குறிஞ்சி மைந்தன்

அடையாளப்படுத்தும் தனிமையின் பேருரைகள்

 

குறிஞ்சி மைந்தன்

 

தோலுரித்துப் போட்டச் சட்டையை
மீண்டும் கஞ்சி தேய்த்து ஊற வைத்துவிட்டு
பொழுது மறையும் நேரத்தைக் கணக்கிட்டு கொண்டே
கொடியில் உலர்த்திக் கொண்டிருந்தேன்.

மஞ்சள் வெய்யில் என் உடலை நனைத்தது
கொடியில் உலரவிட்ட என் ஆசைத்தோலும் கருக ஆரம்பித்தது.

நிர்வாணம் போர்த்திய உடையுடனே
உல்லாசப் பறவைப்போல்
காடுகளிலும் அடர்ந்த மரங்களிலும்
பயத்தை அப்பிருக்கும் பொந்துகளிலும்
நான் வாழ்வை வாழ்ந்து பார்க்கின்றேன்.

வெட்டுக்கிளிகள் சரசம் பண்ணுவதைப் பார்த்து
நான் என் மனைவியிடம் ஏமாந்துபோனதை
நினைத்து கண்ணீர் சிந்துகின்றேன்.

கண்ணைத் திறப்பதற்குப் பதிலாக,
விடியலைத் திறந்துவிட்டிருந்தேன்
நேற்று குகைப் பொந்தில் அலாதி வாழ்வை
வாழ்ந்துவிட்ட தருணத்தை எச்சில் விட்டுப் பார்க்கும்
ஒரு சிலந்தியின் பின்னலைப்போல் உணர்ந்து பார்க்கிறேன்.

எமது எழுத்துகளுக்கு வலி எடுக்கின்றன
குறைந்தது இரண்டொரு கவிதையாவது
அல்லது
நீலப்படம் பார்த்த மகிழ்வில்
என் படுக்கையில் படுத்துவிட்ட
ஓர் இளம்பெண்ணை நினைத்து, நினைத்து
காதலைக் குறித்த பேருடையாடலை
இப்பொழுதும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் என்னுடையை
பேச்சை, மொழியை, அடையாளத்தை
கேட்டுக் கொண்டிருக்கலாம்
அல்லது
கேட்காமலும் போகலாம்
நான் இன்னும்
இது குறித்தும்
இதனைக் குறித்தும் மட்டுமே
பேச ஆசைப்படுகின்றேன்.

தனிமை திட்டமிட்டுச் செய்த பெரு வலியுடன்
நானும் பெண்ணைக் குறித்த அதிகார மோகத்தை
கூடியமானளவு துடைத்தெரியப் பார்க்கின்றேன்.

இன்னும் சாத்தியப்பட்டுப்போக மறுக்கிறது
எனதான நெஞ்சுரம்.

என் அந்தரங்கப் பதிவேட்டிலிருந்து

குறிஞ்சி மைந்தன் 

என்ன எழுதுவதென்றுத் தெரியாமல்
எதையெதையோ எழுதி எழுதி,
சொல்லமுடியாதவனாய்
உங்கள் முன் நிற்கின்றேன்
நிர்வாணமாய்.

எனக்கென்று உணவுகளில்லை
ஆடைகளில்லை
ஓரிடமில்லை யாசிக்க உடல்களுமில்லை
அட்டையென ஒட்டுகின்றேன்
வருவோர் போவோரிடம்.

வறுமைக்கு மீறிய வாசிப்புகள்
இருந்தன என்னிடம்
இப்போதும் இருக்கின்றன
மிக அதிகமாக.

எனது பற்கள் தேய்ந்தாலும்
நான் முன்வைக்கும் வார்த்தைகள்
தொய்வையோ
தேய்மானத்தையோ
கண்டதில்லை ஒருபோதும்.

நிறைய பேசத் துடிக்கின்றேன்
இக்கணம் முதல் பகிர்ந்துகொள்வதற்குக்
காதுகளில்லை.
தேடித் தேடிச் சென்றாலும்
ஆணி ஏறுகிறது எமது கால்களில்.
அந்த ஆணி தொடர்ந்து குத்துகிறது என்னை
அந்த ஆணியைப் பிடிங்கி எடுக்கின்றேன்
ஒவ்வொரு முறையும்.
எப்படியாவது இரத்தக் கசிவு வந்துவிடுகிறது
மறுமுனையிலிருந்து.

தற்போதைய முழு மனநோயாளி நீயென்று
மனநல மருத்துவர் ஒருவர்
மருந்துகளை எழுதிக் கொடுத்திருந்தார்.
அதிகம் சிந்திக்கக் கூடாதென்றும்,
அதிகம் விவாதிக்கக் கூடாதென்றும்,
அதைவிட அதிகம் படிக்கக் கூடாதென்றும்.

மருந்து கடையில் வேலைச் செய்யும் ஒரு பருவப்பெண்
என்னிடம் சொன்னபடியே சிரித்துக் கொண்டாள்
மருந்துச் சீட்டில் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தபடி.
‘உங்களுக்குத் தர இதுபோன்ற மருந்துகள்
எங்கள் கடையில் இல்லையென்று’ கைவிரித்தப்படியே
ஏளனம் செய்தாள் என்னை உற்றுநோக்கியபடி.

அப்பருவப் பெண்ணிடம்
மருந்துச் சீட்டை வாங்குவதற்குள்
ஒருசில கவிதையாவது எழுதியிருப்பேன்
அல்லது
சில நண்பர்களிடம் என்னைக் குறித்த
கணிப்பைக் கணிசமாகப் பெற்றிருப்பேன்.

வேறொரு கடைக்குச் சென்றபோது,
பருவப் பெண்கள் இருக்கிறார்களா என்று
திட்டவட்டமாக எண்ணி,
மருந்துச் சீட்டைத் தர தயாரானேன்.
இம்முறை ஓர் இளம் கைம்பெண்ணின் வசம்
எனதான மருந்துச் சீட்டுடனே
எனதான அந்தரங்கமும் புலம்பெயர்ந்ததை
என்னுள் எண்ணிக்கொண்டிருக்கும்போதே,
எனக்கு விந்து வெளியேறிவிட்டது
என்னையறியாமல்.

இம்முறையும் ஏமாற்றம் மிகவே,
வீட்டிற்கு வந்து எனதறையில்
படுத்தேன்; உருண்டினேன்
நாற்புற திசையெங்கிலும்
ஓர் உலக்கை உருளுவதுபோல.
தூக்கம் கண்களை விட்டுக் கீழே
இறங்கிப் படுத்துக்கொண்டது.

என் எண்ணம் முழுக்க விந்து வெளியேறியது
ஏன்?
எப்படி?
எதற்காக?
என்றெல்லாம் சிந்தித்தப்படியே இருக்க
அந்தக் கைம்பெண் குறித்து
ஒரு கவிதை எழுதத் துவங்குகிறேன்
எனதான எழுதுகோலும் வெள்ளைக் காகிதமும்
சிதிலமடைகின்றன
எப்போதுமில்லாத அளவிற்கு.

__________________________________________________________________