சிறுகதை

தேவைகள் – உஷாதீபன் சிறுகதை

நா வரலை – என்றாள் மல்லிகா. அருகே படுத்திருக்கும் மாமியாருக்கும், இரண்டு மைத்துனிகளுக்கும் கேட்டு விடக் கூடாது என்று கிசுகிசுப்பாய்ச் சொன்னாள். அடுத்த அறையில் அவன் அப்பாவும், தம்பியும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். மனோகரன் அவள் கையைப் பிடித்து இழுத்தான். வளையல் சத்தம் கேட்டுவிடக் கூடாதே என்று பயமாயிருந்தது அவளுக்கு. அம்மா லேசாக அசைந்தது போலிருந்தது. என்ன முரட்டுத்தனம்…!

விடுங்க…இப்டியா இழுக்கிறது? அசிங்கமாயில்ல…?…-கையை உதறினாள். அவளுக்குத் துவண்டு வந்தது. இருட்டிலும் அவன் கண்களின் கோபம் தெரிந்தது. அந்த இன்னொன்று….அதையும் பார்த்தாள் அவள். ! எதுவும் அந்தக் கணம் பொருட்டில்லை அவனுக்கு.

       கடுமையாகச் சிணுங்கினாள். அது அவனுக்குப் புரிந்திருக்குமா தெரியவில்லை. மாடி வீடு. தெருக் கம்பத்தின் விளக்கு வெளிச்சம் மாடிப் பகுதியில் விழாது. சாம்பல் படர்ந்திருப்பது போல் ஒரு மெல்லிய நிழல் கலந்த ஒளி மேலே பரவி வந்திருந்தது. வானத்தின் வெளிச்சமாகக் கூட இருக்கலாம் என்று தோன்றியது. ஆட்கள் படுத்திருப்பதை அந்த ஒளியிலேயே உணர முடியும். அம்மா புரண்டு மறுபுறமாய்த் திரும்பிக் கொண்டாள். தெரிந்துதான் செய்கிறாளோ? அடுத்த அறையில் உடம்பு வலி தாளாமல் தூக்கத்தில் அப்பா அரற்றினார். அவனுக்குள் பதற்றம் பற்றிக் கொண்டது.

       உள் பக்கமா எதுக்குப் படுக்கிறே? நாலு பேரைத்தாண்டி உன்னை நான் கூப்பிடமாடேன்னு நினைச்சிட்டியா? எத்தனைவாட்டி சொல்றது? அறிவில்ல…?-அவன் கேட்டிருக்கிறான். .ஏற்கனவே சொன்னதுதான். இருக்கும் இட வசதி பொறுத்துதானே படுக்க முடியும்? தனியே இருக்கையில் நிச்சயம் எரிந்து விழுவான். எத்தனைவாட்டி சொன்னாலும் தெரியாதா? பொட்டக் கழுத…!

       கொஞ்சம் பெரிய சமையலறை அது. அங்குதான் பெண்கள் படுத்துக் கொள்வார்கள். அடுத்தாற்போல் ஒரு சின்ன அறை. அதற்கு அடுத்து ஒரு சிறு பால்கனி. அதில் ஒராள் நடக்கலாம்.ஒரடி அகலம்தான். பேருக்கு அது.  இவ்வளவுதான் வீடு. சமையலறையை ஒட்டி மாடிப்படி. கழிப்பறையெல்லாம் கீழேதான். மொத்தம் ஏழு வீடுகளுக்கான கழிப்பறைகள் மூன்று மட்டுமே. அதிலும் பெண்களுக்கென்று ஒன்றுதான். அதில்தான் நுழையணும். இன்னொன்றில் மாறி நுழைந்து விடக் கூடாது. எழுதாத சட்டமாய் இருந்தது. அவசரமாய்ப் போகும்போது காலியாயிருக்கணும்…அது வேறு…!

 வாளியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு கீழேயுள்ள வீட்டு சொந்தக்காரர் மற்றும் வாடகைக்கு இருப்போரின் ஐந்து வீடுகளையும் கடந்துதான் அங்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் அப்படிச் செல்லும்போது சிலரின் பார்வை திரும்பிப் கொண்டேயிருக்கும். எல்லாம் இரண்டிரண்டு அறைகள் கொண்ட வீடுகள்தான் என்பதால் பெரும்பாலும் வெளி வராண்டாவில்தான் ஆட்கள் அமர்ந்திருப்பார்கள். இரவில் படுத்து உருளுவார்கள். ஒரு முறைக்கு இருமுறை கக்கூஸ் போனால் கூச்சமாக இருக்கும். அதுவே பெரிய தண்டனை.. அவர்கள் கால்களில் தடுக்கிக் கொள்ளாமல் கடக்க வேண்டும். ஆள் வருவதைப் பார்த்துக் கூட மடக்கிக் கொள்ள மாட்டார்கள். திடீரென்று புரண்டால் போச்சு…!

எல்லோரும் அந்தப் பகுதியில் இருந்த வெள்ளைக்காரன் காலத்து  மில்லில் வேலை பார்ப்பவர்கள். பெரும்பாலான வீடுகள் அந்தத் தொழிலாளர்களை உள்ளடக்கியதுதான். பல ஆண்டுகளாய்க் குடியிருப்பவர்கள். ஷிப்ட் முறையில் பணிக்குச் சென்று திரும்புபவர்கள். அதனால் அந்தப் பகுதியே உறங்கா வீடுகளாய்த் தென்படும். ஆள் நடமாட்டம் இருந்துகொண்டேயிருக்கும். எங்காவது  பேச்சுச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

இரவு இரண்டு மணிக்குக் கூட எழுந்து மில் வெளிக்கு சென்று சூடாய் சூப் குடிக்கலாம். வாழைப்பழம் சாப்பிடலாம். பெரும்பாலும் பச்சைப்பழம்தான் இருக்கும். வாய் வழியாயும், மூக்கு வழியாயும் உள் செல்லும் பஞ்சுத் துகள்கள் காலையில் வெளிக்கிருக்கையில் சிக்கலின்றி வெளியேற வேண்டும். ஒரு மில்லுக்கு ஐம்பது தள்ளுவண்டிகள் நிற்கும். அத்தனையும் விற்றுப் போகும்தான். அதை நம்பியிருக்கும் சிறு வியாபாரிகள்.

       யாரும் எதுவும் இன்றுவரை சொன்னதில்லைதான். இவளுக்குத்தான் ஒருமாதிரியாய் இருந்தது. ஒருவேளை ஆள் நகர்ந்த பின்னால் முனகிக் கொள்வார்களோ என்னவோ? சதா வாளியைத் தூக்கிக்கிட்டு வந்திருதுகளே…? சாப்பிடுறதத்தனையும் வெளிக்கிருந்தே கழிச்சிடுவாக போல்ருக்கு….- என்று சொல்லிச் சிரித்துக் கொண்டது ஒரு நாள் மாடியேறி வந்தபோது லேசாகக் காதில் விழுந்தது. ஒவ்வொரு வீட்டுக்குமான வாசல் பகுதி மழை மறைப்பு ஆஸ்பெஸ்டாஸ் கூரை மாடியேறுகையில் அவர்களைக் காண்பிக்காது. பேச்சு மட்டும் காதில் விழும். தெருக் கம்பத்தின் விளக்கு வெளிச்சம் லேசாக அங்கு பரவியிருக்கும். அவரவர் வீட்டு வாசல் லைட்டை எட்டரைக்கே அணைத்து விடுவார்கள். ஒரு பூரான், தேள் என்று நகர்ந்தாலும் தெரியாது. அதில்தான் பயமின்றிப் படுத்து உருளுகிறார்கள். காற்றோட்டம் அந்த உழைப்பாளிகளை அடித்துப் போட்டதுபோல் தூங்க வைத்து விடும்.

       கூசிக் குறுகினாள் மல்லிகா. பொழுது விடிந்தால் அதுவே அவளுக்கு ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது. காலையில் மட்டும் இரண்டு மூன்று தரம் வெளியே செல்ல வேண்டியிருந்தது. ஒரே தடவையில் வயிற்றை சுத்தம் செய்தோம் என்று இல்லை. உடல் வாகு அப்படி. நினைத்து நினைத்து வருகிறது.  தூக்கத்திலிருந்து எழும்போதே கலக்கி விடுகிறதுதான். அந்த நேரம் பார்த்து வாளியில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு விடுவிடுவென்று அடக்க முடியாமல் ஓடும்போது அங்கே கக்கூசில் யாரேனும் போய் கதவை அடைத்துக் கொண்டிருப்பார்கள். வெளியே காத்து நிற்கப் படு கூச்சமாயும், பயமாயும் இருக்கும். பொம்பிளை அப்படி நிற்பது கேலிக்குரியதாகும். வாளியை அடையாளத்திற்கு வைத்து விட்டும் வர முடியாது. சமயங்களில் கால் தட்டி தண்ணீர் கவிழ்ந்து வலி தாள முடியாமல் கீழ் வீட்டுப் பெரியம்மா…திட்டிக் கொண்டே போனது இவளுக்கு இன்னும் மறக்கவில்லைதான். எழுந்தவுடன் ஒரு முறை என்றால், பிறகு காபி குடித்து விட்டு இன்னொரு முறை. காபி குடிக்கிறமட்டும் பொறுக்க மாட்டியா? அதுக்குள்ளயும் வாளியத் தூக்கிட்டு ஓடணுமா? மனோகரனின் அம்மாவே கேட்டிருக்கிறாள். மனசு வெட்கப்பட்டு மறுகும்.  அடக்க முடியாமல் ஓடுவாள். பிறகு வேலைக்குப் புறப்படும் முன் ஒரு முறை. அது சந்தேகத்துக்கு.

 அவள் வேலை பார்க்கும் இடத்தில் கழிப்பறையில் கால் வைக்க முடியாது. தண்ணீர் பஞ்சத்தில் நாறித் தொலையும். தவிர்க்க முடியாமல் போய் வந்தால் கால் கழுவத் தண்ணீர் இருக்காது. பாட்டிலில் கொண்டு வந்த தண்ணீரில் ஒரு வாய் கொப்பளித்து விட்டு, அப்படியே போய் உட்கார்ந்து கொள்வாள். என்ன வியாதி தொத்தப் போகுதோ? என்று மனசு பதறும். கூட வேலை பார்க்கும் பெண்கள் சர்வ சகஜமாக இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றுக்கு நெருக்காதா? என்று நினைப்பாள் இவள். அருகிலுள்ள செப்டிக் டாங்க் மாசத்துக்கு ஒரு முறை என்று நிரம்பிப் போகும். இதுக்கு எம்புட்டுத்தான் தண்டம் அழுகிறது? என்று லாரிக்குச் சொல்லி முதலாளி கத்துவார். எல்லார் வீடும் ரெண்டு கி.மீ.க்கு உட்பட்டுத்தான் இருக்கும். ஆனால் வீட்டுக்குச் சென்று இருந்துவிட்டு வர அனுமதிக்க மாட்டார். வாசலில் செக்யூரிட்டி முறுக்கிய மீசையோடு கர்ண கடூரமாக நிற்பான். அவன் கவனத்தை எவ்விதத்திலும் சிதைக்க முடியாது. ஆள் நகர்ந்தால் சொல்லி விடுவான். கொத்தடிமை நிலைதான்.

பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறாள் அவள். சிறிய நிறுவனம்தான். ரொம்பவும் இடுக்குப் பிடித்த இடத்தில் முப்பது நாற்பது பேர் உட்கார்ந்து இடைவிடாது துணி தைத்துக் கொண்டிருப்பார்கள். அத்தனையும் பெண்கள். அவர்களை நிர்வகிப்பதுவும் இரண்டு வயதான பெண்மணிகள். அருகில் வந்து விரட்டிக் கொண்டேயிருப்பார்கள். எத்தனை முடிச்சிருக்கே? என்று கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். கத்திரி ஓடும் லாவகம் வித்தியாகமாய் இருந்தால் காதுக்கு எட்டிவிடும். சட்டென்று போய் நின்று எச்சரிப்பார்கள். ஏதோ நினைப்பில் துணியை வெட்டி கோணல் மாணலாகிவிட்டால் அந்தத் துணிக்காசு பிடித்தமாகிப் போகும்.  நகரிலுள்ள எந்தெந்தக் கடைகளுக்கு சரக்கு சென்றாக வேண்டும் என்பதை முடிவு செய்து ஒவ்வொரு கடைக்குமான எண்ணிக்கையை இவர்கள் தலையில் வம்படியாகக் கட்டி சக்கையாய்ப் பிழிந்துதான் வீட்டுக்கு அனுப்புவார்கள்.. பணியாட்களுக்குப் போதிய அவகாசம் அளித்து வேலை வாங்குதல் என்பது கிடையாது. தலையை அப்படி இப்படித் திருப்ப இயலாது. ரெண்டு வார்த்தை பொழுது போக்காய்ப் பேசி விட முடியாது. தலையில் குட்டு விழும். அத்தனையும் பொறுத்துக் கொண்டு தையல் வேலைக்கு வர பெண்கள் இருந்துகொண்டேதான் இருந்தார்கள். இரண்டு பக்கமும் தேவை இருந்தது.

தையல் பயிற்சி தர என்று ஒரு வீடு அமர்ந்தியிருந்தார் முதலாளி. அதைக் கற்றுக் கொள்ள ஆட்கள் வரிசையில் நின்றார்கள். அப்ரென்டிஸ் என்று மிகக் குறைந்த தொகையே கொடுக்கப்பட்டது. அங்கு ஒரு நாளுக்கு இத்தனை துணி என்று தைத்துக் காண்பித்தால்தான் நிறுவனத்திற்கே அனுப்புவார்கள். அந்தக் கஷ்டமெல்லாம் முடித்துதான் வேலையை ஸ்திரமாக்கிக் கொண்டிருந்தாள் மல்லிகா. மற்றவர்கள் செய்து முடிப்பதைவிட சற்று எண்ணிக்கை கூடவே இருக்கும் இவள் கணக்கில். அதனால் நிலைத்தாள். ஆள விடுங்கடா சாமிகளா…என்று சொல்லாமல் கொள்ளாமல் ஓடினவர்கள்தான் அதிகம்.  வீட்டுக்கு வந்து நிம்மதியாய்ச் சாப்பிடக் கூடப் பொறுமை இருக்காது. உடம்பு அப்படியொரு தவிப்பில் உருகும். என்னைப் படுக்கையில் கிடத்து என்று மனசு கெஞ்சும்.

மனோகரனின் தாய் நல்லவள். நீ கண்டிப்பா வேலைக்குப் போகத்தான் வேணுமா? என்றுதான் கேட்டாள். ஏம்மா…அந்தக் காசு வந்தா வீட்டுக்கு ஆகும்ல…போகட்டும்மா….வீட்டுல உட்கார்ந்து என்ன செய்யப் போறா? என்று விட்டான் மனோகரன். தையல் மிஷினை விட்டு இப்படி அப்படி அசையாத அந்த வேலை அவள் உடம்பைச் சிதிலமாக்கிக் கொண்டிருந்தது. இளம் வயசிற்கான எந்த உற்சாகமோ, துடிப்போ அவளிடம் காணப்படவில்லை. கசங்கிய துணியாய் வந்து விழுந்து அடுத்த கணம் கண் செருகி விடும். அவள் ஸ்திதி அறியாதவன் மனோகரன். அவனுக்கு அவன் எண்ணம்தான்…நோக்கம்தான். அதில் அவளுக்கு மிகுந்த ஆதங்கம். தன் சங்கடங்களை அறியாதவனாய், ஆறுதலாய்க் கேட்கக் கூடத் தெரியாதவனாய் இருக்கிறானே என்று மனதுக்குள் புழுங்குவாள்.

எப்பப் பார்த்தாலும் கக்கூஸ்தானா? எதுக்கு இப்டி அடிக்கடி போயிட்டிருக்கே? இந்தத் தீனிக்கே இப்டிப் போனீன்னா…இன்னும் வசதி வாய்ப்போட இருந்திட்டாலும்…? – வீட்டில் எல்லோர் முன்னிலையிலும்தான் மனோகரன் சத்தம் போட்டான் அவளை. தனியாகச் சொல்ல வேண்டியவைகளைத் தனியாகத்தான் சொல்ல வேண்டும்…இப்படித் தம்பி தங்கைகள் முன் கேலி செய்வது போல் கண்டிப்பது போல் சொன்னால் அவர்களுக்கு அண்ணியின் மேல் மதிப்பு மரியாதை எப்படி வரும் என்கிற சூட்சுமமெல்லாம் அவனுக்குத் தெரியாது. தெரியாதா அல்லது அவனது அதிகாரத்தை எல்லோர் முன்னிலும் காண்பிக்க வேண்டுமென்று தன்னைத் திட்டித் தீர்க்கிறானா என்று  சந்தேகமாகத்தான் இருந்தது மல்லிகாவிற்கு. செய்யும் அதிகாரத்தை, அவனோடு தனியே இருக்கும்போது காட்டினால் போதாதா? என்று நினைத்தாள் அவள்.

வீட்டிலிருப்பவர்கள் முன் எப்போதும் அவன் அவளிடம் சுமுகமாகப் பேசியதேயில்லை. ஏன் அப்படி என்று நினைத்தாள். பெண்டாட்டிதாசன் என்று நினைத்து விடுவார்களோ என்று கூச்சம் கொள்கிறானோ? என்று தோன்றியது. பல முறை கவனித்து விட்டாள்தான். அவன் அம்மாவிடமோ அல்லது தம்பி, தங்கைகளிடமோ சகஜமாகப் பேசுவதுபோல் அவளிடம் என்றுமே பேசியதில்லை. தனியாக இருக்கும்போதாவது அப்படிப் பேசி நடந்து கொண்டிருக்கிறானா என்று யோசித்தும், இல்லை என்கிற பதில்தான் கிடைத்தது. தன்னைப் பிடிக்கவில்லையோ என்றும் அடிக்கடி சந்தேகம் வந்தது.

இரவில் அவன் நடந்து கொள்ளுகிற முறை? அதுவும் கொடூரம்தான். இரையைக் கவ்விக் குதற நினைக்கும் கொடிய மிருகம் எப்படி இயங்குமோ அப்படி ஆக்ரோஷமாக இருந்தது அவனது அணுகுமுறை. ஒரு பூவைப் போல் ரசித்து, முகர்ந்து மென்மையாய் ருசிக்க வேண்டும்…அதில் அவள்பாலான தன் பேரன்பை அவளுக்கு உணர்த்த வேண்டும், நானே உனக்கு என்றுமான காவலன் என்று அந்த நெருக்கத்தில் நிலை நிறுத்த வேண்டும் என்பதான மென்மைப் போக்கெல்லாம் அவனிடம் இல்லை. அதை எதிர்பார்த்தாள் அவள். விநோதமாய்ச் சில சமயம் பேசுவான். அவளோடு சேர்ந்திருக்கும்போது ஏதேனும் ஒரு நடிகையைச் சொல்லுவான். அவளை மாதிரி ஒருவாட்டி சிரியேன் என்பான். என்னானாலும் அவ தொடை மாதிரி வராதுடீ….!  என்று சொல்லிக்கொண்டே அவள் காலைத் தூக்கித் தன் மேல் போட்டு இறுக்குவான். தனியாய்த் தூங்குகையில் நடிகைகளைக் கனவு கண்டு கொண்டிருப்பானோ என்று தோன்றும். அவன் குப்புறக் கிடக்கும் கிடப்பு அந்த மாதிரி எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

கூட மில்லில் வேலை பார்க்கும் செவ்வந்தியை அடிக்கடி சொல்லுவான். அவ ஸ்டெரச்சரப் பார்த்திட்டே இருக்கலாம்…என்று மயக்கமாய் ஏங்குவான். அந்த வார்த்தையைக் எங்கிருந்து கண்டு பிடித்தான் தெரியாது. தன்னை அணுகும்போது வேறு எவளையாவதுபற்றி அவன் என்றும் பேசாமல் இருந்ததில்லை என்பதே அவளுக்குப் பெரிய ஆதங்கமாய் இருந்தது. போதுமான கவர்ச்சி தன்னிடம் இல்லையோ என்று மறுகினாள். அவன் அணைப்பிற்கும், புரட்டலுக்கும், இறுக்கலுக்கும் திருப்தியான பெண்ணாய்த் தான் இல்லையே என்று வருந்தினாள். உடம்பத் தொடைச்சிட்டு வந்து படு…நாறித் தொலையுது…என்று கறுவுவான். துணி மாற்றிக் கொண்டுதான் அவனோடு போய்ப் படுப்பாள்.

 மனோ அப்பாதான் அவனுக்கும் மில்லில் வேலை வாங்கிக் கொடுத்தார். ஆரம்பத்தில் பஞ்சுத் துகள்களுக்கு நடுவே வேலை செய்வது அவனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. மூச்சிழுப்பு வந்தது. சரியாக வேலைக்குப் போகாமல் இருத்தல், சுருட்டி மடக்கிப் படுத்துக் கொள்ளல், சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது வெளியூர் போய், நண்பர்களோடு சுற்றிவிட்டு சாவகாசமாய் வருதல் என்று அடம் பிடித்தவன்தான். ஒரு வட்டத்துக்குள் அவனைச் சிக்க வைக்க அவன் தந்தை பெரும்பாடு பட்டார்.  ஒரு கட்டத்தில் தாயார் சொல்லுக்குத்தான் அடங்கினான். குடும்பத்தின் நிலைமையை எடுத்துச் சொல்லிப் பணிய வைத்தது அவன் அம்மாதான்.

அவன் சொல்லித்தான் அவளை அவன் அப்பா போய்ப் பார்த்து முடிவு செய்தார். கல்யாணத்தின்போதெல்லாம் கொஞ்சம் பூசினாற்போலத்தான் இருந்தாள் மல்லிகா. அடியே…உன் சிரிப்புலதாண்டி விழுந்தேன்… என்று சொன்னான் மனோகரன்.  என்ன காரணம் என்றே தெரியவில்லை அவள் உடம்பு அதற்குப்பின் ஏறவேயில்லை. சரியாவே சாப்பிடமாட்டா…வேல…வேலன்னு ஓடிடுவா…கொஞ்சம் பார்த்துக்குங்க…என்று மல்லிகாவின் தாய் கண் கலங்கியபோது….மனோகரனின் அம்மா…நானும் ரெண்டு பெண்டுகள வச்சிருக்கிறவதான்…ஒண்ணும் கவலைப்படாதீங்க…என் மக மாதிரிப் பார்த்துக்கிடுறேன்….என்று சமாதானம் சொன்னாள். வாயால்தான் வழிய விட முடிந்தது. வீட்டில் வசதி வாய்ப்பா பெருகிக் கிடக்கிறது? இருக்கும் குச்சிலுக்குள் ஏழு பேர் கும்மியடிக்க வேண்டியிருந்தது. கால் வீசி நடந்தோம் என்பதில்லை. எதிலாவது இடித்துக் கொண்டேயிருந்தது. ஒதுக்கி வைக்க இடமில்லை என்று பிளாஸ்டிக் தண்ணீர் குடங்கள் நடைபாதை ஓரமாய் வரிசை கட்டியிருந்தன. கவனிக்காமல் நுழைந்தால் இடிதான். அப்படி எத்தனையோ முறை தடுக்கிக் கொண்டிருக்கிறாள் மல்லிகா. அந்த வீட்டில் பாதகமின்றி நடப்பதற்கே தனிப் பயிற்சி தேவையாயிருந்தது.

உங்க ரெண்டுபேர் சம்பளத்துலதாம்மா இந்தக் குடும்பத்துல உள்ள ஏழுபேரும் சாப்பிடணும்…என்று சொன்னாள் மல்லிகாவிடம். மனோகரனின் அப்பா ஓய்வு பெற்றபோது வந்த சேமநலநிதிப் பணம், சம்பள சேமிப்புப்  பணிக்கொடைப் பணம் என்று ஏதோ கொஞ்சத்தை வங்கியில் டெபாசிட் பண்ணியிருந்தார்கள். அதிலிருந்து வட்டி வந்து கொண்டிருந்தது. ஆனால் அடிக்கடி நெஞ்சு வலி, முழங்கால் மூட்டு வலி என்று ஆஸ்பத்திரிக்குக் கொடுக்கவும் சரியாய் இருந்தது. நான் கருத்தா சேர்த்த பணமெல்லாம் இப்டிக் கரியாப் போகுதே என்று புலம்பினார். இதுக்குத்தான் வீட்டுல முடங்கமாட்டேன்னு சொன்னேன்…நெல்பேட்ட கோடவுனுக்கு வேலைக்குப் போறேன்னு சொன்னேன். வேண்டாம்னுட்டீங்க….இப்ப தண்டமா உட்கார்ந்து செறிக்கமாட்டாமத் தின்னுட்டு வெட்டிக்கு உட்கார்ந்திட்டிருக்கேன்…..என்று கண்ணீர் விட்டார்..

பலவற்றையும் போட்டு மனதில் புழுங்கிக் கொண்டிருந்தாள் மல்லிகா. வெளியில் சொல்ல முடியாததும், ஆதரவற்ற நிலையும், அப்படிச் சொல்லப் புகுந்தால் என்ன நடக்குமோ என்கிற பயமும், அவளுக்கு பலவிதமான உடல் உபாதைகளை விடாது ஏற்படுத்திக் கொண்டிருந்தன. எண்ணமும் மனசும் நடுங்கிக் கொண்டேயிருந்தால் எப்படித்தான் சுதந்திரமாய் இயங்குவது? நம்பிக் கை பிடித்த நாயகனே நழுவி நழுவி நிற்கும்போது எந்த ஆதரவை எதிர்நோக்கி அவள் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வாள்?

       வீட்டுக்கு வீடு அம்மிக்கல் போட்டு டங்கு டங்கென்று இடித்து அரைக்கக் கூடாது என்று பொதுவாக இரண்டே இரண்டு அம்மிகள் மட்டும் கிடந்தன அங்கே.  ஓரமாய் நீளவாக்கில் வாய்க்கால் போல் கோடிழுத்து இருபக்க சரிவாகக் கட்டிவிடப்பட்டுள்ள  இடத்தில் பாலம் போல் சுவற்றோடு சுவராக அந்த அம்மிக்கல்கள் பதிக்கப்பட்டுக் குந்தியிருக்கும். அழுக்குத் தண்ணீரும் எச்சிலும் துப்பலும் வாய்க்கால் வழி ஓடிக் கொண்டிருக்கையில்தான் குழம்புக்கோ, சட்டினிக்கோ அரைக்க வேண்டியிருக்கும். அந்த அசிங்கமெல்லாம் பார்க்க முடியாது அங்கே. அதுபாட்டுக்கு அது…இதுபாட்டுக்கு இது…! கீழ் வீட்டிலிருப்போர் அனைவரும் பல் விளக்குவது,  கார் கார் என்று உமிழ்வது, முகம் கைகால் கழுவுவது, ஏன் அவசரத்துக்கு வெட்ட வெளியில் குளிப்பது என்று கூட அனைத்தும் அங்கேதான் நடந்தது. ஆண்கள் குளிக்கையில் வாளித் தண்ணீரோடு கடப்பது இவளைக் கூனிக் குறுக்கி விடும். வந்து தொலைக்கிறதே..சனியன்…!

மூன்று கழிவறைகளையொட்டி இரண்டே இரண்டு குளியலறைகள்..! அதில் பெண்கள்தான் போய்க் குளிப்பார்கள். கீழ் வீட்டு ஆண்கள் பூராவும் வெட்ட வெளிதான். பொந்தாம் பொசுக்கென்று துண்டைக் கட்டிக் கொண்டு குளித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி இப்படித் திரும்பும்போது ஈரத் துண்டோடு தெரியத்தான் செய்யும். பொருட்படுத்தமாட்டார்கள். அன்ட்ராயர், ஜட்டியோடு ஆனந்தமாய்ப் போடும் குளியல் வெயில் சூட்டோடு இதமாய்ப் பரிமளிக்கும். அந்தப் பகுதியிலேயே இதெல்லாம் சகஜம். வீட்டிற்குள் துளியும் இடம் இல்லாதவர்கள், வாசலில் ஒரு கல்லைப் போட்டு, அதன் மீது அமர்ந்து எனக்கென்ன என்று ஜலக்கரீடை செய்வார்கள். பொம்பிளைகள் வெட்ட வெளியில் தங்கள் புருஷனுக்கு  முதுகு தேய்த்து விடும் காட்சி அன்றாடம் அந்தப் பகுதியில் சர்வ சகஜம்.

 புழக்கம் யார் கண்ணிலும் படாத மாடி வீடு என்பது ஒன்றுதான் அங்கு உள்ள  ஒரே வசதி. அத்தோடு இட நெருக்கடி ஏற்படுகையில் சட்டென்று மொட்டை மாடிக்குச் சென்று உட்கார்ந்து கொள்ளலாம். சுள்ளென்று வெயில் தகிக்கும் காலங்களில் அதுவும் நடவாது. இரவில்தான் வசதி. அந்த மொட்டை மாடிக்கு யாரும் வரமாட்டார்கள். காரணம் மாடிவீட்டின் அடுப்படி வழியாக அந்தப் படிக்கட்டு செல்வதுதான். அதன்படி பார்த்தால் மாடியில் குடியிருப்பவர்களுக்குத்தான் மொட்டை மாடியும் என்றாகிவிடுகிறதே…! படியை வெளியே விட்டிருந்தால் அடுப்படி சுருங்கிப் போயிருக்கும். அதனாலேயே நூறு ரூபாய் வாடகை அதிகம். ஆனால் எப்போதேனும் மாடிக்கு வரும் கீழ் வீட்டுக்காரர்களிடம் அதைச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லி, சண்டை வந்து, அதனாலேயே வீட்டைக் காலி செய்து கொண்டு போனவர்கள்தான் இதற்கு முன்பு இருந்தவர்கள். கீழ் வீட்டுக்காரர்களுக்கும் மாடியில் உரிமையுண்டு என்ற விபரம் முன்பு காலி செய்து கொண்டு போனவர்கள் வழி தெரிய வந்தது.

       அங்க ஏன் போறீங்க…? அந்தம்மா பெரிய அடாவடியாச்சே…! என்றுதான் முதல் தகவல் அறிக்கை. ஆனாலும் கட்டுபடியாகும் வாடகை என்று தேடும்போது சில பிரச்னைகள் பெரிதாய்த் தோன்றுவதில்லை! அதென்னவோ இவர்கள் குடி வந்ததிலிருந்து யாரும் மாடிப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை.

       நா போறேன்….வந்திரணும்….. –குரலில் ஒரு கடூரம். சத்தமின்றி அவன் மாடி ஏறுவது அந்த இருட்டுக்குள் தெரிந்தது. இவள் எழுந்திரிக்க மனமின்றிப் படுத்திருந்தாள். அந்த இடத்தில் அவர்களோடு படுத்திருக்கும் கதகதப்பு மேலே போனால் அவளுக்குக் கிடைக்காது. கோடைகாலம்தான் என்றாலும், பாதி இரவுக்கு மேல் ஒரு குளிர் காற்று வீச ஆரம்பிக்கும். அந்தக் காற்று இவளுக்கு ஒத்துக் கொள்வதில்லை. மூக்குக்குள் நெரு நெருவென்று நிமிண்டிக் கொண்டேயிருக்கும். மறுநாள் அது தும்மலாக மாறும் அபாயமுண்டு. தடுமம் வந்து விடக் கூடாதே என்று பயந்து சாவாள் மல்லிகா. காட்டுக் கத்துக் கத்துவான்..

நச்சு நச்சென்று தும்மல் போட்டால் அவனுக்குப் பிடிக்காது. ஒரு கர்சீப்பை வச்சிக்கிட்டுத் தும்மித் தொலைய வேண்டிதானே? இப்டியா வீடு பூராவும் சாரலடிக்கிற மாதிரிப் பொழிவே? வாய் நாத்தம் பரவலா அடிக்குது…என்று ஒரு நாள் அவன் சொல்லி வைக்க தங்கைகள் இருவரும் பொத்திக் கொண்டு சிரித்தார்கள். அதற்குப் பிறகாவது அவனின் அம்மாதிரியான பேச்சுக்களை நிறுத்திக் கொண்டிருக்கலாம். வீட்டிலிருப்பவர்கள் முன் தன் மனைவியைக் கண்டிப்பதோ, கேலி செய்வதோ கூடாது, அப்படியிருந்தால் அவர்களுக்கு அவள் மீது மதிப்பு மரியாதை இருக்காது என்பதை அவன் உணர வேண்டும். ஆனால் அவனுக்கு அது தெரிவதில்லை. அவன் எதிர்பார்க்கும்போதெல்லாம் அலங்காரப் பதுமையாய் அவன் முன் நின்றாக வேண்டும். உடலுறவுக்கு என்று தவிர வேறு எவ்வகையிலும் அவன் அவளை அணுகியதில்லை. பெண்டாட்டி அதற்கு மட்டும்தான் என்பதில் தீர்மானமாய் இருந்தான். மற்றப்படி அவளது தேவைகளை அவளே உணர்ந்து சொல்லி, அதற்கு நாலு முறை சலித்து, கோவித்து ஒதுங்கி, பிறகுதான் சரி வா…போவோம் என்பான்.அப்படியாவது செய்கிறானே என்றுதான் இருந்தது இவளுக்கு.

த்தமின்றி எழுந்தாள். யார் மீதும் கால் பட்டு விடாமல் புடவையை இழுத்துக் கொண்டு தாண்டினாள். மேலே போவதற்கு முன் ஒரு முறை பாத்ரூம் போய்விட்டு வந்து விடுவோம் என்று தயாராயிருந்த வாளித் தண்ணீரை எடுத்துக் கொண்டு இறங்கினாள். சிறுநீர் கழிக்க என்றாலும் தண்ணீரை அடித்து ஊற்றாமல் வர முடியாதே…! நாற்றம் வாசல் வரை அடிக்குமே…! வழியெல்லாம் படுத்திருக்கிறார்களே?  அந்த நடு இரவு நெருங்கும் நேரத்தில் அப்படி கக்கூஸ் நோக்கிப் போவது ரொம்பவும் சங்கடமாயிருந்தது. அமைதியைக் கிழித்துக் கொண்டு சத்தம் வந்தால் கோபப்படுவார்கள். தூக்கத்தில் உளறுவதுபோல் என்னவாவது கெட்ட வார்த்தையைப் பேசித் திட்டுவார்கள். பதிலுக்குக் கோபித்துக் கொள்ள முடியாது. வழியில் கால்மாடு, தலைமாடாக ஆட்கள் படுத்திருந்தார்கள். எப்போது தூக்கத்தில் புரளுவார்கள் என்று சொல்ல முடியாது என்கிற ஜாக்கிரதையில், யார் மீதும் கால் பட்டு விடக் கூடாதே என்கிற பயத்தில் தாண்டித் தாண்டிப் போய் கழிவறையை அடைந்தபோது, அவளுக்கு திடீரென்று வயிற்றைக் கலக்கியது. ஒன்றுக்கு வந்த இடத்தில் ரெண்டுக்குப் போகணும் போல உறுத்தியது. கதவைச் சாத்தியபோது அந்தத் தகரக் கதவு கரகரவென்று சத்தமிட்டது. அழுத்தி உள் கொக்கியைப் போட்டாள். அதற்குக் கூட சக்தியில்லை அவளிடம். கையும் காலும் வெலெ வெலவென்று வந்தது.

சனியம்பிடிச்ச வயிறு….வெறுமே பட்டினி போட்டாத்தான் சரிப்படும் போல்ருக்கு…- என்னவோ சுருட்டிக் கொண்டதுபோல் வயிற்றைப் பிசைந்தது. சூடு பிடித்துக் கொண்டதுபோல் ஒன்றுக்கு வர மறுத்தது. மாத ஒதுக்கலுக்கு நாளாகி விட்டதோ என்று அப்போதுதான் நினைப்பு வந்தது அவளுக்கு. வந்த நேரம் உடம்பில் இருந்த பதட்டத்தில் அது நடந்தே விட்டது. அதற்கென்ன நேரம் காலமா குறித்து வைத்திருக்கிறது?

ப்பச் சொன்னேன்…எப்ப வர்ற நீ…? என்றான் அவன். உனக்காக முழிச்சிக்கிட்டு தவங்கிடக்கணுமா நான்..? .என்று தொடர்ந்து. சொல்லிக்கொண்டே அவள் கையைப் பிடித்துச் சடாரென்று இழுத்துக் கீழே சாய்த்தான். மாத விலக்குப் பெற்று,  மாடி வந்து இருட்டோடு இருட்டாக அதற்கான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டு அவள் மொட்டை மாடியை அடைய, உடலும் மனசும் தளர்ந்து கிடந்த அந்தக் கணத்தில் அதை அறியாத அவனின் செய்கை அவளுக்கு அசாத்திய எரிச்சலையும், கோபத்தையும் கிளர்த்தியது. அவளை இழுத்து இறுக்கி அவன் அணைத்த அந்தக் கணத்தில், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இதுவே நல்ல சந்தர்ப்பம் என்று முடிவுசெய்து அவள் சொன்னாள்..

”ஏங்க….நாம ஒரு தனி வீடு பார்த்திட்டுப் போயிடலாமே….இங்க எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்குது தெனமும்….”

அவள் சொன்னதைக் காதில் வாங்கியதாகவே தெரியாமல், கலவி மயக்கத்தில் கண்கள் செருக… அவன் அவளை மேலும் இறுக்கி நெருக்கினான்…! …அதையும் பொறுத்துக் கொண்டு, அவன் மூச்சுக் காற்று அவள் மேல் படர அனிச்சமாய் அவள் குழைந்து தழையும் முன் மேலும் உண்டான தன்னுணர்வில் மீண்டும் அவன் காதுக்கு நெருங்கி அதைத் துல்லியமாய்ச் சொன்னாள். “இன்னைக்கு எதுவும் வேண்டாங்க….!”

போட்டோ சார் – லட்சுமிஹர் சிறுகதை

“குளிருதா,”

‘கொஞ்சம், “

“கொஞ்சம்னா,”

“இன்னொரு ஸ்வெட்டர் கூடப் போட்டுட்டு வந்துருக்கலாம்னு சொன்னே, அழகாயிட்டயோ ? “

“யாரு.. நானா? “

“அப்புறோம்… உம்னு இருக்கிறயா ? “

“இல்ல “

“அந்தப் பாலுப் பையன் என்ன சொன்னான் தெரியுமா,? “

“கம்முனு இருக்கமாட்டியா? “

“ரொம்ப நாளா அப்படித்தான இருக்கேன் “

……

“பேசு… “

“கூடவே தான இருக்க? “

“அதான்.. உன் நன்மைக்குத்தான் சொல்றேன்… “

“என்ன.. சொல்லு? “

“பாலுப் பையன் உன்ன இந்தக் கம்பெனி பார்க்ல இருந்து தூக்க பிளான் போடுறான் “

“நீயும்.. ஊரு வம்பு பேச ஆரம்பிச்சுட்டயா..? “

“தாடி வெட்டல “

“போய்தான் ஷேவ் பண்ணனும்.. “

“இன்னைக்குக் கூட்டமோ? “

“ஆமா.. சனிக்கிழமையில்ல !”

இப்படித்தான் சில காலங்களாகக் கையில் வைத்திருக்கும் கேமரா உடன் பேசத் தொடங்கிவிட்டார் யாசிர் பாய்.

கொடைக்கானல் பார்க்கில் தனியாக, கேமராவுடன் அமர்ந்திருக்கிறார் . மனதில் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க அவரின் மகிழ்ச்சியை அவைகள் விழுங்கிக் கொண்டிருந்தது என்பதே உண்மை.

மக்கள் நெருக்கமாக அங்கும், இங்கும் உட்கார்ந்து கொண்டும், நகர்ந்து கொண்டும் இருந்தனர்.

பாலு கூட்டத்திலிருந்து யாசிர் பாயை நோக்கி வந்து கொண்டிருந்தான்…

கழுத்தில் மாட்டிக்கொண்டார் கையில் வைத்திருந்த கேமராவை…

“ஐடி எங்க யாசிர் பாய்? கேமரா…

யாசிர் தன்னுடைய ஐடி யை எடுத்துவர மறந்தது அப்போது தான் நினைவுக்கு வர…

” யாசிர் பாய் இன்னைக்கு உங்கள மேனேஜர் பாக்கனுன்னு சொல்றாரு, சாயங்காலம் கொஞ்ச வெயிட் பண்ணுங்க ஆபீஸ்ல” எனச் சொல்லும்போதே இருமிக்கொண்டான். யாசிர் பாய் இருமலின் எச்சில் கேமராவின் லென்ஸ்ல் படப் போகிறது என்று நினைத்து கையால் முன்பகுதியை மூடியபடி தலையை ஆட்டினார்.

யாசிர், பாலு ஐடியை பற்றிக் கேட்கவில்லை என்று சந்தோசப்பட்டாலும் , மேனேஜர் என்ன சொல்லப் போகிறார் என்ற பயம் கேலிசெய்யத் தயாரானது ..

அன்றிரவு மேனேஜரிடம் பேசிவிட்டு வீட்டிற்குச் செல்ல 9மணி ஆகிற்று.. லென்ஸ் கிளோஸரைத் தேட ஆரம்பித்தார். அதை எங்கு வைத்தோம் என்ற நினைவும் இல்லை. வீட்டின் அனைத்து லைட்களையும் ஆன்செய்து தேடத் தொடங்கியவருக்குப் பரீதின் கல்யாணத்தின் போது எடுத்த போட்டோ பிலிம் ரோல்கள் இருந்த விரிசல் அடைந்த பெட்டி கண்ணில் படவே அதை எடுத்தார்.

யாசிர் பாய் தங்கி இருக்கும் வீடு, இரண்டு சின்ன அறைகளைக் கொண்ட வீடு.வாடகை ஒழுங்காகச் செல்வதால் பிரச்சனை இல்லை. தேடுவதற்கு எதுவும் இல்லாத அறைகள்தான் அவை.

தரையில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டார் யாசிர். கேமரா பேக்கை காலியாக இருந்த துணிவைக்கும் கூடைக்குள் வைத்துவிட்டார். படுத்துக் கொண்டு அந்தப் பிலிம் ரோல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் யாசிர். அவருக்கு ஏன் இதைப் பிலிம் ரோல்களாகவே விட்டுவிட்டோம் என்று நினைவில்லை . போட்டோ ரோல்கள் அடிபட்டு கோடும், கீறலுமாகப் பல்லிளித்தது .

அடுத்தநாள் காலையில் ஷேவிங் கண்ணாடி டப்பாவில் இருந்த அவருடைய பார்க் ஐடி யை மட்டும் எடுத்துக் கொண்டு பார்க்கிற்குக் கிளம்பினார் .

மேனேஜர் சொன்னது இன்னும் மனதிற்குள் போட்டு உளட்டிக்கொண்டிருந்தார் யாசிர் பாய்… அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி அவருக்குள் பல நாட்களுக்குப் பிறகு எழுந்தது, இதுவரைஅவரின் வயது அவருக்குக் குறையாகத் தெரிந்தது இல்லை. இன்று அதை எண்ணி வருத்தப்படத் தொடங்கியிருந்தார் .நேற்று காலையில் பாலு சொல்லிவிட்டுப் போன பின்பு மாலை ஆறு மணிக்கு மேனேஜர் அறையில் கொஞ்சம் பதட்டத்துடன் தான் அமர்ந்திருந்தார் என்ன விசயமாக இருக்கும் என்பதை ஓரளவு யூகிக்க முடிந்தது ..

 அரை மணி நேரம் கழித்தே வந்தார் நந்தன்.

“பாய் நல்லாருக்கீங்களா? ” என்ற நந்தனிடம் தலையாட்டிச் சிரித்துக்கொண்டார் யாசிர் பாய்.

“பாத்து ரொம்ப நாள் ஆச்சுல்ல பாய்..? “

கேமரா வைத்திருந்த கை வேர்க்கத் தொடங்கியது, அதைப் பேண்டில் துடைத்துக் கொண்டு, இன்னொரு கையில் கேமராவை மாற்றிக் கொண்டார்.

இப்போதான் நமக்கு ரெண்டு, மூணு பார்க் இன்ச்சார்ஜ் வந்திருச்சு அதான் பாய் லேட் ஆகிருச்சு .

கையை நீட்டி பாலுவிடம் எதையோ கேக்க, பாலு உள்ளே ஓடிப் போய் ரெகார்ட் நோட்டை எடுத்து வந்தான்.. அதை வாங்கிப் பார்க்கத் தொடங்கிய நந்தன்.

“பாய், நம்ம பார்க்குல போட்டோ ஆளுங்க நிறைய இருக்காங்கள, அவங்கள மேல இருந்து குறைக்கச் சொல்லுறாங்க… ” என யாசிர் பாயைப் பார்த்தான் நந்தன்.. இடதுகையில் வேர்வையோடு இருந்தது கேமரா… மேலும் பேசிய நந்தன்.

“அதான்யா… இங்கிருந்து உங்கள அடுத்த இனிதல் பார்க்குக்கு மாத்தலாம்னு இருக்கோம் “என்றான்.. பாய் பதில் ஏதும் சொல்லவில்லை, எதிர்பார்த்ததுதான்.

என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியுடன் பார்க் வந்து சேர்ந்தார் பாய். ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடித் காணப்பட்ட பார்க்கை ஸ்வெட்டருடன் இறுக்கி அணைத்துக் கொண்டார் குளிருக்கு.

அங்கங்கே பனிமூட்டம் விலகாமல் நேற்று பெய்த மழையில் கொஞ்சம் பசுமை கூடி இருப்பதுபோலப் பட்டது.

என்ன யாசிர் பாயால்தான் அதை அனுபவிக்க முடியவில்லை. அன்று வெள்ளிக்கிழமை ஆகையால் தொழுகையை முடித்து விட்டு யாசிர் பாய் வீட்டுக்கு வர மணி ஏழு.

மேனேஜர் பேசி ஒரு வாரம் ஆகிற்று , அவரின் எளிமையான சாராம்சம் வேலைக்கு வர வேண்டாம் என்பதே. கேமராவைத் தோளில்போட்டுகொண்டு, பார்க்பிளாட்பார்மில் இதற்கு முன் எடுத்த பழைய போட்டோக்களை நீட்டி.. “போட்டோ ஸார் .. போட்டோ ஸார் .” எனக் குரங்கு உணவை கண்டு பின் செல்வது போல மனிதர்கள் பின் தொற்றிக்கொள்ளத் தயாரானார் .. ” போட்டோ சார்.. போட்டோ சார்… “

பாலுவின் ” போட்டோ போட்டோ போட்டோ” என்கிற சத்தம் இங்கு வரைக்கும் கேட்டது.. இன்றைக்கு யாசிர் பாய்க்கு ஆறுபோட்டோக்கள்தான் கிடைத்தன..சனிக்கிழமையே இப்படி என்றால் வாரநாட்களில் ஒன்றோ, இரண்டோ தான்.

பலரும் யாசிர் பாயைக் கடந்து சென்று கொண்டுதான் இருந்தனர்.. போட்டோ ஸார் .. போட்டோ ஸார் .. என நடுங்கும் குரலில் யாசிர் பாயிடமிருந்து வெளிப்பட்டது.

போட்டோவாக மாற்றப்படாத போட்டோ பிலிம் ரோல்களை எடுத்து வீட்டில் அவருக்கென்றிருந்த ஒரே சேரில் அதைப் போட்டுவிட்டு , தான் வைத்திருந்த பழைய கேமராவைத் தேடத் தொடங்கினார்.சில நேரங்களில் நமக்கென்று எதுவும் இல்லாமல் ஆகிவிடக் கூடாது என யோசிப்பது வாழ்க்கை மீதான நம் பயத்தையே மறைமுகமாக வெளிப்படுத்துகிறது. நமக்கென இருப்பதாக எண்ணிக் கொண்டு நாம் பழைய நினைவுகளுக்குள் செல்கிறோம். அதிலிருந்து நம் கையில் அகப்படுவது நம்மை முன் நகர்த்தவும் செய்கிறது. சில நேரங்களில் நம்மை ஒரே நிலையில் தேங்கிவிடவும் செய்கிறது.

இரண்டு அறைகளில்…அப்பா கல்யாணம் பண்ணிக்க வேண்டி எழுதின கடிதங்கள், பழைய சட்டைகள், இரண்டு, மூன்று போட்டோ பிரேம்கள், ரேடியோ காஸெட் சீடிக்கள் இருந்தன. அங்கிருந்து எடுத்த பொருட்கள் தூசிபடிந்து போய்க் கிடந்தன . தனக்கென இருந்த போட்டோ ஸ்டுடியோவை விட்டுவிட்டு வந்த யாசிருக்கு இவைகள் அதைப் பற்றிய கேள்விகள் கேட்பது போலவே இருந்தது. யாசிர் பாய் அவைகளிடம் தன் பக்கம் இருக்கும் காரணங்களைப் பேசத் தொடங்கினார் .யாசிர் பாய் பக்கம் இருந்த எந்தக் காரணங்களையும் அவைகள் ஏற்கவில்லை.பழைய பிலிம் ரோல் கேமராவைத் தேடிக் கண்டுபிடிக்க இரவு பதினொரு மணி ஆகிற்று..அதை எடுத்துக் கொண்டு.. கூடையில் இருந்த கேமரா பேக்கை எடுத்தார் யாசிர்..

“டேய்.. இத பாத்தியா உங்க தாத்தா… இப்பலாம் ஏதோ பொசுக்குன்னு கிளிக் பண்ணா படம் விழுந்துற நீயெல்லாம்.. அப்போ போட்டோக்கு ரோல் வாங்கி லேப்ல கிளீன் பண்ணி நெகடிவ்ல தான் பாப்போம்.. அப்ப அதெல்லாம் ஏதோ பெருசா செய்றமாதிரியிருக்கும்.. காத்துக் கிடந்து முந்தினநாளு எடுத்த போட்டோவ வாங்கிட்டுப் போவாங்க…

அப்போ நான் எவ்வளவு பெரிய கடை வச்சிருந்தேன்.. காலம் இப்படி வந்து தள்ளிருச்சு. இன்னும் எங்க எங்க ஓடப் போறேனோ ” எனத் தழுதழுத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார் யாசிர் பாய்.

இறுதியில் புதுக் கேமரா பதில் ஏதும் சொல்லவில்லை என்பதைப் பார்த்தார்.

” என்னாச்சு உனக்கு..? ஏன் அமைதியா இருக்க நீ..? பே கவர்ல குப்பையா இருக்கா? எனப் பல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். பழைய கேமரா தரையில் கொஞ்சதூரம் தள்ளி உட்கார்ந்து கொண்டு வேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தது. யாசிர் பாய் கஷ்டத்தில் பங்கு கொண்டாலும் அவருக்கு உதவ முடிய வில்லையே எனப் பழைய கேமரா நினைத்துக் கொண்டது. அந்த டிஎஸ்எல்ஆர் கேமரா பேசவே இல்லை..

யாசிர் பாய் மேனேஜரிடம் பேசிவிட்டு வந்த பிறகிலிருந்து தான் பார்க்கில் கொடுத்த கேமரா பேசவில்லை என்பதை யூகித்துகொண்டவர் ..இந்த புது மாடல் டி எஸ் எல் ஆர் கேமரா யாசிர் பாயோடையது கிடையாது.. பார்க்கில் இருந்து கொடுத்ததுதான். யாசிர் பாய் பார்க்கை விட்டுப் போக நேர்ந்தால், அதை மேனேஜரிடம் கொடுத்துவிட்டுத் தான் செல்ல வேண்டும். அவர் பேசினதக் கேட்டிருப்ப. அதான் இப்படி உம்முனு இருக்க… தெரியும்.. அதான… உன்னத்தான்.. எனக் கேமராவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தார் யாசிர் பாய்.அவருக்குக் கேமரா மீதான தனி அக்கறை இன்னும் சிறுவயது பையனைப் போல அதன் மேல் வண்ணம் அடிக்கச் செய்கிறது என்பதை அறிந்தவர்தான் .அதுவே அவரை இதுவரை உயிர்ப்போடு வாழ எத்தனித்திருக்கிறது.

கையில் தனக்குத் துணையாக முதலில் இருந்த கேமராவை மட்டும் எடுத்துக் கொண்டு கொடைக்கானல் மலை ஏறிவிட்டார். அந்தக் காலக் கட்டம் யாசிருக்கு பெரும் துயரே . காதல் மனைவியின் பிரிவு, பரீதின் இறப்பு என்று பிடித்த பேய் அவரின் சொந்த ஸ்டூடியோ கை விட்டு போகும் வரை விடவில்லை .அவர் அதிலிருந்து விடுபட்டு வரவே பல காலம் தேவைப்பட்டது.

பார்க்கில் புது டி எஸ் எல் ஆர் யை மேனேஜர் யாசிரிடம் கொடுத்த போது, அதைப் பயன்படுத்த தெரியவில்லை.. பழைய கேமராவிலேயே எடுத்தவருக்குப் பாலுதான் புதுக் காமெரா இயக்கங்கள் பற்றிச் சொல்லித் தந்தான். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், பழகிக் கொண்டார் யாசிர்.. ஆனால் அந்தப் பெயர்களை மனப்பாடம் செய்து கொள்வதில்தான் சிரமம். ‘ ஐ எஸ் ஒ, ஷட்டர் ஸ்பீட், கான்ட்ராஸ்ட் லெவல் ‘….. .கடைசியில் பெயர்கள் தான் மாறியுள்ளது, எப்போதும் போலத்தான் போட்டோ எடுக்கும் விதங்கள் உள்ளன என அடிக்கடி யோசித்துக் கொள்வார்.ஆனால் பாலு அளவுக்குத் தெளிவாக அந்தப் பெயர்களை உச்சரிப்பதில் கொஞ்சம் கஷ்டப்பட்டார் யாசிர்.. தன்னோடு பதினைந்து வருடங்களாக இருந்த கேமராவை மட்டுமே கடனில் இருந்து மீட்டு யாசிரால் கொடைக்கானலுக்குக் கொண்டு வர முடிந்தது. அதையும் மடித்து ஒரு பெட்டிக்குள் பத்திரமாக வைத்தார் யாசிர்.. எப்போதும் தொலைத்த பொருள் எளிமையாகக் கிடைத்து விடுகிறது.நாம் பத்திரமாக வைத்ததை எடுக்கத்தான் சிரமம்ஆகிவிடுகிறது. அப்படிதான் நேற்று யாசிர் அந்தப் பழைய கேமராவைத் தேடி எடுத்தார்.அதன் மேல் இருந்த குப்பை, நூலாம்படையைத் தட்டி விட்டு, துணியால் துடைத்து விட்டு அந்தச் சிறிய பெட்டிக்குள் இன்று காலையில் வைத்து விட்டு வந்தார்.

பார்க்கிற்குச் செல்லும் வழி நெடுகிலும் கேமரா உடன் பேசிப் பார்த்தும் பதில்சொல்லவில்லை.

‘போட்டோ சார் போட்டோ சார். . ‘இன்றைக்கு இரண்டு போட்டோ என்று ரெஜிஸ்டர் நோட்டில் கையெழுத்துப் போட்டார் யாசிர்.அதில் யாசிர் பெயருக்கு மேல் எழுதியிருந்த பாலுவின் பெயருக்கு அருகில் இன்றைக்கு மட்டும் 10 போட்டோ என எழுதி இருந்ததைப் பார்த்தார். எப்போதும் பார்க்காத அவர்.. ஏன் பார்த்தார் என்பது அவருக்குத் தெரியவில்லை.. வாழ்க்கையின் அடுத்த நகர்வைப் பற்றிய கவலையிலேயே அன்றிரவு கண்கள் விழித்திருந்தார்…

போட்டோ சார் போட்டோ சார் ..

” எவ்வளவு “

” இரண்டு போட்டோ பிரேமோட நாற்பது ரூபா சார் .. “

” நாலு போட்டோ எடுங்க “என வயதான தம்பதி ஒருவர் யாசிர் பாய் உடன் பேசிக் கொண்டிருப்பதைப் பாலு பார்த்துக் கொண்டிருந்தான்.யாசிர் பாய் அவர்களைப் பார்க்கின் நல்ல ஸ்பாட் களில் எல்லாம் நிற்க வைத்து எடுத்துக் கொண்டிருந்தார்.. அடிக்கடி அந்த அம்மா மட்டும் கால் வலிக்குது கொஞ்சம் பக்கத்திலேயே இருந்தா நல்லாருக்கும் எனக் கணவனிடம் சொல்லிக் கொண்டே இருந்தார் … ஒரு அரை மணி நேரத்தில் போட்டோ எடுத்து முடித்து அதை அவர்களிடம் கொடுத்தார் யாசிர்.அந்த அம்மாவுக்குப் போட்டோக்கள் ரொம்பப் புடித்துவிட்டன… ரொம்ப நேரமாக இருவரும் போட்டோவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்… போகின்ற போது யாசிருடைய மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டனர்.. அவருக்கு மொபைலில் நம்பரை சேவ் பண்ணுவதில் பிரச்னை இருந்ததால்.. பாலு தான் வந்து உதவி செய்தான்.. அவர்களுக்குப் பேத்தி பிறந்துள்ளதாம்.. அவர்கள் வீட்டுக்கு வந்து போட்டோ எடுக்கணும் என்றார் அந்த அம்மா… அருகில் நின்றிருந்த கணவர், நாங்க எதுக்கும் பையன் கிட்ட கேக்கணும்.. அப்புறம் தான் சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டுத்தான் நம்பரை பதிந்து கொண்டனர் .

அன்றைக்கு இரவு பாயில் ஓடிய கரப்பான்பூச்சியை அடிக்க நோட்டைத் தேடுவதற்குள் ஓடிவிட்டது.படுத்துக்கொண்டார்.. கால் எதுவும் அவர்களிடம் இருந்து வருமோ என நினைத்தவர் மொபைலைப் பக்கத்தில் வைத்து போன் ரிங்கிற்காகக் காத்திருந்தார். அப்படி வந்தாலும் இப்போது இருக்கிற பிரச்னையால் எடுக்க முடியுமா என்ற சந்தேகம் வர , கேமரா இல்லாமல் என்ன எடுப்பது? பாலு தனியாகக் கேமரா வாங்குவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.அவனிடம் கேட்கலாமா என்று யோசித்தவர் வேணாம் என்று முடிவெடுத்தார். தன் மொபைல் போனில் இருக்கும் காண்டாக்ட் களைப் பார்த்துக் கொண்டே வந்தவர் .அதில் இருந்தது வெறும் எட்டு

நம்பர்களே..

பாலு

பரீத்

தமிழரசன்

தமீம்

கஸ்டமர் கேர்

வோடபோன் ஸ்பெஷல் அபெர்ஸ்

யமர்ஜன்சி காண்டாக்ட்

பாலு தான் அவைகளைப் பதிவு செய்து தந்திருந்தான் ..

பரீத்.. யாசிர் பாயுடன் அசிஸ்டன்ட் ஆக ஸ்டுடியோவில் வேலை பார்த்தவன்.. ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டான்… அவன் இறந்த பின் பரீத் மொபைலில் இருந்து கால் வர பதறிப் போய் விட்டார் யாசிர் பாய்… அது பரீத்தின் மனைவி

“வாப்பா.. நான் பேகம் பேசுறேன்…”

“சொல்லுமா… “

“இல்ல.. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.. “

“என்னமா… நான் கொடைக்கானல இருக்கேன்”

” இல்லப்பா… போன்லதான்… “

” என்னமா.. “

” நம்ம போட்டோ ஸ்டூடியோல இருந்து பரீத் கடைசியா வேல முடுஞ்சு கொண்டு வந்த கொட லைட்டு.. கலர் பேப்பர்ல இருக்கு.. அதல விக்கலாமானுதான் வாப்பா?.. இங்க பாப்பாவை வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியலப்பா… “

யாசிர் பாய் இப்போதும் நினைத்துப் பார்ப்பார் – “பாய் நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் னு ” பரீத் சொல்றத..ஏண்டா அப்படிச் சொல்றனு? கேட்டா பதில் சொல்லமாட்டான். டேய் நான் அவ்ளோ கொடுமக்காரனாடா என்பார் யாசிர். ‘ இல்லபாய்… எங்க அப்பா பாய் நீ ‘ என்றான் சின்னச் சிரிப்புடன்.

பேலன்ஸ் இல்லாமல் கால் கட்டாகிவிட்டது என்று அடுத்த நாள் பேசினாள் பேகம்.எடுத்துக்கம்மா எனச் சொல்லி விட்டார்.. கையில் கொஞ்சம் காசு சேரும் போது பழைய போட்டோ ஸ்டூடியோ அட்ரஸ்க்கு காசு அனுப்பியும் வந்தார்… பேகத்திற்குக் கிடைக்கிறதா என அதை உறுதிப் படுத்தியும் கொள்வார். இனிமேல் அனுப்புவதில் தான் சிக்கல்கள் இருக்கும்.

பதினைந்து நாளாக ஷேவ் பண்ணாத தாடி யாசிருக்குப் புதுத் தோற்றத்தை கொடுத்துவிட்டது எனத் தொழுகை முடித்து வரும்போது சிலர் கூறினர். கையிலிருந்த போனை அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொண்டார். அவர்கள் கால் பண்ணுவார்கள் என எண்ணி.. பாட்டு வர மாதிரி மொபைல் ரிங்க்டோனை செட் பண்ணி கொண்டார்.. அது பழைய போன் என்பதால் சத்தமாக அடிக்க.. பார்க்கிலிருந்த சிலர் திரும்பிப் பார்த்தனர்.. ஆன் செய்து காதில் வைத்தார்.. அது கஸ்டமர் கேரிலிருந்து வந்த கால். உடனே கட் பண்ணி விட்டார்…

“இன்னும் ஏன்டா அமைதியா இருக்க…? நீ பேச என்ன செய்யணும்னாதுசொல்லுடா!” எனக் கேமராவைப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார்….

மேகமூட்டம் சட்டென நகர்ந்து வெயில் வந்தவுடன் யாசிர் பாய்க்குத் தலைச் சுற்றல் ஏற்பட்டது.

கொஞ்சதூரம் பார்க்கில் நடந்து சென்று தண்ணீர் வரக் கூடிய பைப்பை திறந்து… கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலில் பிடித்துக் குடித்துக்கொண்டார்.. அருகில் இருந்த சேரில் அமர்ந்து கொள்வதற்காக நடந்த யாசிர் பாய் பக்கத்தில் இளம் ஜோடி முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவர், அவர்களை நோக்கிச் சத்தம் போட, இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.. அதில் அந்தப் பெண் யாசிர் பாயை முறைத்துப் பார்த்துக் கொண்டே சென்றாள்.

சேரில் அமர்ந்து மதியச் சாப்பாடைச் சாப்பிடத் தொடங்கினார் யாசிர் பாய்.

மேனேஜரிடம் வேண்டும், வேண்டாம் என்ற பதில் எதுவும் சொல்லாமல் வந்தது தவறு . மாற்ற வேண்டாம் என்று நேரடியாகக் கூடக் கேட்டிருக்கலாமோ என்று யோசித்தவருக்கு இல்லை அவர்களின் முடிவு முன்பே எடுக்கப் பட்டதுதானே என்று வீடு வந்து சேரும் வரை மண்டைக்குள் நிறைய விஷயங்கள் ஓட பதிலாய் ‘ என்ன கவலை பாய்.. எது இருக்கு நம்மகிட்ட கவலைபட…. இப்போ எதுக்கு இவ்ளோ வருத்தம்… ‘ என்று மனதை கேட்க…இதயத் துடிப்பு ஓசை டப்.. டப்… ப்…

இரவு போன் அடிக்க, பழைய ரூமில் எதையோ தேடிக் கொண்டிருந்த யாசிர் பதறி அடித்துக் கொண்டு அதை ஆன் செய்தார்..

” ஹலோ யாசிரா..? ! “

“ஆமா…நீங்க…!? “என இழுத்தார் யாசிர் பாய்…

“அன்னைக்குப் பார்க்ல போட்டோ எடுத்தோமே நானும், மனைவியும்…”

” ஆமா சார். . நல்லாருக்கீங்களா… “

“நல்லாருக்கேன்.. யாசிர்.. ப்ரீயா “

” ப்ரீதான் சார்.. சொல்லுங்க “

“பேத்திய போட்டோ எடுக்கச் சொல்லிருந்தோமே ஞாபகம் இருக்கா…? ” எனச் சிரித்துக்கொண்டார் , தயக்கத்துடன் யாசிர் பாய் ‘ஆமாம் சார்’ …

” இந்த மாசம் எண்ட்ல அவங்க வெளி ஊர்ல இருந்து வராங்க.. நீங்க கொஞ்ச பிரீயா வச்சுக்கிட்டா நல்லாருக்கும்”

” கண்டிப்பா சார் .. வந்தவுடனே போன் பண்ணுங்க”

” ஷ்யூர் .. ” எனச் சொல்லி கட் பண்ணினார்…

யாசிருக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை.. போட்டோ ஸ்டூடியோ வச்சுருந்தப்போ எடுத்த ஆர்டர் .. இப்பதான் பார்க்கினுடைய கேமராவில் வெளியே யாருக்கும் எடுக்கக் கூடாது, சிலருக்கு மட்டும் தான் வெளியே எடுத்துச் செல்லவே அனுமதி என்பது யாஸிர்க்குச் சட்டெனெ ஞாபகம் வர … தூரத்தில் அமைதியாக மூட்டையில் இருந்த கேமரா , பாவனையற்ற முகத்தோடு .

பார்க்கைச் சுற்றியும் புதிதாக விளம்பர பேனர்கள் வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே அன்று பார்க்கிற்குள் நுழைந்தார் யாசிர் பாய். . பார்க்கினுள் நுழைய நுழைய பத்து வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்தப் பார்க் அந்நியப்பட்டுப் போனது . அது பார்க்கில் நடந்திருக்கும் வெளி மாற்றத்தால் இல்லை என்பது அவருக்குத் தெரியும். பாலு யாசிரிடம் வந்து” ஆபீஸ்ல உங்கள கூப்டறாங்க” என்றான்..

” இதலாம் உங்களுக்குத் தேவையா.. போட்டோ எடுக்குறதுனா.. அந்த வேலைய மட்டும் பாக்கவேண்டியதுதான? வயசானாலும் சின்னப் புத்தியா இருக்கீங்க” எனத் திட்டிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் பாலு..

“யாசிர், பார்க்குக்கு வரவங்கள ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க? ” என்றான் நந்தன்..

பாய்க்கு புரியவில்லை.

. “பாய்.. இந்தப் பொண்ணு உங்க மேல வந்து கம்பளைண்ட் பண்ணிருக்கு “எனப் போட்டோவைக் காட்டினார்…

யாசிர் யாராக இருக்கும் என்பதை அந்தப் படத்தைப் பார்க்கும் முன்பே யூகித்துவிட்டார்.

“அவங்களப் போட்டோ எடுங்கனு சொல்லி நீங்க கம்பெல் பண்ணிங்கனு கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கு இந்தப் பொண்ணு….”. சிறிது அமைதிக்குப் பிறகு நந்தன் “பாய் அங்க என்ன நடந்துருக்கும்னு எனக்குப் புரியுது…இப்ப காலம் மாறிபோச்சு.. சில விஷயங்கள ஏத்துக்கிட்டு..பாத்தும் பாக்காத மாதிரி போய்றனும் ” நந்தன்…

யாசிர் பாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.. என்றைக்கும் இல்லாமல் கால் வலிக்க ஆரம்பித்தது.. இந்தப் பார்க் பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்தே பிரஷர் மாத்திரை எடுக்க மறந்திருந்தார், இன்றும் அசதியில் தூங்கிப் போனார்..

காலையில் நேரம் ஆகிவிட்டது.. ஐ டி கார்டை மறந்திடாமல் எடுத்துக் கொண்டு பார்க்கிற்கு நடக்க ஆரம்பித்தார்.. காலையில் வாக்கிங் போறவர்கள் சாலையின் ஓரத்தில் நடந்து கொண்டிருந்தனர்.. பார்க்கிற்குச் சென்ற உடன்தான் தெரிந்தது. இன்றைக்குப் பார்க்கின் போட்டோகிராபர்ஸ் அனைவருக்கும் மேனேஜர் மீட்டிங் பத்து மணிக்கென்று. பக்கத்தில் இருந்த வெள்ளரிக்காயை வாங்கிச் சாப்பிடத் தொடங்கினார்.மேனேஜர் சரியாகப் பத்து மணிக்கு ஆஜராகிவிட்டார்… பார்க்கின் விதிமுறைகளை மறுபடிமறுபடிச் சொல்லிக் கொண்டிருந்தார். தான் மேலும் இரண்டு பார்க்கிற்கு மேனேஜர் ஆகிவிட்டதையும் சொல்லாமல் இல்லை… பாலுவைக் கூப்பிட்டு ரெகார்ட் நோட்டை எடுத்து வரச் சொல்ல… ரெகார்ட் நோட்டிலிருந்து ஒரு கவரை எடுத்த நந்தன்.. அதைப் பிரித்து ஒரு லெட்டரை எடுத்தான்.. அதில் இங்கிருந்து வேற பார்க்கிற்கு மாற்றப் பட்ட பெயர்களைவாசித்தான் நந்தன்.. அதில் யாசிர் பாய் பெயருடன் இரண்டு பெயர்கள் இருந்தன… இது பிரைவேட் பார்க் என்பதால் போட்டோக்ராபர்ஸ் எனத் தனி அஸோஸியேஷன் கிடையாது. அதனால் எந்த முடிவும் எடுக்கக் கூடிய உரிமை அவர்களுக்கு உண்டு. வேலை செய்பவர்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

இங்கிருந்து புதிய பார்க்கிற்குத் தினமும் செல்ல எவ்வளவு செலவாகும், பார்க் கொடுக்கும் சம்பளம்,அறுபது வயது எனப் பலவற்றயும் யோசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார்.. இன்றைக்கு மேனேஜர் மீட்டிங் இருந்ததால் தொழுகைக்குச் செல்ல முடிய வில்லை.. சேரில் கிடந்த பிலிம் ரோல்களை எடுத்து பழைய கேமரா பெட்டிக்குள் திணித்துவிட்டார் யாசிர்.வெளியே மழை பெய்யத் தொடங்கி இருந்தது.. மழை என்பது கொடைக்கானலுக்கு வந்த பின்பு யாசிருக்குப் பழக்கம் ஆகிவிட்டது… இங்கு வந்து நிறைய மாறிவிட்டார்.. பச்சத்தண்ணியில் குளிக்கப் பழகிக் கொண்டார்.

ஒரு மாசம் ஷேவ் பண்ணாத தாடியைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டார்.

அருகிலிருந்த ஐ டி கார்டை எடுத்துக் கொண்டு பார்க்கை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

ஸார் ..’போட்டோ ஸார் ‘.. ‘போட்டோ ஸார் … ‘ ஜோடியாக வந்தவர்கள் யாசிர் பாயிடம்

“எவ்வளவு” என்றனர்

“இரண்டு போட்டோ பிரேமோட நாற்பது “

“நாப்பதா… இவ்வளவு அதிகமா சொல்றீங்க.. “

” இது நம்ம பிக்ஸ் பண்றது இல்லப்பா.. “

” முப்பது நா கூடப் பரவலா… “

“இல்லப்பா.. நாப்பது தான் ” என யாசிர் பாய் சொல்ல.. சரியான பொல்லாதவனா இருப்பான் போல என வாய்க்குள் முனங்கிக்கொண்டே நகர்ந்தனர் இருவரும்..

பெரும்பாலும் இந்தச் சனிக்கிழமைதான் இங்குக் கடைசி நாள் என யாசிர் பாய்க்கு தோன்றியது .. பாலு ‘ போட்டோ சார் போட்டோ சார் …’ எனக் கத்துவது இங்கு வரைக்கும் கேட்டது..

“தாத்தா.. அப்பா எடுக்குற போட்டோவ விட நீங்க எடுக்குறது தான்நல்லாருக்குனு ” பாலுவின் பையன் சொன்னது ஞாபகம் வந்தது யாசிர் பாய்க்கு…

பார்க்கில் அன்றைக்குப் பார்த்த ஜோடி யாசிரை முறைத்துப் பார்த்துக் கொண்டே சென்றனர்…

யாசிர் புல் தரையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்… பாலு உடன் ஏற்பட்ட சண்டை, அவன் மேனேஜரிடம் அதைப் பற்றிச் சொல்லியது…இங்கு போட்டோ வேலை செய்யும் அனைவரும் சேர்ந்து எடுத்த போட்டோ என எதை எதையோ யோசித்துக்கொண்டிருந்தார்யாசிர்..சற்றுத் தொலைவில் இருந்த பாலு சத்தமாக இருமிக் கொண்டிருந்தான்.. இறுமலும் பேச்சும் ஒரே அளவில் இருந்தது…. யாசிர் பார்க்கைச் சுற்றிப் பார்த்தார்.. முன்பெல்லாம் பார்க்கில் போட்டோ எடுக்க ஆர்வமாக இருந்தனர்.. ஒரு நாளைக்குச் சுமார்  இருபது பேர் போட்டோ எடுப்பாங்க… இப்பலாம் எவ்வளவு கொறஞ்சுருச்சு ஒரு நாளைக்கு மூணோ, நாளோ அவ்வளவுதான் ..

வெயில் அதிகமாக அடிக்கப் புல் வெளியில் இருந்த மரத்தின் அடியில் இருக்கும் சேரில் அமர்ந்தார் யாசிர். புதுசாகப் பார்க்கிற்குள் நுழைந்த டூரிஸ்ட் பஸ் சுமார் அறுபத்தைந்து பேரை இறக்கிவிட்டுவிட்டுப் பார்க்கிங் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது..

அங்கங்கு இருந்த போட்டோ நபர்கள் ஒன்றாக மொய்க்கத் தொடங்கினர்.. சிலர் காதுகொடுத்துக் கேட்டுவிட்டு வேண்டாமென நகர்ந்தனர்.. சிலர் பார்க்கை பார்த்துக் கொண்டே சென்றனர்… சிலர் கோவமாகக் கூடப் பார்த்துச் சென்றனர்.. ஆனால் அனைவரும் தன் கையில் வைத்திருந்த சிலேடு போல இருந்த போனை எடுத்துப் படம் பிடித்துக் கொண்டனர்… அந்தச் சிலேடு எவ்வளவை மாற்றிவிட்டது என யோசித்துக் கொண்டார்யாசிர். பார்க் குளோசிங் டைம் விசில் அடித்தும்.. அங்கும் இங்கும் டூரிஸ்ட் பஸ்சில் வந்தவர்கள் ஷெல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.. ரெஜிஸ்டர் நோட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுப் பார்க்கை விட்டு வெளியே வந்தார் யாசிர்.. மழை பிடிக்கத் தொடங்யிருந்தது…

“யாஸிற்குப் பேலன்ஸ் சம்பளத்தைக் கொடுத்தனுப்புங்க” என்றார் நந்தன்.யாசிர் பாய் பேசத் தொடங்கினார் தயங்கிக் கொண்டே .

“அவ்வளவு தூரம் போறது கஷ்டம் சார் “

“அப்படினா எப்படிப் பாய்.. ரெகார்ட்ல பேரு வந்துருக்கே “

“பரவால சார்.. “

“புரியல பாய் “

“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு பாக்குறேன்… “

“அப்புறோம்.. என்ன செய்யப் போறிங்க பாய்.? “.

” தெர்ல சார்… “

லென்ஸ்உடைய கிளோஸர் மூடியைக் காணவில்லை என்று சம்பளத்தில் அதைப் பிடித்துக் கொண்டுதான் மீதி பணத்தைக் கொடுத்தான் நந்தன். அவன் பேசுவான் என்று கடைசி வரை எதிர்பார்த்தும் நடக்கவில்லை. கேமராவைக் கொடுத்துவிட்டு கிளம்பினார் யாசிர் பாய்..கையில் காசில்லாமல் போன வாரம், தான் வைத்திருந்த பழைய கேமராவை விற்கவேண்டிய நிலை . யாசிர் பாய் தனக்குள் எதை எதையோ முனங்கிக் கொண்டே வந்தார்.

மழை நின்றபாடில்லை. உடம்பு கொஞ்சம் ஜுரம் அடிப்பது போல இருக்க , பாயில் படுத்திருந்த பாய் மாத்திரை வைத்திருந்த டப்பாவை திறந்தார்.. அதில் காமெராவின் கிளோஸர் இருந்தது.அவரை அறியாமலே ஒரு சிரிப்பு அவருடன் ஒட்டிக் கொண்டது. அதைத் தன்னுடனே வைத்துக் கொள்ள முடிவு செய்தார்…அவரிடம் இருந்த வெறுமையை அது தன்னுள் புதைத்துக் கொள்ள ! . அவர் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தார். சுவரின் மூளையில் இருந்த கரப்பான்பூச்சி இவரையே பார்த்துக் கொண்டிருந்தது. வீட்டின் கதவை திறந்து மழை சாரலில் நனைய தொடங்கியவர் மனதிற்குள் எந்த விதமான iso, ஷட்டர் ஸ்பீட் ரேஞ் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து கொண்டு கண்களைச் சிமிட்டினார் கொண்டாட்ட நிலையாகி போன வான் மழை துளிகள் யாசிர் பாய் சுமந்து கொண்டிருந்த யாவற்றுக்கும் விடுதலையாய் சிமிட்டல்களுக்குள் உறைந்து கிடந்தன…!

மணிமேகலையின் வாழ்விலே ஒரு தினம் – ஸிந்துஜா சிறுகதை

மணிமேகலையின் வேண்டுகோளுக்கு கடவுள் செவி சாய்க்கவில்லை என்று அன்றிரவு  அவளுக்குத் தெரிந்து விட்டது. சாப்பிட்டு விட்டுக் கணினியைத் திறந்து பார்த்த போது , அவள் பெயர் லிஸ்டில் காணப்

பட்டது. அவள் வேண்டிப் படைக்கும் கொழுக்கட்டை கடவுளுக்கு அலுத்து விட்டது போலிருக்கிறது. எங்கே  போட்டுத் தொலைத்திருக்கிறார்கள் என்று எரிச்சலுடன் பார்த்தாள். நகரத்துக்கு வெளியே  போவதற்குச் சற்று முன்பாக அமைந்திருந்த காலனியின் பெயர் காணப்பட்டது. அவள் இருக்குமிடத்

திலிருந்து, அங்கே போவதற்கே  பஸ்ஸில் ஒன்றரை மணி நேரமாகும். தங்குமிடத்தில் இரண்டு பகல்களும் ஒரு இரவும் கழித்தாக வேண்டிய கொடும் தண்டனை வேறு என்று வெறுப்புடன் நினைத்தாள். 

சென்ற  முறை தப்பித்த மாதிரி  இந்த முறையும் தேர்தல் வேலையில் 

மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும் என்று ஆரம்பத்தில் ஒரு நப்பாசை இருந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் இந்த முறை கடுமையான விதியைக் கொண்டு வரப்  போவதாகவும் , அரசியல் அல்லது அரசாங்க  செல்வாக்கைக்  கொண்டு வர முயல்பவர்களுக்குக்  கடுமையான தண்டனை இருக்கும் என்றும் சர்குலர் வந்து விட்டதாக ஒரு நாள் செகரட்டரி விமலா செல்வராஜ் அவள் நம்பிக்கையில் மண்ணைப் போட்டாள். விதியை மீறுபவர்களின் ஸி. ஆரில் கறுப்புக் குறிப்புகள் இடம் பெறும் என்று விமலா பயமுறுத்தினாள். போன தடவை மணிமேகலையின் சித்தப்பா கார்பரேஷன் கமிஷனரின் அந்தரங்கச் செயலாளராக இருந்தார். கமிஷனரின் செல்வாக்கு மூலம்  மணிமேகலையின் பெயர் லிஸ்டில் தவிர்க்கப்பட்டு விட்டது. அப்போதே யாரோ போய் விமலாவிடம்,வத்தி வைத்து விட்டார்கள். மணிமேகலைக்குப் பதிலாக , லிஸ்டில் விமலா பெயர் சேர்க்கப்பட்டு விட்டதாக. அந்தக்  கோபத்தைத்தான் விமலா இந்த பயமுறுத்தல்களாகக் காண்பிக்கிறாளோ  என்று மணிமேகலைக்கு மெலிதாக ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் விமலா சொன்னது எல்லாம் உண்மைதான் என்று ரெவினியு இன்ஸ்பெக்டர் குமரப்பா உறுதி செய்து விட்டான்.

அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தேர்தல் நடக்கும் போது  வாக்குப் பதிவு  

நடத்த முன் வந்து கடமை ஆற்ற வேண்டும் என்று எந்தப் புண்ணியவான் எழுதி வைத்தானோ என்று திட்டினாள் மணிமேகலை..அ. உத்தியோகஸ்

தர்கள்தான் இளிச்சவாயர்கள் என்று அரசாங்கமே நினைத்து இருக்க வேண்டும் . தேர்தல் அன்று ஓட்டுப் போடத் தகுதியில்லாத குழந்தைகளில் இருந்து தகுதியுள்ள ஆனால் ஓட்டுப் போடப் போகாத பெரியவர்கள் வரை விடுமுறை தினம் என்று ஜாலியாக மஜா பண்ணும் நாளில் ஒரு அரதப் பழசான கட்டிடத்தில் மின்விசிறி இல்லாத அல்லது இருந்தும் ஓடாத அறையில் சர்க்காரின் பழுப்புக்  காகிதங்கள்  சாமான்கள் என்று அடுக்கி பிரித்து மூடி மறுபடியும்  திறந்து அடுக்கி காலை முதல் மாலை வரை தேர்தல் பணி  என்னும் காரியத்தைச் செய்தாக வேண்டும்.

லீவு போய்விட்டதே என்பதல்ல மணிமேகலையின் வருத்தம் எல்லாம். அவள் விடுமுறை நாட்களில் கூட அலுவலகம் வந்து வேலை செய்து

விட்டுப் போகும் பிரகிருதி.  தேர்தல் தேதிதான் அவள் கனவுகளில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது. முன்னமேயே ஒரு வாரம் குடும்பத்

துடன் தாய்லாந்து போகத் தீர்மானித்திருந்தார்கள். மிகவும் குறைந்த விலையும்  அதிகப்படியான சலுகைகளும் கொடுக்கப்பட்ட  விமானப் பிரயாணச் சீட்டுக்களினால் கவரப்பட்டு ஏற்பாடுகளைச் செய்வதாக மணிமேகலையின் கணவன் கூறியிருந்தான். அந்த வாரத்தின் நட்ட நடுவில் தேர்தல் தேதியை வைத்தால் யாருக்குத்தான் கோபம் வராது? ஆனால் என்ன புலம்பி என்ன? 

இதைத் தவிர, தேர்தல் பணியை முன்னிட்டு அவள் மேற்கொள்ள

வேண்டிய பிரயாசைகள் மணிமேகலைக்கு அதிக எரிச்சலைத் தந்தன. அலுவலக நேரத்தில் பயிற்சி முகாம்களுக்குச் செல்ல வேண்டும். அந்த நேரத்தில்  அவள் மேஜையில் வந்து குமியும் ஃபைல்களை அவள்தான் அலுவலகத்துக்கு வீட்டிலிருந்து சீக்கிரம் வந்து அல்லது வீட்டுக்கு நேரம் கழித்துப் போய், இல்லாவிட்டால், சனி,ஞாயிறுகளில் வந்து உட்கார்ந்து குவியல்களைக் குறைக்க வேண்டும். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் மாதிரி தேர்தல் பயிற்சி முகாமில் சொல்லிக் கொடுப்பதை  மனப்பாடம் செய்ய வேண்டும். நாற்பது  வயதில் இது என்ன தலையெழுத்து?  சிலசமயம் அவள் கணவன் சொல்கிற மாதிரி வேலைக்குப் போகாமல் இருந்திருக்

கலாம்.   ஆனால் கை நிறையக் கிடைக்கும் சம்பளத்தை எப்படி இழப்பது ? அவள் வருவாய்த் துறையில் இரண்டாம் நிலை அதிகாரியாக இருந்தாள்.

இந்த அரசாங்க வேலை சம்பளத்தைத் தவிர தரும் அதிகாரம், செல்வாக்கு போன்ற சௌகரியங்களை எப்படி இழக்க முடியும் ? 

குறிப்பிட்ட தினத்தில் மணிமேகலை  அரசாங்கக் கட்டிடத்தை  அடைந்த போது மணி பத்து அடிக்கப் பத்து நிமிஷங்கள் இருந்தன. பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள் குழுமியிருந்தார்கள். மணிமேகலையும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். தெரிந்த முகம் எதுவும் தென்படுகிறதா என்று பார்த்தாள். ஒருவரும் காணப்படவில்லை . அன்றையக் கூட்டத்தில் எந்தெந்த வாக்குச் சாவடிகளுக்கு யார் யார் தேர்தல் அதிகாரியாகப்  போக வேண்டும். அவருக்குக் கீழே பணி புரியவிருக்கும் அரசாங்கப் பணியாளர்கள் எவ்வளவு பேர், அவர்களைப் பற்றிய விவரங்கள், என்னென்ன உபகரணங்களை வாக்குச் சாவடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்னும் விவரங்களை எல்லாம் இந்தக் கூட்டத்தில் பேசி விவாதித்து முடிவு செய்யப்படும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். 

“போன வருஷம் நான் போன பள்ளிக்கூடம் இடிஞ்சு விழுந்துருமோன்னு பயந்துக்கிட்டேதான் எல்லாரும் வந்து போனாங்க. அந்த வாக்குச் சாவடி

லேதான் ரொம்பக் கம்மியான  வாக்குப்  பதிவு. ஒரு சமயம் ஜனங்க  கம்மியா வரட்டும்னு அங்கே ஏற்பாடு பண்ணி ணாங்களோ என்னவோ!” என்று சிவப்பு ஸ்வெட்டர் அணிந்த ஒருவர் சொன்னார்.

“ஏன்தான் இந்த மாதிரி கவர்மெண்டு பள்ளிக்கூடத்தை எல்லாம் வாக்குச் சாவடியா யூஸ் பண்றாங்களோ?” என்று ஒரு நடுத்தர வயது மாது அங்கலாய்த்தாள்.

“என்ன அப்படிச் சொல்லிட்டீங்க? பள்ளிக்கூடத்திலே நடத்தினா மேஜை  

நாற்காலி பெஞ்சு இதுக்கெல்லாம் செலவழிக்க வேண்டாம். இடத்துக்கு வாடகை குடுக்க வேண்டாம்ன்னு  ரொம்ப யோசிச்சில்லே முடிவு எடுத்தி

ருக்காங்க?”‘என்று கிண்டலும் கேலியுமாக ஒரு நாமக்காரர் சிரித்தார்.

“இப்ப ஒவ்வொரு கட்சியும்  தேர்தல் செலவுக்குன்னு இறைக்கிற பணத்துல இதெல்லாம் பிச்சைக் காசு. நம்ம கழுத்திலே கத்தியை வச்சு  பாவம் கவர்மெண்ட்டு மிச்சம் பிடிக்கிறாங்க. எதோ நம்மளால ஆன தேச சேவை போங்க ” என்றார் முதலில் பேசிய சிவப்பு ஸ்வெட்டர்காரர். 

“விலைவாசி நாளுக்கு நாள் ஏறிகிட்டே போகுது . பஸ்காரன் அப்பப்ப விலையை ஏத்தறான் . நமக்குக் கொடுக்கற அலவன்ஸ் மாத்திரம் மார்க்கண்டேயன் வயசு மாதிரி அப்படியே நிக்குது. கேட்டா கமிட்டின்னு சொல்றான். இன்னும் முடிவு எடுக்கலையாம்.  அவங்க நாம ரிட்டையரானதுக்கு அப்புறம் வரவங்களுக்குக் கொடுப்பாங்க போல இருக்கு” என்றாள் இன்னொரு பெண்.

மணிமேகலைக்கு இந்தப் பேச்சை எல்லாம் கேட்பதற்கு அலுப்பாக இருந்தது. இரண்டு நாள் வேலைக்கு தினம் ஐநூறோ என்னமோ 

கொடுக்கிறார்கள். அப்படியே உயர்த்தி விட்டாலும் இப்போது ஒருவர் சொன்னது போல கொஞ்சம் அதிகமான பிச்சைக்காசுதான் வரும். 

அப்போது ஒரு பணியாள்  வந்து அவர்களைக் கூட்டம் நடத்தும் இடத்துக்கு அழைத்தான். எல்லோரும் எழுந்து சென்றார்கள். அவர்களது மேலதிகாரி தேர்தலன்று வாக்குச் சாவடி அதிகாரியாக அவர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றிச் சொன்னார்.

அதற்கு அடுத்த வாரம் ஒரு நாள் காலை பதினோரு மணிக்கு ஒரு கூட்டம் நடந்தது. அன்று அவளுடைய வாக்குச்  சாவடியில் அவளுக்குக் கீழே பணி

புரிய வேண்டிய மூன்று பேர்கள் அவளுடன்  வந்து சேர்ந்து கொண்டனர். அவர்களில் இருவர் உதவி அதிகாரிகள். மற்றும் ஒரு பியூன். இரு உதவி

அதிகாரிகளிலும் மூத்தவர்.பெயர் கஜபதி  . இன்னொருவர் சம்சுதீன். 

கஜபதி அவளருகே வந்து “நமஸ்காரா மேடம்”என்றார். 

“குட்மார்னிங். உங்கள் ஆபிஸ் எங்கே? எந்த டிபார்ட்மென்ட்?” என்று மணிமேகலை கேட்டாள் ஆங்கிலத்தில்.

“சிக்க மகளூரு . ரெவினியூ டிபார்ட்மென்ட்டல்லி கலசா மாடுத்தினி” என்றார்.

“ஓ, நீங்களும் நம்முடைய டிபார்ட்மெண்டில்தான் இருக்கிறீர்களா? ” என்றாள் மணிமேகலை.

“ஹௌது மேடம்” என்றார் கஜபதி.

பிடிவாதமாக அவர் தனக்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்காதது அவளுக்கு எரிச்சலை மூட்டியது. சிக்கமகளூரிலிருந்து பெங்களூருக்கு மாற்றல் உத்திரவு கொடுத்தால் இதெல்லாம் சரியாகி விடும்.

பிறகு அவர் சம்சுதீனை அறிமுகப்படுத்தினார். இருவரும் ஒரே ஊர்க்

காரர்கள். ஆனால் சம்சுதீன் வேலை பார்ப்பது அங்குள்ள ஒரு அரசு நிறுவனத்தின் கிளையில். பியூன் தன்னைக் கரியப்பா என்று அறிமுகப்

படுத்திக் கொண்டான். பேசும் போது கஜபதிக்கு  தேர்தல் வேலைகளில்

அதிகப் பரிச்சயம் உண்டு என்று தெரிந்தது. அந்த வகையில் தான் அதிர்ஷ்டசாலி என்று மணிமேகலை நினைத்துக் கொண்டாள். புதிதாகவோ அல்லது அதிகம் உள்வாங்கிக் கொள்ளாமல் தேர்தல் வேலைகளைக் கடனே என்று செய்பவர்களாய் இருந்தாலோ  எல்லாவற்றையும் முதன்மை அதிகாரி என்று அவளே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டும். அதில் அவள் எதிர்கொள்ள வேண்டிய மிகப் பெரும் பிரச்சினை வாக்குச் சாவடியில் தேர்தல் நடக்கும் போதும் முடிந்தவுடனும்  மாநில மொழியில் உள்ள ரிக்கார்டுகளைச் சீராகத் தயாரித்து சமர்ப்பணம் செய்ய வேண்டி

யிருந்ததுதான். அவளுக்கு அம்மொழியில் பேச்சுப் பரிச்சயம் இருந்தது. ஆனால் எழுதத் தெரியாது. ஆனால் அரசாங்கத்தில் அவளைப் போலப் பலர் இருந்தார்கள்.

சென்ற முறை தேர்தல் வேலைக்கு அவளைப் பெங்களூருக்குள்ளேயே போட்டார்கள். ஆனால் அப்போது அவளுக்குஉதவியாளனாக வந்தவன் மண்டைக்கர்வம் பிடித்தவனாக இருந்தான். அவளுக்கு மொழிப் பிரச்சினை இருக்கிறது என்று தெரிந்தும்  அவளுடைய வேலைகளையெல்லாம் தான் பார்க்க முடியாது என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டான். அதற்குப் பின் அவள் தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் கிளார்க்கை வரச் சொல்லி வேலைகளை முடித்தாள். 

கூட்டம் முடிந்ததும் அவர்கள் அதே கட்டிடத்தில் இருந்த தேர்தல் கமிஷன்  அலுவலகத்திற்குச் சென்றார்கள். அவர்களது வாக்குச் சாவடியில் வைக்கப்பட வேண்டிய வாக்கு இயந்திரம்  வாக்குப் பதிவு மற்றும் வாக்காளர் ரிஜிஸ்தர். வாக்காளர் சீட்டுக் கட்டுக்கள், அழியாத மை அடங்கிய கூடுகள், தேர்தல் அதிகாரியினுடைய ரப்பர் சீல், டயரி, தேர்தல் வேட்பாளர் மற்றும் வாக்காளர் ஃபார்ம்கள், சிறிய பெரிய கவர்கள், அடையாளப் பலகைகள், பேனா, பென்சில், ரப்பர், கோந்து என்று எல்லாப் பொருட்களும் அடங்கிய இரு பெட்டிகளில்  அவர்களது வாக்குச் சாவடியின் எண் , சாவடியின் விலாசம் குறிக்கப்பட்டுத் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. மணிமேகலையின் உதவியாளர்கள் அனைத்தையும் சரி பார்த்த பின் அங்கிருந்த ரிஜிஸ்டரில் இவற்றைப்  பெற்றுக் கொண்டதாக மணிமேகலை கையெழுத்திட்டாள். இரு பணியாட்கள் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு வந்து அலுவலகத்துக்கு வெளியில் இருந்த பஸ்ஸில் ஏற்றினார்கள். மணிமேகலையும் மற்றவர்களும் பஸ்ஸில் ஏறிக் கொண்டனர். ஏற்கனவே மேலும் பலர் அந்தப் பஸ்ஸில் இருந்தனர்.     

ணிமேகலையின் வாக்குச் சாவடியும் ஒரு பள்ளிக் கட்டிடத்தில்தான் அமைக்கப்பட்டிருந்தது. பஸ்ஸிலிருந்து இரு பெட்டிகளையும் பணியாட்கள் வாக்குச் சாவடிக்குள் இறக்கி வைத்து விட்டுத் திரும்பிப் போனார்கள். 

பள்ளிக் கட்டிடம் பங்கரையாகக் காணப்பட்டது. அதன் சுவர்களில் அடிக்கப்

பட்டிருந்த வெண்மை நிறம் இப்போது பழுப்புக்கு மாறிக் கொண்டிருந்தது. ஊர்த் தூசியும் மாறி மாறி அடித்த வெய்யிலும் மழையும் இந்த மாற்றத்துக்கு காரணமாக இருக்க வேண்டும் என்று மணிமேகலை நினைத்தாள். ஆனால் வெளித் தோற்றத்திற்கு மாறாக உள்ளே சுத்தமும்,

ஒழுங்கும் காணப்பட்டன. தரை கழுவப்பட்டு மேஜை நாற்காலிகள் சீராக வைக்கப்பட்டிருந்தன. கஜபதி அவளை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றார். அவர்கள் அறைக்கு எதிரே இருந்த அறையில் நுழைந்தவரை மணிமேகலையும் தொடர்ந்தாள். அச் சிறிய அறையில் ஒரு கட்டிலும், அதன் மேல் ஒரு தலையணையும் போர்வையும் இருந்தன. 

“இல்லினே மேடம் நீங்க தங்கணும்” என்றார் கஜபதி அவளைப்  பார்த்து.

“உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” என்று அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“சொல்ப சொல்ப” என்றார்.. 

“எனக்குக் கன்னடம் தெரிஞ்சிருக்கற மாதிரி” என்று அவள் சிரித்தாள்.

கஜபதி வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அவளைப் பார்த்தார். அது அவளுக்குப் பிடிக்கவில்லை.

“ரொம்ப திவசமா இங்க இருக்கீங்களா?” என்று கேட்டார் மணிமேகலை

யிடம்.

“ஆமா. பத்துப் பன்னெண்டு வருஷமா இருக்கேன்” என்றாள் அவள்.

‘அப்படியும்  கன்னடம் கத்துக்  கொள்ளவில்லையா?’ என்று கஜபதி கேட்க

வில்லை. ஆனால் மனதுக்குள் எழுந்த குற்ற உணர்ச்சியை அவளால் அடக்க முடியவில்லை.  

“கரியப்பா இங்க ராத்திரி நீரு  வெச்சிர்வான். ஃபேனு  இருக்கு. நல்லதாப் போச்சு”  என்று விட்டத்தைப் பார்த்தார்.

“நீங்கள்லாம்?” என்று கேட்டாள். 

“நாம  வெளி ஜாகாலே தலையை போட்டுக்க வேண்டியதுதான். எங்க தூங்கறது? சொள்ளே பிராபிளம்   ஜாஸ்தி” என்றார்.

பரிதாபத்தை வரவழைக்கும் பேச்சா என்று அவள் அவரை உற்றுப் பார்த்தாள்.

“எலக்சன் கலசாந்தரே  எரடு மூறு திவசா ஒள்ள கிரகச்சாரானே. நம்பள ஆளப் போறவன் கிட்டே கஷ்டப்படுடான்னு  இப்பவே  நம்பள கஷ்டப்படுத்த

றாங்கோ. அப்புறம் அவன் ஆளறேன்னும் நம்பளத்தான் கஷ்டப்படுத்தப் போறான்” என்றார் கஜபதி.

மணிமேகலை புன்னகை செய்யவில்லை. 

பிறகு தன் கைப்பையை அங்கிருந்த கட்டிலின் மீது வைத்தாள். அது தவறிக் கீழே விழ உள்ளிருந்த பர்ஸ் வெளியே வந்து திறந்து கொண்டது.. கஜபதி குனிந்து அதை எடுத்து அவள் கையில் கொடுத்தார். அப்போது பர்ஸின்  உள்ளேயிருந்த புகைப்படத்தின் மீது அவர் பார்வை விழுந்தது. பர்ஸை மணிமேகலையிடம் கொடுத்துக் கொண்டே “நிம்ம மகளுனா?” என்று கேட்டார்.

“ஆமா” என்று அவள் புன்னகை செய்தபடி பர்ஸைத் திறந்து பெண்ணின் 

படத்தைப் பார்த்தாள்.

“பேரு என்னா மேடம்?” என்று கேட்டார் கஜபதி.

“சத்யபாமா.” 

“ஓ ஒள்ள எசரு. கிருஷ்ண பரமாத்மாவை நினைச்சா சத்யபாமா

ஞாபகத்துக்கு வந்திடும்”  என்று சிரித்தார் கஜபதி.

“உங்களுக்குக் குழந்தைகள்?” 

“எனக்கும் ஒரே மகள்தான். சம்யுக்தான்னு பேரு.”

“நல்ல பெயர்” என்றாள்.

‘வடக்கத்தி ராணி பேருன்னு ஞாபகம் வச்சுக்கலாம்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். சொல்லவில்லை.      

அவளும் கஜபதியும் கட்டிடத்தின் பின் பகுதிக்குச் சென்றார்கள். பரந்த இடத்தை முள்ளும் கல்லும் நிறைத்திருந்தன. வலது பக்க மூலையில் கிணறு காணப்பட்டது. அதன் வெளியே இரண்டு பக்கெட்டுகளும், சங்கிலி பிணைத்திருந்த வாளியும் இருந்தன. கிணற்றிலிருந்து வாளியில் நீரை எடுத்து க்கெட்டில் வைத்திருந்தார்கள். அவள் பார்வை சுற்றிய போது சற்றுத் தொலைவில் கதவு மூடிய ஒரு அறை தென்பட்டது. 

அவள் பார்வையைப் பின்பற்றிய கஜபதி “அதுதான் பாத்ரூம். உள்றே டாய்லெட்டும் இருக்குது” என்றார்.

அவள் அதை நோக்கி நடந்து மூடியிருந்த கதவைத் திறந்தாள். டாய்லெட் படு சுத்தமாக இருந்தது. ஆனால் குளிக்க வசதியாக அந்த இடம் இருக்க

வில்லை.

“ரொம்ப ஆச்சரியமா இருக்கே. பப்ளிக் வந்து போற இடம் இவ்வளவு சுத்தமா இருக்கும்னு நான் நினைக்கலே” என்றாள் அவள்.

கஜபதி அங்கிருந்த போர்டைக் காண்பித்தார். கன்னடத்தில் எழுதப்

பட்டிருந்தது. ‘வெளியாட்களுக்கு உரிமை கிடையாது. மீறி நுழைவோர் தண்டிக்கப்படுவர்’ என்று எழுதியிருப்பதாக அவர் கூறினார்.  

கஜபதி அவளிடம் “இது எங்களுக்கோசரம் மேடம். இங்க பக்கத்து மனேலே சொல்லி வச்சிருக்கு. இந்த ஸ்கூல் டீச்சரவரு மனை. அங்க நீங்க போயிட்டு வரலாம்” என்றார்.

அவள் நன்றியுடன் கஜபதியைப் பார்த்தாள்.   

இரவுச் சாப்பாடு வேண்டுமா என்று கேட்டுக் கொண்டு அன்றிரவு கரியப்பா வந்தான். அவள் வீட்டிலிருந்து பிரெட்டும் பழமும் கையில் எடுத்துக் 

கொண்டு வந்ததால் ஒன்றும் வேண்டாம் என்று கூறி விட்டாள். அவன் போன பின், பையிலிருந்து பிரெட்டையும் பழங்களையும் எடுத்தாள். கூடவே பையிலிருந்து எடுத்ததில் ஒரு பெரிய சாக்லேட் பாக்கெட்டும் வந்தது. மறுநாள் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அதை உள்ளே வைத்து விட்டாள்.  

மறுநாள் காலையில் ஏழு மணிக்கு வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு ஆரம்பிக்கும் என்பதால் ஐந்து மணிக்கே மணிமேகலை படுக்கையை விட்டு எழுந்து விட்டாள். அருகிலிருக்கும் வீட்டிற்குச் சென்று தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள அவள்  கஜபதியைத் தேடிச் சென்றாள். இரவு வாசலில் படுத்திருந்த மூன்று பேரையும் அங்கே காணவில்லை. அவள் ஹாலுக்குள் நுழைந்த போது கஜபதியும் சம்சுதீனும் கரியப்பாவும் மும்முரமாக வேலையில் இருந்தார்கள்.

கஜபதி அவளைப் பார்த்ததும் “குட்மார்னிங் மேடம்” என்றார். மற்ற இருவரும் அவரைப் பின்பற்றினார்கள்.

“இந்த வேட்பாளர்கள் லிஸ்டு, அவங்க கையெழுத்து ஸ்பெசிமன், போட்டோ எல்லாத்தையும் நீங்க பாக்கறதுக்கு எடுத்து வச்சிருக்கேன். அதேமாதிரி ஏஜெண்டுகளுக்கும் இந்த பேப்பர்கள் எல்லாம் கொடுத்

திருக்காங்க. அழியாத மசி பாட்டில் மூடியோட வச்சிருக்கோம். கட்சிச் சின்னத்தோட இருக்கிற வேட்பாளர் போஸ்டரையெல்லாம் எல்லாப் பக்கமும் ஒட்டி வச்சாச்சு. வாக்காளருங்க  மத்தவங்க பார்வை படாம வோட்டு போடுறதுக்கு வசதியா மூணு கவுண்டர் கட்டி வச்சாச்சு. இதெல்லாம் முடிக்கணும்னுதான் நாங்க சீக்கிரமா எழுந்து வந்துட்டோம்” என்றார் கஜபதி.   

பிறகு அவர் “மேடம் நீங்க வாங்க. டீச்சரவரு மனையல்லி நீங்க ரெடி பண்ணிட்டு வந்திறலாம்” என்று அழைத்துச் சென்றார். அவள் குளித்துத் தயாராகி கஜபதி இருந்த இடத்துக்குத் திரும்பிய போது ஐந்தரை என்று கைக்கடிகாரம் காட்டியது. ஆறு மணிக்கு தேர்தல் ஏஜெண்டுகள் அனைவரும் வந்து விட்டார்கள். மாதிரி தேர்தல் நடத்தி முடிக்க ஐம்பது நிமிஷம் ஆகியது. ஏழு மணிக்குச் சரியாக முதல் மனிதர் வாக்குப் பதிவு செய்ய உள்ளே வந்தார்.

மணிமேகலை கஜபதியை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். வந்திருந்த ஏஜெண்டுகளிடம் இன்முகம் காட்டி அவர்கள் ஒவ்வொரு

வரையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மாதிரி தேர்தல் நடக்கையில் மெஷினிலிருந்து வர வேண்டிய ‘பீப்’ சத்தம் வராத போது அதைச் சரி செய்தார். உள்ளூர் பாஷையிலும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் ஏஜெண்டுகளுக்கான கடமைகள் உரிமைகள் பற்றிச் சொன்னார். அவரது பார்வை ஹாலின் உள்ளே, வாக்கைப் பதிவு செய்யும் இயந்திரம் மேலே, அவரது உதவியாளர்கள் மீது என்று சுழன்று கொண்டே இருந்தது., வாக்காளர்களின் சந்தேகங்களை நிவர்த்திப்பது,வாக்காளர்களை வாக்குப் பெட்டிக்கு அருகே நடத்திச் செல்லுவது என்று பம்பரம் மாதிரி சுற்றிக் கொண்டிருந்தார். வாழ்க்கையில் பல தேர்தல்களில் அவர் பணி  புரிந்திருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள்.

காலையில் குடிக்க எடுத்து வந்த கடுங் காப்பியையும், இட்லி என்று கல்லுடன் போட்டி போட்டுக் கொண்டு வந்து நின்ற உணவையும் சாப்பிட மணிமேகலை திணறி விட்டாள். இது ஒவ்வொரு முறையும் அவள் எதிர் கொண்ட சித்திரவதைதான். அவள் பரிதாபமாக கஜபதியையும் அவர் அவளையும் நோக்குவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

கஜபதி அவளிடம் வந்து “மத்தியானம் டீச்சர் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வர அரேஞ்சு பண்ணிடறேன்” என்றார்.

“எனக்கு மட்டுமா?” என்று மணிமேகலை கேட்டாள். அவள் முகத்தை அவர் உற்றுப் பார்த்தார். “சரி, நாம நாலு பேருக்கும் சொல்லிடறேன்” என்று சிரித்தார். மதியம் வந்த உணவு சாப்பிடும்படி ஓரளவு சுவையாக இருந்தது. 

அவளுக்கு அவரிடம் நன்றி தெரிவிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அலுவலகத்தில் அவளுக்குக் கீழ்மட்டத்தில் வேலை பார்ப்பவர்களிடம் நன்றி தெரிவிக்கும் பழக்கம் இருந்ததில்லை. அவர்கள் கடமையைச் செய்வதற்கு எதற்கு நன்றி கூற வேண்டும்? 

நடுவில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல்  ஏழு மணிக்குத் தேர்தல் முடிந்தது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ‘மூடு’ என்று தெரிவித்த பட்டனை கஜபதி அழுத்தினார். அதன் காட்சிப் பலகை அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைக் காட்டியது. அதைக் குறிப்பிட்ட பாரத்தில் எழுதி மணிமேகலையின் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டார். சம்சுதீனும் கஜபதியும் வாக்குச் சாவடியில் தேர்தல் நடந்த வழிமுறை

களைப் பின்பற்றியது, வாக்குப் பதிவு சம்பந்தமான பாரங்கள்,வாக்காளர்கள், ஏஜெண்டுகள், தேர்தல் அதிகாரிகள் ஆகியவர்களைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய ரிஜிஸ்தர்கள் ஆகியவற்றை அப்டேட் செய்தார்கள்.மணிமேகலை

கையெழுத்திட வேண்டிய இடத்தைக் கஜபதி காட்டினார். வாக்குப்பதிவு யூனிட்டையும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் யூனிட்டையும் சீல் வைத்து 

வாக்குச் சாவடியில் பெயரும் விலாசமும் நிரப்பப்பட்ட அட்டையைக் கயிற்றுடன் கட்டி இயந்திரத்தின் வெளிப்புறத்தில் வைத்தார்கள். பிறகு சர்வீஸ் சென்டருக்கு அவற்றை எடுத்துச் செல்ல வந்த வேனில் ஏற்றுக் கொண்டு நால்வரும் சென்றார்கள். அங்குள்ள அதிகாரி அவற்றைச் சரி பார்த்து விட்டு அவர்கள் போகலாம் என்று அனுமதி தந்தார்.

திரும்பவும் அவர்கள் பள்ளிக்கு அருகில் இருந்த டீச்சரின் வீட்டுக்கு வந்தார்கள். அங்குதான் அவர்கள் கொண்டு வந்திருந்த கைப்பெட்டி, பை ஆகியவற்றை வைத்து விட்டு சர்வீஸ் செண்டருக்குப்  போயிருந்தார்கள். அங்கே சென்றதும் அவர் மற்ற இருவரிடமும் “நீங்க இங்கயே இருங்க. மேடத்தை நான் பஸ் ஸ்டான்டில் விட்டுட்டு வரேன்” என்றார். அவளிடம் “நாங்க மூணு பேரும் இங்கியே ஒரு பிரெண்டு வீட்டிலே தங்கிட்டு நாளைக்குதான் ஊருக்குப் போறோம்” என்று சொன்னார். பிறகு இருவரும் பஸ் நிலையத்தை நோக்கி நடந்தார்கள். 

அவள் ஏற வேண்டிய பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. அவள் தயக்கத்துடன் தன் கைப்பையைத் திறந்து சில ரூபாய் நோட்டுக்களை எடுத்து “நீங்க மூணு பேரும் எனக்கு செஞ்ச உதவிக்கு இதைவச்சுக்கணும்”

என்றாள்.  

கஜபதி ஒன்றும் சொல்லாமல் அவளைச் சில நொடிகள் பார்த்தார். பிறகு “இல்ல மேடம். நம்ப வேலைக்கு கவர்மெண்டு பணம் தராங்க. உங்களுக்கும் அவங்க கொடுக்கறது உங்க வேலைக்கு” என்றார்.

மணிமேகலை பஸ்ஸில் ஏறிக் கொண்டாள். ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்தாள். சற்றுத் தொலைவில் கஜபதி நடந்து போய் ஒரு கடை முன்னே நிற்பதைப் பார்த்தாள். திரும்பி வரும் போது அவர் கையில் ஒரு சிறிய கூடை இருந்தது. ஜன்னல் வழியே அதை மணிமேகலையிடம் நீட்டி “எடுத்திட்டு போங்க மேடம். ரஸ்புரி மாம்பழம். ரொம்ப இனிப்பா டேஸ்டியா இருக்கும்” என்று கொடுத்தார்.

அவள் அவரிடம் “இதெல்லாம் எதுக்கு உங்களுக்கு வீண் செலவு? எவ்வளவு ஆச்சு?” என்று பைக்குள் பர்ஸை எடுக்கக் கையை விட்டாள்.

“பணத்தையெல்லாம் எடுக்க வேண்டாம். சரி. உங்களுக்குப் பழம் வேண்டாம்னா சத்யபாமாவுக்குக் கொடுங்க ” என்றார் கஜபதி.

‘சட்’டென்று ஒரு வினாடி அவளுக்குப் புரியவில்லை. பிறகு தன் பெண்ணைச் சொல்கிறார் என்று உணர்ந்து அவள் முகம் புன்னகையில் மலர்ந்தது.

பைக்குள் விட்ட கையில் சாக்லேட் பாக்கெட் பட்டது. அதை எடுத்து அவள் கஜபதியிடம் கொடுத்தாள்.  சில வினாடிகள் கழித்து “உங்க பொண்ணுக்குக் குடுங்க” என்றாள்.

“தாங்க்ஸ் மேடம்” என்றார் கஜபதி.  பஸ் கிளம்பிற்று. மணிமேகலை கையை அசைத்து அவருக்கு விடை கொடுத்தாள். பஸ் ஓடிக்கொண்டிருந்தது. அடுத்த கால்மணிக்கும் மேலே அவள் எவ்வளவோ முயன்றும் கஜபதியின் பெண்ணின் பெயரை ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியவில்லை.

வாக்கரிசி – சுஷில் குமார்

                                                    சுஷில் குமார்                             

வழக்கம் போல அன்றும் வகுப்பறையின் சன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு தாய்ப்பன்றியும் கிட்டத்தட்ட பத்து குட்டிப் பன்றிகளும் என்னை நோக்கி வந்தன. வழக்கமாக இடைவேளை மணி அடிக்கும்போது பன்றிக் குட்டிகளுக்கு இலந்த வடையும் கல்கோனா மிட்டாயும் கொடுத்து அவை அவற்றை சப்பிக் கொண்டிருக்கும்போது குட்டிப் பன்றிகளின் வாலைப் பிடித்து விளையாடுவேன். அன்றும் கூட தாத்தா கொடுத்திருந்த இரண்டு ரூபாய்க்கு கல்கோனா வாங்கி வைத்திருந்தேன். அந்தப் பன்றிக் கூட்டம் என் சன்னல் அருகே வந்ததும் ஒரு மிட்டாயை எடுத்து சன்னல் வழி நீட்டினேன். திடீரென என் தலையின் பக்கவாட்டில் ஏதோ வந்து தாக்க, அதிர்ந்து திரும்பிப் பார்த்தேன். முகம், தலையெங்கும் சாக்பீஸ் பொடி. என் ஆங்கில ஆசிரியர் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார். கண்களால் அவர் சைகை செய்ய அந்தக கரும்பலகைத் துடைப்பானை எடுத்துக் கொண்டு போய் அவரருகே நின்றேன்.

“என்ன டே வாய்பொளந்தான்! தாத்தாவுக்கு போன் பண்ணட்டா? எப்பிடி?”

நான் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றேன்.

“என்ன டே? கல்லுளிமங்கன் மாதி நிக்க? எதாம் கேட்டா ஒண்ணுந் தெரியாத்த அப்பாவி மாதி மொகத்த வச்சிருவான். செரியான சிமிளனாக்கும்.” என்று சொல்லியவாறு என் வலது காதை பிடித்துத் திருகினார். நான் அப்போதும் அசையாமல் நிற்க, என் தலையில் படிந்திருந்த சாக்பீஸ் பொடியை தட்டி விட்டவர், “போ, போ. ஒன் தாத்தாக்காக வுடுகேன், என்னா? ஒழுங்கா கிளாஸ கவனிக்கணும், கேட்டியா?” என்றார்.

“செரி சார்.” என்று நான் எனக்கு மட்டும் கேட்குமாறு சொல்லிவிட்டு என் இடத்திற்கு வந்து உட்கார்ந்தேன். பன்றிக் குட்டிகள் என் சன்னல் சுவரருகே படுத்துக் கிடந்தன. அவை பசியாகவிருக்கும். இந்த ஆங்கிலப் பாடவேளை ஏன் நீண்டு கொண்டே செல்கிறது? பள்ளிக் கூடத்தின் பெயர் ‘மலையாளப் பள்ளிக்கூடம்’, ஆனால் மலையாளப் பாடம் கிடையாது. பின் ஏன் அந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்? ஒரு பன்றிக் குட்டியாக பிறந்திருந்தால் ஆங்கிலம் என்ன, மலையாளம் என்ன, எதுவும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்திருக்கலாம், என்ன, அந்த பீக்குண்டில் கிடந்து புரள வேண்டும். அதெப்படி அதைப் போய் சாப்பிட முடியும்?

“டேய் சரவணா. எந்திரி, இங்க வா.” என்று ஆசிரியரின் குரல் என் காதுகளுக்குள் இரைச்சலாய் வந்து விழுந்தது. பயந்து போய் நிமிர்ந்து பார்க்க, ஆசிரியரின் அருகே என் அப்பா நின்றுகொண்டிருந்தார். பயம் இன்னும் கொஞ்சம் அதிகரிக்க எழுந்து நின்று ஆசிரியரின் முகத்தையும் அப்பாவின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தேன்.

“என்ன டே, பேந்தப் பேந்த முழிக்க? பைய எடுத்துட்டு வா.” என்று சொல்லிய ஆசிரியர் அப்பாவிடம் ஏதோ மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தார். நான் ஆசிரியரின் முன் சென்று நிற்க, அவர் என் தோளில் தட்டி, “செரி அண்ணாச்சி. கூட்டிட்டுப் போங்கோ. என்னத்தச் சொல்ல? ஒங்கப்பா எனக்கு ஆசானாக்கும். என்ன செய்ய? நல்ல வயசாயாச்சுல்லா? கெடைல கெடக்காமப் போறதுக்கும் குடுத்துதான் வைக்கணும். பொறவு தகவல் சொல்லி அனுப்புங்கோ.” என்றார். ஆசிரியரின் முகம் சிறிது சோகமாகியிருந்தது.

தாத்தாவிற்கு என்ன ஆயிருக்கும்? காலையில் காசு கொடுத்து அனுப்பும் போது நன்றாக இருமிக் கொண்டிருந்தாரே! சாயங்காலம் குமரிசாலைக் குளத்திற்குச் சென்று மீன் பிடிக்கலாமென்று சொல்லியிருந்தாரே!

“எப்பா, தாத்தாக்கு என்னாச்சிப்பா?”

“தாத்தா கீழ விழுந்துட்டா மக்கா.”

“எங்கப்பா விழுந்தா? ஆஸ்பத்திரிக்கி போகலியாப்பா?”

அப்பா பதில் சொல்லாமல் என்னை பின்னால் ஏற்றிவைத்து மிதிவண்டியை வேகமாக மிதிக்க ஆரம்பித்தார். என்னையறியாமல் அழுகை வந்தது. ஆச்சியும் இப்படித்தான். திடீரென்று ஒருநாள் காலையில் எவ்வளவு  எழுப்பியும் எழுந்திருக்கவேயில்லை. தாத்தா ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டே இருந்தார். சில நாட்கள் யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.

வீட்டு வாசலில் பக்கத்துவீட்டு அத்தைமார், மாமாமாரெல்லாம் நின்று சத்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தனர். நான் வருவதைப் பார்த்ததும் சிலர் என்னைப் பற்றி ஏதோ சொல்லி முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டனர். அம்மாவும் அக்காவும் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தனர்.

நான் மெதுவாக தாத்தாவின் அறைக்குச் சென்றேன். தாத்தா தன் நார்க்கட்டிலில் படுத்திருந்தார். வாய் நன்றாகத் திறந்திருந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வடிந்ததைப் போலிருந்தது. மார்பிற்குக் குறுக்காக கைகளை வைத்து வீட்டு உத்திரத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தாத்தாவின் பக்கத்தில் சென்று உட்கார்ந்து, “தாத்தா, தாத்தா, எந்திரி.” என்றேன்.

தாத்தா மெல்ல மூச்சு விட்டார். அவரால் திரும்பிப் பார்க்க முடியவில்லை.

“தாத்தா, ஒடம்பு நல்ல வலிக்கோ? நா கால அமுக்கி விடட்டா? நீ என்னத்துக்குப் போயி வழுக்கி விழுந்த? ஒரு எடத்துல சும்மா இருக்க மாட்டியா?”

தாத்தாவின் விரல்கள் மட்டும் மெதுவாக அசைந்தன. நான் அவரது கையை எடுத்து என் கைகளுக்குள் வைத்து விரல்களை மெல்ல நீவி விட்டேன். ஒவ்வொன்றாக சொடக்கு விட மடக்கினேன். தாத்தாவின் கைகள் சிறிது குளிர்ச்சியாக இருந்தன.

அம்மா என்னருகே வந்து நின்றாள். ஒரு சிறிய தம்ளரை நீட்டி, “மக்ளே, தாத்தாக்கு கொஞ்சம் பால் குடு.” என்று சொல்லிவிட்டு மறுபடியும் அழுதாள்.

“தாத்தாக்குப் பால் புடிக்காதுல்லாம்மா?” என்று அம்மாவின் முகத்தைப் பார்த்தேன்.

“இப்ப பால் தான் குடுக்கணும் மக்ளே. டாக்டர் சொல்லிருக்காரு.”

திறந்திருந்த தாத்தாவின் வாயில் ஒரு மடக்கு பாலை விட்டேன். அது உள்ளிறங்காமல் வாயின் பக்கவாட்டில் வடிந்தது. முறுக்கிய வெள்ளை மீசையின் ஓரத்தில் பால் கசிந்து பனித்துளி போலத் தெரிந்தது. அம்மா தன் சேலைநுனியால் அதைத் துடைத்துவிட்டு வெளியே சென்றாள். நான் தாத்தாவின் கைகளை மீண்டும் பிடித்துக் கொண்டேன். வெளியே அப்பாவும் வேறு சிலரும் பேசுவது கேட்டது.

“சே, அருமாந்த மனுசன்லா? எப்பிடி ராஜா மாதி சுத்திட்டுக் கெடந்தாரு? ஒரு சொக்கேடும் கெடயாத?”

தாத்தா ராஜா மாதிரிதான் வாழ்ந்தார். ஊரில் என்ன நல்லது கெட்டது என்றாலும் தாத்தாவிடம்தான் வந்து நிற்பார்கள். அவர் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. தாத்தா பேசும்போது என் அப்பா அசைவற்று நிற்பதைப் பார்த்து நான் உள்ளுக்குள் சிரித்ததுண்டு. அம்மாவோ அக்காவோ தாத்தா இருக்கும்போது தலையைக் குனிந்துகொண்டுதான் போவார்கள்.

“ஆமாண்ணே, அதுதான் ஒண்ணும் புரியமாட்டுக்கு. வழுக்கி விழுந்தா, அப்பிடியே மலச்சிப் பாத்தா. தூக்கிக் கொண்டு கட்டில்ல படுக்க வச்சப் பொறவும் கண்ணு ஒரு துளி அசையல. டாக்டர் ஒண்ணும் பண்ணாண்டாம்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு. மூச்சு மட்டுந்தான் இருக்கு.” என்ற அப்பாவின் குரலும் தழுதழுத்தது.

“செரி, பாப்பம், கொஞ்சம் கொஞ்சமா பால் விட்டுப் பாப்பம். மனசு நெறஞ்சி போகட்டும். என்ன, பேரன்ட்ட ஒரு வார்த்த பேசிட்டுப் போயிருந்தா நெறவா இருந்திருக்கும். எங்க பாத்தாலும் ரெண்டுவேரும் சோடியால்லா சுத்துவா! பின்ன, ஆச்சி போன பொறவு பொடியந்தான கூடவே கெடக்கான்.”

“பய தாத்தா நெஞ்சுலயேதான கெடப்பான். அவரு கத சொல்லி தட்டிக் குடுத்தாதான் அவனுக்கு ஒறக்கம்.”

எல்லோரும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க நான் தாத்தாவின் மார்பில் சாய்ந்து உறங்கிவிட்டேன். அம்மா வந்து எழுப்பி, “மக்ளே, வா, சாப்டு, பசிக்கும்லா.” என்றாள்.

நான் வேண்டாமென தலையை ஆட்டிவிட்டு மீண்டும் சாய்ந்துகொண்டேன். அதற்குள் மதியம் ஆகிவிட்டிருந்தது. மெல்ல தலையைத் தூக்கி தாத்தாவின் முகத்தைப் பார்த்தேன். வாய் அதே போல திறந்திருந்தது. கண்கள் அசையாமல் நின்றன. மூச்சு மெல்ல மெல்ல என் முகத்தின் அடியில் ஊர்ந்துகொண்டிருந்தது. சென்ற வாரம் வாய்க்காலில் பிடித்த அட்டையைப் போல. அதெப்படி தொட்டவுடன் சுருண்டு விடுகிறது? தாத்தாவின் மூச்சும் கூட சுருண்டு போயிருக்குமோ? மணிக்கு ஒருமுறை யாராவது வந்து தாத்தாவிற்குப் பால் விட்டுச் சென்றனர். தாத்தாவும் தொடர்ந்து வடித்துக்கொண்டிருந்தார்.

“எண்ணே, இப்ப என்ன செய்ய? சாயங்காலம் வர இழுத்துட்டுன்னா பொறவு இன்னிக்கி காரியம் பண்ண முடியாதுல்லா?” என்று யாரோ கேட்க, இன்னொருவர், “ஒம்ம வாய மூடும் ஓய். அதுக்குள்ள ஒமக்கு காரியச் சாப்பாடு கேக்காக்கும்? ஒம்ம வாய்ல மொதல்ல வாக்கரிசியப் போடணும்.” என்றார்.

சித்தப்பா அப்பாவை தனியாக அழைத்துச் சென்று ஏதோ மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் ஒரே சலசலப்பு.

“என்னத்த யோசிச்சிட்டுக் கெடக்கியோ? சட்டுன்னு ஆக வேண்டியதப் பாருங்கோ. மத்தவன் வந்தாதான் செரி ஆகும். எமகாதம்லா, சும்மாவா பேரு வந்து, வாக்கரிசிப் பிள்ளைன்னு.” என்று இருமினார் பக்கத்து வீட்டுத் தாத்தா.

“அது செரி. ஒமக்கு வரும்போ தெரியும் பாட்டா! ஆனாலும் ஒரு அதிசயந்தான், என்ன ஓய்? மனுசன் வந்து பக்கத்துல நின்னு ரெண்டு வார்த்த சொன்னாப் போறும். அர மணிக்குள்ள சோலி முடிஞ்சிரும். நம்ம கொமரிக் கெழவி எத்தன மாசமா இழுத்துட்டுக் கெடந்தா? பின்ன, செஞ்ச பாவம் அப்பிடி. நம்மாளு வந்துதான தீந்து போச்சி. அவ மவன் துடியாத் துடிச்சான. என்னா படமுங்கியோ? பின்ன, கொஞ்ச நஞ்ச சொத்தா என்ன? அவனே எளனிய கொடுத்துக் கொன்னாலும் கொன்னுருப்பான்.”

“கெழவிய விடும் ஓய். அந்த வடக்குத் தெரு பிள்ள தூக்கு போட்டால்லா? எத்தன நாளா இழுத்துட்டுக் கெடந்தா? ஒரு டாக்டரும் ஒண்ணும் பண்ண முடியலல்லா? வாக்கரிசிப் பிள்ள வந்து அந்தப் பிள்ள தலைல கைய வெச்சதுதான் உண்டும், பிள்ள மொகத்துல என்ன ஒரு திருப்தி, ஆத்மா அப்பதான சாந்தி அடஞ்சி. அந்த மனுசனுக்கு ஒரு தெய்வாம்சம் உண்டும், பாத்துக்கோரும்.”

“உள்ளது, உள்ளது. ஆமா, வாக்கரிசிப் பிள்ள ஊர்ல உண்டுமா ஓய்?”

“அவரு எங்க போகப் போறாரு? மனுசன் என்னா பவுசு காட்டிட்டுத் திரிஞ்சாரு? பெரிய பண்ணையாரு மாதி. பின்ன, எல்லாம் கவர்ன்மெண்டு சோலி உள்ள வரைக்கும் தான. ரிட்டயர்டு ஆன பொறவு கொளத்தாங்கர அரச மரந்தான் கெட. ஊர்ப்பாடு பேசதுக்கும் நல்லா ஆப்பமும் ரச வடையும் முழுங்கதுக்கும் கேக்கணுமா, என்ன?”

“அதச் சொல்லும். வக்கணையான ஆளாக்கும். அடியேந்திரத்துக்கு அவரு வந்து மொத எலைல சாப்ட்டாதான் நமக்கு சாப்பாடு. பின்ன, மேல இருக்கப்பட்டவாளுக்கு அப்பதான ஒரு நெறவு கெடைக்கும்?”

வாக்கரிசிப் பிள்ளை மாமா என் அம்மாவின் பெரியப்பா மகன். பெரும்பாலும் வெள்ளை வேட்டி மட்டும்தான். மேலுடம்பும் பெரிய தொப்பையுமாக தள்ளித் தள்ளி நடந்து செல்வார். கையில் எப்போதும் ஒரு வெற்றிலைப் பெட்டி. வெற்றிலையைக் குதப்பிக் குதப்பி அவர் பேசுவது பல சமயங்களில் எனக்குப் புரிவதேயில்லை. ஆனால், அவர் இருக்கும் கூட்டத்தில் எப்போதும் கேலியும், உற்சாகமும் நிரம்பி வழியும். ஊரில் எல்லா பெண்களும் அவருக்கு மைனியோ கொளுந்தியோ தான். ஆண்கள் எல்லோரும் சவத்துப்பயலோ, கிறுக்குப்பயலுக்குப் பொறந்த பயலோ தான்!

எப்போது என்னைப் பார்த்தாலும் “மருமவன, எப்ப வந்து எம்பொண்ணத் தூக்கிட்டுப் போகப் போறீரு?” என்று கேட்டுச் சிரிப்பார். நான் வெட்கப்பட்டு நிற்க, “என்ன ஓய் வெக்கம் ஒமக்கு? பொண்ணு எப்ப வேண்ணா ரெடி, கேட்டீரா? மீச வரட்டும், என்னா?” என்பார். மாமா பெண் என்னை விட பத்து வயதாவது பெரியவள்.

மாமா என்னிடம் மட்டுமல்ல, ஊரில் எல்லாச் சிறுவர்களிடமும் இதேபோலத்தான் கேட்பார். தன் வேட்டி மடிப்பில் எப்போதும் வைத்திருக்கும் ஆரஞ்சு மிட்டாயை எங்கள் வாயைத் திறக்கச் சொல்லி உள்ளே போடுவார். அப்படியே கட்டிப்பிடித்து ஆளுக்கொரு முத்தம். நாங்கள் மாமாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஊர்க் குளத்திற்கு குளிக்கச் செல்லும்போது மிக வேடிக்கையாக இருக்கும். மாமா வருவதைப் பார்த்ததும் எதிரில் வரும் தாத்தாக்களும் ஆச்சிகளும் அப்படியே திரும்பி தங்கள் வீடுகளுக்கு விறுவிறுவென்று செல்வார்கள். முதலில் இது எங்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், ஊர்த் தலைவர் தன் கடைசிப் படுக்கையில் இருந்தபோது மாமா வந்து அவரருகே நின்று ஏதோ பேசிவிட்டுப் போனதும் தலைவர் வீட்டில் ஒப்பாரிச் சத்தம் எழுந்ததைப் பார்த்ததும் எங்களுக்கும் மாமாவின் மீது சிறிய பயம்தான்.

மாமா நல்ல வேலையில் இருந்தார். ஊரில் எல்லோருக்கும் உதவி செய்வதில் முதல் ஆளாக வந்து நிற்பார். அடுத்த ஊர்த் தலைவர் அவர்தான் என்று கூட பேச்சு அடிபட்டது. இப்போது ஓய்வு கிடைத்ததும் எங்களைக் கூட்டிக் கொண்டு ஒவ்வொரு வீடாகப் போவதுதான் மாமாவின் பொழுதுபோக்கு. ஒவ்வொரு வீட்டிலும் மாமாவை விழுந்து விழுந்து கவனிப்பதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கும். வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் மதிய உணவு என்று எழுதப்படாத முறைமையையே உருவாக்கிவிட்டார் வாக்கரிசிப் பிள்ளை மாமா.

“எம்மா, அதெப்படிம்மா, வாக்கரிசி மாமாக்கு மட்டும் எல்லா வீட்லயும் செம சாப்பாடு போடுகா?” என்று ஒருநாள் அம்மாவிடம் கேட்டேன்.

“அடிச்சுப் பல்ல ஒடச்சிருவேன் ராஸ்கல். பெரியாளுக்கு மரியாத குடுக்காமப் பேசுக. எங்க செல்ல அண்ணனாக்கும், பாத்துக்கோ.” என்று முறைத்தாள் அம்மா.

“சாரி, சாரி. சொல்லும்மா.”

எதையோ நினைத்து சிரித்த அம்மா, “பின்ன, ஒவ்வொருத்தரும் செஞ்ச பாவம் கொஞ்சமா? பயம், உயிரு போயிருமோன்னு பயம், பின்ன என்னத்துக்குப் பயந்து ஓடப் போறா?” என்றாள்.

“மாமா வந்து பாத்தா தாத்தா ஆச்சில்லாம் செத்துப் போயிருவாளாம்மா?”

“அப்பிடி பேசப்படாது பாத்துக்கோ. அது தெய்வ காரியமாக்கும்.”

அதில் என்ன தெய்வகாரியம் இருக்கும் என்று எனக்கு அப்போது புரியவில்லை.

அப்பாவும் சித்தப்பாவும் வேகவேகமாக எங்கோ சென்றனர்.

“அதாக்கும் செரி. பெரியவரு ராசிக்கு இன்னிக்கி சொர்க்கம்லா!” என்று ஒரு மாமா சொல்ல, “உள்ளதாக்கும். பின்ன, வாக்கரிசிப் பிள்ள சரக்கடிக்கப் போயிருக்கப் படாது.” என்று இன்னொரு மாமா சொன்னார்.

மாமா சாயங்காலங்களில் வேறு ஒரு மனிதராகி விடுவார். அரச மரத்தடியில் உட்கார்ந்து வாய்விட்டுச் சத்தமாகப் பாடுவார். பெரும்பாலும் மலேசியா வாசுதேவன் பாடல்கள்தான். பக்கத்தில் சென்றால் இழுத்துப் பிடித்து கட்டியணைத்து முத்தமிடுவார். குமட்டிக் கொண்டு வரும் வாடை.

அப்படியொரு சாயங்காலம் நான் அந்த வழியாக வந்தபோது மாமா தனியாக உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தார்.

“என்ன ஓய் மருமவனே, பாத்தும் பாக்காத மாதி போறீரே ஓய்? இங்க வாரும்.” என்று சிரித்தார்.

நான் அவரது அருகே சென்று நின்றேன்.

“என்ன மருமவனே, மாமாவப் பாத்து எதுக்கு பயப்படுகீரு? நமக்குள்ள ஆயிரம் மேட்டரு உண்டும்லா, ஊருல ஒரு பய கேக்க முடியாது, என்னா? எம் பொண்ண ஒமக்குத் தான் கெட்டி வப்பேன், கேட்டீரா ஓய்? பின்ன, எவளாம் வெள்ளத்தோலுக்காரிய லவ்வு பண்ணிட்டீருன்னா செரியா வராது, பாத்துக்கோரும். மாமாக்க சத்தியமாக்கும்.”

நான் வெட்கத்தில் சிரித்து நின்றேன்.

“இங்கண வந்து இரியும் மருமவன.” என்று என் கையைப் பிடித்து இழுத்தார். நான் மெல்லச் சென்று அவரருகே உட்கார்ந்தேன். வழக்கம்போல ஒரு ஆரஞ்சு மிட்டாயை என் வாயைத் திறந்து உள்ளே போட்டவர், என்னைக் கழுத்தோடு கட்டிப்பிடித்து என் கன்னத்தில் முத்தமிட்டார். நான் அந்த எச்சிலைத் துடைப்பதைப் பார்த்துச் சிரித்தார்.

“என்ன மருமவன, எச்சியத் தொடைக்கீரு, என்னா?” என்று கேட்டவர் அமைதியாகத் தரையைப் பார்த்துக்கொண்டு இருந்தார். சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தார். அவரது மார்பு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. நீளமாக மூச்சிழுத்து விட்டது போலிருந்தது. என் கையைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“அப்போ ஒம்ம வயசுதான் இருக்கும் எனக்கு! எங்க அப்பாக்க மொகம் கூட இப்போ செரியா கண்ணுல வர மாட்டுக்கு. வயல் வேலக்கிப் போன மனுசன நாலு வேரு ஒரு கயித்துக் கட்டில்ல தூக்கிட்டு வந்தானுகோ. ஆளு சும்மா சொடல மாடன் கணக்கா இருப்பாரு, கேட்டீரா? ஒத்தக்கி ஒரு பய எதுத்து நிக்க முடியாது. ஊருல எல்லாச் சட்டம்பிப் பயக்களுக்கும் எங்க அப்பாவக் கண்டா பயமாக்கும். புடிச்சி செவுட்டப் பேத்து விட்டுருவாருல்லா! பின்ன, எவனாம் செய்வின வச்சிட்டானோ என்னவோ? வச்சாலும் வச்சிருப்பானுகோ. ஒரு பயலயும் நம்பதுக்கில்ல. கட்டில்ல கெடயாக் கெடந்த மனுசன் ஒரு பொட்டு அசயல்ல. பத்து நாளு. எங்கம்ம அழுது அழுது மயங்கி விழுந்துருவா. நானும் எங்க அக்காவும் என்னத்தச் செய்ய முடியும்? அந்தக் காலத்துல இப்ப மாதி இல்லல்லா? என்ன நோயி, என்ன மருந்துன்னு யாருக்குத் தெரியும்? டாக்டரப் பாக்கணும்னா சும்மா இல்ல, கேட்டீரா? என்னல்லாமோ மருந்தக் குடுத்துப் பாத்தா. அப்பா அலங்குவனா பாருன்னு நீட்டிட்டுக் கெடக்காரு. பின்ன, எத்தன நாளக்கி எல்லாரும் அழுவா? அவரு பாட்டுக்குக் கெடக்கட்டும்னு அம்மா வயலுக்கு நடவும், கள பறிக்கவும் போயிருவா. பின்ன, வயித்துக்குக் கஞ்சி வேணும்லா? ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ.”

மாமா அழுகிறாரா, சலுவை வடிக்கிறாரா என்று புரியாமல் அவர் முகத்தைப் பார்த்து கதை கேட்டுக்கொண்டிருந்தேன் நான்.

“ஒரு நாளு அம்மயும் அக்காவும் வயலுக்குப் போய்ட்டா. நான் அப்பா பக்கத்துல இருந்து அவ்வோ வாயத் தொறந்து கொஞ்சம் கொஞ்சமா கஞ்சி ஊத்துகேன். எப்பவும் அவ்வோ நெஞ்சு அசையான்னு மட்டும் பாத்துட்டே இருப்பேன். அன்னிக்கி கொஞ்சம் தூக்கித் தூக்கிப் போட்ட மாதி இருந்து. நெஞ்ச இறுக்கித் தேச்சி விட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சி அவ்வோ ஒடம்பு படபடன்னு ஆடிட்டு, வெட்டு வந்த மாதி. நா ‘எப்பா, எப்பா, என்னப்பா செய்யி’ன்னு அழுகேன். வெட்டு நின்ன பாடில்ல. வீட்டுத் தாக்கோல எடுத்து அவ்வோ கைலக் குடுத்தேன். இறுக்கிப் பிடிச்சிட்டு துடிச்சிட்டே கெடந்தா. சட்டுன்னு ஒரு அசைவு இல்லாம நின்னு. நா ஒத்தக்கி ஒருத்தனா என்ன செய்வேன்? அப்பா செத்துட்டாருன்னு நெனச்சி அம்மக்கிட்ட சொல்ல ஓடுனேன்.”

நான் மெளனமாக கேட்க, மாமா என் கைகளை இறுக்கமாகப் பிடித்து வைத்திருந்தார்.

“நா ஓடுகேன். ’மக்ளே’ன்னு ஒரு சத்தம். அப்பா கொரல்தான். எனக்கு நடுங்கிட்டு. திரும்பிப் பாக்கேன், அப்பா எந்திச்சி ஜம்முன்னு உக்காந்திருக்கா. கட்டில்ல இருந்து என்னப் பாத்து கையசச்சிக் கூப்புடுகா. என்னால நம்பவே முடில. ஓடிப் போயி அவ்வோ கையப் புடிச்சேன். அப்பா மெல்ல எந்திச்சி என்னக் கூட்டிட்டு வீடு முழுக்க ஒரு சுத்து நடந்தா. அப்பிடியே வெளக்கு முன்னால கூட்டிட்டுப் போயி நின்னா. அவ்வோ மொகத்துல அப்போ அப்பிடி ஒரு ஐசுரியம். சும்மா தகதகன்னு ஜொலிக்கா அப்பா. அப்பிடியே கண்ண மூடி நின்னா. பொறவு கைய நீட்டி தாம்பாளத்துலருந்து திருநீற எடுத்துக் கேட்டா. நா எடுத்துக் கொடுத்தேன். ஏதோ மனசுக்குள்ள சொன்னா அப்பா. என்னன்னு எனக்குப் புரியல்ல. பெரிய சாமிகொண்டாடில்லா? திருநீற எடுத்து என் நெத்தில பூசி விட்டுட்டு அவ்வோ நெத்திலயும் பூசினா. அப்பிடியே கூட்டிட்டுப் போயி கட்டில்ல இருந்தா. கொஞ்ச நேரம் எம்மூஞ்சிய பாத்துட்டே இருந்தா. சிரிச்சிட்டே மெதுவா கட்டில்ல படுத்தா. நா அப்பா கைய தடவி விட்டுட்டு இருந்தேன். அப்பா என்னயே பாத்துட்ருந்தா. என் கைய எடுத்து அவ்வோ நெஞ்சுல வச்சா. நெஞ்சு மெல்ல மெல்ல அசஞ்சிட்டு இருந்து. அப்பாக்க மூச்சுச் சத்தமும் என்னோட மூச்சுச் சத்தமும் மாறி மாறிக் கேட்டு. எல்லாம் கொஞ்ச நேரந்தான். இந்தா, இந்தக் கை வழியாத்தான் எங்கப்பா போனா பாத்துக்கோ.” என்று சொல்லி என் கையோடு சேர்த்து அவரது கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்து அழுத்தினார்.

சிறிது நேரம் மாமா அப்படியே உட்கார்ந்திருந்தார்.

“பொறவு நமக்கு இந்தப் பேரு ஒட்டிக்கிட்டு. அது சும்மால்ல, ஒரு தோணக்கமாக்கும். செல மூஞ்சியப் பாத்த ஒடனே தோணிரும், இது தேறாதுன்னு. என்னைக்கு எத்தன மணிக்குப் போகும்னு கூட தெரிஞ்சிரும். பின்ன, நானாட்டு ஒண்ணும் சொல்லதில்ல. அப்பிடி ஒண்ணு ரெண்டு எடத்துல சொல்லப் போயி சொன்ன மாதியே நடந்துட்டு. பின்ன, அதுவே பேராயிட்டு. செரி, நம்மளும் பாவம் ஒண்ணும் பண்ணலல்லா? இழுத்துட்டுக் கெடக்கது கொடூரம்லா மருமவன? போயி பக்கத்துல நின்னாப் போறும். என்ன பேசுகேன்னும் தெரியாது, அங்க என்ன நடக்கும்னும் தெரியாது. சீவம் சொகமாப் போயிரும். அதான மருமவன வேணும். என்னத்த வாழ்ந்து என்னத்துக்கு?”

*

சற்று நேரத்தில் வாக்கரிசிப் பிள்ளை மாமா வந்தார். எனக்கு அவரைப் பார்த்ததும் பயங்கரமாகக் கோபம் வந்தது. என் தாத்தாவின் மரணத்தைக் கூட்டிக் கொண்டு வருகிறார். அப்பாவும் சித்தப்பாவும் வீட்டு வாசலிலேயே நின்றுவிட்டு மாமாவை உள்ளே போகச் சொன்னார்கள். நான் அவருக்கு முன்னாக ஓடிச் சென்று தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தேன். எனக்குத் தெரிந்த சாமி மந்திரங்களையெல்லாம் வாய்க்குள் முணுமுணுக்க ஆரம்பித்தேன். மாமாவின் மந்திரம் இன்று பலிக்கக் கூடாது என்று எல்லா சாமிகளையும் வேண்டினேன்.

மாமா வந்து நின்று என் தலையில் கைவைத்து வருடினார். நான் முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு அவரைப் பார்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அவர் தன் வேட்டி மடிப்பிலிருந்து ஒரு ஆரஞ்சு மிட்டாயை எடுத்து என் முன் நீட்டினார். நான் அவரை முறைத்துப் பார்த்தேன்.

“மக்ளே, வெளிய வா கொஞ்சம்” என்று அம்மா அழைத்தாள்.

“ஒண்ணுல்ல மக்ளே. மருமவன் இங்கயே இருக்கட்டும்.” என்று பதில் சொன்னார் மாமா.

அம்மா வந்து மாமாவின் கையில் ஒரு தம்ளர் பால் கொடுத்துச் சென்றாள். ஒரு மடக்கை தன் வாயில் விட்டவர், “மக்ளே, கொஞ்சம் சீனி போட்டுக் கொண்டா.” என்றார்.

அம்மா சீனி போட்டுக் கொண்டுவந்து கொடுத்தாள். மாமா ஏதோ வாய்க்குள் முணுமுணுக்க ஆரம்பித்தார். எனக்குள் அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. ஆனால், எதுவும் நடக்காததைப் போல, அல்லது வேறு யாருக்கோ நடப்பதைப் போல தாத்தா சுகமாகப் படுத்துக் கிடந்தார். அவரது முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சமாகியது. என்ன ஒரு கம்பீரம், அழகு! தாத்தா என்னைப் பார்த்து சிரித்ததைப் போல இருந்தது. மாமா மூன்று முறை தாத்தாவின் வாயில் பாலை விட்டார். தாத்தா நல்ல பிள்ளையாக வடிக்காமல் பாலை விழுங்கினார். மாமா சற்று நேரம் அமைதியாகக் கண்களை மூடி நின்றார். பின், தாத்தாவின் காலைத் தொட்டு வணங்கி விட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டார். வெளியே ஒரே சலசலப்பு!

நான் தாத்தாவின் அருகே உட்கார்ந்து எனது கையை அவரது கையோடு சேர்த்து அவரது நெஞ்சில் வைத்து கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். எங்கள் கைகள் மேலும் கீழும் மெல்ல ஏறி இறங்கின. எனது மூச்சும் தாத்தாவின் மூச்சும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருந்தது. வாக்கரிசி மாமா வைத்துவிட்டுப் போன ஆரஞ்சு மிட்டாய் தாத்தாவின் தலைமாட்டில் இருந்தது.

 

 

மொய்தீன் – அபராஜிதன் சிறுகதை

சீலையம்பட்டி கம்மாயில் இருந்து சின்னமனூர் 4 கிலோ மீட்டர்தான். கம்மாய் கரையில் நின்று பார்த்தாலே சின்னமனூரின் சிவகாமி அம்மன் கோவில் கோபுரம் தெரியும். தென்னைமரங்களுக்கிடையே அதன் கோபுரம் தலை தூக்கிப் பார்க்கும்.கற்கோபுரத்திற்கு வெளிற் மஞ்சள் சுண்ணாம்பு அடித்திருப்பார்கள். லாரியை கம்மாய்க் கரையில் கொண்டு வந்து நிறுத்தினார் மலைச்சாமி அண்ணன். பச்சை நிற முரட்டுத் தார்ப்பாய் போர்த்திக் கட்டப்பட்ட உருளைக்கிழங்கு லோடு லாரியின் பின்னால் இருந்தது. ஆக்ஸிலேட்டரை இரண்டு முறை அழுத்தி லாரியை உறும விட்டு அணைத்தார். அவர் வண்டியை விட்டு இறங்கியதும் லுங்கியை கழட்டி டிரைவர் சீட்டில் போட்டுவிட்டு காக்கி டவுசருடன் கரையோரம் இருந்த புதர்களுக்குள் வெளிக்குச் செல்ல ஊடுறுவினார்.

லாரியின் க்ளீனர் முத்துவேலும் நானும் லாரியில் இருந்து ஒருவர் பின் ஒருவராக கரையில் இறங்கினோம். முத்துவேல் லாரியின் இடையில் தொங்கிக்கொண்டிருந்த இரும்பு வாளியைக் கழட்டி எடுத்துக்கொண்டு கம்மாயை நோக்கிச் சென்றான். ஊருக்கு வந்துவிட்டோம் என்ற உணர்வு எனக்கு ஒரு நிம்மதியை கொடுத்தது.. பரந்து விரிந்த கம்மாய் நிரம்பி வழிந்தது.. பொதுவாக தண்ணீர் திட்டுக்களுடன் தான் இந்த கம்மாயை நான் பார்த்திருக்கிறேன்.. அப்பொழுது கம்மாயில் மீன் பிடிக்க டெண்டர் எடுத்தவர்கள் ஆட்களைக் கொண்டு தண்ணீர் திட்டுகளில் சல்லடை போட்டுக்கொண்டிருப்பார்கள்.அப்பொழுதெல்லாம் சிசைக்கிளின் பின்னே கூடையில் துள்ளிக்கொண்டிருக்கும் அயிரை மீன் சின்னமனூர் தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும்..

முத்துவேல் தண்ணீரைக்கொண்டு வந்து லாரியின் கண்ணாடி முகத்தில் விசிறி அடித்தான். “ஊருக்குப் போயிரலாமே.. இங்கன நிக்கிறோம்” என்றேன். “எழவப் பாத்த வண்டிய அப்டியே கொண்டு போக வேண்டாம்னு மலைச்சாமியண்ணே நெனைக்கிறாப்ல.. அதேன்.. லாரிய லேசா கழுவிவிட்டு நாமளும் குளிச்சிட்டு ஊருக்குள்ள போயிறலாம்.. வெளிய கிளிய போறதுன்னா போய்ட்டு அப்டியே ஒரு முங்கு போட்டு வா.. நீதேன் மொதல்ல குளிக்கனும்” என்றான் முத்துவேல். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. இங்கு எதையும் என்னால் மறுத்து பேச முடியாது என்று தோன்றியது. சட்டை பேண்ட்டை கழட்டி போட்டுவிட்டு கம்மாய் நோக்கி சென்றேன். தண்ணீர் வெதுவெதுவென்றிருந்தது. இறங்கி இரண்டு முறை முங்கினேன். வெறும் கையால் உடலைத் தேய்த்துக்கொண்டேன். மலைச்சாமியண்ணன் தூரத்தில் புதர்களுக்குள் இருந்து வருவது தெரிந்தது. நான் வேகமாக தண்ணீருக்குள் முங்கிவிட்டு கரையேறிக்கொண்டேன். மலைச்சாமியண்ணன் கம்மாயில் இறங்கி கால் கழுவிக்கொண்டு வெளியே வந்தார். சட்டையைக் கழட்டி நீட்ட முத்து வேல் போய் வாங்கிக்கொண்டான். மலைச்சாமியண்னன் தண்ணீருக்குள் இறங்கினார். என் துணிகளை ஒரு ப்ளாஸ்ட்டிக் பையில் வைத்து விட்டு வேறு உடை மாற்றிக்கொண்டேன். குளித்த உடம்பு காற்றை குளிராக உணர்ந்தது. மலைச்சாமியண்னன் ஈரமான உடம்புடன் வந்து டிரைவர் சீட்டில் கிடந்த துண்டை எட்டி எடுத்து உடம்பை துடைக்க தொடங்கினார். “பாடிய சின்னமனூருக்கு கொண்டு வருவாங்களா? என்றேன்.. மலைச்சாமியண்னன் “தெரில மணி.. முஸ்லீம்க சடங்கு என்னான்னு நமக்கு தெரியாதுல.. அந்தாளு சொந்தக்காரவுக எல்லாம் சின்னமனூருதேன்.. இவிங்ய இங்கருந்து மெட்ராசுக்கு போறாங்யலா இல்ல பாடிய இங்க கொண்டு வர்றாங்யளான்னு தெரில.. என்றார்.

சென்னையிலேயே வைத்து எல்லா சடங்கும் செய்யப்பட்டு விட்டது என்பது நாங்கள் சின்னமனூர் லாரி ஆபிஸ் சென்றதும் அறிந்துகொண்டோம். .. “பாடி தாங்காதுன்னு சொல்லி மெட்ராசுலயே வச்சு செஞ்சுட்டாங்யலாம்.. இங்கருந்து ஒறவுக்காரவுங்க யாரும் பெருசா போன மாதிரி தெரியல” என்றார் லாரி ஆபீஸ் கணக்காப்பிள்ளை. லாரியில் இருந்து உருளைக்கிழங்கு லோடுகளை கூலி ஆட்கள் இறக்க ஆரம்பித்தனர். சென்னையில் பாரீஸ் கார்னரில் லோடுகள் ஏற்றிக்கொண்டிருக்கும் போது தான் அவரை நான் பார்த்தேன். லாரியின் பின்பக்கம் நின்று பீடி பிடித்துக்கொண்டிருந்தார்.. தங்கவேல் மாமா என்னை கொண்டு போய் அங்கு இறக்கிவிடும் பொழுது பீடியை கீழே எறிந்துவிட்டு வந்து அவர் மாமாவிடம் பேசினார். வெளுத்துப்போன ஒரு வெள்ளைச்சட்டையில் நீலக்கலரில் லுங்கியும் கட்டியிருந்தார். தலையில் ஒரு அழுக்கேறிய குல்லா அணிந்திருந்தார். பல்லெல்லாம் கரையாய் இருந்தது. நாற்ப்பதைந்து வயதிருக்கும். மாமா பெரிதாக எதுவும் அவரிடம் பேசிக்கொள்ளவில்லை. என்னைக்கொண்டுபோய் மலைச்சாமியண்னனிடம் விட்டார். “பஸ்ஸேத்தி விட வேண்டியதுதான இவன.. லாரில ஒக்காந்துகிட்டேதான வரணும்..” என்றார் மலைச்சாமியண்ணன். ” பொங்கலுக்கு பஸ்ஸேல்லாம் புல்லு.. டிக்கெட்டு எதுவும் இல்ல.. என்னா பண்ண சொல்ற… இவனும் காலேஜ்ல ஆறு நாள் லீவு விட்டங்ய.. ஊருக்கு போயே தீருவேன்னுட்டியான்.. எங்காக்கா போன போட்டு எப்டியாவது அனுப்ச்சி விட்ருன்னுட்டாக… அதேன்..” என்றார் மாமா..

லாரியின் க்ளீனர் முத்துவேல் என்னுடன் சின்னமனூர் ஹைஸ்கூலில் படித்தவன்.. என்னைப்பார்த்ததும் மாப்ள என்று கட்டிக்கொண்டான்.. ஊர் போய் சேரும் வரை அவனுடன் பள்ளிக்கதைகள் பேசலாம்.. நான் லாரியில் ஏறி என் பையை கால் மாட்டில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.. முத்துவேல் இன்னும் பத்து நிமிடத்தில் கிளம்பி விடலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றான். நிறைய முறை இது போல் சின்னமனூருக்கும் சென்னைக்கும் லாரியில் போய் வந்திருக்கிறேன்.. மூன்று பேர் லாரியில் சென்றால் இடம் தாராளமாக இருக்கும். சில நேரம் க்ளீனருக்கு பின்னால் கால் நீட்டி படுத்துக்கொண்டும் செல்லலாம்.. ஆனால் அன்று லாரி கிளம்பும் போது அந்த முஸ்லீம்காரர் வந்து வண்டியில் ஏறிக்கொண்டார். கொஞ்சம் நெருக்கி உட்கார்ந்தோம்.. இப்படியே ஐநூரு கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்தபோது ச்செய் என்று இருந்தது.. இன்றைக்கு என எங்கிருந்து இந்தாள் வந்தார் என எரிச்சல் வந்தது. அவர் உடலில் லேசாக ஏதோ வாடை வந்தது என்னை மேலும் எரிச்சல் படுத்தியது.. மனதிற்குள் ஒரு கெட்ட வார்த்தை சொல்லி அந்தளை திட்டிக்கொண்டேன்.. அவர் அடிக்கடி என்னைப்பார்த்து சிரித்தார்.. கரையோடிய பல்லும் அவர் உடலில் அடித்த வாடையும் எனக்கு குமட்டியது.. “யாரு மகென்? என்று கேட்டார்.. நான் பதில் சொல்லாமல் ரோட்டை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.. என் தோளில் தட்டி “யாரு மகென்பா நீயீ? என்றார்.. “சின்னமனூர் தேங்கா ஏவாரி அய்யப்பன் மகென்” என்று முனங்கினேன்.. லாரியின் முறுமல் சத்தத்திலவருக்கு சரியாக கேட்கவில்லை. மேலும் தன் முகத்தை என் முகத்தருகேகொண்டு வந்து “என்னாது?” என்றார்..  அவர் வாயிலிருந்து கடுந்துர்நாற்றமாக பீடி வாடை அடிக்கஎனக்கு அழுகையே வந்துவிடும் போலஅடிக்க இருந்தது.. நான் முத்துவேல் பக்கமாக முகத்தை திருப்பிக்கொண்டேன்.. அவன் ரோட்டை பார்த்தபடி வந்தான்..

சென்னை நெருக்கடியில் லாரி அணத்தியபடி சென்றது. தாம்பரம் தாண்டுவரை கஸ்ட்டம்தான்.. டீசல் புகை வண்டிக்குள் சன்னமாக அடித்தது.. லாரி தாம்பரம் வந்தடையம் போது இரவு பத்துமணி.. வண்டியை மெயின் ரோட்டில் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு மலைச்சாமியண்ணனும் முத்துவேலும் அருகில் உள்ள ஒரு வாழை மண்டிக்கு பணம் வாங்கச் சென்றனர். முஸ்லீம் ஆள் வண்டியை விட்டு இறங்கி கொஞ்சம் முன்னாள் சென்று பீடியை பற்றவைத்துக்கொண்டார். நான் வண்டிக்குள் அமர்ந்தபடியே அவரை பார்த்தேன்.. அவர் கைலியை மடித்துவிட்டுக்கொண்டு பீடியை ஆழ இழுத்தார். அவருடைய பீடி வாடையுடன் சின்னமனூர் வரை செல்ல வேண்டும் என்பதை நினைக்கவே எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது.. பீடியை கீழே போட்டு விட்டு சாலையின் ஓரத்தில் வண்டியின் முன்பாக குத்த வைத்து அமர்ந்தார். அப்படியே வாந்தி எடுத்தார். லேசாக தள்ளாடியவர் தரையில் கையை ஊன்றி மீண்டும் வாந்தி எடுத்தார். எனக்கு லாரியை விட்டு இறங்கி மாமா வீட்டிற்கே சென்றுவிடலாமா என்றிருந்தது.. இல்லையென்றால் மலைச்சாமியண்னன் வந்ததும் எதாவது சொல்லி இவரை தாம்பரத்திலேயே விட்டு விட்டு செல்ல முடியுமா என்றும் யோசித்தேன். குத்த வைத்து அமர்ந்திருந்தவர் எழுந்து நிற்க முயற்சிக்கையில் தடுமாறி அப்படியே பின்னால் சரிந்தார்.. பின் இரண்டு முறை உடலை உலுக்கிக்கொண்டார். அதன்பின் அவர் உடலில் அசைவுகள் எதுவுமில்லை. நான் லாரியில் அமர்ந்தபடி அவரையே பார்த்தேன்.. பின் ஜன்னல் வழியாக மலைச்சாமியண்னனும் முத்துவேலும் வருகிறார்களா என்று பார்த்தேன்.. அவர்கள் எங்கும் தென்படவில்லை..

எனக்கு வண்டிக்கு உள்ளே அமர்ந்திருப்பது கசகசப்பாக இருந்தது. வண்டியை விட்டு இறங்கி வெளியில் நின்று கொண்டேன். விழுந்து கிடந்தவரின் உடலில் எந்த அசைவும் இல்லை. வயிறு ஏறி இறங்கவில்லை என்பதை உணர்ந்தபின்புதான் எனக்கு உறைத்தது. அவர் அருகில் சென்று அண்ணே அண்ணே என்று அழைத்தேன்.. அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லை.. கைகளை தொட்டு அழைத்தேன்.. கைகள் குளிர்ந்து விரைத்திருந்தன. அவரின் கழுத்துக்கு கீழே தொண்டைப்பகுதியில் விரலை வைத்துப் பார்த்தேன்.. இதயத்துடிப்பு இல்லை.. அவர் இறந்துகிடக்கிறார் என்று புரிந்தது. சாலையில் வேகமாக விரையும் வண்டிகளைத்தவிர நடந்து போகிறவர்கள் யாரும் இல்லை.. அவர் தலை புழுதியில் கிடந்தது. தரையில் உட்கார்ந்து அவர் தலையை எடுத்து என் மடியில் வைத்துக்கொண்டு மீண்டும் மூக்கின் அருகில் கை வைத்து பார்த்தேன்.. அவர் இறந்து விட்டார் என் உறுதியாக தெரிந்தது.. ஆனால் எனக்குள் எந்த பய உணர்ச்சியும் எழவில்லை.. மனம் அமைதியாக இருந்தது. எதையும் யோசிக்க முடியவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தேன்..

சாலையின் மறுபக்கத்தில் இருந்து மலைச்சாமியண்ணனும் முத்துவேலுன் சாலையை கடந்து வருவது தெரிந்தது. அவர்கள் அங்கிருந்தே நான் அந்த ஆளை மடியில் கிடத்தி சாலை ஓரத்தில் அமர்ந்திருப்பதை கவனித்திருப்பார்கள்.. “சரக்கப்போட்டு சாஞ்சிட்டாப்லையா?” என்றவாறு மயில்சாமி அண்ணன் அருகில் வந்தார். “இல்லண்ணே செத்துபோயிட்டாப்ல” என்றேன். மலைச்சாமி அண்ணனுக்கு நான் சொன்னது உடனே புரியவில்லை.. என்னாது என்றார்.. ” வண்டிய விட்டு எறங்கி வாந்தி எடுத்தாப்ல… அப்டியே மட்ட மல்லாக்க விழுந்தாப்ல.. வந்து பாத்த ஆள் செத்துப்போயிட்டாப்லண்ணே” என்றேன்.. மலைச்சாமியண்னன் குனிந்து அவரை சோதித்துப்பார்த்து நான் சொன்னதை உறுதி படுத்திக்கொண்டார். உடல் இறுக என் அருகில் வந்து அமர்ந்தார். முத்து வேலிடம் “லேய் வண்டி லோடோட நிக்குதுடா.. என்னடா பண்ண? என்றார்.

முத்துவேல் எஸ்.டி.டி பூத்திற்கு சென்று யார் யாருக்கோ போன் போட்டு இறந்தவரின் சொந்தங்களை தொடர்பு கொண்டு செய்தியை சொன்னான். நான் அவரின் உடலை மடியில் வைத்தபடியே சாலையில் உட்கார்ந்திருந்தேன்.. வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.. அவர் வண்டியை விட்டு இறங்கியதிலிருந்து ஒவ்வொரு விநாடியையும் திரும்ப திரும்ப நினைத்துக்கொண்டிருந்தேன்.. கண் முன் ஒரு மரணத்தை முதன் முதலாக கண்டிருக்கிறேன்.. அவர் இறந்ததை முதன் முதலாக அறிந்தவன் நான். நாளை

முத்துவேல் சாலையை கடந்து அருகில் வந்தான். “ஓனருக்கு போன் போட்டேண்ணே.. லோடபத்தி கவலப்படாம எல்லாத்தையும் இருந்து பாத்து முடிச்சு விட்டு கிளம்பி வாங்கண்ணாப்ல” என்றான். மலைச்சாமியண்ணன் உடலில் இருந்த இறுக்கம் மெல்ல தளர்ந்தது.. பெரு மூச்சு விட்டபடி ஒரு பீடியை எடுத்து பற்றவைத்துக்கொண்டார். இரவு இரண்டு மணி அளவில் ஒரு வெள்ளை மாருதி வேனில் சில முஸ்லீம் ஆட்கள் வந்து இறங்கினார்கள்… எல்லாரும் தலையில் குல்லா போட்டிருந்தனர். எவரும் அவரை பார்த்தவுடன் அழவில்லை.. ஆனால் அவர்கள் அனைவர் முகத்திலும் வேதனை தெரிந்தது. மலைச்சாமி அண்ணன் அவர்களிடம் நடந்ததை மெல்லிய குரலில் விளக்கி சொன்னார். அவர்கள் தங்களுக்கும் நிறைய பேசிக்கொண்டார்கள். இரண்டு பேர் சாலையை கடந்து எஸ்.டி.டி பூத்திற்குள் சென்றார்கள். என் மரத்துப்போன கால்கள் வலிக்க ஆரம்பித்தன. மெல்ல அவரின் தலையை நகர்த்தி தரையில் வைத்துவிட்டு கையூன்றி எழுந்து கொண்டேன். ரத்தம் கீழ் நோக்கிப் பாய கால்கள் கூசி தடுமாறினேன். அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து முஸ்லீம் ஆளை எடுத்துச்செல்ல மேலும் இரண்டு மணிநேரம் ஆனது.

தாராளமான இடவசதியுடன் அமர்ந்து சின்னமனூரை நோக்கி நான் பயணப்பட்டேன்.. முத்துவேலிடம் பள்ளிக்கதைகள் எதுவும் பேசவில்லை. திண்டிவனம் தாண்டியதும் இருக்கும் இடத்தில் ஒரு மாதிரி உடலை கொடுத்து படுத்துக்கொண்டேன். சரியாக தூங்க முடியவில்லை.. களைப்பு இருந்தாலும் மனது அலைபாய்ந்து கொண்டே இருந்தது.. வீட்டிற்கு வந்து மீண்டும் ஒரு முறை ஷாம்பு சோப்பு எல்லாம் போட்டு சுடுதண்ணீரில் குளித்து சாப்பிட்டு விட்டு படுத்த பின்புதான் நல்லுறக்கம் வாய்த்தது. தூங்கி எழுந்து மறுநாள் காலையில் நான் மாடியில் இருந்து கீழே வரும் பொழுது கூடத்தில் சில ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். நடுத்தர வயதில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் அம்ர்ந்திருந்தனர். கீழ வீதியை சேர்ந்த முஸ்லீம் ஆட்கள் என்று தெரிந்தது.. சின்னமனூரில் கீழ வீதியில் மட்டுமே முஸ்லீம்கள் இருந்தனர். அறுபது குடும்பங்கள் வரை இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அம்மா போட்டுத்தந்த காபியை உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள். நான் கூடத்திற்குள் வந்ததும் அம்மா என்னை அறிமுகம் செய்து வைத்தாள். அவர்கள் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு அமைதியாக இருந்தனர். நானும் என்ன சொல்லுவதென்று தெரியாமல் அமைதியாக நின்றிருந்தேன்..

அம்மா “இவென் என்னமோ ஏதோனு ஓடிப்போயி பாக்குறதுக்குள்ள இறந்துட்டாராம்.. என்ன செய்றதுன்னு தெரியாம அவர மடிலயே போட்டு ரோட்ல உக்காந்திட்டு இருந்திருக்கியான்” என்றாள். நான் தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தேன்.. மேலும் சில விநாடிகள் அமைதியாக கழிந்தது. அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் மெல்ல அங்கிருந்து நகர்ந்து உள் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டேன்.. அவர்கள் கிளம்பும் ஓசை கேட்டது.. அவர்கள் முனங்களாக அம்மாவிடம் ஏதோ சொல்லிவிட்டு சென்றார்கள். அம்மா என்னைதேடி அறைக்குள் வந்தாள். “அவங்க என்ன ஏதுன்னு தெரிஞசுக்கத்தான வந்து ஒக்காந்திருக்காங்க.. என்னாச்சுன்னு சொல்ல வேண்டியதுதான.. ” என்றாள். “நான் என்ன சொல்றது.. அதேன் நீ சொன்னில்ல.. அதான் நடந்துச்சு.. அத நான் சொன்னா என்ன நீ சொன்னா என்ன? என்றேன்.. “நீதேன் சொல்லனும்.. வெலாவரியா சொல்லனும்.. அப்பத்தான அவங்களுக்கு புரியும்.. தீடீர்னு செத்து போயிட்டார்னா அவங்களுக்கு எப்டி இருக்கும்” என்றாள்.  நான் எழுந்து கழிவறைக்குள் சென்றேன்..

அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஒரு கும்பல் வந்தது.. பல வயதினர் கலந்த கும்பல். சிறு பிள்ளைகள் வேறு இருந்தனர். அவர்கள் கூடத்தை நிறைத்து அமர்ந்திருந்தனர். “என்னாச்சுன்னு தெரிலங்க.. குத்த வச்சு உக்காந்து வாந்தி எடுத்தாரு.. நான் என்ன ஏதுன்னு ஓடிப்போய் பாக்குறதுக்குள்ள அப்டியே சரிஞ்சு விழுந்துட்டாரு.. பக்கத்தில யாரும் இல்ல.. என்ன பண்றதுன்னு எனக்கு புரியல.. நெஞ்ச தேச்சு விட்டேன்.. அப்டியே உடம்ப ரெண்டு தடவ உலுக்கினாரு.. ஓடிப்போய் லாரில இருந்து தண்ணிய எடுத்துவந்து வாயில விட்டேன்.. ஆனா அத குடிக்கிறதுக்குள்ள உயிர் போய்டுச்சு” என்றேன். கூட்டத்தில் சில விசும்பல் குரல்கள் எழுந்தன.. பிள்ளைகள் கூட்டத்திற்குள் அங்குமிங்கும் பெண்களிடம் தாவி குதித்து விளையாடின. ஒருவர் பிள்ளைகளை அதட்டினார்.

நான் வெளியே நண்பர்களை பார்க்க சென்றேன். முருகேசனுடன் சேர்ந்து மஹாராஜா கடைக்கு சென்றேன். பொங்கலுக்கு சென்னையிலேயே துணி எடுத்திருக்கலாம். சோம்பேரித்தனம். ஆனால் துணிகள் மஹாராஜாவில் பரவாயில்லை என்றிருந்தது. இரண்டு செட் உடைகள் எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். தர்பார் டீக்கடைக்குள் சென்று அமர்ந்து டீ சொன்னோம். கல்லாவில் நின்றிருப்பவர் மெல்ல அருகில் வந்து உட்கார்ந்து மொய்தீனு உங்க கூட வரும் போதுதேன் மையத்து ஆனாப்லன்னு சொன்னாங்க.. என்னப்பா ஆச்சுங்க” என்றார். நான் மேலோட்டமாக நடந்ததை சொன்னேன்.. “நல்லஆளுதேன்.. ஆனா ஒரு எடத்தில நின்னு வேல பாக்குறது கெடையாது.. ஒண்ணுக்கு ரெண்டு பிள்ளைக.. வளந்து வருதுகடா என்னத்தையாவது பண்ணுன்னு சொல்லிச் சொல்லி மெட்ராசுக்கு தெரிஞ்சவங்க கிட்ட வேலைக்கு அனுப்பி வச்சோம்..இப்ப இப்டி ஆகிபோச்சு” என்று சொல்லிவிட்டு கல்லாவை நோக்கி சென்றார்..

மாலை வீட்டிற்கு வரும் பொழுது ஒரு நூறு பேர் வாசலில் தெருவை அடைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள். என்னை அடையாளம் கண்டு கொண்டு எல்லோரும் என்னை பார்த்தார்கள். என் கால்கள் உறைந்து போனது போல் அப்படியே நின்றது.. வாழ்வில் முதல் முறையாக இத்தனை கண்கள் என்னை மட்டுமே நோக்குவதை உணர்ந்து தடுமாறினேன்.. மிக கூச்சமாக உணர்ந்த போதே நான் இன்று இவர்களுக்கு முக்கியமானவன் என்ற எண்ணம் வந்தது. ஆட்கள் நான் வீட்டிற்குள் செல்வதற்காக வழி விட்டார்கள். நான் கடந்து சென்றதும் மெல்ல சத்தமில்லாமல் என்னை தொடர்ந்து வந்தார்கள். கூடத்திலும் ஆட்கள் நிறைந்திருந்தார்கள். கீழவீதி முழுக்கவே வந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.. நான் கூடத்தில் அமர்ந்திருந்தவர்களை மிதிக்கமால் கால்களை எட்டி வைத்து நடந்து உள்ளறைக்கு சென்றேன்.

அம்மா பின்னாடியே வந்தாள். “ஓடிப்போய் பாத்தேன்.. வாந்தி எடுத்தாரு.. அப்டியே விழுந்து செத்தாருன்னு சொல்லாத.. அத கேக்க அவங்க வரல” என்று முனங்கி விட்டு வெளியே சென்றாள். நான் என்னை நிதானப்படுத்திக்கொண்டேன். ஆழமாக முச்சை இழுத்துவிட்டுக்கொண்டு மீண்டும் கூடத்திற்கு வந்தேன்.. எல்லோரும் என்னை நிமிர்ந்து பார்த்தார்கள். தெருவில் இருந்தோர் வாசலை அடைத்துக்கொண்டும் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டும் நின்றார்கள். ஒரு குழந்தை அழுதது.. அதை ஒரு பெண் தோதோவென சொல்லி சமாதானப்படுத்த முயற்ச்சித்தாள். “மொய்தீன் அண்ணே என்கூடத்தான் லாரில வந்தாரு… எங்கூட பேசிகிட்டேதான் வந்தாரு.. நான் என்ன படிக்கிறேன் எல்லாம் கேட்டாரு.. ” கூட்டத்தில் மூச்சு விடும் சப்தம் தவிர எதுவும் கேட்கவில்லை. அம்மா கண்கள் விரிய என்னை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். ” ரொம்ப கஸ்ட்டபட்டுட்டேன் தம்பி.. இப்பதான் எல்லாம் சரியா போய்ட்டு இருக்குன்னு சொன்னாரு.. பிள்ளைகள பெருசாகிட்டாங்க.. அவுங்களுக்கு செய்ய வேண்டியத செய்யனும்னாரு.. இனி எல்லாத்தையும் மாத்தி நல்லபடியா ஆக்கிடுவேன்னு நம்பிக்கை வந்திருச்சுன்னாரு.. பிள்ளைக மேல உசுரா இருக்கார்னு தெரிஞ்சுது.. படிச்சா பத்தாது.. நம்மள சுத்தி இருக்கவங்கள நல்லா வச்சிக்கனும் தம்பின்னாரு.. நான் ஆமாம்ணேன்னு சொன்னேன்.. ரொம்ப நாள் கூடப்பழகுனவரு மாதிரி சிரிக்க சிரிக்க பேசிட்டு வந்தாரு.. தாமபரத்தில வண்டி நின்னதும் டீ வாங்கித்தர்றேன் வாப்பான்னு கைய பிடிச்சு இழுத்தாரு.. சரிங்கண்னேன்னு சொன்னேன்.. அவருதான் முதல்ல வண்டில இருந்து இறங்கினாரு..” அழுதுகொண்டிருந்த குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு என்னையையே பார்ப்பதை உணர்ந்தேன்.. ஒருகணம் சொல்வதை நிறுத்திவிட்டு பின் மீண்டும் சொல்ல ஆரம்பித்தேன்