பா. சிவகுமார்
யாருமற்ற தனிமையில்
கரையிடம்
புலம்பி விட்டு
செல்கின்றன
அலைகள்
ஆக்ரோஷமாக
பொங்கினாலும்
அமைதியாகத்
தழுவினாலும்
ஆரவாரம் காட்டாத
கரைக்கு
அம்மாவின் சாயல்
பா. சிவகுமார்
யாருமற்ற தனிமையில்
கரையிடம்
புலம்பி விட்டு
செல்கின்றன
அலைகள்
ஆக்ரோஷமாக
பொங்கினாலும்
அமைதியாகத்
தழுவினாலும்
ஆரவாரம் காட்டாத
கரைக்கு
அம்மாவின் சாயல்
பா சிவகுமார்
தீநுண்மியின்
தாக்கம் அதிகரிப்பு
பொதுமுடக்கமென
அரசு அறிவிப்பு
வெறிச்சோடியிருக்கிறது
நகரம்
வீட்டிலே முடங்கிக் கிடக்கிறார்கள்
மக்கள்
முடங்காமல் நேரத்திற்கு
வந்து விடுகிறது பசி
பஞ்சடைத்த செவிகள்;
ஒளியிழந்த விழிகள்;
வறட்சியான வார்த்தைகளென
காய்ந்த அகவயிற்றினழகு
முகத்தில் தெரிய
பொருளீட்ட வழியின்றி
உடல்மனம் சோர்ந்து
பசி மயக்கத்தில்
சாலையோர குடிசையில்
சுருண்டுக் கிடக்கின்றனர்
அன்றாடங்காய்ச்சிகள்
வறண்டு வறட்சியாக
கிடக்கின்றன
சமையலறையும்
பலரின் வயிறுகளும்
உழைப்பு; ஊதியம்;
உணவு; பசி; வறுமையென
சில சொற்களின் நேரடிப் பொருள்
இப்பொழுது
வயிற்றிற்கும்
தெரிய வருகிறது
பசித்தீயை நீருற்றி
தற்காலிகமாக
அணைக்கின்றனர்
நிவாரணத் தொகை
விரைவில் வழங்கப்படும்
என்ற செய்தி
எங்கோ காற்றில்
மிதந்து வருகிறது
வயிற்றிற்கு உணவில்லாதபோது
செவிக்கு அங்கே ஈயப்படுகிறது
அம்…மா…. என கத்தியவாறு
ஓடி வரும் சிறுமியின் கையில்
யாரோ அளித்த
உணவுப் பொட்டலங்கள்
பசியாறுகிறது குடும்பம்
வாழ்வின் மீதான நம்பிக்கையை
யாரோ வழியெங்கும்
விதைத்துச் செல்கிறார்கள்
நாளை விடிந்துவிடும் என்ற
நம்பிக்கையில் பசியாறி
உழைக்கத் தயாராகின்றனர்
குடிசைவாழ் மக்கள்
இரண்டு வேளை
உணவென்பதே
இவர்களின்
இப்போதைய இலக்கு
சிவகுமார்
பழுத்தோலை
குருத்தோலைக்கு
உயிர்(வளி) தந்து
உயிர்ப்பித்து
உதிர்கின்றது
முதிர் புன்னகையுடன்
பேரிடர் காலத்தில்
புகலிடமாகின்றன
கோவில்கள், தேவாலயங்கள்,
மசூதிகள்
அடைக்கலம் அளித்தவர்களின்
முகங்களில் பூத்திருக்கும் சமயமற்ற
சகோதரத்துவப் புன்னகை
இரத்த சம்பந்தங்களின்
அறுவை சிகிச்சைக்கு
இரத்தத்திற்கு அல்லாடுகையில்
இரத்த சம்பந்தமே
இல்லாதவர் உவந்தளிக்கும்
இரத்தத்தில் பூத்திருக்கும்
மரணிக்காத
மனிதப் புன்னகை
இன்னா செய்தாரை அவர் நாண
நன்னயம் செய்வதில்
மறைந்திருக்கும்
வெற்றிப் புன்னகை
ஈருருளியில் விரைகையில்
அண்ணா! சைட் ஸ்டாண்ட்
என எச்சரிக்கும்
முகமறியா
நலன் விரும்பியை
நினைத்து மனதில் பூக்கும்
முகவரியற்ற
நன்றிப் புன்னகை
குழந்தைகளை
பாலூட்டி சோறூட்டி
சீராட்டி வளர்த்து
ஆளாக்கி
சமுதாயவீதியில் கம்பீரமாக
உலவுவதை வாசற்படியில்
நின்று இரசிக்கும்
அன்னைகளிடம் தஞ்சமடைந்திருக்கின்றன
முகவரியற்ற
தியாகப் புன்னகைகள்
கலி முற்றினும்
எத்தனையோ
முகவரியற்ற புன்னகைகளால் தான்
இன்றும் நிற்காமல்
சுற்றிக் கொண்டிருக்கிறது
பூமி
கொஞ்சம் கண்துஞ்சி ஓய்வெடுக்கிறார்
சாமி
சிவகுமார்
பதறிப் போய்
சிதறிக் கிடக்கும்
என் ஆகச் சிறந்த
நினைவுகளை
பொறுக்குகிறேன்
தரையோடு தரையாக
என்னை
அரைத்துவிட்டுச்
செல்கிறது
நிகழ்காலப்
பெருவாகனம்
சிவகுமார்
பாவண்ணனின் 16 சிறுகதைகளைக் கொண்ட தொகுதிதான் ”பொம்மைக்காரி”. 2009, 2010, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் வெளியான சிறுகதைகள் இதில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இந்தக் கதைகளை இதழ்களில் வெளியானபோதே வாசித்திருக்கிறேன். அந்த வாசிப்பு அனுபவத்துக்கும் படிக்கும் போது கிடைக்கும் வாசிப்பு அனுபவத்துக்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது. தொகுப்பாக வாசிக்கும் போது கதைகளுக்கு இடையிலான ஒரு கதையாடல் வாசிப்பில் உருவாகின்றது. ஒப்பீடு செய்தல் வாசக நடவடிக்கையாக மாறிவிடுகின்றது. கதைக்கரு, கதைமாந்தர்கள், சம்பவங்கள் என இவ்வாறு பலவற்றை ஒப்பிட்டுப் பார்க்க நேரிட்டு விடுகிறது. எனவே சிறுகதைகளைத் தொகுப்பாக வாசிப்பது ஏதோ ஒரு வகையில் மதிப்பீட்டுச் செயலாகவே அமைந்து விடுகின்றது. அதனுடன் தொகுத்துப் பார்த்தலும் நிகழ்கின்றது.
இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் பெண்களின் பிரச்சனைகளைப் பேசுகின்றன. அதிலும் ஆண்களுடனான பெண்களின் உறவில் ஏற்படும் சிக்கல்கள், நெருக்கடிகள் ஆழமாக முன்வைக்கப்படுகின்றன. சாத்தியமாகக்கூடிய அனைத்து பெண்–ஆண் உறவுகளும் இக்கதைகளில் பேசப்படுகின்றன. பாலியல் சார்ந்த பெண்–ஆண் உறவு குறித்த கதைகள் முக்கியமானவையாக இருக்கின்றன. இந்தப் பாலியல் உறவில் வன்முறையும் வஞ்சகமும் இணைந்து இருப்பது நுட்பமாக வெளிப்படுகிறது. ஓரிரண்டு கதைகளைத் தவிர பிற கதைகள் அனைத்திலும் பெண் பாத்திரமானது மையமாகவும் அப்பெண்ணின் உறவு கதையாடலின் முடிச்சாகவும் உள்ளது.
தொகுப்புக்குப் பெயராக உள்ள ”பொம்மைக்காரி” கதையில் வள்ளி–மாரி இருவரும் ஏழெட்டு வருஷமாக தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர். இருவரும் பொம்மை வியாபாரம் செய்பவர்கள். அவனிடம் அடிபட்டு அடிபட்டு அவள் பொம்மையாகவே மாறிவிட்டாள். தலைப்புக்கு இப்போது பல அர்த்தங்கள் விரிகின்றன. பொம்மை விற்பவள், பொம்மை போன்று உருமாறி விட்டவள், விரலசைவில் ஆடும் பொம்மை என அர்த்தங்கள் அடுக்குகளாக மாறும்போது கதைக்கு வேறு பரிமாணம் கிடைக்கிறது. வள்ளி–மாரி உறவு என்பது வன்முறையானதாகவே உள்ளது. உடலுறவு என்பது வள்ளிக்கு மற்றொரு உடல்ரீதியான தண்டனையாகும். ”சகித்துக் கொள்ளுதல்” மூலம் அவள் உறவைத் தொடரச் செய்து வருகின்றாள். இருவரும் பொம்மை விற்க சந்தைத் தோப்புக்குப் போகின்றார்கள். பதினேழு பாளையத்துக்காரர்கள் சேர்ந்து நடத்தும் பெரிய சந்தை இது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், ஏன் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டும் வள்ளியை வார்த்தைகளால் சிதைப்பதுதான் மாரியின் வழக்கம். பொம்மை வாங்குவதாக பாவனை செய்து கொண்டு நாலைந்து இளைஞர்கள் வள்ளிக்குப் பாலியல் தொந்தரவு தருகின்றனர். மாரியின் எதிர்ப்பால் கலவரம் மூள்கின்றது. மாரி தாக்கப்படுகிறான். வள்ளியைப் பலவந்தப்படுத்த முனைகின்றனர். மாரியும் வள்ளியும் தப்பித்து ஓடுகின்றனர். இளைஞர்கள் துரத்துகின்றனர். அடிப்பட்டிருந்த மாரி புதர் மறைவில் தண்ணீருக்காகத் தவிக்கின்றான். தண்ணீர் தேடி செல்லும் வள்ளியை இளைஞர்களில் ஒருவன் மற்றவர்களுக்குத் தெரியாமல் மிரட்டுகின்றான். செயலற்று அவள் கிடக்க அவன் வன்புணர்ச்சி கொள்கின்றான். மாரியும் வள்ளியும் உயிராபத்தில் இருந்து தப்பித்து இருப்பிடம் சேர்கின்றனர். மாரி உடல் தேறி வருகின்றான். நடந்த சம்பவத்தைவிட கோரமாக மாரி கேள்விகளால் வள்ளியை மேலும் சின்னாபின்னமாக்குகிறான்.
”எளவட்டப்பசங்களுக்கு ஒன் மேல கண்ணுடி. வளச்சிடலாம்னு பார்த்தாங்க. அதான்”.
”ஏழு வருஷமா ஒன்ன எல்லா இடங்களுக்கும் இழுத்து அலஞ்சி சோறு போடறதெல்லாம் கண்டவன்கிட்ட கூட்டிக் குடுத்துட்டு வேடிக்கை பாக்கறதுக்கா?”
”சொல்லுடி நாயே, என்னை உட்டுட்டு ஓடிரலாம்னு என்னைக்காவது தோணுமா?”
இந்தக் கேள்விகளே, சொற்களே மாரியின் எண்ணப்போக்கை வெளிப்படுத்தி விடுகின்றன. மனைவியைத் தக்க வைத்துக் கொள்ளுதல்தான் கணவனுக்கான கம்பீரமாக/கடமையாக உள்ளது. மனைவியைப் பிறர் கவர்தல் என்பது கணவனின் கையாலாகத்தனமாகி விடுகின்றது. எனவே அச்சுறுத்தல் மூலமாகவே மனைவியை கணவன் தனக்குக் கீழ் அடிபணிய வைத்து உறவைத் தொடர்கின்றான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் கருத்தியல் இப்படியான ஆண், பெண்ணை உருவாக்கி உறவை கட்டமைத்துத் தக்கவைத்து வருகின்றது.
மாரியின் கேள்விகள் மனதைக் குடைந்து கொண்டு இருக்க வள்ளி குளிப்பதற்காக குளத்துக்குச் செல்கின்றாள். திடீரென்று தன்னை வல்லுறவு கொண்டவனின் முகமும் முத்தமும் அவளின் ஞாபகத்துக்கு வருகின்றது. அடிபட்டபோது வலிக்காத அடி அக்கணத்தில் வலிக்கிறது. அவளுக்குள் குழப்பம். வல்லுறவின் விளைவுகளைக் குறித்து கவலை. தற்கொலை செய்துகொள்ள குளத்தின் மையத்தை நோக்கி நகர்கிறாள். கழுத்தளவு சூழ்ந்த தண்ணீர் அவள் கன்னத்தில் மோத அது முத்தமாக அவளுக்குத் தோன்றுகிறது. இந்தத் தண்ணீரின் முத்தம் அவளின் வேதனையை அழுத்தித் துடைப்பது போன்று உணர்கின்றாள். திரும்பி கரை ஏறி விடுகின்றாள். கதை முடிகிறது.
இக்கதை பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. பெண்–ஆண் உறவின் கபடமும் வன்முறையும் வெளிப்படுகின்றது. அடக்குவதிலும் அன்பு இல்லை. அடங்கிப் போவதிலும் அன்பு இல்லை. உறவை தக்கவைத்து நீட்டுவதுதான் வாழ்வின் குறிக்கோளாக இருக்கிறது. கணவனான மாரியின் வன்புணர்வும் இளைஞனின் வன்புணர்வும் ஒன்றுபடும் தருணத்தை மனதில் உணரும் போது அதிர்ச்சி ஏற்படுகின்றது. கரை ஏறும் வள்ளி மீண்டும் மாரியிடம் சொல்லடியும் உடலடியும் படுவாளா? அல்லது வேறு ஏதாவது முடிவு அவளிடம் இருக்கிறதா? யாருக்குத் தெரியும். வாழ்க்கை அதன் போக்கில் போகத்தான் செய்கிறது.
இந்தக் கதைக்கு எதிர்நிலையில் செயல்படும் கதை ”வைராக்கியம்”. கதைசொல்லியான பெண் ஒரு ”அம்மா”வைச் சந்தித்து அவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள செல்கின்றாள். அந்த அம்மாவின் கதை தினமும் செத்துப் பிழைத்த கதைதான். தினமும் அவளைச் சாகடிப்பது கணவன்தான். அடி, உதை, திட்டு. அதனோடு விருப்பமில்லாத வன்புணர்ச்சி!. இருபது. இருபத்தைந்து வருடம் வாழ்க்கை ஓடிவிட்டது. ஒரு நாள் நான்கு பெண் பிள்ளைகள் விழித்திருக்க அடி உதையுடன் மறுக்க மறுக்க வன்புணர்ச்சிக்கு ஆளாகிறாள் அம்மா. அடுத்த நாள் இரவு மழை. மிருகமாக அவன் அவளைப் புணர்கிறான். பித்து பிடித்தாற் போன்று அவள் ஆகிறாள். கூரைமேல் கீற்றுகளை தடுத்து வைப்பதற்காக வைத்திருந்த பெரிய கல் ஏற்கனவே சரிந்து விழுந்து இருக்கிறது. அந்தக் கல்லைத் தூக்கி அம்மா ஒரே போடாக கணவன் தலைமீது போட்டு விடுகிறாள். ஆவென்ற சத்தத்துடன் அவன் உயிரை விடுகிறான். விடிந்த பிறகு கூச்சல் போட்டு அம்மா, ”கூரை கல்லு உருண்டு விழுந்து விட்டது” எனக் கூறுகிறாள். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்து விடுகிறார்கள். மாமியார்காரி இது கொலை என செலவு செய்து நிரூபித்து அம்மாவை ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விடுகிறாள். மாமனார்தான் ஒரு வருஷம் சென்று ஜாமீனில் எடுக்கிறார். அவர்தான் முதலிலேயே கூரைமேல் இருந்து கல்தான் விழுந்தது என ஆரம்பத்தில் இருந்தே சாட்சி சொல்லி வருபவர்.
பெரிய மகள் தேர்வு எழுதி மேல்படிப்புக்கு சிங்கப்பூர் சென்று பிறகு வேலையில் சேர்ந்து மூன்று தங்கைகளையும் அங்கேயே அழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்கிறாள். கூடவே அம்மாவும் செல்ல ஏற்பாடு. ஏழெட்டு வருடம் கேஸ் இழுத்து கொலை நிரூபிக்கப்படவில்லை என தள்ளுபடியாகி விடுகிறது. இவ்வளவு காலமாக தான் செய்த கொலை அவளுக்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது. சிங்கப்பூர் கிளம்பும் நாளில் மாமனாரிடம் அம்மா தான் செய்த கொலையைச் சொல்லி விடுகின்றார். மாமனார் ”தான் சொன்னதே இந்த உலகத்துக்கு உண்மையாக இருக்கட்டும்” (கூரை கல் விழுந்து மரணம்) எனச் சொல்லிவிடுகின்றார்.
இந்தக் கதையும் பல அடுக்கு அர்த்தங்களைக் கொண்டுள்ள கதைதான். போகிற போக்கில் சில சொற்கள் மூலம் ஆழமான அர்த்தங்கள் வெளிப்படுகின்றன. கணவனைக் கல்லைப் போட்டு கொன்றதைச் சொன்ன பிறகு அம்மா இவ்வாறு கூறுகிறார்: ”அந்த நேரம் என் மனசுல நிம்மதியே தவிர வேற எதுவுமே இல்லை. கால்ல ஒட்டியிருந்தத கழுவி தொடச்ச மாதிரி”. கொலையின் மூலம் கணவன் இருப்பை இன்மையாக்குவது மலத்தை கழுவி விடுவது போலத்தான் என்கிறார் அம்மா. அதிர்ச்சியில் இருந்து மீண்டு வாசிப்பைத் தொடரும்போது மேலும் பல அர்த்தங்கள் விரிகின்றன. காலில் ஒட்டும் மலத்தை உடனடியாகத் தண்ணீர் தேடி கழுவி விட்டுத்தான் மறுவேலை பார்ப்போம். ஆனால் மலமாகிய கணவனை கழுவ இருபது இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகள் மலம் ஒட்டிய காலைக் கழுவ வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஆனால் கழுவ முடியாத இயலாமையுடன் அம்மா இருக்கிறார். பொம்மைக்காரி கதையின் வள்ளியும் இந்தக் கதையின் ”அம்மா”வும் ஒன்றுதான் கொடுமைக்கும் கணவனின் வன்புணர்வுக்கும் ஆளாகின்றார்கள். ஆனால் இருவரும் வித்தியாசமானவர்கள். அம்மாவுக்கு செய்த கொலை மனதை அரிக்கின்றது; வள்ளிக்கு இளைஞனின் வன்புணர்ச்சி மனதை அலைக்கழிக்கின்றது. முடிவுகள் வேறுபட்டவை.
இத்தக் கதையில் கதைசொல்லியான பெண் இன்றைய காலகட்டத்தின் பிரதிநிதி; அம்மா முந்தைய தலைமுறையின் பிரதிநிதி. கதைசொல்லிப் பெண் திருமணமாகி விவாகரத்து பெற்றவள். அதாவது சட்டம் மூலம் கணவனிடம் இருந்து விடுதலை பெற்றவள். அம்மா கணவனைக் கொலை செய்து அவனிடம் இருந்து விடுதலை பெற்றவள். கதையாடல் முழுவதும் இந்த இரு பெண்களும் சமமாகப் பாவிக்கப்படுகின்றார்கள். ”புருஷன் தொணதான் மனுஷத்தொணையாக இருக்கணும்னு கட்டாயம் எதுவும் இல்லையே” என அத்தையைக் கேட்கலாம் என எழுந்த வார்த்தைகளை எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன்,” எனக் கதை முடிகின்றது. சொல்லின் அர்த்தங்களைவிட சொல்லாத அர்த்தங்கள் புலப்படுகின்றன. இந்தக் கதையில் ”அம்மா”வுக்குப் பெயரில்லை. இவள் காளியும் யசோதையும் கலந்த பிறப்பு.
இந்தக் கதைகளைப் படிக்கும்போது பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்குப் பதில்கள் கதைகளில் இல்லை. வாழ்வில் தேடிப் பார்க்கலாம். ஆனால் இதுதான் விடை என்று உறுதியாகச் சொல்ல முடியாத கேள்விகள் இவை. அதனாலேயே இவை முக்கியமானதாகின்றன. ”குப்பு” என்ற கதையில் குப்பு என்ற பெண் ஏழுமலை ஓட்டுநரைக் காதலிக்கிறாள். காதல் பழக்கத்தால் அவள் கர்ப்பமாகின்றாள். முதலில் இயல்பாக கர்ப்பத்தை எதிர்கொள்ளும் ஏழுமலை பிறகு அவளை பிள்ளை பெற்று தொலைத்துவிட்டு வருமாறு கூறுகிறான். அப்படி வந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறான். இந்தக் கொழந்த போனா என்ன, இன்னொரு கொழந்தய பெத்துக்க முடியாதா? என்கிறான். குப்புவும் குழந்தையை பெற்றெடுத்து பிறகு பதினைந்தாம் நாள் அக்குழந்தையை திட்டமிட்டு தொலைத்துவிட்டு ஏழுமலையிடம் வருகின்றாள். கன்னிப் பெண்ணாக வா, கல்யாண விஷயம் பேசலாம்னு சொன்ன, வந்திருக்கிறேன் என்கிறாள். ஆனால் ஏழுமலையோ மாமா பெண்ணை பதினைந்து நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு விட்டான். அதிர்ச்சி அடைகிறாள் குப்பு. இத்துடன் கதை நின்றுவிடுகிறது. குப்பு இனி என்ன செய்வாள் என்பது சிந்தனையின் அடுத்த கட்டம். ஆனால் கதைக்குள்ளேயே எழும் கேள்வி: ”எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குப்பு குழந்தையைத் தொலைத்துவிட்டு அவனிடம் வருகின்றாள்?” என்பதுதான்.
இதேபோன்று ”அட்டை” கதையில் கோபாலு என்ற திருமணமாகாத இளைஞன் திருமணமான நீலா டீச்சர் மேல் காதல் கொள்கின்றான். இந்தக் காதலுக்கு அடிப்படை என்ன? ஏன் கோபாலு நீலாவைக் காதலிக்கிறான்? “அழைப்பு“ என்ற கதையில் தனது மனைவி சியாமளாவை மீறிதான் சேர்த்துக் கொண்ட துணைவி ராதாவைப் போய் சொக்கலிங்கத்தால் ஏன் பார்க்க முடியாமல் போகின்றது. ”வழி“ கதையில் பாலியல் தொழிலாளியான அஞ்சலையை திருமணம் செய்து கொண்ட ரங்கசாமி பிறகு அவளே அறுத்துவிடச் சொன்ன போதும் முடியாமல் ஏன் தவிக்கிறான்? “அடைக்கலம்“ கதையில் இடிந்த கோட்டையில் வந்து விடப்படும் முதியவர்களுக்கு அந்த இளைஞன் ஏன் தொடர்ந்து உதவி செய்கின்றான்?“ “பிரயாணம்“ கதையில் பிரெஞ்சு அதிகாரி பெஞ்சமின் முசே மட்டும் ஏன் இவ்வளவு நல்லவராக இருக்கிறார்? இப்படியான கேள்விகள் வாசிக்கும் போது மனதில் எழுவதுதான் இக்கதைகளின் வெற்றியாகத் தோன்றுகின்றது.
“துணை“ என்ற கதை மட்டும் பிரச்சனைக்குரிய கதையாக இருக்கிறது. பிற கதைகளில் பெண் பாத்திரங்கள் மீதான கரிசனமும் கவனமும் குறிப்பிடத்தக்கதாக உள்ளன. மீறவோ மீளவோ முடியாத பெண்களாயினும் அவர்களின் இருப்பு கதையாடலில் கவனத்துக்குள்ளானது. ஆனால் “துணை“ கதையில் இது முற்றிலும் எதிரானதாக உள்ளது. கணபதி என்ற திருமணமாகாத 42 வயது ஆணுக்கு திருமண ஏற்பாடு. முகூர்த்தத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மணப்பெண் நான்கு ஆண்டுகளாக ரகசியமாகக் காதலித்தவனோடு ஓடிப்போய் விட்டாள். மணப்பெண்ணின் தங்கையை அடுத்த மணப்பெண்ணாக்கி திருமணமும் முடிகின்றது. பெண்ணின் வீட்டுக்கு அன்றே கணபதி மறுவீடு விசேஷத்துக்குச் செல்கின்றான். சிறிது நேரத்திலேயே தாலிகட்டிய மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிவிடுகிறாள். அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கணபதிக்கு. அவனுடைய மனவேதனையும் அவனது குடும்பத்தாரின் எதிர்வினையும் ப்ரீத்தி நாயின் செயலும்தான் கதை. இப்படி அடிபட்ட. அவமானப்பட்ட ஒரு ஆணின் துயரத்தைப் பேசலாம்தான். ஆனால் சொல்லும் முறையில், கதையாடலில் இவனின் துயரத்திற்குக் காரணமான அந்த இரண்டு பெண்களும் குற்றவாளிகள் போல ஆக்கப்படுவது என்ன நியாயம்? பல பாத்திரங்களின் ஊடாக உருவாகும் இரண்டு மணப்பெண்களின் சித்திரமும் வில்லிகள் போல உருப்பெறுவது தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும்.
சமூகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. “குடும்பம்“ என்பதே வன்முறையைப் பயிலும் களமாக நிற்கின்றது. கருணைக் கொலை, முதியவர் தனித்து விடப்படுதல், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை/ வன்புணர்ச்சி, குடிப்பழக்கம் முதலான சமூகக் கொடுமைகளை இக்கதைகள் பேசுகின்றன. ஆனால் எந்தக் கதையிலும் இந்தக் கருத்துக்கள் பிரச்சாரமாக மாறவில்லை. கதையின் போக்கில், கதையாடலில் இந்தக் கருத்துக்கள் வாசகரைச் சிந்திக்க வைக்கின்றன. ஒவ்வொரு கதையும் வேறு வேறு தளத்தில் இயங்குகின்றன. பாத்திரங்களும் பலவகை மாதிரிகளைச் சேர்ந்தவர்கள். பேசுபொருள்களும் கதைக்கு கதை வித்தியாசப்படுகின்றன. ஆனால் சொல்கின்ற முறையும் நடையும் மொழியும் எல்லாக் கதைகளுக்கும் ஒன்று போலவே தோன்றுகின்றன. இந்தப் பதினாறு கதைகளும் ஒரு நாவலின் பதினாறு அத்தியாயங்கள் என்ற உணர்வு ஏற்படுகின்றது.
பாவண்ணன் இதுவரை எழுதியுள்ள சிறுகதைகளில் இருந்து ஆகச்சிறந்த 10 சிறுகதைகளைத் தேர்ந்தால் அதில் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளவையாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
”பொம்மைக்காரி“, பாவண்ணன், சந்தியா பதிப்பகம், சென்னை-83, 2011