கடலூர் சீனு

நூல் மதிப்பீடு : காச்சர் கோச்சர் – கடலூர் சீனு

கடலூர் சீனு

குருதி… நீரினும் அடர்த்தியானது.
…….நாவலிலிருந்து…..

சில வருடங்கள் முன்பு கடலூரில் நடந்த சம்பவம். சுனாமி அழிவு நடந்து சில வருடங்கள். தூரத்தில் எங்கோ நிலநடுக்கம். கடலூர் முழுக்க வதந்தி. மறுநாள் அதிகாலை சுனாமி வரப்போகிறது. குறிப்பிட்ட கிராமத்தில் மக்கள் வீடுகளைக் காலி செய்து வெளியேறினர். அந்த கிராமத்தில் உள்ள ஒருவர், வீட்டில் உள்ள அத்தனை பொருட்களையும் பத்திரமாக மூட்டை கட்டி வண்டியில் ஏற்றினார். முடக்கு வாதம் வந்து, பயனில்லாமல் போன முதிய தகப்பனை மட்டும் வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு கிளம்பிவிட்டார். மறுநாள் காலை வதந்தி எல்லாம் அடங்கி ஊரார் கிராமம் திரும்பிய பிறகே அது வெளியே தெரிய வந்தது. வதந்தியாக அன்றி சுனாமி வந்திருந்தால்? எந்தச் சுவடுமின்றி ஒரு உயிர் போயிருக்கும். கூடுதலாக அரசின் நிவாரணத் தொகையும் கிடைத்திருக்கும்.

இரவெல்லாம் பூட்டிய அறைக்குள் அந்த முதிய மனம் என்னவெல்லாம் நினைத்திருக்கும்? அதன் பீதியின், விரக்தியின், கைவிடப்படுதலின், துயரின், இருள்வெளி என்னவாக இருந்திருக்கும்? இப்படி ஒரு நிலையை அடைய அவன் வாழ்ந்த வாழ்வு, இருக்கும் குடும்பம், அதன் உறுப்பினர்கள் உளப்பாங்கு, எல்லாம் என்னவாக இருந்திருக்கும்? நினைக்கவே விதிர்க்க வைக்கும் அந்த மின்சார வன்தொடுகை உணர்வையே அளித்தது, ‘காச்சர் கோச்சர்’ எனும் விவேக் ஷான்பாக் எழுதிய கன்னட நாவலின் வாசிப்பனுபவம்.

அசோகமித்திரனின் ‘காந்தி’ சிறுகதை ஒரு ஹோட்டலில், இன்னும் அருந்தப்படாத காப்பி நிறைந்த கோப்பை முன் அமர்ந்திருக்கும் கதைசொல்லியின் நினைவுகளாக விரிந்து பரவி நிறையும். அதே போல இந்த ‘காச்சர் கோச்சர்’ கதையும், ஒரு காபி கிளப்பில் காப்பிக்காக அமர்ந்திருக்கும் கதைசொல்லி தான் வந்து நின்றிருக்கும் விடுவிக்க இயலா சிடுக்கு )கதைக்குள் இந்த நிலைக்கே காச்சர் கோச்சர் என அனிதா பெயர் சூட்டுகிறாள்) நிலை குறித்து வாசகருக்கு சொல்லும் கதையாக விரிகிறது.

திமிர் கொண்ட சோம்பேறி வாழாவெட்டி அக்கா, விட்டேத்தி அப்பா, சுயநல அம்மா, சம்பாதிக்கும் புள்ளியான திருமணம் செய்து கொள்ளாத சித்தப்பா, அவர் நிறுவனத்தில் சும்மா இருந்து சம்பளம் வாங்கும் கதைசொல்லி, அவனை மணம் புரிந்து கொண்டு அந்த குடும்பத்துக்குள் நுழையும் அனிதா. பொருளாதார மையம் எனும் ஒரே தூணான சித்தப்பா வெங்கடாஜலத்தை அண்டி வாழும் குடும்பம், அப்படி அண்டி வாழ்வதற்கு செய்யும் செயல்கள் தொட்டு அண்டி வாழும் கீழ்மை உட்பட அனைத்தையும் கேள்வி கேட்கும் அனிதாவை எவ்வாறு எதிர்கொள்கிறது? அப்படி குடும்பம் மொத்தமும் ஒருங்கு கூடி எதிர்கொள்ளும் சிக்கலில், கதைசொல்லியின் பங்கு என்ன? நிலை என்ன? அதை கதைசொல்லியே அவனது பார்வைக் கோணத்தில் வாசகருக்கு விவரிக்கும் வண்ணம் வடிவம் கொண்டதே இந்த நாவல்.

கீழ் நடுத்தர வர்க்கமான கதைசொல்லியின் குடும்பம் கைக்கும் வாய்க்கும் வருமானம் சரியாக இருக்கும் மாதச் சம்பள வாழ்க்கைக்குள், அதன் சாதக பாதகங்களை ஒன்றாக இணைந்தே கடக்கிறார்கள். நீரொழுக்கில் சிக்கிய எறுப்புக் கூட்டம் தன்னை பந்தாக திரட்டி ஒன்றுடன் ஒன்று பிணைத்துக்கொண்டு அந்த ஓட்டத்தில், நிற்க நிலம் கிடைக்கும் வரை பிழைத்துக் கிடக்குமே, அதே போன்றதொரு வாழ்வு. அவர்கள் வீடே ஒரு பெரிய அளவு எறும்புப் புற்று ஒன்றினுள் இருக்கிறோம் என உணரும் வண்ணம் எறும்புகளால் நிறைந்த வீடு. அத்து மீறி ஒழுங்குகளை குலைக்கும் எறும்புகளைத் தேடித்தேடி விதவிதமாக வேட்டை ஆடுவதே, அம்மாவின் உபரி நேரப் பணி.

வேலை போன பின் இழப்பீட்டு தொகையை கொண்டு அப்பாவும் சித்தப்பாவும் கூட்டுத் தொழில் துவங்குகிறார்கள். வருமானம் பெருகுகிறது. சொந்த வீடு. பொருட்கள் சேர்கின்றன. பழைய வீட்டை ஒழித்து, புதிய வீடு புகும் சித்திரம் கணுக்கணுவாக விவரிக்கப்படுவதன் வழியே அந்த ஒட்டுமொத்த குடும்பத்தின் அகவயமான மாற்றம் துவங்கும் தருணம் புறவயமாக சித்தரிக்கப்படுகிறது. முன்பு பத்தாத சம்பள வாழ்வில் அதன் காரணமாகவே, ஏமாற்றங்கள் அளிக்கும் எதிர்பார்ப்புகள் யாருக்கும் இல்லை. இந்த புதிய வீடு, வணிக செல்வம் அளிக்கும் விடுதலை அவர்களை கண்டதையும் வாங்கி குவிக்க வைக்கிறது.

சித்தப்பாவை அண்டி வாழும் குடும்பம். வணிகத்துக்காக நிழல் வேலைகளில் இறங்கும் சித்தப்பாவை கண்டு கொள்ளாத விட்டேத்தி அப்பா. இவர்கள் குடும்பத்தின் முதல் அடுக்கு. இவர்கள் நிறுவனத்தில், வேலை செய்யும் தகுதியே இன்றி சும்மா இருந்து சம்பளம் பெறும் கதைசொல்லி, அவனது அம்மா இந்த குடும்பத்தின் இரண்டாவது அடுக்கு. இந்தச் சூழலில் தனது தேர்வான சித்ராவை உதறிவிட்டு வீடு கைகாட்டும் அனிதாவை மணக்கிறான். தனது கணவனின் சம்பாதிக்கும் திராணி, குடும்ப நிலை அறியாமல் இந்த அடுக்கு நிலைக்குள் நுழைகிறாள் அனிதா. இரண்டாம் அடுக்கில் இருக்கும் தனது நிலைக்கு வரப்போகும் ஆபத்தாக அனிதாவின் வரவை எதிர்கொள்ளும் அம்மா. திருமணம் செய்து வெளியே போன அக்கா மாலதி, தனது திமிரின் காரணமாக புகுந்த வீட்டை உதறி விட்டு மீண்டும் பிறந்த வீடு திரும்புகிறாள். பிறந்த வீட்டுக்கே திரும்பி வந்து தனது திமிரால் முன்பு தான் விடுத்து செல்லும்போது அந்த குடும்பத்தில் எந்த அடுக்கில் நின்றாளோ, அதே அடுக்கில் சென்று நிற்க மாலதி செய்யும் வேலைகள். அடுக்கு நியதிகளுக்கு கட்டுப்பட்டு தகவமையாமல், தனது இயல்பால் அமைப்பையே குலைக்க முனையும் அனிதா. இவர்களால் காச்சர் கோச்சர் அடையும் கதைசொல்லி.

அசோகமித்திரன் படைப்புலகம் மையம் கொள்ளும் கீழ் நடுத்தர வர்க்க குடும்ப நிலை. அவரது கதைகளில் துலங்கும் அதே மெல்லிய கசந்த நகைச்சுவை நோக்கிலான விவரணை. ஆனால் அசோகமித்திரன் புனைவுலகில் இருந்து இக்கதையில் ஷான்பாக் முன்னகர்ந்து தனித்துவம் கொள்ளும் இடங்கள் மூன்று. ஒன்று, குடும்பம் எனும் அமைப்பு பெண்ணியல்பில் இருந்து வெளிக்கொணரும் தீமையின் சித்தரிப்பு. இரண்டு, குடும்ப உறுப்புகள் பொருளாதாரத் தூணை அண்டி வாழும் வாழ்வில் அதற்குள் அமையும் அடுக்குகள் உருவாக்கும் உளத் திரிபு. மூன்று, வலிமையான நாடகீய முரண்.

”வெங்கா… வெளிய வா. உன்னோட டுவ்வி கூப்புடுறேன் ”-வீட்டுக்குள் தலைமறைவாகி இருக்கும் சித்தப்பாவை தேடி நெடுநேரம் தெரு முனையில் நின்றுவிட்டு வீட்டு வாசலுக்கு வருகிறாள் சுகாசினி. அம்மா அவளை வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறாள். திரிபுகள் உயர்ந்து அம்மா சுகாசினியை அவமதித்து திருப்பி அனுப்புகிறாள். வெங்காவுக்கு பிடித்த டுவ்வி செய்த சமையல் வாசலில் சிதறிக் கிடக்கிறது. அவமானப்பட்டு வெளியே செல்லும் சுகாசினி, வெறுமனே அதை வேடிக்கை பார்த்து நிற்கும் தனது கணவன். மனம் பொறாமல் கேள்வி கேட்கிறாள் அனிதா.

கீழே கொட்டிய சமையலின் வாசனை கதைசொல்லியை சீண்டுகிறது. மிச்சத்தை சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என அவனை எண்ண வைக்கிறது. இந்தச் சித்திரம் வருகையில் பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலின் சென்னிகராயர் நினைவு எழுவதை தவிர்க்கவே இயலாது. இந்த ‘கச்சார் கோச்சர்’ நாவலே வேறொரு வகைமையில் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலின் ”தலைகீழ் ”வடிவம் என்றே சொல்லிவிட முடியும். சென்னிகராயரை நா ருசி எவ்வாறு வழிநடத்துகிறதோ அவ்வாறே இந்தக் கதைசொல்லியையும் வழிநடத்துகிறது. புனைவு நெடுக வெவ்வேறு பண்டங்களின் ருசி, தாளிப்பு வாசனை, இவை பின்னே செல்கிறது கதைசொல்லி மனம். அனிதாவே அவனுக்கு வாசனையாகத்தான் அறிமுகம் ஆகிறாள்.

கீழே கொட்டிய சித்தப்பாவுக்கு பிடித்த அந்த சமையலை இன்று சமைக்கலாமே என அனிதா குத்தலாக சொல்லும்போது முனை கொள்ள துவங்குகிறது குடும்ப உறுப்பினர்களின் உளத்திரிபுகள். சண்டை முற்றி பிறந்த வீடு போன அனிதா, வீட்டிலிருந்து புறப்பட்டவள் ஒரு நாள் கடந்தும் இன்னும் இங்கே வந்து சேரவில்லை- இந்த இடைவெளியில் நிகழும் காத்திருப்பில் கதைசொல்லியின் நினைவுகள் வழியே துலங்கி வருகிறது அந்த குடும்ப உறுப்பினர்களின் உளப்பாங்கு. கணவனை அடியாட்களை வைத்து மிரட்ட எந்த தயக்கமும் இல்லை அக்காவுக்கு, பக்கத்து வீட்டில் நடந்த மரணத்தைப் பேசி சத்தமே இல்லாமல் ஒரு வன்முறைக்கு அடி எடுத்து கொடுக்கிறாள் அம்மா, “எதுவா இருந்தாலும் நம்ப ஆளுக இருக்காங்க செஞ்சுடலாம் சிம்பிள்தான்,” என்று திமிர் காட்டும் சித்தப்பா, மகள் இரவில், ”வெளியே தங்குவது” சார்ந்து கூட எந்த புகாரையும் வெளியே காட்டாத விட்டேத்தி அப்பா. இவர்கள் மத்தியில் இந்தப் பிணைப்பை உடைக்கும் சொற்களை சொல்லிவிட்டு போன அனிதா என்ன ஆனாள்?

செய்யும் செயலிலோ, நிகழ்விலோ யாருக்கும் எந்த குற்றபோதமும் இல்லை. ஆத்மீக உள்ளுணர்வு அல்ல, அறம் சார்ந்த எளிய கேள்வி கூட எழாத, அல்லது இல்லாத, குடும்பத்தினர்கள். கடவுளோ குறைந்த பக்ஷம் ஜோசியமோ கூட தேவைப்படாதவர்கள். அனிதா திரும்பி வராமல் போனால், அதற்கான காரணங்கள் இவர்களாகவே இருந்தாலுமேகூட, அது குறித்து எந்த அலட்டலும் இல்லாதவர்கள். கொஞ்சமேனும் குற்றபோதம் கொண்டிருப்பதால்தான் நாயகன் இந்தக் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறான். இந்த சிக்கலை விடுவிக்க அல்லது இதிலிருந்து வெளியேற என்ன வழி என திகைக்கும் கதைசொல்லிக்கு உள்ள தீர்வு என்ன?

பாலியல் ரீதியாக சுகாசினியை அவமதித்து வெளியேற்றும் அம்மா, குடும்பச் சூழலை இயல்புக்கு கொண்டு வர வீட்டுச் செடிகளை பராமரிக்க துவங்குகிறாள். காரணமே இன்றி வாடி நிற்கும் செடி ஒன்றுக்காக வருத்தப்படுகிறாள். இப்படியாக ஒவ்வொரு ஆளுமையையும் உருவாக்கி அவர்களுக்கிடையே உள்ள உரசலை அதன் நிலையில் வைத்தே சித்தரித்துக் காட்டுவது இதன் கலை வெற்றி.

இந்தப் புனைவு கையாளும் அத்தனை சித்தரிப்புகளும் கதைமாந்தர்களின் குறியீடு என மாறிப்போகிறது. குறிப்பாக எறும்புகள் சார்ந்த வர்ணனை. மொசு மொசு என உடலெல்லாம் ஏறி மொய்க்கும் தீதற்ற கருப்பு எறும்புகள், கட்டெறும்புகள், வீட்டு எறும்புகள், குருதிச்சொட்டு வடிவில் வண்ணத்தில் திரிந்து, தசையில் விழும் அமிலச் சொட்டென கடிக்கும் செவ்வெறும்புகள். இந்த எறும்புகள் எவ்வாறெல்லாம் கொல்லப்படுகின்றனவோ, அவற்றைச் சுட்டி நிற்கின்றன- இறுதி அத்தியாயத்தில் பெண்கள் பேசும் குடும்ப வன்முறை உரையாடல்கள். அனிதாவுக்கும் நாயகனுக்குமான முதல் பிணக்கே, எதுவும் செய்யாமல் போய்க் கொண்டிருக்கும் எறும்பு ஒன்றை தன்னியல்பாக நாயகன் நசுக்குவதில் இருந்தே துவங்குகிறது. பழைய வீட்டில் நாயகன் விளையாட்டுகளில் ஒன்று எறும்புகளை விதவிதமாக கொல்வது. எரியும் கங்கினை எறும்பு வரிசை மேல் உருட்டுவது, வரிசையில் இருந்து ஒற்றை எறும்பை விலக்கி, அதைச் சுற்றி நீர் வட்டம் போட்டு, அதை தவிக்க விட்டு, அந்த வட்டத்தை மெல்ல மெல்லச் சுருக்கி, எறும்பு நிற்கும் மையத்தை இறுதியாக ஒரு சொட்டு விட்டு நிறைத்து, துடித்து துடித்து எறும்பு மடிவதை வேடிக்கை பார்ப்பது. இந்த முறைவரிசையில் இருந்து தப்பிய எறும்பு அனிதா. இந்த எறும்பின் மீது கங்கு உருள போகிறதா, அல்லது நீர் வட்டம் வளைக்கப் போகிறதா?

கதைசொல்லி, இன்னும் வந்து சேராத அனிதாவை முன்னிட்டு, அவன் குடும்பம் சார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் வெய்ட்டர் வின்சென்ட் சொல்கிறான், குருதி நீரினும் அடர்த்தியானது. எறும்பைச் சுற்றி நீர் வட்டம் அமைக்கும் நாயகனுக்கு, வின்சென்ட் மட்டுறுத்துகிறானா? அல்லது வழிகாட்டுகிறானா?

இந்தப் புனைவின் உள்ளுணர்வு சென்று தைக்கும் புள்ளி மிகுந்த அமானுஷ்யமானது. கல்யாணம் செய்து கொண்டு போகும் மாலதி, நினைத்திருந்தால் புகுந்த வீட்டை அங்கிருந்தே ஆட்டிப் படைத்திருக்கலாம். அவள் விரும்பும் வண்ணம் எதையும் அவளது வன்முறையை கொண்டு ஈடேற்றி கொண்டு இருந்திருக்கலாம். மாறாக அவள் அந்த வீட்டை விட்டு மீண்டும் இங்கு ஏன் வருகிறாள்? நாயகனுக்காவது சொத்துக் கவலை, வேலை எதுவும் செய்யும் திறமை அற்றவன். அவன் அங்கே ஒட்டிக்கொண்டு இருக்க எல்லா நியாயமும் உண்டு, பொருளாதார தூணான, திருமணம் செய்து கொள்ளாத, தன்னை பின்னிழுக்கும் உறவுக்கட்டுகள் ஏதும் இல்லாத சித்தப்பா ஏன் அந்த குடும்பத்தை விட்டு தனியே போக மறுக்கிறார்? சுகாசினி போன்ற காதல் துணை கிடைத்தும் அதை வன்முறையாக மறுத்து இந்த குடும்பத்துக்கு ஏன் திரும்புகிறார்?

வேறு வழி இன்றி பிணைந்திருக்கும் குடும்பம். அந்த பிணைப்பின் மறுதலையாக உள்ளே உறங்கும் திரிபு. புழங்க சற்றே ஒரு வெளி கிடைத்ததும் அந்த திரிபு விதை மெல்ல மெல்ல முளை விட்டு மலருகிறது. மோகமும், அது கொண்டு வந்து சேர்க்கும் காமமும், இரண்டும் இணைந்து தன்னை தக்கவைத்துக் கொள்ள கிளர்த்தும் க்ரோதமும், என மனிதனின் அடிப்படை இச்சைகள், குறிப்பாக, பெண்களுக்குள் அது எந்த கலாச்சார தளைகளும் அற்று விகசிக்கிறது. அப்படி உள்முகமாக விகசிக்கும் அடிப்படை இச்சைகள் ஒருவருக்குள் போலவே மற்றவருக்குள்ளும் ஸ்பூரிப்பதைக் கண்டு தன்னியல்பாக, ஒருவரை ஒருவர் ஆக ஆழத்தில் இனம் கண்டு அதன் பயனாக ஒன்றி இருக்கிறார்கள். அப்படி ஒன்றி இருக்கும் ஒன்றே குடும்பம் எனும் அமைப்பாக பராமரிக்கப்படுகிறது எனும் நோக்கு அளிக்கும் பீதியே இந்த நாவல் அளிக்கும் தரிசன உணர்வு.

ஏழே அத்தியாயம் கொண்ட நூறு பக்க குறுநாவல். பொருந்திக் கொள்ள இயலாமல் ஒரு இருபது வருடங்கள் ஒரு திரிபு கொண்ட குடும்பத்துக்குள் வாழ்ந்து, அந்த திரிபுகள் கொஞ்சம் கொஞ்சமாக மோகமும் க்ரோதமுமாக முளை விடுவதை பதைக்கப் பதைக்க பார்க்கும் ஒரு சக உறுப்பினனாக (செறிவான சித்தரிப்பின் வழியே, நாடகீய முரண்கள் வழியே) வாசகனை மாற்றி, அந்த குடும்பத்துக்குள் சிக்கவைத்து விடுகிறார் விவேக் ஷாஷான்பாக். ஆசைத்தம்பி குறைவற மொழிபெயர்த்திற்கும் இந்த ‘காச்சர் கோச்சர்’ தமிழுக்கான முக்கியமான வரவுகளில் ஒன்று.

ஊர் சுற்றி – யுவன் சந்திரசேகர்

கடலூர் சீனு

கப்பலில் பணிபுரியும் நண்பர் அழைத்திருந்தார். புவியில் நான் நிற்கும் நிலப்பரப்பின் நேர் பின்பக்கம், எங்கோ கடல்பகுதியில் மிதந்து கொண்டிருந்தார். இயல்பாக அ. முத்துலிங்கம் கட்டுரைத் தொகுதியின் தலைப்பை சொன்னேன். “அங்கே இப்போ என்ன நேரம்?” எனக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட எட்டு மணிநேர வித்தியாசம். அவருக்கு தற்போதுதான் விடிந்திருந்தது. எனக்கு மதியத்தை கடந்திருந்தது. வியப்பை சொன்னேன். நண்பர் கொட்டாவி விட்டபடி, அதுக்கு என்ன இப்போ, என்றார். இந்த நிமிடத்தில் நின்று என்னைக் கடந்து போய்விட்ட எட்டாவது மணி நேரத்தை ஊடுருவி நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த நிமிடத்தில் நின்று அவருக்கு இனிமேல்தான் வரப்போகிற எட்டாவது மணி நேரத்தை ஊடுருவி அவர் பேசி க்கொண்டிருக்கிறார். அவர், அதுக்கு என்னா இப்போ, என்று கடந்த விஷயம், எனக்கு என் குரலை மட்டும், மொபைல் என்ற காலப்பயண எந்திரத்தில் ஏற்றி அனுப்பி வைத்ததைப் போல பரவசமாக இருந்தது.

பகுத்து அடுக்கும் அனைத்து ஆய்வுகளுக்கும் அப்பால் காலம், லஸ்காக்ஸ் குகை ஓவியங்கள் போல ஒன்றன் மேல் ஒன்றெனப் படிந்திருப்பதாக அன்று மயக்கமெழுந்தது. அந்த குகை ஓவியங்கள் பதினையாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலம் வரை, ஒன்றன் மீது ஒன்றென, அடுத்தடுத்த தலைமுறை மூதாதை மனிதர்களால் வரையப்பட்டவை. பொதுப் புழக்கத்துக்கு அல்லாத தனிமையான வழிபாட்டுத் தலம் என காலகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் குகை. இதே போல உலகின் வேறு பல குகை ஓவியங்களில் ஊகித்து அறிய சிரமம் அளிக்கும் ஓவியங்கள் பல அந்த ஓவியன் தனது கனவில் கண்டடைந்ததாக இருக்கும். அந்தக்கால மனிதனுக்கு கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையே ஆன வேறுபாட்டுக் கோடு அவ்வளவு துல்லியமான ஒன்றல்ல என்கிறது குகை ஓவியங்கள் மீதான ஆய்வு ஒன்று.

காலம், பருண்ம உலகு, நனவு, கனவு, இவை ஒவ்வொன்றிலும் அதன் அலகுகளுக்கு இடையே, துல்லியமாக வேறுபடுத்தும் கோடு ஒன்றினை அறிவியலின் அனைத்து புலங்களும் வளர்த்தெடுக்க முயன்று, நரம்பியலும் குவாண்டம் பிஸிக்சும் கொண்டு அப்படி ஒரு துல்லியக் கோடு சாத்தியம்தானா எனும் நிலைக்கு வந்து நிற்க, கலைவரலாற்றில் பின்நவீனத்துவ அழகியல் வழியே இதே இடத்தை வந்தடைந்திருக்கிறது. தமிழ்ப் புனைவுகளில் நவீனத்துவத்துக்குப் பிறகான இந்த பார்வையை, அழகியலை, கொண்டு கலாபூர்வமான உயரத்தை அடைந்த புனைவுகளில் யுவன் சந்திரசேகர் புனைவுகளுக்கு- அதிலிருக்கும் ”கதைசொல்லி” தன்மைக்காவும் அதில் துலங்கி வரும் ஆத்மீக நோக்குக்காவும்- தனி இடம் உண்டு.

யுவன் சந்திரசேகரின் நாவல், ‘ஊர் சுற்றி’. இதிலும் யுவனின் தனித்துவமான, கதைசொல்லி பாணியும் ஆத்மீக நோக்கும், வேறுபட்ட கதைக் களங்கள், காலங்கள், கதைகள், கூறுமுறைகள், வழியே புதிய பரிமாணம் ஒன்றினை நோக்கி பயணிக்கின்றன. திரைத்துறையில் பணிபுரியும் கமலக்கண்ணன். பத்து வருடங்களுக்கு முன்பு,படப்பிடிப்புக்காக சென்ற கிராமத்தில் அவன் சந்தித்த சீதாபதிக் கிழவர் சொன்ன கதைகளை தனது கருவியில் பதிந்து வைத்திருக்கிறான். குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கதைகளை தொகுத்து நூலாக மாற்ற எண்ணுகிறான். சீதாபதிக் கிழவரின் மீதான நினைவுகளாகவும், அவர் ”சொன்ன ” வாழ்க்கைச் சம்பவங்கள், கதைகள், கேட்டுச் சொன்ன கதைகள், இவற்றின் ”எழுத்து ”வடிவமாகவும், மந்திரவாதி இளவரசி கதைகள், நாட்டுப்புறக் கதைகள் போல பல்வேறு வடிவ கதைகளின் தொகையாகவும் அ-நேர்க்கோட்டு கூறுமுறையில் வடிவமற்ற வடிவம் கொள்ளும் நாவல்.

தாய் தந்தையரின் அகால மரணத்துக்குப்பின் அந்த கிராமத்தில் இருக்க இயலாது [1936-ல் என துல்லியமான கணக்குடன் துவங்குகிறது நாவல்] இலக்கின்றி தனது பதினாறாவது வயதில் தேசாந்திரியாக வெளியேறுகிறான் சீதாபதி. எண்பதுகளைக் கடந்த வயதில் தனது இறுதிக்காலத்தை தான் பிறந்த கிராமத்திலேயே கழிக்க எண்ணி ஊர் திரும்புகிறார் சீதாபதிக் கிழவர். அந்த கிராமத்துக்கு படப்பிடிப்பு காரணமாக வந்து சேரும் கமலக்கண்ணன், தனது இயக்குநருக்காக ”கதை பிடிக்கும் ” உந்துதலில் நிறைய கதைகளை வைத்திருக்கும் சீதாபதிக் கிழவரை சந்தித்து நட்பு கொள்கிறான். சீதாபதி கதைகள் சொல்கிறார். தனது வாழ்க்கைக் கதை, பயணக் கதை, ஆண்கள் கதைகள், பெண்கள் கதைகள், குழந்தைகள் கதைகள், உறவுகளின் கதைகள், பிரிவுகளின் கதைகள், நட்பின், துரோகத்தின் கதைகள், பசியின், காமத்தின் கதைகள், வாழ்க்கைகளின், மரணத்தின் கதைகள், அனைத்தாலும் ஆட்டுவிக்கப்படும் மனிதர்கள் கதைகள், கதைகளாக எஞ்சி நிற்கும் வாழ்க்கைகளின் கதைகள், வாழ்க்கையாக விரிக்கத்தக்க கதைகளாக எஞ்சும் கதைகள். கிராமத்தில், இந்தியாவின் வெவ்வேறு நிலங்களில், வைத்தியர்களுடன், சாமியார்களுடன், வேலை தரும் முதலாளிகளுடன், லம்பாடிகளுடன், பொம்மலாட்ட நாடோடிகளுடன், மும்பை டப்பாவாலா தொழிலாளிகளுடன், அணைக்கட்டு தொழிலார்களுடன், என விதவிதமான வேலைகளுடன், பசி, காமம், தனிமை, பயம், மரணம் என அடிப்படை உணர்சிகளுடன் அலைக்கழிந்து, ஊர் சுற்றி முடித்து தனது அந்திமகாலத்தில் சொந்த கிராமம் வந்து சேரும் சீதாபதி காணும் வாழ்க்கைகள் எல்லாம் அவருக்குள் கதையாக மாறுகின்றன. ஒரு எல்லைக்கு மேல் காலம் கனவு போதமகூட அழிந்து அவருக்கு நிகழ்ந்தது எல்லாமே கதையாகிறது. விதவிதமான மானுடத் தருணங்களை உள்ளடக்கிய கதைகளாகிறது.

சீதாபதியின் பெண் நாட்டக் கதைகள் குறித்து கமலக்கண்ணன் விமர்சிக்கும்போது, எல்லாம் எம்ஜியார் படம் மாதிரி இருக்கு, எல்லா பெண்ணும் சீதாபதியை தானா தேடி வராங்க, அவர் யாரையும் தேடிப் போறதில்லை, என்கிறான். கதைகள் வழியே பெண்கள் சார்ந்து துலங்கும் சீதாபதி ஆளுமை மீது இது கமலக்கண்ணனின் பார்வை. சீதாபதி தனது தந்தை குறித்த கதைகளைச் சொல்கிறார். மர்மமான தினங்களுக்குப் பின் அவர் தந்தை காமாந்தகன் ஆகிறார். தராதரம் இன்றி பெண் பித்தாக அலைகிறார். அவரது கொலைக்குப் பிறகே சீதாபதி கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். அப்பா கொலை செய்யப்பட விதத்தை அவன் காணும் வயது முக்கியம். பதினாறு வயது. பாலுறுப்பு துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அப்பாவின் பிணம். இங்கே துவங்கும் சீதாபதியின் ஓட்டம், அவராக பெண் விஷயத்தில் ‘அத்து மீறும் ‘ நிலை ஏன் நிகழவில்லை என்பதைச் சொல்லிவிடுகிறது. பீகாரில் அவரை எடுத்துக்கொள்ளும் பெண் துவங்கி, காட்டுக்குள் அவரை எடுத்துக்கொள்ளும் நிர்வாணப் பெண் வரை, அவர் ஒப்புக் கொடுப்பவராக மட்டுமே இருக்கிறார். அணைக்கட்டு தொழிலாளியாக இருக்கும்போது வலிய வரும் பெண்ணையும் அவர் புறக்கணிக்கும் பின்புலமும் இதுதான். வீடு புகுந்து பெண்ணை சூறையாடிய ஜமீன் மகன், ஊராரால் அடித்தே கொல்லப்படுவதைப் பார்த்தவர், குறி இழந்த தகப்பனின் நிர்வாண உடலைக் கண்டவர், இதைத் தவிர வேறு என்ன செய்வார் ?

சீதாபதி, அவரது அப்பா துவங்கி இறுதிக்கால வெங்கிட்டு கிழவர் எனும் நண்பர் வரை விதவிதமான ஆண்கள், விதவிதமான குணாதிசயங்கள். ஒழுக்கம் தவறும் ஆண்கள், துரோகம் செய்யும் ஆண்கள், பெண் பித்தேறித் திரியும் ஆண்கள், முதுமையிலும் வாத்சல்யத்துடன் காதல் குறையாமல் குடும்பம் நடத்தும் ஆண்கள், ஆண்மையற்ற ஆண்கள், புணர்ந்து புணர்ந்தே உயிரின் இறுதித் துடிப்பில் நின்று உயிர் விடக் காத்திருக்கும் ஆண்கள், தனது மாட்டை தரைமட்ட விலைக்கு கேட்டவனையும், அத்தகையதொரு அவமதிப்புக்கு தன்னை ஆளாக்கிய தனது காளையையும் ஒன்றாக வெட்டித் தள்ளிவிட்டு போலீசில் சரணடையும் ஆண், மனைவி ஒழுக்கமற்றவள் என அறிந்தும் அவள் மேல் சற்றும் பிரியம் குறையாத ஆண், நித்ய இளமையில் பெண்ணை உறையவைத்து தினம் இரவு அவளைச் சுகிக்கும் ஆண், என சீதாபதி சொல்லும் கதைகள் வழியே விதவிதமான ஆண்கள் மற்றும் ஆண்மை எனும் கருத்துருவை, சொல்லப்பட்ட கதைகள் வழியே, எல்லாம் கதைதானே எனும் மிதமான பாவனை வழியே, அதன் தீவிரத்தை அணுகிப் பார்க்கிறது நாவல்.

கணவனின் நிலைபிறழ்வால் மனம் கசந்து தற்கொலை செய்து கொள்ளும் சீதாபதியின் அம்மா துவங்கி, கணவனை பழிவாங்க தாசியாக மாறும் மிருதுளா தொடர்ந்து, கொள்ளைக்காரனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு,கொள்ளைக்காரனை தருமவானாகவும் நல்ல இல்லறத்தானாகவும் மாற்றி நிறைவாழ்வு வாழும் வசுந்தரா வரை கதைகளுக்குள் விதவிதமான பெண் நிலைகள் துலங்கி வருகிறது. சீதாபதியை விரும்பும் நாடோடிப் பெண் லத்திகா, காதலனால் ஏமாற்றம் அடைந்து குடும்பத்தை உதறி தேசாந்திரி ஆகும் பெண், இறுதிக்காலத்தில் சீதாபதிக்கு தோழியாக அமையும் பால்ய கால நட்புக் கிழவி, தாசி இல்லம் நடத்தும் பெண், அந்த இல்லத்தில் இருக்கும், அந்த தொழிலுக்கு வந்து சேர்ந்த பெண்கள், சர்க்கஸ் கம்பனி பெண், மந்திரவாதியால் சிறை எடுக்கப்பட்ட பெண், சிலை என மாற்றப்பட்ட பெண், காமத்தைச் சுகிக்க கிளியாக மாற்றப்பட்ட பெண், என பெண்களால் அவர்களின் அலைக்கழிப்புகளால் கொட்டி நிறைக்கப்பட்ட கதைகள். குழந்தைகள். கொள்ளை நோய் கொண்டு சாகும் குழந்தைகள், பிரசவத்தில் சாகும் குழந்தை, பஞ்சத்தில் உணவுக்கு அடித்துக் கொள்ளும் குழந்தைகள், அன்னை மடி கிடந்த முலை அருந்தும் அமைதியில் லயித்த குழந்தைகள், முயல், பாம்பு,கிளி என சக ஜீவன்கள் அடங்கிய கதைகளின் உலகம். கதைகளாக சிதறுண்ட உலகம்.

‘என்னை கொசு கடிச்சா உனக்கு வலிக்குமா? அப்டித்தான் நான் சொல்லும் கதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சில கதைகள் கொஞ்சம் தொண்டை கரகரக்க வெச்சி கண்ணை கலங்க வைக்கும். அது அவ்ளோதான், அதுக்கு மேல அதுல ஒண்ணும் இல்லை”. தான் சொல்லும் கதைகளை உம் கொட்டி கேட்கச் சொல்லும் சீதாபதி, தனது கதைகளை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கமலக்கண்ணனுக்கு சொல்லி விடுகிறார். அப்படி விவேகத்துடன் கேட்டாலும் கூட, அதைக் கடந்து உணர்வெழுச்சி கொள்ள வைக்கும் பல சித்திரங்கள் நாவலுக்குள் உண்டு.குறிப்பாக இரண்டு சித்திரங்கள், தற்கொலை மனநிலையில் இருந்த தனக்கு வாழ்வை நோக்கி திரும்பும் சாத்தியங்களை திறந்து காட்டிய தாசியை நடுச்சாலையில் மனைவியுடன் காலில் விழுந்து ஆசி வாங்கும் இளைஞனின் சித்திரம். இரண்டாவது பார் விளையாட்டில், பற்ற வந்த கரங்களை விடுத்து, அப்படியே பறந்து வானில் ஏறி மறைந்துவிடும் சர்க்கஸ் பெண் அம்மணியின் சித்திரம்.

காமம், தனிமை, வாழ்க்கை, ஆத்மீகம் என இலக்கியம் பரிசீலிக்கும் அடிப்படைக் கேள்விகளை, அப்படி மையம் கொண்ட கேள்வி என ஒன்றில்லை என்ற பாவனையுடன் அணுகி பரிசீலித்துப் பார்க்க முனைகிறது நாவல். பெண் கொண்ட காமம் ஏன் இவ்வாறு இருக்கிறது என்றொரு வினா இந்த நாவலின் கதைகள் வழியே தோன்றி வந்தால் அதற்கான பதிலை, காட்டுக்குள் வாழும் அந்த நிர்வாணக் குடும்பத்தின் கதைக்குள் வைத்து வினாவை பரிசீலித்துப் பார்க்கிறது நாவல். இப்படி இந்த நாவலின் கதைகளுக்குள் மையமற்ற ஒன்று போலும் சித்தரிக்கப்படும் ஒவ்வொன்றும் அதற்கான வினாக்களை இந்த கதைச் சிதறல்களில் எங்கெங்கோ பொதிந்து வைத்திருக்கிறது. ஒட்டுமொத்த வாழ்வு சார்ந்த வினாக்களையும் அவற்றின் மீதான பரிசீலனைகளையும் கதைகளை கலைத்துப் போட்டு விளையாடுவதன் வழியே, முதுமையின் கண் கொண்டு இந்த வாழ்வு சார்ந்து துலங்கி வரும் ஒட்டுமொத்தமும் விலகலும் கனிவும் கொண்ட பார்வையை, வாசகனுக்குக் கையளிக்க முனைகிறது இந்த நாவல்.

முற்றிய போக்குவரத்து நெரிசலில் எது குறித்தும் கவலை இன்றி, தனது மழலைக்கு முலையளித்தபடி லயித்து கிடக்கிறாள் ஒரு தாய். அக்காட்சியில் உறைந்து போகிறார் சீதாபதி. மும்பையில் அவரது வாழ்வு அந்த நொடி முடிவுக்கு வந்து தனது தேசாந்திரத்தை தொடர்கிறார். சீதாபதி போலவே அன்னையின் மரணத்தால் மனமுடைந்து, ஆத்மீக அலைக்கழிப்பில் இருந்த சாமியாரைச் சேருகிறார் சீதாபதி. அந்த சாமியார் அவரது அலைக்கழிப்பில் இருந்து இந்த சித்திரம் வழியேதான் மீளுகிறார். சீதாபதிக்கு காட்சியாக அந்த சித்திரம் எதை அளித்ததோ, அது அந்த சாமியாருக்கு தரிசனமாக மாறுகிறது, பூவில் அமரும் வண்டு துவங்கி, அந்திச் சூரியன் வரை அவரைச் சூழ இருக்கும் அனைத்தும் அன்னை மடியில் கிடந்து, அமுதருந்துவதில் லயித்து கிடக்கும் குழந்தையாக, இந்தப் புவி மொத்தமும் அன்னை மடியாக அவருக்கு தரிசனம் அளிக்கிறது.

பதின்பருவத்தில் வீட்டை விட்டு ஓடிய சீதாபதி முதியவராக கிராமம் திரும்புகிறார். மந்திரவாதி கதையில் வரும் இளவரசி, மந்திரவாதியின் பிடி நீங்கியதும் அதுவரை அவள் கொண்ட இளமை நீங்கி தொண்டுக் கிழவியாக காட்சி தருகிறாள். சீதாபதியின் நிலைக்கும் இந்தக் கதைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? ஊரெல்லாம் சுற்றிவிட்டு வருகிறார் சீதாபதி. ஊர் விட்டு எங்கும் போகாதவராக இருக்கிறார் வெங்கிட்டு கிழவர். இந்த இளவரசி கதையை வெங்கிட்டுவாக இருந்து கேட்டால் எழுபது வருடம் கழித்து அவர் சீதாபதியை சந்திக்கும் தருணத்தின் அபத்தம் புரியும். இப்படி கலைந்து கிடக்கும் இந்தக் கதைகளை தொடுத்துக்கொள்ளும் புள்ளிகளும் இந்த நாவலின் கதைகளுக்குள் கலைந்தே கிடப்பதே, முன் பின்னாக கற்பனை ஓடி, இவற்றை தொகுத்து அடைவதே இந்த நாவல் தரும் முதன்மை வாசிப்பின்பம்.

நாவலுக்குள் ‘வக்கணையாக ‘ எழுந்து ஒலிக்கும் சீதாபதி கிழவரின் மதுரை பேச்சு வழக்கு இந்த நாவலின் வாசிப்பு சுவாரஸ்யத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அடுத்ததாக அவரது வர்ணனைகள். மெதுவாகப் போகும் பேசின்ஜர் புகைவண்டியின் வேகத்தை இப்படி விமர்சிக்கிறார்- ”தான் போய்ச்சேரப் போற ஊர் இருக்குற உலகம் பிறக்கரத்துக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கு அப்புறம் என்ன” எனும் வேகத்தில் போகிறது புகைவண்டி. அடுத்ததாக மழையில் கரைந்து மறையும் உடல், சதுரமான யானை, தலையில் சுடருடன் எண்ணைக் கடலுக்குள் இறங்கும் மனிதன் என புத்தம் புதிதான,கனவுகளை கிளர்த்தும் படிமங்கள். இவற்றைப் போல பல நாவலின் பலம் எனில், நாவலின் பலவீனம் [அதைப் பூசி மெழுகும் அத்தனை கூறுகளும் நாவலுக்குள் வெற்றிகரமாக தொழில்பட்ட போதிலும்] இதில் மிக குறைவாக, அல்லது இல்லவே இல்லாத நிலக் காட்சிகள். சீதாபதியை தவிர்த்து கமலக்கண்ணன் வாசகருக்கு சொல்லும் கிராமச் சித்தரிப்பு கூட குறைவாகவே இருக்கிறது. குன்று, அதன் மேல் கோவில், ஊர் முடிவில் ஜமீன் பங்களா, கிராமச் சாலை, பிரதான சாலையுடன் நிகழ்த்தும் சந்திப்பு இவை தாண்டி கிராமம் எனும் சித்தரிப்பில் மேலதிகமாக எதுவுமே இல்லை. வருடத்தில் ஆறு மாதமும் தண்ணி ஓடும் அந்த மதுரை, சோழவந்தான் பக்கத்து தெக்கத்திகிராம வாய்க்காவுக்கு அதன் தண்ணிக்கு மூலம் எது?- வாசகனுக்கு தேவை இல்லை எனக் கருதி கமலக்கண்ணன் விட்டுவிட்டான் என வைத்துக்கொண்டாலும். கிழவர் பாரதம் முழுதும் சுற்றியவர் அவர் சொல்லும் கதைகளில்கூட நிலம் சார்ந்த தனித்தன்மை கொண்ட காட்சிகள் என எதுவும் இல்லை.

நிலக்காட்சி சார்ந்த சித்தரிப்பு இன்மையின் காரணமாக நிகழும் பிரதான பலவீனம் இந்த நாவலின் ஆத்மீக நோக்கை, அது வெளிப்படும் விதத்தை பலவீனப்படுத்திவிடுகிறது என்பதே. இந்த நாவலில் சித்திரிக்கப்படும் ஆத்மீக நிலை அல்லது வியக்தியை ஒரு புரிதலுக்காக பௌத்தத்தின் [அதாவது மதத்துடன் தொடர்பற்ற] சென் நிலை என வகுக்கலாம். நிறுவனமயப்பட்ட ஒன்றின் பிரதிநிதியாக இங்கே சைவ துரையை துரத்தும் நாகா பாபாவும், பௌத்தனும் வருகிறார்கள். நேரெதிராக சீதாபதி சத்திரத்தில் சந்திக்கும் பைராகி இந்த நிறுவனத்துக்கு வெளியில் உள்ளவர். அதாவது மெய்மையை அறிந்தவர். அவர் பசி காமம் என அடிப்படை விசைகளான இவை மட்டுமே கொண்டு, அதற்கு மேலான அனைத்தும் கற்பிதமே என்று இந்த உடலை தூய விலங்காக பார்க்கிறார். இதற்கு மேலான அனைத்தும் கற்பிதமே என்பதற்கு, ஆளுமை ஆளுமையாக மாறி அவரது குரு விளையாடிப் பார்த்த பாவனை விளையாட்டை குறிப்பிடுகிறார்.[சென் குருமார்களின் கதை போல ] இரவில் ஒளிர்கிறார். சென்றபிறகு அவர் அமர்ந்திருந்த திண்ணையில் வாழைப்பூ அளவு பெரிய மல்லிகைப்பூ இருக்கிறது. அந்த திண்ணையில் அமர்ந்து சீதாபதி இயற்கையுடன் கரைகிறான். ஏகாந்தம் என்பதை உணர்ந்து அந்த நொடி முதல் தனிமைத் துயரை இழக்கிறான்.

அகம் சார்ந்த நிலைபேறு எப்போதும் புறம் சார்ந்த ஒன்றால் ஒரு நாணயத்தின் இரு பகுதி போல சமன் செய்யப்பட்டிருக்கும். சாமியார், பால் கொடுக்கும் அம்மாவில் இருந்து அகவயமாக அடைந்த ஒன்று, புறத்தில் அவர் காணும் யாவும் அன்னை தரிசனம் என மாறுவது, என அதன் நிலை இந்த நாவலுக்குள்ளேயே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மாறாக சீதாபதி அகம் கொள்ளும் படிமங்கள் [சதுர யானை, சுடர் எரியும் தலையுடன் எண்ணைக் கடலில் இறங்குவது,மழையில் உடலே கரைந்து வெறும் வியக்தியாக எஞ்சுவது] அந்தரத்தில் இருந்து அவருக்குள் விழுந்து கவிந்தது போலவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறாகவே எஞ்சுகிறது. அக உணர்வாக இயற்கையில் கரைந்து அழியும் சீதாபதி, நாவலுக்குள் எங்குமே புறவயமாக இயற்கையில் தோய்ந்து லயிக்கும் சித்திரங்களே நாவலுக்குள் இல்லை. காரணமாக அந்த வியக்தி நிலை ஒரு நிலைமாற்றம் என வாசிப்பில் உள்வாங்கப்படாமல் ஒரு கவித்துவ அனுபவமாகவே உள்வாங்கப்படுகிறது. சீதாபதி கொண்ட இந்த நிலை மாற்றம் ”அந்தரத்தில்” நிகழ்வதால் இறுதியாக அவர் கமலக்கண்ணன் வசம் இந்த வாழ்வு குறித்தும், வாழ்ந்துவிட்டுப் போகும் விதம் குறித்தும் சொல்லும்போது, பல விஷயங்கள் கண்டு, கடந்து, வாழ்ந்து முடித்த கிழவன் சொல்லும் விவேக ஞானம் கொண்ட’ கூற்றாக’ ஒலிக்காமல், சீதாபதி சொல்லும் மற்றொரு அபிப்ராயம் போலவே நின்றுவிடுகிறது.

ஒருமுறை பழுதுநீக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த தேர் ஒன்றின் [சக்கரத்தின் அச்சு மையம் ஐந்து அடி உயரத்தில்], முன் பின் சக்கரங்களுக்கு இடையே உள்ள நான்கடி அகல இடைவெளியில் நின்றுதேரின் அடித்தட்டை அண்ணாந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கணம் பெண் ஒருவளின் தொடைகளுக்கு இடையே சிறுத்த உருவம் கொண்டு நின்று, அவளது பிரும்மாண்டமான இடைக்கரவை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பதாக தோன்றி, சிலிர்ப்போடும் வெட்கத்தோடும் பார்வை நகர்ந்த கணம், அடித்தட்டில் இடுக்கிலிருந்த, கண்மறைவாய் செதுக்கப்பட்டிருந்த அந்த மரச்சிற்பம் கண்ணில் பட்டது. வளைந்த வில்லாக தலைகீழாக நிற்கிறாள் பெண்.அவள் பின்னால் அந்த வில்லின் நாண் என நிற்கிறான் ஆண். கலவி. [விசித்திர கோணத்தில் நிகழும் அந்தக் கலவியை நிஜத்தில் முயன்றால், உச்சம் நிகழ்ந்ததும் பாடையை எண்கோண வடிவில் அமைக்கவேண்டிவரும்]. அந்தச் சிற்பத்தின் உன்மத்தத்தை சமன்வயப்ப்படுத்தும் ஒன்றாக மாற்றிக் கொண்டிருந்தது, தலைகீழாக வளைந்து நிற்கும் அந்தப் பெண் முன் தவழும் நிலையில் அமர்ந்து, அவளிடம் முலையமுதம் அருந்தும் அவளது மழலை.

பாரத நிலம் முழுதும் பரவி ஆட்கொண்ட சிற்பத் தொகைகளில் எங்கும் சேராத, பெரும்பாலும் கண்ணிலேயே படாத, உன்மத்தம் கிளர்த்தும், என்றோ கண்ட அந்தச் சிற்பத்தின்,அது கிளர்த்திய உணர்வு நிலைக்கு, முகம் அளித்தது இந்த ‘ஊர் சுற்றி’ நாவல். காட்டுக்குள் தனது மழலைக்கு முலையளித்தபடியே சீதாபதியுடன் கலவி கொள்ளும் பெண்ணுக்கு, அந்த நாவலில் வரும் பெரும்பாலான பெண்களைப் போலவே பெயர் இல்லை. லஸ்காக்ஸ் குகைக்குள் பதினைந்தாயிரம் வருடங்களுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்களில், ஒரே ஒரு மனித உருவம் உண்டு. அது பெண். வணங்கப்பட்டவளோ, அல்லது வதைக்கப்பட்டவளோ, அவள் பெயர் என்ன என்பது தெரியாது. அந்த குகைப்பெண்ணில் துவங்கி இந்த நாவலின் வனப் பெண் தொடர்ந்து, சீதாபதியின் அந்திமக்கால கிழத் தோழி வரை ஒரு கோடு இழுத்துவிட முடியும். அப்படித் தோன்ற வைப்பதே இந்த நாவலின் உத்தேசம். அந்தக் கோட்டை வாசக மனம் போட முயல்கையில், அதை எவ்வளவு தூரம் அழித்து விளையாட முடியுமோ அவ்வளவு தூரம் அழித்து விளையாடுகிறது இந்த நாவல். இதன் அழகு.

ஊர் சுற்றி -யுவன் சந்திரசேகர் -காலச்சுவடு பதிப்பகம்.

மானுடத் துயர்- பால்கனிகள் தொகுதியை முன்வைத்து….

கடலூர் சீனு

cuddalore seenu

மானுட துக்கம் என்றொரு சொல் உண்டு, இந்த உடல் கொண்டு இங்கு பிறந்து வருவதனாலேயே, அதன் எல்லைகள் காரணமாக , மானுட உடலம் உருவாகும்போதே அதன் கட்டமைப்புக்குள் எழுதப்பட்டுவிட்ட துக்கம். மானுடம் அனுபவிக்கும் அனைத்து துக்கங்களும், அதன் பிரதிபலிப்பு மட்டுமே என்று தத்துவ ஆய்வுகள் உரைக்கின்றன. இந்த பிரதிபலிப்பு துக்கங்களைத் தொகுத்து சாரமான மானுட துக்கத்துக்கு வந்து விழுபவனே ஆத்ம சாதகன்.

இவை எல்லாம் உயர் தளத்தில், இவை குறித்த எந்த பிரக்ஞையும் இன்றி இந்த துக்கத்தில் தவறி விழுவது இருக்கிறதே. அந்தத் துயர் இணையே அற்ற ஆறுதலே அற்ற துயர். நமக்கு மிக அருகே அத்துயரில் விழுபவர்கள். உலவிக் கொண்டிருக்கிறார்கள். அரவாணிகள். நீ ஒரு ஆம்பளையா என்ற வினாவை எதிர்கொண்டு கொலைகள் நிகந்திருக்கின்றன. நீயெல்லாம் ஒரு பெண்ணா எனும் ஒற்றை சொல்லில் பல தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. அடையாளத்தைச் சந்தேகிக்கும் ஒரு சொல்லை சமூகத்தால் தாள இயலாது. எனில் தனக்கான அடையாளத்தை இந்த உடலுக்குள்ளிருந்து, உறவுகளுக்குள்ளிருந்து, சமூகத்திலிருந்து கணம்கணமாய் நித்தம் துயரத்தையும் அவமதிப்பையும் உண்டு செறித்தபடி, நிறுவ முயல்கிறார்களே அரவாணிகள் அவர்களின் துக்கம் , புத்தன் அடைந்த துக்கத்தைவிடப் புனிதமானதுதான்.

அரவாணிகள் குறித்த பதிவுகளும் ,ஆவணங்களும் நிறைய கண்டிருந்தாலும் , அவர்கள் குறித்த புனைவுகளில் ஆழமான ஒன்றென ,சு .வேணுகோபால் அவர்களின் சமீபத்திய நெடுங்கதையான ‘பால்கனிகள் ‘ புனைவையே சொல்வேன் .

மதுரை கம்பம் ஆகிய ஊர்களில் பரவி வாழும் , விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட , [இந்தத் தலைமுறையில் வேலைக்கு செல்லும்] கூட்டுக் குடும்பம் ஒன்றினில் நிகழும் கதை . கிட்ணா [ஊராருக்கு மோகினி] அவர்களின் செல்லக் குழந்தை . அவன் வளர வளர அவன் பால் திரிபு கண்டிக்கப்படுகிறது . ஒரு சூழலில் தான் ஒரு பெண் என திட்டவட்டமாக அறிந்து , தன பெண்மையைக் காத்துக்கொள்ள வீட்டை விட்டு வெளியேறுகிறான் கிட்ணா . அதன் விளைவாக அவனுக்கான சொத்தையும் இழக்கிறான் .

நெடுநாள் கழிந்து ஒரு பெண்ணாக , தனது குலதெய்வ வழிபாட்டில் தனது குடும்பத்தைக் காண வருகிறான் . அவமானப்படுத்தி விரட்டப்படுகிறான் . மீண்டும் பல வருடம் கழித்து கிட்னாவை அவனது அக்கா ஒரு பதட்டமான சூழலில் சந்திக்கிறாள் . கிட்னா அவனது இயல்பான சமையல் திறமையால் ஒரு உணவகத்தில் மாஸ்டராக இருக்கிறான் . அவனது பாலியல் தோழன் அவனை ஏமாற்றிவிட்டுச் சென்ற சூழலில், ஒரு மகனைத் தத்தெடுத்து ,தனிமையில் வாழ்ந்து வருகிறான் .

திவ்யாவின் நோக்கில் சொல்லப்படும் புனைவு , ஒரு பெண்ணாக தனது தம்பியை நினைத்துக்கூட பார்க்க இயலாத திவ்யா , இறுதியில் அவனுக்குள் உறையும் தாய்மையைக் கண்டு , அதன் வாயிலாக அவனது ஆளுமையை அவள் அங்கீகரிப்பதுடன் நிறைவு கொள்கிறது .

பால்கனிகள் தமிழின் யதார்த்தவாதம் ,இயல்புவாதம் முயங்கிய புனைவு .நவீன தமிழ் இலக்கியம் அதன் வரலாற்றுப் போக்கில் இயல்புவாத , புனைவுகளில் உச்சம் தொட என்ன தேவையோ அதை மட்டும் ‘கண்டுபிடித்து ‘ நீக்கி படைப்புகளை உருவாக்கி முன் செல்ல . மாறாக பிற மொழிகளில் அது செழித்தது . பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது புனைவின் வீச்சை தமிழில் தேடினால் , எதுவும் தேறாது என்பது ஒரு அப்பட்டமான உண்மை .

ஒரு காலகட்டம் பின்வாங்கி , அடுத்த நகர்வு துவங்கும் இச்சூழலின் பதாகை என நாஞ்சிலின் ‘யாம் உண்பேம் ‘ போல சில புனைவுகளை பட்டியல் இட்டால் அதில் இணையும் ஒன்றாக ‘பால்கனிகள் ‘ இருக்கும் . இக் குறுநாவல் அதன் அடிப்படைக் கட்டமைப்பால் செறிவாக உருவாகி , பாத்திரங்களை குறைந்த சொற்களில் முன்வைத்து புனைவின் வளர்ச்சிப் போக்கில் அவர்களின் ,மாறும் ,மாறாத குண இயல்புகள் துலங்குவதன் வழியே வாழ்வுக்கு இணையான நிகர் அனுபவமாக விரிகிறது .

திவ்யாவின் நோக்கில் சொல்லப்படும் இப்புனைவு , அவளது நோக்கில் கிட்ணா மெல்ல மெல்ல திரிபடைவதை ,அவள் அடையும் அதே குறுகுறுப்புடன் வாசகருக்குள் நிகழ்கிறது . குறிப்பாக தன மகளுக்கு பால் தர இயலாமல் ,தகிக்கும் தனங்களுடன் திவ்யா வீட்டுக்கு வரும்போது , கிட்ணா தன் மகளுக்கு அவனது முலைக் காம்பை சுவைக்கக் கொடுத்து , ஆறுதல் செய்வதைக் காணும் தருணம் , அவளது திகைப்பு வாசகனுக்கும் தொற்றுகிறது . புனைவின் இறுதியில் மோகினியின் குழந்தை பரிதியை இவன் கொடுத்து வைத்தவன் எனும் மனதுடன் எடுத்து கொஞ்சுகிறாள் . இந்த மெல்லிய மாற்றம் இங்கும் நிகழ ,இதுவே இந்தப் புனைவை கலைத் தருணம் கூடிய படைப்பாக மாற்றுகிறது .

கிட்ணா கோவில் கொடைக்கு வருகிறான் , தகராறில் பொறுத்துப் போகும் கிட்ணா ‘போடா அலிப்பயலே ‘ என்ற வசவு காதில் விழுந்ததும் ‘ஆமாண்டா அது என்ன நொட்ட வரும்போது தெரியலையோ ? இன்னொருக்கா சொல்லிப்பாரேன் ,கொட்டையில மிதிக்கிறேன் ‘ என ஆவேசமாக புடவை வழித்துக் கிளம்பும்போது , ” எப்டிக்கா மனுஷனால வெறுக்க முடியுது ? வெறுக்கறதுக்காக வாழ முடியுமா ?” எனக் கேட்கும்போது , உண்மையில் உடன் வாழும் சக மனிதன் என்றே மனம் ஏற்கிறது .

நவீன காவிய நடையின் உச்சம் வெண் முரசு சிகண்டினி எனில் , எதார்த்தவாதத்தின் முகம் மோகினி . இன்றைய தமிழ்நாவல் இலக்கிய வகை பேதங்கள் செழிப்பாக இயங்கும் ,வரலாற்று சாட்சியம் இவை இரண்டும் .
பால்கனிகள் கதையில் ஒரு வரி வருகிறது ”இயற்கை சிலருக்கு மட்டும் தனது சாரமான காருண்யத்தை ,அவர்களின் இயல்பாக பொதிந்து வாழ அனுப்பி விடுகிறது ”. பால்கனிகள் நாம் கட்டி உருவாக்கிய அறம் ,மனித நேயம் இவற்றுக்குப் பின்னுள்ள அற்பமான ‘மையத்தை ‘ ஒரு மிகைச் சொல்லுமின்றி பரிசீலிக்க வைக்கிறது .

மார்பகங்கள் பால்தரும் கனிகள் எனில் , குழந்தையைத் தந்து ,தாய்மையைத் தந்து , பால் புகட்ட இயலா மார்பகங்களைத் தந்த , இந்த இயற்கைப் பிறழ்வை எதில் சேர்க்க ?

இந்த வாதையின் கலை வெற்றியே பால்கனிகள் .

இரு நெடுங்கதைகள் அடங்கிய பால்கனிகள் தொகுதில் இரண்டாவது நெடுங்கதை ‘இழைகள்’. அவமதிப்பும், புறக்கணிப்பும், கீழ்மையும், கொஞ்சம் காருண்யமும் இழைகளாகக் கொண்டு நெய்யப்பட்ட வாழ்க்கையைச் சுமக்கும் ராமமூர்த்தி எனும் அரசுப்பள்ளி ஆசிரியரின் நினைவுகளாக விரியும் கதை.

தமிழக அரசு பாடப்புத்தக அட்டைகளில் ஒரு தொடர் வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். தீண்டாமை ஒரு பாவச்செயல். தீண்டாமை பெருங்குற்றம். தீண்டாமை மனிதத்தன்மை அற்ற செயல். இந்த வாசகங்கள் என்று காலாவதி ஆகும்? தீண்டாமை என்பது சொரியாசிஸ் போல வெளியே தெரியும் அடையாளம் மட்டுமே. நோயின் வேர் எந்தக் கலாச்சாரமும், பண்பாடும் சென்று தீண்ட இயலா மானுட மனத்தின் இருண்ட ஆழத்தில் எங்கோ உள்ளது.

ஜீன் குடால் தனது ஆவணம் ஒன்றினில் மனிதனுக்கும் குரங்குக்குமான ஆச்சர்யகரமான ஒற்றுமை என வன்புணர்வு உள்ளிட்ட சில அடிப்படை அலகுகளை விவரிக்கிறார். அதில் ஒன்று ‘வலுத்த’ குரங்கு இளம் பெண்கள் கூட்டத்துடன், பாதுகாப்பு மிகுந்த வலுவான கிளையில் தங்குகிறது. தசை புடைத்த ருசியான பழங்கள் அதற்கு மட்டுமே. ‘இளைத்த’ குரங்குகள் வலுத்தவனுக்கு அடிமை சேவகம் செய்து, அண்டி வாழ்ந்து , அவன் விட்டுத் தரும் உணவுகளை உண்டு ஜீவித்துக் கிடக்கின்றன.

இக் கீழ்மையின் வேர்கள் மானுடத்துக்கும் அப்பால் உள்ளதோ என்றும் தோன்றுகிறது. அடிமைகள் இன்றி உபரி இல்லை. உபரி இன்றி உடமை இல்லை. குடும்பம், தனிச் சொத்து, அரசு, கடந்தகாலம் எதுவுமே இல்லை. அடிமைகளை வெறுக்காமல் சக மனிதனை ஒரு மனிதனால் அடிமையாக நடத்த இயலாது. இது மற்றொரு அடிப்படை உளவியல் சிக்கல்.

நில உடமை சமுதாயம் மாறி, ஜனநாயக யுகத்துக்குள் நுழைந்துவிட்டோம். ஆனால் நமது சமூக ஆழ்மனம் இந்த நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து முற்றாக வெளியேறி ஜனநாயகப் பண்பை எய்திவிட்டதா? என்று வினவினால், விடை மழுப்பலாகவே அமையும்.

எனது நண்பர் அமெரிக்கா சென்று இறங்கிய முதல் நாள், முதன் முதலாக கேட்ட அறிவுறுத்தல் இது. ”நீங்க பாட்டுக்கு கேஷுவலா , கைகுலுக்க கை நீட்றதோ, தொட முயற்சி பண்றதோ பண்ணிடாதீங்க. அவங்க வெள்ளக்காரங்க, நீங்க அவங்ககிட்ட அப்டி நடந்துக்கறது இங்க சட்டப்படி குற்றம்.”

வேறொரு நண்பர் சொன்னார் ”பலநாள் சொந்தம் போல முகம் பூரிக்க ஹாய் என்று சொல்வார்கள். அவ்வளவுதான் அத்துடன் முகத்தை திருப்பிக் கொள்வார்கள். நீங்கள் என்றொரு ஜீவன் அங்கிருப்பதே அவர்களுக்கு தெரியாது. அவர்களின் பிளைன்ட் ஸ்பாட் அத்தனை வலுவானது”

சமீபத்தில் வெள்ளையானை நாவல் மீதான உரையாடல் ஒன்றினில் ஜெயமோகன் சொன்னார் ” ஒரு தலித்தால்தான் தலித்தின் துயரை எழுத முடியும் எனும் கூற்று உண்மையானால், ஒரு தலித்தால் மட்டுமே அந்த எழுத்திலுள்ள வலியை உணரமுடியும் என்றாகிறது. இது இலக்கியத்துக்கே புறம்பானது. தலித் இலக்கியம் எனும் வகைப்படுத்தலால் [ சமூகத்தில் அவர்கள் எப்படி தனிமைப்படுத்தப்படுகிறார்களோ ], தனிமைப்டும் போக்கே இறுதியில் எஞ்சும் ”.

சாதிக் கீழ்மையால், தனிமைப்படுத்த்ப்படும், புறக்கணிக்கப்படும், ஒருவன் குருதி ஈரம் உலராத தனது காயத்தை, அதன் வலியை, நினைத்துப் பார்ப்பதே ‘இழைகள்’ எனும் நெடுங்கதை. துயரத்தில் மேல் சாதி, கீழ் சாதி உண்டா என்ன? அது மானுடப் பொது. சாதியின் பெயரால் தான் அடைந்த கீழ்மைகள், அது ஏன் அதன் வேர்கள் எங்கே என்று புரியாமல் திகைத்து நிற்கும் ஒரு மிடில்க்ளாஸ் மனதின் நினைவலைகளே இக் கதை.

இலக்கியப் புனைவுகளில், குறிப்பிட்ட இரண்டு கதைகள் மிக தனித்துவமானது. முதலாவது தோப்பில் முகமது மீரானின் சன்னதியில் எனும் கதை. அடுத்தது ஜெயமோகன் எழுதிய வணங்கான் எனும் கதை.

சன்னதியில் கதையில் அத்தத் ஊரின் [கப்பலில் போய் சம்பாதித்த] பணக்கார பாய். அவருக்கு இரண்டு மகன்கள். வள்ளி துவங்கி அவளது பேரன் வரை அனைவரும் அவரது குடும்பத்தின் வேலையாட்கள். ராஜா போல வாழ்கிறார் பாய். வேலைக்காரர்களை மனிதர்களாக மதிக்காதவர். குடும்ப சண்டை உக்கிரம் அடைந்து தனது சொத்துக்களை இரு மகன்களுக்கும் எழுதி வைக்கிறார். வள்ளி குடும்பம். இரு மகன்மார் வீடுகளுக்கும் மாறி மாறி அடிமை சேவகம் செய்கிறது. நோய் முதுமை இரண்டும் பாயை குடும்பத்தினரின் புறக்கணிப்புக்கு ஆளாக்குகிறது.

ஒரு நாள் காலை பாய் கண்விழித்துப் பார்க்கிறார். நடக்க இயலாத நோய் முற்றிய பாய், மசூதி வாசலில் அனாதையாக கைவிடப்பட்டுக் கிடக்கிறார். அழுது புலம்புகிறார். எவரும் அவருக்கு உதவும் நிலையில் இல்லை. வள்ளி மட்டும் ஒவ்வொரு நாளும் அவரைக் கடந்து செல்லும்போதும் அவரை சுத்தம் செய்து, ஏமான்கள் தன் குடும்பத்துக்கு அளிக்கும் மிச்சிலில் கொஞ்சத்தை அவரது வட்டிலில் வார்த்துவிட்டு செல்கிறாள்.

ஒரு நாள் புயலும் மழையும் வலுக்கிறது. பாய் அழும் குரல் மழையின் ஓலத்தையும் தாண்டி, சேரியில் இருக்கும் வள்ளியின் வீடு வரை கேட்கிறது. சிறுவன் முருகன் திண்ணையில் இருந்து குதித்து இறங்குகிறான். ”அம்மா நம்ம எஜமான்மா” என்று கூவியபடி மழைக்குள் புகுந்து ஓடுகிறான். ஒரு கணம் யோசிக்கும் வள்ளி, புடவையை இழுத்து செருகி தானும் எஜமான் நோக்கி ஓடுகிறாள். நிர்வாணமாகக் கிடக்கும் தன் எஜமானை தாய் போல ஏந்திக்கொண்டு வீடு வருகிறாள்.

வணங்கான் கதை கறுத்தான் எனும் பண்ணை அடிமை, ஒவ்வொரு கணமும் எதிர்ப்பால் மீண்டெழுந்து கறுத்தான் எனும் ஆளுமையாக உயரும் பரிணாம கதியை எழுச்சியுடன் முன்வைக்கும் கதை.

முதல் கதை தமிழில் நிகழ்ந்த அபூர்வங்களில் ஒன்று. நில உடமைச் சமூகம் எனும் கலாச்சாரம் ஒன்றினை கட்டிவைத்த அடிப்படை சரடு ஒன்றினை, நேர் நிலை அம்சம் ஒன்றினை இத்தனை வலுவாக, உளம்பொங்கும் வண்ணம் சொன்ன கதைகள் குறைவே.

இரண்டாவது கதை மீறலின் கதை. என்னை உன்னால் அவமதிக்க முடியாது எனும் நிலைக்கு , ஒவ்வொரு கணமும் தன்னைச் சூழும் கீழ்மைகளைச் சுட்டெரித்து மீண்டெழும் ஆளுமை ஒன்றின் கதை.

இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடைப்பட்ட நிலை ஒன்று உண்டு. தனக்கு நிகழ்வதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், மீறிச்செல்லவும் வகையறியாமல் , கிடந்துழலும் நிலை. இந்த நிலையில் நிற்கும் ராமமூர்த்தி எனும் ஆசிரியர், தனக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட நாளில், தான் கடந்து வந்த பாதையை எண்ணிப்பார்க்கும் வகையில் கூறப்பட்ட கதை.

போடிநாயக்கனூர் அருகே, வேலுப்பிள்ளையின் பண்ணையாள் சடையாண்டி மாரி தம்பதி. அவர்களுக்கு இரண்டு மகன் இரண்டு மகள். மூத்தவன் பரமன். ரேணுகா டீச்சர் அவனுக்கு ராமமூர்த்தி என பெயரிட்டு பள்ளியில் சேர்க்கிறாள். காளிமுத்து எனும் கருப்புச் சட்டைக்காரர் ‘நீங்கள்லாம் படிச்சாத்தான் இனிமே உங்களுக்கு விடிவு காலம்’ என்று சொல்லி ராமனை ஆசிரியர் பயிற்சி கல்வியில் சேர்க்கிறார்.

ராமமூர்த்தியின் குடும்பம் மொத்தமும் , பண்ணண வேலை, கடன் என உழைத்து களைத்து அவனை ஆசிரியர் ஆக்குகிறார்கள். ராமன் ஆசிரியர் ஆகிறான் வீடு கட்டுகிறான். குழந்தைகள் வளர்கிறார்கள். ராமமூர்த்தியின் மனைவி முத்துலட்சுமி, கணவரின் தம்பி, தங்கைகளை சண்டை போட்டு விரட்டி விடுகிறாள். மூத்த தங்கையின் மகளை, மனைவிக்கு தெரியாமல் செலவு செய்து டீச்சர் ட்ரைனிங் சேர்க்கிறார். ராமமூர்த்தி. பணி நிறைவு எய்த ஆறு வருடங்கள் இருக்கும் நிலையில் அவருக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கிறது. தான் வாழ்ந்த, கீழ்மைகளும் அவமதிப்புகளும், கொஞ்சம் கருணையும் கவிந்த இந்த நடுத்தர வாழ்வை , விருது கிடைத்ததால் வந்த சிறு உவகையின் பின்னணியில் நினைவில் புரட்டியபடி வீடு நோக்கி நடக்கிறார் ராமமூர்த்தி.

கதையின் பல இழைகளில் ஒன்றாக, அரசுப் பள்ளி, அதன் சுகாதாரம், ஆசிரியர்கள் தொடங்கி மாணவர்கள் வரை கடைபிடிக்கப்படும் சாதிப் பாகுபாடு என சமகால கீழ்மையின் வரலாறு ஒன்று, கொஞ்சமே சொல்லி மீதியை விட்டு கலாபூர்வமாக ஆவணப்பதிவாகிறது.

ராமமூர்த்திக்கு சுயமாக வந்ததா, அல்லது கல்வியால் விளைந்ததா இந்த சுயமானம். அப்பாவையும் அம்மாவையும் வயது பேதமின்றி முதலாளி வீட்டில், எல்லோரும் பெயர் சொல்லி அழைப்பதில் அவனுக்கு வருகிறது முதல் கோபம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவன் கோபம் புரிவதே இல்லை. இதுல என்ன கிடக்கு என்றே நினைக்கிறார்கள்.

பள்ளியில், இளம்பிராயக் காதலில், ஆசிரியர் பணியில், தேநீர்க்கடையில் என ராமமூர்த்தி தன் வாழ்வு நகரும் அத்தனை எல்லைகளிலும் புறக்கணிப்பின் வேதனையை எதிர்கொள்கிறான். கதைக்குள் ஒரு மிகைச்சொல்லுமின்றி நம்மை நிம்மதி இழக்க வைக்கும் தருணங்கள் பல வருகின்றன. குறிப்பாக ராமமூர்த்தியின் கறிக்குழம்பு மோகம் அவனை அலைக்கழிக்கும் தருணங்கள். மதியம் வீட்டுக்கு வரும் அப்பா களியை சட்டியில் வைத்து கரைத்தபடி பிள்ளைகளை அழைக்கிறார். பிள்ளைகளோ இன்று அம்மா சாயிபு வீட்டிலிருந்து கறி பிரியாணி கொண்டு வருவதாகவும் அதற்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். பிள்ளைகள் இன்று ”நல்ல சோறு ” சாப்பிடப் போகிறார்கள் என்று உவகையுடனும், பங்குவைக்க வேண்டிய தேவை இல்லாததாலும் அன்று வயிறார சாப்பிடுகிறார் அப்பா. பஞ்சு போன்ற கறி ருசி இழுக்க, பிள்ளைகள் நால்வரும் அம்மாவை தேடி போகிறார்கள். அம்மா வழியில் எதிர்படுகிறார்கள். மீந்த குழம்பிலும், பிரியாணியிலும் கறியைத் தேடி பிள்ளைகள் [குறிப்பாக ராமமூர்த்தி] ஏமாறுகிறார்கள்.தம்பியும் தங்கைகளும் அள்ளி அள்ளி உண்கிறார்கள், அம்மா தங்கைகளின் தலையை தடவியபடி அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைத்துக்கும் மேல் ராமமூர்த்திக்கு வலி தரும் நினைவாக நிரந்தரமாக தங்குவது, அந்த பிரியாணி அடி பிடித்த பகுதி. அதை ஒரு பழைய வட்டிலில் கூட கொடுக்காமல், அம்மாவின் முந்தானையையே பையாக மாற்றி அதில் கொடுத்து அனுப்புகிறார்கள். அன்று அந்த பிரியாணி அவனுக்கு ருசிக்காமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம்.

ஊர் திருவிழா நெருங்க, சக மாணவர்களுடன் கிளம்ப எத்தனிக்கிறான். நினைவில் கிடாவெட்டு, கறிக் குழம்பு. அவர்களோ ராமமூர்த்தியும் உடன் வரப்போகிறான் என அறிந்து குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே அவனை புறக்கணித்துவிட்டு போய் விடுகிறார்கள். யாருமற்ற வீட்டின் முன் அவமானத்தை சுமந்து தனித்து நிற்கிறான்.

உறவில் அவனுக்கு தாத்தா முறை. வாரம் ஒரு முறை கறிக் குழம்பு சாப்பிடும் அளவு வசதி கொண்டவர். கறிக்குழம்பு வாசனையை பின்பற்றி அவன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் [சாதி சொல்லி திட்டி] ‘அடிச்சி பத்து நாயை’ என்கிறார். அந்த வீட்டு செண்பகத்துடன் அவளுக்கு திருமணம் முடிந்த பின்னும் ராமமூர்த்திக்கு உறவு தொடர்கிறது. நாக்கு ருசி, காமப் பசியில் வந்து நிற்கிறது.

சாதி மதம் பாராமல் நிகழ்வது கலவி மட்டுமே. சின்ன முதலாளி, ராமமூர்த்தியின் பெரிய தங்கையை சுகிக்கிறான். அங்கே சாதி தடை இல்லை. ராமமூர்த்தி நசீமாவை சுகிக்கிறான். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. அங்கு மதமும் தடை இல்லை.

சாதிப் படி நிலையில் கீழே உள்ளவனால் ஊருக்கு வெளியில்தான் மனை வாங்கி வீடு கட்ட முடியும். மின்சாரமே இல்லாமல், கூடவே புதிதாக வரும் அண்டை வீட்டாரின் புறக்கணிப்புடனும் பல நாட்கள் கழிக்கிறார்கள். கட்டிய வீட்டில் மாட்டி வைக்க அப்பா அம்மாவின் ஒரு புகைப்படம் கூட இல்லை.

அவனது ஆசிரியர் பயிற்சி விடுதிக்கு அவன் கேட்ட பணத்துடன் அப்பா வருகிறார். ராமமூர்த்திக்கோ அவன் விட்டு விலக விரும்பும் கீழ்மையை மீண்டும் அவன் மேல் சுமத்த வந்தவராக அப்பா தெரிகிறார். அப்பாவை யாரோ என்பதுபோல நோக்கி, கண்ணால் வெளியே வர சொல்கிறான். வந்ததும் அப்பா குறுகி நின்று கேட்கிறார் ‘ஏம்ப்பா நான் உள்ள வரக் கூடாதா’. அப்பா கொண்டுவந்த காசு ஜெயசுதாவை கவர்வதற்காக சட்டை பேன்ட்டாக மாறுகிறது. அந்தக் காசு கருங்கண்ணியை குட்டியுடன் விற்று கிடைத்த காசு.

கதையின் வலி மிகுந்த சித்திரம் கருங்கண்ணி ஆட்டுக்கும் அதன் குட்டிகளுக்கும் அம்மாவுக்குமான உறவு. அம்மா ஆடு வளர்க்கிறாள். அதில் பொருளாதார விடுதலை உள்ளது. ஆகவே அது முதலாளிக்கு பிடிக்காது. ஆகவே ஒரு ஆடு இரு குட்டிகளுக்கு மேல் அவளால் எப்போதுமே வளர்க்க இயலாது. ஒரு ஆடு, அதன் அடுத்த தலைமுறை வந்தபிறகு முந்திய தலைமுறையை அம்மா விற்று விடுவாள். மந்தையாக வளர்க்கையில் அப்படி ஒரு ஆடு மீது பாசம் படியாது. ஒற்றையாக வளர்க்கும்போது கிட்டத்தட்ட அது பிள்ளைகளுக்கு இணையான உறவாக மாறிவிடுகிறது. அதுவும் கருங்கண்ணி குட்டிபோட்ட ஆடு. அம்மா மதியம் தனது உணவைக்கூட பட்டினி கிடந்து கருங்கண்ணிக்கு அளித்து வளர்க்கிறாள். மகன் படிப்புக்காக அதை விற்கிறாள். மகள் ஒன்றினை இழந்தவள் போல ஆடு பிரிகையில் ஏங்கி அழுகிறாள். அனைத்தும் அறிந்தும் அந்தப் பணத்தைக் கொண்டே ராமமூர்த்தி , ஜெயசுதா முன் கெத்தாக நிற்க புதிய உடை வாங்குகிறான். ஜெயசுதா அவனின் குலதெய்வம் பெயர் கேட்கிறாள். அத்துடன் அவனை புறக்கணிக்கிறாள். நசீமாவுடனான கூடலில் அவனுக்குள் ஜெயசுதாவே எழுந்து வருகிறாள். நசீமாவின் பிள்ளைகள் அவனுடையவை. ஆனால் அவனால் ஒருபோதும் அள்ளிக் கொஞ்ச முடியாத, ஒரு மர்மக்கோட்டுக்கு அப்பால் இருப்பவை.

முப்பரிமாணம் கொண்டு ராமமூர்த்தியின் வாழ்வை சித்தரித்துக் காட்டி ,புறக்கணிப்பின் வலியை துல்லியமாக நமக்கு கடத்தி , புறக்கணிப்பதன் பின் உள்ள சிறுமையை, நமது அற உணர்வை மௌனமாக கேள்வி கேட்கிறது இந்தக் கதை.

தெணியான் எனும் இலங்கை எழுத்தாளரின் வாழ்வனுபவங்களில் ஒரு சம்பவம் . சாதிப் படிநிலையில் கீழ் படியில் இருப்பவர் தெணியான். ஊருக்குள் பெரிய சாதி எப்போதும் சாதி சண்டையில் திளைத்துக் கொண்டிருக்கிறது. தெணியானின் அம்மா குழந்தை பெற்றிருக்கிறார்கள். பெரிய சாதியில் குழந்தை பெற்ற ஒரு பெண் பிரசவத்தில் இறந்துவிடுகிறாள். வெளியே சாதியின் படிநிலை சண்டைகள் பிரிவுகள்.

தெணியான் வீட்டுக்கு பின் வாசலில், பெரிய சாதியின் ஆச்சி வந்து நிற்கிறாள். தாயை இழந்த குழந்தைக்கு, தெணியானின் அம்மா தனது தாய்ப்பாலை ஒரு கிண்ணத்தில் வார்த்து ஆச்சி வசம் கொடுத்து அனுப்புகிறாள்.

இலக்கியமும் கலைகளும், கால காலமாக புறக்கணிக்கப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள் பின் நின்று மானுடத்தை கேட்கும் கருணை அதுதான். தாய்ப் பாலுக்கு எங்கும் பசித்திருக்கும் குழந்தைபோல, புறக்கணிக்கப்பட்ட ஒருவனின் கருணைக்காண ஏக்கமே இந்த ‘இழைகள்’.