எதற்காக எழுதுகிறேன்

எதற்காக எழுதுகிறேன்? – மோனிகா மாறன்

 

மோனிகா மாறன்

எதற்காக எழுதுகிறேன்? இதற்கு தனிப்பட்ட முறையில் என் பதில்- சிறந்த எழுத்து வாசிப்பவரைத் தொடர்ந்து சிந்திக்கவும் எழுதவும் வைக்கும் என்பதே. ஆக என் வாசிப்புகளின் தொடர்ச்சியே என் எழுத்து. எழுதி எழுதியே நம் தரவுகளை உருவாக்கிக் கொள்ள இயலும். அந்த வகையில் எழுத்து எனக்கு ஆக்கப்பூர்வமான தரவுகளையும் வாழ்வியல் வரைமுறைகளையும் உருவாக்குகிறது.

வேறுபட்ட சிந்தனைகள் கொண்டவர்களை இச்சமூகம் எளிதில் ஏற்பதில்லை. என்னைப் பொருத்தவரையில் மிகச் சிறிய வயதிலிருந்தே வாசிப்புலகிற்கு வந்துவிட்டேன். எனவே நான் வாசித்த மிகப்பெரும் எழுத்தாளுமைகளின் சிந்தனைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றியே என் செயல்கள், பேச்சுகள் இருக்கும். ஆனால் நம் சமூகத்தின் பொதுவெளியில் அப்படிப்பட்ட எதையும் வெளிப்படையாக அவர்களின் காலங்காலமான நம்பிக்கைகளுக்கு எதிராக பேசிவிட இயலாது. அது மதமோ சினிமாவோ இலக்கியமோ அரசியலோ எதுவாக இருந்தாலும் நம் எண்ணங்களை வெளிப்படையாக இயம்புதல் எளிதானதன்று. இவ்விடத்தில் ஒரு பெண்ணாக இதனை நான் தீவிரமாக கூற இயலும்.

பொதுவாக, இதைப் பற்றியெல்லாம் நீ ஏன் பேசுகிறாய் என்ற பாவனையே எனக்கான எதிர்வினையாக இருக்கும். இத்தகைய சூழலில் எழுத்துலகம் எனக்கு முழுமையான வெளியாகவே உள்ளது. என் நினைவுகளை, சிந்தனைகளை மிக உண்மையாய் கட்டுப்பாடுகளற்று வெளிப்படுத்தும் தளம் எழுத்துதான். அத்தகைய விடுதலையை வேண்டியே நான் எழுதுகிறேன்.

தீவிர வாசிப்பும் நுண்மையும் கொண்ட எனக்கு எழுத்து என்பது என் இருத்தலின் ஆகச்சிறந்த உளவியல்  வெளிப்பாடு. எழுதுவதால் என் கருத்துகள், கொள்கைகள் மேலும் மேலும் வலுப்பெற்று என்னை உருவாக்குகின்றன. சில வேளைகளில் நான் எழுதும் படைப்புகளை எந்த இதழுக்கும் அனுப்பாமல் அப்படியே விட்டுவிடுவதுண்டு. ஏனெனில் அவை எனக்காக எழுதப்பபட்டவை. உண்மையில் பிரசுரமானவற்றைவிட பிரசுரமாகாத படைப்புகள் என்னிடம் நிறைய உள்ளன.

எந்த இதழுக்கு அனுப்பினாலும் இல்லையென்றாலும் தினமும் எதையாவது எழுதுவது என் இயல்பு.. எப்படி வாசிப்பின்றி என் நாள் நிறைவுறாதோ அதே போன்று ஒரு பக்கமாவது எழுதாமல் முடிவுறுவதில்லை. எத்தனை பணிகள் இருப்பினும் எந்தச் சூழலிலும் என்னால் எழுத இயலும் என்பதை தன்னம்பிக்கையுடன் கூற இயலும்.ம ஏனெனில் இன்று அதிகம் பேர் நேரமில்லை, சூழல் சரியாக இல்லை என்றெல்லாம் காரணங்கள் கூறுகிறார்கள்.

எனில் எப்படி என்னால் எழுத இயலுகிறது? தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், இணையம்  என்று பொழுதுபோக்கு கொண்டாட்டங்கள் நிறைந்த இக்காலகட்டத்தில் இலக்கியம், தீவிர வாசிப்பு என்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. மேலோட்டமாக அதிகபட்ச கவன ஈர்ப்பாக பதினைந்து நிமிடங்களுக்கு மேல் எதையும் கூர்ந்து நோக்குவதற்கு நிறைய பேருக்கு விருப்பமில்லை. இவையெல்லாம் தெரிந்தும் எதற்காக எழுதுகிறேன்? எழுத்து என் சிந்தனைகளை வெளிப்படுத்தும் வழி மட்டுமன்று. அது என் வாழ்வின் அனைத்து செயல்களிலும் உள்ளது என்றே கூறுவேன். நான் எழுதுவதாலேயே பிறருடன் என் உறவுகள் மிகச்சீராக உள்ளன. அந்த புரிதலை உண்டாக்குவது என் எழுத்தே. நம்மைச் சுற்றி உள்ளவர்களின் உண்மையான இயல்பு பிறர் நடத்தும் பாவனைகள், மெலோடிராமாக்கள்   எல்லாவற்றையும் புரிந்து கொள்ள அடிப்படை நான் எழுதுவதே.

பொதுவாக நான் மிக இயல்பாக, எளிதாக அனைவரிடமும் பழகும் இயல்புடையவள். என் நட்பு வட்டம் மிகப்பெரியது. என் கருத்துகளுடன் முரண்பட்டாலும் என்னுடன் பழக மிக விருப்பத்துடன் உள்ள நண்பர்களே அதிகம். நிறைய பேர் இதைச் சொல்லியிருக்கிறார்கள். அனைவரும் விருப்பத்துடன் கேட்கும் வகையில் உண்மையுடன், கூரிய தரவுகளுடன், நண்பர்களிடமும் உறவுகளிடமும் சுவாரசியமாக பேசும் உற்சாக மனநிலை என் எழுத்தின் வாயிலாக நான் அடைந்ததே. எவரிடமும் பொய் முகம் காண்பிக்காமல் உண்மையாய் இருப்பது எத்தனை கடினமானது என்பது அனைவருக்கும் தெரியும்.

இத்தகைய சூழலில் பூச்சுகளற்று உண்மையுடன் வாழ எனக்கு அடிப்படையாக உள்ளது என் எழுத்தே. அந்த உண்மைத்தன்மையை, நட்புணர்வை, எவரையும் நேசிக்கும் பண்பட்ட மனதை எனக்களித்தது என் எழுத்தே என்று நான் உணர்ந்திருக்கிறேன். சமூகம், உறவுகள் சார்ந்த என்  உள எழுச்சிகளை, கோபங்களை நான் எவரிடமாவது நேரடியாகக் கூறியிருந்தால் இன்று நிச்சயம் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்தான் இருந்திருப்பேன். மனச்சீற்றங்களை என் எழுத்தில் கொட்டித் தீர்ப்பது என்னளவில் மிக இயல்பான மன நிறைவு என்பேன்.

எழுத்தின் வாயிலாக நான் உணரும் மனித மனங்களின் நுண்ணுணர்வுகள் வாழ்வில் அவர்களுடன் பழக எளிதாக உள்ளது. சோர்வுகளற்று, புலம்பல்களற்று, முணுமுணுப்புகளற்று, பேராசைகளின்றி வாழ்வின் எளிய மகிழ்வுகளையும் உன்னத அனுபவங்களையும் உற்சாகமாய் எதிர்கொண்டு பிறருக்கும் அந்த மனநிலையைக் கடத்தும் அளவிற்கு என்னை வைத்திருப்பது என் எழுத்தே. பிறரிடம் எனக்கான இடத்தை அளித்ததும் எழுத்துதான் என மகிழ்வுடன் பகிர்கிறேன்..

oOo

(மோனிகா மாறனின் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் இணைய இதழ்களிலும் அச்சிதழ்களிலும் வெளிவந்துள்ளன. கவிதைகள் மற்றும் சில கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. இவரது நாவல் ஒன்று எழுதி முடிக்கப்பட்டு வெளியாக உள்ளது. செவ்வியல் மற்றும் தீவிர இலக்கிய வாசிப்பில் அதிக நாட்டம் கொண்ட இவர் தமிழ் இலக்கியத்தின் பல முக்கிய புத்தகங்களுக்கு விமர்சனங்கள் எழுதியுள்ளார். வேலூரில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்).

 

 

 

 

 

ஏன் எழுதுகிறேன் – அருண் நரசிம்மன்

அருண் நரசிம்மன்

american desi

 

ஏன் எழுதுகிறேன்? வருகிறது, செய்கிறேன். சுவாசம் போல. மறக்கையில் நிற்கும். எழுத்தும்.

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்தே… எனத் தொடங்குகிறது ஆற்றல் பானத்திற்கான ஓர் விளம்பரப் பேச்சு. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்தே… நான் எழுதி வருகிறேன். வீட்டு முற்றத்தின் செம்மண் படிக்கோலத்தின் மீது நெல் கொட்டி, அதில் கிழக்கு பார்த்து தாத்தாவின் மடியில் இருந்தவாறு சூரியன் சாட்சியாக முதல் எழுத்தை ‘அ’ என விரலினால் எழுதினேன். அறியாது எழுத்தறிவிக்கப்பட்ட இதற்குப் பல வருடங்களுக்குப் பின்னரே எழுத்து ஆ என்றானது எனக்கு. இடையில் தலையெழுத்தில் கையெழுத்து மறைந்து மின் திரையெழுத்து மிளிர்ந்துவிட்டது, மலிந்து விட்டது.

பிடித்தவை இரண்டு வகை. நமக்குப் பிடித்தவை. நம்மைப் பிடித்தவை.

குஞ்சாலாடு, கோணேஸ்வரர் ஆலயம், குடமுருட்டி ஆறு, கோட்-சூட் பிழைப்பு இன்னபிற பழகப் பழக நமக்குப் பிடித்தவை என்றாகியிருப்பவை. முகநூல் மொக்கைகள் பலதும் இன்று லைக் பெற்று நமக்குப் பிடித்தவை என்றாகிறது.

வளர்கையில் பிறரது பாராட்டும் அங்கீகாரமும் அவற்றினால் கிடைக்கப்பெற்ற பிரபலத்துவமும் (எவ்வளவு சிறிய கால இட அளவுகளில் என்றாலும்) நமக்குப் பிடித்தவை என்பதில் சேர்ந்துகொள்ளும். பெற்றோர் பரிந்துரையில் அல்லது கெடுபிடியில் பரிச்சயமற்ற விருந்தாளிகள் முன்னிலையில் ட்விங்கிள் ட்விங்கிள் என்று அவ்வையை யார் என மழலையில் நாம் வண்டர் செய்வது, கிடைக்கும் பாராட்டை நமக்குப் பிடித்தவற்றினுள் வரிக்கத் தொடங்குவதால். பிறிதொரு நாள் மேலாளர் கட்டளைகளைக் கெடுவிற்குள் சிறப்பாய் முடித்துவிட்டதாய்க் காட்டிக்கொள்ளப் பழகுவது பிழைப்பிற்கு என்றாலும், மழலையில் மனத்துள் வரித்த பிறரிடமான அங்கீகாரப் பாராட்டு பெறுதல் இன்று நம்மை இறுகப் பிடித்துவிட்டது என்பதாலுமே. பிழைப்பதற்கும், சார்ந்த துறையில் வளர்வதற்கும் இவ்வகை அங்கீகாரப் பாராட்டுக்கள் மூலதனம்.

பாராட்டைப் பெறுவது பழக்கமாகிவிட, அதைத் தொடர்ந்து பெற்றிடும் வழிகளில் ஒன்றாய்ப் பிறருக்குப் பிடித்தமானதை எழுதவும் தொடங்குவோம். படித்துவிட்டுப் பாராட்டுவார்களே என்று. சில காலமாவது இச்செயல்பாட்டின் குடுக்கல் வாங்கல்கள் நம்மில் சிலருக்குத் திருப்திகரமாக அமைந்து விடலாம். ஆனால் இவ்வகை எழுத்தில் படிப்பவர்களுக்குப் பிடித்தமானது எதுவென்று எழுதும் நமக்குத் தெரியாது போனாலோ, படித்தவருக்குத் தான் படித்தது தனக்குப் பிடித்துள்ளதா என்பதே தெரியாதுபோனாலும், நாம் எதிர்பார்த்த பாராட்டு நமக்குக் கிடைக்காது. அல்லது கிடைக்கும் பாராட்டு நாம் எழுதியதற்கா என்பது புரியாது. இவ்வாறு ஆகுகையில்… எழுதுவதை நிறுத்திவிடுவோம். நமக்குப் பிடித்த பிறரது அங்கீகாரப் பாராட்டைப் பெறுவதற்காகவே நமக்குப் பிடித்துப்போனதாய் ஆக்கிக்கொண்ட எழுத்துதானே.

நமக்குப் பிடித்தவை பலதும் இவ்வகையே. சந்திக்கும் முதல் இடர், குழப்பம், நிர்பந்தம், நமக்குப் பிடித்தவற்றை விடச் செய்துவிடும். குஞ்சாலாடு, கோணேஸ்வரர் ஆலயம், குடமுருட்டி ஆறு… காலத்தில் விட்டுவிட முடிந்தவைதானே.

நம்மைப் பிடித்தவை வேறு வகை. பேய், பெருமாள், பெண்மை, பேதமை, போதாமை, பையித்தியம், பொருண்மை ஈர்ப்பு… சிறு வயது பழக்கங்கள் பல இவ்வகை. அவற்றுள் ஓரிரண்டு நல்லவை என்றாவதும் உண்டு. எழுத்து எனக்கு அதில் ஒன்று.

எப்படித் தெரியும் என்றால், அது எனக்கு நன்றாய் வருகிறது என்பதை மற்றவர் உணரும் முன்னரே அது எனக்கு இயல்பாய் வருகிறது என்பதை உணரமுடிந்ததால்.

பிடித்த வேலை இல்லை எழுத்து, பிடிக்கவில்லை என்றதும் விட்டு விட. பிழைப்பு இல்லை, இது அழைப்பு. அரிப்பு. நமைத்தல். அழைப்பின் தனித்தன்மை அதைச் செயலாக்குவதற்குப் பலனாய் பெரும்பாலும் எதையும் எதிர்பார்க்க மாட்டோம். வேலை என்பதற்கான வருமானம் போல. துறை என்பதற்கான வளர்ச்சிநிலைகள் சாதனைகள் போல. பிறரது அங்கீகாரப் பாராட்டு போல. நமக்கான அழைப்பிற்கு இணங்காமல் நம்மால் உயிர்வாழ முடியாது. அவ்வளவே. அழைத்தது எழுத்து. ஏற்றது மட்டுமே என் முடிவு. ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்கிற உணர்தலே ஏற்றது எனக்கான அழைப்பை என்பதையும் உணர்த்தியது.

நான் தனிமை விரும்பி. சிறுவயது முதல் எண்ணங்களை எழுத்திலேயே வெளிப்படுத்தினேன். வாசிக்கப்போகும், வாசித்து என்னை அப்படியே புரிந்துகொள்ளப்போகும், புரிந்துகொண்டு அப்படியே என்னை ஏற்றுக்கொள்ளப்போகும் அந்த என் முகமற்ற நண்பருக்கு, மனித உருவற்ற மனத்திற்கு. பள்ளிப் பருவத்தில் தொடங்கி அம்மனத்திற்குதான் எழுதுகிறேன். இம்மனத்தையும் அம்மணத்தையுமே எழுதிவைத்துள்ளேன். அன்றென்ன இன்றென்ன என்றுமே அப்படி ஒருவர்/ஒரு மனம் இருக்கப்போவதில்லை என்று தெரிந்துபோன பிறகும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் புரிந்ததது; எனக்குப் பிடித்தது இல்லை எழுத்து, என்னைப் பிடித்துக்கொண்டது அது என்று.

எனக்குப் பிடித்தவற்றை என்னால் விட முடியும். முகநூல் மொக்கைகளை அன்-லைக் செய்ய வழி உண்டு. முகநூலையே அப்பீட் ஆக்க வழி உண்டு (அட நிசமாலுமே உண்டுமா…). எழுத்தை விடுவதற்கு வழி என்னிடம் இல்லை. லைக்-கை அன்-லைக் செய்யலாம். (மனச்) சாய்வை நிமிர்த்த வழி இல்லை. எழுத்து இவன் பிறவிக் கூன். பணிந்தே ஏற்கிறேன். பயின்றே உயர்கிறேன்.

பிறர் வாசிக்க அளிப்பதற்கு என்று இல்லாத பலவற்றையும் எழுதுகிறேன். என் பல எண்ணங்கள் உருப்பெறுவதே அவற்றை எழுதப் போகையில் தான். உணர்வுகளின் வடிகால் என்பதால், எழுதுகையில்தான் அவற்றை அனுபவித்ததை உணர்ந்துள்ளேன். தெளிவடைய எழுதியுள்ளேன் என்பதையே எழுதித் தெளிவடைந்த மனமே உணர்த்துகிறது.

பிழைப்பு, சார்ந்த துறை இவற்றில் இன்று எழுதிக் குவிக்கிறேன். இதை உணர்ந்தே இப்பிழைப்பை தேர்வு செய்தேன். பிறர் வாசிக்க, ஏற்க, கருத, பரிசீலிக்க, புரிந்துகொள்ளவே இப்பணியில் அறிவியல், ஆய்வுகள், விளக்கங்கள் என்று எழுதுகிறேன். இங்கும் எழுதிய அனைத்தையும் வெளியிடுவதில்லை. படித்ததை புரிந்துகொள்ள, செய்த ஆய்வைப் புரிந்துகொள்ள, எடுக்க வேண்டிய வகுப்பிற்கான விளக்கங்களைத் தொகுத்துக்கொள்ள… பலவற்றையும் எழுதித்தான் தெளிந்துகொள்கிறேன். மற்றவருக்கான எழுத்தல்ல இவை. எனக்கானது. என் சிந்தனையை உருவாக்கித் தொகுப்பது எழுத்து. என்னைப் பிடித்த எழுத்து.

கோபம் வருகையில் எழுதுகிறேன். மகிழ்ச்சியில் வருத்தத்தில் ஆங்காரத்தில் அவலத்தில்… நாட்டின் பெருந்தலைவர் கொலையுண்ட போதும் எழுதியுள்ளேன்; என் தாத்தா இறந்த போதும் எழுதியுள்ளேன். மகன் என்று நினைத்த என் மகள் பிறந்தபோதும் எழுதியுள்ளேன். அம்மகளை ஈன்றவளை என் மனைவி என்று (அதற்கு ஒரு வருடம் முன்னால்) அறிந்துகொள்வதற்கும் எழுதினேன். மற்றவருக்கான எழுத்தல்ல இவை என்பேன். எனக்கானதும் இல்லை. என் ஆளுமையை உரித்துப் புதிதாய் உருவாக்கும் எழுத்து. என்னைப் பிடித்த எழுத்து.

பிறருக்கும் எழுதுகிறேன். அதாவது, மேலே கூறிய வகைகளில் எழுதியதில் சிலவற்றை மற்றவருக்கும் காட்டுகிறேன். வாசிக்க அனுமதிக்கிறேன். பொய்யை முடிந்தவரை உண்மை போலவே புனைவென்று அளிக்கிறேன். உண்மையா என்று பலவற்றைப் பரிசீலித்துப் புனைவற்றதாய் அளிக்கிறேன். சிலவற்றை புத்தக வடிவில். பலவற்றை — இன்று அவ்வாறு முடிவதால் — இணையத்தில். முடிந்தவரை விலையற்றதாய். ஏனெனில், நம்மைப் பிறரிடம் வெளிப்படுத்துவதற்கானதே கலை; இப்புரிதலின் தேய்நிலை, நாம் வெளிப்படுத்துவதெல்லாம் கலை எனும் புரிதல்.

பிறர் வாசிப்பதற்கு எழுதுவதால் அவர்களது அங்கீகாரம் கிடைக்கப் பெறலாம். இது பக்க விளைவு. எழுத்தே செயல். அதைச் செய்வதே அதற்கான விளைவும். அங்கீகாரத்திற்கு, பாராட்டிற்கு என்று எழுதுவது பிழை. நம்மைப் பிடித்ததை நமக்குப் பிடித்ததாய் மாற்றிவிடும் செயல். உலகில் எஞ்சும் ஒரே மனிதனுக்கு அவசியமற்றது எழுத்து, கலை எனலாமா?

உணர்வுகளை நம்மில் இருந்து, நம்மை விட்டுக் கடத்தும் கருவிகள் பல. எழுத்தைப் போல. எழுத்துக் கலை சார்ந்த பல்வகைக் கலைகள் உள்ளனவே. பொதுவாக்கினால், வெளிப்படுத்தல். சிந்தையை உணர்வை எழுத்து, ஓவியம், இசை, நாட்டியம் என்று ஏதோ கருவி வழியே மற்றவரிடம் வெளிப்படுத்தல். அக்கருவியே கலை என்பார் தொல்ஸ்தோய். வெளிப்படுத்தலே வாழ்வு என்று ஒரு கூற்று உண்டு. வெளிப்படுத்தல் ஒரு போர். மனப் போர். அதைச் செய்திருப்பதே வாழ்வு. போரும் வாழ்வும் கலையாவது மனத்தின் அழைப்பில்.

வருமானத்திற்கு எனச் செய்யப்படாமல் இருக்கையிலேயே கலை நேர்மையாய் வெளிப்படுகிறது என்பார் தொல்ஸ்தோய். அப்போதுதான் கலை பிரதிபலன் வேண்டா மனத்தின் அழைப்பாய் உயர்கின்றது எனலாம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது தாயுமானவரின் அழைப்பு. என் பணி கலை செய்து கிடப்பதே என்பது தொல்ஸ்தோய் போன்றோரின் அழைப்பு.

ஆனால் தொல்ஸ்தோய் கௌண்ட். பிரபு. வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இளமையில் (போரில் பங்குபெற்று) வருமான வேலை செய்தாலும் நாளடைவில் மாளிகையில் அமர்ந்து தனக்கான அழைப்பைச் செயல்படுத்தினார். அனைவருக்கும் அவ்வாறு அமையாது. அமைந்தாலும் அத்தனை அன்னா கரனீனாக்களை உலகம் தாங்குமோ தெரியாது.

நல்லவேளையாக எழுத்தையே பொருளீட்டும் தொழிலாகக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் வாழ்க்கை என்னை வைக்கவில்லை. எனக்குப் பிடித்த வேலை தரும் வருமானம், எனக்கான அழைப்பில் அதைத் தேட வைக்கவில்லை. நான் எழுதுவது அது என் அழைப்பு என்பதால். இதன் மறுபக்கம், அவ்வெழுத்திற்கு உகந்த வாசகனுக்கு மட்டுமே அதனை வாசிப்பது அழைப்பாகும். நான் வெளிப்படுத்தும் எழுத்து அனைவருக்கும் அன்று. உங்களின் அழைப்பிற்கு மட்டுமேயானது. உங்கள் அழைப்பை நீங்கள் ஏற்கையில் என் அழைப்பின் பலனைக் கண்டடைவீர்கள்…

…என்று என் அழைப்பைப் பற்றி எழுதிவைக்கும் இதுவும் உங்கள் வாசிப்பு அழைப்பிற்கே.

oOo

(அருண் நரசிம்மன் ஒரு பேராசிரியர். சென்னைவாசி. ஶ்ரீரங்க விசுவாசி. ஆங்கிலத்திலும் தமிழிலும் இசைக் கட்டுரைகளும், சில அறிவியல் புத்தகங்களும் எழுதியுள்ளார். ‘அமெரிக்க தேசி’ இவரது முதல் தமிழ் நாவல். இணைய தளம் http://arunn.me/)

எதற்காக எழுதுகிறேன் – வெ. கணேஷ்

 வெ. கணேஷ்

ganesh

“எதற்காக எழுதுகிறேன்?”

நாயகன் திரைப்படத்தில் வேலு நாயக்கரின் பேரன் அவரிடம் “நீங்க நல்லவரா கெட்டவரா” என்று கேட்பானல்லவா? அப்போது வேலு நாயக்கர் சொன்னது போல “தெரியலியேப்பா” என்றுதான் நான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இதற்கு முன்னரும் இந்த கேள்வி என்னுடைய சில நண்பர்களால் கேட்கப்பட்டது. ஒருவன் “என்ன அல்டெர்னெடிவ் கேரியரா?” என்று கேட்டான். “கேரியர்” என்றால் ஒற்றை ரூபாயாவது சம்பாதித்திருக்க வேண்டும். “எழுதறேன்னு சொல்லிட்டு ஒன்னோட வெட்டிச் செலவுதான் அதிகமாயிருக்கு!” என்று திருமதியார் புலம்புகிறார்.

“ஆத்ம திருப்தி” என்ற ஒன்றா ? என்னுடைய எழுத்தில் எனக்கு திருப்தி கிட்ட வேண்டுமென்றால் பல தசாப்தங்கள் பிடிக்கும். இல்லை, அவ்வளவு நிச்சயமாக சொல்லி விட முடியாது. “திருப்தி” என்பது நம் கையில் கிடைக்காமல், நழுவித் தப்பித்துப் போய்க் கொண்டிருக்கும் ஒன்று என்றுதான் நான் கருதுகிறேன்.

“புகழ் பெற வேண்டும்” என்ற ஆசையா? ஆரம்ப காலத்தில் அப்படி இருந்திருக்கலாம்! முப்பது வருடங்களாக கடும் உழைப்பைக் கொண்டு எழுத்துத்திறத்தின் உச்சியை என்றோ எட்டிவிட்ட சில எழுத்தாள நண்பர்கள் இன்னும் புகழடையாமல் இருப்பதைப் பார்க்கும்போது “புகழ்” என்ற ஒன்று கானல் நீர்த்தன்மையது என்பது விளங்குகிறது. ஒருவன் புகழை அடைவதற்கென சில ஆளுமை சார்ந்த குணங்கள் தேவைப்படுகின்றன என்று எனக்கு தோன்றுகிறது. இணைய காலத்தில், சரியான நபர்களின் கண்ணில் பட்டு, விருப்பக் குறிகளும் கமெண்டுகளும் பெற்று சில கணங்களுக்குள் தற்காலிக ‘புகழை’ யார் வேண்டுமானாலும் அடைந்து விடலாம். ஜனத் தொடர்பு மூலோபாயங்களால் (கூகுள் மொழிபெயர்ப்பு நிரலியில் இன்று என்கண்ணில் பட்ட சொல்!) சில வாரங்களுக்கு, சில மாதங்களுக்கு, அல்லது சில வருடங்களுக்கு என “புகழில்” நிலை நிறுத்த வைக்கும் ஜனத் தொடர்பு முகவர்கள் இருக்கிறார்கள். “புகழ்” என்பது வாங்கக் கூடிய பொருளாகிவிட்டது.

“நான் மக்களுக்கு சில கருத்துகளைச் சொல்ல வேண்டும்” என்ற இலட்சியம்? இந்த வாக்கியத்தைப் படிக்கும்போது சிரிப்பு வராவிடில் உங்களுக்கு விஷயம் தெரியாது என்று அர்த்தம்!

பணம், திருப்தி, புகழ், இலட்சியம் – இவைகளெல்லாம் ஒருவரை எழுதத் தூண்டுகின்றன என்று உறுதியாக சொல்ல முடியாது. இறையருள், வரப்பிரசாதம் – என்றெல்லாம் சொல்லப்படும் விஷயங்களும் நம்பிக்கைகள் மட்டுமே.

கவிதை எழுதுவதற்கும் ஒரு புது வாடிக்கையாளரைப் பிடிப்பதற்கும் அல்லது சிறுகதை எழுதுவதற்கும் மாதாந்திர விற்பனை இலக்குகளை அடைவதற்கும் அல்லது நாவல் எழுதுவதற்கும் இரண்டு வருடங்களில் விற்பனையை இரட்டிப்பாக்குவதற்கும் அடிப்படையில் அதிக வித்தியாசங்கள் இல்லை. திறன், ஆர்வம் – இவற்றைப் பொறுத்தே சாதனைகள் அமைகின்றன.

சலிப்பு அல்லது அலுப்பு? என்னைப் பொறுத்தவரை என்னை எழுத வைத்த காரணிகளில் (மற்ற காரணிகள் என்ன என்று கேட்டு விடாதீர்கள்) மிக முக்கியமானவை இவைதான். பல வருடங்களாக விற்பனைத் துறையில் ஈடுபட்டிருப்பதாலோ என்னவோ என்னை விட்டு நான் தூரமாகப் போகிறேன் என்ற எண்ணம் அடிக்கடி என்னை படுத்திக் கொண்டிருந்தது. அந்த எண்ணத்தை நான் சலிப்பு என்றுதான் பெயரிடுவேன். இயங்கி வரும் துறையில் நான் கண்ட அபத்தங்கள் மற்றும் பாசாங்குகள் – இவைகள் தாம் அந்த சலிப்பை எனக்கு தந்ததாய் புரிந்து கொண்டேன். அந்த அபத்தங்களையும் பாசாங்குகளையும் பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதல்தான் என்னை எழுத்தை நோக்கித் தள்ளியது என்று சொல்லலாம்.

மொழியை காதலிப்பவனுக்கு எழுத்தே “Orgasm” – என்று டிவிட்டரில் யாரோ எழுதியிருந்தார்கள்! உந்துதல், மொழி வாயிலாக எண்ணத்தை வெளிப்படுத்துவதில் கிட்டும் ஆனந்தம் – இவ்விரண்டுமே எழுத்தின் அடிப்படை கட்டுமானத் தொகுதிகள்.

அபத்தங்கள், பாசாங்குகள் – இவற்றை மட்டுமே எழுதுதல் எழுத்தை புலம்பல்களாக மாற்றிவிடுகின்றன என்பதை சீக்கிரமே புரிந்து கொண்டேன். புலம்பல் தன்மையை மீறிய ஒன்றை – ஒரு செய்தியை,  உணர்வை – பகிர்வதும் நல்ல எழுத்தின் இலக்கணம் எனப் புரிந்தது. அந்தப் பகிரல் நீதிக்கதையின் தொனியில் கூறப்படாமல் அழகியல் துணை கொண்டு நுட்பத்துடன் கூறப்படவேண்டும். பகிரப்படும் செய்தி அல்லது உணர்வு மனிதநேயத்தை வலுவூட்டுவதாக இருக்க வேண்டும் ; சார்பு மற்றும் பாரபட்சங்களை விலக்கியதாகவும் இருக்க வேண்டும். இவையெல்லாம் நான் எழுதத் தொடங்கிய பிறகு கற்றுக்கொண்டவை.

அடுத்தவரின் பார்வையில் ஒரு விஷயத்தைப் பார்ப்பது என்பது பயிற்சியின் பாற்பட்டது என்று எழுத ஆரம்பித்த பின் விளங்கியது. என்னுள்ளில் இருக்கும் வலுவான விருப்பு வெறுப்புகளைக் களைவதில் எழுதும் பழக்கம் எனக்கு உதவி செய்கிறது.

இதுவரை நான் எழுதியவற்றில் அதிகமும் பயணங்கள் பற்றிய கதைகள். பயணங்கள் தொடரும். பயணத்தின் முடிவில் இலக்கு என்று ஏதும் கிடையாது. பயணத்தின் சுவையை அனுபவித்தலே நாம் அறிய வேண்டியது.

oOo

 

(லால்குடியில் பிறந்த வெ கணேஷ் தற்போது புது தில்லியில் வசிக்கிறார். விற்பனைத் துறைக்கு மட்டுமே உரிய அழுத்தங்கள் மற்றும் தொழில் சார்ந்த பயண அனுபவங்கள் இவர் சிறுகதைகள் பலவற்றின் தனித்துவமாக இருக்கின்றன. நுகர்வுக் கலாசாரத்தின் பசும்பிரதேசத்துக்கு உரியவர்களாய் நாமறிந்த விற்பனைத்துறை நிர்வாகிகள், அதிலும் குறிப்பாக பெண்கள், அதன் இரக்கமற்ற வெட்டுக்கத்தியின் கூர்முனையில் நாளும் எதிர்கொள்ளும் அகநசிவை இயல்பாக, எந்தவித நாடகத் தருணமுமற்ற கதைகளில் சித்தரிப்பவர் வெ. கணேஷ். ஜப்பானிய செவ்வியல் திரைப்படங்கள் இவரது பொழுதுபோக்கு, பௌத்த தத்துவம் பயில்தல் இவரது பேரவா. வெ. கணேஷின் முதல் சிறுகதை தொகுப்பு இவ்வாண்டு காலச்சுவடு பதிப்பாக வெளிவந்துள்ளது.)

எதற்காக எழுதுகிறேன்? – எம்.ஜி.சுரேஷ்

 

எம். ஜி. சுரேஷ்

mgs-image

 

நீங்கள் என்னிடம் உங்கள் சுட்டு விரல் உயர்த்திக் கேட்கிறீர்கள்: ‘நீ எதற்காக எழுதுகிறாய்?’

இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?

‘நான் ஏன் எழுதுகிறேன் என்றால், அப்படிச் செய்யாமல் இருக்க என்னால் முடியவில்லை’ என்று சமத்காரமாகப் பேச நான் விரும்பவில்லை. அதே போல், ‘எனது வாழ்க்கை சொற்களால் ஆனது; ஒன்று நான் வாசித்த சொற்கள், இரண்டு நான் எழுதிய சொற்கள்’ என்று சார்த்தர் சொன்னது போல் கம்பீரமாகவும் என்னால் சொல்ல முடியாது. ஏனெனில், சார்த்தர் அளவுக்கு நான எழுதிக் குவிக்கவும் இல்ல, அவரைப்போல் படித்து முடிக்கவும் இல்லை. ‘வாழ்க்கையால் பாதிக்கப்பட்ட இளைஞன் பதிலுக்கு வாழ்க்கையை பாதிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சியே இலக்கியம். எனவே, என்னை பாதித்த வாழ்க்கையை, பதிலுக்குப் பாதிக்க நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியே எனது இலக்கியம்’ என்று நான் வசனம் பேசி வாதிட மாட்டேன். ஏனெனில், நான் எழுத்தாளன் மட்டுமே. புரட்சிக்காரன் அல்ல.

சரி, நான் என்னதான் சொல்லட்டும்.

எனக்கு இப்படிச் சொல்லத் தோன்றுகிறது. எதற்காக எழுதுகிறேன் என்பதற்கு முன்னதாக, நான் எப்படி எழுத வந்தேன் என்று என்னையே நான் கேட்டுக் கொள்வது சரியாக இருக்கும் என்று படுகிறது. ஆமாம். நான் எப்படி எழுத வந்தேன்?

அடிப்படையில் நான் ஒரு வாசகன். வாசிப்பது எனக்குப் பிடித்தமான காரியங்களில் ஒன்று. கறாராகச் சொல்லப் போனால் பிடித்தமான ஒரே காரியம் அதுவாகத்தான் இருந்தது. பள்ளிப்பருவத்தில் எனக்குப் படிக்கக்  கிடைத்தவை வார இதழ்கள் மட்டுமே. குமுதம், விகடன், கல்கி போன்ற பத்திரிகைகள் என்னுள் இருந்த வாசனை உயிர்ப்பித்தன. அவற்றில் வந்த சிறுகதைகள், தொடர்கதைகள் என்னை வசீகரித்தன. பின்னர், கசடதபற, கணையாழி போன்ற சிற்றிதழ்களின் பரிச்சயமும் கிடைத்தது. பலவிதமான எழுத்துகளை வாசிக்க வாசிக்க எனக்கு எழுத்தின் ருசி என்னவென்று தெரிந்தது. நிறையப் படித்தேன். நிறைய விவாதித்தேன். என்னுடைய அம்மா லக்‌ஷ்மியின் ரசிகை. நானும் லக்‌ஷ்மியின் வாசகன் ஆனேன். என் தாத்தா கல்கியின் ரசிகர். நானும் கல்கியின் வாசகன் ஆனேன். என் மாமா ஜெயகாந்தனின் ரசிகர். நானும் ஜெயகாந்தனின் ரசிகன் ஆனேன். பின்னர் நானே சுந்தரராமசாமி, கிருஷ்ணன் நம்பி, கி.ரா. என்று தேடிக் கண்டுபிடித்தேன். பல எழுத்தாளர்களை நேரில் பார்த்துப் பேசினேன். நா.பா., அகிலன், வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், ஞானக்கூத்தன், வண்ணநிலவன், இளவேனில் போன்ற பலர் என்னுடன் நேர்ப்பழக்கம் உள்ள இலக்கியவாதிகள். ஆனாலும், எனக்கு எழுதவேண்டும் என்று ஏனோ தோன்றியதே இல்லை. நான் அடிக்கடி சந்திக்கும் சில எழுத்தாளர்களில் இளவேனிலும் ஒருவர். அப்போது அவர் கார்க்கி என்ற மாத இதழை நடத்திக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் எழுத்தாளர் இளவேனில் தனது ‘கார்க்கி’ இதழுக்காக ஒரு சிறுகதை எழுதித் தருமாறு என்னைக் கேட்டார். என்னால் நம்ப முடியவில்லை. ‘நிஜமாகவா கேட்கிறீர்கள்?’ என்றேன். ‘ஆமாம், ஏன் கேட்கிறீர்கள்? என்றார் அவர். ‘என்னை நம்பியா’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, ‘ஒன்றும் இல்லை’ என்றேன். பின்பு எனது முதல் சிறுகதையான ‘இரண்டாவது உலகைத் தேடி’ யை எழுதினேன். சரியாக வந்த மாதிரிதான் தோன்றியது. எழுதியதை அவரிடம் கொடுத்தேன். படபடப்பாக உணர்ந்தேன். பின்னர் அதைப்பற்றி மறந்துவிட்டேன்.  அவரிடம் அது பற்றிய அபிப்பிராயம் எதையும் நான் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. ஒரு வேளை, கதை அவருக்குப் பிடிக்காமலிருந்து, முகதாட்சண்யத்துக்காக, ‘பிடித்திருக்கிறது’ என்று பொய் சொல்லும் தர்மசங்கடத்துக்கு அவரை ஆளாக்க வேண்டாம் என்று நினைத்தேன். அடுத்தவாரமே கார்க்கி இதழ் வந்தது. அதில் என் சிறுகதை முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. இப்படித்தான் நான் எழுத வந்தேன்.

‘கதை நன்றாக வந்திருக்கிறது. தொடர்ந்து எழுதலாமே’ என்றார் அவர். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. அதற்கு முன்னால் நா.பா கேட்டதற்கிணங்க தீபம் இதழில் புதுக்கவிதை ஒன்றைக் கொடுத்திருந்தேன். அது 1970 ஆண்டு தீபம் இதழில் பிரசுரமாகி இருந்தது. சிறுகதை என்று பார்த்தால் கார்க்கியில் எழுதியதுதான் முதல். அந்தக் கதையை வாசித்த நிறையப்பேர் பாராட்டினார்கள். எனக்கும் எழுத வருகிறது என்பது எனக்கே ஒரு புதிய செய்தியாக இருந்தது. அந்த நேரத்தில் நான் புதுக்கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். தீபம், கணையாழி, மற்றும் பல சிற்றிதழ்களில் அவை பிரசுரமாகிக் கொண்டிருந்தன. இப்போது ஒரு கதை பிரசுரமானதும் கவிதை எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். தொடர்ந்து சிறுகதைகள், குறுநாவல், நாவல் என்று கிளை பரப்பினேன். எனது ஆதர்ச எழுத்தாளர்களான க.நா.சு., ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்  ஆகியோருக்கு என் எழுத்து பிடித்திருந்தது என்பது ஒரு விசேஷம். அந்த அங்கீகரிப்பு என்னை மேலும் தொடர்ந்து எழுதுமாறு செய்தது. முதலில் கவிதை எழுதினேன். அதற்கு அங்கீகாரம் கிடைக்காததால் அதை விட்டுக் கதைகள் எழுதினேன்.

ஆக, அங்கீகாரத்துக்காகத்தான் நான் எழுதுகிறேனோ?

ஏன் கூடாது? அதற்காகவும்தான் எழுதுகிறேன்.

இந்தத் தருணத்தில், நானும் என்னையே கேட்டுக் கொள்கிறேன், ‘எதற்காக எழுதலானேன்? பிறர் எழுதச்சொல்லித் தூண்டியதால் மட்டுமா? ஒருவேளை பிறர் என்னை எழுதச்சொல்லிக் கேட்காமல் இருந்திருந்தாலும் நான் எழுத ஆரம்பித்திருப்பேனோ என்று கூட தோன்றுகிறது.

முதலில் ஒருவர் சொன்னதன் பேரில் எழுத ஆரம்பித்தாலும், அதன் பிறகு யாரும் சொல்லாமலே தொடர்ந்து எழுதவும் செய்கிறேனே, அது ஏன்?

ஆசை. எழுதும் ஆசை. மனசுக்குள் முட்டி மோதும் விஷயங்களை வெளியே கொட்டத்துடிக்கும் ஆசை. பின்பு, அதற்குச் சாதகமான எதிர்வினைக்கான தாகம் ஏற்படும் போது அந்தத் தாகம் தீரப் பாராட்டல்களைப் பருக ஆசை. பாராட்டுகள் வர வர தாகம் தீர்ந்து விடுவதில்லை என்பது ஒரு வினோதம். பாராட்டப் பாராட்ட தாகம் தீர்வதற்கு மாறாக வளர்கிறது. யாராவது என் எழுத்துகளைக் கவனிக்கிறார்களா என்று மனக்குறளி கூர்ந்து கவனிக்கிறது. யராவது கவனித்துவிட்டால் போதும், காய்ந்த மரத்தில் தீ பற்றிக் கொள்வதைப் போல், புறக்கணிக்கப்படும் தருணங்களில் எனக்குப் பிறரின் கவனத்தைக் கவரும் ஆசை பற்றிக் கொள்கிறது. தொடர்ந்து எழுதுகிறேன். பாராட்டுகள் தொடர்கின்றன. விருதுகள், பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுதல் போன்ற கௌரவங்கள் தொடர்கின்றன. என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றன. இதற்காகவும் எழுதுகிறேன்.

வாசிப்பு நமக்குப் புதுபுது இலக்குகளை நிர்ணயிக்கின்றன. ஜெயகாந்தனை வாசித்தபோது அவர் மாதிரி எழுத வேண்டும் என்பது இலக்காக இருந்தது. பின்பு, உலக இலக்கியங்கள் பரிச்சயமான போது, அவர்கள் ரோல் மாடல்களாக இருந்தார்கள். பின் நவீனத்துவம் அறிமுகமானபோது இதாலோ கால்வினோ, டொனால்ட் பார்தல்மே, உம்பர்த்தோ எக்கோ போல் எழுத ஆசை வந்தது. இலக்குகள் மாற, மாற வேறு வேறு மாதிரி எழுதிப்பார்ப்பதும் நேர்ந்து விடுகிறது. இதனால் புது மாதிரி எழுத வேண்டியதாகி விடுகிறது. . ஏற்கெனவே எழுதியதில் வரும் திருப்தியின்மை மேலும் மேலும் எழுத வைக்கிறது என்று நினைக்கிறேன். இதற்காகவும் எழுதுகிறேன்.

சரி,இதனால் எப்போதுமே எழுதிக்கொண்டே இருக்கவும் முடியுமா?

முடிவதில்லைதான். சில சமயங்களில் எழுதவும் செய்கிறேன் பல சமயங்களில் எழுதாமலும் இருக்கிறேன். அது எதனால்?

யோசித்துப் பார்க்கையில் ஒரு விஷயம் புலப்படுகிறது. எழுத்து என்பது சொற்களால் மட்டுமல்ல மௌனங்களாலும் ஆனது. சொற்களுக்கு இடையே நிலவும் மௌனங்கள். எழுதுவது சொற்களை உருவாக்குதல். எழுதாமல் இருப்பது மௌனங்களை உருவாக்குதல். இரண்டுமே எழுத்தின் பாற்பட்டவை.

ஏதோ ஒரு உந்துதலின் விளைவாக எழுத வருகிறார்கள். சிலர் தொடர்ந்து எழுதுகிறார்கள். சிலர் இடையிலேயே விட்டு விடுகிறார்கள். ஃபிரெஞ்சுக் கவி ரிம்பாட் தனது பத்தொன்பதாவது வயதிலேயே எழுதுவதை நிறுத்திக் கொண்டான். மௌனி இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேல் எழுதவில்லை. ஜெயகாந்தன் எழுபதுகளுக்குப் பிறகு சுமார் நாற்பதாண்டுக்காலமாக எழுதாமல் இருந்தார். ‘புயலில் ஒரு தோணி’ ப. சிங்காரம் தனது இரண்டு நாவல்களுக்குப் பிறகு எழுதுவதை விட்டுவிட்டார். இவர்களெல்லாம் பெரிய சாதனையாளர்களாகக் கருதப்படுபவர்கள். அப்படியும், இவர்களெல்லாம் ஏன் தங்கள் பிரதிகளை எழுத வந்தார்கள். அதே போல்  ஏன் பின்னர் எழுதாமல் நிறுத்திக் கொண்டார்கள்? எழுதியவரை போதும் என்று தோன்றியிருக்கலாம். அதில் தவறில்லை. அது ஒரு விதமான மௌன நிலை என்று படுகிறது.

மௌன நிலையில் இருப்பதனால் அவர்கள் எழுதவில்லை என்று சொல்ல முடியுமா என்ன?

இப்போதும் கூட நான் என் கதைகளை முதல் வரி முதல் கடைசிவரி வரை,- ஏன் கடைசிச் சொல் வரை – மனசாலேயே எழுதிப் பார்த்துவிடுகிறேன். அதன் பின்னரே காகிதத்துக்கு பெயரக்கிறேன். அனேகமாக என் மனதில் இருந்த எல்லாவற்றையும் பெயர்த்து விடுகிறேன். ஒரு சில விஷயங்கள் இந்தப் பெயர்த்தலின் போது கை நழுவிப் போய் விடுவதும் உண்டு. அவற்றை மீண்டும் மீட்டெடுத்துப் பிரதியில் சேர்ப்பது ஒரு மூச்சு முட்டும் அனுபவம்.

ஒரு விஷயம் புலப்படுகிறது. எழுத்தாளர்கள் எழுதும்போது செய்வதைப் போலவே, எழுதாதபோதும் ஒரு காரியத்தைச் செய்கிறார்கள். அது சிந்திப்பதும், சிந்தித்ததை அரூபமாக எழுதுவதும். அதாவது, ஸ்தூலமாகக் கைகளால் எழுதாத போது, அரூபமாக மனதால் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. நாம் எல்லோருமே இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பது நிதர்சனம். ஒரு எழுத்தாளனுக்கு மூளைச்சாவு வரும் வரை இந்த இயக்கம் இருந்துகொண்டே இருக்கும்.

ஆடிப்பழகிய கால்கள் ஆடாமல் இருக்க முடியாது. அது போல் எழுதப் பழகிய கைகளால் எழுதாமல் இருக்க முடியாது. ஒருவன் ஸ்தூலமாகக் கைகளால் எழுதினாலும், அல்லது அரூபமாக மனதுக்குள் எழுதினாலும் அவன் எழுதிக் கொண்டிருப்பவனே. எனவே, எழுதாமல் நிறுத்திக் கொண்டவர்களும் மனசுக்குள் எழுதிக் கொண்டிருப்பவர்களே. ஒருவேளை, எதிர்காலத்தில் நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டால், அப்போது ‘எதற்காக எழுதாமல் இருக்கிறேன்’ என்|று பதில் சொல்லுமாறு என்னிடம் கேள்வி கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

oOo

(எம்.ஜி. சுரேஷின் நாவல்கள், நூதனமான புனைவுகளின் வழியே மனித இருப்பு குறித்த ஆழமான விசாரணையைக் கோரி நிற்கின்றன. சோதனை முயற்சி நாவல்கள என்றாலே வாசிக்கச் சிக்கலானவை என்கிற பிம்பத்தை தன் இயல்பான கதைகூறு திறத்தால் சரித்தவர் எம்.ஜி. சுரேஷ். மூன்று சிறுகதைத் தொகுதிகள், மூன்று குறுநாவல்கள், ஆறு நாவல்கள், இரு திறனாய்வு நூல்கள், தவிர ஐந்து ‘பின் நவீன சிந்தனையாளர் அறிமுக‘ நூல்கள் என இவர் பங்களிப்பு ஒவ்வொன்றும் தமிழ்ச் சூழலில் முக்கிய வரவுகள் எனலாம். இவரது நாவல்கள் புனைவுக்குள் வரலாற்றையும், வரலாற்றுக்குள் புனைவையும், புதிய தொன்மங்களையும், தொன்மத்துக்குள் சமகால அரசியலையும், புனைந்து வண்ணப்பொலிவுடன் மிளிர்பவை. பின் நவீனம் என்கிற எதிர்கோட்பாடு பற்றிய புரிதல்களை தமிழில் நிகழ்த்தியவர்களில் முக்கியமானவர் எம்.ஜி. சுரேஷ்.)

 

எதற்காக எழுதுகிறேன் – அறிமுகம்

நரோபா

yetharkkaha-228x228

 

அண்மையில், சந்தியா வெளியீடாக வந்துள்ள “எதற்காக எழுதுகிறேன்” என்ற சிறு நூலை வாசிக்க நேர்ந்தது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சி,சு,செல்லப்பா, க,நா.சு, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, லாசரா, ஆர்.ஷண்முகசுந்தரம் உட்பட அக்காலகட்டத்து எழுத்தாளர்கள் பலரும் இந்த கேள்வியை எதிர்கொண்டு எழுதி (பேசி) இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்த தொடர்கதை எழுத்தாளர் ஆர்.வியின் கட்டுரை கூட இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு தொனி.

எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்ல முடியும்? விஸ்தாரமாக சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதிலிருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை- எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன.,“ என்று எழுத்து அளிக்கும் கிளர்ச்சியை, அதனால் தனக்கு கிடைக்கும் இன்பத்தை, அந்த நிலையை மீண்டும் மீண்டும் அடைந்து நிலைத்திருக்கும் வேட்கையை எழுதுகிறார் தி. ஜானகிராமன்..

ஜெயகாந்தன் அவருக்கே உரிய முறையில் தனது தரப்பை வலுவாக வைக்கிறார். எழுத்தாளன் தனக்குள் சுருண்டுகொள்ளும் குகைவாசி அல்ல என்று அவனை இழுத்து கொண்டுவந்து நிறுத்துகிறார்-

எழுத்தாளன் சோம்பேறியோ, பொறுப்புக்களற்றவனோ அல்ல. அவன் உலகத்து இன்பங்களை, அல்லது குறைந்தபட்ச வசதிகளை அனுபவித்துக்கொண்டு தனக்குதானே, தன் மன அரிப்புக்காக வாழும் மனமைதுனக்காரன் அல்ல.

அரசியல்வாதியும், விஞ்ஞானியும், கலைஞனும் இந்த உலகத்தை நிர்ணயிக்கிறார்கள். இதன் தன்மையை மாற்றியமைத்து வளர்க்கிறார்கள்.

அவர்களது இந்த போராட்டத்தில் நான் எனது கடமையைச் செய்கிறேன். இதை மறுத்தால் நான் வாழும் காலத்திற்கும், எனது உடன் பிறந்தோர்க்கும் நான் துரோகம் செய்தவனானேன்.

ஆர்விக்கு வேறு கவலைகள் இருக்கின்றன. “எழுத்தைக்கொண்டு என்னவும் செய்யலாம். “இன்னும் நேரில் திட்ட முடியாத ஆட்களை, எஜமானர்களை, எதிரிகளை பெயரை மாற்றிபோட்டு இஷ்டப்படி தீர்த்து கட்டுகிறபோது ஏற்படுகிற இன்பத்துக்குப் பெயர் எதாவது இருந்தாள் அது என்ன? அதிலும் ஆத்மதிருப்தி இருக்கிறது என்று சொல்ல முடியாதோ?

அழகிரிசாமி, க.நா.சு, பிச்சமூர்த்தி ஆகிய மூவரின் கருத்துக்களும் ஆன்மீக தளத்தில் விரிகின்றன.

ஆகவே, எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன் ..எழுத்துப் பணியின் உச்ச நிலையில், நான் மற்றச் சகல உயிர் வர்க்கங்களுனுடனும் ஒன்று கலந்து ஐக்கியமாகிவிடுவதால் நான் எனக்கு செய்யும் மனித சேவை, மண்ணுயிர் சேவையாகவும் இருக்கிறது. நான் உயர்ந்தால், உலகமும் உயர முடிகிறது. இப்படிப்பட்ட காரியத்தை கலைகளினாலேயே சாதிக்க முடியும். நான் பயின்ற கலை எழுத்து, அதனால் எழுதுகிறேன்,” அழகிரிசாமி எழுத்தின் வழியாக தான் அடையும் இரண்டற்ற நிலையை பேசுகிறார்

ஈடுபாடில்லாமல் கண்டு, கண்டதைத் திரும்பச் சொல்லி, பிறரையும் அதேபோல காண செய்வதுதான் கலையின் லட்சியம். காண்பதிலும், கண்டதை திரும்ப சொல்வதிலும் ஆனந்தம் காண்பதே இலக்கிய ஆசிரியர்களின் லட்சியம். இந்த ஆனந்தத்துக்காகத்தான் நான் எழுதுகிறேன்,” என்று க.நா.சுவும் ஏறத்தாழ இதே போன்ற ஆன்மீக தளத்தில் நின்று தான் தன் எழுத்தை பற்றி மதிப்பிடுகிறார்.

இப்போது எதற்காக எழுதுகிறேன்? சுத்தமாக பணத்திற்காக எழுதுகிறேன் என்று சொல்லிக்கொள்வதில் நான் வெட்கம் கொள்ளவில்லை!..ஆம் வீடுகட்டும் என்ஜினீயர் மாதிரி பணம் கொடுத்தால் – நாவலோ, சரித்திரமோ – தயார் செய்து கொடுக்க வேண்டியதுதானே? …வீட்டிலுள்ள உயிர்கள் – நம்மை நம்பி இருக்கின்ற ஜீவன்கள் சோர்ந்து கிடக்கையில், ‘என் கொள்கை, என் லட்சியம்’ என்று அலட்டிகொள்வதில் என்ன பிரயோஜனம்?” என்று ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதும் போது மனம் கனக்கிறது.

ஆனால் பிச்சமூர்த்தி அதை உறுதியாக மறுக்கிறார். “உண்மையில் கலைஞனும் விதையைபோல. பணமும் புகழும் பிரச்சாரமும் கலைக்கு நேரடியாக காரணங்கள் அல்ல. புஷ்பத்தை சந்தையில் விற்கலாம், ஆனால் வியாபாரம் நடத்துவதற்காக மல்லிகை மலர்வதாக நினைத்துவிட முடியாது… சிருஷ்டி இயற்கையின் லீலை. ஆன்மீக விளையாட்டு.

இதில் எது சரி? எது தவறு? எனக்கு எல்லாமே சரி என்று தான் தோன்றியது. .

அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் இசை ‘ஏன் எழுதுகிறேன்’ என்றொரு கட்டுரையை அந்திமழை இதழில் எழுதி இருக்கிறார். ஆர்வெல், ஹெமிங்க்வே, புக்கோவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்கள் எழுத்தை பற்றியும் ஏன் எழுதுகிறேன் என்பதை பற்றியும் விளம்பி இருக்கிறார்கள்.

இந்த கேள்வி எனக்கு முக்கியமானதாக பட்டது. காலந்தோறும் எழுப்பப்பட வேண்டிய கேள்வியாகவும் பட்டது. எழுதுபவரே வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பதில்களை கண்டடையும் சாத்தியம் கொண்டதாகவும் இருக்கிறது. இன்றைய இணைய யுகத்தில் கவனம் சிதையாமல் எழுதுவது ஒரு சவாலாக இருக்கிறது. அன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிடும் போது, பணம் இன்று எழுத அத்தனை முக்கிய காரணி இல்லை என்றே தோன்றுகிறது. இணையத்தின் எழுச்சி வேறுவகையில் அதிகம் எழுதி குவிக்கவும் சாத்தியம் உள்ள காலகட்டமும் இதுவே.

எழுதும் அந்த நேரத்தில் வேறு எதை எதையோ செய்திருக்கலாம்.  உண்மையில் ஒருவன் ஏன் எழுத வேண்டும்? நம்முள் எழுத்தாக வெளிப்படத் துடித்து நம்மை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் அது என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடை இருக்கலாம். எல்லா சமயங்களிலும், எல்லோருக்கும்  எழுத்து ஒரு கொண்டாட்டமாக இருப்பதில்லை. பெரும் எழுத்தாளர்கள், வளரும் எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், எழுத துவங்கியவர்கள் என எல்லோரையும் நோக்கி இக்கேள்வியை கேட்க வேண்டும் என தோன்றியது. அந்தரங்கமாக ஒரு சின்ன கடைதலை இக்கேள்வி நிகழ்த்தி தனக்கான விடையை அவர்கள் கண்டுகொண்டு நமக்களிக்கும்போது அது நமது விடையாகவும் இருக்க கூடும். திஜாவின், பிச்சமூர்த்தியின், அழகிரிசாமியின் விடை என்னுடையதும்தான். புனைவாளர்கள், கட்டுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என பல தரப்பட்டவர்களை நோக்கி இக்கேள்வியை கேட்க விரும்பினேன். தமிழில் வெகு அரிதாக வாசிக்கப்படும் அறிவியல் கட்டுரையை இத்தனை மெனக்கெட்டு ஏன் எழுத வேண்டும்?

பதாகை சார்பாக நாங்கள் அறிந்த பலரிடமும் இக்கேள்வியை வைத்தோம். பெரும்பாலும் எவரும் மறுக்கவில்லை. மேலும் பலரையும் கேட்பதாக இருக்கிறோம். இதை வாசிக்கும் வாசகர்கள் எழுத்தாளர்கள் அவசியம் எழுத வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம். இந்த இதழ் துவங்கி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து, எழுத்தாளரின் சிறிய அறிமுகத்துடன் இனைந்து,  பல்வேறு எழுத்தாளர்களின் பார்வை வெளிவரும் என நம்புகிறேன்.

Picture courtesy: சந்தியா பதிப்பகம்