ஜே. பிரோஸ்கான்

களவாடப் பட்ட கொங்கையாடை – பிரோஸ்கான் கவிதை

அது முதல் சந்திப்பை போன்றல்ல
வெட்க கூச்சம் சர்வம் கலையும்
ஆடை போல மெது மெதுவாக
கழற்றி விடும் நெருக்கத்தில்
நீ இட்ட இரகசிய சமிக்ஞை
சாத்தியத்திற்கு உட்பட்ட
ஒரு சம்பிரதாய முத்தத்தை 
தந்துவிடச் சொல்லியே.
நம் பருவத்திலிருந்து ஒரு ஆதி இசை
அவ்வ போது
பச்சை நரம்புகள் வழியே
வந்து வந்து செல்கிறது.
ஆண் உடல் கடும் பாறை
பெண்ணுடலின் மென் சூடு படும் போது
பனியை உண்ணும் சூரியனைப் போல
உறிஞ்சும் நிகழ்வில்
பெண் வெளி முழுதும்
ஈரத் துணியை உலர்த்துவது
வெப்ப மண்டலத்து வலிகள்.
ஒரு செம்பறி ஆட்டின் புல் மேய்தல்
பின் இரவின் நெருக்கத்தின் அர்த்தங்கள்
அள்ளி விசுறும் முன்னே நாம் கேட்ட
ஆதி இசையென
உன் மேனி தழுவி
அதன் நுனியில் இட்ட முத்தம்
முதலானவையல்லயென
நீ நகக் குறி பதிக்கிறாய்
என் நெஞ்சின் மேல்.
பால்கனியை பிழிந்து வெப்பம் பிசுற
சூரியனை அழைத்து
கொங்கையாடைகளை பிழிந்து
காயப் போட்டு முடித்து
உறங்கி எழும்புகிறேன்.
காணாமல் போயிருந்தது அது.
காமம் களவாடிச் சென்றுக்குமோயென்று
அந்த வெப்ப மண்டலத்து நிகழ்வை
முடித்து வைக்க பணிக்கப்பட்டிருக்கிறேன்
நான்.

தடயம் – ஜே. பிரோஸ்கான் கவிதை

ஜே. பிரோஸ்கான்

வனாந்தரத்தின் தனிமையை அடைந்திருந்தாய்
அப்போது
யௌவனத்தின் உயர் வெப்ப நிலையில்
கணங்கள் நொடிந்தன.
படுக்கையில் தனிமை பெரும் கொடுமை.
ஆசை வேகமாக வெடிக்கிறது
பூக்களின் வெடிப்பில் மகரந்தம்
வெளியேறுவது போல்.
தாபத்தின் மோனநிலை
பருவத்துக்குள் குலைந்து
நாலா புறமும் சிதறி பரவுகிறது.
மோகத்தின் போதையில் நீ
பெரும் தூரத்தைக் கடக்க நினைத்து
பிசாசுகளின் இரவு நிலையில்
நடந்து சேருகிறாய்.
பெரும் பாவத்தின் தடயத்தை
விட்டு விட்டு
மீண்டும் திரும்புகிறாய்.
மனசு பட்ட குதூகலத்தின் பிரமிப்பில்
துவண்டு படுத்துறங்கி விழிக்கிறாய்
உனது அறைக்கு வெளியே காத்திருக்கிறார்கள்,
உன் பாவத்தின் தடயத்தில்
நடந்து வந்தவர்கள்.

 

ஜே. பிரோஸ்கான்- இரவைத் தின்று ஏப்பமிடுதல், ஆட்டு மந்தைகள் செல்லாத ஊர்

ஜே. பிரோஸ்கான்

இரவைத் தின்று ஏப்பமிடுதல்
ஆட்டு மந்தைகள் செல்லாத ஊர்

இரவைத் தின்று ஏப்பமிடுதல்

பின்னோக்கிய ஆதி பரம்பரையின்
முதல் மூன்றுக்கு பின்னரான
பரம்பரையின் முதல் தலைமுறை நான்.
அன்று சூஃபிசம் பயிற்று வைத்த
ஏழாவது பரம்பரையின் இரண்டாம்
தலைமுறை என் உம்மம்மா.
மாயலிஷம் மந்திர உபாயம்
பெருகிப் பரவி நின்ற ஆதிக் காலமதில்
சூஃபிசம் வழியும் சொற்களால்
சைத்தானை விரட்டும் கலை
என் பரம்பரையின் குருதியில்
உயிரோட்டம் பெற்றிருந்த சேதி
நேற்றுக்கு முந்தைய நாள்
பரண் மேல தூசி படிந்திருந்த
ஆதி நூலொன்றில் உம்மம்மாவின்
மையெழுத்து எனக்கு அடையாளப்படுத்தியது.
நான் இப்போது
உறக்கத்திலிருக்கிறேன்
கனவின் முடிவில் நான்
சில ரகசியங்களைச் சொல்லாமல்
விழித்துக் கொள்ள வேண்டுமென்பதாக
எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
நான் ரகசியங்களைச் சொல்ல வேண்டுமானால்
நீங்கள் என் உறக்கத்தை இன்னுமொரு
இரவு நீடித்து தர வேண்டும்.
..

ஆட்டு மந்தைகள் செல்லாத ஊர்

பருகி முடித்த ஒரு குவளை
பழரசத்திலிருந்து
தனியாகப் பிரித்தறிந்த
புத்தி ததும்பலை
அந்த இரவு வாசித்துக் கொண்டிருந்தது.
இசையால் நிறைந்த ஒவ்வொரு
ஆதி உம்மத்தும்
தத்தமது சந்தோசங்களை
பகிர்ந்தளித்துக் குதூகலித்து கொள்கிறது.
மது நிரம்பி வழியும்
ஆண் தேவதைகள்
ஆளுக்காள் நடன மாதுக்களை
ரப்பான் இசைப்பது போல்
மெல்லமாக வருடி ருசிக்கிறார்கள்.
ஆட்டமாவு பெரும் ரொட்டிகளும்
தடை செய்யப்பட்ட மிருக மச்சமுமென
விருந்தளிப்பு விழா நடந்தேறுகிறது.
அவ்வூரின் எதிர் வாசிகள்
அவசர அவசரமாக
ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்
ஊர் எல்லையில் பதாதைகளை.
இங்கே மனிதர்கள் வாழுகிறார்கள், ஜாக்கிரதையென.
மேய்ச்சலுக்கேனும் ஆட்டு மந்தைகள்
அவ்வூரை நெருங்கியதில்லை.
கறி இறைச்சிகளாக
செல்வதை விடுத்துமென
ஆட்டிடையானொருவனின்
அரேபிய கதையொன்று முடிகிறது.

ஜே.பிரோஸ்கான்

ஒரு சிறு பறவையென – ஜே. பிரோஸ்கான் கவிதை

ஜே. பிரோஸ்கான்

நண்பகலின் சிவந்த மெல்லிய
இருள் பரவிய அந்த இடத்தில்
உன் ஒற்றைத் தொடுதல்
பெரும் தீக்காடென அனல் சொரியும்

கண்மூடா இரவொன்றில்
இறுகிய உலோகம் போல
ஒற்றை நரம்பு முறுக்கேறி
பொருத்திராத தாபத்தின் உச்சியில்
நான்.

அன்பில்
விருப்பில்
நேசத்தில்
முகிழ்ந்திருக்கும்போது
நீ மலர்க்காடு.

வெப்பம் பூசி என் உடலை
விடுபடச் செய்கிறாய்.
நகம் கற்றாழை முட்களாய்க் கீற
ரத்தம் ருசிக்கிறாய்.

துருவேறிய ரணம் வலி தராமல்
தாபத்தின் வெப்பத் தகிப்பை மென்று
ஒரு வனத்தின் அடர் பச்சை நிறத்தை
பூசிக் கொள்கிறது.

மலரொன்றின் நிர்வாணமென
நீ பதியனிட்டிருக்கும்
வியர்வை உப்பின் ஊழி
வாசனை நிறைந்த உடலை
அடித்துச் செல்கிறது.

இப்போது
ஆதித் துளி
பெரும் வனத்தீயின் அனலில்
வெளி வருகிறது
ஒரு சிறு பறவையென.
..

நதியைப் பாடுதல் – ஜே. பிரோஸ்கான் கவிதை

ஜே. பிரோஸ்கான்

நதிகளை கடந்து
மலைகளின் நடுவே குதிக்க
நீண்ட கால பயிற்சி எமக்கு
தேவையாகவில்லை.
நானும் தோழிகளுமாக
குதித்து விளையாடுவதில்
ஆசை கொண்டிருந்தோம்.
வெகு சீக்கிரமாக நீர்வீழ்ச்சியென
அழைக்கப்பட மலைகளே காரணம்.
எங்களை ரசிக்கவும்
எங்களை ஆராதிக்கவும்
நாங்கள் கட்டுப்பாடு விதித்ததில்லை.
எம்மீது நீந்தி திளைக்கும் சருகுகளை
பரிசளிக்கின்ற மரங்களுடன்
நீண்ட உறவை வைக்க தவறவுமில்லை.
மீன்களை அழச் சொல்லி கேட்பதும்
பறவைகளை பாடச் சொல்லிக் கேட்பதுமே
எமது பௌர்ணமி விழாக்கள்.
நதிகள் நதிகளாக இருக்கும் வரையே
இநத விளையாட்டுக்களென
கடல் எப்போதும் திமிருவது.
கர்வத்தில் என்று சொல்லிடவும் முடியாது.
சொல்லி விட்டால்
கடல் கோபிப்பதில் நியாயமுமில்லையென
தங்கை தனது கதையை எழுதி
முடித்திருந்தாள்.
..