இஸ்ஸத்

இறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை

இஸ்ஸத்

ஒரு முறையேனும் பார்த்திட வேண்டும்..
என் ஆவி நீங்கிய நிர்வாண உடலை அருவருப்பின்றி குளிப்பாட்டுபவரை.
எனக்காக இரு வரி இரங்கல் எழுதப் போகும் கவிஞனை, எழுத்தாளனை அல்லது என்னைப் போன்றவனை.
என் உடல் போர்த்த வேண்டி நெய்யப்பட இருக்கும் அணியை உருவாக்க காத்திருக்கும் பருத்திச் செடியை, பஞ்சை, நூலை, நெசவை, நெசவாளியை அல்லது நெய்து தயார் நிலையில் எங்கோ ஓர் மூலையில் உறங்கிக் கொண்டுடிருக்கும் அந்த சிரிய வெள்ளை துணி மூட்டையை.
என் பூத உடலை சுமப்பவரை அல்லது சுமக்க பிரயாசைப்படுபவர்களை.
என் உடல் சுமந்து செல்லப்படுகையில் ஏதோவொரு பச்சாதாபத்தில் தன் வாகனத்தை விட்டு வீதியில் இறங்கி நிற்கும் அந்த ஓர் சிலரை.
என் உடல் புதைக்க குழி தோண்டப்பட இருக்கும் இடுகாட்டின் குறிப்பிட்ட பரப்பை, என்னை குழியினுல் இடப்போகின்றவரை.
என் குழியை மூட மண் போட காத்திருப்பவர்களை, குழி மூடி பலர் விடை பெற்ற பின்பும் நின்று நிதானித்து எனக்காக பிரார்த்தித்து நகர்பவர்களை.
என் மண்ணறை மேலே பிடுங்கி நடப்பட்ட்டும் வேர் விட்டு பூக்காமல் கருக காத்திருக்கும் நித்திய கல்யாணியை.
எல்லாவற்றிற்கும் மேலாக என் இந்த எதிர்பார்ப்பில் இல்லாத, எனக்காக கழிவறை சென்று வாய் பொத்தி வெடித்தழ காத்திருக்கும் முகமறியா அந்த யாரோ ஒரு

 

முடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை

இஸ்ஸத்

விடிந்த காலைப்பொழுதுகள் எல்லாம் உட்சாகம் என்கிறீர்கள்.
மாலைகள் எல்லாம் ஓய்வைப் பறைசாற்றுகின்றன என்கிறீர்கள்.
நிசப்த இரவுகள் எல்லாம் மயான அமைதியின் குறியீடென்கிறீர்கள்.
மழை வானமெல்லாம் மனதிற்கு இதம் என்கிறீர்கள்.
கோடைகளெல்லாம் கொடுந்துயர் என்கிறீர்கள்.
வாடைகளெல்லாம் வறுமை என்கிறீர்கள்.
இறுதியில் இறப்புதான் பேரமைதி என்கிறீர்கள்.
இதில் எந்தச் சூழ்நிலைதான் வாழ்தலைச் சொல்கின்றது?
அனைத்தும் என்றால், இவை அனைத்து நிலையிலும் அவளின் நோய்மையின் வலிகளும், சிகிச்சைக்கான பயணமும் மாத்திரம்தானே எஞ்சியிருக்கின்றன.

ஓட்டை பைக்கற்று – இஸ்ஸத் குறுங்கதை

இஸ்ஸத்

கடந்த சில நாட்களாக அவனிடம் பணம் என்று இருந்ததே அந்த 20 ரூபாய் மாத்திரம்தான். அந்த நோட்டில் உள்ள படத்தில் இருக்கும் இரு மீனவர்கள் மீது எவரோ பீடி பற்ற வைத்தபோது விழுந்த தீப்பொறியினால் ஏற்பட்ட ஓட்டையும், அதன் அச்சிடப்பட்ட திகதி 1995.11.16 என்பதுவும், அதன் ஓரங்களில் ஆட்டினுடையதோ அல்லது கோழியினதோ குருதி தோய்ந்து இருந்ததையும் தூக்கத்திலெழுப்பி கேட்டாலும் விபரமாக சொல்லுமளவு அந்த நோட்டோடு அவ்வளவு ஐக்கியமாயிருந்தான். அவன் அதை செலவு செய்யாமல் இருப்பதற்கு காரணம்: தன்னிடமும் பணம் இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் மாத்திரமே.

பல நாட்கள் அந்த பணத்தை வைத்துக்கொண்டு தனது பணக்கார தோரணை கருதி அதனைக் கொண்டு தனது பசியை போக்கிக் கொள்ளாமலேயே இருந்தவனுக்கு இன்று யாரோ ஒரு புண்ணியவானினால் புரியாணி பார்சல் கிடைத்துவிட்டது. அதனை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரை கட்டுக்கு சென்று குளித்துவிட்டு தனது பையினுள் இருந்த ஆடைகளுள் எது நல்ல ஆடையோ அதை மாற்றிக்கொண்டு அவ்விடத்திலேயே தனது உணவு பொட்டலத்தை ஆசையாக பிரித்து வயிறு முட்ட உண்டு முடித்தான். என்னதான் புரியாணியாக இருந்தாலும் அதை உண்ட பிற்பாடு பீடா ஒன்று போட்டால்தான் அது இராஜ விருந்தாகும் என்றபடி தனது 20 ரூபாயை செலவழிக்க முடிவெடுத்தவனாய் தனது தோல் பைக்குள் இருந்த பணத்தை எடுத்து காற் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு சற்று தொலைவிலிருந்த பீடா கடையை நோக்கி ஓட்டமும் நடையுமாக போய்ச் சேர்ந்தான்.

பீடா கடை முன்பாக நின்று கொண்டு வயிறு முட்ட சாப்பிட்டதனால் வந்த ஏப்பத்தை விட்டபடியே பணத்தை எடுப்பதற்காக வேண்டி தனது காற்சட்டைப் பைக்குள் கையை விட்டவனுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாலை நேரம் அப்போதிருந்த அவனது இரு நண்பர்களுடன் ஹோட்டலில் ரீ குடித்துவிட்டு ஹோட்டலின் முன்பாக சாய்ந்து கிடந்த ஆலை மரத்தின் தடித்த தண்டின் மீது உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவை அவனது தொடையில் தற்காலிக தஞ்சமடைந்ததினால் ஏற்பட்ட வடுவை வருடும் பாக்கியம் மாத்திரமே கிடைத்தது.

அவன் தனது பைக்கற்றுக்குள் கையை விட்டு துலாவியபடியே தனது பணம் எங்கோ விழுந்து விட்டதை ஊர்ஜிதம் செய்து கொண்டே கையை பைக்கற்றின் அடி ஆழம் வரை விட்டு ஓட்டையான காற்சட்டை பைக்கற்றை புரட்டி வெளியே எடுத்து அதன் இடுக்குகளில் இருந்த மண்ணையும், தூசிகளையும் துப்பரவு செய்தபடி எதுவித சலனமுமின்றி தனது ஏமாற்றத்தை சிறு புன்னகையால் தவிர்த்தவனாய் நடக்கலானான்.

அவனின் புன்னகையிலும், தொய்வற்ற நடையிலும், தான் இன்னும் எவ்வளவு இழப்பையும் தாங்குவேன் என்றும், இன்னுமொரு புதிய அல்லது பழைய பதிப்பையுடைய 20 ரூபாய் நோட்டு கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கையும் வலிகளும் பல ஏமாற்றங்களும் கண்ட முதிர்ச்சியும் இல்லாமலில்லை.