அரிசங்கர்

பாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்

பாரிஸ் என்னும் கனவின் நிஜத்தை கண்டு விரும்பத் தொடங்கி நிழல் மட்டுமே வசமாகி இருக்கும் சமூக கைவல்ய நிலையை உரசி செல்லும் புதினம் “பாரிஸ்”.
பாரிஸ் என்னும் கனவினுள் நிஜம் உண்டு, பாவனை உண்டு, அற்பத்தனம் உண்டு,லௌகீகம் உண்டு, கனவின் லட்சியமும் உண்டு,அக்கனவு குறித்த அலட்சியமும் உண்டு.

கனவை நினைவாக்க எடுக்கப்படும் பிரயத்தனங்கள் ஏற்படுத்தும் பதற்றம் நாவலின் அடி நாதமாக இருக்கிறது. இந்த பிரயத்தனங்கள் குறித்து வாசிக்கையில் வாசகனுக்கு அசூயையும் கோபாவேசமும் தோன்ற வாய்ப்பிருக்கிறது, அசூயையும் கோபத்தையும் தூண்டும் வாசகனின் தார்மீகத்தை நம்பியே இந்த புதினம் எழுதப்பட்டிருக்கிறது. இவற்றைத் தாண்டி நாவல் காட்டும் யதார்த்தம் வாசகனின் தார்மீகம் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகுமா  என்ற கேள்வியை முன் வைக்கிறது. யதார்த்தம் என்பது லௌகீகம் முன் பல்லிளித்து நிற்கும் தார்மீகம் தான்  என்றும் கூறப்பார்க்கிறது.

கனவின் நியாயம் என்று ஒருவர் வகுக்க இயலாது. அக்கனவினை அடைய ஒருவன் மேற்கொள்ளும் முயற்சிகளில் நியாய அநியாயங்கள் , பாவனைகள், சோம்பல்கள் , முட்டாள்தனங்கள் இருக்க வாய்ப்புண்டு , கனவுகளை அடைய விடலைத்தனமான முயற்சிகள் தொடங்கி காரியார்த்தமான செயல்கள் வரை மேற்கொண்டு கனவுகளை துரத்திய படியே
யதார்த்தத்தை வந்தடையும் பல்வேறு கதைமாந்தர்கள் வழி புதுச்சேரியின் தெருக்களில் வாசகன் நடை பயில்கிறான்.

நாவலின் வடிவத் தேர்வு அருமை, குறிப்பாக நிகழ்வுகளையும் முன் நிகழ்ச்சிகளையும் கோர்த்திருக்கும் கொக்கி போன்ற அந்த கண்ணி  அமைப்பு வாசிப்பை சுவாரஸ்யமானத்தாக்குகிறது.

செட்டில் ஆவது – வாழக்கையை துவங்கும் முன்னரே செட்டில் ஆகத் துடிக்கும் , பொருளாதார தன்னிறைவு அடைய முயலும், தங்கள் சூழலை முற்றும் துறந்து அந்நிய நிலத்தில் தடம் பதிக்க நினைக்கும் இளம் தலைமுறையினர் காட்டும் பதற்றம் நாவலின் ஜீவநாடி. இந்த பதற்றம் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி பரவலாக அமையப்பெற்றுள்ளது,

ரபி ,கிறிஸ்டோ மற்றும் அசோக் பொருளாதாரத்தின் இரு எல்லையில் இருப்பவர்கள், இம்மூவரும் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் வேவ்வேறானவை.
ஆனால் மூவருமே விளிம்பு நிலையில் இருப்பவர்கள், ரபியின் பொருட்கனவு இன்னொருவனின் லௌகீதத்தின் முன் தோற்கிறது, அசோக் யதார்த்தத்தின் முன் தோற்கிறான், கிறிஸ்டோ அன்பை கைவிட்ட செல்வத்தின் எல்லையின்மை முன் தோற்கிறான்.

கலாச்சார ரீதியாக தன்னை அயல் குடிமகனாக காட்டிக்கொள்ள முயலும் அசோக் இன் அசல் பிரச்னை பொருளாதாரம் தொடர்பானதாக இருக்கிறது, பொருளாதார நிறைவு பெற்ற ரபி யின் ஆசை அயல் நாடு போவதேனினும் அவன் எதிர்பார விதமாக சந்தித்த சிக்கல் உறவு ரீதியானது, அன்பை அடைய முயலும் கிறிஸ்டோ வின் அசல் பிரச்சினை அவனது குடும்ப அந்தஸ்து குறித்தது. பதற்றத்தின் மூல காரணங்களாக நாம் நாவல் வழி கண்டுகொள்வது , இந்திய தேசம் குறித்த கலாச்சார தாழ்வுணர்ச்சி , அயல் நாட்டு மோகம், தனி மனிதனின் பொருளாதார சுமை, பணம் சேர்ப்பதின் எல்லையின்மை குறித்த உணர்வின்மை.

கிறிஸ்டோ விரும்பும் கலாச்சார சுதந்திரம் அசோக்கை சுற்றி அமைந்திருக்க வாய்ப்பிருக்கிறது, டைலர் என்னும் கதாப்பாத்திரம் வழி நாம் உணர்வது இதையே , உறவு தொடர்பான சிக்கல் பெரிதும் அற்ற பாரிஸ் ஒத்த கலாசார சூழல் நம் நாட்டின் பொருளாதாரத்தில் தாழ்ந்த விளிம்பு நிலை மனிதர்களிடம் உள்ளதோ ? அதே நேரத்தில் பொருள் சேர்த்தலுக்கும் உறவு சிக்கல்களுக்குமான பொருந்தாத முடிச்சு குறித்து  ரபி அறிகிறானோ ? மிதமிஞ்சிய செல்வத்தின் மலட்டுத் தன்மை கிறிஸ்டோவை தவிக்க விடுகிறதோ ? ரபியின் பொருள் x காதல் என்பதான இரட்டை நிலை கிறிஸ்டோவின் அன்பிற்கும் அசோக்கின் பொருளிற்கும் இடையே வைக்கத்தக்கது.

சமகால பொருளாதார ஏற்றத் தாழ்வின் குறியீடு போல் அமைந்துள்ளது நாவலின்  கடைசிப் பகுதி, “பாரிஸ்” என்னும் நிழலின் தன்மையை மூவரும் அறிந்து கொள்கின்றனர். அசோக், கிறிஸ்டோ,  ரபி மூவரும் கண்ட வெவ்வேறான அதே கனவினை விடுத்து எதேச்சையின் கரம் பற்றி தங்கள் பயணத்தை துவங்குகின்றனர்.
செல்வம் எனும் இந்தப் பேயுடன் நாம் வரவேற்பறையில் உரையாடி கொண்டிருக்கையில், நம் உள்ளறைகளிலிருந்து அன்பு விடைப்பெற்றுக் கொண்டே இருக்கிறது.

“பாரிஸ் “அரி சங்கர் எழுதியுள்ள முதல் நாவல். பதிலடி என்னும் சிறுகதை தொகுப்பு வெளி வந்துள்ளது

அரிசங்கர் நேர்காணல் – லாவண்யா சுந்தர்ராஜன்

  1. இலக்கியத்தில் நுழைந்தது எப்படி?

பெரும்பாலானவர்களுக்கு நேர்ந்ததைப் போலவே தான் எனக்கும் அமைந்தது. தனிமையே முதலில் என்னை வாசிப்புக்குள் இழுத்துச்சென்றது. பிறகு இடதுசாரி இயக்கத் தோழர்களின் வழி சரியான வாசிப்புக்குள் திசைத்திருப்பப்பட்டேன். முதலில் ரஷ்ய இலக்கியங்களும் பிறகு, தமிழின் நவீன இலக்கியமும் பரிச்சயம் ஆனது. தொடர்ந்து கிடைத்த நண்பர்களே இலக்கிய வழிக்காட்டிகளாக உள்ளனர். அதில் ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கேற்ப, அரசியலுக்கேற்பப் படைப்புகளைப் பரிந்துரைப்பார்கள். அதிலிருந்து எனக்குத் தேவையானதை நான் எடுத்துக்கொள்கிறேன். வாசிப்பின் ஆரம்பத்திலேயே எழுத வேண்டும் என்ற ஊந்துதல் வந்துவிட்டது. அதற்கு சரியான காரணம் தெரியவில்லை. புதுச்சேரியில் இருக்கும் போதே சில சிறுகதைகளும், மாயப்படகு என்ற சிறுவர் நாவலும் புதுச்சேரியிலிருந்து வெளிவந்துக்கொண்டிருந்த புதுவைப்பாமரன் மற்றும் புதுவை பாரதி ஆகிய இதழ்களில் வெளிவந்தது. அதற்கு பிறகு அதை தொடர முடியவில்லை. பிறகு வேலைக்காக சென்னைக்கு வந்த பிறகே மீண்டும் எழுத ஆரம்பத்தேன். மலைகள், பதாகை, சொல்வனம், உயிர் எழுத்து, காக்கைச் சிறகினிலே ஆகிய இனைய இதழ்களில் தொடர்ந்து கதைகள் வெளிவந்தது. இதில் பதாகை பாஸ்கர் அவர்கள் வழிகாட்டுதல் மிக முக்கியமானது.

  1. வாசிக்கும் போது என்ன கற்று கொள்கின்றீர்கள் அது உங்கள் எழுத்துக்கு எப்படி உதவுகிறது?

வாசிக்கும் போது எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லை. படைப்பை அனுபவிக்கவே விரும்புகிறேன். அவ்வாறு அனுபவத்தை தராத படைப்புகளிடமிருந்து விலகிவிடுகிறேன். ஆனால், தற்போது வாசிக்கும் பழக்கத்தில் சிறிது மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஒவ்வொருவரும் மொழியை எவ்வாறு கையாண்டிருக்கிறார்கள் என்று ஆராய்கிறேன். நுட்பமான விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன். இவ்வாறு செய்வது என் எழுத்தை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது.

  1. உங்கள் புனைவு உலகினை பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

எனது முதல் தொகுப்பை வெளியிடும் போது இருந்த மனநிலை, அந்தத் தொகுப்பு வெளியான சிறிது காலத்திற்குள்ளாகவே மாறத்தொடங்கியிருந்ததை என்னால் உணர முடிந்தது. அத்தொகுப்பின் என்னுரையில் நான் எதார்த்தவாத்ததின் தேவையைப் பற்றியும் வரலாற்றில் அதன் முக்கியத்துவத்தின் பற்றியும் கூறியிருப்பேன். ஆனால், அதன் பின் என் சிந்தனை முழுக்க கோட்பாடுகள், மாய எதார்த்தம் என மாறத்தொடங்கியது. கதைச் சொல்லலில் புதிய யுக்திகளைக் கையாள வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இதற்கு முக்கிய காரணம் வாசிப்பில் நான் மேற்கொண்ட சில மாற்றங்களைச் சொல்லலாம். அதன் பிறகே என் புனைவுலக மனிதர்கள் நிறம் மாறத்துவங்கினார்கள். என் முதல் தொகுப்பிற்கு பிறகு வந்த கதைகளில் இதைக் காணலாம். வடிவத்தில் சில மாற்றங்களை நான் மேற்கொண்டிருந்தாலும் எப்போதும் என் கதைகளில் எளிய அடித்தட்டு மனிதர்களைப் பற்றியே தொடர்ந்துப் பேசி வருகிறேன். மேலும், நான் இருக்கும் ஐ.டி. மற்றும் பிபிஓ துறைப் பற்றியும் அவ்வபோதுக் கதைகளை எழுதி வருகிறேன். ஆனால், எனது சொந்த ஊரானப் புதுச்சேரியைப் பற்றியே அதிகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

  1. உங்கள் வாசிப்பில் அயல் இலக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றீர்கள். நமது இலக்கியத்துக்கும் அயல் இலக்கியத்துக்கும் இருக்கும் வேறுபாடு எப்படியிருக்கிறது?

முக்கியமாக இங்கு இருக்கும் எழுத்தாளர்களுக்கு சமகாலத்தைப் பற்றிய உணர்வு இல்லையோ என்றே தோன்றுகிறது. பெரும்பாலானவர்கள் தங்கள் கதைகளை நினைவுகளில் இருந்தே படைக்கிறார்கள். அவ்வாறு படைக்கப்படும் கதை பத்திலிருந்து இருவது வருடங்கள் பிந்தையதாகவே இருக்கிறது. ஆனால், அயல் இலக்கியங்களில் தற்காலத்தைப் பற்றி அதிகம் கவனம் கொள்ளபடுவதாகத் தோன்றுகிறது. தலைமுறைகளின் மாற்றங்கள், அரசியல் மாற்றங்கள், பண்பாடு, கலாச்சார மாற்றங்கள் என அதிகம் அங்கேப் பதிவுச் செய்யப்படுகிறது. ஆனால், இங்கே கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்பட்டக் கலாச்சார மாற்றங்களை நாம் இன்னும் சரியாக பதிவு செய்ய ஆரம்பிக்கவில்லை. குறிப்பாக உலகமயமாக்கலுக்குப் பிறகான குடும்பங்களின் அமைப்பு எவ்வாறு சிதைந்திருக்கிறது, ஆண் பெண் உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், மேலும் பெண்களின் உலகம் எவ்வாறு விரிவடைந்திருக்கிறது என எதைப் பற்றியும் நாம் அதிகம் யோசித்ததாகத் தெரியவில்லை.

  1. புனைவாக்கத்தை தவர வேறு ஏதேனும் எழுதும் விரும்பம் உள்ளதா? அப்படி எழுத ஆசைபட்டால் எதனை பற்றி எழுதுவீங்க?

நிச்சயம் இருக்கிறது. வரலாற்றின் மீது எனக்கு அளவில்லாத ஆர்வமுண்டு. சொல்லப்பட வேண்டிய பல விஷயங்கள் இன்னும் சொல்லப்படாமலேயே, ஆராயப்படாமலேயே இருக்கின்றது என்ற வருத்தம் எனக்கு உண்டு. நிச்சயம் வரலாற்றுத் தொடர்பான அப்புனைவுகளை எழுதுவேன்.

  1. உங்கள் சிறுகதைகளுக்கு நீங்கள் யாரை முன்னோடியாக நினைக்கின்றீர்கள் ஏன்?

எனக்கு முன்னோடிகள் நிலையானவர்களாக இல்லை. முதலில் ராஜேந்திர சோழன் இருந்தார். பிறகு அசோகமித்ரன், பிறகு பஷீர் என காலத்திற்கும் வாசிப்பிற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இது வாசிப்பின் வழி என்னை மேம்படித்திக்கொள்வதாகவே கருதுகிறேன். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கூறு பிடித்துள்ளது. எதையும் புறந்தள்ள முடியவில்லை.

  1. எழுத்தைத் தவிர வேறு எந்த கலைவடிவில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்? உதாரணத்துக்கு ஓவியம்/புகைப்படம் அதில் ஏதேனும் முயன்று இருக்கின்றீர்களா? அதற்கும் எழுதுவதற்கு என்ன வித்தியாசம்? அது என்ன மாதிரியான அனுபவங்களை தருகிறது?

எனக்கு நிறைய விஷயங்களில் ஆர்வம் உண்டு. டிஜிட்டல் பெயிண்டிங், போட்டோ மேனுபிசோஷனிலும் அதிகம் ஆர்வம் உண்டு. கதைகளில் விவரிப்பத்தை விட இதில் என்னால் கூடுதலாக காட்சிப்படுத்த முடிகிறது. இதுவே தான் வேலையாகவும் இருப்பதால் கூடுதலான நேரம் ஒதுக்க வேண்டும் என்ற சிரமும் இல்லை.

  1. பிறர் எழுத்தை வாசிப்பதற்கும் உங்கள் எழுத்தை நீங்கள் வாசிப்பதர்க்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? இரண்டிலும் இயக்கும் மனநிலையில் அதிக சவாலானது எது?

நான் எழுதியதை நானே வாசிப்பது தான் மிகவும் சவாலானது. பிறர் எழுதியதை வாசிக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு, ஆச்சரியங்கள் எதுவும் நம் சொந்தப் படைப்பை வாசிக்கும் போது இருக்காது. அதனால் பலருடையப் படைப்புகளில், நீங்கள் எழுதியதை மீண்டும் மீண்டும் வாசித்திருந்தால் இத்தவறு நிகழ்ந்திருக்காது” என்றக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால் அது எளிதானதல்ல.

  1. உங்கள் பயண அனுபவங்கள் எப்படிப்பட்டது? ஏதேனும் படைப்பின் உள்ளாக்கத்தின் தேவை பொருட்டு பயணித்தது உண்டா?

நான் அதிகம் பயணம் செய்யக்கூடியவன் அல்ல. அடுத்த நாவலுக்கு அவ்வாறு ஒருப் பயணத்தை மேற்க்கொள்ள திட்டமிட்டிருக்கிறேன்.

  1. உங்கள் முதல் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது அது சார்ந்த அனுபவத்தை பகிர முடியுமா?

எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே முதல் தொகுப்பு வெளிவந்தது. எனக்குத் தெரிந்தப் பலரின் கருத்து நான் அவரசப்பட்டுவிட்டேன் என்பதாகவே இருந்தது. ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை. நான் எந்த ஒரு மோசமானக் கதையையும் எழுதவில்லை. இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணமுண்டு. ஆனால் அப்போது எனக்கு உதவ இலக்கிய நண்பர்கள் யாருமில்லை. அக்கதைகள் தவறான கைகளுக்கு எடிட் செய்ய சென்றுவிட்டது. ஆனாலும் அக்கதைகள் எனக்கு ஒரு சில விமர்சனங்களைத் தவிர்த்து நல்ல பெயரையே ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. தகுதியற்றவர்கள் எடிட் செய்யும் போது நல்லக் கதைகளும் காணாமல்தான் போகும்.

  1. இளம் வயது சுவாரஸிய அனுபவங்கள் பற்றிச் செல்லுங்கள்? அவை உங்கள் எழுத்தில் எங்கேனும் இடம் பிடித்திருக்கிறா?

பலக் கதைகளில் அதை சொல்லியிருக்கிறேன். குறிப்பாக “மெளனம் களையட்டும்” கதை.

  1. உங்கள் படைப்புகளுக்கு வரும் எதிர்வினை என்னவிதமான உளவியல் சிக்கல்களை உங்களுக்கு ஏற்படுத்தும்?

பெரிதாக ஒன்றும் இதுவரை வரவில்லை. என்னை யாருக்கும் தெரியாது. அதற்கு காரணம் இங்கிருக்கும் குழு மனப்பான்மை. என்னை திட்டுவதாலும், பாராட்டுவதாலும் விமர்சிப்பதாலும் யாருக்கும் எந்த நல்லதும் நடந்துவிட போவதில்லை. என்னால் யாரும் கவனத்திற்குள்ளாவப் போவதுமில்லை. அனைத்தும் தேவையைப் பொருத்தே நடப்பதால், நான் இன்னும் எவருடையத் தேவைப் பட்டியளுக்குள்ளும் வரவில்லை.

  1. எழுத்தின் மூலம் வாசிப்பின் மூலம் எதை கண்டடைய விரும்புகின்றீர்கள்?

ஒன்றே ஒன்று தான். இச்சமூகத்தைப் புரிந்துக்கொள்ள விரும்புகிறேன். முரண்பாடுகள் நிறைந்த இச்சமூகம் எப்படி இவ்வாறு ஒற்றுமையாக இயங்குகிறது. அதற்கு ஆதாரப்புள்ளி என்ன என்பதைக் கண்டடையவேத் தொடர்ந்து வாசித்தும் எழுதியும் வருகிறேன்.

  1. எழுதவதற்கு மொழியின் மீதான கவனம் , ஆளுமை முக்கியமானதா?

தை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் என்னென்ன?

நிச்சயம் முக்கியமானது தான். என்னைப் பொருத்தவரைத் தொடர்ந்து கவனத்துடன் வாசிப்பதும், திரும்பத் திரும்ப எழுதிப்பார்ப்பதும் தான் மேம்படுத்த சிறந்த வழி. நான் அதைத்தான் செய்கிறேன்.

  1. உங்களது படைப்பில் உங்களுக்கு மிகவும் கவர்ந்த படைப்பை பற்றி சொல்ல முடியுமா?

அனைத்தையும் எனக்குப் பிடித்தே எழுதினேன். ஆனால் பதிலடி என்றக் கதையை எழுதியிருக்க வேண்டாமே என்ற எண்ணம் இப்போது இருக்கிறது. அது, இந்தச் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறது என்று என்னும் போதுத் தவறான ஒரு விஷயத்தை இச்சமூகத்திற்குச் சொல்லிவிட்டோமோ என்றுத் தோன்றுகிறது. அக்கதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாகவும் அமைந்தது துரதிஷ்டமானது.

  1. யாருடைய படைப்பை பார்த்தது அடடா இது நான் எழுதியிருக்க வேண்டிய கருவல்லவா என்று நினைத்துண்டா அல்லது யாருடைய படைப்பை பார்த்தாவது இந்த லைன் நான் எழுதியிருந்தால் எவ்வளவு சிறப்பாக எழுதியிருப்பேன் என்று நினைத்தது உண்டா?

நிறைய உண்டு. உதாரணமாக சமீபத்தில் ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் என்று ஜப்பானிய நாவலை வாசித்தேன். அதை முன்பே வாசித்திருந்தால் பாரிஸை இன்னும் வேறு தளத்திற்கு உயர்த்தியிருக்க முடியும் என்றுத் தோன்றியது.

  1. உங்கள் படைப்புலத்தின் ஆதார மனநிலை என்ன?

இயலாமை. இச்சமூகத்தில் பெருங்கூட்டம் ஒன்று இம்மனநிலையிலேயே இயங்குகிறது. நடுத்தர மக்களின் ஆதார மனநிலை இதுவாகத்தான் இருக்கிறது. தங்களின் இயலாமையை மறைக்கவே தான் அவர்கள் போராடுகிறார்கள். அவர்களின் இயலாமையை தான் பன்னாட்டு நிறுவனங்கள் காசாக்குகிறார்கள். அரசியல்வாதிகள் ஓட்டாக்குகிறார்கள். எதையும் எதிர்த்து கேட்கவிடாமல் ஒடுக்கப்படுகிறார்கள். சுரண்டுபவன் தைரியமாக சுரண்டுகிறான்.

  1. பெரும்பாலான கதைகளில் சிறுவர்கள் கதைமாந்தராகவும் அல்லது சிறு வயதில் நடந்த சம்பவத்தின் பிண்ணனியில் கதை எழுதப்பட்டிருக்கிறது. இது தற்செயலாக நடந்ததா அல்லது இன்னும் பால்யத்தை விட்டு வெளியேறாமல் இருக்கிறதா உங்கள் படைப்பு மனம்?

இருக்கலாம். இவை அனைத்தும் என் ஆரம்ப கதைகள் தான். அதனால் ஒருவேளை அப்படி இருக்க வாய்ப்புண்டு. ஆனால் முதல் தொகுப்பிற்கு பிறகு வெளியான எந்தக் கதையும் அப்படியானதல்ல.

  1. பெண் கதைமாந்தாரின் கதைகளை(விடிவிப்பு, நகரிசொல்லும் போதும் பெண்களின் நுட்ப உணர்வுதளங்களை எழுத முடியாமல் போவதற்கு என்ன காரணமென்று உங்களால் யூகிக்க முடிகிறதா

தெரியவில்லை.

  1. நிழல் தேடும் பறவைகள் சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் பெண்ணாக மாறிப்போன தனது அப்பாவை கூடவே இருக்கச் சொல்லும் காட்சியை நினைவூட்டுகிறது, அதை போல உங்கள் படைப்பை ஒருபகுதியை பிற கலைவடிவிலோ அல்லது பிறர் படைப்பிலோ கண்டிருக்கின்றீர்களா? அப்படி கண்டறியும் போது நீங்கள் என்ன உணர்வீர்கள்?

இதே கேள்வி பலமுறை கேட்கபட்டுவிட்டது. நிழல் தேடும் பறவைகள் கதையை நான் பத்து வருடங்களுக்கு முன் எழுதினேன். அது புதுவைப் பாமரன் என்ற இதழில் வெளிவந்தது. அப்பொது அதை ஒரு குறுங்கதையாக மாற்றம் என்றத் தலைப்பில் எழுதியிருந்தேன். மீண்டும் அதை விரிவாக இந்த தலைப்பில் எழுதினேன். அக்கதைக்கூட படம் வெளிவருவதற்கு ஓராண்டுக்கு முன்பே பதாகையில் வெளிவந்தது. திரைப்படங்களில் இவ்வாறு எடுத்தால்வது இப்போது சகஜமான ஒன்று தான். சர்வசாதாரணமாக அவர்கள் அதை இன்ஸ்பிரேஷன் என்று சொல்லிவிடுகிறார்கள். எனது அமிலம் என்ற சிறுகதை வாசகசாலை இனைய இதழில் வெளிவந்தது. அதை ஒரு நண்பர் நாளைய இயக்குனருக்காக என்னுடம் அனுமதி பெற்று குறும்படமாக்கினார். ஆனால் அதை அப்படியே ஒரு பிரபல படத்தில் ஒரு காட்சியாக்கிவிட்டனர்.

  1. சிறுமிகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் அவளது திருமண வாழ்வை பாதிக்கும் என்ற பல்வேறு ஆய்வுகளும் அதை மையம் கொண்ட புனைவுகளும் வந்திருக்கும் நிலையில் உங்களது மௌனம் கலையட்டும் ஒரு சிறுவனுக்கு நடக்கும் வன்கொடுமையை பதிவு செய்கிறது. அவனது உளசிக்கல்களை பேசுகிறது, இந்த கதையின் கருவை நீங்கள் புனைவாக்கும் போது உங்களுக்கிருந்த சவால்கள் என்னென்ன?

உண்மையில் இது எனக்கு நடந்த ஒரு விஷயம் தான். இதை பகிரங்கமாக வெளிபடுத்த தயங்கவில்லை. நிச்சயம் இது போன்ற விஷயங்களைப் பதிவு செய்யவேண்டும் என்றே இதைக் கதையாக்கினேன். ஆனால் ஒவ்வொன்றையுன் நினைவுக்கூர்ந்து எழுதுவது தான் மிகக் கடினமானதாக இருந்தது. மீண்டு வந்த ஒரு கிணற்றுக்குள் மறுபடியும் குதிக்க வேண்டுமா என்ற தயக்கம் இருந்தது. இருந்தாலும் குதித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

  1. பிணந்தின்னிகள், பதிலடி போன்ற கதைகளில் நீங்கள் பூடகமாக பதிய விரும்புவது சாதிய ஏற்றத்தாழ்வுகளையா

நிச்சயமாக. சாதிய கொடுமைகளால் தலித் மக்கள் மட்டுமே பாதிக்கபடுவதாக பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். ஒருவகையில் அது உண்மை என்றாலும் ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு மேல் உள்ளவர்களார் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். பிணந்தின்னிகளில், பொருளாதார ரீதியில் எவ்வித உதவியும் செய்ய முன்வராத சொந்த சாதியினர், அடுத்தவர்களின் திருமண விஷயத்தில் தலையிட்டு அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதும், மற்ற சாதியினரைக் கொல்லத்துணிவதும் எவ்வகையில் நியாயம் என்று இதுவரை தெரியவில்லை.

  1. மைதானம் இந்த கதையின் மூலம் நீங்கள் சொல்ல வருவது நகரமயத்தின் சீரழிவையா அல்லது பருவமாற்றம், வெப்பமாதல் போன்ற பயங்கரத்தையா அல்லது அது மாபெரும் ஏரி புனைவு மட்டுமா?

அரசியலற்ற படைப்பை எப்போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எதாவது ஒருவகையில் சிறு அரசியலையாவதுத் தொட்டுவிடவே எப்போதும் முயல்வேன். சில சமயம் வித்தியாசமான கதைகள் அமையும் போது அதை சமரசம் செய்து கொள்வேன். மைதானம் கதை உலகமையமாக்களால், பன்னாட்டு நிருவனங்களால் கிராமங்களின் நீர் வளம் எவ்வாறு இல்லாமல் போய்விட்டது என்பதையே சொல்ல விரும்பினேன்.

  1. குப்பைகள் போன்ற சில கதைகளில் கதை வடிவத்தில் புதுமையை முயற்சி செய்திருக்கின்றீர்கள் நீங்கள் கதைக்காக வடிவத்தை தேர்தெடுப்பீர்களா அல்லது இந்த வடிவில் எழுத வேண்டுமென்று முடிவு செய்து விட்டு கதை களத்தை, கருவை யோசிப்பீர்களா?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இரண்டுமே நடக்கிறது. குப்பைகள் கதையைப் பொருத்தவரை முதலில் கதை தான் உருவானது. அதை நேர்க்கோட்டில் தான் எழுதினேன். அது எனக்கு திருப்தி தராததால் இரண்டு முறை மாற்றி எழுதினேன். பிறகே இவ்வடிவம் உருவானது. வடிவத்தை முதலில் தீர்மானித்தும் கதைகள் எழுதியுள்ளேன். ஆனால் அவை எதுவும் பதிலடி தொகுப்பில் இடம்பெறவில்லை. அடுத்தத் தொகுப்பில் வாரும்.

  1. மாயப்படகு இது நீங்கள் பனிரெண்டாம் வகுப்பில் எழுதியது என்று உங்கள் முன்னுரையில் சொல்லியிருக்கின்றீர்கள். இப்போது அதை மறு ஆக்கம் செய்ய வேண்டாமென்று முடிவு செய்தத்தற்கு உங்களால் அந்த பதின்வயதுக்கு திரும்பி சென்று எழுத முடியாதென்று நினைத்தது காரணமா

கண்டிப்பாக. என்னால் மீண்டும் அந்த வயதுக்குரிய மனநிலைக்குச் செல்ல முடியாது. வேலையினால் ஏற்படும் மன அழுத்தில் பாதிக்கப்பட்டுள்ளேன். சராசரியான ஒரு மனிதனுக்குரிய மனநிலையே இல்லாத போதுப் பதின்பருவ மனநிலைக்குச் செல்வது நிச்சயமாக இயலாதக் காரியம். அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன்.

  1. பாரீஸ் குறுநாவலில் பிரெஞ்ச் குடியுரிமைக்காக பெண்ணுக்கு பணம் கொடுத்து மணந்து கொண்டு பாரீஸ் போகின்றார்கள் என்பது கதைகளம் அந்த மனபோக்கு இப்போதும் இருக்கிறதா? பாரீஸ் குடியுரிமை கொண்ட பெண்ணை மணப்பதன் மூலம் பாரீஸுக்கு குடியேறி அங்கேயே தங்கிவிடும் பழக்கம் நிஜத்தில் இருக்கிறதா ? அதே போல அதில் குடியுரிமையுள்ள ஆண்களை மணந்து குடியுரிமை பெற பெண்கள் பெரிதாக விரும்பதில்லை என்பதில் ஏதேனும் உளவியல் காரணங்கள் உண்டா?

பாரிஸுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் இருபாலரிலும் இருக்கிறாகள். ஆண்கள் பணம் கொடுத்து திருமணம் செய்து கொண்டால், பெண்கள் இரண்டாம் தாரமாக செல்ல தயங்குவதில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது குறைந்துள்ளது. அதற்குக் காரணம், கட்டாயமாக பிரெஞ்ச் மொழி தெரிந்திருக்க வேண்டும், பிரான்ஸ் அரசின் பொருளாதார நிலை, அவர்கள் புதிதாகக் கொண்டுவந்திருக்கும் சில கட்டுப்பாடுகள் எனப் பிரான்ஸ்க்குச் செல்வது தற்போது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். ஆனால் இன்றும் அவ்வாறு நடக்கத்தான் செய்கிறது.

  1. பாரீஸ் நாவலிலும், சில சிறுகதைகளிலும் கதை களமான பாண்டிச்சேரியும் அதன் போதை வஸ்துகளும் நாவலில், சிறுகதையில் உபயோகபடுத்தியிருக்கும் கதைமாந்தர் சிலரின் வசனங்கள் முகம் சுளிக்க வைக்கும்படி அமைந்திருப்பதற்கும் ஏதேனும் சம்மந்தமிருக்கிறதா?

இந்த கேள்வி சற்று வருத்தமளிக்கிறது. மனிதர்கள் பல நிலைகளில் வாழ்ந்து வருகிறார்கள். மிக மேல்தட்டு நிலை முதல் மிக மிக கீழ் தட்டு நிலைவரை வாழும் மனிதர்களின் கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்கள் என அனைத்திலும் மிக அதிக அளவில் வித்தியாசம் இருக்கும். நீங்கள் கேட்டும் கேள்வி கீழ்தட்டு மக்கள் அதிக அளவில் கெட்ட வார்த்தகள் பேசுவது போலவும் பாண்டிச்சேரியில் இருப்பவர்கள் அதிக போதை மற்றும் குடிக்கு அடிமையானர்கள் போலவும் சொல்ல வருகறீர்கள் என்றுத் தோன்றுகிறது. உண்மையில் பாண்டிச்சேரிக்கு அதிகமாக குடிக்க வெளி மாநிலத்திலிருந்து தான் வருகிறார்கள். உழைப்பால் ஏற்படும் உடல் வலி மற்றும் மன அழுத்ததிற்காக குடிக்கும் கீழ்தட்டு மக்களை விட வெறும் போதைக்காக குடிக்கு மேல் தட்டு மக்கள் அதிகம். பப்களில் பயன்படுத்தப்படும் போதை வஸ்துகளை கீழ்தட்டு மக்கள் பார்த்தே இருக்கமாட்டார்கள். ஃபக் எனும் ஆங்கில வார்த்தை எந்த வகையில் காதுக்கு இனிமையான வார்த்தை என தெரியவில்லை.

அரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்

அறிமுக எழுத்தாளர் அரிசங்கர் மூன்று நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். மாயப்படகு இவரது பதின்ம வயதில் எழுதி சிறார் இதழொன்றில் தொடராக வெளிவந்தது என்று தனது முன்னுரையில் கூறியிருக்கிறார். பதிலடி என்ற சிறுகதைத் தொகுப்பு இதில் பதினாறு கதைகள் இருக்கின்றன. அதைத் தவிர பாரிஸ் என்ற குறுநாவலும் எழுதியிருக்கிறார்.

மாயப்படகு இது அவரது சிறுவயதில் எழுதப்பட்டதால் அந்த சாகச மனநிலைக்குரிய எழுத்துநடையும் ஊர் சுற்றும் சுவாரஸ்யமான அனுபவமும் நிறைந்திருக்கிறது. ஆனால் அந்த பதின்வயதில் அவரது கதாநாயகனை பற்றி ஒரு வரி அந்த நூலில் வருவது போலவே வயதுக்கு மீறிய அறிவு கொண்டவராக, சிறுவயது பாலகர்களுக்கு இளைஞராக வாழும் என்ற கனவு ஆகியவற்றின் காரணமாக கதை சொன்னபோது அவருக்கு இருந்த வயதிலும் அதிக வயதுடைய இளைஞனை கதைக்குள் கொண்டு வந்து சாகசங்களை நிகழ்த்தியிருக்கிறார். கூடவே குழந்தைத்தனமான கதாநாயக சாகசங்களும் இருக்கிறது. கல்மிஷமற்ற எல்லோருக்கும் இரக்கப்படும் குழந்தை மனது முழு நாவலிலும் பயணம் செய்கிறது.

பதிலடி சிறுகதைத் தொகுப்பிலுள்ள பதினாறு கதைகளுமே ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகளங்களை கதையம்சங்களை கொண்டவை. இவை அனைத்துமே சிறுகதை என்று வடிவத்துக்குள் பொருந்துகின்றன. இதுவரை பேசப்படாத கதைக்களங்களையும் கையாளுவதில் ஹரி சங்கர் சிறிது வெற்றி பெற்றிருக்கிறார். சமூக பிரச்சனைகளை, ஏற்றத்தாழ்வுகளை, அரசியல் பார்வைகளை, சீரழரிவுகளை கதையூடே சொல்லியிருக்கிறார். அவை எதுவும் வலிந்து திணிக்கப்படாமல் கதையோடு ஒட்டிவருவதே இந்த கதைகளின்  தனிச்சிறப்பு

புதுசட்டை கதையில் சிறுவயது பாலகனை அவனுடைய வறுமையை பயன்படுத்தி சுரண்டும் சுயநலம் பிடித்த உறவினர் கூட்டம் பற்றிய கதை என்று விலகி போய் விட முடியாது. தமிழ்நாட்டின் அரசியலை சினிமா எவ்வளவு பாதித்தது என்பது வரலாறு. அதே போலவே சின்னதிரையின் அறிமுகம்  பல்வேறு அரசியல் மாற்றங்களும் காரணமாகியதோ இல்லையோ, மக்கள் மனதை அது எந்த அளவுக்கு அடிமைபடுத்தி வைத்திருந்தது அதன் பொருட்டு இயங்கும் உளவியல் பிரச்சனைகளை பூடகமாக சொல்கிறது இந்த கதை. கரையும் நினைவுகள் ஒரு மாயத்தன்மையுடைய கதை போல இருந்தாலும், மருத்துவமனைகளில் நிகழும் நம்பத்தன்மையற்ற போக்குகளையும், அதன் பொருட்டு பாதிப்புக்குள்ளாகும் தாய், மகன் அவன் காதலி ஆகியோரது கதை. துருவங்கள் ஆண், பெண் உறுவு சிக்கலை பேசுகிறது. ஆண் மனம் ஆணாகவும் பெண் மனம் ஆண் மனதில் தெரியும் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். இவரது இந்த கதையில் மட்டுமல்லாது பிற கதைகளின் பெண் மாந்தர்களும் ஆண்மனதில் தெரியும் பெண் சித்திரங்களாகவே இருப்பது வியத்தகு உண்மை.

வாசனை நுட்பமான கதைக்களம். கணவன் உடலில் ஒவ்வாத வாசனையை உணரும் பெண்ணின் உளசிக்கலாக விரியும் இந்த கதை இறுதி சில பத்திகளில் கதையின் பரிமாணம் பிறன்மனை நோக்கின் பொருட்டு எழுந்த சிக்கலாக மாறி போகிறது. இந்த கதையின் தொடக்கம் மையம் இவை முன்னர் சொன்ன கருத்தை இன்னும் வலுவானதாக பேசியிருந்தால் இன்னும் சிறப்பான கதையாக அமைந்திருக்கும். திருடர்கள் கதையில் காலகுழப்பம் கொஞ்சமிருந்தாலும், சிறுவயது பாலகர்களை பணிக்கு நிமித்தல் அவர்களுக்கு என்னவிதமான மனகுழப்பங்களையும், சிறுவர்கள் மனதில் கசடையும் எப்படி உறுவாக்க கூடும் என்பதை சொல்லும் சிறப்பான கதை.  

தொகுப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கதைகளில் ஒன்று மௌனம் கலையட்டும், சிறு வயதில் பாலியல் துன்புறுத்துதல்களுக்கு உள்ளாகும் சிறுமிகள் பற்றிய பலகதைகளும் அவர்களின் உளவியல் சிக்கல்களும், திருமண வயதடையும் போது உண்டாகும் மன உளைச்சல் பற்றியும் பல பதிவுகளை படித்திருத்திருக்கிறோம். சில இளைஞர்களால், சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று சொல்லும் கதையை நான் இதுவரை படித்தது இல்லை. பாம்பு என்ற உருவகத்தில் வரும் நினைவும் அந்த நினைவின் பொருட்டு அலைகலிப்பும், பயமும் மிக அழகாக பதிவாகியிருக்கின்றன. அந்த கதையில் அந்நிகழ்வின் பின்னர் கதைசொல்லி காலில் முள் தைப்பதை உணர முடியாத வேகத்தோடு கண்மண் தெரியாமல் ஓடிவரும் பாலகனாக சித்திரக்கப்பட்டிருப்பார். இந்த சித்தரிப்பு அந்தருணத்தின் வலியை சொல்லாமலே உணர்த்திவிடுகிறதுகதையின் முடிவை மட்டும் கொஞ்சம் செழுமையாக்கியிருக்கலாமென்று எனக்கு தோன்றியது

விடிவிப்பு சமூகத்தின் கீழ்தட்டிலிருக்கும் பெண்களின் சிக்கல்களை பேச முற்பட்டிருக்கிறது. ஒரு பெண் தனியாக வேலை தேடும் பொருட்டு நின்றிருந்தால் ‘அங்கே வா’ என்று சொல்லி அழைத்து போய் வலுகட்டாயமாய் கலவி கொள்ள வேண்டுமென்ற மனநிலையில் இயக்கும் ஒரு மனநிலையுள்ள ஆண்மகனும், இன்னது அன்னது என்று காரணமே இல்லாமல் மனைவியை எதற்கெடுத்தாலும் அடித்து துவைக்கும் கணவன், அவள் கற்பு நிலையின் மீது கலங்கம் கற்பிப்பவனை அடித்து அதன் பொருட்டு அடிபடவும் தயாராக இருக்கும் மனநிலையுள்ள இன்னொரு ஆண்மகனும் என்று சமூகத்தின் முரண் மனநிலையை பதிவு செய்கிறது. பெண்களுக்கு எதிரான எல்லா குற்றங்களுக்கும் இந்த முரண் மனநிலையே காரணம் என்று நாம் ஆராய சிறு திறப்பை இந்த கதை ஏற்படுத்துகிறது.

நகரி மற்றொரு சிறப்பான கதையாகி இருக்க வேண்டிய கதை. மிகச்சிறப்பாக தொடங்குகிறது, மிக சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிறுவயதில் கதாநாயக பாவத்துடன் பார்க்கப்படுவரையே இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் நாயகி, அவளது கற்பனை பிம்பம் எப்படி சிதைகிறது, பொருந்த மணம் அவளை எப்படி பாதிக்கிறது என்பதை எழுதும் வாய்ப்புகளை தன்னுள்ளே வைத்திருக்கும் கதை. நிழல் தேடும் பறவையும் அதே போல மிக கனமான களம் இதில் கதைசொல்லியின் மன அழுத்தங்களை பதிவு செய்திருக்க வேண்டும். கணவன் இறந்து போக தனது கணவனுடன் பிறந்த திருநங்கையை மணக்க நேரிடும் பெண்ணை பற்றிய கதைகள் இதுவரை வந்திருக்கிறதா தெரியவில்லை. ஆனால் கதாநாயகியின் வலி பெருளாதாரம் சார்ந்தது என்பதோடு சுருங்கிவிடுகிறது. அந்த திருமணத்திற்கு பின்னர் அவள் அடையும் உளசிக்கலை பேசும் சாத்தியமுடைய கதை. அவ்வாறு பேசப்பட்டிருந்தாலும் இது மிகவும் வலுவான கதையாக மாறியிருக்கும் இருப்பினும் மிக சிறப்பானதொரு கதை களம்

புயல் கதையும் தன்னளவிலான சமூக அவலங்களை பதிவு செய்திருக்கிறது. கதையில் அப்பா மகள் உறவு சார்ந்த பதிவுகளை ஹரி சங்கர் எளிதாக சேர்த்திருக்க முடியும். அப்படி செய்திருந்தால் இந்த கதையின் கனம் இறுதியில் கூடியிருக்க வாய்ப்புகள் அதிகம். பிணந்தின்னிகள் கதையில் சாதிய ஏற்றதாழ்வுகள் பதிவு செய்கிறது. ஆயினும் சின்னய்யா வெட்டியான் என்பதை பதிவு செய்ய புஷ்பநாதன் என்ற கதாபாத்திரமும் அவரது மனைவியின் இறப்பும் கதைக்குள் அவ்வளவு விரிவாக பதிவாகியிருப்பது எதற்காக என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதை கதையில் வடிவயுத்தி என்று சொல்லலாமா என்பதில் எனக்கு குழப்பமிருக்கிறது. இவரது பிற கதைகளான செஞ்சிறை, குப்பைகள் போன்ற கதைகளிலும் கதையின் மைய ஓட்டத்துக்கு பொருந்தாக காட்சி கதை தொடக்கத்தில் விரிவாக பதிவாகிறது. இது கதையின் இறுக்கத்தை ஒருவித்தத்தில் பாதிக்கிறதென்றே சொல்ல வேண்டும். செஞ்சிறை கதையிலும் முதல் பத்தியிலேயே இறந்து போகும் புருஷோத்தமன் எப்படி கொல்லப்பட்டார் என்பதற்கான சித்திரம் இவ்வளவு விரிவாக தேவையா என்ற கேள்வியுண்டு எனக்கு. ஏனென்றால் கதையின் களம் வேறு. இந்த கொலையின் பொருட்டு சந்தேகத்தின் பெயரில் சிறை செல்லும் கற்பிணியின் கதை. அந்த பெண்ணின் அல்லலும், காவல்துறையின் மெத்தனம், கரிசனமற்ற போக்கு இதுவே களம். இது ஓரளவு சிறப்பாக பதிவாகியிருக்கும் போது கொலையான புருஷோத்தமனின் கொலை சம்பவம் விரிவாக எழுதப்பட வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

மைதானம் தொகுப்பின் மிக சிறந்த கதை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதையில் சின்ன சின்ன வடிவ குளறுபடிகள் இருந்தாலும் மிக சிறப்பான கதையிதுஇதில் வரும் சிறுவனுக்கும், வயதான பெரியவருக்குமான உரையாடல் மிக அழகானது. பெரியவர் கண்ட ஏரி தற்காலத்தில் பிள்ளைகள் விளையாடும் மைதானமாக மாறியது பல நீர்நிலைகளை நாம் இழந்ததன் சாட்சிபதிவு. சூழல் சார்ந்த அக்கரையுடைய யாரையுமே கொஞ்சம் அதிர்வடைய செய்யும் கதை. உலக வெப்பமயமாவதும், பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருட்களால் சூழல் சீரழிவது அதை அறியாத பேதைகளாக நாம் வாழ்வதும், நம் சந்ததி இப்படி சீரழிகிறதே என்ற முந்திய தலைமுறையினரின் ஆதங்கமும், கேவல்களும் ஒருமித்து ஒலிக்கும் குரல் இந்த சிறுகதை.

குப்பைகள் சமூக ஏற்றதாழ்வுகளை ஒரே வாக்கியத்தில் சொல்லி அதிர்வடைய செய்யும் கதை குப்பையில் வீசப்படும் புழு வைத்த அரிசி பொட்டலத்தை வாங்கிக் கொள்ளும் துப்புரவு பணியிலிருக்கும் பெண் கழுவிட்டு வடிச்சா சோறு, அப்படியே பண்ணா பிரியாணிஎன்ற வாக்கியம் ஏற்படுத்தும் அதிர்வு கதை முழுவதும் கூடவே வருகிறது. ஆனாலும் இப்படி எழுதியதற்கு சம்மந்தப்பட்டவர் கண்ணில் பட்டால் மிகப்பெரிய சர்சையில் சிக்குவதற்கான எல்லா வாய்ப்புகளையும் கொண்ட கதை. பதிலடி கதையும் சமூக ஏற்றதாழ்வையும், சாதிய வெறுப்பு மனநிலையையும் பதிவு செய்யும் கதை. தொடுத்தல் மாற்று திறனாளிகள் பற்றிய கதை.

இவரது பாரிஸ் குறுநாவல் இரண்டு மூன்று மணிநேரத்தில் விறுவிறுவென்று வாசிக்கக்கூடிய குழப்பமே இல்லாத நடை. வித்தியாசமான கதைகளம். மூன்று தனித்தனி இழையாக விரியும் கதை அவை ஒன்றுகொன்று மிக அழகாக இணைந்து பின்னலாக மாறியிருப்பது மிகத்தேர்ச்சி பெற்ற கதை சொல்லும் முறை. இதுவரை நாம் அறியாத பாண்டிச்சேரியை காட்டியிருக்கிறார் ஹரிசங்கர்.

கதை சொல்லும் முறையில் முன்னர் நடந்ததை பின் கூறி அல்லது பின்னர் நடக்க இருப்பதை முன்னமே சொல்லி அடுத்தடுத்த அத்தியாயங்களை இணைக்கவோ அல்லது நவீன முறையின் கதைசொல்லும் யுத்தியென நினைத்தோ சில விஷயங்களை செய்திருப்பது இதுவரை பிற புனைவுகளில் நான் காணாத ஒன்று.

 

காட்சி சித்தரிப்புகள், கதாபாத்திர விபரணைகள் எல்லாம் மிக நேர்த்தியாக செய்திருப்பது இந்த நாவலில் மற்றொரு முக்கிய அம்சமாக குறிப்பிடலாம். நாவலை வாசித்து முடித்த பின்னர் அசோக், கதிர், ரஃபி, கிரிஸ்டோ போன்ற கதாபத்திரங்கள் நம் முன் உலவி வர அந்த கதாபாத்திர வர்ணனைகள் உதவுகின்றன.

கதை நிகழும் நிலம் சார்ந்த வர்ணனைகள் இன்னும் கொஞ்சம் சேர்த்திருந்தால் இன்னும் வலுவான நாவலாக இது மாறியிருக்கும். அதே போல சில விஷயங்கள் நாவலுக்கு வலுசேர்க்கவில்லையோ என்றும் தோன்றியது. அதையெல்லாம் நீக்கி, இன்னும் கொஞ்சம் செழுமையாக்கியிருந்தால் இது ஒரு அபாரமான படைப்பாக மாறியிருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை.

ஒட்டுமொத்தமாக ஹரிசங்கர் படைப்புகளை ஆராயும் போது இவரது படைப்புகளில் கதைமாந்தர்களில் சிறுவர்கள் அதிகமிருக்கின்றர்கள். சிறார் நாவலும் எழுதியிருக்கிறார் ஆகவே இவரது படைப்பு மனம் இன்னும் இளம்பிராயத்து சம்பவங்களை பதிவு செய்து முடிக்கவில்லை அல்லது அந்த பால்ய உலகத்து கனவு, சுவாரஸ்யங்களை இழக்க விரும்பவில்லை என்று சொல்லலாம். அதே சமயம் பாரீஸ் நாவலில் முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் பதிவாகி படைப்பாளி சமகாலத்தில் இயக்கும் கலகமனம் கொண்ட இளம்படைப்பாளாகவும் தெரிகிறார்.

படைப்புலகின் நிலப்பரப்பு பெரும்பாலும் பாண்டிச்சேரியாக இருக்கிறது. ஆனால் அதன் நிலக்காட்சிகள் குறைவாக இருக்கிறது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் டூபிளக்ஸ் சிலை என்று ஒரு சிலையை பற்றிய பதிவு அவரது கதை மற்றும் நாவல் இரண்டிலும் வருகிறது. பாண்டிச்சேரியை பற்றி அறிந்தவர்களுக்கு அது உடனடியாக புரியக்கூடும் ஆனால் அந்த சிலை எப்படியிருக்கும் என்ற வர்ணனையிருந்தால் வாசகர்களுக்கு கதையுடன் இணக்கமாகும் வாய்ப்புகள் அதிகம். இப்போது அது அழகான பெயருடைய சிலை என்பதாக மட்டும் நின்றுவிடுகிறது. மிக குறுகிய காலத்திலேயே சிறார் நாவல், சிறுகதை, குறுநாவல் என்று பல்வேறு இலக்கிய வடிவங்களின் தீவிரமாக இயங்கும் ஹரி சங்கருக்கு வாழ்த்துகள்.

தொலைந்துப் போய்க் கொண்டிருக்கிறேன்- அரிசங்கர் சிறுகதை

அரிசங்கர்

என்னிடம் பேச வேண்டும் என்று அவன் காலையிலேயே சொல்லிவிட்டான். சரி, மாலை என்னுடன் வீட்டுக்கு வா பேசலாம் என்று அவனிடம் சொல்லி அவனை அமைதிப்படுத்தினேன். அவன் மிகவும் ஆவேசமாக இருந்தான். எதாவது செய்தே ஆக வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தான். அதை என்னால் துல்லியமாக உணரமுடிந்தது. ஆனால் என்னால் என்ன செய்ய முடியும். இருந்தாலும் அவன் என்னிடம் பேச நினைத்ததை நினைத்து நான் கொஞ்சம் திருப்தி அடைந்தேன். அவனைச் சமாதானப்படுத்தலாம். அவன் ஆவேசத்தைக் கொஞ்சம் குறைக்கலாம். இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தலாம். இந்த வேலையை விட்டுவிட்டால் அடுத்தது என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் புரியவைக்கலாம். அதற்காகவே அவனை மாலை வீட்டுக்கு அழைத்தேன். நான் வீட்டுக்கு அழைத்ததும் அவன் கொஞ்சம் சமாதானம் அடைந்தான். தன் மீதி வேலையில் கவனத்தை செலுத்தினான். அப்போதிலிருந்து இருவரும் மாலைக்காகக் காத்திருந்தோம்.

கடினமான ஒரு வேலை நாளில், மனம் மிகவும் சோர்ந்து, குழப்பத்துடன் இருக்கும் போது, அதுவும் பிடிக்காத இடத்தில் அமர்ந்துகொண்டிருக்கும் போது பிற்பகலில் இருந்து மாலை வரைக் காத்திருப்பது என்பது எவ்வளவு கடினமான ஒன்றாக இருக்கிறது. மூன்று மணியிலிருந்து ஆறு மணி வரை. வெறும் மூன்று மணி நேரமாக இருக்கலாம். ஆனால் அது வெறும் மூன்று மணி நேரமல்ல, நூற்று என்பது நிமிடங்கள். அப்படிக்கூட அல்ல அது மிக நீண்ட பத்தாயிரத்து எந்நூறு நொடிகள். ஒவ்வொன்றாக என்ன வேண்டும். பத்தாயிரத்து எந்நூறு வரை எண்ணி முடித்துப்பார்த்தால் அரை மணி நேரம் தான் கடந்திருக்கும். இது பிடிக்காத சினிமாவில் அமர்ந்திருப்பது போல் அல்ல. வேலைக்காகக் காத்திருப்பது போல் அல்ல. பிரசவத்திற்குக் காத்திருப்பது போல் அல்ல. இது மூச்சு விடுவதற்காகக் காத்திருப்பது. நிம்மதியான ஒரு நீண்ட பெருமூச்சுக்காக. அப்போது கிடைக்கும் ஒரு விடுதலைக்காக. ஏதோ ஒன்று நம்மிலிருந்து விடைபெற்றுப் போகும் அந்தத் தருணத்திற்காக காத்திருப்பது. அதெல்லாம் ஒரு சில நொடிகளில் நடந்துவிடக் கூடியது தான். ஆனால் அதற்காகத் தான் இந்தப் பத்தாயிரத்து எந்நூறு நொடிகள்.

அலுவலகம் விட்டு வெளியே வந்ததும் ஏற்படும் விடுதலை உணர்வை எப்போதும் நான் ரசிப்பேன். அதிகப்படியாகத் துடித்துக்கொண்டிருந்த இதயம் சீராக துடிக்கத் துவங்கும். அதன் பின் எனக்கு எந்த பரபரப்பும் இருக்காது. விரைவாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வெல்லாம் கிடையாது. வெளியே வந்துவிட்டோம், அவ்வளவு தான். இனி மெதுவாக நடந்து சென்று பேருந்து பிடித்து வீட்டுக்குச் செல்லலாம். இன்று அவனும் என்னுடன் இணைந்துகொண்டான். இருவரும் எதுவும் பேசவில்லை. பொதுவாக நாங்கள் எப்போதும் தனியாக தான் பேசுவோம். அவன் என்னுடன் அமைதியாக நடந்துவந்தான். இருவரும் பேருந்துக்காக காத்திருந்தோம். தெரிந்த ஒன்றிரண்டு அலுவலக நண்பர்கள் பேருந்துக்காக காத்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும் லேசாக ஒரு வாடிய புன்னகையை வீசினார்கள். என்னிடமும் வாடியதே இருந்தது. கவலை, சோர்வு, எரிச்சலில் புன்னகைப்பதே ஒரு அதிசயம் தான். நான் அவனைப் பார்த்தேன் அவன் யாரையும் பார்த்த மாதிரியே தெரியவில்லை. அவர்களும் அவனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

பேருந்து ஒரு பக்கம் சாய்ந்தவாறே வந்து நின்றது. இன்னும் ஐம்பது பேருக்கு அதில் இடமிருந்தது. நாங்களும் அதில் தொற்றிக்கொண்டோம். அடுத்த பேருந்துக்காக சிலர் நின்றுவிட்டனர். நான் சிரித்துக்கொண்டேன். அடுத்ததும் இப்படித்தான் வரும். அதற்கடுத்ததும், அதற்கடுத்ததும். என்னைப் பெருத்த வரை இது ஒரு கூட்டமே அல்ல. பையில் இருந்த சில்லறையை எடுத்து இரண்டு டிக்கெட் வாங்கினேன். பலமுறை நான் இரண்டு டிக்கெட் வாங்கியிருக்கிறேன். இதுவரை ஒரு முறை கூட எந்த நடத்துனரும் மற்றொருவர் யார் எனக் கேட்டதேயில்லை. வேலை நாட்களின் மாலை நேரத்தில் தேனாம்பேட்டையிலிருந்து சைதாபேட்டை என்பது ஒரு நீண்ட பயணம் போன்றது. தேனாம்பேட்டையில் பேருந்து ஏறும் போது வானத்தில் இருந்த சிறு வெளிச்சம் சைதாபேட்டையில் காணாமல் போயிருந்தது. மெட்ரோவால் அகலமாகியிருந்த சாலையைக் கடக்க வழக்கத்துக்கு மாறான நேரத்தை எடுத்துக்கொண்டாலும் முன்பு இருந்த வாகனங்களின் நெரிசல் இப்போது இல்லை. மணி அதற்குள் ஏழாகிவிட்டிருந்தது. இருவரும் கலைஞர் ஆர்ச் பக்கத்துத் தெருவில் வழியாகச் சென்று அம்மா மெஸை அடைந்து இரவு உணவை முடித்துக்கொண்டோம். வயிற்றில் பாரம் ஏறியதும், மனதிலிருந்த பாரம் சிறிது குறைந்தது போல் இருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். அவன் முகம் முன்பு போல் இல்லை. கொஞ்சம் தெளிவாகத்தான் இருந்தது.

மெதுவாக நடந்து வீட்டை அடைந்தோம். இரண்டாவது மாடியில் இருந்தது வீடு. இருவரும் உள்ளே நுழைந்தோம். அவன் செருப்பை கழட்டிவிட்டு அப்படியே முன்பக்கதில் சென்று வேடிக்கை பார்க்க துவங்கினான். நான் மட்டும் உள்ளே சென்றேன்.

“அவனை ஏன் கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்றாள் அவள். நான் திரும்பிப்பார்க்காமல் பதில் சொன்னேன்.

“அவன் கொஞ்சம் பிரச்சனையில் இருக்கான், அவன சமாதானப்படுத்தத் தான்.” என்றேன்.

“இங்க யாரையுமே கூட்டிட்டு வரக்கூடாதுன்னு சொல்லிருக்கன்ல” என்றது குரல்.

நான் அமைதியாக இருந்தேன்.

“கம்முன்னு இருந்தா என்ன அர்த்தம்”

“சரி நாங்க வெளிய படுத்துக்கறோம்.” என்று சொல்லிவிட்டு உடைகளை மாற்றிக்கொண்டு, படுக்கையைத் தூக்கிக்கொண்டு வந்து படுத்தேன். சிறிது நேரம் கழித்து அவன் என் அருகில் வந்து படுத்தான். இருவரும் வானத்தையே வெறித்துகப் பார்த்துக் கொண்டிருந்தோம். நான் தான் முதலில் துவங்கினேன்,

“இப்ப என்ன பண்றதா உத்தேசம்”

“வேற வேலை தான் பாக்கணும், இனிமே இங்க குப்பக்கொட்ட முடியாது.”

“சரி, இப்ப உனக்கு யார் வேலைத் தர தயாரா இருக்கா”

“ஏன், எனக்கென்ன? பதனஞ்சி வருஷ அனுபவம் இருக்கு, எங்க போனாலும் கிடைக்கும்”

“ஆப்படினு யார் சொன்னா? போய் நெட்ல தேடிப்பாரு, ஆயிரம் வேலை இருக்கு, ஆனா எவனும் பத்து வருஷ அனுபவம் வேணும்னு கேக்கல. இரண்டு மூனு வருஷம் இருந்தா போதும் தான் சொல்றான். அவனால அவனுக்குத் தான் சம்பளம் தர முடியும்.”

“ஏன் இப்ப இங்க நான் வாங்கலையா”

“வாங்கற அதனால தான் உன்ன தொறத்த இதெல்லாம் செய்யறானுங்க. உனக்குப் பதில் மூனு இல்லானா நாலு பேருக்கு உன் சம்பளத்த தரலாம்.”

“அப்படினா, என்ன மாதிரி இருக்கறவன்லாம் எப்படி வாழறது. தீடிர்னு போவ சென்னா, வேற எவனும் எடுக்க மாட்டன்னு சொன்ன, இந்த வேலைய நம்பி கடன் வாங்கி, வீடு வாங்கி, கல்யாணம் பண்ணி, பசங்கள நல்ல பள்ளிக்கூடத்துல சேர்த்து அப்பாடானு நிமிர்ந்து பார்க்கும் போது வெளியப்போடானு சொன்ன, என்ன பண்றது”

“அது எனக்கும் தெரில, ஆனா ஒண்ணு, இப்போ இந்த வேலைய விட்டுட்டா, அவ்ளோ தான். வேற வேலை தேட ஆரம்பிச்சாதான் உனக்கு நான் சொல்லவரது புரியும்.”

“என்ன இந்த வேலைய விட்ட வாழவே முடியாதுனு சொல்றீயா”

“நான் அப்படி சொல்லல, இந்த மாதிரி வாழ முடியாது.”

அவன் பலமாக சிரித்தான், “இப்ப என்ன ராஜ வாழ்க்கையா வாழறோம்”

“மாசக்கடைசிலயும் பட்டினி கெடக்காம இருக்கல, எதனா அவசரம்னா கிரிடிட் கார்ட் வெச்சிருக்கல. அதெல்லாம் இங்க இருக்கறதுனால.”

“ஆனா நீ நிம்மதியா வாழறியா, நிம்மதியா தூங்கறியா, நீ படுத்து இரண்டு மணி நேரம் ஆவுது ஏன் இன்னும் உனக்குத் தூக்கம் வரல”

நான் அமைதியாக இருந்தேன். மீண்டும் வானத்தையே வெறித்துக்கொண்டிருந்தேன். போலியான ஒரு பிரகாசத்தை நம்பி இன்னும் எத்தனைப் பேர் இப்படி அகப்படப் போகிறார்கள். இதை விட்டுப் போக நினைத்தால் முட்டாள் என்கிறார்கள். மீண்டும் பறக்க முடியாத ஒரு வலையில் போய் சிக்கிக்கொண்ட பறவையை போல் ஆகிவிட்டது. ஏதேதோ கற்பனைகள் ஓடிக்கொண்டே இருந்தது. எப்போதாவது எட்டிப்பார்க்கும் தைரியத்தியும் வாங்கிய கடன்களும், இருக்கும் கடமைகளும் பயமுறுத்தியது. நான் மீண்டும் அவனிடம் பேசவில்லை. அவன் பக்கம் கூட திரும்பிப் பார்க்கவில்லை. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. விழிப்பு வந்த போது விடிந்திருந்தது.

எழுந்து அமர்ந்து சுற்றிப்பார்த்தேன். என் அருகில் அவன் இல்லை. எழுந்து உள்ளே சென்றேன். உள்ளே அவளும் இல்லை. எனக்குத் தெரியும் இருவரும் இருக்க மாட்டார்கள் என்று. படுக்கையை ஓரமாக வைத்துவிட்டு என் அறையை ஒரு முறை சுற்றிப்பார்த்தேன். ஒரே அறை. சில ஆடைகள், சில பொருட்கள், சில புத்தகங்கள். அதை இப்போதெல்லாம் படிப்பதில்லை. படிப்பதினால் தான் உன்னால் வேலை செய்ய முடியவில்லை என சில அறிவுஜீவிகள் அலுவலகத்தில் சொல்ல அதையும் விட்டு எறிந்தாகிவிட்டது. மொத்தமாகக் கட்டினால் ஒரு மூட்டைக்குள் அடைத்துவிடலாம். யோசனைகளை விட்டு துண்டை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றேன். இரண்டு முறை தண்ணீரை வாரி ஊற்றிவிட்டு மீண்டும் ஏதோ யோசனையில் ஆழ்ந்தேன். செய்யும் செயலைவிட யோசனைகள் வர வர அதிகரித்துக்கொண்டிருந்தது. ஒரு வழியாகக் குளித்துவிட்டு அறைக்கு வந்தேன். அறைக்குள் வீட்டுக்காரப் பாட்டி அமர்ந்திருந்தாள். நான் ஒரே ஒரு துண்டு தான் அணிந்திருந்தேன். உள்ளே அவளைப் பார்த்ததும் வெளியே கொடியில் இருந்த ஒரு கைலியை எடுத்து அணிந்துகொண்டு துண்டை மார்பில் போர்த்திக்கொண்டு உள்ளே சென்றேன்.

என்னைப் பார்த்ததும் லேசாகச் சிரித்தாள். பதிலுக்கு நானும் சிரித்து வைத்தேன்.

“உன் கூட கொஞ்சம் பேசனும்ன்னு வந்தேன். வேலைக்கு கிளம்பிட்டியா”

“இல்லை இன்னும் நேரம் இருக்கு”

“உடம்பு எதனா சரியில்லையாபா”

“இல்லையே, நல்லாதான இருக்கன்”

“இல்ல முந்தா நேத்து உன்ன அந்த முக்கு கிட்ட பாத்தேன். தனியா பேசிக்கிட்டே போன, சரிப் போன் பேசறனு நினைச்சி விட்டுட்டன். நேத்து ராத்திரி மாடிப்பக்கம் வந்தா நீ வெளிய படுத்துகிட்டு தனியா பேசிகிட்டு இருந்த, அதான் கேட்டன்”

நான் அமைதியாக இருந்தேன்.

“தப்பா எடுத்துக்காத, நாப்பது வயசாக போது ஒரு கல்யாணம் பண்ணிக்கலாம்ல”

நான் லேசான சிரித்து வைத்தேன். அதில் இருந்த விரக்தியை அவள் உணர்ந்திருக்க வேண்டும்.

“அதுக்கில்லபா துணை இருந்தாதான் ஒரு பிடிப்பு இருக்கும் அதான் சொன்னேன்.”

நான் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தேன்.

“சரி, ஏன் தனியா இருக்க, கூட யாருனா பசங்கள சேத்துக்கலாம்ல”

நான் அதற்கும் பதில் சொல்லவில்லை. அதன் பிறகு அவள் என்ன சொன்னால் என எதுவுமே என் காதில் விழவில்லை. நான் வழக்கம் போல் என் யோசனையில் ஆழ்ந்திருந்தேன். சட்டென திரும்பிப் பார்த்த போது அவள் அங்கு இல்லை. எப்போது போனார் எனத் தெரியவில்லை. வேகமாக உடைகளை மாட்டிக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு படிகளில் இறங்கும் போது வீட்டுக்காரர் நின்றிருந்தார். அவரைக் கடக்கும் போது வழி மறித்தார்,

“சார் ஒரு நிமிஷம்”

“சொல்லுங்க”

“அடுத்த மாசம் ரூம காலி பண்ணிருங்க”

நான் அமைதியாக நின்றிருந்தேன். அவர் ஏதோ விளக்கம் சொல்ல துவங்க, நான் ‘சரிங்க’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். அவர் தன் மனைவியிடம் சொல்வது காதில் விழுந்தது.

“பைத்தியக்காரன், எதனா பண்ணிக்கினா யார் அலையறது”.

நான் மெதுவாக நடந்துகொண்டிருந்தேன். இல்லை தொலைந்துப் போய்க்கொண்டிந்தேன்.

 

 

ஆள்மாறாட்டம் – அரிசங்கர் சிறுகதை

அரிசங்கர்

 எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். எதுக்கு இவனுங்க தெனிக்கும் என் முன்னாடி வந்து நிக்கறானுங்க. இவனுகளுக்கு வேற வேலையே இல்லியா… ஒரு வேலை நம்பள மாதிரியா… அதுலயும் அதோ நிக்கறானே ஒருத்தன். அவன பாத்தாதான் எனக்கு செம காண்டா ஆவுது.

நான் சொல்றத அப்படியே நல்லா கற்பனை பண்ணிக்கங்க. நல்லா தூங்கினு இருப்பேன். அதுவும் குளுர்காலம். காலங்காத்தால வந்து டக்குனு லைட்ட போடுவான். கஷ்டப்பட்டு கண்ண தொறப்பேன். பாத்தா இவன்தான் நிப்பான். நைட் லேட்டாத்தான் போவான். ஆனா வரும் போது பிரஷ்ஷா வருவான். சரி ஒழிஞ்சி போவட்டும் லைட் இருந்தா இன்னானு கண்ண மூடுனா, டபால்னு இருக்கற ஒரு துண்டையும் உருவி டப்புனு தண்ணிய வாரி தலையில் ஊத்தி வுட்ருவான். அதுவும் அந்த குளுருக்கு அந்த தண்ணி அவ்ளோ ஜில்லுனு இருக்கும். எழுந்து போய் அவன் கழுத்தாப் பட்டையிலயே வக்கலாமானு தோணும். ஒருவேளை நான் எழுந்து வரமாட்டன்னு அவனுக்கு தெரிஞ்சிதான் இதெல்லாம் பண்ணாறானானு தெரில எனக்கு. அப்பறம் இன்னாத்தையோ மேல வாரிக்கொட்டி தெச்சி இருக்கற கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் ஓட்டி விட்ருவான். இதுல இவுரு பாட்டு பாடாம வேலை செய்ய மாட்டாரு. நடுவுல இன்ஸ்ட்ருமெண்ட் மியூஸிக் வேற.

ஒரு வழியா அவன் வேலையெல்லாம் முடிச்சிகினு ஒழிவான்னு கம்முனு இருப்பேன். நம்ம முன்னாடி வகைவகையா பலகாரமா இருக்கும். சரி இவன் போவட்டும் துன்னலாம்னு ஆசையா இருப்பன். எல்லாம் முடிச்சி டபால்னு கதவ தொறந்தா மறுபடியும் நான் மொதல்ல சொன்னல அவனுங்க வந்து என் மூஞ்சியயே உத்து உத்து பாப்பானுங்க. அப்படி இன்னாதான் நம்ம மூஞ்சில இருக்கு தெரில. வரீசையா வந்து வந்து பாத்துட்டு பாத்துட்டு போவானுங்க. அப்பப்ப ஒன்னு ரெண்டு லூசுங்க என் காதுல உழற மாதிரி எதுனா பேசுங்க. அதுங்க மட்டும் தான் நமக்கு இருக்கற ஒரே டைம்பாஸ். இவனுங்கல பாக்க வெச்சிட்டு எப்படி திண்றதுனு ஒரு டீசண்ட்டுக்காக கம்முனு இருப்பன். ஆனா அவனுகளுக்கு அந்த டீசண்ட் சுத்தமா இருக்காது. எல்லாத்தயும் தூக்கினு போய் பங்கு போட்டு திம்பானுங்க. நானும் இப்ப வரைக்கும் கடைசியா மிஞ்சற வாழப்பழத்த தின்னுட்டு காலத்த ஓட்டறன்.

மழை வந்தாதான்பா இந்த இம்சைங்க கிட்டருந்து கொஞ்சம் நிம்மதி. ஃப்ரியா இருக்கலாம். அப்பகூட தனியாலாம் இருக்க முடியாது. எதுனா ஒன்னு வந்து முன்னாடி உக்காந்துகினு நம்ம மூஞ்சியயே பாத்துகினு இருக்கும். திடீர்னு அழுவும். நமக்கும் ரொம்ப பாவமா இருக்கும். அதுக்கு நான் இன்னா பண்ண முடியும் சொல்லுங்க. இப்படியேதான்பா நம்ம லைப் போகும். என்ன மாதிரி ரொம்ப பேர் இருக்காங்கபா. அதுலயும் பணக்கார பசங்களும் இருக்காங்க. அவனுங்க அலும்பலு தாங்க முடியாதுபா.

இன்னாடா இது லைப் ஒரே போரா இருக்குனு படிக்கற உங்களுக்கே இவ்ளோ காண்டா இருக்குதே. எனக்கு எவ்ளோ காண்டா இருக்கும். ஆனா லைப் எப்பவுமே இப்படியே இருக்காதுபா. ஒருநாள் நம்பளுக்கும் த்திரில்லிங்கா’ எதுனா நடக்கும். நாம அதுக்குலாம் பயந்துக்கக் கூடாது. அதல்லாம் அப்படி அப்படியே எஞ்ஜாய் பண்ணனும். எனக்குகூட இப்டி ஒண்ணு நடந்ததுப்பா. அத்த சொல்லத்தான் வாயெடுத்தன். ஆனா இன்னான்னாவே ஒளரிகினு இருக்கன். சொல்லறன் கேளேன்.

இப்படி ஒருநாள் ராத்திரி அவன் வந்தான். அவந்தான் காலங்காத்தால தலைல தண்ணிய வாரி ஊத்துவானே, அவனேதான். எப்பவுமே தனியாத்தான் வருவான். அன்னிக்கினு பாத்து ஒரு கேங்கோட வந்தான். வந்த எவனும் புது ஆளுங்கலாம் இல்ல. அடிக்கடி வரவனுங்கதான். அதுவும் அதோ நிக்கறானுகளே இரண்டு பேரு. மனசுல பெரிய இதுனு நெனப்பு. எப்ப வந்தாலும் வந்து பக்கத்துலயே நின்னுப்பானுங்க. மத்தவனுங்க மாதிரி தூரமாலாம் நிக்க மாட்டானுங்க. ஆனா வெளியே நிக்கறவனுங்க இவனுங்கள அசிங்க அசிங்கமா திட்டுவானுக. நமக்கு அதுல ஒரு ஆனந்தம். ஆ…………. என்னய டைவர்ட் பண்ணாதிங்க. அப்பறம் கதை ஷார்ப்பா இல்லனு எவனாது கமெண்ட் பன்னுவான். கவனமா கேளுங்க இதுதான் முக்கியமான கட்டம்.
__________________________________________________________________________________________________

மேல இருக்கற கோடு சைலன்ஸ். உங்களுக்கு ஒரு மூட் கிரியேட் பண்ண. இப்போ கதை சரியா?

எங்க உட்டேன். ஆங், கேங்கோட வந்தானா, வரும்போதே ஒரு கோணிப்பைய தூங்கினு வந்தானுங்க. நல்லா கவனிங்க, எந்த லைட்டையும் போட்ல. கைல டார்ச் எடுத்துகினு மெதுவா வரானுங்க. தூரத்துல வேற ரூம்ல இருக்கற நம்ப கூட்டாளி ஒருத்தரு இதப் பாத்துட்டு நமக்கு சிக்னலு கொடுக்கறாரு. கம்முனு இருனு நான் பதில் சிக்னல் கொடுக்கறன். வந்தவனுங்க கையில இருந்த மூட்டைய அப்படியே கீழ வைக்கறானுங்க. மூட்டைய மெதுவா பிரிக்கறான் ஒருத்தன். எனக்கா சஸ்பன்ஸ் தாங்கல. வேகமா பிரிடா கொய்யாலனு கூவலாமானு பாத்தன். மூட்டைய மெதுவா தொறக்கறான். அந்த வெண்ண சும்மா நாள்ளாம் லைட்ட போடுவான். இன்னிக்கு பனை மரம் மாதிரி அசையாம நிக்கறான். மூட்டைய தொறந்ததும் எல்லாரும் ஒரே நேரத்துல அது மேல டார்ச் அடிக்கறானுங்க.

ஆ………………………………………………………………………………………………………………………………………………….

நான் தான் அதிர்ச்சில கத்திட்டன். ஆனா அவனுங்களுக்கு கேக்கல. இப்ப அதுவா முக்கியம். மேட்டருக்கு வருவோம். மூட்டைய தொறந்தா… மூட்டைய தொறந்தா… தொறந்தா… அப்படியே என்ன மாதிரியே ஒருத்தன் நிக்கறான். நான் அவன பாக்க அவன் என்ன பாக்க. மாத்தவனுங்கல்லாம் சிரிச்சிகினு இருக்கானுங்க.

அப்படியே ‘தொடரும்…’ போடலாமானு யோசிக்கற அளவுக்கு எனக்கு படபடப்பா போச்சி. உங்க டைம வேஸ்ட் பண்ன வேணாம்னு கண்டின்யூ பண்றன். நான் அவனப் பாத்து கேக்கறன்,

“டேய் யாருடா நீ”

………………………………….

“சொல்லுடா, எப்புடிடா நீ என்ன மாதிரியே இருக்க…..”

…………………………………………………………………………………………………..

கேக்கறதுக்கு எதுனா பதில் சொல்றானா பாரு. சொவுடன் மாதிரியே நிக்கறான். “டேய் நீ செவுடனா, ஊமையாடா” இந்த நேரத்துல இந்த நெலமையில நீங்களா இருந்தா கண்டிப்பா உங்க அப்பா மேல உங்களுக்கு ஒரு டவுட் வரும். ஆனா என்னால அப்படிலாம் நினைக்க முடியாது. ஏன்னா… அதெல்லாம் வேணா வுடுங்க. இவன பாப்போம்.

அவன் இன்னா கேட்டாலும் அப்படியேதான் நிக்கறான். இந்த வெண்ண இப்பதான் ஆராய்ச்சி பண்ணுது. அவனப் பாக்குது, என்னப் பாக்குது, மறுபடியும் அவனப் பாக்குது, என்னப் பாக்குது. இப்படியே ஒரு நாலு வாட்டி பாத்துட்டு மத்த தடிமாடுங்க (மாடுங்கனு திட்டலாமானு தெரிலயே) கிட்ட மண்டைய ஆட்டுது. அவனுங்க அலேக்கா என்ன தூக்கிட்டானுங்க. எனக்கு வந்துச்சி பாரு ஒரு கோவம். உடனே அவனுங்களுக்கு ஒரு சாபம் உட்டேன், “எல்லாரும் சொர்க்கத்துக்கு போங்கடானு”. என் சொர்க்கம்னு கேக்காதீங்க. அத அப்பறம் சொல்றன். த்திரிலிங் போய்டும்.

என்னைய தூக்கி கீழ வெச்சிட்டு அவனத் தூங்கி என் எடுத்துல வச்சிட்டானுங்க. எனக்கு இன்னா பண்றதுனே தெரில. தூரத்துல இருக்கற என் கூட்டாளிய பாக்கறன். அவன் இப்பதான் நல்ல தூங்கற மாதிரி நடிச்சிகினு இருக்கான். எனக்கு இன்னா பன்றதுனே தெரில. ஆமா நம்பலால என்ன பண்ண முடியும் இவனுங்கள. நான் எப்படி ஸ்டைலா உக்காந்துனு இருந்தனோ அப்படியே இப்ப அவன் உங்காந்துனு இருந்தான்.

டேய் டேய் இது உனக்கே அடுக்குமாடா டேய், நாளைக்கு உன்னயும் எவனா வந்து இப்டி தூக்கினு போவல என் பேர மாத்திக்கிறண்டா டேய், சைட் ஆணில கேலண்டர் இருக்குது குறிச்சிக்கடா அங்க பாருடா, அதோ பேசிகினு நிக்கறானே அந்த வெண்ண அவன் உன்ன தூங்கக்கூட உடமாட்டான்டா.

நான் பொலம்பிகினே தான் இருந்தன் எவன் காதுலயும் விழல. எடுத்துகினு வந்த கோணில என்னைய கட்டி தூங்கினு போயிட்டானுங்க. எங்க எடுத்துகினு போறானுங்க. இன்னா பண்ண போறானுங்க ஒன்னும் தெரில நான் இன்னும் கோணிப்பைல தான் இருக்கன். புரியாத பாஷைலாம் கேக்குது. கொஞ்ச நேரம் பறக்கற மாதிரி இருக்குது. கொஞ்ச நேரம் மெதக்கற மாதிரி இருக்குது. மொத்ததுல என் சோலி முடிஞ்சிது.

அப்படியே எங்கயே ஒரு ரூம்ல ஒரு ஓரத்துல என்னய உக்கார வெச்சானுங்க. அதுக்கப்பறம் என்னாவோ பேசனானுங்க. போய் லைட்ட நிறுத்திட்டு போய்ட்டானுங்க. அப்பாடானு இருந்தது. கோணில இருந்து வந்ததுக்கப்பறம் தான் கொஞ்சம் மூச்சே வுட முடிது. டையட்ல நல்ல தூக்கம் வந்ததுனு தூங்கிட்டன். எப்பவுமே நல்ல தூக்கத்துல அந்த வெண்ண லைட்ட போடுமா. நானா எழுந்திருக்கற வரைக்கும் இங்க எவனும் லைட்டே போடல. சரி இங்க டியூட்டி டைம் வேற மாதிரினு வெய்ட் பண்ணேன். எவ்ளோ நேரம்னு கேக்கறீங்களா, சுமார் ஒரு ஆறு மாசம். எவனும் லைட்ட போட வரவேயில்ல. அடேய் பயமா இருக்குதுடா, ஒரு குண்டு பல்ப்பாவது போடுங்கடான்னு கத்தறேன், கேக்க எவன் இருக்கான்?