தன்ராஜ் மணி

அமாசை – தன்ராஜ் மணி சிறுகதை

“ஏம் பாய் நிறுத்திட்டிங்க,” என்றான் துரை.
“இன்னும் வண்டி சேந்தப்புறம் மொத்தமாதான் கணவாய தாண்டனும்,” என்றார் ஜலீல்.
“பாய் போன ட்ரிப்பு வந்தப்ப இப்படி எல்லாம் நிக்கலயே,” என்றான் குழப்பமாக.
“இன்னிக்கி அமாசடா. அமாசன்னிக்கி எந்த லாரிகாரனும் ராத்திரில தனியா இந்த கணவாய தாண்டமாட்டான்,” என்றுவிட்டு வண்டியை விட்டு இறங்கி முன்னால் நிற்கும் வண்டிக்காரனிடம் பேசுவதற்கு சென்றார்.

வண்டியின் இன்னொரு டிரைவர் மதியண்ணன் அயோத்தியாபட்டணம் தாண்டியவுடன் பெர்த்தை போட்டு படுத்துவிட்டார். அவர் எழுந்திருப்பதாக தெரியவில்லை.
துரை டார்ச் லைட்டை எடுத்து கொண்டு கீழே இறங்கினான். டயர்களை தட்டிப் பார்த்துக் கொண்டு வண்டியை ஒரு சுற்று சுற்றி வந்தான்.

சென்னை செல்லும் தனியார் சொகுசு பேருந்துகள் லாரிகளை சீறிக் கொண்டு கடந்தன. ஒவ்வொரு வண்டி கடக்கும் போதும் துரையின் முகத்தில் காற்றை அள்ளி வீசி அவன் தலையை கலைத்தது. அது அவனுக்கு பிடித்திருந்தது. ஒரு பீடியை பற்ற வைத்துக் கொண்டு, வண்டியின் மேல் சாய்ந்து நின்று அடுத்த வண்டி வந்து தலையை கலைக்க கண்ணை மூடி காத்திருந்தான்.
சற்று நேரத்தில் ஜலீல் வந்தார். “ஏறு,” எனச் சொல்லிக் கொண்டே வண்டிக்குள் ஏறினார்.
துரை வண்டிக்குள் ஏறி கதவோரம் இருந்த மர பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு பின்னால் திரும்பி பார்த்தான். அவர்கள் லாரிக்கு பின்னால் இன்னும் ஒரு பத்து லாரிகள் நின்று கொண்டிருந்தன.
லாரிகள் மெதுவாக கணவாயை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.

“பாய் எல்லா பஸ்ஸிகாரனும் சல்லு சல்லுனு போறான். நம்ம மட்டும் எதுக்கு இப்படி கூட்டம் சேத்துகிட்டு போறம்,” என்றான்
ஜலீல் சிரித்தார். “ பஸ்ல நிறைய ஜனம் இருக்குடா, அப்புறம் என்ன பயம். அதுவுமில்லாம பண்ணெண்டு டன்னு வெயிட்ட வெச்சுகிட்டு வரட்டு வரட்டுனு ஏற முடியாமயா ஏறறான் , அவம்பாட்டுக்கு உட்டடிக்கிறான், காடும் இருட்டும் அவன் கண்ல எங்க படும்,” என்றார்.
“ஏம் பாய் அமாவாசைனா பேய் பிசாசெதாவது திரியுமா இந்த காட்ல,” என்றான்.
ஜலீல் எதுவும் சொல்லவில்லை. துரைக்கு இருப்பு கொள்ளவில்லை.
“இந்த காலத்துல கூட இத்தன பேரு பேய் பிசாசெல்லாம் நம்புறிங்களா?” என்றான்

வண்டிகள் நின்றன. ஜலீல் இன்ஜினை ரன்னிங்கில் வைத்துவிட்டு நியூட்ராலாக்கி ஹாண்ட் பிரேக்கை இழுத்துவிட்டார்.
“அந்த எலுமிச்சம் பழத்த எடுத்துகிட்டு எறங்கு,”  என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் இறங்கி விடுவிடுவென்று நடந்தார். துரை டாஷ் போர்டை திறந்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொண்டு இறங்கினான். அத்தனை லாரிகளிலும் இன்ஜின் ஆனில் இருந்தது, லோ பீமில் ஹைட் லைட்டுகள் மஞ்சளாய் எரிந்து கொண்டிருந்தது. அந்த இடம் கார்த்திகை தீபத்தன்று அவன் ஊர் தெருக்களில் நிரம்பி இருப்பது போல் மஞ்சள் ஒளி நிரம்பி அழகாக இருந்தது.
லாரி ட்ரைவர்கள் கூட்டமாக காட்டுக்குள் இறங்கிச் சென்று ஒரு சூலம் நட்டு வைத்திருந்த இடத்திற்கு முன் நின்றனர். அனைவர் முதுகும் தங்க முலாம் பூசியது போல ஜொலித்தது. துரை ஜலீலை பின்னால் இருந்தே அடையாளம் கண்டு கொண்டு, அவருகில் சென்று பழத்தை அவரிடம் கொடுத்தான்.

ஜலீல் இடுப்பில் இருந்த பட்டை பெல்டில் இருந்து ஒரு சிறு பேனா கத்தியை எடுத்து பழத்தை இரண்டாக வெட்டினார். சூலத்திற்கு முன்னால் இறைக்கப்பட்டிருந்த மஞ்சள் குங்கும கலவையில் இரண்டு பாதிகளையும் புரட்டி எடுத்து துரையின் கைகளில் கொடுத்தார்.
ஏற்றப்பட்டிருந்த கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டு சற்று தள்ளி இருந்த திருநீறை எடுத்து கழுத்தில் வைத்துக் கொண்டார். துரையிடம் இருந்து பழத்தை வாங்கி கொண்டு, “கும்புடு, “ என்றார். துரை கற்பூரத் தீயில் கையை காட்டிவிட்டு, திருநீறை எடுத்து நெற்றியில் வைத்து கொண்டான்.

ஜலீல் பழத்தை அவனிடம் கொடுத்துவிட்டு, “முன்னாடி டயர்ல  வையி,” என்றார்.
சூலம் நின்ற இடத்தில் ஆட்கள் யாரும் இல்லாமலானவுடன் முதல் லாரி கிளம்பியது.
அத்தனை லாரிகளும் மலையை முக்கி முனகி ஏறி , காடு சூழ்ந்த சரிவில் இறங்கின.  முக்கால் மணி நேரத்தில் லாரிகள் காட்டை விட்டு வெளியே வந்து ஒரு பெரிய நெடுங்சாலையில் இறங்கின.

லாரி ஊத்தங்கரை செல்லும் ரோட்டில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
“ஏம் பாய், சாதாரண ரோடு மாதிரிதான இருந்தது இதுக்கு எதுக்கு நின்னு ஒண்ணா வரனும்,” என்றான்.
“அது சாதாரணமான ரோடா தெரியணும்னுதாண்டா தொர,” என்றார் சிரித்தபடி.
“போ பாய். எங்காளுங்க நம்புனா செரி நீங்க கூட எதுக்கு இதையெல்லாம் நம்புறிங்க?”
“ரெண்டு கண்லயும் பாத்தத நம்பாம எப்டி இருக்கிறது,” என்றார்.
“ பேய பாத்தியா பாய்?“
“ பேயா நினைக்காம நம்மெல்லாம் பேய பாக்க முடியாது. ஆனா பேயடிச்சவன பாத்திருக்கேன். அவன அடிக்கும் போது கூட இருந்திருக்கேன் , இதே கணவாய்ல,” என்றார்.
துரைக்கு வேறு கேள்வி ஏதும் எழவில்லை. ஜலீலையே  வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து, “எப்போ பாய்?” என்றான்.
ஜலீல் சொல்ல ஆரம்பித்தார்.

அது ஒரு அஞ்சாறு வருசமுன்னாடி. அப்பவும் கல்கத்தாதான் ரெகுலரு. எங்கூட செகண்ட் ட்ரைவரு மோகன்னு ஒருத்தன் இருந்தான். அவங்கொஞ்சம் அரிப்பெடுத்த நாயி. வண்டிய நிறுத்தி சோறு திங்கறானோ இல்லயோ , காலு தரையில பட்டதும் எவளயாவது ஏறணும் அவனுக்கு.
படிக்காசுல பாதி இதுக்கே செலவு பண்ணிருவான்.
ரெண்டு வருசமா நாங்க இதே ரூட்டுலதான் போவோம்  ஆனா ஒரு தடவ கூட அமாச அன்னிக்கி க்ராஸ் பண்ணதில்ல, அந்த அமாச நாளு வர வரைக்கும். மோகந்தான் அன்னிக்கு வண்டிய ஓட்டிகிட்டு வந்தான். நான் அயோத்தியாபட்னம் தாண்டுனதும் பெர்த்த போட்டுட்டேன். நல்ல தூக்கம். திடீர்னு தொம்முன்னு ஒரு சத்தம் . நான் ஜெர்க்காகி பெர்த்து சங்கிலில முட்டி எந்திருச்சி ஒக்காந்தேன். வண்டி ஆப் ஆயி நின்னிட்டிருக்கு.
ஹைட் லைட் கூட எரியல. கரி மாதிரி இருட்டு.எங்கைய்யே எங்கண்ணுக்கு தெரியாதளவுக்கு இருட்டு.
நான் பயத்துல “ மோகா” னு கூப்புடுறேன்.
“ஒண்னில்ல பாயி வண்டி ரோட்ல செத்து கெடந்த எது மேலயோ ஏறிரிச்சு, எறங்கி பாக்குறேன்,”னு சொன்னான்.
“எங்க இருக்கோம்,”னு கேட்டேன்.
“கணவா குள்ள” னு சொல்லிட்டு டார்ச்சோட அவனும் கிளீனரும் கீழ எறங்கிப் போனாங்க.
முன்ன பின்ன வண்டி இல்ல இவன் தனியா கணவாகுள்ள ஏறிட்டானு தெரிஞ்சது. எனக்கு உடம்பெல்லாம் வேர்த்து ஊத்துது.
தனியா எதுக்குடா கணவாக்குள்ள ஏறுனேனு லாரிகுள்ள இருந்தே கத்துனேன்.
அதுனால என்னானு வண்டி முன்னால இருந்து அவனும் கத்துனான்.
பேசி ஒன்னும் ஆக போறதில்லனு நாலு கெட்ட வார்த்தைய வாய்க்குள்ள சொல்லிட்டு அவனுங்க வரட்டும்னு உக்காந்திருந்தேன்.
ரெண்டு பேரும் உள்ள வந்தானுங்க.
“வண்டில எதுவும் அடி படல பாயி, பெரிய கல்லு ஏதாவது ரோட்ல இருந்து டயர் பட்டு காட்டுக்குள்ள உருண்டிருக்கும்னு நினைக்கிறேன்,“னு சொல்லிகிட்டே வண்டியெ ஸ்டார்ட் பண்றான், வண்டி செல்பே எடுக்க மாட்டேங்குது.

கல்லு வொயர்ல ஏதாவது அடிச்சிருக்குமோனான் பாரு, எனக்கு நெஞ்சு அடிக்குற அடில நெஞ்செலும்பே பிச்சிக்கிட்டு வெளிய உழுந்துரும்னு நினைச்சேன்.
மோகா மூடிகிட்டு எந்திரினு அதட்டி அவன எழுப்பிட்டு நான் ட்ரைவர் சீட்ல உக்காந்தேன்.
சாவிய வெளிய எடுத்து திரும்ப உள்ள போட்டு திருப்பிட்டு,  ஸ்டார்டர மேல இழுத்தேன். வண்டி செல்ப் எடுத்து ஸ்டார்ட் ஆயிருச்சு.
ஹெட் லைட்டை ஆன் பண்ணிட்டு வண்டிய நகத்த போறேன், மோகன் கியர் ராட புடிச்சிகிட்டு “எந்திரி பாயி இது என் டர்னு,” ன்றான்.
“டேய் வெளயாடாத, கணவாய தாண்டிட்டு வண்டிய உன்கிட்ட குடுத்தர்றேன்,” னு சொன்னேன்.
“ஆமா நான் நேத்து லைசென்ஸ் எடுத்துட்டு இன்னிக்கி லைனுக்கு வந்திருக்கேன் நீ எனக்கு காட் ரோட்ல எப்படி ஓட்றதுனு சொல்லி குடுக்கறதுக்கு, எந்திரி மொதல்ல,”னான்.
அங்க உக்காந்து சண்ட போட்டுட்டு இருந்தா சரி வராதுனு வண்டிய அவன்ட்ட குடுத்தேன்.
வண்டிய எடுத்து ஒரு அஞ்சு நிமிசம் ஓட்டியிருப்பான், வண்டி எது மேலயோ ஏறி எறங்கி தொம்முனு சத்தத்தோட நின்னது. இன்ஜின் ஆப் ஆகி, ஹைட் லைட்டும் அதாவே ஆப் ஆயிருச்சு.
இந்த தடவ நானும் கீழ எறங்கிப் பாத்தேன். முன்னாடி ஒன்னுமே இல்ல. வண்டிய சுத்தி சுத்தி பாத்தும் கல்லடியோ, காட்டு மிருகம் அடிபட்ட ரத்த கறையோ ஒன்ணுமே இல்ல.
மோகன் திரும்பவும் வண்டில ஏறி நான் செஞ்ச மாரியே சாவிய எடுத்து போட்டு, ஸ்டார்டர தூக்குனான். வண்டி செல்ப் எடுக்கல.

கோவத்துல ஸ்டேரிங்க போட்டு ஓங்கி ஓங்கி குத்த ஆரம்பிச்சிட்டான்.
“நீயா நானானு பாத்திடுரேண்டி இன்னிக்கி உன்ன,”னுஆங்காரமா ஸ்டார்டர புடிச்சி இழுக்க ஆரம்பிச்சிட்டான். அவன சீட்ட விட்டு கிளப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு. திரும்பவும் நான் உக்காந்தேன். ஸ்டார்டர இழுத்ததும் செல்ப் எடுத்துருச்சி. நான் பாட்டுக்கு கியர தட்டி வண்டிய கெளப்பிட்டேன். இந்த தடவ ராட்ல கை வெச்சானா ஓங்கி ஒரு அப்பு அப்பலாம்னு நினைச்சிருந்தேன், அவன் கைய வெக்கல, பேசாம உட்கார்ந்திட்டிருந்தான். அங்க புடிச்சவன் ஊத்தங்கர வந்துதான் வண்டிய நிறுத்துனேன்.

அன்னிக்கு அவன தூங்க சொல்லிட்டு நானே ஓட்டிட்டு, அடுத்த நாள் அவன்ட்ட வண்டிய கொடுத்தேன். அந்த ட்ரிப்பு முழுக்க எப்பவும் போலதான் இருந்தான். நிக்கற இடத்துல எல்லாம் எவளயாவது புடிச்சி போட்டுகிட்டு. சொல்லப் போனா வழக்கத்தவிட அதிகமா ஆடிக்கிட்டு இருந்தான். ஊருக்கு திரும்பி வர ரெண்டு நாள் இருக்கும் போது லைட்டா காய்ச்சலா இருக்குனு படுத்தான். சேலத்துக்குள்ள நுழையும் போது அவன் ஒடம்பு ஓவர் ஹீட்டான ரேடியேட்டர்  மாதிரி கொதிச்சிகிட்டு இருந்துச்சு. அவன ஆஸ்பித்திரில சேத்துட்டுதான் நான் லோடே எறக்க போனேன்.

ஒரு வாரம் ரெஸ்ட் எல்லாம் முடிஞ்சு வண்டியேற வந்தா மோகன காணம். மொதலாளி இன்னும் அவனுக்கு ஒடம்புக்கு முடியல , எயிட்ஸ் ஏதாவுது இருக்குமோனு டெஸ்ட் பண்ண சொல்லி இருக்காங்கன்னு சொன்னாரு. எனக்கு ஒரே கஷ்டமா போச்சு. வண்டி ஏறனும் , போய் பாக்கவும் முடியாது. சரி ட்ரிப் முடிஞ்சு வந்தப்புறம் போய் பாத்துக்கலாம்னு கெளம்பிட்டேன்.
பதினெட்டு நாள் கழிச்சு நான் வண்டி இறங்குறேன் அப்பவும் ஆஸ்பத்திரிலதான் இருக்கானு சொன்னாங்க. ஆனா எயிட்ஸ் இல்ல, வேற ஏதோ சொல்றாங்க, காச்ச மட்டும் கொறய மாட்டேங்குதுனு சொன்னாங்க.

அன்னிக்கு வெள்ளிக்கிழம. வீட்டுக்கு போயி குளிச்சிட்டு தொழுவ கூட போகாம அவன பாக்க பெரியாஸ்பித்திரிக்கு போனேன். அங்க அவன் இருந்த கோலம்.

ஜலீல் சொல்வதை நிறுத்திவிட்டார், சற்று நேரம் இன்ஜினின் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்ததது. தொண்டையை செருமி கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்
அப்படி எல்லாம் யாருக்குமே வர கூடாதுடா தொர. வெறும் எலும்பா கெடந்தான். வெறும் எலும்பு. அவனால எதையும் சாப்பிட முடியல. சாப்டாலும் வாந்தி வந்திருது இல்ல பேதி ஆகுது.
என்ன பாத்ததும் பாயி பாயினு ஒரே அழுக. எனக்கும் கண்ணுல இருந்து தண்ணி ஊத்திகிட்டே இருக்கு. எல்லாம் செரியாயிரும் மோகா எல்லாம் செரியாயிரும்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்தேன். எனக்கு வேற என்ன சொல்றதுன்னும் தெரியல.
அவம் பொண்டாட்டிய டீ வாங்கிட்டு வானு அனுப்பி வெச்சுட்டு என் கிட்ட சொன்னான், “எனக்கு செரியாவாது பாயி, அவ மொத்தமா உறிஞ்சி எடுத்துட்டா,” னு சொல்லிட்டு அழுவறான்.

“எவடா, என்னத்த உறிஞ்சினா,”ன்னேன்.

“அமாச அன்னிக்கி கணவாக்குள்ள. கணவாக்கு முன்னால வண்டி எதுவும் வெயிட்டிங்ல இல்ல, நம்ம வண்டிதான் மொதல் வண்டி. கூட்டம் சேத்த நின்னா ஒரு மணி நேரமாவது ஆவும். எனக்கு ஊத்தங்கர போவனும்னு இருந்தது. சீக்கிரமா போனா நல்ல கிராக்கி ஏதாவது மாட்டும் இல்லாட்டி கெழுடுங்கதான் கெடக்கும். நீ நல்லா தூங்கிட்டிருந்த , அப்படியே வண்டிய கணவாகுள்ள உட்டுட்டேன். கொஞ்ச தூரம் கூட போகல தீடீர்னு ஒண்ணுக்கு முட்டிகிட்டு வந்தது. வண்டிய நிறுத்தி இறங்கி ஒண்ணுக்கடிச்சிட்டு திரும்புனா , ஐட்டங்காரி ஒருத்தி பேக்க மாட்டிகிட்டு போய்ட்டு இருந்தா. விசிலடிச்சி கூப்டேன், பக்கத்துல வந்தா. இந்த காட்ல என்ன பண்றனு கேட்டேன். ஒரு லாரிக்காரன் ஏத்திகிட்டு வந்தான், வேல முடிஞ்சு திரும்ப ரோட்டு பக்கம் போறேன்னா. சின்ன வயசுக்காரி , பாக்க வேற அம்சமா இருந்தா. ஒற போட்டானானு கேட்டேன், போட மாட்டேனு சொல்லிட்டான்னா. கழுவ தண்ணி குடுக்கலாம்னா லாரிக்கு வரணும், நீ எந்திரிச்சா சத்தம் போடுவ, விடவும் மனசில்ல. வாய் வெக்கறியானு கேட்டேன். சரின்னா.
முடிஞ்சதும் காச குடுத்துட்டு வந்துட்டேன். வண்டிய கொஞ்ச தூரம் ஓட்டிக்கிட்டு வந்தப்புறம்தான் கவனிச்சேன் எந்திரிச்சது எறங்கவே இல்ல, நெட்டு குத்தலா நிக்குது. தொடய ரெண்டயும் சேத்து அழுத்தி நசுக்குனா எறங்கும்னு அழுத்துனேன், வண்டி எது மேலயோ ஏறி ஆப் ஆயி போச்சு.
அப்புறம் நீ எந்திரிச்ச. திரும்ப நின்னப்பவும் இதே கததான். சரி வண்டிய குடுத்துட்டு தூங்கி எந்திரிச்சா சரி ஆயிரும்னு படுத்தேன்.

அடுத்த நாளும் அப்படியேதான் இருந்தது. ஆனா அதுக்குள்ள எனக்கு இது ஒரு மாதிரி பழகிருச்சி. ஆந்திரால போனன்ல, அவ கையெடுத்து கும்புட்டு கதறிட்டா. எனக்கு சந்தோசம் தாங்கல. எப்பவும் போறதவிட அதிகமா போனேன். ரெண்டு மூணு தாட்டி போனப்புறம்தான் கவனிச்சேன் எனக்கு கஞ்சி வரவே இல்ல, கணவாய்ல தூக்குனது எறங்கவே இல்ல.
ஒரு பத்து நாளைக்கப்புறம் அங்க நரம்பெல்லாம் வலிக்க ஆரம்பிச்சிருச்சி பாயி. வலி கொஞ்சங் கொஞ்சமா அதிகமாயி காய்ச்ச வந்தது. நீ ஆஸ்பத்திரில சேத்தப்புறம் குறையவேயில்ல , அப்படியேதான் இருக்கு”

“இப்ப கீழ எறங்கிருச்சானு,“ கேட்டேன்.
லுங்கிய தூக்கி காட்னான், பனை மரம் மாதிரி நெடுக்கா நின்னுகிட்டிருக்கு. அவன் உடம்புக்கும் அது இருந்த இருப்புக்கும் துளி கூட சம்மந்தமில்லடா தொர.
எனக்கு உடம்பெல்லாம் ஆடி போச்சி.

ரொம்ப வலிச்சா டாக்டரு வந்து அங்க ஊசி போட்டு ரத்தத்த எடுப்பாங்க. அப்ப வடிஞ்சிரும். திரும்ப பெருத்து பெருத்து ரெண்டு நாள்ல இப்ப இருக்க மாரி ஆயிரும். அங்க அடிபட்டா இப்படி ஆவுமாம். ஏதோ வாயில நொலயாத வியாதி பேரு சொன்னாங்க.
இப்படி யாருக்காச்சும் வந்தா நாலைஞ்சு நாள்ல செரியாயிருமாம். எனக்குதான் செரியாவே மாட்டேங்குது . அவங்களும் என்னன்னமோ மாத்திரையும் ஊசியும் போட்றாங்க , குடுக்கும் போது கேக்குது அப்புறம் திரும்ப வந்துருதுன்னான்.

நான் கொஞ்ச நெரம் இருந்துட்டு கெளம்பி வந்துட்டேன். அந்த ரெஸ்ட் வாரம் முழுசும் தெனமும் அவனைப் போய் பாத்தேன். அங்கயே கெடந்தனு வையேன்.  டாக்டருங்க வந்து வந்து பாத்தாங்க, ஆபரெசன் பண்லாம் அது இதுனு பேசுனாங்க. மோகனுக்கு நாங்க பேசற பேச்செல்லாம் காதுல உழுந்த மாரியே தெரில. அவம் பாட்டுக்கு ஒரு ஒலகத்துல இருந்தான்.
நான் அடுத்த ட்ரிப் போய்ட்டு வண்டி எறங்கும்போது அவன் செத்து  நாலு நாள் ஆயிருந்தது.

மீண்டும் சற்று நேரம் லாரி இன்ஜின் சத்தம் மட்டும் கேட்டு கொண்டிருந்தது.
தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல, “அந்த பொம்பள மோகினிப் பிசாசா?” என்றான் துரை

“ஒவ்வொரு அமாச அன்னிக்கும் ஒரு மலைல இருந்து இன்னொரு மலைக்கு இந்த கணவா வழியாதான் பேய்ங்க, காத்து கருப்புங்க போவும்னு சொல்றாங்க. அப்படி போவும் போது அதுங்க மனுசங்கள அடிச்சிற கூடாதுனுதான் வெள்ளகோவில் முனிப்பன அங்க நிறுத்தி வெச்சிருக்காங்க. ஆனா எல்லா பேயும் எல்லா நேரமும் முனிப்பன் பேச்ச கேக்கறதில்ல,“
சற்று நிறுத்திவிட்டு தொடர்ந்தார்

“இப்படி க்ராஸ் பண்ணி போற பேயிங்க மனுசனுக்குள்ள ஆட்டம் போட்டுகிட்டு இருக்கற பேய உறிஞ்சு எடுத்துட்டு மனுசன சக்கயா உட்டுட்டு போயிரும்.”

துரை திடுக்கிட்டு கண்கள் விரிய,  “அப்ப அவருக்குள்ள ஒரு பேயி இருந்திச்சா?” என்றான்

“பேயில்லாத மனுசன் ஏதுறா தொர. அதுங்கள ஆட உடறவன் அல்லாடி சாவறான். அடக்கி வெச்சிருக்கவன் அமைதியா சாவறான்,” என்றார் ஜலீல்.

துரைக்கு சிறுநீர் முட்டிக் கொண்டு வந்தது. பாயை வண்டியை நிறுத்த சொல்லலாமா என நினைத்தான். ரோட்டோரத்தை பார்த்தான், அமாசை இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஊத்தங்கரைகே போய்விடலாம் என்று அடக்கி கொண்டு உட்கார்ந்து விட்டான்.

குளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை

அந்த நள்ளிரவில் “தப் தப் தப்” என்று செருப்பு முகத்தில் அறையும் ஓசை தெரு முக்கு திரும்பும் போதே என் வண்டி சத்தத்தை தாண்டி கேட்டது.

செல்வத்தை அவன் மச்சான் நடு ரோட்டில் நிற்க வைத்து செருப்பால் அடித்துக் கொண்டிருந்தான். அவன் மச்சானை விலக்கி வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ரத்தம் வழிந்து கொண்டிருந்த உதட்டில் தண்ணீர் அடித்து துடைத்துவிட்டு செல்வத்தை அவன் வீட்டு முன் படிக்கட்டில் உட்கார வைத்தேன்.

எப்படி இருந்த பையனிவன்

முதலில் இவனை என் வீடியோ கடையில் வைத்துதான் பார்த்தேன், இருந்தால் பத்து, பன்னிரெண்டு வயதிருந்திருக்கும். அப்பொழுது நான் சிவில் எஞ்சினியரிங் டிப்ளமா முடித்துவிட்டு வேலை எதுவும் கிடைக்காததால் அரிசிபாளையம் மெயின் ரோட்டில் சின்னதாக ஒரு கடை பிடித்து வீடியோ காசேட் லைப்ரரி நடத்திக் கொண்டிருந்தேன்

இவனும் குருவியும் ஒரே போன்றிருந்த  ஹீரோ புக் சைக்கிளில் வந்து கடை முன்னால் இறங்கினார்கள். இன்னும் நினைவிருக்கிறது இரண்டும் சிகப்பு கலர்

குருவிதான் உள்ளே நுழையும்போதே கேட்டான், “அண்ணா, ஈ டி எக்ஸ்ட்ரா  டெரஸ்ரியல் இருக்கானா,” என்றான்.

இருக்கு,” என்றேன்

இருவரும் சந்தோஷமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அண்ணா குடுங்கன்னா”

எங்க குடியிருக்கிங்க,” என்றேன்

இங்கதானா, அவ்வை மார்க்கெட் முன்னாடி செய்யட் காதர் ஸ்டீரிட்”

அங்க எந்த வீடு” என்றேன்

எட்டாம் நெம்பர், சுந்தரம் மில்ஸ் வீடு, இவன் பத்தாம் நெம்பர் பருப்பு மண்டி வெச்சிருக்காங்களே வரதராஜன்” 

ராகவன் தம்பியா நீ?”

ஆமாண்ணா,” என்றான் குருவி

சரி, அவன் பேர்லயே எழுதிக்கிறேன். டென் ரூபீஸ், ரெண்டு நாள்ல திருப்பி கொண்டு வந்திரணும் இல்லாட்டி எக்ஸ்ட்ரா கொடுக்கணும்” என்றேன்

சரிணா , நீங்க எனக்கும் , செல்லுக்கும் தனியாவே அக்கவுண்ட் போடுங்க” என்றான் குருவி.

ஏண்டா” என்றேன்.

சாமுண்டி கடைல எங்கண்ணனுக்கும் சேத்து நாங்க காசு கொடுத்தோம். வேணும்னே காசு குடுக்க மாட்டான். அபுறம் என் பாக்கெட் மணி போவும், நீங்க என் பேர்லயும் செல்லு பேர்லயும் ஒரு அக்கவுண்ட் போடுங்க,” என்றான்.

நான் சிரித்துக்கொண்டே, “சரி பேரச் சொல்லு,” என சிட்டையில் பேரும், அட்ரசும் எழுதிக் கொண்டேன்.

இவ்வளவு பேச்சும் நடந்து கொண்டிருக்கையில் செல்லுகடையில் உள்ள காஸெட்டுகளை ஒவ்வொன்றாய் நின்று பார்த்து கொண்டிருந்தான்ஒரு வார்த்தையும் பேசவில்லை

காஸெட்டை கொடுத்தேன்

குருவி “டேய்,” என்றான்.

செல்லு திரும்பி பார்த்துவிட்டு, பாக்கெட்டில் கைவிட்டு ஐந்து ரூபாய் எடுத்து கொடுத்தான்.

குருவி தன் பாக்கெட்டில் இருந்து ஐந்து ரூபாய் எடுத்து இரண்டையும் என்னிடம் கொடுத்தான்.

இது நல்ல டிமாண்ட்ல இருக்க படம், பாத்துட்டு உடனே குடுத்துறனும்,” என்றேன்

சர்ணா, தாங்ஸ்ணா, வாடா” என்றுவிட்டு வெளியேறினான்.

நின்ற இடத்தை விட்டு நகராமல், “குருவி இங்க வா,” என்றான் செல்லு.

குருவி மீண்டும் கடைக்குள் வந்து செல்லின் அருகில் நின்றான். சிட்டையை உற்றுப் பார்த்தேன். சிட்டையில் இருக்கும் பேருக்கும் குருவிக்கும் ஒரு அட்சரம் கூட சம்மந்தமில்லை

டிஸ்ப்ளேவில் இருந்த க்ரேஸி பாய்ஸ் ஆப் த கேம்ஸ் விடியோ காஸெட் அட்டையை சுட்டினான், “இதுவும் எடுக்கலாமா?”  என்றான்

டேய், மொதல்ல இதப் பாப்பம் வாடா,” என்று இழுத்துக் கொண்டு போனான் குருவி.

அதன் பிறகு வாரத்திற்கு இரண்டு முறையாவது இருவரும் கடைக்கு வந்து விடுவார்கள்

ஆங்கில காமெடி மற்றும் சிறுவர் படங்கள் மேல் இருவருக்கும் பெரும் ஆர்வம். அவர்களுக்காகவே நான் பிரிண்ட்களை வரவழைக்கும் அளவுக்கு ரெகுலர் கஸ்டமர்கள் ஆனார்கள். குருவி விடாமல் பேசிக் கொண்டே இருப்பான், செல்லு பேசாமல் புன்னகையுடன் உடன் நிற்பான்ஆனால் சில வாரங்களிலேயே எனக்கு தெரிந்தது செல்லுதான் படங்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கிறான் என, அதில் ஒரு தொடர்ச்சியும் நேர்த்தியும் இருக்கும். ஒருவன் இருவருக்கும் சேர்த்து பேசுகிறான் இன்னொருவன் இருவருக்கும் சேர்த்து யோசிக்கிறான் என நினைத்து கொண்டேன்.

செல்லு மட்டுமல்ல அவன் பிற நண்பர்கள், அவன் வீடு, வீதியாட்கள் என எல்லோருமே குருவியை குருவி என்றுதான் அழைத்தார்கள் என்பது தெரிய எனக்கு சில மாதங்கள் ஆனது. யாருக்கும் பெயர்க் காரணம் தெரியாது , அவன் பெயரில் அவனை அழைத்து நான் யாரையும் பார்த்ததில்லை.

பள்ளிக்கூடம் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் என் கடையில் எப்பொழுதும் இருவரும் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் படம் எடுத்தால் சிட்டையில் எழுதுவதெல்லாம் முதல் வருடத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அவர்களுக்கு வேண்டிய படங்கள் கடையில் இல்லை என்றால் அவர்களே கடை போனில் என் சப்ளையர்களை அழைத்து  ஆர்டர் போட்டு வாங்கி விடுவார்கள். அவர்களுடைய பள்ளி நண்பர்கள் அத்தனை பேரும் வாடிக்கையாக வாங்கும் கடையானது என் கடை. மற்ற பெரிய கடைகள் எல்லாம் பெரியவர்களுக்காக படங்கள் எடுத்து வைக்க இவர்கள் இருவரால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காஸெட் எடுக்கும் கடையாக என் கடை மாறிப்போனது.  

வேறு ஏரியாக்களில் இருந்தெல்லாம் தேடி வந்து வாங்க ஆரம்பித்தனர். சேலத்தில் பேர் சொன்னாலே தெரியும் வீடியோ கடைகளில் என்னுடையதும் ஒன்றானதுகடைக்குள் கிரிக்கெட் உபகரணங்கள் வைப்பது, நண்பர்களோடு உட்கார்ந்து அரட்டை அடிப்பது என இருந்து அவர்கள் பனிரெண்டாவது வகுப்பு போகும் போது ரோட்டில் போகும் பெண்களை கடைக்கு வெளியில் நின்று கொண்டு ரூட் விடுவது என  பள்ளிக் கூடம் போகாத பிற நேரம் முழுதும் என் கடையே கதி என கிடந்தனர் இருவரும்

அவர்கள் பார்க்கும் படங்களும் சிறுவர் படங்களில் இருந்து லாரன்ஸ் ஆப் அரேபியா, ப்ரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் என போய், பேஸிக் இன்ஸ்டின்க்ட் வழியாக இரண்டு மணி நேர முழு நீள நீலப்படம் பார்ப்பது வரை முன்னேறியிருந்தது

என் சப்ளையர் ஒருவன் கேபிள் டி.வி என ஒன்று மெட்ராஸில் புதிதாக வந்திருப்பதாகவும், இனி படமெல்லாம் அதில்தான் ஓடும், வீடியோவெல்லாம் போய்விடும் என்றான். அவன் விபரம் தெரிந்தவன் என்பதால் அவனை முழுமையாக நம்புவது என முடிவெடுத்தேன். அவனிடமே அதற்கான மெட்டீரியலை வாங்கி, கடையை கார்ட்போர்ட் சுவர் வைத்து இரண்டாய் தடுத்து பின் பக்கம் கேபிள் டி.வி சாதனங்களை வைத்துவிட்டு, முன் பக்கம் வீடியா லைப்ரரியாக மாற்றினேன். வீடு வீடாக நடையாய் நடந்து, “தினம் ஒரு படம் போடுவோம்கா, இருவத்தஞ்சு ரூபாதான் மாசத்துக்கு, ரெண்டு மாசம் பாத்துட்டு காசு குடுங்கக்கா,” என கொஞ்சி கூத்தாடி கேபிள் வயர் இழுத்துக் கொண்டிருந்த நேரம். இவர்கள் கடையில் இருந்தால் கல்லாவை பூட்டாமல்தான் வெளியே போவேன்

கஸ்டமர் கொடுக்கும் காசை வாங்கி செல்லும், குருவியும்தான் கல்லாவில் போடுவார்கள். தெரியாமல் அவர்கள் கைக் காசை  போட்டிருப்பார்களே ஒழிய ஒரு நாளும் கல்லாவில் காசு குறைந்ததில்லைபல பேர் அவர்கள் இருவரும் நடத்தும் கடை அது என என்னிடமே சொல்லும் அளவுக்கு கடையையும் அவர்களையும் பிரிக்க முடியாதிருந்தது.

ஒரு நாள் கேபிள் கான்வாஸிங் போய் விட்டு கடைக்கு வர மிக தாமதமாகிவிட்டதுவெளியில் யரும் இல்லை, கேபிள் தடுப்புக்குள் இருவரின் பேச்சு குரல் மட்டும் கேட்டது

நீலப்படம் ஏதாவது பார்க்கிறார்கள் போலவென நினைத்து கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றேன். குருவி கையில் ஒரு புல்லட் பியர் பாட்டிலை வைத்துக் கொண்டிருந்தான். செல்லு நான் உள்ளே வருவது கூட தெரியாமல் பாட்டிலையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கோபத்தில் பாய்ந்து பாட்டிலை பிடிங்கினேன்.

ஏற்கனவே பாதி குடித்துவிட்டிருந்தனர்.

பாபுனா,” என்றான் செல்லு, பாட்டிலுக்கு கையை நீட்டியபடி.

ஏற்கனவே உங்க ரெண்டு பேர் வீட்லயும் நீங்க படிக்காம இங்கயே உக்காந்திட்டு இருக்கிங்கன்னு என்ன திட்றாங்க. இன்னும் இதயெல்லாம் வேற பண்ணிங்கன்னா நாந்தான் உங்களுக்கு ஊத்தி உட்றேனு சொல்லுவாங்க. இன்னையோட சரிடா, இனிமேலு கடப்பக்கமே வராதிங்க. தயவு செஞ்சு கெளம்புங்க மொதல்ல,” என்றேன்

ண்னா இன்னிக்கிதான் ட் ரை பண்லாம்னு வாங்னோம்,” என்றான் குருவி

டேய், போதும், கெளம்புங்க மொதல்ல” 

போறணா, குடிக்காதிங்கன்னு சொல்ணா, கடைக்கு வராதிங்கன்னெல்லாம் சொல்லாத,” என்றான் செல்லு.

பெரிய மனுசா, பன்னண்டாவது படிச்சு மொதல்ல பாஸ் பண்றா. கட இங்கயேதான் இருக்கும், போ,” என்றேன்.

ணா, பாதி பாட்டிலு அப்படியே இருக்கு,” என்றான் குருவி தன் வழக்கமான சிரிப்போடு.

டேய் அடிச்சே புடுவேன், போயிரு பேசாம,” என்றுவிட்டு விடு விடுவென கடைக்கு முன் வந்து சாக்கடையில் மீதி பாட்டிலை கொட்டினேன்.

உண்மையிலேயே கோபமாக இருக்கிறேன் என்பது புரிந்து பேசாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

அடுத்த நாளே வழக்கம் போல் வந்து நின்றனர்.

நான் பேச வாயெடுப்பதற்குள், “உனக்கு நாங்க இங்க குடிக்க கூடாது அவ்ளோதான, குடிக்க மாட்டோம். நீயும் அட்வைஸ் மழைல எங்கள முக்கி எடுக்காத,” என்றான் குருவி.

அதற்குள் ஒரு சிறுவன் வந்து “செல்லுணாஹனி ஐ ஷ்ரங்க் த கிட்ஸ் இருக்கானா” என்றான்.

செல்லு தலையை ஆட்டிவிட்டு கவுண்டர் தட்டியை தூக்கிவிட்டு உள்ளே வந்து கீழிருந்த காஸட்டை எடுத்து சிறுவனிடம் கொடுத்தான்.

காப்பி கம்மியாதான் இருக்கு, போன தடவ மாதிரி லேட் பண்ண, பைன் போடுவேன்,” என்றான் செல்லு.

சர்ணா, உடனே குடுத்துர்ரன்னா. உன் கடைல இல்லாத படமே இல்லனா,” என்றான் சிறுவன் உற்சாகமாக

அவன் கொடுத்த பணத்தை வாங்கினான். கல்லா முன்னால் நின்று கொண்டிருந்த என்னை பார்த்து விலகச் சொல்லி தலையை காண்பித்தான். விலகினேன். கல்லாவை திறந்து காசை போட்டுவிட்டு அருகில் இருந்த சேரில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டான்.

நான் ஒன்றும் பேசாமல் கேபிள் இழுக்கும் பையனை கூட்டிக் கொண்டு தெருவில் இறங்கினேன். அதன் பிறகு ஒரு நாள் கூட அவர்களிருவரும் என் கடையில் வைத்து குடித்ததில்லைப்ளஸ் டூ தேர்வு, நுழைவு தேர்வுக்கு ராசிபுரம் கோச்சிங் என போகும் வரை கடைக்கு வருவதை குறைக்கவும் இல்லை.

இருவருக்கும் ரிசல்ட் வந்தது. என்ஜினியரிங் கட் ஆப் மார்க் இருவருக்கும் நூற்றி இருபதுக்கும் கம்மி. ஒரு வாரம் கடை பக்கமே வரவில்லை. ராகவன் தான் படம் எடுத்து போகும் போது இருவரும் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாகவும் அதுவும் ஒரே காலேஜில் சேர வேண்டும் என அடம் பிடிப்பதாகவும் சொன்னான். தமிழ் நாட்டில் சேர முடியாது, பெங்களூரில் பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லிவிட்டு போனான்

இங்கயே இருந்தா உன் கடைல உக்காந்து பெஞ்ச தேச்சுகிட்டு உருப்படாமதான் போவானுங்க, அங்கயாவது போயி படிக்கறானுங்களானு பாக்கலாம்,” என்றான்.

எனக்கு சங்கடமாக இருந்தது.

ஒரு வாரத்தில் முகமெல்லாம் சிரிப்பாக இருவரும் கையில் ஒரு டெய்ரி மில்க் சாக்லேட் பாருடன் கடைக்குள் நுழைந்தனர். ஒருவன் கையை பிடித்து கொள்ள இன்னொருவன் ஒரு வில்லையை உடைத்து என் வாய்க்குள் திணித்தான்.

டும்கூர் சித்தகங்கால ரெண்டு பேருக்கும் சீட் போட்டாச்சு, அடுத்த வாரம் கெளம்பறோம்” என்றான் குருவி.

அப்படியென்னடா இன்ஜீனியரிங்கே வேணும்னு அடம் பிடிச்சிங்களாம்,” என்றேன்.

பி. டெக் முடிச்சிட்டு ஜி ஆர் ஈ எழுதி யூ எஸ் போயிருவோம் பாபுன்னா, அங்க போயி ஷாரன் ஸ்டோன் மாதிரி ஒரு பிகர கரெக்ட் பண்ணி செட்டில் ஆக வேண்டியதுதான். பக்கா ப்ளானிங்,” என்றான் குருவி வாயெல்லாம் பல்லாக, செல்லு என்னை பார்த்து கண்ணடித்தான்.

அதானே பாத்தேன். என்னடா உருப்பட்டுடிங்களோனு நெனச்சேன்,” என்றேன்.

போறதுக்குள்ள உன் கடைல என்னென்ன படம் இருக்குனு சொல்லிட்டு போறோணா இல்லாட்டி அல்லாடி போயிருவ,” என்றான் செல்லு பெரிதாக சிரித்தபடி.

நேரம் டா. வாங்க இன்னிக்கி என்னோட ட்ரீட் உங்களுக்கு”  

பாவா கடைக்கு கூட்டிச் சென்று அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தேன்

பிச்சு போட்ட கோழி, புறா ரோஸ்ட், கல்டா, முட்டை ரோஸ்ட் என ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.

எங்கோ எனக்குள் இருந்த குற்ற உணர்வு இவர்களுக்கு சீட் கிடைத்ததில் குறைந்து நிம்மதியாய் இருந்தது. அவர்கள் சாப்பிடுவதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதன் பிறகு அவர்களை அதிகம் நான் பார்க்கவில்லை. கேபிள் வேலைகளில் மூழ்கிவிட்டதால் கடையில் வேறு ஆள் போட்டு விட்டேன். கடையில் நான் இருப்பதில்லை என்பதால் ஊருக்கு வரும் போது அவர்கள் கடை பக்கம் வருவது குறைந்தது. ஊருக்கு வந்தால் சாமுண்டி செட்டியார் கடை வாசலில் நின்று நண்பர்களுடன் சிகரெட் குடிக்கிறார்கள் , கேப்டன் பங்க் பக்கத்தில் உள்ள பாரில் குடிக்கிறார்கள் என என் காதுக்கு செய்தி வந்து கொண்டிருந்தது. அவர்களை பார்ப்பதே எப்போதாவது என ஆகிவிட்டதால் பார்க்கும் போது அவர்களிடம் அதையெல்லாம் நான் கேட்பதில்லை.

ஓரு நாள் இருவரும் நான் கடை மூடும் நேரத்தில் இரண்டு சிகப்பு கலர் புத்தம் புது யமஹா பைக்கில் வந்திறங்கினர்.

எப்படா வந்திங்க, என்ன புது பைக்கா?” என்றேன்

பைக் எடுக்கறதுக்குனே வந்தோணா,” என்றான் குருவி.

ஊருக்கு எடுத்திட்டு போறிங்களா?” என்றேன்.

ஆமாண்ணா, முடியவே முடியாதுனாங்க அழுது அடம் பிடிச்சு வாங்கிட்டோம்ல,” என்றான் குருவி.

டேய் பாத்து ஓட்டுங்கடா,” என்றேன், வண்டியை சுற்றி வந்து பார்த்துக் கொண்டே.

ஓட்டி பாருணா,” வண்டியை விட்டு இறங்கி சாவியை கையில் கொடுத்தான் செல்லு.

ஒரு ரவுண்டு ஓட்டி விட்டு கொடுத்தேன்.

என்னுதையும் ஓட்டி பாரு,” என்று குருவி அவன் வண்டியை கொடுத்தான்.

அதையும் ஒரு ரவுண்டு ஓட்டி விட்டு கொடுத்தேன்.

நெம்பர் கூட ஒன்று போலவே இருந்தது இரு பைக்கிலும், ஒரே ஒரு எண் மட்டும் வித்தியாசம்.

லேட்டாச்சு. செந்திலுகிட்ட காட்டணும் இன்னும். கிளம்பறோம்னா, அடுத்த தடவ வரும் போது வரோம்,” என்றான் குருவி

இருவரும் ஒருவர் பின் ஒருவர் காற்றை கிழித்துக் கொண்டு வேகமாக போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்.

ஏதோ ஒரே நாளில் அரை டவுசரில் இருந்து பாண்ட்டுக்கு அவர்கள் மாறிவிட்டது போல இருந்தது எனக்கு

அதன் பிறகு குருவியை நான் மார்ச்சுவரியில் பிணமாகத்தான் பார்த்தேன் , மூன்று மாதம் கழித்து.

லீவுக்கு வந்தவர்கள் பாரில் சென்று குடித்துவிட்டு, நள்ளிரவு தாண்டி போதையில் அண்ணா பூங்கா பெரியார் மேம்பாலம் முதல் ஐந்து ரோடு வரை டூ வீலரில் ரேஸ் விட்டு விளையாடி இருக்கிறார்கள்அப்பொழுதெல்லாம் இரவு பதினோரு மணிக்கு மேல் அவ்வளவு பெரிய ரோடு வெறிச்சோடி போய் கிடக்கும்மூன்றாவது முறை ரேஸ் விடும்போது குருவி கட்டுப்பாடு இழந்து வண்டியை சாலைக்கு நடுவில் இருந்த டிவைடரில் ஏற்றிவிட்டான். வண்டியில் இருந்து தெறித்து, விளக்கு கம்பத்தின் மேல் தூக்கி எறியபட்டிருக்கிறான்.   தலை முதலில் கம்பத்தின் மேல் மோதி, பதினைந்தடி உயரத்தில் இருந்து தலைக் குப்புற ரோட்டில் விழுந்திருக்கிறான்

செல்லு உலுக்கி எழுப்பப் பார்த்திருக்கிறான். தலையில் இருந்து பெருகிய ரத்தத்தை பார்த்து பயந்து மேம்பால இறக்கத்தில் இறங்கி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு ஓடி ஆட்களை கூட்டி வந்திருக்கிறான்.

குருவியின் உயிர் அவன் தரையை தொடும் முன்பே பிரிந்துவிட்டிருக்கிறது. நேராக மார்ச்சுவரிக்குதான் எடுத்து சென்றிருக்கிறார்கள்.

காலையில் தகவல் தெரிந்தவுடன் கடையை சாத்திவிட்டு சென்றேன். ராகவனுக்கு போலீஸ், ஆஸ்பிடல் சம்பிரதாயங்களுக்கெல்லாம் ஒத்தாசை செய்தேன். குருவியின் உடலை ஆஸ்பிடலில் இருந்தே காக்காயன் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று புதைத்தோம்

வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு உட்காரும் போதுதான் செல்லின் ஞாபகம் வந்தது

அவனை ஆஸ்பிடலில் பார்த்ததாகவே நினைவில்லை

வண்டியை எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றேன், அவன் அங்கு இல்லை. சாமுண்டி செட்டியார் கடைக்கு சென்றேன். அவன் நண்பர்கள்தான் நின்று தம்மடித்து கொண்டிருந்தார்கள். என்னை பார்த்தவுடன் ஒருவன் என் அருகில் வந்தான்

செல்லு இங்க வர்லணா. கீதாலாயா தியேட்டர்கிட்ட பாத்ததா ராஜேஷ் சொன்னான்,” என்றான்.

குடிச்சிருந்தானா,” என்றேன்,

சற்று தயங்கி விட்டு, “காலைல இருந்தே நிறைய சிரப் அடிச்சிட்டு இருந்தாண்ணா,” என்றான்.

எனக்கு பகீரென்றது. போதைக்காக ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் இருமல் மருந்தை சில மாத்திரைகளோடு சேர்த்து குடிக்கும் பழக்கம் காலேஜ் மாணவர்களுக்கு அந்த சமயத்தில் இருந்தது. செல்லு அதைச் செய்வான் என நான் நினைக்கவே இல்லை.

கீதாலாயா தியேட்டர் போனேன், அவன் வண்டி டூ வீலர் ஸ்டாண்டில் இருந்தது. தளபதி படம் ஓடிக் கொண்டிருந்தது

படம் முடியும் வரை அவன் வண்டிக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன்.

வந்தவன் என்னை பார்த்து வழக்கம் போல் புன்னகைத்தான்.

ண்ணா , சூப்பர் படண்ணா, செக்க காமிரா வொர்க்,” என்றான்.

சாப்டியா?”

இல்லணா”.

வா போய் சாப்புடலாம்”.

ம்”.

நியூ ரெஸ்டாரென்ட் போலாம், நீ முன்னாடி போ”

அவன் தெளிவாகத்தான் ஓட்டிக் கொண்டு போனான், நான் எங்கே விழுந்து விடுவானோ என்ற பயத்தில் அவன் பின்னாலேயே இடை வெளி விடாமல் தொடர்ந்தேன்.

போஸ் மைதானம் பாலம் தாண்டி, ஹென்றி அன் ஊல்ஸி மணிக் கூண்டுக்கு முன் திரும்பி ஹோட்டல் வாசலில் வண்டியை நிறுத்தினான்

அவன் போதையில் இருப்பதற்கான ஒரு அறிகுறியும் இல்லை

நெய் புரோட்டா ஆர்டர் செய்தான். முகத்தில் கவலை ரேகையே இல்லை, அமைதியாக உட்கார்ந்திருந்தான். புரோட்டா வந்தது, இரண்டு வாய் சாப்பிட்டவுடன் ஒமட்டலுடன் வாஷ் பேசினுக்கு ஓடி வாந்தி எடுத்தான்

எடுத்து விட்டு வந்தவன், வேணாம் என்பது போல் தலையாட்டிவிட்டு வெளியே வண்டியில் போய் உட்கார்ந்து கொண்டான்.

நானும் பாதியிலேயே எழுந்து கொண்டு பில்லை கொடுத்து விட்டு அவனருகில் போய் நின்றேன்.

சற்று நேரம் கழித்து “ அழுதியாடா,”  என்றேன்

அவன் ஒன்றும் சொல்லவில்லை

நான் ஒரு கிங்ஸ் பற்ற வைத்துக் கொண்டு அவனுக்கொன்று கொடுத்தேன்.

அழுதுரு செல்லு,” என்றேன்.

அதற்கும் அவன் ஒன்றும் சொல்லவில்லை, புகையை ஆழ இழுத்து கொஞ்சமாக வெளியே விட்டு கொண்டிருந்தான்.

நான் புகையை நுரையீரலுக்குள் இழுத்து தேக்கி கண்ணை கிறங்கி  மூடினேன். குருவியின் முகம் கண்ணுள் வந்ததுஅவன் கோவில் மணி போல் கணீரென்ற சிரிப்பும், ஓலைப்பாயின் மேல் பெய்யும் மழை போல ஓயாத பேச்சும்.

பேசிகிட்டே இருப்பான் தாயோளிஇப்படி அல்பாயுசுல போய்டான்,” வாய்விட்டு சொல்லிவிட்டு என்னையறியாமல் தேம்பி அழ ஆரம்பித்தேன். ரோடு என்னும் பிரக்ஞை எதுவும் இல்லை. ஒன்பது வருடங்கள் என் கண் முன் வளர்ந்த பையன். காலையிலிருந்து அடக்கி வைத்திருந்த துக்கம் அழுகையாய் மடை திறந்து கொட்டி கொண்டிருந்தது.

ஹோட்டலில் இருந்து ஒருவர் வண்டி எடுக்க அருகில் கடந்து போனார். சட்டென்று என்னை திரட்டி கொண்டு, கர்ச்சீப்பால் முகத்தை துடைத்தேன்.

செல்லு ரோட்டை வெறித்து கொண்டு அமைதியாய் உட்கார்ந்திருந்தான்

அவனை தொட்டு திருப்பினேன்

பொறந்ததுல இருந்து கூட இருந்தவன் இப்படி போறதுஎனக்கே தாங்க முடியல உனக்கு எப்படி இருக்கும்னு எனக்கு புரியுது. அவங்கூட இருந்தத எல்லாம் நெனச்சுக்கோ அழுதுருவ,” என்றேன்.

என்னை பார்த்து சிரித்தான்

போலாம் பாபுனா,” என்று வண்டியில் சாவியை போட்டான்

ஏதோ சரியாக இல்லை என புரிந்தது. எதுவும் பேசாமல் அவன் பின்னால் அவன் வீடு வரை வந்தேன். வண்டியை நிறுத்தியவன் நேராக வீட்டிற்குள் போய் அவன் ரூமுக்குள் புகுந்து கொண்டான்

இரண்டு வீடு தள்ளியிருந்த குருவி வீட்டிற்கு நடந்தேன். செல்லின் அப்பா முன்னால் சேரில் உட்கார்ந்திருந்தார்

வீட்டிற்குள் இன்னும் அழுகை சத்தம் கேட்டு கொண்டிருந்தது.

செல்லின் அப்பாவை தோளை தொட்டு தனியாக கூட்டி சென்றேன்

அண்ணா, செல்ல டும்கூருக்கு உடனே அனுப்பி வைங்க. அவன் இங்க இருக்கறது சரியா படல எனக்கு,” என்றேன்.

அவன் சுடுகாட்டுக்கு வராதப்பவே எனக்கு கலுக்குனுதான் இருந்துச்சு. மொதல்ல இந்த பாழா போன பைக்க விக்கணும்,” என்றார்.

சற்று நேரம் கழித்து “தனியா இருந்தா எதாச்சும் பண்ணிக்குவானோனு பயமா இருக்கு பாபு,” என்றார்.

அதெல்லாம் ஒன்னும் பண்ணிக்க மாட்டாணா. அவன் இங்க இருந்தா இதே ஞாபகமா சுத்திட்டு இருப்பான். அனுப்பிடுங்க,” என்றேன்

சாவு வீட்டில் பெருத்த ஓலம் ஒன்று எழுந்தது. சொந்தக் காரர்கள் யாராவது ஊரில் இருந்து வந்திருக்க வேண்டும்.

வீட்டை திரும்பி பார்த்துவிட்டு, “நீ சொல்றதும் சரிதான், எம்பேச்ச எங்க கேப்பான் , அவனம்மாகிட்ட பேசறேன்,” என்றார்

அடுத்த நாளே செல்லு டும்கூர் கிளம்பிப் போனான்.

சென்றவன் ஆறேழு மாதங்கள் சேலம் பக்கமே வரவில்லை. அவன் மறக்கட்டும் என அவன் வீட்டிலும் அவனை வா வென்று சொல்லவில்லை

அதற்குள் எனக்கு கேபிள் டி.வி நன்றாக பிக் அப் ஆகிவிட்டது. லோக்கல் திருவிழா வீடியோ எடுத்து ஒளிபரப்புவது, கடை விளம்பரங்கள் பிடித்து அவற்றை வீடியோ எடுத்து கேபிள் சானலில் ஒளிபரப்புவது என ஆரம்பித்தேன். இடக்குறைவால் வீடியோ கடையை மூடிவிட்டு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அனைத்தையும் அங்கு மாற்றிக் கொண்டேன். இருந்த வேலையில் யாரையும் பார்ப்பதற்கு கூட எனக்கு நேரம் இல்லாமல் போனது.

கோட்டை பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்பை வீடியோ எடுக்க போகும் போது ராகவனை பார்த்தேன்.

அவனை பார்த்தவுடன் நான் கேட்ட முதல் கேள்வியே, “செல்லு எப்டி இருக்கான்? ஊரு பக்கம் வந்தானா?” என்பதுதான்.

ராகவன், “ இங்கதா இருக்கான் ரெண்டு மாசமா. காலேஜ் ஹாஸ்டல்ல டோப் அடிச்சிருக்கான். சீட்ட கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டானுங்க.,“  என்றான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சற்று தணிந்த குரலில், “பெங்களூர்லயே ரீ ஹாப்ல சேத்துவிட்டுருக்காரு வரதண்ணன், அங்க இருந்து செவுரேறி குதிச்சு எங்கயோ போயி மருந்தேத்திகிட்டு பஸ்ஸ புடிச்சு ஊருக்கு வண்டான். சும்மா வந்திருந்தாலும் பரவால்ல ஒரு நர்ஸோட மோதரத்த திருடிட்டு வந்திருக்கான். கர்நாடகா வேறயா வரதண்ணண் படாத பாடு பட்டு , தண்ணியா செலவு பண்ணி போலிஸ் கேஸ் இல்லாம பண்ணியிருக்காரு. மெண்டலாயிட்டான், பாபு,” என்றான்.

வீட்லயேதான் இருக்கானா?” என்றேன்.

கிட்டத்தட்ட பூட்டிதான் வெச்சிருக்காங்க. ஒரு நாளு சாமுண்டி வரைக்கும் நடந்தாவது போய்ட்டு வரேனு அவங்கம்மாகிட்ட ரொம்ப கெஞ்சியிருக்கான். கைல காசெல்லாம் எதுவும் குடுக்காம அனுப்பிவுட்ருக்காங்க. திரும்பி வந்தவன் புல் டைட்டு. காச கீச திருடிட்டானா பார்த்த அதுவும் இல்ல. ஆர்த்திதான் அவன் மைனர் செயின் சின்னதா இருக்க மாதிரி இருக்குனு சொல்லியிருக்கா. செயின்ல பாதிய நகை கடைல வெட்டி வித்திட்டு டோப்பு வாங்கியிருக்கான் பாபு. எனக்கெல்லாம் என்ன சொல்றதுனே தெரில,” என்றான்.

வீட்லயே வெச்சு ட்ரீட்மண்ட் பண்ண முடியாதா?” என்றேன்.

இந்த மாதிரி கேஸ் எல்லாம் ஜெயில் மாதிரி ஒரு ரீ ஹாப் செண்டர்லதான் வெச்சு ட்ரீட் பண்ணனுமாம். மெட்ராஸிக்கோ பெங்களூருக்கோதான் கூட்டிட்டு போவணும். வரதண்ணன் என்ன பண்ணப் போறாருனு தெரியல,” என்றான்

அன்றே சென்று பார்க்க வேண்டும் என நினைத்தேன் , சவுண்ட் மிக்ஸிங் வேலைகள், வேறொரு இடத்தில் மஞ்சு விரட்டு கவரேஜ் என்று பண்டிகையெல்லாம் முடிந்து ஒரு வாரம் கழித்துதான் அவன் வீட்டுக்கு போக முடிந்தது

அவன் வீட்டில் இல்லை. வரதண்ணன் அவனுக்கு மயக்க ஊசி போட்டு ஆம்புலன்ஸில் பெங்களுர் நிம்ஹான்ஸில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்

வீட்டில் யார் முகத்திலும் ஒளியில்லை, வீடே சாவு வீடு போல துக்கம் நிறைந்து கிடந்தது.

அங்கே இருக்க பிடிக்காமல் காபியை அவசரமாய் குடித்துவிட்டு கிளம்பிவிட்டேன்

அதன் பிறகு பல மாதங்கள் கழித்து ஒரு இண்ட் சுஸிகி வண்டியில் என் கேபிள் அலுவலகத்திற்கு வந்து இறங்கினான்

பாபுணா,” என்றான் அதே புன்னகையுடன்.

தோளோடு அனைத்து என்னுடைய ஆபிஸ் ரூமுக்குள் கூட்டி சென்றேன்

எப்டி இருக்கற, எப்படா வந்த பெங்களூர்ல இருந்து?” என்றேன் உற்சாகமாக

நல்லாருக்கனா, ரெண்டு வாரம் ஆச்சி வந்து”

முழுசா வெளிய வண்ட்டியா”

வித் ட்ராயல் எல்லாம் போச்சு, க்ரேவிங்கும் இல்ல. ரெண்டு மாத்தர மட்டும் குடுத்திருக்காங்க. நார்மலாதான் இருக்கேன்”

என்ன பண்ணப் போற, மண்டிக்கு போ போறியா”

இல்லனா, வைஸ்யால பி காம் சேந்துருக்கேன்”

சூப்பர்றா. அவன் சட்டுனு போய்ட்டான் நீ சின்னம்பட்டு போப் போறியோனு ரொம்ப பயந்தட்டண்டா,” இதைச் சொல்லும் போது  என் கண்கள் கலங்கிவிட்டன.

ம்.” சுற்றிலும் பார்த்துவிட்டு, “பிசினஸ் நல்லா பிக் அப் ஆயிருச்சு போலருக்குனா” என்றான்

மெட்ராஸ்காரன் அருணுக்குதான் தாங்க்ஸ் சொல்லணும். டி.வியெல்லாம் பாக்குறியா. சன் டிவி, எம் டிவி , வீ டி வினு நிறைய சானல் வந்துருச்சு,” என்றேன்.

போட்டியா உங்க சானலும் ஓடுதே. உங்க சானல பாத்துட்டுதான் வண்டியெடுத்துட்டு பாக்க வந்தேன்,” என்றான்.

பலமாக சிரித்துவிட்டு, “லொல்லு மட்டும் அப்படியே இருக்குடா உனக்கு,” என்றேன்

 நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பிச் சென்றான்

எனக்கு உண்மையாகவே குருவியும் அவனுடன் இருந்தது போலவே ஒரு உணர்விருந்தது அன்று.

அதன் பிறகு அவனை மீண்டும் அடிக்கடி பார்த்தது அவன் காலேஜ் மூன்றாம் ஆண்டு படிக்கும் போதுதான். அப்பொழுது நான் என் பழைய வீட்டை விற்றுவிட்டு அவன் தெருவிலேயே ஒரு பெரிய வீட்டை வாங்கி  குடி புகுந்திருந்தேன்

ரோட்டில் பார்த்தால் நின்று பேசாமல் போகமாட்டான். ஒரு நாள் பங்க் கடையில் நான் தம்மடித்து கொண்டிருக்கும் போது பார்த்தான், தம்மெல்லம் அடிப்பதில்லை என நான் கொடுத்தும் மறுத்துவிட்டான். மூன்றாம் வருட பரீட்சையெல்லாம் முடிந்துவிட்டது பி எஸ் ஜீ யில் எம் பி ஏ சேரலாம் என்றிருப்பதாக சொன்னான்உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தான், குருவியின் பேச்சு, குருவியின் சிரிப்பு, செல்லின் புன்னகை.

சொன்ன ஒன்றிரண்டு வாரங்களில் அவன் வீட்டைத் தாண்டும்போது ஒரே சத்தமாக இருந்ததுவண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன். வரதண்ணண் உள் கதவை வெளியே இருந்து சாத்தி விட்டு வீட்டு வராண்டாவில் செல்லை பெல்ட்டால் விளாசிக் கொண்டிருந்தார். செல்லின் அம்மா உள்கதவின் கம்பியை பிடித்துக் கொண்டு “ஐயோ அடிக்காதிங்க செத்துற போறான் விட்றுங்க அடிக்காதிங்க,”  என்று கதறிக் கொண்டிருந்தார்.

 நான் சென்று வரதண்ணனை பின்னால் இருந்து  இரண்டு கைகளையும் இறுகப் பிடித்து கொண்டேன். “அண்ணா, மேல கீழ ஏதாவது பட்ற போவுது, கொஞ்சம் பொறுமையா இருங்கண்ணா,” என்றேன்

படட்டும் பாபு பட்டு போய் தொலையட்டும் நாதேறி நாயி,” என்றார் மூச்சிறைக்க.

கொஞ்சம் அவரை அமைதிபடுத்தி , பெல்ட் டை கையில் இருந்து வாங்கிவிட்டு வராந்தா தின்னையில் அவரை உட்கார வைத்தேன்

செல்லு செருப்பு வைக்கும் ஸ்டேண்ட் அருகில் சுவற்றோடு ஒட்டி கால்கள் ரெண்டையும் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான்

உள் வாசல் கதவை நான் திறந்துவிட்டேன், செல்லின் அம்மா ஓடி வந்து செல்லை கையை பிடித்து தூக்கி உள்ளே அழைத்து சென்றார்

வரதண்ணன் சட்டென்று உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார். பஜாரில் எல்லோராலும் பெரும் மரியாதையுடன் பார்க்கப்படும் அவ்வளவு பெரிய மனிதர் குலுங்கி அழுவதை பார்க்க மிகுந்த சங்கடமாக இருந்தது

சற்று அழுகை அடங்கியவுடன், “என்னாச்சுண்ணா?” என்றேன்

திரும்பவும் ஆரம்பிச்சிட்டான் பாபு. சுஸிகி ஆர். ஸி புக்க வெச்சு ஆறு மாசத்துக்கு முன்னாடி மாணிக்கத்துகிட்ட வட்டிக்கு பணம் வாங்கியிருக்கான். இவன் வட்டியும் கட்டல அசலும் திருப்பல. இனிமேல் இவண்ட்ட வாங்க முடியாதுனு தெரிஞ்சி போயி இன்னிக்கி காலைல வீட்டுக்கே வந்து மாணிக்கம் என்கிட்ட சொல்லிட்டான்

இவனுக்கு எதுக்கு இவ்வளவு பணம்னு கூப்புட்டு கேட்டா மாக்கான் மாதிரி அப்படியே நிக்கறான். ரூமுக்குள்ள போயி எல்லாத்தையும் பொரட்டி பாத்தா அலமாரி ட்ராவுக்கு கீழ ஒளிச்சு வெச்சுருக்கான் பாபு. கஞ்சால இருந்து சாரு கோக்கேயினுக்கு போய்ட்டாரு இப்போ.” 

என்னால் நம்பவே முடியவில்லை. “எவ்ளோ நாளாணா?”

யாருக்கு தெரியும். நான் வீட்ல அதிகம் இருக்கறதுல்ல காலைல போனா ராத்திரிதான் வரேன். இவள கேட்டா ஒரு வித்தியாசமும் இல்ல நல்லாத்தான் இருந்தான்றா. ஆர்த்திதான் அஞ்சாறு மாசமா அவன் ரூம்ல அவனே தனியா பேசி சிரிக்கிறானு சொல்லி இருக்கா இவகிட்ட . வயசு பையன் ஏதாவது புஸ்தகம் கிஸ்தகம் படிப்பானு இவ அசால்டா உட்டுட்டா என் கிட்ட சொல்லவே இல்ல.”

ஒரு வேள திரும்ப குருவி ஞாபகம் வந்து…” என்றேன்.

அட போ பாபு. அதெல்லாம் நம்ம சொல்லிக்கலாம் சமாதானத்துக்கு. இவன் ருசி பாத்துட்டான் இனி மேல் உட மாட்டான். அதுவும் இவன உடாது. இவன் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு இத விட்டானானே எனக்கு இப்ப சந்தேகமா இருக்கு,” என்றார்.

நல்லாதான இருந்தான் ட்ரீட்மெண்ட் போய்ட்டு வந்து?”

எப்படி நம்மள ஏமாத்துறதுனு கத்துகிட்டு வந்திருக்கான் ட்ரீட்மெண்ட்ல. ஒத்த ஆம்பள புள்ள பெத்து அவன இப்படி…” அடக்க மாட்டாமல் மீண்டும் அழ ஆரம்பித்தார்.

எந்த வார்த்தையும் அவரை தேற்றாது என தெரிந்து பேசாமல் அவரருகில் உட்கார்ந்திருந்தேன்

செல்லை பார்க்காமலே வண்டி எடுத்து கொண்டு கிளம்பிவிட்டேன்.

அவனை வரதண்ணன் எங்கும் அனுப்பவில்லை. அவனை கிட்டதட்ட சிறையில் வைத்திருப்பதைப் போல் வைத்திருந்தார். அவர் மண்டி மூட்டைக்காரர்கள் இரண்டு பேர்  எந்நேரமும் அவனுடனே இருந்தனர். அனைத்து கட்டுப்பாடுகளையும் மாதம் ஒரு முறையாவது உடைத்து பவுடர் வாங்கிவிடுவான். செயின், பணம், பாத்திரம் என எது கிடைத்தாலும் அதை பவுடராய் மாற்றி விடுவான். வரதண்ணன் சோகத்தில் ஆளே வாடி வதங்கி பாதியாகி போனார்.

நான் பல முறை சொல்லியும் அவனை திரும்பவும் ரீ ஹாப் அனுப்ப அவர் சம்மதிக்கவில்லை. அதில் சுத்தமாக அவருக்கு நம்பிக்கை போய்விட்டது.

ஆர்த்தி காலேஜ் முடித்த கையோடு அவள் கல்யாணத்தை முடித்து வைத்தார். செல்லை கல்யாணத்திற்கு கூட கூட்டி வரவில்லை, அம்மை போட்டிருக்கிறது  என்று மாப்பிள்ளை வீட்டில் சொல்லிவிட்டார்கள்.

ஆர்த்தி கல்யாணத்திற்காகவே உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்ததை போல, அவள் கல்யாணமாகி போன மூன்றே மாதத்தில் ஹார்ட் அட்டாகில் வரதண்ணன் போய் விட்டார்.

அவர் எழவு விழுந்த அன்று படிந்த சாவுக் களை அந்த வீட்டிலிருந்து இன்னும் விலகவே இல்லை. சில சமயம் யோசித்தால் குருவி போனதில் இருந்தே அப்படித்தான் இருந்தது என தோன்றும்

வரதண்ணன் இறந்த பிறகு மண்டி செல்லின் கைக்கு வந்தது. காலையிலேயே பவுடரை இழுத்து விட்டுத்தான் மண்டி பக்கமே போவான். வாயே திறக்காத செல்லு  சிரிக்க சிரிக்க பேசுபவன் என பஜார் முழுக்க பெயரெடுத்தான். அவனுடைய போதை பழக்கம் நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரிந்த விஷயமாக இருந்தது. ஒன்றிரண்டு வருடங்கள் பெண் தேடினாலும் அதன் பிறகு அவனுக்கு வரன் பார்ப்பதையே செல்லின் அம்மா விட்டுவிட்டார். பழக்க வழக்கங்களில் தெரியாவிட்டாலும் நிர்வாகத்தில் போதையின் தாக்கம் நன்றாக தெரிந்தது. முடிவுகள் எதையும் அவனால் எடுக்க முடியவில்லை, எடுக்கும் முடிவுகளும் மோசமானவையாக இருந்தன. பல லாரிகள் ரோட்டை நிறைத்து நிறுத்தி லோடடித்த வியாபாரம் சுருங்கி சில லாரிகள், அரை லாரி, டெம்போ, ஆட்டோ என தேய்ந்து பத்து வருடங்களில் வியாபாரமே இல்லாத நிலை வந்தது

கையிருப்பு காசு தீரும் வரை வீட்டில் உட்கார்ந்து கோக் அடித்து கொண்டிருந்தான்.

வரதண்ணன் மெயின் ரோட்டில் சில கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். அந்த கடைகளை தவிர வேறு வருமானம் இல்லை என்ற நிலை வந்தது. செல்லின் அம்மா கடை வாடகையை அவனை வாங்க விடவில்லை. விட்டால் அதையும் விற்று பவுடர் ஆக்கி விடுவான் என பயந்து தரமுடியாது என சொல்லிவிட்டார்

ஏதாவது வேலை வேண்டும் என என்னை வந்து பார்த்தான். டி டி எச் எல்லாம் வந்து கேபிள் டல்லடிக்க ஆரம்பித்த நாட்களிலேயே நான் விளம்பர படங்கள் எடுப்பது, பெரிய கல்யாணங்களுக்கு  சினிமா போல வீடியோ எடுப்பது என தொழிலை  சற்று மாற்றிக் கொண்டிருந்தேன். அதன் மூலம் எனக்கு நிறைய பெரிய மனிதர்களின் தொடர்புகள் இருந்தது. ட்ரீட்மெண்ட் எடுத்து கொண்டால் எங்காவது சொல்லி வேலை வாங்கி தருகிறேன் என சொன்னேன். அதன் பிறகு என்னை பார்க்க அவன் வரவில்லை. ஒரு வருடம் கழித்து நான் தான் அவனை பார்க்க போக வேண்டியிருந்தது

அவன் பேசும் நுனி நாக்கு ஆங்கிலத்தால் ஒரு பெரிய பைனான்ஸ் கம்பெனியில் மானேஜராக வேலை கிடைத்து சேர்ந்திருந்தான். அவர்கள் அவனை கட்டி வைத்திருக்கிறார்கள் என செல்லின் அம்மா ஒரு நாள் இரவு பத்து மணிக்கு வந்து கதவை தட்டினார். அவரை என் வீட்டிலேயே என் மனைவியுடன் இருக்க சொல்லிவிட்டு என்னிடம் வேலை செய்யும்  ஐந்தாறு பேரை அங்கு நேராக வரச் சொல்லிவிட்டு நானும்  அந்த கம்பெனிக்கு போனேன். செல்லை மானேஜர் ரூம் சேரிலேயே நைலான் கயிற்றால் கட்டி வைத்திருந்தார்கள். அருகில் நின்றிருந்தவர்கள் யாருமே ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்பவர்கள் போல் இல்லை. செல்லின் உதடு தடித்து போய், முகமெல்லாம் வீங்கி இருந்தது

என்னைப் பார்த்தவுடன் கட்டை அவிழ்த்து விட்டனர்

ரெண்டு லட்ச ரூபா கையாடல் பண்டாரு சார், கேட்டா கெத்தா செலவாயிருச்சினு சொல்றாரு,“ வேறோரு ரூமில் இருந்த வந்த சேட்டு பையன் போல இருந்தவன் சொன்னான். இவன் ஒருவன் தான் அந்த கம்பெனியில் வேலை பார்ப்பவன் போல இருந்தான்.

அதுக்காக கட்டி வெச்சு அடிப்பிங்களா. போலிஸுக்கு போக வேண்டியதுதானே?” என்றேன்.

சார் கம்பெனி ரெப்பூடேஷன் டேமேஜ் ஆயிரும் சார். பொய் சொல்றாரு நாலு தட்டி தட்டுனா உண்மை வரும்னு பாத்தோம். இப்பதான் இந்தாளு ஒரு போத பார்ட்டினு தெரிஞ்சது, அதான் வீட்டிக்கி போன் பண்ணோம். சார் இவர் பண்ண வேலையால இந்த ப்ராஞ்சல இருக்க எல்லார் மேலயும் ஆக்‌ஷன் எடுப்பாங்க சார். நாந்தான் இந்த ப்ராஞ்சுக்கு சீனியர் மேனேஜர், என் வேலயே போய்ரும் சார்,” என்றான் நாத்தழுதழுக்க.

அவன் அந்த காசு முழுசா பவுடர் அடிச்சிருப்பான். அஞ்சு பைசா அவன் கைல இருக்காது. அவங்க வீட்லயும் இப்ப இருக்க நிலைமைல ஒன்னும் கிடைக்காது. நீங்க அவன அடிச்சு கொன்னு போட்டுட்டு ஜெயிலுக்கு போலாம் அவ்ளோதான்” என்றேன்

சார் ஏதாவது பாத்து பண்ணுங்க சார். இந்தாளுக்கு வேல கொடுத்த பாவத்துக்கு நான் நடுத் தெருவுல நிப்பேன் போலருக்கு,” என்றான்.

இப்ப நான் இவன கூட்டிட்டு போறேன். என் நம்பர தரேன் நாளைக்கு மத்தியானத்துக்கு மேல கூப்புடுங்க அவங்கம்மாகிட்ட பேசி எவ்ளோ தர முடியும்னு பாத்து சொல்றேன்” 

அவனை ஆஸ்பிடல் கூட்டிப் போய் மருந்து போட்டு வீட்டிற்கு அழைத்து சென்றேன்

பைனான்ஸ் கம்பெனிக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதாக பேசி, செல்லுடைய அம்மா நகையை அடகு வைத்து அந்த பணத்தை கொடுத்தார்

அதன் பிறகு மாதம் ஒரு தொகையை அவனுக்கு கொடுக்க ஆரம்பித்தார். அப்படியும் ஆறு மாதத்திற்கொரு முறை நகையோ, வெள்ளி சாமானோ மாயமாவது தொடந்து கொண்டுதான் இருந்தது. இப்போது தங்கை மகனின் அரணைக் கொடியை கழட்டி பவுடராக்கிவிட்டு நடு ரோட்டில் செருப்படிபட்டு உட்கார்ந்திருக்கிறான்

நான் போகாமல் நிற்பதை பார்த்துவிட்டு, “ஒரு தம்மு வாங்கி தரியா பாபுணா” என்றான்.

போதை நன்றாகவே இறங்கி இருக்கிறது போல பட்டது எனக்கு.

எந்திருச்சி வா,” என்றுவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

செருப்பெதுவும் போடாமல் அப்படியே நடந்து வந்து வண்டியின் பின்னால் உட்கார்ந்தான்.

புது பஸ் ஸ்டாண்டிற்குள் போய் ஒரு பெட்டி கடையில் கிங்ஸ் வாங்கி அவனிடம் கொடுத்தேன். நான் சிகரெட் இப்பொழுது குடிப்பதில்லை

பற்ற வைத்து இழுக்க ஆரம்பித்தான். சிரிப்பும் மிதப்பும் கண்ணில் இல்லை. முழுதாக போதையிறங்கி நின்று கொண்டிருந்தான்.

இப்படி போதையில இல்லாதப்போ என்ன வாழ்க்க வாழ்றோம்னு ஒரு நாளாவது யோசிச்சி பாத்திருக்கியாடா?” 

அவனுக்கு புகை இழுப்பதில் கவனமெல்லாம் குவிந்திருந்தது

எனக்கு கோபம் ஏறி வந்தது.

உனக்கு நாப்பது வயசுக்கு மேல ஆகுதுஇது வரைக்கும் நீ வாழ்ந்த வாழ்க்க யாருக்காச்சும் உபயோகமா இருந்தததா, உனக்கே கூட இல்ல. உன்ன விட சின்ன பையனெல்லாம் உன்ன நடு ரோட்ல செருப்பால அடிக்கறான். இப்படி வாழனுமாடா. இப்பாவாவது வாடா ட்ரீட்மெண்ட் எடு,”  என்றேன்

ட்ரீட்மெண்ட் எடுத்தா?”

“ம்.. திரும்ப ஒரு மனுசனா வருவஎன்றேன்.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நீ என்கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது ஒரு வார்த்த சொன்ன ஞாபகம் இருக்காநீதாண்டா அவன்னு, அது உண்மைனா. கோக் ஏத்துனா நான் ரெண்டாள் பாபுணா. குருவி எனக்குள்ள இறங்கிறுவான். அப்புறம் சிரிப்பும் சந்தோஷமும் மட்டும்தான். செல்லா மட்டும் இருந்தன்னா ரெண்டு நாள்ல செத்து போயிருவேன்,” என்றான்.

ஒரு பப் இழுத்துவிட்டு தொடர்ந்தான். “உங்களுகெல்லாம் அவன் செத்துட்டான் எனக்கு இன்னும் அவன் உயிரோடதான் இருக்கான். கல்லுல மந்திரம் சொல்லி சாமிய எழுப்புற மாதிரி என் உடம்புல கோக்கை விட்டு அவன எழுப்புறேன். நான் உசுரோட இருக்க வரைக்கும் அவனும் இருப்பான்” 

இன்னுமாடா உம் பழக்கத்துக்கு குருவி பேர சொல்லிகிட்டு இருப்ப?” என்றேன்.

நிமிர்ந்து என்னை பார்த்தான்பில்டர் வரை கங்கு போய்விட்டது, அதை கீழே போடாமல் விரல்களை விசில் அடிப்பது போல் மடக்கி நடுவில் கங்கின் நுனியில் மெலிதாக ஒட்டிக் கொண்டிருந்த பில்டரை பிடித்து உதட்டில் வைத்து புகையை இழுத்தான், கங்கு உதட்டில் ஒளிர்ந்து அடங்கியது

அன்னை – தன்ராஜ் மணி சிறுகதை

தன்ராஜ் மணி

“உன்ன அனுப்புறதா இல்ல, அந்த கெழவிக்கு இதே வேலையாப் போச்சி, எப்ப பாரு ட்ராமா போட்டுக்கிட்டு,” பால் பாத்திரத்தை நங்கென்று அடுப்பின் மேல் வைத்தாள் கெளசல்யா.

சாந்தாவிற்கு சத்தத்தில் பல் கூசியது, பல்லை நாவால் தேய்த்துக் கொண்டார்.

“எல்லாம் நீ குடுக்குற எடம்,” என்றாள் சீறலாய். “கொழந்த பொறந்தா அவ அவ அம்மா வருஷக்கணக்கா வந்து இருந்து பாத்துக்குராங்க, எனக்குப் பாரு கொடுப்பினைய, எடுத்ததே ஆறு மாச விசாதான் அதுல ரெண்டு மாசம் கூட முழுசா முடியல, அதுக்குல்ல போறேனு நிக்கற.” கெளசல்யாவின் தோள்கள் குலுங்க, கேவல் ஒலி எழுந்தது.

“பொறந்து ரெண்டு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள, மகதி எம்மூஞ்ச பாத்து பாத்து சிரிக்குது, எனக்கு மட்டும் அத உட்டுட்டு போகனும்னு ஆசயா கெளசி? ஆறு மாசம் அதுகூட இருந்துட்டு உனக்கும் ஒத்தாசயா இருக்கனும்னுதான் ஆச. உடம்பு முடியலனு சொன்னா என்ன பண்ண முடியும்?”

“இதெல்லாம் உன்ன அங்க வர வைக்க அந்த கெழவி போடுற நாடகம். அத்தனை பேரு அங்க இருக்காங்க, அது போதாதா அதுக்கு. காய்காரம்மா பாக்யத்துக்கு பணங்குடுத்து டெய்லி வந்து பேசிட்டு இருக்கச் சொல்லிட்டுதானே வந்திருக்க? அது பத்தாதுனு ஒரு நாடகம் கூட மிஸ் பண்ணாம பாக்கனும்னு அதோட ரூம்ல புது டிவி வாங்கி வெச்சிருக்க, மணியண்ணன்கிட்ட தெனம் அதுக்கு புடிச்ச அயிட்டம் ஒன்னாவுது பண்ணிருனு சொல்லியிருக்க, அப்பாவையும் அருணையும் வேற, அது எது சொன்னாலும், கத்தினாலும் வாயே தொறக்ககூடாதுனு மெரட்டி வெச்சிட்டு வந்திருக்க, இதெல்லாம் எனக்கு தெரியாதுனு நெனச்சியா?. ஒரு ஆறு மாசம் அந்த கெழவி நீ இல்லாம இருக்காதா? உடம்பெல்லாம் விஷம்,” என்றாள், அழுகையை நிறுத்தாமல்.

“அங்க இல்லாதப்போ ஒண்ணுக் கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா…”

“அடேயப்பா! அப்படியே பொட்டுனு போயிரும் உங்கொம்மா. எல்லார் உசுரயும் எடுத்துட்டுதான் அது போகும்,” கண்ணைத் துடைத்துக் கொண்டே பாலை அடுப்பு பாத்திரத்தில் இருந்து டம்பளரில் ஊற்றினாள். காபித்தூள், சர்க்கரை போட்டு கலக்கி எடுத்துக் கொண்டு மாடிப்படி ஏறினாள்.

சற்று நேரத்தில் குழந்தையுடன் கீழே வந்தாள். குழந்தையை ராக்கரில் போட்டுவிட்டு சமையலறைக்கு வந்தாள். சாந்தம்மா உணவு மேஜையில் அமர்ந்த்து அழுது கொண்டிருந்தார்.

மகளைப் பார்த்தவுடன் கண்களைத் துடைத்துக் கொண்டு, “கிளம்பும்போதே இப்பிடி உட்டுட்டு போகாதன்னு புலம்பிகிட்டே இருந்துச்சு, ஏதாவுது ஆயிருமோனு பயமா இருக்கு, நான் போறண்டி”

“போ, அப்புறம் உனக்கு மக இருக்கானு மறந்திரு”

“ஏண்டி இப்படி பேசற”

“முப்பது வருஷமா மருமகன் வீட்டில ஒக்காந்துகிட்டு எல்லாத்தையும் ஆட்டி வெச்சிக்கிட்டு இருக்கு, அது சொல்ற ஆட்டத்தை எல்லாம் நீயும் ஆடிக்கிட்டு இருக்க. நிஜமாத்தான் சொல்றேன், பொண்ணு வேணுமா அம்மா வேணுமானு நீயே முடிவு பண்ணிக்கோ”

“எல்லாருக்கும் வயசாகும் கெளசி”

“சாபம் உடுறியா உடு. உன்ன மாமியார் இருந்தாக்கூட வேலை வாங்காத அளவுக்கு வேல வாங்கிட்டு இருக்கு அது. தெனம் இதப்பண்ணு அதப்பண்ணு, அதை அங்க வெக்காத இங்க வை, டிவியை போடு சீக்கிரம்னு விரட்டிகிட்டே இருக்க மகராசிக்கு தான் உன்கிட்ட எப்பவும் பவசு.”

கெளசி காய்கறிகளை ப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெட்டத் தொடங்கினாள். சாந்தம்மா, “இங்க குடு நான் வெட்றேன்,” என்றார்.

“ஒன்னும் வேணாம் நானே பண்ணிக்கிறேன், போய்டியினா நான் தானே பண்ணனும்.”

ரகு படியிறங்கும் ஓசை கேட்டது.

எடுத்து வந்த காலி காபி கோப்பையை சமையலறை சிங்கில் போட்டான். அவனை பார்க்காமலே, “மெதுவா இறங்க மாட்டிங்களா, கொழந்த தூங்குதில்ல,” என்றாள் கெளசி.

ரகு சிரித்துக் கொண்டே “என்ன காலங்காத்தால அம்மா பொண்ணு சண்டையா?” என்றான். பேசிக்கொண்டே சாந்தம்மா அமர்ந்திர்ந்த உணவு மேஜையைக் கடந்து சென்று தோட்டக் கதவின் திரைச்சீலைகளை விலக்கினான் . கண்ணாடியால் ஆன இரட்டைக் கதவுகள் வழியாக தோட்டத்தில் இருந்து சூரிய ஒளி உள்ளிறங்கியது.

சாந்தம்மா தணிந்த குரலில் ” காலையில ஊர்ல இருந்து போன் வந்தது, கெளசி பாட்டிக்கு ஒடம்பு செரியில்லனு”

“என்னாச்சு?”

“ப்ரஷர் ரொம்ப கம்மியா இருக்காம், எந்திரிக்கவே முடியலயாம். சாப்ட்டே ரெண்டு நாள் ஆச்சாம், பால்தான் ஸ்பூன்ல…” சொல்லி முடிக்கும் முன்னே அழ ஆரம்பித்துவிட்டார்.

“ஆஸ்பிடல் கூட்டிடு போலயா அத்த?”

“ஒண்ணும் பெருசா பண்ண முடியாது வீட்லேயே வெச்சுப் பாருங்கனு சொல்லிட்டாங்களாம்”

“சாப்புடாம தர்ணா பண்ணா ப்ரஷர் எறங்கதாம் செய்யும்,” சீறலாய்ச் சொன்னாள் கெளசி.

” சாப்பிட முடியலயாம்டி” என்றார் சாந்தம்மா.

ரகு போனை எடுத்து டயல் செய்தான்.

“மாமா, ரகு. ஹாங் நல்லா இருக்கேன். பாட்டிக்கு எப்படி இருக்கு?”

“…”

“ம்”

“…”

“ம்”

“…”

“ம்”

“சரி நீங்க பாருங்க, நான் மத்தியானத்துக்கு மேல போன் பண்ணிச் சொல்றேன்”, போனை வைத்தான்.

“என்ன, அனுப்பி வைங்கனு சொல்றாரா, குடுங்க போனை,” என்று ரகுவை நோக்கி வந்தாள் கெளசி.

” கெளசி,” என்றான் ரகு சற்று குரலை உயர்த்தி.

“ஆமா என்ன மெரட்டி அடக்குங்க,” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள்.

“சீரியஸாதான் இருக்கு கெளசி, கொழந்த மாதிரி பண்ணிட்டு இருக்காத. அத்த, உங்க டிக்கெட் ப்ரிண்ட் அவுட் குடுக்கிறிங்களா, இப்பவே போன் பண்றேன்,” என்றான் ரகு

சாந்தம்மா முந்தானையில் கண்ணைத் துடைத்துக் கொண்டு டிக்கெட் எடுக்க மாடிப்படி ஏறினார்.

சாந்தம்மா லண்டன் வந்து ஒரு வாரம் வரைக்கும் பாட்டி நன்றாகத்தான் இருந்தார். அதன் பிறகுதான் சரியாக சாப்பிட முடியவில்லை, இரவெல்லாம் தூங்காமல் கத்துவது என்று ஒன்றொன்றாக ஆரம்பித்தது. இரண்டு நாளாக படுத்த படுக்கை.

சாந்தம்மாவிற்கு குற்றவுணர்ச்சி வாட்டியது. எப்படியாவது அங்கு போய் சேர்ந்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார். ரகு அன்று மதியமே கிளம்பும் படி பயணச்சீட்டை மாற்றிக் கொடுத்தான். கெளசி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அது வேறு சாந்தம்மா மனதை சங்கடப்படுத்தியது.

பெட்டியில் அனைத்தையும் எடுத்து அடுக்கிவிட்டு கீழே வந்தார். அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. குழந்தையை ஸ்ட்ராலரில் போட்டு எடுத்துக் கொண்டு ஒரு நடை போக கிளம்பினார்.தினமும் செய்வதுதான். கெளசி கதவை மூட வரும்போது ஏதோ சொல்ல வந்து எதுவும் சொல்லாமல் மூடிவிட்டுச் சென்றாள்.

கோடைக்கால லண்டன் தெரு வண்ணமயமாய் இருந்தது. தெருவின் இரு மருங்கிலும் பிங்க் செர்ரி ப்ளாசம்களும், தங்கச் சங்கிலி மரம் எனப்படும் கொத்து கொத்தாக மஞ்சள் நிற பூக்கள் பூத்துக் குலுங்கும் லேபர்னம் மரங்களும் நின்றன. பூத்து நிற்கும் இம்மரங்களுக்கு நடுவில் நடப்பது அந்த சோகமான மனநிலையிலும் சாந்தம்மாவிற்கு இதமாக இருந்தது. குழந்தையை தள்ளிக் கொண்டு வழக்கமாக செல்லும் பூங்காவிற்கு சென்று ஒரு பெஞ்சில் அமர்ந்தார்.

அவர் முன்னால் பழமையான ஓக் மரம் பெரிய புல்வெளியை பார்த்து நின்றுக் கொண்டிருந்தது, அதைச் சுற்றிலும் பல வண்ணங்களில் பூத்த ரோஜா பாத்திகள். சுற்றியிருந்த இயற்கையின் வண்ணங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து எந்த எண்ணமும் இல்லாமல் ஒவ்வொரு நிறமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

எப்போதும் போல பூங்காவில் நாய் எஜமானர்கள் தங்கள் நாய் மலம் கழிக்கும் வரை நின்று அதை பாலிதீன் பையில் அள்ளி கையில் வைத்துக் கொண்டு குப்பைத் தொட்டியை கண்ணால் தேடியபடி நடந்தனர். வயதான பாட்டிகள் சக்கரம் வைத்த பைகளைத் தள்ளிக் கொண்டு சிரித்து பேசிக் கொண்டே கடந்து சென்றனர். இவர்களுக்கெல்லாம் கெளசியின் பாட்டியைவிட பத்திருபது வயது அதிகமாகவே இருக்கும். இந்த ஊரில் வயதானவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தங்குவதில்லை, தனியாகத்தான் வாழ்கின்றனர் என்று கெளசி சொல்லியிருக்கிறாள். இங்கு வரும் வரை குழந்தைகள் ஆதரவில்லாமல் தனியாக இருப்பதால் இங்கிலாந்தில் வயதானவர்கள் எல்லோரும் சோகமாக வானத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்கள் என்றே சாந்தம்மா நினைத்திருந்தார். சிரித்துக் கொண்டு, உற்சாகமாய் சுற்றித் திரியும் இந்த பாட்டிகளை பார்த்தால் எப்போழுதுமே அவருக்கு ஆச்சரியம். ஆனால் இப்போது இவர்களைப் பார்த்தவுடன் அம்மாவின் ஞாபகம் அதிகமாக, கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.

எழுந்து குழந்தையை உருட்டிக் கொண்டு மீண்டும் வீடு வந்து சேர்ந்தார். டி.வி.யில் ஹிந்தி நாடகம் ஓடிக்கொண்டிருந்தது, கெளசி அதைப் பார்க்காமல் போனை நோண்டிக் கொண்டிருந்தாள். யாரிடமோ சொல்வது போல போனில் இருந்து கண்ணை தூக்காமலே, “ஒரு மணி நேரத்துல ஏர்போர்ட் கெளம்பணும், டாக்சி வந்துரும்,” என்றாள்.

“நீயும் வரியா ஏர்போர்டுக்கு?” என்று கேட்டார் சாந்தம்மா. கெளசி எதுவும் சொல்லவில்லை.

சாந்தம்மாவிற்கு மெலிதாய் சிரிப்பு வந்தது, ரகு அலுவலகம் விட்டு வரும் வரை நைட்டியில் உலாத்திக் கொண்டிருப்பவள், டாப்பும் ஜீனும் போட்டு தயாராக உட்கார்ந்திருந்தாள்.

அம்மாவை ஏர்போர்டிற்கு அழைத்துச் சென்று, செக்கின் செய்து, செக்யூரிட்டி கேட் வாசலில் வைத்து, “போய் சேந்ததும் போன் பண்ணு “என்றதை தவிர கெளசி எதுவுமே பேசவில்லை.

தனியாக விமானத்தில் அமர்ந்தவுடன் சாந்தம்மாவிற்கு அம்மாவின் ஞாபகம் அதிகமானது. ஊர் போய் சேருவதற்குள் அம்மா போய் விடுவாளோ என்ற நினைப்பு வந்து கண்ணில் நீர் முட்டிக் கொண்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறு வயது ஞாபகம். சாமிநாதபுரத்தில் குடியிருந்த அந்த ஒண்டிக் குடித்தன வீடு, எந்நேரமும் உடனிருக்கும் விளையாட்டுத் தோழிகள், சாப்பாட்டிற்கே இல்லாவிட்டாலும் சந்தோஷமான நாட்கள் அவை. அப்பாவும் அம்மாவும் சேர்ந்து நூல் தோண்டி, தறி நெய்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இரண்டு வேட்டி நெய்ய முடியும். அடுத்த பதினைந்து நாட்களுக்கு அதில் கிடைக்கும் கூலியில்தான் சாப்பாடு. பல நாட்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டம். அவர்களுக்கு இருக்கிறதோ இல்லயோ சாந்தம்மாவிற்கு ஒரு வேளை சாப்பாட்டிற்காவது அம்மா வழி செய்து விடுவார். அப்பொழுதே அம்மா எல்லோரிடமும் அதிகார தோரணையில்தான் பேசுவார், அது அவர் சுபாவம்.அப்பாவும் சாந்தம்மாவும் நேரதிர், வாயே திறக்க மாட்டார்கள்.

பத்தாவதில் அவர் பள்ளியிலேயே முதலாவதாக சாந்தம்மா தேறியிருந்தார். அம்மாவிடம் தாயார் மடத்தில் இலவச தையல் கிளாஸ்ஸில் சேர்த்துவிட்டால் அவர்களே கற்றுக் கொடுத்து, ஒரு தையல் மிஷினும் கொடுப்பதாக யாரோ சொல்ல, மேற்கொண்டு படிக்க வேண்டாம் நீ தையல் கற்றுக் கொள்ள போ, என்று சொல்லிவிட்டார். க்ரேஸி மிஸ் வீட்டிற்கே வந்து, பெண்ணைப் படிக்க வையுங்கள், என்று எவ்வளவோ கேட்டுப் பார்த்தார், அம்மா பிடிவாதமாக மறுத்து விட்டார்.

தையல் கிளாசில் சேர்ந்த ஒரு மாதத்திலேயே கெளசியின் அப்பா வீட்டுக்காரர்கள் பெண் கேட்டு வர, கல்யாணமும் அந்த வயதிலேயே முடிந்து விட்டது. திருமணமான ஓரிரு வருடத்திலேயே அப்பா இறந்துவிட்டார், அப்பொழுதிருந்து அம்மா சாந்தம்மா வீட்டில்தான் இருக்கிறார். நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது சாந்தம்மாவிற்கு, அம்மா சொன்னதை இது நாள் வரை ஒரு முறை கூட மறுத்துப் பேசியதேயில்லை. விமானத்தில் இருந்த பத்து மணி நேரமும் தூக்கமும் இல்லாமல், கொடுத்த எதையும் சாப்பிடவும் முடியாமல் இந்நினைவுகளுடன் சங்கடமாக நெளிந்து கொண்டே இருந்தார்.

அழைத்துச் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த அருண், பார்த்தவுடன், “அதுக்கு ஒன்னும் இல்லமா, உன்ன பாத்தா சரி ஆயிடும் வா,” என்றவன் காரில் ஏறிய சிறிது நேரத்தில் அவனாகவே “ நைட்லாம் ஐயோ ஐயோனு கத்துது, எனக்கே பயமா இருக்கு, யாருக்குமே தூக்கம் இல்ல,” என்றான்.

காரை வழியில் எங்குமே நிறுத்த விடவில்லை சாந்தம்மா. சேலம் வந்து சேர்ந்தவுடன், வீட்டு பக்கத்தில் இருக்கும் ரோஷன் பேக்கரியில் நிறுத்தி தேங்காய் பன் வாங்கி வர சொன்னார். சாந்தம்மாவின் சிறுவயது தோழி அனிதாவின் குடும்ப கடை அது. “ஒன்னுமே சாப்புடறதில்லமா,” என்றவனிடம் “என் மனசு திருப்திக்கிடா, போ வாங்கிட்டு வா,” என்றார்.

தேங்காய் பன்னுடனும், நீண்ட பயணத்தின் களைப்புடனும் சாந்தம்மா வீட்டிற்குள் நுழைந்தார்.

அம்மாவை, அவருடைய அறையில் இல்லாமல், வீட்டு ஹாலிலேயே ஒரு ஓரமாய் ஒரு புதிய நைலான் நாடா கட்டிலில் படுக்க வைத்திருந்தனர். தலை மொட்டை அடித்திருந்தது. வாய் எதையோ அனத்திக் கொண்டிருந்தது.

“அம்மா, பாரு சாந்தா வந்திருக்கேன்,” என்று சில முறை சொன்னார்.

“தூங்கிட்டிருக்கு, கொஞ்ச நேரத்துல எந்திரிச்சிரும்,” என்றார் கெளசியின் அப்பா.

“என்னங்க மொட்டை எல்லாம் அடிச்சிருக்கிங்க?”

கெளசியின் அப்பா, “ நீ போன ரெண்டு வாரத்துலயே தலை ரொம்ப அரிக்கிதுனு சொன்னுச்சு. டாக்டர் பாத்திட்டு சொரிஞ்சு சொரிஞ்சு ரொம்ப புண்ணா இருக்கு முடி எடுத்தா தான் மருந்து போட முடியும்னு சொன்னாரு, அதான்.. இதையெல்லாம் சொன்னா அங்க வருத்தப்பட்டிகிட்டு இருப்பனு சொல்லல, போ துணியாவுது மாத்திகிட்டு வா, பத்து நிமிஷத்துல திரும்பி எந்திருச்சிரும்,“ என்றார்.

அம்மாவின் உடல் பாதியாகி இருந்தது, கன்னங்கள் இருக்கும் இடமே தெரியாமல், பற்கள் மிக பெரிதாக தெரிந்தது. அம்மாவின் கைகளை தடவிக் கொண்டும் முகத்தையே பார்த்துக் கொண்டும் அருகில் உட்கார்ந்திருந்தார் சாந்தம்மா. திடீரென்று ஐயோ என்று சத்தமாக, ஆங்காரமாய் ஒரு ஓலம் அம்மாவிடம் இருந்து வந்தது. அவ்வளவு நொய்மையான உடலில் இருந்து வரும் குரலே அல்ல அது. சாந்தம்மாவிற்கு அதிர்ச்சியில் உடல் குலுங்கியது, பற்கள் தாங்கவே முடியாத அளவிற்கு கூசியது. “ஐயோ… ஐயோ… ஐயோ…” வென உக்கிரமான ஜெபம் போல கத்திக் கொண்டே இருந்தார்.

சாந்தம்மா சற்று சுதாரித்து கொண்டு, அம்மாவின் மோவாயை பிடித்து ஆட்டி, சத்தமாக “அம்மா, சாந்தாமா, சாந்தா” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார். கத்தல் மெதுவாக நின்றது. அம்மாவின் வழக்கமான குரல் “வந்துட்டியா..” என்று ஈனஸ்வரத்தில் கேட்டது.

“வந்துட்டேமா, தொட்டுப் பாரு இங்கதான் இருக்கேன்,” சொல்லிக் கொண்டே அவர் கைகளை எடுத்து தன் முகத்தின் மேல் வைத்தார். அம்மாவின் கைகள் சாந்தாவின் முகத்தில் அளைந்தது. அதே ஈனஸ்வரத்தில், “போவாத, உட்டுட்டுப் போவாத,” என்று அனத்தல் எழுந்தது.

“எங்கயும் போவல, உம் பக்கத்துலதான் இருக்கேன், கவலப்படாத, தேங்கா பன்னு சாப்புடிரியா, அனிதா கடைல வாங்கிட்டு வந்தேன்.”

“உம்” என்றார் அம்மா. அம்மாவை தூக்கி சாய்ந்தவாக்கில் உட்கார்த்தி வைத்தார். தேங்காய் பன்னை சிறிதாகப் பிய்த்து, மெது மெதுப்பு வரும் வரை பாலில் சில முறை முக்கி, அம்மாவின் வாயில் வைத்தார். உடனே விழுங்கி விட்டு அடுத்த வாய்க்கு வாயைத் திறந்தது.

“பாரு, நாலு நாளா யாரு எது குடுத்தாலும் வாயே தொறக்கல, நீ ஊட்டுனா கப்பு கப்புனு முழுங்குது,” என்றான் அருண் எரிச்சலாக.

“சும்மா இருடா கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்சம் பால் கொண்டு வா, போ,” என்றார் சாந்தா.

ஒரு மணி நேரத்தில் பாலில் தொய்த்துக் கொடுத்த முழு பன்னையும் அம்மா சாப்பிட்டு முடித்தார். “சாப்புடலனா உடம்பு என்னத்துக்கு ஆறதும்மா, சாப்புட வேண்டியதுதான,” என்றார் சாந்தா.

“சாப்புட புடிக்கல” என்றார் அம்மா அதே ஈனஸ்வரத்தில்.

“சரி, படுத்துக்கோ. நைட்டு நானே சமைக்கிறேன், என்ன வேணும் உனக்கு?”

“பொங்கலு,” என்றார் அம்மா.

சாந்தம்மா முகத்தில் புன்னகை அரும்பியது. “சரி, பண்ணி தரேன், இப்போ கொஞ்ச நேரம் தூங்கு, நான் தான் வந்துட்டேன்ல, எல்லாம் சரி ஆயிடும்.”

அருண் பாட்டியை முறைத்து பார்த்துவிட்டு எழுந்து போனான்.

சாந்தம்மா வந்திறங்கிய மூன்று நாளில் எழுந்து சற்று நடமாடும் அளவுக்கு உடல் தேறி வந்தது பாட்டிக்கு. தினமும் சாந்தா அவருக்கு அருகிலேயே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டார், கேட்டதை சமைத்து போட்டார், அனத்தலும் அலறலும் மூன்று நாளில் சுத்தமாக நின்று போனது. நான்காம் நாள் அதிகாலையில் சாந்தம்மா அசந்து தூங்கி கொண்டிருந்தார்.

“சாந்தா, சாந்தா ஏய் சாந்தா,” பிசிரற்ற அம்மாவின் குரல் கூவி அழைக்க திடுக்கிட்டு எழுந்து ஹாலுக்கு ஓடினார். அம்மாவின் முகம் மிகத் தெளிவாக இருந்தது, ஊருக்குப் போவதற்கு முன்னால் இருந்ததை விட நன்றாக இருப்பதாக சாந்தம்மாவிற்கு தோன்றியது. “என்னம்மா,” என்றார்.

“இன்னும் என்ன தூங்கிட்டு இருக்க, வூட்டு வாசல்ல கோலம் போட்டு எத்தன நாள் ஆவுது, நீ போனதுல இருந்து உம் மருமவ கீழ தல காட்றதே இல்ல, போயி கோலத்த போடு.“

“ம்” என்று விட்டு கொல்லைப்புறம் நோக்கி நகர்ந்தார்.

“சாந்தா, அந்த சுப்பரபாதம் டி.வி போட்டுட்டு போ”

ரிமோட் எடுத்து TTD சானலை போட்டு விட்டு, கொல்லைப்புறம் சென்றார். கோல மாவை எடுத்துக் கொண்டு வரும் வழியில் ஊருக்குப் போவதற்கு சில மாதங்களுக்கு முன் நட்ட குட்டை ரக பப்பாளி முதல் காய் போட்டிருப்பதைப் பார்த்து அதை மெதுவாக தடவி கொடுத்தார். அருகில் இருந்த துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து அதை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அடி வயிற்றில் இருந்து ஒரு கேவல் எழுந்தது. கைகளால் வாயைப் பொத்தியபடி குரல் அடக்கி அழ ஆரம்பித்தார்.

சாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை

தன்ராஜ் மணி

மண்ணுருக மணல் கொதிக்க
நீரவிய , செடி கருக
சித்திரை வெயில்
சுட்டெரித்த மதிய வேளையில்
அப்போர் நிகழ்ந்தது
பனையின் அடிமரம் போல் கருத்த மேனியும்
கற்பாளம் போல் மார்பும்
அளவெடுத்து அடித்து வைத்த
கோவில் தூண் போன்ற கைகளும்
அக்கைகளின் நீட்டம் போல்
கதிரொளியில் மின்னும் போர் வாளும்
தன் உதடுகளில் மெல்லிய
புன்னகையும் சூடி
குதிரையில்
வீற்றிருந்தான் தளபதி சாம்பன்-
தோல்வியறியா மாவீரன்
பகைவர்க்கு காலன்

போர் முரசம் கொட்டத் தொடங்கியது
இடியும் மின்னலுமென
வான் விட்டு மண்ணிறங்கும்
பெருமழையென
சாம்பனின் படை
கொம்புகள் பிளிற
முழவுகள் முழங்க
பறைகள் அதிர
பகையரசின் படை மேல்
பொழிந்தது
ஒரு மின்னல் மின்னி மறையும்
பொழுதில் பகைவரின்
படை வீரர்கள் மண்ணில் கிடந்தனர்
எதிர்பட்ட தலைகள் கொய்து
மார்கள் பிளந்து
கொழுங்குருதி ஆடி
சாம்பனின் கைகளில் நின்றது
அவன் வாள்
படை நோக்கித் திரும்பி நின்று
வான் நோக்கி உயர்த்தினான்
தன் செவ்வாளை
வெற்றிக் களிப்பில்
ஆர்த்தது படை

புறமுதுகிட்டோடிய
பகையரசனின் உபதளபதி
வாள் உயர்த்தி ஆர்ப்பரிக்கும்
சாம்பனைக் கண்டான்
தோல்வியின் சீற்றம் எழ
வெறி கொண்டு குதிரையை
சாம்பனை நோக்கிச் செலுத்தினான்
அருகணைந்தால் தலை தப்பாது
என தெளிந்து ஈட்டி தாக்கும் தொலைவிலிருந்து
தன் கையிலிருந்த ஈட்டியை
சாம்பனின் முதுகை நோக்கி வீசினான்
ஈட்டி தன் பின்னால் அணுகுவது
சாம்பனின் மனம் அறிந்தது
சாம்பன் குதிரையை திருப்பினான்
ஈட்டி சாம்பனின் மாரைத் துளைத்து
முதுகில் வெளிவந்தது
அந்நிலையிலும் தன் கையிலிருந்த
வாளை வேல் போல வீசினான் சாம்பன்
அது உபதளபதியின் மார் பிளந்து குத்தி நின்றது.
கொதித்தனர் சாம்பனின் வீரர்கள்
கதறினர் வெறி கொண்டு
பகையரசின் படைகளை
துரத்திச் சென்று ஒருவர் மிஞ்சாமல்
வெட்டி சாய்த்தனர்
அதிலும் நிறைவுறாமல்
பகை நாட்டில் புகுந்தனர்
ஊர்களை எரித்தனர்
குளங்களில் நஞ்சிட்டனர்
கண்டவரை வெட்டி வீசினர்
சாம்பல் பூத்த மண்ணையும்
புகை மூடிய விண்ணையும்
சமைத்துவிட்டு
தங்கள் நாடு வந்து சேர்ந்தனர்
நாடே கதறியது
குலம் கண்ணீரில் கவிந்தது
சாம்பன் மாவீரனாய் மண்ணில்
விதைக்கப்பட்டான்
விதைக்கப்பட்ட பதிமூன்றாம் நாள்
நடுகல்லாய் நடப்பட்டான்
நாள்தோறும் பூசனை ஏற்றான்
குலப்பாடல்களில் நிறைந்தான்
வெறியாட்டில் தம் குலத்தாரில்
இறங்கி நற்சொல் உரைத்தான்
சாமி ஆனான்

இன்னும் சில காலம் சென்றது
பகையரசு சாம்பலிலிருந்து
எழுந்தது
புகை போல் படை கொணர்ந்து
நாட்டைச் சூழ்ந்தது
அது வஞ்சத்தின் வெறி கொண்டிருந்தது

சாம்பனின் வீரகதைகள் உருமியுடன் உருவேற்ற
அவன் கொடிவழியினர்
அவன் வெற்றிகளின் பெருமிதங்கள் கண்ணில் மிதக்க
பகைவர்கெதிராக போருக்கெழுந்தனர்
வஞ்சத்தின் வெறி
பெருமிதத்தின் மிதப்பின்
மேல் வெற்றி கொண்டது

இது பகைவரின் முறை…
அவர்களின் வாட்கள்
எதிர் வந்த அனைத்தையும் தீண்டி
செம்மை குளிக்க தொடங்கின
போரில் தப்பிய சிலரும்
பெண்டிரும் குளவிகளும்
சாம்பனின் நடுகல்
வண்டியில் முன் செல்ல
கண்ணீரும் கதறலுமாய்
அதன் பின் நடந்தே
பகைவனின் வாளும் வஞ்சமும்
தீண்டா தொலை நிலம்
சென்று சேர்ந்தனர்

சாம்பன் புது நிலத்தில் நடப்பட்டான்
அன்னத்திற்கு பதிலாய் ஆற்றாமையும்
குருதிக்கு மாற்றாய் கண்ணீரையும்
படையலாய் கொண்டான்
சோற்றுக்கு வழியில்லாத குடிக்கு
தினம் தினம்
பூசை செய்ய வாய்க்கவில்லை
நாள் பூசை வாரமாகி
வாரம் மாதமாகி
மாதம் வருடமாகியது
வருடத்திற்கு ஒரு முறை
சித்திரை முழு நிலவு நன்னாளில்
வான் பார்க்க பொங்கலிட்டு
பல விலங்கு பலி கொடுத்து
ஊர் கூடி குலவையிட்டு
பேர் சொல்லி புகழ் பாடி
அவனை ஏத்தி வணங்கியது
அவன் குடி

இனியும் ஒரு காலம் வந்தது
வாள் வீச்சும் மற்போரும்
வீரமும் மறமும்
சோறும் பேரும் தராது,
சிறையும் இழிவும் தந்தது
பழம் பெருமை பொருளாகாமல் போனது
அழியாப்புகழ் அன்னமாகாமல் போனது
உயிர் உடல் தங்க சாம்பனின் குடி
வேல் விட்டு
வேறு வேலை தேடி போனது
சோறீட்டச் சென்ற குடி
சொல் பேண நேரமற்றுப் போனது
மண் மறைந்த இறுதி குலப்பாடகனுடன்
சாம்பன் சொல்லில் இல்லாமல் ஆனான்
சொல் பேண நேரமில்லையெனினும்
வருடத்திற்கொரு பூசை
சித்திரை முழு நிலவில்
வான் பார்க்க பொங்கலிட்டு
பல விலங்கு பலி கொடுத்து
ஊர் கூடி குலவையிட்டு
அவன் புகழை மனதில் நிறுத்தி
வணங்கியது
அவன் குடி

இனியும் ஒரு காலம் வந்தது
கரப்பானும் கருகிச் சாகும்
பஞ்சம் சூழ்ந்தது
கொத்து கொத்தாக சாவு விழுந்தது
மக்கள் கூட்டம் நாதியற்று போனது
குடிகள் பிழைக்க ஊர் விட்டெழுந்தது
சாரி சாரியாய் சோறிருக்கும்
திசைகள் நோக்கி சிதறி சென்றது
அரை உயிர் ஏந்தி அன்னம் தேடி
சென்ற குடிக்கு
சாம்பனை தூக்கி சுமக்கும்
வலுவற்று போனது

எம் உயிரில் நீ கலந்திருப்பாய் எப்போழுதும்
உயிர் தங்கி பிழைத்திருந்தால் வந்திடுவோம் அப்பொழுதும்
என்று சொல்லி
நட்ட இடத்தில் அவனை நிற்க விட்டு
கண்ணீருடன் விடை கொண்டது

புகழ் சூடி வாழ
வாள் தூக்கி சமர் செய்த குடி
ஒரு வேளை களி உண்டு வாழ
வாழ்வோடு பெரும் சமர் செய்தது
பலிகள் பல வலிகள் பல கடந்து
பஞ்சம் வென்று பிழைத்து நின்றது
உயிர் இனி தங்கும் அது உறுதி என்றானதும்
சாம்பன் குடிகளின் கனவுகளில் எழுந்தான்
மறந்திருந்த குடி அனைத்தும்
அவனை நினைவில் எழுப்பியது
நம் தெய்வம்
நமக்காக தனித்திருக்கிறது
நம்மை காக்க ராப்பொழுதும் விழித்திருக்கிறது
அதைப் பசித்திருக்க விட்டு விட்ட
தம் நிலையை நொந்து கொண்டது
சிதறிவிட்ட குடி கூடி பூசை வைக்க வாய்ப்பில்லை
கனவில் கண்ட குடிகள் மட்டும்
சாம்பனைக் காண ஊர் சென்றது
மண் மூடி புதர் அண்டி
மறைந்திருந்த சாம்பனை
கண்ணீர் வழிய அகழ்ந்தெடுத்து
நீராட்டி தூய்மை செய்து
வான் பார்க்க பொங்கலிட்டு
ஒரு சிறு கோழி பலி கொடுத்து
காத்தருள வேண்டி நின்றது

வருஷத்துகொருக்கா வந்து போக ஏலாது
ஒண்டிக்கிட்ட எடத்துக்கும்
கூட்டிப் போக முடியாது
அதனால எஞ்சாமி
முடிஞ்சப்போ நாங்க வர்ரோம்
முடிஞ்சத செஞ்சு தர்ரோம்
கோவிக்காம ஏத்துக்கப்பா
எங்கள எல்லாம் காப்பத்தப்பா
எங்க குல சாமி நீதானப்பான்னு
அழுது பொலம்பிச்சு சனம்
மனசெறங்கின கொல சாமி
“உன் புள்ளைக்கி மொத சோறு
எம் முன்னால ஊட்டு
நீ அறுத்த மொத கதிர
எனக்கு பொங்கி போடு

நீ தொடங்கும் எதுவானாலும்
என் காலடியில் தொடங்கு
இத மட்டும் தப்பாம செஞ்சியனா
இனிமேலு ஒன்னுத்துக்கும்
கொறவில்ல உங்களுக்கு
வூடு நெறய புள்ளைங்களும்
குதிரு நெறய தானியமும்
பொட்டி நெறய பொன்னும் மணியும்
பொங்கி பொங்கி பெருகும்”னு
பெரியாத்தா மேல ஏறி வந்து
போட்டுச்சு உத்தரவு

சனம் மொத்தம் கன்னத்துல போட்டுகிட்டு
தப்பாம செஞ்சிருவோஞ் சாமி
கொறவொண்ணும் வெக்காம இனின்னு
சூடந்தொட்டு சத்தியம் பண்ணுச்சி

சாமி சொல்ல தட்டாம பக்தியோட
இருந்துச்சு சனம்
சாமியும் மனங்குளுந்து போயி
எட்டு மங்கலமும்
பதினாறு செல்வங்களும்
எட்டுக்கண் விட்டெரிய
வாழுற ஒரு வாக்கயயும்
சனங்களுக்கு வாரி வாரி
குடுத்துச்சு

ஒண்டிக் கெடந்த எடத்துல
ஓங்கி வளந்த சனம்
இன்னும் ஒசரம் தேடி
பல ஊரு பரவி குடி போச்சி
ஒதுங்க எடமில்லாம திரிஞ்ச சனத்துக்கு
போய் ஒக்காரும் எடமெல்லாம் சொந்தமாச்சு
பருக்க சோத்துக்கு பல நாள் பரிதவிச்ச சனத்துக்கு
பருப்பும் நெய்ச் சோறும்
பாலும் பாயாசமும்
எல நெறச்ச தொடு கறியும்
கவிச்சும் காய் கனியும்
ஒரு நாளும் கொறயல

வசதிய தொரத்திப் போன சனம்
வசதியா சாமிய மறந்து போச்சு
சாமி குத்தம் ஆகிப் போகும்னு
பயத்துக்கு பொங்க வெச்சு
சாங்கியத்துக்கு ஆடு வெட்டி
பேருக்கு கும்பிடு போட்டுட்டு
நிக்க நேரமில்லாம ஒடுச்சு சனம்

சனத்துக்கு இப்போ
பல ஊரு சொந்தம்
ஆனா சாமிக்கு வாச்சது அதே
வன்னி மரத்தடி தஞ்சம்

பயப்பட்டு வந்தாலும்
படையலிலே
கொறவில்ல
பொங்கச் சோறும்
பலியாடும் பகுமானமா
பாத்து செஞ்ச
சனத்துக்கு
எதுக்கு செஞ்சோம்
ஏஞ் செஞ்சோம்
தெரியல்ல
செஞ்சியினா
அள்ளி தரும்
செய்யாட்டி
கொன்னுப் போடும்
பாத்துக்கனு
சொல்லி சொல்லி
வளந்த சனம்
நான் குடுக்கேன்
நீ குடுனு
சாமிகிட்ட வேவாரம்
பேசுச்சு
கொற காலம் இப்படி போக
வந்துச்சி ஒரு புது காலம்.

 

“பெரியவனுக்கே சொல்ல சொல்ல கேக்காம குருவாயூர்ல போயி சோறு ஊட்டிட்ட, இவளுக்காவுது நம்ம கொல சாமிக்கு முன்னாடி செய்யனுண்டா” என்றார் அம்மா.

“ஏம்மா தொண தொணனு சொன்னதயே சொல்லிட்டு இருக்க. அந்த காட்டுக்குள்ள கை கொழந்தய தூக்கிட்டு எப்புடி போறது? ரோடு சரியில்ல , தங்கறதுக்கு பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் கூட இல்ல, பேசாம இருமா, குருவாயூர்லயே இவளுக்கும் செஞ்சிரலாம் , எல்லாரும் இப்ப அங்கதான் செய்றாங்க, அப்படியே ஆழபுழா போனம்னா ஒரு ரெண்டு நாளு நல்லா ரிலாக்ஸா இருந்துட்டு வரலாம்” என்றான் அரவிந்த்.

“உங்கப்பாரு பத்து வருசமா கொலசாமிக்கு படையல் வெச்சிரனும்னு சொல்லிகிட்டே இருந்தாரு, பண்ண முடியாமயே போய்ட்டாரு. நா போய் சேர்ரதுக்குள்ளயாவுது ஒரு படையல போட்டுட்டு வந்துரலாம்னா… “ முடிக்காமலே கேவ ஆரம்பித்தார்.

“எப்பப் பாரு எமோஷனல் ப்ளாக் மெயில்” என்று சிடு சிடுத்து விட்டு, மொபலை எடுத்தான்.

“மாமா, எப்படி இருக்கிங்க, ஆங் எல்லோரும் சூப்பர் மாமா. ஆங் நடக்கறா இப்போ. ஒன்னில்ல மாமா அம்மா குலதெய்வம் கோயில்ல வெச்சுதான் தியாவுக்கு அன்னப்ப்ரசன்னம் பண்ணனும்னு சொல்லுது, எப்படி என்னானு கேக்கலாம்னு”.

“…”

“நானும் அதத்தான் சொன்னென் மூணு நாளா ஒரே பாட்ட பாடிகிட்டு இருக்கு, இன்னைக்கி ஒப்பாரியே வெக்க ஆரம்பிச்சிருச்சு அதான் போய்ட்டு வந்துரலாம்னு. மாமா நீங்களும் கொஞ்சம் வரிங்களா , சேலம் வரைக்கும் போயிருவேன் அங்கருந்து ஊருக்கு எப்படி போகனும்னெல்லாம் தெரியல, கூகுள் மேப்ல ஊரு பேரே வரல”.

“…”

“ரொம்ப தாங்க்ஸ் மாமா, ஆங் நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்”.

“சந்தோசமா..,? கொஞ்சம் ஒப்பாரிய நிறுத்து, இந்த வீக் எண்ட் போயிட்டு வந்துரலாம். சண்முகம் மாமா வர்றாரு கூட. அவரு நம்ம கூடதான் கடைசியா வந்தாராம், கேட்டுகிட்டு போயிரலாம்னு சொன்னாரு”.

வெள்ளி மாலை அரவிந்த் குடும்பம் அவன் மாமாவோடு கிளம்பியது.
வண்டி ஏறியவுடனே உற்சாகமாகப் பேச ஆரம்பித்துவிட்டார் மாமா. பல வருடம் கழித்து குலதெய்வம் கோயில் போகும் குஷியில் இருந்தார். “உங்க பைப்பு கம்பெனி ஆரம்பிச்சப்பதான் கடைசியா போனது, ஏங்க்கா ஒரு இருவது வருசமிருக்குமா?” என்றார்.

“மேலயே இருக்கும்” என்றார் அம்மா.

“அந்த ட்ரிப்ப மறக்கவே முடியாது. கோயிலுக்கு போறதுக்கு ரோடே கெடயாது, முள்ளுக்காட்டுல ஒத்த அடி பாத மாதிரி இருக்கும். போற வழியில அந்த முள்ளுக் காட்டுக்குள்ள வேன்ல நால்ல மூணு டயரு பஞ்சராயிருச்சு, அப்பெல்லாம் ஏது மொபைலு, நானும் சேகருந்தா நாலு கிலோமீட்டர் நடந்தே ஊருக்குள்ள போயி லிப்ட்டு கேட்டு சங்ககிரி போயி ஆளு கூட்டியாந்து…, போதும் போதும்னு ஆயிருச்சு. அதுக்கப்புறம்தான் அங்க போற ஆசயே உட்டுப்போச்சு போ” என்றார்.

“மாமா, தமிழ் நாட்ல குக்கிராமுத்துகெல்லாம் ரோடு இருக்குனு சொல்றாங்க நம்மூருக்கில்லயா” என்றான் அரவிந்த்.

“ஊருக்கு ரோடு வசதியெல்லாம் அப்பவே இருஞ்ச்சிடா. ஊரு நம்ம கோயில் இருக்க எடத்துல இருந்து பல வருசத்துக்கு முன்னாடியே ஒரு ஆரேழு கிலோமீட்டர் தள்ளிப் போயிருச்சு. ஊரு தள்ளி போனதுல பொழக்கமில்லாம கோயில சுத்தி இருக்க ஏரியா பூராவும் முள்ளுக்காடா ஆயிப்போச்சி. ஊருக்கு வெளியே இருந்து அந்த முள்ளுக் காட்டுக்குள்ள போறதுக்குதா இவ்ளோ சிரமம்”.

“இன்னுமும் அப்படியேதா இருக்குமா அப்போ?” என்றான் அரவிந்த் கவலையாய்.

“கண்ல பாக்குற எல்லா நெலத்தையும் ப்ளாட் போட்டு வித்துகிட்டு இருக்கானுங்களே, அந்த காட்ட மட்டும் உட்டா வெச்சிருக்க போறானுங்க. புதுசா ஏதாவுது ஒரு நகர் முளச்சிருக்கும் காட்டுக்குள்ள, “ என்றார் சிரித்துக் கொண்டே.

அரவிந்த் “நம்ம சொந்த காரங்க யாருமே பக்கமா போவலயா அங்க?”

“நீ போன் பண்ணப்பறம் நானும் எல்லாத்துக்கும் போன போட்டு பாத்தேன், யார கேட்டாலும் போயி பத்து வருசமாச்சு, எட்டு வருமாச்சுனு தான் சொல்றானுங்க, கொழந்தங்க சோறூட்டுக்குதான் நிறைய பேரு போயிட்டிருந்தாங்க, கொழந்தங்கள தூக்கிட்டு அந்த காட்டுக்குள்ள இப்படி போக வர ரொம்ப செரமமா இருக்குனு எல்லாரும் வேற வேற கோயில்ல, வீட்லனு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. வேற பக்கம் இருக்க நம்மாளுங்க யாராவுது போவாங்கலா இருக்கும்.” என்றார் மாமா.

அதன் பிறகு அவர் கோயில் சென்ற அனுபவங்களையெல்லாம் சிறு குழந்தைக்குரிய ஆர்வத்துடன் வாய் சலிக்காமல் சொல்லி கொண்டே வந்தார். தங்க நாற்கர சாலையின் தயவில் நினைத்ததைவிட சீக்கிரமாக சேலம் வந்து சேர்ந்தனர். அரவிந்த் ராடிஸனில் ஏற்கனவே இரண்டு ரூம் புக் செய்து வைத்திருந்தான்.

“ரோடெல்லாம் சூப்பரா இருக்குல்ல மாமா, டோலு தான் வெச்சு தீட்றான் பரவால்ல இவ்ளோ சீக்கிரம் வந்துட்டோம்ல. நல்லா தூங்கிட்டு காலைல ஒரு எட்டு மணிக்கு போனா போதுமில்ல மாமா” என்றான் அரவிந்த்.

“டேய், காலைல ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிறுவோம், போயி எடத்த வேற கண்டு புடுக்கணுமில்ல. அப்பறம், ஆளு யாரும் கொஞ்ச நாளு வராம போயிருந்தா நாமதான் முள்ளு வெட்டி, சுத்தம் பண்ணி, பண்ணாரி பொடி போட்டு சாமிய கழுவினு எல்லாம் பண்னனும், அதுக்கு ஊருக்குள்ள இருந்து ஆளு வேற கூட்டிடு போவனும், நீ பாட்டுக்கு லேட் பண்ணிட்டு இருக்காத” என்றார் மாமா.

“சரி மாமா, ரெடி ஆயிட்டு வந்துர்ரோம்” என்றான்.

காலையில் ஐந்து மணிக்கே மாமா வந்து கதவை தட்டிவிட்டார்.

“தூக்கமே புடிக்கலக்கா, போயி சாமிய பாத்துட்டம்னா கொஞ்சம் நல்லாருக்கும்” என்றார் பல் தெரிய சிரித்து கொண்டு.

“எனக்கும் என்னவோ தூக்கமில்ல சண்முகம், அவங்கெல்லாம் நல்ல தூக்கம், இப்பதான் எழுப்பி உட்டேன், குளிச்சிட்டு இருக்காங்க, காப்பி சாப்புடுரியா” என்றார் அம்மா.

“எதுவும் வேணாடாங்கா எல்லாம் அங்க போயி பாத்துக்கலாம்” என்றார் மாமா.

அரை மணி நேரத்தில், பட்டு வேட்டி, சட்டை, சேலை, பட்டு பாவாடை என கட்டி தயாராகி வந்தனர் அரவிந்தும், அவன் மனைவியும் , குழந்தைகளும்.

“அம்மா காபி சொன்னியா” என்றான் அரவிந்த்.

“நாந்தான் வேணாம்னு சொன்னேன், அங்க போயி பாத்துக்குலாம், கொழந்தங்களுக்கு ஏதாவுது வேனும்னா வேணா சொல்லு, பார்சல் பண்ணி கார்ல எடுத்துட்டு போயிரலாம்” என்றார் மாமா.

“அவங்களுக்கெல்லாம் ஊர்ல இருந்தே கொண்டாந்தாச்சு, சுடு தண்ணி மட்டும் ப்ளாஸ்க்ல எடுத்துகிட்டா போதும். ஒரு காபி குடிச்சிட்டு போயிரலாம் மாமா” என்றான் அரவிந்த்.

“சீக்கிரம் போனா வேல செய்ய ஆள் கிடைக்கும், இல்லனா அவங்கெல்லாம் வேற கூலி வேலைக்கு போயிருவாங்கடா, சொன்னா கேளு அங்க போயி பாத்துக்கலாம் வா” என்று அவனை தள்ளிக் கொண்டு போனார் மாமா.

அரவிந்த் கீழே வந்து காரை எடுத்தான். வெளியில் இருந்த செக்யூரிட்டியிடம் ஊர் பெயரைச் சொல்லி வழி கேட்டான்.

“அந்தூருங்களா, கோயமுத்தூரு போற ரோட்ட புடிங்க,சங்ககிரி தாண்டி கேளுங்க சொல்லுவாங்க” என்றார் செக்யூரிட்டி.

“இது மாமாங்கம்னு போர்ட பாத்தாதா தெரியுது, எல்லாம் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போச்சு” மாமா ஒவ்வொரு ஊர் தாண்டும் போதும் அவர் முன்பெல்லாம் வந்த போது அந்த ஊர் எப்படி இருந்தது என மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டே வந்தார்.

சங்ககிரி வந்தது, பை பாஸில் இருந்து இறங்கி ஊருக்குள் காரை விட்டான் அரவிந்த். அங்கு ஊருக்கு வழி கேட்டான், “பைபாஸ்ல இருந்தா உள்ள வந்திங்க?” ,

“ஆமா” என்றான் அரவிந்த்.

அட பைபாஸ் மேல தாங்க அந்த ஊரே இருக்கு, பைபாஸ்லயே இன்னும் ஒரு 10 கிலோ மீட்டர் போனிங்கன்ன லெப்ட்ல ஒரு போர்டு வரும் பாருங்க”.

மீண்டும் பை பாஸில் ஏறி 10 கீ மீ வந்தவுடன், ஊர் பெயரில் போர்ட் இருந்தது, இடதுபக்கம் திரும்பி சில நிமிட பயணத்தில் ஊரின் சிறிய கடைவீதி வந்தது.

கண்ணாடியை இறக்கி விட்டு பைக்கில் அமர்ந்து டீ குடித்து பேசிக்கொண்டிருந்த இருவரிடம் “ஏங்க வீராசாமி கோயிலுக்கு எப்படி போகனும்?” என்று கேட்டார் மாமா.

“வீராசாமி கோயிலா? தெர்லங்க , பக்கத்துல கடையில கேளுங்க” என்றார் அதில் ஒருவர்.

மாமா “ஓரமா நிறுத்து அரவிந்து, போயி கேட்டுட்டு வரேன்” என்றார்.

வண்டியை சற்று ஓரமாக நிறுத்தி விட்டு,”நானும் வரேன் , வாங்க மாமா” என்று அரவிந்தும் இறங்கி உடன் நடந்தான்.

டீக் கடை கல்லாவில் உட்கார்ந்திருந்த நடுத்தர வயதுடையவரிடம் அதே கேள்வியை மாமா கேட்டார். “அப்படி ஒரு கோயிலு நானு கேட்டதே இல்லிங்களே” என்றார் நடு வயதுக்காரர் குழப்பமாக.

“கோயிலுனா கோயில் இல்லங்க, ஒரு பெரிய மரத்துக்கு கீழே உருண்ட கல்லு மாரி நட்டு வெச்சுருக்கும், நானு இந்த பக்கம் வந்தே இருவது வருசமாச்சு, அப்பல்லாம் முள்ளுக்காடா இருக்கும், உள்ளார கொஞ்ச தூரம் போனா ரெண்டு மூணு மரமுருக்கும், அதுல பெரிய மரத்துக்கு கீழ தான் சாமி இருந்தது, இங்கெல்லாம் ரொம்ப மாரி போயி இருக்குது நெப்பே தெரியல” என்றார் மாமா.

“ஏங்க அந்த முள்ளுக்காட்ட நெரவிதானுங்க பைபாஸி போட்ருக்குது, ஆனா அதுக்குள்ளார சாமி இருந்த மாதிரி தெரியிலிங்களே” என்றார் அவர். அரவிந்தும் மாமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், எதுவும் பேசவில்லை.

மாமா “கண்டிப்பா இந்த ஊரு தாங்க இங்கதான் எங்கியாவுது இருக்கணும்” என்றார் அழுத்தமாக.

“நானிங்க கட வெச்சே கொஞ்ச நாள் தாங்க ஆச்சு. இருங்க ஒரு அஞ்சு நிமிசத்துல மேஸ்திரி ஒருத்தரு வருவாரு, அவர்ட்ட கேட்டுப் பாப்போம், அவரு இந்தூர்ல தான் பொறந்தது வளந்ததெல்லாம், அவருக்கு தெரிஞ்சிருக்கும்” என்றார் நடுவயதுக்காரர்.

இருவரும் டீ வாங்கி குடித்துக் கொண்டு மேஸ்திரிக்காக காத்திருந்தனர். சிறிது நேரம் போனதும், பழுப்பேறிய வெள்ளை வேட்டியும், முட்டி வரை மடித்துவிட்ட கோடு போட்ட வெள்ளை சட்டையும் அணிந்து கொண்டு அறுபது வயது மதிக்கதக்க மனிதர் ஒருவர் வந்து கடையில் அமர்ந்து தினத்தந்தி பேப்பரை கையில் எடுத்தார்.

“மேஸ்திரி, இங்க வீராசாமி கோயிலுனு ஏதாவுது உனக்கு தெரியுமா? மெட்ராஸில இருந்து இவங்க வந்துருக்காங்க, அவங்க குலதெய்வமா, இந்த ஊர்ல தான் இருக்குனு சொல்றாங்க” கல்லாவில் காசு வாங்கி போட்டுக் கோண்டே அவரை பார்க்காமல் சத்தம் கொடுத்தார் நடுவயதுக்காரர்.

மேஸ்திரி நிமிர்ந்து அரவிந்தையும், மாமாவையும் பார்த்தார். “உங்க ஆளுங்க யாரும் பல வருசமா இந்த பக்கமே வரதில்லயேப்பா” என்றார்.

“எல்லா ஒவ்வொரு ஊர்ல இருக்கரம் முன்னாடி மாரி வர முடியறதில்ல, கோயிலு எங்க இருக்குனு உங்களுக்கு தெரியுமா” என்று ஆர்வமாய் கேட்டார் மாமா.

“எம்ப்பா வருசத்துக்கு ஒருத்தராவுது வந்திட்டுருந்திங்க, ஆறேழு வருசமா ஒராளு கூட வரல, உங்காளுங்க யாரும் இப்போ ஊருக்குள்ள இல்ல, பூச படையிலுனு ஒன்னும் இல்லாம, எடமே முள்ளு மண்டி போச்சுப்பா. ரோடு போட வந்தவங்ககிட்ட சொன்னோம், அந்த மரத்த உட் ருங்க அது கோயிலுனு, யாராவுது கும்முட்டாதான் சாமி, இங்க வெறும் முள்ளுதான் இருக்கு, சாமின்னு சொல்ல ஒரு கல்லுகூட இல்ல போங்கய்யானுட்டானுங்க, எல்லாத்தையும் நெரவி உட்டுதாம்ப்பா ரோட்டை போட்டாங்க. முள்ள வெட்டி எடுத்தா பெரிய மரத்தடியில சாமி நட்டுருக்கும் அதையாவுது குடுங்க, மாரியிம்மன் கோயிலுக்குள்ள போட்டு வெக்கரோம்னு கேட்டோம். அதெல்லாம் ஆள வச்சு முள்ளெல்லாம் வெட்டிக்கிட்டு இருக்க முடியாது, மரத்த புடுங்கிட்டு அபப்டியே புல்டோசர் உட்டு நிரவிடுவோம்னு சொல்லிட்டாங்க” என்றார் மேஸ்திரி வருத்தம் தோய்ந்த குரலில்.

என்ன சொல்வதென்று தெரியாமல் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அரவிந்தும், மாமாவும் நின்று கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் கழித்து “அந்த மரம் எங்க இருந்தது” என்றான் அரவிந்த். மேஸ்திரி எழுந்து கொண்டு “வாங்க” என்று முன்னால் நடந்தார். அரவிந்தும் மாமாவும் இறுகிய முகத்தோடு பின்னால் சென்றனர்.

அவர்கள் வந்த பைபாஸ் சாலையின் விளிம்பில் சென்று நின்றார், “தடுப்புக்கு இந்தப் பக்கம் இருக்கற ரோடு முள்ளுக்காட்டு மேலதான் போகுது. குத்து மதிப்பா சொல்லனும்னா நம்ம நிக்கறதுக்கு நேரா பத்தடிலதான் மரம் நின்னுச்சு” என்றார். அவர் சொன்ன இடத்தின்மேல் வாகனங்கள் 80 கிலோ மீட்டர் வேகத்தில் விரைந்து கொண்டிருந்தன.

இவ்வார புனைவு – தன்ராஜ் மணியின் ‘அணங்கும் பிணியும் அன்றே’

தன்ராஜ் மணியின் ‘அணங்கும் பிணியும் அன்றே‘ என்ற சிறுகதை காமம் நிறைந்த ஒரு பெண்ணின் மனநிலையை அவள் பார்வையில் விரித்துச் செல்லும் கதை. சங்கப் பாடல் அறிமுகம் உள்ளவர்கள் தலைப்பைக் கண்டதும் கதையின் உட்பொருள் என்ன என்பதை உணர்ந்து கொள்வார்கள். அந்த இடத்துக்கு கதையைக் கொண்டு செல்வதில் தன்ராஜ் மணி எந்த அளவு வெற்றி பெறுகிறார் என்ற அளவில் இந்தக் கதை வெற்றி பெறுகிறது.

நியூ யார்க்கர் இதழில் வரும் சிறுகதைகளுடன் This Week in Fiction  என்ற தலைப்பில் எழுத்தாளருடன் ஒரு சிறு உரையாடல் நிகழ்த்தி அதைப் பதிப்பிப்பது வழக்கம். இதை நாமும் இனி தொடர்ந்து செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தன்ராஜ் மணியுடன் ஒரு சிறு உரையாடலைத் துவக்கினோம். இனி வரும் வாரங்களில் இதை இன்னும் விரிவாக, தொடர்ந்து செய்ய எண்ணம்.

கேள்வி : ‘அணங்கும் பிணியும் அன்றே’ என்ற தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இங்கிலாந்தில் வாழும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்ல இதைப் பயன்படுத்தியிருப்பதைச் சொல்ல வேண்டும். ஏன் இந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

தன்ராஜ் மணி : அந்த வரி காமத்தை உண்பது, உறங்குவது போல ஒரு இயல்பான ஒரு விஷயமாக முன் வைக்கிறது. இக்கதை காமத்தை அப்படிப்பட்ட இயல்பான உயிரியல் தேவையாய் பார்க்கும் ஒரு பெண்ணுடையது, ஆகவே சரியான தலைப்பாய்ப் பட்டது. கதை நிகழும் இடத்தை நான் கணக்கில் எடுக்கவே இல்லை. கலாசார வேறுபாடுகள் இருக்கலாமே ஒழிய உணர்வுகள் எல்லா இடத்திலும் ஒன்றே என்பது என் பார்வை.

கேள்வி : நீங்கள் இந்தக் கதையை எழுத எது காரணமாயிற்று? (இந்தக் கதையின் ஊற்றுக்கண்/ தோற்றுவாய் என்ன?)

தன்ராஜ் மணி : சில மாதங்களுக்கு முன்பு சங்க இலக்கிய பாடல்களை புரட்டிக் கொண்டிருந்தேன்.

மிளைப் பெருங்கந்தனின் கீழ் வரும் பாடலுக்கு ஒரு சுவாரசியமான உரை அதில் இருந்தது. அதன் சாராம்சம், காமம் விருந்தாவது நம் மனதில், மனநிலையில், புற விஷயங்களில் அல்ல என்பது. முதிய பசு புல்லைச் சாப்பிட முடியாவிட்டாலும் ஆவலாய் அதைச் சுவைப்பதை முன் வைத்து உரையாசிரியர் அவ்வாறு சொல்லி இருந்தார்.

Tools and means are not but the mindset is all it matters” என்பது எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

அதுவே முதல் தூண்டுதல், தோற்றுவாய். இங்கிலாந்தில் காமத்தைப் பற்றி இவ்வகை வாழ்க்கை நோக்கு கொண்டவர்கள் ஏராளம், ஆகவே கதை நிகழும் இடத்தை இங்கிலாந்தாக வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தேன்.

காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.