூழலைக் கருத்தில் கொண்டு வரையறை செய்யும்போது ஒரு இலக்கிய பிரதியின் உருவாக்கத்தை மேலதிகமாக உள்வாங்க முடிகிறது. ஜார்ஜ் ஆர்வெல்லை புரிந்துகொள்ள ஐரோப்பிய சர்வாதிகாரத்தின் வரலாறு தெரிந்திருப்பது வாசிப்பை ஆழப்படுத்துகிறது.

ப்ளூமின் பிரசித்தி பெற்ற மேற்கோள் ஒன்றுண்டு- “ஷேக்ஸ்பியரை ஃபிராய்டிய கண்ணோட்டத்தில் வாசித்தால் அது குறைத்தல்வாதம், நாம் பெறுவதற்கு எதுவுமே இல்லை, ஆனால் ஃப்ராய்டை ஷேக்ஸ்பியரின் கண்ணோட்டத்தில் வாசிக்கும்போது பல புதிய கோணங்களை திறக்கும்”. கோட்பாட்டு விமர்சனங்கள் வழியாக புனைவுகளைப் அறிவதைக் காட்டிலும் அக்கோட்பாட்டைப் பற்றிதான் நாம் அதிகம் அறிகிறோம். கொஞ்சம் மெனக்கிட்டு வாசித்தால் நாம் கோட்பாடுகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ளலாம். புதிய நுட்பங்கள் என எதுவும் அங்கு வந்து சேர்வதில்லை. எனினும் காலப்போக்கில் புதிய கோட்பாடுகள், வரையறைகள் உருவாகியவண்ணம் இருக்கின்றன. ரசனை ரீதியாக முக்கியத்துவம் பெற்ற படைப்புகளின் மீதான மேலதிக வாசிப்பை அளிக்கும் வகையில் உலகம் முழுவதும் கோட்பாடுகள் பயன்படுத்தப்படும் சூழலில், தமிழில் மட்டும் தேர்ந்த படைப்புகளை உதாசீனப்படுத்துவதற்கே அவை பயன்படுத்தப்படுவது விந்தைதான்.

புனைவுகளைச் சமூக மாற்றத்திற்கான கருவியாக காண்பது இங்கு பெண்ணிய, தலித்திய (பொதுவாய் அரசியல் அதிகாரத்தை மையப்படுத்தும்) வாசிப்பு. விடுதலையைப் பேசவில்லை என்றால் அதை அவர்கள் ஏற்பதில்லை. வர்க்கப் போராட்டத்தில் புனைவின் நிலைப்பாடு என்ன, இப்பிரதி அதை துரிதப்படுத்துமா, என்ற கேள்விகளே மார்க்சிய கவலையாக இருக்கிறது. நவவரலாற்றுவாதிகள் இப்புனைவு எங்கே அதிகார மாற்றம் அல்லது அதிகாரக் குவிப்பை நிகழ்த்த உத்தேசிக்கிறது, எவருடைய பிரதிநிதி என்று கேட்கின்றனர். இந்த புனைவை உருவாக்கிய சமூக, வரலாற்று காரணிகள் எவை என ஆராய்கின்றனர். நவவரலாற்றுவாதம் எழுத்தாளனின் பங்களிப்பை மறுக்கிறது. சமூக வரலாற்று காரணிகள் திரண்டு நிற்கும்போது அதை வெளிப்படுத்தும் ஊடகமாக மட்டுமே எழுத்தாளன் இருக்கிறான் என்கிறது. கவிஞரும் விமர்சகருமான டி.எஸ். எலியட் அவருடைய புகழ்பெற்ற ‘மரபும் தனித்திறமையும்’ எனும் கட்டுரையில் வேறு வகையில் எழுத்தாளனை மறுக்கிறார். எழுத்தாளன் ஒட்டுமொத்த கவிமரபைக் கற்றவன். அவன் வழியாக ஏற்கனவே உள்ளவை தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன என்கிறார். எழுத்தாளனின் தனித்தன்மையைத் தேடித் தேடி கொண்டாடுவதையே அவர் ஏற்க மறுக்கிறார்.

இதுவரை பேசப்பட்ட மேற்கத்திய கோட்பாடுகளை அப்படியே இறக்குமதி செய்யாமல் அவற்றுக்கு மாற்றாய் இந்தியச் இலக்கியச் சட்டகங்களை உருவாக்க வேண்டும் எனும் வாதம் கவனத்துடன் பரிசீலிக்கப் படவேண்டும். அதுவும் மற்றுமொரு கோட்பாட்டு விமர்சனமாகி விடலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வாசிப்பு என்பது தனித்த அந்தரங்க செயல்பாடு என்பதே ரசனை விமர்சனத்தின் அடிப்படை.

எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் என்னவிதமான தொடர்பு உள்ளது எனும் கேள்வியை நாம் எழுப்பிக்கொண்டால் நம் விமர்சன முறைமை மேலும் துலக்கமாகும். எழுத்தாளனின் தனித்தன்மையை, திறமையை, உழைப்பைக் கொண்டாடும்போது ரசனை விமர்சனமாகவும் அவனை மரபின் குரலாக அல்லது சமூக ஆற்றலின் குரலாகக் காண்பது கோட்பாட்டு விமர்சனமாகவும் ஆகும். ஏனெனில் இதன் உட்பொருள் மரபோ, சமூக ஆற்றல்களோ தமது ஊடகத்தை தேர்ந்து எடுக்கின்றன என்பதே. ஷேக்ஸ்பியரோ தால்ஸ்தாயோ தாஸ்தாயேவ்ஸ்கியோ இல்லையென்றால் வேறொருவர் வழியாக இவை வெளிப்படும் எனும் நம்பிக்கையை அடிநாதமாகக் கொண்டவை. எழுத்தாளன் கருவியா, கர்த்தாவா, என்ற கேள்விக்கு என்னிடம் தீர்மானமான விடையில்லை. கர்த்தா என நம்ப விழைந்தாலும் அவன் கருவியாகவும் இயங்குகிறான் என்றே தோன்றுகிறது. எனினும் கருவியாக கலையை வெளிபடுத்தக்கூட எழுத்தாளன் தொடர்ந்து தன்னைக் கூர்மை செய்து, முனைப்புடன் அயராத உழைப்பை செலுத்த வேண்டியிருக்கிறது. அதற்கொரு தனியாளுமை உருவாக வேண்டும்.

பொதுவாக மார்க்சிய/ நவவரலாற்றுவாத சட்டகங்கள், அல்லது அது போன்ற பிற கோட்பாட்டுச் சட்டகங்கள், நாம் அறியாமலேயே நமக்குள் இருப்பதைக் கண்டடைவதே விமர்சகனின் சவால். எனக்குள் ஒரு நவவரலாற்றுவாதி இருந்ததை விமர்சன முறைமை குறித்தான வாசிப்புகள் வழியாக கண்டடைந்து திகைத்தேன். ஒருவேளை அதுதான் நாம் செல்ல விரும்பும் பாதை என்றால், அதற்குமுன் புனைவின் பயன்மதிப்பு என்ன எனும் கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். புனைவுகள் சமூக மேம்பாட்டிற்கான கருவி எனும் நம்பிக்கை நம்மிடமிருந்தால் நாம் ரசனை விமர்சகர் அல்ல.

இத்தருணத்தில் வு மிங் யி யின் சொற்களை பொருத்திக் கொள்கிறேன் “சில நேரங்களில் எல்லா கலைகளுமே கடைசியில் சுயநலம் மிகுந்தவை என்று தோன்றுகிறது, அது பிறர் மனதில் உறுதியாக மாற்றம் ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது- ஆனால் என்ன மாறுகிறதோ அதை நாம் மட்டுமே அறிய முடியும்”. ப்ளூம் நாம் இலக்கியத்தின் வழியாக மேம்படுவோம் என்பதை மறுக்கிறார். நம் அகக்குரல், இன்னும் சற்று துல்லியமாக கேட்கும் என்பதை மட்டுமே இலக்கிய வாசிப்பின் பயன்மதிப்பு என்கிறார். இலக்கிய பிரதிகள் சமூகத்தை மேம்படுத்துமா, வரலாற்றுப் போக்கை மாற்றியமைக்குமா, என்று கேட்டால், அப்படி நிகழ வாய்ப்புள்ளது. சில முன்னுதாரணங்களையும் சுட்ட முடியும். ஆனால் இத்தகைய நோக்கத்தை பிரகடனப்படுத்திக்கொண்டு ஒரு இலக்கியம் படைக்கப்படுமேயானால் அதன் ஆதாரமான கலையம்சம் காணாமல் போய்விடும் அபாயம் உண்டு.

முதன்மையாக, விமர்சகன் ஒரு வாசகன்தான். ஆனால் வாசகனுக்கு இருக்கும் தேர்வும் சுதந்திரமும் விமர்சகனுக்கு இருப்பதில்லை. அவனுக்குரிய கூடுதல் பொறுப்பின் காரணமாக அவனுக்குப் பிடித்தது, பிடிக்காதது எனும் பேதமின்றி, வசதிகளை துறந்து, அவனை சங்கடப்படுத்தும், நேரத்தை விழுங்கும், புதிய உலகிற்குள்ளும் பயணித்தாக வேண்டும். பெரும்பாலான சமயங்களில் இது அவனுக்கு வாதையாக இருந்தாலும்கூட, வேறு எவரும் கண்டடையாத ஒன்றை, ஒரு புதிய வாசிப்பைக் கண்டறிந்து அதை உலகிற்கு அறிவிக்கும் சாத்தியம் அவனை இயக்குகிறது. அரிதான தருணங்களில் அப்படி நிகழும்போது ஏற்படும் போதையே அவனுக்கு இப்பாதையில் பயணிக்க ஆற்றல் அளிக்கிறது.

தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களே விமர்சகர்களாகவும் இருப்பதால் இங்கு ரசனை விமர்சனமே மேலோங்கியுள்ளது. எழுத்தாளன் விமர்சகனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு சக எழுத்தாளனிடமும், முன்னோடிகளிடமும் கற்றுக்கொள்ள, உள்வாங்கிக்கொள்ள ஏராளமான நுட்பங்கள் கிட்டும். உள்ளூர அவன் தனது கலையுடன் ஒப்பிட்டு சுயமதிப்பீடு செய்துக்கொண்டே வருவான். ஆனால் எழுத்தாளன் விமர்சகனாக இருப்பதில் சில சிக்கல்கள் இல்லாமல் இல்லை. அவனுடைய படைப்பு மனம் சில சாதாரணமான சாத்தியங்களை கற்பனையாற்றலால் வளர்த்துப் பெருக்கிக் கொள்ளும். ஆகவே சில சமயங்களில் சாதாரண படைப்பும்கூட அவன் பார்வையில் அசாதாரணமாக ஆகிவிடும். ஒரு விமர்சகனாக அந்தப் படைப்பின் மேன்மையை அவனால் நிறுவ முடியாமல் போகும். ஆகவே எழுத்தாளர்- விமர்சகர்களை அவர்களுடைய சாய்வுகளுடன் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ரசனை விமர்சனத்தின் அளவுகோல் என்பது முற்றிலும் விமர்சகனின் வாசிப்பு விசாலம் மற்றும் நேர்மையை சார்ந்தது. அவன் சுட்டிக்காட்டுவதாலேயே ஒரு படைப்பு மேலானதாக ஆகிவிடாது. வாசக பரப்பும் ஏற்கும்போதே அது நிகழ்கிறது. ஒரு பிரதியை அதன் எழுத்தாளனோ அல்லது விமர்சகனின் பட்டியலோ ‘கேனானாக’ உயர்த்த முடியாது என்பதை தெளிவாக சொல்கிறார் ப்ளூம். வாசகனை விடவும், எழுத்தாளனை விடவும் விமர்சகன் வாசிப்பில் ஒருபடி முன்னே செல்ல வேண்டியது அவசியமாகும். அதுவே அவனுடைய விமர்சனத்தின் எல்லையை தீர்மானிக்கும். கோட்பாட்டு விமர்சகர்கள் ரசனை விமர்சனத்தின் மிகப்பெரிய குறைபாடாகச் சுட்டிக் காட்டுவது இந்த அகவய அம்சத்தைத்தான். சமூக பொறுப்பிலிருந்து நழுவி, ரசனை விமர்சனத்தின் பெயரால் எதையும் நியாயப்படுத்திவிட முடிகின்ற அபாயம் உள்ளது. புறவயமான அலகுகள் ஏதுமில்லை. மேலும் படைப்பிற்கும், படைப்பாளிக்கும் சமூக அக்கறையும் பொறுப்பும் உள்ளதா எனும் வினாவை அவர்கள் எழுப்புவார்கள். என்னளவில் எழுத்தாளன் தான் எழுதிய சொற்களை அன்றி வேறெதற்கும் பொறுப்பில்லை.

பரந்த வாசிப்பு விமர்சகனுக்கு தேவை என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதுவே தடையாகவும் ஆகிவிடக்கூடும். ஒவ்வொரு முறையும் படைப்பின் முன் தான் சேகரித்தவற்றை, சுமந்து வருபவை அனைத்தையும் களைந்து நிற்க வேண்டும். விமர்சகன் தனக்கென உருவாக்கிக் கொண்ட அளவுகோலை களையவில்லை என்றால் தன் அளவுகோலுக்கு பொருந்தாதவை அவனுள் புகாது. நல்ல விமர்சகன் தனது எல்லையைக் கடக்க முயல்வான். ஒரு திறந்த வாசகனாகவே இருப்பான். தீர்மானமான அளவுகோல் வாசகனுக்கும் விமர்சகனுக்கும் பேரிழப்பு. அவன் ஒரு போதும் பனைமரத்தைப் பார்த்து, “நீ ஏன் இத்தனை உயரமாக, குறைந்த இலைகளுடன் இருக்கிறாய், செறிவான மாமரத்தைப் போல் இல்லை?” என வினவமாட்டான். நவீனத்துவ பிரதியின் அளவுகோலாக செவ்வியல் பிரதியையோ பின்நவீனத்துவ பிரதியையோ பயன்படுத்தமாட்டான். வரலாற்று நாவலை மிகுபுனைவு நாவலுடன் ஒப்பிட முடியாது என்பதை அறிவான். படைப்புகளுக்குதான் அளவுகோலே ஒழிய அளவுகோலுக்கு உகந்த படைப்புகள் அல்ல.

விமர்சகன் வறண்ட மனநிலை கொண்ட நீதிமான் எனும் எதிர்பார்ப்பு போலியானது. நல்ல விமர்சகன் ஒரு படைப்பாளியும்கூட. படைப்பு மனத்தின் தடுமாற்றங்களும், தத்தளிப்புகளும் அவனுக்கு உண்டு. அவனுடைய பழக்கப்பட்ட வாசிப்பு தளத்திற்கு வெளியே வரும் புத்தகங்களை எதிர்கொள்ளும்போது அதை உள்வாங்கத் திணறுவான். எழுத்தாளனின் படைப்புடன் சேர்ந்தியங்கும் சக படைப்பாளி என்றே விமர்சகனைச் சொல்ல வேண்டும்.

விமர்சனம் யாருக்காக என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டால், ஒரு புனைவெழுத்தாளனாக, ரசனை விமர்சனம் எழுத்தாளனை நோக்கி எழுதப்படுவது அல்ல, என்பதை உணர்கிறேன். எழுதத் துவங்கும் காலகட்டத்தில் அவனுடைய செய்திறனுக்கு சில விமர்சனங்கள் உதவலாம். அதற்கப்பால் எழுத்தாளன் விமர்சனத்தால் உருவாவதும் இல்லை,மேம்படுவதும் இல்லை. தான் எழுதியவற்றை இப்படியெல்லாம் வாசிக்கிறார்கள் எனும் புரிதலுக்கு மேல் அவனுக்கு விமர்சனம் எதையுமே அளிப்பதில்லை.

தமிழ்ச் சூழலில் விமர்சகருக்கும், பிரதி மேம்படுத்துனர், பதிப்பாசிரியர் வேறுபாடுகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். படைப்பு குறித்து கருத்து சொல்பவர்கள் அனைவரையுமே நாம் விமர்சகர் என்றே சொல்கிறோம். நேர்மறை விமர்சனங்கள் சொற்ப காலத்திற்கு அவனை ஆற்றுப்படுத்தலாம். ஏனெனில் புனைவின் கருப்பொருள் அவன் தேர்வது அல்ல, அது அவனுக்கு அளிக்கப்படுகிறது.

விமர்சனம் வாசகரை நோக்கியே பேச வேண்டும். இத்தெளிவு இருந்தால் எழுத்தாளனை தனிப்பட்ட முறையில் அடித்து வீழ்த்தும் விசை அவசியமற்றது என்பது பிடிபடும். மார்க்சிய, நவ வரலாற்றுவாத விமர்சகர்கள் எழுத்தாளனின் நோக்கத்தின் மீது கேள்வி எழுப்பி அவனை முத்திரை குத்த முனைவது போல் ரசனை விமர்சகன் ஒருபோதும் செய்யக்கூடாது. அவனுடைய அக்கறை முழுவதும் படைப்பில் வெளிப்படும் கலைத்தன்மை பற்றியதாக மட்டுமே இருக்க முடியும். அதிலுள்ள போலித்தனங்களை, பாவனைகளை சமரசமின்றி சுட்டிக்காட்ட வேண்டும். ரசனை விமர்சகன் எழுத்தாளனை வகைப்படுத்த மாட்டான், வரிசைப் படுத்துவான் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். அவ்வரிசை எழுத்தாளனின் படைப்புகளில் இப்பிரதியின் இடம் என்ன, ஒட்டுமொத்த இலக்கிய மரபில் இந்த பிரதியின்/ எழுத்தாளனின் இடம் என்ன, என இருவகையானவை.

ஆகவே, ஒரு தேர்ந்த விமர்சகனின் வேலை என்பது வாசகனிடம் படைப்பின் புதிய வாசிப்பு கோணங்களை, நுட்பங்களை கொண்டு சேர்ப்பதே. இலக்கிய வரலாற்று ஆசிரியனைப் போல் எழுத்தாளனையும் அவனுடைய பிரதியையும் இலக்கிய வரலாற்று வெளியில் பொருத்திக் காட்டுவதே. அதன் அழகியலை வேறு ஆக்கங்களுடன் ஒப்பு நோக்குவதே. எழுத்தாளனின் தனித்தன்மையை அடையாளபடுத்தும் பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. எழுத்தாளனை, பிரதியை ஒரு வரிசையில் வைக்கும்போது முன்னோடிகளிடம் இருக்கும் தொடர்ச்சியையும் அதிலிருந்து இவன் கிளைத்துப் பிரியும் புள்ளியையும் அடையாளம் காட்ட வேண்டியது விமர்சகனின் கடமை. பல சமயங்களில் விமர்சகனின் இத்தகைய செயல்பாடு எழுத்தாளனுக்கு உவக்காது. வாசகனில் இருந்து விமர்சகன் மேலெழும் புள்ளி என்பது அவனால் தன் நிலைப்பாடுகளை ஓரளவு தர்க்கபூர்வமாக முன்வைக்க முடிவதில் உள்ளது. தர்க்கமும்கூட ஒரு எல்லை வரைதான். ஏனெனில் அழகியல் ரசனை அந்தரங்கமானதும் கூட.

விமர்சகனின் சுட்டிக்காட்டுதல்கள் அது எத்தனை அப்பட்டமாக, சில வேளைகளில் வன்மம் தொனிப்பதாக இருந்தாலும்கூட அவன் இலக்கியத்தின் மீதான பெரும் காதலினால் மட்டுமே அதைச் செய்கிறான் எனும் புரிதல் முதலில் சக விமர்சகனுக்கும் பின்னர் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் அவசியமாகிறது.

இறுதியாக ஒன்று, ஒரு நல்ல விமர்சகன் கடல் அலையை அல்ல, அந்த அலைகளுக்கு அடியில், ஆழத்தில், நீரின் திசையை, அதன் விசையைத் தீர்மானிக்கும், டெக்டானிக் தட்டுக்களின் அசைவை காட்டுவதற்கே முயல்கிறான்.

இலக்கியம் இனியும் என்ன செய்ய முடியும்? – கியோர்கி கொஸ்போதினோவ்

(This speech is translated with the kind permission of Georgi Gospodinov and the Jan Michalski Foundation for Writing and Literature for non-commercial publication specifically at Padhaakai.com. No other use may be made of this material without prior permission of the author and the publisher)

ஆம், நான் மனவெழுச்சி மிக்க நிலையில் இருக்கிறேன். அதற்கு முன் நான் நன்றி சொல்லியாக வேண்டும். இந்தப் பரிசை நிறுவிய துணிச்சலுக்காக வெரா மிசால்ஸ்கிக்கு நன்றிகள், உலகில் நானிருக்கும் பகுதியில் வெளிவந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்த மரியாதைக்குரிய தேர்வுக் குழுவினருக்கு நன்றிகள். இந்தப் புத்தகம் வாசிக்கப்பட காரணமாக இருந்த என் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நன்றிகள் – பிரெஞ்சு மொழியாக்கம் செய்த மேரி வ்ரினா-நிகொலோவுக்கு நன்றிகள் (அவர் இங்கு இருக்கிறார்), ஜெர்மன் மொழியாக்கம் செய்த அலெக்சாண்டர் சிட்ஸ்மானுக்கும் ஆங்கில மொழியாக்கம் செய்த ஏஞ்சலா ரோடலுக்கும் நன்றிகள். என் பதிப்பாளர்களுக்கும் நன்றிகள்- இன்டர்வால்ஸ், ட்ரோஷ் வெர்லக், ஓப்பன் லெட்டர் புக்ஸ். என்னுடன் பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளர்களுக்கும் நன்றிகள். இந்த இறுதிப் பட்டியலில் ஜூலியன் பார்ன்ஸ், ஜெவாட் க்ரஹாசன், ஆதிஷ் தசீர், நவீத் கெர்மானி ஆகியவர்களுடன் நானும் இடம் பெற்றிருப்பது என்னை பெருமைப்படுத்துவதாக உணர்கிறேன். இங்கு கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் நன்றிகள். என் மனைவி, பில்யானாவுக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும், என் மகள் ரயாவுக்கும் நன்றிகள். இந்த நாவலை நான் முடிக்கும்போது அவளுக்கு ஐந்து வயது ஆகியிருந்தது. கதை ஓடாதபோது, அவள் பூனை அல்லது டினோசர் கதை சொல்லி எனக்கு உதவ எப்போதும் தயாராகவே இருந்தாள். ஒரு நாள் மாலை, ஏன் என் புத்தகங்களின் பெயர்கள் எப்போதும் சோகமாக இருக்கின்றன என்றே கேள்வியை ரயா கேட்டாள்- அடுத்த நாவலின் பெயர் உற்சாகமானதாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறேன் – “ஆனந்தத்தின் இயற்பியல்,” அல்லது அது போல் ஏதாவது. இதுவரை அந்த வாக்குறுதியை நான் நிறைவு செய்யவில்லை.

இந்தப் புத்தகம், இதுவே உங்கள் முன் நான் பேசும் பெருமையை எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது, இந்தப் புத்தகத்தின் பெயர் “துக்கத்தின் இயற்பியல்”. இதன் பெயரை மாற்றும்படி ஒரு பதிப்பாசிரியர் நட்பார்ந்த முறையில் அறிவுரை அளித்தார். இப்படி ஒரு பெயர் கொண்ட நாவலை யாரும் படிக்க விரும்ப மாட்டார்கள் என்பதுதான் காரணம். துக்கம் விற்பனையாகாது. எப்போதாவது சோகம் மிகுந்த மெர்சிடஸ் விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா? நான் அந்த அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. “Тъга”- இப்படித்தான் துக்கத்துக்கான சொல் என் தாய் மொழியில் ஒலிக்கிறது. இந்தச் சொல் சிறியது. ஆனால் இது விவரிக்கும் நிலை நீண்டது, அவ்வளவு எளிதில் மொழிபெயர்க்கப்பட முடியாதது. (இப்போது நீங்கள் மெல்ல ‘Тъ-га” என்று சொல்ல முயற்சி செய்தால் உங்கள் குரல்வளையில் எலும்பு அசைவதை உணர முடியும். உங்கள் தொண்டைக்குள் எதுவோ செல்கிறது, முழுங்குவது போன்ற ஒரு முயற்சி, அடக்கிக் கொள்வது போன்ற ஒரு முயற்சி இது).

இந்த நாவலை எழுத ஆரம்பிக்கும்போது இப்படி ஒரு காட்சி வைத்திருந்தேன். அது என் குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியாக இருந்த ஒன்று. 1970களில் ஒரு சிறுவன், முடிவற்ற மதியப் பொழுதுகளில் அந்தி போல் இருண்ட நிலவறையில் தங்கியிருக்கிறான்- அவன் இருளை விட்டுத் திரும்பி நிற்கிறான், அவனது முகம் சன்னலை நோக்கியிருக்கிறது. அந்த அறையின் சன்னல், நடைபாதை உயரத்தில் இருக்கிறது. அவனைக் கடந்து செல்லும் கால்களையும் பூனைகளையும் அந்தச் சிறுவன் எண்ணிக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு நாளும், தனிமையில், இனம்புரியாத ஒரு கைவிடப்பட்ட உணர்வோடு. அப்போது மினோடர் தோன்றியது- தொன்மங்களில் நாமறிந்த ராட்சதன் ஆவதற்கு முன் தரைக்கடியில் உள்ள சிடுக்குகள் நிறைந்த பாதையில், எருது முகம் பூட்டப்பட்ட, கைவிடப்பட்ட குழந்தை. 1970களின் சிறுவனும் குழந்தை-மினோடரும் ஒரே, பொதுத் துயரத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள். கைவிடப்படவர்களின் துயரம். நமக்குள் பூட்டப்பட்டிருக்கும் மினோடர் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுத விரும்பினேன், நாம் வாழும் நூற்றாண்டைப் பற்றி அதன் மதியங்கள் அந்திப்பொழுதுகள் அனைத்தினும் கண்ட வகையில், பிறர் கதைகளுள் நுழையக்கூடிய இயல்பு கொண்ட, பிரம்மாண்டமான புரிந்துணர்வு கொண்ட ஒரு சிறுவனின் அச்சங்களைக் கொண்டு.

துக்கத்தில் உலக சாம்பியனாய் விளங்கும் தேசத்திலிருந்து வருகிறேன். உலகின் மிகச் சோகமான இடம் – வெவ்வேறு தேசங்களில் நிலவும் மகிழ்ச்சியுணர்வை ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுக்கும் ஆய்வின் அடிப்படையில் தி எகானமிஸ்ட் இதழ் இவ்வாறுதான் பல்கேரியாவை அழைத்தது. இந்தப் புத்தகத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது, இத்தனை சோகமும் எங்கே வடிந்து செல்கிறது என்று நினைத்துப் பார்த்தேன்- அது ஐரோப்பாவெங்கும் வெள்ளமாய் பாய்கிறது, ஒரு வகையில் உலகமெங்கும் கூடத்தான். நீண்ட காலமாய் தொடர்ந்து கூடிக்கொண்டிருக்கும் துக்கம், மறைக்கப்பட்டிருக்கும் துக்கம் வெடிக்கத் தயாராய் இருக்கும் ஆபத்தான விஷயம் என்பதை ஒரு எழுத்தாளனாக, நான் அறிந்திருக்கிறேன். எனவேதான் இது விடுவிக்கப்பட்டாக வேண்டும், கதைக்கப்பட வேண்டும், புனைவுகளைக் கொண்டு அடக்கப்பட வேண்டும். வேண்டுமானால், அதை நாம் கொண்டாடி வழியனுப்பலாம் என்று வைத்துக் கொள்வோம். இது இலக்கியத்தின் திறன்களில் ஒன்று.

இன்றுள்ள நம் உலகம் போன்ற ஒரு இடத்தில் இப்போதும் இலக்கியத்தால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

அதனால் எளிய விஷயங்கள் செய்ய முடியும். உதாரணத்துக்கு, ஒரு உயிரைக் காப்பாற்றுவது போன்றவை. நீங்கள் கதை சொல்கிறீர்கள், அந்த வகையில் முடிவைத் தள்ளி வைக்கிறீர்கள். இதை நாம் ஷெஹராஜேட் மூலம் நன்றாக அறிகிறோம்- உயிருக்கு பதில் கதைகள் (எளிய ஒப்பந்தம்). பலியாக வேண்டியவள் கதை சொல்கையில் அவள் வேறொரு, பாதுகாப்பான மண்டலத்தில் இருக்கிறாள். கதை முடியாதவரை அவள் வாழ்வுக்கு உத்திரவாதம் உண்டு. இதுதான் இலக்கியத்தின் சிறப்பு உத்திரவாதம். இதுதான் கதை சொல்லும் மெலியவர்களின் ஆற்றல். குழந்தையாக இருந்தபோதே எனக்கு இதை உள்ளுணர்வு உணர்த்தியிருக்க வேண்டும். ஏனென்றால் தன்னிலை முன்னிலையில் சொல்லப்பட்ட புத்தகங்களையே நான் வாசிக்கத் தேர்ந்தெடுத்தேன். அவனோ அவளோ, கதை சொல்லிக் கொண்டிருக்கும்வரை சாகப்போவதில்லை என்ற எளிய விதியை நான் அறிந்திருந்தேன். கதை சொல்கிறேன், எனவே இருக்கிறேன். Narro, ergo sum.

இலக்கியம் வேறு என்ன செய்ய முடியும்? தோற்பவர்களின் பக்கம் நிற்க முடியும். நம் காலம் போல், அப்படி இருப்பது குறிப்பாக அவசியப்படும் காலங்கள் இருக்கின்றன- வலிமையற்றவர்கள், காயப்பட்டவர்கள், பிரச்சினையில் இருப்பவர்கள், ஹோமோ ஆங்க்சியஸ், இவர்கள் பக்கம் நின்றாக வேண்டும். நல்ல இலக்கியத்தின் அடிப்படை இயல்பாக இதைக் காண்கிறேன். வெற்றி பெற்றவர்களே வரலாறு எழுதுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தோற்றுப் போனவர்கள் கதை சொல்கிறார்கள். அவை கூடுதல் சுவாரசியம் கொண்டவை, உண்மைக்கு இன்னும் நெருக்கமானவை.

இலக்கியம் வேறு என்ன செய்ய முடியும்? நம் ரசனையை மேம்படுத்தலாம். இதைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. இது வெறும் அழகுணர்ச்சி மட்டுமல்ல. ரசனையுள்ள மக்கள் அற்ப பிரசாரத்துக்கு அவ்வளவு சீக்கிரம் வசியப்பட மாட்டார்கள். அரசியல் கிட்ஷை அவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.

இந்த இடத்தில் போலிஷ் கவிஞரான ஜ்பிக்னியவ் ஹெர்பர்ட்டின் “ரசனையின் ஆற்றல்’ என்ற அற்புதமான கவிதையின் வரிகள் சிலவற்றை நினைவுறுத்துகிறேன்:

அதற்கொன்றும் அவ்வளவு ஒழுக்கம் தேவைப்படவில்லை
நம் மறுப்புக்கும் மாற்று கருத்துக்கும் எதிர்ப்புக்கும்
தேவைப்பட்ட துணிவு ஒரு துளி இருந்ததுதான்
ஆனால் அடிப்படையில் அது ரசனை சார்ந்த விஷயம்
ஆம், ரசனை…

செய்தித்தாள்களின் முதல் பக்கங்கள், அரசியல் அறிக்கைகள், சந்தைகள் அல்லது வங்கிகளை மட்டும் கொண்டு உலகை விளக்க முடியாது என்பதை மெல்ல மெல்ல நாம் அறிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் நாம் பொருளாதாரத்தாலும் அரசியலாலும் ஆனவர்கள் அல்ல. நாம் துக்கத்தாலும் தயக்கத்தாலும், அவற்றைப் போன்ற மெல்லிய, விளக்க முடியாத, சில சமயம் தர்க்கத்துக்குப் பொருந்தாத விஷயங்களாலும் ஆனவர்கள். இங்குதான் இலக்கியம்- இப்படிச் சொல்லலாமென்றால்- அதன் நிபுணத்துவத்தின் இடம் வருகிறது. அரசியல்வாதிகள் இன்னும் அதிக அளவில் செகாவையும் போர்ஹெசையும் வாசித்தால் நம் பிரச்சினைகள் வேறு வகைப்பட்டவையாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

பரிவுணர்வை எழுப்பும் கதைசொல்லல் நமக்குத் தேவைப்படுகிறது. தனி வாழ்விலும் அரசியலிலும் இன்று பரிவுணர்வு முக்கியமாக இருக்கிறது. அதுதான் கடவுள் துகள் என்று சொல்லலாம். மானுட உலகின் பசை, ஹிக்ஸ் போஸான் (அது கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு அருகில் நாம் இருப்பதால்). ‘துக்கத்தின் இயற்பியல்’ இலக்கணப் பிழை கொண்ட ஒரு சொற்றொடருடன் துவங்குகிறது, ஆனால் அதன் பொருள் சரியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். பரிவுணர்வை நான் இவ்வாறு வரையறை செய்து கொள்கிறேன்: நாம் உள்ளேன், அல்லது நான் உள்ளோம்.

நீஸ் நகரில் கூட்டத்தில் புகுந்து ஓடிய ட்ரக்கை இலக்கியமும் பரிவுணர்வும் நிறுத்த முடியாது என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அந்த ட்ரக்கினுள் ஏறிய மனிதனை பல ஆண்டுகளுக்கு முன் அவை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அவன் வாழ்வுக்கு அவை வேறொரு பொருள் தந்திருக்கலாம், இது சாதாரண விஷயமல்ல, இதுதான் எல்லாம்.

உலகம் எங்கும் வெறுப்பும் பாதுகாப்பின்மையும் திரண்டெழுந்து ஆபத்தான அளவில் மையம் கொண்டிருக்கின்றன. வேண்டுமானால் நீங்கள் அதை ஒரு பைத்தியக்காரத்தனம் என்று அழைக்கலாம். இது புதிதாய் தோன்றியுள்ள விரைவு ஊடகத்தால் எளிதில் பெரிதாகி வலுவடைகிறது. நம் கருத்துகளும் சொற்களும் கடும் தீவிரத்தன்மை கொள்கின்றன. நம்முள் மறைந்திருக்கும் இந்த உள்ளார்ந்த ஜிகாத்திசம் இன்று மிகவும் ஆபத்தான நிலைகளில் ஒன்றாகும். இன்று, பூகோள பரப்புகளை வெற்றி கொள்ள மட்டுமல்ல, மானுட பரப்புகளை வெற்றி கொள்ளவும் போர்கள் தொடர்கின்றன. மானுட இயல்புக்கு என்று மீறப்படக்கூடாத சில எல்லைகள் இருக்கின்றன. ஏனெனில், வரலாற்று நோக்கில், கோட்பாடுகளுக்கும் தேசங்களுக்கும் முன் மானுடம் இருந்தது. இன்றுள்ள புலம் பெயர்ந்தோர், துக்கங்களின் மகத்தான புலம் பெயர்தலின் ஒரு பகுதியினர். துக்கத்தின் புலம் பெயர்தலைக் குறித்து நாம் சிந்தித்து அதன் கதையாடல்களை விவரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு முறை என் மகள் தன் அறையில் ஆசிரியை போல் விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் தன் மிருக பொம்மைகளிடம், “பிள்ளைகளா, நீங்கள் இன்று எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். அதன்பின் அவற்றின் பின்னால் போய் நின்றுக் கொண்டு, “நாளை இருப்பதைவிட நன்றாய் இருக்கிறோம்” என்று பதிலளித்தாள். அவள் இதை அறிந்து சொல்லியிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன். “நேற்றை விட நன்றாய் இருக்கிறோம்” என்றுதான் நாம் வழக்கமாய்ச் சொல்வோம். “நாளை இருப்பதைவிட நன்றாய் இருக்கிறோம்,” என்று சொல்வது அதைவிட அதிக விழிப்புணர்வு கொண்ட ஒரு நிலையை உணர்த்துகிறது. நம் கடந்த காலத்தைவிட நம் எதிர்காலம் உறுத்தலாய் இருக்கக்கூடிய ஒரு புள்ளியில் நாம் உறைந்திருக்கிறோம். நம் நிகழ்காலத்தில் உள்ளதைவிட நம் கடந்தகாலத்தில் அதிக எதிர்காலம் இருந்தது.

நிதி நிலை, அரசியல், எண்ணை வளங்கள் வற்றிப் போதல் என்பது போன்ற புலப்படக்கூடிய பிரச்சினைகளுக்கு அப்பால் கண்ணுக்குத் தெரியாத, அவற்றைவிட அச்சுறுத்தும் வேறொரு பிரச்சினை இருக்கிறது என்று நினைக்கிறேன். அர்த்த சேகரங்களின் முற்றிழப்பு என்று அதை அழைக்கப் போகிறேன். கடும் எதிர்காலப் பற்றாக்குறை. எனவேதான் அர்த்தங்களை உருவாக்கும் கருவிகள் என்ற வகையில் இலக்கியத்துக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கிறேன். மாற்று ஆற்றல் வளங்கள் போல். அல்லது யாரோ ஒருவருக்காவது ஆறுதல் அளிக்கக்கூடிய வளம். அல்லது ஒரு சிறு சூட்கேஸ், ஒவ்வொரு சமயத்துக்கும் தக்க கதைகள் கொண்ட அவசர உதவிப் பெட்டி. இது சாதாரண விஷயமல்ல. உலகின் கால அட்டவணை, “எதிர்காலம் ரத்து செய்யப்பட்டது,” என்று அறிவிக்கும் கணத்தை நம்மால் தள்ளி வைக்க முடியும் என்று நம்புகிறேன்.

இலக்கியத்தைப் புகழும் இந்தச் சிற்றுரையின் முடிவில், இப்போதோ பின்னரோ, எல்லாமே இலக்கியத்துக்கு உரிய விஷயமாக மாறிவிடுகிறது என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நம் துக்கங்களும் பிரச்சினைகளும்கூடத்தான். போர்ஹெஸ் மிகவும் நேசித்த மேற்கோள், மல்லார்மே எழுதியது, “உலகில் உள்ள எல்லாம் ஒரு புத்தகம் ஆகவே இருக்கின்றன”, என்று சொல்வது போல்தான்.

நன்றி நண்பர்களே, இவ்வுலகின் வாக்கியங்களில் ஒன்றில் சில நிமிடங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

அவ்வுணர்வுக்கு நன்றிகள்.

© 2016 Fondation Jan Michalski

நன்றி – Fondation Jan Michalski 

h/t Specimen

(This is an unauthorised translation of the speech, “What can Literature still do ?” by Georgi Gospodinov”, originally published at Fondation Jan Michalski. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

கியோர்கி கொஸ்போதினோவின் பல்கேரிய சோகம்

இவ்வுலகை மீண்டும் மாயங்களால் நிறைத்தல்

பீட்டர் பொங்கல்

இவ்வாண்டு ந்யூஸ்டாட் பரிசு பெற்ற மியா கோடோ அளித்த நன்றியுரையின் தமிழாக்கம்

அன்பு நண்பர்களே,

இந்த விருதைப் பெற்றுக்கொள்வதில் நான், எனக்கு மிகப் பெரிய கௌரவம் அளிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஏதோ ஒரு எளிய சம்பிரதாய மதிப்புக்காக மட்டும் இப்படிச் சொல்லவில்லை. இதை உணர்வுபூர்வமாகச சொல்கிறேன்.

தனிப்பட்ட ஓர் எழுத்தாளனின் படைப்புக்குத் தரப்படுகிறது என்பதற்கும் அப்பால் இந்த விருது முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் இங்கே ஓக்லஹாமாவில், ஒவ்வொரு வருடமும், கொண்டாடும் விஷயம் இலக்கியத்தோடு நின்றுவிடுவதில்லை. ந்யூஸ்டாட் விருதைக் கொண்டு நாம் நம் உலகின் பண்பாட்டுப் பன்மையைப் போற்றுகிறோம், நம் ஒவ்வொருவரின் உள்ளும் இருக்கும் பன்மைப் பண்பாட்டைப் போற்றுகிறோம். அன்னியர்கள் என்று நமக்கு அடையாளம் காட்டப்படுபவர்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான அரண்களாய் நம் தனிப்பட்ட அடையாளங்களும் தேசிய அடையாளங்களும் கோட்டைகள் போல் எழுப்பப்பட்டு வரும் இவ்வேளையில் பன்மைப் பண்பாட்டைப் போற்றுதல் மிக அவசியம். (more…)