சிறுகதை

புதுயுகம்

எஸ். சுரேஷ் 

சிவசுப்ரமணியம் உரக்கச் சிரித்தார். என்னாச்சு உங்களுக்கு என்று கேட்ட மனைவி சீதாவிடம், அனுஷா என் ரிக்வெஸ்ட் ஆக்ஸெப்ட் செஞ்சிட்டா என்றார். எப்படி? நான் ஒரு ஃபேக் ஐடி உருவாக்கினேன். அந்த ஐடிலிருந்து ரிக்வெஸ்ட் அனுப்பிச்சேன். அவ ஆக்ஸெப்ட் செஞ்சிட்டா. எதுக்குங்க நம்ம பிள்ளைய நாம வேவு பாக்கணும்? உனக்கு இந்த புதுயுகத்தப் பத்தி ஒண்ணும் தெரியாது. நம்ம காலத்துல பசங்க பேரண்ட்ஸ்வீட்லையே இருந்து படிச்சு வேலைக்கு போனாங்க. அவங்க என்ன செய்யராங்கன்னு ஓரளவுக்கு தெரியும். நல்லது கெட்டது சொல்ல முடிஞ்சிது. இப்போ பார். நம்ம பெண் காலேஜுக்கு கான்பூர் போனா, மேல்படிப்புக்கு அமெரிக்க போனா. இப்போ பெங்களூர்ல வேல பண்றா. அவளப் பத்தி நமக்கு ஒண்ணும் தெரியல. சோசியல் மீடியா வழியாதான் அவ என்ன பண்றான்னு தெரிஞ்சிக்கணும். எனக்கு என்னமோ இது சரின்னு படலைங்க. உங்க வேலைக்கு நடுவுல இது எதுக்கு?. நீ கவலப்படாத. நான் பாத்துக்கறேன். அவர் ஒரு பெரிய கம்பெனியில் சீ.எஃப்.ஓவாக இருந்தார். மும்பை மெரின் ட்ரைவில் பல்லடுக்கு குடியிருப்பில் – அரபிக்கடலைப் பார்க்க தோதாக – பத்தாவது மாடியில் கம்பெனி ஃப்ளாட்டில் குடியிருந்தார். அவர் மகள் அனுஷா கான்பூர் ஐ.ஐ.டியில் படிப்பு முடித்து, அமெரிக்காவில் எம்.பி.ஏ பட்டம் பெற்று, பெங்களூரில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருக்கிறாள். அவளுக்கு முப்பது வயதாகியும் இன்னும் திருமணமாகாமல் இருப்பது பெற்றோருக்கு கவலையாக இருந்தது.

தினமும் காலையில் எழுந்தவுடன் பல் தேய்த்துவிட்டு கையில் காஃபி கோப்பையுடன் அரபிக்கடலைப் பார்க்கும் சிவசுப்ரமணியம் இப்பொழுது காஃபி கோப்பையுடன் மொபைலைப் பார்க்க ஆரம்பித்தார். ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என்று எல்லா இடத்திலும் ஒரு பெண்ணின் பெயரில் ஃபேக் ஐடி தயார் செய்து அனுஷாவைப் பின் தொடர ஆரம்பித்தார். அனுஷா இன்ஸ்டாக்ராமில் அதிகம் போஸ்ட் செய்வதால், முதலில் இன்ஸ்டாக்ராமைப் பார்க்க ஆரம்பித்தார். அவள் போஸ்ட் செய்யும் புகைப்படங்களை பார்த்தார். அவற்றுக்கு யாரெல்லாம் லைக் போடுகிறார்கள் என்று பார்த்தார். யாரெல்லாம் கமெண்ட் எழுதுகிறார்கள் என்று பார்த்தார். யாருடன் அனுஷா அதிகமாக உரையாடுகிறாள் என்பதை கூர்ந்து நோக்கினார். ஆண்கள் யாருடனாவது அவள் உரையாடினால் அவன் இன்ஸ்டாக்ராம் பேஜுக்கு சென்று அவன் எப்படிப்பட்டவன் என்பதை பார்த்தார். இவை எல்லாம் செய்ய அவருக்கு தினமும் காலையில் ஒரு மணி நேரம் தேவைப்பட்டது. இந்தப் பழக்கம் மெதுவாக இரவிலும் தொடர்ந்தது.  இரவிலும் ஒரு மணி நேரம் இதற்காக செலவிட்டார். உங்களுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு என்று சொன்ன சீதாவை பார்த்து நாளைக்கு சன்டே. நான் என்ன கண்டுபிடிச்சிருக்கேன்னு சொல்றேன். நீ அசந்துபோயிடுவ.

அடுத்த நாள் மதிய உணவிற்கு பிறகு, சோஃபாவில் சீதாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, மொபைலை கையிலெடுத்தார். இன்ஸ்டாக்ராம் ஓபன் செய்து அனுஷாவின் பேஜுக்கு சென்றார். அனுஷா எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருந்த படங்களை ஒவ்வொன்றாக காண்பிக்க ஆரம்பித்தார். பல படங்களில் அனுஷா தனியாக இருந்தாள். #ootd என்று ஏதோ எழுதியிருந்தது. இது நேஹாதானே? ஆமாம். பல படங்களில் நேஹாவும் கூட இருந்தாள். நேஹா அனுஷாவின் நெருங்கிய தோழி. இருவரும் முதல் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்தவர்கள். அவளும் கான்பூர் ஐ.ஐ.டியில் படித்தாள். பிறகு அவளும் அமெரிக்கா சென்று படித்துவிட்டு இப்பொழுது பெங்களூரில் அனுஷாவின் ரூம்மேட்டாக இருக்கிறாள்.சீதா பார்த்த அந்த படத்தில் அனுஷா குட்டை முடியுடன் ஜீன்ஸ் மற்றும் டீ-ஷர்ட்டில் காணப்பட்டாள். நேஹா அடர்த்தியான தலைமுடியுடன் சல்வாரில் இருந்தாள். நம்ப பொண்ணும் நேஹா போல் முடி வளர்த்து நல்ல டிரஸ் போடலாம் எதுக்கு இது போல் டிரஸ் செய்யணும்? நேஹா முக்கியமில்லை. நான் இப்போ உனக்கு காமிக்கப் போற ஃபோட்டோதான் முக்கியம்.அவர் அனுஷா-நேஹா படத்தைத் தள்ளினார். அடுத்த படம் வந்தது. அதில் அனுஷா ஒரு ஆணின் தோளின் மேல் கை போட்டு நின்றுகொண்டிருந்தாள். அவன் பார்ப்பதற்கு அழகாக இருந்தான். கண்ணாடி போட்ட உருண்டை முகம், அடர்த்தியான சுருள் தலைமயிர். நீல வண்ணத்தில் டீ ஷர்ட். இருவரும் ஒரு மோட்டார்பைக் மேல் சாய்ந்து கொண்டிருந்தார்கள். யாருங்க இந்தபிள்ள? சிவசுப்ரமணியம் சிரித்தார். இதுக்கு தான் நான் வேவு பாக்குறேன். இந்த பிள்ள பேரு சுதீர். அவன் ஒரு கூர்கி. அப்படின்னா? கர்நாடகாவில இருக்கற கூர்க் மாவட்டத்திலேர்ந்து வரான். நல்ல வசதியான குடும்பம். ஏக்கர் கணக்குல அவங்களுக்கு காஃபி எஸ்டேட் இருக்கு. இவன் அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ள. எல்லா சொத்தும் இவனுக்குதான். இந்த கணக்கு பாக்கற புத்தி உங்களவிட்டு போகாது. நம்ம பெண் இவன லவ் பண்ணுதா?இங்க பார் இந்த ஃபோட்டோ கீழ என்ன எழுதியிருக்கான்னு. ‘#MyClosestCompanion” லவ் இல்லைனா மிக நெருக்கமான நண்பன்ணு சொல்லுவாளா? அவங்க போஸ் பாத்தாலே அவங்க லவ்வர்ஸ்தான்னு உனக்கு தெரியலையா? ஏங்க, நம்ம பக்கம் ஆளுங்க பார்த்தா ஏதாவது சொல்லப்போராங்க. அதுக்குத்தான் அவ ப்ரோஃபைல் லாக் செஞ்சிருக்கா. என்ன தவிர யாருக்கும் தெரியாது விடு. இவனதான் கல்யாணம் கட்டிப்பாளா? எனக்கு என்ன தெரியும் ஆனா அவ இவன கட்டிக்கிறதா இருந்தா எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. என்னங்க அப்படி சொல்றீங்க. நம்ப மனுஷங்க என்ன சொல்லுவாங்க. அவங்க ஜாதி என்ன. அவங்க பழக்க வழக்கம் என்ன. எப்படிங்க அப்டி ஒண்ணுமே தெரியாம ஒத்துக்க முடியும்? சீதா, காலம் மாறிப்போச்சு. இப்போ நம்ப பிள்ளைங்க கல்யாணம் கட்டிட்டா போதும்ன்னு எல்லாரும் இருக்காங்க. பாக்க அழகா இருக்கான். நல்ல பணக்கார குடும்பம். நல்லா படிச்சிருக்கான். அனுஷாவுக்கு அவன பிடிச்சிருக்கு. இதுக்கு மேல என்ன வேணும். சீதா மௌனமானாள். சிவசுப்ரமணியம் ஒவ்வொரு படமாக தள்ளிக்கொண்டு வந்தார். பல படங்களில் அனுஷாவும் சுதீரும் இணைந்திருந்தார்கள். இணக்கமாகவும் இருந்தார்கள். அனுஷா மற்றும் சுதீர் இருக்கும் படங்களை மட்டுமே பார்த்தார்கள். மற்ற படங்களை எல்லாம் அவர்கள் அதிகம் கவனிக்கவில்லை.

இப்பொழுதெல்லாம் தினமும் இரவில் ஒரு அரை மணி நேரம் அனுஷா வலையேற்றும் படங்களைசிவசுப்ரமணியன் சீதாவுக்கு காட்டுகிறார். பல நாட்கள் அனுஷா தனியாகவோ, நேஹாவுடனோ இருக்கும் படங்கள் வருகின்றன. சில நாட்கள் சுதீரும் வருகிறான். அவன் வரும் படங்களிலெல்லாம் அனுஷா அவன் தோல் மேல் கை போட்டபடி நிற்கிறாள். என்னங்க நாம சைவம், அந்த பிள்ள அசைவமா இருந்தா? இருந்தா என்ன? அவன் கூர்கி. அசைவமாதான் இருப்பான். இந்த காலத்துல எல்லோரும் அசைவம் சாப்பிடராங்க. இதெல்லாம் பெருசா எடுத்துக்கக் கூடாது. சிவசுப்ரமணியம் படத்தை நகர்த்தினார். அடுத்த படத்தில் அனுஷா, நேஹா, சுதீர் மற்றும் வேறொரு ஆண் இருந்தார்கள். அனுஷாவின் தோளில் நேஹா சாய்ந்திருந்தாள், நேஹா சுதீர் தோளில் சாய்ந்திருந்தாள். சுதீர் அருகில் இருந்த ஆணின் தோளில் கையை போட்டுக்கொண்டிருந்தான். எல்லோரும் வலது கையை நீட்டி வெற்றி சைகையை காட்டிக்கொண்டிருந்தனர். எல்லோர் முன்னேயும் அவர்கள் சாப்பிடும் பண்டம் இருந்தது. சீதா இதை பார்ப்பதை பார்த்த சிவசுப்ரமணியம் சுதீர் முன் இருந்த திண்பண்டத்தை கவனித்தார். பின்பு படத்தின் கீழே என்ன எழுதியிருக்கிறது என்பதை படித்தார். “எஞ்ஜாயிங்க் மை பந்தி கறி”. போர்க். பன்றிக்கறி!! சிவசுப்ரமணியம் இதை எதிர்ப்பார்க்கவில்லை. சீதாவின் முகம் மாறி இருப்பதை கவனித்து, ஏதோ சொல்ல வாயெடுத்தார் ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. சீதாவின் முகத்தில் அவருக்கு புரியாத உணர்ச்சி ஒன்று குடிகொண்டிருந்தது. சீதா மெல்லிய குரலில் சொன்னாள் இது நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராதுங்க. அவள் குரலை கேட்டவுடன் சிவசுப்ரமணியமுக்கு பயம் எடுத்தது. மௌனமாக இருந்தார்.

அன்று இரவு அவருக்கு தூக்கம் வரவில்லை. சீதாவின் குரல் அவர் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. ஏசி ரீங்காரமும், கடிகாரத்தில் முள் நகரும் ஓசையும் இரவின் மௌனத்தில் துல்லியமாக அவருக்கு கேட்டன. விட்டத்தை முறைத்து பார்த்தார். சீதா ஏன் இப்படி பயப்படுகிறாள்? அவள் தம்பி, இப்பொழுது அமெரிக்காவில் வசிக்கிறான், மாட்டுக்கறி தின்கிறான். அது சீதாவுக்கு தெரியாது. அவன் இந்தியா வரும்பொழுது வெறும் சைவம்தான் சாப்பிடுவான். அமெரிக்காவில் அவன் சாப்பிடாத ஜந்து இல்லை. இப்பொழுது இந்த பிள்ளை பன்னிக்கறி சாப்பிட்டால் என்ன தவறு? சீதாவுக்கு இந்த புதிய உலகம் புரியவில்லை. இளைஞர்கள் எப்படி இருப்பார்கள், எப்படி ஒருவருடன் ஒருவர் பழகுகிறார்கள், அவர்களில் லட்சியம் என்ன? ஆசைகள் என்ன? இவை எதுவும் சீதாவுக்கு தெரியாது. அவள் உலகம் மாறவில்லை என்ற நினைப்பில் இருக்கிறாள். வெறும் வார இதழ்களை படித்துக்கொண்டும், சீரியல் பார்த்துக்கொண்டும் இருந்தால் இந்த புது உலகம் புரியாது. இதற்கு நாமும் நம் பிள்ளைகளைப் போல் சோசியல் மீடியாவில் சேர வேண்டும். நான் அதை செய்கிறேன். என்னால் அனுஷாவின் முடிவை ஏற்றுக்கொள்ளமுடிகிறது. சீதாவால் முடியவில்லை. அவளை எப்படியாவது சமாதானப்படுத்தவேண்டும்.

அடுத்த நாள் முதல் சீதா படங்களை பார்க்க மறுத்தாள். எனக்கு வேணாங்க என்றாள். சிவசுப்ரமணியம் சுதீரை தினமும் உற்றுப்பார்தார். பிள்ளை அழகாகதான் இருக்கிறான். நல்ல சுருள் முடி,ஆப்பிள் போல் சிவப்பு, ஸ்டைலிஷ் உடை உடுத்துகிறான், முகத்தில் எப்பொழுதும் ஒரு புன்னகை தவழ்கிறது. இவனை எதற்கு மறுக்க வேண்டும். எவ்வளவோ உறவுக்கார பிள்ளைகள் வேறு ஜாதியில் திருமணம் செய்து கொள்ளவில்லையா? ஒருத்தி முஸ்லிமை கல்யாணம் கட்டியிருக்கிறாள். நாம் ஏன் இதற்கு பயப்படவேண்டும். சிவசுப்ரமணியம் சீதாவின் மனதை மாற்றப் பார்த்தார் ஆனால் சீதாவோ ஐயோ. உங்களுக்கு இதெல்லாம் புரியாதுங்க என்றாள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கும் அவள் இப்பொழுதெல்லாம் இறுக்கமானமுகத்துடன் காணப்பட்டாள். சிரிப்பதையே மறந்துவிட்டிருந்தாள். அனுஷாவுடன் பேசும்பொழுதும் அவள் குரல் தீனமாக ஒலித்தது. அம்மாவுக்கு என்ன? ஏன் டல்லா இருக்காங்க? உன்னை பற்றி கவலைதான். அனுஷா அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை.

இரண்டு வாரங்கள் கழித்து அனுஷா, நேஹா, சுதீர் மற்றும் சில நண்பர்கள் சுதீரின் காஃபி எஸ்டேட்டுக்கு சென்று அங்கு ஐந்து நாட்கள் தங்கினார்கள். தினமும் அனுஷா, நேஹா, சுதீர் ஆகியோர் படங்களை இன்ஸ்டாக்ராமில் வலையேற்றினார்கள். சிவசுப்ரமணியம் தினமும் எல்லாவற்றையும் பார்த்தார். இந்த ட்ரிப்பில் அனுஷாவுக்கும் சுதீருக்குமான நெருக்கம் அதிகமானது போல் அவருக்குப் பட்டது. அதிகாலை வேளையில், இலைகள் நடுவிலிருந்து ஊடுருவி வரும் சூரிய கிரணங்கள் அவர்கள் மேல் விழ, இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். வேறொரு இடத்தில் ரோஜா செடிகள் சூழ இருவரும் நடுவில் நின்றுகொண்டு போஸ் கொடுத்தார்கள். இப்படியாக பல புகைப்படங்கள் இருந்தன. எதையும் சீதா பார்க்க மறுத்தாள்.

இந்த ட்ரிப் முடிந்தவுடன் அனுஷா பெங்களூரு சென்றுவிட்டாள், நேஹா மும்பைக்கு வந்தாள். வந்த முதல் நாளே இவர்கள் வீட்டுக்கு வந்தாள். இவர்கள் வீட்டில் வளர்ந்த பெண் என்பதால் உரிமையுடன் சீதாவிடம், ஆண்ட்டி, ஒரு டீ. சுதீர் எஸ்டேட்ல காஃபி குடிச்சி குடிச்சி போர் அடிச்சிடிச்சி. சிவசுப்ரமணியம் அவளுடன் பேச ஆரம்பித்தார். ஃபுல் எஞ்சாய்மெண்டா? எஸ் அங்கிள். அவன் எஸ்டேட் குட்டான்னு ஒரு எடத்துல இருக்கு. பெரிய எஸ்டேட். அருமையான எஸ்டேட். நானும் அனுஷாவும் எஸ்டேட்ட சுத்தி பாத்து ஷாக் ஆயிட்டோம். விதவிதமான மரங்கள். வனிலா இருக்கு, ஆரஞ்சு இருக்கு,பாக்கு மரம் இருக்கு, பெப்பர் இருக்கு. தென்னை, வாழையெல்லாம் கேக்கவே வேணாம். எவ்வளவோ விதமான பூக்கள். தினமும் காலைல பாக்கணுமே அங்கிள். இங்கேல்லாம் பாக்கவே முடியாத பறவைகள் எவ்வளவோ வருது. நானும் அனுஷாவும் தினமும் காலைல அஞ்சு மணிக்கே எழுந்து, குளிச்சு, பறவைகளைப் பாக்க வெளியே வந்திடுவோம். காலைல அந்த பனில நாங்க ரெண்டும் பேரும் நடந்து போவோம். அது ஒரு டிவைன் எக்ஸ்பீரியன்ஸ் அங்கிள். எஸ்டேட் முதல் முறையாக பார்த்திருப்பாள் போல். அந்த மகிழ்ச்சி அவள் பேச்சில் தெரிகிறது என்று நினைத்துக்கொண்ட சிவசுப்ரமணியம் இஸ் சுதீர் எ குட் பாய்?என்று கேட்டார். ரொம்ப நல்லவன் அங்கிள். நானும், அனுஷாவும் ஏதாவது அட்வைஸ் கேக்கணும்னா அவன் கிட்டதான் போவோம். வெரி நான்-ஜட்ஜ்மெண்டல். அப்பொழுது சீதா டீயுடன் வந்தாள். அவளுக்கு நான்-ஜட்ஜ்மெண்டல்என்றால் என்ன என்று தெரிந்திருக்காது என்று சிவசுப்ரமணியம் அவன் யாரை பற்றியும் எந்த முன்முடிவும் எடுக்கமாட்டானாம். அவங்க அவங்க அவங்களுக்கு பிடித்ததை செய்யட்டும் என்று விட்டுவிடுவானம் என்று நீண்ட உரை ஒன்றை கொடுத்தார். சீதா தலையசைத்தாள். ஆண்ட்டி, டீ சூப்பரா இருக்கு. சீதா கஷ்டப்பட்டு சிரிப்பது போல் சிவசுப்ரமணியமுக்கு பட்டது. சோஃபாவில் நன்றாக சாய்ந்துகொண்டு சுதீர் பற்றியும், அவளும் அனுஷாவும் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை பற்றியும் விரிவாக நேஹா சொல்லிக்கொண்டிருந்தாள். குட்டாலிருந்து அஞ்சு  கிலோமீட்டர் தூரத்துல வயநாடு. அது கேரளால இருக்கு. அங்கே பூக்கோடு லேக்ல நானும் அனுஷாவும் ரோ செஞ்சிட்டு போட்ல போனோம். எல்லோருமா திருநெல்லி கோவிலுக்கு போனோம். வழியில மூணு பெரிய யானை பார்த்தோம். கண் விரிய சொல்லிக்கொண்டிருந்தாள். சுதீர் நான்-வெஜ் சாபிடுவானா? உரக்கச் சிரித்தாள். அங்கிள், அவனால நான்-வெஜ் இல்லாம ஒரு நாள் கூட இருக்க முடியாது. பந்தி கறி அவனோட ஃபெவரிட். மதியம் இங்க சாப்பிடு. வேணாம் ஆண்ட்டி. நான் இன்னொரு ஃப்ரெண்ட்ட பாக்கணும். நாளைக்கு முடிஞ்சா  வரேன். இல்லைனா பை. அவள் சென்ற பிறகு அவர் சீதாவை பார்த்தார். அவள் முகம் இன்னும் அதிகம் இறுகியிருந்தது போல் அவருக்கு பட்டது. பிள்ள நல்ல பிள்ளைதான் போல் இருக்கு என்று சொன்னார். சீதா ஏதும் பதிலளிக்காமல் சமையலறைக்குள் சென்றாள்.

நானும் சுதீரும் அடுத்த வாரம் முன்பைக்கு வரப்போறோம். உங்களோட பேசணும். என்ன பேசணும். வந்து சொல்றேன். ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்பவா? வேணாம். நாங்க டாக்ஸி புடிச்சு வறோம். செய்தியை கேட்டவுடன் சீதா ஆழ ஆரம்பித்தாள். இதை எதிர்பார்க்காத சிவசுப்ரமணியம் அதிர்ச்சி அடைந்தார். இத பாரு. என் பொண்ணுக்கு யார பிடிக்குதோ அவங்களுக்கு கல்யாணம் கட்டிக்கொடுப்பேன். யார் என்ன சொன்னாலும் எனக்கு பரவாயில்லை. சீதா தலையை இல்லை என்பது போல் ஆட்டினாள். இல்லைங்க. இது சரிப்பட்டு வராது. நீங்க புரிஞ்சிக்கமாட்டீங்க. எனக்கு எல்லாம் தெரியும். உன் அழுகையை நிறுத்து. சிவசுப்ரமணியம் மாடியிலிருந்து அபார்ட்மெண்டு கேட்டை பார்த்துக்கொண்டிருந்தார். அனுஷா எந்த நிமிடமும் வரலாம். வாசலில் ஏதாவது வண்டி வந்து நின்றாலே அவருக்கு உற்சாகம் கூடியது. அனுஷா தான் காதலை பற்றி சொல்லப்போகிறாள். அவளுக்கு டென்ஷன் அதிகம் இருக்கும். நான் சரி என்றவுடன் அவள் குஷியில் சிரிப்பாள். அந்த சிரிப்பை பார்க்கவேண்டும். தன் அப்பா இந்த காலத்துக்கு தகுந்தாற்போல் மாறிவிட்டார் என்று அவள் உணர்வாள். அப்பா மேல் அன்பும் மரியாதையும் கூடும். சீதா தான் அழுவாள். சுதீர் முன் அவள் அழுதால் அவன் என்ன நினைத்துக்கொள்வான். சமாளிக்கலாம்.

அரை மணி நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்த பிறகு அவர் எதிர்பார்த்த நிகழ்வு நடந்தது. அனுஷாவும் சுதீரும் டாக்ஸியைவிட்டு இறங்கினார்கள். இரண்டு அடி எடுத்து வைத்த பிறகு அனுஷா சட்டென்று நின்றுவிட்டாள். வேணாம் என்பது போல் தலையை ஆட்டினாள். அவள் அருகே சென்ற சுதீர் அவள் கையை பற்றிக்கொண்டான். அனுஷா அவன் தோல் மேல் சாய்ந்தாள். அவன் அவள் காதில் ஏதோ சொன்னான். சரி என்பது போல் தலையை ஆட்டிவிட்டு அவன் கைகளை அவள் இறுக்கமாக பற்றிக்கொள்ள இருவரும் மறுபடியும் நடக்க ஆரம்பித்தனர். சிவசுப்ரமணியம் லிப்ட் இருக்கும் இடத்தில் நின்றார். கதவு திறந்தவுடன் அவரைக் கண்ட அனுஷா, ஹாய் டாட் என்றாள் ஆனால் முகத்தில் மகிழ்ச்சி இல்லாதது சிவசுப்ரமணியனுக்கு வருத்தம் அளித்தது.. மீட் சுதீர். ஹலோ அங்கிள். ஹலோ. கம் இன். எல்லோரும் வீட்டுக்குள் நுழைந்து சோஃபாவில் உட்கார்ந்தார்கள். டிவியில் ஏதோ ப்ரோக்ராம் ஓடிக்கொண்டிருந்தது. டிவியை அணைத்தார். அம்மா எங்க? சமையலறையில் இருக்கா. வருவா. சரி ஏதோ பேசணும்னு சொன்னியே? ஆமாம் டாட் என்று சொல்லிவிட்டு சுதீரைப் பார்த்தாள். சிவசுப்ரமணியத்திற்கு சிரிப்பு வந்தது. நான் எப்படியும் சரியென்று சொல்லப்போகிறேன். இவள் ஏன் தவிக்கிறாள்? பயப்படாமல் சொல்ல வேண்டியதை சொல் என்று சுதீர் ஆங்கிலத்தில் அவளிடம் சொன்னான். சமையலறையிலிருந்து அழுகை சத்தம் கேட்டது. சிவசுப்ரமணியம் அந்த திசையை நோக்கி முறைத்தார். அனுஷா சுதீர் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு, நான் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்கேன். சிவசுப்ரமணியம் புகத்தில் புன்னகை மலர்ந்தது. தலையை குனிந்தவாறு, நான் நேஹாவ… சமையலறையில் அழுகை சத்தம் வலுப்பெற்றதை அவர் கவனிக்கவில்லை.

ருத்ரதாரி

எஸ். சுரேஷ் 

Image credit: craiyon.com

அவன் கையை மேலேயும் கீழேயும் ஆட்டி காரை நிறுத்துமாறு சைகை செய்தான். கார் நின்றது. பிறகு வர்ஷா உட்கார்ந்திருந்த பக்கம் வந்து, “என் பெயர் தரம். டூரிஸ்ட் கைடு. உங்களை ருத்ரதாரி அருவிக்கு அழைத்துச் செல்கிறேன்,” என்றான்.

வர்ஷா டிரைவரை பார்த்து, “கைட் வேண்டுமா?” என்று கேட்டாள். “அருவி காட்டுக்குள் இருக்கிறது மேடம். கைடு இருந்தால் நல்லது,” என்றான்.

“எவ்வளவு?” என்று வர்ஷா கேட்டாள்

“ஐநூறு ரூபாய் மேடம்”

“நானூறு கொடுக்கறேன்”

தரம் தலையை சொறிந்தான். “நானூறுக்கு  ஒப்புக்கொள்,” என்றான் டிரைவர்.

“சரி”.

அவர்கள் வந்து சேர்ந்த இடத்தில் ஒரு குடிசை, அதில் ஒரு டீக்கடை இருந்தது. நாலாபுரமும் ஹிமாலய மலைத்தொடர் அவர்களை சூழ்ந்திருந்தது. வானத்தை கருமேகங்கள் மூடியிருந்தன. சூரிய ஒளியில் பச்சை பசேல் என்று இருந்த மலைகள் இப்பொழுது கரும்பச்சை நிறமாக தோற்றமளித்தன. சற்று தொலைவில் ஓடிக்கொண்டிருந்த கோமதி நதியின் சலசலப்பு கேட்டது. இருள் சூழ்ந்திருந்த அந்த பிரதேசம் ஒரு கனவு உலகு போல் தோற்றமளித்தது. உடலை ஊடுருவி பனிக்காற்று வீசியது.

வர்ஷா தன் ஜாக்கெட்டின் ஜிப்பை கழுத்துவரை இழுத்தாள். உள்ளே ஸ்வெட்டர் போட்டுக் கொண்டிருந்தாள். இருந்தாலும் குளிருக்கு அவள் முகம் சிவக்க ஆரம்பித்தது. சில்லென்று இருந்த கைகளால் தன் முகத்தை தடவிக் கொடுத்தாள். குளிர் அதிகமாகிக் கொண்டிருந்தது. கைகளை ஒன்றோடொன்று தேய்த்துக் கொண்டு மேகங்களை பார்த்தாள். ஒரு முறை எல்லா மலைகளையும் நோட்டமிட்டாள். இது போன்ற அழகு ஹிமாலயா பகுதியில்தான் கிடைக்கும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, கருமேகங்களை பார்த்தபடி, “மழை வரும் போல் இருக்கிறதே,” என்றாள்.

“இல்லை மேடம். மழை வராது. இரவு பனி பெய்யலாம் ஆனால் இப்பொழுது மழை வராது,” என்றான்.

“அவ்வளவு உறுதியாக உன்னால் எப்படி சொல்ல முடியும்?”

அவன் சிரித்துக் கொண்டே, “நான் பல ஆண்டுகளாக இங்கு கைடாக இருக்கிறேன். மேகங்களைப் பார்த்தால் மழை வருமா வராதா என்பது தெரிந்து விடும்”

இருவரும் நடக்க ஆரம்பித்தனர். முதலில் பாதை மேலே ஏறியது. “ரொம்ப அப்ஹில்லா இருக்குமா?” என்று வர்ஷா கேட்க, “கடைசியில் கொஞ்சம் தூரம் மேலே ஏற வேண்டும். இப்போது கிட்டதட்ட சமதரைதான்” என்றான் தரம்.

மேலே ஏறியவர்கள், கீழ் நோக்கி  ஒரு சிறிய பள்ளத்தாக்கில் இறங்கினார்கள். அங்கு கோமதி நதி ஒரு பெரிய ஓடை போல் இருந்தது. கணுக்கால் அளவு தண்ணீர் ஓடியது. நதிக்கரையில் பெரிய கூழாங்கற்கள் சிதறிக் கிடந்தன. இங்கு குளிர் இன்னும் அதிகமாக இருப்பது போல் வர்ஷாவுக்கு தோன்றியது. கைகளை தன் நெஞ்சுக்கு குறுக்கே இறுக்கிப் போர்த்துக் கொண்டாள்.

தரம் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “இன்று குளிர் அதிகம் இல்லை. சலேங்கே தோ டண்ட் நகின் லகேகா. நடந்தால் குளிர் தெரியாது”

வர்ஷா கரையில் நின்றுகொண்டு நதியில் கை வைத்தாள். கையில் மின்சாரம் பாய்வது போல் உணர்ந்தாள். சட்டென்று தண்ணீரிலிருந்து கையை எடுத்துவிட்டு தரமைப் பார்த்து சிரித்தாள். பதிலுக்கு அவன், “தண்ணீரில்  நடந்து நதியைக் கடப்போமா?” என்றான். “ஒ நோ. இந்த குளிர் எனக்கு தாங்காது,” என்றாள் வர்ஷா. நதியின் நடுவில் இருந்த கற்களின் மேலே நடந்து நதியை கடந்தார்கள்.

உயர்ந்த மரங்கள். காட்டுக்குள் நுழைந்தார்கள். காட்டில் இருட்டு அதிகமாக இருந்தது. “நிச்சயமாக மழை வராதா?” என்று வர்ஷா கேட்க, “நிச்சயம் வராது. என்னை நம்புங்கள்” என்றான் தரம்.

சற்று தொலைவு நடந்த பிறகு ஒரு சிறு ஓடை வந்தது. அதை ஒரு மரக்கிளை ஏறிக் கடக்க வேண்டும். முதலில் சென்ற தரம், தான் கிளையை விட்டு விழுந்து விடுவதுபோல் நடித்தான். இரண்டு கைகளையும் நீட்டி, ஒரு காலில் ஏதோ நர்த்தனம் செய்வது போல் செய்தான். தன் முன் சேட்டை செய்து கொண்டிருந்த இருபத்தைந்து வயது இளைஞனின் வெகுளித்தனத்தை கண்டு வர்ஷாவுக்கு சிரிப்பு வந்தது. அவன் இந்த இயற்கை போல் கல்மிஷம் இல்லாதவனாக தென்பட்டான். நடந்து நடந்து அவனுடைய உடல் சிக்கென்று இருந்தது. அவன் வெகு சுலபமாக நடந்து கொண்டிருந்தான்.

“நீங்க கௌசானிக்கு வருவது இதுதான் முதல் முறையா?”

“ஆமாம். உத்தராகண்டுக்கே இது தான் முதல் முறை. நீ எவ்வளவு நாட்களாக கைடு வேலை செய்கிறாய்?”

“ஐந்து. நீங்க ஏன் தனியாக  வந்திருக்கிறீர்கள்? உங்கள் கணவர் வரவில்லையா?”

“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை”

“உங்க போல அழகான பெண்ணுக்கு இன்னுமா கல்யாணம் ஆகவில்லை. நம்ப முடியலை”

எல்லோரும் அடிக்கடி கல்யாணப் பேச்சு எடுப்பதால், அவளுக்கு இதைப் பற்றி பேசினாலே எரிச்சலாக இருந்தது. ஆனால் இப்பொழுது தரம் இவ்வளவு வெகுளியாக கேள்வி கேட்டதால், அவள் பதில் கூறினாள். “எனக்கு உலகைச் சுற்றிப் பார்க்க ஆசை. கல்யாணம் செய்து கொண்டால் அது நடக்காது. நான் கல்யாணம் வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.”

தரம் ஒன்றும் பேசவில்லை. இப்பொழுது அவர்கள் காட்டைக் கடந்துவிட்டு, புல்வெளி நிறைத்த இடத்துக்கு வந்திருந்தார்கள். காட்டை விட்டு வெளியே வந்ததும் குளிர் அதிகமானது போல் இருந்தது. பச்சைப் பசேல் என்றிருந்த வெளியை பார்த்து, “ஆஹா இந்த இடம் அற்புதமாக இருக்கிறது” என்றாள் வர்ஷா.

“காலையில் நன்றாக இருக்கும். இருட்டிவிட்டால் இங்கு சிறுத்தை நடமாட்டம் இருக்கும். எப்பொழுதாவது கரடியும் வரும்” என்றான் தரம்.

வர்ஷா இதைக் கேட்டவுடன் மகிழ்ச்சி அடைந்தாள். “இப்பொழுது கண்ணில் படுமா?”

தரம் சிரித்துவிட்டு, தன் இரு கைகளையும் உயர்த்தி, புலி போல் கர்ஜித்தான். “இந்த மிருகத்தைதான் நீங்கள் இங்கே பார்க்க முடியும்” என்றான். கள்ளம் கபடம் இல்லாத அந்த இளைஞனைப் பார்த்து வர்ஷா மறுபடியும் சிரித்தாள்.

அவர்கள் அந்த நடையின் கடைசி கட்டத்தை அடைந்து விட்டார்கள். இப்பொழுது கிட்டத்தட்ட செங்குத்தாக இருந்த ஒரு மலையை ஏற வேண்டும். தரம் சுலபமாக ஏறிக் கொண்டிருந்தான். வர்ஷாவுக்கு மூச்சிறைத்தது. நடந்து வந்ததால் உடல் சூடேறியிருந்தது. ஜாக்கெட்டின் ஜிப்பை கீழிறக்கினாள். குளிர் காற்று அவள் நெஞ்சில் அடித்தது.

இருவரும் அருவிக்கு வந்து சேர்ந்தார்கள். ருத்ரதாரி அருவி உயரத்திலிருந்து சன்னமாக வடிந்து கொண்டிருந்தது. அருவி விழும் இடத்தில் ஒரு குளம் உண்டாகியிருந்தது. தண்ணீரின் மேல் ஒரு பாலம். பாலத்திற்கு அப்புறத்தில் ஒரு கோவில்.

தரம் குளத்தை காட்டி, “இதில் குளிக்கிறீர்களா?” என்று கேட்டான்.

வர்ஷாவுக்கு உடம்பு சிலிர்த்தது. அதைக் கண்டு தரம் சிரித்தான். “பல பேர் குளித்திருக்கிறார்கள்”.

“அவர்கள் குளித்து விட்டுப் போகட்டும். நான் தண்ணீரில்  இறங்குவதாக இல்லை ”

பாலத்தைக் கடந்து கோவில் அருகில் வந்தார்கள். ஷூவை கழட்டி காலை கீழே வைத்த வர்ஷாவுக்கு மறுபடியும் ஷாக் அடித்தது போல் இருந்தது. “தரை எவ்வளவு சில்லென்று இருக்கிறது!” என்றாள்

ஒரே ஒரு அறை கொண்ட சிறிய கோவில். அறையில் ஒரு விக்ரஹமும், சுவற்றில் சில சாமி படங்களும் இருந்தன. ஒரு மூலையில் பாயும் கம்பளியும் பார்த்த வர்ஷா, “இங்கு யாராவது இருப்பார்களா?” என்று கேட்டாள்

“ஒரு ஸ்வாமிஜி இருப்பார். இப்பொழுது ரிஷிகேஷ் சென்றிருக்கிறார்”

“தனியாகவா இருப்பார்?”

“ஆமாம்”

“அவருக்கு குளிராதா? இரவில் காட்டுக்குள் இருப்பது அவருக்கு அச்சம்  தராதா?”

தரம் சிரித்தான். “அவர் இங்கே இருபது வருடங்களாக இருக்கிறார்”

கோவிலுக்கு வெளியே வந்து வர்ஷா ஒரு பாறை மேல் அமர்ந்தாள். நதி கீழே தெள்ளத் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது. சுற்றிலும் ஓங்கி உயர்ந்த மரங்களிலிருந்து பறவைகளின் சத்தம் அருவியின் இரைச்சலை மீறி கேட்டது. மெல்லிய குளிர்க் காற்று வீசியது. வர்ஷாவையும் தரமையும் தவிர அங்கு எவரும் இல்லை. அந்த ஏகாந்தமான வேளையில் என்றும் காணாத அமைதியை வர்ஷா அடைந்தாள். இடைவிடாது பேசிக்கொண்டே இருக்கும் தரம் இப்பொழுது வர்ஷாவின் மனதை அறிந்தவன் போல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தான்.

பதினைந்து நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்த வர்ஷா, வேண்டா வெறுப்பாக எழுந்து நடக்க ஆரம்பித்தாள். தரம் அவள் பின்னால் வந்தான். கீழே இறங்கி புல்வெளியை அடைந்தார்கள்.

“நீங்க எந்த ஊரு?” என்று தரம் கேட்டான்

“சென்னை”

“சென்னை?”

“மெட்ராஸ்”

“ஆ. மத்ராஸ்”

“ஆனால் நான் இப்போ தில்லியில் வேலை செய்கிறேன்”

அவர்கள் நதியை அடைந்தபோது, நதிக்கு நடுவில் இருந்த ஒரு பெரிய பாறையின் மேல் ஓர் இளைஞன் உட்கார்ந்திருப்பதை வர்ஷா பார்த்தாள். அவன் தரமை பார்த்து சிரித்தான். நதியைக் கடக்கும்பொழுது அவர்களுடன் சேர்ந்துக்கொண்டான்.

“இது என் நண்பன், ரோஹித். அவனும் ஒரு கைடு.”

“இன்று நீ யாரையும் கைடு செய்யவில்லையா” என்று வர்ஷா அவனைப்  பார்த்து கேட்டாள்.

“இல்லை மேடம். இது டூரிஸ்ட் சீஸன் இல்லை. ஒருவரோ இருவரோதான் வருவார்கள்”

நதியை கடந்து நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் செல்லும் பாதைக்கு பக்கத்தில் வழவழப்பான ஒரு பெரிய பாறை இருந்தது. தரம் அதைக் காட்டி கேட்டான், “உங்களால் இந்த பாறை மேலஏற முடியுமா?”

“இது மேல் எப்படி ஏற முடியும். இவ்வளவு வழவழப்பாக இருக்கிறது”

“நாங்கள் ஏறுவோம் பாருங்கள்,” என்று கூறிவிட்டு தரமும் ரோஹித்தும் வீதியில் நடப்பது அந்த பாறை மேல் ஏறினார்கள். தரம் வர்ஷாவைப் பார்த்து சிரித்தான். “இன்னும் பெரிய பெரிய பாறைகள் எல்லாம் ஏறுவோம்” என்றான்.

“உங்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. நீங்கள்  எல்லாம் இயற்கையோடு ஒன்றி வாழ்கிறீர்கள்”

அவர்கள் கிளம்பிய இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். “மேடம் ஒரு டீ குடிப்போம்,” என்றான் தரம். அந்த குளிருக்கு டீ இதமாக இருந்தது. தரமும் வர்ஷாவும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்திருக்க, ரோஹித் நின்றுகொண்டே டீ குடித்தான்.

அப்பொழுது வானம் சற்று வெளுத்திருந்தது. கிளம்பியபொழுது அப்பிக் கொண்டிருந்த இருள் இப்பொழுது இல்லை. தூரத்து மலைகள் இப்பொழுது தெளிவாக தெரிந்தன. விவரிக்க முடியாத வெளிச்சம் அந்த இடம் முழுவதும் பரவியிருந்தது.

வர்ஷா தரமை பார்த்து, “இப்போ மேகங்கள் அதிகம் இல்லை பார்,” என்றாள்

“மனிதர்களை போல் இயற்கையும் மாறிக்கொண்டேதான் இருக்கும்,” என்றான் தரம்.

“ஆனால் இயற்கை தன் சமநிலையை குலைத்துக் கொள்வதில்லை,” என்று ரோஹித் முடித்தான்.

பேசியது நானூறு ரூபாய் தான் என்றாலும் வர்ஷா தரமுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாள். “நீ நன்றாக வழி காட்டினாய். ஐநூறு ரூபாயை வைத்துக் கொள்”

“மேடம். எங்கள் இரண்டு பேருக்கும் ஒரு ஆசை. நாங்கள்  தில்லிக்கு வந்து வேலை பார்க்க வேண்டும். எங்களுக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று தரம் கேட்டான்.

“இந்த அழகான இடத்தை விட்டுவிட்டு எதற்கு  தில்லி வர நினைக்கிறீர்கள்? நல்ல காற்று, சுத்தமான தண்ணீரை விட்டுவிட்டு எப்போதும் புகை மண்டலம் சூழ்ந்திருக்கின்ற தில்லிக்கு எதற்கு  போகவேண்டும்?”

“வாழ்க்கைக்கு காற்றும் தண்ணீரும் மட்டும் போதாது இல்லையா மேடம். எங்களுக்கு வருவாய் மிகவும் குறைவு. டூரிஸ்ட் சீஸன்போது ஏதோ கொஞ்சம் பணம் வரும். இல்லை என்றால் பெரிதாக ஒன்றும் வராது. எங்கள் தோட்டத்தில் சில காய்கறிகள் விளையும். மற்றபடி இந்த சம்பாத்தியத்தில்தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். தில்லிக்கு வந்தால் மாதா மாதம் சம்பளம் கிடைக்கும். இங்க கிடைப்பதை விட அதிகமாக கிடைக்கும். வாழ்க்கையை ஒரு அளவுக்கு நல்லபடியாக ஓட்டலாம்”

“இவ்வளவு நாள் ஏன் முயற்சி செய்யவில்லை?”

“ஆறு மாதம் முன்னாடிதான் கலியாணம் ஆனது மேடம். மனைவி வந்த பிறகு பொறுப்பு அதிகரித்து விட்டது. உங்களால் உதவி செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும்.”

“சரி. உங்க நம்பர் கொடுங்கள். ஏதாவது வேலை இருந்தால் சொல்கிறேன்.”

வர்ஷா தில்லிக்கு திரும்பிய இரண்டு மாதங்களுக்கு பிறகு, தரமுக்கு அவளிடமிருந்து அழைப்பு வந்தது. “தரம், இங்க புதுசா ஆரம்பிக்கற ஒரு கம்பெனிக்கு அட்மின் அசிஸ்டண்ட்கள் வேண்டுமாம். நீயும் ரோஹித்தும் கிளம்பி வாருங்கள்.”

 

ர்ஷாவின் சிபாரிசு பேரில் இருவரும் டில்லியில் வேலைக்கு சேர்ந்தார்கள். முதல் மாத சம்பளம் வந்தவுடன் இருவரும் இனிப்பு வகைகளை வாங்கிக்கொண்டு வந்து வர்ஷாவுக்கு கொடுத்தார்கள். ஆறு மாதம் கழித்து வர்ஷா வேலை மாறி பெங்களூருக்கு வந்தாள். அதற்கு பிறகு இரண்டு வருடங்களுக்கு அவள் தரமிடம் தொடர்பில் இல்லை.

டிசம்பர் மாதத்தில் மறுபடியும் கௌசானிக்குச் செல்ல வர்ஷா முடிவெடுத்தாள். அவள் அங்கு சென்று கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. டில்லிக்கு சென்று, அங்கிருந்த சதாப்தி பிடித்து காத்கோடாம் வந்தடைந்து, காரில் நைனிதால் சென்று, அங்கு ஒரு நாள் தங்கிவிட்டு, அடுத்த நாள் ஜோகேஷ்வரில் கோவில்களை பார்த்த பின்பு, அல்மோரா வழியாக கௌசானி வந்து சேர்ந்தாள். அன்று மாலை பனிமலைத் தொடர்களை மறையும் சூரியனின் சிவப்பு வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. நந்தா தேவி, திரிஷுல், நந்தா கோட் மலைகள் தெளிவாக தெரிந்தன. தூரத்தில் பஞ்சசூலி மாலையும் தெரிந்தது. பத்து நிமிடங்களுக்கு வர்ஷா அவற்றை வாய் திறந்து ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த அழகையும் குளிரையும் காமிராவில் கொண்டுவர முடியாது என்று அவளுக்கு நன்றாகவே  தெரிந்திருந்தும் தன் காமிராவில் படங்களை எடுத்துத் தள்ளினாள்.

காலை சிற்றுண்டி ரிசார்டில் திறந்த வெளியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். மேகமூட்டமாக இருந்ததால் தூரத்து மலைகள் தெரியவில்லை. டிசம்பர் மாத குளிர் உடம்புக்குள் ஊடுருவி சென்றது. இருந்தாலும் திறந்த வெளியிலேயே சாப்பிடுகிறேன் என்று வர்ஷா சொன்னதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயற்கையின் அழைகை ரசித்துக்கொண்டே, ஆலூ பரோட்டாவை ருசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு இளம் பெண் வர்ஷாவைத் தேடி வந்தாள்.

அவள் நீல நிற சுடிதார் மேல் சிவப்பு ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். வர்ஷாவைப் போல் அவள் தலையில் குரங்கு குல்லா அணிந்திருக்கவில்லை. அந்த ஊர் மக்கள் போல் அவளும் சிவப்பாக இருந்தாள். அழகான தோற்றமுடைய அவள், “நீங்கள்தான் வர்ஷா மேடமா?” என்று கேட்டாள்.

“ஆம்”

“உங்களுக்கு ரோஹித் ஞாபகம் இருக்கா?”

வர்ஷா யோசித்தாள்.

“தரமின் நண்பன். அவர்கள் இருவருக்கும் நீங்கள்தான் டில்லியில் வேலை வாங்கி கொடுத்தீர்கள்”

“ஓஹோ. ரோஹித். ஞாபகம் இருக்கிறது. நீங்கள்?”

“நான் ரோஹித்தின் மனைவி.”

“ரோஹித் எப்படி இருக்கிறான்?”

“இப்போது அவர் டில்லியில் இல்லை. திரும்பி கௌசானிக்கே வந்துவிட்டார்”

“ஏன்?”

“அதைப் பற்றிதான் பேசவேண்டும்”

சாப்பிட்டு முடித்த வர்ஷா, கையை துடைத்துக்கொண்டு, கிளொஸை மாட்டிக் கொண்டாள்.

“உங்க பேர் சொல்லவில்லையே?”

“என் பேர் ரேணு”

சூரியன் மேகங்களுக்கு நடுவிலிருந்து எட்டிப் பார்த்தான். மெல்லிய ஒளி புல்தரையின் மேல் பரவியது.

“ரோஹித் ஏன் தில்லியை விட்டு வந்தான்?”

“போகும்போது மகிழ்ச்சியாகதான் போனான். ஒரு ஆறு மாதத்தில் என்னை டில்லிக்கு அழைத்துக் கொள்கிறேன்  என்று சொல்விலிட்டுப் போனான். ஆனால் ஆறு மாதத்தில் அவனே திரும்பி வந்துவிட்டான். நான் எதற்கு  இப்படி செய்கிறாய் என்று  கேட்டேன். நகரம் மனிதனை மிகவம் மாற்றி விடுகிறது. எனக்கு இந்த கைடு வேலையே போதும் என்று சொன்னான். நான் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தேன். ஆனால் மறுபடியும் டில்லிக்கு போகமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறான். நான் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துவிட்டேன். ஆனா அவன் இனி போவான் என்று எனக்கு தோன்றவில்லை.”

“மனிதர்கள் எப்படி மாறுகிறார்களாம்?”

“ரோஹித்தும் தரமும் ஒரே கம்பெனியில்தான் இருந்தார்கள். தரம் ஏதோ லஞ்சம் வாங்குகிறான் என்று சொன்னார்கள். ரோஹித் லஞ்சம் வாங்காமல் வேலை பார்த்தான். ஆனா அவன் மேலதிகாரிக்கு அது பிடிக்கவில்லை. அந்த அதிகாரியும் லஞ்சம் வாங்குபவர். அவனும் உத்தராகண்ட் ஆள்தான். அவன் ரோஹித்தை அவமானப்படுத்த ஆரம்பித்தான். ரோஹித் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டான்.”

இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். வர்ஷா முகம் சில்லென்றாவதை உணர்ந்தாள்.

ரேணு தொடர்ந்தாள், “இப்போ தரமை பாருங்கள். அவன் தன் வீட்டுக்கு மேல் மாடி கட்டிவிட்டான். புதிய நிலம் வாங்கியிருக்கிறான். மனைவியையும் மகனையும் டில்லிக்கு அழைத்துக் கொண்டு  போய் விட்டான். அவன் குழந்தை நல்ல பள்ளிக்கூடத்தில் படிப்பான். அவன் நல்ல படிப்பு படித்து நல்ல வேலைக்கு போவான். என்  பையன் கவர்ன்மெண்ட் ஸ்கூலில் படித்து  ஏதோ டிரைவராகவோ கைடாகவோ போவான். எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று நான் பார்க்கிறேன். ரோஹித் என் பேச்சையே கேட்க மாட்டேன் என்கிறான். நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்து அவனோடு பேசுங்கள். இது பற்றியெல்லாம் புரிய வையுங்கள். நீங்கள்  சொன்னால் அவன் கேட்பான்.”

வர்ஷாவுக்கு வேறொருவர் குடும்ப விஷயத்தில் தலையிடுவதில் ஆர்வம் இல்லை. ஆனால் ரேணு சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்தாள். “இன்றைக்கு அவன் எங்கே இருப்பான்?”

“நீங்கள் காலையில் ருத்ரதாரி அருவிக்கு போகிற இடத்தில்தான் இருப்பான்”

“சரி. நான் பேசுகிறேன்”

“ரொம்ப நன்றி மேடம்.”

“டீ குடித்துவிட்டுப் போ”

இருவரும் டீ அருந்திய பின், ரேணு விடைபெற்றுக் கொண்டாள்.

வர்ஷா இப்பொழுது மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். அட்மின், பர்சேஸ் போன்ற பிரிவுகளில் லஞ்சம் வாங்குவது சகஜம் என்று அவளுக்கு தெரியும். ரோஹித்துக்கு இது போன்ற ஒரு பிரிவில்தான் வேலை கிடைக்கும் வாய்ப்பிருந்தது. ரோஹித்தை நிர்பந்தப்படுத்துவது சரியில்லை என்று வர்ஷா நினைத்தாள். அதே சமயம் ரேணுவின் கோரிக்கை தவறில்லை என்றும் அவளுக்கு பட்டது. சரி, ரோஹித்துடன் பேசி பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு ருத்ரதாரி அருவியை நோக்கி சென்றாள்.

ரோஹித் டீக்கடையில் கடைக்காரனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். “ஹாய் ரோஹித்” என்ற சொன்ன வர்ஷாவை திரும்பிப் பார்த்த அவன், ஒரு வினாடி இது யார் என்று தெரியாமல் முழித்தான். பிறகு, “அரே மேடம். நமஸ்தே” என்றான். “எங்கே? ருத்ரதாரிக்கா?”

“இல்லை. உன்னுடன் பேச வந்தேன்”

ரோஹித், “ஒரு டீ சொல்லுங்கள், பேசலாம்”

வர்ஷா டீ கோப்பையை வாங்கிக் கொண்டாள். அவளுக்கு அறிவுரை சொல்லி பழக்கமில்லை. எப்படி இந்த பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவித்தாள்.

சூரியன் பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டிருந்தான். மலைகள் எல்லாம் பச்சை பசேலென்று இருந்தன. வெகு தொலைவில் உள்ள மலைகளும் தெளிவாக தெரிந்தன. வானத்தின் ஒரு பகுதியில் கருமேகங்கள் இருந்தாலும் இன்னொரு பகுதி மேகங்கள் இல்லாமல் இருந்தது. ஒரு மலையில் சன்னமான அருவி உருவாகிக் கொண்டிருப்பதை வர்ஷா பார்த்தாள். தூரத்தில் காரொன்று வளைத்து நெளியும் மலைப்பாதையில் சென்றுக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு மனையிலிருந்து வெள்ளைப் புகை வந்து கொண்டிருந்தது. எல்லாவற்றையும் தன் கண்கள் வழியாக வர்ஷா மனதினுள் வாங்கிக் கொண்டிருந்தாள்.

மெதுவாக காட்சி மாறியது. கருமேகங்கள் சூரியனை சூழ்ந்துகொண்டன. வெளிச்சம் மறைய தொடங்கியது. மலைகளில் நிறம் மெதுவாக கரும்பச்சையாக மாறியது. தூரத்திலிருந்த மலைகள் மறைந்தன. மெல்லிய சாரல் அடிக்க ஆரம்பித்தது. காட்சி முழுவதும் மாறிவிட்டிருந்ததை பார்த்த வர்ஷா ரோஹித்திடம், “இயற்கை எப்படி மாறுகிறது பார். மாறுவதுதான் இயற்கையின் நியதி போல்” என்றாள். ரோஹித் பதில் ஏதும் சொல்லாமல் டீ அருந்திக்கொண்டிருந்தான்.

வர்ஷா பேசி முடித்த சில வினாடிகளிலேயே காட்சி மறுபடியும் மாறியது. கரு மேகங்களை காற்று செலுத்திச் செல்ல, மறுபடியும் சூரிய வெளிச்சம் எங்கும் பரவியது. மழைச்சாரல் நின்றது. எல்லா மலைகளும் மறுபடியும் தெள்ளத் தெளிவாக தெரிய ஆரம்பித்தன. எல்லாம் பழைய  நிலைக்கே திரும்பியிருந்தன.

ரோஹித் வர்ஷாவைப் பார்த்தான், ஆனால் எதுவும் பேசவில்லை. இருவரும் மௌனமாக டீ அருந்த ஆரம்பித்தார்கள்.

 

 

 

 

 

 

 

 

வான்நீலம்

ஆதித்ய ஸ்ரீநிவாஸ்

ராகவ் குண்டக்கல் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தான். இங்கிருந்து பெல்லாரி செல்ல வேண்டும். பெல்லாரியிலிருந்து ஜின்டால் ஸ்டீல் செல்ல வேண்டும். அங்கு வேலைக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. முதல் முறை தமிழ்நாடு தாண்டி ஒரு நிலம். புதிய பாஷை. தெலுங்கு கன்னடம் இரண்டும் பேசப்பட்டது குன்டக்கல்லில். பெல்லாரியிலும் அப்படித்தான் என மாமா சொல்லியிருக்கிறார்.

இயல்பாக ஒரு பதற்றம் பரவியிருந்தது. முதுகில் ஒரு பை கையில் ஒரு பெரிய பை. பையை இறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். ப்ளாட்பாரத்தில் விற்றுச் செல்பவர்களிடம் வாங்கி சாப்பிடலாமா அல்லது ஹோட்டலில் சாப்பிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கையில் ரயில் நிலைய அறிவிப்பு ஒலித்தது. எம்மொழி என்று சொல்ல இயலவில்லை. பெல்லாரிக்கான ரயில் இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என டிக்கெட் கவுன்டரில் கேட்டு அறிந்திருந்தான். பையை இறுக்கியது போதுமென மெல்ல தளர்த்திக் கொண்டான். இயல்பாக அமர முயன்றான். அம்மாவின் முகம் அக்காவின் முகம் தங்கையின் முகம் என முகங்களாக வந்தன. அப்பாவின் முகமும். அந்த மெக்கானிக் யூனிபார்ம் – சாம்பல் நிறத்தில் சற்றே அழுக்கு படிந்த உடையுடன் நினைவுக்கு வந்தார். வெற்றிலைச் சிவப்பு வாயுடன்.

பாக்கெட்டில் செல்போன் அதிர்ந்தது. எடுத்து ப்ரௌஸரை திறந்தான். “Africa a land of varied climate from rainforests to deserts. The land of great game” எனும் வரிகளைப் பார்த்தான். மழைக்காடுகளிலிருந்து பாலைவனம் வரை -ஆம் மழையில் செழிக்கும் மண்ணிலிருந்து ஆண்டுகளுக்கு நீர் அறியாத மண். கேலரியைத் திறந்தான். மொத்தம் ஐநூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருப்பதாகக் காட்டியது எண்ணிக்கை. நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பிக்கள், அம்மா அக்காவுடன் வண்டலூர் சென்றபோது எடுத்துக்கொண்டவை, தங்கை புத்தகத்தின் மீது தலை தாழ்த்தி படிக்கும் நிலையில் தூங்கும் படம், கமலா அத்தை சப்தமாக சிரிப்பது பதிவாகியிருந்தது, அம்மா காலை நேரப் பதற்றத்துடன் மூக்குக்குக் கீழ் வியர்வை அரும்பியிருக்க தோசை வார்க்கும் படம், அக்கா தன் புது நீல நிறச் சுடியில் ஒற்றைக் காலை மடித்து பின்புறமாக சுவரில் ஊன்றிக்கொண்டு கைக்கட்டி எங்கோ பார்த்துக்கொண்டு கொடுத்த போஸ், தன் முகத்தில் அரும்பிய பருக்களை இவன் எடுத்து வைத்திருந்த போட்டோக்கள், செல்வி சித்தியின் கல்யாண படங்கள் கொத்தாக மஞ்சள் நிற விழாவின் குதூகல ஒளியில் வரிசையாக இருந்தன. நண்பர்களுடன் சினிமா தியேட்டரில் எடுத்துக்கொண்ட செல்பிக்கள், அப்பா கொக்கியில் தொங்கும் தன் யூனிபார்மை எடுக்கும் படம், பின் வந்தது அவளின் ஒரு போட்டோ. அவள் நடக்கும் போது யாருமறியாமல் க்ளிக் செய்த போட்டோ. வான்நீல சுடிதார் வெள்ளை நிற ஷால், வெள்ளை மணிக்கட்டில் கருப்பு நிற வாட்ச், டயல் உள்முகமாகக் கட்டப்பட்டிருக்கும். அப்புகைப்படத்தில் பெரம்பூர் ரயில் நிலையம் எனும் வார்த்தைகளும் இருந்தன. ப்ளாட்ஃபாரத்தின் துவக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள் நிற அறிவிப்புப் பலகையல்ல. ப்ளாட்பார்ம் கூரையை தாங்கி நிற்கும் இரும்பு பில்லர்களில் வைக்கப்பட்டிருக்கும் சிறு வெள்ளை நிறப் பலகையில் இருக்கும் அடர் நீல நிற எழுத்துக்கள். அவள் பார்வை சற்று தாழ்ந்து தரையைப் பார்த்திருக்கும் படம்.

அன்று காலை உணவை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்திருந்தான். அம்முவை பள்ளியில் ட்ராப் செய்யவும் முடியாது என மறுத்துவிட்டிருந்தான். “அக்கா, சும்மதான இருக்க, பொழுதனைக்கும் யு ட்யூப் ஷார்ட்ஸ் பாத்துட்டு இருக்கதுக்கு அவள போய் ட்ராப் பண்ணேன்” என்று விட்டு வேகவேகமாக நடந்தான், புன்னகைத்தபடி. தான் எப்பொழுதுமே புன்னகைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கவும் மேலும் புன்னகை, வெட்கத்துடன். பால ஆஞ்சநேயர் ஆலயம் கடந்து வில்லிவாகம் ரயில் நிலையம். அப்பா கண்டிப்பாகச் சொல்வதுண்டு, “எதுக்கு வேலமெனக்கிட்டி படி கட்டி வெச்சிருக்கான். அதவுட்டு கொரங்கு மாறி தண்டவாளத்த தாண்டினுருக்கது” என்பார். “உடம்புல பெலம் இருக்கணும். ரென்டு படி ஏறலன்னா நீ என்னத்த கீக்க போற லைப்புல.” ஓட்டமாக ஏறினான். படியில் ஏறி ஓடிக்கொண்டிருக்கையில் அவனுக்கு நேர் கீழே ரயிலும் வந்துவிட்டது. ஏறவும்தான் தாமதம். சிறு ஆட்டத்துடன் சீராகக் கிளம்பியது மின்சார ரயில்.

மஞ்சள் நிறச் சுடிதார் மஞ்சள் லெக்கின்ஸ் கழுத்தில் மெல்லிதான மிக மெல்லிதான சற்று மெலிந்தால் சிலந்தி நூலிழை எனும் அளவிற்கு மெல்லிய ஒரு தங்க செயின். கையில் உள்முகமாகக் கட்டிய கருப்பு வாட்ச். அன்று அவனுக்கு வாழ்வில் முதல் முறையாகத் தோன்றியது, “என் மாலை வானம் இவள்” என்று.

எம் ஸி ஸியில் படித்தாள் அவள். தாம்பரத்தில் எம் ஸ் ஸி எதிரில் இருக்கும் பஸ் நிலையத்திலேயே ஒரு நாளைக் கழிக்க முடிந்தது அவள் எதிரில் இருக்கும் கல்லூரியின் எண்ணற்ற பழைய கட்டிடங்களில் ஏதோ ஒன்றில் அமர்ந்திருக்கிறாள் எனும் நினைப்பொன்றுடன். பின் தினமும் பெரம்பூரிலிருந்து சென்ட்ரல் செல்லும் தூரம்தான் அவனை மலர்களை விரும்பச் செய்தது. சிரிக்கும் வெட்கத்துடன், “நான் ஒரு மலர்க்காடா மாறிட்டேன்” என டைரியில் எழுதி வைத்தான். வாழ்வில் இரண்டாவது முறையாக இப்படித் தோன்றியது.

அன்று பெரம்பூரில் சற்று கூட்டம் அதிகம். மழை வேறு, அக்டோபர் பாதி கடந்து கொண்டிருந்தது. ரயில் நிற்கும் முன்னமே அவளைக் கண்டு கொள்ளும் இவன் கண்கள் வெகு நேரம் கூட்டத்தைத் துழாவின. அங்கங்கு ரெயின் கோட்டுகளும் குடைகளும். அவள் இல்லை. ஏறிவிட்டாளா? இல்லை என உறுதியாகத் தோன்றியது. அந்த ரயிலில் அவள் இல்லை என்பதை அவ்வளவு உறுதியாய் உணர்ந்தான். ரயில் கிளம்பும் நேரம் ரயில் விட்டு இறங்கிவிட்டான். மரத்தைச் சுற்றி அமைந்த கல் இருக்கையில் அமர்ந்துகொண்டு அவள் வழக்கமாக வரும் திசையை பார்த்துக் கொண்டிருந்தான். வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு பெண் வந்தாள், ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் ஒரு பெண். ஆனால் அவள் இல்லை. திடீரெனத் தோன்றியது, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என.

ஆறு மாதமாக ஒரு பெண்ணை காதலிக்கிறான். ஒரு முறை கூட பேசியது கிடையாது. பார்க்க சக வயதினளாக தெரிகிறாளே ஒழிய மூத்த பெண்ணாகக் கூட இருக்கலாம். ஒருநாள் அவள் தோழி அழைத்ததை வைத்துதான் பெயரை அறிந்துகொண்டான்.வர்ஷா அவள் பெயர். மழை என்று அர்த்தம். அதை அறிந்த நாள், “என் மழை, அவள் என் மழை, வான் அவள், என் மழைக் காடு,” என எழுதி வைத்தான். ஆனால் இப்போது ஒரு கேள்வி எழுந்தது. நான் என்ற ஒருவனின் இருப்பை அவள் அறிவாளா? கண்டிப்பாக அறிவாள் எனத் தோன்றியது. அவளால் என் உலகம் தலை கீழாக திரும்பும் போது ஒரு சிற்றலை கூடவா அவள் ஏரியில் எழுந்திருக்காது. கண்டிப்பாக அவள் என்னை அறிவாள். ஒரு நாளை ஒரு வாரத்தை ஒரு மாதத்தை அவளால் நிரப்பிக்கொண்டிருக்கையில் ஒரு க்ஷணமாவது அவள்…. இல்லை அவள் என்னை நிறைக்கும் அளவிற்கே நானும் அவளை நிறைக்கிறேன். ஆனால் அவள் அதை இன்னும் அறியவில்லை. சிறு மேடுதான், ஏறினால் அப்பக்கம் பெருங்கடலொன்று. வெறும் வார்த்தைகளும் ஸ்தூலமுமான விஷயங்களால் மட்டுமானதல்ல உலகம். “World is not just physical” என எண்ணிக்கொண்டான். அப்பொழுது வந்தாள். நீல நிறச் சுடியில் வெள்ளை நிற ஷாலுடன். பார்த்துக்கொண்டே இருந்தான். அவனைக் கடக்கையில் அவளும் பார்த்தாள். மெல்லிய புன்னகையொன்று.

உடலுக்குள் ஒரு சூடான பெருங்குமிழி வெடித்தது போல் இருந்தது. முகத்திலெல்லாம் ரத்தம் வேகமெடுப்பதை உணர்ந்தான். அசையாமல் அமர்ந்துவிட்டான். கையில் குடையுடன் சற்று தள்ளிதான் நின்றாள். என்ன மணம்? மூக்கை நன்றாக இழுத்தான். “மழைவாசம் அவளுடையது,” எனத் தோன்றியது. சிரித்துவிட்டாள். உண்மையில் சிரித்தாளா என மனம் துழாவிய போது, அவ்வளவு உறுதியாக அவள் ரயிலில் இல்லையென்று அறிவித்த ஒன்று உறுதியாகச் சொன்னது, அவள் அவன் கண்கோத்து புன்னகைத்ததை. வழக்கமாக கடந்த ஆறு மாதமாக அவனுள் ஓயாமல் இருக்கும் ஒரு மகிழ்ச்சி வெடித்துச் சிதறியது. சிரித்தான் வாய்விட்டு. ஓட வேண்டும் போலிருந்தது. flash ஓடுவானே அவனைபோல். க்ஷணத்தில் முழு சென்னையையும் ஏன் பாண்டிச்சேரி வரை ஏன் கன்னியாகுமரி வரை ஓடவேண்டும் போலிருந்தது. மழைத் தூறல் வலுத்தது. எல்லோரும் ப்ளாட்ஃபாரத்தின் கீழ் ஒதுங்கினர். அவள் மரத்தடியில் ஒதுங்கிக்கொண்டாள், அவனருகில்.

அன்று மாலைதான் அப்புகைப்படம் எடுக்கப்பட்டது. அன்று முழுவதும் சென்னையின் மழையில் எம் ஸி ஸி எதிரில் அமர்ந்திருந்தான். பின் அவளுடனேயே திரும்பினான். ஆனால் பேசக்கூடவில்லை. பெரம்பூரில் இறங்கினாள் அவள். மின்சார ரயிலில் வாயிலோரம் நின்றபடி கிளிக் செய்தான். க்ளிக் செய்யவும் லோ பாட்டரியில் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகவும் சரியாக இருந்தது. பெரம்பூரில் வானத்தில் ஏறி மழைமேகங்களூடே பயணித்து வில்லிவாக்கத்தில் தரை இறங்கியது ரயில். மழை பொருட்டின்றி வீடு நோக்கி நடந்தான். மீண்டும் அந்த பால ஆஞ்சநேயர் ஆலயம். வீட்டிற்கு போனதும் சார்ஜ் போட்டு அந்த போட்டோவைப் பார்க்க வேண்டும். “என் வாழ்வின் மழைக்காலம் பெரம்பூர் ரயில் நிலையத்தில் வீழ்ந்த சிறு துளிகளாலானது,” என எழுதவேண்டும்.

வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டில் கமலா அத்தையிடம் கேட்டான். அவள் அழுதபடி விஷயத்தைச் சொன்னாள். “அப்பா வேல பாக்குற எடத்துலேந்து போன் வந்ததுப்பா.. நெஞ்சு வலியாம்… உனக்கு யாரும் ஃபோன் பண்ணலயா,” என்றாள். போனைக் கொஞ்சம் போல சார்ஜ் செய்து அவன் அக்காவிற்கு அடித்தான். மழையோடு மழையாக எக்மோரில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு விரைந்தான். அப்பா இறந்து விட்ட செய்திதான் அவனுக்குக் காத்திருந்தது. எதுவும் புரியாத நிலை. அம்மா கொஞ்சம் நகையைக் கொடுத்து பேங்கில் வைத்து பணம் வாங்கி வரும்படிச் சொன்னாள். மாமா இன்னும் வரவில்லை. வந்திருந்தால் அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். மீண்டும் மழையோடு மழையாக பாங்கிற்கு விரைந்தான். “கோல்ட் மேல லோன் வேணும் ஸார்” என்றான், கவுன்ட்டரில் இருப்பவரிடம். அவர் மற்றோரு கவுன்ட்டரைக் காட்டினார். அங்கு யாருமில்லை. வருவார் என்றார்கள். எப்போது என சொல்லப்படவில்லை. இருபது நிமிடம் கழித்து வந்தார். பாஸ்புக் கேட்டார். தன்னிடம் பாஸ்புக் இல்லை என்றான். அக்கவுண்ட் நம்பர்?. அதுவும் இல்லை. சிரித்தபடி எப்படி லோன் கொடுப்பது என்றார். ‘கோல்ட் வெச்சுகிட்டு தர முடியாதா?’ என்றான். “ஸேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்கணும், ஒண்ணு ஓப்பன் பண்ணிக்கப்பா’ என்றார். ‘ஆதார் கார்ட் பான் கார்ட் ரெண்டு போட்டோ’ என்றார். எல்லாம் வீட்டிலிருந்தது. தொடர்ந்து ‘அக்கவுண்ட் ஆக்டிவேட் ஆக ஒரு நாள் வேணும். க்ளொஸிங் டைம் நெருங்கிருச்சு. அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிட்டுப் போங்க நாளைக்கு காலையிலேயே லோன் எடுத்துக்கலாம், என்றார். ‘இல்ல இப்பவே வேணும் ஸார் ப்ளீஸ்’ என்றான். அவர் கோபமாவது தெரிந்தது. ‘அப்போ பேமிலில யாருக்காவது இங்க ஸேவிங்ஸ் அக்கவுன்ட் இருக்கா?’ என்றார். அக்காவிற்கு போன் அடித்தான். எந்த கிளையில் இருக்கிறாய் எனக் கேட்டு அங்கு வந்தாள். அவளுக்கு அக்கவுண்ட் இருந்தது. நகைக் கடன் தாமதமானது. அன்றைய மழை மேலும் தாமதமாக்கியது விஷயங்களை. மற்றதெல்லாம் படு வேகமாக நடந்தேறியது. ராகவை ஜின்டால் ஸ்டீல்ஸுக்கு வேலைக்கு அனுப்புவது வரை.

அவனுக்கு மழைநிலத்திலிருந்து தன் வாழ்வு எவ்வளவு வேகமாக பாலைக்கு பயணித்தது என்பதை நினைக்க ஆச்சரியமாய் இருந்தது. அக்காவிற்கு கருணை அடிப்படையில் அப்பாவின் பணி கிடைக்க ஏற்பாடு செய்தார்கள். அக்கா டிகிரி முடித்திருந்தாள். இவன் டிப்ளமோ முடித்து மூன்றாண்டுகள் பணியிலிருந்துவிட்டு அப்போதுதான் பொறியியல் சேர்ந்திருந்தான். அக்காவின் வரன் பார்க்கும் படலம் காலவரையறையற்று ஒத்திப்போடப்பட்டது. நல்ல சம்பளம் எனச் சொல்லப்பட்டு மாமாவின் வழி ஒரு சிபாரிசின் பேரில் அவனுக்கும் ஜின்டால் வேலை உறுதியானது.

குன்டக்கல் ரயில் நிலையம் அமைதியாய் கிடந்தது. பகல் பதினொன்று மணி. சஞ்சாரமில்லாமல் கிடந்த நிலையத்தில் நாயொன்று ஒவ்வொரு இருக்கையாக முகர்ந்தபடி ஓடிக்கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு ரயில் வருவது மங்கலாகத் தெரிந்தது. பின் சத்தம். எந்த அறிவுப்பும் இல்லையே? என யோசித்துக்கொண்டிருக்கையில் அந்த சரக்கு ரயில் சூர வேகத்தில் வருவதை உணர்ந்தான். ரயில் நிலையத்தின் மோனத்தை கத்தியால் கிழிப்பதுபோல் அலறியபடி கடந்தது. அதன் வேகத்தில் புழுதி கிளம்பிப் பறந்தது. தடக் தட்க் அதிர்வுக்கு கூரை இடியக்கூடும் எனும் வேகம். இவன் அமர்ந்திருந்த கல் இருக்கை அதிர்ந்தகொண்டிருந்தது. நாய் ஆனால் எதையும் சட்டை செய்யாமல் சற்று தள்ளி ஓடிக்கொண்டிருந்தது. கரி ஏற்றிச் செல்லும் ரயில் – ஒரு ஆம்புலன்ஸ் இவ்வளவு வேகமெடுப்பதில் சற்று நியாயம் இருப்பதாகத் தோன்றியது. ஒரு கரியேற்றிச் செல்லும் சரக்கு ரயிலுக்கு அசுர வேகம் ஏன்? சரக்கு ரயில் நீங்கிய பின்னும் வெகு நேரம் அது அங்கேயே இருப்பது போலிருந்தது.

பெல்லாரிக்கான ரயில் சரியாக பதினொன்று நாற்பதுக்கு வந்தது. எந்த அறிவுப்புமில்லை. எப்படியோ விசாரித்து அன்ரிஸர்வ்டில் ஏறி அமர்ந்துகொண்டான். குறைந்தது ஒரு மணி நேரத்தில் பெல்லாரி. ஒரு நிமிடம் கூட ஆகியிராது, கிளம்பியது ரயில். இருபக்கமும் பசுமை அருகிய காட்சிகள். பாறைகள். பாறைகளால் ஆன சிறு குன்றுகள். ஒரு குன்றின் மீது சிறு புள்ளிகளாக ஆடுகள் மேய்வது தெரிந்தது. அனல் ஏறிக் கொண்டே வந்தது. ஒரு பெருமூச்சுடன் போனை எடுத்தான். கேலரியை எடுத்து இரண்டு மூன்று ஸ்வைப்பில் வான் நீல சுடிதாரும் மேக வண்ண ஷாலுமிருக்கும் போட்டோவை எடுத்தான். குப்பைத்தொட்டி படமிட்டிருக்கும் டெலீட் ஆப்ஷனை ஒத்தினான். “Are you sure you want to delete this image?”

வெற்றி என்பது யாதெனில் -ஆங்கிலம், விகாஸ் பிரகாஷ் ஜோஷி, தமிழில் வைஜெயந்தி ராஜேந்திரன்

வைஜெயந்தி ராஜேந்திரன்

அவள் பெயர் பல்லவி. அவள் புனேவில் உள்ள செயின்ட் வின்சென்ட் உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கிறாள்.

அந்த வகுப்பில் படிக்கும் மற்ற எல்லா ஆண் பிள்ளைகளைப் போலவே நீரத்துக்கும் பல்லவி மேல் ஒரு ஈர்ப்பு. அவன் அவளை மிகவும் விரும்பினான்.

இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், அவளின் அழகிய கவர்ச்சிகரமான தோற்றம், நல்ல கட்டமைப்புடன் கூடிய உடல்வாகு, மென்மையான அவளின் தேகம், அழகிய புன்னகை இவையெல்லாம் யாரையும் அவளைப் பார்த்தவுடன் அவளிடம் நட்பு கொள்ளவே தூண்டும்.

நீரத் அவளை தூரத்திலிருந்தே ரசித்துக்கொண்டிருப்பான். அவன் பெண்களுடன் அவ்வளவு சீக்கிரத்தில் பேசிப்பழகக்கூடியவன் அல்ல. அதனால் பல்லவியை தூரத்திலிருந்து பார்த்து ரசிப்பதிலேயே திருப்தி அடைந்தான் அவன்.

பள்ளியில் ஆண்டுதோறும் நடக்கும் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மூன்று மாதங்களாக கடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான் நீரத். அவன், “இந்தப் போட்டியில் நான் வெற்றி பெற்றால், பல்லவி என்னுடையவளாகிவிடுவாள்” என்று அடிக்கடி தன் மனதுக்குள் சொல்லிக் கொள்வான்.

அவன் எதிர்பார்த்தது போலவே போட்டி நடைபெற்ற நாளன்று பல்லவி கூட்டத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்தாள்.

நீரத் சமீபத்தில் வெளியான ஹிந்திப் படத்திலிருந்து “தன்ஹா தில்” (தனிமையான இதயம்) என்ற ஹிட்டான பாடலான பாடலைப் பாடினான். அவன் பாடலைக்கேட்டு அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. அவன் மிக நன்றாக பாடினான் என்பது அந்த கைதட்டலில் இருந்து தெரிந்தது. பல்லவி பாரட்டிய விதம் நீரத்துக்கு மிகவும் பிடித்திருந்தது.

நிறைய பாடகர்கள் வந்து பாடிவிட்டுச் சென்றார்கள் ஆனால் அவர்களில் அன்று நீரத் மட்டுமே உண்மையில் நட்சத்திரமாய் ஜொலித்தான்.

இப்போது பத்தாம் வகுப்பைச் சேர்ந்த சுதிர் மிஸ்ரா, பாடப் போகிறான் என்ற அறிவிப்பு வந்தது. அவன் 10ஆம் வகுப்பின் மாணவர் தலைவன். ஆனால், சுதிர் முறையாக சங்கீதம் கற்றவன் அல்ல. இருந்தாலும், புதிதாக எதையாவது முயன்று பார்க்க வேண்டும் என்ற ஆவலில் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறான்.

சுதீர் பாட ஆரம்பித்தவுடன் நீரத் மற்றும் அவனது மற்ற நண்பர்கள் அனைவரும் பலத்த சத்தத்துடன் சிரிக்கத் ஆரம்பித்தனர்.

அவர்கள் “ஓ…!” “ஓ…l” என கூட்டலிட்டபடி அரங்கத்தில் எழுந்து நின்று கத்தத் தொடங்கினார்கள்.

சுதீர் பாடி முடித்ததும் மேடையை விட்டு அமைதியாக கீழே இறங்கினான்.

அனைவரும் எதிர்பார்த்தது போலவே நீரத் முதல் பரிசு பெற்றான். கோப்பையை பெற்றவுடன் நீரத்தின் கண்கள், கூட்டத்தில் பல்லவி எங்கே இருக்கிறாள் என ஆவலுடன் தேடியது. ஆனால், அவள் அங்கு இல்லை.

நீரத் ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வந்தான்.

ஓரிடத்தில் பல்லவி சுதீருடன் அமந்திருப்பதையும், அவள் சுதீருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருப்பதையும் பார்க்கிறான் நீரத்.

நீரத்தைப் பார்த்தவுடன் கோபமாக எழுந்து நின்றாள் பல்லவி.

ஏய் முட்டாள், ஏன் அவனை கேலி செய்தாய் என்று நீரத்தைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள் பல்லவி.

சுதிர் மௌனமாய் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தான்.

“சுதிர் ஒரு நல்ல பாடகரான இல்லாமல் இருக்கலாம், அவன் உன்னைப் போல் நன்றாக பாட முடியாதவனாய் இருக்கலாம். ஆனால், அதுவே அவனை கேலி செய்யும் உரிமையை உனக்குத் தராது என்பதை நீ புரிந்துகொள்ளவில்லையா?.

அவனுக்கு பாடத் தெரியாது என்றாலும் அவன் பாட முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காக போட்டியில் கலந்து கொண்டான். ஆனால் நீ எப்பொழுதாவது அது போல் முயற்சி செய்திருக்கிறாயா? நீ நடந்துகொண்ட விதத்தில் அவன் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை நீ கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தாயா ? என படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தாள் பல்லவி.

அமைதியாக அமர்ந்திருந்த சுதீருக்கு ஆறுதல் கூறுவது போல் அவன் தோளில் கை வைத்திருந்தாள் பல்லவி.

சில நொடிகள் அமைதியாக நின்றிருந்தான் நீரத். பிறகு தன் தவறை உணர்ந்தவனாய், “சுதிர், நாங்கள் செய்த தவறுக்கு மிகவும் வருந்துகிறோம். நாங்கள் அப்படி நடந்து கொண்டது தவறு தான் என்பதை ஒத்துக்கொள்கிறோம் என்றான் நீரத்.

சுதீர் பரவாயில்லை என்பது பல் தலையை மெதுவாக அசைத்து தனது கண்ணீரை அடக்கிக்கொண்டான்.

சிறிது நேரம் கழித்து, பல்லவியைப் பார்த்து “பல்லவி, வீட்டிற்கு போகலையா ?” என்றான் நீரத்
சிறிது நேரம் ஏதும் பதில் சொல்லாம் அமைதியாக இருந்தாள் பல்லவி.

பிறகு, சற்றே தயங்கிய குரலில், “என் வீடும் சுதீரின் வீட்டுக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது. சுதீர் அப்பா வந்ததும் நான் அவனுடன் சேர்ந்து சென்று கொள்கிறேன்” என்று ஒரு தீர்மானத்துடன் சொன்னாள் பல்லவி.

ஏதும் சொல்லாமல் திரும்பி தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான் நீரத். அவனுடைய கைகளில் இருந்த வெற்றிக்கோப்பை இப்போது அவனுக்கு மிக மலிவான இரும்பு கோப்பையாகக் கனத்தது.

இலக்கிய நண்பரும் லிட்ரரி எதிக்ஸும் – காலத்துகள் குறுங்கதை

‘ஏன்யா உன்கிட்ட பேச்சுவாக்குல ஒரு விஷயத்தை சொன்னா அதை அப்படியே கதையாக்கிடுவியா’ என்று உரத்த குரலில் கேட்டார் பெரியவர் முற்றுப்புள்ளி.

‘அப்டிலாம் இல்லை ..’

‘என்னய்யா இல்லை, கொஞ்சமாவது எதிக்ஸ் வேண்டாம்’

‘இலக்கியத்துக்கும் எதிக்ஸுக்கும் என்ன ஸார் சம்பந்தம்’

‘உனக்கும் லிட்ரச்சருக்கும் என்னய்யா சம்பந்தம், நீ கதை எழுதி என் கழுத்தை அறுக்கற. அதை எப்படியோ சகிச்சுகறேன், இப்ப இதை பண்ணி வெச்சிருக்க’

பெரியவரின் கோபத்தை பார்த்த போது, என் இலக்கிய வாழக்கைக்கு மட்டுமின்றி எனக்கே கூட முற்றுப்புள்ளி வைத்து விடுவார் என்று தோன்றியது. நான் எதிர்பார்த்தது தான். அதனால் தான்  எப்போதும் கதையை எழுதும் போதே பெரியவரிடம் அதை கொடுத்து படிக்கச் சொல்பவன், இந்த முறை பிரசுரமானதையே கூட கூறாமல் இருந்தேன்.

‘பப்ளிஷாகி ரெண்டு மாசமாச்சு, என்னை அப்பப்ப வந்து பார்க்கற, மெசேஜ் பண்ற, இதை மட்டும் சொல்லலை’   

பள்ளி காலத்தில் தன்னை விட வயதில் சிறிய மாணவனிடம் கைகலப்பில் ஈடுபட்டதையும், அதன்பின் அவனை பல வருடங்கள் கழித்து சந்தித்ததையும், அப்போது அவருக்கு ஏற்பட்ட உளச் சிக்கலையும் பெரியவர் ஒரு உரையாடலின் போது கூறியிருந்தார். வழக்கம் போல் புனைவிற்கான எந்த உருப்படியான கருவும் கிடைக்காமல், அப்படியே தோன்றுவதை எழுதி உடனேயே அழித்துக் கொண்டிருந்த எனக்கு இந்தச் சம்பவத்தை கதையாக மாற்றலாம் என்று அப்போதே முடிவு செய்தேன் ‘கலவி,வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு’ என்ற தலைப்பில் கதையை எழுதியிருந்தேன். அது பிரசுரமும் ஆகிவிட்டது. அதன் பின் பெரியவரை சந்திக்கும் போதெல்லாம் அந்தக் கதை குறித்து கூற எண்ணினாலும், பின் தவிர்த்து விடுவேன்.  சந்திப்பதை தவிர்த்து வந்தவன் இன்று

‘இல்லை ஸார், இதை நீங்க இவ்ளோ சீரியஸா எடுத்துப்பீங்கன்னு..’

oOo

‘ஏன்யா உன்கிட்ட பேச்சுவாக்குல ஒரு விஷயத்தை சொன்னா அதை அப்படியே உன் இஷ்டத்துக்கு மாத்தி எழுதுவியா’ என்று நான் எழுதியிருந்த கதையை படிக்க ஆரம்பித்த சில நொடிகளில் பெரியவர் முற்றுப்புள்ளி கேட்டார்.

‘என்ன ஸார்’

‘நான் ஸ்கூல் டேஸ்ல சண்டை போட்டேன்னு உன்கிட்ட சொன்னேன், ஆனா அதுக்கப்பறம் நான் அவனை பார்க்கவே இல்லையே. அது ரொம்ப சின்ன இன்சிடன்ட், அன்னிக்கு உன் கூட பேசிட்டிருந்தப்ப ஞாபகம் வந்தது, சொன்னேன். நீயா அவங்க இரண்டு பேரும் சந்திக்கறாங்கன்னும் அதனால கதைல வர ‘நான்’ மனசளவுல பாதிக்கப் படறேன்னு உன் அரை குறை சைகாலஜிகல் குப்பையை வேற கொட்டியிருக்க’

‘கதைல நீங்க வரலையே ஸார். இன்றைய காலகட்டத்தில் நடக்கற மாதிரி தான ஸார் இருக்கு, நீங்க சொல்ற இன்சிசென்ட் நடந்து அறுபது, எழுபது வருஷமாகியிருச்சே’

‘ஆனா நீ எதை பேஸ் பண்ணி எழுதியிருக்கேன்னு எனக்கு தெரியுமேயா’

‘அந்த பாத்திரம் உங்களைத் தான் குறிக்குதுன்னு யாருக்கும் தெரியாதே ஸார், நீங்க சண்டை போட்ட அந்தப் பையன் அந்தக் கதையை படிக்கப் போறானா என்ன’

‘ஸோ, நீ என்னை டீக்ரேட் செஞ்சிருப்பது சரின்னு சொல்ற’

‘உங்களை இழிவு படுத்தற மாதிரி எதுவுமில்லையே ஸார்’

‘என் கேரக்டரோட மனவோட்டம், நடந்துக்கற விதம் எல்லாமே அவனை எதிர்மறையா காட்டற மாதிரி தானே இருக்கு, மனதளவுல ரொம்ப பலவீனமானவனா, தாழ்வுணர்ச்சி கொண்டவனா தான் கதைல ‘நான் இருக்கேன்’

‘அப்படிலாம் இல்ல ஸார், நீங்க தானே நடந்ததை அப்படியே எழுதக் கூடாது, அது இலக்கியமாகாதுன்னு சொல்வீங்க, அதான் உங்க சண்டையை ஆரம்பப் புள்ளியா  வெச்சுகிட்டு கொஞ்சம் மாத்தி எழுதியிருக்கேன்.

‘நீ என்ன சப்பைக்கட்டு கட்டினாலும், கொஞ்சம் கூட எதிக்ஸ் இல்லாம, என்னைப் பற்றிய, நான் சொல்லிய விஷயத்தை என் கிட்ட சொல்லாம எழுதியது தப்பு தான்.

oOo

‘என்ன கண்றாவியா இது, உன் எழுத்தை படிக்க எப்பவுமே குழப்பமாத் தான் இருக்கும், ஆனா அந்த அளவுகோல் படி பார்த்தா கூட இது படு கேவலமா  இருக்கே’  என்று நான் எழுதியிருந்த கதையை படிக்க ஆரம்பித்த சில, பல நொடிகளில் பெரியவர் முற்றுப்புள்ளி கேட்டார்.

‘என்ன ஸார்’

‘உன் கதையை ஒரு தடவை படிக்கறதே கொடுமை, இதுல திருப்பி திருப்பி அதே விஷயம் வர மாதிரி, என்னை வேற கேரக்டரா வெச்சிருக்க, வாட் ஆர் யூ ட்ரையிங்.’

‘ப்ரேம் ஸ்டோரி கான்சப்ட் ட்ரை பண்ணியிருக்கேன் ஸார். ஆரம்பத்துல மெயின் கதை, அதுக்குள்ள இன்னொரு கதை, அந்த இரண்டாவது கதைக்குள்  இன்னொன்னு… அரேபியன் நைட்ஸ், டெகாமரான்லலாம் இப்படி வருமே, வாசகர்களுக்கு புது அனுபவம் தரலாமேன்னு தான்..’

‘டெர்ரிபிள். வழக்கம் போல நீ எதை படிச்சியோ அதை அறைகுறையா புரிஞ்சுகிட்டு வாந்தி எடுத்திருக்க, ப்ரேம் ஸ்டோரி யுத்தி பற்றி உனக்கு சுத்தமா புரியலைன்னு தெரியுது. அது கூட பரவாயில்லை. நான் என்னிக்கு உன்கிட்ட ஸ்கூல்டேஸ்ல சண்டை போட்டேன்னு சொல்லியிருக்கேன். நீ ஏதோ எழவு கதையை எழுதின சரி, அதை ஜஸ்டிபை செய்ய என் தலையை ஏன்யா உருட்டற?’

‘ரீஸன் இருக்கு ஸார். அக்டோபர்ல  ‘ஹூ இஸ் த பேட் ஆர்ட்  ப்ரெண்ட்’ அப்படின்னு இலக்கிய சர்ச்சை வந்துதே ஸார், ந்யுயார்க்கர் , வேற சில பத்திரிகைகள் அதைப் பற்றி நீண்ட கட்டுரைகள் கூட வெளியிட்டாங்களே. இரண்டு பேர், நண்பர்கள் அல்லது  பொதுவா அறிமுகமானவங்கனு வெச்சுக்கலாம், ஒருத்தர் ஒரு விஷயத்தை சொல்றார், அதை கேட்டுகிட்ட மற்றொருவர் அதை கதையாக்கிடறார், அந்த சம்பவத்தை சொன்னவர் இன்னொருவர் அதை கதையா எழுதினது தப்புன்னு சொல்றார்…’

‘ஹோல்ட் ஆன், ஒருத்தர் ஒரு சம்பவத்தை சொன்னார், இன்னொருத்தர் எழுதினார், முதல் ஆசாமி அப்படி செஞ்சது தப்புன்னு சொல்றார், இதை ஏன் ஜிலேபி சுத்தி சொல்ற, உனக்கு பேசறதே சரியா வர மாட்டேங்குது, அதான் எழுத்தும் அதே மாதிரியிருக்கு’

பெரியவர் கூறிய விதமும் ஜிலேபி தான், என்ன, அது அளவில் சிறியதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியதை நான் சொல்லவில்லை.

‘அத விடுங்க. இந்த விஷயத்துல இருக்கற லிட்ரரி எதிக்ஸ் சார்ந்த பிரச்சனை என்னை யோசிக்க வெச்சுது ஸார், அது தான் இந்தக் கதையை எழுதத் தூண்டியது. தவிர, எனக்கு இலக்கிய நட்புன்னு சொன்னா நீங்க மட்டும் தானே ஸார், அதனால தான் நீங்க ஒரு  சம்பவத்தை சொன்ன மாதிரியும், நான் அதை புனைவா மாற்றின மாதிரியும், அப்படி செஞ்சதுல உள்ள அறச் சிக்கல்கள் குறித்தும் புனைவாக்கினேன்’

‘உன்னோட யூஷுவல் செக்க்ஷுவல் ஆங்சைட்டி தேவையேயில்லாம கதைல இருக்கே, அதான் எனக்கு சந்தேகமா இருக்கு’

பெரியவர் நெருங்குகிறார். இந்தக் கதை எழுதியதற்கு நான் சொன்ன காரணம் பொய் இல்லையென்றாலும் அது மட்டுமே உண்மை  அல்ல. ‘கலவி,வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு’ கதையில் வரும் பாலியல் தொடர்பான உட்சலனங்கள் குறித்து ‘என்னடா சொந்த அனுபவமா’ என்று என் நண்பர்கள் கேட்டதற்கு  நான் இல்லையென்றும் சொன்னாலும் ‘உன் கதைல அப்பப்ப இந்த மாதிரி விஷயங்கள் வருதே, அதான் சந்தேகமா இருக்கு’ என்று தொடர்ந்து நச்சரித்ததால், கதையின் கரு, அதை சார்ந்து வரும் மற்ற எல்லாவற்றையும் முற்றுப்புள்ளி மீது சுமற்றி விடலாம் என்பதும் என்னுடைய எண்ணம். மேலும் இப்படி பெரியவரை ஏமாற்றுவதும், எதிக்ஸ் பற்றிய சர்ச்சையை மலினப் படுத்துவதாக புரிந்து கொள்ளப் படக் கூடிய இந்தக் கதையை எழுதுவதும், இலக்கிய அறம் என்று பேசிக்கொண்டே, அதை தெரிந்தே மீறுவதாக இருப்பதால், இந்தப் புனைவின் மீது ‘அபத்த’, ‘அவல நகைச்சுவை’ போன்ற வார்த்தைகளை போட்டுப் பார்த்து, அதற்கு இலக்கிய தகுதியை உருவாக்க முடியும்  என்பது என் யூகம்.

‘அப்படிலாம் எதுவுமில்லை ஸார். நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்

‘..’

‘புக்கா வரும் போது, இந்தக் கதையில் வேறொருவர் சம்பவத்தை சொன்ன மாதிரி மாற்றிடறேன்’

‘இதை புக்கா போட்ற ஆசைலாம் வேற இருக்கா’

‘..’

‘லிட்ரரி எதிக்ஸ பேஸ் பண்ணி இந்தக் கதையை எழுதினேன்னு  சொல்ற, ஆனா அப்படி எதுவுமே இல்லையே. இலக்கியம் உன் கைல கிடைச்ச பூமாலை. அறம்லாம் உனக்கு புரியாத விஷயம், எதுக்கு அதையெல்லாம் கதைல கொண்டு வர ட்ரை பண்ற’

‘இப்படி பண்ணலாமா ஸார், மூணாவதா இன்னொரு உள்கதை கொண்டு வந்துடலாமா, அதுல அறத்தை நல்லா அரைச்சு…’

‘ஐயோ வேண்டாம்’

‘..’

உங்களுக்கு இந்தக் கதைல எந்த வருத்தமும் இல்லையே ஸார்’

பெரியவர் தலையசைத்தார்.

‘..’

‘ஜஸ்ட் ஒன் திங்’

‘..’

‘நீ என் ப்ரெண்ட் தான். என்னை பெயர் சொல்லி கூட கூப்பிடு, நோ ப்ராப்ளம். ஆனா இலக்கிய நண்பர்னு என்னை சொல்லாத, லிட்ரச்சருக்கு அது அவமானம்.’

சில தன்னிலை விளக்கங்கள்:

எப்போதேனும் என் புனைவுகளை வாசிக்கும் ஓரிரு அதிதீவிர வாசகர்களுக்கு பெரியவர் பற்றி எந்த அறிமுகமும் தேவையில்லை, அந்தப் பட்டியலில் சேர விரும்பும் வேறேதேனும் ஓரிருவர் இருந்தால், அவர்களுக்கு முற்றுப்புள்ளி ஒரு கற்பனை பாத்திரம் என்றே தோன்றக் கூடும். அந்த தவறான எண்ணத்தை நீக்க இந்த தளத்திலேயே அவருடனான என் அறிமுகம் குறித்து இங்கேயும், எங்களிருவருக்குமிடையே உள்ள நட்பைக் குறித்து இங்கேயும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கதாபாத்திர மற்றும் நிஜ முற்றுப்புள்ளியை கோபப்பட வைத்த கதை இங்கே.

பெரியவருடனான இந்த உண்மை உரையாடலுக்கு காரணமாக இருந்த ‘Who is the bad art friend’ சர்ச்சை குறித்து இங்கே , இங்கே