அ முத்துலிங்கம்

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – நடைபயிலும் வேர்கள்

– ஸ்ரீதர் நாராயணன் –
statue_of_liberty

பத்தாண்டுகளுக்கு முன்னர் சில காலம் ஊர் சுற்றும் பிழைப்பில் இருந்தாக வேண்டிய கட்டாயம். அப்போது அமெரிக்காவின் தென்கிழக்கு முனையின் கடற்கரை நகரமான மயாமி பீச்சிற்கு (Miami beach) பணி நிமித்தமாக செல்ல வேண்டியிருந்தது. இரண்டு வாரப் பணி இழுபட்டு ஒன்றரை மாதங்களாக அங்கேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது. சுற்றுலா நகரத்திற்கான அத்தனை இயல்புகளையும் கொண்ட, பலதரப்பட்ட மக்கள் சங்கமிக்கும் ஊரில், எனக்கு ஏற்பட்ட முதல் உணர்வு நானொரு அந்நியன் என்பதுதான். அயலகத்தனான எனக்கிருந்த ஒரே அனுகூலம் ஆங்கில மொழி. ஆனால் அங்கே பெரும்பான்மையோரின் மொழி வழக்காக ஸ்பானிஷ்தான் இருந்தது. முகமன் உரைக்கும் முறையிலிருந்து, உணவுப் பழக்கங்கள், மொழிவழக்கு, கலாச்சார மாற்றங்கள் எனப் பலவகையான அலைக்கழிப்புகளைப் பற்றி அலுவலக சகா மெக்ஸிகர் ஒருவரிடம் புலம்பியபோது அவரும் அதைப் போன்ற உணர்வுகளையே வெளிப்படுத்தியது ஆச்சர்யமாக இருந்தது. மூன்றில் இரண்டு பங்கு இஸ்பானியர்களைக் கொண்ட நிலப்பகுதியில், மெக்ஸிகர்களின் கலாச்சார வேறுபாடுகள் பற்றி சிறிது புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு தூரதேசத்தைப் பற்றிய நமது கணிப்புகளும், புரிதல்களும் பெரும்பாலும் தகவல்கள் அடிப்படையில் நிகழ்கின்றன. அத்தூரத்தை நாம் கடந்து செல்லும்போது நமக்குக் கிடைக்கும் காட்சிப் புலன்களும், அனுபவங்களும் முற்றிலும் வேறாக அமைகின்றன. தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவரை, ஓர் அமெரிக்க நகரில் சந்திக்க நேர்ந்தது. தன்னுடைய சில நாட்கள் வாசம், தனக்கு அமெரிக்க நிலப்பரப்பையும் அரசியலையும் பற்றிய புதிய புரிதல்களை, தான் உருவகித்து வைத்திருந்த கருத்துகளுக்கு மாறானதொரு பிம்பத்தை காட்டுகிறது எனச் சொன்னார். புத்தகங்களும், ஊடகங்களும் வழியே நமக்கு வந்து சேரும் தகவல்களுக்கும், நாம் நேரிடையாக சென்றடையும் அனுபவங்களுக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. அ முத்துலிங்கம், தன்னுடைய வாழ்வில் பெரும்பாலான காலத்தை பயணங்களிலும், புதிய நிலங்களிலும் கழித்திருப்பதால் ஒரு நிலத்தின் வேர்கள் பிறிதொரு நிலத்திற்கு பழக்கப்படுவதன் நுட்பங்களைப் பற்றி தன்னுடைய படைப்புகளில் பதிவு செய்கிறார். க்றிஸ் ஆர்னேட் போன்றோர் தம்முடைய புகைப்பட பயணத்தினூடே காட்டும் நிலம் சார்ந்த கலாச்சார மானுடவியல் போன்றதொரு பார்வை அ. முத்துலிங்கத்தின் படைப்புகளில் நமக்கு கிடைக்கிறது.

முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி‘ சிறுகதை புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வியலை மூன்று காலக்கட்டங்களில் காட்டுகிறது. இலங்கையிலிருந்து அமெரிக்க பல்கலையில் கல்வி கற்க வரும் மதி, தன்னுடைய கல்லூரிப் பருவத்தின் முதல் மூன்றாண்டுகளை அலைமோதும் அனுபவங்களோடு கடந்து செல்கிறாள். நட்புகள் தேடி வருவதும், விட்டு விலகுவதுமாக இருக்கிறது. குறிப்பாக ஆண்கள். நட்புக்காக அவளுக்கு அதிக பரிச்சயமில்லாத கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்கிறாள். பென்சீன் அணு அமைப்பு பற்றி விளக்கிச் சொல்கிறாள். நன்றி நவில்தல் தினத்தன்று நண்பனின் வீட்டிற்கு விருந்துக்கு சென்று அவன் பெற்றோருடன் பழகுகிறாள். உண்மையில் இச்சம்பவங்கள், இத்தகைய கிரமப்படி நடந்து வந்தால், அவர்களிடையேயான உறவு இறுகி அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறது எனக் கொள்ளலாம். ஆனால் மதி விஷயத்தில் இச்சம்பவங்கள் எல்லாம் வெவ்வேறு ஆண்களுடன் நடக்கிறது

இலங்கையைப் போன்ற போர்ச்சூழலிலிருந்து மீண்ட வியட்நாமைச் சேர்ந்த லான்ஹங் நண்பனாக வாய்த்ததும், மதியின் புலம்பெயர்ந்த வாழ்க்கை இரண்டாம் கட்டத்திற்கு செல்கிறது. கூடு அமைத்து நிலை கொள்ளும் பருவம். வேர்கள் நிலைகொள்ளும் இளம் பருவ விருட்சம் போல், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை வடிவமைத்துக் கொள்கிறார்கள். முதல் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் எதிர்நோக்கும் பெரும் சிக்கல் அது. தங்களுடைய இளமையின் பெரும்பகுதியை, நேரத்தை, உழைப்பை செலுத்தி அவர்கள் புதிய இடங்களில் தங்களை நிலை நிறுத்துகிறார்கள்.

மூன்றாவது பருவமாக கிளை பரப்பி மேலெழுவதில்தான் லான்ஹங்கின் வீர்ய குறைபாடு தெரிய வருகிறது. கூடு என்பது வெறும் வீடு மட்டுமல்ல. குடும்ப அமைப்பாக விரிந்து பெருகுதலும் கூடு கட்டுவது போலத்தான். தங்கள் எதிர்காலத்திற்கான உத்திரவாதமாக வீடு வாங்குவதை விட, செயற்கை கருத்தரிப்பின் வழியே குழந்தை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கிறார்கள். செயற்கை முறையில் கருத்தரிப்பது முழுவதும் உத்திரவாதமான சிகிச்சை முறை இல்லை. ஆனால் மதியின் விஷயத்தில் அது அவளுக்கு சித்திக்கிறது. இலங்கைக்காரருக்கும், வியட்நாமியருக்கும் ஆப்பிரிக்கர் உதவியுடன் குழந்தை வரம் வாய்க்கிறது.

அமெரிக்கக்காரி சிறுகதையில், மதியின் பெண்ணையும் சேர்த்து மூன்று அமெரிக்கக்காரிகள் இருக்கிறார்கள். இலங்கையில் ஒரு கிராமப்பகுதியில் வடிவாக சேலையை வரிந்து உடுத்தி, கொண்டை போட்டு, அதற்குமேல் மயிர் வலை மாட்டி, குடையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு படிப்பிக்கச் செல்லும் மதியின் அம்மாவால்தான் மதியினுள் அமெரிக்கக்காரியாகும் கனவு விதைக்கப்படுகின்றது. தன்னுடைய குழந்தை பிறந்ததும் மதி தன் அம்மாவுக்கு கடிதம் எழுதும்போது ‘உன் வயிற்றில் நான் இருக்கும்போதே, என் வயிற்றில் கருமுட்டைகள் இருந்திருக்கின்றன. அப்படியானால் இவளும் உன் வயிற்றினிலிருந்து வந்தவள்தான்‘ என்கிறாள். அம்மாவிடமிருந்த அக்கனவு மதி வழியே அவள் பெண்ணாக பிறந்து வருகிறது.

இக்கதை நிலவும் காலத்தில் அமெரிக்க ஊடகங்களில் ஓரளவுக்கு இலங்கைப் போர் பற்றிய பிரக்ஞை இருந்தது. அப்போதைய சில அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களில், இலங்கைப் பின்னணி கொண்ட பாத்திரமாக யாரையாவது காட்டுவார்கள். பெயரளவுக்குத்தான் என்றாலும், அமெரிக்க ஊடகங்கள் அதை சிறிதளவேனும் செய்து வந்தன.

மதி தன்னுடைய தாயாருக்கு எழுதும் கடிதத்தில் தவறாமல், ‘செத்துப் போய்விடாதே’ என்று எழுதுவது, அம்மாவுடனான நெருக்கத்தைக் காட்டும் செய்தி என்பதை விட, இலங்கைப் போரில் அவள் இழந்த சகோதரர்களைப் பற்றிய வலி எனப் புரிகிறது.

மெக்சிகோக்காரியோ, கனேடியக்காரியோ இல்லாமல் அது ஏன் அமெரிக்கக்காரி? அமெரிக்க பெருநிலத்தில் அமெரிக்கர் எனும் இன அடையாளம் என்பது எப்போதும் கலவையானதாகவே இருந்து வருகிறது. பூர்வகுடிகள்கூட தங்களை அமெரிக்கர் எனும் நீரோட்டத்திலிருந்து தனித்துக் காட்டிக் கொள்வதில் முனைப்பாக இருக்கிறார்கள்.

இந்தக் கதையில் தமிழ்ப்பெண், வியட்நாமியன், ஆப்பிரிக்கன் என்ற கலவையில் பிறக்கும் பெண் – asian, african, mongoloid என்ற மூன்று ethnic groupகளுக்குப் பிறந்து, caucasians பெரும்பான்மை வாழும் மண்ணில் தானும் ஒருவராய் ஆகிறாள். இது இங்கிலாந்தில், இந்தியாவில், ஸ்வீடனில், எங்கும் சாத்தியம். ஆனால் அவள் அந்த மண்ணின் வரலாற்றுக்கு உரியவளாய் ஏற்றுக் கொள்ளப்படுவாளா? வேறெங்கும் இல்லாத அந்த வாய்ப்பு அமெரிக்காவில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சுயநலத்துக்காக, பணத்துக்காக, லாபத்துக்காக என்றே வைத்துக் கொள்ளலாம். ஒரு பெரும்பொய் என்றும், பிரச்சாரம் என்றும்கூட வைத்துக் கொள்ளலாம். உலக வரலாற்றில் எத்தனை தேசங்கள் இனம், மொழி, நிறம், பிறப்பு, சமயம் அடிப்படையில் இல்லாத குடியுரிமையை அளித்து பிறரை அழைத்தன? அந்த ஒரு அழைப்பு – சுதந்திர தேவி சிலைக்கு பணம் திரட்ட எம்மா லாசரஸ் எழுதிய கவிதை இது – இப்போது அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது

“வைத்துக் கொள்ளுங்கள், தொல்நிலங்களை, உங்கள் புரட்டுப் பெருமைகளை!” கூவுகிறாள் அவள்

மௌன இதழ்களில், “என்னிடம் கொடுங்கள், உங்கள் சோர்வுற்றவர்களை , உங்கள் ஏழைகளை,

சுதந்திர மூச்சு விடக்காத்திருக்கும் நெருக்கிய கூட்டத்தை,

உங்கள் நிரம்பிய நிலங்களில் கைவிடப்பட்ட அபலைகளை,

வீடில்லாதவர்களை, புயலால் சூறையாடப்பட்டவர்களை என்னிடம் அனுப்புங்கள்,

அப்பொற்கதவிற்கு அருகே என்னுடைய விளக்கை நான் உயர்த்துகிறேன்!”

சிரியா, ஈராக் போன்ற அரபு தேசங்களில் இருப்பவர்களுக்கு தம் நாட்டை அழித்தது அமெரிக்காதான் என்று தெரியாதா, தம்மை வெறுப்பவர்கள்தான் அமெரிக்காவை ஆள்கிறார்கள் என்று தெரியாதா? இருந்தாலும் அங்கே குடியேற நினைக்கிறார்கள்.  கனவின் வலிமை அது.

மதி தன்னுடைய அமெரிக்கக்காரியாகும் முறைமையில் கடைசியாக தன்னுடைய அம்மா, தான் மற்றும் தன்னுடைய மகளின் சரிவிகிதமான கலவையை கண்டறிகிறாள். ஒருவேளை அவளுடைய பெண் இலங்கைக்கு மீண்டும் சென்று தனது வேர்களை அங்கே நடைபயிலவும் செய்யலாம்.

oOo

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ – – ரா. கிரிதரன்

பூக்கள் பறப்பதில்லை – அ.முத்துலிங்கம்

அ முத்துலிங்கம்

அமெரிக்கப் பெண் ஒருவர் சிறுவயதில் இருந்தே நிறைய வாசிப்பார். எத்தனைப் பெரிய புத்தகமாயிருந்தாலும் ஒரே நாளில் வாசித்து முடித்துவிடுவார். இவர் மணமுடித்த பின்னர் கணவர் இவருக்குத் தினமும் நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பார். அவர் முடித்து விட்டு அடுத்த நாளே கணவரிடம் கொடுப்பார். கணவர் மாலை திரும்பும்போது புதுப் புத்தகங்கள் கொண்டுவரவேண்டும். மனைவிக்குப் புத்தகங்களில் திருப்தியே கிடையாது. கணவரிடம் தினமும் சொல்வார், ’இந்தப் புத்தகம் சரியில்லை. வேறு நல்ல புத்தகங்கள் கொண்டுவாருங்கள்.’ ஒருநாள் கணவர் வெறுத்துப்போய் சொன்னார், ‘உனக்குத்தான் நான் கொண்டு வரும் புத்தகங்கள் பிடிப்பதில்லையே. நீயே உனக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எழுதுவதுதானே.’ அப்படி எழுதியதுதான் Gone with the Wind புத்தகம். அதை எழுதியவரின் பெயர் மார்கிரட் மிச்செல். இந்தப் புத்தகத்துக்கு புலிட்சர் பரிசு கிடைத்தது. இதைப் படமாக்கியபோது பல ஒஸ்கார் விருதுகளையும் அள்ளியது. கேள்வி என்ன வென்றால் அவருடைய கணவர் அன்று வெறுத்துப்போய் சொல்லியிருக்காவிட்டால் இந்தப் புத்தகம் எங்களுக்கு படிக்கக் கிடைத்திருக்குமா? அது அதற்கு ஒரு நேரம் இருக்கிறது.

நான் பதின்ம வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன். ஏன் எழுதினேன் என்று இப்பொழுது நினைத்தால் தெளிவான பதில் கிடையாது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. இதற்கு முன்னர் அப்படி ஒருவரும் என்னிடம் கேட்டதில்லை. கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது. கேள்வி இதுதான். ‘உங்களுக்குச் சொந்தமான முதல் புத்தகம் என்ன?’ எங்கள் வீட்டில் இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதைத்தவிர பாடப் புத்தகங்கள். நான் எங்கள் வீட்டில் ஐந்தாவது பிள்ளை. நாலு பேர் படித்து முடித்த பின்னர் என் முறை வரும்போது பாடப்புத்தகம் எனக்கு வந்து சேரும். அநேகமாக முன் அட்டையோ கடைசி பக்கமோ இருக்காது. நான் படித்து முடிந்த பின்னர் அது என் தம்பியிடம் போகும். நான் படித்த பத்திரிகைகள், நாவல்கள் எல்லாமே இரவல் வாங்கியவைதான். 1964ம் ஆண்டு அருமை நண்பர் செ.கணேசலிங்கன் என் சிறுகதைகளை புத்தகமாகப் பதிப்பித்தார். அதன் தலைப்பு ’அக்கா’. அதுதான் நான் முதல் சொந்தம் கொண்டாடிய புத்தகம். மார்கிரெட் மிச்செல் போல நான் சொந்தமாக்குவதற்கு நானே ஒரு புத்தகம் எழுதவேண்டி நேர்ந்தது.

அந்தப் புத்தகத்துக்கு நான் வெளியீட்டு விழா வைக்கவில்லை. அதற்குப் பின்னர் எழுதிய 21 புத்தகங்களுக்கும் கூட ஒருவித விழாவும் நான் ஏற்பாடு செய்தது கிடையாது. சில நண்பர்கள் கேட்பார்கள் ’உன்னுடைய புத்தகம் ஒன்று வெளிவந்துவிட்டதாமே. எனக்கு ஒரு புத்தகமும் நீ தரவில்லையே’ என்று. அந்த நண்பர் நல்ல வசதியானவராகத்தான் இருப்பார். ஆனால் நான் இலவசமாக ஒரு புத்தகம் அவருக்குத் தரவேண்டும் என எதிர்பார்ப்பார்.

தமிழில் எழுதுபவர்களில் முழு நேர எழுத்தாளர்கள் வெகு குறைவு. அநேகமானோர் வசதி இல்லாதவர்கள். அப்படியிருந்தும் வருமானத்துக்காகத் தமிழில் எழுதுபவர்கள் கைவிரல் விட்டு எண்ணக்கூடியவர்களே. தமிழில் எழுதினால் காசு காணமுடியாது என்பது எல்லாப் பெற்றோர்களுக்கும் தெரியும். அதுதான் சிறுவயதில் இருந்தே நான் என்ன படிக்கிறேன் என்பதை என் பெற்றோர் கண்காணித்தார்கள். எதிர்காலத்தில் நான் எழுத்தாளனாக வந்து சிரமப்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இரவல் நாவல்களை ஒளித்து வைத்தார்கள். ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ரொறொன்ரோவில் ஆங்கிலத்தில் எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரை எனக்குத்தெரியும். பெற்றோரின் புத்திமதியை ஏற்காமல் எழுத்துத் துறைக்குள் நுழைந்தவர். அவர் சொல்லுவார் தன்னுடைய வருடாந்த வருமானம் 24,000 டொலர்கள் என்று. அதாவது கடைநிலையில் உள்ள தினக்கூலிக்கு கனடாவில் கிடைக்கும் வருமானத்திலும் பார்க்க இது குறைவுதான்.

எழுத்தாளரின் ஏழ்மை நிலையைச் சொல்ல ரொறொன்ரோவில் ஒரு கதை உண்டு. ஓர் எழுத்தாளரின் மகன் உதவாக்கரை. எழுத்தாளர் தன் வாழ்க்கையின் கடைசிப் படியில் நின்றார். ஒரு நாள் அவர் தன் மகனை அழைத்துச் சொன்னார். ’நீ இப்படியே இருந்தால் நான் உனக்கு ஒரு சதமும் விட்டுப் போகமாட்டேன்.’ அப்போது மகன் கேட்டான், ’அப்பா, அந்த ஒரு சதத்தை நீங்கள் யாரிடம் கடன் வாங்குவீர்கள்?’

எழுத்தாளர் எழுதுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. படைப்பின்பம். ஒரு படைப்பின் எல்லையை அடைந்து அது பூரணமாகும்போது கிடைக்கும் இன்பம் பற்றி படைப்பாளிகளுக்குத் தெரியும். அதற்கு ஈடு இணையில்லை. ஓர் ஓவியர் ஓவியம் வரைந்து முடிந்ததும் இந்த ஓவியம் எனக்குள் இருந்தா வெளியே வந்தது என்று வியப்படைகிறார். ஒரு சிற்பியின் மனநிலையும் அதுதான். சிற்பம் பூர்த்தியடையும்போது அவரடையும் பரவசம் சொல்லிமுடியாது. உலகத்தில் முன்பு இல்லாத ஒன்றை அவர் உருவாக்கியிருக்கிறார். அந்த மகிழ்ச்சி அதியுன்னதமான ஒரு நிலையில் பிறக்கிறது.

ஒன்பதாவது இசைக்கோவையை படைத்தபோது பீதோவனுக்கு செவிப்புலன் போய்விட்டது. அவர் இசைக் குறிப்புகளை எழுதியபோது இசை அவருக்குள் கற்பனையில் உருவானது. இறுதியில் இசைக் கோவையை எழுதி முடித்ததும் வியன்னா இசையரங்கத்தில் வாத்தியக் குழுவினால் இசைக்கப்பட்டது. இசை முடிந்ததும் சபையோர் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். பீதோவனால் தன்னுடைய இசைய மட்டுமல்ல அதை அனுபவித்த மக்களின் கரகோஷத்தையும் ஆரவாரத்தையும் கூடக் கேட்கமுடியவில்லை. பீதோவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் இவர் தோளைத் தொட்டு சபையோரை சுட்டிக்காண்பித்தார். அப்போதுதான் பீதோவனால் மக்களின் வரவேற்பை உணரமுடிந்தது. அந்தக் கணம் அந்த இசையைச் சிருட்டித்த பெருந்தகையின் மனம் எத்தனைக் குதூகலத்தை அனுபவித்திருக்கும்.

400 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலிய விஞ்ஞானி கலீலியோ தானாகவே இரவு பகலாக தேய்த்துத் தேய்த்து உண்டாக்கிய தூரக் கண்ணாடியை வானை நோக்கித் திருப்பினார். வியாழன் கிரகத்தை முதன்முதலாக தூரக் கண்ணாடியால் நோக்கியபோது ஓர் அதிசயத்தைக் கண்டார். வியாழன் கிரகத்தைச் சுற்றி நாலு சந்திரன்கள் சுழன்றன. அவருக்கு கைகள் நடுங்கின. கண்களில் நீர் கோர்த்தது. இந்தப் பூமியில் இதற்கு முன்னர் ஒருவருமே காணாத காட்சி அது. அவர் முதன்முதலாக அந்த அதிசயத்தைக் காண்கிறார். அவரால் அந்தப் பரவசத்தை தாங்க முடியவில்லை. ஓர் எழுத்தாளர் ஒன்றைப் புதிதாக படைப்பதும், ஒரு விஞ்ஞானி புதிதாக ஒன்றைக் கண்டு பிடிப்பதும் ஒன்றுதான். பரவசம் ஒன்றேதான்.

பாராட்டுகள் எழுத்தாளருக்கு உந்து சக்தி. சேக்ஸ்பியரை விமர்சித்தவர்கள் பலர் ஆனால் அவர் கவலைப்படவே இல்லை. பாராட்டுகள் அவரை முன்னே செலுத்தின. அழியாத கவிதைகளையும் நாடகங்களையும் உலகுக்குத் தந்தார். விமர்சகர்களின் தாக்குதல்களை தாங்க முடியாத எழுத்தாளர் ஒருவர் சொன்னார். ’எந்த ஊரிலாவது விமர்சகருக்குச் சிலை வைத்திருக்கிறார்களா?’ உலகம் கொண்டாடுவது எழுத்தாளரைத்தான். விமர்சகரை அல்ல.

சமீபத்தில் எனக்குக் கிடைத்த இரண்டு பாராட்டுகள் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாதவை. எழுதும்போது ஓர் எழுத்தாளர் சந்திக்கும் இடர்களும் முட்டுக்கட்டைகளும் பாராட்டுக் கிடைக்கும்போது மறைந்துபோய் அடுத்த எழுத்துக்கு உற்சாகம் கூட்டுகிறது.

84 வயதைத் தாண்டிவிட்ட ஒரு முதிய எழுத்தாளரைச் சமீபத்தில் தொலைப்பேசியில் அழைத்தேன். அவர் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்தார். அவருடன் எனக்கு முந்திபிந்தி எழுத்து தொடர்பு இருந்தது கிடையாது. நேரில் சந்தித்ததும் இல்லை. பேசியதும் இல்லை. கவிதைகள் எழுதியிருக்கிறார். பல ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். மதிப்புமிக்க விருதுகள் பல பெற்றவர். அவர் நான் என்ன விசயமாக அவரை அழைத்தேன் என்று கேட்கவே இல்லை. மூச்சு விடாமல் பேசினார். ’நீங்கள் எழுதி பத்திரிகைகளில் வெளிவந்த கதைகள் எல்லாவற்றையும் அவற்றின் படங்களுடன் சேர்த்துக் கத்தரித்து வைத்திருக்கிறேன். பைண்ட் பண்ணிப் பாதுகாக்க வேண்டும்’ என்றார். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். இப்படி ஒரு பாராட்டா? அது ஓர் எழுத்தாளருக்கு எத்தனை ஊக்கத்தைக் கொடுக்கும்.

அடுத்த சம்பவம் ஓர் அதிகாலையில் நடந்தது. அதுவும் சமீபத்தில்தான். யாழ்ப்பாணத்திலிருந்து முன்பின் தெரியாத ஒருவர் தொலைப்பேசியில் அழைத்திருந்தார். யார் என்று கேட்டேன். ஒரு பெயரைச் சொன்னார். எனக்கு அவரிடம் ஒரு வித பழக்கமும் இல்லை. என்ன வேண்டும் என்று கேட்டேன். ’ஐயா, நான் உங்கள் வாசகன். இப்பொழுதுதான் பூசா சிறையில் நாலு வருடம் இருந்துவிட்டு வெளியே வந்திருக்கிறேன். பூசா சிறையிலேதான் உங்கள் புத்தகத்தை முதலில் படித்தேன். படித்துவிட்டு என் நண்பனுடன் தினமும் கதைகளைப் பற்றி விவாதிப்பேன் என்றார். புத்தகத்தின் தலைப்பு தெரியுமா என்றபோது அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அதில் இருந்த அத்தனை சிறுகதைகளையும் வரிசையாகச் சொன்னார். சில வசனங்களை அப்படியே ஒப்பித்தார். ’சிறையிலே கிடைத்த இந்தப் புத்தகத்தை நான் திருடி வைத்திருந்தேன். ஆனால் அதை என்னிடமிருந்து யாரோ களவாடிவிட்டார்கள். சிறைக்குள்ளே இந்தப் புத்தகம் கிடைக்கிறது. ஆனால் வெளியே ஒரு புத்தகக் கடையிலும் இல்லை. எங்கே வாங்கலாம்?” இதுதான் கேள்வி. இவர் சொன்னதைக் கேட்டு நான் மகிழ்வதா அல்லது துக்கப்படுவதா? ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அவருடைய பாராட்டு என் மனதுக்குள் இன்றும் பொங்கியபடி இருக்கிறது.

பாராட்டுகள் முக்கியம்தான் ஆனால் அவை மட்டும் ஓர் எழுத்தாளரைத் தொடர்ந்து எழுத வைக்கிறதா? நீ இனி எழுதத் தேவை இல்லை என்று சொன்னால் எழுத்தாளர் எழுதுவதை நிறுத்திவிடுவாரா? அவர் எதற்காக முதலில் எழுதத் தொடங்கினாரோ அந்தக் காரணம் இறுதிவரை அவர் பின்னாலேயே இருக்கும். ஏதோ ஓர் உந்துதல் அவரை முதலில் எழுதத் தூண்டியது. அது இறுதிவரை மறைவதே இல்லை. அதுவே அவரை எழுதவைக்கிறது.

ஐஸாக் அசிமோவ் என்ற அறிவியல் எழுத்தாளர் 500 புத்தகங்களுக்கு மேல் எழுதி, உலகப் புகழ்பெற்றவர். தன்னுடைய கடைசி கதையைத் தட்டச்சு மெசினில் தட்டச்சு செய்துகொண்டிருந்த போதே அதன் மீது தலை கவிழ்ந்து இறந்து போனார். நோபல் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே, ’கிழவனும் கடலும்’ நாவலை எழுதியவர், ஒரு வசனத்துக்காகக் காத்திருந்தார். அது வரவே இல்லை. விரக்தியில் துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு இறந்துபோனார். எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸை யாரோ கேட்டார்கள் ’ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று. அவர் இடக்காகப் பதில் சொன்னார். ‘அடுத்த 300 வருடங்கள் விமர்சகர்களுக்கு வேலை கொடுக்கத்தான்.’

நோபல் பரிசு பெற்ற அலிஸ் மன்றோவின் கூட்டம் ஒன்றுக்குப் போயிருந்தேன். அவர் பிரதம பேச்சாளர். இது நடந்து 10 வருடங்கள் இருக்கும். அந்தக் கூட்டத்தில் அவர் திடீரென்று ‘நான் இனிமேல் எழுதப் போவதில்லை’ என்று அறிவித்தார். சபையோர் திகைத்துவிட்டனர். எதற்காக இந்த அறிவிப்பு. ஓர் எழுத்தாளரால் எழுதாமல் இருக்க முடியுமா? அதைச் சொல்லி ஒரு வருடத்திற்குள் அவருடைய புத்தகம் ஒன்று வெளிவந்தது. பின்னர் ஒருநாள் அவருடைய சிறுகதை நியூ யோர்க்கர் பத்திரிகையில் வந்து படித்தேன். இரண்டு வருடங்கள் கழிந்தன. அவருடைய இன்னொரு புத்தகம் வெளிவந்தது. அவரால் எழுதுவதை நிறுத்த முடியவில்லை. ஒரு நல்ல எழுத்தாளரால் எழுதுவதை நிறுத்தவே முடியாது. ஆகவே நான் ஏன் எழுதுகிறேன் என்று கேட்டால் , ‘எழுதுவதை நிறுத்த முடியாது, அதுதான் தொடர்ந்து எழுதுகிறேன்’ என்று பதில் சொல்லத் தோன்றுகிறது.

எழுத்தாளர் வேலை எழுதுவதுதான். தச்சு வேலைக்காரருக்குச் சம்பளம் கிடைக்கும். வர்ணம் பூசுகிறவருக்கு கூலி கிடைக்கும். ஆனால் எழுத்தாளர் எழுதுவார். சம்பளம் எதிர்பார்க்கமாட்டார். அவரால் எழுதுவதைச் செய்யாமல் இருக்கவும் முடியாது. எழுதும்பொழுதுதான் அவர் பிறந்ததன் அர்த்தம் அவருக்கு நிறைவேறுகிறது.

அவர் தன் புத்தகங்களை வெளியிடத் தேவையில்லை. வீடு வீடாகப் போய் விற்க வேண்டியதில்லை. நாடு நாடாகப் புத்தங்களை அனுப்பத் தேவையில்லை. வண்ணத்துப்பூச்சி தேடித்தேடி பூக்களைக் கண்டு பிடிப்பதுபோல வாசகர் தேடித்தேடி எழுத்தாளரை எப்படியோ அடையாளம் கண்டுவிடுவார். பூக்கள் பறப்பதில்லை.

oOo

(இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன்.  கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.  அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.)

ராஜவீதி

அ முத்துலிங்கம்

amuthulingam (2)
ரொறொன்ரோ விமானக்கூடத்தில் 2013ம் ஆண்டு, வெப்பமான கோடைகால மாலை ஒன்றில் நானும் சில நண்பர்களும் விமானத்துக்காக காத்திருந்தோம். ஏற்கனவே சாகித்திய அகதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதற்காக வந்துகொண்டிருந்தார். விமானக்கூடத்தில் அவரை வரவேற்க வந்தவர்களில் ஒருவர்கூட அவரை நேரில் கண்டவர்கள் இல்லை. பயணிகள் தள்ளுவண்டிகளை தள்ளிக்கொண்டு நிரையாக வெளியே வந்தனர். ’இவராயிருக்குமோ இவராயிருக்குமோ’ என்று எங்கள் கண்கள் பரபரத்தன. வெள்ளைக்கார முகங்களையும், கறுப்பு முகங்களையும் கழித்துவிட்டு இந்திய முகங்களில் கவனத்தை செலுத்தினோம். அவரை வரவேற்க வாங்கிய பூமாலை வேகமாக வாடிக்கொண்டு வந்தது. அவரைக் காணவில்லை.

nanjil_nadan_spl_issueநாஞ்சில் நாடனை நான் காலம் கழித்துத்தான் கண்டுகொண்டேன். 20 வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை அமெரிக்காவில் திரு சுந்தர ராமசாமியை கண்டு பேசியபோது அவர் நாஞ்சில் நாடன் முக்கியமாக படிக்கவேண்டிய ஏழுத்தாளர் என்று சொல்லியிருந்தார். அதன் பின்னர் கையில் கிடைத்த நாஞ்சில் நாடனின் புத்தகங்களை எல்லாம் படித்தேன். சிறுகதைகள் நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் என்று நிறையவே எழுதிக்கொண்டிருந்தார். வாசிக்க ஆரம்பித்த காலத்திலேயே இத்தனை பெரிய ஆளுமை தமிழ் இலக்கியத்தில் இருக்கிறாரா என்ற வியப்பு ஏற்பட்டது.  நான் அத்தனை காலமும் படித்தது எல்லாமே வேறு வகையான எழுத்துக்கள். அவரோ நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில் எழுதினார். அது புதுமையாக இருந்தது. நகைச்சுவையும் சமூக அக்கறையும் கொண்ட படைப்புகள். முக்கியமாக என்னைக் கவர்ந்தது மரபிலக்கியத்தில் அவருக்கு இருந்த தேர்ச்சி.

எப்படியோ தொலைபேசி எண் பெற்று அவருடன் ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறேன். கடிதம் எழுதியதும் உண்டு. எட்டு வருடங்களுக்கு முன்னர் அவர் எழுதிய சிறுகதை ஒன்றைப் படித்துவிட்டு பித்துப் பிடித்ததுபோல அலைந்தது நினைவுக்கு வந்தது. இப்படியும் தமிழில் எழுதமுடியுமா என்ற வியப்பு. இரண்டு நாட்களாக மனம் அமைதி இழந்து தவித்தது. முழு மனித வாழ்க்கையும் ஒரு சிறுகதையில் அடங்கிவிட்டது. சாதாரண கதை போலத்தான் அது ஆரம்பித்தது ஆனால் முடிவுக்கு வந்தபோது மனதின் தவிப்பு அடங்கவில்லை.

’கொங்குதேர் வாழ்க்கை’ என்பது கதையின் தலைப்பு. 2000 வருடங்கள் பழமையான சங்கப் பாடல்களில் இருந்து ஒரு வரி. 473 புலவர்கள் பாடிய 2381 சங்கப்பாடல்கள் உள்ளன. அதிக பாடல்கள் பாடியவர் கபிலர். ஒரேயொரு பாடல் பாடியவர் இறையனார். அதுதான் ’கொங்குதேர் வாழ்க்கை’ என்று தொடங்கும் பாடல். தமிழ் இலக்கியத்தில் அதிக மேற்கோள்கள் காட்டப்பட்ட பாடல் இது ஒன்றுதான். தும்பி மலர் மலராகச் சென்று தேனைத் தேர்ந்து சேகரிப்பது போலத்தான் மனிதன் தன் வாழ்க்கையை தேர்ந்து தேர்ந்து அமைக்கிறான். அவன் சேர்த்த மூட்டையையே அவன் இறுதிவரை சுமக்கிறான்..

சிறுகதை நாலு வரிகளில் சொல்லக்கூடியதுதான். லைன் வீடுகள் நெருக்கியடித்துக்கொண்டு வரிசையாக நிற்கின்றன. கதைசொல்லி ஒரு வீட்டில் வாழ்கிறார். சண்டைகள் சச்சரவுகள் என்று குடித்தனக்கார்கள் தினமும் சந்திக்கும் வாழ்க்கை. அதே சமயம் அங்கே கொண்டாட்டங்களும் இல்லாமல் இல்லை. ஒருநாள் முன்னிரவு ஒவ்வொரு வீட்டிலும் தூங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்தபோது திடீரென்று நாதஸ்வரத்தில் சங்கதி சுத்தமான தெய்வீக இசை எழுகிறது. தியாகய்யரின் ’சக்கனி ராஜா’ கீர்த்தனையின் இரண்டு வரிகள். ஏதோ பெரும் இழப்பை சொல்ல வந்ததுபோல அத்தனை சோகமாக அந்த இசை கிளம்புகிறது. ‘ஓ, மனமே! ராமனின் பக்தி எனும் ராஜவீதியை விட்டு வேறு சந்துகளில் ஏன் நுழைகிறாய்.’

நாதஸ்வரத்தை வாசித்த கிழவர் சமீபத்தில் மனைவியை இழந்தவர். பிரிவு என்ற கொடிய காற்று அவரை அலைக் கழித்திருக்கலாம். முறையிடுவது போல நாதஸ்வரத்தை மேலே உயர்த்திப்பிடித்து மனதை வருடும் இசையை பொழிகிறார். அவருடைய மகள் எங்கிருந்தோ ஓடிவந்து நாதஸ்வரத்தை பிடுங்கிவிடுகிறாள். கிழவர் மன்றாடுகிறார். அவருடைய ஆற்றாமையை வெளிப்படுத்த அவருக்குள் இருந்த ஒரே கலை அதுதான். மகள் அவரை வீட்டினுள்ளே கூட்டிப்போகிறாள். அந்த வாத்தியத்தில் இருந்து புறப்பட்ட கடைசி இசை அதுதான். நாதஸ்வரம் தொலைந்ததோ, கடைக்கு வைத்துவிட்டார்களோ அல்லது விறகானதோ என்ற கேள்வியுடன் கதை முடிகிறது.

அமெரிக்காவின் ஹார்ப்பர் லீ, மார்கிரெட் மிச்செல் போன்றவர்கள் ஒரே ஒரு நாவல் எழுதி புகழ் பெற்றவர்கள். இந்தியாவின் அருந்ததி ராயும் அப்படித்தான். நாஞ்சில் நாடன் 25 க்கு மேற்பட்ட கட்டுரை, சிறுகதை தொகுப்புகள், நாவல்கள் என்று எழுதியிருந்தாலும் அவருடைய ’கொங்குதேர் வாழ்க்கை’ சிறுகதை ஒன்றே அவருக்கு தமிழ் இலக்கியத்தில் நிரந்திரமான ஓர் இடத்தை தருவதற்கு போதுமானது. பல மொழிகளில் எழுதிய பல சிறுகதைகளைப் படித்து ஒப்புநோக்கியபோது ’கொங்குதேர் வாழ்க்கை’ உலக இலக்கியத்தில்  தனி இடம் பெறக்கூடிய கதையாகவே எனக்கு தோன்றியது. கொங்குதேர் வாழ்க்கை என்ற சொற்றொடர் எங்கே, எப்போது  பிரயோகிக்கப்பட்டாலும் அது உடனே நாஞ்சில் நாடனை என் நினைவுக்கு கொண்டுவரும்.

நண்பர் முழங்கையால் இடித்தார். நாஞ்சில் நாடன் இரண்டு பயணப் பெட்டிகள் நிறைந்த தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வெளியே வந்தார். பள்ளிக்கூடம் விட்டு வெளியே ஓடிவரும் சிறுவனின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி. 20 மணி நேர பயணக் களைப்பு அவர் முகத்தில் தெரியவே இல்லை. அவர் வெளியே வந்த பின்னர் அவர் செய்த காரியம்தான் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  அப்படியே என்னை ஆலிங்கனம் செய்தார். கண்கள் கலங்கியிருந்தன. இவருக்கு நான் என்ன செய்தேன்? இத்தனை அன்புக்கு நான் அருகதையானவன்தானா? இருபது வருடங்கள் பிரிந்திருந்த அண்ணரைச் சந்திப்பதுபோல உணர்ச்சிகளால் நிறைந்து அவர் முகம் இருந்தது. அத்தனை நாட்களும் பேச்சிலும் எழுத்திலும் நடந்த சந்திப்பு அன்று நேரிலே நிகழ்ந்தது.

அவருடைய நூல்களைப் படிக்கும்போது அவர் பற்றிய ஒரு கற்பனை உருவாகி மனதிலே படிந்திருக்கும். அப்படி ஒன்று என்னிடம் இருந்தது. ஆனால் நேரிலே பார்த்த ஆளுமை மிகப் பிரம்மாண்டமானதாக இருந்தது. என் கற்பனை உருவத்தை பலமடங்கு வியாபிக்க வேண்டியிருந்தது. காலம் கழித்து இவரைச் சந்திக்கிறோமே, எத்தனை வருடங்கள் வீணாகிவிட்டன என்ற நினைப்பே எனக்குள் எழுந்தது. கர்வம் செருக்கு என்ற வார்த்தைகள் நாஞ்சில் நாடன் அறியாதவை. ரொறொன்ரோவில் தங்கிய காலத்தில் அவர் இளம் எழுத்தாளர்களைத் தேடிச் சென்று சந்தித்தார். ஆர்வமாக பார்க்க வந்த எழுத்தாளர்களுடனும், வாசகர்களுடனும் நிறைய நேரம் உரையாடினார். அவருடைய பெருந்தன்மை வேறு பிரபல எழுத்தாளர்களில் நான் காணாத ஒன்று.

அவர் ரொறொன்ரோவில் தங்கிய நாட்களில் நடந்த முக்கியமான விசயம் தொடராக ஐந்து நாட்கள் அவர் செய்த கம்பராமாயண விரிவுரைகள்தான். இந்த வாய்ப்பு ரொறொன்ரோ வாழ் மக்களுக்கு இலகுவில் கிடைக்கக்கூடியது அல்ல. நவீன தமிழ் இலக்கியத்தில் பரிச்சயமும் அதே சமயம் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த அறிவும் கொண்டவர்கள் எத்தனை அரிது என்பது தெரிந்த விசயம். நாஞ்சில் நாடன் கம்பராமாயணம் முழுவதையும் முறையாகப் பாடம் கேட்டவர். கம்பரின் முக்கியமான பாடல்களை எடுத்து அவர் விளக்கிய காட்சி மறக்கக்கூடியது அல்ல.

ராமாயணம் பாடிய கம்பரைப் பற்றி ஒரு கதையுள்ளது. சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார். ஒருமுறை சடையப்ப வள்ளல் கம்பர் வீட்டுக்கு விருந்துக்கு வந்தபோது அங்கே ஏற்கனவே கூட்டம் சேர்ந்துவிட்டது. சடையப்பருக்கு இருக்க இடம் கிடைக்கவில்லை. கம்பருக்கு பெரும் சங்கடமாகிவிட்டது. கம்பர் சொன்னார், ’இங்கே இடம் கிடைக்காவிட்டால் என்ன? நான் அவரை வைக்கும் இடத்தில் வைப்பேன்.’ 10,000 பாடல்கள் கொண்ட கம்பருடைய ராமாயணம் திருவரங்கத்தில் அரங்கேறியது. நூறு பாடல்களுக்கு ஒரு பாடலில் கம்பர் சடையப்ப வள்ளலை வைத்து பாடியிருப்பார். ’நூற்றுக்கு ஒன்று கொஞ்சம் அதிகமில்லையா?’ என்று ஒருவர் கேட்டபோது கம்பர் சாதுர்யமாகப் பதில் சொன்னார். ’ உண்மைதான். சடையப்பர் நூற்றில் ஒருவர் இல்லை. ஆயிரத்தில் ஒருவர்.’ அப்படியே 1000 பாடல்களுக்கு ஒருமுறை சடையப்பர் பெயர் வரும்படி கம்பர் பாடல்களை அமைத்தார்.

நாஞ்சில் நாடனுடைய இடம் தமிழ் இலக்கியத்தில் எங்கே நிற்கும்? அவர் நூற்றில் ஒருவரா, ஆயிரத்தில் ஒருவரா? நிச்சயமாக லட்சத்தில் ஒருவர்தான். இன்னும் பல சிறப்பிதழ்களுக்கு அவர் தகுதியானவர். நாஞ்சில் நாடனுக்கும் பதாகைக்கும் என் வாழ்த்துக்கள்.

நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கியம் எனும் ராஜவீதியில் பயணிக்கிறார். அந்தப் பயணம் வெற்றிகரமாக அமையட்டும். அவர் முன்னே. மற்றவர்கள் பின்னே