ஜீவானந்தம்

வெயிலும் நீர்ப்பாம்புகளும், மரணத்தை ஸ்பரிசித்தல் – ஆ. ஜீவானந்தம் கவிதைகள்

ஆ. ஜீவானந்தம்

வெயிலும் நீர்ப்பாம்புகளும்

தெளிவாய் ஓடினாள் தென்பெண்ணை
நான் யார் என்று கேள், என்று சொன்னார்கள்
அவ்வாறே ஐயா…

மாலை நீர் இதமாயிருந்தது
நான் யாரென்று கேட்பது யாரென்று கேளெனச் சொன்னார்கள்
ஆம் சுவாமி……

நீர் மடியில் தலை சாய்த்திருந்தேன்…
நான் யாரென்று கேட்பவர் யாரென்பதைப் பார்ப்பவர்
யாரென்று பார், என்று சொன்னார்கள்….
அப்படியே குருவே….

மூச்சுத் திணறி வெண்மணலில் விழுந்தேன்…
என்னில் பாதியை நானே விழுங்கியிருப்பதை
வெயிலிடம் சொல்லி சிரிக்கின்றன நீர்ப்பாம்புகள்.

oOo

மரணத்தை ஸ்பரிசித்தல்

இறந்தகாலத்தை மிதி
மிதிக்க மிதிக்க அது நழுவுகிறதே

எதிர்காலத்தைத் துப்பு
ஐயோ அது முன்னரே குடலோரங்களில் உறிஞ்சப்பட்டுவிட்டதே

இப்பொழுதை உணர்…
உணர்கிறேன்… உணர்கிறேன்…..

இப்பொழுதின் சக்தியை ஏந்து
ஏந்துகிறேன்… ஏந்துகிறேன்…

இப்பொழுதின் வெம்மையில் உறைந்திரு…
இருக்கிறேன்… இருக்கிறேன்…

சரி, சொல், இப்பொழுது எப்படி இருக்கிறது
அது இறந்தகாலத்தின் இனிமையாகவும்
எதிர்காலத்தின் பயமாகவும் உள்ளது…

தப்பாகச் சொல்கிறாய், மீண்டும் சொல்…
அது சுட்ட தீயாகவும் குத்தப்போகும் முள்ளாகவும் உள்ளது….

இல்லையில்லை, மீண்டும் சொல்…
அது புணர்ச்சியாகவும் பிரசவமாகவும் உள்ளது

தோல்வியுற்றாய், போய் வா…
அது என் அழுகையாகவும் உங்கள் புன்னகையாகவும் உள்ளது.

மௌனமாய் மூடப்பட்ட கதவுகளுக்கு முன் நின்று நான் கதறினேன்
ஐயா, அது என் மரணமாக உள்ளது.

வண்ணத்து பூச்சிகளின் கோயில்- ஆ. ஜீவானந்தம்

(சிறுகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)

கிழிசல் இல்லாத ரவிக்கையை அம்மா தேடிக்கொண்டிருந்தாள். அவசரமும் பதைபதைப்பும் கூடிய அவளது உடலசைவுகள் வினோதமாகத் தெரிந்தன. இப்போதே நேரம் ஆகிவிட்டது. இதுவரை பஸ் வரும் சப்தம் ஏதும் கேட்காமல் இருப்பதே ஆச்சரியம். ஈச்சம்பாறையின் மேலேறி நின்றுக்கொண்டு தூரத்தில் தெரியும் தார்ரோட்டில் பஸ் ஏதும் வருகிறதா எனப் பார்த்தேன். நல்லவேளை. வளைவுகளில் நெளிந்து, மின்னி ஓடும் ஒரு கருநதியாய் தார் ரோடு வெறுமையாகக் கிடந்தது. ஆனால் எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இளம் பசுமையான வெற்றிலைக் கொடிகள் அகத்தி மரத்தில் படர்ந்திருக்கும் தோப்புகளின் ஊடாக கடந்து வரும் ஹாரன் சப்தம் கேட்டுவிடக்கூடும். அதற்குள் கிளம்பிக்கூட் ரோட்டை அடைந்துவிட்டால் பிடித்துவிடலாம் பஸ்ஸை.

கடவுளே! கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…

சாயங்காலம் மாட்டுக்கொட்டாய்க்கு ‘புளஸ்தண்ணி’ வைக்கப் போன பாட்டி திடீரென கத்தி கூப்பாடு போட்டாள். புளியங்கொட்டை மாவில் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்த அம்மா பதைபதைப்புடன் கொட்டாயை நோக்கி ஓடினாள். தும்பைப் பூக்களை வாயில் வைத்து தேன் உறிஞ்சியபடியே அம்மாவுக்கு பின்னால் நானும் ஓடினேன். கருப்பி அசை போடவில்லை. அவள் உடம்புக்கு என்னமோ ஆகியிருந்தது. அழகான கொம்புகளுடன் கூடிய அம்முகத்தின் வசீகரம் காணாமல் போயிருந்தது. அசை போடாத நிச்சலனத்துடன் தரை வெறித்திருந்த அதன் பார்வையில் பீதியும் வெறுமையும் சேர்ந்த கலவையின் மின்னல்கள் பளிச்சிட்டன. நான் அருகில் சென்று அவள் கழுத்தை கைகளால் வளைத்து கருப்பியின் முகத்தை என்னை நோக்கித் திருப்பினேன். அதன் கழுத்தில் இருந்த தொன்னச்சி பூச்சிகளையும் உண்ணிகளையும் பிடுங்கி நசுக்கி போட்டேன். அளவற்ற வாஞ்சையுடன் கருப்பியின் கழுத்தில் என் முகத்தை பதித்துக்கொண்டு கைகளால் தடவிக்கொடுத்தேன். வழக்கமாக நான் இப்படி செய்தவுடன் கருப்பி உற்சாகமாக தலையை ஆட்டுவாள். கொம்பைத் தாழ்த்திக் கொண்டு தடவிக் கொடுப்பதற்கு வாட்டமாக தலையைக் காட்டுவாள். ’பேசற அறிவு ஒண்ணுதான் இல்ல, மத்த எல்லாம் இருக்கு’ என அம்மா செல்லமாக திட்டுவாள். ஆனால் அன்றைக்கு கருப்பியிடம் எந்த அசைவும் இருக்கவில்லை. என் கருப்பி வழக்கம் போல தலையை ஆட்டவில்லை. தடவிக் கொடுப்பதற்காக முகத்தை காண்பிக்கவில்லை… உனக்கு என்ன ஆகிவிட்டது கருப்பியே… ஏன் இப்படி இருக்கிறாய்… நீ இப்படியே இருந்தால் சூடு கொட்டைகளை கொண்டு வந்து பாறையில் தேய்த்து சூடு வைத்துவிடுவேன்…

“அத தொந்தரவு பண்ணாத… எழுந்து தூர வாடா” என்றாள் அம்மா. நான் துக்கத்துடன் எழுந்து வந்து அம்மாவுக்கருகில் நின்று கொண்டேன். இதற்குள் விஷயம் தெரிந்து பக்கத்து தோப்பிலிருந்து கிருஷ்ணா பாட்டி வந்தாள். “ஒண்ணும் பயப்படாத கண்ணு… ஜீரண கோளாறாத்தான் இருக்கும்… வெத்தலயில பெருங்காயத்த வெச்சி ஊட்டக் கொடுத்தா சரியாப் போயிடும்…’ என்றாள்

வேடி மாமாவும் செல்வமும் பெருங்காயத்தை வெற்றிலைக்குள் மடித்து வைத்து கருப்பிக்கு ஊட்டினார்கள். வேடி மூக்கணாங்கயிற்றை இழுத்துப் பிடித்துக் கொள்ள செல்வம் கருப்பியின் வாயை வலியத் திறந்து பிடித்துக்கொண்டு உள்ளே வெற்றிலை மூடிய பெருங்காயத்தை திணித்தார். நடப்பது புரியாமல் மிரண்டு திமிறிய கருப்பியைப் பார்க்க பார்க்க எனக்கு அழுகை கிளறிக் கொண்டு வந்தது.

“அர மணி நேரம் பாருங்க… அதுக்கப்புறமும் அச திரும்பலன்னா வைத்தியனதான் போய் கூட்டி வரணும்…” என்று சொல்லிவிட்டு வேடி மாமா போய்விட்டார்.

காற்றடிக்கையிலெல்லாம் உதிர்ந்தபடியே இருந்த புளியம்பூக்களை வாயில் போட்டு மென்று மென்று துப்பியபடியே நான் கருப்பியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அரைமணி நேரத்திற்கு மேலாகியும் கருப்பி அசையே போடவில்லை. லேசாக கருப்பியின் வாயில் இருந்து ஜொள் ஒழுகத் தொடங்கியது. உடனே பதறியடித்துக் கொண்டு ராமசாமியைக் கூட்டி வருவதற்காக அம்மா கிளம்பினாள். கூடவே நானும் கிளம்பினேன்.

ராமசாமி எங்கள் பக்கத்தின் ஒரே நாட்டு வைத்தியன். மாடுகளின் நோய்களுக்கும் எலும்பு முறிவிற்கும் வைத்தியம் செய்வதுதான் அவன் தொழிலாக இருந்தது. மனிதர்களுக்கென வரும் சில ரகசிய நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதில் அவன் தேர்ந்தவனென பிற்பாடு அறிந்தேன்.

ராமசாமியை தேடி நானும் அம்மாவும் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஊருக்கு வெளியே அடர்ந்த தென்னந்தோப்புகளில் ஆங்காங்கே தென்படும் ஒற்றை வீடுகளில் ஒன்றுதான் எங்களுடையது. எங்கள் வீட்டைச் சுற்றிலும் கூப்பிடு தூரங்களில் நாலைந்து குடிசைகள் மட்டுமே இருந்தன. எங்கள் வீட்டிலிருந்து அடிக்கடி ஊருக்குள் போய் வருபவனாக நான் இருக்கவில்லை. ஊருக்குள் போய் எனது பள்ளி நண்பர்களுடன் விளையாடுவது என்பது எனக்கொரு பெரிய பிரச்சினையாகவே இருந்து வந்தது. வழி நடுவில் ‘ஒம்போது புளியமரம்’ என்றொரு இடம் இருப்பதே காரணம். அருகருகே எழும்பிய ஒன்பது புளிய மரங்கள் தம் நீண்டர்ந்த கிளைகளுடன் அங்கே வியாபித்திருந்தன. பல பேய்களும் ஒரு முனியும் அங்கு உலவுவதாக கதைகள் சொல்லப்பட்டன. ஒருவித மயான அமைதியுடனும், விவரிக்க முடியாத இருளின் கதிர்களுடனும் அந்த இடம் காணப்பட்டது. செழித்த நிழற்குளுமை பூத்துக்கிடக்கும் அந்த இடத்தை கடந்து போகும் போதெல்லாம் திகில் கொடிகள் உடம்பைச் சுற்றத்தொடங்க பயக்குமிழிகள் பூத்து உதிரும். அந்த இடம் வந்தவுடன் நான் அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன்.

அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு அந்த இடத்தைக் கடக்கும்போது எனக்கு பயமே தெரிவதில்லை. அம்மாவின் அருகாமை என்பது சகல அச்சங்களையும் எரித்துவிடக்கூடியதாக இருக்கிறது. சொரசொரப்பான அவள் உள்ளங்கையிலிருந்து உணர நேர்கிற கதகதப்பு சொல்லமுடியாத பல விஷயங்களினால் ஆனது. எத்தனையோ ஆண்டுகள் கழிந்து போயினும் இன்னும் இதமூட்டுவதாய் அம்மாவின் அந்த ஸ்பரிசமே எஞ்சி, அணையாது மனத்திரியில் நின்றொளிரும் அருட்சுடராக வாழ்வெளி எங்கும் பிரகாசிக்கிறது.

நாங்கள் ஊருக்குள் போன போது ராமசாமி வீட்டில் இல்லை. ஏதாவது சாராயக் கடையில் இருப்பானென்று யாரோ சொன்னார்கள். அருகருகே இருந்த இரண்டு சாராயக்கடைகளிலும் அவன் இல்லை. மூன்றாவது கடை கொஞ்சம் தொலைவில் இருந்தது. ஓடிச்சென்று விசாரித்ததில் அங்கேயும் அவன் இல்லையென்று சொன்னார்கள். அப்போதுதான் குடித்து முடித்திருந்த மூர்த்தி குழறியபடியே சொன்னான், ”அடடா அச போடலன்னா கஷ்டமாச்சே… இப்பத்தான் ராமசாமி இந்த ஓணில போனான். சுருக்கா நடந்தா புடிச்சிறலாம்…”

பதற்றத்தையும் அவசரத்தையும் வரித்த பாதங்களூடன் நானும் அம்மாவும் இருள் அடர்ந்திருந்த அந்த ஓணி வழியில் நடந்தோம். வழியின் இரு பக்கத்திலும் அடர்ந்திருந்த பனைமரங்களில் இருந்து கள் வாசம் சிந்திக்கொண்டிருந்தது. எனக்கு மிகப்பிடித்தமான வெல்வெட் பூச்சிகள் உறங்கிக் கொண்டிருக்கும் நிலக்கடலை வயலிருந்து சிள்வண்டுகள் ரீங்கரித்தன. சற்று தொலைவில் தள்ளாடியபடியே யாரோ நடப்பது நிழலைசைவாகத் தெரிந்தது. நல்லவேளை. ராமசாமிதான், இனிக் கவலையில்லை. எப்படிப்பட்ட நோயையும் குணப்படுத்தி விடுவதில் ராமசாமி தேர்ந்தவன்.

அவனிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்து வந்தோம். தள்ளாடியபடியே நடந்தான். எவ்வளவு போதையிலும் எதையும் கவனித்து நிதானிக்கும் சித்தம் பெற்றவன்தான் அவன். ஆனால் அன்றைக்கு வழக்கத்தை விட அதிகமாயிருந்தது போதை. அதிகரித்துக்கொண்டே வந்தது அவன் நடையின் தள்ளாட்டம். மாட்டுக்கொட்டாய்க்கு கொஞ்ச தொலைவிலேயே விழுந்தவன் விழுந்தவன்தான், எழவே இல்லை. எழுப்பி எழுப்பி பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தோம். கருப்பி அப்படியேதான் இருந்தாள். அசை போடவில்லை. இனி மருத்துவரைக் கூட்டிவர போச்சம்பள்ளிதான் போகவேண்டும். சற்று நேரத்தில் பஸ் வந்துவிடக்கூடும், அதற்காகத்தான் கிழிசல் இல்லாத ரவிக்கையை அம்மா தேடிக்கொண்டிருந்தாள். நான் அப்போதுதான் சுட்டு வைத்திருந்த பலாக்கொட்டைகள் சிலதை உண்பதற்காக எடுத்து ஜோபியில் போட்டுக்கொண்டு அம்மாவுடன் கிளம்பினேன்.

இரவு எட்டு மணிக்கு நாங்கள் போச்சம்பள்ளி போய் சேர்ந்தோம். மருத்துவரின் வீடு எங்கிருக்கிறதென தெரியவில்லை. முன்பு எப்போதோ ஒருமுறை மருத்துவர் வீட்டுக்கு போயிருப்பதாகவும் இப்போது மறந்துவிட்டதாகவும் அம்மா சொன்னாள். பக்கத்திலிருந்த தேநீர் கடையில் விசாரித்தோம். கூட நடந்து வந்த ஒன்றிரண்டு பேரிடம் கேட்டோம். யாருக்கும் தெரியவில்லை. தெளிவில்லாமல் ஒரு தெருவில் நடந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த ஒருவர் சொன்னார், ”இப்படியே நேரா போய் இடது பக்கம் திரும்பினா மூணாவது வீடு…”. மூன்று மாதங்களுக்கு முன்பு செத்துப் போயிருந்த என் அப்பாவைப் போல மீசை வைத்திருந்த அவரை திரும்பி திரும்பி பார்த்தபடியே நான் நடந்தேன்.

மருத்துவரின் வீடு வெளிர்நீல நிறத்தில் இருந்தது. வீட்டின் முன்புறத்தை அநேக வகையான பூச்செடிகள் நிறைத்திருந்தன. மைசூரிலிருந்து அவர் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருந்தனர். சந்தோஷக் கூச்சல்களும், கொண்டாட்ட ஆரவாரங்களும் அவர் வீட்டிலிருந்து ததும்பி வந்தன. மருத்துவர் வீட்டில் இல்லை. பக்கத்தில் எங்கோ போயிருக்கிறார் என்றும் சீக்கிரத்தில் வந்துவிடுவார் என்றும் அவர் மனைவி சொன்னார். நாங்கள் தாழ்வாரத்தில் உட்கார்ந்தோம்.

கருப்பி இதுமாதிரி ஆனதற்கு ஏதாவது விஷப்பூண்டை மேய்ந்ததுதான் காரணமாக இருக்குமென்று அம்மா சொன்னாள். கருப்பி பெரும்பாலும் பெரிய காவாயில்தான் மேய்ந்துக் கொண்டிருப்பாள். ’பெரியக்காவாய்’ என்று அழைக்கப்பட்டாலும் அவ்வளவு பெரிய கால்வாயாக இல்லை அது. அதிக மழை பொழிந்து எப்போதாவது செல்லநாக ஏரி நிரம்பி வழியும் போதுதான் அந்த கால்வாயில் தண்ணீர் வரும். என்றாலும் எப்போதும் ஈரம் சொதசொதக்கும் மண்ணைக் கொண்டதாக அந்த கால்வாய் இருந்தது. கரிசாலையும் பொண்ணாங்கண்ணியும் நிறைந்து கிடக்கும் அங்கே நிறைய வண்ணத்து பூச்சிகள் பறந்தபடியே இருந்தன. அந்த இடம்தான் வண்ணத்து பூச்சிகளின் கோயில் என்று கீதாக்கா சொன்னாள். மிக நல்ல அக்காவாகவே அவள் இருந்தாள். சாப்பிட்டிருக்காத வாயின் கசப்பை நான் எச்சிலாக துப்பிக் கொண்டிருந்த தருணங்களில் எல்லாம் அம்மாவுக்கு தெரியாமல் பூசணி இலையில் வைத்து சோறும் குழம்பும் ஊற்றிக் கொடுத்த விரல்கள் அவளுடையதாக இருந்தன. பௌர்ணமிதான் வண்ணத்து பூச்சிகளின் பண்டிகை நாளென்றும் வானத்துக்கு மேலே இருக்கும் வண்ணத்து பூச்சிகளின் சாமி ராட்சஸ உருவத்துடன் பெரிய சிறகுகளுடன் பறந்தபடி ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கீழே வரும் என்றும் இரவில் ஒண்ணுக்கிருப்பதற்காக வெளியே வந்த போது இரண்டு முறை அவற்றை தான் பார்த்திருப்பதாகவும், அழகான அவைகளை பிடித்து விளையாடி ஒருபோதும் துன்புறுத்தக்கூடாதென்றும் சதா சொல்லிக் கொண்டிருந்த அவள்தான் ஒரு பௌர்ணமி தினத்திலேயே யாருடனோ ஓடிப்போனவள் ஆனாள்.

எனக்கும் கருப்பிக்கும் வண்ணத்துபூச்சிகளின் கோயிலை ரொம்பவும் பிடித்திருந்தது. விதவிதமான நிறங்களில் பறந்து களித்திருக்கும் வண்ணத்துபூச்சிகளின் மீது கருப்பிக்கு ஏதோவொரு ஆர்வமும் கவர்ச்சியும் இருந்ததென்றுதான் நினைக்கிறேன். நான் கவனித்திருந்த பல சமயங்களில் கருப்பி புல்லைக் கூட மேயாமல் வண்ணத்துபூச்சிகள் பறப்பதையே பார்த்துக்கொண்டிருப்பாள். ஒருவேளை அங்கே ஏதாவது விஷப்பூண்டுகள் இருந்திருக்குமோ? அது வண்ணத்து பூச்சிகளின் கோயிலாயிற்றே… எப்படியிருந்தாலும் கடவுளே கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…

மருத்துவரின் வீட்டுத் தோட்டத்தில் ஒரு சிறுமி நந்தியாவட்டைப் பூக்கள் கொய்து கொண்டிருந்தாள். மருத்துவரின் மகளாகவோ வந்திருக்கும் விருந்தினர்களின் மகளாகவோ இருக்கலாம். பூக்களைக் கொய்யும் விளையாட்டில் சலிப்படைந்தவள் போல காணப்பட்டாள். நான் எழுந்து அவள் அருகே சென்றேன். ஒருசில விளையாட்டுகள் மூலம் நாங்கள் வெகு சீக்கிரமே நட்பில் ஒன்றிவிட முடிந்தது. என் ஜோபியிலிருந்த சுட்ட பலாக்கொட்டைகளை அவளிடம் எடுத்துக் கொடுத்தேன். முடியக்கூடிய எதையும் எல்லோருக்கும் தருபவனாகவே எப்போதும் நான் இருந்து வந்திருக்கிறேன். பலாக்கொட்டைகளின் ருசி அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதற்கான நன்றியுடன் என்னைப் பார்த்தாள். இருந்தாலும் ஒரு கடனாளியாக அவள் தன்னை உணர்ந்திருக்க வேண்டும். பதிலுக்கு தானும் எதையாவது எனக்கு தர விரும்பியவளாக வீட்டினுள்ளே சென்று ஒரு சிறு கிண்ணத்துடன் திரும்பிவந்து என்னிடம் அதை நீட்டினாள். ஆர்வத்துடன் அக்கிண்ணத்தை வாங்கிப் பார்த்தவாறு நான் சொன்னேன்.

“ அட மண்புழு மாதிரி இருக்குதே…”

“… ஐயோ அது மண்புழு இல்ல… நூடுல்ஸ்… ”

ப்ரியமான என் நண்பர்களே! வாழ்வில் முதல் முறையாக அப்போதுதான் நான் நூடுல்ஸ் புழுவைத் தின்றேன். கொஞ்சத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதியை பிளாஸ்டிக் காகிதத்தில் சுருட்டி ஜோபியில் பத்திரப்படுத்திக் கொண்டேன். திடீரென எனக்கொரு யோசனை தோன்றியது. மண்புழுவை தூண்டிலில் கோர்த்து மீன் பிடிப்பதைவிட இந்த நூடுல்ஸ் புழுவைக் கோர்த்து மீன் பிடித்தால் நிறைய மீன்கள் சிக்கலாம் எனபதுதான் அது. ஒரே தடவையில் ரெண்டு மூணு மீன்கள் கூட மாட்டலாம்.
நான் உடனே அம்மாவிடம் ஓடி வந்தேன்.

“…உனக்கு தெரியுமா அம்மா… என்னிடம் ருசியுள்ள நூடுல்ஸ் புழுக்கள் இருக்கின்றன… மண்புழுவை விட ஒசத்தியானவை… இன்றைக்கே போய் கல்யாணி மாமாவின் தூண்டிலை நான் வாங்கிக் கொள்வேன… பெரிய பெரிய மீன்களை நான் பிடிப்பேன் அம்மா.. பெரிய பெரிய சப்பாரைகளை நான் கொண்டுவருவேன்.”

அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அம்மாவுக்கே உரிய பல நிம்மதியின்மைகள் இருந்தன. ஆறாத ரணங்களின் சொல்ல முடியாத வலிகளின் முடிவற்றத் தடங்கள் அவள் மனதெங்கிலும் வியாபித்திருந்தன. இறுக்கத்தால் வேயப்பட்ட அவள் முகத்தில் எப்போதாவதுதான் மகிழ்ச்சியின் சிறு கீற்றுகளை காண முடிந்தது. என்றாலும் அழக்கூடியவளாக அம்மா இருந்ததேயில்லை. எந்த விஷயத்தைம் தனக்கேயுரிய அறியாமையோடும் தெளிவோடும்தான் அவள் எதிர்கொண்டாள்.

கருப்பி பிறத்தியாரிடமிருந்து வாங்கிய மாடல்ல. எங்கள் வீட்டிலேயே கன்றென பிறந்து மகளென வளர்ந்தவள். விதவிதமான மாடுகளுடனும் அவற்றின் இணக்கமான ஸ்நேகங்களுடனுமே காலமெல்லாம் வாழ்ந்து வந்தவள் என் பாட்டி. முன்பொரு காலத்தில் அநேக மாடுகளை வளர்ப்பவளாய் பாட்டி இருந்திருக்கிறாள். கட்சி கட்சியென்று தாத்தா அழித்தது போக எஞ்சியது கருப்பி மட்டும்தான். அதுவும் போய்விட்டால் என்ன செய்வது… கடவுளே கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…

எங்கள் ஊருக்குப் போகும் கடைசி பஸ்சும் போனப்பிறகே மருத்துவர் வீட்டிற்கு வந்தார். பதற்றத்துடன் அம்மா விஷயத்தைக் கூறினாள். மருத்துவர் அம்மா சொல்லி முடிக்கும்வரை நிதானமாக கேட்டார். மருத்துவரின் சித்தி குடும்பம் எங்களூரில்தான் இருந்தது. வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் சித்தி வீட்டுக்கு வரவிருப்பதால் எல்லோரும் சேர்ந்து காரில் போய்விடலாம் என்றும், தயாராகி வரும்வரை காத்திருக்குமாறும் சொல்லிவிட்டு மருத்துவர் வீட்டினுள் சென்றுவிட்டார்.

அப்பாடா… இனி பிரச்சனை இல்லை… இதுவரைக்கும் ஏதும் ஆகாமலிருந்தால்…

‘சென்றாய சாமியே…’ என்று அம்மா வாய்விட்டு முனகுவது காதில் தெளிவாக கேட்டது. சென்றாய சுவாமிதான் எங்கள் குல தெய்வம். பத்து மைல் தொலைவில் இருக்கும் சென்றாய மலைக்கு புரட்டாசி மாசத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் சத்யாக்காவுடன் சேர்ந்து நான் போகாமலிருக்க மாட்டேன். சத்யாக்காவுடன் சேர்ந்து மலையேறுவதைப் போல அவ்வளவு குதூகலமானதாக வேறொன்று எனக்கு இருந்ததில்லை. துணிமணிகளையும் பொரி உருண்டைகளையும் எடுத்துக் கொண்டு அதிகாலையிலேயே சென்று விடுவோம். கால்வாசி மலையில் பஸ்வான தீர்த்தமும், பாதிமலையில் மந்தி தீர்த்தமும் இருந்தன. நாங்கள் மந்தி தீர்த்தத்தில்தான் எப்போதும் குளிப்போம். குளித்து முடித்தவுடன் பொரி உருண்டைகளை தின்றுவிட்டு சீத்தாபழங்களை தேட ஆரம்பிப்போம். மலையெங்கும் சீத்தா மரங்கள் காடாய் செழித்திருந்தன. சீத்தாக்காய்களை பறித்தால் ஏலம் எடுத்தவர்கள் பிடித்துக் கொள்வார்கள். பழத்தை பறித்து எவ்வளவு வேண்டுமானாலும் அங்கேயே சாப்பிடலாம். ஆனால் வீட்டுக்கு எடுத்துவரக்கூடாது. நாங்கள் வேண்டிய மட்டும் அங்கேயே பழத்தை சாப்பிட்டுவிட்டு வீடு திரும்ப சாயங்காலம் ஆகிவிடும். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் சித்தம் குலைந்து சத்யாக்கா பைத்தியம் ஆகும்வரை ஒவ்வொரு புரட்டாசி மாதமும் சென்றாய மலைக்கு நான் போய்க்கொண்டிருந்தேன்.

கருணையிலும் கருணை கொண்ட சென்றாய சுவாமியே எங்கள் கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…

பாதிநிலா ஒளிர்ந்த அந்த இரவில் மருத்துவரின் குடும்பமும் உறவினர்களும் தயாராகி காரில் ஏற ஒருமணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. இருபது நிமிஷத்தில் எங்களூருக்கு வந்துவிட்டோம். கார் நேராக மருத்துவரின் சித்தி வீட்டிற்கு முன்பு நின்றது. குடும்பத்தினர் எல்லோரும் இறங்கிய பிறகு மருத்துவர் காரை திருப்ப முயன்றார். எங்கள் வீடு இன்னும் கொஞ்ச தொலைவில்தான். அங்கே கருப்பி எப்படியிருக்கிறாளோ…

அப்போது மருத்துவரின் சித்தி வீட்டிலிருந்து ஒரு பெண் வெளியே ஓடிவந்தாள்.

“…ஹலோ மாமா… திடீர்னு நீங்க வருவீங்கனு நா எதிர்பார்க்கவே இல்ல…சாயங்காலம்தான் மணியம்பாடியிலிருந்து வந்தேன்… சரி வாங்க காப்பி குடிச்சிட்டு போகலாம்…”

கருப்பி எப்படி இருக்கிறாளோ…

“…சங்கீ… நீயும் இங்கதான் இருக்கறியா… சரி இரு அர்ஜெண்ட்டா ஒரு கேஸ் பாத்துட்டு வந்துர்றேன்…”

கருப்பி எப்படி இருக்கிறாளோ…

“.. அட காப்பிதானே எப்ப பார்த்தாலும் கேஸ்கேஸ்ன்னுட்டு… இல்லனா இங்கியே கொண்டுவந்து தர்றேன்… கார்லேயே குடிச்சிட்டு கிளம்புங்க சரியா…”

கருப்பி எப்படி இருக்கிறாளோ…

”அவ்வளவுதான் ஒரு நிமிஷம் போலாம் இரும்மா…” என்றார் மருத்துவர் பின்னால் திரும்பி எங்களைப் பார்த்து.

நான் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். அழுகை வெடிக்கும் நிலையில் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் அது நிகழ்ந்து விடலாம் போலத்தோன்றியது. திடீரென கார்க்கதவை திறந்துக் கொண்டு எங்கள் குடிசையை நோக்கி அம்மா ஓடத்துவங்கினாள் .எதிரில் தடுக்கிய வேலி முட்களில் பாதம் கிழிபட்டு ரத்தங்கசிய பின்னாலேயே ஓடிய என்னை பாட்டியின் அழுகுரல் எதிர்கொண்டது.

வண்ணத்து பூச்சிகளின் பறத்தலைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்த கருப்பி அசையுடன் மூச்சையும் நிறுத்தியிருந்தாள்.

அந்தியின் செவ்வொளி

ஜீவானந்தம்

| | bird |

அந்தியின் செவ்வொளி
ஆற்றங்கரையோரம் நெற்வயல்கள்
கொக்குகள் பறந்தெழுந்து அமர்ந்தபடியிருக்க
மாடோட்டிச் செல்கிறாள் தாயொருத்தி
நாணற் செடியின் புதர்களிலிருந்து இருளிசை ஒலிக்கவும்
நெய்விளக்கேந்திய பெண் சித்திரம் ஒன்று
உதடுகளில் சிரிப்புடன் அசைந்து செல்கிறது.
மணற்வெளி புதைந்த சிறு சங்குகள் பொறுக்கி
விசிலூதி செல்கிறான் தம்பி.
தாய்மடி நிரம்பிய பொண்ணாங்கண்ணியிலிருந்து
சொட்டியுதிரும் நீர்த்துளிகள் கண்ணுற்றபடி
வா வீட்டுக்கு போகலாம், எனச் சிணுங்குகிறாள் செல்லம்.
நீர் மூழ்கிய பாதங்களில் கொத்திக் கொத்தி ஒளிந்தலையும் கள்ள மீன்களே
நகரம் திரும்பும் நம் நண்பனை வழியனுப்பிவிட்டு
அக்காவுக்குத் தெரியாமல் நாளை நான் கொண்டு வருவேன்
கைப்பிடியளவு கடலையும்
மீந்திருக்கும் சில சொற்களையும்.

ஒளிப்பட உதவி – Rajendran Rajesh