குறிஞ்சி மைந்தன்
தோலுரித்துப் போட்டச் சட்டையை
மீண்டும் கஞ்சி தேய்த்து ஊற வைத்துவிட்டு
பொழுது மறையும் நேரத்தைக் கணக்கிட்டு கொண்டே
கொடியில் உலர்த்திக் கொண்டிருந்தேன்.
மஞ்சள் வெய்யில் என் உடலை நனைத்தது
கொடியில் உலரவிட்ட என் ஆசைத்தோலும் கருக ஆரம்பித்தது.
நிர்வாணம் போர்த்திய உடையுடனே
உல்லாசப் பறவைப்போல்
காடுகளிலும் அடர்ந்த மரங்களிலும்
பயத்தை அப்பிருக்கும் பொந்துகளிலும்
நான் வாழ்வை வாழ்ந்து பார்க்கின்றேன்.
வெட்டுக்கிளிகள் சரசம் பண்ணுவதைப் பார்த்து
நான் என் மனைவியிடம் ஏமாந்துபோனதை
நினைத்து கண்ணீர் சிந்துகின்றேன்.
கண்ணைத் திறப்பதற்குப் பதிலாக,
விடியலைத் திறந்துவிட்டிருந்தேன்
நேற்று குகைப் பொந்தில் அலாதி வாழ்வை
வாழ்ந்துவிட்ட தருணத்தை எச்சில் விட்டுப் பார்க்கும்
ஒரு சிலந்தியின் பின்னலைப்போல் உணர்ந்து பார்க்கிறேன்.
எமது எழுத்துகளுக்கு வலி எடுக்கின்றன
குறைந்தது இரண்டொரு கவிதையாவது
அல்லது
நீலப்படம் பார்த்த மகிழ்வில்
என் படுக்கையில் படுத்துவிட்ட
ஓர் இளம்பெண்ணை நினைத்து, நினைத்து
காதலைக் குறித்த பேருடையாடலை
இப்பொழுதும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் என்னுடையை
பேச்சை, மொழியை, அடையாளத்தை
கேட்டுக் கொண்டிருக்கலாம்
அல்லது
கேட்காமலும் போகலாம்
நான் இன்னும்
இது குறித்தும்
இதனைக் குறித்தும் மட்டுமே
பேச ஆசைப்படுகின்றேன்.
தனிமை திட்டமிட்டுச் செய்த பெரு வலியுடன்
நானும் பெண்ணைக் குறித்த அதிகார மோகத்தை
கூடியமானளவு துடைத்தெரியப் பார்க்கின்றேன்.
இன்னும் சாத்தியப்பட்டுப்போக மறுக்கிறது
எனதான நெஞ்சுரம்.