சுரேஷ் பிரதீப்

தன்னிலையின் விலகல் – சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நானும் ஒருவன்’ நூலினை முன்வைத்து- சுரேஷ் பிரதீப்  

சுரேஷ் பிரதீப்

Image may contain: Suresh Pradheep, outdoor

தமிழ்ச் சிறுகதைகளின் இன்றைய வளமான நிலைக்கு பொதுவாகச் சொல்லப்படும் ஒரு காரணம் புதுமைப்பித்தன் தொடங்கி வைத்த பன்முக நோக்கு கொண்ட விரிந்த சிறுகதைத் தளம் என்பது பரவலாக ஒத்துக் கொள்ளப்படும் ஒரு கூற்று. அது உண்மையும்கூட. புதுமைப்பித்தனின் கதைகள் இன்றும் சவால் அளிப்பவையாக, மறுவாசிப்பினைக் கோருகிறவையாக, இருக்கின்றன. அப்படியொரு வலுவான ஆரம்பத்தின் காரணமாக அவருக்குப் பிறகு எழுத வந்தவர்கள் வேறு வேறு களங்களையும் கூறுமுறைகளையும் தேடிச்சென்று தமிழ்ச்சிறுகதை மரபை மேலும் வலுவானதாக மாற்றினர். புதுமைப்பித்தனுக்கு பிறகானவர்களில் சிறுகதை ஆசிரியர்களில் பலர் கவிஞர்களாகவும் இருப்பதைக் காண்கிறோம். வெற்றிகரமான பல சிறுகதை ஆசிரியர்கள் தமிழில் உருவாகி வலுப்பெற்ற புதுக்கவிதை மரபுடன் தொடர்புடையவர்கள். தொடக்க கால உதாரணம் ந. பிச்சமூர்த்தி. பிச்சமூர்த்தியின் உரைநடையை வாசிக்கும் ஒருவர் அரை நூற்றாண்டு தாண்டியும் அவர் மொழியில் தேய்வழக்குகள் குறைவாக இருப்பதைக் கண்டுகொள்ள முடியும். சுந்தர ராமசாமி (பசுவய்யா), வண்ணதாசன் (கல்யாண்ஜி), யுவன் சந்திரசேகர் (எம். யுவன்) என நீளும் சிறுகதை ஆசிரியர்களான கவிஞர்களின் பட்டியல் போகன் சங்கரின் வழியாக இன்றும் தொடர்கிறது. இளம் எழுத்தாளரான விஷால் ராஜாவும் தொடக்க காலங்களில் கவிதைகள் எழுதியிருப்பதாகக் கூறுகிறார். இவர்கள் அனைவரின் வழியாகவும் கவிதை என நான் குறிப்பிடுவது நவீனக் கவிதை அல்லது புதுக்கவிதையை மட்டுமே. கவிதை சிறுகதைகளுடன் இத்தகைய நெருக்கமான ஊடாட்டத்தை நிகழ்த்தி இருப்பது சூழலின் தேவையும்கூடத்தான். பிற மொழிகளில் அறுபதுகளில் நவீனத்துவத்தின் வாயிலாக அடையப்பட்ட சாத்தியங்களை புதுமைப்பித்தன் நாற்பதுகளிலேயே நிகழ்த்தி விடுகிறார். ஆகவே வெவ்வேறு வகையான நடை மற்றும் மொழிகளுக்குள் தமிழ்ச் சிறுகதைகள் பயணிக்கத் தொடங்குகின்றன. இந்தப் பயணத்தின் விளைவுகளில் முக்கியமானது சிறுகதையும் கவிதை போன்ற படிமம் மற்றும் குறியீடுகளின் வாயிலாக இயங்கத் தொடங்கியதுதான். பூடகமான கூறல் முறை, மொழியை திருகிவிடுதல், சூழலை அறிந்தவர்கள் தொட்டெடுக்கக்கூடிய ஆழ்ந்த அங்கதம், என தமிழ்ச் சிறுகதை உரைநடையில் நிகழ்த்தக்கூடிய பெரும் சாதனைகளை நிகழ்த்தியது உண்மையே. ஆனால் இதன் எதிர்விளைவு சிறுகதை வாசகன் பூடகத்தையும் நுண்மையையும் புதுமையையும் தேடுகிறவனாக மாறி விட்டான். இயல்பான மொழி வெளிப்பாட்டின் மூலம் நேரடியாக கதை சொல்லும் படைப்பாளிகளை அவனால் உள்வாங்க முடியவில்லை. அசோகமித்திரனை இலக்கிய வாசகனிடம் கொண்டு சென்று சேர்ப்பது இன்றும் சவாலான பணியே. எளிமையைத் தாண்டி அவரது சிறுகதைகளின் நுண்மையை தொட்டுக் காட்ட மற்றொரு பெரும்படைப்பாளியாலேயே முடிகிறது. (எனக்கு அசோகமித்திரனை அவரின் முழு ஆகிருதியுடன் அறிமுகம் செய்தவர் ஜெயமோகன்).

சுரேஷ்குமார இந்திரஜித்தும் நேரடியான கூறல் முறையும் பெரும் முரண்கள் இல்லாத நேரடியானவை போன்ற தோற்றம் கொள்ளும் அவரது சிறுகதைகளால் கவனம் பெறாமல் விடப்பட்ட படைப்பாளி என்ற எண்ணம் அவரது ‘நானும் ஒருவன்’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தபோது எழுந்தது.

தன்னிலையின் விலக்கம்

தன்னிலையில் கதை சொல்வது (ஒரு கதைசொல்லியின் மூலம் சொல்லப்படும் கதைகள்) நவீனத்துவத்தின் முக்கியமான உத்திகளில் ஒன்று. நவீன இலக்கியமே ஒரு வகையில் தன்னிலையைச் சொல்வதுதான். படைப்பாளி என்ற தனித்த ஒருவன் ஒட்டுமொத்தமாகத் திரும்பி மலை போல அவன் முன்னே நிற்கும் மரபையும் வரலாற்றையும் பண்பாட்டையும் விமர்சிக்க தன்னை அதிலிருந்து விலக்கிக் கொண்டவனாக அதன் மாற்றின்மையால் தாக்கப்பட்டு தன் நீதியுணர்ச்சியால் துன்பப்படுகிறவனாக தன்னை சித்தரித்துக் கொண்டான். அந்தத் துன்பத்திற்காக அவன் கோபமும் கொண்டான். கண்ணீர் சிந்தினான். ஏளனிப்பவனாக மாறினான். இந்த கோபத்தையும் கண்ணீரையும் ஏளனத்தையும் புதுமைப்பித்தனிலேயே (ஏளனம் சற்று தூக்கல் அவரிடம்) நாம் காண முடியும். அதன் பிறகு அறிவும் நிதானமும் இத்தன்மைகளை மட்டுப்படுத்தினாலும் தன்னிலையில் கதை சொல்லும்போது பெரும்பாலான படைப்பாளிகள் இந்த கோபத்தின், கண்ணீரின், ஏளனத்தின், கூறினை கண்டுகொள்ள முடியும்.

பன்னிரெண்டு கதைகள் கொண்ட ‘நானும் ஒருவன்’ தொகுப்பில் நான்கு கதைகள் தன்னிலையில் சொல்லப்பட்டுள்ளன. ‘பின்நவீனத்துவவாதியின் மனைவி’, ‘அந்த மனிதர்கள்’, ‘ஒரு திருமணம்’ என சில கதைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கூறுமுறையின் அடிப்படையில் மற்றவையும் தன்னிலைக் கதைகள். சுரேஷ்குமார இந்திரஜித் வேறுபடுவது இந்த தன்னிலைகளில் கோபத்தின், கண்ணீரின், ஏளனத்தின், சாயல் தென்படுவதில்லை என்பதே. இவற்றை கடந்துவந்துவிட்ட சமநிலையும் அந்த சமநிலையில் எழும் தடுமாற்றங்களாக மட்டுமே இச்சிறுகதைகளின் திருப்பங்களும் அமைந்துள்ளன. மிகத் தெளிவான பரப்பில் சரளமான மொழியில் சொல்லப்பட்டிருப்பதாலேயே இச்சிறுகதைகளின் முரண்கள் செறிவுடன் எழுந்து வருகின்றன.

கதைகள்

முதல் கதையான ‘நானும் ஒருவன்’ வன்முறைக்கான உந்துதலால் அடியாளாக மாறிப்போகும் ஒருவனைத் தன்னிலையாகக் கொண்டிருக்கிறது. “சண்டைக்கான புள்ளி” தன்னுள் உருவாவதை தொடர்ந்து செல்லும் அவன் வன்முறையாளனாக மாறி இறக்கிறான். இறக்கும் தருவாயில் சண்டைக்கான அவனது உந்துதல் மறைவது ஒரு முடிவாகவும் இறக்காமல் அவன் மேலெழுவது மற்றொரு முடிவாகவும் சொல்லப்பட்டிருப்பது மீண்டும் இக்கதையை வேறொரு கோணத்தில் இருந்து வாசிக்க வைக்கிறது.

‘மட்டாஞ்சேரி ஸ்ரீதரன் மேனன்’ என்ற கதை “நவீன சாமியார் உருவாக்கத்தையும்” ‘பின்நவீனத்துவவாதியின் மனைவி’ என்ற கதை பின்நவீனத்துவ கோட்பாடுகளையும் நுட்பமாக பகடி செய்கிறது. அதிலும் பின்நவீனத்துவவாதியின் மனைவி கோட்பாடுகளை உண்மையில் நெருங்கி ஆராய்பவனில் தொடங்கி பாவனைகள் வழியாக வாழ்கிறவன் என்பது வரை தன் எல்லைகளை விரித்துக் கொள்கிறது.

’உறையிட்ட கத்தி‘ பகையால் மாற்றி மாற்றி கொலை செய்து கொள்ளும் இரண்டு குடும்பங்களின் கதையை சொல்லத் தொடங்கி தாய்மை பழியுணர்ச்சியை நீக்குவதாகக் காட்டி இறுதியில் தாய்மையும் பொருளற்று போய் நிற்கும் இடத்தில் முடிகிறது. இத்தொகுப்பில் இலக்கியத்தின் என்றென்றைக்குமான பேசுபொருளான பொருளின்மையை பிரதிபலிக்கும் கதையாக ‘உறையிட்ட கத்தி’யை வகைப்படுத்தலாம். கணவனைக் கொன்றவனை பழி தீர்க்க நினைக்கும் பெண் தான் கருவுற்றிருப்பது தெரிந்து அந்த எண்ணத்தை கைவிடுகிறாள். அவளது மாமனாரின் குரலில் சொல்லப்பட்டிருக்கிறது இக்கதை.

’மூன்று பெண்கள்‘ நவீன வாழ்வில் மக்களை நுழைத்துக் கொள்ளும் குழந்தையற்ற நவீனத் தம்பதிகளை ஒரு மரபான நம்பிக்கை அலைகழிப்பதைச் சொல்கிறது. வடிவ ரீதியாக இத்தொகுப்பின் மிகச்சிறப்பான கதையாக நான் கணிப்பது ‘மூன்று பெண்களை’த்தான். நூறு வருடங்களுக்கும் மேலாகத் தொடரும் ஒரு “குலச்சாபத்தை” ஆண் குழந்தையை தத்தெடுப்பதன் வழியாக கடந்து செல்ல நினைக்கின்றனர் அந்த தம்பதிகள். திராவிட இயக்கங்கள் உருவாக்கிய மாயங்களை முற்போக்கு லட்சியவாதம் கொடுத்த நம்பிக்கைகளை கடந்துவிட்ட லட்சியமற்ற எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற ஒரு காலத்தில் மரபான நம்பிக்கைகளும் சிக்கல்களும் மனிதனை அலைகழிக்கத் தொடங்கி இருப்பதன் குறியீடாக இக்கதையை வாசிக்கலாம்.

‘ரெட்டைக் கொலை’ கதையில் தலித் ஒருவர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு அந்த ஊரின் ஊராட்சித் தலைவரால் வழக்கறிஞரிடம் அழைத்து வரப்படுகிறார். கொலை செய்தது யார் என்பது குறிப்பாக கதையில் சொல்லப்படாதது பல்வேறு ஊகங்களுக்கு கதைக்குள் வாய்ப்பளிக்கிறது. ஆண்டாள் கோதையாக அரங்கநாதனை மணக்கச் செல்வதை ‘ஒரு திருமணம்’ என்ற கதை சொல்கிறது. இத்தொகுப்பில் மொழி அழகாக வெளிப்பட்டிருக்கும் கதையும் ஆண்டாளின் அம்மாவின் வழியாக ஒரு நடைமுறை முடிவைத் தொட்டிருப்பதும் இக்கதையை முக்கியமானதாக மாற்றுகின்றன. ‘நானும் ஒருவன்’ போலவே இரண்டு முடிவுகள் இக்கதையில் எட்டப்பட்டாலும் இரண்டாவது முடிவின் “கட்டுடைப்பு” அம்சம் இன்னும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடிவதில்லை.

Image result for நானும் ஒருவன்

‘அப்பத்தா’ மற்றும் ‘மனைவிகள்’ ஆகிய கதைகள் இணைத்து வாசிக்கப்படும் வாய்ப்பினைக் கொண்டுள்ளன. ஆண் பெண் உறவின் விளக்க முடியாத வண்ணங்களை எந்தவித அதிர்ச்சி மதிப்புகளும் இல்லாமல் முன் வைக்கின்றன இவ்விரு கதைகளும். மகனுடைய மனைவியின் அழகில் ஈர்க்கப்படும் தந்தையாக, அந்த ஈர்ப்புடன் போராடுகிறவராக, அப்பத்தா கதையின் ரத்தினகுமார் வருகிறார். ‘மனைவிகள்’ கதையில் துக்க விசாரிப்புக்குச் செல்லும் கதைசொல்லியின் ரயில் பயணித்தினூடாக அவர் தந்தைக்கு இரண்டு மனைவி இருந்தது, அதனால் தந்தை இறந்தபோது எழுந்த சிக்கல்கள், இயல்பாகவே பெண்களை நோக்கி ஈர்க்கப்படும் கதைசொல்லியின் குணம், என நகர்ந்து கணவன் இறந்ததை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனைவியினை காணும் கதைசொல்லியின் அதிர்ச்சியுடன் இக்கதை முடிகிறது. இரண்டு கதைகளிலுமே பொதுவான அம்சம் என சொல்லத்தக்கது பெண்ணின் மீதான ஈர்ப்பை வெவ்வேறானதாக சித்தரித்துக் கொள்ளும் ஆணின் உள வண்ணங்களை இரண்டு கதைகளும் சித்தரிக்கின்றன என்பதே.

‘கணியன் பூங்குன்றனார்’ ஒரு அரசியல் சிக்கலையும் மனிதனின் இயல்பான கருணை உணர்வையும் இணைக்க முயல்கிறது. திராவிட கொள்கைகளின் வழியாக லாபம் பெறும் ஒரு பெரிய மனிதர் ஏழை பிராமணனுக்கு உதவ நினைப்பதாக கதை பின்னப்பட்டுள்ளது. கூறலில் சிறப்பாக வெளிப்பட்டிருந்தாலும் முடிவும் கதையின் சிக்கலை தெளிவாக கோடிட்டாலும் ஒரு செயற்கைத்தனம் இந்தக்கதையை மட்டும் தொகுப்பில் அந்நியமாக உணரச்செய்கிறது.

எல்லா பக்கங்களில் இருந்தும் கைவிடப்படும் ஒரு மனிதனின் கதையைச் சொல்கிறது ‘மினுங்கும் கண்கள்’. இயல்பான அன்புணர்வு கொண்ட அந்தோணிராஜ் எல்லா தரப்பினராலும் அலைகழிக்கப்படுகிறார். நண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி அடிக்கும்போதுகூட பிழை நிகழ்கிறது. ஒரு மகள் விவாக ரத்து கோரி நிற்கிறாள். மற்றொரு மகள் மதம் மாறி வாழ்கிறாள். பசியென்று வந்த சிறுவனுக்கு உணவிடுகிறார். அவனே கத்தியை எடுத்து கழுத்தில் வைக்கிறான். உணவிட்டதால் கழுத்தில் கத்தியை இறக்காமல் விட்டான் என அந்தோணிராஜ் ஆசுவாசம் கொள்வதில் கதை முடிவது ஒரு நேரம் அபத்தமாகவும் இயல்பானதாகவும் தோன்றுகிறது.

‘அந்த மனிதர்கள்’ என்ற கதையில் குழுச்சண்டை, கொலை, பழிவாங்கல், என நகரும் வாழ்வில் அப்படி வன்முறையில் ஈடுபடப் போகிறவன் சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுச் செல்கிறான் என்பதை எப்படி பொருள் கொள்வதென திண்டாடினேன். பின்னரே கதையின் தலைப்பு நினைவுக்கு வந்தது. நமக்கு பிரச்சினை எல்லாம் “அந்த” மனிதர்களுடன் மட்டும்தான். “அந்த” வெல்லப்பட வேண்டிய, வீழ்த்தப்பட வேண்டிய, மனிதர்களைத் தவிர நமக்கு அனைவரும் அணுக்கமானவர்கள்தானா என்ற கேள்வியை இக்கதை எழுப்பிவிட்டது.

சலிப்பின்மையின் துயர்

இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் சிக்கலாக (என்னுள்ளும் இச்சிக்கல் உண்டு) நான் கணிப்பது வாழ்விலும் எழுத்திலும் அவர்கள் கண்டடையக்கூடிய சலிப்பும் பொருளின்மையும். ஆச்சரியப்படுத்தும் விதமாக வாழ்க்கை அவ்வளவு நம்பிக்கை தரக்கூடியதாக இல்லாத முந்தைய தலைமுறை எழுத்தாளர்களிடம் இந்த சலிப்பு இல்லை. அவர்களிடம் இருந்தது கோபமும் துயரும் நிலையின்மையுமே. பொது எதிரி என ஒருவர் இல்லாமலாகிவிட்ட இன்றைய நிலையில் இளைஞர்களிடம் சலிப்பேற்படுவது இயல்பானதே. ஆனால் அது செயல் புரிவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான காரணமாக ஆவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது. சுரேஷ்குமார இந்திரஜித்தின் பாத்திரங்கள் அனைவரும் தொடர்ந்து செயல் புரிகிறவர்களாக, முடிவு எத்தகையது என்பதை எண்ணி குழம்பாமல் தொடர்ந்து செயல்படுகிறவர்களாக, வாழ்வை அதன் தீவிரத்துடன் எதிர்கொள்கிறவர்களாகவே வருகின்றனர். அதே நேரம் பொருளின்மையால் அலைகழிக்கப்படும் துயரையும் அடைகின்றனர்.

சமகால இலக்கிய வாசகர்களும் எழுத்தாளர்களும் அறிய முன்னோடியான சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுலகில் நிறைய இருப்பதாகத் தோன்றுகிறது.

அதீத வன்முறை, அதிர்ச்சியூட்டும் சித்தரிப்புகள் போன்றவை அளிக்கும் சலிப்பிலிருந்து இக்கதைகள் நம்மை வெளியே எடுக்கின்றன. மனம் கொள்ளும் நுட்பமான சஞ்சலங்களை இக்கதைகள் காட்சிப்படுத்துகின்றன. எளிமையின் மூலமாகவே நமக்குள் நுழையும் தன்மை கொண்டிருக்கின்றன. தமிழ்ச் சிறுகதை மரபின் வலுவான பின்னணியில் தன் குரலை மென்மையாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்கின்றார் சுரேஷ்குமார இந்திரஜித்.

 (‘நானும் ஒருவன்’ ஆசிரியரின் சமீபத்திய தொகுப்பு. ‘மாபெரும் சூதாட்டம்’ (2005), ‘அவரவர் வழி’ (2009) என இதற்கு முன்னர் ஆசிரியர் எழுதிய சிறுகதைகள் இரண்டு நூல்களாக தொகுப்பப்பட்டுள்ளன. ‘இடப்பக்க மூக்குத்தி’ என்றொரு நூல் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது).

 

சுரேஷ் பிரதீப்புடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

உங்களைப் பற்றிச் சில தகவல்கள் – .படிப்பு/ பூர்வீகம்/ வேலை/ குடும்பம் இப்படி…

சுரேஷ் பிரதீப்: திருச்சியில் பொறியியல் பயின்ற நான்கு வருடங்கள் நீங்கலாக என் சொந்த ஊரான தக்களூருக்கு அருகில் உள்ள கிராமமான விடையபுரத்தில் அப்பா அம்மா மற்றும் அண்ணனுடன் வசித்து வருகிறேன். திருவாரூரில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமைதியான கிராமம். அண்ணன் பள்ளி ஆசிரியர். நான் அஞ்சல் துறையில் பணிபுரிகிறேன் திருத்துறைப்பூண்டியில் அலுவலகம்.

உங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள்- தமிழில் /பிற மொழிகளில்…

சுரேஷ் பிரதீப்: ஆதர்சம் என்று சொல்லக்கூடிய பட்டியலே நீண்டதுதான். குறிப்பாக சிலர் மட்டும். ஜெயமோகன், அசோகமித்திரன், புதுமைப்பித்தன், டால்ஸ்டாய்,ஹெர்மன் ஹெஸ்ஸே.

‘ஒளிர்நிழல்’ நாவலின் களத்தைப் பற்றி…

சுரேஷ் பிரதீப்: ஒளிர்நிழலை வாசகனாக நானும் புரிந்துகொள்ள முயன்றபடியே இருக்கிறேன். பள்ளி கல்லூரி போன்ற லட்சியப் புனைவுவெளிகளில் இருந்து வெளியேறும் இளைஞர்கள் அத்தகைய புனைவுகளுக்கு வாய்ப்பற்றுப் போய் முகத்தில் அறையும் யதார்த்தத்தை எதிர்கொள்வதை ஒளிர்நிழல் பதிவு செய்கிறது. ஒரு வகையில் இந்த நாவல் புனைவுகள் கலைந்து போவதைத்தான் பேசுகிறது. சாதி சமூகம் நியதிகள் போன்ற அடுத்தகட்ட புனைவுகளும் கலைந்து போகின்றன. அதனை எதிர்கொள்ளும் இளம் மனங்களின் குழப்பங்களே இப்படைப்பின் உள்ளடக்கம்.

நேரடியாக நாவலில் அறிமுகமாக எது தூண்டியது?

சுரேஷ் பிரதீப்: சிறுவயது முதலே பெரும்புனைவுகள் மீது ஒரு தீராத ஈர்ப்பு இருந்தது. ஏழாம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மன்னர்களின் பெயர்கள், ஆட்சிக் காலம், போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு “இரண்டாம் உலகம்” என்று பெயரிட்டு ஒரு புனைவை எழுதிப் பார்த்திருக்கிறேன். மிகப்பெரிய நிலப்பரப்பில் பல அரசுகளும் மன்னர்களும் அவர்களது வாரிசுகளும் சண்டையிடுவதாக, அரசாள்வதாக, அக்கதை விரிந்தது. அக்கதையை எழுதியிருந்த டைரி தொலைந்து விட்டது. அது தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு எனக்கு. பொன்னியின் செல்வனும் மன்னன் மகளும் நினைவறிந்து நான் வாசித்த பெரும்புனைவுகள். இப்படைப்புகள் ஒரு முழு நூலை வாசிப்பதற்கான தன்னம்பிக்கையை அளித்தன.

தீவிர இலக்கியம் நோக்கி நகர்ந்தபோது நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள், ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம், என வாசிக்க எடுத்தவை அனைத்துமே நாவல்களாக இருந்தன. புதுமைப்பித்தன் தவிர்த்து சிறுகதைகள் வாயிலாக நான் அறிந்த முன்னோடிப் படைப்பாளிகள் யாருமில்லை. ந.பிச்சமூர்த்தி கு.பா.ரா., மௌனி என கடந்த ஓராண்டாகவே சிறுகதைகள் வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன். மேலும் ஜெயமோகனின் நாவல் கோட்பாடு எனும் முக்கியமான திறனாய்வு நூல் அளித்த திறப்புகள். நாவல் என்ற வடிவம் கோருவது சிதறி வழியும் ஒரு கனவு மனநிலை என்பதை உணர்ந்து கொண்டேன். சிறுகதை கோரும் கச்சிதம், கூர்மை, இறுக்கம், ஆகியவற்றுக்கு எதிராக எத்திசையிலும் பயணிக்க வைக்கும் வடிவமான நாவல் எனக்கு உகந்ததாகப் பட்டது.

அதன் பிறகு சென்ற வருடம் மீண்டும் “கனவு நிலத்தில்” நிகழும் புனைவொன்றை எழுதிப் பர்த்தேன். அவற்றின் தொடர்ச்சியாகவே ஒளிர்நிழலைக் காண்கிறேன். ஒளிர்நிழலின் களம் பரந்து விரிந்தது இல்லையெனினும் பெருங்கதைகள் மீதான ஈர்ப்பும் நாவல் என்ற வடிவம் குறித்து அடைந்த புரிதலும்தான் நாவல் எழுதத் தூண்டியது.

நாவலுக்கு ‘புனைவுக்குள் புனைவு’ எனும் வடிவத்தை தேர்வதற்கு என்ன காரணம்?

சுரேஷ் பிரதீப்: அதுவொரு தற்செயல் நிகழ்வுதான். கதைசொல்லியின் வாழ்க்கையாக நாவல் விரியுமென்ற எண்ணத்தோடுதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் உணர்வுகளை அப்படி நேரடியாக முன் வைப்பதில் நம்பகத்தன்மை இல்லாதது போன்ற ஒரு உணர்வு தொடர்ந்து கொண்டே இருந்தது. அதனால் கதைசொல்லியை கதைக்கு “வெளியே” எடுக்க வேண்டியதிருந்தது. அப்படி எடுத்தபோது நாவலுக்குள் நிறைய சாத்தியங்கள் தென்பட்டன. குணா மற்றும் சக்தியின் வழியாக நாவலை மேலும் கூர்மையாக்க முடிந்தது. அதோடு மீபுனைவாக மாற்றியதால் நாவல் வடிவம் கோரும் “இடைவெளிகள்” இயல்பாகவே உருவாகி வந்தன.

நாவலுக்கு என்ன மாதிரியான விமர்சனங்கள்/ எதிர்வினைகள் வந்துள்ளன?

சுரேஷ் பிரதீப்: வடிவம் காரணமாக வாசிப்பதில் முதலில் ஒரு தடை இருந்தது என்றே எண்ணுகிறேன். இந்த நூலினை முதலில் வாசித்த வாசகி மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி என் எழுத்து முறை மேம்பட்டிருப்பதாகச் சொன்னார். அவர் நான் எழுதும் அனைத்தையும் வாசிக்கிறவர். மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண் வாசகர்கள் ஒளிர்நிழலுக்கு கிடைத்தது ஆச்சரியம்தான். ஆனால் அனைவருமே ஒளிர்நிழலை ஒரு “துன்பியல்” நாவலாகவே வாசித்திருக்கின்றனர்.

ஜெயமோகன் ஒளிர்நிழல் குறித்து எழுதிய விரிவான விமர்சனக் கட்டுரை நானே எதிர்பாராதது. நான் எதிர்பார்த்தது சில குட்டுகளும் வழிகாட்டல்களுமே. அக்கட்டுரை வந்த பிறகு ஒளிர்நிழலுக்கு சரியாக வாசிப்பு கிடைப்பதாக எண்ணுகிறேன். இலங்கையில் இருந்து முதன்முறையாக எனக்கொரு வாசகி கடிதம் எழுதியிருந்தார். அசோக் சந்தானம் என்றொரு வாசகர் இருண்மைச் சித்தரிப்புகள் சிறப்பாக வெளிப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

நூலினை மெய்ப்பு பார்த்த எழுத்தாளர் ஹரன் பிரசன்னா “கசப்புத் தொனியை” குறைத்துக் கொள்ளச் சொன்னார். முழுமையாக வாசித்த அனைவருமே புதுமையான முயற்சி என்று கூறினர்.

பேராசிரியர் டி.தருமராஜ் நூலுக்குப் பின்னிருக்கும் சாகச மனநிலைக்காக வாழ்த்தினார்.

சிறுகதைகள்/ நாவல்கள். எது உங்களுக்கு சவாலாக இருக்கிறது?

சுரேஷ் பிரதீப்: எனக்கு சிறுகதைதான். தமிழ் இலக்கியத்தின் சிறுகதை மரபு வளமானது என்பதில் பெரும்பாலும் மாற்றுக் கருத்து இருக்காது என எண்ணுகிறேன். சிறுகதையின் வடிவம், உள்ளடக்கம் என அனைத்திலும் பல சோதனைகள் ஏற்கனவே செய்யப்பட்டிருப்பதை இந்த ஓராண்டுகளில் தொடர்ந்து சிறுகதைகள் வாசிப்பதால் உணர முடிகிறது. அவற்றுக்கு இணையான சிறுகதைகளைப் படைப்பது பெரும் சவால்தான். ஜெயமோகன் என்னுடைய பிரைமரி காம்ப்ளக்ஸ் சிறுகதை குறித்து எழுதியிருந்ததை படித்த பிறகே அந்த சவாலை உணர்ந்தேன். ஏனெனில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன் ஆகியோரின் படைப்புகள் இன்றும் மலைபோல முன்னே நிற்கும்போது அவற்றின் தொடர்ச்சியாக அல்லது அவற்றைக் கடந்து செல்லும் வீரியத்துடன் சிறுகதைக்கு முயல வேண்டும் என்றே எண்ணுகிறேன். அவ்வளவு தீவிரத்தை அடைய மேலும் உழைக்க வேண்டியிருக்கிறது, நான் மட்டுமல்ல சக எழுத்தாளர்கள் அனைவருமே.

ஆனால் நாவலைப் பொறுத்தவரையில் எழுதப்படாத எண்ணற்ற தளங்கள் என் முன் விரிந்து கிடப்பதாகவே தோன்றுகிறது.

அடுத்தடுத்த திட்டங்கள் என்ன?

சுரேஷ் பிரதீப்: ஒரு நாவல் எழுதுவதற்கான தயாரிப்புகளில் இருக்கிறேன். வண்ணங்களும் குற்றங்களும் கலக்கும் ஒரு புனைவாக இருக்குமென எண்ணுகிறேன்.

நீண்டகால திட்டமாக தமிழின் முதன்மைப் படைப்புகளுக்கு தரமான மொழிபெயர்ப்புகளை கொண்டுவரும் எண்ணமுள்ளது. அதற்கான காலத்தையும் மொழிபெயர்ப்புக்கு ஆகும் செலவுகள் குறித்தும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

நாவலுக்குள் வரும் கவிதைகள் நன்றாக உள்ளன. தொடர்ந்து கவிதைகள் எழுதும் வாய்ப்பு உள்ளதா?

சுரேஷ் பிரதீப்: அவற்றை கவிதைகள் என ஒப்புக் கொண்டதற்கு தனிப்பட்ட முறையில் நன்றி. தமிழ் கவிதைகளை வாசிக்குந்தோறும் கவிதை எழுதுவதற்கான மனநிலை கைவிட்டுப் போகிறது. ஆகவே இப்போதைக்கு “தனித்து” கவிதை எழுதும் எண்ணமில்லை. ஆனால் கவிதைகள் ஒளிர்நிழலில் உள்ளவை போல எழுத்தினை இயல்பாக ஊடுருவிச் செல்லும் எனில் அவற்றை தடுக்கப் போவதில்லை. ஆனால் அவை புனைவுடன் சேர்த்து வாசிக்கும்போதுதான் கவிதையாக அர்த்தப்படுகின்றன. ஆகவே அவற்றை கவிதையென வகைப்படுத்தலாமா என்று தெரியவில்லை.

இக்கேள்விகளைக் கேட்டு என்னை தொகுத்துக் கொள்ளச் செய்ததற்கு மிக்க நன்றி.

புதிய குரல்கள் 2 – சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழலை’ முன்வைத்து – நரோபா

நரோபா

சுரேஷ் பிரதீப் தொண்ணூறுகளில் பிறந்தவர். எழுபதுகளிலும், எண்பதுகளின் முற்பாதியிலும் பிறந்து எழுத வந்தவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சற்றே குறைந்து, எழுத்துலகில் சிறு சுணக்கம் இருந்ததாக தோன்றியது.

எண்பதுகளின் பிற்பாதியிலும், தொண்ணூறுகளிலும் பிறந்து எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. உலகமயமாக்கல், இணையம் எளிதாக உலகின் கலைச் செல்வங்களை கொண்டு சேர்க்கிறது. ரசனையை இளமையிலேயே மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கிறது. எந்த முக்கியமான உலக இலக்கிய ஆக்கத்தையும் நமக்கு வேண்டிய வடிவில் செலவின்றி தரவிறக்கம் செய்துவிட முடியும். சுரேஷ் பிரதீப் வெண்முரசு பற்றி கூர்மையாக எழுதும் ஓர் வாசகராகத்தான்  அறிமுகம். பின்னர் சு.வேணுகோபால் படைப்புலகம் பற்றி விரிவான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அவருடைய சில சிறுகதைகளை வலைதளத்திலும் பதாகையிலும் வாசித்திருக்கிறேன். அவை என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்நிலையில் அவருடைய நாவல் பற்றிய அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஜெயமோகன் எழுதிய விரிவான மதிப்புரை மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. நாளுக்கு இரண்டு மணிநேரம் என இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். கவனம் சிதையாமல் தொடர்ச்சியாக வாசிக்க முடிந்தது. சுரேஷ் பிரதீப்பிற்கு சொல்வதற்கு ஒரு வாழ்க்கை உள்ளது. அதை சுவாரசியமாக சொல்வதற்குரிய மொழியும் அமைந்திருக்கிறது. நாவல் வடிவம் அவருடைய எழுத்து பாணிக்கு உகந்ததாகவும் திகழ்கிறது.

‘ஒளிர் நிழல்’ புனைவுக்குள் புனைவு என்ற வகைமையை தனதாக்கிக் கொள்கிறது. சுரேஷ் பிரதீப் எனும் இளம் எழுத்தாளனின் மரணத்திற்கு பின் பதிப்பிக்கப்படும் அவனுடைய நாவலும், சுரேஷ் பிரதீப்பின் மரணத்திற்கு பின்பான நிகழ்வுகளுமாக முடையப்பட்டிருக்கிறது ‘ஒளிர் நிழல்’. சுரேஷ் பிரதீப், ரகு, சக்தி, குணா என பல்வேறு பாத்திரங்கள் கதைசொல்லிகளாக திகழ்கின்றனர். உரை, கவிதை, கட்டுரை என வெவ்வேறு வடிவங்களை கையாள்கிறது. தற்கால இளைஞனின் வாழ்வில் சூழும் வெறுமை மற்றும் அகத் தத்தளிப்புகள், ஒரு குடும்பத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும், ஒரு காலகட்டத்தின் அரசியல் – சமூக மாற்றத்தின் கதை என மூன்று தளங்களில் வாசிப்பை அளிக்கிறது.

‘ஒளிர் நிழலில்’ குறிப்பிட்டு கவனப்படுத்த வேண்டிய அம்சம் என்பது நாவலில் வரும் பெண் பாத்திரங்களின் வலுவான சித்தரிப்பு. அருணா, மீனா, கோமதி, வசுமதி, அம்சவல்லி என எல்லா பாத்திரங்களும் வெவ்வேறு அடர்த்திகளில் மிளிர்கின்றன. ஆனால் நாவலின் ஆண் பாத்திரங்களில் இந்த வேறுபாடு தெளியவில்லை. ஆண்கள் அனைவருமே கூரிய தன்னுணர்வு கொண்டவர்களாக, சலிப்புற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள வர்ண அடர்வுகள் நுண்மையாக மாறுகின்றன. சுரேஷ் – குணா, ரகு – சக்தி, செல்வராஜ் குரல்கள் ஒன்று போலவே ஒலிக்கின்றன. மூத்த தலைமுறையினர் அனைவரும் ஒன்று போலவே தென்படுகின்றனர். மனதில் தங்க மறுக்கிறார்கள். சந்திரசேகர் போன்ற பாத்திரங்கள் இந்த வார்ப்பிலிருந்து விதிவிலக்காக இருக்கின்றன.

இதில் கவனிக்கத்தக்க பாத்திர வார்ப்பு என்பது சக்தியும் குணாவும் என கூறலாம். அவர்களிருவரும் ஒரே ஆளுமையின் இரண்டு துருவ இயல்புகளின் பிரதிநிதிகள். சக்தி வெளிப்பார்வையில் வெளிமுக (extrovert) ஆளுமை போல வடிவமைக்கபட்டுள்ளான். ஆனால் உள்ளே அவனுக்கு எதுவுமே ஒரு பொருட்டல்ல. எக்கணத்திலும் கனிவு கொள்ளாதவனாக இருக்கிறான். நேரெதிராக குணா உள்முக ஆளுமையாக வெளிப்படுகிறான். எவரிடமும் ஒட்டாது, எல்லாரையும் வெறுப்பது போல் தெரிந்தாலும் அன்பிற்காக ஏங்குகிறான். நாவலின் மைய விசை என்பது இவ்விரு இயல்புகள் கொள்ளும் ஊடாட்டமே. வெண்முரசு கையாளும் ஆடி பிம்பம் எனும் வடிவத்தை இப்பாத்திரங்களுக்கு பொருத்திப் பார்க்கலாம். அவர்கள் ஒருவரையொருவர் நிறைவு செய்கிறார்கள்.

நாவலுக்குள் அடையாளபடுத்தப்படுவது போலவே சுரேஷ் பிரதீப்பிடம் தாஸ்தாவெஸ்கியின் தாக்கம் உள்ளது. கவிஞர் சபரிநாதன் ‘நிலவறைக் குறிப்புகள்’ பற்றி எழுதிய கட்டுரையில் தாஸ்தாவெஸ்கியின் கதைமாந்தரின் இரு முகங்களைப் பற்றி சுட்டிக் காட்டுகிறார். சமகால விழுமியங்களின் மீது நம்பிக்கையற்ற எதிர்நாயகன் என அவனை வரையறை செய்கிறார். சமூகத்தின் பொருட்டின்மைக்கு எதிராக உருவானவன் என்கிறார். “பொருட்டின்மை என்பது முகமூடிதான். உள்ளே இருப்பதோ வெறுப்பு. செல்ல இடமில்லாதபோது அவ்வெறுப்பு தன் மீதே பாய்ந்துகொள்கிறது. எதுவும் இல்லாத இடத்தில் வெறுப்பு  குடியேறும் என்பது தாஸ்தாயெவ்ஸ்கியின் கண்டுபிடிப்புகளில் ஒன்று,” என எழுதுகிறார். ஒளிர் நிழலில் அப்பட்டமாக இது வெளிப்படுகிறது. “சக மனிதன் மீதெழும் வெறுப்பே இந்த நாவலுக்கான அடிப்படை எனத் தோன்றுகிறது” என்று நாவலின் துவக்கத்தில் வரும் ஒரு வரி மேற்சொன்ன உணர்வுக்கு நெருக்கமாக திகழ்கிறது.

சபரி அதே கட்டுரையில் தாஸ்தாவெஸ்கியின் கதைமாந்தர்களைப் பற்றிய அவதானிப்பை வைக்கிறார்- “நிலவறை மனிதன் தன்னைப் பீடித்துள்ள நோயாகக் கருதுவது அதீத பிரக்ஞையை. ஓரிடத்தில் பிரக்ஞையே பிணிதான் என்கிறான். இந்த அதீத பிரக்ஞை காரணமாக அவனுக்கு எதார்த்தத்தில் உள்ள முரண்களும் விரிசல்களும் சட்டென கண்ணில் படுகின்றன. அதை விட மோசமாக, தன் உள்ளே மொய்க்கும் எதிர்வுகள் மற்றும் பிறழ்வுகளில் இருந்து பார்வையை அகற்ற முடிவதில்லை.” ஒளிர் நிழலின் துவக்க பக்கங்களில் இருந்தே இத்தகைய போக்கு நிலைபெறுகிறது. உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிறான், ஆனால் அதன் நாடகீயத்தன்மை, பொருளின்மை காரணமாக தொடுகையைக்கூட தவிர்க்கிறான். யாரேனும் தன்னைத் தீண்ட வேண்டும் என தவிக்கிறான், ஆனால் தானே அதைச் செய்யக் கூடாது எனும் தன்னுணர்வு தடுக்கிறது. தனது மேன்மையும் நல்லியல்புகளும் புரியாத மனிதர்களுடன் வாழ்வதை எண்ணி சலிக்கிறான், ஆத்திரம் கொள்கிறான். மறு எல்லைக்கு சென்று கழிவிரக்கம் கொள்கிறான். சக மனிதர்கள் மீதான வெறுப்பு என பிரகடனபடுத்திக் கொண்டாலும்கூட அது அன்பை நோக்கியே நீள்கிறது. நிழல்கள் இருளாமல் ஒளிர்கின்றன. சுரேஷ் பிரதீப் எனும் எழுத்தாளன் மாய்ந்து அவனுடைய நிழலாக அவன் வார்த்த பாத்திரம் குணா என்றென்றைக்குமாக புனைவுக்குள் வாழ்கிறான், ஆகவே ஒளிர்கிறான். தன்னை அழித்து கலையை வளர்க்கும் சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த இருத்தலியல்வாதத்தின் நீட்சியாகவே ‘ஒளிர் நிழலை” காண முடியும். இத்தனை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு, மனிதனை ஒவ்வொரு நொடியிலும் வியப்பிலேயே அமிழ்த்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகிய பின்னரும் பொருளின்மை நம் முகத்தில் அறைகின்றது, இக்கேள்விகள் மேலும் கூர்மை கொண்டு எழுகின்றன என்பதே புதிய தலைமுறை தமிழ் எழுத்தாளர்களை வாசிக்கும்போது புலப்படும் மற்றுமொரு பொதுத்தன்மை.

தொண்ணூறுகளில் பிறந்த மற்றொரு எழுத்தாளரான விஷால் ராஜாவின் படைப்புலகுடன் சுரேஷ் பிரதீப்பின் உலகம் கொள்ளும் ஒப்புமைகள் மற்றும் வேறுபாடுகளை கவனிப்பது முக்கியம். ‘எனும் போது உனக்கு நன்றி’ எனும் விஷாலின் தொகுப்பை முன்வைத்து, “விஷாலின் கதைகளில் கதைமாந்தர்கள் ‘ஏன் இப்படி இருக்கிறது இவ்வுலகம்?’ எனும் திகைப்பை வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தங்களைப் பீடத்தில் அமர்த்திக் கொண்டு பிறரை குற்றம் சுமத்துவதில்லை. புகார் என்றுகூட இல்லை, மிகச் சன்னமான முனகல் ஒன்றே எழுகிறது. அவர்கள் ‘குளிர்’ நாயகனை போல் தங்கள் அளவில் காபந்து செய்து கொள்ள முடியுமா என்று மட்டுமே நோக்குகிறார்கள்.” என்றெழுதி இருந்தேன். விஷாலிடமும் சுரேஷிடமும் வெளிப்படுவது இருத்தலியல் சிக்கலே. ஆனால் சுரேஷிடம் வெளிப்படும் கோபம் விஷால் கதைகளில் வெளிப்படுவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் என்பது சுரேஷ் பிரதீப்பின் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் ஆளுமைப் பிளவாக இருக்கக்கூடும். தற்கால இலக்கியத்தின் இரு போக்குகளாக இவ்விரண்டையும் அடையாளப்படுத்த முடியும்.

நாவலில் சில காட்சிப் படிமங்கள் வெகுவாக ஈர்த்தன. பொட்டலில் முளைத்தெழுந்த  வளைந்த பனைகளை “பல நூறு பாம்பு மாத்திரைகள் ஒன்றாக வைத்து கொளுத்தியது போல தடித்து கறுத்த பனை மரங்கள்” என விவரிக்கிறார். மற்றொரு தருணத்தில் குணாவின் இயல்பை விவரிக்கும் போது “கானல் நீராலான பெருங்கடலில் நீந்துகிறான்” என்றெழுதுகிறார். ஆனால், சுந்தரத்தைப் பற்றிய அத்தியாயத்தில் “ஒத்த ஆளா பீமசேனன் மாதிரி குடும்பத்த தாங்குனான்” எனும் பயன்பாடு அவ்விடத்தில் எனக்கு அன்னியமாக துருத்திக்கொண்டு தெரிந்தது.

காத்தவராயன் ஊர்விட்டு கூட்டத்துடன் விலகி தனது சாமியைக் கண்டுகொள்ளும் இடம் சிறப்பாக சித்தரிக்கப்படுகிறது. முழுவதும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றபோதும்கூட கடவுள், திருவிழாக்களுக்கு நாவலுக்குள் இடமில்லை. எப்படியாவது தான் இறந்துவிட வேண்டும் என கடவுளிடம் மன்றாடும் நாவலின் துவக்க பகுதியில் “இங்கிருக்கும் எதுவுமே என்னை ஆற்றுப்படுத்த முடியாது என்ற முதல் எண்ணத்தில்தான் நீ உதித்திருக்க வேண்டும். நீ எனக்கு ஆணவங்களின் தொகுப்பு” என கடவுளைப் பற்றி சொல்கிறார். உன்மத்த நிலையில் சாக்த தாக்கம் கொண்ட கவிதைகள் உள்ளன.

தலித் இயக்கங்கள் சார்ந்து துணிந்து சில அரசியல் விமர்சனங்களை போகிற போக்கில் வைக்கிறார். நாமறிந்த இயக்கங்கள் மற்றும் அதன் தலைவர்களை நினைவுபடுத்துகிறது. கோமதியின் மரணம் சார்ந்து பள்ளருக்கும் தேவருக்கும் இடையிலான உரசல்கள் கோடிட்டுக் காட்டப்படுகின்றன. நூற்றி சொச்ச பக்க நாவலில் இத்தனைத் தளங்களை தொட்டிருப்பது சுரேஷ் பிரதீப்பின் வருங்கால ஆக்கங்களின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

மரியோ வர்கோஸ் லோசா அவருடைய ‘இளம் நாவலாசிரியனுக்கு எழுதும் கடிதம்’ எனும் நூலில் நாவலின் வடிவத்திற்கும் நாவலின் பேசுபொருளுக்கும் இடையிலான உறவு உயிர்ப்புடன் திகழ வேண்டும் என்கிறார். கருப்பொருள் வாழ்க்கை அளிப்பது, பல எழுத்தாளர்கள் ஒரே கருப்பொருளை மையமாக கொண்டு எழுதுகிறார்கள், ஆனால் அதன் வெளிப்பாட்டு முறை எழுத்தாளனின் திறன் சார்ந்தது என்கிறார். ஒளிர் நிழல் எனும் நாவலுக்குள் வராத பகுதிகளின் இருப்பைப் பற்றி சிந்தித்து பார்க்கையில், புனைவுக்குள் புனைவு எனும் வடிவுக்கு நியாயம் இருக்கிறதா எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது. வாசகருக்கு வாசிப்பு சுவாரசியம் அளிக்கிறது, அவனுக்கொரு சவாலை அளிக்கிறது, சவாலான வடிவத்தை கையாள்வதில் துவக்க நாவலிலேயே தேர்ச்சி அடைந்திருக்கிறார் போன்றவை உண்மையே. எனினும் நாவலின் மையத்திற்கு எவ்விதத்திலாவது வலு சேர்க்கிறதா என்பது கேள்விக்குரியதே. மாறாக இந்நாவலை எப்படி வாசிக்க வேண்டும் எனும் சில வழிகாட்டல்கள் அப்பகுதிகளில் வெளிப்படுகின்றன. உளவியலாளர் கூற்று, எழுத்தாளர் ஜெயகுமார் உரை ஆகியவை அதையே செய்கின்றன.

நாவலின் வடிவை கோளம் என உருவகப்படுத்த தோன்றுகிறது. அணுக அணுக அதன் மேற்பரப்பில் இருக்கும் வடிவ வேறுபாடுகள், சமமின்மைகள் புலப்படும், விலகி நோக்கும் தோறும் அவை மறைந்து ஒற்றை வடிவமென முழுமை கொள்ளும். வடிவ ரீதியாக கட்டற்ற பெருக்கு, ஒழுங்கற்ற சிதறல்கள் என தோன்றினாலும் அவையூடாக ஒரு ஒழுங்கு ஊடுருவி செல்லும். ஒளிர் நிழலின் துவக்கத்தில் குடும்ப அமைப்பை பொருளியல் பின்னணியில் வகுத்து நோக்கும் கட்டுரை நாவலுக்குள் எப்படியோ பொருந்தி போகிறது. சில கழிவிரக்கப் பகுதிகள், சுய விமர்சனங்கள் துருத்திக்கொண்டு இருந்தாலும்கூட, ஒளிர் நிழல் நிச்சயம் ஒரு கதைக் கோளம்தான். எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்பிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

ஒளிப்பட உதவி – சுரேஷ் எழுதுகிறான்

புதிய குரல்கள் – 1 – விஷால் ராஜாவின் ‘எனும்போது உனக்கு நன்றி’யை முன்வைத்து– நரோபா

 

பிரைமரி காம்ப்ளக்ஸ் – சுரேஷ் பிரதீப் சிறுகதை

சுரேஷ் பிரதீப்

பிரைமரி காம்ப்ளக்ஸ் என்பதுதான் அர்த்தத்தோடு நான் அறிந்த முதல் ஆங்கில வார்த்தை. தொண்டையில் சதை வளரச் செய்யும் அந்த வியாதி எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளித்திருந்தது.

உடம்புக்கு முடியவில்லை என சொல்வதற்கு முன்னே கிருஷ்ணமூர்த்தி டாக்டர் கையில் ஊசியை எடுத்துவிடுவார். அவரெதிரே நெளிந்தபடி ஸ்டூலில் உட்கார்ந்திருக்கும் என்னுடைய நொய்மையான தோள்களை பிடித்தபடி எனக்கிருக்கும் கோளாறுகளை அம்மா சொல்லும். அம்மா பேச்சை நிறுத்தும் வரை அவரெதிரே பரப்பி வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிறிய கண்ணாடிப் புட்டியில் இருந்தும் மருந்தை ஏற்றுவார். ஈரப் பஞ்சால் ஊசி குத்தப் போகும் என் நோஞ்சான் கையை அவர் தேய்க்கும்போதே எனக்கு வலிக்கத் தொடங்கிவிடும். அதுவரை என்னை போட்டுக் கொடுத்து பெரிய ஊசியாக குத்த வைத்த அம்மாவின் இடுப்பை ஒரு கையால் வளைத்துக் கொள்வேன். அம்மாவும் முதுகைத் தடவிக் கொடுக்கும். அதன்பின் நடப்பது வேறு வகையான கொடுமை.

உடல்நிலை மோசமாகி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மாத்திரைக்கும் ஊசிக்கும் சுகக்கேடு சரியாகாதபோதுதான் கொரடாச்சேரிக்கு செல்லும் வாய்ப்பே கிடைக்கும். ஆனால் சேனம் கட்டப்பட்ட குதிரையென மருத்துவமனைத் தவிர எதுவுமே கண்ணில் பட்டுவிடாமல் அம்மா இழுத்துக் கொண்டு செல்லும். ஒருமுறை பேருந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி வரும் அம்மாவின் தலையைத் திருப்பி, “அம்மா எனக்கு ஜொரம் சரியாயிட்டும்மா. புரோட்டா வாங்கித் தர்றியா” என்றேன். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பாதகத்தி சிரித்துக் கொண்டே, “ஆஸ்பத்திரி நெருங்க நெருங்க அப்டிதாம்புள்ள இருக்கும்” என்றாள். என்னுடைய புரோட்டா கனவு தகர்ந்து போனது.

அன்றும் வழக்கம் போலவே ஒன்றும் வாங்கித் தராமல் அரைபோதையில் வரும் என்னை தரதரவென அம்மா இழுத்துச் சென்றது. வீட்டிற்கு வந்ததும் பயண அனுபவத்தை ஐந்து நிமிடங்கள் கூட அசைபோட விடாமல் கொஞ்சமாக உப்பு போட்டு வடித்த சுடுகஞ்சியை கொடுக்கும் அம்மா. பூண்டு ஊறுகாய்தான் அம்மாவிடம் எதிர்பார்க்கக்கூடிய அதிகபட்ச கருணை.

ஆனால் அப்பாவுடன் கிருஷ்ணமூர்த்தி டாக்டரை பார்க்கச் செல்வது ஊசி போடும் ஒரு சம்பவத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவ்வளவு மோசமான அனுபவம் என்று சொல்ல முடியாது. என்ன ஒன்று, ஊசி போட்ட இடத்தை பற்களை கடித்துக் கொண்டு அப்பா தேய்த்துவிடுவது சில நேரங்களில் தோல் கரைந்து உள்ளிருந்து ஒன்றிரண்டு எலும்புகள் எட்டிப்பார்த்து விடுமோ என்ற பயத்தை அளிக்கும். வேண்டியவரை முகத்தை சோர்வுடன் வைத்துக் கொண்டால் அப்பா தின்பதற்கு ஏதேனும் வாங்கித் தருவார்.

அடிக்கடி சளி பிடிக்கிறது என்று என்னை தஞ்சாவூர் அழைத்துச் செல்லப் போவதாக அம்மா சொன்னது பேரானந்தத்தை கொடுத்தது. அதுவரை நான் தஞ்சாவூர் சென்றதில்லை. ஆனால் பெரிய ஊர், ராஜேந்திரன் என்ற பெரிய டாக்டர் என்றெல்லாம் என்னை கலந்து கொள்ளாமலே அவர்கள் பேசிக் கொண்டிருந்தது இயல்பாகவே பெரிய ஊசி என்ற எண்ணத்திற்கு என்னை இட்டுச்சென்றது. ராஜேந்திரன் எப்படி இருப்பார் என கற்பனை செய்யத் தொடங்கினேன். ராஜாத்தி அக்காவின் அப்பா பெயரும் ராஜேந்திரன் தான். ஏணி முறம் கூடை எல்லாம் செய்து கொடுப்பார். கூரிய நுனிகள் கொண்ட பெரிய மீசை வைத்திருப்பார். பார்க்க பயமாக இருக்கும். ஆனால் அப்பாவிடம் மிகுந்த பணிவுடன் பேசுவார். கிட்டத்தட்ட அதே பணிவுடன் என்னிடமும் பேச முற்படுவது சிரிப்பை வரவழைக்கும். அவரிடம் எப்படி ராஜாத்தி அக்கா சில்லுகோட்டிலும் கிட்டிபுள்ளிலும் எப்போதும் தோற்கடிக்கிறாள் என முறையிட முடியும் என பேசாமல் இருந்து விடுவேன். மேலும் அழாமல் அதைச் சொல்லவும் முடியாது. அழுதது தெரிந்தாலே அப்பா அடிப்பார்.

எப்படி யோசித்தும் ராஜேந்திரன் டாக்டருக்கு கூரிய மீசை உடைய முகமே மனதில் எழுந்தது. ஆனால் நான் கண்டது கருந்தாடியும் நுனிகள் தாழ்ந்த மீசையும் உடைய ஒரு சிகப்புச் சட்டை போட்ட வெள்ளை மனிதரை. அவர் அறையும் அவரைப் போலவே பளிச்சென்று இருந்தது. அந்த அறை அரக்கு நிற புடவை கட்டிய அம்மாவை மேலும் அழகியெனக் காண்பித்தது. அப்பா அவ்வறையின் அமைதியில் தன்னை பொருத்திக் கொண்டு அமர்ந்திருந்தார். ஒரு சிறிய புத்தகம் அளவிற்கு இருந்த என்னுடைய மருந்துச்சீட்டு கோப்பினை ஒரு பத்து நிமிடங்கள் நோட்டமிட்டார். வேற்றுகிரகவாசியைப் போலவோ அதீத கருணையுடனோ என்னைப் பார்க்காத ராஜேந்திரன் டாக்டரை எனக்கு மிகப்பிடித்து விட்டது. மேலும் பேசிக் கொண்டிருக்கும்போதே ஊசியில் மருந்தேற்றும் அநாகரிகம் எல்லாம் ராஜேந்திரன் டாக்டரிடம் இல்லை. வெறுங்கையோடு என்னருகே வந்து தொண்டை முழையை அழுத்தினார். லேசாக வலித்தாலும் இதமாக இருந்தது.

“எச்சி முழுங்கும் போது வலிக்குதாடா” என்றார்.

“ம்ஹூம்” என தலையசைத்தேன்.

“என்னடா பொம்பள புள்ள மாதிரி அபிநயம் காட்ற படவா” என கன்னத்தைக் கிள்ளினார். மறுமுறை கிள்ளமாட்டாரா என்றிருந்தது.

இருக்கைக்கு சென்றபின் “ஒன்னும் பயப்பட்ற மாதிரி இல்ல சார். பிரைமரி காம்ப்ளக்ஸ்தான். கொஞ்சம் வீக்கா இருக்கான். தெனம் அவிச்ச முட்ட கொடுங்க. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு வாங்க. சும்மா செக்கப் பண்ணதான். முட்ட குடுக்கிறத மட்டும் நிறுத்திடாதிங்க. உங்க திருப்திக்காக டேப்ளட் எழுதுறம்மா” என்று அம்மாவை பார்த்து சிரித்தபடியே எழுதினார்.

ஊசியே போடாமல் அனுப்பியதை என்னால் நம்ப முடியவில்லை. ரொம்ப சந்தோஷம் வரும்போது எனக்கு எலும்புச் சட்டகம் வேலை செய்யாது. அம்மாவின், அப்பாவின் கைகளில் மாறி மாறி துவண்டேன்.

“இங்கேரு இப்பிடியே எளஞ்சிகிட்டே வந்தீன்னா ஸ்டேஷன்லயே உட்டுட்டு ட்ரெயின் ஏறிடுவோம்”, என அம்மா மிரட்டிய பிறகு எலும்புகள் வேலை செய்யத் தொடங்கின. ஆப்பிள் மாதுளை அன்னாசி என பழங்களின் படமாக போட்டிருந்த ஒரு டானிக் பாட்டில் வாங்கினார் அப்பா. சப்பி சாப்பிடும் ஒரு இனிப்பு மிட்டாய். கவர்ச்சியான அட்டையில் வைக்கப்பட்ட சில அழகான பெரிய மாத்திரைகள். இவ்வளவு தான் ராஜேந்திரன் டாக்டர் எழுதியிருந்தார். அந்த டானிக்கை எழுந்ததும் யாருக்கும் தெரியாமல் ஒரு மூடி குடிப்பேன். குடித்த பிறகும் அளவு குறைந்திருக்காது. அதனால் மீண்டும் ஒரு மூடி குடிப்பேன். காலை சாப்பிட்ட பின் மற்றொரு மூடி. வியாழக்கிழமைகளில் மட்டும்தான் பள்ளியில் அவித்த முட்டை கொடுப்பார்கள். அதிலும் மஞ்சள் கருவை தனியாக எடுத்துவிட்டு கடைசி கொஞ்சம் சோற்றுடன் அதனை பிசைந்து தின்னும் ஒரு வழிமுறையை என் தோழர்கள் கண்டறிந்ததும் அதை பயன்படுத்துவதும் எனக்கு உமட்டலை தான் கொடுத்தது. ஆனால் மாலையில் பசியுடன் வரும்போது ஒவ்வொரு நாளும் அவித்த முட்டை காத்திருந்தது.

அதற்கு முன் ஒரு மனிதனின் நினைவு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்ததில்லை. சனிக்கிழமைகளில் மட்டுமே அண்ணன் வெளியே எடுக்கும் சீட்டுக்கட்டு மரத்தினால் ஆன கிரிக்கெட் பேட், கொழுந்து வாழை இலை இதெல்லாம் நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கும். ஆனால் ஒரு மனிதனை நினைத்து சந்தோஷப்படுவது அதுவே முதன்முறை. என் வகுப்பில் படித்த அன்பரசனையும் பிரதீப்பையும் நினைத்து நிறையவே பயந்திருக்கிறேன். அன்பரசன் கருப்பாக உருண்டையாக இருப்பான். நல்ல கவர்ச்சியான பெரிய உதடுகள் அவனுக்கு. எப்போதும் என்னை ஏளனத்துடன் “டேய் பென்சிலு” என வம்பிழுப்பான். ஒற்றைப்படை ரேங்க் வாங்குவதால் வாத்தியார்களின் சப்போர்ட் கிடைக்கும். அதனால் அன்பரசனை ஓரளவு சமாளிக்க முடியும். ஆனால் பிரதீப் அப்படி கிடையாது. நல்ல பாம்பைப் போல அவன் உடல் ஈரமாகவே இருக்கும். காலில் பெரிய பெரிய புண்கள் சில நாட்களில் பார்க்கக் கிடைக்கும். அவன் தமிழ்நாட்டில் பிறந்தவன் அல்ல. ஏதேனும் கன்னடக் கெட்டவார்த்தை சொல்லி திட்டுவான். நீண்ட குச்சி போல இருப்பான். இவர்கள் தனித்தனியே இருந்தபோது நான் அவ்வளவாக பயப்படவில்லை. ஒன்று சேர்ந்து கொண்டு என்னை நிறையவே அழவைத்தார்கள். காலையின் என் முதல் பிரார்த்தனை அவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்பதாகவே இருக்கும் பெரும்பாலும்.

ஆனால் இப்படியொரு மனிதனை நான் விரும்பியதில்லை. ராஜேந்திரன் டாக்டரிடம் செல்லப் போகிறோம் என்று சொன்ன அப்பாவை சட்டென்று ஓடிப்போய் கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. மறுமுறை அவருக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அப்போதுதான் இதுவரை அப்படி யாருக்கும் எதுவும் நான் கொடுத்ததில்லை என்று நினைவுக்கு வந்தது. சரி பரவாயில்லை என எண்ணிக் கொண்டேன்.

குறுக்கு கம்பியை கடித்தபடியே பேருந்து பயணம். ராஜேந்திரன் டாக்டர் சென்றமுறை வந்தபோது இருந்ததைப் போலவே இருந்தார். ஏதோ உள்ளறையில் போய் வேறு சட்டை போட்டுக் கொண்டு எதிரே அமர்ந்திருப்பவர் போல இருந்தார். என்னை வாசலில் பார்த்ததுமே “வாடா பயலே” என நாற்காலியில் அமர்ந்தபடியே கழுத்தை மட்டுமே உயர்த்திச் சொன்னார்.

கையைப் பிடித்தவர் “என்னாடா அம்மா தெனம் முட்ட கொடுத்திச்சா” என்றார். நான் அண்ணாந்து பார்த்து புருவங்களை உயர்த்தி மூடியபடியே வாயை நீட்டி “ம்” என நீளமாக ஆமோதித்தேன்.

“பய தேறிட்டான் போலருக்கே” என என் இடது கை மணிக்கட்டை நெறித்தபடி சொன்னார். வலித்தாலும் சிரித்தேன். ஆனால் நான் தேறிவிடவில்லை அப்போது. கரும்பளிங்கு மாதிரி இருக்கும் அன்பரசு போலவோ உரித்த பளபளப்பான வேப்பங்குச்சி மாதிரி இருக்கும் பிரதீப் போலவோ நான் மாறியிருக்கவில்லை.

ராஜேந்திரன் டாக்டர் இருக்கையில் அமர்ந்த பின்னும் என்னைப் பார்த்து சிரித்தார்.

“உங்க பையன் கம்ளீட்டா கியூர் ஆயாச்சு சார். இந்த டேப்லட் மட்டும் ஒரு ஒன் வீக் கண்டினியூ பண்ணுங்க அது போதும்” என்றபடியே ஏதோ எழுதத் தொடங்கினார்.

“ஒரு வாரங்கழிச்சு வரணுமா சார்” என்றார் அப்பா.

கண்ணாடி வழியாக கண்களை மட்டும் உயர்த்தி “உங்களுக்கு மூணு தரம் ஆஸ்பத்திரிக்கு போனாதான் திருப்தி வரும்னா தாராளமா வாங்க” என்றார் டாக்டர்.

அம்மா கூட கொஞ்ச நேரம் பற்களை வெளிக்காட்டி மூடிக்கொண்டது. நானும் சிரித்தபிறகே சட்டென்று அந்த உண்மை உரைத்தது. ராஜேந்திரன் டாக்டரை இனிமேல் பார்க்க வரமுடியாது. அந்த பிரைமரி காம்ப்ளக்ஸ் இவ்வளவு சீக்கிரம் ஏன் நீங்குகிறது என்றிருந்தது எனக்கு. மேலும் எட்டு வயதில் அந்தச் சொல்லை உச்சரிப்பது எனக்கொரு தன்னம்பிக்கையை கொடுத்திருந்தது.

நாங்கள் வெளியேறினோம். அடுத்த பெற்றோர் மகனுடன் உள் நுழைந்தனர்.

ராஜேந்திரன் டாக்டர் “வாடா பையா” என்று சிரிப்பது கேட்டது. அவர் சிரிப்பைக் கேட்டபிறகு பிரைமரி காம்ப்ளக்ஸ் சரியானது நல்லதுதான் என்று தோன்றியது. அம்மாவும் அப்பாவும் வருமுன்னே விடுவிடுவென இறங்கி சாலையோரம் போய் நின்றேன், வரவிருந்த அழுகையை கட்டுப்படுத்தியபடி.

கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும் – சுரேஷ் பிரதீப்

சுரேஷ் பிரதீப்

அக்கா வீடாகவே இருந்தும் வீட்டு முற்றத்தில் யாரும் இல்லாதது உள்ளே செல்வதற்கான ஒரு தயக்கத்தை அளித்தது. காலர் வைத்த நைட்டி அணிந்தபடி விமன்யா எதிர்பட்டாள். என் தயக்கத்தை பார்த்து சிரித்தபடியே என் முகத்தில் இருந்து பார்வையை எடுக்காமல் “ம்மா” என சத்தமாக அழைத்தாள். பள்ளிச் சீருடை தான் அவளை எடுப்பாக காட்டும் ஒரு உடை. மெலிந்து உயர்ந்த பெண்களின் முகம் எவ்வளவு திருத்தமாக இருந்தாலும் அவர்களின் அசைவுகளில் ஒரு கவர்ச்சியின்மையும் நம்பிக்கை குறைவும் வெளிப்படவே செய்கிறது. போட்டுப் பழகிய சீருடையிலேயே சற்றே மிளிர்வு தெரியும் அவளிடம்.

அக்கா கூடத்தின் இடப்புற அறையில் இருந்து மூக்கை ஊறிஞ்சியபடி வெளியே வந்தாள். கார்த்திகாவின் மீது கடுமையான துவேஷம் எழுந்தது. அவளுக்கும் என் அக்கா வயது தான் இருக்கும். விமன்யாவை விட பெரிய பெண் ஒருத்தி அவளுக்கு இருக்கிறாள். ஆனால் அவளிடம் இன்னமும் இளமை தீரவில்லை. அக்காவின் முகம் பழுத்துச் சிவந்திருந்தது. வழக்கம் போல் இடக்கையால் தலையை சொறிந்த படி “தம்பி வாடா” என்றாள். அவள் தலையில் கை படும் போது உதடு வலது ஓரத்தில் லேசாக சுளித்துக் கொள்ளும். அவ்வழகை கார்த்திகா என்றுமே தொட்டு விட முடியாது என மனம் ஆசுவாசம் கொண்டது அல்லது கொள்ள விழைந்தது.

ஜீவா வந்து மேலே ஏறிக் கொண்டான்.

“என்னா மாமா” என இழுத்தான்.

“என்னா மாப்ள” என நானும் இழுத்தேன். அவன் என் தலையில் ஏறிக் கொண்டு பேன் பார்க்கத் தொடங்கினான்.

“அபபா இல்லையாடி” என்றேன்.

“இல்ல மாமா” என்ற விமன்யாவின் விழிகளில் என்னிடம் சொல்ல ஏதோ எஞ்சி இருந்தது.

“என்னடி” என்றேன்.

“உங்க போன வேற யாரும் எடுக்க மாட்டாங்கல்ல” என்றாள். அதிர்ந்த மனதை கட்டுப்படுத்தி “ஓ நீயா அது. வாட்ஸ் அப்ல மெசேஜ் பண்றது இந்த கொரங்குன்னு நெனச்சேன்” என ஜீவாவை கை காட்டினேன் அவள் அந்த நாசூக்கின்மையை வெறுக்க வேண்டும் என்ற உட்சபட்ச வேண்டுதலுடன். விமன்யா மேலே ஏதும் பேசவில்லை.

பசித்தது. அது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். “டின்னர் இங்க சாப்ட்றீங்களா மாமா” என்றாள். ஏற்பின் அசைவுகள் என்னுள் எழுவதற்கு நேரம் கொடுக்காமல் “கெளம்புறீங்களா” என்றாள். இவ்வளவு சிறிய பெண்ணுக்கு எங்கிருந்து வருகிறது இவ்வளவு கூர்மை என எண்ணும் போதே பதினைந்து பெண்ணுக்கு சிறு வயது அல்ல என்றும் தோன்றியது. பல பெண்களிடம் ஆடுவது தான் என்றாலும் அச்சிறுமியிடம் அவ்விளையாட்டை நிகழ்த்த மனம் ஒப்பவில்லை. அவள் எதிர்பார்க்கும் சங்கட உணர்வை முகத்தில் நிலைக்க விட்டால் என்ன என்று கூட ஒரு கணம் தோன்றியது. ஆனால் உள்ளுக்குள் ஒன்று தீர்மானமாக அதை மறுத்தது. நல்லவேளையாக “தூங்குற நேரத்த நீ எப்படி கொறச்சுப்பன்னு சொன்ன மாமா” என்றபடியே அக்கா வெளிவந்த அதே அறைக்குள் இருந்து வந்தாள் விமன்யாவின் தங்கை கீர்த்தி. எதை முதன்முறையாக கேட்டாலும் ஏற்கனவே அதை என்னிடம் கேட்டது போலத்தான் சொல்வாள்.

சிலரிடம் எச்சூழலிலும் ஒளியேற்றிவிடும் ஒரு தீ இருக்கும். கீர்த்தி அத்தகையவள்.

“ரொம்ப நேரம் தூங்கணும்னு அவசியம் இல்லடா. கண்ணுக்கு மட்டும் கொஞ்சம் ரெஸ்ட் வேணும். அதனால பஸ்ல போறப்ப வண்டில பின்னாடி உக்காந்து போறப்பவெல்லாம் கண்ண மூடிப்பேன்” என்றேன்.

“இப்ப நா கேட்டுட்டு தான இருக்கேன் நானும் கண்ண மூடிக்கிறேன்” என்று கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

திடீரென நினைவெழுந்தவளாய் “மாமா அந்த கதைய கண்டினியூ பண்ணே. தலமுடியும் துளிக் குருதியும்” என்றாள்.

குருதி என்ற வார்த்தையை அவள் உச்சரிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. நான் சொல்லியிருந்தது எனக்கே மறந்து விட்டது. நெருங்கி நண்பர்கள் அனைவரின் ஒரேயொரு முடியையும் ஒரு துளி ரத்தத்தையும் எடுத்து பாடம் செய்து வைப்பவனின் கதை. யார் என்னிடம் அதைச் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் அதைக் கதையாக இன்னொருவரிடம் சொல்லும் வரை உள்ளுக்குள் ஏதோ அரித்துக் கொண்டிருந்தது. இப்போது கீர்த்தியிடம் கூட இயல்பாக சொல்லக்கூடியதாகிவிட்டது அக்கதை. விமன்யாவின் கடுப்பான முகத்தைப் பார்க்க எழுந்த இச்சையை மிகுந்த சிரத்தையுடன் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“பஸ் ஸ்டாண்டுக்கு எப்படி மாமா போவீங்க” என இடை வெட்டினாள் விமன்யா.

“கீறி என்ன தூக்கிட்டுப் போகும்” என கீர்த்தியை கை காட்டினேன்.

“நானும் தூக்குவேன் நானும் தூக்குவேன்” என ஜீவா தலையில் இருந்து முதுகுக்கு இறங்கி விட்டான். விமன்யா மேலு‌ம் எரிச்சல் அடைவது தெரிந்தது.

“நான் பிரசன்னாவ வந்து விட்டுட்டு வரச் சொல்றேன்” என்றாள். அந்நேரம் அவள் மீது கடுமையான வெறுப்பு எழுந்தது. இவளுக்கு என்ன வேண்டும்? என்னிடம் என்ன சொல்ல விழைகிறாள்? நான் அவளிடம் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கிறாள்?

பிரசன்னா வந்தான். நெடுநெடுவென இருப்பவன். அப்படி மெலிந்து உயரமாக இருக்கும் இளைஞர்கள் தான் சாதிக்க தகுந்தவர்கள் என்ற ஒரு பொது புத்தி இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆனால் விமன்யா போன்ற மெலிந்த பெண்கள் அப்படி நினைக்கப்படுவதில்லை.

“வர்றண்டி கீறி வர்றங்க்கா வர்றேன் மாப்ள” என ஒவ்வொருவராக விடைபெற்ற பிறகு “இது லைஂபோட பிககனிங் ஸ்டேஜ் விமி. பிகேவ் யுவர்செல்ப் ” என விமன்யாவிடம் சொல்ல வந்ததை முழுங்கி “சி யூ விமி” என்று மட்டும் சொல்லிவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஏறினேன். அப்படி அவளிடம் சொல்லாதது ஒரு ஆறுதலையும் அளித்தது.

பிரசன்னாவிற்கு பின்னே வண்டியில் நான் ஏறியதும் ஒவ்வொரு தெரு விளக்காக அணைந்ததை எட்டு மணிக்கே கடைத்தெரு காலியாகக் கிடந்ததை பிரசன்னா என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாததை பேருந்தில் ஏறிய பிறகே எண்ணிக் கொண்டேன். ஓட்டுநரையும் நடத்துநரையும் தவிர வேறு யாருமே இல்லாத பேருந்து மெல்லிய துணுக்குறலையும் மகிழ்ச்சியையும் அளித்தது யானையின் உட்புறம் இருப்பது போல . விளக்குகள் அணைந்திருந்ததால் அமர்ந்திருந்த நடத்துநரின் முகம் தெரியவில்லை. டிக்கெட் எடுத்து பிறகு பேருந்தின் மைய இருக்கை ஒன்றில் அமர்ந்தேன்.

எல்லா இருக்கையும் காலியாகக் கிடந்தும் என் இருக்கை ஓரத்தில் அவன் வந்து அமர்ந்தான். நான் ஏறிய பிறகு பேருந்து எங்குமே நிற்கவில்லை இவன் எப்படி ஏறினான் என்ற எண்ணம் எழுந்ததும் ஒரு பயம் பிடித்துக் கொண்டது. அந்த பயமும் பலமுறை ஏற்கனவே உணர்ந்தது போலவே இருந்தது. தமிழ்ச்செல்வி அக்காவின் வீட்டின் இருண்டு அகன்ற கூடத்தில் அவள் தனியே அமர்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்ட போது எழுந்த பயம் அது. காட்சியை விட சத்தங்களே அதிக பயத்தை கொடுத்தது. அவள் குரல் அந்த குளிர்ந்த பெருங்கூடத்தின் எல்லா மூலைகளிலும் பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தது நாய்கள் ஒன்றிணைந்து ஊளையிடுவது போல.

நம்பிக்கை இன்மையை மட்டுமே வெளிப்படுத்தும் உடலசைவுகளைக் கொண்டிருந்தான். அவன் செய்யப் போகும் ஒவ்வொன்றையும் முன்னரே என்னால் கணிக்க முடியும் எனத் தோன்றியது. அப்படி நான் கணிப்பவற்றையே அவன் செய்வது அவனை மேலும் வெறுக்க வைத்தது. அசிங்கமான ஏதோவொன்று காலில் ஒட்டியிருப்பது போல நெளிந்து கொண்டே இருந்தேன். அழகானவற்றால் அப்படி ஈர்த்து அருகில் வைத்துக் கொள்ள முடியாது.அவற்றால் சலிப்பு தட்டக்கூடும். ஆனால் வெறுக்கிறவற்றை நோக்கி எழும் ஈர்ப்பை எப்போதும் போல் அப்போதும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு பர்ஸை சட்டைப் பையிலிருந்து எடுத்தான். சில பத்து ரூபாய் தாள்கள் மட்டுமே இருந்த பழைய கிழிந்த பர்ஸ் அது. அதிலிருந்து இரண்டு பத்து ரூபாய் தாள்களை எடுத்து அந்த பர்ஸின் இன்னொரு மூலையில் சொறுகினான். அதனை ஒரு சிறிய நோட்டில் குறித்துக் கொண்டான். ஒரு பழைய தோளில் மாட்டக் கூடிய பை. அவன் அதைத் திறந்த போது உளராத துணிகளில் இருந்து வரும் ஊமை வாடை அடித்தது. பை முழுக்க புத்தகங்கள் சீரில்லாமல் கிடந்தன. வாசிக்கும் பழக்கமுடைய இன்னொரு பைத்தியம் என எண்ணிக் கொண்டேன். அனுவனுவாக அவன் மீது வெறுப்பு பெருகியபடியே வந்தது. கூர்மையற்ற மங்கலான முகம். தொப்பை வெளித்தள்ளத் தொடங்கி இருக்கும் உடல். எண்ணெய் வைக்காத தலை. முகம் முழுவதும் படராமல் அங்கொன்றும் இங்கொன்றுமென தென்பட்ட தாடி. என்னைப் பார்த்து அவன் லேசாக சிரித்த போது பற்றிக் கொண்டு வந்தது எனக்கு. அந்தப் குறுகிய நேரப் பயணம் எப்போது முடியும் என்றிருந்தது.

“சார்” என நான் கேட்டதிலேயே கேவலமான குரலில் என்னை அழைத்தான்.என் வயதோ என்னை விட சற்று மூப்பாகவோ இருக்கக்கூடியவன் என்னை அப்படி அழைப்பது மேலும் வெறுப்பேற்படுத்தியது.

ஒன்றும் சொல்லாமல் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

“நீங்க புரோகிராமரா” என்றான். எனக்கு திக்கென்றிருந்தது.

“இல்லை” என்றேன்.

“பொய் சொல்லாதீங்க பிரகாஷ்” என்றவனின் முகம் கணம் கணம் மாறுவது போல இருந்தது.

“எப்படித் தெரியும்?” என்றேன்.

“என்னத் தெரியலையா” என்றவனின் முகத்தை எங்கோ பார்த்தது போல் இருந்தது. இருந்தும் அம்முகத்தை நான் நினைவுமீட்ட விரும்பவில்லை.

மேலு‌ம் சிலர் பேருந்தில் இப்போது அமர்ந்திருந்தனர். அவர்களும் எனக்குத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். என்னையறியாமலே அவன் யார் என நான் ஊகித்திருந்தேன். விசித்திரமாகத் தோன்றினாலும் ஓட்டுநர் இருக்கை காலியாக இருந்தது எனக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. பேருந்து விரைந்து கொண்டிருந்த போதே நடத்துநர் குதித்து விட்டார். அவர் மேல் பேருந்து ஏறி இறங்கியதால் ஏற்பட்ட குலுக்கலில் என் அருகே அமர்ந்திருந்தவன் முன் இருக்கையின் கம்பியில் இடித்துக் கொண்டான்.

“விமன்யாவ ஏன் தேவிடிச்சின்னு சொன்ன?” என்று அவன் குரலுக்கு வாய்க்கவே முடியாத கடுமையுடன் சொன்னான்.

“நான் சொல்லல” என்றேன். அவன் சிரித்தான்.

ஏதோ ஒரு உள்ளுணர்வில் திரும்பிப் பார்த்தேன். கடைசி இருக்கையில் விமன்யா அழுதபடி அமர்ந்திருந்தாள்.

“இப்ப என்னடா பண்ணனுங்கிற நீ” என்றேன் என்னுடைய வழக்கமான கடுமையுடன். பழகிய நாய் போல அவன் முகம் சுண்டியது. அது மேலும் தன்னம்பிக்கையை அளிக்கவே “அப்படி பேசினாத்தான் பதினஞ்சு வயசுலயே கண்ட நெனப்புலயும் அலையாம ஒழுங்கா படிப்பா. அதோட நான் தூக்கி வளத்த பொண்ணுடா அவ” எனச் சொல்லும் போது என் சொற்களின் நம்பிக்கை இன்மையை உணர்ந்து அவன் மீண்டும் சிரித்தான்.

“மரியாதையா இறங்கிப் போயிடு” என்றேன்.

ஒரு சிறிய ஊசியால் என் விரல் நுனியில் குத்தி ஒரு துளிக் குருதியை எடுத்தான். ஒரேயொரு முடியை மட்டும் லாவகமாக பிடுங்கினான். அச்செய்கை பால் புகட்டி விடுவது போல இருந்தது. பெருமூச்சுடன் எழுந்துகொண்டு மெலிதாக சிரித்தான்.

“இறங்கப் போறியா” என்றேன். அவ்வளவு கனிவுடன் அதை கேட்டிருக்கத் தேவையில்லை.

“ஆமா இதுக்குத்தான வந்தேன்” என்றேன்.

ஏதோ வருத்தம் நெஞ்சை அழுத்தவே “போகாதடா” என்றேன்.

படபடப்புடன் “ப்ளீஸ் டா பிரகாஷ் போகாத” என்றேன் மீண்டும்.

அவன் அமர்ந்தான்.

பிரகாஷ் மீண்டும் அந்தக் கதையை என்னிடம் சொன்னான். பலமுறை கேட்ட பலமுறை சொன்ன அதே கதை. அக்கதையை கேட்காமல் அதன் உச்சத்தில் திளைக்காமல் வதைபடாமல் அவனை என்னால் என்னிடமிருந்து பிரித்தனுப்ப முடிந்ததேயில்லை.

அந்தப் பழக்கம் நான்காம் வகுப்பு படிக்கும் போது ஏற்பட்டது. அப்பாவின் தலையில் இருக்கும் நரைமுடிகளை அம்மா அழகாகப் பிடுங்குவாள். “வெடுக்” என்ற சப்தத்துடன் அந்த முடிகள் பிடுங்கப்படுவது என்னுள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். அந்த முடி பிடுங்கப்பட்டதும் அப்பா அம்மாவைப் பார்த்து மெலிதாகச் சிரிப்பார். இவ்வளவு அழகாக என் அப்பாவால் சிரிக்க இயலுமா? உலகத்தில் எந்த மனிதராவது இவ்வளவு அழகாக சிரித்துவிட முடியுமா? அச்சிரிப்பை அம்மாவுக்காக மட்டுமே சேர்த்து வைத்திருந்தார் போல. ஒருமுறை கூட அவர் அப்படி என்னைப் பார்த்து அப்படி சிரித்ததில்லை. என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாத ஒரு கருணை மட்டுமே அவர் சிரிப்பில் இருக்கும். அது என்னை துன்புறுத்தும்.

அப்பா அம்மாவையோ என்னையோ அடித்ததில்லை. மிக நிதானமாகப் பேசுவார். தூய கண்ணாடியின் கூர்மை கொண்ட பேச்சு. லாவகமாக வயிற்றுக்குள் இறக்கி உள்ளுறுப்புகளை அறுத்து ரத்தம் கொப்பளிக்க வைக்கும் பேச்சு. அவரின் நிதானமான பேச்சினை அழாமல் கேட்பது அம்மாவுக்கு மற்றொரு பாடு. ஒருவேளை அழுதுவிட்டால் அவர் தன்னையே துன்புறுத்திக் கொள்ளத் தொடங்குவார். அதனால் அம்மா அவரின் கண்ணாடிப் பேச்சுகளை நெஞ்சில் பொங்கும் அழுகையையும் ஆற்றாமையையும் பற்களில் தேக்கி உதட்டை கடித்தபடி கேட்டு நிற்பாள். அவள் திரும்பி நடக்கும் நேரங்களில் கண்ணீரோடு சில துளிகள் குருதியும் சிந்தும்.

நெற்றிப் பொட்டு போன்ற சத்து மாத்திரை கொடுப்பதெற்கென அரை நாள் பள்ளி வைக்கும் போது மருத்துவமனை அழைத்துச் செல்வார்கள். அரை கிலோமீட்டர் தாண்டி இருக்கும் மருத்துவமனைக்கு பின் கை கட்டியபடி வரிசையாகச் செல்வோம். சில நாட்களில் வலது கை ஆட்காட்டி விரலின் நுனியைப் பிடித்து ஊசியால ஒரு குத்து குத்தி ஒரு துளி ரத்தம் எடுப்பார்கள். அதனை ஒரு சிறிய செவ்வக வடிவ கண்ணாடி சில்லில் தேய்ப்பார்கள். குத்தும் போதிருந்ததை விட அந்த கண்ணாடி கையில் படும் போது உடல் கூசும்படியாக வலிக்கும். வரிசை முடியும் வரை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிச் சில்லுகளையே பார்த்து நிற்பேன். வரிசையாக அடுக்கப்பட்ட பொருட்களின் மீது ஒரு மோகம் உருவாகத் தொடங்கியிருந்தது அப்போது. அம்மா மௌனித்துப் போய்விடும் நாட்களில் என் உலகம் ஓடாமல் நின்று போய்விடும். அது போன்ற நாட்களில் பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட தீப்பெட்டிகள் அப்பாவின் பிளேடு பாக்கெட்டுகள் கொட்டாங்குச்சிகள் அம்மாவின் உடைந்த கண்ணாடி வளையல்கள் என அனைத்தையும் அடுக்கியபடியே இருப்பேன். அது என் ரகசியப் பொழுது போக்கு. யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனத்துடன் இருப்பேன். அதோடு புளியங்காயை லேசாக வாயில் வைத்தால் வாய் நிறைய உமிழ்நீர் சுரந்து விடும். அதனை நூறு மிடறாக துளித்துளியாய் அருந்துவேன். இதுவும் பிறருக்குத் தெரியாது.

வரிசையாக அடுக்கப்பட்ட ரத்தம் தோய்ந்த கண்ணாடிச் சில்லுகளை பார்த்த போது மற்ற அனைத்தும் அற்பமாகத் தெரிந்தது.

“இதெல்லாம் என்னக்கா பண்ணுவீங்க” என்று ஊசியால் குத்தும் பெண்ணிடம் கேட்டேன்.

என்னை குறும்புடன் கூர்ந்து நோக்கியவள் “இந்த கிளாஸ் எல்லாத்தையும் வெந்நீர்ல போட்டா ரத்தம் எல்லாம் தண்ணிக்கு போயிடும். அதோட காபி பவுடர் கலந்து குடிப்போம்” என்றாள். எனக்கு வாயில் அந்த நீரை வைத்துக் கொண்டு மிடறு மிடறாக அருந்த வேண்டும் போலிருந்தது. தியாகராஜனிடம் அதைச் சொன்ன மறுநாள் முதல் என்னிடம் அவன் பேசுவதை நிறுத்தி விட்டான்.

ஆனால் என்னால் தான் முடியவில்லை. நான் முதலில் எடுத்ததே அவன் விரல் குருதியைத் தான். மறுமுறை மருத்துவமனைச் சென்ற போது குருதியற்ற கண்ணாடிச் சில்லுகள் கொண்ட பெட்டியை எடுத்து விட்டேன். ஒவ்வொரு ரூபாயாக சேர்ப்பது போல ஒவ்வொரு துளி குருதியாக எடுத்தேன். பெரும்பாலும் நண்பர்கள் தனிமையில் இருக்கும் போது தான் எடுப்பேன். ஒருவன் விரலில் எடுப்பதை மற்றவன் அறிந்துவிடாதபடி பார்த்துக் கொள்வேன். சில சமயம் எதேச்சையாக சில சமயம் மிரட்டி சில சமயம் பயமுறுத்தி என எப்படியெல்லாமோ குருதிச்சில்லுகளை சேகரித்தேன். என் காக்கி கால்சட்டையின் டிக்கெட் பாக்கெட்டில் இரண்டு சில்லுகள் எப்போதும் இருக்கும்.

யார் விரலில் என்றைக்கு எடுத்தேன் என்பதை ஒரு தனி நோட்டில் குறித்து வைத்துக் கொள்வேன். அந்த நோட்டையும் கண்ணாடிச் சில்லுகளின் பெட்டியையும் ஒரு பாலிதீன் பையில் போட்டு ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்தேன். குருதி எடுப்பதை விட முடி பிடுங்குவது எளிது. அதற்கும் தனி நோட்டு. முடிகளை முதலில் கோணி ஊசிகளில் கட்டி வைத்திருந்தேன். பின்னர் மெல்ல மெல்ல அந்த பழக்கம் குறைந்தது. முடிகளை நோட்டுப் புத்தகத்தில் வைத்து அது யாருடைய முடி என்று என்பதை குறித்து வைப்பேன். அப்படி குறித்த போது தான் கண்ணாடிச் சில்லுகளின் நினைவெழுந்தது. அதில் குறித்து வைக்கவில்லை என்றபோது திக்கென்றிருந்தது. பின்னர் ரத்தக் குறிப்புகள் எடுக்கப்பட்டிருந்த நோட்டைப் புரட்டி அடுக்கி வைத்திருந்த வரிசையையும் நோட்டில் குறித்திருந்த சீரியல் நம்பரையும் ஒப்பிட்டு நுனி விரலால் தொட்டெடுக்கக்கூடிய சிறிய காகித நறுக்கில் சீரியல் நம்பர் போட்டு ஒட்டி வைத்தேன். மிகத்தீவிரமாக ஒரு செயலில் நான் ஈடுபாடு கொண்டிருந்ததாக அது என்னை நம்ப வைத்தது. அதைத்தவிர அனைத்துமே அவசியம்றறது என எண்ணத்தலைப்பட்டேன். அம்மாவின் கடித்த உதடுகளும் அப்பாவின் கண்ணாடிப் பேச்சுகளும் எனக்கு பொருட்டல்ல என்றாயின.

கல்லூரி இறுதி ஆண்டுகளில் வீட்டிற்கு வரும் போது கண்ணாடிச் சில்லுகளின் வரிசை எண்ணைப் பார்த்து அது என்று எடுக்கப்பட்டது என்பதை நினைவு மீட்டுவதும் ஒரு இஞ்சில் இருந்து இரண்டு அடி வரை உள்ள மயிரிழைகள் யார் தலையில் இருந்து என்று எடுக்கப்பட்டன என எண்ணிக் கொள்வதும் என் தனிமையைப் போக்கும் முக்கிய பொழுது போக்குகள். வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் அந்தச் சில்லுகளை கண்களை மூடியபடி வருடுவேன். முடிகளின் மென்மையை விரல்களில் உணரும் போது உடல் சிலிர்க்கும்.

அதன்பிறகு நானே அறியாமல் நான் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தேன். முதலில் நான் செத்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியவில்லை. அதன்பிறகே என் கனவுகளில் அவனை காணத் தொடங்கினேன். என் கனவில் வருபவனை எல்லோரும் விரும்பினர். அவன் யார் என அறிவதற்காக நான் வெகு நேரம் உறங்கினேன். வெகுநாட்கள் உறங்கினேன். உறங்கி எழுந்த போது நான் முழுமையாக இறந்து விட்டிருந்தேன். கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும் எங்கோ புதையத் தொடங்கின. மீண்டும் அம்மாவின் கடித்த உதடுகள் கண்ணில் படத் தொடங்கியது.

பிரகாஷ் சொல்லிக் கொண்டிருந்த போதே அவன் முகத்தில் அச்சமூட்டும் வெறுப்பு படர்ந்தது.

“ஒம்மால நீ தாண்ட என்னக் கொன்ன” என விபரீதமான குரலில் கத்தினான்.

எனக்கு தொண்டை அடைத்தது. விமன்யா இளித்தபடி எழுந்து சென்றாள்.

“இல்ல எனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது” என்றபோது எனக்கு அழுகை வந்துவிட்டது.

“உனக்கு ஒன்னும் தான் தெரியாதே. உங்கிட்ட எவ்வளவு சொன்னேன். என் கண்ணாடிகள உடைக்காத உடைக்காதன்னு. தேவடிப்பயலே கேட்டியாடா நீ. போட்டு ஒடச்சேல்ல. நீ ஒடச்ச பிறகும் எவ்வளவு கெஞ்சு கெஞ்சினே உன்னைய. அத அப்படியே கரச்சாவது என்ன குடிக்க வுட்றான்னு. வுட்டியாடா வுட்டியாடா என்னைய நீ” என்றபோது அவன் முகத்தில் அச்சமூட்டக்கூடிய உக்கிரம் படர்ந்தது.

நான் அவனைத் தடுத்ததாக நினைவில்லை.

“தட்டி விடலேன்னா நீ செத்துருப்படா நாயே” என்றதும் சட்டென ஒரு ஆவேசம் எழுந்தவனாய் “நா உன்னோட மீட்பன்” என்றேன்.

“தூ ஒலுக்க குடுக்கி. நான் ஏன்டா சாவுறேன். எனக்கு சாவே கிடையாது. நீ செத்துருப்படா. அன்னிக்கு நீ செத்துருப்ப” என்றான்.

கை கால்கள் எல்லாம் படபடத்து நடுங்கத் தொடங்கின. அவனை அடித்துக் கொல்ல வேண்டும் போலிருந்தது.

“இப்பனாச்சும் ஒத்துக்கடா. இப்பனாச்சும் ஒத்துக்கடா” எனக் கெஞ்சத் தொடங்கினான். புண்ணைக் கிண்டியது போல ஒரு வெறி ஏற்படுத்தும் நமைச்சல் உடல் முழுக்கப் பரவியது எனக்கு.

“எத ஒத்துக்கணும்” என்றேன்.

மண்டையே தெறித்து விடுவது போல “அய்யோ அய்யோ அய்யோ என்னக் கொல்லுடா. என்னால முடியாதுடா என்னால முடியலடா. நான் என்னடா பாவம் பண்ணினேன் உனக்கு. அல்லாத்தையும் உட்டுத் தொலச்சுட்டு போகத் தான்டா உன்ன கேக்கிறேன்” என தலையில் அடித்துக் கொண்டு அலறினான்.

என்னுள் மேலும் மகிழ்ச்சி பரவியது. மகிழ்ச்சியாக மட்டுமே இதனை எனக்கு நான் சொல்லிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவன் வென்று விடுவான். அவன் என்னை வென்றால் நீங்கள் என்னை மதிக்க மாட்டீர்கள்.

“நீ போகலாம்” என்றேன். பேருந்து உச்ச விரைவில் சென்று கொண்டிருந்தது. கூரையை பிய்த்துக் கொண்டு பேருந்தின் மேலேறினான். தலைகுப்புறக் குதித்தான். அவன் மண்டை சிதறுவதைக் கண்டேன்.

பேருந்தில் இருந்து இறங்கியதும் அலைபேசியை எடுத்தேன்.

“கீரி அந்த கதைய கண்டினியூ பண்ணலாமா?” என்றேன். சொல்லச் சொல்ல எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் அது கதை தான். கதை மட்டும் தான்.