கா சிவா

பங்காளி

தொலைக்காட்சியில் நிகழ்ச்சிக்கிடையே அந்த விளம்பரம் வந்தது. எல்லா நிகழ்ச்சிகளிலுமே பத்து நிமிடங்களுக்கொரு முறை, எதிர்கட்சியை கேலி செய்யும் வெவ்வேறு மாதிரியான விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதால், ஒருவித சலிப்புடன், செல்வம் ஒலியை அணைத்தபோது தரையில் கால் நீட்டி அமர்ந்திருந்த அம்மா இவனைப் பார்த்தார். அவன் முகத்தில் தெரிந்த ஒவ்வாமையைக் கண்டு “என்னாச்சு” என்றார்.

செல்வமும் அவன் அப்பா கணபதியும் சோபாவில் அமர்ந்திருந்தார்கள். டீபாயின் மேல் கிடந்த லேசாகக் கசங்கிய தமிழ் நாளிதழின்மேல் அம்மாவின் கண்ணாடி இருந்தது.

“பத்து வருசமா இருந்தவனுங்க, தான் செஞ்சத சொல்லாம அடுத்தவங்கள கிண்டல் பண்றானுங்க. நீயும் இவனுங்களுத்தான் ஓட்டப் போடுவ”

அம்மா லேசாக புன்னகைத்து, “அப்படியே பழகிடுச்சு. என்ன பண்ணச் சொல்ற” என்றார்.

கணபதி எந்த உணர்வும் காட்டாத முகத்துடன் ஒலியின்றி ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியை வெறித்துக் கொண்டிருந்தார்.

“இதனாலதான் அவனுங்க மேல வர்ற கோபத்தவிட ஒங்க மேல அதிகமா கோபம் வருது”

“ஏன்”

“தலைவரா இருந்த அந்தம்மா இருந்தவரைக்கும் எப்படி பம்மிக்கிட்டு இருந்தானுங்க. இப்ப எப்படி துள்ளிக்கிட்டு திரியிறானுங்க”

“அவங்க துள்றதுல ஒனக்கு என்ன பிரச்சனை”

“எனக்கு பிரச்சனையில்ல. நம்ம மாநிலத்துக்குதான். அந்தம்மா ஏத்துக்காம இருந்த திட்டத்தையெல்லாம் நம்ம மேல திணிச்சப்ப பல்ல இளிச்சுக்கிட்டே ஏத்துக்கிட்டாங்களே அது ஒங்களுக்குப் புரியுதா”

“எவ்ளோ கட்டுப்பாடு கொண்டு வந்தாலும் நம்ம புள்ளைங்க படிச்சு மொத எடத்துக்கு வந்திருங்க. அதப் பத்தி நீ கவலப்படாத”

பதில் சொல்ல முயன்றபோது அலைபேசி அழைத்தது. சண்முகம் அண்ணன்தான் அழைத்தார். அம்மா செல்வத்தின் முகத்தில் தெரிந்த தவிப்பை கவனித்ததும் பார்வையைத் திருப்பி தொலைக்காட்சியை பார்த்தார். அம்மாவின் பாவனையை பார்த்துவிட்டு அழைப்பை ஏற்காமலேயே அறையைவிட்டு பால்கனிக்கு வந்தபின் அழைப்பை ஏற்றான். சண்முகம், செல்வத்தின் பெரியப்பா மகன்.

“சொல்லுங்கண்ணே”

“செல்வம் வீட்ல இருக்கியா. கொஞ்சம் அவசரம் அதுக்காகத்தான் இப்ப கூப்ட வேண்டியதாயிடுச்சு. சாரிப்பா”

“பரவாயில்ல, சொல்லுங்கண்ணே”

“ஒன் அண்ணிக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்ல. ஆஸ்பிடல் போகனும்”

“என்னாச்சுண்ணே. பயப்படற மாதிரி ஒண்ணுமில்லையே” அதிர்ச்சி தொனிக்கும் குரலில் செல்வம் கேட்டான்.

“ஒனக்குதான் தெரியுமே. பய நெனப்புலேயே ஒழுங்கா சாப்பிடாம ஒடம்பு எளச்சிட்டா. மதியத்துல சாப்பிடராளோ இல்லையோ தெரியல. நான் வந்தவுடன எனக்கு காபி கொண்டாறேன்னு அடுப்படிக்கு போனவ மயங்கி கீழே விழுந்துட்டா”

“அய்ய்யோ. அடி எதுவும் படலையே”

“இல்லையில்ல. செவத்த ஒட்டியே விழுந்ததால அடி எதுவும் படல. மொகத்துல தண்ணி தெளிச்சவுடனே முழிச்சிட்டா”

“ஒடனே பக்கத்துல இருக்கற டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்கண்ணே”

“கூட்டிட்டு போகனும். அதுக்காத்தான் ஒன்னய கூப்பிட்டேன்…” தயக்கத்துடன் இழுபட்டது வார்த்தை.

“தயங்காம சொல்லுங்கண்ணே. எவ்வளவு வேணும்”

“செல்வம், ஏற்கனவே நெறைய கொடுத்திருக்க. மறுபடியும் கேக்கறதுக்கு தயக்கமாதான் இருக்கு. வேற யாருக்கிட்டயும் கேக்க முடியாமத்தான்… ஒங்கிட்ட கேக்கறேன். ஒண்ணும் தப்பா நெனச்சுக்காதடா”

“ஏண்ணே இப்படியெல்லாம் பேசுற. ஒரு ஐயாயிரம் ரூபாய ஒன் அக்கௌன்ட்ல போடறேன். மொதல்ல அண்ணிய ஆஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டு போங்க. மறுபடியும் கவனமில்லாம இருக்காதீங்க,” என்று இணைப்பைத் துண்டித்தான். அலைபேசியிலேயே அவரின் கணக்குக்கு பணத்தை அனுப்பினான். பணம் சென்றடைந்ததைக் கூறும் குறுத்தகவலுக்காக காத்திருந்த நேரத்தில் கீழே தரையில் வைக்கப்பட்டு முதல்தளம் வரை வளர்ந்து வந்து பூத்திருந்த முல்லை மலர்களைப் பார்த்தபடி அதன் சிறிய இலைகளை வருடினான். அதன் மெல்லிய மணம் மனதின் பதட்டத்தை சற்று நிதானமாக்கியது. குறுந்தகவல் வந்தவுடன் உள்ளே சென்றான்.

நுழைந்தபோதே, அடுப்படியில் இருந்த மனைவி ரமா விழிகளாலேயே செல்வத்தை அழைத்தாள். என்ன என்ற முக பாவத்துடன் சென்றவனிடம் “எதுக்குங்க அத்தைக்கிட்ட இத கேட்டுக்கிட்டு இருக்கீங்க. அவங்களப் பத்திதான் ஒங்களுக்கு நல்லாத் தெரியுமே. என்ன சொன்னாலும் அவங்க கேக்கப் போறதில்ல. ஒங்களுக்குதான் டென்சன்” என்றாள்.

அவள் பேசும்போது உதட்டசைவிற்கு ஆமா போடுவதுபோல காதில் தொங்கிய ஜிமிக்கி முன்னும் பின்னும் ஆடியது. சாளரம் வழியாக வந்த காற்றால் உந்தப்பட்ட நான்கைந்து குழல்கள் இணைந்து காதிற்கு முன்புறம் வந்து துள்ளின.

ஜிமிக்கியையும் குழலையும் நோக்கிக்கொண்டிருந்த அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் அவனை நிமிர்ந்து பார்த்து, “நான் சொல்றத கவனிச்சிங்களா இல்லையா?” எனக் கேட்டாள்.

“என்ன சொன்ன?”

“சரியாப் போச்சு. அத்தைக்கிட்ட ஓட்டுப் போடறதப் பத்தி எதுவும் கேக்காதீங்க,” என்றாள்.

“ஆமால்ல. பேசிக்கிட்டு இருந்தத மறந்தே போயிட்டேன். இந்தத் தடவையும் எப்படி அதே சின்னத்துக்கு ஓட்டுப் போடுவாங்கன்னு நல்லாக் கேக்கலாம். நீயும் வா.”

“அய்யா சாமி.. ஒங்களையே கேக்க வேண்டாம்னு சொல்றேன். என்னய வேற கூப்படறீங்களா. இத்தன தடவ முடியாததையா இப்ப மாத்தப் போறீங்க. நீங்க ஏதாவது பண்ணுங்க, என்னய இழுக்காதீங்க சாமி,” கும்பிடும் பாவனையில் கையை குவித்துவிட்டு அடுப்பை நோக்கித் திரும்பியவளின் கையைப் பிடித்தான். இறுக்கமாக கையின் மேல்பக்கம் அழுத்திக் கொண்டிருந்த வளையலை தளர்த்தியபடி “ரமா, நீ சொல்லு. நீ யாருக்கு ஓட்டுப் போடுவ?” என்று கேட்டான்.

“ஏன்.. இதிலென்ன சந்தேகம் எப்பவும் போடறதுக்குதான்”

“அதத்தான் யாருக்குன்னு கேக்கறேன்”

“அத நீங்க கேட்டா ஒடனே சொல்லனுமா. எனக்கு யாருக்குத் தோணுதோ அவங்களுக்குப் போடுவேன். ஒங்கக்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை,” என்றபடி கையை இழுத்துக் கொண்டு திரும்பியவள், தோளை மெல்ல உலுக்கிக் கொண்டு உதட்டை லேசாகக் கடித்தபடி புன்னகைத்துக் கொண்டாள்.

இவளுக்கு எல்லாம் விளையாட்டுதான் என்று முணுமுணுத்தபடி உள்ளே வந்தான். தொலைக்காட்சியில் அடுத்த நெடுந்தொடரின் விளம்பர நேரத்தில் அதே போன்ற கேலி அரசியல் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. ஒலியைக் குறைத்துவிட்டு இவனை நோக்கிய அம்மா, “போன்ல யாரு, அந்தப் பாவியோட மவனா?” என்று கேட்டார்.

“ஏம்மா, பெரியப்பாவே போயிச் சேந்துட்டாரு. இன்னும் கோபத்தை விடாம வச்சுக்கிட்டு இருக்க”

“அவம் போயிட்டானா செஞ்சதெல்லாம் மறைஞ்சிருமா?”

“சரி, அவரு செஞ்சதுக்கு சண்முகண்ணே என்ன பண்ணுவாரு?”

“அவஞ் சம்பாதிச்சு சேத்ததுக்கெல்லாம் இவந்தானே வாரிசு. நல்லதுக்கு மட்டுமில்ல கெட்டதுக்கும் பாவத்துக்கும் சேத்துத்தான்”

“சரி விடும்மா, எல்லாத்தையும் எழந்துட்டு நிர்க்கதியா நிக்கறாரு”

“நான் உன்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கேன். அவங்கிட்ட எந்தத் தொடர்பும் வச்சுக்காத. அவனுக்கு உள்ளத அவன் அனுபவிப்பான். யாராலயும் காப்பாத்த முடியாது. கை கொடுக்கறேன்னு நீயும் உள்ள விழுத்திடாத… அம்புட்டுதான் நாஞ்சொல்வேன்”

“அத நான் பாத்துக்கிறேன் நீ கவலப்படாதம்மா. நாம பேசுன விசயத்துக்கு வருவோம்”

“என்ன?”

“ஓட்டுப் போடறதப் பத்தி. இவங்க தலைவி எறந்து போனாங்களே. அதுல மர்மம் இருக்குன்னு சொல்லி யுத்தம் தொடங்கினாரே. அப்பறம் ரெண்டு பேரும் ஒண்ணாக் கூடின ஒடனே மர்மமெல்லாம் மாயமா ஆயிடுச்சே… அதக் கவனிச்சிங்களா”

“எப்டியோ அவங்க போயிட்டாங்க. இப்ப விசாரிச்சு என்னாகப் போகுது?”

அப்போது கதவு தட்டப்படும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்த செல்வம் “வாங்க சார்” என்று எழுந்தான். வீட்டு உரிமையாளர் மாணிக்கம் உள்ளே வந்தார். அம்மா காலை மடக்கியபடி நிமிர்ந்து அமர்ந்தார். அப்பா முகத்திலும் லேசாக முறுவல் தோன்றியது.

“ஒக்காருங்க” என்று அம்மா சொன்னபோது அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். மாணிக்கம் மாநகராட்சியில் இளநிலை அதிகாரியாக பணியாற்றுகிறார்.

“நல்லாருக்கீங்களா. உங்களத்தான் பகல்ல பாக்கவே முடியறதில்ல”

“எங்க, காலையில கெளம்பி வேலைக்குப் போனா… வந்து சேர ஏழுமணிக்கு மேல ஆயிடுது. இப்ப எலக்சன் டூட்டி வேற போட்டிருக்காங்க. இன்னைக்கு ரெண்டாவது நாள் டிரெயினிங். முடிஞ்சு கெளம்பி வர்றதுக்கு இவ்ளோ நேரமாயிடுச்சு”

“வாங்க சார்” என்றபடி வந்த ரமா காபிக் கோப்பையை அவரிடம் நீட்டினாள். அதை வாங்கிக் கொண்டவர் “எப்படிமா சொல்லாமலேயே காபி கொண்டு வந்திட்ட”

“உங்க குரல் கேட்டுச்சு. அதான் காபியோடவே வந்திட்டேன்”

அவரின் புன்னகையில் அவளின் செயலை பாராட்டும் தொணியிருந்தது.

“ஒருநாள் எலக்சன் டூட்டிக்கு எவ்வளவு தர்றாங்க” என்று அம்மா கேட்டார்.

“போனதடவ ரெண்டாயிரத்து ஐநூறு கொடுத்தாங்க. இந்தத் தடவ கொஞ்சம் அதிகமா தருவாங்கன்னு நெனக்கிறேன்”

“பரவாயில்லையே, ஒரு நாளைக்கு இவ்ளோ கொடுக்கிறது”

“நீங்க வேறம்மா. ஒரு நாளுன்னு ஈசியா சொல்றீங்க. மூணு நாளைக்கு ட்ரெயினிங். அப்புறம் எலக்சனுக்கு மொத நாளு சாயந்திரமே அங்க போகணும். அதோட எலக்சன் முடிஞ்சவுடனே கெளம்ப முடியாது. எல்லாத்தையும் சீல் வச்சுட்டு, பெட்டி எடுக்கறதுக்கு அவங்க வர்ற வரைக்கும் காத்திருக்கனும். ஒருதடவ நைட்டு ரெண்டு மணிக்குதான் வந்தாங்க. அதுக்கப்புறம் கெளம்பி வீட்டுக்கு வரணும்” என்றவர் “வேல நேரம் கூட பரவாயில்லம்மா… பக்கத்துல சாப்பாடு கெடைக்காது. கழிவறை சரியா இருக்காது. அதோட கொசுக்கடி வேற. ரெண்டு நாளு நைட்டும் சரியா தூங்க முடியாது. ஒடம்பு நார்மல் ஆறதுக்கு, மூணு நாளாகும் ”

“ஒங்க வேலையும் நார்மலா கஷ்டந்தான். ஆனா, சம்பளத்தோட லீவு விட்டாக்கூட நேரா வந்து ஓட்டுப் போட்டுட்டு போறதுக்கு பல பேருக்கு மனசு வரமாட்டேங்குது” என்றார் அம்மா.

“ஆமா … தேவையில்லாதவங்களுக்கு ஓட்டுப் போடறதவிட போடாம இருக்கறவன் மேல்தான்” என்றான் செல்வம் கேலியாக அம்மாவை நோக்கியபடி.

“என்ன செல்வம் இப்படிச் சொல்லிட்ட. மக்கள ஓட்டுப் போட வைக்கிறதுக்கே எவ்ளோ செலவாகுது தெரியும்ல”

“தெரியுது சார். ஆனா எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்காம போடறவங்களுக்கேதான் போடுவேன்னு சொல்றவங்கள என்ன செய்யறது”

செல்வம் அவன் அம்மாவைத்தான் சொல்கிறான் எனப் புரிந்து கொண்டவர், “சில பெரியவங்க மாறமாட்டாங்க. அதுக்கு என்ன பண்றது. சரி இந்தா இந்த மாச வாடகைக் கணக்கு, ஒரு ரெண்டு நாள்ல கொடுத்திட்டீங்கன்னா நல்லாருக்கும்” என்று செல்வத்திடம் ஒரு தாளை கொடுத்துவிட்டு எழுந்தார். குடும்பப் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கை அவர் உடலில் தெரிந்தது. “வர்றேங்க” என்று அம்மாவிடம் கூறிவிட்டு எல்லோரையும் பார்த்து தலையாட்டியபடி சென்றார்.

“தம்பீ… இப்ப எதுக்கு அவருகிட்ட போயி இப்படில்லாம் பேசற” செல்வத்தைப் பார்த்து அம்மா கேட்டார்.

“நமக்கு மேலேயிருந்து வரவேண்டிய எதையுமே கேட்டு வாங்காம, நமக்குப் பாதகமா அவங்க சொல்றதயெல்லாம் தலையாட்டிக்கிட்டே செய்றாங்களே… அவங்களுக்குதான் ஓட்டுப் போடுவேன்னு சொல்றியே… இது சரியா”

“எதுத்துக் கேட்டா மட்டும் தடுக்க முடியுமா? அவங்களுக்கு யாரோட தயவும் தேவையில்லாத நெலமையில அவங்கள எப்படி கட்டுப்படுத்த முடியும்?

இப்ப எதுக்கு மூச்சப் பிடிச்சு பேசிகிட்டிருக்கே. நானும் செய்தியெல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருக்கேன். எனக்கு தெரியும் எது நாயமுன்னு,” என்று தொடர்ந்து பேசிய அம்மாவை எப்படி மறுப்பதென யோசித்தபடி பார்த்தான் செல்வம். அருகிலிருந்த கணபதி எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஒலியின்று ஓடிய நெடுந்தொடரை வாயசைவை வைத்து புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தார்.

“எனக்கு எட்டு வயசாகறப்பவே எங்க அப்பாவோட போயி கோயில்கள்ல நடக்கற மகாபாரத உபன்யாசங்கள கேட்டிருக்கேன். ஒவ்வொரு கோயில்லயும் வேறவேற ஆளுங்களும் அவங்க வயசுக்குத் தகுந்த மாதிரி, அனுபவத்துக் தகுந்தபடி, ஒவ்வொரு விதமா சொல்வாங்க. ஆனா கதையோட மையமான கருத்து எப்பவுமே மாறாது. ஒவ்வொரு தடவயும் கேட்டுட்டு வர்றப்ப, மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சது ஒரு விசயந்தான். அத எப்பவுமே அழிக்க முடியாது”

இத்தனை வருடங்களில் அம்மா இதைச் சொன்னதில்லை. செல்வமும் இத்தனை அழுத்தி விவாதித்ததில்லை. எனவே வார்த்தை எழும்பாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அடுப்படியிலிருந்து வந்த ரமா செல்வத்தின் தோளில் கை வைத்தபடி நின்று அத்தை கூறுவதை கவனித்தாள். கணபதியும் திரும்பி அம்மாவை பார்த்தார்.

“பங்காளியோட பங்க இல்லைன்னு சொல்லி தொரத்துரவனோட வம்சமே ஒண்ணுமில்லாமப் போயிடும்,” என்று அழுத்தமாக கூறியபோது கண்கள் கலங்கி தளும்பியது. மருமகளின் முன் கண்ணீர் சிந்திவிடக் கூடாதென எண்ணியவர் போல வேகமாக எழுந்து பால்கனியை நோக்கிச் சென்றார்.

செல்வமும் ரமாவும் புரியாமல் கணபதியைத் திரும்பிப் பார்த்தார்கள்.

“ஏப்பா, இப்ப ஓட்டுப் போடறதுக்கும் அம்மா சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்?”

“இத எப்படிச் சொல்றது” என்று கூறியபடி யோசித்த கணபதி, சொற்களை தனக்குள் தொகுத்துக் கொண்டதைப் போலிருந்தது. “பெண்கள் தங்களோட ஆழ்மனசு சொல்றமாதிரி ஒரு முடிவ எடுத்துட்டாங்கன்னா அதுல இருந்து அவங்கள மாத்த முடியாது. ரமாகிட்ட கேட்டாக் கூட, நீ வருத்தப்படக் கூடாதுங்கிறதுக்காக உனக்குப் பிடிச்சத சொல்லிட்டு அவ நினைச்சதத்தான் செய்வா. அது நீ சொல்றதாக் கூட இருக்கலாம். ஆனா, அது அவளுக்குப் பிடிச்சதுக்கு வேற ஏதாவது ஒரு காரணம் இருக்கும்”.

“இந்தக் கட்சியோட வரலாறு ஒனக்கு தெரியுமுன்னு நெனக்கிறேன். அதுவரைக்கும் கட்சிக்காக ஒழச்சவரை, “கட்சியில எந்தப் பங்குமில்லை, எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு” சொல்லி தொரத்துனதனாலதானே இந்தக் கட்சியே உருவாச்சு. அதே சமயத்துலதான் ஒன் பெரியப்பாவும் அப்படிப் பண்ணினாரு. நம்மள ஏமாத்திட்டாங்கன்னு உள்ளம் கொதிச்ச அந்தத் தருணத்துல, எப்படியோ… திருதராஷ்டிரன், ஒன் பெரியப்பா, இந்தக் கட்சி உருவாக காரணமா இருந்தவரு எல்லாரையும் ஒரே குணமுள்ள எதிரிகளா வரிச்சுக்கிட்டா போலிருக்கு. அதனாலதான் ஒண்ணப்பத்தி பேசறப்போ மத்ததும் நினைவுக்கு வந்து ஒரு கொதிநிலைக்குப் போயிடறா” என்றார்.

செல்வம் சொல்லின்றி திகைத்துப் போய் அமர்ந்திருந்தான். ரமா அவன் தோளில் லேசாக ஆதுரத்துடன் தட்டிக் கொடுத்தாள். அப்போது, அலைபேசியில் சண்முகம் அழைத்தார். அழைப்பைத் துண்டித்துவிட்டு அம்மாவை நோக்கிச் சென்றான்.

 

 

நல்லவையெல்லாம் – கா.சிவா சிறுகதை

ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கிய கனகா பிரதான சாலையைக் கடந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் நெரிசலான தெரு வழியாக திருநின்றவூர் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தாள். அடர் சிவப்பு வண்ண சுரிதாரும் வெளிர் சிவப்பில் பேன்ட்டும் அணிந்திருந்தவள் தோளில் கருப்பு தோல் பையை மாட்டியிருந்தாள். ஒரு கிளிப் மட்டும் மாட்டி விரித்து விடப்பட்ட கூந்தலின் மையத்தில் மல்லிகை இரு பகுதியாக தொங்கியது.

தெருவிலிருந்து நிலையத்தைப் பிரித்தபடி கிடந்த தண்டவாளத்தில், பெரிய பெட்டகங்களையும் நிலக்கரியையும் தாங்கியபடி  சரக்கு ரெயில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. தண்டவாளத்தைக் கடப்பதற்கான மேம்பாலம் நிலையத்தின் நடுவில் உள்ளது. இவளுக்கு முதல் பெட்டியில் ஏறி இறங்குவதுதான் வசதியென்பதால் மேம்பாலத்திற்குச் செல்லாமல் பெட்டிகளை இணைத்திருக்கும் கொக்கிகளுக்கு அடியில் குனிந்தமர்ந்து நகர்ந்து தண்டவாளங்களையும் சரக்கு ரெயிலையும் கடந்து நிலைய நடைமேடையை அடைந்தாள். அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் துரித வண்டி கண்ணுக்குத் தெரியும் தூரத்தில் வந்து கொண்டிருந்தது.

கனகா தமிழக அரசின் முக்கிய அலுவலகத்தில் மூன்றாம் நிலை அதிகாரியாகப் பணியாற்றுகிறாள். பத்தாவது படிக்கும் போது இவள் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார். அப்பாவின் ஓய்வூதியத்தை மட்டும் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வாடகை கொடுத்து எட்டாவது படிக்கும் தம்பியுடனும் அம்மாவுடனும் வாழ்வை எதிர் கொண்டாள். அப்பாவின் நண்பர் நீலகண்டன் வழிகாட்டியபடி அம்மாவுடன் அப்பா பணியாற்றிய அலுவலகத்திற்கு சென்றாள். இவர்கள் சென்றபோது அலுவலகம் சற்று நேரம் நிசப்தமடைந்தது. பேசியபடி பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் எழுந்துவந்து நலம் விசாரித்தார்கள். இவர்கள் உயர் அதிகாரியை சந்தித்து, கனகாவிற்கு கருணையடிப்படையில் பணி வழங்கக் கோரும் மனுவைக் கொடுத்தார்கள். அப்பாவின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, மனு தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுப்பதாக சம்பிரதாயமாகக் கூறினார்.
அம்மா, வீட்டிற்கு வந்தவுடனேயே அங்கிருந்த  ஒவ்வொருவரைப் பற்றியும் கூற ஆரம்பித்தார்.

“மூலையில கண்ணாடி போட்டுக்கிட்டு நின்னானே அவன் நரி மாதிரி. தன் தேவைக்காக சதி செய்யவும் தயங்க மாட்டான்”

“இடது பக்கம் வழுக்கை தலையோட இருந்தானே, அவன் உதவறேன்னு சொல்வான், ஆனா எதுவும் செய்யமாட்டான்”

“மஞ்சள் சுடிதார் போட்ட அந்த ஒல்லிப் பொண்ணு சிரிப்புலேயே ஒரு போலித்தனம் தெரியிது”

“கூடவே வந்தானே… வெள்ளையா சின்னப் பையன், அவன் பார்வையெல்லாம் ஒன் உடம்பு மேலேயே இருந்துச்சு”

என்று தனித்தனியாக குறிப்பிட்டு அவர்கள் எம்மாதிரியான தவறான குணத்தோடு இருக்கிறார்கள் என்று தானாகவே யூகித்து, அவர்களிடம் எப்படி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் விளக்கினார். அம்மா கூறியதை முதலில்  புறந்தள்ளிய கனகா மனுவின் மீதான நடவடிக்கையை அறிய அடுத்தடுத்த முறை அலுவலகத்திற்கு செல்லும் போது அம்மா கூறியபடிதான் உள்ளதோ என எண்ண ஆரம்பித்தாள். அந்த ஒல்லிப் பெண்ணின் புன்னகை போலியானதாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றி அவள் மேல் ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. அரச மரத்திலிருந்து உதிரும் மெல்லிய சிறு விதைகள், கான்கிரீட் கட்டடங்களையே தகர்ப்பது போல அம்மாவின் சொல்லும் செயலும் கனகாவின் உள்ளத்தில் பதிந்து, அவளை, யாரையும் நம்பாதவளாகவும் உணர்வுரீதியாக யாருடனும் பழக முடியாதவளாகவும் ஆக்கியது.

அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று அதிகாரிகளைப் பார்த்ததால் கருணை அடிப்படையிலான பணியை பனிரெண்டாவது முடித்தவுடனேயே பெற்றாள். பட்டம் பெறாவிட்டால் பதவியுயர்வு கிடைக்காது  என்பதற்காக,  வேலையில் சேர்ந்தபிறகு தொலைதூரக் கல்வி மூலம் பட்டம் பெற்றாள்.

அப்பாவின் அலுவலகத்திலேயே பணிக்கு சேர்ந்ததால், உடன் பணியாற்றுபவர்கள் சில மாதங்கள் இவள் அப்பாவின் மேலிருந்த மரியாதையில் இவளிடம் அன்பாகப் பழகினார்கள்.  எல்லாவற்றிலும்  குறை கண்டுபிடித்து வசைபாடிய படி இருக்கும் அம்மாவின் குணத்தினால்தான் அப்பா இறந்தார் என்று இவளுக்கு அவ்வப்போது தோன்றும். அவ்வாறு தோன்றும்போது மட்டும் அம்மாவைப் போல நடந்துகொள்ளக் கூடாது என உறுதி கொள்வாள். மரண வீடுகளுக்கு செல்லும்போது வாழ்க்கையைப் பற்றி தெளிவு வந்து புதியதாக வாழவேண்டும் என உறுதி கொள்வதும், வெளியே வந்தவுடன் பழைய வாழ்க்கையையே தொடர்வதையும் போல எடுத்த முடிவை சிறிது நேரத்திலேயே மறந்துவிடுவாள். அம்மாவைப் போல யாரையும் வசைபாட மாட்டாள். ஆனால் ஒருவரைப் பார்க்கும்போது அவரின்  குறைகள் மட்டுமே இவளுக்கு பிரதானமாகப் பெரியதாகத் தெரியும்.

கனகா பணியில் சேர்ந்த ஒரு மாதத்தில் அதே பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த துர்காவை பணியிடை நீக்கம் செய்தார்கள். குறிப்பிட்ட தேதிக்குள் செய்ய வேண்டிய பணியை அவள் முடிக்கவில்லை என்று காரணம் சொன்னார்கள். ஆறு மாதம் அலையவிட்டபின் மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டாலும் ஒரு வயது மகனுடன் அவள் பட்ட பாடுகளை நேரில் பார்த்த கனகாவின் மனதிற்குள் இவள் அறிவை மீறிய ஒரு எச்சரிக்கை உணர்வு தோன்றி வலுப்பெற்றது. வேலையில்லா விட்டால் தனது குடும்ப நிலைமை மிக மோசமாகும் என்பதை எண்ணி  மனதின் ஒரு மூலையில் பதட்டம் ஒரு சிவப்பு விளக்காக எப்போதும் அணையாமல்  மின்னிக் கொண்டேயிருந்தது.  இவளின் பணி மீது ஏதாவது பிழை சொன்னால் சற்றும் தயங்காமல், எந்த குற்றவுணர்வில்லாமல் அடுத்தவரை கை காட்டிவிட பழகிக் கொண்டாள். நன்றாக பழகுபவர்களாக இருந்தாலும் தாட்சண்யம் பார்க்க மாட்டாள். தான் மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என எப்போதாவது குறுகுறுக்கும் மனசாட்சியை சமாதானப்படுத்துவாள்.

*******-

மின்தொடர் வண்டி வந்து நடைமேடையில் நின்றது. மகளிர் பெட்டி தனியாக இருந்தபோதும் கனகா முதல் பெட்டியிலேயே ஏறினாள். சென்னை சென்ட்ரலில் இறங்கியவுடன் வெளியே செல்வதற்கு இதுதான் வசதி. ஆண்களைப் பார்த்து நெளியாமல் குறுகாமல் செல்லும் இவளின் உடல்மொழி ஆண்களை வழிவிட வைத்தது. கிடைத்த இடைவெளியில் நுழைந்து, சாய்ந்துகொள்ள வாகான ஒரு இடம் பார்த்து நின்றுகொண்டாள்.

கனகா, நேற்று பெற்றோர் சந்திப்புக்காக எட்டாவது படிக்கும் பையனின் பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்ததால் அலுவலகம் செல்லவில்லை. வீட்டிலிருக்கும்போது, அழைப்பு வந்தால் பேசுவதைத் தவிர அலைபேசியை கையிலெடுக்க நேரமிருக்காது. அலைபேசியை எடுத்து புலனத்தைத் திறந்தாள். அலுவலகக் குழு பதிவுகளை முதலில் நோக்கினாள். அதில் பகிரப்பட்டிருந்த ஓர் ஆணையினைப் பார்த்தவுடன் நீண்ட நாளாக எண்ணிக் கொண்டிருந்த காஷ்மீருக்கு சென்று பனி மலைகளைக் கண்டது போன்ற பெருமகிழ்ச்சி மனதில் தோன்றியது. இவளால்  வெறுக்கப்பட்டு “ஏழரை” என்று பெயர் சூட்டப்பட்ட, அலுவலகத்தின் உயரதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த கண்டிப்பான உயரதிகாரி இவளது  அலுவலகத்தில் பதவியேற்று ஒன்றரை ஆண்டாகிறது. அலுவலகத்தின் செயல்பாடுகளை நோக்கிய பிறகு,  இந்த அலுவலகத்தின் கீழ் செயல்படும் நிறுவனத் தலைவர்களுடன் மாதம் இரண்டு கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்த ஆரம்பித்தார். எப்போதும் பார்க்கும் பணியைவிட கூடுதலாக,  கூட்டத்திற்காக கோப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைத் தொகுத்து, கலந்து கொண்டவர்களுக்கு அனுப்புவது, அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பது என பணிச்சுமை அதிகரித்தது. ஒரே மாதிரியான பணிக்கு பழகியிருந்த கனகா, இந்தக் கூடுதல் பணியால் மிகுந்த மனச்சோர்வை அடைந்தாள்.

இவள் வாழ்வில் மறக்கவே முடியாத ஒரு கூட்டம், நேற்று நிகழ்ந்ததுபோல இப்போதும்  நினைவில் நின்றது. அகலமான நீண்ட மேசைக்கு அந்தப் பக்கம், மாடத்தில் வீற்றிருக்கும் மன்னர் போல இந்த உயரதிகாரி அமர்ந்திருக்க, மற்றவர்களெல்லாம் இந்தப்பக்கம் வணங்கியபடி தரையில் நிற்கும் குடிமக்களைப் போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்தார்கள். உள்ளே செல்லும்போதே அதிகாரியின் முகம் கடுத்து சிவந்திருந்ததை கனகா கவனித்தாள். அவருக்கு யாரால் என்ன மனவருத்தமோ. இவளால் ஆவதென்ன.  நடந்துகொண்டிருக்கும் பணிகளின் தற்போதய நிலையைப்பற்றி வந்தவர்களிடம் அதிகாரி  கேட்டபோது,  கடந்த கூட்டத்தின் போது இருந்த நிலையையே இப்போதும் கூறினார்கள். மேலும் முகம் சிவந்த “ஏழரை” திரும்பி இவளை நோக்கியது. இவள்  சற்று குறுகியபடி எழுந்து  நின்றாள். “தினமும் வந்து  ஏசியில தூங்குறீங்களா. இதயெல்லாம் கேக்கமாட்டீங்களா” என்று தொடங்கி எந்த வேலையும் பார்ப்பதில்லை, எதற்கும் பிரயோசனமில்லை எனத் தொடர்ந்து வசையாய்  பொழிந்தார். அனைவரின் முன் குறுகி நின்றவளின் கால்கள் கோபத்தாலும் அவமானத்தாலும் லேசாக நடுங்கின. கண்கள் கலங்கி முகம் சிவந்து வீங்கியது. ஆனால் திட்டி முடித்தபோது, கருமேகம் பொழிந்தபின் வெண்முகிலாவதைப் போல ஏழரையின் முகத்திலிருந்த கடுப்பு மறைந்து இயல்பான தோற்றத்திற்கு வந்திருந்தது. ஆனால் கடுப்பு குடியேறிய முகத்துடன் மன்னிப்புக் கேட்டபடி அமர்ந்தாள் கனகா.

பணிக்கு சேர்ந்து பதினைந்தாண்டுகளில் இம்மாதிரி வசை வாங்கியது இதுதான் முதல்முறை. சாதாரணமாக இவளை கேள்வி கேட்டால், இயல்பாக அடுத்தவரை கைகாட்டி வசையை அவர் பக்கம் திருப்பிவிடுவாள். இந்த விசயத்தில் அவ்வாறு செய்ய முடியவில்லை. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தாள். மறுநாள் சென்று தன்னை வேறு அலுவலகத்திற்கு மாற்றுமாறு கோரிக்கைக் கடிதம் எழுதி அவரின் தனிச்செயலரிடம் கொடுத்தாள்.  போன வாரம் விசாரித்தபோதும்   அதை ஏற்பதாகவோ மறுப்பதாகவோ எதுவும் எழுதப்படாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக  ஏழரையின் மேசையிலேயே இருப்பதாகவே பதில் கிடைத்தது.

********

ரயில், மேம்பாலத்தினுள் நுழைந்து அம்பத்தூர் நிலையத்தில் நின்றது. செல்வம் தென்படுகிறாரா என்ற ஆர்வத்தோடு, ஏறுபவர்களையும் நடைமேடையில் நின்றவர்களையும் பார்த்தாள். எப்போதுமே ஆவடியிலிருந்து புறப்படும் ரெயிலில் முன்னதாகவே சென்றுவிடுவார் என்று அறிந்தபோதும் ஏனோ எதிர்பார்க்கத் தோன்றியது.

செல்வம், ஆறு மாதங்களுக்கு முன் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கனகாவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கனகா செய்த பணியை நாற்பது வயதில் இவர் செய்யத் தொடங்கினார். ஊரிலுள்ள எல்லா வேலைகளையும் ஒன்று மாற்றி ஒன்றாகப் பார்த்துவிட்டு கடைசி இரண்டு வருடங்கள் விற்பனையாளராகப் பணி புரிந்துவிட்டு, ஏதோவொரு உத்வேகத்தில் தேர்வெழுதி அரசுப் பணிக்கு வந்திருக்கிறார்.

பணியில் சேர்ந்த அன்று செல்வத்தைப் பார்த்த கனகாவிற்கு ஒருவித சலிப்பும் ஒவ்வாமையும் ஏற்பட்டது. இந்த வயதில் இருப்பவர் எப்படி உதவியாளர் பணியை செய்வார், இத்தனை வருடங்களாக ஒரு நிலையான வேலையை அமைத்துக் கொள்ள இவருக்குத்  திறனில்லையே என்பது போன்ற எண்ணங்கள் தோன்றியது.

செல்வம் பணியில் சேர்ந்த ஒருவாரத்தில் கனகாவிற்கு ஒருபடி மேல் பதவியில் இருக்கும் அம்மையார் இவளை அழைத்து அவசர கடிதம் ஒன்றிற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என வினவினார். இவள் சற்றும் யோசிக்காமல் செல்வம்தான் கடிதத்தை என்னிடம் தெரிவிக்காமலேயே எனது மேசையில் வைத்துவிட்டார் என்று அவர்மேல் பழிசுமத்தினாள். ஒரு கணம் அதிர்ந்து திகைத்த செல்வம் செய்யாத தவறுக்கு மன்னிப்புக் கேட்டு இனிமேல் இவ்வாறு நடக்காதென கூறினார்.
கனகாவிற்கே அவர் முகத்தைப் பார்த்தபோது முதல்முறையாக  பாவமாக இருந்தது. இவளே, மறந்துவிட்டேன், இப்போதே நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம். பெரிய தவறேதுமில்லை. ஆனால் வேலையில் சேர்ந்தபோது உண்டான,  பயத்தினாலும்  அச்சத்தினாலும் அடுத்தவர் மேல் பழியைப் போடும் பழக்கம் பதவி உயர்ந்த பிறகும் இவளிடமிருந்து மறையவேவில்லை.

அரசு அலுவகத்தில் எப்போதும் நிலவும் ஊமை அமைதி செல்வம் வந்தவுடன் குலைந்தது. இத்தனை வருடங்கள் வெளியே எப்படி இருந்தாரோ அதேபோல அலுவலகத்திலும் இருந்தார். இயல்பாகவே, செல்வம் பேசும் போது  சத்தம் அதிகமாகக் கேட்கும். இவர் பேசுவது  பிறருக்கும் கேட்குமென்பதால், அதில் ரகசியமோ அடுத்தவரைப் பற்றிய புரணியோ இருக்காது. மெல்லிய கேலியோடு பேசினாலும் புன்னகையோடு பேசுவதால் யாரும் மனம் புண்படுவதில்லை. இத்தனை வருடங்கள் வெளியே பணிபுரிந்துள்ளதால்,  வேலையைப் பற்றி உடலிலோ மனதிலோ அச்சத்தின் சாயல் தென்படவில்லை. பெரியவர்கள் மட்டும் உலவும் மந்தமான வீட்டில்   குறும்புக் குழந்தையொன்று நுழைந்ததைப்போல,  சோம்பலும் அலுப்பும் படர்ந்திருந்த அலுவலகம், செல்வம் வந்தபிறகு புதிதாக ஒளி கொண்டதாக கனகாவிற்கு தோன்றியது.

சில வாரங்களில் கனகாவிற்கு, செல்வம் மேலிருந்த சலிப்பு மாறி ஒருவித ஈர்ப்பு உண்டானது. பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே அரசுப் பணியெனும் இருட்குகைக்குள் நுழைந்தவள் சந்தித்த மனிதர்கள் அனைவரும் சம்பிரதாயமாகவே பழகினார்கள். அலுவலகத் தோழமையும் எப்போது காட்டிக் கொடுப்பார்களோ என்ற எச்சரிக்கையுடன், பிணைப்பில்லாமல்தான் இருந்தது. தன் பதவியையும் சம்பளத்தையும் கருதி மணந்து கொண்ட கணவனிடமும் பெரிதாக இணக்கம் இல்லாமல் மெல்லிய விலகல் இருந்தது.

கச்சிதமான உடற்கட்டுடன் பார்க்க அழகாக இருக்கும் தன்னிடம் பேசுவது போலவே ஒல்லிப்பிச்சானாய் பல்லி போல தோற்றமளிக்கும் தட்டச்சு செய்யும் பெண்ணிடமும், அகன்ற நெற்றியில் பெரிய குங்குமம் வைத்த அலுவலக தூய்மைப்பணி புரியும் நடுத்தர வயதுப் பெண்ணிடமும் எல்லா ஆண்களிடமும் செல்வம் பேசிப் பழகியது கனகாவிற்கு ஆச்சர்யமளித்தது.
செல்வத்தை அழைத்த கனகா  “எப்படி எல்லோரையும் ஒரே மாதிரி பாக்கறீங்க” எனக் கேட்டாள்.
சற்று யோசித்தவரின் முகபாவனை, சொல்ல வேண்டியதை  தனக்குள்ளேயே தொகுத்துக் கொள்வதுபோலத் தோன்றியது. “நான் விற்பனையாளர் பணிக்குச் சென்றபோது, வாடிக்கையாளர்களை வேறுபடுத்திப் பார்க்காமல், அவங்களோட கண்களை பார்த்து   ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தனித்துவ மனசக் கவர்கிற மாதிரி பேசக் கத்துக்கிட்டேன்” என்றார்.

“வர்றவங்க ஏதாவது குறை சொல்லிட்டு பொருள வாங்காம போறப்ப உங்களுக்கு கோபம் வராதா”
“கோபம் வெறுப்பு எல்லாந்தான் வரும். ஆனா,  ஒண்ணும் செய்யமுடியாதுல்ல. அதனால, அதை அப்படியே சிரிப்பாலேயே மறச்சுக்கிட்டு அடுத்த ஆளப் பாக்க வேண்டியதுதான்” என்று சலிப்போடு உதட்டைச் சுழித்துக் கூறியபோது அவரின் கண்ணில் கூர்மையான மின்னலொன்று  தோன்றி மறைந்தது.

செல்வம் அவரின் குடும்பப் புகைப்படத்தை ஒரு நாள் காட்டினார். இரண்டு பிள்ளைகளுடன் நின்றிருந்த அவரின் மனைவியின் முகம் நிறைவில் மலர்ந்திருந்தது. மற்றவர்களின் பிழைகளை மட்டுமே கருதுவது போலவே, தன்னிடம் இல்லாததை மட்டுமே  எண்ணிக்கொண்டிருக்கும் தன்னால், அந்தப் பெண்போல நிறைவாகப் புன்னகைக்க  எப்போதுமே முடியாது எனப் புரிந்தபோது, பெரிய ஏக்கம் கனகாவின்  மனதை அழுத்தியது.

 

கீழ், மேல் பதவி என்று பாராமல், அனைவரையும் மனிதர் என்று மட்டும் பார்த்து பழகும் செல்வம் இவளுக்கு அதிசயப் பிறவியாகத் தெரிந்தார்.  எந்த எதிர்பார்ப்புமின்றி சாலையோரச் கள்ளிச் செடியில் பூத்திருக்கும் நீல மலர் போலவும், யாராகயிருந்தாலும் தன் சிறிய மென்மையான வாலை ஆட்டியபடி வந்து கால் பாதங்களில் மூக்கால் உரசும் நாய்க்குட்டியைப் போலவும்  திரிந்த செல்வத்தை பார்த்துக் கொண்டிருப்பதே இவளுக்கு பெரும் மகிழ்ச்சியளித்தது. மாதத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை எடுப்பவள் இப்போதெல்லாம் மிகவும் அவசியம் என்றால் தவிர விடுப்பு எடுப்பதில்லை.

எப்போதாவது உயர் அதிகாரியிடம் கொடுத்த கடிதம் நினைவுக்கு வந்தால்,  வேறிடத்திற்கு மாறுவதற்கு அனுமதி அளித்துவிடுவாரோ என்று சற்று பதட்டம் ஏற்படும். எதுவும் எழுதவில்லை என உயரதிகாரியின் தனிச்செயலர்  கூறும் போது ஏற்படும் மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல் உள்ளுக்குள் துள்ளியபடி வெளியேறுவாள்.

. ********

மின்தொடர் வண்டி  சென்னை சென்ட்ரலில் நின்றவுடன் வேகமாக இறங்கி, முகத்தில் மோதும் எதிர்வெயிலை தாங்கியபடி செல்லும் மனிதப் பிரவாகத்தோடு கலந்து வழிந்து வெளியேறினாள்.  அங்கிருந்து பேருந்தேறி அவள் பணிபுரியும் உயர்ந்த கட்டடத்தை அடைந்தாள். பெரும் வெறுப்பளித்த உயரதிகாரி மாறிப் போய்விட்டார். மனதிற்குள் அமைதியை நிறைக்கும்   செல்வம் பணியாற்றும் இடத்திலேயே அவரைப் பார்த்தபடியே தொடர்ந்து இருக்கலாம் என்பது வாழ்வில் இதுவரை அடையாத பெரும் கிளர்ச்சியை மனதில் ஏற்படுத்தியது.

அலுவலகத்திற்குள் சென்று வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்து சுற்றிலும் நோக்கினாள்.  செல்வத்தின் இருக்கை காலியாக இருந்தது சற்று ஏமாற்றம் அளித்தது. திரும்பி வாயிலைப் பார்த்தபோது மலர்ந்த முகத்துடன்  செல்வம், இவளை நோக்கி வருவது தெரிந்தது. அவர் கையில் ஒரு கோப்பு இருந்தது.

“மேடம், அன்னிக்கி சொன்னீங்கல்ல, மாறுதல் வேணும்னு கடிதம் கொடுத்திருக்கேன், இன்னும் கையெழுத்தாகலைனு” என்று செல்வம் கேட்டதற்கு “ஆமாம், அதற்கென்ன அவரைத்தான் மாற்றிவிட்டார்களே” என்றாள் கனகா.

“நேற்று சாயங்காலம் உயரதிகாரி மாறப்போறாருன்னு செய்தி கெடச்சவுடனே உங்க ஞாபகம் வந்துச்சு. அவரு அறைக்குப் போயி அவரோட தனிச்செயலர்கிட்ட சொன்னேன். அவரும் உள்ளே போய் உங்க மனுவை ஏத்துக்கறதா கையெழுத்து வாங்கிட்டாரு. நீங்க நெனச்ச மாதிரியே வேற எடத்துக்குப் போகலாம்” என்று செல்வம் கூறியதை முழுதாக உள்வாங்காமல், அவரின் விழிகளில் மகிழ்ச்சியுடன் தெறித்த “நினைத்ததை எப்படி முடித்தேன் பார்த்தாயா” என்று கேட்கும்படியான இறுமாப்பை திகைப்புடன்  நோக்கினாள்

கா சிவா நேர்முகம் – நரோபா

1. உங்களைப் பற்றி- பணி/ குடும்பம்/ வசிப்பது

சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடிக்கும் அறந்தாங்கிக்கும் இடையே சிவலாங்குடி என்னும் கிராமத்தில் 1975-ல் பிறந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் இரு மூத்த சகோதரிகள். பத்து வயது வரை அம்மா மற்றும் சகோதரிகளுடன் கிராமத்திலேயே வளர்ந்தேன். தந்தை சென்னையில், தென்னக ரயில்வே தலைமையகத்தில் பணியாற்றினார். அம்மா, சகோதரிகளுடன் சென்னைக்கு 85-ல் வந்தேன். பொறியியலில் பட்டயமும், தமிழ் இலக்கியத்தில் பட்டமும் பெற்றேன். தற்போது தமிழக அரசுப் பணியில் உள்ளேன். மனைவி, மகன், மகள் மற்றும் தாய் தந்தையருடன் சென்னையிலேயே வசிக்கிறேன்.

2. இலக்கிய பரிச்சயம் எப்படி?

சென்னை வந்ததிலிருந்தே ஆனந்த விகடன் மற்றும் தினமணியின் வாசகன். சுஜாதாவின் கட்டுரைகள் மற்றும் வைரமுத்துவின் பெரும்பாலான நூல்களை வாசித்துள்ளேன். தினமணியில் வெளிவந்த நூல் விமர்சனத்தில் விஷ்ணுபுரம் நூல் பற்றி வாசித்து அந்நூலை வாங்கினேன். அந்நூலின் முன்னுரையில் கூறப்பட்ட விஷ்ணு புரண்டு படுப்பதைப் போல என் வாசிப்பும் தடம் மாறியது. அப்போது தினமணிக் கதிரில் வாரம் ஒரு சிறுகதையென வெளியான வண்ணதாசன் சிறுகதைகளும் என் வாசிப்பை மாற்றின. தொடர்ந்து நூலகத்தில் வண்ணதாசனை தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். வண்ணதாசன் கடிதங்கள் நூலின் மூலம் தி. ஜானகிராமனின் உயிர்த்தேன் நூலை அடைந்தேன். இன்றுவரை என் மனதில் இனிமையை ஊறவைக்கும் நூலாக அது உள்ளது ( =ஜெயமோகன் அதை நிராகரித்தபோதும்). இங்கிருந்து பின் சென்று புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன் என வாசித்து வருகிறேன்.

 

3. இலக்கிய ஆதர்சங்கள்

ஆசிரியராக ஜெயமோகனை ஏற்றுக் கொண்டுள்ளேன். குருவாக வண்ணதாசனை வணங்குகிறேன். தி. ஜானகிராமனிடம் விளக்கிவிட முடியாத ஓர் ஈர்ப்பு எப்போதும் உள்ளது.

என் மனதில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் என் பெரியப்பாவின் குரல் போலவே நாஞ்சில் நாடனின் குரல் எனக்குள் ஒலிக்கிறது.

தேவதேவனை நினைக்காமல் ஒரு நாளும் முடிவதில்லை.

4. எழுத்தாளர் என உணர்ந்தது எப்போது?

எழுத ஆரம்பித்த பின்புதான். என் ஆதர்சங்களைப் படிக்கும்போது இவற்றை படிப்பதே இவ்வாழ்க்கையின் பேறு, அதுவே போதும் என்றே எண்ணியிருந்தேன்.

5. எதற்காக எழுதுகிறேன் என கேட்டால் என்ன சொல்வீர்கள்?

என் கதைகளை என்னால்தான் எழுதமுடியும் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு கதையிலும் என்னையே நான் புதிதாகக் கண்டேன். இப்போது, இன்னும் என் பல முகங்களைக் காணும் சுவாரசியத்திற்காகவே தொடர்ந்து எழுத நினைக்கிறேன்.

கா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை

எழுத்தாளர் கா. சிவாவின் முதல் தொகுப்பு ‘விரிசல்’ மொத்தம் பதிமூன்று கதைகளை கொண்டுள்ளது. முதல் தொகுப்பு ஒரு அடையாள அட்டையை போன்றது. எழுத்தாளரின் மொழி, பாணி, அவருடைய முதன்மையான அக்கறைகள் மற்றும் கேள்விகள் பெரும்பாலும் முதல் தொகுப்பிலேயே வெளிப்பட்டுவிடும். எழுத்தாளர் தனக்கான வெளிப்பாட்டு முறையை கண்டுகொள்ளும்வரை செய்நேர்த்தி மற்றும் மொழியில் சில தத்தளிப்புகள் இருப்பது இயல்பானது. அவ்வகையில் கா. சிவாவின் இத்தொகுப்பு நம்பிக்கையளிக்கும் வருகை என தயங்காமல் சொல்லலாம்.

 

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘இருமை’ சிவாவின் படைப்புலகின் ஆதார இயல்பை சுட்டிக்காட்டுவது. நாவல் தன்மை கொண்ட, தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று. உற்சாகமாக சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் வேலனிடம் அவன் மணக்க விரும்பிய பெண்ணுக்கு ஒரு வாரத்தில் திருமணம் என கதைசொல்லி சங்கரன் போட்டுடைக்கிறான். “அனைவரையும் காணப்போகும் எதிர்பார்ப்பின் மகிழ்வில் கிறக்கமாக நடந்து வந்தவன் அமர்வதற்கு முன் இதை சொன்னதற்கு அவனின் கந்தர்வ புன்னகையை பொறுக்க முடியாத என்னுள்ளிருந்த கொடு அரக்கனே காரணம்.” என எழுதுகிறார். இந்த பலூனில் ஊசிக்குத்தும் சின்னத்தனம் பல கதைகளில் வெளிப்படுகிறது. வேலன் குடும்பத்திற்காக உழைத்த லட்சிய இளைஞன். சங்கரனுக்கு எப்போதும் அவன் மீது லேசான எரிச்சலும் பொறாமையும் உண்டு. இதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து ஊருக்கு செல்லும் சங்கரன் வேலன் தன் குடும்பத்தை விட்டு விலகி திருமணம் செய்துகொண்டு ஒரு சேரிப்பகுதியில் வாழ்வதாக கேள்விப்பட்டு சந்திக்க செல்கிறான். வாழ்வின் ஒரு துருவத்திலிருந்து மறு துருவத்துக்கு வந்த கதையை வேலன் சொல்கிறான். வெற்று கவுரவத்தால் வேலனின் வாழ்வை தன் குடும்பத்தினர் அழித்து விட்டதாக புகார் சொல்கிறான். “எதிரிகளை பழிவாங்கனும்னா வாழ்ந்து காட்டணும். உடனிருக்கிறவங்கள பழி வாங்கனும்னா அழிச்சுதான் காட்டணும்.” என சொல்கிறான். தன்னை அழித்துக் கொள்வதன் வழியாக குடும்பத்தை பழித்தீர்ப்பதாக எண்ணிக் கொள்கிறான். “ஊஞ்சல் ரெண்டு பக்கமும் மாறி மாறி ஆடணுங்கிறதுதான் அதோட அமைப்பு. ஒரே பக்கமா ரொம்ப தூரம் வந்துச்சுன்னா எதிர்பக்கமும் அதே தூரம் போகணும்ல,” என்றொரு வரி கதையின் மையத்தை சுட்டுகிறது. ஒருவகையில் சிவாவின் கதைகளின் மையமென இந்த வரியையே சொல்ல முடியும். உன்னதங்களுக்கும் கீழ்மைகளுக்கும் இடையிலான ஊசல். ‘அவரவர் இடம்’ சாலியும், ‘விரிசல்’ சங்கரனும், ‘நிறைவு’ கலாவும் ‘சுமத்தல்’ லக்ஷ்மி டீச்சரும் ஒருமுனை என்றால் ‘இழத்தல்’, ‘நண்பனாக’ ‘பந்தயம்’ போன்ற கதைகள் மறுமுனை.

சிவாவின் மொழி நேரடியானது. காட்சிப்பூர்வமானது. கம்மாய்கள், மழுவய்யனார் கோவில், வயல்காடுகள், கோவில் திருவிழாக்கள், புளிய மரங்கள் என யாவும் காட்சி அனுபவங்கள் அளிக்கின்றன. காட்சிகள் அரிதாகவே கவித்துவமாகவோ அல்லது படிமங்களாகவோ விரிகின்றன. ‘இருமை’ கதையில் தனது இரு துருவங்களுக்கு இடையிலான அலைச்சலை பற்றி வேலன் சொல்லிக் கொண்டிருக்கும்போது ‘பசும் பொன்னிற வேப்பம் காய்களை உண்ணும் காக்கைகள் தோலுக்குள் இருக்கும் சதைப் பகுதியை சப்பிவிட்டு கொட்டைகளை நழுவ விடுவதை’ வேலன் கவனிப்பது ஒரு நல்ல குறியீடு.‌ அவசியமானதை எடுத்துக்கொண்டு வேண்டாதவற்றை தவிர்த்துவிடலாம். எதற்கு உனக்கு இந்த ஊசலாட்டம் என கேட்பது போலிருந்தது. ‘பரிசு’ கதையில் ‘காலை வெயில் போலத்தான் இப்போதும் படர்ந்துள்ளது. ஆனால் காலையில் தோன்றும் மகிழ்வு இப்போது இல்லை. ஒளி நீடிக்கும் என்ற நம்பிக்கையினால் உண்டாகும் மகிழ்வு அது. மறையப் போகிறதே என்பதுதான் மனதில் சுமையாக ஏறி மென்சோகத்தை மாலையில் உண்டாக்குகிறது.’ இந்த வரிகளும் ஒருவகையில் சிவாவின் ஆதார கவலையை சுட்டுவதாக கொள்ள முடியும். ஒளி மறையப் போகிறதே எனும் பதட்டம். அல்லது எப்படியும் மறைந்துவிடும் எனும் அவநம்பிக்கை.

 

தொகுப்பின் தலைப்பிற்குரிய கதையான விரிசல் இதே பார்வையின் நீட்சியை கொண்டிருக்கிறது. பழுதற்ற பரப்பின் மீது சிறு விரிசல் தென்பட்டால் கூட மனம் அந்த விரிசலை நோக்கியே குவியும். அதை பூதாகரமாக்கும். எங்கும் எதிலும் நாம் விரிசலையே தேடுகிறோம், அதையே கண்டுகொள்கிறோம். சங்கர் ஒரு சிறிய உணவகம் நடத்தி வருகிறான். ஒரு விடுமுறை நாளில் உணவகத்திற்கு அவசர ஆர்டர் வருகிறது. தயங்கினாலும் ஒப்புக்கொண்டு அவனும் அவனுடைய உதவியாளன் சுப்புவுமாக சமைத்து கொண்டு போய் கொடுக்கிறார்கள். முன்பணமாக கொஞ்சம் பெற்றுக்கொண்டு மீதியை உங்களுக்கு உணவு திருப்தியாக இருந்தால் கொடுங்கள் என சொல்லிவிடுகிறான். சங்கர் சமைக்கும் முறை விவரிக்கப்படுகிறது. ‘உள்ளே செல்லும்போதிருக்கும் சங்கர் அல்ல, சமைப்பவன். சமைக்கும்போது வேறொரு தனியுலகில் இருப்பவன்.’ கவனம் சிதறாத முழு ஈடுபாட்டுடன் சமைக்கிறான். மறுநாள் மீதி பணத்தையும் பாத்திரங்களையும் பெற செல்பவர்களுக்கு அவமானம் காத்திருக்கிறது. தி. ஜானகிராமன் – நாஞ்சில்நாடன் கதையுலகை சேர்ந்த கதை. தொகுதியின் நல்ல கதைகளில் ஒன்று. அகங்காரச் சிறுமையும் அதை மீறி எழும் அகவிரிவையும் பேசுகிறது. ‘ஆனா என் நம்பிக்கையில லேசா விரிசல் விழுந்துச்சு மனுசனோட அகங்காரத்துக்கு முன்னால அறமும் தோக்குற காலம் வந்திடிச்சு போல,’ என சங்கர் சொல்வது தான் நன்மையின் மீதான அவநம்பிக்கையாக வெவ்வேறு கதைகளில் பரிணாமம் கொள்கிறது.

‘அவரவருக்கான இடம்’ இந்த நன்மையின் மீதான வெறுப்பை சொல்லும் மற்றுமொரு நல்ல கதை. சாலி தன் போக்கில் சரியாக நடந்துகொள்கிறாள். அப்படி சரியாக நடக்கும் பெண் பிறருக்கு பெரும் தொந்திரவாக ஆகிறாள். காரணமற்று வெறுக்கப்படுகிறாள். அவள் வீழ்வதற்காக ஊர் மொத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது. நிமிர்வின் மீதான பொது வெறுப்பை எப்படி புரிந்து கொள்வது? எனது நண்பன் பொதுப்பணித்துறையில் பொறியாளராக சேர்ந்தான். மொத்த அலுவலகத்திலும் பணம் வாங்காத ஒரே ஆள் அவன்தான். நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒவ்வொரு நாளும் அவனுக்கு குடைச்சல். அவர்களுள் ஒருவன் இல்லை, தனித்தவன் என்பதே சிக்கல். இப்படிப்பட்டவர்கள் அளிக்கும் மன தொந்திரவு என்பது நம்மை பற்றிய சுய மதிப்பீட்டை குலைப்பது. நேர்மையின்மைக்கும் தீமைக்கும் சந்தர்ப்பத்தை குற்றம் சாட்டி தப்பித்துக் கொண்டிருக்கும்போது அதற்கு நேர்மாறாக அதே சூழலில் ஒருவர் வாழ்ந்து காட்டுவது சமநிலையை சீர்குலைப்பது. நமது கீழ்மையை நமக்கு உணர்த்துபவர்கள் பெரும் பாதுகாப்பின்மையை அளிக்கிறார்கள். சமூகம் கொடுக்கும் அழுத்தத்தில், ஒன்று அவர்கள் சமூக போக்குடன் இயைந்து சராசரிகளுள் ஒருவராக ஆக வேண்டும். அப்போது அனைவரும் ஆசுவாசம் கொள்வார்கள். அல்லது அவர்களை மண்ணிற்கு மனமிரங்கி வந்த கடவுளாக்கிவிட வேண்டும். அப்போது அவர்களின் வாழ்க்கையும் செயல்களும் மனித யத்தனங்களுக்கு அப்பாற்பட்ட தெய்வ செயலாக, லீலையாக ஆகிவிடும். இக்கதையில் சாலி கடவுளாக்கப்படுகிறாள். இந்த இரண்டு எதிர்வினைகளுக்கு அப்பால் மனிதர்களை அவரவர் இடத்தில் வைத்து நோக்குவதற்கான வாய்ப்பு இல்லை என்பதே சிக்கல். கதை இறுதியை ஒரு பெரும் தாவல் வழியாக வந்தடைகிறார். நாட்டார் தெய்வங்கள் உருவாகும் வரலாறு புரிந்தவர்களால் கதையின் தாவலை புரிந்துகொள்ள முடியும்.

சாலி பதின்ம வயதில் கோபமும் ஆங்காரமும் கொண்ட சாமானிய பெண்ணாகத்தான் இருந்திருக்கிறாள். அவள் ஒருமுறை அவளுடைய சின்னாத்தா வசைபாடியதை பரணிலிருக்கும் சிறிய திறப்பின் வழியாக பார்த்தபோது வார்த்தைகள் கேட்காத ஊமைப்படம் போல இருந்ததை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு ஏற்படுகிறது. அப்போது மின்னல் வெட்டென வெறுப்பை விலக்கி நோக்கும்போது எல்லாமே வேடிக்கையாக தெரிவதை கண்டடைகிறாள். வேலன் காக்கைகள் வேப்பம்பழத்தை உண்ணுவதை காணும்போது ஏற்படாமல் போன மின்னல் சாலிக்கு ஏற்படுகிறது. அதுவே அவர்களுக்கு இடையிலான வேறுபாடும் கூட. ‘நிறைவு’ கதையிலும் காரணமற்று பொழியப்படும் அன்பு உண்டாக்கும் எரிச்சலும் பொறாமையும் ஒரு முக்கிய சரடாக வருகின்றன. இதில் சித்தரிக்கப்படும் கலா எனக்கு தனிப்பட்ட முறையில் வானவன் மாதேவியை நினைவுபடுத்தினார். ஒவ்வொருவரின் மனத்திலும் இனிமையாக மட்டுமே தங்கிவிட வேண்டும் என எத்தனிக்கும் ஆன்மாக்கள். கல்பற்றாவின் சுமித்ராவை போல். ஆனால் சாலியை போல் தான் கலாவிற்கும் அவளுடைய மேன்மை மரணத்திற்கு பின்பே அங்கீகரிக்கப்படுகிறது.

‘கண்ணாடியின் மிளிர்வு’ தொகுப்பின் முதல் கதை. சலிப்பற்ற நன்நம்பிக்கையாளர்களின் மீதான நல்லதொரு பகடிக்கதையாக வாசிக்க முடியும். அத்தை மகளின் கணவன் தற்கொலை செய்து கொண்டதற்காக கதைசொல்லி தன் அம்மாவுடன் துக்கம் விசாரிக்க செல்கிறான். அவனுடைய கதை, அத்தை மகளை அவனுக்கு திருமணம் செய்விக்க இருந்த திட்டம் நிறைவேறாத கதை என பலவும் சொல்லப்படுகிறது. மலர்கொடி அத்தை எல்லாவற்றிலும் நேர்மறைத்தன்மையை பார்க்கும் கண் உடையவர். உற்சாகம் குன்றாத, சோர்வடையாத ஆளுமை. குறையிலும் நிறை காணும் நன்நம்பிக்கையாளர். சிறிய வீடாக இருந்தால் பராமரிப்பது எளிது என்பவர். மூத்த மகன் காதல் திருமணம் செய்துகொண்டபோது பெண் தேடும் வேலை மிச்சம் என்றவர். மருமகனின் மரணத்தை எப்படி நேர்மறையாக சொல்வார் எனும் குறுகுறுப்புடன் செல்கிறான் கதைசொல்லி. அவன் எதிர்பார்ப்பு அம்முறையும் ஈடேறியது.

‘நண்பனாக’ நட்பின் மேல்பூச்சுக்கு அடியில் இருக்கும் பொறாமையை சொல்லும் கதை. கதைசொல்லியும் அவனது நண்பன் கண்ணனும் பெண் கேட்டு செல்கிறார்கள். கண்ணன் பொன்னழகை விரும்புகிறான். அவள் இவனை நேசிக்கிறாளா இல்லையா என தெரியாததால் நேராக பொன்னழகின் அம்மாவிடமே பெண் கேட்டுச்செல்லலாம் என தீர்மானிக்கிறார்கள். பொன்னழகை கண்ணன் திருமணம் செய்துகொள்ள முக்கிய காரணம் அவனுடைய நடையற்று போன அம்மாவை அவள் நன்கு கவனித்துக் கொள்வாள் என்பதுதான். ஏனெனில் வளர்ச்சி குன்றிய அக்காவை பொன்னழகு பராமரிப்பதை கவனித்திருக்கிறான். ஆனால் அவன் கவனிக்காத ஒன்றை கதைசொல்லி கவனித்திருக்கிறான். “புன்னகையுடனே உள் நுழைந்தவள் உள்ளே அமர்ந்திருந்த அவள் சகோதரியை பார்த்தபோது அவள் முகத்தில் ஏற்பட்ட அலுப்பா வெறுப்பா அல்லது சலிப்பாக என பகுத்தறியவியலா ஓர் உணர்வுடனான அம்முகம்.” கண்ணன் கதைசொல்லியிடம் அவன் முன்னர் செய்வித்த பள்ளி நண்பனின் திருமணத்தை நினைவுகூர்ந்து விசாரிக்கிறான். அதைப்பற்றி எதுவும் சொல்லாமல் இறுக்கமாக நடப்பவன் அந்த நண்பனின் அம்மா கண்ணீருடன் தன் மகன் வாழ்வு சிக்கலானதற்கு அவன்தான் காரணம் என சொன்னது நினைவுக்கு வருகிறது. வீட்டை தேடி கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. “நண்பனாகயிருப்பவன் எப்போதும் நண்பனின் நலத்தை மட்டுமே நாடுபவனாகவே இருக்கு வேண்டியதில்லை. சில நேரங்களில் சாதாரண எளிய மனிதனாகவும் இருக்கலாம் பெரிய பிழையில்லை என்று என் மனதிற்கு சொல்லியபடி இன்று எண்ணியபடியே எல்லாம் நடந்ததால் நிம்மதியுடன் நடந்தேன்.” ஒரு தளத்தில் இது பொறாமையை சொல்லும் கதையாகவும் மற்றொரு தளத்தில் இன்னொரு நண்பனின் வாழ்க்கைக்கு குற்றவாளியாக்கப்பட்டவன் எனும் முறையில் பொறுப்பிலிருந்து விடுபட்ட நிம்மதியின் கதையாகவும் தென்படுகிறது.

‘இழந்தது’ இதுவும் இரண்டு நண்பர்களின் கதைதான். நண்பனின் துரோகம் வழியாக நட்பை இழக்கும் கதை. சம்பத் பிரபா என இரு நண்பர்கள் சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்துகிறார்கள். மூன்றாவது நண்பனான தேவாவை அவர்கள் தொழிலில் சேர்த்துக் கொள்ளவில்லை. தொழிலில் சேர்த்துக் கொள்ளாத நண்பனுடனான கணக்கை உரிய சமயத்தில் தீர்க்கிறான். ‘நிம்மதி’ கதையில் கணவரும் மனைவியுமாக மனைவியை காதலித்தவர் வீட்டுக்கு செல்கிறார்கள். இறுதி திருப்பத்தை நம்பி எழுதப்பட்ட கதை.

சிவாவின் பல கதைகளில் கதை இறுதியில் ஒரு தலைகீழாக்கம் நிகழ்கிறது. அவ்வகையில் செவ்வியல் சிறுகதை வடிவத்தையே பெரும்பாலான கதைகளிலும் கைக்கொள்ள முயல்கிறார். கணவர் தன் சொந்தத்தில் ஒரு பெண்ணை காதலித்தவர். காதலித்தவர்களுக்கு தங்கள் இணை திருமணமாகி சென்ற இடத்தில் நன்றாக வாழ்கிறார்களா என எப்போதும் ஒரு அச்சமும் குழப்பமும் இருக்கும். அதை நீக்கினாலே அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். இதை மனைவியை காதலித்த (ஆனால் அவர் பதிலுக்கு காதலிக்காக என்று நம்பப்படும்) ராமகிருஷ்ணனுக்கு உணர்த்தவே கணவன் சட்டென அந்த முடிவை எடுக்கிறார். ராமகிருஷ்ணனுக்கு நிம்மதி ஏற்படுத்த சென்று மனைவியின் நிம்மதி பறிபோனதுதான் மிச்சம். இம்மூன்று கதைகளிலும் சிவா மானுட உறவுகளின் பூச்சுக்களையும் போலித்தனங்களையும் அடையாளம் காட்டுகிறார். இவை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதையுலகின் நீட்சி என்றொரு எண்ணம் ஏற்பட்டது. குறிப்பாக அவருடைய ‘தோழிகள்’ இரண்டு நெருங்கிய தோழிகளுக்கு இடையே ஊடாடும் அன்பும் வன்மமும் பதிவான கதை.

தொகுப்பில் மூன்று கதைகள் சற்றே அமானுடத்தன்மை கொண்டவை என சொல்லலாம். ‘கள்ளம் களைதல்’ இந்த தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று. தொகுப்பின் பெரும்பாலான கதைகளில் கதைசொல்லி அல்லது கதை நாயகனின் பெயர் சங்கராகவே உள்ளது.‌ சங்கர்களில் தொடர்ச்சியும் தனித்துவமும் உள்ளன. எங்கள் பகுதிகளில் ஏழூர் செவ்வா என்பது ஒரு முக்கியமான திருவிழா. அதன் பின்புலத்தில் ஊர் வழக்கங்களை அறியாத ஆனால் ஊரைச் சேர்ந்த சங்கருக்கு நண்பன் குமார் விளக்குவது தான் கதைவடிவம். சிவாவால் இவ்வாறு ஒன்றை சீரிய முறையில் விளக்க முடிகிறது. உதாரணமாக ‘இழந்தது’ கதை வாசித்து ஒருவர் சீட்டு கம்பெனியில் எப்படி ஏமாற்றலாம் என தெரிந்து கொள்ள முடியும். கதையில் ஊர் புள்ளிகளுக்கு காழாஞ்சி கொடுப்பதற்கு முன் ஒரு பஞ்சாயத்து நடக்கிறது. கந்தன் தன்னுடைய மனைவியின் கையை பாலன் பிடித்து இழுத்ததாக பிராது கொடுக்கிறான். இதற்கு பின்பான பாத்திர சித்தரிப்புகள், விவரணைகள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவை. இரு தரப்பிற்கும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமானது என உணரச்செய்யும் சாதுர்யம் வெளிப்படும். சங்கருக்கு ஊர் வழக்கங்களை விளக்கிச்சொல்லும் குமார் வழியாக கதையின் பிற சாத்தியங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. “கல்யாணம் பண்ணி விட்டுட்டு போயிடறது.‌ ஒரு வருசத்துக்கு அப்புறம் வந்து அவன் கையப்பிடிச்சான் இவன் அங்க தடவுனான்னு சொல்றது” என சொல்கிறான்‌. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நேரில் பார்த்த ஒரு சாட்சி பாலனின் குற்றத்தை உறுதி செய்தபோது குமார் மீண்டும் கிசுகிசுப்பான குரலில் “அதானே பார்த்தேன் விசயம் ஏன் வெளிய வந்துச்சுன்னு” என்கிறான். மேல்தளத்தில் ஒன்று நடந்து கொண்டிருக்கும்போதே அடியில் வேறொன்று ஓடிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார் சிவா. பாலனுக்கும் அவனுடைய தந்தைக்கும் இடையிலான உறவு பேசப்படுகிறது. அவர் மீது “நல்லதை மட்டுமே போதிப்பதினால் வந்த வெறுப்பு” இது சிவாவின் பாத்திர வார்ப்புகளில் ஒரு தொடர்ச்சி. அபாரமான அமானுட தருணத்தில் கதை நிறைவுறுகிறது. ஒரு சுவாரசியமான ஆவணத்தன்மையுடன் பயனிக்கும் கதை அதன் இறுதி வெளிப்பாட்டின் காரணமாக வேறொரு மெய்யியல் தளத்தை அடைகிறது.

‘பந்தயம்’ கதையும் அமானுட முடிவு கொண்ட கதைதான். கருக்கிருட்டில் அவனுடைய அக்கா வராததால் புளியம்பழம் பொறுக்க தனியாக செல்கிறான் சிறுவன் ராமன். சிறு சுழல் காற்று வீசியதும் அவனுக்கு கடந்த மாதம் அவனுடன் பந்தயம் போட்டு கண்மாய்க்குள்ளிருந்து தாமரை கொட்டையை எடுக்க சென்று கொடியில் சிக்கி செத்துப்போன சுந்தரத்தின் நினைவு வருகிறது. அது அவனுடைய ஆவி என்று அஞ்சுகிறான். சுந்தரத்தின் மரணத்திற்கு அவன்தான் காரணம் எனும் குற்ற உணர்வு அவனுக்கு. ஏதோ ஒன்று தன்னை தொடர்வதாக அஞ்சி வேகவேகமாக பிள்ளையார் கோவில் திண்ணையை நோக்கி, அங்கே சிலர் உறங்குவார்கள் என்பதால் ஓடுகிறான். ஒன்றுக்கு கழிக்கச் செல்லும் காவக்காரரின் ஓசைகளோடு அவனை தொடர்ந்த சுழலின் ஓசையையும் கேட்கிறான். அவர் கீழே விழும் ஓசையும் பிறகு அவரை தூக்கி செல்வதையும் உடலை தூக்கி செல்வதையும் ஓசைகளாக உணர்கிறான். விடிந்தபின் கதைசொல்லி ஆசுவாசமடைந்து எழுந்து செல்கிறான். ஏன்? தனக்கு நிகழ வேண்டியது காவக்காரருக்கு நிகழ்ந்து விட்டது என்பதாலா? தான் எஞ்சியிருப்பதாலா? திறந்த முடிவு கொண்ட கதை. ஒரு பேய்க் கதையாகவோ மனப்பிராந்தியை சொல்லும் கதையாகவோ வாசிக்க முடியும்.

சில கதைகளில் புலப்படும் அதீத திறந்த தன்மை ஒரு பலவீனமாகவும் ஆகிவிடுகிறது. ‘விளையாட்டாய்’ கதைசொல்லி சிறுவயதில் விளையாட்டாய் உறவினனும் பால்ய நண்பனுமான சீனியை கிணற்றில் தள்ளிவிட்டதும் குலதெய்வ கோயிலுக்கு செல்லும் வழியில் மகனை பாம்பு கடிப்பதும் இணை வைக்கப்படுகிறது. இந்த இணைவைப்பு ஒரு அகவயமான தொடர்புறுத்தல் மட்டுமே. எனினும் இந்த தொடர்பில் மெல்லிய மிஸ்டிக்தன்மை உள்ளது. சாமி பாம்பு வடிவத்தில் வரும் என நேற்று யாராவது சொல்லியிருந்தால்கூட நம்பியிருக்கமாட்டேன் எனும் ஒரு வரி அளிக்கும் சித்திரம். இக்கதைகளில் நாட்டார்கூறுகள் வலுவாக தென்படுகின்றன.

 

தொகுப்பின் சற்றே பலவீனமான கதைகள் என ‘சுமத்தல்’ ‘பரிசு’ ஆகிய கதைகளை சொல்லலாம். இரண்டுமே பள்ளிகால நினைவேக்க கதைகள். ‘சுமத்தல்’ கதையில் நினைவுகூரலாக மட்டும் எஞ்சிவிடக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் கொண்டு வரலாறு பாடம் எடுத்த லட்சுமி டீச்சர் வாழ்க்கையும் வரலாற்று ஆளுமையான ராணி லட்சுமி பாயும் இணை வைக்கப்படுகிறார்கள். வெளிப்புற மிடுக்குக்கு உள்ளே மருகும் சாமானிய பெண் இருப்பதை கண்டு கொள்கிறான் கதைசொல்லி. ஆனால் அதை வெளிப்படுத்தாததற்கு டீச்சர் அவனுக்கு நன்றி தெரிவிக்கிறாள். பிள்ளைகள் பிறந்தாலும் பிறக்காமல் இருந்தாலும் என் இருநிலையிலும் கூடும் சுமையை சொல்கிறது. ‘பரிசு’ இறுதி முடிச்சு கொண்டு காலம்காலமாக பெண்களின் உள்ள கிடக்கை சொல்ல முயல்கிறது.

வலுவான கேள்விகளும், கருப்பொருட்களும் கொண்ட கதைகள் இத்தொகுதியில் உள்ளன. காலப்போக்கில் கதைகூறும் விதமும் மொழியும் கூர்மையடையும்போது மேலும் செறிவான கதைகளை அவரால் எழுத முடியும் என்பதற்கான சான்றுகள் இந்த தொகுப்பில் உள்ளன.

பெரும்பாலான கதைகள் ‘பதாகை’ இணைய இதழில் வெளியானவை. ‘பதாகை’ வழியாக மற்றுமொரு எழுத்தாளர் அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி. சிவாவின் கதைகளின் நிலப்பரப்பு நான் வாழும் செட்டிநாடு – அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவை என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. செவலாங்குடியை பூர்வீகமாக கொண்டவர். தற்போது சென்னையில் அரசு பணியில் உள்ளார். 45 வயதில் இலக்கிய உலகிற்குள் எழுத்தாளராக அறிமுகமாகிறார். எழுத்தாளர் கா. சிவாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பதாகை சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் எழுதிவரும் திறமையான புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களை பதிப்பிக்கும் வாசகசாலைக்கும் வாழ்த்துக்கள்.

சுனில் கிருஷ்ணன்

காரைக்குடி

29.9.20

விரிசல் – கா.சிவா சிறுகதை

சங்கரின் அம்மாவும் அப்பாவும் காமாட்சி மெஸ்ஸுக்கு இரண்டு நாள் விடுமுறை விட்டுவிட்டு உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார்கள். இந்த மெஸ்ஸில், இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் மதியமும் இரவும் உணவுண்டு, கணக்கை குறித்து வைத்துக்கொண்டு மாதம் முடிந்து சம்பளம் பெற்றவுடன் கணக்கை முடிப்பார்கள். ஓய்வென்பதால் காலையில் சாவகாசமாக எழுந்து,  டீ குடித்தபடி தினத்தந்தியை புரட்டி, திரைப்பட விளம்பரங்களை பார்த்துக் கொண்டிருந் சுப்பு
” அண்ணே தீபாவளிக்கு குணாவும் தளபதியும் ஒன்னா ரிலீசாகுது” என்றான்  உற்சாகமாக.

ஆனந்த விகடனில் சுஜாதாவின் “கற்றதும் பெற்றதும்”  வாசித்துக் கொண்டிருந்த சங்கர் நிமிர்ந்து பார்த்தான்.
சுப்பு புதுக்கோட்டைக்காரன். மெஸ்ஸில்  சமையலுக்கு மட்டுமில்லாமல் எல்லா வேலைக்கும் உதவியாளாக இருக்கிறான். சங்கர் ஏதாவது டிகிரி படிக்கவேன்டுமென ஆங்கிலம் இல்லாத பி.ஏ. தமிழ் படித்துவிட்டு அப்பா அம்மா நடத்திவரும் மெஸ்ஸிலேயே சமைத்துக் கொண்டிருக்கிறான்.

” ராயல்ல குணாதான் போடுவான். நான் அதத்தான் பாக்கப்போறேன் . வர்றதுன்னா நீயும் வா” என்றான் சங்கர்.

   “வேண்டாம்.  நாதமுனில தளபதி போடுவான். நான் அங்கதான் போவேன்” என்று சற்று வளர்ந்திருந்த தன் தலைமுடியை வலக்கையால் மேல் நோக்கி தள்ளியபடி கூறினான்  சுப்பு.

அப்போது, திறந்திருந்த கதவின் வழியாக பரவியிருந்த வெளிச்சம் தடைபட்டதைக் கண்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். நாற்பது வயது மதிக்கத்தக்க இருவர் தயங்கியபடி நின்றார்கள். முன்னால் நின்றவர் மாநிறத்தில் புன்னகைக்க வைக்கும் முகத்துடன், வேட்டி சட்டையில் இருந்தார். பின்னால்,  பேன்ட் சட்டை அணிந்து நின்றவர்  சிவந்த நிறத்தில் இருந்தாலும் பார்த்தவுடனேயே பார்ப்பவர்  மனதில் ஒருவித கசப்பை உருவாக்கும் முகவாகுடன் இருந்தார்.

” சார், இன்னைக்கு மெஸ் லீவு ” என்றான் சங்கர்.

  “அப்படியா, இன்னிக்கு காலையில நாலு மணிக்கு என் தாத்தா காலமாயிட்டார். எண்பத்தஞ்சு வயது. வர்றவங்களுக்கு  மதியச் சாப்பாடு வேணும். பக்கத்து வீட்டுக்காரர்தான் இங்க நல்லாயிருக்கும்னு சொன்னாரு. அதான் வந்தோம்” என்றார் முன்னால் நின்றவர்.

சங்கர் யோசிப்பதைக் கண்டு சுப்பு மெல்லிய குரலில் ” கொண்டு போய் குடுக்கிறதுதானே.  ஒத்துக்குங்கண்ணே. தீபாவளிச் செலவுக்கு ஆகும் ” என்றான்

சங்கர் சற்று யோசித்தபின்,  அவர் பக்கம் திரும்பி  “உள்ளே வாங்க சார்” என்றபடி எழுந்து வழிவிட, இருவரும் உள்ளே வந்து பெஞ்சில் அமர்ந்தார்கள்.  இரண்டாவதாக வந்தவர் கல்லா டேபிளையும்  மாட்டியிருந்த விலைப் பட்டியலையும் நோக்கினார். புன்னகை முகத்தவரைப் பார்த்து
” எத்தனை பேருக்கு சார்” என்று கேட்டான் சங்கர்.

” ஒரு எம்பது பேர்க்கிட்ட எதிர்பாக்கறோம். அதிகப்பட்சமா நூறத் தாண்டாது”

“எழுபத்தஞ்சு சாப்பாடு தர்றேன். சின்னப் பசங்க, பெண்கள்லாம் கலந்து சாப்பிட்டா நூறு பேரு சாப்பிடலாம் சார்”

” ஒரு சாப்பாடு எவ்வளவு. கொண்டு வந்து கொடுத்துடுவீங்களா. தெற்கு ஜெகனாத தெருதான்”

“ஒரு சாப்பாடு பதினஞ்சு ரூபா சார். மீன் பாடி வண்டியில ஏத்திக்கிட்டு வந்துருவோம். வண்டிக்கி நீங்கதான் கொடுக்கனும். முப்பது ரூபா கேப்பாங்க”

” சாப்பாடு நல்லா இருக்கனும் தம்பி. பணத்தை இப்பவே முழுசாக் கொடுக்கனுமா”

” வேண்டாம் சார். அட்வான்சா முன்னூரு ரூபா மட்டும் கொடுத்திடுங்க. மிச்சத்த சாப்பிட்டுட்டு திருப்தியா இருந்தா மட்டும் கொடுங்க. உங்க பேரு அட்ரச எழுதிக் கொடுங்க” என்று சுப்பு நீட்டிய டைரியை வாங்கி அவரிடம் கொடுத்தான்.

” என் பேரு சிவராமன். இவரு சரவணன். என் தங்கையோட  வீட்டுக்காரர். நான் அங்க வேலையா இருப்பேன். பாத்திரங்கள எடுக்கிறப்ப இவருக்கிட்ட மிச்சப் பணத்த வாங்கிக்கிங்க” என்று அருகில்  இருந்தவரைக் கைகாட்டினார். தனக்குள் ஏதோ கணக்குப் போடுவது போன்ற முக பாவனையோடிருந்த  சரவணனை சங்கர் ஒரு கணம் நோக்கினான். எழுதி முடித்த சிவராமன்   டைரியுடன் முன்னூறு ரூபாயையும் நீட்டினார். சங்கர் வாங்கிக் கொண்டான்.
.  ****
சுப்புவிடம், இருக்கும்  வெங்காயத்தை உரித்து வெட்டச் சொல்லிவிட்டு, பெரிய கேரியர் பொருத்தப்பட்ட மிதிவண்டியில்  ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்த காய்கறிச் சந்தைக்குச்  சென்றான்.  பொறியலுக்கு வாழைக்காயும் கூட்டிற்கு பெங்களூர் கத்திரிக்காய் எனச் சொல்லப்படும் சவ்சவ்வும் வாங்கிக் கொண்டான். சாம்பாருக்கு கத்தரியும் முருங்கையும் வாங்கிக் கொண்டு கூடவே கொத்தமல்லி,  கருவேப்பிலையோடு ஒரு பெட்டி நாட்டுத் தக்காளியும் வாங்கிக் கொண்டான்.
சுப்பு வெங்காயத்தை வெட்டி முடித்துவிட்டு கண்ணாடியில் பார்த்து தலைவாரிக் கொண்டிருந்தான்.  தக்காளியை அலசி வெட்டச் சொல்லிவிட்டு காய்களை வெட்ட ஆரம்பித்தான் சங்கர். நல்லெண்ணையை கையில் தடவிக் கொண்டு வாழைக்காயின் தோலை சீவ ஆரம்பித்தான். சீவிய காய்களை  தண்ணீருள்ள சிறிய பாத்திரத்தில் போட்டான்.
வாழைக்காயை வெட்டியவுடன் மீண்டும் கைகளில் எண்ணை தேய்த்துக் கொண்டான். சவ்சவ் சீவும்போது சுரக்கும் நீர் கையில் பசைபோல படிந்துவிடாமல் இருப்பதற்காக. சவ்சவ்வை பொடிப்பொடியாக  வெட்டியவுடன் சாம்பார் காய்களையும் வெட்டி சிறிய பாத்திரத்தில் போட்டு காய் மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி வைத்தான். பச்சை மிளகாய் கீறிக்கொண்டான். கறிவேப்பிலை உறுவிக் கொண்டு,  கொத்தமல்லியை நைசாக வெட்டி நீருள்ள சிறிய கிண்ணத்தில் அள்ளிக் கொண்டான்.
சுப்பு தக்காளியை வெட்டிவிட்டு,  புளிக் கரைசலில்  வெட்டிய  தக்காளியில் கொஞ்சம் அள்ளிப்போட்டு,  கீறிய பச்சை மிளகாய் ஒரு கைப்பிடி போட்டு கையால் நன்றாகக் கசக்கிக்  கரைத்தான். கையில் மிஞ்சிய தக்காளித் தோலை குப்பையில் போட்டுவிட்டு உரித்த பூண்டை வெத்தலை இடிக்கும் சிறிய உரலில் போட்டு, ஒன்றிரண்டாக  இடித்து தனியாக எடுத்து வைத்தான்.
அடுப்படியில், மூன்று அடுப்புகள்,  இடுப்பளவு உயரத்திற்கு மண்ணைக் குழைத்து அமைக்கப்பட்டிருந்தன. இரண்டடி நீளத்திற்கு அறுக்கப்பட்ட  சவுக்குக் கட்டைகளை எடுத்துவந்து அடுப்புகளின் அருகே போட்ட சுப்பு ,  மூன்று கொட்டாங்குச்சிகளில் அடுப்பிலிருந்த சாம்பலை அள்ளி,  கேனில் இருந்த மண்ணெண்ணையை , அதில்  நிரம்புமளவு ஊற்றினான். மூன்று  அடுப்புகளிலும் ஒவ்வொன்றை வைத்துவிட்டு அவற்றின் மேல் சவுக்குக் கட்டைகளின் நுனி இருக்குமாறு வைத்தான்.
பக்கத்துத் தெருவிலிருந்த நாயர் கடையில் வாங்கி வைத்திருந்த ஆப்பம் வடைகறியை தின்று விட்டு வந்த சங்கர்,  சாமியை கும்பிட்டபடி தீக்குச்சியை பற்றவைத்து மண்ணெண்ணெயில் நனைந்திருந்த சாம்பல் மேல் வைத்தான். தீ  மெதுவாகப் படர்ந்து எரிய ஆரம்பித்தது. முதல் அடுப்பில் உலைப்பானையை கொஞ்சம் நீரூற்றி வைத்தான். அதில் முக்கால் பங்கு அளவிற்கு நீரை நிரப்பினான் சுப்பு. அடுத்த அடுப்பில் சட்டியை வைத்து நீரூற்றி வாழைக் காய்களை கொட்டினான். இரண்டு கைப்பிடி பச்சைப் பருப்பை தூவினான். பொடியாக வெட்டிய இஞ்சியை   வெந்து கொண்டிருந்த காயின் மேல் போட்டான். காய் வெந்து மலரத் தொடங்கும் கணத்தில் சட்டியை இறக்கி, நீர் வடிவதற்கான இடைவெளிகளுடன் பின்னப்பட்ட மூங்கில் கூடையில் கொட்டி கவிழ்த்தான். மறு அடுப்பில் கூட்டுக்கு பச்சைப் பருப்பும் கடலைப்பருப்பும் சேர்த்து   வேகவைத்த பிறகு  சாம்பாருக்கு தனியாக துவரம் பருப்பை வேகவைத்தான். இடுப்பில் கட்டியிருந்த ஊதா நிறத் துண்டை அவிழ்த்து முகம், கழுத்து மற்றும் கைகளைத் துடைத்துவிட்டு மீண்டும் இடுப்பில் கட்டினான்.
பெரிய இரும்புக் கடாயை அடுப்பில் வைத்தான். அதில் இருந்த ஈரம் முழுக்க ஆவியானபின் புகை எழுந்தபோது இரண்டு குண்டுக் கரண்டி கடலை எண்ணெயை சுற்றி ஊற்றினான். தாளிதச் சாமான்கள் இருக்குமிடத்திலிருந்த டப்பாக்களிலிருந்து , முதலில் கடுகை எடுத்து கடாய்க்குள் தூவுவது போல போட்டான். அடுத்து சோம்பு கொஞ்சம் தூவினான். கடுகு வெடித்து முடித்தவுடன் வரமிளகாய்களை இரண்டாக பிய்த்துப் போட்டு கருவேப்பிலையையும் போட்டான். சாய்த்து வைத்திருந்த அவனின்  இடுப்பு உயரமிருந்த இரும்புக் கரண்டியை எடுத்து கடாய்க்குள் கிளறினான். கருவேப்பிலை முறுகி வாசம் எழுந்தபோது இரண்டு கைப்பிடி வெங்காயத்தைப் போட்டான். வெங்காயம் வதங்கி எண்ணெயோடு இயைந்து  இளம்பொன்னிறத்தில்   மிளிரத் தொடங்கியபோது, சுப்பு கொடுத்த திருகி வெட்டப்பட்ட தேங்காய்ப் பூவை போட்டு பிரட்டினான். சுப்புவைத் திரும்பிப் பார்த்தான். பார்வையை உணர்ந்த சுப்பு தண்ணீர் வடிந்திருந்த கூடையை தூக்கிவந்து வாழைக்காயை   கடாய்க்குள் கொட்டினான்.
ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்தான். தூள் உப்பை  கொஞ்சம் கையில் எடுத்து காயின்மேல்  தூவிய பிறகு கரண்டியை உள்ளுக்குள் கொடுத்து நன்றாகப்  பிரட்டினான். அடியிலிருந்த தாளிதங்கள் முழுக்கப் பரவின. எழுந்து பரவிய வாசணையால் சுப்புவின் முகம் மலர்ந்தது. நன்றாகக் கிளறியபின் மீண்டும் ஒரு துண்டை வாயிலிட்டு சுவைத்தான். சங்கர் முகத்தில் திருப்தி தெரிந்தது. வெட்டியிருந்த கொத்தமல்லியை தூவிவிட்டு சுப்பு எடுத்துக் கொடுத்த எவர்சில்வர் சட்டியில் அள்ளினான். பச்சைப்பருப்பின் மஞ்சள் நிறத்தோடு கொத்தமல்லியின் பசுமை கலந்து வெள்ளை வாழைக்காய், இலையும் பூவும் பழமுமாய் பொலியும் வேம்பின் கிளையினை காண்பதான கிளர்ச்சியை மனதில் உண்டாக்கியது. சங்கர்,  சமைக்கும் போது ஒரு கணமும்  நிற்காமல் மூன்று பந்துகளை தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தைக்காரனைப் போல் இயங்கினான்.
சமையல் மேடையிலிருந்த கைப்பிடி துணியால்,  கடாயை இறக்கி கால்படாத ஓரமாக வைத்துவிட்டு கால்சட்டி தண்ணீருடன் அலுமினியச் சட்டியை அடுப்பிலேற்றினான். சவ்சவ்வைக் கொட்டி வேகவைத்து கூட்டு வைக்கத் தயாரானான். கூட்டு , சாம்பார் முடித்தபின் ரசத்தை பொங்க தொடங்கும்போது இடித்த பூண்டைப் போட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கினான்.  அப்போது , முதல்  அடுப்பில் சாதம் , வடிக்கத் தயாரான பதத்தில் கொதித்தது.

சமையல் கட்டிலிருந்து வெளியே வந்தபோது பின் பக்க கதவின் வழியே பீறிட்டு வந்த காற்று உடலில் பட்டவுடன் சங்கரின் முகம் இயல்பானது. ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் சங்கரை,  சுப்பு சற்று அச்சத்துடன்தான் பார்ப்பான். உள்ளே செல்லும்போதிருக்கும்   சங்கர் அல்ல ,  சமைப்பவன். சமைக்கும் போது வேறொரு தனியுலகில் இருப்பவன்,  மீள்வது வெளியே வரும்போதுதான். உள்ளேயிருப்பவன் அருள் வந்த குல தெய்வக் கோயில் பூசாரி போல. இயல்பாக பேசி சிரித்துக் கொண்டிருப்பவர் எந்தக் கணத்தில் மாறினார் எனத் தெரியாமல் நம்மை யாரென்றே உணராத வேறொருவராக அருளோடு இருப்பாரே அது போல. சமையல் செய்யும் போது எதுவும் பேசுவதோ சிரிப்பதோயில்லை. தீவிரமாகவே இருக்கும் முகம் சுவை பார்க்கும்போது மட்டும் சற்று இளகும். நன்றாக இருந்துவிட்டால் கனிந்துவிடும். இன்று நன்றாக கனிந்திருந்தது.

வெளியே மணியடிக்கும் சத்தம் கேட்டு சங்கர் போய் பார்த்தான். காலையில் சந்தைக்குச்  சென்றபோது சொன்னதற்கு, சரியான நேரத்திற்கு,  இடுப்பில்  லுங்கிகட்டி , கழுத்தில் துண்டைச் சுற்றியவாறு  கந்தய்யா தன் மீன்பாடி வண்டியுடன் வந்திருந்தார். சுப்புவும் கந்தய்யாவும் சேர்ந்து எல்லாவற்றையும் தூக்கி வண்டியில் வைத்தனர். சாம்பார் மற்றும் ரசப் பாத்திரத்தில் வாழையிலைகளை பரப்பியபின் தட்டால் மூடினான் சுப்பு.  கந்தய்யா வண்டியில் சுருட்டிக் கட்டி வைத்திருந்த கயிறைப் பிரித்து பாத்திரங்கள் அதிகமாக ஆடாமல் இருக்குமாறு குறுக்கும் நெடுக்குமாக கட்டினார். முகவரியை அவரிடம் கூறி அவரை அனுப்பினார்கள். மிதிவண்டியை  சங்கர் மிதிக்க சுப்பு பின்னால் அமர,  பின் தொடர்ந்தார்கள். வழியில் இருந்த வாழையிலைக் கிருஷ்ணன் கடையில் நூறு தலையிலைகளை வாங்கி சப்பு கையில் பிடித்துக் கொண்டான்.

தேட வேண்டிய அவசியமில்லாமல் தெருவில் நுழைந்ததும்,  துணிப் பந்தலை வைத்து,   உடனேயே வீட்டை அடையாளம் கண்டுகொண்டார்கள். எடுத்து அரைமணி நேரம் ஆகியிருக்குமென சங்கர் எண்ணினான். திண்ணையுடன் கூடிய ஓட்டு வீடு. கழுவிய திண்ணையின் தரையெல்லாம் பாதி காய்ந்துவிட்டது. ஓரமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மர டேபிளில், ஈரம் பாதி காய்ந்திருந்தது.. படர்ந்து விரிந்த கிளைகளுடன் தாட்டியான காவல்காரரைப் போல  தோற்றமளித்த வேப்ப மரத்தின் பாதுகாப்பில் அந்த வீடு இருப்பதாகப் பட்டது. ஓட்டின் மேல்   பழுத்த இலைகளும் மஞ்சள் தோலும்  உதிர்ந்து கிடந்தன.

மிதிவண்டியை ஓரமாக நிறுத்திய சங்கர் திண்ணையைக் கடந்து வாசலருகே சென்றான். உள்ளே  பெண்கள், பிள்ளைகளுடன் சில வயதான ஆண்களும் கலைந்து  அமர்ந்திருந்தார்கள். அவர்களை சுற்றி நோக்கியவன்,  ஒரு நடுத்தர வயது பெண்ணை தேர்ந்து,  அழைத்தான். ஏன் அவரை அழைக்கத் தோன்றியது என மனதிற்குள் துழாவியபடியே,  சாப்பாடு கொண்டு வந்ததாகக் கூறி எங்கே இறக்க வேண்டுமெனக் கேட்டான். இப்போதுதான் குளித்திருந்ததால்,  அவர் முகத்தில், அழுத சுவடு மறைந்து துலக்கம் தெரிந்தது. காலையில் வந்தவரின் தங்கையாக இருக்குமென சங்கருக்குத் தோன்றியிருக்கிறது. அவர் கூறியபடி எல்லாவற்றையும் வீட்டிற்குள் சென்று வராந்தாவில் வைத்தார்கள். பாத்திரங்களின் விவரத்தையும் பாக்கி எவ்வளவு என்பதையும் எழுதிய தாளை அந்தப் பெண்ணிடம் கொடுத்து
” இதை சரவணன் சார்கிட்ட கொடுத்திடுங்கம்மா. காலையில எட்டு மணிக்கு வந்து பாத்திரத்தை எடுத்துக்கிட்டு மிச்ச பணத்தை வாங்கிக்கிறோம்” என்றான் சங்கர்.

       திருமணமோ அல்லது வேறு விழாவாகவோ இருந்தால் இவர்களைப் பரிமாறச் சொல்வார்கள். இம்மாதிரி நிகழ்வுகளில் அவர்களே பரிமாறிக் கொள்வார்கள்.
” நீங்க சொல்றவரு என் வீட்டுக்காரர்தான். நான் அவர்க்கிட்ட கொடுத்திடுறேன். நீங்க காலையில வாங்க ” என்றார் அந்தப் பெண்.

                    ****
காலையில் மூவரும் அங்கே  சென்றார்கள். அதிகமான ஆட்கள் இல்லை. நான்கைந்து பேர் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தார்கள். துக்கம் ஏதும் தெரியாதவாறு இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தார்கள். இரண்டு சிறுவர்கள் வேப்ப மரத்தடியில் பழங்களைத் தேடி காலால் அழுத்தி கொட்டையை பிதுக்கிக் கொண்டிருந்தார்கள். சங்கரைப் பார்த்தவுடன் நேற்று பேசிய பெண் எழுந்து வந்து              ” காப்பி குடிக்கிறீங்களா” எனக் கேட்டார்.

     “இப்பத்தாங்க குடிச்சிட்டு வர்றோம். நேரமாயிடுச்சு. பாத்திரங்கள் எங்கேயிருக்குன்னு சொன்னீங்கன்னா எடுத்துக்கிட்டு போயிடுவோம்” என்றான் சங்கர்.

         வீட்டின் பின்பக்கம் கழுவிக் கவிழ்த்திருந்த பாத்திரங்களை பார்த்து எடுத்துக் கொள்ளுமாறு அவர் கூறிக் கொண்டிருந்தபோதே   அருகே வந்த அவர் கணவர் சரவணன்,  மனைவியை பார்த்து    ” நீ போய் வேலையைப் பார். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று மீற முடியாத அழுத்தத்துடன் சொன்னார்.
அவர் சென்றவுடன் சங்கர் பக்கம் திரும்பி ” நீ தான் சமையல் பண்ணுனியா ” என்று கேட்டார்.

    ” ஆமா சார். ரெண்டு வருசமா நாந்தான் சார் பண்றேன்” என்றான்.

    ” இதுக்குப் பேரு சமையலா. எங்க ஊர்லயெல்லாம் ரோட்டோரக் கடையிலேயே இதவிட நல்லாயிருக்கும்” லேசாக குரலை உயர்த்தினார்.

   ” எது  சார் நல்லாயில்ல” என்று வேகமாக  முன்னால் வந்து சுப்பு  கேட்டான்.

” டேய், நீ  கந்தய்யாவைக் கூட்டிட்டு போயி பாத்திரங்களை எண்ணி எடுத்துக்கிட்டு வா ” என அவனை அடக்கி அனுப்பிவிட்டு சரவணன் பக்கம் திரும்பி ” நீங்க சொல்லுங்க சார் ” என்றான்.

   “இன்னும் என்ன சொல்லனும். பொரியல் பண்ணியிருக்க சப்புன்னு. சவ்சவ்  கூட்டு வச்சிருக்க  சவச்சவன்னு. சாம்பார்ல காயவே காணாம். ரசம் ஒரே புளிப்பு. இப்படி ஒரு கை பக்குவத்த வச்சுக்கிட்டு, எப்படி தைரியமா, திருப்தியா இருந்தா மட்டும் மிச்சப் பணத்த தாங்கன்னு கேப்ப” என்றார் வாயைக் கோணியபடி,  ஆட்காட்டி விரலை நீட்டி.

சங்கர் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

” சாப்பிட்டு முடிச்சிட்டா பணத்தக் கொடுத்துடுவாங்கன்னுதானே அப்படிச் சொன்ன. நான் அப்படிக் கொடுக்க மாட்டேன். பாதிப் பணம்தான் கொடுப்பேன்” என்றார் உறுதியான குரலில்.

   சங்கர் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்து ” முடியாதுங்க. பாதிப் பணத்த நான் வாங்கிக்க மாட்டேன். நான் சொன்ன மாதிரி திருப்தி இல்லாத சாப்பாட்டுக்கு நான் பணத்த வாங்கிக்க மாட்டேன். சரியில்லாத சாப்பாட்டைக் கொடுத்ததுக்கு மன்னிச்சுக்கங்க” என்று கையை கூப்பிவிட்டு திகைத்துக் கூம்ப ஆரம்பித்த அவரின் முகத்தை நோக்காமல்   திரும்பி நடந்து சைக்கிளை எடுத்தான்.  ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கிய  பாத்திரங்களை வண்டியில் ஓரமாக வைத்துவிட்டு அருகில் சுப்பு   அமர்ந்து கொள்ள, கந்தய்யா  மீன்பாடி வண்டியிலேறி ஓட்ட ஆரம்பித்தார்.

                *****
மாலை டீயைக் குடித்தபடி,  தினத்தந்தியை பத்தாவது தடவை புரட்டிக் கொண்டிருந்தான் சுப்பு. நேஷனல் டேப் ரெக்கார்டரில்   தளபதி படத்தின் ” சுந்தரீ… கண்ணால் ஒரு சேதி” யை  கேட்டுக்கொண்டிருந்தான் சங்கர். “தம்பீ ” என அழைக்கும் சத்தம் கேட்டு  கதவைத் திறந்தான் சுப்பு. சிவராமனும் அவர் அக்காவும் நின்று கொண்டிருந்தார்கள். திரும்பிப் பார்த்த சங்கர் ” வாங்க சார், வாங்கம்மா” என்றபடி எழுந்தான். அவர்கள் உள்ளே வந்து மூன்று பேர் அமரக் கூடிய பெஞ்சில் இடைவெளிவிட்டு அமர்ந்தார்கள். சங்கர் நாற்காலியில் அமர்ந்து சுப்புவைப் பார்த்தான். புரிந்துகொண்ட சுப்பு டீ வாங்குவதற்கு செம்பை எடுத்தக் கொண்டு வெளியேறினான்.

” மன்னிச்சிடுங்க சார். சாப்பாடு சரியில்லாமக் கொடுத்ததுக்கு”

” தம்பீ… நீ தாம்பா எங்களை மன்னிக்கனும்”

சங்கர் நெகிழ்ந்திருந்த அவர்களின் முகத்தை நோக்கினான். தவறு செய்யாதவனுக்கு தண்டனையளித்த அறத்தோன் முகமென துடித்துத் தளும்பிக்  கொண்டிருந்தன இருவரின்  முகங்களும்.
” இந்த மாதிரி சாப்பாட்ட நான் இதுவரைக்கும் சாப்பிட்டதில்ல. வாழக்காயி எங்க வீட்ல செஞ்சா ஒன்னு ரப்பர் மாதிரி வேகாம இருக்கும். இல்லேன்னா வெந்து கொழஞ்சு போயிருக்கும். உங்க பொரியலு அருமையா வாயில வச்சி மெல்லறப்ப மிருதுவா இருந்துச்சு. இவ்வளவு பொடியா வெட்டின சவ்சவ் கூட்ட இது வரைக்கும் பார்த்ததில்ல. அடுப்புல வச்ச வெண்ண மாதிரி, அப்படியே மென்னவுடனேயே கரைஞ்சிடுச்சு. அப்புறம் ரசம். தக்காளித் தோலோ பூண்டுத் தோலோ கண்ணுலயும் படாம நாக்குலயும் தட்டுப்படாம முதத் தடவயா சாப்பிட்டேன். தாத்தா போன துக்கத்த மறந்து அப்படியே கிறங்க வைச்சிடுச்சு” என்றார் சிவராமன்.

   ” தம்பி, நீங்கவொன்னும் தப்பா நெனச்சுக்காதீங்க. காலையில ஒன்னுமே சரியில்லேனுட்டு இப்ப இப்படி பேசறமேன்னு. எங்க அண்ணன் நேத்தே பணத்தை என் வீட்டுக்காரர்க்கிட்ட கொடுத்திட்டாங்க.  என் வீட்டுக்காரர் மார்க்கெட்ல தண்டலுக்கு பணம் கொடுத்து வாங்கறாரு. அடுத்தவங்க பணத்த, ஒழைப்ப அடிச்சுப் புடுங்கிற    அந்தக் கொணம் எப்பவுமே போகாது.  ஏதாவது கொற சொல்லி பணத்தைக் கொறச்சு கொடுத்திட்டு அண்ணன் கொடுத்த பணத்துல கொஞ்சம் தனக்கு வச்சுக்கலாம்னு நெனச்சுத்தான் சாப்பாடு சரியில்லையினு சொல்லிட்டார் ” என்றாள் அந்தப் பெண்.

” வெளிய போயிருந்த நான்  வந்தவுடனேயே தங்கச்சி என்கிட்ட சொன்னுச்சு. அவருக்கிட்ட ஏதாவது கேட்டா வீண் மனவருத்தந்தான் வரும். அதனால அவருக்கிட்ட எதுவும் சொல்லாம நாங்க வந்தோம் ” என்றார் சிவராமன்.

சிவராமன் தன் பையிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்து சங்கரிடம் நீட்டி ”  உங்க வேலைக்கான ஊதியம் வாங்கிக்கிங்க”  என்றார் .

சங்கர் கை நீட்டாமல்  ” சார் பணத்தை உள்ளே வைங்க. நான் நேத்து சொன்னதுதான். திருப்தியில்லாம வாங்கிக்க மாட்டேன். அவருக்கு திருப்தி இல்லையில்ல”

” இல்லப்பா அவரு பணத்துக்கா சும்மா சொன்னாரு”

“எதுவாயிருந்தாலும் சொல்லிட்டாரு. இப்ப வாங்கிட்டா நான் சொன்னது சும்மாதான்னு ஆயிடும்ல”

அவர்கள் திகைத்தபடி சங்கரைப் பார்த்துக் கொண்டிருத்தார்கள். அப்போது உள்ளே வந்த சுப்பு டீயை சொம்பின்  அடியில் கொஞ்சம் வைத்துக்கொண்டு இரு தம்ளர்களில் ஊற்றிவிட்டு , அடியில் கரையாமலிருந்த சீனியை  சற்று கலக்கி மீண்டும் தம்ளர்களில் சம அளவாக ஊற்றி,   இருவருக்கும் கொடுத்தான். அவர்கள் வாங்கி அருந்த ஆரம்பித்த பின் சங்கர் பேச ஆரம்பித்தான்.

” எங்க அப்பா மட்டும் மெட்றாசில சமையல்காரரா வேல பாத்துக்கிட்டு இருந்தார்.  நானும் என் அக்காவும்  எங்கம்மாவோட, ஊர்லதான் விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்தோம். எங்கப்பாதான் கடை வைக்கலாம்னு எங்கள இங்க கூப்பிட்டாரு. ஊர்ல என் பெரியப்பா இருந்தாரு. பிடிக்காதவங்க யாருமேயில்லாம  எல்லாருமே மதிக்கிற மாதிரி ஒரு மனுசன் வாழ முடியும்னு காட்டிக்கிட்டு வாழ்ந்தவர் அவர். அவர்கிட்ட அம்மா போய் கேட்டாங்க,  இந்த மாதிரி சாப்பாட்டுக் கடை வைக்கனும்னு அவங்க கூப்பிடறாங்களே போகட்டுமான்னு. அதுக்கு எங்க பெரியப்பா சொன்னாங்க ” சோறு போடறதுங்கிறது ஒரு தர்மம். அத்தக் காலத்திலேயெல்லாம் அன்ன சத்திரம்னு வச்சு எல்லாருக்கும் சோறு தானமாத்தான் கொடுத்தாங்க. இப்பத்தான் வியாபாரமா ஆக்கிட்டாங்க. பசிக்கு   சோறு போட்டுட்டு பணம் வாங்கறது தப்புதான். அவங்ககிட்டயிருந்து வாங்கறது பணமில்ல பாவம்.   இருந்தாலும் , வேலைக்காக குடும்பத்த விட்டு வேற எடத்துல கெடந்து உழைக்கற நெறயப் பேரு  பணம் வச்சிருந்தாலும் சாப்பிடக் கெடைக்காம அல்லாடறாங்க.  அவங்க மாதிரி ஆளுங்களுக்கு சாப்பாடு போட்டு பணம் வாங்கிக்கலாம். ஆனா சாப்பிட்டுட்டு  மனசுத் திருப்தியா கொடுத்தாத்தான் வாங்கனும்னு ” சொன்னாரு . நானும் அவர் சொன்னதைக் கேட்டேன். சரி அப்படியே செய்யறோம்னு அவரு  கால்ல விழுந்து துன்னூறு பூசிக்கிட்டு வந்தோம். அவரு சொன்ன மாதிரியே,  அப்பலேர்ந்து சாப்பிட்டு விட்டு வந்தப்பறம் தான் நாங்க காசு வாங்கறோம். இது வரைக்கும் யாருமே குறையின்னு ஒன்னும் சொன்னதில்லை” என்று பேசி நிறுத்தினான் சங்கர்.

 ” நேத்து நான் சொன்னவுடனேயே சரவணன் சார் முகத்தப் பார்த்தேன்.  அவர் இப்படிச் சொல்ல முடிவு பண்ணீட்டார்னு அப்பவே புரிஞ்சுடுச்சு”

” தெரிஞ்சுமா இது மாதிரி நல்லா சமைச்சீங்க”

  ” நான் நெனச்சேன், என் சாப்பாட்ட சாப்பிட்ட பின்னாடி குறை சொல்ல வாய் வராதுன்னு. ஆனா நான் முதல் தடவையா தோத்துட்டேன். எதுக்காக வேணும்மின்னாலும் பொய் சொல்வாங்க, உணவால நிறைஞ்ச மனசால அதையே சரியில்லேன்னு சொல்லிற மாட்டாங்கன்னு ரொம்ப நம்புனேன். ஆனா நம்பிக்கையில லேசா விரிசல் விழுந்திடுச்சு. மனுசனோட அகங்காரத்துக்கு முன்னால தர்மமும் தோக்குற காலம் வந்திடுச்சுபோல”
என்று உதடுகளை சுழித்தபடிக் கூறி  அவர்களை நோக்கி  கை கூப்பினான்.

  சங்கரின் வார்த்தையில் இருந்த உறுதியையும் முகத்தில் தெரிந்த அவன் மனதின் ஏமாற்றத்தையும் கண்டு இளகிய முகத்துடன் இருவரும் எழுந்தார்கள்.