எதற்காக எழுதுகிறேன்

ஏன் எழுதுகிறேன் – வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்– 

நான் ஏன் எழுதுகிறேன்? நீண்ட காலமாக அரட்டைக் குழு நண்பர்கள் சிலர் நான் ஏன் எழுதுவதில்லை என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். சரி, கேட்கிறார்களே என்று எழுத ஆரம்பித்தால் நீங்கல்லாம் ஏன் எழுதறீங்க, சொல்லுங்கன்னு பதாகைக்காரர்கள் கேட்டு விட்டார்கள். இப்ப நாம் என்ன நிறைய எழுதிட்டோம்னு இப்படிக் கேக்கறாங்கன்னும் தோணாம இல்ல. ஆனா கேள்வின்னு வந்தாச்சு, பதில் என்னவா இருக்கும்ன்னு யோசித்துப் பார்க்கிறேன்.

உண்மையில் இந்தக் கேள்வி புனைவு எழுதுபவர்களுக்குதான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், கட்டுரைகள் எழுதுவது என்ற இடம் நேர்ப்பேச்சில் கருத்து கூறுவதிலிருந்து ஒரு எட்டு எடுத்து, தட்டச்ச ஆரம்பித்தால் வந்து விடுகிறது.. நம் முகத்திற்கு எதிரே இருக்கும் 4 அல்லது 5 பேரிடம் சொல்வதை எவ்வளவு பேருக்கு சொல்கிறோம் என்று தெரியாமல் சொல்லிக் கொண்டிருப்பதே எழுத்து என்ற அளவுதான் இரண்டுக்கும் வித்தியாசம்.. ஏன் சொல்கிறோம் என்பதற்கு என்ன காரணமோ அதேதான் ஏன் எழுதுகிறோம் என்பதற்கும் சொல்ல முடியும். ஆனால் புனைவு அப்படியல்ல என்று தோன்றுகிறது. மிகச் சிரமப்பட்டு ஒரு நிகர் உலகை உருவாக்கி, பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து உணர்வுகளின் வண்ணம் சேர்த்து… .அப்பப்பா, நம்மால் ஆகப்பட்ட காரியம் அல்ல அது.

இன்னொரு கோணத்தில், சுற்றியிருக்கும் உலகின் நடவடிக்கைகளை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கும் ஒருவர் எழுதாமல் இருப்பதுதான் கடினம் என்று தோன்றுகிறது. உலகின் போக்கு குறித்த எதிர்வினைகள் எப்போதும் கணத்துக்குக் கணம் மனதில் தோன்றிய வண்ணமே இருந்தாலும் அவற்றைத தொகுத்து, சீராக அடுக்கி, எழுத்தில் கொண்டு வருவது எல்லோர்க்கும் உடனடியாக வருவதில்லை. சிலருக்கு தங்கள் பதின்ம வயதிலேயே இந்தக் கலை வசப்பட்டு விடுகிறது. என் போன்ற சிலருக்கு அதிக காலம் பிடிக்கிறது ஆனால் ஏதோ ஒரு சமயத்தில், ஒரு அசோகமித்திரன் கதையில் ஒரு பாத்திரத்துக்கு சட்டென்று காரில் கிளட்ச் போடுவது பிடிபடுவது போல இது நிகழ்ந்து விடுகிறது. அதற்கப்புறம் எழுதாமலிருப்பதே உண்மையில் சிரமம்.

பல சமயங்களில் எழுதுவதற்கு பிறரின் தூண்டுதலும் வழிகாட்டலும் தேவையாயிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில்,இவை இரண்டுக்குமான பழி இருவருக்கு உரியது, ஒருவர், சக நண்பர். அவர் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டினார். இன்றும் ஒவ்வொரு முறை பேசும்போதும், இப்ப என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க, என்று கேட்கத் தவறுவதில்லை. மற்றவர் ஜெயமோகன். அவருடன் பழக்கம் ஏற்பட்ட பிறகு, அவர் ஒரு விஷயத்தை எப்படி தொகுத்துச் சொல்கிறார் என்பதும், அந்தத் தொகுத்தலே அவரது எழுத்துக்கு அடிப்படையாக அமைவதையும் நேரில் பார்த்து என்னையறியாமல் உள்வாங்கியிருப்பது நான் எழுத உதவுகிறது என்று சொல்லவேண்டும்.

அப்புறம், ஒரு குறிப்பிட்ட காலம் வரை, நாம் எழுதினால் உலகம் என்ன நினைக்குமோ என்ற ஒரு லஜ்ஜை தடுக்கிறது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது வயதில் அது உதிர்ந்து, நான் உலகைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமாகிவிடுகிறது. அங்கே எழுத்து தொடங்கிவிடுகிறது.

தமிழில் தீவிர இலக்கியம் வாசிப்பவர்களுக்கு ஒரு பெரிய கஷ்டம், நாம் படித்த புத்தகத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளக்கூடிய நண்பரை நம் உடனடி வட்டத்தில் கண்டுபிடிப்பது. இதனால் இரண்டு வகையில் பாதிப்பு உண்டாகிறது. பகிர்ந்து கொள்ளுதலும் இல்லை புதிதாகத் தெரிந்து கொள்ளுதலும் இல்லை., அங்குதான் நாம் படித்த நல்ல புத்தகங்கள் குறித்து நிச்சயமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. நான் எழுதியவற்றில் பெரும்பான்மையும் புத்தகங்கள் பற்றியே. அவை மதிப்பீடா விமர்சனமா என்று வகைப்படுத்த நான் முயல்வதில்லை. .முன்னொரு சமயம், கணையாழியில், என்.எஸ். ,ஜெகன்னாதன் அவர்கள், உலகில் மனிதனின் சிந்தனைகள், பல துறைகளில் பெருகியபடியே உள்ளன, இவற்றையெல்லாம், தமிழ் மட்டுமே அறிந்த ஒருவருக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்று, கவலைப்பட்டார். உலக மொழிகளில் என்று இல்லை தமிழிலேயே வந்திருக்கும் ஏராளமான நல்ல புத்தகங்கள்கூட இன்னும் சரியான அறிமுகமோ, மதிப்புரையோ இல்லாமல் இருக்கின்றன. ஆகவே ஒரு குறைந்தபட்ச முயற்சியாக நான் படிக்க நேரும் நல்ல புத்தகங்கள் குறித்தாவது பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணமே எழுதுவதற்கு முக்கியமான காரணம். பிறகு கடந்த 6, 7 வருடங்களாக,, நாஞ்சில் நாடன், கோபாலக்ருஷ்ணன், சு. வேணுகோபால் இரா. முருகவேள் போன்ற எழுத்தாளர்களின் அறிமுகமும் நட்பும், கோவை த்யாகு நூல் நிலைய நண்பர்களுடனான கருத்துப் பரிமாற்றமும், நான் எழுதுவதற்காண காரணங்களில் முக்கியமான ஒன்று. இத்தகைய ஒரு வட்டம் நிச்சயம் எழுதுவதை ஊக்கப்படுத்துகிறது.

கடைசியாகச் சொன்னாலும், மிக முக்கியமான ஒன்று இருக்கிறது, இணையமும் இ-மெயிலும் தரும் வசதி. இப்போது இதைக்கூட, ‘ஒரு வெள்ளைத்தாள் எடுத்து, மார்ஜின் விட்டு, பக்க எண் அளித்து எழுதி, பிழை திருத்தி, உறையிலிட்டு, தபால் தலை ஒட்டி அனுப்பு’, என்றால்….சிரமம்தான், அதற்கெல்லாம் வேலை வைக்காமல், ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்திருக்கும், (இன்னமும் அதே வழியில் எழுதிக் கொண்டிருக்கும் சிலரையும்) நம் முன்னோடிகளையும் நினைத்தால், தலை தன்னால் வணங்குகிறது

நான் ஏன் எழுதுகிறேன் – ச. அனுக்ரஹா

ச. அனுக்ரஹா

எழுத்து எப்போது பிறக்கிறது என்று நான் யோசித்திருக்கிறேன். அன்றாடத்தின் அலுவல்கள், பயணங்கள், சந்திப்புகளின் இடையே ஆயிரம் சிதறிய இடைவெளிகளில் எழுதுவதற்கான உந்துதல் கிடைக்கிறது. பெரும்பாலான தருணங்கள் அடுத்த நொடியின் அவசரத்தில் கடக்கப்பட்டுவிடுகின்றன. கடக்கப்படும் ஒரு சில உந்துதல்கள், இன்னும் அழுத்தமாக உருண்டு முட்டிக்கொண்டு வரும் தருணங்கள் அமைவதுண்டு. அப்போது, எழுதாமல் அடுத்த நொடி நகராது. பெரும்பாலான சமயம் நெருக்கடிகளும் மென்சோகங்களுமே எழுத வைப்பதுபோல தோன்றினாலும், உண்மையில் சந்தோஷங்களும்தான் அந்த உந்துதலை தருகின்றன. இன்னும் ஆழ்ந்து யோசித்தால், மேலோட்டமான நம்பிக்கைகளில், எதிர்பார்ப்புகளில் மனம் பதறாத நொடிகள் அவை. முன்னும் பின்னும் அறுக்கப்பட்டு இந்த நொடியின் தனிமையின்பத்தில் உதிப்பவை.

என் கவிதைகள் நம்மை சுற்றியிருக்கும் யதார்த்தத்திலிருந்து, அழகை தேடுபவை. சாலை நெரிசல்களிலிருந்து யாரும் பார்க்காத நிலவையும், காலை அவசரங்களில் யாரும் கவனிக்காத மரத்தையும் காட்டுபவை. பெரும்பாலான படைப்புகளில் இன்னும் தொலைந்துபோகாத குழந்தை உலகமும் உற்சாகத்துடன் வெளிப்படுகிறது. இயற்கையும், சின்ன சின்ன கவனிப்புகளும் சந்தோஷங்களும், மற்ற கடமைகளால் வடிவமைக்கப்பட்ட அன்றாடத்திற்கு சமன் நிலை அளிக்கின்றன. நம் சந்தோஷத்தை நாமே சிருஷ்டித்துக்கொள்ள முடியும் என்ற உற்சாகத்தை அளிக்கின்றன. இந்த நொடியின் பரிபூர்ணமான அனுபவம், ஒரு ஜன்மத்தின் நிறைவை அளிக்கிறது. அதை எழுதி பதிவு செய்வது என்பது, மீண்டும் மீண்டும் அங்கு செல்வதற்கான பாதை அமைப்பதே.

கவிதைகளின் அடிப்படையான மர்மம், அவை மொழியினால் கட்டப்படுபவை அல்ல; தன் வெளிப்பாடுகளால் மொழியையே கட்டமைப்பவை. மொழி என்பது கருவிதான். கவிதை, அனுபவம். மொழி மூலம் மட்டுமே ஒரு கவிதையை பகிர்ந்துகொள்ள முடியாது. அதற்கு மேலாக, அனுபவங்களின் உச்சியில் அவை அமைகின்றன. மிக நுட்பமான, மிக மிக அந்தரங்கமான, தனக்கேயான கவனிப்புகள் என்று நாம் நினைக்கக்கூடியவைதான் எப்படி மானுடத்தின் பொதுவான அனுபவங்களில் சென்று பதிகின்றன. கவிதைகள் அப்படி வாசகர்கள் மனதிலும் பதிந்து படர, மிக மிக நேர்மையாக இருக்க வேண்டும்.

எழுத்து என்பது தனி உலகம். இலக்கிய வாசகராகவும் படைப்பாளியாகவும் இருப்பதில் இருக்கும் உற்சாகமே , அப்படி ஒரு தனி உலகம் நமக்கு கிடைக்கும் என்பதுதான். அங்கு, தினம்தோறும் நாம் சந்திக்கும் மனிதர்கள், நம்மை பாதிக்கும் மனிதர்கள், நம் வாழ்வின் குறுகிய வட்டத்தைத் தாண்டி, மானுடத்தின் விரிந்த தூரிகையில் மீண்டும் மீண்டும் வரும் கதை பாத்திரங்களாக மாறக்கூடும். இப்படி நம் அனுபவங்களை, கதைகளாக சொல்லும்போது, அதை ஆராயந்து எதிர்கொள்வதற்கான தெளிவை எழுத்து நமக்கு அளிக்கிறது. புனைவுலகில் எல்லோரும் மன்னிக்கப்படக்கூடியவர்கள். ஒவ்வொருவரும் மானுடத்தின் ஒவ்வொரு குணம். அதில் நாம் யாராக வேண்டுமானாலும் இருக்கமுடியும். அது நம்மிடம் ஒரு காருண்யத்தை உண்டு பண்ணுகிறது. வாழ்க்கையை இன்னும் முதிர்ச்சியுடன் எதிர்கொள்வதற்கான நிதானத்தை அளிக்கிறது.

எனக்கு மிகப் பிரியமான எழுத்தாளர் அசோகமித்திரன். அவர் கதைகளைப் படித்து மூடும் ஒவ்வொரு முறையும், என்னைச் சுற்றிய உலகம் நூறு மடங்கு துல்லியத்துடன் தோன்றும். சாதாரணமாக நான் எடுத்து வைக்கக்கூடிய அடுத்த அடியில் ஒரு உற்சாகம் கூடும். அதுவரை சலிப்பளித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு விசேஷமும் மர்மமும் தெரியும். சாதாரண வாழ்க்கை என்பது சுவாரஸ்யமான சவால்களாலான கதாநாயக வாழ்க்கையாக மாறிவிடும். அதுபோல, என் அனுபவங்களில் ஒரு மாயாஜாலத்தையும் மர்மத்தையும் சேர்த்துப்பார்க்க நான் புனைவுகளை எழுதுகிறேன்.

என்னளவில் எழுத்து என்பது, எனக்கான ஒரு தனி உலகம். நிஜ உலகின் இலக்கணங்களும், நிர்பந்தங்களும் தாக்காத உலகம். சில சமயம் அவை அப்படியே தலைகீழாகும் உலகம். நான் கண்டறியும் உண்மைகளைக் கொண்டு சேர்த்துக்கொள்ளும் உலகம். அதுவே என்னை ஆசுவாசப்படுத்துகிறது. எங்கும் எப்போதும் அதற்குள் தஞ்சம் சேரலாம் என்ற உணர்வே சந்தோஷத்தை அளிக்கிறது. அந்த விரிந்த புன்னகையே படைப்பாளியை மற்றவரிடமிருந்து வேறுபடுத்துகிறது என்று நினைக்கிறேன். அந்த புன்னகையே என்னை எழுத வைக்கிறது.

(பொறியியல் படித்தபின் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றும் ச. அனுகிரஹா, கவிதைகள், ஒரு சில சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நூல் விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். பெரும்பாலான படைப்புகள் சொல்வனம் இணைய இதழிலும், பதாகையிலும், ஆம்னிபஸ் தளங்களில் வெளிவந்திருக்கின்றன.)

நான் ஏன் எழுத விரும்புகிறேன்? – நித்ய சைதன்யா

நித்ய சைதன்யா 

இரண்டு அடிப்படைக் காரணங்களை சொல்லத் துணிவேன். ஒன்று நன்றிக்கடன். என்னை திறம்பட வளர்த்தது பெற்றோரோ சொந்த பந்தங்களோ நண்பர்களோ இல்லை. தேடித்தேடி நான் வாசித்த புத்தகங்கள்தான். இன்றும் என் பலம் மற்றும் பலவீனமாக இருப்பது நான் வாசிப்பு மூலம் பெற்றுக்கொண்டவையே. பல மனத்திரிபுகளில் இருந்து பாதுகாத்த தாய்மை நான் விரும்பி வாசித்த படைப்பாளிகளுக்கு உண்டு. உடம்பின் தேவைகளை நிறைவு செய்யவே வக்கற்ற பிறப்பமைந்த எனக்கு இலக்கியம் என்பது உயர்குடிக்கானது என்ற எண்ணம் சிறுவயது முதல் இருந்தது. அதனால் உயர்குடிப்பண்புகளில் ஒன்றான இலக்கிய வாசிப்பு மீது பெரும் விருப்பம் இயல்பாகத் தோன்றியது. யாருடனும் ஒட்டுறவற்ற பால்யத்தின் ஒரே ஆறுதல் அன்று வாசிக்கக்கிடைத்த புத்தகங்கள்.

பத்து வயது முதல் தனிமை என்பதை விரும்பத் தொடங்கினேன். ஏன் என்று யோசிக்கும்போது உறுதியாய் சொல்ல முடியவில்லை. சிறுவயதில் தந்தையை இழந்தது அதன்பிறகான தொடர் வறுமை மற்றும் உறவினர்களின் புறக்கணிப்பு இப்படி எதாவது காரணமாக இருக்கலாம். எல்லாருக்குமான நதிதான் என்றாலும் என் நதி இதுவல்ல என்ற மனவிலக்கம் இயல்பான பால்யத்தை எனக்கு வழங்கவில்லை. விழாக்களும் விருந்தினர்களும் விரும்பத்தகுந்தவையாக இருக்கவில்லை. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்றான பின்பு எப்படி இவ்வுலகத்தோடு ஒட்ட முடியும்?

புத்தகங்கள் என் வறுமையை ஏளனம் செய்ததில்லை.. என் வருகையை அஞ்சி தின்று கொண்டிருந்த உணவை ஒளிக்க முயன்றதில்லை. காணும்தோறும் தந்தையற்ற கையறு நிலையில் என்னை நாணச் செய்ததில்லை. ஆனால் கரம் பிடித்து தோழமையோடு உலகின் பல வீதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளன. நான் அறிந்திருக்க வாய்ப்பற்ற பல வாழ்க்கைத் தருணங்களை எனக்கு புகட்டுகின்றன. விதவிதமான வாழ்க்கைச் சாத்தியங்களை என் அனுபவமாக்குகின்றன.. நான் தொடர்ந்து பெற்றுக்கொண்டு வருகிறேன். இருபதாண்டுகளாக என் போதிமரத்தின் கனிகள் தீர்ந்ததே இல்லை.  தினமும் புதிதுபுதிதாய் ருசிகள் கனிந்துக்கொண்டே இருக்கின்றன. ஒருநாளாவது ஒருகணமாவது இலக்கிய வாசிப்பு வீண் என்று எண்ணியதில்லை. ஆயுள் போதாதே என்ற வருத்தம்தான். அதனால் சிறுவயதிலிருந்து எழுதும் கரங்களை நோக்கி ஏங்கி வந்துள்ளேன். . அதில் ஒன்றாக என் கரமும் இருக்க வேண்டும் என்றாசை இயல்பாகத் தோன்றும்தானே..  வாழ்ந்த அறிந்த வாழ்க்கையை பதிவு செய்வது நான் இங்கிருந்தேன் என்பதன் அர்த்தம்  என்பதால் எழுத விரும்புகிறேன்.

இரண்டாவதாக காலத்தை வெற்றி கொள்ளும் பேராசை. அப்பனும் முப்பாட்டனும் என்னவாக வாழ்ந்தார்கள் என்பதற்கான எவ்வித சுவடுகளும் இம்மண்ணில் இல்லை. அவர்கள் என்ன நினைத்தார்கள் காலத்தோடு என்ன பேசினார்கள் எனபதை இன்று அறிந்துகொள்ள வழியில்லை. வாழ்ந்து பெற்ற திறப்புகளை மடிந்து உடன்கொண்டு சென்றுவிட்டனர்.

படைப்பாளிக்கு காலத்தை வெல்லும் வரத்தை இயற்கை அளித்துள்ளது. சராசரி மனிதனுக்கு எண்பதாண்டு அதிகபட்ச வாழ்க்கை என்றால் ஒரு படைப்பாளிக்கு அதை இருமடங்காக அவன் படைப்புகள் வழங்குகின்றன. ஒரு படைப்பாளி எழுதுவதன் மூலம்  ஒரு பண்பாட்டுவெளியை, மானுட சிந்தனையை, மண்ணின் வேர்களை நிலைப்படுத்திச் செல்கிறான். தொடர் கண்ணியாக இணைந்து மனிதகுலத்தை உந்தித் தள்ளுகிறான். இன்றும் நினைத்த நேரத்தில் கம்பனும் வள்ளுவனும் பாரதியும் என்னோடு உறவாடுகிறார்கள். நேற்றும் இன்றும் நாளையும் அவர்கள் அவர்களைத்தேடி செல்கிறவர்களோடு உறவாடும் நல்வாய்ப்பினை பெற்றுள்ளார்கள். அப்பேற்றினை நினைக்கும்போது நான் இங்கு இறப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை என்ற ஆணவத்தை அளிக்கிறது. என் மொழி உள்ள காலம்வரை நான் இருப்பேன். இதைவிட வேறென்ன வேண்டும்?

oOo

சுமார் இருபதாண்டுகளாக இலக்கியம் சார்ந்த எதாவதொரு நினைப்பு இல்லாமல் வாழ நேரிட்டதே இல்லை.சுபா மாதிரி  பாலகுமாரன் மாதிரி சுந்தர ராமசாமி மாதிரி ஜெயமோகன் மாதிரி என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆதர்ச எழுத்தாளர்களைப்போல எழுதி வாழவேண்டும் என்கிற ஆசைதான் வாழ ஊக்கப்படுத்துகிறது. இயற்பெயர் பா.சங்கர நாராயணன் , வயது 35, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் தற்போது வசித்து வருகிறேன். சொந்த மண் புளியங்குடி. பள்ளி மேல்படிப்பு. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு நாவல்களும் கவிதைகளும் எழுதிப்பார்த்தது உண்டு. நண்பர் ஒருவர் முதலில் தமிழில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் கற்றுக்கொள். அதன்பின் எழுத ஆரம்பி என்றார்.  முக்கியமான அனைத்து நவீன தமிழ் படைப்பாளிகளையும் தீிவிரமாக வாசித்தேன். சுந்தர ராமசாமி ஒரு கடிதத்தில் இலக்கியம் சோறுபோடாது  வேலை ஒன்றைத் தேடிக்கொள்ளுங்கள் அதுவும் அரசு வேலை என்றால் சிறப்பு என்கிற தொனியில் அறிவுறுத்தினார். அதுவரை ஜவுளிக்கடை வேலை போர்வை தயாரிப்பு நிறுவன வேலை என்று போனது. காதல் திருமணத்தை தொடர்ந்து அரசு வேலைக்கு முயன்றேன். முயன்று பெற்ற வேலை இன்று ஆளைக்கொல்லுகிறது. ஒரு வீம்பிற்காகத்தான் சட்டென்று எழுத வேண்டும் என்கிற ஆசை கொந்தளிப்பாக வெளிப்பட்டது. நேரமின்மையின் காரணமாகவும் சிறுகதைகள் குறித்த பெரிய மரியாதை காரணமாகவும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். என் முதல் கவிதையை பதாகையும் முதல் சிறுகதையை மலைகள்.காம்  வெளியிட்டு என்னை உற்சாகப்படுத்தின. கவிதைகளை விட மிகப்பொிய நாவல்கள் எனக்கு விருப்பமாக உள்ளன. வெற்றியோ தோல்வியோ அவற்றை எழுதியே தீருவேன். நித்ய சைதன்ய யதியின் மீதான பிரமிப்பால் அவர் பெயரைப் புனைப்பெயராக எடுத்துக்கொண்டேன். மீண்டும் கடந்த ஓராண்டாக எழுதி வருகிறேன்.

 

 

 

 ஏன் எழுதுகிறேன்? பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

எழுதுதல் எனும் மொழியின் துணையால் நிகழ்த்தப்படும் சாகசத்தின் மீது இன்னும் ஆர்வம் குறையாதிருப்பதால் ஒவ்வொரு சாகசக்காரனும் உச்சபட்ச சாகசத்திற்காக மேஜையின் எதிரேயிருந்து காகிதத்தின் அல்லது கணிணித் திரையில் தோன்றும் வெண்பரப்பில் (இதன் பிறகு வெண்பரப்பு என்றே சுட்டப்படும்) குதிக்கிறான்.  அதன் வசீகரமோ ஒரு துப்பாக்கியின் இருப்பை, ரேஸ்கோர்ஸ் லாயக் குதிரைகள் இடைவெளியில் தலைநீட்டிப் பார்க்கும் அழகை, ரோலர்கோஸ்டர் பயணத்தின் படபடப்பை, கட்டிட விளம்பிலிருந்து அதலபாதாளத்தைப் பார்க்கும் நிலையை ஒத்திருக்கிறது.

புனைவு எழுதுவதின் ஈர்ப்பே இறுதி வாக்கியமாக எதை எழுதப்போகிறோமென்று தெரியாமலே எழுதுவது.  அது ஒரு பயணம் அல்லது அதுவாகவே மொட்டவிழும் ஒரு ரகசியம்.  இவ்விதத்தில் அது வாழ்வைப் போலவே எதிர்பாராமையின் குதிரைகள் ஒவ்வொரு திசைக்கு ஓடும் நிகழ்வாக இருக்கிறது.  எழுதுதல் சிந்தனையையும், மொழியையும் இணைக்கிறது.  மொழியின் மலர் எழுதும் பொழுது எதிர்பாராமல் மலர்கிறது.  அதன் அழகும், சிந்தித்தல் எனும் எல்லையற்ற மகிழ்ச்சியும் எழுத்தில் இணைகிறது.  சிந்திப்பதை விடவும் மனிதர்களுக்கு விலையேயில்லாத மகிழ்ச்சி வேறு எதுவுமேயில்லை. ஒரு சிந்திக்கும் உயிரியாக, அதன் சுழலில் சிக்குண்டு சேர்ந்து சுழல்வதில் உண்டாகும் ஒரு மயக்கநிலை, தன்னுணர்வற்ற நிலையில் அல்லது உயர் விழிப்பில் பிரக்ஞையின் பேய் பீடித்த கைகளால் எழுதப்படும் எழுத்தில் வெளிப்படும் ஓர் உலகு அளவற்ற மகிழ்ச்சியை அல்லது வெறுப்பைத் தருகிறது.

ஹெராக்லிடஸின் நதி நில்லாமல் ஓடுகிறது. அதனைக் கரையிலிருந்து பார்த்து, நீர் மீது மிதந்த வண்ணங்களை, துள்ளிய மீன்களை, அடர்த்தியான அமைதியை வெண் பரப்பில் எழுத்தாக மாற்றும் உலகோடு ஒட்டா இயல்பு, தற்கொலைகளின் மீதான அல்லது கத்திகளின் கூர்மையின் மீது கொள்ளும் தற்காலிகப் பற்றிற்கு ஒப்பானது.  படைப்பொன்று அதன் குளிர் முகத்தில் ஒளிரும் கதிர்களோடு நம் மனம் விரும்பும் வண்ணத்தோடு மிளிர்ந்தால் அதை எழுதிய செயலுக்காக சொற்களின் மகுடம் நம் தலையில் அமர்கிறது.  எழுத்து வெறுப்பளிக்கும் சமயங்களில் உலகில் எழுதுவதைத் தவிர வேறெல்லா செயல்களும் உபயோகமானதாகத் தெரிகிறது.

எழுதுதல் அனைத்தினின்றும் விலகி, அனைத்தையும் பற்றி சிந்திக்கும் ஒரு செயல் என்ற முறையில் உலகைப் பிரதி செய்வதற்கும், அதனோடு வினையாற்றுவதற்கும், புதிய உயிரிகளைப் படைப்பதற்கும், நம்பிக்கை அளிப்பதற்கும் ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.  படைப்புகளின் வழியே ஓர் ஆளுமை உருவாக்கமும், ஆளுமை உருவாக்கத்தின் வழியே படைப்புச் செழுமையும் நிகழ்வதால் படைப்பு, சராசரி வாழ்க்கை வாழும் என்னைப் போன்றவர்களை வேற்று உலகத்தின் மின்னல் புரவிகளில் பயணிக்கும் வேலேந்திய வீரனாக கருதிக் கொள்ளச் செய்கிறது.  எழுதுவதால் உண்டாகும் மூளைக் காய்ச்சலின் பக்க விளைவு இது.

சமூக உற்பத்தியில் எழுத்தும் ஓர் அலகு என்றாலும், படைப்பு உற்பத்தியினின்று வெளியே நடக்கும் ஒரு செயலென்றாலும் எழுதுதல் முழுக்க தனிப்பட்ட செயலாக இருக்க முடியாது.  இந்த சமூகத்தோடு ஒரு தொடர்பை அது ஏற்படுத்திக் கொள்கிறது.  ஒவ்வொரு வாசகரும் சமூகத்தின் எண்ணற்ற கண்களில் ஒன்றாக இருக்கும் அதே வேளையில் தனிநபராகவும் இயங்குவதால் எழுதுதல் சமூகம், தனிநபருக்குமான பங்களிப்பும் கூட.

உலகு, புலன் அனுபவம், மனதிலுண்டாகும் சிந்தனை, செயல் – இந்த வரிசையை மொழியால் மீண்டும் நிகழ்த்திக் காட்டுவது அல்லது நிகழ்ந்தவற்றை அழித்து எழுதுவது, மாற்றி எழுதுவது, நகலெடுப்பது என எழுதும் முறைகள் எல்லாவற்றிலும் நிகழ்வது ஓர் இணை நடவடிக்கை.  வெண்பரப்பு உடலில் தொட்டுணர முடியாத உலகை தொட்டுணரக் கூடிய உலகிற்கு இணையான ஒன்றாக சுழல விடுவது.  இதுவரையிலும் கதை கேட்டவர்களும் சொல்லியவர்களும் அப்படி ஓர் உலகை வாழ அனுமதித்திருக்கிறார்கள்.  அந்த உலகின் வேர்களுக்கு நீர் பாய்ச்சுகிறார்கள்.  நானும் அந்த உலகிலோர் அங்கம்.

ஒரு நல்ல தையற்காரனுக்கு துணியை எங்கே வெட்டினால் கச்சிதமான ஆடையைத் தயாரிக்க முடியுமென்று தெரியும்.  எழுதுதல் உலகின் நீள் துணிகளை தேவைப்படும் இடங்களில் வெட்டி ஓர் ஆடையாகத் தயாரிப்பதே.

பொருளாதார விடுதலை, சமூக விடுதலை, ஆத்மீக விடுதலை ஆகிய மூன்று அடிப்படை விடுதலைகள் மனித சமூகத்தின் இயக்கத்திற்கு உந்துசக்தியாக இருக்கின்றன.  மனிதர்களற்ற ஏனைய உயிர்களோ உயிர்த்திருத்தலும், இனப்பெருக்கமுமே வாழ்க்கையாக, அவற்றையும் கடந்து பல்லுயிர் சூழலின் செழுமைக்கு பங்களிப்பவையாகவும் இருக்கின்றன.  வாழ்வதற்கும், உயிர்த்திருத்தலுக்குமான போராட்டமே வன்முறைக்கும், அரசியலுக்கும், தத்துவத்திற்கும் அடிப்படைகளை உருவாக்குகிறது.  அன்பென்றொரு நம்பிக்கையும் இணைகிறது.

எழுதுதல் ஆழ்ந்து சிந்திப்பதற்கான வழி” – டான் டெலிலோ.  எழுதுதல் குறித்து டெலிலோ சொன்னது அவருடைய பணிகளின் அளவிற்கு முக்கியமானதும் கூட.  ஒரு படைப்பை எழுதி முடித்து வாசிக்கையில், திருத்தி முடித்து மறுவாசிப்பதில் இதுவரையிலும் சிந்தனைப் புலன் நுழைந்திராத நுண் தூவரங்களில் முளைக்கத் தயாராகவிருக்கும் விதைகள் கண் திறக்கத் தயாராவதை கண்டு அவற்றை மகிழ்ச்சியோடு முளைப்பதற்கான சூழலை சொற்களால் உருவாக்கி விட்ட திளைப்பு, வாசிப்பவர்களால் நிராகரிக்கப்படுவதற்கோ, ஏற்கப்படுவதற்கோ முன்பெழும் அனுபவம்.  ஏற்றுக் கொள்ளப்பட்ட படைப்பு எழுதுபவரின் பயணத்திற்கான கடவுச்சீட்டாக இருக்கிறது.  நிராகரிக்கப்பட்டவையோ பழைய கத்தியாக கூரின்றி பெட்டியில் உறங்குகின்றன.  வாசகர்கள் நிகழ்த்தும் வினையோடு முற்றிலும் தொடர்பற்றதாக எழுதும் செயல் இருக்க, படைப்பின் ஆயுளோ வாசிப்பவர்களின் கண்களையும், மனதையும் சார்ந்திருக்கிறது.  வாசிப்பே புத்தகத்தை உருவாக்குகிறது என்று சொன்ன போர்ஹேசின் கருத்தை ஒத்திருக்கிறது.

வாழ்க்கையை, உயிர்ச்சூழலை, பிரபஞ்சத்தின் அர்த்தமில்லா விரிவை ஒரு மையத்தில் நின்று அவதானித்து படைப்பாக்க முயல்வது, இங்கே ஒரு வாழ்வை வாழ்வதற்கு தனக்குத் தானே அளித்துக் கொள்ளும் வெகுமதி.  அந்த வெகுமதி நம்மை பல கோடி உயிர்கள் மத்தியில் தனிச்சிறப்பு மிக்கவனாய் ஆக்குகிறது.  இங்கே சொல்லப்பட்ட தனிச்சிறப்பே ஒவ்வொரு மனித மனமும் எண்ணிலடங்காத முறை வேண்டி நிற்கிறது.  ஆயினும் அதற்கான வாழ்வை அமைத்துக் கொள்ள தயங்குகிறது.

எழுத்து முதலில் இந்த தயக்கத்தை உடைக்கும் செயல்.  பின்பு சொற்களின் மீது ஏற்படும் பிடிமானம். அதன் பிறகு இலாவகம்.  உழைப்பின்றி இவற்றில் எதையும் பெற முடியாது.  பொருள், கருத்து, கவனம், கேளிக்கை, உல்லாசம், இழிவரல், மகிழ்ச்சி, வரலாறு, திளைப்பு ஆகியவையும் இங்கே இச்சமயம் சொல்லாமல் விடப்படுபவையும் படைப்பு, சமூகத்திற்கும், தனி மனிதனின் வாழ்விற்கும் அளிக்கும் ஆபரணங்கள்.  எழுத்து, எழுதுபவருக்கு மட்டுமல்ல வாசிப்பவருக்கும் தங்கள் வாழ்வை அலங்கரித்துக் கொள்ளத் தேவையான ஆடம்பரம்.  அறிவின் முலாம் பூசப்பட்டதால் எழுத்து வெய்யிலாய் ஜொலிக்கிறது.

ஒவ்வொரு முறையும் எழுதுவதற்கான காரணங்களாக எனது தனிமையோ, தொடர்ந்து கொப்பளிக்கும் ஒரு சிந்தனையோ, கவனமோ, தோல்வியோ இருக்கின்றன.  ஆடைகளற்ற உண்மையை சொல்ல வேண்டுமானால் என்னுடைய எழுத்து aggressionஆல் உருவாகிறது எனலாம்.  ஒரு சாதாரண வாழ்வை, ஆங்கில வார்த்தைகளில் சொன்னால், mediocrity, status quo, சிந்திப்பதின் சராசரித்தனம் ஆகியவற்றிற்கு எதிரான aggression என்னுடைய எழுத்தாக இருக்கிறது (ஆரம்ப கட்டங்கள் வேறு).  இது என்னுடைய ஒரு நாளின் பெரும்பாலான மணிநேரங்கள் நான் வாழும் வாழ்க்கைக்கு எதிரான கிளர்ச்சியாக இருக்கிறது.  ஒரே சமயத்தில் 700 கோடி மனிதர்களில் ஒருவனாகவும், அப்படி இருப்பதற்கு எதிராக நானே எனக்கு எதிராக செய்து கொள்ளும் கலகமுமாக எழுத்து இருக்கிறது.  எழுத்தே எனது அடையாளங்களில் நானே உருவாக்கிக் கொண்டவற்றில் தலையாய ஒன்று.  என் முகம் போன்றது.

மண்ணைக் குடைந்தும், மண்ணிலிருந்து வெளியேறியும், ஆகாயத்தை துளைத்தும் உயிர்கள் வாழ்கின்றன.  பொருட்கள் மதிப்பை உருவாக்குகின்றன.  நாமோ இவை அனைத்தையும் மொழியின் வழியாக ஒரு படைப்பாக மாற்றும் வாய்ப்பை பெற்றவர்கள்.  நானோ அவற்றை படைப்பாக மாற்றும் உழைப்பைச் செலுத்துபவன்.

நுண்ணிய அறிவே மிகச் சிறந்தது.  எளிமையும் அதனோடு சேர்ந்தால் அதுவே ஞானமாகவும் இருக்கிறது.  அறிவும், ஞானமும் கூடவே விலகியிருத்தலும், அன்பும் வாழ்க்கையை பீடித்த அர்த்தமற்ற தனிமையை பேயோட்டுகின்றன.  எழுத்து எனது வாழ்வின் அர்த்தமின்மையை, தனிமைச் சுமையை, ஏற்றுக் கொண்ட வாழ்வின் சராசரித்தனத்தை உடைப்பதற்காக தேர்ந்தெடுத்த சாகசமிக்க ஒரு வழி.  அதுவே என்னை நானாக இருக்கவும் அனுமதிப்பதாக இப்போதெல்லாம் வேறெப்போதையும் விட அதிகமாக நம்புகிறேன்.  எழுத்தே எனது நம்பிக்கை.  ஆகவே எழுத்தே எனது தஞ்சமாகவும் இருக்கிறது.

(கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் கிராமத்தில் பிறந்து வளர்ந் பால பொன்ராஜ், நிதி மற்றும் வங்கித் துறைகளில் பணியாற்றுகிறார்.  “அடிக்கடி இடப்பெயர்வும், அதனால் உண்டாகும் அலைச்சலும் நிரம்பிய வாழ்க்கை” என்று கூறும் பால பொன்ராஜ்,   சிறுகதை, கவிதை, கட்டுரை, இலக்கிய விமர்சனங்கள் எழுதியுள்ளார். ‘புத்தகங்கள்   கனவும் மிருகம்‘  – சிறுகதைத் தொகுப்பு (2013), அச்சில் வந்துள்ளது. ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை‘ –  ஜூன் 2016ல் அச்சு வடிவம் பெறவிருக்கிறது)

 

எதற்காக எழுதுகிறேன் – டி. கே. அகிலன்

டி. கே. அகிலன்

எழுதத் தோன்றுகிறது, எழுதுகிறேன். பசிக்கும்போது உண்பது போல, உறக்கம் வரும்போது உறங்குவது போல. எதற்காக எழுதுகிறேனோ அதே காரணத்துக்காக, எதற்காக எழுதுகிறேன் என்பதையும் எழுதி விடுகிறேன்!

எதற்காக எழுதுகிறேன் என்பதைக் கூற, எவ்வாறு எழுதத் தொடங்கினேன் என்பதைக் கூறியாக வேண்டும். அதற்கும் முன் ஒன்று; நான் இதுவரை எழுதியது மிகவும் கொஞ்சம்தான். இதுவரை எழுதியவை இதை எழுதுவதற்கான தகுதியைக் கொடுக்கிறதா என்பதும் தெரியாது. இருந்தாலும் இதுவரை எழுதியவற்றைப் போலவே இதையும் எழுதிவிடுகிறேன்.

என்னுடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்களில் சிலர், தங்களுக்குள் தொடர்புகளை வைத்திருக்க, ஒருவருக்கொருவர் தொலைந்துப் போயிருந்த தங்களைக் கண்டுப்பிடித்து 2001-ம் வருடம் யாஹூ குழுமம் ஒன்றைத் தொடங்கினார்கள். என்னையும் கண்டுப்பிடித்து அதில் சேர்த்துக் கொண்டார்கள். குழுமம் தொடங்கிய புதிதில், புதிய அனைத்தையும் போலவே அதுவும் அனைவருக்கும் ஆர்வமூட்டுவதாக இருந்தது. எனவே சில காலம் தொடர்ந்து உயிர்ப்புடன் அது செயல்பட்டுக் கொண்டிருந்தது. பழையதானவுடன் நண்பர்களின் ஆர்வமும் குறையத் தொடங்கியது. ஒன்றிரண்டுபேர் அவ்வப்போது தங்களுக்கு வரும் சில தகவல்கள் இருக்கும் மின்னஞ்சல்களை குழுமத்திற்கு திருப்பி விடுவார்கள். அதுவும் இல்லாமல் போகும்போது நண்பர்களில் யாராவது மனக்கிலேசம் அடைந்தால், ”ஏன் நம் குழுமம் இவ்வாறு செயலற்று விட்டது? தற்போதைய நம் நிலையில் பழையவற்றை மறந்து விட்டோமா? நட்பை மறந்து விட்டோமா? அவ்வாறு ஆகிவிடக் கூடாது. மீண்டும் குழுமம் செயல்பட வேண்டும்” என்பது போன்ற கருத்துக்களை முன்வைப்பார்கள். சில நாட்கள் மீண்டும் சில மின்னஞ்சல்கள். அதன்பின் மீண்டும் உறைந்திருத்தல்.

இப்படி ஒரு உயிர்த்தெழுப்புவிக்கும் மின்னஞ்சல் 2008-ம் ஆண்டு தொடக்கத்தில் அந்தக் குழுமத்தில் வந்தது. அப்போது நானும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். எனவே ”குழுமத்தில் நாம் ஆன்மிகம் பற்றி விவாதிப்போம். தொடக்கமாக, என் எண்ணங்களை வாரம் ஒரு முறை குழுமத்திற்கு அனுப்புகிறேன். அதன் அடிப்படையில் விவாதிக்கலாம்” என்று வீராவேசமாக நானும் மின்னஞ்சலிட்டு, அதன் பின் தொடர்ந்து பதினைந்து வாரங்கள் குழுமத்திற்கு வாரம் ஒரு மின்னஞ்சல் அனுப்பி ஏற்றுக் கொண்ட பொறுப்பை முடித்து விட்டேன். முதல் சில மின்னஞ்சல்களுக்கு சிறிய விவாதங்கள் நடந்தது. அதன்பின் மீண்டும் குழுமம் அதன் இயல்புக்குச் சென்று விட்டது.

ஆனால் அந்தப் பதினைந்து வாரங்களின் இறுதியில், என்னளவில் முற்றிலும் புதியவனாக மாறியிருந்தேன். அதுவரை நான் எண்ணுபவற்றையே செய்கிறேன் என்னும் ஒரு மயக்கத்தில் இருந்து வந்தேன். பதினைந்து வார எண்ணங்களை எழுதும் பயிற்சி, அந்த மயக்கத்தை தகர்த்து விட்டது. எழுதுவதற்கு முன் அவை எண்ணங்களாக இருக்கும். எழுதிய பின் எண்ணங்கள் எழுத்து வடிவத்தை அடைந்திருக்கும். எண்ணங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளதால் எண்ணங்களுக்கும் செயல்களுக்குமான இடைவெளியும் இப்போது தெளிவாக தெரியத் தொடங்கும். அந்தப் பதினைந்து வாரங்களில் முதன்முறையாக எண்ணங்களுக்கும் செயல்களுக்குமான இடைவெளி அப்பட்டமாக எனக்கு தெரியத் தொடங்கியது. இந்த அறிதல் என் எண்ணங்களை ஒரு புறத்திலிருந்தும் செயல்படும் விதத்தை இன்னொரு புறத்திலிருந்தும் நுண்மையாக மாற்றத் தொடங்கியது.

இந்த அறிதல் அளித்த சுயமாற்றத்தை இழக்க நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் என் சுய லாபத்திற்காக நண்பர்கள் மேல் வன்முறையை கட்டவிழ்த்து விடவும் விரும்பவில்லை. எனவே தொடர்ந்து எழுதியவற்றை அந்த யாஹூ குழுமத்திற்கு அனுப்பவில்லை. அதே நேரத்தில் எழுதுவதற்கான பொறுப்புணர்வையும் ஆர்வத்தையும் தக்க வைத்துக் கொள்ள வலைப்பக்கம் (Blog) ஒன்றைத் தொடங்கி எழுதியவற்றை அவ்வப்போது அதில் பதித்து வந்தேன். எதற்காக எழுதுகிறேன் என்பதில் தெளிவாக இருந்ததால் நெடுங்காலம் நான் மட்டுமே பார்த்து வந்த ஒரு வலைப்பக்கத்தில் தொடர்ந்து எழுதுவதில் ஏமாற்றமும் தயக்கமும் அவ்வப்போது ஏற்பட்டாலும், அவற்றைக் கடந்து தொடர்ந்து எழுதவும் முடிந்தது.

ஒவ்வொரு கட்டுரையையும் எழுதி முடிக்கும்போது, ஏதோ ஒன்றை இன்னும் நெருக்கமாக அறிய முடிந்தது. அதே நேரத்தில் அறியாதவற்றின் எல்லை இன்னும் விரிவதையும் உணர முடிந்தது. அறிந்தது அளிக்கும் மன எழுச்சியும் அறியாதவை அளிக்கும் பணிவுணர்வும் சேர்ந்து நிகழ்ந்த ரசவாதம், எனக்குள் நான் மட்டுமே அறியும் ஒரு சமநிலையை உருவாக்கி அளித்தது. இதைத் தவிர நான் எழுத வேறு என்ன காரணம் வேண்டும்?

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் சில இணையப் பத்திரிகைகளுக்கு எழுதியவற்றை பரீட்சார்த்தமாக அனுப்பி வைத்தேன். ‘சிறகு‘ இல் நான் எழுதியனுப்பியது பதிப்பிக்கப்பட்டு, அது பிறர் வாசிக்கும் அளவுக்கு உள்ளது என்னும் நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் பின் ‘சொல்வனம்‘ சில கட்டுரைகளை பதிப்பித்தது. இந்தக் கட்டத்தில் நான் எழுதும் முறையை சற்றே மாற்றியமைக்க வேண்டியிருந்தது. அதுவரை மற்றவர்களும் படிக்க வேண்டும் என்னும் பிரக்ஞை இல்லாமல் எழுதி வந்த நான், எழுதுவது எனக்காக இருந்தாலும் பொதுவெளியில் வரும்போது படிப்பவர்களுக்கும் ஆர்வமூட்டுவதாக இருக்க வேண்டும் என உணர்த்தப்பட்டேன். அதன் பின் அந்த உணர்வுடன்தான் எழுதி வருகிறேன். ஆனாலும் எழுதுவதில் அவ்வுணர்வு பிரதிபலிக்கிறதா என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. அவ்வாறு இல்லையென்றாலும் அது என் நோக்கத்தை பாதிப்பதில்லை.

 

oOo

(டி. கே. அகிலன் எழுதத் தொடங்கியது 2008 இறுதியில். அவ்வப்போது எழுதியவற்றை, அது மிக அதிகம் இல்லையென்றாலும், wwww.change-within.blogspot.com என்னும் வலை முகவரியில், ”அகமாற்றம்” எனப் பெயரிடப்பட்ட பக்கத்தில் எழுதி வருகிறார். 2014-ம் வருடத்திலிருந்து ”சிறகு”, ‘சொல்வனம்” ஆகிய இணையப் பத்திரிகைகளில் சில கட்டுரைகள் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன)