அரவிந்த் கருணாகரன்

நிர்க்கதியின் நிழலில்

அரவிந்த் கருணாகரன்

arvindk

அதிவேக சமூக மாற்றம் தனிமனிதனுள் ஏற்படுத்தும் சிக்கல்கள், திரிபுகள் குறித்து பல இலக்கியப் படைப்புகள் வந்துள்ளன. ஐரோப்பாவில் தொழிற்புரட்சியால் விவசாய சமூகங்கள், தொழிற்துறை-மைய சமூகங்களாக வேகமாக மாற்றம் அடைந்தபோது ஏற்பட்ட தனிமனித விளைவுகள் நவீனத்துவ ஆக்கங்களின் மையப் பேசுபொருளாக இருந்தன. இந்திய இலக்கியத்திலும் ஐரோப்பிய நவீனத்துவத்தின் தாக்கம் அதிகம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை விவசாயத்தில் இருந்து தொழிற்துறை, பிறகு அங்கு மையம் கொள்ளாமல் உடனேயே சேவைத்துறை என அடுத்தடுத்து மாற்றம். ஆகவே தொடர்ந்து ஒரு பெயர்ச்சிக் காலகட்டத்திலேயே [transition period] நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இது இன்னும் நுண்ணிய சிக்கல்களை தனிமனிதனிலும், நம் குடும்பச் சூழலிலும் ஏற்படுத்தியது. குறிப்பாக விவசாயிகள் மற்றம் வேளாண்மை செய்யும் குடும்பங்களில் பிறந்தவர்கள் சந்திந்த அவலமும், உயிர்ப்போராட்டமும் நம் முற்போக்கு எழுத்திலும், நவீனத்துவ ஆக்கங்களிலும் முக்கியமான பேசுபொருட்கள் ஆகின.

இருந்தும் ஐரோப்பிய நவீனத்துவ எழுத்திற்கும், இந்திய நவீனத்துவ எழுத்திற்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு என்பதை எனக்கு உணர்த்திய இரண்டு முக்கியமான ஆக்கங்கள் நாஞ்சில் நாடனின் ‘சதுரங்கக் குதிரை’ நாவலும், சு.வேணுகோபாலில் ‘வெண்ணிலை’ சிறுகதை தொகுப்புமே ஆகும். இந்த இரண்டு ஆக்கங்கள் காட்டும் உலகமும் சிக்கல்களும் நவீனத்துவத்திற்கு மிக நெருக்கமானவை. இவற்றிலும் இருண்மை, அர்த்தமிழப்பு, தனிமையாலும் காமத்தாலும் அலைகழிக்கப்படும் மனிதர்கள், சமூக விதிகளின் குலைவு, அதனால் மனித உறவுகளில் ஏற்படும் இறுக்கங்கள் எல்லாம் உண்டு. ஆனாலும் இவை அளிக்கும் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறொரு தளத்தில் இருக்கின்றன.

நாஞ்சிலின் சதுரங்கக் குதிரை நாவலை எடுத்துக் கொண்டால் அதில் வரும் நாராயணனும் குட்டினோவும் தங்கள் சொந்த ஊரில் வாழ வழியின்றி பம்பாய்க்கு இடம்பெயர்ந்து, பிறகு அந்த பெருநகர் உருவாக்கும் பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கும், அடையாள இழப்பிற்கும் ஆளாகிறார்கள். அடிப்படையில் பார்த்தால் இவர்களின் பிரச்சனை ஒரு வில்லி லோமன் [ஒரு விற்பனை பிரதிநிதியின் மரணம் – ஆர்தர் மில்லர்] அல்லதொரு கிரிகர் சாம்சா [உருமாற்றம் – ஃபிரான்ஸ் காஃப்கா] எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து வேறுபட்டதல்ல. தங்கள் அலுவலக வேலையிலிருந்து முழுக்க அந்நியமாகிப்போதல், மிதவைகளைப் போல் வாழ்க்கையிலொரு பிடிப்பின்றி அலைதல் என பல ஒற்றுமைகள். இருந்தும் இவர்கள் இந்த அடையாளமின்மையை, அர்த்தமிழப்பை எதிர்கொள்ளும் விதம் தனித்துவமானது. எப்பேர்ப்பட்ட அக-புற நெருக்கடிகளிலும் இவர்கள் அராஜகவாதிகளாகவோ, எதிர்மறை ஆளுமைகளாகவோ மாறுவதில்லை. ஒட்டுமொத்த பிறழ்வை நோக்கியோ, வன்முறை நோக்கியோ இவர்கள் செல்வதில்லை. ஏன் அப்படி எதுவும் ஆகவில்லை எனக் கொஞ்சம் குதர்க்கமாக யோசித்தால், அது நாராயணனுக்கும், குட்டினோவுக்கும் சுவையின் மீதுள்ள பிடிப்பால் எனத் தோன்றுகிறது. எந்நிலையிலும் உணவை, அது தரும் சுவையை அவர்கள் இழக்கவில்லை. நாவல் ஆரம்பித்த சில பக்கங்களிலேயே உணவு குறித்த, சமையல் குறித்த சித்தரிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. நாவல் முழுக்க நாராயணனும் குட்டினோவும் சாப்பிட கிளம்பிப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். தனிமையும், அடையாளமின்மையும், சுரண்டலும், சுயநலமுள்ள இந்த உலகத்தில் இருந்து அவர்களை பன்பாவும், பட்டாடா வடாவும், ஈரானியன் சாயும், நண்டுபொரியலும், பொரித்த மீனும் தான் காப்பாற்றியது என நினைக்கத் தூண்டுகிறது. ஆனால் இந்தச் சுவை என்பது வெறும் நாவின் சுவை மட்டுமல்ல. மன ஆழத்தில் இருந்து ஊற்றெடுக்கும் சுவை. இந்த பொருண்மை உலகத்தில் அதன் ஒவ்வொரு துளியின் மீதும் பொதிந்திருக்கும் சுவை. அதுவே அவர்களை எதிர்மறை ஆளுமைகளாக ஆக்காமல் மீட்டது, இப்பூமியின் மீதும், மானுத்தின் மீதும் நம்பிக்கை இழக்காமல் கால் ஊன்றி நடக்கச் செய்தது எனத் தோன்றுகிறது.

நாஞ்சிலின் கதாபாத்திரங்களுக்கு உணவும் அது தரும் தீராச் சுவையும் என்றால், சு.வேணுகோபாலின் கதைமாந்தர்களுக்கு மண்ணும் உழவும் எனலாம். மண் மீது அவர்களுக்குள்ள பிடிப்பால், வெறும் நிலமும் நிலக்காட்சிகளும் அவர்களுள் உருவாக்கும் தாக்கத்தால் தாங்கள் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகளை, இருளை தாண்டிச் செல்கிறார்கள் (அல்லது குறைந்தபட்சம் அவற்றை முழு உயிராற்றலோடு விடாமல் எதிர்கொள்கிறார்கள்). நாஞ்சிலின் நாவல்களில் உணவு சார்ந்த வர்ணனைகள் வந்துகொண்டே இருப்பது போல், சு.வேணுகோபாலின் ஆக்கங்களில் நிலம்சார்ந்த விவரிப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் அவை பச்சைபசலென வீற்றிருக்கும் அழகிய நிலக்காட்சிகள் அல்ல, வறண்டு தகிக்கும் நிலத்தின் விவரிப்புகள். மைல் கணக்காக வெடித்து நீளும் வரப்புகளின் காட்சிகள். இருந்தும் அவை திரும்பத் திரும்ப அதன் அத்தனை நுட்பங்களோடும் வந்து கொண்டே இருக்கின்றன. நிலம் எதுவாக இருந்தாலும் அது மனிதனில் உருவாக்கும் உயிரிச்சையும், தாக்கமும் அடிப்படையில் ஒன்றுதான் என அவர் உணர்த்த விரும்புவது போல் கூட சில சமயம் தோன்றும்.

குறிப்பாக அவரது வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பில் உள்ள பல கதைகள் மண்ணுக்கும் மனிதருக்கும் உள்ள உறவை பேசவே முற்படுகின்றன. அவற்றிலும் பெரும்பாலான கதைகள் மானுட இருண்மையை நோக்கியே குவிகின்றன. மானுட மனநிழலில் படர்ந்திருக்கும் கருமையை வெகு இலகுவாக வேணுகோபால் இனம்கண்டு கொள்கிறார். ஆனால்  ஐரோப்பிய நவீனத்துவம் பேசும் இருண்மைக்கும், வேணுகோபால் பேசும் இருண்மைக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. காலத்தின் பிரம்மாண்டத்தின் முன் மிரண்டு நிற்கும் தனியனாக, இச்சைகளின் அலைக்கழிப்புகளால் கைவிடப்பட்ட மிருகமாக அவர் தனது கதைமாந்தர்களை காட்டவில்லை. மாறாக, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மரநிழலில் சேர்த்திவிடத் துடிக்கும், அதற்காக சலிப்பேயில்லாமல் தினசரி ஓடும் ஒருவனில், புதிர்தன்மையுடன் “எப்படியோ” குடிகொள்ளும் கூறுகளைச் சுட்டிக் காட்டவே விரும்புகிறார். அர்த்தமிழப்பாலும் அதனால் ஏற்படும் செயலின்மையாலும் ஒருவன் உணரும் இருண்மையுணர்வை அவர் பேச விழையவில்லை. மாறாக செயலூக்கத் தளத்தில் ஒருவன் உணரும் இருண்மையை, அவன் திடீரென எதிர்கொள்ளும் நிர்க்கதியை, அதை மீறிச் செல்ல துடிக்கும் போது அடையும் எழுச்சியையும் சரிவையும் சொல்லவே முற்படுகிறார்.

ஒரு சிறந்த இலக்கியப்படைப்பு என்றுமே வலிந்து முன்வைக்கப்படும் மன விகாரங்களாலோ பிறழ்வுகளாலோ ஆனது அல்ல. அதே சமயம், அது வாழ்வின் முடிவற்றுச் செல்லும் இருளை, கீழ்மைகளை,  அவமானங்களை,  சரிவுகளை பூசி மெழுகாது. நிதர்சனத்தைக் கண்டு அஞ்சி ஓடவும் ஓடாது. அவ்வகையில் எவ்வித உத்திகளும் இன்றி, சித்தரிப்பின் உக்கிரத்தால் மட்டுமே தனித்து நிற்கிறது சு.வேணுகோபாலின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு. வேர்வையும், லௌகீகக் கனவுகளுமாக உலா வரும் மனிதர்களின் வாழ்க்கையை போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார் வேணுகோபால். அப்படி சொல்லிச் சொல்லியே வாழ்வுக் கணங்களின் அசாதாரணமான சிடுக்குகளை, முரண்பாடுகளை நம் கண்முன்னே நிறுத்துகிறார். கதை நெடுக்க வந்து கொண்டே இருக்கும் முகங்கள். விவசாயிகள். முதியவர்கள். ஸ்கூல் டீச்சர்கள். இல்லத்தரசிகள். பொறுக்கிகள். பித்தர்கள். ஆனால் இவர்களை லட்சிய உருவகங்களாக ஆக்க வேணுகோபால் முயல்வதில்லை. இவர்களின் துயரங்களை, மேன்மைகளை, சறுக்கல்களை எந்த ஒரு தத்துவச் சட்டகத்திற்க்குள் அடைக்கவும் அவர் முனைவதில்லை. உக்கிரமான கணங்களை சாதாரணமாகச் விவரிக்கிறார். அவை வாசகனுள் ஏற்படுத்தும் தத்தளிப்பும், மனஎழுச்சியுமே இந்தக் கதைகளின் வெற்றி எனச் சொல்லலாம்.

இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளின் பேசுதளம் கைவிடப்படுதலும், அதனால் ஏற்படும் நிர்க்கதி நிலையுமே ஆகும். ஈரம் முழுக்க உறியப்பட்டு கைவிடப்பட்ட நிலம். நிலத்தால் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்கள். மிச்சமிருக்கும் ஈரத்தையும் துளைபோட்டு கோர்த்துறிஞ்சி இந்நாளை கடந்துவிடத் துடிக்கும் ஆட்கள். இவர்களின் சூதறியா செய்கைகளால் கைவிடப்படப்போகும் நிலையில் உள்ள நாளைய தலைமுறை. கணவனின் பொறுப்பின்மையால், மகன்களின் மூர்க்கமான சுயநலத்தால் கதியற்றுப்போன பெண்கள், முதியவர்கள். குறிப்பாக இந்த தொகுப்பில் உள்ள “புத்துயிர்ப்பு” என்னும் கதை. இதன் பேசுபொருளும் கைவிடப்படுதலே ஆகும். ஆனால் ஜெயமோகன் உட்பட சில விமர்சகர்கள் முன்னரே குறிப்பிட்டுருப்பது போல், தொகுப்பில் உள்ள மற்ற கதைகளில் இருந்து இக்கதை அதன் கவித்துவத்தால், எழுச்சியால் தனித்து நிற்கிறது.

வேறு யாரோ ஒருவரின் தோட்டத்தில் இருந்து சோளத் தட்டையையோ, மாட்டுத்தீவனத்தையோ திருடி பிடிபட்டு எல்லோர் முன்னிலையிலும் கூனிக் குறுகி நிற்கும் சிலரை நாம் எங்கோ எப்போதோ பார்த்திருப்போம். அப்படி பிடிபட்ட ஒரு விவசாயியின் சரிவை நுட்பத்துடன் நம் கண்முன் நிறுத்தும் ஆக்கமே “புத்துயிர்ப்பு”. தனது மாட்டுக்கு ஒருபிடி புல்லுக்காக நாள் முழுக்க வெக்கையில் அலையும் ஒருவனின் வாழ்க்கையை “போகிறபோக்கில்” சொல்கிறார் வேணுகோபால். வரண்டு தகித்து எரியும் நிலம். பஞ்சப்பரப்பின் கோரத்தோற்றம். ஒரு தனிப்புல்லைக் கூட கோபாலால் எங்குமே காணமுடிவதில்லை. சுற்றிச் சுற்றிக் களைத்துப் போய், கண்களில் காய்ச்சல் முட்ட வீடு திரும்புகிறான். வீட்டில் நாக்குலர்ந்து படுத்திருக்கும் நிறைசினைப்பசு. கருவுற்றிருக்கும் மனைவி சாந்தா. தகதகக்கும் காரை. மனைவி மீது எரிந்தெரிந்து விழுகிறான். ஒரு பிடி புல்லுக்காக பொட்டலில் நாளெல்லாம் அலையும் அவனைக் கண்ட மனவேதனையில் மாட்டை விற்றுவிடும்படி சாந்தா கூற, குச்சியை எடுத்துக் கொண்டு அவளை அடிக்க ஓடுகிறான். பின்னர் சமாதானமாகி, அவளது நகையை பேங்கில் வைத்து இரண்டு வண்டிப் புல் வாங்கி வரச் செல்கிறான். பேங்கில் பணத்தை வாங்கிக் கொண்டு அனல் தகிக்கும் மதிய வெயிலில் புல் வாங்க அலைகிறான். எங்கெங்கோ அலைந்து பார்க்கிறான். எங்குமே ஒருகட்டு புல் கூட கிடைக்கவில்லை. நாலு மடங்கு விலைக்கு மொத்த புல்லையும் பக்கத்து பெருஊர்களில் இருந்து லாரியில் அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள் என அறிகிறான்.

பின்னர் மிகுந்த மனச்சோர்வுடன் வீடு திரும்பி மாட்டைக் கட்டிக் கொண்டு உடைந்தழுகிறான். சாந்தா அவனை தேற்ற முயற்சிக்கிறாள். ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு படுக்கும்படி கூறுகிறாள். அவள் தூங்கியவுடன் சொந்தத்தில் ஒருவரின் சோளத் தோட்டத்திற்குள் புகுந்து கொஞ்சம் தீவனத்தை திருட முயற்சிக்கும்போது பிடிபடுகிறான். “என்னைய ஒண்ணும் மாமான்னு நொட்ட வேணாம்…… மாட வளக்க முடியலைன்னா எங்கிட்டாவது ஊம்பப் போடா” என்று கடுமையாக அவமானப்படுத்தப்படுகிறான். நடுஜாமத்தில் எழுந்த சத்தத்தைக் கேட்ட கிராமத்துப் பெரியவர் ஒருவர் அங்கு வருகிறார். அடி வாங்கி நிற்கும் கோபாலைப் பார்த்து “ஏண்டா நாயே.. இது ஒரு பொளப்பாடா” என்று ஏசி, அவர் பங்குக்கு அவனை இரண்டு தட்டு தட்டுகிறார். பின்னர் காலையில் பஞ்சாயத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அவனை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். விடிகாலையில் கோபால் பாலிடாலும் வாந்தியுமாக நுரை தள்ளிக் கிடக்கிறான். ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு ஒடுகிறார்கள். ”எம் பாவா…. இப்பிடிப் பண்ணிட்டியே பாவா..” என அவனது மனைவி கல்லீரல் அதிர கதறுகிறாள். அங்கேயே மயங்கி, குடம் உடைந்து, குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். சுருங்கிய பிஞ்சுத்தோலும், பிசுபிசுப்புமாக குறைமாதம் பிறக்கும் அந்தக் குழந்தையை வெயிலில் காட்ட மருத்துவச்சி தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.

எது அந்த ஊர் மக்களையெல்லாம் நிர்க்கதியின் முனை நோக்கித் தள்ளியதோ அதுவே இக்குழந்தையின் மீதும் பட்டுத் தெறித்து மின்னுகிறது. அனைவரையும் அலைக்கழிக்கும் கோர வெயிலை தன் மூடிய பிஞ்சு விரல்களால் அள்ளிப் துளாவிப் பருகத் துடிக்கும் குழந்தை! நிர்க்கதியின் மடியில் கைக் கால்களை உதைத்துக் கொண்டு துடிக்கும் உயிரின் பேராற்றலை “வான் பொழிய மண் செழிக்க வாழையடி வாழையென வந்ததடி குழந்தை’ என குலவையிட்டு பாடி முடிக்கிறது இந்தச் சிறுகதை. வாழ்வியக்கத்தின் முடிவில்லா புதிர்த்தன்மையை கலையமைதியோடு நகம்மு உண்ர்த்துவதாலேயே இக்கதை பெரும் மனநெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இக்கதையிலும் வேணுகோபால சொல்லிச் சொல்லி சென்றபடி இருக்கிறார். எவ்வித படிமங்களும் இல்லாத நேரடியான விவரணை. கோபால் மீது சாந்தா கொண்டுள்ள பெரும் காதலை பற்றி சில வரிகளே வந்தாலும் வாசகன் முன்னே உயிர்ப்புள்ள ஒரு வாழ்க்கை விரிந்து எழுகிறது. கட்டைக் குரலில் கோபால் பாடும் ”பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து” என்ற பாடலின் ஒவ்வொரு ஏற்ற இறக்கத்தையும் நாமும் கேட்டு உருகுகிறோம். நெகிழ்ந்து நிற்கும் சாந்தாவின் உணர்வலைகளை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். ஆத்மார்த்தமான ஒரு கதைசொல்லியாலேயே வாசகனுள் இத்தகைய ஒரு நெருக்கத்தை உருவாக்க முடியும். கொஞ்சம் சறுக்கினால் கூட எல்லாம் செயற்கையாகப் போய்விடும். ஆனால் சு.வேணுகோபால் இவ்வகை நெருக்கத்தை மிக இயல்பாக வாசகனுள் உருவாக்குகிறார்.

இப்படி மண்ணில் ஊறித் திளைக்கும் ஒருவனை ரத்தமும், சதையுமாக நம் கண்முன்னே நிறுத்துகிறார் வேணுகோபால். கதையின் ஒருபகுதி முழுக்க உயிர்ப்புடன் விரிகிறது கோபாலின் ஆளுமைச்சித்திரம். நுரை தள்ளிக் கிடந்த கோபாலை ஆஸ்பத்திரியில் சேர்த்த நண்பர்கள் அவனை நினைவுகூரும்  இடத்தை உதாரணமாகச் சொல்லலாம்.  அதே போல் தீவனம் கிடைக்காது போன துக்கத்தையும் மீறி, துண்டுச் சாக்கை ரெண்டாக மடித்து மாட்டை பளபளவென கோபால் துடைக்கும் இடத்தையும் கூறலாம். “தேய்க்கத் தேய்க்க பளபளவென மின்னியது… பசியிலும் சொகமாக நின்று கண்களை மூடியது” போன்ற ஓரிரு வரிகளிலேயே கோபாலுக்கும், மாட்டுக்கும் உள்ள ஆழமான பந்தத்தை உணர்த்துகிறார். முன்னிரவில் புல்கட்டு எதுவும் கிடைக்காமல் சோர்ந்து போய் திருப்பும் கோபாலை, அவனது சைக்கிள் சத்தத்தை வைத்து கண்டுபிடித்து தன் முழுகனத்தையும் தாங்கி திடுதிப்பென எழுந்து நிற்கும் நிறைசினைப்பசுவின் சித்திரமும், அதைக் கண்டு கோபால் கரைந்தழுவதும் நம்முள் ஒரு பெரும் தத்தளிப்பை உருவாக்குகிறது.

பிறகு கடைசியில் அவன் பாலிடால் குடித்து தரையில் நுரைதள்ளிக் கிடக்கும் காட்சிகள் வழியாக கோபாலின் சரிவை விவரிக்கிறார். இவ்வாறு மண்மீது அவன் கொண்டுள்ள உயிர்ப்புள்ள பிடிப்பையும், சுழித்தோடும் வாழ்வுக்கணங்களில் அவன் திமிறி எழுந்து, பின்னர் சறுக்கி, மீண்டும் எழுந்து, பிறகு மீண்டும் வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்படும் சித்திரத்தையும் நம் மனக்கண் முன் வரைந்தபடியே செல்கிறார். அதனாலேயே இக்கதை “ஒருவன் அடையும் சரிவு” எனும் தளத்தைத் தாண்டி “மானுட சரிவு” என்ற தளத்திற்குள்ளும், “சரிவு என்றால் என்ன?” என்னும் கேள்விக்குள்ளும் சென்று, ஒரு செவ்வியல் ஆக்கமாக முழுமை கொள்கிறது

ஒரு விவசாயியின் உலகத்திற்குள் செல்லும் வேணுகோபால், அதே அளவு நுட்பத்துடன் நடுத்தர-கீழ்நடுத்தர இளைஞர்களின் உலகத்திற்குள்ளும், இல்லத்தரசியின் உலகத்திற்குள்ளும் செல்கிறார். கே.டிவியை மாற்றி கார்ட்டூன் நெட்வொர்க் போடும் தன் குட்டி மகனை குண்டியில் ஒரு தட்டி தட்டி, உதைபடப்போற என மிரட்டும் இல்லத்தரசி ஒரு நல்ல உதாரணம். அதே போல் இளைஞர்களின் உலகத்தையும் மிகுந்த சமகாலத்தன்மையுடன் துல்லியமாக பதிவு செய்த வெகு சில தமிழ் படைப்பாளிகளில் சு.வேணுகோபாலும் ஒருவர். முன்முடியில் வெண்கலநிற டை, பட்டை பெல்ட், பிறைச்சந்திரவடிவ கிருதா என பஸ்ஸில் ”ரவுசு” விடும் இளைஞன் தமிழில் அதிகம் எழுதப்படாத ஒரு சமகால யதார்த்தம். தமிழ் சினிமா கதாப்பாத்திரமாக தன்னைத் தானே நிஜவாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் கட்டமைத்துக் கொண்டிருக்கும் ஜீவன். அவன் உதிர்க்கும் ஒவ்வொரு வாசகத்திலும், உடலசைவிலும் ஏதோவொரு விதமாக தமிழ் சினிமாவின் தாக்கம் இருக்கும். அவர்கள் உலகத்திலுள்ள அலட்டல்களை, கலாய்ப்புகளையெல்லாம் மிக இயல்பாக வேணுகோபால் கொண்டுவருகிறார். இவற்றையெல்லாம் தாண்டி அந்த இளைஞர்களிடையே நீளும் ஆழமான நட்பை ஒரு கொண்டாட்டத்தன்மையோடு விவரிக்கிறார். வாட்டர் பாக்கெட், மிக்சர், அவித்த கடலை புடைசூழ அவர்கள் தண்ணி அடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கலாய்ப்பதும், ஒரு முழு ஆம்லெட் உள்ளே போன குஷியில் ஆடிகுதிப்பதுமாக வரும் இடம் ஒரு நல்ல உதாரணம்.

ஆனால் இவர்களை அப்பட்டமான பொறுக்கிகளாகவோ அல்லது வீராவேசம் பொங்கி வழியும் நாயகர்களாகவோ வேணுகோபால் காட்ட முயலவில்லை. இவர்களின் எல்லா குறைகளோடும், இளமைக்கே உரிய பலவீனங்களோடுமே காட்டுகிறார். இருந்தும் வேணுகோபாலின் கவனம் அவர்கள் அடையும், அடைய முயலும் மேன்மையைச் சுற்றியே குவிகிறது. இது அற்புதமாக வெளிப்படுவது ”வெண்ணிலை” என்னும் கதையிலே.

மெயின் ரோட்டில், பிளக்கும் உச்சி வெயிலில், உடலதிர உறுமி பீதியைக் கிளப்பிச் செல்லும் அந்த “யமகா” பைக்கை தமிழகத்தில் நாம் அத்தனைபேருமே எங்கேனும் பார்த்திருப்போம். கிளச்சை முறிக்கிப் பிடித்துக் கொண்டு வளைந்து வளைந்து செல்லும் அந்தக் கர்சீப் கட்டிய இளைஞர்கள் போகும் வழியை திரும்பிப் பார்த்து, மனதார அவர்களை வசை பாடியபடி,  உடன் நடந்து வரும் நம் குழந்தையின் கையை இறுக்கப் பற்றியபடி நாமும் சென்றிருப்போம். அப்படி பைக்கில் விரட்டிப் பிடித்து “நியூ” தமிழ்ப்படத்தை தியேட்டரில் அது ஆரம்பிப்பதற்குள் பார்க்கச் செல்லத் துடிக்கும் இரு இளைஞர்களில் தொடங்குகிறது இந்தக் கதை. அப்போது சிக்னல் அருகே ஒரு பெண் தனித்து நின்று கொண்டிருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். எங்கோ பார்த்த முகம். இவர்கள் சாலையை கடக்கும் போதும் அவள் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறாள். கல்லூரி அருகே உள்ளே ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண் அவள் என ஒருத்தன் நினைவுகூர்கிறான். பின் அவனுக்கு ஞாபகம் வருகிறது – மிகுந்த உயிர்த்துடிப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் குறித்த அவனது நினைவுகள் எழுகின்றன. அவளுடையது எளிய குடும்பம். வறுமை. ஆனால் வாழ்வின் மீது அவள் கொண்டுள்ள பிடிப்பும், அதே சமயம் துளியும் ஆக்ரோஷமற்ற அவளது வேகமும் நேர்நிலைத்தன்மையும் அவனை அறியாமலேயே அப்போது ஆழ பதிந்துவிடுகின்றன. மிகச் சில காலமே அவளை அறிந்திருந்தாலும் இனிய நினைவுகளே அவனுள் அப்போது எழுகின்றன. ஆனால் அவள் இப்படி தெருவில் யாருமற்று நிற்பதை பார்க்கும் போது அவன் குழம்புகிறான்.

போய் என்னவென்று கேட்கிறார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவளது தந்தை இறந்துவிட்டார். அடக்கம் செய்ய பணமில்லை. உதவிக்கும் வேறு யாருமில்லை. “எதையோ” நம்பி அங்கு சாலையில் வந்து நின்றிருக்கிறாள். இவர்கள் எப்படியோ பணத்தை தேத்தி சடலத்தை அடக்கம் செய்ய உதவுகிறார்கள். வெண்ணிலையா இவளை இப்படி விட்டுட்டு போயிட்டீங்களே என அவளது தாய் சடலத்தை பார்த்து கதறி அழுகிறாள்.

வெண்ணிலை. தாங்கிக்கொள்ளவே முடியாத தனிமை. பரிபூர்ணமான நிர்க்கதி. எந்த தைரியத்தில் அவள் அங்கு சாலையில் வந்து நின்றாள், அவன் மட்டும் அங்கு வரவில்லை, வந்து விசாரிக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என அந்த இளைஞன் கேட்க நினைத்து பிறகு கடைசியில் விட்டுவிடுகிறான். ஆனால் கதை முடிந்தபிறகு அந்தக் கேள்வி உண்மையில் அவனை நோக்கி திரும்புவதை நாம் உணரலாம். அவன் பாட்டுக்கு படம் பார்க்க அடித்துப்பிடித்து பைக்கில் போய்க்கொண்டிருந்தவன், எதற்காக உதவினான்? எங்கோ எப்போதோ பார்த்தவள் தெருவில் நின்றுக் கொண்டிருந்தபோது எதற்காக திரும்பப் போய் விசாரித்தான்? இதற்கு விடை தேட எளிய முற்போக்கு விளக்கங்களுக்குள்ளோ அல்லது ஃபிராய்டிய கோட்பாட்டிற்குள்ளோ இந்தக் கதை செல்லவில்லை. உண்மையில் எந்த விடையுமே அளிக்காமல், மானுட இயக்கத்தின் புரிந்து கொள்ளவே முடியாத புதிர்த்தன்மையை வாசகனுக்கு உணர்த்தியபடி முடிவடைகிறது இந்தச் சிறுகதை.

வெண்ணிலா தன்னந்தனிமையானது. ஆனால் அதன் நிர்க்கதியில் இருந்து எழுவது வெக்கையும் குளிரும் மட்டுமல்ல, நிழலும் கூடத்தான். சு.வேணுகோபாலின் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் நிர்க்கதியின் குரூரத்தையும், நிழலையும் நாம் தொடர்ந்து உணர்ந்து கொண்டே இருக்கிறோம். அப்படி அந்த நிர்க்கதியின் நிழலில் மனிதர்கள் கொள்ளும் சரிவையும் எழுச்சியையும் ஒருசேர சொல்வதாலேயே வெண்ணிலை சிறுகதை தொகுப்பு மற்ற நவீனத்துவ எழுத்துகளில் இருந்து மாறுபடுகிறது. அந்தத் தனித்தன்மையாலேயே தமிழிலக்கியத்திலும் இந்தத் தொகுப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.