செல்வசங்கரன்

சாலை- இரண்டு குறிப்புகள்

செல்வசங்கரன்

 

குறிப்பு ஒன்று – சாலையென்றால் ஓடும்

எனக்கு காரோட்டத் தெரியாதுதான்
ஏறிக்கொள்ளுங்கள் சாலையை ஓடச் சொல்கிறேன் என்றால்
ஒருவரும் நம்பவில்லை
ஓடுகிறேன் என்பதை சாலையையே சொல்ல வைத்தேன் அது தனிக்கதை
எல்லாரும் காருக்குள் ஏறினோம்
நான் ஸ்டீரிங்கைப் பிடித்து போஸ் கொடுத்தேன்
கீழே பார்த்தால் தலை தெறிக்கிற மாதிரி சாலை ஓட ஆரம்பித்தது
நடந்து சென்ற ஒருவர் காரை முந்தினார்
எங்கள் மூளையின் பிசுபிசுப்பை இளையராஜா தொட்டுப் பார்த்த போது
ஒரு நிமிடம் இளையராஜா என அவரிடம் கேட்டு
சாலை சோர்வடைந்தால் இறங்கி யாராவது சாலையை
தள்ளவேண்டியது வரும் என்றேன்
இதை முதலிலேயே சொல்லவில்லை என்று சண்டை செய்தார்கள்
நானே ஓடிக்கொள்கிறேனென்று
வழியில் நெல்மணியை கொத்திக் கொண்டிருந்த மைனாவை
சூவென பத்திவிட்டது சாலை
சாவகாசமாக தலையை திருப்பி மைனா சாலையை தூர விரட்டியது
யாருடைய ஸ்டாப்பும் வரவில்லை
தூங்கி எழுந்த போது சாலை ஒரே வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது
ஏறிய இடம் வந்துவிட்டது இறங்குங்கள் இறங்குங்களென
அவசரப்படுத்தியதும்
ஓடிக்கொண்டிருக்கும் சாலையில் கவனமாக காலை வைத்து
கீழே ஒவ்வொருவராக இறங்கினோம்

 

குறிப்பு இரண்டு – தன்னு மொட்டை

சொகுசு வேனிலிருந்த ஒன்றரை வயதுக் குழந்தை தன்யாவை
எல்லாரும் கொஞ்சினர்
வண்டி போகயில் ஓட்டுநர் எழுந்து வந்து குழந்தையைத் தூக்கி
மடியில் வைத்துக் கொண்டார்
இன்னொருவர் ஓட்டுநர் அருகே வந்து ஸ்டீரிங் இடிக்காதவாறு
ஓட்டுநரைத் தூக்கி மடியில் வைத்தார்
இன்னொருவர் அவர்களைத் தூக்கி மடியில் வைக்க
இப்படித் தூக்கி வைத்துக் கொண்டே அடுக்கியவாறு சென்றனர்
வண்டி எப்போதும் வென்றானைக் கடந்ததும்
ஓட்டுநர் சும்மா இராமல் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி தன்னுமா
என்று தனது வாயில் ஒன்று வைக்க அவ்வளவு தான்
ஓட்டுநரை மடியில் வைத்திருந்தவர் ஓட்டுநர் வாயிலிருந்து எடுத்து
ஒன்று இட்டுக் கொண்டார்
மாற்றி மாற்றி வாயில் இட்டுக் கொண்டே போயினர்
ஒரே நேரத்தில் அந்தக் குழந்தை
இருபத்து மூன்று பேர்கள் மடியில் இருந்தது
அவர்கள் கிடக்கிறார்கள் நான் கிச்சு கிச்சு மூட்டுகிறேனென
தூத்துக்குடி சாலையில்
தன்னைத் தானே ஓட்டிச் சாகசம் காட்டியது அந்த வண்டி
தனக்காக எல்லாரும் இவ்வளவு மெனக்கெடுகிறார்களென்று
மயிர்கள் குத்திட்டு நின்ற தன்னு
சுனைக்கோயில் வந்ததும் இறங்கி முதல் வேலையாக
சவரக்காரரிடமிருந்த கத்தியை தானே வாங்கி
அதன் பளபளப்பின் முன்னால் தன் மண்டையைக் காட்டி
உடலையே நன்றாக நாலாப் பக்கமும் சுழற்றி வர
மொட்டை நிகழ்வு அன்றைக்குச் சிறப்பாக நடந்தேறியது
மொட்டையின் போது உங்கள் எல்லாருக்குமாகத் தான்
ஒரு சொட்டு கூட கண்ணீர் சிந்தவில்லையென்று தன்னு சொல்ல
அத்தனை பேரும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்

ஆதவன் இறந்துவிட்டார்* – செல்வசங்கரன் கவிதை

211 ஆம் பக்கத்தை விரித்ததும் இருந்தது ‘நிழல்கள்’ கதை
இரண்டு மூன்று வரிகளைக் கடக்கும் போதே
ஹாஸ்டலின் பெரிய இரும்புக் கிராதிகளாலான கேட் தெரிய ஆரம்பித்தது
அவளை ஹாஸ்டலில் விட்டு அவன் இருப்பிடத்திற்குத் திரும்பவேண்டும்
கேட்டின் முன்பு அவனும் அவளும் உரையாடியபடியிருந்தனர்
திரும்பிச் செல்ல அவனுக்கு மனமில்லை
காதலியைப் பிரிய யாருக்குத் தான் மனம் வரும்
அன்று அவளோடு செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக
அவன் பூடகமாகப் பேசுவதையும்
வார்த்தையிலேயே அவள் நழுவி நழுவி ஓடுவதையும்
அந்த இரவு நேரத்தில் ஹாஸ்டல் முன்பு நின்று கவனிக்க
யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் என் நெஞ்சைக் கவ்வியது
இதைப் போய் ஏன் பார்க்கிறேன் என்ற அடுத்த கணத்தில்
மாடிப்படியின் திருப்பத்தில் ஒரு வாகான இடத்தில் அமர்ந்து
கதையை வாசிப்பதை நிஜமென உணர முடிந்த அந்த சமயம்
வெறும் செக்ஸுக்காக மட்டும் கெஞ்சவில்லை புரிந்துகொள் என்று
அவன் அவளிடம் மன்றாடிக் கொண்டிருந்தான்
கதையை வாசிக்கும் என்னையும் புத்தகத்தையும்
அங்கிருந்து எழுந்திருக்காமலே
வெளியே வந்து இடையிடையே ஒருமுறை நான் பார்த்துக் கொள்ள
கதை உச்சத்தை நெருங்கியிருந்தது
உன்னிடமிருந்து வேண்டுவது அதுவல்ல
எனக்கு வேண்டியது நீ பூரணமான திரைகளற்ற நீ முழுமையான நீ
அது மட்டுந்தான் புரிகிறதா என அவன் அவளிடம் கூறியதும்
யாரோ என்னை எங்கோ தூக்கி எறிந்தது போலிருந்தது
ஆமாம் அதை அவன் கூறவில்லை சாட்சாத் ஆதவனே கூறியிருக்கிறார்
அவர் முன்னால் கை கட்டி வாய் பொத்தி மண்டியிட்டு
இன்னும் சொல்லிவிட மாட்டாராயென
அந்த இரவு நேரத்தில் ஹாஸ்டல் முன்பு ஒரு ஓரமாகக் கிடந்தேன்
இன்னும் அந்த ஹாஸ்டல் வளாகத்தில் தான் சுற்றிக்கொண்டிருக்கிறேன்
ஆதவன் தான் எதுவுமே பேசமாட்டேனென்கிறார்

 

*ஜூலை 19,1987

வெறும் சொல் – செல்வசங்கரன் கவிதை

கீழே என்பதற்கு இருக்கும் ஸ்திரத்தன்மை மேலேக்குக் கிடையாது
கீழே என்பதைப் போட்டால் அப்படியே கீழேயே கிடக்கும்
மேலே ஒரு கிளர்ச்சியான சொல்
அதனால் தான் பரந்து விரிந்த மணற்பரப்பை வியந்து பார்த்துக்
கிளம்புகிற சமயத்தில் என்ன செய்கிறது பார்ப்போமென
மேலே என்பதை அதற்கு மேலே வைத்து விட்டு வந்தேன்
மேலே என்றவுடன் கடற்கரை அந்தச் சொல்லுக்குக்
கீழே போய்க் கொண்டது
கால்களால் மணலை அளைந்தவாறு நடக்கும் போது
அவ்வளவு பெரிய மணற்பரப்பு ஒரு சின்ன சொல்லுக்குக் கீழேயிருந்தது
வினோதமாய் இருந்தது
அத்தனை பெரிய மணல் வெளியை இயல்பிற்கு கொண்டுவர எண்ணி
மேலேயை திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென முயலுகையில்
அருகே ஒரு எச்சரிக்கை பலகை கீழிருந்து மேல் நோக்கி முளைத்திருந்தது
அதை விட மேலே போலீஸார் அமருகின்ற கண்காணிப்பு கோபுரம்
நீண்டிருந்தது
அதையும் விட மேலே சிவப்பு கலரில் ஒரு பலூன் மிதந்தது
அதற்கும் மேலே பறவைக் கூட்டமொன்று வலசை போனது
கடலின் பிரமாண்டம் படுக்கை வசத்தில் இருந்தபடியால் அப்பொழுது
கீழேக்கு மேலே எளிதாக வைத்துவிட்டேன்
இது அது மாதிரி இல்லை
மேலேயென்று எழுதுவது போல இட வலமாக கூட்டிப் போகுமென்றால்
ஏமாந்துவிடுவோம்
மேலே மேலேயென அடுக்கி அப்படியே மேலேயே கூட்டிப் போகிறது
வெறும் சொற்களால் தான் கட்டுவது ஆனாலும்
கட்ட கட்ட அந்தரத்தில் குத்து வசமாக எழும்புவதென்னவோ
ஒரு பேனிக் வே

பின்னால் கூடி வருதல் – செல்வசங்கரன் கவிதை

பின்னால் திரும்பி நடந்து வந்தவனை நிறுத்தி
ஆச்சர்யத்துடன் ஒருவன் கேட்ட பொழுது
வெகு காலத்திற்குத் தலையின் முன்பக்கத்தையே காட்டிப் பழகிவிட்டதால்
தனது பின் பக்கத் தலையை எல்லாருக்கும் பழக்குவதற்காக
இவ்வாறு செய்வதாகக் கூறினான்
உடனடியாக ஆச்சர்யத்தை அங்கிருந்து லேசாக நகர்த்தியபடியே
இனி மரங்களையெல்லாம் தலைகீழாகத் திருப்ப வேண்டியதிருக்கும்
சட்டையை திருப்பிப் போட்டு அலைய வேண்டியதிருக்கும்
பைக்கைத் திடீரென நிறுத்தி எல்லாவற்றையும்
கழட்டி எறிய வேண்டியதிருக்கும்
எந்நேரமும் எதையாவது பிடித்து இழுக்க வேண்டியதிருக்கும்
வாய்க்குள்ளேயும் கையை விட்டு நோண்டி
ஒன்று ஒன்றாகப் பிய்க்க வேண்டியிருக்கும் பரவாயில்லையாயென
வெறும் சொன்னதற்காகப் போய்
பார்த்தவன் இவ்வளவு பறக்கிறான்
நான் இன்னும் நடந்துகொண்டிருக்கிறேனென
பின்னால் திரும்பியவன் பாவம் மிகவும் வருத்தப்பட்டு
பின்னால் கூடி வந்துகொண்டிருந்தான்

ஒலிக் குறிப்போடு இன்னொன்றையும் தூக்கிப் பறந்த பறவை -செல்வசங்கரன் கவிதை

செல்வசங்கரன்

 

அதைப் பற்றி உங்களிடம் சொல்லவில்லையே
குட்டியூண்டு சைஸ் ரொம்பக் குட்டி
கண்ணாடிச் சன்னலுக்கு வெளியே க்ரில்லில் அமர்ந்தபடி
எப்பொழுதும் கண்ணாடியைக் கொத்தியபடியேயிருக்கும்
வருகின்ற நேரம்தான் வந்துவிடும் இப்பொழுது பார்த்துவிடலாம்
கொஞ்சம் பொறுங்கள் வந்துவிட்டதென நினைக்கிறேன்
ஆம் ஆம் வந்துவிட்டது பிறகு பேசலாம்
எப்பொழுதும் போல தன் குட்டி அலகை வைத்து
தட்தட்தட்தட் தட்தட்தட்தட் என கொத்த ஆரம்பித்தது
பிறகு பேசலாமென சொன்னது இதைப் பற்றிதான்
மறந்த நிலையிலாக ஒருவேளை ஏற்கனவே சொல்லியிருந்தால்
அதுவும் இதுதான்
இப்பொழுது சொல்லிக்கொண்டிருப்பதும் கூட இதுதான்
அதோ அலகை மட்டும் தானே முன்னால் கூப்பி பறந்துகொண்டிருக்கிறது
நீங்கள் சொல்லுகிற எதுவும் அலகில் இல்லையென சொல்கிறீர்களே
அதுவுமே இது தான்
இப்பொழுது இதையுமே தூக்கிப் பறந்து கொண்டிருக்கிறது
வாருங்கள் வந்து பார்த்தால் தெரியும் அது