சுசித்ரா

புத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்

ஒரு நாவல், இரண்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு கதம்ப படைப்பு மற்றும் ஒரு கட்டுரை தொகுப்பு என  பதாகை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு ஐந்து நூல்களை கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது.

கத்திக்காரன்- ஸ்ரீதர் நாராயணன் – சிறுகதைகள். 

ஸ்ரீதர் நெடுநாட்களாக இணைய உலகில் இயங்கி வருபவர். பதாகையின் தோற்றுனர்களில் ஒருவர். அமெரிக்காவில் வசிக்கிறார்.பூர்வீகம் மதுரை. ‘கத்திக்காரன்’ முழுக்க அமெரிக்க பின்புலத்தில் உருவான கதைகள். ‘வானவில்’ அமெரிக்க இந்திய  பதின்மரின் வாழ்வை பற்றி நுண்ணிய சித்திரத்தை அளிப்பது. பியாரி பாபு ஹோரஸ் அலெக்சாண்டர் பற்றிய நினைவுகளை சொல்லும் கதை. ஸ்ரீதரின் கதைகூறும் முறை பிசிறற்ற தெள்ளிய முறை என சொல்லலாம். இரா.முருகன் ஒரு நல்ல முன்னுரையை அளித்திருக்கிறார்.இந்த ஆண்டு ஸ்ரீதரின் தொகுப்பு நன்கு கவனிக்கப்படும் என்று நம்புகிறேன்.

ஒளி – சுசித்ரா – சிறுகதைகள்

சுசித்ரா, சுவிட்சர்லாந்தில் வசிப்பவர். உயிரியல் துறையில் ஆய்வு செய்து வருகிறார். இவரும் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். ஆங்கிலத்தில் வலுவான வாசிப்புடையவர். அண்மையில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த அவருடைய ‘ஒளி’ முன்னோடி எழுத்தாளர்கள் பலரால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. தொகுதியில் வெளிவந்துள்ள ‘தேள்’ ஒரு நல்ல டிஸ்டோபிய கதை. இரண்டு அறிவியல்புனைவுகளும் வாழ்க்கையின் அடிப்படை வினாக்கள் மீது கட்டி எழுப்பப்பட்டவை. ‘ஹைட்ரா’ எனக்கு பிடித்த கதை. இந்த ஆண்டு மிகவும் பேசப்படும் தொகுதிகளில் ஒன்றாக இது இருக்கும் என நம்புகிறேன். படைப்பூக்கம் கொண்ட எழுத்து. வருங்காலத்தில் முக்கிய எழுத்தாளராக அறியப்படுவார்.

வீடும் வெளியும் – அனுகிரஹா – கதம்ப படைப்பு

அனுகிரஹா  சொல்வனம்  மற்றும் பதாகை ஆசிரியர் குழுவில் இருப்பவர். சேலத்தை பூர்வீகமாக கொண்டவர். பெங்களூரில் வசிக்கிறார். அவருடைய ‘வீடும் வெளியும்’ நூலை படைப்பு கதம்பம் என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு இப்படியான வடிவம் முன்மாதிரி அற்றது என எண்ணுகிறேன். நான்கு தலைப்புகளில் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் அவரே வரைந்த ஓவியங்கள் என படைப்பின் எல்லா பரிணாமங்களும் கொண்ட நூல். அனுவின் கவிதைகள் மிக முக்கியமானவை. புதிய கோணங்களை திறப்பவை. அவை இவ்வாண்டு பேசப்படும் என்று நம்புகிறேன்.

இயர் ஜீரோ – காலத்துகள் – நாவல்

‘காலத்துகள்’ பதாகை வழி உருவாகி வந்த எழுத்தாளர். அவருடைய சிறுகதை தொகுப்பும் அடுத்து வர இருக்கிறது. ‘இயர் ஜீரோ’ செங்கல்பட்டில் தொண்ணூறுகளின் மத்தியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒரு மாணவனின் கதை. நினைவுகளின் ஊடாக ஒரு தெறிப்பை காலத்துகள் இந்நாவலில் நிகழ்த்துகிறார். ஒரு தலைமுறையே அவருடைய கதையோடு தங்கள் நினைவுகளை பொருத்திப் பார்க்க முடியும். ஆத்மார்த்தமாக தன்னை கண்டடையும் நோக்கில், தன நினைவுகளை கிளறி எழுத்தாக்கும்போது அதன் நேர்மையின் ஆற்றலால் அப்படைப்பு நம்மை வசீகரிக்கிறது. தமிழில் வந்துள்ள சிறந்த ‘coming off age’ வகையிலான நாவல்களில் ஒன்று காலத்துகளின் ‘இயர் ஜீரோவை’ சொல்லலாம்.

பாண்டியாட்டம் – நம்பி கிருஷ்ணன் – மேலை இலக்கிய கட்டுரைகள்

நம்பி கிருஷ்ணன், அமெரிக்காவில் வசிக்கிறார். சொல்வனத்தில் தொடர்ச்சியாக உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார். அரூ அறிவியல் புனைவு போட்டியில் அவருடைய கடவுளும் கேண்டியும் மூன்றாவது பரிசு பெற்றது. அவர் எழுதிய Ecco homo எனக்கு பிடித்த காந்தி கதைகளில் ஒன்று. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் செறிவான மொழியாக்கங்களை செய்திருக்கிறார். தமிழில் அவர் அளவுக்கு அயல் இலக்கிய வாசிப்பு உரியவர்கள் மிகக் குறைவு என்பது என் கணிப்பு. ‘பாண்டியாட்டம்’ உண்மையில் அப்படி பிரதிகளின் மீது அவர் தாவித்தாவி செல்லும் கட்டுரைகளின் தொகுப்புதான். பெருமைக்குரிய மிக முக்கியமான அறிமுகம் என நம்பியின் இந்த கட்டுரை நூலை கருதுகிறேன். ஓவியர் ஜீவானந்தத்தின் கோட்டுச் சித்திரங்களோடு நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது, கண்காட்சி முடிவதற்குள் வந்துவிடும்  என நம்புகிறேன்.

பதாகை இணைய தளம் தொடர்ந்து செயல்பட காரணமாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி. பதிப்பகமாக மலர்ந்திருக்கும் பதாகையையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய ஆண்டு பதாகை- யாவரும் கூட்டாக வெளியிட்ட

1. பாகேஸ்ரீ- எஸ்.சுரேஷ்- சிறுகதைகள்

2. வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி – – சிறுகதைகள்

3. வளரொளி- நேர்காணல்கள், மதிப்புரைகள்- சுனில் கிருஷ்ணன்

ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன.

இந்த நூல்கள் புத்தக கண்காட்சியில் யாவரும் அரங்கில் (189 & 190) கிடைக்கும். ஆன்லைனில் பெற http://www.be4books.com or Whatsapp no.9042461472யை தொடர்புக் கொள்ளலாம்.

ஹைட்ரா – சுசித்ரா சிறுகதை

பின்மதிய இடைவேளையில் அட்சயாதான் வந்து சொன்னாள். “ஐஷூ ரொம்ப அழறாப்பா. என்னன்னே தெரீல…”கண்கள் விரிய லட்சுமி ஒரு கணம் அவளை ஏரிட்டுப் பார்த்தாள். காற்றில் தும்பிக்கைகள் அலைய வினோத்தின் ரெக்கார்ட் நோட்புக்கில் ஹைட்ரா படத்தை வரைந்துகொண்டிருந்தவள் அதை அப்படியே போட்டுவிட்டு அட்சயாவுடன் ஓடினாள்.

அப்போதெல்லாம் ஒவ்வொருநாளும் காலை பத்தரை மணி இடைவேளையில், அது முடியவில்லை என்றால் லஞ்ச் பிரேக்கிலாவது, லட்சுமி ஐஷ்வர்யாவை சென்று பார்த்துவிடுவாள். அல்லது இவளைப் பார்க்க அவள் வந்துவிடுவாள். ஆனால் அன்று மட்டும் லட்சுமிக்கு ஐஷ்வர்யாவை சந்திக்க முடியாமல் போயிற்று.  ஏனோ, காலையிலிருந்து வேலை. கிளாஸ் மானிட்டர் பொருப்புகள்.

முதலில் யூனிட் டெஸ்ட் தாள்களை கணக்கிட்டு டோட்டல் போட்டுத் தரச்சொல்லி உத்தரவு வந்தது. மதியம் போகலாம் என்றால் அன்று காலாண்டு பரிட்சைக்கு முந்தய வெள்ளிக்கிழமை. ரெக்கார்ட் நோட்டுகளை முடித்துத்தர வேண்டிய கடைசி நாள். வரிசையாக ஆளாளுக்கு வந்து “ஏய் ஒரு படம்தான் போட்டுத்தாயேன்” என்று நின்றார்கள். லட்சுமி “முடியாது” என்று சொல்லத் தெரியாத குட்டி. பீடி பீரியடிலும் தும்பிக்கைகளாக வரைந்துகொண்டிருந்தாள்.

ஐஷ்வர்யாவும் லட்சுமியும் எட்டாம் வகுப்புவரை ஒரே பெஞ்சில் ஒன்றாகவே படித்தவர்கள்.  ஐஷூ-லச்சு என்று இணை பெயராகத்தான் அறியப்பட்டார்கள். லட்சுமியின் ஹீரோ பேனாவை அந்த வகுப்பிலேயே பயன்படுத்தக்கூடிய ஒரே ஆள் ஐஷ்வர்யா மட்டும் தான் என்பது வித்யா விஹார் பள்ளியின் எட்டாம் வகுப்பு வரிசையே அறிந்த விஷயம். ஏனோ ஒன்பதாம் வகுப்பில், விதி –  கிருஷ்ணகுமாரி டீச்சரின் கட்டளையை அப்படியும் சொல்லலாம் – அவர்களை வெவ்வேறு செக்‌ஷன்களில் பிரித்துவிட்டது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாகவே பிள்ளைகள் சேர்ந்து படித்தால் ஒட்டிக்கொண்டுவிடுவார்கள், கவனம் குறையும் என்ற தர்க்கத்தின் அடிப்படையில் அந்த வருடம் எல்லா வகுப்புகளிலும் செக்‌ஷன்களை கலைத்துப் பிரித்தார்கள். விளைவாக லட்சுமி நைன் – ஏ. ஐஷ்வர்யா நைன் – சி.

வகுப்புகளாவது பக்கம் பக்கமாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை. அப்போது பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதியை இடித்துக்கட்டிக்கொண்டிருந்தார்கள். ஆகவே நைன் – ஏ மேலே மூன்றாம் மாடியிலும், நைன் – சி கீழே ஆடிட்டோரியம் பின்னாலேயும் அடியும் முடியுமாக இருந்தது. ஆகவே அன்று மதியம் ஐஷ்வர்யாவை பார்க்க, துப்பட்டாவும், தலைப்பின்னலும், அதிலிருந்து அவிழ்ந்து தொங்கிய கருநீலக்கலர் ரிப்பனும் முதுகுக்குப் பின்னால் படபடக்க, லட்சுமி படிகளில் தாவித்தாவி குதித்து கீழ் தளத்துக்கு ஓடினாள்.

நைன் – சி வகுப்பின் பின் வரிசையின் கடை ஓரத்தில் பெஞ்சு மீது உடலையே கூடென்றாக்கிக்கொண்டு தலையை கவிழ்த்து படுத்திருந்தவள்தான் ஐஷ்வர்யா என்று லட்சுமி கண்டுகொள்ள ஒரு நொடி பிடித்தது. வெள்ளைச்சீருடையிட்ட அந்த உரு நடுங்குக்கொண்டிருந்தது. கருநீல துப்பட்டாவின் முனை துவண்டு இருபக்கமும் தொங்கியது. உள்ளே அவள் விசும்பியிருக்கவேண்டும், உடலே தூக்கிப்போட்டு அதிர்ந்தது. லட்சுமி ஓடிப்போய், “ஐஷூ! ஐஷூ! ஏய், என்னடீ ஆச்சு? கேக்கறேன்ல?” என்று அவள் தோளை பிடித்துக் குலுக்கினாள். ஐஷ்வர்யா பந்தாகவே கிடந்தாள். ஒன்றும் சொல்லவில்லை. தலையைக்கூட நிமிரவில்லை. வகுப்பில் பத்து பேர்களுக்கு மேல் இருக்கவில்லை. முதல் பெஞ்சில் சில பையன்கள். இன்னும் சிலர் ஜன்னலோரமாக நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஐஷ்வர்யா  பக்கத்தில் உட்காரும் திவ்யா அங்கே இருந்தாள்.

“திவ்யா என்னடீ ஆச்சு இவளுக்கு?” என்று லட்சுமி குரல் கொடுத்தாள்.

திவ்யா கும்பலுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்து தோள் குலுக்கினாள்.  “உடம்பு சரியில்லன்னு லஞ்ச் பிரேக்லியே பின்னால போயி படுத்துகுட்டா… தெரியல” என்று நின்ற இடத்திலிருந்தே பதில் சொல்லிவிட்டு உடனே தலையை உள்ளிழுத்துக்கொண்டாள்.

என்ன செய்வதென்று தெரியாமல் லட்சுமி பதறி சுற்றும் முற்றும் பார்த்தாள். “கிருஷ்ணகுமாரி மேடத்துட்ட போய் சொல்லலாமா?” என்று அட்சயா கேட்டாள்.

குனிந்த உருவிலிருந்து ஒரு கை மட்டும் பிரிந்து வந்து லட்சுமியின் கையைத் தேடி கெட்டியாக பிடித்துக்கொண்டது. “வேண்டாமே… ப்ளீஸ்?”

ஐஷ்வர்யா தலை நிமிர்ந்தாள். முகமெல்லாம் சிவந்து கன்னங்களில் உப்புக்கரை தீட்டியிருந்தது. “திட்டுவாங்க…” குரல் கெஞ்சி சிறுத்தது. அழுகையானது.

“என்ன ஆச்சுன்னு சொன்னா தானப்பா ஏதாச்சும் செய்ய முடியும்?” என்றாள் லட்சுமி. பதற்றத்தில் அவள் குரல் அதிர்வாக தொனித்தது.

அந்தக்குரலின் ஆணைக்கு கட்டுப்பட்ட பாவைபோல் ஐஷ்வர்யா இலேசாக எழுந்து திரும்பி குர்த்தாவை இழுத்துவிட்டுக் காட்டினாள். நீளமாகத்தொங்கிய அவள் பின்னலுக்கடியில் பெரிய செம்பருத்திப்பூவாக ஒரு குருதித்தடம் பதிந்திருந்தது. எழுந்தபோது மரபெஞ்ச்செல்லாம் சிவப்பான பசபசப்பு. அதன் வீச்சம் எழ என்ன செய்வதென்று தெரியாமல் ஐஷ்வர்யா பதறி உடனே அதன் மேலேயே  திம்மென்று உட்கார்ந்தாள்.  அவளால் அதன்பின் யார் கண்ணையும் சந்திக்க முடியவில்லை.

லட்சுமி ஒரு நொடி தயங்கினாள். எழுந்து சென்றாள். முன்பெஞ்சு அருகே நின்றவனிடம், “பிரவீன்… பசங்களையெல்லம் கொஞ்சம் ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெளிய இருக்க சொல்றியா? ப்ளீஸ்?” என்றாள். பிரவீன் முழித்தான். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. அவள் சொன்னதை செய்தான்.

லட்சுமி நோட்டுப்புத்தகத்திலிருந்து தாள்களை கிழித்தாள். ஐஷ்வர்யாவை எழச்சொல்லி அவள் உட்கார்ந்த இடத்தை வழித்து எடுத்தாள். மூன்று நான்கு முறை எல்லாத் தடமும்  போக துடைத்தாள். இரத்தம் படிந்த தாள்களை மடித்து மடித்து இன்னொரு தாளில் சுருட்டி யாரோ சாப்பிட்டு குப்பையில் போட்டிருந்த காலி சிப்ஸ் பாக்கெட்டில் போட்டு அதையும் சுருட்டி ஓர் ஓரமாக வைத்தாள். அதை எங்கே போடுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. மற்ற எல்லோரும் எட்டியே நின்று வேடிக்கை பார்த்தார்கள். யாரும் பக்கத்தில் வரவில்லை.

அடுத்து என்ன செய்வதென்றும் அவளுக்குத் தெரியவில்லை. “ஐஷூ, வீட்டுக்குப் போறியா?” என்றாள். ஐஷூ விசும்பினாள். அந்நேரத்தில் அவள் வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று லட்சுமிக்குத் தெரியும். தவிர இந்த நிலையில் வெளியே எப்படி போவது?

“பேசாம டீச்சர்ட்டையே சொல்லிடலாமா?” என்று மீண்டும் அட்சயா கேட்டாள். “எந்த டீச்சர்?” என்றாள் லட்சுமி. ஒவ்வொரு பெயராக அவர்கள் மனதில் ஓடியது.

“செங்கொடி மிஸ் இன்னைக்கி லீவாச்சே?” என்றாள் அட்சயா. “வேற யார்ட்ட சொல்றது? சங்கரலிங்கம் சார்ட்டையா?” என்றாள் லட்சுமி. அதை யோசிக்கவே அவளுக்கு சிரிப்பாக வந்தது. ஐஷ்வர்யாவைப் பார்க்க அவளும் கண்ணீரை மீறி சிரித்துக்கொண்டிருந்தாள்.

“சரி. ஒண்ணு பண்ணு,” என்றாள் லட்சுமி. “இன்னொரு நேப்கின வச்சுகிட்டு இங்கியே உக்காரு. இன்னும் ரெண்டு பீரியட்தானே? சாய்ந்தரம் நானும் கூட வரேன். சேர்ந்தே வீட்டுக்குப் போகலாம். பஸ் வேண்டாம். ஆட்டோல போயிடலாம்,” என்றாள்.

ஐஷ்வர்யா பயந்த பார்வையுடன் பார்த்தாள். “ஏற்கனவே ரெண்டு வெச்சிருக்கேன்,” என்றாள்.

“பரவால்ல, மேல ஒண்ணு வெச்சுக்க,” என்றாள் அட்சயா.

ஐஷ்வர்யாவுக்கு பதட்டம் குறையவில்லை. “இதோட எப்பிடி டாய்லெட்டுக்கு போவேன்? எல்லாரும் பாப்பாங்களே?” என்றாள். அப்போது மூன்றரை மணி பெல் அடித்தது. கதவைத்திறந்து எல்லோரும் உள்ளே நுழையத்தொடங்கினார்கள்.

லட்சுமியின் அனிச்சையாக அதைச்செய்தாள். இரண்டு தோள்களிலிருந்து இரண்டு பின்களையும் நடு நெஞ்சிலிருந்து மூன்றாவது பின்னையும் சிவப்பு மானிட்டர் பேட்ஜையும் கழட்டி கருநீலநிற துப்பட்டாவை இழுத்து உதறினாள். இரண்டாக மடித்தாள். ஐஷ்வர்யாவை இழுத்து அவள் இடுப்பைச் சுற்றி கட்டி முடி போட்டாள்.

ஐஷ்வர்யா உடல் மெலிந்தது. இரண்டு கட்டு சுற்ற முடிந்தது. சொறுகிவிட்டு, “போ, ஒண்ணும் தெரியாது. இங்கியே திரும்ப வந்து உட்காரு. யாராவது கேட்டா உடம்பு சரியில்லன்னு சொல்லிக்கோ. கரெக்டா அஞ்சரைக்கு நான் வரேன், சரியா? நான் வரவரைக்கும் நீயா எங்கியும் போகாத. என்ன?” என்றாள். ஐஷ்வர்யா மௌனமாக தலையசைத்தாள்.  வெள்ளை குர்த்தாவில் லட்சுமி வகுப்பைவிட்டு வெளியேறினாள்.

அப்போதெல்லாம் வித்யாவிஹார் பள்ளியில் வாரத்துக்கு ஒரு முறை இந்த ‘வெள்ளைச்சீருடை’ தினம். மாணவிகள் மற்ற நாட்களில் கருநீல சல்வாரும் துப்பட்டாவும் இளநீலக்கட்டம் போட்ட குர்த்தாவும் போட்டுவர வேண்டும். வெள்ளிக்கிழமை மட்டும் வெள்ளைக் குர்த்தா. வெள்ளை கான்வாஸ் ஷூ. மாணவர்களுக்கும் இதே நியமம், என்ன சல்வார்-குர்த்தாவுக்கு பதிலாக பாண்ட்-சட்டை. துப்பட்டா கிடையாது.

ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்துக்குள் ஒரு கூட்டம் ஆசிரியர்கள் மாறி மாறி ஷிஃப்ட் போட்டு பிள்ளைகளை கண்போனபோக்கில் நிறுத்தி சீருடைகளை சரிபார்ப்பார்கள். நுணுக்கி நுணுக்கி நோட்டமிடுவார்கள். நகங்களை வெட்டியிருக்க வேண்டும். ரிப்பனை முறுக்கியிருக்க வேண்டும். முகத்தில் முடி வளர்ந்திருந்தால் மழித்திருக்க வேண்டும். துப்பட்டாவை பெரிய பதாகையாக மடித்து பின் குத்தி நிலைநிறுத்தப்பட்டிருக்கவேண்டும். அதன் முனை காற்றில் பறக்காதபடிக்கு தோளுக்குப்பின்னால் முடித்துவிடப்பட்டிருக்க வேண்டும். வெள்ளைச் சீருடை பளீரென்று ஒரு பொட்டு கறையில்லாமல் முகத்திலறையும்படி இருக்கவேண்டும்.

உடலோடு ஒட்டிய வெள்ளை குர்த்தாவின் நுணி கால்களில் படபடக்க லட்சுமி படியேறிச்சென்றாள். மூன்று மாடிகள். மூச்சு வாங்க ஓடி வகுப்பை அடைந்தாள். நல்ல வேளை அடுத்த வகுப்புக்கான ஆசிரியர் வரவில்லை. கழுத்திலிருந்து நெஞ்சுக்குள் வேர்வை வழிந்தது. தன்னுடைய இருக்கையை அடைந்தபோது எல்லோரும் அவளையே பார்த்தார்கள். பிரீதி “துப்பட்டா எங்கடீ?” என்றாள். “நீ மொதல்ல தள்ளு…” என்று அவளுக்கும் ஜெனிஃபருக்கும் நடுவே தன்னை பொருத்திக்கொண்டாள் லட்சுமி.

மேசை மேல் அவள் பாதியில் விட்டுச்சென்ற ஹைட்ரா தும்பிக்கைகளை ஆர்வமாக துழாவியபடி காத்திருந்தது. எத்தனை ஆனந்தம்! நொடிப்பொழுதில் லட்சுமிக்கு முகமெல்லாம் குன்றும் குழியுமாய் பிளந்தது. ஒருநொடிக்கு அவளும் எங்கேயோ நெல்குருத்துபோல் ஆடிக்கொண்டிருந்தாள். அந்நேரம் ஜென்னிஃபர் “கைல என்ன?” என்றாள். சிரிப்பு மறைய “ம்ம்?” என்று குனிந்தாள். இரண்டு கைகளிலும் எதையோ கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தாள். இடது கையில் ரத்தம்படிந்த தாள்களை சுருட்டிவைத்திருந்த சிப்ஸ் பாக்கெட். வலதுகையில் சிவப்பு நிற மானிட்டர் பேட்ஜ்.

என்ன செய்வதென்று தெரியாமல் சிப்ஸ் பாக்கெட்டை தன்னுடைய ஸ்கூல் பேக்கின் ஒரு மூலையிலேயே அமுக்கி வைத்தாள். வீட்டுக்குப்போய் தூரப்போடலாம். கைகூட கழுவவில்லையே? அதனால் என்ன, பேப்பர்தானே? ஒன்றும் வியாதியெல்லாம் தொத்திக்கொள்ளாது… அவள் மானிட்டர் பேட்ஜை மீண்டும் நெஞ்சில் குத்திக்கொண்டிருந்தபோதே வைஸ் பிரின்சிபல் கிருஷ்ணகுமாரி டீச்சர் வகுப்பில் நுழைந்தார்.

அது அவருடைய வகுப்பு என்பதையே லட்சுமி மறந்துவிட்டிருந்தாள். இறுக்கிப் போர்த்திய முந்தானையும் இழுத்துக்கட்டிய கொண்டையுமாக அவருடைய குட்டி உருவம் உள்ளே உருண்டு வந்தது. வெறப்பா கைய கட்டிகிட்டு நிக்குற ஹைட்ரா! லட்சுமிக்கு சிரிப்பாக வந்தது. “ஏய், குனி. அவுங்க கண்ல பட்ட சாவுதான்,” என்று பிரீதி காதை கடித்தாள்.

கிருஷ்ணகுமாரி டீச்சர் அனாவசியமாக எந்த உடலசைவையும் செய்வதில்லை. கை உயர்த்துவதில்லை. குரல் உசத்துவதில்லை. கண்ணோட்டத்திலேயே வகுப்பை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் கொண்டிருந்தார். இப்போதும் கண்ணாடிவிளிம்பிலிருந்து இரண்டுபக்கமும் தொங்கிய திரி ஊசலாட கண்களை உயர்த்தி வகுப்பை நோட்டம் விட்டார் டீச்சர். உடனே சலசலப்பு அடங்கியது. அமைதி.

வரலாற்றுப் பாடம் தொடங்கியது. சுதந்திரப்போராட்டப்படலம். காந்தி இரண்டாம் வட்டமேசை மாநாட்டுக்கு 1931-ல் லண்டன் செல்கிறார். கச்சையாகக்கட்டிய ஒற்றைக் கதராடையில் லண்டன் குளிரையும் அங்குள்ள பிரிட்டிஷாரையும் எதிர்கொள்கிறார் காந்தி. பிறகு அரிஜனங்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அரிஜனமும் பொதுஜனம் அல்லவா? அவர்களுக்கும் கைகொடுத்து உதவவேண்டியது கடமையல்லவா? 1932-ல் பூனா ஒப்பந்தம் கையொப்பமாகிறது. 1935-ல் இந்திய அரசுச் சட்டம்… கிருஷ்ணகுமாரி டீச்சர் ஆண்டுகளையும் நிகழ்வுகளையும் மென்மையாக பிசகில்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிச் செல்வதே வரலாற்றுப்பாடம் எடுக்கும் வழிமுறை. மாணவர்கள் அவற்றை அப்படியே வார்த்தை மாறாமல் எழுதிக்கொண்டிருந்தார்கள். 1937-ன் தேர்தல்களுக்கு வந்த போதுதான் நீல அலையாகத்தெரிந்த மாணவிகள் பக்கத்தில் ஒரு வெண்ணிற உருவை கண்டுகொண்டார்.

“லக்‌ஷ்மி!”

வெள்ளை குர்த்தாவை இழுத்துவிட்டுக்கொண்டு லட்சுமி நீலத்திரைக்குமேல் எழுந்தாள். விரல்களை இறுக்கி மடித்து தலை கவிழ்ந்தாள். எல்லோரும் திரும்பினார்கள்.

“ஒய் ஆர் யூ நாட் இன் யூனிஃபார்ம்?” டீச்சரின் குரல் அறை முழுவதும் ஒலித்தது.

லட்சுமி ஒன்றும் சொல்லாமல் நிமிர்ந்து டீச்சரின் கண்களை சந்தித்து மீண்டும் தாழ்த்திக்கொண்டாள்.

கிருஷ்ணகுமாரி டீச்சர் அவள் பெஞ்சை நோக்கி விடுவிடுவென்று நடந்து வர லட்சுமி தன்னை அறியாமலேயே பின்வாங்கினாள். கிருஷ்ணகுமாரி டீச்சர் பையன்கள் சேட்டைசெய்தால் நடுவகுப்பிலேயே தொப்புள்சதையை பிடித்து திருகுவார். அப்போது அவளையும் அப்படி செய்யுமளவுக்கு அவர் உடலில் வேகம் இருந்தது.

ஆனால் டீச்சர் அப்படியேதும் செய்யவில்லை. அவளை அடைந்தார். தாழ்வாக, நெருக்கமாக, சீரலாக, அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ஆபாசம் பேசும் குரலில், “ஏய், துப்பட்டா எங்கடீ?” என்றார்.

அவள் அப்போதும் பதில் சொல்லாமல் நின்றாள்.

டீச்சரின் பார்வை அவள் மீது ஊறிச்சென்றது. அவர் பார்வை பட்ட இடங்களிலெல்லாம் கண்களாக முளைத்துவிட்டதுபோல் இருந்தது லட்சுமிக்கு.

“ஸிட் டௌன்,” என்றார்.

தோள்களை குறுக்கியபடி லட்சுமி உட்கார்ந்தாள். தலையை குனிந்தாள்.

ரெக்கார்ட் நோட்டிலிருந்து ஹைட்ரா எல்லா கைகளையும் ஆட்டியது. அழாதே, அழாதே என்பதுபோல்.

“ஹைட்ரா ஆழத்தில் வாழும். ஹைட்ரா தண்ணீரில் நீந்தும். ஹைட்ராவுக்கு கண் தெரியாது. ஹைட்ராவுக்கு கை மட்டும் தான் உள்ளது. ஒரு கை வெட்டப்பட்டால் ஹைட்ராவுக்கு அந்த இடத்தில் மற்றொரு கை முளைக்கும்.” பாடத்தின் வரிகளை லட்சுமி தனக்குள் அனிச்சையாக மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டே இருந்தாள். வார்த்தைகளை அப்படி இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருப்பது வரை அழுகை வராது என்று அவளுக்குத்தெரியும்.

“ஏய் துப்பட்டாவ என்னடீ பண்ண? அவங்கட்ட சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே?” என்று முணுமுணுத்தாள் பிரீதி. லட்சுமியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வினோதும் கார்த்தியும் திரும்பி பரிதாபமாக பார்த்தார்கள்.

வகுப்பு முடிந்த கையோடு டீச்சர் லட்சுமியை எழுப்பினார். மூன்று மாடிகள் இறங்கி கீழ்தளத்துக்கு அவர்களுடைய அறைக்கு கூட்டிச்சென்றார். தலைகுனிந்தபடியே லட்சுமி அவரை பின்தொடர்ந்து இறங்கினாள்.

தன்னுடைய அறையிலிருந்து லட்சுமியை அவள் அப்பாவுக்கு போன் போட்டுத்தரச்சொன்னார் டீச்சர். போனில் மென்மையாக, நிதானமாக, ஆனால் வலுவாக பேசினார்.  “ஆமா சார். ப்ளீஸ் கம் இம்மிடியட்லி… இல்ல, பதட்டப்பட ஒண்ணுமில்ல, ஆனா நீங்க வந்தா பெட்டர்.”

லட்சுமி அறையின் ஒரு மூலையில் அதே வெள்ளை குர்த்தாவில் உட்கார்ந்திருந்தாள். தன்னுடைய தாள்களில் மூழ்கியிருந்த கிருஷ்ணகுமாரி டீச்சர் அவ்வப்போது நிமிர்ந்து கண்ணாடிச்சில்லுக்கு மேலிருந்து அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கினார். அவருக்குப்பின்னால் ஒரு சட்டகத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் கண்சொக்கி நான் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதுபோல் இருந்தார். பக்கத்திலே வெண்சேலையில் சாரதாதேவி அந்த அரங்கை பரிவோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

டீச்சர் நிமிர்ந்தார். “நீ உள்ள ஷிமீஸ் போடுறதில்லியா?” என்றார்.

லட்சுமி குனிந்து தோளுக்குள் விரலை விட்டு ஆடையை இழுத்துவிட்டுக்கொண்டாள்.

குர்த்தாவுக்கடியில் அதே வெண்ணிறத்தில் பருத்தி ஒற்றையாடையாக ஷிமீஸ் போட்டிருந்தாள். அதற்கடியில் உள்ளாடை. பொதுவாக இந்த அமைப்புக்கு மேல் துப்பட்டாவும் இருக்கும். இன்று இல்லை. ஓடி வியர்வையில் தோலோடு ஒட்டியதால் எந்த ஆடையும் தனியாகத் தெரியவில்லை. அவள் ஏதும் சொல்லவில்லை.

குரல் மாறியது. “காலையில துப்பட்டா போட்டுட்டுதான வந்த… எதுக்கு கழட்டுன? யாராவது பாத்தா தப்பா நெனைப்பாங்கல்ல? அதானே டீச்சர் கேக்கறேன்?”

ஆனால் அதற்கும் அவள் ஏதும் சொல்லவில்லை. தலை குனிந்தபடியே இருந்தது.

கிருஷ்ணகுமாரி டீச்சர் கண்களை சுறுக்கினார். “கேக்கறேன்ல? அங்க என்ன தனியா யோசனை? இப்படி கொஞ்சம் இறங்கி வர்ரது.”

லட்சுமி கண்கள் படபடக்க நிமிர்ந்து தலையசைத்தாள். கைவிரல்களை மடியில் முஷ்டியாக மடக்கிக்கொண்டாள். மேசை மீதிருந்த தூசின் மேல் ஹைட்ராக்கள் நெளிந்தன. கைகள் காற்றை அளைந்தன. அவை கொடிகளைப்போல் படபடத்தன. சுழலாக வட்டம்போட்டன. கைகோர்த்து நடனமிட்டன. லட்சுமி அவற்றை பார்த்துக்கொண்டிருந்தாள்.

லட்சுமியின் அப்பா வர ஐந்து மணிக்கு மேல் ஆனது.

“மேடம்… என் டாட்டர்… சி.லட்சுமி…” உள்ளே செருகப்படாமல் பாண்டுக்கு வெளியே தொங்கிய சட்டைநுணி மெல்லத்திரும்பிய ஃபேன் காற்றில் துடித்தது.

“உட்காருங்க. லட்சுமியோட அம்மாவால வரமுடியலியா?”

“இல்ல மேடம்…” லட்சுமியின் அப்பா தயங்கினார். “அவ இல்ல. இவளுக்கு மூணு வயசிருக்கும். அப்ப ஒரு ஆக்சிடண்ட்ல போயிட்டா”

“ஓ… ஐ யம் சாரி.” டீச்சர் கண்களை விலக்கிக்கொண்டார். மீண்டும் அவர் முகத்தை பார்த்தார். “இல்ல, கொஞ்சம் டெலிகேட் இஷ்யூ… அதான் உங்ககிட்ட எப்படி டிஸ்கஸ் பண்ணன்னு தெரியல…”

பெருமூச்சு விட்டார். “சார், தப்பா எடுத்துக்காதீங்க. ஆனா சொல்றது எங்க கடமையில்லிங்களா? உங்க டாட்டர்… ஷீ இஸ் நாட் அ சைல்ட் எனிமோர். அவளுக்கு இன்னும் கொஞ்சம் தன்ன பத்தின சென்ஸ் இருக்கணும் சார்.”

“மேடம், என்ன நடந்துச்சு?” லட்சுமியின் அப்பா திரும்பி மகளை பார்த்த்தார். “என்ன டா?”

ஒரு ஹைட்ரா கைகளை விரித்து காற்றாடி போல் அவள் கண்ணுக்கு முன்னால் மெல்ல சுற்றிக்கொண்டிருந்தது. அப்பா பார்த்ததை லட்சுமி பார்க்கவில்லை.

டீச்சர் கண்ணாடியை கழற்றினார். “சார், இன்னைக்கு அவ துப்பட்டா… அதான் பிள்ளைங்க மேல போடுவாங்களே… அதப்போடாம என் கிளாசுக்கு வந்தா. எங்கேயோ தொலச்சிருக்கா. நானும் விசாரிச்சு பாத்திட்டேன். சொல்லமாட்டேங்குறா. என்ன கேட்டாலும் உம்முணாம்மூஞ்சி கல்லு மாதிரி உக்காந்துட்டிருக்கா.” ஒரு கோப்பைத் திறந்தார். “இதோ நீங்களே பாருங்க. காலையில ஃபுல் யூனிஃபார்ம்லதான் வந்திருக்கா. ரெக்கார்ட்ல இருக்கு. நடுவுல எங்கியோ லூஸ் பண்ணியிருக்கா.”

லட்சுமியின் அப்பா இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தார்.

“மேடம்… இது… எங்கியாவது விழுந்திருக்கும்…” என்றார்.

டீச்சர் நெற்றி சுருக்கினார். “என்ன சார் சீரியஸ்னெஸ் புரியாம பேசரிங்க? மிஸ்பிளேஸ் பன்றதுக்கு துப்பட்டா என்ன சாவிக்கொத்தா? பின்பண்ணி வரணும்னு இன்சிஸ்ட் பன்றோம். அதப்போயி எதுக்கு கழட்டணும் சொல்லுங்க? அப்புறம் துப்பட்டா போடலன்றளவுக்கு அவ்வளவு மறதியா ஒரு பொண்ணுக்கு?

“சரி, நீங்க சொன்ன மாதிரியே விழுந்திருக்கட்டும். அப்ப கேட்டா சொல்றதுக்கென்ன?” டீச்சர் அவரை ஓரக்கண்ணால் பார்த்தார். “வேறெங்கேயாவது போயிருக்கக் கூடாதில்ல?”

லட்சுமியின் அப்பா ஒன்றும் சொல்லாமல் வெறிக்க டீச்சர் கண்ணாடியை துடைத்து அணிந்தபடி தொடர்ந்தார். “துப்பட்டா தொலஞ்சுபோனதுகூட சரி சார். ஆனா பாருங்க. அதப்பத்தின அக்கறையே இல்லாம இருக்கா. புரியுதுங்களா சார்?” டீச்சர் தாள்களை சேர்த்து கொத்தாக அடுக்கி ஃபைலுக்குள் சேர்த்து அதன்மீது கைகோர்த்து பாந்தமாக இருத்தி அவர் கண்களை சந்தித்தார். “அவளுக்கு தன்னப்பதின சென்ஸே இல்ல. எங்கேயோ இருக்கா. அதத்தான் சொல்ல வர்ரேன்.”

அப்பா அவளை மீண்டும் திரும்பிப் பார்த்தார். அவளுடைய வெள்ளைச்சீருடை அப்போதுதான் அவர் கண்களில் பட்டதுபோல் ஒரு நொடி விழித்துக் கொட்டினார். பெரிய பதாகையைப்போல் நெஞ்சின்மேல் மையமாக குத்தியிருந்த சிவப்புநிற வட்டத்திலிருந்து அவரால் கண்களை எடுக்கமுடியவில்லை.

குரலை மீடெட்டுத்து லட்சுமியின் அப்பா மெல்ல, “மேடம்… தப்பா ஒண்ணும் நடந்திருக்காது…
நல்லா விசாரிச்சுப் பாத்தீங்களா?” என்றார்.

கிருஷ்ணகுமாரி டீச்சர் பொறுமையிழந்த உச்சுக்கொட்டுடன் நிமிர்ந்தார்.

“சார், தப்பா எதுவும் நடந்திருக்காதுன்னே வெச்சுக்குவோம். சரி. ஆனா கேள்வின்னு வந்திருச்சுல்ல? இப்ப நான் கேக்கறா மாதிரி அவ வெச்சுக்கலாமா, சொல்லுங்க? அந்த சென்ஸ் அவளுக்கா இருக்கணும் சார். நாமள எல்லாரும் பாக்கறாங்களே, கேள்வி கேப்பாங்களேன்ற உணர்வு உடம்போட இருக்கணும். எல்லாம் லைஃப்ல நெறைய பார்த்தாச்சு சார்… அந்த ஆதங்கத்துல சொல்றேன். அவ கொழந்த இல்ல. அம்மா இல்லாத பிள்ளைன்னு வேற சொல்றிங்க, வீட்ல யாராவது பெரியவங்கள விட்டு பேசிப் புரியவைங்க சார்…”

பேச்சுமும்முறத்தில், ஒரு ஹைட்ராவின் கை அந்த அறையிலிருந்து நீண்டு வெளிச்சென்றதை இருவருமே கவனிக்கவில்லை. அது தாழ்வாரங்களில் தலைகவிழ்த்தபடியே கண்ணில்படாமல் ஒழுகிச்சென்றது. நைன் – சி வகுப்பின் கடைசி பெஞ்சில், லட்சுமியின் துப்பட்டா முனையை கெட்டியாக பிடித்துக்கொண்டு அவள் வருவதற்க்காக அப்போதும் காத்துக்கொண்டிருந்த ஐஷ்வர்யாவின் கையை அடைந்தது. தலைதூக்கி, ‘நான்தான்’, என்று மெல்ல முட்டியது.

வெற்று பக்கம் – சுசித்ரா மொழியாக்கத்தில் ஐசக் டினேசன்

சுசித்ரா 
(ஆங்கில மூலம்: ஐசக் டினேசன் – The Blank Page)

புராதன ஊர்வாயில் ஒன்றின் வெளியே, காபி நிறத்தோலும் கருப்பு முக்காடுமாக அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, போகிற வருகிறவர்களுக்குக் கதை சொல்லி தன் பிழைப்பை நடத்திக்கொண்டிருந்தாள்.

அவள் சொன்னாள்:

“கனிவான அம்மையே, அய்யனே, ஒரு கதை கேட்கிறீர்களா? என் வாழ்நாள் முழுவதும் நான் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறேன், ஆயிரத்தியொரு கதைகள் சொல்லியிருக்கிறேன். என்னை நோக்கி, எனக்கே எனக்காக, ஒரு சிவப்பு ரோஜாவின் கதையையும் இரண்டு மிருதுவான அல்லி மொட்டுகளின் கதைகளையும் பட்டிழையென பின்னிப்பிணைந்த நான்கு கொடிய விஷசர்ப்பங்களின் கதைகளையும் சொல்ல இளைஞர்களை நான் அனுமதிக்கத் தொடங்கிய காலம் தொட்டு நான் கதை சொல்லி வருகிறேன். என்னுடைய அம்மையின் அம்மை – கருவிழிகள் கொண்ட நடனமங்கை, அக்காலத்தில் அடிக்கடி முயங்கப்பெற்றவள் – அவள்தான் தன் இறுதி நாட்களில் – அப்போது அவள் பனிக்காலத்து ஆப்பிள் பழத்தை போலச் சுருங்கி முக்காட்டின் கருணைக்கடியில் தஞ்சம் புகுந்து விட்டிருந்தாள் – அவள்தான் எனக்குக் கதையாடலின் கலையைக் கற்பிக்க முற்பட்டாள். அவளுடைய அம்மையின் அம்மை அவளுக்கு அதைக் கற்பித்திருந்தாள்; அவர்கள் இருவரும் என்னை விடப் பெரிய கதைசொல்லிகள். ஆனால் இப்போது அதெல்லாம் பழைய கதை ஆகிவிட்டது – மக்களைப் பொறுத்தவரை நானும் அவர்களும் ஒன்றாகிவிட்டோம். என் கொடுப்பினையே அதுதான் – இருநூறு வருடங்களாகக் கதை சொல்லி வருபவள் நான்.”

இத்தருணத்தில், அவளுக்குச் சேரவேண்டிய சன்மானம் வழங்கப்பட்டு, அவள் உற்சாகமான மனநிலையில் இருந்தாளென்றால், கதையைத் தொடர்வாள்.

“என்னுடைய பாட்டியின் பயிற்சி முறை ரொம்பவும் கடுமையானது,” என்றாள். “‘கதைக்கு விசுவாசமாக இரு,’ என்று அந்தக் கிழவி என்னை எப்போதுமே அதட்டிக்கொண்டே இருப்பாள். ‘என்ன இடர் வந்தாலும், ஒரு நொடிகூடத் தவறாமல் உன் கதைக்கு மாறாப்பற்றுடன் இரு.’ ‘நான் ஏன் அப்படி இருக்கவேண்டும் பாட்டி?’ என்று நான் அவளைக் கேட்பேன். ‘காரணங்களா கேட்கிறாய், பொதிமூட்டையே?’ அவள் கூவுவாள். ‘இதில் உனக்கு கதை சொல்ல வேறு ஆசையா? அது சரி, நீ எப்படியும் கதைசொல்லியாகத்தான் வரப்போகிறாய், அதனால் தொலைகிறது – கேள்! – இவைதான் என் காரணங்கள். கதைசொல்லி கதைக்கு மாறாப்பற்றுடன் – எப்போதும், எந்நிலையிலும், நித்தியமான மாறாபற்றுடன் இருப்பாரென்றால், அங்கு, கதை முடிவில், மௌனத்தின் குரல் பேசும். கதைக்கு துரோகம் இழைக்கப்பட்டிருந்ததென்றால், அங்குக் குடிகொள்ளும் மௌனம் வெறுமையின் மௌனம் மட்டுமே. ஆனால் நாம், மாறாபற்றுடையவர்களான நாம், நம்முடைய இறுதி சொல்லை உரைத்த பின் மோனத்தின் குரலை அங்கு கேட்போம். மூக்கொழுகும் சிறுமிகளுக்கு இதெல்லாம் புரிகிறதோ இல்லையோ, அதுதான் உண்மை.’”

“அப்போது நம் யாரையும் விட மகத்தான கதையைச் சொல்வது யார்?’ என்று மூதாட்டி தொடர்ந்தாள். “மௌனமே அக்கதையைச் சொல்கிறது. உலகத்திலேயே மகத்தான புத்தகத்தில் மிகச்சிறப்பாக அச்சிடப்பட்ட பக்கத்தில் இருக்கும் கதையை விட ஆழமான கதையை எங்கு வாசிக்க முடியும் தெரியுமா? வெற்று பக்கத்தில் மட்டுமே. ஒரு கம்பீரமான, துணிச்சலான பேனாவால், தன் படைப்பூக்கத்தின் உச்சத்தின் உச்சியில் நின்றுகொண்டு, அண்டம் முழுவதும் தேடினாலும் கிடைப்பதற்கரிய மையுடன் எழுதப்படும் கதையைவிட, ஆழமான, இனிமையான, வேடிக்கையான, குரூரமான, கதையை எங்கு வாசிக்க முடியும் தெரியுமா? வெற்று பக்கத்தில்.”

கிழவி சிறிது நேரம் ஏதும் சொல்லாமல், அவ்வப்போது இளித்தபடியும், பற்களற்ற வாயை மென்றபடியும் இருக்கிறாள்.

“நாங்கள்,” என்று இறுதியில் முடிக்கிறாள், “கதைசொல்லும் கிழவிகளான நாங்கள், எங்களுக்கு தெரியும், வெற்று பக்கத்தின் கதை என்னவென்று. ஆனால் இக்கதையை சொல்ல நாங்கள் கொஞ்சம் தயங்குவதுண்டு. இக்கலைக்குள்ளே வராதவர்களுக்கு இக்கதையைச் சொன்னால் எங்கள் மதிப்பீடு குறையக்கூடும். இருந்தாலும், தாராள மனமுடைய இனிய, அழகான அய்யனே, அம்மையே, உங்களுக்கு, விதிவிலக்காக உங்களுக்கு மட்டும், இந்தக் கதையைச் சொல்கிறேன்.

“போர்த்துகல் நாட்டின் நீல மலைகளின் உச்சியில் கார்மலைட் பிரிவைச் சேர்ந்த கன்னியாஸ்திரீகள் வசிக்கும் ஒரு பழைய கன்னிமடம் உள்ளது. எளிமையான வாழ்க்கையும் கடும் முறைமைகளும் கடைபிடிக்கும் பழம்பெருமைக்குரிய பிரிவு அது. பழங்காலத்தில் செல்வமும் செழிப்புமாக இருந்தது அம்மடம். அங்கு இருந்த கன்னியாஸ்திரீகள் அனைவரும் உயர்குடி மகளிர்; அங்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன. ஆனால் நூற்றாண்டுகள் கடந்து செல்ல, உயர்குடி பெண்களுக்கு நோன்பு நோற்பதிலும் பிரார்த்தனை செய்வதிலும் ஆர்வம் குறைந்தது. அதுவரை மடத்தின் கருவூலத்திற்குள் வழிந்துகொண்டிருந்த ஸ்த்ரீதனங்கள் வற்றத்தொடங்கின. இடிந்து சரிந்து கொண்டிருக்கும் அம்மாபெரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஏழ்மையும் எளிமையுமாகச் சில கன்னியாசகோதரிகள் இன்றும் வசித்து வருகிறார்கள். அந்தக் கட்டிடமே அது கட்டப்பட்டுள்ள சாம்பல் நிற பாறைகளோடு ஒன்றாகிவிடவேண்டும் என்ற பேராவல் கொண்டுள்ளது போல நொருங்கிகொண்டிருக்கிறது. இதையெல்லாம் மீறி, அவர்கள் பூரிப்பும் செயலூக்கமும் கொண்ட கன்னியாசகோதரிகளாக வாழ்கின்றனர். புனித ஜெபம் செய்வதில் அவர்களுக்கு பேரின்பம். அதைத்தவிர, மகிழ்ச்சியுடன் அவர்கள் தங்களை மூழ்கடித்துக்கொள்ளும் மற்றொரு செயல், பழம்பெரும்காலத்தில் அந்த மடத்துக்குத் தனித்துவமான, விசித்திரமான ஒரு சிறப்புரிமையை அளித்த செயல். அவர்கள் போர்த்துக்கல் நாட்டிலேயே ஆகச்சிறந்த சணலை விளைவித்துச் சாகுபடி செய்து, அதைக் கொண்டு அந்நாட்டின் மிக மிருதுவான லினன் துணியை உற்பத்தி செய்கிறார்கள்.

“மென்விழி ஒளிரும் பால்நிறக் காளைகள் மடத்தின் அடிவாரத்தில் உள்ள நீள்நிலத்தை உழுகின்றன. உழைப்பினால் காய்ந்து நகத்தடியில் மண்புகுந்த கன்னி விரல்கள், விதைகளைத் திறம்பட விதைக்கின்றன. சணல் பூக்கள் பூக்கும் பருவத்தில், அந்தப் பள்ளத்தாக்கே வான்-நீலமாக மாறுகிறது. பெருந்தேவதை கேப்ரியல் தன் வலுமிக்கச் சிறகுகளை அசைத்தபடி புனித ஆனின் முற்றத்தில் இறங்கினாரே, அப்போது அங்கு முட்டை எடுக்க வந்த அன்னை மேரி அணிந்துகொண்டிருந்த மேலங்கியின் நிறம் அது. அப்போது வானுச்சியில் ஒரு புறா, கழுத்திறகுகள் சிலிர்க்க, சிறகுகள் அதிர, சிறிய, தெளிவான, வெள்ளி நட்சத்திரத்தைப் போல் நின்றது. சணல்பூ பூக்கும் இம்மாதத்தில் மடத்தின் அடிவாரத்தைச் சுற்றி விரியும் கிராமங்களின் மக்கள் அனைவரும் தங்கள் கண்களைச் சணல் விளையும் நிலத்துக்கு தூக்கி, “இந்த மடம்தான் தேவலோகத்துக்குத் தூக்கிச் செல்லப்பட்டுவிட்டதா? அல்லது நம்முடைய அன்புச் சகோதரிகள்தான் தேவலோகத்தையே இங்கு இழுத்துக் கொண்டுவந்துவிட்டார்களா?” என்று கன்னத்தில் கைவைத்து வினவுவார்கள்.

“உரிய காலத்தில் சணல் இழுத்து, அடித்து, திரிக்கப்படுகிறது. அதன் பின் மெல்லிய நூலாக நூற்கப்பட்டு, லினன் நெய்யப்பட்டு, துணிகள் வெளுக்க புல்வெளிகளில் பரப்பப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அவற்றின் மேல் நீர்ப்பாய்ச்சி விடும்போது மடத்தைச் சுற்றி பனி பொழிந்து விட்டதாகவே நம்பத் தோன்றும். அம்மடத்தின் பிரத்தியேக மந்தணப் பாடல்களும் துதிகளும் நித்தம் ஒலிக்க, இச்செயல்கள் அனைத்தும் துல்லியத்துடனும் நுட்பத்துடனும் பக்தியுடனும் நிறைவேற்றப்படுகின்றன. இக்காரணத்தால் அங்கு உற்பத்தியாகும் லினன், சிறிய பழுப்பு நிற கழுதைகளின் முதுகுகளில் கத்தை கத்தையாக அடுக்கப்பட்டு, மடத்தின் வாயிலின் வெளியே, கீழே, மேலும் கீழே என்று ஊரூராகச் செல்லும்போது, அவை என்றென்றும் தும்பைப்பூ நிறமாக, மிருதுவாக, எழில் நயத்துடன், பதினான்கு வயதில் என் கிராமத்தில் ஒரு நடனநிகழ்வுக்குச் செல்வதற்கு முன்னால் என் சிறு கால்களைச் சிற்றோடையில் கழுவியபோது என் பாதம் வெளிர்ந்ததே, அப்படியே காலமெல்லாம் வெளிர்ந்திருக்கும் என்பது ஐதீகம்.

“அய்யனே, அம்மையே, செயலூக்கம் நல்ல விஷயம் தான், மதமும் நல்ல விஷயம் தான், ஆனால் ஒரு கதையின் முதல் கருவென்பது கதைக்கு வெளியே குடிகொண்டிருக்கும் ஏதோ ஒரு மாயமான இடத்திலிருந்து தான் வருகிறது. அதேபோல, வெல்ஹோ மடத்தின் லினன் இப்பேற்பட்ட புனிதத்தன்மையை அடைவது, அதனுடைய முதல் விதை புனித நிலத்திலிருந்து ஒரு சிலுவைப்போராளியால் கொண்டுவரப்பட்டது என்பதால்தான்.

“படிப்பறிவு உள்ளவர்கள் பைபிளில் லோச்சா மற்றும் மரீசா என்ற சணல் வளரும் நிலங்களைப் பற்றிப் படிக்கலாம். எனக்குப் படிக்கத்தெரியாது. இவ்வளவு பேசப்படும் இந்நூலை நான் கண்ணால்கூட பார்த்ததில்லை. ஆனால் என் பாட்டியின் பாட்டி சிறுமியாக இருந்தபோது வயதான ராப்பி ஒருவருக்குச் செல்லமாக இருந்தாள். அவரிடமிருந்து அவர்கள் கற்ற கல்வி எங்கள் குலத்தில் வழிவழியாக வந்துள்ளது. காலேபின் மகள் அஃஸா தன்னுடைய கழுதையை விட்டிறங்கி தந்தையை நோக்கி, ‘எனக்கொரு வரம் தாருங்கள்! நீங்கள் எனக்கு நிலத்தைப் பரிசளித்தீர்கள், எனக்கு நீரையும் பரிசாக அளியுங்கள்’ என்று கூவிக் கேட்டதாக நீங்கள் பழைய ஏற்பாட்டில் யோசுவாவின் நூலில் படிப்பீர்கள். அவளுக்கு அவர் மேல் உலகத்து நீரையும் கீழ் உலகத்து நீரையும் வழங்கினார். அவர்களின் சந்ததியினர்தான் லோச்சா மற்றும் மரீசா நிலங்களில் வாழ்ந்து வந்தனர்; அவர்கள் அங்கு உலகத்திலேயே மிகச்சிறந்த லினனை உற்பத்தி செய்தனர். தோமர் நகரைச் சேர்ந்த பெரிய லினன் நெசவாளர் குடும்பத்தில் தோன்றிய நம்முடைய போர்த்துகிய சிலுவைப் போராளி ஒருவன், அந்த நிலத்தின் வழியே குதிரையேறி சென்றபோது அங்கு வளர்ந்த சணலைக் கண்டு ஈர்க்கப்பட்டு, ஒரு விதை மூட்டையைத் தன் சேணத்தில் கட்டிக்கொண்டு திரும்பினான்.

“இந்தச் சம்பவத்தின் பலனாகத் தோன்றியதுதான், இம்மடத்திற்கே பெரிதும் பெருமை சேர்க்கும் முதற் சடங்கு – அதாவது, அரச குடும்பத்தின் இளவரசிகளுக்கு, அவர்களின் மண இரவுக்கான படுக்கை விரிப்புகள் இங்கிருந்துதான் செல்லும்.

“அம்மையே, அய்யனே, நான் கூற விரும்புவது என்னவென்றால், போர்த்துக்கல் நாட்டின் பழங்குடும்பங்களில் ஒரு மகத்தான சடங்கு காக்கப்படுகிறது. அந்தக் குடும்பத்தில் பிறந்த மகள் ஒருத்தியின் மணம் நடந்த மறுநாள் காலை, விடியலுக்கு முன், அந்த அரண்மனையின் முக்கிய காரியஸ்தர் அந்த இரவின் விரிப்பை உப்பரிகையிலிருந்து தொங்கவிட்டு , ‘இப்பெண்ணை கன்னியென்று அறிவிக்கிறோம்,’ என்று கம்பீரமாக லத்தின் மொழியில் அறிவிப்பார். அந்த படுக்கைவிரிப்பு அதன் பிறகு கழுவப்படுவதும் இல்லை, பிறகு உபயோகிக்கப்படுவதும் இல்லை.

“காலத்தில் பதிந்து விட்டிருந்த இச்சடங்கு அரச குடும்பத்தில் மிகக் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட்டது. இன்று வாழ்பவர்களின் நினைவில் நிலைக்கும் விதத்தில், மிகச்சமீபத்திய நாட்கள் வரைக்கூட அதுவே வழக்கமாக இருந்தது.

“பலநூறு ஆண்டுகளாக, அவர்கள் அளித்த அசாத்திய தரமுடைய லினனுக்குப் பாராட்டாக, மலையில் நின்ற கன்னிமடத்துக்கு இரண்டாவது பெருமையும் இருந்தது. அந்த இரவில் அரசமகள் மகிமைக்குச் சான்றாகிய பனிவெண்மையான படுக்கை விரிப்பின் நடுப்பகுதி மட்டும், அவர்களுக்கே திரும்ப அனுப்பி வைக்கப்பட்டது.

“கன்னிமடத்தின் பிரதானமான, உயரமான பகுதி மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கியவாறு கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில், கருப்பு-வெள்ளை பளிங்கு தரையுடைய நீண்ட தாழ்வாரம் ஒன்றுள்ளது. அந்தத் தாழ்வாரத்தின் சுவர்களில், ஒன்றை ஒட்டி ஒன்றாக, கனமான தங்க முலாம் பூசப்பட்ட சட்டகங்கள் வரிசையாக மாட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் அடியிலும் நல்ல பொன்னில் ஒரு தகடு பதிக்கப்பட்டு, அதில் ஒரு கிரீடமும், அதற்கடியில் ஒரு இளவரசியின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது: டோனா கிறிஸ்டினா, டோனா இனீஸ், டோனா ஜெசிந்தா லெனோரா, டோனா மரியா. ஒவ்வொரு சட்டகமும் அரச படுக்கை விரிப்பிலிருந்து வெட்டப்பட்ட ஒரு சதுரத்தை தாங்கி நிற்கிறது.

“கொஞ்சம் கற்பனையும் உள்ளுணர்வும் உள்ளவர்கள் கித்தான்களில் தெரியும் மங்கிய குறிகளில் அத்தனை ராசிகளையும் கண்டு விட முடியும் – துலாம், விருச்சிகம், சிம்மம், மிதுனம். அல்லது அவர்கள் தங்கள் சொந்த கற்பனையுலகத்திலிருந்து சித்திரங்களைக் கண்டுகொள்ள முடியும் – ஒரு ரோஜா மலர், ஒரு இதயம், ஒரு வாள் – அல்லது வாளால் துளைக்கப்பட்ட இதயம்.

“பழங்காலத்தில், ஆடம்பரமான வண்ணங்கள் மிளிரும் நீள் ஊர்வலங்கள் கல்-நிற மலை முகடுகள் மீது மெல்ல மெல்ல ஏறி, கன்னிமாடத்தை அடையும். போர்த்துக்கல் நாட்டின் பழைய இளவரசிகள் – இப்போது அவர்கள் மற்ற நாடுகளின் அரசிகள், ராஜமாதாக்கள், அரசபதவியினரின் மனைவிகள் – தங்களுடைய மகத்தான குழுக்கள் பின்தொடர யாத்திரையாக இங்கு வந்தனர். அவர்களுடைய யாத்திரைகள் இயல்பாகவே புனிதமானவை, அதே நேரத்தில் ரகசிய பூரிப்புடையவையும்கூட. சணல் வளரும் நிலங்களிலிருந்து பாதை செங்குத்தாக மேலேறும். வண்டியிலிருந்து இறங்கி இறுதி தூரத்தை அதற்கெனப் பிரத்யேகமாகக் கன்னிமடத்தில் வைக்கப்பட்டிருந்த பல்லக்கில்தான் அவ்வரசகுலப்பெண் கடந்தாக வேண்டும்.

“பல வருடங்கள் கழிந்து, நம்முடைய காலத்தில் நடந்தது இது. காகிதம் ஒன்று எரியும்போது மற்ற பொறிகள் பக்கத்தின் விளிம்பில் ஓடிச்சென்று அணைந்த பிறகு, சிறிய, தெளிவான ஒரு பொறி மட்டும் இறுதியாகத் தோன்றி அவர்களுக்குப் பின்னால் ஓடும். அது போல, ஒரு மூதாட்டி – அவள் உயர்குடி குடும்பம் ஒன்றைச் சேர்ந்த முதுகன்னி – அவள் வெல்ஹோ கன்னிமாடத்துக்கு யாத்திரை மேற்கொள்கிறாள். பற்பல வருடங்களுக்கு முன்னால், அவள் போர்த்துக்கல் நாட்டின் இளவரசி ஒருத்திக்கு விளையாட்டுத் தோழியாகவும் சினேகிதியாகவும் பணிப்பெண்ணாகவும் இருந்திருந்தாள். அவள் கன்னி மடம் நோக்கி மேலே ஏற ஏற தன்னைச்சுற்றி நிலப்பரப்பு விரிந்து விரிந்து செல்வதைக் கண்டாள். மடத்தின் உள்ளே ஒரு கன்னியாசகோதரி அவளைத் தாழ்வாரத்துக்குக் கூட்டிச்சென்று, அவள் பணி செய்த இளவரசியின் பெயர் தாங்கிய சட்டகத்துக்கு முன்னால் அவளை நிறுத்தி, அவள் தனியே இருக்க விருப்பப்படுவாள் என்று தெரிந்து விடைபெற்றுக் கொள்கிறாள்.

“மெதுவாக, மிக மெதுவாக, நினைவுகள், அந்தச் சிறிய, முதிய, கருப்பு லேஸ் முக்காடு மூடிய, ஓடு போன்ற மண்டை வழியே ஊர்வலமாகச் செல்கின்றன. அவற்றை நட்புடனும் பரிவுடனும் கண்டுகொண்டு அந்த தலை மெல்ல அசைகிறது. இளவரசிக்கு விசுவாசமான தோழியாகவும், ரகசியங்களை நம்பிக்கையுடன் பாதுகாத்த சினேகிதியாகவும் இருந்தவள். அந்த இளைய மணப்பெண்ணின் உயர்ந்த மணவாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறாள். மகிழ்ச்சியான நிகழ்வுகள், ஏமாற்றங்கள், முடிசூட்டு விழாக்கள், கொண்டாட்டங்கள், சதிகள், போர்கள், அரசணையில் அடுத்து அமரப்போகிறவர்களின் பிறப்புகள், இளைய தலைமுறையினரின் திருமண ஒப்பந்தங்கள், வம்சங்களின் வளர்ச்சிகள், வீழ்ச்சிகள். அந்தக் கிழவி நினைத்துப் பார்ப்பாள், எப்படி அந்நாளில் அந்த விரிப்பில் தெரிந்த குறிகளைக்கொண்டு கணிப்புகள் குறிக்கப்பட்டன என்று. இப்போது அவளால் கணிப்பையும் நடந்ததையும், அவ்வப்போது புன்னகைத்தபடி, அவ்வப்போது நீள்மூச்சு விட்டபடி, ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. அந்த அறையில் ஒவ்வொரு விரிப்பும் அதன் கிரீடம் பொருந்திய தகடும் ஒரு கதையைச் சொல்கிறது, ஒவ்வொன்றும் கதைக்கு மாறாப்பற்றுடன் நிறுவப்பட்டுள்ளது.

“ஆனால் அந்த நீள்வரிசைக்கு நடுவே ஒரே ஒரு விரிப்பு மட்டும் வித்தியாசமானது. அதன் சட்டகத்தில் எந்த வேறுபாடும் இல்லை – மற்றதை போலவே சிறப்பானது, கனமானது. மற்ற எல்லா விரிப்புகளைப் போல அதுவும் கிரீடம் பொறிக்கப்பட்ட தங்கத்தகட்டை தாங்குகிறது. ஆனால் இந்தத் தகட்டில் பெயர் பொறிக்கப்படவில்லை. அந்தச் சட்டகத்தில் உள்ள லினன் விரிப்பு மூலைக்கு மூலை பனிவெண்மையாக, வெற்று காகிதமாக உள்ளது.

“கதை கேட்க வேண்டும் என்று ஆவலுடன் நிற்கும் நல்லுள்ளங்களே, உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்: இந்தப் பக்கத்தைப் பாருங்கள். என்னுடைய பாட்டி முதலிய கதைசொல்லி கிழவிகள் அனைவரின் ஞானத்தை உணருங்கள்!

“என்ன ஒரு நித்தியமான, நிலையுணராத மாறாப்பற்று இருந்தால் மட்டுமே இந்த விரிப்பு இந்த வரிசையில் பொருத்தப்பட்டிருக்கும்! கதைசொல்லிகளே இங்கு இதற்கு முன்னால் நிற்கும்போது முக்காடை முகத்துக்கு மேல் போர்த்திக்கொண்டு சொல்லிழக்கின்றனர். ஏனென்றால் எந்த அரச குடும்பத்து அம்மாவும் அப்பாவும் இந்த விரிப்பு இங்கே மாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களோ, அவர்களுக்கு விசுவாசத்தின் மரபு குருதியோடு பிணையவில்லை என்றால், அவர்கள் இதை இங்கே மாட்டாமலேயே இருந்திருப்பார்கள்.

“அதிதூய வெண்மை ஒளிரும் இக்கித்தானின் முன்புதான் போர்த்துகல் நாட்டின் பழைய இளவரசிகள் – உலகம் அறிந்த, கடமை உணர்ந்த, துன்பத்தில் சுழன்ற அரசிகள், மனைவிகள், அன்னைகள் – மற்றும் அவர்களுடைய சிறுவயது சினேகிதிகள், மணப்பெண் தோழிகள், மூத்த பணிப்பெண்கள் – அனைவரும் அதிக நேரம் அமைதியாக நிற்பார்கள்.

“இந்த வெற்று பக்கத்துக்கு முன்னால் நிற்கும்போது, முதிய, இளைய கன்னியாஸ்திரீகள், மடத்தின் பேரன்னையும்கூட, சிந்தனையின் ஆழத்தில் மூழ்குகிறார்கள்.”

சிறகதிர்வு – சுசித்ரா சிறுகதை

சுசித்ரா 

இன்று எனது ஐநூற்றி எழுபத்தெட்டாம் பிறந்த நாள். இன்னும் சிறிது நேரத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளன. அங்குச் செல்லத்தான் நான் அலுவலக வளாகத்தை விட்டு வெளியே வந்துகொண்டிருக்கிறேன். இந்த வருடம் எப்போதுமில்லாத அளவிற்குக் குளிர் இப்போதே தொடங்கிவிட்டது. மேகம் படர்ந்த கருமை. லேசாகப் பனி பொழிந்து கொண்டிருக்கிறது. தட்சிணாயனம் தொடங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை. குளிருக்காக என் கைகளை இரு முஷ்டிகளாக மடக்கி சிராய்ப்பைகளுக்குள் புதைத்து நடந்துகொண்டிருக்கும்போதுதான் அதைப் பார்க்கிறேன். பனி கவிந்த பாதையில் ஒரு பறவை.

சற்றுதூரம் நடந்து சென்ற பின்பே அதைப் பார்த்த கண்கள் என்னுள் விழித்துக்கொள்கின்றன. ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நிற்கிறேன். பனியில் முகம் புதைந்த ஒரு சிறிய உடல். உண்மையிலேயே பறவை தானா? திரும்பட்டுமா? எதற்கு? அவசர எண்ணை அழைத்துவிட்டுச் சென்றுவிட வேண்டியதுதானே?

ஒருகாலை முன்னால் எடுத்துவைக்க மறுகால் பின்னால் தானாகத் திரும்புகிறது. ஒரு நிமிடம் தத்தளிக்கிறேன். நின்ற இடத்தில் திரும்புகிறேன். சற்றுத் தொலைவில் பனிக்குள் ஒரு நீலப்புடைப்பு. சிறகதிர்வு போன்ற மெல்லிய காற்று என்னைத் தொட்டுச்செல்கிறது. இரண்டு நொடிக்குப் பிறகுதான் அது என் சுவாசக்காற்று என்பதை நான் உணர்கிறேன்.

ஓடிச்சென்று மண்டியிட்டுப் பார்க்கிறேன். சந்தேகமேயில்லை. பறவைதான். செத்துவிட்டது. என்ன பறவை இது? எனக்குப் பறவைகளின் பெயர்களெல்லாம் தெரியாது. என் சிறுவயதில் அவ்வப்போது பார்த்தது. அம்மா இருந்தால் சொல்லியிருப்பாள். அவளுக்கு எல்லா பெயர்களும் தெரியும். எனக்குத்தான் இப்போது எதுவுமே நினைவில்லை. ஐநூற்றி எழுபத்தெட்டு வயது நிரம்பி விட்டதல்லவா? அது சரி, இந்தப் பறவை எப்படி இங்கு, இந்த வளாகத்தினுள் வந்து செத்தது? பறவைகளெல்லாம் காட்டினுள் வாழும் உயிர்கள் இல்லையா? காட்டை விட்டு இங்கு எப்படி வந்தது? இங்கு எப்படி வாழும்? வாழ முடியாமல்தான் செத்துப்போனதா? ஆனால் இங்கு எதுவும் சாகக்கூடாதே?

இறப்பிலும் நீலமணிக்கல்லைப் போல மின்னிக்கொண்டிருக்கிறது அதன் உடல். சற்று தலையைப் பக்கவாட்டாகத் திருப்பிப் பார்க்கிறேன். நீலத்தினுள் பாசிப்பச்சை கோடுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சலனமற்ற நீர்நிலையைப் பார்க்கும்போது உண்டாகும் மயக்கத்தால் ஆட்கொள்ளப்படுகிறேன். சற்றுநேரம் அது என்னைச் செயலிழக்கச்செய்கிறது. அதையே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எவ்வளவு சின்னதா இருக்கு, எவ்வளவு அனாதையா இருக்கு, என்ற வியப்பை என் குனிந்த தலையில் கோர்த்துப் பெருகும் கனத்தில் நான் அறிகிறேன். அது நகரவே இல்லை.

யாருடைய வரிகள்? அம்மா அடிக்கடி சொல்வாளே? சட்டென்று நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவள் சொல்வதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளும் ஆர்வமும் எனக்கில்லை என்பதும் உண்மை. அதெல்லாம் அம்மாவுக்கு மட்டும் தான். வரிவரியாக என்னவெல்லாமோ சொல்லுவாள். யார் யாரோ வாயில் பெயர் நுழையாத கவிஞர்களின் நாவிலுதித்த வரிகளெல்லாம் என் அம்மாவின் குரல்வழி என் செவிக்குள் புகுந்துவிட்டன. மூளைக்குள் அது படபடக்கும் ஓசை எப்போதாவது கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் சொல் மட்டும் என் உதட்டில் வரவே வராது. இப்படித்தான் யாருடைய கவிதையோ. எமிலி டிக்கின்சனா? அதில் இது போன்று ஒரு பறவை வரும். அது செத்துப்போய்விடும். அதைப் பற்றி அம்மா சொல்லியிருக்கிறாள். தன் சிறிய கண்களை உருட்டி உருட்டிச் சொல்வாள். அந்த வரிகளில் வரும் இறந்த பறவை என் கண் முன்னால் தெரிகிறது. ஆனால் என்ன வரி அது? என்ன வரி?

திடீரென்று நான் தன்னுணர்வு கொள்கிறேன். அடச்சீ, என்ன வரியா இருந்தா என்ன? பறவை செத்துவிட்டது. சுற்றும் முற்றும் நம்மை யாரும் பார்க்கவில்லையே என்று பார்த்துக்கொள்கிறேன். இப்படி நான் நடுப்பாதையில் மண்டியிட்டு ஒன்றிற்கும் உதவாத கவிதை வரியை அசைபோட்டுக்கொண்டு செத்த பறவையொன்றை வெறித்துப் பார்த்தபடி இருப்பதை யாராவது பார்த்துவிட்டால்? ஆய்வுக்கூடத்தில் என் கீழ் வேலை பார்ப்பவர்கள் பார்த்துவிடவே கூடாது. என்ன இது முட்டாள்தனம். நெறிமுறைப்படி நான் இப்போது அவசர எண்ணைத்தான் அழைத்ததாக வேண்டும். அவர்கள் வந்து செய்தாகவேண்டியதை செய்வார்கள். ஆனால் ஏனென்று தெரியாமல் என் கண்களில் நீர் பெருகுகிறது. என்ன வரி அது?

சட்டென்று எனக்குள் ஒரு எண்ணம் சுழற்காற்றாக ஊறத்தொடங்குகிறது. இப்பறவையைப் புதைக்க வேண்டும்.

இது என்ன அபத்தம்? காட்டுமிராண்டித்தனமாக இப்படியொரு எண்ணம்? எனக்கு ஏன் இப்போது இப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது? என்னால் சொல்லமுடியவில்லை. ஆனால் அதைத்தான் செய்யவேண்டும் என்று மட்டும் உறுதியாக உணர்கிறேன். இந்தப் பறவை செத்து விட்டது. இதை யார்கண்ணிலும் படாமல் புதைத்தே ஆக வேண்டும்.

ஆனால் பறவையைப் புதைக்கக் கையில் எடுக்கப்போகும் போது என்னால் அதைத் தொடமுடியவில்லை. மீண்டும் மீண்டும் என் கைவிரல்கள் அதை நோக்கிச் செல்கின்றன. மீண்டும் மீண்டும் காற்றையே பற்றுகின்றன. என் கை நடுங்குவதை உணர்கிறேன். அதைத்தொடக்கூடாது என்று என் மூளை உத்தரவு போட்டிருக்க வேண்டும். உடலெல்லாம் கூசுகிறேன்.

வெறிபிடித்தாற்போல் வேகவேகமாக என் ஆய்வுக்கூடத்தை நோக்கி நடக்கிறேன். உள்ளே யாருமில்லை. முதலில் கைகளை நன்கு கழுவிக்கொள்கிறேன். ஏன் கை கழுவினேன்? தெரியவில்லை. கைகளைத் துடைத்துக்கொண்டு ஒரு ஜோடி கையுறைகளை எடுத்துக்கொள்கிறேன். எங்கள் மருந்துகள் அனுப்பிவைக்கப்படும் ஒரு சிறிய பெட்டியை எடுத்துக்கொள்கிறேன். மண்ணில் குழிதோண்ட ஏதாவது தென்படுகிறதா என்று ஆய்வுக்கூடம் முழுவதும் துழாவுகிறேன். உயிரின் ரகசியங்களை ஆராய நுண்கருவிகளே தேவைப்படுகின்றன. அவையே போதுமானதாக உள்ளன. மண்ணைத் தோண்டுமளவிற்குப் பெரிதான, ஆபாசமான, நுண்மையற்ற கருவியேதும் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இல்லை.

கையுறைகளை அணிந்துகொண்டு களவாணியைப்போல் யார்கண்ணிலும் படாது பதுங்கிப்பதுங்கி வேகவேகமாகத் திரும்பிச்செல்கிறேன். இவர்கள் கண்களில் எப்படியும் செத்த பறவைகள் படாது. இவர்கள் யாரும் என்னைத்தான் பார்க்கக்கூடாது. நான் இப்போது செய்யப்போகும் காரியம் அவ்வளவு அந்தரங்கமானது, அவ்வளவு ரகசியமானது. யாருக்கும் தெரியக்கூடாதது. அத்துமீறலும் கூட, என்று என்னுள் ஒரு குரல் கிரீச்சிடுகிறது. ஆம், அத்துமீறல் தான். குறிப்பாக நான் இச்செயலைச் செய்வது மிகப்பெரிய அத்துமீறல் தான்.

அம்மாவுக்கு என் செயல்களெல்லாமே அத்துமீறலாகத்தான் பட்டிருக்கவேண்டும். ஆனால் அவள் என்றுமே ஒரு வார்த்தைக்கூடச் சொன்னதில்லை. நான் சொல்வதையெல்லாம் அப்படியா? அப்படியா? என்று மட்டும் தான் கேட்டுக்கொண்டிருப்பாள். எனக்கு எல்லைகளே கிடையாது, நான் உலகத்தின் விதியை மாற்றிக்காட்டுகிறேன் பார், என்று பதின்பருவ வேகத்தில் சூளுரைத்தபோதும் சரி, ஒரு தேர்வு விடாமல் வென்று மருத்துவராகவும் அறிவியலாளராகவும் தேர்ந்தபின்பும் சரி, என் வாழ்க்கையில் ஒரு நொடிக்கூட வீணடிக்காமல் நான் ஆய்வில் மூழ்கியிருந்தபோதும் சரி, எங்கள் கண்டுபிடிப்புகள் முதற்கட்டமாக மனிதர்களில் சோதனை செய்யப்பட்ட போதும் சரி, ஏன், அறுபத்திரண்டாம் வயதில் நான் கண்டுபிடித்த மருந்தை நானே உட்கொள்ளப்போவதாக அம்மாவிடம் சொன்ன நாளன்றும் சரி, அம்மாவின் உதட்டில் ஒரே வார்த்தை தான். “அப்படியா?”

என் கண்டுபிடிப்பின் பலனாக நான் அப்படியொரு புகழில் வாழ்ந்துகொண்டிருந்தேன். என் பெயரை அறியாத பள்ளிச்சிறார்களே உலகத்தில் இல்லை என்பது நிலை. பணம் பொழிந்துகொண்டிருந்தது. மனித வரலாற்றில் வேறெப்போதுமில்லாத அளவிற்கு அறிவியலின் வாசல்கள் திறந்து கிடந்தன. மனிதமனத்தின் சாத்தியங்கள் அனைத்துமே அறிவியல் வாயிலாக நிகழ்த்தப்பட ஆரம்பித்தன. எல்லையில்லா ஆரோக்கியம், எல்லையில்லா ஆயுள் இவற்றுக்கு மல்லுக்கட்ட எல்லையில்லா இன்பங்கள், கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எங்கள் நிறுவனமே கனவுத்தயாரிப்பு வியாபாரத்தில் இறங்கியது. வருடத்திற்கு ஆறு மாதங்கள் நல்லுறக்கத்தில் தூங்கவைக்கும் மருந்தை நாங்கள் தான் கண்டுபிடித்துக் காப்புரிமை வாங்கினோம். அதில் கொழுத்த லாபம்.

இதெல்லாம் ஐநூறாண்டுகளுக்கு முந்தைய வரலாறு. நவீன வரலாற்றின் பொற்காலம் என்று சொல்லலாம். அனைத்தையும் அம்மா தன்னுடைய கருமணி கழுகுக்கண்களால் பார்த்துக்கொண்டே வாழ்ந்தாள். கருகருவென்று சுருங்கி சிலுத்த புருவங்களுக்கடியிலிருந்து அவளுடைய கூர்பார்வை என்னை நோக்குவதை என் முதுகுத்தண்டில் எப்போதாவது உணர்வேன். ஆனால் அவளை நான் எதிர்கொண்டதே எப்போதாவதுதான். ஐந்தடிக்குக் குறைவான உயரம். கூந்தலுக்குள் சிறு முகம். பெரும்பாலும் அவள் முகம் இருக்கும் இடத்தில் ஒரு புத்தகம் இருக்கும். சன்னமாகக் கேட்கும் ஒரு மெல்லிய மெட்டு – என்ன பாட்டு அது? மறந்துபோய்விட்டது – அது மட்டுமே அவள் இருப்பதன் அறிவிப்பு. சளசளவென்று அவள் வீட்டில் வளர்த்த செடிகளுக்கு நீரூற்றும் சப்தத்திலும் அவள் இருப்பாள். என்றாவது, எப்போதாவது, என் தலைமயிரை மெல்லதிரும் விரல்களைக்கொண்டு கோதுவாள். அப்போதெல்லாம் எனக்குத் தொண்டை கட்டிக்கொள்ளும். கண்களில் கண்ணீர் முட்டும். எரிச்சலடைவேன். என் குரல் கடுகடுப்பாகும். வார்த்தைகளைக் குறைத்துக்கொள்வேன். அவளைப் பார்க்கவே மாட்டேன். “உம்”, “சரி”, “வேண்டாம்” என்று மட்டும் அவளிடம் சொல்லி ஆய்வுக்கூடத்துக்கு ஓடிச்சென்று ஒளிந்துகொண்ட வருடங்கள் பல. அதற்குள் அவளுடைய புருவங்களில் நரை தட்டி, அவளுக்குக் கூன் விழுந்து, பார்வை மங்கி, கிழவியாகிவிட்டாள்.

ஒரு கட்டத்தில் அவள் ஓயாமல் பேசத்தொடங்கினாள். என்னிடமில்லை. யாரிடம் என்று தெரியவில்லை. அவை ஒருவரை நோக்கிப் பேசப்படும் பேச்சாகவும் தெரியவில்லை. பெரும்பாலும் உதிரி வரிகள். அவளுடைய குரல் ராகம் போல ஒலிக்கும். தத்தைமொழியில் பிள்ளையைப்போலப் பாடுவாள். ஒரு நாள் காலைச்சூரியனை என் மூக்குத்திக்குள் அடைத்துவிட்டேன் பார் என்றாள். இன்னொரு நாள் தான் இவ்வுலகை தன் நாவால் உணரும் வயிறில்லா ஓசனிச்சிட்டு என்று சொன்னாள். மற்றொரு நாள் இவ்வுலகமே ஒரு பெரும் பறவையின் சிலிர்க்கும் சிறகதிர்வில், அந்த இறகடி வெப்பத்தின் கருணையில் தான் உயிர்த்தழிவதாகச் சொன்னாள். ஒன்றுடன் ஒன்று சேராத சொற்களைப்போல் அபத்தமாக அவை எனக்கு ஒலிக்கும்.

அவ்வளவு வருடங்களாக மண்டையில் அடைத்து வைத்த பாடல்களும் கவிதைகளும் எங்குச் செல்வதென்று தெரியாமல் அவளுடைய மூளைக்குள் வவ்வால்களைப்போல் முட்டி மோதி அவ்வப்போது ஏதோ ஒன்று வெளிவருவதாக எனக்குத் தோன்றும். அந்த வரிகளும், அவள் அதை அனாயசமாக, கவலையற்று, உச்சரித்துக்கொண்டே இருப்பதும், என்னைக் கடுப்படையச் செய்யும். “போதும், என்ன எப்பப்பாரு வாயோயாம எதையாவது தொணதொணன்னு. கொஞ்சம் பேசாமலிருக்கக் கூடாதா?” என்று கத்துவேன். என்ன சொன்னாலும் என்னைப் பார்த்துச் சிரிப்பாள். சிறிது நேரம் பேசாமல் இருப்பாள். மீண்டும் தொடங்குவாள். ஏதேதோ உதிரி வரிகள். எந்த நாசமாகப்போன பழங்காலத்தவனின் வாயில் உதித்த வரிகளோ அவளுக்குத்தான் தெரியும். “இதுனால யாருக்கு என்ன லாபம்? உன் வாழ்க்கையில ஏதாவது உருப்படியா பண்ணியிருக்கியா? இல்ல பண்ணியிருக்கியான்னு கேக்குறேன். இல்ல உருப்படியா ஏதாவது செய்யுற ஒம்மகனைத்தான் ஒரு வார்த்தை பெருமையோட சொல்லியிருக்கியா?” அவள் வாயில் மண்ணடைத்து விடலாமா என்றெல்லாம் கூடத் தோன்றியுள்ளது. ஏன் அவ்வளவு கடுப்பு என்று சொல்லத்தெரியவில்லை.

பின் எல்லாமே அடங்கிவிட்டது. வாயே திறக்கமாட்டாள். படிப்பதும் இல்லை. கூன் முதுகுடன் இறகுதிர்ந்த பட்சியைப்போல் உடலைக் குறுக்கிக்கொண்டு பகலெல்லாம் படுத்துக் கிடப்பாள். அப்போதெல்லாம் என் எரிச்சல் மறைந்துவிட்டது. அவளைப் பார்க்கும்போதெல்லாம் அப்படியொரு சோகம் மனதைக் கவ்விக்கொள்ளும். இனம்புரியாத பயமும். “அம்மா, அம்மா, அம்மா,” என்று நான் கெஞ்சுவேன். பெரும்பாலும் பதிலே வராது.

மருந்தை நான் உட்கொண்ட போதே அம்மாவைக் கேட்டேன். எங்கள் நிறுவனம் மூலம் மருந்து மலிவான விலையில் கிடைக்கும், உனக்கும் வாங்கி வரவா என்று. அப்போது அவள் புருவங்கள் நரைக்க ஆரம்பிக்கவில்லை. அதற்கடியிலிருந்து சிறுமணிக் கண்களால் என்னைப் பார்த்தபடி, “இல்லப்பா, வேண்டாம்,” என்று மெல்ல சொல்லித் தன் தூரிகையைக் கையிலெடுத்துக்கொண்டாள்.

எனக்குக் கோபம் தலைக்கேறியது. அவளுடைய சிறு தோள்களைப் பிடித்து உலுக்கினேன். “ஏன்? ஏன் வேண்டாங்கற? பாட்டுப்பாடி, படம் வரஞ்சு, கவிதை வாசிச்சா? நீ அவ்வளவு பெரிய ஆளா? உனக்குச் சாவு பயம் கிடையாதா? செத்துப்போக ஆசைப்படுறியா?” வர்ணப்பலகை சாய்ந்து அவள் கழுத்திலும் கைகளிலும் மேலங்கி மீதும் வண்ணங்கள் தெறித்தன.

என் சொற்கள் என் மண்டையில் இடி போல் இறங்கின. வாயிலிருந்து தப்பிய வார்த்தைகளைக்கண்டு அதிர்ந்தேன். வார்த்தை வராமல் ஸ்தம்பித்து ஒரு நொடி அம்மாவைப் பார்த்தேன். என் கைகளை விலக்கினேன். அப்போதும் அம்மாவிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. மெளனமாக என்னை நோக்கிக்கொண்டிருந்தாள்.

“இதக் குடிச்சா மனுஷன் சாவ நெனச்சு செத்துச் செத்து பயப்பட வேண்டாம் இல்லையா? உருப்படியா எவ்வளவோ செய்யலாமே? ஏம்மா, நா கஷ்டப்பட்டுக் கண்டுபிடுச்சது. உலகமே புகழுது. நீ வேண்டாம்னு சொன்னா எப்பிடிம்மா? அது என்ன அவமானப்படுத்துறது தானே? உனக்கு எம்மேல நம்பிக்கை இல்லியா?” என் குரல் தழுதழுத்தது.

அம்மா எம்பி என் தலை மீது கை வைத்தாள். அவள் கை ஸ்பரிசம் கதகதப்பாக இருந்தது. என்னையும் மீறி நான் அழுதேன். “கண்ணு, உம்மேல முழு நம்பிக்கை இருக்கு. ஆனா எனக்கு இது வேண்டாம். இன்னும் கொஞ்ச வருஷம் வாழறதுல எனக்கு ஒரு பயனும் தெரியல. உனக்கு இப்பப் புரியாது. போகப்போகப் புரிஞ்சுப்ப. போகப்போக…”

இப்போது அம்மா படுத்துவிட்டாள். நினைவிழந்துகொண்டே வந்தாள். தன் ஆடைகளை, தன் உடலை, பின் தன் இருப்பையே ஒவ்வொன்றாக மறந்துகொண்டே வந்தாள். மனித இறப்பு என்பது எவ்வளவு ஆபாசமானது! இதை வெல்லத்தானே என் உழைப்பெல்லாம்! என் சொந்த அம்மாவுக்கு அது புரியாமல் போய்விட்டதே. என் வாழ்வில் முதல்முறையாக அலுவலக நேரத்தைக் குறைத்துக்கொண்டு அம்மா அருகில் வந்தமர்ந்தேன். எப்போதாவது கண்விழித்து நான் அருகில் இருந்தால் சிரிப்பாள். பின் என்னைக் கண்டடைவதே எப்போதாவது தான் என்ற நிலைமை வந்தது.

அவள் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் அது நடந்தது. அவள் முன்பொரு முறை கிறுக்கி ஒதுங்கியிருந்த ஒரு தாள் அவள் தலைமாட்டிற்கு அருகே இருந்த மேசைமேல் கிடந்தது. நான் அதை எடுத்து வாசிக்க முயற்சி செய்தேன். அம்மாவின் மூச்சுக்காற்றுப் புல்லாங்குழில் அடைக்கப்பட்டு வெளிவருவது போல ஒலித்துக்கொண்டிருந்தது. அவள் கண்கள் மூடியிருந்தன. நான் அவளைப் பார்த்தவாறு என் கையில் இருந்த காகிதத்தைக் கவனமில்லாமல் கைபோனபோக்கில் மடித்தேன்.

அம்மா சிணுங்கிக் கண்விழித்தாள். தலையைத் திருப்பித் தன் சிறிய, புரைதட்டிய பழுப்பு நிற விழிகளால் என்னைப் பார்த்தாள். ஆம், என்னைப் பார்த்தாள். அப்படியொரு புன்னகையை அவள் முகத்தில் எனக்கு மீசை அரும்புவதற்கு முன்னால் மட்டுமே பார்த்த நினைவு. அம்மா நான் கையில் வைத்துக்கொண்டிருந்த காகிதத்தைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள் என்பதை அடுத்த நொடியில் உணர்ந்தேன். நடுங்கும் விரல்களால் அவள் அதைப் பற்றினாள். நான் மடித்த காகிதக் கொக்கு அவளுடைய விரலிடுக்கில் சென்று அமர்ந்ததது.

பூரணப் பூரிப்புடன் அதையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தாள். படுக்கையில் ஊன்றி ஊன்றி என் அருகே வந்து என் தலையைத் தாழ்த்தினாள். அந்தப்பறவையை என் தலைமீது உயர்த்தி, தன் முகத்தைக் கஷ்டப்பட்டுத் தூக்கி, என் உச்சியில் முத்தமிட்டாள். என் கண்களைப் பார்த்து கிழட்டு மழலையில் எதையோ உணர்ச்சிகரமாக, கண் பொலிக்கச் சொன்னாள். புரியவில்லை. அவளை அமைதிப்படுத்திப் படுக்கவைத்தேன். சற்றுநேரத்தில் மீண்டும் அதே மயக்கத் தூக்கத்தில் மூழ்கிவிட்டாள். அவள் விரல்கள் அந்தக் காகிதக் கொக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குக் கெட்டியாகப் பிடித்திருந்தன. அவள் இறந்தபோதும் கூட எங்களால் அதை அகற்ற முடியவில்லை. அதைப் பற்றியபடியேதான் அவள் உடல் கதிரலைகளைக்கொண்டு சாம்பலாக்கப்பட்டது.

உலகத்திலேயே கடைசியாக இறந்த மனித உயிர்களில் அம்மாவும் ஒருத்தி. அதற்குள் கல்லறைகளுக்கு மேல் இன்பச்சுற்றுலாத் தளங்களும் கேளிக்கை பூங்காக்களும் எழுப்பப்பட்டுவிட்டன. உயிர்நீட்பு மருந்தை வாங்க இயலாதவர்களும், இறப்பைத் தேர்ந்தெடுத்த சொற்ப மனிதர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும், வேறுவழியற்ற மிருகங்களும், இறப்புடன் எவ்வழியிலேனும் தொடர்புக்கு வருபவர்களும் ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் தான் வாழ்கின்றனர். இறப்பு என்பதே எங்கள் பிரக்ஞைக்கு வெளியே, தூரத்தில் எங்கேயோ நிகழும் ஒன்று என்று நம்ப ஆரம்பித்துவிட்டோம். நாங்கள் அதைப்பற்றி நினைப்பதில்லை. இங்கு யாரும் சாவதில்லை. இந்தப் பறவையும் காட்டிலிருந்து தான் வந்திருக்கவேண்டும்.

என் கையுறைகளைத்தாண்டியும் மண்ணின் ஸ்பரிசம் தோண்டிக்கொண்டிருக்கும் என் விரல்களுக்குத் தெரிந்தது. யாரும் பார்க்காது வேகவேகமாகத் தோண்டினேன். இதைப் புதைக்க வேண்டும் என்ற விழைவு எங்கிருந்து வந்தது? யார் வந்து என் காதில் அதைச் சொல்லியது? இந்தப் பறவையினுள் இவ்வளவுநாள் வாழ்ந்துகொண்டிருந்த பறவை எங்கே போயிற்று? இங்கே தான் அது சுற்றிக்கொண்டிருக்குமா? ஒரு வேளை அது தான் சொன்னதா? திடுக்கிட்டேன். ஒற்றை மணிக்கண் என்னை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். ஒரு வேளை அம்மா இறப்பதற்கு முன்னால் நான் மடித்த காகிதக் கொக்கின் கண்ணாக இருக்குமோ?

அன்று என் விரல்கள் ஏன் அந்தக் காகிதக் கொக்கை மடித்தன? சிறு வயதில் நான் நிறையக் காகிதக் கொக்குகளை மடித்திருக்கிறேன். அந்த நினைவுத்தடங்கள் என் விரல்களில் ஒட்டியிருக்க வேண்டும். அப்போது அம்மாவின் நண்பர்கள் பலர் சூழ இருக்கும் எங்கள் எளிய வீடு. அனைவரும் கவிதை எழுதுவார்கள். கவிதை எழுதப்பட்ட தாள்களைக்கொண்டு கொக்குகளும் கிளிகளும் குருவிகளும் காகங்களும் ஆயிரக்கணக்கில் மடிப்பார்கள். ஊர் சதுக்கத்தில் அவற்றைத் தோரணம் கட்டி அங்கேயே அவற்றுக்கடியில் அமர்ந்திருப்பார்கள். அந்தச் சந்திப்புகள் முடிந்தபோது அப்பறவைகள் ஒரு வேளைக் காட்டினுள் பறந்திருக்கக்கூடும். அவை புணர்ந்து முட்டையிட்டுப் பொறித்த குஞ்சுகளின் வம்சத்தில் இந்தப் பட்சி தோன்றியிருக்கக்கூடும். உடல் சிலிர்த்துக்கொண்டேன். ச்சே! என்ன எண்ணம் இது!

பதின்பருவத்தில் எனக்குக் காகிதம் மடிப்பதில் அபத்தம் தட்டத் தொடங்கியது. அம்மா நானும் அவளைப்போலக் கதை சொல்லி காகிதம் மடித்துக் கானம் பாடி காலத்தைத் தள்ளவேண்டும் என்று நினைத்திருக்கலாம். அது ஒன்றிற்கும் உதவாதது, பொட்டைத்தனமானது, நான் உலகை மாற்றும் விதி சமைப்பவன் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். மரணபயம் கொண்டவர்களுக்கே இலக்கியமும் தத்துவமும். என் பாதை வேறு. கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்பதையுமே நம்பி உலகத்துள் இறங்கினேன். அறிவியல் நான் தேடியவற்றையெல்லாம் கொடுத்தது. புகழும் பணமும் மட்டுமல்ல. வாழ்க்கைப்பயனும் சுயஅடையாளமும் தான். வயோதிகத்தையும் மரணத்தையும் வென்று மனித இனத்தையே ஒரு படி முன்னே சுமந்து சென்றவன் நான் என்ற திருப்தி கிடைத்தது. “காலா உன்னைப் புல்லென மிதிக்கிறேன்” என்று அம்மா உடல்சிலிர்த்துச் சொல்லுவாள். அவள் சொன்னாலும் மிதித்ததென்னவோ நான் தான்.

ஆனால் இதெல்லாம் உண்மை என்றால் நான் ஏன் இவ்வளவு அபத்தமாகப் பனிபொழிந்துக்கொண்டிருக்கும் இம்மதியவேளையில், கொண்டாடிக் களிக்கவேண்டிய என் ஐநூற்றி எழுபத்தெட்டாம் பிறந்தநாள் அன்று இப்படி ஒரு செத்த பறவையைப் புதைக்கக் குழிதோண்டிக் கொண்டிருக்கிறேன்? பறவை பாவம் என்பதாலா? ஏதோ சொல்லறியா வரியின் எதிரொலிக்குரல் தரும் உந்துதலா? சர்வமும் அபத்தம். திடீரென்று ஒன்று நினைவுக்கு வருகிறது. எமிலி டிக்கின்சனின் கவிதைகளில் எப்போதும் எந்தப் பறவையும் பாவமாகச் சாவதில்லை. அவை என்றென்றும் உயிரோட்டத்துடன் மட்டுமே தோன்றுபவை. உற்றுநோக்கிக்கொண்டிருப்பவை. மெல்லிய சிறகதிர்வுடன் காற்றின்மேல் நழுவி வானில் உயரப் பறப்பவை.

ஒரு அடிக்குத் தோண்டிவிட்டேன். இப்போது என்னால் அப்பறவையை விரல்களால் தொடமுடிகிறது. அதை மெல்லத் தூக்கி, நான் கொண்டு வந்த பெட்டியில் பத்திரமாக வைக்கிறேன். பின் ஏதோ தோன்ற என் கையுறை ஒன்றைக் கழற்றி அதனை அதில் சுற்றுகிறேன். செத்தப் பறவைக்குக் குளிரடிக்காது. இருந்தாலும்.

பெட்டியை மூடி மண்ணில் வைக்கிறேன். மெல்லத் தட்டி முதல் கைப்பிடி மண்ணை அதன்மீது தங்கத்தூசைப்போல் பொழிகிறேன். முன்புணர்ந்த ஒரு பறவையின் இமையா விழிப்பார்வை என் முதுகுத்தண்டில் மீண்டும் உணர்கிறேன். அம்மாவின் கரம் என் உச்சந்தலையில். நீள்மூச்சு விடுகிறேன். தலையைச் செருக்குடன் உயர்த்தி முதுகை நேர்படுத்திக்கொள்கிறேன். சிவந்த கண்மணி உற்றுநோக்குகிறது. அது கண்ணிமைக்கத் தொடங்குகிறது. இப்போது வேகமாக. நான் குழியை மூடிக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் அபாயச்சங்கு ஒலிக்கத் தொடங்குகிறது.