இரா. கவியரசு

பித்து வெடிப்புக் கோட்பாடு

இரா. கவியரசு 

மிகப்பிரம்மாண்டமான
மஞ்சள் மலரின் இதழ்கள்
விரிந்து பரவும் திசையெங்கும்
சூம்பியிருக்கும் குட்டிச் சூரியர்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள்

மருத்துவமனையில் நிற்கும் என்னிடம்
நலம் விசாரிக்கும் விதைப்பாளன்
சமன்குலையும் தராசுத் தட்டுகளை
இறைச்சிக் கடையில்
பார்த்தாயா என்கிறான்

கல்லீரலில் ததும்பும் மஞ்சளைத்தான்
மாபெரும் மலருக்கு பூசியதாகச் சொல்லும் வான்கோ
தாமதமாகவே மருத்துவர் வருவார் என கூட்டத்தைப் பார்த்து விசிலடிக்கிறான்

விதைகள் வெடிக்கும் முன்பே
கொத்திச் செல்லும் பறவைகள்
பித்தை வெடிக்க விடாதீர்கள்
விதைப்புக் காலத்தில் நிறமொழுகுவது
நிலத்துக்கு நல்லதல்ல என்கின்றன

“டோக்கன் நம்பர் 24 ” அழைக்கிறது

மலர்களை மலர்களாகப் பாருங்களேன்
அதில் உங்களுக்கென்ன பிரச்சினை
அதீத காமத்தில் நிறங்களாக உளறுவது கலைக்கு நல்லதல்ல என்கிறார்

மாத்திரைகளுடன் வெளியே வந்தால்
இதோ பாருங்கள் மொக்குகள்
குழந்தைகள் சூடியவுடன்
சப்தமிடாமல் வெடிப்பவை
துய்ய வெள்ளையெனக்
குதூகலிக்கும் தலைவி
மஞ்சளைப் பூசிக்கொள்வது
ஆண்களுக்கு நல்லதல்ல என்கிறாள்

மொட்டை மாடியில் நின்று பார்க்கிறேன்
தூரிகையால் குழி தோண்டும் வான்கோ
“தீவிரமாக இறங்குகிறேன்
பாதியில் காப்பாற்றிவிடாதே !”
அழியாத மலரின் நறுமணமே வாழ்வென்கிறான்

தீராத இடைஞ்சல்களுக்கிடையே
இளஞ்சிவப்பாகவே
சிரித்துக் கொண்டிருக்கும்
கிருஸ்துமஸ் விண்மீன்
மஞ்சளை அவிழ்த்துப்
பிரவாகமாக்குங்கள் தந்தையே !
பிடித்த கவிதையை
பாடாதிருப்பது
உயிருக்கு நல்லதல்ல என்கிறது.

Vincent van Gogh, Public domain, via Wikimedia Commons

தெண்டனிடும் குளிர்

இரா கவியரசு 

மலையிலிருந்து குளிரை
வெட்டும்போதும்
கடலுக்குள்ளிருந்து வெப்பத்தை
மூட்டை கட்டுவதற்குள்ளும்
தாமதமின்றிக் கூவுகிறது
அவனுக்கான ரயில்.
கடல் தழுவும் நகரத்தின் பத்தொன்பதாவது மாடியின்
கிழக்கு மூலை கொதிக்கிறது
பொருத்த வேண்டிய கல்லோ
சூளைக்குள்
சாவகாசமாக தூங்கிக் கொண்டிருக்கிறது.
இன்னுமா வேகவில்லையென
உதைக்கும் கால்கள்
மண்பசை காயாத கற்களின் மண்டையை உடைக்கின்றன.
ரயிலின் வழியாக
நீண்ட கைகளால் ஏந்தும் மலையூரை
கடலுக்கு மிகவும் பிடித்திருக்கிறது
தேய்ந்த முதுகெலும்புகளை
தண்டவாளங்களாக மாற்றி
தெண்டனிடும் காட்சியும்
அதற்கு கொள்ளை விருப்பம்தான்.

— இரா.கவியரசு

ஒலிக்காத உடல் – இரா.கவியரசு கவிதைகள்

விழுகின்ற நீரின் ஒலிகளால்
வரைகின்றான் குளிக்கும் உடலை
பெரிதாக விரியும் பறவை
துளியாக ஒடுங்கும்போது
கண் மட்டுமே துடிக்கிறது
இரவில்
அமைதியாகத் ததும்பும்
கடலின் உள்ளே
தூங்காத நீரோட்டங்கள்
வரைந்து கொண்டே இருக்கின்றன
காணாத உடலை
அப்போதும்
கண் மட்டுமே துடிக்கிறது
குளித்து விட்டு வரும் உடலுக்காக
காத்திருக்கின்றன ஆடைகள்
ஒலியை உறிஞ்சும்
பூட்டிய அறைக்கு வெளியே
உடலும் உடையும் பொருந்துவது
கசிகிறது அரூபமாக
நெஞ்சுச் சூட்டில் கொளுத்துபவன்
கற்பூரமாக்கி வாய்க்குள் அதக்குகிறான்
உள்ளே எரிகின்றன
ஒலிக்காத உடலும்
பிய்த்தெறியப்படும் ஆடைகளும்

பாழாய்ப் போன பெண்டுலம் – இரா. கவியரசு கவிதை

​கால்சட்டை​​ அணிந்தபடி
தன்னைத்தானே தூக்குபவளின்
தோள்களில் வளரும் இளமையை
உள்ளிருந்தே உண்ணுகின்றன
அசையும் பிம்பத்தின்  நாக்குகள்.

இருவருக்கும் நடுவில் நின்று
வேடிக்கை பார்ப்பது
சித்ரவதையாய் இருக்கிறது கண்ணாடிக்கு.

பதின்வயதின் நதிக்கரையில்
கால் வைத்ததும்
துள்ளுபவளின் முன்பு
அவளுக்கு சிறிதும் பிடிக்காத
பெண்டுலமொன்று
வந்து நிற்கிறது.

உடைப்பதற்காக
சுவற்றை நோக்கி உதைக்கிறாள்.
கண்ணாடிக்குள் பெருகும்
காட்டு மரங்களில் தொங்கவிடுவதற்காக
அது
அவளை
உள்ளே இழுத்துக் கொண்டு ஓடுகிறது

கிளைகள் தோறும் குதித்தாடுபவள்
களைத்து நதியில் விழும் போது
சூழ்ந்து மிதக்கின்றன செம்பூக்கள்.
விலக்கிக் கொண்டே இருக்கிறாள்
கரையேறவே முடியவில்லை.
மீன்பிடிக்க வருபவர்களின்
வலைகளிலிருந்து தப்பிப்பதற்காக
தவளையாகித் தாவுகிறாள்.

இதற்கு முன்பு சென்றவர்கள்
செதுக்கிய குகையில்
சப்தமிடாது ஒளிந்து கொள்கிறாள்
மூச்சுமுட்ட அழுத்துகிறது நீள் இரவு.

அழுதபடியே
வெளியேறுபவளின்
நெஞ்சு பெருகுகிறது
அமுதுண்ண அமரும் பறவைகள்
விடாமல் கொத்துகின்றன.

தூக்கிச் செல்லும் பறவைகள்
வழியில் அவளை நழுவ விடுகின்றன.
மிகச்சரியாக வந்து
பிடித்துக் கொள்ளும் பெண்டுலம்
வீட்டுக்குள் வந்ததும்
பொத்தென்று போட்டு உடைக்கிறது.

அதற்குப்பிறகு
அவள்
பிம்பங்கள் உருவாகாத கண்ணாடிக்கு
தன் முதுகைக் காட்டியபடியே
சுவற்றில் முகம் பார்த்துக் கொள்கிறாள்.

அடிக்கடி சிரித்தாலோ
சிறிது
தன்னைத்தானே தூக்கினாலோ
தவறாது முன்னே வந்து விடுகிறது
பாழாய்ப் போன பெண்டுலம்.

சாட்சி சொல்ல வந்தவன் – இரா.கவியரசு கவிதை

சாட்சிக் கூண்டில் ஏறிய போது
தூரத்திலிருந்து முறைத்த குற்றவாளி
முட்டையொன்றை மந்திரித்து  வீசினார்.
அவசரத்தில்
உடைத்துக் குடித்து விட்டேன்.
கோபமுற்றவர்
நாக்கை முழுவதுமாக இழுத்து வைத்து
நான் சொல்லவிருந்த சம்பவத்தை
தடயமில்லாதபடி அழித்துக் கொண்டிருந்தார்.
வயிற்றில் குஞ்சு பொரித்த
சத்தியத் தவளைகள்
சம்பவத்தைத்
தொண்டைக்குள் இழுத்துக் கொண்டன.
தண்டனைப் புத்தகத்தை விரித்தபடி
நான் தவளை போலக் கத்துவதாக
எச்சரிக்கை மணி அடித்தார்
குற்றவாளிக்காக வாதாடியவர்.
சம்பவம் எச்சிலில் கரைந்து கொண்டிருக்க
வளாகத்தில் ஒரு பெரிய குதிரை
கால்களை உயர்த்தியபடி
துள்ளிக் கொண்டிருந்தது.
பிடரியை இழுத்துப் பார்த்த காவலர்
கழுத்தைத் தடவிய போது
“சத்தியம் சாகாது
சத்தியம் பலமாக உதைக்கும்”
என்று பாட ஆரம்பித்தது.
என் பக்கத்தில் நின்ற வழக்கறிஞர்
” இவர் கைரேகையைப் பாருங்கள்
யுவர் ஆனர் ! “
சம்பவத்தின் போது
குற்றவாளியின் சட்டையைக் கிழித்திருக்கிறார்
என்று என் கைவிரல்களை
உயர்த்திக் காண்பித்தார்.
கண்கள் பொய் பேசுவதில்லை என
நீதிபதியை உற்றுப் பார்த்தபடி
சம்பவத்தைச்  சொல்ல ஆரம்பித்தேன்.
வாக்குமூலத்தின்
ஒவ்வொரு சொல்லும்
நான்காகப் பிரிந்து  ஓட
தட்டச்சு செய்தவர் கதற ஆரம்பித்தார்.
அடித்துப் பிடித்து
ஒரே வரிசையில் அடுக்கியபோதும்
சம்பவம்
சேராமல் பிரிந்து கொண்டே இருந்தது.
குற்றவாளி
அடுத்த முட்டையை எடுத்த போது
குதிரை வேகமாகப் பாய்ந்தது
தண்டனைப் புத்தகம்
பறந்து வந்து தாக்கவே
சத்தியம் !சத்தியம் !சத்தியம் !
என்ற பெருமுழக்கத்தோடு
குதிக்க ஆரம்பித்தன
தவளைக் குஞ்சுகள்.
கட்டிடம் அதிர ஆரம்பித்தது
தலைவலி தாங்கமுடியாமல்
சம்பவம் நடந்த இடத்திற்கு
என்னை அழைத்துச் சென்றார்கள்.
உள்ளதை
உள்ளபடியே சொல்வதற்காக
ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய இரவை
இழுத்துக் கொண்டிருந்தேன்
சம்பவம்
அசைந்து அசைந்து
வந்து கொண்டே இருந்தது.