நம்பி கிருஷ்ணன்

பதாகை வெளியீடு – எழுத்தாளர் நம்பி கிருஷ்ணனின் “பாண்டியாட்டம்”

​​எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் அவர்களின் “பாண்டியாட்டம்” உலக இலக்கிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலின் விலை 320/- முன்பதிவு விலையாக 250/-…

A/c no.34804520231
(yaavarum publishers)​​
SBI bank Chinmaya nagar branch
IFSC code: SBIN0007990 or

Gpay 9841643380

ஆன்லைனில் பெற  ​​https://be4books.com/product/7462/

நூல் & அட்டை வடிவமைப்பு : Gopu Rasuvel
எழுத்தாளர்கள் கோட்டோவியம் : ஓவியர் Jeeva Nanthan

இது ஒரு யாவரும் & பதாகை கூட்டு வெளியீடு

புத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்

ஒரு நாவல், இரண்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு கதம்ப படைப்பு மற்றும் ஒரு கட்டுரை தொகுப்பு என  பதாகை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு ஐந்து நூல்களை கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது.

கத்திக்காரன்- ஸ்ரீதர் நாராயணன் – சிறுகதைகள். 

ஸ்ரீதர் நெடுநாட்களாக இணைய உலகில் இயங்கி வருபவர். பதாகையின் தோற்றுனர்களில் ஒருவர். அமெரிக்காவில் வசிக்கிறார்.பூர்வீகம் மதுரை. ‘கத்திக்காரன்’ முழுக்க அமெரிக்க பின்புலத்தில் உருவான கதைகள். ‘வானவில்’ அமெரிக்க இந்திய  பதின்மரின் வாழ்வை பற்றி நுண்ணிய சித்திரத்தை அளிப்பது. பியாரி பாபு ஹோரஸ் அலெக்சாண்டர் பற்றிய நினைவுகளை சொல்லும் கதை. ஸ்ரீதரின் கதைகூறும் முறை பிசிறற்ற தெள்ளிய முறை என சொல்லலாம். இரா.முருகன் ஒரு நல்ல முன்னுரையை அளித்திருக்கிறார்.இந்த ஆண்டு ஸ்ரீதரின் தொகுப்பு நன்கு கவனிக்கப்படும் என்று நம்புகிறேன்.

ஒளி – சுசித்ரா – சிறுகதைகள்

சுசித்ரா, சுவிட்சர்லாந்தில் வசிப்பவர். உயிரியல் துறையில் ஆய்வு செய்து வருகிறார். இவரும் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். ஆங்கிலத்தில் வலுவான வாசிப்புடையவர். அண்மையில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த அவருடைய ‘ஒளி’ முன்னோடி எழுத்தாளர்கள் பலரால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. தொகுதியில் வெளிவந்துள்ள ‘தேள்’ ஒரு நல்ல டிஸ்டோபிய கதை. இரண்டு அறிவியல்புனைவுகளும் வாழ்க்கையின் அடிப்படை வினாக்கள் மீது கட்டி எழுப்பப்பட்டவை. ‘ஹைட்ரா’ எனக்கு பிடித்த கதை. இந்த ஆண்டு மிகவும் பேசப்படும் தொகுதிகளில் ஒன்றாக இது இருக்கும் என நம்புகிறேன். படைப்பூக்கம் கொண்ட எழுத்து. வருங்காலத்தில் முக்கிய எழுத்தாளராக அறியப்படுவார்.

வீடும் வெளியும் – அனுகிரஹா – கதம்ப படைப்பு

அனுகிரஹா  சொல்வனம்  மற்றும் பதாகை ஆசிரியர் குழுவில் இருப்பவர். சேலத்தை பூர்வீகமாக கொண்டவர். பெங்களூரில் வசிக்கிறார். அவருடைய ‘வீடும் வெளியும்’ நூலை படைப்பு கதம்பம் என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு இப்படியான வடிவம் முன்மாதிரி அற்றது என எண்ணுகிறேன். நான்கு தலைப்புகளில் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் அவரே வரைந்த ஓவியங்கள் என படைப்பின் எல்லா பரிணாமங்களும் கொண்ட நூல். அனுவின் கவிதைகள் மிக முக்கியமானவை. புதிய கோணங்களை திறப்பவை. அவை இவ்வாண்டு பேசப்படும் என்று நம்புகிறேன்.

இயர் ஜீரோ – காலத்துகள் – நாவல்

‘காலத்துகள்’ பதாகை வழி உருவாகி வந்த எழுத்தாளர். அவருடைய சிறுகதை தொகுப்பும் அடுத்து வர இருக்கிறது. ‘இயர் ஜீரோ’ செங்கல்பட்டில் தொண்ணூறுகளின் மத்தியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒரு மாணவனின் கதை. நினைவுகளின் ஊடாக ஒரு தெறிப்பை காலத்துகள் இந்நாவலில் நிகழ்த்துகிறார். ஒரு தலைமுறையே அவருடைய கதையோடு தங்கள் நினைவுகளை பொருத்திப் பார்க்க முடியும். ஆத்மார்த்தமாக தன்னை கண்டடையும் நோக்கில், தன நினைவுகளை கிளறி எழுத்தாக்கும்போது அதன் நேர்மையின் ஆற்றலால் அப்படைப்பு நம்மை வசீகரிக்கிறது. தமிழில் வந்துள்ள சிறந்த ‘coming off age’ வகையிலான நாவல்களில் ஒன்று காலத்துகளின் ‘இயர் ஜீரோவை’ சொல்லலாம்.

பாண்டியாட்டம் – நம்பி கிருஷ்ணன் – மேலை இலக்கிய கட்டுரைகள்

நம்பி கிருஷ்ணன், அமெரிக்காவில் வசிக்கிறார். சொல்வனத்தில் தொடர்ச்சியாக உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார். அரூ அறிவியல் புனைவு போட்டியில் அவருடைய கடவுளும் கேண்டியும் மூன்றாவது பரிசு பெற்றது. அவர் எழுதிய Ecco homo எனக்கு பிடித்த காந்தி கதைகளில் ஒன்று. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் செறிவான மொழியாக்கங்களை செய்திருக்கிறார். தமிழில் அவர் அளவுக்கு அயல் இலக்கிய வாசிப்பு உரியவர்கள் மிகக் குறைவு என்பது என் கணிப்பு. ‘பாண்டியாட்டம்’ உண்மையில் அப்படி பிரதிகளின் மீது அவர் தாவித்தாவி செல்லும் கட்டுரைகளின் தொகுப்புதான். பெருமைக்குரிய மிக முக்கியமான அறிமுகம் என நம்பியின் இந்த கட்டுரை நூலை கருதுகிறேன். ஓவியர் ஜீவானந்தத்தின் கோட்டுச் சித்திரங்களோடு நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது, கண்காட்சி முடிவதற்குள் வந்துவிடும்  என நம்புகிறேன்.

பதாகை இணைய தளம் தொடர்ந்து செயல்பட காரணமாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி. பதிப்பகமாக மலர்ந்திருக்கும் பதாகையையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய ஆண்டு பதாகை- யாவரும் கூட்டாக வெளியிட்ட

1. பாகேஸ்ரீ- எஸ்.சுரேஷ்- சிறுகதைகள்

2. வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி – – சிறுகதைகள்

3. வளரொளி- நேர்காணல்கள், மதிப்புரைகள்- சுனில் கிருஷ்ணன்

ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன.

இந்த நூல்கள் புத்தக கண்காட்சியில் யாவரும் அரங்கில் (189 & 190) கிடைக்கும். ஆன்லைனில் பெற http://www.be4books.com or Whatsapp no.9042461472யை தொடர்புக் கொள்ளலாம்.

ப்ராஸ்ட்டின் ‘தி ரோட் நாட் டேக்கன்’ – கிளை பிரியும் வாசிப்புகள் – நம்பி கிருஷ்ணன்

நம்பி கிருஷ்ணன்

ப்ராஸ்ட் எழுதிய கவிதைகளில் அதிக புகழ் பெற்ற கவிதை, நிச்சயம் அவரது ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்றல்ல. மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதைகளில் ஒன்றும்கூட. இத்தனைக்கும், அக்கவி பாடுபவனது பார்வையை மென்மையாக கேலி செய்யும் வகையில் முரண்நகைப் பொருளில் தான் சொன்னது, தரிசன வாக்கியம் போன்ற ஒன்றாக பிழைபொருள் கொள்ளப்படுவது குறித்து தன் எரிச்சலை அவர் வெளிப்படையாக தெரிவித்தும் இருக்கிறார். என்றபோதும் இந்தக் கவிதையை பிடிவாதமாக பிழைவாசிப்பு செய்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் அதற்காக வருத்தப்பட வேண்டாம். ப்ராஸ்டின் நண்பர், கவிஞர் எட்வர்ட் தாமஸ், இக்கவி பாடுபவனது முன்மாதிரியாய்க் கொள்ளப்படுபவர், அவரும் கூட இந்தக் கவிதையில் ப்ராஸ்ட்டின் சுயசரிதையை வாசித்தார். ஆம், பார்த் சொன்னது முழுக்க முழுக்க சரிதான்- ஆசிரியன் நாசமாய்ப் போகட்டும், பிரதி மட்டுமே நீடிக்கும்.

கவிதையின் சபிக்கப்பட்ட நோக்கங்களுக்கு வருவோமென்றால், இருவரும் காலாற நடந்து செல்லும்போது ஒவ்வொரு முறையும், கடந்து வந்த பாதைக்கு மாறாய் வேறொரு பாதையில் சென்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று பெருமூச்செறியும் தாமஸ் “போல் இருந்தால் எப்படி இருக்கும்,” என்பதன் கவித்துவ அறிதலுக்கான முயற்சியே இக்கவிதை என்று ப்ராஸ்ட் தெளிவுபடுத்தி விட்டார் என்பதைச் சொல்ல வேண்டும். அத்தனை மத்திய மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆதர்சமாக கொள்ளும் அப்பெருமூச்சு, ஒரு பகடிப்-பெருமூச்சே, ஒரு பாவனை, “வேடம் தரிப்பதன் மகிழ்ச்சிக்காக” செய்தது.

E.T.க்காக” என்ற இன்னொரு கவிதையில் (நிச்சயம் தன்சரிதைத்தன்மை கொண்டதுதான்), கவிஞர் இரங்கற்பாவுக்குரிய மனநிலையை வலிந்து உருவாக்கிக் கொள்கிறார்; ஆனால் முதல் உலக யுத்தத்தில் மாண்ட அதே எட்வார்ட் தாமஸ், தன் நண்பன், குறித்த அவரது உணர்வுகள், “குறிப்பிட்ட ஒரு சாலையைத் தேர்ந்தெடுக்காததன்” பின்விளைவுகளை நேருக்கு நேர் நோக்குமளவு அவரை மெய்யென ஆட்கொள்கின்றன; ப்ராஸ்ட், “வாழ்வில் நான் தவற விட்ட வாய்ப்பு எனக்கு இல்லாது போகலாம்/ ஏதோவொரு தாமதத்தால். உன் முகத்தைக் கண்டழைக்க-/ நீ முதலில் வீரன், பின் கவிஞன், பின் இரண்டும்/ உன் இனத்தின் வீர-கவிஞனாய் இறந்தவன்”, என்று தன் துயரை வெளிப்படுத்துகிறார்.

ஆனால், இத்தகைய வாழ்க்கைச் சரித்திர தகவல்கள் இல்லாமலும்கூட தேர்ந்த வாசகன் ஒருவன், தன் உள்ளத்தை மகிழ்விக்கக்கூடிய ஒரு பாவனையை கவிஞன் தொடர்ந்து ‘மேற்கொள்வதை’ உணர முடியும். எதிர்கால வாசகர்கள் போலவே அவனும் கவிதையின் ஆதார உண்மைகள் ஒரு பொருட்டல்ல என்று பாவித்துக் கொள்கிறான் (அத்தனை சால்ஜாப்புகளையும் கடந்து அந்த உண்மைகள் கவிதைக்குள் புகுந்து விடுகின்றன). தற்போது தேர்வு செய்த சாலையின் அழைப்பு, “புற்கள் செழித்து சிதையாது இருப்பதால்” “மேலான தகுதி கொண்டது” என்று சொல்வதற்கு முன் அவன், மற்றையதும் “அதே அழகு கொண்டது” என்று சொல்லியிருக்கிறான். அடுத்து, “அதேயளவு அதுவும்” சிதையாதிருந்தது, பாதம் படாத இலைகளால் அதேயளவு மூடப்பட்டிருந்தது (“எந்தப் பாதமும் மிதித்துக் கறுத்த இலைகள் இல்லை”) என்றும் கூறுகிறான்.

தன் தேர்வு குறித்து மகிழ்ச்சியடைய அவனுக்கு புறவயப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை, இது நான் தேர்ந்தெடுத்த பாதை என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். இந்த உணர்வு கடைசி பத்திக்கு ஓர் அச்சாரமாகிறது: அங்கு அவன், எதிர்காலத்தில் சோக உணர்வுடன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் பாவனை மேற்கொள்கிறான் (கவியின் “நான்” (I) “பெருமூச்சுடன்” (sigh) யாக்கப்படுகிறது, இப்படிப்பட்ட புனைபாவனைகளைக் கொண்டு அவனது இருப்பு அத்தனையும் கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பது போல்)- தான் முதலில் எடுத்த முடிவை குறித்து துவக்கத்தில் வருந்தி (இல்லையென்றால் ஏன் பெருமூச்செறிய வேண்டும்), அதன்பின் நினைவேக்கப் பொன்னொளிக்குரிய பிரத்யேக மொழியில் உணர்வுகளை துரிதமாகவே வார்த்தெடுத்துக் கொள்கிறான்.

ஆனால் இதே பத்தியை நாம் பின்னாலிருந்தும் வாசித்து மாறுபாடு என்ற சொல்லிலிருந்து பெருமூச்சுக்கும் வரலாம் (மாறுபாடு (difference), எனவே (hence), ஏக்கம் (sigh) என்ற யாப்பில் பொருள் கொள்ளலாம்): ஆனால் இப்போது நாம் காணும் மாறுபாடு எந்தப் பாதை உயர்ந்தது என்பதல்ல, வேறொரு பாதையைத் தேர்வு செய்திருந்தால் எந்த வாதையைத் தவிர்த்திருக்கலாம் என்பதாய் மாறி விடுகிறது.

ப்ராஸ்டின் இந்தக் கவிதை அளிக்கும் வெளிச்சத்தில் விஜய் நம்பீசனின் புகழ் பெற்ற ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ (https://solvanam.blog/2014/01/02/மொழிபெயர்ப்புக்-கவிதைக-2/) கவிதையை வாசிப்பதும் ஒரு சுவையான அனுபவமாய் இருக்கும்: அங்கும் தேர்வுகளின் குழப்பம் உண்டு (எப்போதும் போல, “நீளமான தண்டவாளங்கள் தொலைவில் சென்று” மறையும்), ஆனால் அவற்றுக்கான பொறுப்பு நேர்மையாக எதிர்கொள்ளப்படுகிறது. “ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது” என்பது கவிக்கு சொல்லாமலே தெரிந்திருக்கிறது, எனவே தன் தேர்வின் விளைவுகளுக்கு அவன் பொறுப்பேற்றுக் கொள்கிறான்: “எங்கே அவனது இருப்பு வேண்டியதாயில்லை,” என்ற உண்மையின் கசப்பு மாத்திரையை விழுங்கி விட்டு, “தன் வேண்டாதவன் நிலையை வேறெங்காவது எடுத்து” செல்கிறான்.

ஆனால் ‘கர்த்தா மரணித்து விட்டான்’, பிரதியோ நமக்குரியது. நம்முன் உள்ள பிரதி இப்படிதான் இருக்கிறது என்றாலும், தேர்ந்தெடுக்கப்படாத சாலையை நாம் உந்துதல் அடையும் வகையில் வாசிக்கலாம்: நம் வாழ்வில் ஒவ்வொரு முறையும் “தார்மீகப் பாதையை” தேர்வு செய்து கொள்ளலாம், அதனால் வேறெந்த பயன் இல்லாவிட்டாலும் இந்தப் பாதையை நான் தேர்ந்தெடுத்துச் சென்றேன் என்று சமாதானப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்வது பலரும் நடந்து சென்ற பாதையில் ஒரு வாசகராய் நாம் நம் காலடித் தடத்தை இழப்பதற்குச் சமம்!

(பதாகை ஜனவரி 2019 மின்னூலில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரையின் இணைய பிரதி)

பதாகை ஜனவரி 2019: 

 மொபைல் மற்றும் கணினியில் வாசிக்க (epub)

கிண்டிலில் வாசிக்க (mobi)

நம்பி கிருஷ்ணன் தமிழாக்கங்கள்: சி. பி. சுரேந்திரன், ஏ. கே. மெஹ்ரோத்ரா, தீபங்கர் கிவானி

 

இடுக்கண் களைவதாம் நட்பு
(ஆங்கில மூலம்: சி. பி. சுரேந்திரன்)

நாற்காலியில் அமர்கிறான்.
அதன் நான்காம் கால்
அவனுக்குரியது. இந்த நாற்காலி
அவனுக்கு பிரியமானது. அதில்
அவர்கள் புணர்ந்திருக்கிறார்கள்.
அப்போது நாற்காலிக்கு
நான்குக்கு மேல் இரண்டு இன்னம் இரண்டு,
எட்டு கால்கள். காலுள்ள நாட்கள்.
நிறையவே நடந்து முடிந்திருக்கின்றன,
அந்த நாட்களுக்குப் பின். இப்போது நாற்காலிக்கு
ஒரு கால் குறைவு. தன் காலை முட்டு
கொடுத்துக் கொண்டிருக்கிறான் இவன்.

oOo

இன்னமும் ஜனனிக்காத மகளிற்காக
(ஆங்கில மூலம் : ஏ. கே. மெஹ்ரோத்ரா)

கவிதை எழுதுவதன் மூலம் உன்னை
ஜனனிக்க முடியுமானால், இதோ
இப்போதே ஒன்று எழுதுவேன்,
ஓருடலின் தேவைக்கும் அதிக
சருமம் திசுக்கொண்டு பத்திகளையும்
பேச்சைக் கொண்டு வரிகளையும்
நிரப்புவேன். உன் அன்னையின்
ஒட்டக் கடிக்கப்பட்ட நகங்கள், இளம்பழுப்பு

கண்கள், அவற்றையும் உனக்களிப்பேன்,
அவளுக்கவை இருந்ததாக நினைவு. அவளை
ஒரு முறை மட்டுமே, ரயில் ஜன்னல் வழியே
மஞ்சள் வயலொன்றில் பார்த்தேன். வெளிறிய நிறத்தில்
உடையணிந்திருந்தாள். குளிரடித்தது.
ஏதோ சொல்ல விரும்பினாளென்று நினைக்கிறேன்.

oOo

சேகரம் செய்பவர்கள்
(ஆங்கில மூலம் : தீபங்கர் கிவானி)

இவ்வண்ணக்கற்களை புதையலெனக் காத்தோம் அப்போது,
இதோ, அந்த ஜூன் மாதத்தில் நீ கடைசியாய்க் கண்டெடுத்தது. அன்று உன் பிறந்தநாள்,
கடற்கரையில், என்னுடன் போட்டியிட்டு விரைகையில், அதன் நீலத்தைக் கண்டு குரல் கொடுத்தாய்.

இச்சிறு கூம்பின் தளம் இன்றும் அதே ஆரஞ்சு நிறம். அவ்வருடம் நம்மிருவருக்கும்
பத்து வயது; இந்தப் பெட்டியில், வெந்து நொய்ந்த அந்நாளில்,
இருபத்திரண்டுடன் இன்னுமொரு கல்லைச் சேர்த்தோம்.

பிடித்ததை சேகரித்தோம், அவையும் நிலைத்து நீடித்தன,
பால்ய காலம் கடந்த பதின்மூன்றாண்டு தொலைவில், இப்போது
இந்த இருபத்து மூன்றையும் கூட்டிப் பார்த்து உன்னைக் காண்கிறேன்

மறக்க விரும்பியதை முஷ்டியினுள் மறைத்துக் கொள்ளும்
ஆண்களாவதற்கு முன் என்னவாக இருந்தோம் என்பதற்காக:
இந்தா, கையைத் திற, நீயும் உணர முடியும்.

(These are unauthorised translations of the poems, “A Friend in Need” by C.P. Surendran, “To an Unborn Daughter” by A.K. Mehrotra, and “Collectors” by Deepankar Khiwani . The Tamil translations are intended for educational, non-commercial display at this particular webpage only).

ஏ. கே. ராமானுஜன் கவிதையின் தமிழாக்கம்- ‘பதைபதைப்பு’ – நம்பி கிருஷ்ணன்

நம்பி கிருஷ்ணன்

பீதிமரத்தின் கிளையில்லாமை அல்ல,
அப்பட்டமான வேர்களும் ரகசியமான சுள்ளிக்கிளைகளும் அதற்குண்டு.
நம்பிக்கை பரவளையங்களின் வடிவியல் நேர்த்தி அல்ல,
உச்சியில் என்னையே முடிச்சாக கொண்ட
முடியப்படா தளர்நுனிகள் அதற்குண்டு.

கள்ளச் சந்திப்பின் குதூகலத்துடன் விரையும் நீரின் விழிப்புணர்வு அல்ல,
கரிப்பிசின் இழைமையுடன் தூக்கக்கலக்கத்தில் பிசுபசுக்கும்
வெள்ளரவுக் கண்ணாடிப் பாதைகள் அதற்குண்டு.

தீநாக்கின் சுவாசப்பைகள். நீரின் கண்கள்.
நிலத்தின் என்புத்தசை. காற்றின்
புலனாகா புறாக்களின் கூட்டம்.
                                 ஆனால் பதைபதைப்பிற்கோ
தன்னைப் போக்கிக்கொள்ள ஒரு உருவகம்கூட கிடையாது.

(This is an unauthorised translation of the poem, “Anxiety” by A.K. Ramanujan. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).