கமல தேவி
மலர்முகை தீண்டும் தென்றல்
கருமுகில் தீண்டும் காற்று
மென்தளிர்சுருள் தீண்டும் மழைத்துளி
கைகால் முளைத்த கரு சிசுதீண்டும் முதல் உந்தல்
கருவறை தெய்வத்தைத் தீண்டும் சிறுமலரின்
மென்தொடுகை…
அது அப்படியே
அப்பொருளிலேயே இருக்கட்டும்…
கமல தேவி
மலர்முகை தீண்டும் தென்றல்
கருமுகில் தீண்டும் காற்று
மென்தளிர்சுருள் தீண்டும் மழைத்துளி
கைகால் முளைத்த கரு சிசுதீண்டும் முதல் உந்தல்
கருவறை தெய்வத்தைத் தீண்டும் சிறுமலரின்
மென்தொடுகை…
அது அப்படியே
அப்பொருளிலேயே இருக்கட்டும்…
வழியெங்கும் காய்ந்து கிடந்தது நிலம். மழைக்கான தவக்காலம் என அசையாமல் உயிரை பிடித்து நின்றன ஓரிரு நுணா மரங்கள். ஈரமில்லாத காற்று சுழன்று சுழன்று புழுதியை பறத்திக்கொண்டிருந்தது. ஒற்றைத்துளிக்கு ஏந்திய கரங்களென குறுசிறுத்த இலைகளை நீட்டி நின்றன புதர்கள்.
கரட்டு நிலம். வரும் ஓரிரு மழைகளை நம்பி வள்ளிக்கிழங்குகள் மட்டுமே பிழைக்கும். காடுகள் காய்ந்து வரப்புகள் சிதைந்து நிலம் விரிந்து கிடந்தது. கண்ணெட்டும் தொலைவு வரை வெற்றுநிலமாய் நீண்டு கிடந்தது.
இவற்றையெல்லாம் நோக்கி கண்களை சுழற்றிவிட்டு வறண்ட தளுகையாற்றை பார்த்தபடி சுவாதி அந்த சிறிய தடுப்பணையின் கரைமேட்டில் அமர்ந்திருந்தாள். நான்குமணிவெயில் கனன்றது. நிலையில்லாமல் தவித்த துப்பட்டாவை எடுத்து இடப்புறம் நின்ற புங்கையின் கிளையில் முடிச்சிட்டாள் . பத்துநிமிட நடை தொலைவில் இருந்த சின்னவர் வீடு பூட்டிக்கிடக்கிறது.
அவர் மகன் வீட்டிற்கே சென்றுவிட்டார். அவரிடம் உங்கள் நினைவு வந்தது ,பார்க்கவேண்டும் என்று தோன்றியது என்று தயங்காமல் சொல்லலாம். மனுசருக்குள்ள இதெல்லாம் இருக்கனும் தானே என்று சொல்லிவிட்டு நீ கூட கனவில வந்த என்பார். உன்னைமாதிரியே ஒரு பொண்ணை பஸ்ஸீல பாத்தேன். பாத்ததிலிருந்து நீ ஒரு எட்டு வந்துட்டு போனா பரவாயில்லை என்று நினைத்ததாக சொல்வார்.
“பொழுது எறங்கறதுக்குள்ள வந்திரனுங்கண்ணு…”என்று அம்மாச்சி சொல்லி சொல்லி அனுப்பினார். இங்கிருந்து இருபது நிமிட நடைதூரத்தில் இருக்கும் வயல்வீட்டின் களத்தில் காத்திருப்பார். ஒருபேச்சு ஒருசொல் ஒருசிரிப்பு ஒருபார்வை ஒருசிணுங்கலை கூட கண்களால் அள்ளி வைத்துக்கொள்வதைப்போல பார்ப்பார். துப்பட்டாவுடன் எழுந்து நடந்தாள்.
பாதையை பார்த்திருந்த அம்மாச்சி தொலைவில் இவளைக்கண்டதும் உள்ளே சென்று தேநீருடன் களத்திற்கு வந்தார். சேர்ந்து குடிக்க காத்திருப்பதை உணர்ந்து தாமதித்ததற்காக அவள் மனம் குன்றியது.
“என்ன கண்ணு மூஞ்சே சரியில்ல…”
“ஒண்ணுல்லமாச்சி…”
“பள்ளிக்கூடம் போனுமேன்னா…”
“இல்லம்மாச்சி…நான் என்ன சின்னப்பிள்ளையா…”
இரவு உணவிற்கு பின் களத்தில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்துக்கிடந்தாள். கயிற்றின் அழுத்தத்தை முதுகு உணர்ந்து கொண்டிருந்தது. அருகில் அம்மாச்சி பேசிக்கொண்டிருப்பதை உள்வாங்கி பதில்கள் சொன்னாள். நிலா வானத்தில் ஏறி பாதி தொலைவு வரும் வரை உறக்கம் வரவில்லை. மேகங்கள் நகர்வதை நிலா ஔிந்துகொள்வதை, மீண்டும் அசுரர்களின் சிங்கப்பல் என நீட்டிக்கொண்டு வெளிவருவதைப் பார்த்தபடியிருந்தாள்.
காலையில் சட்டென்று ஒரு துணுக்குறலில் விழிப்பு வந்துவிட்டது. கட்டிலில் கிடந்தபடி முகத்திலிருந்த போர்வையை விலக்கினாள். பச்சைமலைக்குன்றின் மேல் ஔி பரவிக்கொண்டிருந்தது. தலைக்குமேல் அசைந்து கொண்டிருந்த தென்னம்கிளைகளில் காக்கைகள் ஊஞ்சலாடி கரைந்து எழுந்து பறந்து கொண்டிருந்தன. படிகளில் அமர்ந்து கிழக்கை பார்த்துக்கொண்டிருந்த அம்மாச்சி எதை? யாரை? நினைத்துக் கொண்டிருக்கிறார். தாத்தாவையா? இல்லை எந்த நினைப்பும் அற்று சிவனே என்று இருத்தலா?
அசுர பொழுதுல ஒத்தையில வெட்டவெளிய இம்புட்டு நேரம் பாக்கக்கூடாது. பொழுது இறங்கறப்ப மனசு மிரண்டு நிக்கும்…இது மனுசரில்லாத மலையடிவாரம். பொம்பளப்பிள்ளை கைக்காலை கழுவிட்டு விளக்கு ஏத்தனும் என்று நேற்று அம்மாச்சி சொன்னது சரிதானா?
திடுக்கென்று எழுந்து போர்வையுடன் கட்டிலில் அமர்ந்தாள்.
“நெதானமா எந்திரி கண்ணு…அதுக்குள்ள என்ன பதஷ்ட்டம்…நாளைக்குதானே பள்ளிக்கூடம் போவனும்…”
அடுத்தநாள் அதிகாலையில் பேருந்துநிறுத்தம் வரை வந்த அம்மாச்சி எவ்வளவு மறைத்தும் அவர் முகம் சோர்வை, கலக்கத்தை காட்டியது. குன்றின் கீழேயே பாதை. திருச்சியிலிருந்து தம்மம்பட்டிக்கு செல்லும் மங்கம்மாள் காலத்து ராஜபாட்டை இது என்று மணிஅய்யா சொல்வார். இங்குதான் எங்காவது குன்று ஏறி இறங்கிக்கொண்டிருப்பார். அது அவரின் தினப்படி உடற்பயிற்சி.
ஊருக்குள்ளிலிருந்து நடந்து வந்து நின்ற அந்த அம்மாளின் மூன்றுசிவப்புக்கற்கள் பதித்த மூக்குத்தி புலரியின் முதல் ஔியில் மின்னியது. அவர் மூச்சிறைக்க அம்மாச்சியிடம், “இதுயாரு…உங்க பேத்தியாம்மா,” என்றார்.
அம்மாச்சி கண்களுக்கு மேல் கைகளைவைத்து உற்றுப்பார்த்து,“யாரு? காமாச்சியா…ஆமா எம்பேத்திதான்…படிக்குது…”என்றார்.
“ஊருக்குள்ளருந்து நடந்து வரதுக்கு அரைமணியாவுதும்மா…”
“அப்படி கல்லுல ஒக்காரும்மா,”
குன்றின் மடங்கலில் இருந்து சட்டென்று பேருந்து தெரிந்தது. பக்கவாட்டில் அம்மாச்சியை பிடித்துக்கொண்டு அடுத்த விடுமுறைக்கு வருவதாக கூறி பேருந்தேறினாள்.
கல்லூரியில் நுழைந்ததும் வீட்டிற்கு அழைத்து அம்மாவிடம் சொல்லியப்பின் விடுதிஅறைக்கு சென்றாள். சன்னலை திறந்ததும் காலை வெயில் சட்டென்று உள்ளே இறங்கியது. குறிப்பேடுகளை கைகளில் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள்.
“ஹாய்…சுவாதி..”என்று குதூகளிக்கும் குரலுடன் அனிதா ஓடிவந்தாள். இவள் முகத்தை பார்த்ததும் உதட்டை சுளித்தபடி உள்ளே சென்று புத்தகங்களை எடுத்து வருவதற்குள் இவள் கீழை தரைத்தளத்திற்கு வந்திருந்தாள்.
பொங்கலும் சாம்பாரும் வாயிற்கும் வயிற்றிற்கும் இடையில் சிக்கித்தவித்தது.
“சுவாதி..மாங்கா ஊறுகா வேணுமா?”
“பொங்கலுக்கா?”
“எதாச்சும் ருசிக்கு வேணுமில்ல…”என்றபடி ஊறுகாய் பாட்டிலை திறந்தாள்.
தட்டை கழுவி அடுக்கும் போது, தோளில் கைவைத்த அனிதாவை, சுவாதி பார்த்த பார்வையில் கையை எடுத்துக் கொண்டாள்.
பிள்ளைகள் வந்து சேர்ந்து கொண்டிருந்தார்கள். புல்வெளிக்கு பக்கத்தில் நிற்கும் போது கோமதி, “ என்னாச்சு சுவாதி?” என்று அனிதாவை பார்த்தாள்.
“காலேஜ்க்கு வெளிய இருக்கற ஏழு கன்னிமார்ல எவளோ ஒருத்தி உள்ள வந்துட்டா…” என்ற அனிதா முன்னால் சென்று நின்று கொண்டாள். கோமதி சிரித்தபடி திரும்பிநின்றாள்.
தோழிகள் அனைவரும் வந்தபிறகு கிளம்பினார்கள். வகுப்பறையில் ஒரே கும்மாளமாக இருந்தது. நிஷா பென்சின் மீது ஏறி நின்று கைகளை ஆட்டி சிரித்தாள். ஹபி கீழிருந்து அவளை பிடித்து இழுக்க முயற்சி செய்தாள். வகுப்பறை முழுவதும் அலைஅலையாக பேச்சு சிரிப்பு ஒலிகள். பக்கத்தில் பயோகெமிஸ்ட்ரி இதற்குமேல் அலையடித்துக்கொண்டிருந்தது.
பிள்ளைகளுடன் பேசிவிட்டு வந்த அனிதா பின் பெஞ்சிலிருந்து சுவாதியின் குதிரைவால் முடியை பிடித்து இழுத்தாள். இவள் திரும்பாமல் இருக்கவும் பின்புறமிருந்து தாவி கழுத்தை பிடித்தபடி சத்தமாக, “மேடம் இன்னிக்கு மௌனவிரதம்…”என்றாள். எப்பவுமே நடக்கறது தானே என்றபடி மொத்த வகுப்பறையும் ஒருகணம் அவளைப்பார்த்து, அடுத்தகணம் அலையென திரும்பி சத்தமிட்டது.
“ முதல்நாள் இந்த கேஸ்லாம் பேசாம இருக்கறது டிபார்ட்மெண்டோட டோட்டல் வைப்க்கு நல்லது,”என்ற ஹபி சுவாதியின் தோளில் கைப்போட்டு இழுத்தாள்.
“காற்று எத்தனை பாடுபட்டாலும் மரங்கள் அசைவதில்லை…”
ராஜீ முதல் வரிசையிலிருந்து திரும்பி,“சூப்பர்டா…எந்த சினிமா…”என்றாள்.
“அசைவெல்லாம் இலைகளுக்கே…” என்ற சுவாதியின் கன்னத்தை பிடித்து இழுத்துவிட்டு,“விரதம் வாப்பஸ். இந்த டைம் கிரெடிட் எனக்குதான்,” என்று பெஞ்சில் தட்டியபடி ஹபி அமர்ந்தாள்.
“சும்மா சீன் போடுதுங்க. மகளீர் தினத்துக்கு எழுதினது தானே. தமிழ் மேம் ‘வேரோட விழுந்திட்டா என்ன பண்ணுவீங்கன்னு’ ஒரு லுக்கு விட்டாங்க. செம இன்சல்ட். ரெண்டும் வாயத்திறக்கல,”என்று நிஷா சொன்னதும் வகுப்பறை சிரிப்புடன் மணி ஒலித்தது.
ஜெனிடிக்ஸ் வகுப்பில் விடுதி பரோட்டாவை வாயில் வைத்ததைப்போல அனைவரும் அமர்ந்திருந்தார்கள். டி.என்.ஏ கோடிங் நீண்டுகொண்டிருந்தது. ஊரில் கோவில் வேம்பினடியில் கருங்கல்லில் வடிக்கப்பட்ட பின்னலாய் நெளியும் இரட்டை நாகங்களை ஒத்த வடிவம். ஏன் இந்த இழைகள் ஒற்றையாக இருக்கக்கூடாது.
முன்பெல்லாம் மனமும் உடலும் என்று இரண்டாக தோன்றும். இப்போது அனைத்துமே உடல்தான். மனமென்ற ஒன்றைபற்றி வழுத்த ஐயம். உடல் வழுவாக இருந்தால் மனம் என்ற ஒன்றே தேவைப்படாதா? பேசாமல் உண்டு கழித்து வாழ்ந்து செத்துவிடலாம். இயற்கையின் எந்தவிதி மனதை உண்டாக்கியிருக்கும்?
சுவாதி…என்ற குரலோடு சுண்ணக்கட்டி பென்சில் விழுந்தது.
“ஹோம்சிக்கா…”
“சாரி மேம்,”
பின்னால் ஹபி, “மைண்ட்சிக் மேம்,” என்று மெதுவாக வாயில் கைவைத்தபடி சொன்னாள்.
மதியம் உணவுஇடைவேளைக்காக வகுப்பு கலைந்தது.
“அனி…நீ போ..பின்னாடியே வரேன்,”
“லன்ச் ஸ்கிப் பண்ணாத சுவாதி…மரியாதையா வா,”
உணவறையில் ஏகசத்தமாக இருந்தது. ஊர்க்கதைகள் விரிந்துகொண்டிருந்தன.
“எருமமாடு…சாப்பாட்டை எடுத்து வாயில வை. உன்னமாதிரி ஹோம் சிக்கரை நான் பாத்ததே இல்லை. வருசகணக்கா அதே மாதிரியேவா! சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட் மண்ணாங்கட்டியெல்லாம் எழுதி மார்க் வாங்கி என்ன யூஸ்,”
அனிதா பொறுமை இழந்து கொண்டிருந்தாள்.
சாயுங்காலம் விடுதி அறையில் படுத்திருந்தனர். தூரத்து ஊர்களில் இருந்து காலையில் எழுந்து கிளம்பி வந்ததன் களைப்பு. சுவாதி கண்களை விழித்து படுத்துக்கிடந்தாள்.
“தூக்கம் வரலயா?”
“ம்…”
“வீட்டுஞாபகமா…”
“தூங்கவிடாம பண்ணுன கோமதி…செருப்பு பறக்கும்,” என்றபடி சுதா திரும்பிப்படுத்தாள்.
“அவ டிப்ரஸ்ட்டா இருக்கால்ல…உனக்கு தூக்கம்தான் முக்கியமா போச்சா…”என்ற கோமதி இரும்புக்கட்டிலின் முனையில் அமர்ந்து பின்னலை அவிழ்த்துவிட்டாள்.
“ஆமா…ஒழுங்கா சாப்பிட்டா எல்லாம் சரியா நடக்கும்…” என்ற சுதாவின் குரல் கீழிறங்கியிருந்தது.
“அவபாட்டுக்கு இருந்தா…காலையில சரியாகிடுவா. தொல்லைப்பண்ணாதீங்க,” என்ற அன்பு தலையணை மீது அமர்ந்து சுவரில் சாய்ந்தாள்.
“நம்ம இப்பிடி இருந்தா இவ விடுவாளா…இந்நேரம் நை நைன்னு பக்கத்துல ஒக்காந்து உயிர எடுப்பா…”
“ஆமாமா…அவள நிறுத்தச்சொல்லு நாங்க நிறுத்தறோம்…” என்ற அனிதா சுவாதி படுத்திருந்த கட்டில் விளிம்பில் ஓடிவந்து அமர்ந்தாள்.
“ரொம்ப பழசு…புதுசா எதாச்சும்…”
“முன்னப்பின்ன தெரியாத அந்தப்பையனுக்காக கண்ணீர் விடற மனசிருக்கே…அதுல கொஞ்சம் நம்ம ஃப்ரண்டுக்காக…”
“என்ன ஒரு டைமிங்சென்ஸ்…இதோட நிறுத்தினா நல்லாருக்கும்…”
“காலையில ஜெனிடிக்ஸ் கிளாஸ் புரியலையா சுவாதி…”
“யாருக்குதான் புரியுது…பாத்துக்கலாம்…”
“இல்ல…வேறெதாச்சும் இன்ட்ரெட்ஸ்ட்டிங்கா இருக்கும் கேளு…”என்ற சுதா அனிதா அருகில் அமர்ந்து அவள் தோளில் கைப்போட்டாள்.
“டி.என்.ஏ வை பாத்தா கோவில்ல ரெட்டநாகம் இருக்குமே அதுமாதிரி தோணுச்சு…”
“அதானே பாத்தேன். எங்க கொண்டுபோய் டி.என்.ஏ வை சேத்திருக்கா பாரு. மண்டைய வலிக்காம என்ன பண்ணும்? உயிரோட இருந்தா வாட்சனும் க்ரீக்கும் அந்த கல்லுல மோதி செத்திருப்பாங்க,”
“அவங்களும் ரெண்டுபேர்…ஏன் ஒருத்தர் கண்டுபிடிக்கல,”
“ம்கூம்…ஒருத்தர் ஏன் கண்டுபிடிக்கல? எனக்கு வர ஆத்திரத்துக்கு…இது ஒரு கேள்வியா? நீ பண்ற டார்ச்சருக்கு எங்கசாமி உன்ன சும்மா விடாது பாத்துக்கோ,”
“இங்க பாரு சுவாதி…கண்டதை யோசிக்காத. லிங்க் பண்ணினா எல்லாம் லிங்க் ஆகறமாதிரியே இருக்கும். டீ வந்தப்பின்னாடி குடிச்சிட்டு வேலையப்பாரு…”
சுதா எழுந்து கீழே சென்றாள். தேநீர் கோப்பைகளுடன் வந்து சுரபி முன்னால் ஒரு கோப்பையை வைத்தாள். அவள் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு நாள்காட்டி பக்கம் சென்றாள்.
“அதானே பாத்தேன் …உனக்காக எப்படியெல்லாம் பயலாஜிக்கலா யோசிக்க வேண்டியிருக்கு. ஏய்…மரக்கழண்டவளே இன்னிக்கு உன்னோட தேதி…ஓடிப்போய் குளிச்சிட்டு ரெண்டு பாரதி கவிதை படி. கிச்சன்ல எதாச்சும் வாங்கிட்டு வரேன். வேலையமுடிச்சிட்டு தூங்கு. ரெண்டுநாள் முன்னவே உனக்கு மரகழண்டிருக்குமே…”
“ஜீசஸ்…”என்றபடி அன்பு படுத்தாள்.
“ரொம்ப பேசாத. நீயெல்லாம் முன்னாடி இருக்கவங்களை புலி மாதிரி கடிச்சு கொதறுவ. என்மாதிரி ஆளெல்லாம் அழுதே தீத்துடும். இது கொஞ்சம் திருகல்…” என்ற அனிதா தன் கட்டிலை நோக்கி சென்றாள்.
கோமதி,“இன்றைய தத்துவம் அனிதா …”என்றாள். தேநீரை குடித்துக்கொண்டிருந்தவர்கள் சிரித்தபடி சுவாதியை பார்த்தார்கள். அவள் புருவங்களை உயர்த்தி புன்னகைத்துவிட்டு வலிகளுடன் பிளாஸ்டிக் வாளியை எடுத்தாள்.
அப்பொழுதுதான் நேர்க்காணல் முடிந்திருந்தது. பணிநியமன ஆணையை பெற்றுக்கொண்ட நித்யா திருச்சி சையதுமிர்சா அரசினர் பள்ளி மைதான மரநிழலில் நின்றாள்.மறுபடி மறுபடி கோட்டைப்பட்டினம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை என்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.இப்படி ஒரு ஊர் இருக்கா? கோட்டை இருக்குமோ?
பட்டினம், பாக்கம் என்ற சொல் கடற்கரை நகரை குறிக்கும் என்று தேர்வுக்கு படித்தது நினைவில் எழுந்தது.கடற்கரை ஊரா என்று மனதிற்குள் தூக்கி வாரிப்போட்டது.அந்த நேரத்திலும் பொன்னியின் செல்வனின் கோடியக்கரை மனதில் வந்து தொலைத்தது.இன்னும் ஒரு மதிப்பெண் எடுத்திருந்தால் திருச்சிக்குள் எங்காவது நுழைந்திருக்கலாம்.
லலிதா எரிச்சலாக முகத்தை சுருக்கியபடி வந்து அருகில் நின்றாள்.
“நித்யா…எனக்கு அத்தானி ங்கற ஊர்.மணல்மேல்குடி தாலுக்கா.இதெல்லாம் எங்க இருக்கோ.அத்தான்..அத்தான்னு பழைய பட டயலாக் மாதிரி இருக்கு,”
புடவையை சரி செய்தபடி நித்யா சிரித்தாள்.இருவரின் அப்பாக்களும் பேசி சிரித்தபடி உற்சாகமாக வந்தார்கள்.
“புதுக்கோட்டை தானே சார் பாத்துக்கலாங்க..இந்த காலத்து பிள்ளைங்க எங்கெங்கியோ வேலைக்கு போவுதுங்க…”
“கூகுள் மேப்ல பாக்கலாமா பாப்பா…”
பிள்ளைகள் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.
“என்னதுக்கு முகத்த தூக்கி வச்சிருக்கீங்க.சின்ன வயசுல அரசாங்க உத்தியோகம் கெடக்கறதே பெரிசு…கல்யாணத்துக்கு முன்னயே வேல…கொடுத்து வச்ச பிள்ளைங்க,”என்று ஏக்கமாக லலிதாஅப்பா அதட்டினார்.
அறந்தாங்கி கஸ்தூரிபாய் விடுதியிலிருந்து கிளம்பினால் கோட்டைப்பட்டினத்திற்கு இரண்டுமணிநேரத்திற்கும் மேலாகிறது.வழியில் உஷாவுக்கு அம்பலவாணனேந்தல், சுபாவுக்கு காரணியானேந்தல் என்ற ஊர்களில் இறங்க வேண்டும்.அவர்கள் முதலில் ஊர் பெயரை மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது.
வேலையில் சேர்ந்த முதல் நாள் இரவுஉணவு நேரத்தில் லலிதா நித்யாவிடம், “எனக்காச்சும் பரவாயில்ல…நீ தான் பாவம்…”என்றாள்.
புதுசா இன்னும் என்ன இருக்கோ என்று நித்யா முகம் சோர்ந்தது.அன்று கோட்டைப்பட்டின பெண்கள் பள்ளியில் வேலைக்கு சேர்ந்திருந்த கோகிலா, “நித்யா என்ன பாவம்….”என்றாள்.
“எதாச்சும் மீட்டிங்ன்னா…பேங்க் வேலைன்னா மணமேல்குடிக்குதான் நீங்க வரனும் தெரியுமா? இந்தியன் பேங்க்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனுமாமே எனக்கு ஸ்கூல்ல இருந்து பக்கம்,”
“நாங்க ரெண்டு பேரும் இருக்கமில்ல..சேர்ந்து வந்துருவோம்..”
தேனீ,தென்காசி,திருச்சி என்று வேவ்வேறு இடங்களில் இருந்து வந்த இவர்கள் இணைந்துகொண்டு மணல்மேல்குடியில், புதுக்கோட்டையில் அலுவலக வேலைகளை முடிக்க இரண்டுநாட்களானது.கோட்டப்பட்டினத்திலிருந்து மணல்மேல்குடி வழியெங்கும் கடல் உடன் வந்தது.உப்பளங்கள் கண்ணாடிகளாய் மின்னும் பாதைகள்.
அதில் வேலை செய்துவிட்டு பேருந்தேறும் பெண்களின் கால்களை முதல்முறைக்கு மேல் பார்ப்பதற்கு பதைத்தது.பள்ளியின் முதல்தளத்தில் நின்றால் தெரியும் தனித்த ஆள்அரவமற்ற கடற்கரையும், கருத்தக்கடலும், தொடுவானமும் எங்கேயோ வந்து விட்டதைப்போன்ற ஒரு படபடப்பை தருகிறது.
ஐந்தாம்நாள் வகுப்பறையில் நின்ற நித்யாவுக்கு சலிப்பாக இருந்தது.கோகிலாவுக்கு போல பெண்கள் பள்ளியிலாவது கிடைத்திருக்கலாம் இந்தப்பள்ளிக்கூடத்துல ஒருப்பய மதிக்க மாட்டிங்கிறான்.மொழி உச்சரிப்பு சிக்கல் வேறு.மணியடித்தால் டீச்சருக்கு முன்னாடி ஓடிப்போயிடறானுங்க.மதியத்திற்கு மேல் மீன்பிடிக்க கடற்கரைக்கு தப்பிவிடுகிறார்கள்.கட்டுப்பாடான பள்ளிகளில் படித்துவிட்டு இங்கு வந்து பட வேண்டியிருக்கிறது.
ஒரு வாரமாக ,எங்கிருக்கிறோம் ,என்ன சாப்பாடு ,என்னநினைப்பு, என்ன செய்கிறாம் என்றே தெரியாத ஒரு மனகுழப்பம்.வண்ணங்களை விசிறியடித்த ஓவியப்பலகையின் வழிதல்கள் என திக்கு தெரியாது பணிசார்ந்து இழுத்த இடம் அறியாது சென்றுகொண்டிருந்தார்கள்.இதுவரை வீடு, கல்லூரி விடுதி, பக்கத்து ஊர் தனியார்பள்ளி வேலை தவிர பெரிதாக இடமாற்றமில்லாத வாழ்க்கை.வாரஇறுதியில் ஊருக்கு சென்றுவிடலாம் என்ற நினைப்பைத்தவிர நித்யாவிற்கு எதுவும் இல்லை.உறக்கத்தில் திடீரென்று விழிப்பு வந்தால் மறுபடி உறங்கமுடியவில்லை.இரண்டுவாரங்கள் எத்தனையோ மாதங்கள் போல நகர்ந்தது.
வெள்ளிக்கிழமை சாயுங்காலம் தலைமையாசிரியர் புதிதாக வேலைக்கு சேர்ந்த கணித ஆங்கில இயற்பியல் ஆசிரியர் மூவரையும் சனிக்கிழமை வகுப்பு வைத்து பாடம் எடுக்க சொன்னார்.அதை நினைத்துக்கொண்டே சாலை கடக்கும் போது மதீனா டீச்சர் பதறிய குரலில் அழைத்து இழுத்தார்.
“நித்யா டீச்சர்..இது ஈஸ்ட் கோஸ்ட் ரோடு அடிச்சு போட்டுட்டு போயிட்டேயிருப்பாங்க…ரொம்ப கவனமா இருக்கனும்,”
“தேங்ஸ் டீச்சர்..”
“இந்தவாரம் ஊருக்கு போலான்னு நெனச்சீங்களா?”
“ம்…”
“சம்பளத்த நெனங்க.எல்லாம் மறந்துடும்…”என்று அவள் கையைப்பிடித்து சாலையைக் கடந்தார்.
உஷாவும் சுபாவும் ஊருக்கு கிளம்பியிருந்தார்கள்.லலிதாவும் கோகிலாவும் கிட்டதட்ட அழும் நிலையிலிருந்தார்கள்.நித்யா குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.ஆளுக்கொரு சமாதானம் சொல்லிக்கொண்டு இரவு உணவிற்கு பிறகு தொலைக்காட்சித்தொடர் பார்க்கத்தொடங்கினார்கள்.நித்யாவின் அலைபேசி அழைத்தது.
“நித்யா…நல்லாருக்கியா..”
தொண்டையை செறுமிக்கொண்டாள்.
“என்னாச்சு…”
“ஊருக்கு வரலான்னு நெனச்சேன்…”
“அங்க போனதுலருந்து சரியாவே பேசமாட்டிக்கிற..”
ஜனனிஅக்கா விடமாட்டாள்.அவள் பேச்சில் என்னத்தையோ வைத்திருக்கிறாள்.அவள் நெருங்கி பேசும் அனைவரும் உணரும் ஒன்று அது.
“ ஒன்னுமில்ல ஜனனி..”
“ஸ்கூல் போற வழியில புதுசா என்ன பாக்கற…நம்ம ஊர்ப்பக்கம் இல்லாதது…”
“வழியில தாமரைக்குளங்க நிறைய இருக்கு…கடற்கரை மணல்… மீன்வாடை…”
“குறிஞ்சியிலருந்து நெய்தலுக்கு போயிட்ட…நீ கலக்கு நித்யா…எனக்குதான் இங்க பதில் சொல்லமுடியல,”
ஒருவீட்டில் ஒரே தேர்வில் இருவரில் ஒருவருக்கு வேலைக்கிடைப்பது எத்தனை சங்கடம்.புன்னகைத்தே சமாளிப்பாள்.இத்தனை நாள் அவள்பக்கத்தை நினைக்கவேயில்லை.
“ச்…எனக்குதான் ரெண்டு மார்க்குல போயிடுச்சு…கடற்கரையில பள்ளிக்கூடம்..நீ லக்கி நித்தி,”என்று அக்கா பேசிக்கொண்டேயிருந்தாள்.
நித்யா காலையில் பேருந்திலிருந்து இறங்கியதும் நிமிர்ந்து சற்று தொலைவிலிருந்த பள்ளிக்கட்டிடங்கள் இரண்டையும் பார்த்தாள்.கடற்கரையில் நின்று கடற்கரையையே மைதானமாகக்கொண்ட பெரிய பள்ளிக்கூடம்.பழையக்கட்டிடம் சற்று தள்ளி நிற்கிறது.குனிந்து இளம்பச்சை நிற பருத்தி புடவையை சற்று தூக்கிப்பிடித்தபடி மைதான மணலில் நடந்தாள்.
பத்துநிமிடம் நடக்க வேண்டும்.நடந்து வரும் போதே வீசும் கடற்காற்றை உடல் தனித்து உணர்கிறது.உப்புக்காற்றுக்கென ஒரு கனமான தொடுகை. செருப்புகளுக்குள் புகுந்த மென்மணலின் நறநறப்பு பாதங்களை கூசச்செய்தது.உடலை உலுக்கிக்கொண்டாள்.முதல்தளத்தின் வகுப்பறையில் பயல்களின் ஆரவாரம்.
முதல்தளத்தின் நடைபாதை தூணருகே நின்றாள்.ஆமாம்…சங்ககாலத்து கடல்.’கடலினும் பெரிது எமக்கு அவருடை நட்பே …’என்று பனிரெண்டாம் வகுப்பில் படித்த வரி ஜனனி குரலில் கேட்டது.கடலை பார்த்து பார்த்து காத்திருந்த காத்திருப்பின் சொல்.இரங்கலும் இரங்கலின் நிமித்தமும்.அவள் சொல்லிய போது உணரவில்லை. இத்தனை பெரிய கடலை நேரடியாக பார்த்துக்கொண்டு நிற்கும் போது அப்படி யாரிடமாவது சொல்ல இந்தவாழ்வில் வாய்ப்பு கிடைக்குமா? என்று தோன்றியது.உடனே புன்னகை எழுந்தது.இங்கு வந்து மனம் கனியும் முதல் புன்னகை.சட்டென்று அலைபேசியில் தற்படம் எடுத்தாள்.
வெண்மணலாய் விரிந்து பரந்த அரவமில்லா கடற்கரையில் மீன்கள், களத்தில் காயும் நெல்மணிகளெனக் காய்கின்றன.காற்றின் சுழற்றலில் அடிவயிறு கலங்கி குமட்டலெடுத்து அவள் கண்கள் நிறைந்தன.
வெண்மணல் பரப்பு.தாழைபுதர் ஒன்று தெரிகிறது. மினுமினுக்கும் பரப்பென அலைகள் இல்லாத கடல் முடிவிலி வரை நீண்டு கிடக்கிறது.செபாஸ்டீன் சார் அன்று இதை பெண்கடல் என்று சொன்னார்.
சங்கால பெண்மனம் இன்றுவரை உறைந்து நிற்கிறதா? அன்றிருந்த புன்னை இன்றில்லை. அதன்அடியில் நிற்கும் தலைவி கண்களுக்குத் தெரியவில்லை.அவள்தான் மீன் உலர்த்தியிருக்கிறாளா? வலைகள் சிறு சிறு குன்றென குவிந்து கிடக்கின்றன.அதற்கு அப்பால் இருக்கக்கூடும்.அந்த அழகான மசூதிக்குப் பின்னால் இருக்கும் மீன்பிடிதளத்தில் காத்திருக்கக்கூடும்.தலைவிதொலைத்த புன்னங்காய் இங்கு தங்கையென வளரவில்லையா?
“என்ன டீச்சர் அப்படியே நிக்கறீங்க? “
நித்யா தடுமாறி தூணில் சாய்ந்து திரும்பி, “குட்மானிங் டீச்சர்,”என்றாள்.
“இந்த ஊரு ஒத்துக்கிச்சு போலயே..”என்றபடி பையன்களை அழைத்தார்.
நித்யா பதில் சொல்லாமல் விழிகள் விரித்து சிரித்தாள்.ஜனனியின் கிறுக்குத்தனமான பேச்சு இன்று எரிச்சலாக இல்லை.பேசிப்பேசி என்னையும் கிறுக்காகிட்டாளா!
மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.வெயில் பொழிந்து கொண்டிருந்தது.கண்கள் கூசி நிறைந்தது.கானல் பறக்கும் வெளியில் ஒருவர் வலையை தூக்கிக்கொண்டு நடந்து சென்றார்.
வாட்ஸ்ஆப்பில் ஜனனிக்கு புன்னகைக்கும் தற்படத்தை அனுப்பினாள்.உடனே ஒரு பொம்மை புன்னகை வந்தது .என்ன? என்ற கேள்வியுடன்.சகோதரியாக புன்னைமரம் நின்ற சங்ககாலத்தில் சொல்லமுடியாததை, இன்றுமட்டும் இவளிடம் எப்படி சொல்லமுடியும்? மீண்டும் ஒரு புன்னகையை அனுப்பினாள்.
ஆசிரியரை பார்ப்பதற்கான எந்த மரியாதையும் இன்றி ஒருவன் வகுப்பறைக்குள் ஓடினான்.
டிசிப்ளின் ஒபீடியன்ஸ் எல்லாம் நம்ம ஸ்டூடண்டா இருக்கும்போது சரிதான்.ஆனா ஒரு டீச்சரா அது தெரியாத குழந்தைகளுக்குத்தானே நீ வேணும்.அதுவும் பாசம் தேவைப்படற குழந்தைகளா இருக்கும்.உப்பள வேலையில அம்மாக்களுக்கு பாசத்துக்கு நேரம் குறைவா இருக்கலாம் என்று நேற்று ஜனனி சொல்லியது நினைவிற்கு வந்தது.
வகுப்பறைக்குள் நுழைந்த பையனின் முதுகில்தட்டி நகர்ந்த நித்யா, “ டீச்சர் கிளாஸ்ரூமுக்கு வந்தா எழுந்து குட்மானிங் சொல்லனும்…போகும்போது தேங்க்யூ சொல்லனும்..” என்றபடி மேசைக்கருகில் சென்றாள். பையன்கள் தயக்கத்துடன் எழுந்து நின்றார்கள்.
கொல்லி மலையை மறைத்து நிற்கிறது தொடர் மழை. எட்டி எட்டிப் பார்த்து சங்கரிக்கு சலிக்கிறது. கொஞ்ச நேரம் மேற்கே பார்த்துவிட்டு அறைக்குள் வந்தாள். அதற்குள் மும்முறை அழைத்திருந்தது அலைபேசி. நேற்று அழைத்த எண்ணா என்று பார்த்தாள். இல்லை.
“இந்த நம்பர்லந்து கால் வந்துச்சு… நீங்க யாரு?”
அந்தப்பக்கம் சில குரல்களின் சலசலப்பு… பேருந்தா?
“எனக்குதான் அங்கருந்து போனு வந்துட்டேயிருக்கு… யாரு நீ… எங்கருந்து பேசுற,” என்ற அதே பெண் குரல் எரிச்சலடைய வைத்தது.
சங்கரி சட்டென்று அழைப்பைத் துண்டித்தாள். நம்பரைத் தடை செய்த ஐந்துநிமிடத்தில் மீண்டும் மூன்று அழைப்புகள். இவை எதேச்சையான அழைப்புகளில்லை என்பது மண்டையில் உறைத்தது. சென்ற வாரத்தில் வேறொரு எண்ணிலிருந்து வெவ்வேறு தினங்களில் மூன்று அழைப்புகள்.
“சின்னப்பிள்ளைங்க கண்டபடி நம்பர போட்டுருச்சுங்க,” என்று அந்த எண்ணில் பேசிய பெண் குரல் நினைவில் வந்தது. இந்தக் குரல்தானா அது? கண்டுபிடிக்க முடியவில்லை. எப்போதும் தொடுதிரையில் வழுக்கிவிழும் அம்மா எதையாச்சும் செய்து வைத்திருக்கிறார்களா என்று தேடினாள்.
‘அபிதா’ நாவலை எடுத்தபடி மெத்தையில் அமர்ந்து சுவரில் சாய்ந்தாள். மீண்டும் இரு தடை செய்யப்பட்ட அழைப்புகள். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் எடுக்கிறாள். லா.ச.ரா தன்மொழியால் மனதைப் படுத்தி எடுத்த புத்தகம்.
கண்களை மூடி அமர்ந்தாள். மூன்று நாட்களாக ஓய்ந்தபாடில்லை. நான்கு வார்த்தைகள் வேகமாகப் பேசினால் குறைந்துவிடக்கூடும்.
ஆனால் உள்ளிருக்கும் பேய் செய்யவிடாது. பொறுத்துக் கொள் என்ற ஆணையை மனதிற்குள் ஆழ ஊன்றிய பொக்கைவாய் தாத்தா மனதிற்குள் புன்னகைத்தார். சிவனே என்று கண்களை இறுக மூடிக்கொண்டாள். இருளுக்குள் சிகப்பு நிறம் பறந்து மறைந்தது.
இந்த அழைப்புகள் மட்டுமா காரணம்! எப்பொழுதாவது இப்படி புத்தி முறுகிக் கொள்ளும். அவிழ்க்கவே முடியாது. அதாகவே பிரிந்து மலர வேண்டும். பாடல்களை மாற்றி மாற்றி தேடினாள். வேலைக்கு ஆகவில்லை. உச்சியில் நின்று கனக்கிறது.
நல்ல மழை. கைகளில் இருந்த புத்தகத்தை வைத்தபின் வராண்டாவிற்கு வந்தாள். மழையால் தன்னை முழுதும் மூடி கொண்டிருந்தது கொல்லிமலை. சிறு பிசிராகக்கூட கண்களுக்குத் தெரியவில்லை.
சென்ற வாரத்தில் வந்த அமேசான் பெட்டி, நான்கு நாட்களுக்கு முன்பு வந்த அஞ்சலக உறை இரண்டும் நினைவிற்கு வந்தன. அதில் இருந்த அலைபேசி எண்ணை எடுத்தபின் பெட்டிகளை குப்பையில் போட்டோமா என்ற எண்ணம் தோன்றியது.
மீளவந்து புத்தகத்தை எடுத்தாள். மீண்டும் அழைப்பு. புத்தகத்தை வைத்துவிட்டு மாடியிலிருந்து கீழிறங்கினாள். வீட்டில் மழைக்கால கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இப்படி அனைவரும் கூடினால் ஓயாது சிரிப்பும், பொருமல்களும், விசாரணைகளும், சொல்லித் தேய்ந்த அறிவுரைகளும், சூடான தின்பண்டமுமாக நீளும்.
அய்யா கிழக்குபுறமாக திரும்பி மேசையில் கை வைத்து தன் தம்பி பேசுவதையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சங்கரி எட்டு வயதில் முற்றத்து மழையில் நிற்கிறாள். அம்மா ,”உள்ள வா சங்கு… ஸ்கேல் எடுத்தேன்னு வச்சிக்க…” என்று அதட்டுகிறாள்.
அய்யா, “ விடு..அதாவே வரட்டும்,” என்கிறார்.
இரவு காய்ச்சலில் போர்வைக்குள்ளிருக்கும் அவளின் கைகளைப் பற்றியபடி அவளை பார்த்துக் கொண்டேயிருக்கிறார். மேசை விளக்கின் மெல்லிய ஔி கட்டிலுக்குள் மஞ்சளாய் பரவியிருக்கிறது.
“பாப்பாவுக்கு என்னாச்சு… கோவம் வந்தா அம்மாக்கிட்ட கோவிச்சுக்க வேண்டியதுதானே… அம்மாதானே இன்னிக்கி தப்பு செஞ்சாங்க.” என்றபடி போர்வையுடன் அணைத்துக்கொள்கிறார்.
“அய்யா. முள்ளு குத்துது,” என்றதும் அவளை மேலும் கட்டிப்பிடித்து சிரிக்கிறார்.
“என்னால நெஜமாலுமே சோறுதிங்க முடியலங்கய்யா… வாந்தி வருது. ”
“அம்மாட்ட சொன்னாதானே அவங்களுக்கு தெரியும்… ”
“அம்மாக்குதான் எல்லாம் தெரியுமே…”
அய்யா அம்மாவிடம் திரும்புகிறார். அம்மா இவளின் கொழுசுகாலில் கைவைக்கிறாள். சங்கரி காய்ச்சலில் காய்ந்த உதடுகளில் புன்னகை எழ, “ இப்ப எனக்கு கால் வலிக்குதுன்னு உங்களுக்கு தெரியுதுதானேம்மா,” என்கிறாள். அம்மா குனிந்து கொண்டே தலையாட்டுகிறாள். அய்யா அம்மாவின் தோளில் கைவைத்து புன்னகைக்கிறார்.
பதினைந்து வயதில் அவ்வாவின் ஒரு சொல்லிற்காக சங்கரி அதகளம் செய்து ஓய்ந்தாள். அடுத்தநாள் காலையில் அய்யா, ”எப்பவாச்சும் கோவம் வரவங்களுக்கு கோவம் மதம் பிடிக்கிற மாதிரி… கட்டுப்படுத்தனும். இல்லேன்னா அடிக்கடி கோபப்படனும்,” என்று சிரித்தார்.
“இனிமே கோபப்பட மாட்டேங்கய்யா… என்ன நடந்துச்சுன்னே தெரியலங்கய்யா,”
“சரி… சரி. சத்திய சோதனை படிக்கிறியா…” என்றார். அய்யா மாதிரி செக் வைக்கமுடியாது.
இரு கால்களையும் தூக்கி நாற்காலி மேல் குத்துக்காலிட்டிருக்கும் அவ்வா, வாழைக்காயை எடுத்துவிட்டு மாவைத் தேடி எடுத்தது. அலைபேசியைப் பார்த்தாள். தலையை ஒரு தரம் உலுக்கிக் கொண்டாள். இது பேனைப் பெருமாளாக்கி, பெருமாளுக்கு லட்சுமியை கட்டி வைக்கும், என்ற எண்ணம் வந்ததும் சட்டென சமையலறைக்குள் நுழைந்தாள்.
“இங்க பாரு தம்பி… நாலு தடவ முன்னாடி நிக்கிற மனுசருகிட்ட அதிகாரமா பேசினா இந்த வயசுல அது ஒருமாதிரி முறுக்காத்தான் இருக்கும். ஆனா நாளாவட்டத்துல பேச்சோட தன்மையே மாறிப் போயிரும். தணிஞ்சு பேசிப் பழகு…”
சின்னய்யாவிடம் தலையாட்டிவிட்டு சமையலறை பக்கம் திரும்பி தம்பி புன்னகைத்துக் கொண்டிருந்தான். இன்னொருத்தன் மழையைப் பார்த்து முகம் மறைத்தான்.
கடலை எண்ணெயில் இட்டவுடன் வாழைக்காய் மாவுடன் எழுந்து மிதந்து உப்பியது. எடுத்ததும் துள்ளல் அடங்கியது. மீண்டும் அலைபேசி.
“மழன்னு பேஞ்சறக்கூடாது… நம்மள கிச்சன்ல தள்ளிட்டு அதுங்க பாட்டுக்கு ஊர்கதய அளக்குற வேல…”
சித்தி பேச்சோடு சேர்த்து வாழைக்காயை சீவினாள். ஆமா என்ன பண்ணலாம் என்பதைப் போல அம்மா சிரித்தாள். கழுவுத்தொட்டியை பார்த்தபடி நின்ற சங்கரியை உற்றுப் பார்த்து சித்தியிடம் ஜாடை காட்டினாள்.
“மூஞ்சபாருங்க எப்படி இருக்குன்னு…..”
“இந்தகுடும்பத்துக்குன்னு செஞ்சுவச்ச மூஞ்சி…அதபாத்துதான் நம்ம ரெண்டுபேரும் ஏமாந்து போயிட்டாம்…”என்றபடி அம்மா எண்ணெய்கரண்டியை சங்கரி கையில் கொடுத்தாள்.சித்தி புன்னகைத்தாள்.
“ந்தா பாப்பா… துரியோதனன் நம்ம நெனக்கறாப்ல இல்ல… குந்தி ஒன்னும் உங்கள மாதிரி பாவப்பட்ட அம்மா இல்ல. இந்த நெனப்பெல்லாம் கொதிக்கிற எண்ணெய்க்கிட்ட வச்சுக்காத… கவனமெல்லாம் அடுப்பு மேல இருக்கட்டும்,” என்றபடி சித்தி இரண்டு தட்டுகளை எடுத்தாள்.
“சிரிச்சு தொலை… ரெண்டு நாளா பேசாம சிரிக்காம உசுர வாங்குது சனியன்… அழுதாச்சும் தொலைக்குதா பாருங்க… ஜென்ம புத்திய எதக் கொண்டு அடிச்சாலும் மாறுமா…”
“விடுங்க… இந்த மாதிரி கோவப்படாத பிள்ளய பாக்கமுடியுமா?” என்றபடி சித்தி சங்கரியின் முதுகில் தட்டினாள்.
“நீங்க வேற. கோவப்பட்டாக்கூட சமாளிக்கலாம். இது ஊமப்பிடாரி அம்சம். மொசக்குட்டிப் பிடிக்கிற நாயோட மூஞ்சப் பாத்தா தெரியாது…”
“அட விடுங்கன்னா…” என்ற சித்தி நடையில் அமர்ந்தாள்.
மீண்டும் ஒரு அழைப்பு. இது ஒரு பொழப்புன்னு விடாம செய்யறதுக்கும் பொறுமை வேணும். எதுக்காக?
இரவு முழுவதும் மழை பெய்தது. எழுந்து நிற்கும் மலையை, இந்த நிலத்தை கரைத்துவிட எத்தனிப்பதைப் போல. ஐந்தாண்டுகளுக்கு முன்பு இத்தகைய மழை வாய்த்தது. வயலாகச் சேர்த்த நிலத்தையெல்லாம் மீண்டும் தனக்கே சொந்தமாக்கிக்கொண்டு திமிறி ஓலத்துடன் நகர்ந்த ஆற்றை இன்னும் மறக்க முடிவில்லை. எத்தனை மழையும் வழிந்து ஓடத்தானே வேணும். இன்னும் கரைத்தழிக்க முடியவில்லை என புரியாததாலா மழை பெய்துகொண்டே இருக்கிறது?
மனம் புதுப்புது ஊடுவழிகளில் தேடிச் சளைத்தது. தலையணை பக்கத்தில் புத்தகம் தேமே என்று படுத்திருந்தது. அதன் மீது கைவைத்து எப்போதென்று தெரியாத கணத்தில் உறக்கத்தில் விழுந்தவளை பறவைகளின் கெச்சட்டங்கள் எழுப்பின.
அத்தனை பறவை குரலிலும் குயிலின் அழைப்பு மீறி ஒலித்தது. அவற்றிற்கு மழை முடித்து எழுந்த மெல்லொளி தந்த உற்சாகம். பக்கத்திலிருந்த பாழடைந்த வீட்டின் அடர்ந்த மரங்களின் இலைகள் பளபளத்தன. அலைபேசியைத் தட்டினாள். அதே அழைப்பு இருபத்தாறு முறை.
மெல்ல துலங்கிக் கொண்டிருந்தது காலை. மெல்லிய நீராவிப் படலத்தை விலகிக் கொண்டிருந்தது கொல்லி மலை. வாசல் படியை கழுவும்போதே மனதில் ஒருதுணுக்குறல். யாரோ பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
கோலத்தின் பாதியில் சட்டென்று நிமிர்ந்தாள். அவன், அத்தை வீட்டின் வாசலில் நின்று கண்ணன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அதிர்ந்து பார்வையை தழைத்தபடி திரும்பினான்.
தேநீர் அருந்தும்போது மீண்டும் அழைப்பு. வீட்டு சனீஸ்வரன்களை யாரிடமும் வம்புக்கு நிற்காதீர்கள், எந்தப் பிள்ளையிடமும் தேவையில்லாமல் பேசாதீர்கள் என்றால் கேட்பதில்லை.
கண்ணனுக்கும் இவன்களுக்குள்ளும் எதாவது நடந்திருக்குமா?ஆனால் பெண்குரல்தானே கேட்டது. எட்டு மணிக்கு மேல் இரும்பு கேட் பக்கத்தில் தெருவைப் பார்த்து நின்றாள்.
எதிர்வீட்டு கதிர்அண்ணன் வண்டியைக் கிளப்பி நின்று, “ஒனக்கு மட்டும் தெருவுல தேர் ஓடுதோ,”என்றபின் முகத்தை உற்றுப் பார்த்து, “ஒடம்புக்கு முடியலயா…” என்றார். இல்லை என்று தலையாட்டினாள்.
“நல்லா சோறத் தின்னுட்டு படுத்து எந்திரி… எதுன்னாலும் ஓடிப் போயிரும்,” என்றபின் வண்டியை முடுக்கினார்.
தெருவின் கடைசி வீட்டை அடுத்த நெல்வயல்களின் பசுமை காலை வெயிலில் அலையடித்தது. இடையில் டேங்க்கில் கூட நீர் பிடிக்க ஆட்களில்லை. அந்த சந்திலிருந்து கண்ணன் நடந்து வந்து கொண்டிருந்தான்.
கல்பாவிய செம்மண் பாதையில், கருப்பு இடைக்கயிறுடன் உச்சிச் சிண்டு அசைய குஞ்சுமணியை ஆட்டியபடி வருகிறான். இவள் முட்டி தொடும் பாவாடையுடன் ஓடிச்சென்று அவனைத் தூக்கி, எடை தாளாமல் உடல் சரிய வயிற்றில் வைத்துக் கொள்கிறாள்.
பாதையோரத்தில் பலகையைப் போட்டு செல்வராணிச் சித்தி கால் நீட்டி அமர்ந்திருக்கிறாள். அவளின் இரு கால்களில் படுத்துக்கொண்டு கண்ணன் துள்ளுகிறான். சுடுநீரில் குளிக்க வைத்தபின் தம்பிக்கு ‘திடுக்கு தண்ணி’ ஊத்து, என்று ஈயச் செம்பில் பச்சைத் தண்ணீரை மொண்டு சங்கரியின் கைகளில் கொடுக்கிறாள்.
“தம்பி பாவம் அழுவுவான்.”
“தம்பி பயந்தறக்கூடாதுன்னுதானே… ஊத்து பிள்ளே…”
தண்ணீரை அவன் தொடையிடுக்கில் சரியாக குஞ்சிப்பூ மீது ஊற்றியதும் வீறிடுகிறான்.
“தம்பி பாவம்… தம்பி பாவம்…” என்றபடி பாவாடையைச் சுருட்டி தரையில் அமர்ந்து துண்டை மடியில் விரிக்கிறாள். கண்களில் அவன் உருவம் மங்கித் தெரிய அருகில் வந்திருந்தான். மீசையும் தாடியுமாக வளர்ந்த ஆண். கண்களைச் சிமிட்டியபடி, “ டேய் நில்றா,” என்று அழைக்க எத்தனித்த வாய், “தம்பி கொஞ்சம் நில்லு,” என்றுதான் அழைத்தது. மழை முடித்த வெயில் சுள்ளென்று எரிந்தது.
“என்ன?” என்று கண்களை இடுக்கிப் பார்த்தான். அவள் எதுவும் பேசாமல் நின்றாள்.
“என்னக்கா….”
பொற்கிளியம்மா , “ என்ன உரிமையா நிக்க சொல்றவ ,” என்று பொக்கை வாய் நிறைய சிரித்தாள். அவளுக்கு எப்படியும் பசங்களுக்குள்ளான புகைச்சல் தெரிந்திருக்கும்.
அவள் இயல்புக்கு மீறிய குரலில், “பொறந்தவனதானே உரிமையா நில்லுடான்னு சொல்லமுடியும். கூடவே பெறந்தாதானா…” என்றவள் குரல் தடுமாற நிறுத்திக் கொண்டாள். கண்ணன் நெற்றியை சுருக்கியபடி நின்றான்.
“எந் தங்கப்பிள்ளைகளா ஒரு தெருவுல பெறந்திட்டம்… உனக்கு இவனும் பொறந்தவன்தான். நீ பேசு…பேசு,” என்றபடி கைத்தடியை மடியில் சாய்த்தபடி குட்டித்திண்ணையில் அமர்ந்தாள். கண்ணன் குனிந்துகொண்டான்.
“இதென்ன புதுப் பழக்கம்… யாருக்கிட்ட பொல்லாப்போ அவங்கிட்ட வச்சுக்க வேண்டியதுதானே…”
“அதுசரி …” என்று கிழவி அதாகவே சொல்லிக் கொண்டது.
நிமிர்ந்த அவன் கண்கள் சிவந்திருந்தன. அது சினமேறிய கண்கள்.
“தெறக்கமுடியாத பூட்டுக்கு கதவ எட்டிஉதச்சானாம்…”
“யாரு கெழவி …”என்றான்.
“யாரோ ஒருத்தன்… நீ எங்க போற…”
“வயக்காடெல்லாம் மழத்தண்ணி… மோட்டை எடுத்துவிட்டு வடியவிடனும்…”
“ பசி தாங்கல….” என்றபடி எழுந்து நடந்தாள்.
சங்கரி கண்ணனைப் பார்த்தாள். அவள் பார்வையை விலக்கி நடந்தான். மண்வெட்டியுடன் வந்த வெங்கடேசுடன் பேசிக்கொண்டே முக்கால் பேண்ட்டின் பாக்கெட்டில் அலைபேசியை வைத்தபடி திரும்பிப் பார்த்துவிட்டு சென்றான்.
கணுக்காலில் பட்டின் மென்மையுடன் நித்யமல்லி உரசியது. சட்டென்று கால்களை நகர்த்திக் கொண்டாள். அவிழக் காத்திருந்த மொட்டுகள் வானத்தை நோக்கி நீண்டிருந்தன. குனிந்து அதன் இலைகளை, மலர்களை, தளிர்களை, தடவினாள். அய்யா வேட்டியை சற்றுச் சுருட்டியபடி வாசல்படியில் அமர்ந்திருந்தார். கண்களும் புன்னகையும் அவளை அருகில் அழைத்தன.
ராமச்சந்திரன் என்ற அழைப்பு முடியும் முன்பே, “ ப்ரசன்ட் டீச்சர்,” என்ற குரல் எழுந்தது. “என்ன அவசரம்?” என்ற கவிதா அவனை பார்த்துக்கொண்டே, “ ரவி..”என்றாள்.ராமச்சந்திரன் அவளைப் பார்த்தபடி நின்றான்.அவள் தலையசைத்ததும் அமர்ந்தான்.
ப வடிவிலாக அமைந்த மூன்று கட்டிடங்களின் வகுப்பறைகளில் இருந்து வெளிவந்த குரல்கள் இரைச்சலாக ஒலித்தது.சிறிது நேரத்தில் வெவ்வேறு ஒற்றை இரட்டை குரல்களாக மாறியது.அவை எங்கோ வேறு இடத்தில் அதற்கும் இங்குள்ள அவர்களுக்கும் தொடர்பில்லை என்று இருந்தது.
பூட்டப்பட்ட பழைய வகுப்பறையின் முன்னிருக்கும் அகன்ற நடைப்பாதை அவர்களின் தற்போதைய வகுப்பறை.நேற்று மழை பெய்திருந்ததால் ஆஸ்பெட்டாஸின் காந்தல் குறைந்திருந்தது.சமேதா மைதானத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.அளக்கும் கண்கள் அவளுடையது.கண்களை உருட்டி உருட்டி பார்ப்பாள்.முன்னால் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு மூளையும் ஒரு ரகம்.வழக்கம் போல முதல் வேலையாக வாய்ப்பாடு எழுதத் தொடங்கினார்கள்.
அவளுக்கு படித்துமுடித்ததும் வேலைக்கு செல்லும் துறுதுறுப்பு பத்துநாட்களாக காலைநேரங்களில் மாறாமல் இருக்கிறது.காலையில் புடவை தேர்வதிலிருந்து குளியலறை முன்னுரிமை,அதிகபடியாக கிடைக்கும் பால் என்பனவற்றால் துடியாகும் மனம், அவள் இங்கு வந்து அமர்ந்ததும் அசைவிழந்துவிடும்.அதை வலுக்கட்டாயமாக தட்டி தட்டி எழுப்ப வேண்டும்.மழைபெய்து முடித்த புழுக்கம் கசகசத்தது.
ரவியின் சிறுவிரல் எழுதுபலகையின் சட்டங்களில் மெதுவாக ஒரே நேரஇடைவெளியில் தொட்டு தொட்டு எழுந்தது.ஓசையில்லாத தாளம்.சிறிய நகம்.. கருத்த சிறு விரல்.
“எல்லாரும் காலையில சாப்பாட்டாச்சா…”என்று கவிதா கேட்டவுடன் சொல்லி வைத்ததைப்போல நிமிந்த அவர்கள், “ சாப்டாச்சு டீச்சர்,” என்றனர்.பத்திலிருந்து பன்னிரெண்டு வயதிற்குள்ளான பிள்ளைகள்.
அவர்கள் மீண்டும் எழுதத்தொடங்கியதும் கவிதா கற்றல்படிநிலை குறிப்பேட்டை எடுத்தாள்.எடுத்த கையோடு மூடி வைத்துவிட்டு அவர்களைப் பார்த்தாள்.சிவா அவளைப் பார்த்து விழித்தப்பின் குனிந்து எழுதினான்.மூன்றாம் வாய்பாடு வரைக்கும் அவன் வண்டி பறக்கும்.சிவானி வாசிப்பு வரைக்கும் வந்து விட்டாள்.
அருண் விசுக்கென்று எழுந்ததில் பதறி, “என்னடா..”என்றாள்.
“அவன் என்னைப்பாத்து எழுதறான் டீச்சர்..”
“நீ என் பக்கத்துக்கு வா..நீ நல்லபையன் தானே…அவன் தெரியாம செஞ்சிருப்பான்,”
இப்படி பேசாவிட்டால் சாயுங்காலம் வரை கொதிநிலையிலேயே இருப்பான்.ஆங்கார மூர்த்தி.
ராமச்சந்திரன் குனிந்து அமர்ந்திருந்தான்.இரண்டாம் வாய்ப்பாட்டின் பாதியில் நிற்பான்.சிவாவின் முகத்தை பார்த்ததும் மூன்றாம் வாய்ப்பாட்டை முடித்து நான்கிற்கு திணறுகிறான் என்பது அப்பட்டமாக தெரிந்தது.
கவிதா,“போதும்..ஒவ்வொருத்தரா எழுதினத காட்டு,”என்றாள்.
அருண் எழுந்து வந்தான்.ஒவ்வொரு முகமும் சிறுத்திருந்தது.தங்களால் மற்றவர்கள் போல படிக்கமுடியவில்லை என்ற தெளிவும்,சோர்வும் உள்ள பிள்ளைகள்.எங்கேயோ ஒரு பின்னல் அவிழ்ந்த கூடை.இவர்களுக்கு பள்ளிக்கூடம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி மனதை குடைந்து கொண்டே இருக்கிறது.
இந்த வேலைக்காக அழைத்த அன்று கவிதா பரவசமாக பள்ளிக்கு வந்து நெட்டிலிங்க மரத்தடியில் நின்றபோது நம்ம பள்ளிக்கூடம் என்ற துள்ளலும் பழைய முகங்களும் நினைவில் வந்து கொந்தளிக்க செய்தன.சமநிலையில் இருக்க படாதபாடுபட்டாலும் வியர்த்து வழிந்தது.
அன்று தலைமையாசிரியர், “என்ன பண்ணியாச்சும் இந்தப் பிள்ளைகள தினமும் பள்ளிக்கூடத்துக்கு வர வைக்கனும்மா.பிள்ளைக இங்க இருந்தா போதும்..இல்லன்னா ஊர்சுத்தி சீரழிஞ்சிரும்.எல்லாம் வயக்காட்டு வேலைக்கும், வெளியூர்ல கூலி வேலைக்கும் அலையறவங்களோட பிள்ளைக.படிக்கமுடியலன்னாலும் பாதுகாப்பா இருக்கட்டும்.ரூல்ஸ்ல வரமாதிரில்லாம் ரொம்ப சிக்கல் உள்ள பிள்ளைகள் இல்ல…நடத்தை குறைபாடுகள் ரொம்ப குறைவு..”என்றார்.
இந்த பத்துநாட்களில் நேற்றும் இன்றும் தான் அனைத்து பிள்ளைகளும் வந்திருக்கிறார்கள்.தனியாக பள்ளிக்கூடம் நடத்துவதைப் போன்று இவர்களுக்கென இருபது பதிவேடுகள். ‘ரெக்கார்டை பக்காவா மெயின்டெயின் பண்ணும்மா’ ஒன்னும் சிக்கலில்லை என்று சகஆசிரியர்கள் அவளின் மிரண்ட விழிகளைப் பார்த்து சொல்லியபடியே இருக்கிறார்கள்.
கவிதா,“தமிழ் அட்டைகள எடு,”என்றதும் சிவா கற்றல் அட்டைகள் இருந்த பிளாஸ்டிக் ட்ரேயை எடுத்து வந்தாள்.இரண்டிரண்டு பிள்ளைகளாக சேர்ந்து அமர்ந்து சொல்லிக்கொடுத்த வார்த்தைகளை எழுத்துக்கூட்டினார்கள்.
ராமச்சந்திரனை பார்த்தாள்.அவன் பரபரவென்று எழுத்துக்கள் மீது விரல் ஓட்டினான்.சிட்டுக்குருவி மாதிரியானவன் என்று அவளுக்கு தோன்றியது.முதல் மணி அடித்ததும் சமேதா ஆங்கில அட்டைகளை எடுத்து முன்னால் வைத்தாள்.எழுத்துக்களின் அட்டைகள்.
அவர்களே எடுத்துக்கொண்டார்கள்.வாசவன் அமர்ந்திருந்த பாயின் அடியில் எதுவோ அசைவு தெரிந்தததும், “ எழுந்திரிச்சு நகந்து போங்க..பிள்ளைகளா,”என்று பதறி எழுந்தாள்.மூன்று பாய்களையும் தள்ளிப்பார்த்தால் அடியில் பூரான் நெளிந்து கொண்டிருந்தது.அருண் நெட்டிலிங்க மர இலையால் அதை எடுத்து மைதானத்தில் விட்டான்.
வழக்கம் போல ராமச்சந்திரன் கவிதாவின் அருகில் வந்து அமர்ந்தான்.கீழே கிடந்த கைக்குட்டையை எடுத்துக்கொடுத்தான்.
“எ”
“பி”
“சி”
“டி”
“டி…”
“அடுத்து…”
“எ”
“இ…பத்துதடவை சொல்லி எழுது..”
எழுதுபலகையை கையின் வியர்வை ஈரத்தால் அழித்துவிட்டு எழுதினான்.இதுவரை இருந்த ராமச்சந்திரன் இனிமேல் சாயுங்காலம் வரை வரமாட்டான்.ஆங்கில வகுப்பிலிருந்து அவன் வேறொரு பையனாக மாறுவதை தினமும் பார்ப்பது அவள் மனதை துவர்ப்படைய செய்கிறது.மென்சிறுமுடிகள் வியர்வையில் படிந்த அவன்முகம் கசப்பில் சட்டென விழும்.
அவனிலிருந்து தலைநிமிர்த்தி மைதானத்தை பார்த்தாள்.மழையில் நப்புத்தட்டி உதிர்ந்தஇலைகள் பரவிய அரவமற்ற மைதானம் மனதை துணுக்குற செய்தது.தலைமையாசிரியர் மைதானத்திலிருந்து அவர்களை பார்த்தபடி நின்றார்.அவர் அருகில் சென்றாள்.
“என்ன கவிதா..ராமசந்திரன் ‘டி’ ய தாண்டலயா?”என்றபடி புடவையை சரி செய்தார்.
“ஆமா டீச்சர்.அவன் ட்ரை பண்றான்.முடியல.அடிப்படை கணக்கும், தமிழும் கூட தெரியாம இவங்க லைஃப் என்னாகும் டீச்சர்..வாழனுமில்ல,”
“அல்லாவின் பெயரால எல்லாருக்கும் எதாச்சும் ஒரு வழியும்,துணையும் உண்டும்மா, ”
“ பாய்க்கு அடியில பூரான் இருக்கு டீச்சர்.பிள்ளகள கடிசிட்டா?”
“பூட்டியிருக்கற கிளாஸ்ல விறகு இருக்கு அதான்..”
“மேற்குகட்டிட வராண்டாவுக்கு போகட்டுங்களா…”
அவர் திரும்பி அங்கு பார்த்தவாறு,“அங்க ரோடு தெரியும்..தெருவுல நிக்கிற பயலுக கண்டதையும் பேசுவானுங்க..”
“பாத்துக்கலாம் டீச்சர்…”
“கருப்புப்புடவை உனக்கு எடுப்பா இருக்கும்மா,”
“தேங்ஸ் டீச்சர்..அம்மாவோட புடவை,”என்றவளின் கன்னத்தில் தட்டிவிட்டு அடுத்ததாக இருந்த ஓட்டுக் கட்டிடத்தை நோக்கி நடந்தார்.
நேற்று பாலுவுடன் பேசியது நினைவில் எழுந்தது.மாற்று சான்றிதழ் வாங்க வர வேண்டும் என்று கல்லூரி அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது.பாலுவின் குரல்.
“நம்ம காலேஜ்ல ஜாயின் பண்ணியிருக்கேன்..அப்படியே எம்.எட் பார்ட் டைமா பண்ணாலான்னு..நீ என்ன பண்ற..”
“எங்கவூர் ஸ்கூலுக்கு போறேன்.சர்வ சிக்க்ஷா அபியான் ஸ்கீம்ல..”
“சம்பளம் தரைத்தட்டுமே.உனக்கு ஒரு நாள் சம்பள கணக்கு என்னன்னு யோசிச்சியா? வயல் வேலைக்கான கூலியில மூணுல ஒருபங்குதான் தெரியுமா?”
“நான் படிச்ச பள்ளிக்கூடம் பாலு..சும்மா கூப்டாங்கன்னு வந்தேன்.விட மனசில்ல..”
“போகலாம் நல்லவிஷயம்தான்.ஆனா வருஷா வருஷம் ரூல்ஸ் மாறலாம்.கோர்ஸ் முடிச்சு ரெண்டு வருஷமாயிட்டா பிரைவேட்ல எடுக்கமாட்டாங்க.டி.சி வாங்க வரப்ப பேசலாம்..”
மைதானம் மௌன ஏகாந்தத்தில் இருந்தது.
இடைவேளையில் பிள்ளைகள் மைதானத்தை நிரப்பினார்கள்.பள்ளிக்கு பின்னால் பாசனவாய்க்கால்.அதற்கடுத்து ஐயாறு.கரைஒட்டிய வெளியில் கழிப்பிடம் இருந்தது.ஆனால் வாய்க்காலில் தான் பசங்க சிறுநீர் கழிப்பார்கள்.அது ஒரு விளையாட்டு.
மறுபடியும் ஆங்கில அட்டைகளுடன் போராடத்துவங்கினார்கள்.ராமச்சந்திரன் மீண்டும் ‘ இ’யை மறந்துவிட்டு கவிதா முகம் நோக்கி அமர்ந்திருந்தான்.வெயில் குறைந்து வானம் அடைத்துக்கொண்டிருந்தது.
பள்ளிக்கு வெளியில் இருக்கும் கடைக்காரஅண்ணன் வேகமாக வருவது தெரிந்தது.நடைபாதை தூணைப்பிடித்தபடி, “நான் பெரிய டீச்சருக்கிட்ட போய் சொல்றேம்மா…உம்முகத்துக்காக பாத்தேன். இன்னிக்கி இந்த மணிப்பய சிப்ஸ் பாக்கெட்ட தூக்கிட்டான்.நெதமும் இவனுக்கு நான் போலீஸ்காரனா வைக்கமுடியும்..”
மணி எழுந்து நின்றான்.அவன் நிற்பதிலிருந்தே எடுத்திருந்தான் என்பது தெரிந்தது.அவள் எழுந்துநின்று, “இந்த ஒருதடவை மன்னிச்சிருங்கண்ணா..இனிமே எடுக்கமாட்டான்..நான் சொல்லிக்கறேன்,”என்றாள்.
“நீ என்னாம்மா எங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு..இன்னொரு தடவ கைவைடா அப்பறம் தெரியும்,”என்று வேகமாக திரும்பி பனியன் மீது போர்த்தியிருந்த துண்டை சரிசெய்தபடி நடந்தார்.
“காசு வச்சிருக்க தானே மணி..”
“ஐஞ்சுரூபா…”என்று கால்சட்டை பையிலிருந்து எடுத்தான்.
“கடைக்குபோய் அந்த சிப்ஸ் பாக்கெட்ட காசுகுடுத்து வாங்கிட்டு வா…”
“அவரு கைய ஓங்குவாறு…”
“நீ போ. பின்னலேயே சுரேஷ் வருவான்..”
சுரேஷ் பக்கத்தில் வந்தான்.அவனிடம் மணியை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியப்பின், பிள்ளைகள் அனைவரிடமும் மணி எங்கும் கைவைத்தால் மெதுவாக சொல்லி அழைத்து வர வேண்டும் என்று சொன்னாள்.
அவர்கள் தலையாட்டுவதை கவனிக்கையில்தான் ஸ்னேகா இன்னும் வரவில்லை என்பது உறைத்தது.
“ஸ்னேகா எங்கடா…”என்று உரக்கக் கேட்டு எழுந்தாள்.
“அந்தப்பிள்ள பைய எடுத்துக்கிட்டு ஆத்தோரமா போனுச்சு டீச்சர்…”
“ஏண்டா என்னிட்ட சொல்லல..”
“அது எப்பவும் அப்பிடித்தான் டீச்சர்…”
கவிதா அவசர அவசரமாக தலைமையாசிரியர் அறைக்கு விரைந்தாள்.
தலைமையாசிரியர்,“அருண அனுப்பும்மா..”என்றபடி வகுப்பிற்கு சென்றார்.
திரும்பி வரும்போது சமையற்கூட கட்டிடத்திற்கான இடைவெளியில் அருண் ஆற்றை நோக்கி ஓடுவது தெரிந்தது.சிறிது நேரத்தில் ஸ்னேகாவுடன் வந்தான்.
“புத்தகப்பை எங்க ஸ்னேகா..”
அவள் பேசவில்லை.
அருண்,“கேணியில தூக்கிப்போட்ருச்சு டீச்சர்..ஆழமான கேணி..படியில்லை.எறங்கி எடுக்க முடியாது,”என்றான்.
“எதுக்கு ஸ்னேகா அங்க போன..”என்று கேட்டதற்கும் பதிலில்லை.
“இவங்க ரெண்டாவது அப்பாவும், அம்மா, தம்பியும் காலையில கோயிலுக்கு போறத பாத்துட்டு நானும் வரேன்னு சொன்னுச்சாம். கூட்டிட்டு போவலன்னு கோவத்துல இருக்கு..”
“கோவம் வந்தா கேணிக்குப் போவியா..”
“இல்ல டீச்சர்..காலையில சோறு திங்கல..அதான் கொய்யாப்பழம் பறிக்க போனேன்,”
“காலையில வந்ததும் கேட்டனே..ஏன் சொல்லல?”
அமைதியாக நின்றாள்.பர்ஸை திறந்தால் ஒருபத்தும் ஐந்தும் இருந்தது. பிஸ்கெட் பாக்கெட் வாங்கி வர மணியை அனுப்பினாள்.
“அருண் கூப்டாதான் வருவியா ஸ்னேகா..”
அவள் தலையாட்டினாள்.
சிவானி,“ஆமா ..டீச்சர்.அவன்தான் மதியானம் பள்ளிக்கூடத்து சோறு வாங்கி அதுக்கூட சேந்து திம்பான். அவங்க பக்கத்துவீடு.அவங்கவீட்ல தீனி செஞ்சா இந்தப்பிள்ளைக்கி குடுப்பான்.அவங்கம்மா எந்நேரமும் வயல் வேலைக்கி போயிரும்..”என்றாள்.
ஸ்னேகா தலையை குனிந்தபடி நின்றாள்.
“இங்க வா ஸ்னேகா..” என்றதும் அருகில் வந்து அமர்ந்தாள்.அவள் தோளில் கைவைத்து , “இனிமே கேணி பக்கம் போகக்கூடாது.கோவம் வந்தா..பசிச்சா.. என்னிட்ட சொல்றியா..”
“அருண்பயட்டதான் சொல்வேன்…”
“சரி…கேணிக்கு போகக்கூடாது…”என்ற கவிதா பெருமூச்சுவிட்டாள்.
‘வேலைக்கு செல்லும் முதல் ஆண்டில் எத்தனை மாணவர்களை சரியா கையாளமுடியுதுங்கறது தான் உங்க திறமை’ என்று செல்லபாண்டியன் ஐயா கல்லூரியில் அடிக்கடி சொல்வது நினைவிற்கு வந்ததும் அழுகை வந்தது.எழுந்து நெட்டிலிங்க மரம் வரை நடந்தாள்.
இன்று மதியம் தோட்டவேலைக்கு பிள்ளைகளை அழைத்து செல்ல வேண்டும் என்று நேற்றே தலைமையாசிரியரிடம் கேட்டிருந்தாள்.அந்த வழக்கம் இப்பொழுது இல்லை என்றப்பின் போறதுன்னா போங்க என்றார்.உணவு இடைவேளையில் சமையல்கூடத்திலிருந்து இரண்டு வாளிகளை வாங்கி ராமச்சந்திரனிடம் கொடுத்தாள்.
தலைமையாசிரியரின் அறைக்கு சென்று வருவதற்குள் பிள்ளைகள் தோட்டத்திற்கு சென்றிருந்தனர்.கவிதா படித்த நாட்களில் இன்னும் நிறைய இடமும் செடிகளும் மரங்களும் இருந்தன.கவிதா சற்று தூரத்திலேயே நின்று கொண்டாள்.
அருண் பாசனவாய்க்காலில் இருந்து தண்ணீரை வாளியில் அள்ளி மாற்றி கொடுக்க ஸ்னேகாவும் ராமச்சந்திரனும் தென்னைமரங்களுக்கு ஊற்றினார்கள்.புதராக படர்ந்து மலர்ந்திருந்த மல்லிகைசெடியின் பக்கத்தில் சமேதாவும்,சிவானியும் பூக்களை பறித்துக்கொண்டிருந்தார்கள்.
சிவா, “பிள்ளைகளா மல்லியப்பூ செடிக்கும் தண்ணி ஊத்தலாம்..”என்றான்.வாசவன் வாய்க்காலின் சிமெண்ட் கட்டையில் அமர்ந்து தண்ணீரில் கால்களை அலைந்து கொண்டிருந்தான்.தண்ணீர் நிறைந்து ஓடியது.ஓரத்திலிருந்த நெல்லிக்காய் மரத்தினடியில் நின்ற ரவி உச்சியில் இருந்த காய்களை பார்த்தபடி மரத்தை உலுக்கினான்.
மணி தென்னைமரத்திற்கு அடியில் வட்டமாக பறிக்கப்பட்டிருந்த நீர்பிடி குழியை ஆழமாக்கி அதில் கிடந்த தாள்களை எடுத்து ஓரமாக வீசினான்.சுரேஷ் விழுந்திருந்த மட்டைகளை இழுத்துச் சென்று சத்துணவு கூடத்திற்கு அருகில் போட்டான்.விவசாயவேலைகள் ரத்தத்தில் ஊறிய பிள்ளைகள்.
கவிதா நிமிர்ந்து மேற்கே பார்த்தாள்.கொல்லிமலை முகடுகள் மேகம் சூடியிருந்தன.வெயிலும் மழையும் பனியும் உச்சத்தை அடையும் நிலம்.மலையின் வண்டல் வந்து படிந்து கொண்டேயிருக்கும் பூமி.தின்று,உயிர்த்து,வாழ்ந்துகிடக்க இதைவிட பேரருள் பிறிதில்லை என்ற எண்ணம் வந்ததும் பார்வையை இறக்கி பிள்ளைகளைப் பார்த்தாள்.சாரல் கடந்து சென்றது.
அவர்கள் அருகில் சென்று, “புதுசா எதாச்சும் செடி நட்டு வளக்கலாமா? ஆளுக்கு ஒரு செடி..அந்த ஓரமா மரக்கன்னு கூட நடலாம்.நம்மளே எரு தயாரிக்கனும்,”என்றாள்.அனைவரும் சிரித்தபடி ஒரே குரலில், “ சரிடீச்சர்,”என்றார்கள்.
ராமச்சந்திரன், “எருவுகுழி போடறதுதானே டீச்சர்….ரொம்ப ஈசி டீச்சர்,”என்றான்.அவன் படபடத்த கண்களுடன்,அலட்சியமான பேச்சுடன்,இயல்பான சிரிப்பும் உற்சாகமுமாக நின்றான்.கவிதா புன்னகைத்தாள்.