பத்மகுமாரி

ரப் நோட்டும் பேனாவும்

பத்மகுமாரி

‘இப்படி படிச்சா ஃபெயில் தான் ஆவ. வர வர படிப்பு கழுத போல தான் போகுது’ தாவரவியல்  பரீட்சை விடைத்தாளை தரையில் விசிறி அடித்தாள் டெய்ஸி டீச்சர்.

நான் பதில் பேசாமல் குனிந்து விடைத்தாளின் நுனி நூல்கட்டை பிடித்து கையில் எடுத்துக் கொண்டேன். மொத்த வகுப்பறையின் கண்களும் என்னையே வெறித்தன.

மூன்று மாதங்கள் முன்னால் வரை எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கென்று டெய்ஸி டீச்சர் மனதில் ஒரு நல்ல மரியாதையான இடம் கூட இருந்திருக்கலாமென்று நினைக்கிறேன். உறுதியாக சொல்ல தெரியவில்லை.

 

நான் காய்ச்சல் விடுமுறை முடித்து வந்திருந்த அந்த காலை முதல் வகுப்பில், டெய்ஸி டீச்சர் தாவரவியலை தள்ளி வைத்து விட்டு வகுப்பின் நடுவே இருந்த மேசையோடு சாய்ந்து நின்று அறிவுரைகளை எங்கள் முன்னால் குவித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

‘படிப்பில போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை இருக்கக் கூடாது. ‘

‘என்ன கேல்ஸ், புரிஞ்சதா? ‘

‘யேஸ் மிஸ்’ அங்குமிங்குமாக சில குரல்கள் ஒரே சீராக எழுந்து அடங்கியது.

எவ்வளவு உன்னதமான வரிகள். நான் சிலாகித்து உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.

‘நான் இப்ப என்ன சொன்னேன்னு சொல்லு. ‘ டீச்சர் எழுப்பி நிறுத்தியிருந்தது என்னை.

‘படிப்பில் போட்டி இருக்கலாம், பொறாமை இருக்க கூடாது. ‘  மனதில் வாங்கியிருந்ததை வார்த்தை மாறாமல் ஒப்பித்தேன்.

‘உனக்கு தான் இத சொன்னேன். இனிமே யாரையும் பார்த்து பொறாமை படாத. உட்காரு.’ இப்பொழுது வகுப்பின் மொத்தக் கண்களும் என்மீது.

‘நான் யாரை பார்த்து பொறாமை பட்டேன். ‘ அழுகை முட்டிக் கொண்டு வந்தது. வார்த்தைகள் வெளிவரவில்லை.

மணிச்சத்தம் அமைதியை கலைத்தது.

‘பிரேக்ல ஸ்டாப் ரூம் வா’ டீச்சர் வாசலுக்கு போகும்பொழுது திரும்பி பார்த்து   முதல் பெஞ்சில் இருந்த என்னிடம் சொல்லிவிட்டு போனாள். என் கன்னங்களில் நீர் இறங்கிக் கொண்டிருந்தது.

அடுத்த வகுப்பில் நடத்தப்பட்ட கணிதச் சமன்பாடுகள் எதுவும் என் காதில் விழவில்லை. மனம் தேம்பிக் கொண்டிருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்டான்ஸி மெல்ல முழங்கையில் விரலால் சீண்டினாள்.

‘ தாமரை, மிஸ் ஏன் அப்படி சொன்னாங்கன்னு எனக்கு தெரியும். ‘

ஆச்சரியத்தில் விரிந்திருந்த கண்களோடு ஸ்டான்ஸி பக்கம் திரும்பினேன்.

‘ரேவதி தான் ஏதோ மிஸ்கிட்ட போட்டு கொடுத்திருக்கா. நேத்து ஸ்வாலஜி ரெக்கார்ட் வைக்க ஸ்டாஃவ் ரூம் போனப்ப அவ டெய்ஸி மிஸ்கிட்ட நின்னு பேசிக்கிட்டு இருந்தா. என்ன சொல்லிட்டு இருந்தான்னு எனக்கு கேட்கல. ஆனா மிஸ் ரொம்ப ஸீரியஸா கேட்டுகிட்டு இருந்தாங்க. ‘

ரேவதி கடந்த சில நாட்களாகவே என்னிடம் பேசுவதை முழுவதுமாக நிறுத்தியிருந்தாள். எனது அப்பாவும் ரேவதியின் அப்பாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கிறவர்கள். பதவியில் ரேவதியின் அப்பா சற்று உயர்வான இடத்தில் இருப்பவர். எனது பரீட்சை மதிப்பெண்களை எனது அப்பாவின் வாயிலிருந்து பிடுங்கி அதை ஒப்பீடு செய்து ரேவதியை திட்டுவது அவளது அப்பாவின் வழக்கம். நாளடைவில் ரேவதிக்கு இது பெருங்கோபமாக என்மீது திரும்பியிருந்தது.அந்த கோபத்தின் வெளிப்பாடாக ஏதோ நடத்தியிருக்கிறாள் என்று எனக்கு புரிந்தது.

ஸ்டாவ் ரூமில் டெய்ஸி டீச்சர் முன்னால் நின்று கொண்டிருந்தேன். சிறிய புஷ்பம் டீச்சர் உடன் இருந்தாள்.

‘ஆர்த்திய விட ஒரு மார்க்காச்சு பைனல் எக்ஸாம்ல கூடுதலா வாங்கி காட்டுவேன்னு ரேவதிகிட்ட சொன்னியாம்மே. அவ பர்ஸ்ட் வரவே கூடாது சொன்னியாமே. இந்த வயசில அப்படியென்ன  பொறாமை உனக்கு. ‘

ஆர்த்தி எல்லா ஆசிரியைகளுக்கும் கூடுதல் பிடித்தமான மாணவி. மூன்று காரணங்கள். முதலாவது ஆர்த்தியின் அப்பா வழி பாட்டி ராணி இதே பள்ளியில் முன்னால் ஆசிரியை.  பள்ளி நிர்வாக போர்டில் இருக்கும் மதர்களின் நடுவே இன்றும் அவளுக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. இரண்டாவது, ஆர்த்தியின் அம்மா நாங்கள் ஆறாம் வகுப்பு படிக்கும்பொழுது புற்றுநோயில் தவறி போயிருந்தாள். மூன்றாவது தற்போதைய பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆர்த்தியின் அப்பா அலெக்ஸ்.

இந்த வருடம் பண்ணிரெண்டாம் வகுப்பின் முதல் மாணவியாக ஆர்த்தி தான் வரவேண்டுமென்கிற எதிர்பார்ப்பு எங்களுக்கு வகுப்பு நடத்தும் எல்லா ஆசிரியைகளுக்கும் உள்ளூர இருந்தது. தலைமையாசிரியை வரையிலும் கூட. டெய்ஸி டீச்சருக்கும், சிறிய புஷ்பம் டீச்சருக்கும் கொஞ்சம் கூடுதலாகவே அந்த எதிர்பார்ப்பு ஒரு நோயைப் போல உடல் முழுவதும் பரவியிருந்தது.

நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும், டெய்ஸி டீச்சர் என்னை நம்புவதற்கு  துளியளவேனும் தயாராக இல்லை. கொலை குற்றம் செய்ததை மாதிரி அவள் கண்கள் அன்றிலிருந்து என்னை துரத்த ஆரம்பித்திருந்தது. கூடவே சிறிய புஷ்பம் டீச்சரும் கைகோர்த்திருந்தாள். கணக்கு வகுப்புகளில் நான் தவறான விடையை சொல்லும் வரையிலும் வரிசையாக என்னிடம் சூத்திரத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விக்கு தாக்குபிடிக்க முடியாமல் நான் தவறான விடையை சொல்லும் அந்த நிமிடத்தில் டீச்சரின் முகத்தில் பிரகாசம் துளிர்க்கும். நான் வகுப்பின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படுவேன். சில நேரங்களில் எனது வெற்றியை ஏற்று கொள்ள முடியாமல், அன்றைய மொத்த வகுப்பு நேரத்தையும் என்னிடம் சூத்திரங்கள் கேட்கவே செலவிட்டு  இருண்ட முகத்தோடு டீச்சர் வெளியேறிய நாட்களும் உண்டு. தாவரவியல் வகுப்பிலும் பெரும்பாலான கேள்விகள் என்மீதே வீசப்பட்டன. தாக்குதல் கேள்விகளாக இருக்கும் வரை தாக்குபிடிக்க தெம்பிருந்த எனக்கு, தாக்குதல் மதிப்பெண் குறைப்பீடாக மாறி இரண்டாம் ரேங்கில் இருந்து பண்ணிரெண்டாம் ரேங்கிற்கு தள்ளபட்டபோது தாக்குபிடிக்கத் தெம்பில்லாமல் போய்விட்டது.

 

அப்பாவின் முன்  உடைந்து அழுது கொண்டு நின்றேன்.

‘எதுக்கு இப்ப இவ்வளவு அழுக. ‘

‘வேணும்னே மார்க் குறைச்சிட்டாங்க. சத்தியமா நான் நல்லா தான் எழுதினேன். ‘

‘அதான் நான் உன்ன நம்புறேன் சொல்லிடன்ல. கண்ண தொட. ‘

‘… .. .. ‘ என் அழுகை இன்னும் கூடியது.

‘அழுகைய நிறுத்து. ‘

நான் நிறுத்துவதாக இல்லை.

‘நிறுத்துங்கம்லா.’ அப்பாவின் அதட்டலில் வீடே அதிர்ந்தது.

நான் உறைந்து நின்றேன்.

‘போய் ரஃப் நோட்டும் பென்னும் எடுத்துட்டு வா. ‘ அதட்டலாக கட்டளை வந்தது.

அடுத்த நிமிடம் பேனாவும் ரஃப் நோட்டும் ஏந்தி அப்பா முன்னால் நின்று கொண்டிருந்தேன். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது.

‘உட்காரு’

‘ நான் சொல்லுகத போல செய். பரீட்சை பேப்பர்ல இருக்க ஒவ்வொரு விடையையும் நீயே திருத்தி  ஒவ்வொரு கேள்விக்கும் எத்தனை மார்க் வரும்ன்னு  நோட்ல எழுது. தப்ப பொறுத்து அரை மார்க்ல இருந்து குறைக்கணும். நிறைய தப்பு இருந்தா மார்க்கே போடாத அந்த விடைக்கு.’

அப்பா தொடர்ந்தார், ‘ ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு மார்க் வரும்ண்ணு எழுதிட்டு கடைசியா மொத்தமா கூட்டு. சரியா மனசாட்சிபடி திருத்தி எழுதணும். கூடுதலா போட கூடாது. அப்பாக்கு இங்கிலீஷ் தெரிஞ்சா அப்பாவே திருத்தி தந்திருப்பேன். ‘

‘… .. ‘ நான் குனிந்து முதல் கேள்வியை திருத்த ஆரம்பித்திருந்தேன்.

நாளடைவில் திட்டமிட்ட மதிப்பெண் குறைப்பீடுகள் என்னை அச்சறுத்துவது மொத்தமாக நின்று போயிருந்தது.

காலாண்டு, அரையாண்டு போன்ற பரீட்சை மதிப்பெண்களை பெற பெற்றோர்கள் தான் வரவேண்டும் என்கிற விதி பள்ளியில் இருந்தது.

அப்பா பள்ளிக்கு வந்திருந்தார்.

‘அரையாண்டு வந்தாச்சு, இப்படி மோசமா மார்க்க வாங்கியிருக்கா. ஜஸ்ட் பாஸ்தான். வர வர படிப்புல கவனமேயில்ல. ஒரு பேப்பர் போனாலும் போனதுதான. கண்டிச்சு வைங்க. ‘

அப்பா பதில் பேசவில்லை. தலையை மட்டும் ஆட்டினார். நீட்டிய விடைத்தாளை கையில் வாங்கி கொண்டார். உதட்டின் ஓரம் லேசான சிரிப்பு இருந்தது.

அப்பாவின் சிரிப்பில் இருந்த உண்மையின் அனல் தாங்க முடியாமல் டெய்ஸி டீச்சர் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

படிப்பில் எனது வேகம் அதிகரித்திருந்தது. எந்த சீண்டல்களாலும் என்னை அசைத்து பார்க்க முடியவில்லை

முழு பரீட்சை எழுத போகும் நாட்களில் டெய்ஸி டீச்சர் எதேச்சையாக எதிரில் வந்தால் முறைத்துக் கொண்டே கடந்து போனாள். நான் சாதாரணமாக கடந்து போனேன். நான் நினைத்தபடி நல்ல முறையில் பரீட்சைகளை எழுதி முடித்திருந்தேன்.

வகுப்பு ஆசிரியை என்கின்ற முறையில் டெய்ஸி டீச்சர் தான் எங்கள் வகுப்பின் மாணவிகளுக்கு மதிப்பீட்டு தாளை வழங்கி கொண்டிருந்தாள். மொத்த மதிப்பெண்ணில் நான் ஆர்த்தியை விட ஒரு மதிப்பெண் அதிகமாக வாங்கியிருந்தேன். அந்த ஒரு மதிப்பெண்ணை கூட்டி தந்திருந்தது தாவரவியல்.ரேவதியின் மதிப்பெண் எங்கோ அதல பாதளத்தில் விழுந்திருந்தது.

டெய்ஸி டீச்சர் கண்களை வேறெங்கோ அலையவிட்டபடியே மதிப்பீட்டு தாளை என்னிடம் நீட்டினாள். முழு பரீட்சை விடைத்தாளை தன்னால் திருத்த முடியாது போயிருந்ததில் டெய்ஸி டீச்சருக்கு பெரும் வருத்தம் இருந்திருக்கக் கூடும்.

‘தேங்க்யூ மிஸ். ‘ புன்னகை மாறாமல் சொல்லிக்கொண்டே மதிப்பீட்டு தாளை கையில் வாங்கி கொண்டேன்.

பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்தபொழுது அப்பா வண்டியை முறுக்கி தாயாராக வைத்திருந்தார்.

‘போலாமா?’

நான் தலையாட்டினேன்.

இன்று வரை ரஃப் நோட்டும் பேனாவும் என்னோடு பயணித்துக்  கொண்டிருக்கின்றன.

 

 

 

சுடுகஞ்சி

பத்மகுமாரி

கிளம்பும்போது ஹெட்செட்டை எடுத்து பைக்குள் போட்டுக்கொள்ளச்  சொன்னாள் அம்மா. ““அந்த செவிட்டு மெஷின எடுத்துப் போட்டாச்சா?”“. நான் எதுவும் பதில் பேசவில்லை. பைக்குள் ஏற்கனவே எடுத்து வைத்திருந்தவற்றை இரண்டாவது முறையாக சரி பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவும் பதில் எதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. போகிற போக்கில் சொல்லிக்கொண்டே என்னை கடந்து படுக்கையறைக்குள் போய்விட்டிருந்தாள். படுக்கையறை அலமாரி கதவுத் துவாரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சாவிக் கொத்தின் சாவிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்ளும் சத்தம் கேட்டது.

“மாஸ்க் வேண்டாமா?” நடையில் இறங்கும்பொழுது புது முகக்கவசத்தை அம்மா நீட்டினாள்.

“மறந்துட்டேன்ம்மா”

“ம்ம். முக்கியமானதெல்லாம் மறந்திருவ” அம்மா தேவையற்றது என்று எதைக் குறிப்பிடுகிறாள் என்று புரிந்தது.  ஹெட்செட் மாட்டிக் கொள்வதை பார்க்கும்போதெல்லாம் அம்மா இப்படி சொல்வாள். “காத தொறந்திட்டு கேக்க வேண்டிய பாட்ட, இத மாட்டிகிட்டு காத அடச்சிகிட்டு கேக்க எப்படி தான்‌ முடியுதோ”

தெருவின் திருப்புமுனைக்கு வந்துவிட்டு திரும்பி பார்க்கையில் அம்மா நடையில்  நின்று கையசைத்துக் கொண்டிருந்தாள். பதிலுக்கு நானும் கையசைக்க, அவள் உள்ளங்கையில் இருந்த அன்பு மொத்தமும் காற்றில் கலந்து வந்து என் உள்ளங்கையில் அந்த ஒரு நொடிக்குள் ஒட்டிக் கொண்டதாக தோன்றியது.

அம்மா வழி சொந்தங்கள், வீட்டுக்கு வந்து செல்கையில் தெருமுனை திரும்புகிற வரையிலும் நின்று கையசைத்து விட்டுதான் அம்மா வீட்டுக்குள் வருவாள். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கல்யாணமாகியிருந்த புதிதில், அப்பா வழி சொந்தங்கள் வீட்டுக்கு வந்து திரும்புகையில், அம்மா நடையில் நின்று கொண்டிருந்ததாகவும், வந்தவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே தெருமுனையை கடந்துவிட்டதாகவும், இரண்டு மூன்று முறை அப்படி நடந்த பிறகு, அப்பா வழி சொந்தங்கள் வந்து போனால் நடையில் போய் நிற்பதை விட்டுவிட்டதாகவும் அம்மா கூறியிருக்கிறாள். அம்மா அடிக்கடி இதை சொல்லியிருக்கிறாள். அம்மா வீட்டு சொந்தங்கள் வந்து திரும்பும்போதும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறாள். அப்பா வழி சொந்தங்கள் வந்து திரும்பும் போதும் இதைப்பற்றி சொல்லியிருக்கிறாள். ஆனால் இந்த இரு வேறு நேரங்களிலும் அவள் கண்கள் வெவ்வேறு மொழி பேசுவதை கண்டிருக்கிறேன். “இந்த பழக்கத்துல, நீ எங்க வீட்டு ஆளுகள போலயே வந்துட்ட” இதை சொல்லும் போது அம்மாவின் கண்கள் சிரிப்பது நன்றாக தெரியும். இருபது நிமிட காத்திருப்பிற்கு பிறகு பேருந்து வந்திருந்த போதிலும், ஜன்னல் இருக்கை கிடைத்துவிட்டதில்  ஆனந்தம் அடைந்திருந்தது மனது. நான் எடுத்து வந்திருந்த, ஹெட்செட்டிற்கு வேலையில்லாதபடி ஆக்கியிருந்தது, பேருந்தில் பாடிக்கொண்டிருந்த ஒலிபெருக்கி.

ஜன்னல் கம்பிகளோடு போட்டியிட்டு எதிர்த் திசையில் ஓடிக்கொண்டிருந்த மரங்களை எண்ணியபடி அமர்ந்திருந்தேன். திடீரென்று கீதாவின் ஞாபகம் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்டது. எதிர்த் திசையில் ஓடிய மரங்களின் உதிர்ந்த இலைகளின் வாசத்தில் இருந்தும் அது வந்திருக்கலாம். ஒரு மணி நேரத்திற்கு முன்னால் கொட்டித் தீர்த்திருந்த மழையின் மிச்சமாக ஜன்னல் கம்பிகளில்  ஒட்டிக் கொண்டிருந்த மழைத் துளிகளிலிருந்தும் அது வந்திருக்கலாம்.

கீதாவும் நானும் முதல் முதலில் பேசிக் கொண்ட அன்றைக்கும் நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. அதற்கு முன்னால் பலமுறை கல்லூரி விடுதி வராந்தாவில் ஒருவரை ஒருவர் கடக்கிறபொழுது, ஒரு சம்பிரதாய புன்னகையோடு கடந்திருக்கிறோம். மற்றவர்கள் எங்களை அழைப்பதிலிருந்து என் பெயர் அவளுக்கும் அவள் பெயர் எனக்கும் தெரிந்திருந்தது.

அடுத்த நாள் தேர்விற்காக  நான் வராந்தாவில் அமர்ந்து பரபரப்பாக படித்துக் கொண்டிருந்தேன். பக்கங்களை வேகவேகமாக புரட்டிக் கொண்டிருந்தேன் என்றும் சொல்லலாம். கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த மழையின் கச்சங்கள் கைகளில் சில, கால்களில் சில என்று விழுந்து கொண்டிருந்த போதிலும் கண்டு கொள்ளாமல் பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்ந நான், அவை புத்தகத்து பக்கங்களின் நுனியை தொட ஆரம்பித்ததும் உடம்பை  மேலும் ஒடுக்கி, விலகி உட்கார்ந்தேன்.

மழை கச்சங்களில் இருந்து என்னை நான் விலக்கிக் கொண்ட அந்த நொடி தான், என்னை கீதாவோடு இணைத்த நொடி. “இப்படி மழையில நனைஞ்சிட்டு எதுக்கு படிக்கிற? ரூமுக்குள்ள போயிருந்து படிக்கலாம்ல” இடது கை உள்ளங்கையை பாதியாக மடிந்திருந்த இடது கால் முட்டியில் ஊன்றியபடியே, வலது கையில் துணிகள் நிரம்பிய பச்சை பக்கெட்டை தூக்கிக் கொண்டு கீதா என் எதிரே நின்று கொண்டிருந்தாள்.

“இல்ல எங்க ரூம்ல, ரூம்மெட்டோட டிபார்ட்மெண்ட் பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து குரூப் ஸ்டடி பண்ணிகிட்டு இருக்காங்க. அதான் சவுண்டா இருந்திச்சுனு வெளிய வந்தேன்.”“

“அப்படியா. அப்ப ஒண்ணு பண்ணு. எங்க ரூம்ல வந்து படி. அங்க அமைதியா தான் இருக்கு” சொல்லிக்கொண்டே ஒருமுறை அவள் அறையை கழுத்தை பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டாள்.

“இல்ல பரவாயில்லை. இருக்கட்டும்” சமணம் போட்டிருந்த கால்களை இன்னும் இருக்கமாக பின்னிக் கொண்டேன்.

“என் ரூம்ல யாரும் எதும் சொல்லமாட்டாங்க.போ.  நான் இத காயப்போட்டுட்டு வந்திடுறேன்.” இடது பக்கமாக சாய்ந்து சாய்ந்து என்னைக் கடந்து அவள் நடந்து சென்ற பொழுது அவன் நீள பின்னலும் சரிந்து சரிந்து ஊஞ்சல் போல் ஆடியது.

வெறும் பக்கெட்டோடு திரும்பி வந்த அவள், நான் எவ்வளவோ மறுத்தும் என்னை தன் அறைக்கு அழைத்து சென்று விட்டாள். கட்டிலின் ஒருபக்கம் அவள் அமர்ந்துகொண்டு மறுபக்கம் என்னை அமரச் சொன்னாள்‌. சாய்ந்து கொள்வதற்கு வசதியாக ஒரு தலையணையை தந்தாள்.

அந்த நாளிற்கு பிறகு அவள் அழைக்காமலேயே அவள் அறைக்கு நான் அடிக்கடி சென்று வந்தேன். அவளும் என் அறைக்கு அப்படி வந்து போய் கொண்டிருந்தாள். ஒரு வருடத்திற்கு பிறகு என் அறை இரண்டாவது மாடிக்கு மாறிவிட்ட பிறகு, படி ஏறமுடியாத காரணத்தால் அவள் என் அறைக்கு வருவது நின்று போய்விட்டது. அவள் தன்னைப் பற்றியும் , அவள் பாலிடெக்னிக் படிப்பை முடித்ததிற்கும் பொறியியல் படிப்பில் சேர்ந்ததிற்கும் இடையே அவள் கழித்த இரண்டு வருடங்கள் பற்றியும்,  நிறைய சொல்லியிருக்கிறாள். சிலவற்றை சொல்லும் பொழுது அவள் கண்கள் வெறித்துப் போயிருக்கும். சிலவற்றை சொல்லும் பொழுது சிலிர்த்தும், சிலவற்றை சொல்லும் பொழுது நீரால் பளபளத்தும் இருக்கும்.

ஒருதடவை தலைதூக்க முடியாதபடி, காய்ச்சலால் சுருண்டு படுத்திருந்த மதிய வேளையில், விடுதி மெஸ்ஸில் வேலை பார்க்கும் அக்கா ஆவி பறக்கும் சுடு கஞ்சித் தட்டோடு அறை வாசலில் வந்து நின்று என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள்.ஆச்சரியத்தில் கண்கள் விரிய அவர்களை பார்த்தபொழுது, “கீதா பொண்ணுதான் மெஸ்ஸிக்கு வந்து, உன் ரூம் நம்பரையும் , பெயரையும் சொல்லி, கஞ்சி வச்சு கொண்டு கொடுத்திட்டு வரமுடியுமான்னு கேட்டுச்சு” என்று சொன்னார்கள் . அதன்பிறகு கீதா அறைக்கு நான் போகமுடிகிற அளவிற்கு தெம்பு வருகிறபடி காய்ச்சல் சரியாகிற வரைக்கும் இரண்டு நாட்கள் மூன்று வேளைக்கும் என் அறை வாசலுக்கே சுடு கஞ்சி வந்து கொண்டிருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து அவளிடம் இதைப்பற்றி கேட்ட பொழுது, “நீ இங்க ரூம் பக்கமே வரலயேனு, உன் ரூம்மேட்கிட்ட கேட்டேன். நீ காய்ச்சல்னு படுத்திருக்கிறதா சொன்னா.” என்று பதில் சொல்லிவிட்டு, அதை கடந்து அதற்கு சம்மந்தமே இல்லாத ஏதோ ஒரு பேச்சுக்கு சென்று விட்டிருந்தாள். நானும் அவள் பேச்சை பிடித்துக் கொண்டே அவளோடு சென்று விட்டிருந்தேன்.

கல்லூரி முடிவதற்கு, ஒரு வாரத்திற்கு முன்பு அவளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார்கள் என்றும், மாப்பிள்ளை போலிஸ் உத்தியோகத்தில் இருப்பவர் என்றும், அவளுக்கு என்று தனி கைபேசி வந்தவுடன் அதிலிருந்து அவள் திருமணத்திற்கு அழைப்பதாகவும், திருமணத்திற்கு நான் கட்டாயம் வரவேண்டும் என்றும் சொன்னாள். கல்லூரி கடைசிநாள் விடுதியை காலி செய்து விட்டு வரும் பொழுது வாசல் வரை வந்து வழியனுப்பினாள். அவள் அண்ணன் அவளை அழைத்து செல்ல வருவார் என்று கூறினாள்.

பேருந்து ரயில்வே பாலத்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது. கீதா கல்யாண கோலத்தில் பெரிய மீசை வைத்த வாட்டசாட்டமான ஒருவரின் அருகில் நிற்பதாக  கற்பனை செய்து பார்த்தேன். பாலத்தின் கீழேயுள்ள தண்டவாளத்தில் கடந்து சென்றிருந்த ரயிலின் சத்தம் தூரத்தில் கேட்டது. பாலம் முடிகிற இடத்தில் இடப்பக்கம் இருந்த குளத்தில் ஒரு ஒற்றை நீர்ப்பறவை அதன் முகத்தை தண்ணீரில் ஒரு முக்கு போட்டு நிமிர்ந்து தலையை உதற, அதிலிருந்து தெறித்த சில நீர்த்துளிகள் குளத்தில் விழுந்து சிறு சிறு நீர் வட்டங்களாக தோன்றி மறைந்தன.

அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்காக பையை எடுக்க ஜன்னல் கம்பியில் ஊன்றியிருந்த கையை எடுத்து பொழுது, கம்பியில் ஒட்டியிருந்த ஒரு சிறுதுளி கைமுட்டி மடிப்பின் அருகில் விழுந்தது. விழுந்த துளியை தேய்த்து துடைத்து விட்டு கொண்டபொழுது  சுடுகஞ்சி வாசனை வந்தது.

இங்கேயே இருந்திருக்கலாம்

பத்மகுமாரி 

“ச்சுஸ்ஸ்” என்ற சப்தம் அம்மா முன் அறையில் வரும்பொழுதே கேட்டிருக்கிறது. அம்மா தினமும் இறைவனின் முகத்தில் தான் விழிப்பாள். கேட்டால் அது பல வருட பழக்கம் என்பாள். எத்தனை வருடம் என்று அம்மாவும் சொன்னதில்லை, எனக்கும் கேட்க வேண்டும் என்று தோன்றியதில்லை. ஆனால் என் பெயரை நான் விவரமாக சொல்ல தெரிந்து கொண்ட நாட்களிலிருந்து அம்மா இப்படி செய்வதாக தான் எனக்கும் ஞாபகம்.

அன்றும் அப்படிதான் செய்திருக்கிறாள். கட்டிலில் இருந்து எழுந்தவுடன் கண்களை சரியாக திறந்தும் திறவாமலும் சுவரில் தடவி அறையின் விளக்கை ஒரு விநாடி எரியவிட்டு, எதிர் சுவரில் மாட்டியிருந்த ‘ராதா கிருஷ்ணர்’ படத்தை பார்த்திருக்கிறாள். அந்த படம் எங்கள் படுக்கையறை சுவற்றில் ஏழு ஆண்டுகளாக தொங்கிக் கொண்டிருக்கிறது. சில சமயம் மின்விசிறி முழு வேகத்தில் சுற்றும் பொழுதுகளில் லேசாக அங்குமிங்கும் அசையும்.  முதன்முறையாக அந்த படத்தை வாங்கி கொண்டு வந்து மாட்டியது நான்தான்.

‘பெட்ரூமில சாமி படம் போட கூடாதுலா’ அம்மா சந்தேகமாக கேட்டாள்.

‘அப்படிலாம் ஒன்னுமில்ல’ சொல்லிக் கொண்டே நான் அடுக்களைக்கு தண்ணீர் குடிக்க போய்விட்டேன்.

‘பெட்ரூமில சாமி படம் போட கூடாது ராதா அம்மா. சாமி குத்தம் ஆயிரும்’ சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அம்மா கேட்க எதிர் வீட்டு அகிலா அத்தை சொன்னது இது.

ஆனால் அந்த படத்தை இடம் மாற்றக் கூடாது என்று நான் மனதில் தீர்மானம் செய்து வைத்திருந்தேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் எனக்கு தெரியாது. காரணத்தோடு தான் எல்லாமே நடக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லைதானே.

‘சாமி தூணுலயும் இருக்கும், துரும்பிலும் இருக்கும் என்றால் பெட்ரூம் சுவற்றிலும் இருக்குந்தான? அப்புறம் தனியா படமா மாட்டுறதுனால என்ன குத்தம் வந்திரும்? ‘ அம்மா பிடிவாதமாக அந்த படத்தை கழற்ற சொல்லியிருந்தால் இந்த பதிலை சொல்லி அம்மாவிடம் வாதாடி சம்மதம் வாங்கி விட வேண்டும் என்று மனக்கணக்கு போட்டு வைத்திருந்தேன். ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை. அகிலா அத்தை சொன்ன பதிலுக்கு ‘ம்ம்’ கொட்டிய அம்மா, வாசலில் இருந்து வீட்டிற்குள் வந்தபிறகு அந்த படத்தை இடம் மாற்றவுமில்லை, இடம் மாற்ற வேண்டும் என்று என்னிடம் சொல்லவும் இல்லை. அம்மா மனதில் என்ன நினைத்துக் கொண்டாள், ஏன் அதை இடம் மாற்றவில்லை என்று இன்று வரை எனக்குத் தெரியாது. அம்மா படத்தை இடம் மாற்ற சொல்லாமல் விட்டதே போதும் என்ற எண்ணத்தில் நானும் அதன்பிறகு அதைப்பற்றி மேலும் பேசாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

படுக்கையில் இருந்து எழுந்து பூஜை அறை வரையிலும்,பாதி கண்ணை திறந்தும் திறவாமலும் போய் சாமி படங்களை பார்க்கும் அம்மா         ‘ராதா கிருஷ்ணர்’ படம் வந்த அடுத்த நாளிலிருந்து முதலில் அந்த படத்தை பார்த்துவிட்டு முழுக் கண்களை திறந்தபடி பூஜை அறைக்கு சென்று சாமி படங்களை பார்க்க ஆரம்பித்து இருந்தாள். கடந்த ஏழு வருடங்களாக இந்த முறை மாறியதே இல்லை.

**************

“ச்ஸ்வு” சப்தம் கேட்டு அம்மா வேகமாக பூஜை அறையில் வந்து பார்த்தபொழுது அந்த ‘மூஞ்சி எலி’ பூஜை அறையின் கீழ் வரிசையில் அன்னபூரணி சிலை முன் வைத்திருந்த அரிசியை கொரித்துக் கொண்டு இருந்திருக்கிறது. அம்மா பக்கத்தில் சென்று “ச்சூ…ச்சூ” என்று விரட்டியத்திற்கும் கூட கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல், அப்படியே அரிசியை கொரித்த படி இருந்ததாம். அம்மா அதனோடு போராட பயந்து கொண்டு வாக்கிங் போயிருந்த அப்பா வந்தபிறகு அப்பாவிடம் சொல்லி அதை விரட்டிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு முன்வாசல் தெளித்து கோலம் போட சென்றிருக்கிறாள்.

அப்பா திரும்புவதற்கு முன்பே எழுந்து வந்திருந்த என்னிடம் அம்மா இதை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த ‘மூஞ்சி எலி’ அடுக்களையில் ஓடிக்கொண்டிருந்த சலனம் எங்கள் இருவருக்கும் தெளிவாக கேட்டது. அது எப்பொழுது பூஜை அறையிலிருந்து அடுக்களைக்கு இடம் பெயர்ந்திருந்தது என்பது அந்த அன்னபூரணிக்கே வெளிச்சம்.

இருவரும் அடுக்களையில் சலனம் வரும் திசையில் அதனை தேட ஆரம்பித்திருந்தோம். ‘எப்படி இது உள்ள வந்ததுனே தெரில. எப்படி இத விரட்ட போறோமோ’ அம்மா அலுத்துக் கொண்டாள்.

‘போகாட்டா விடும்மா. அது பாட்டுக்கு சுத்திகிட்டு போகட்டும். நம்மளதான் ஒன்னும் செய்யலேலா’ இது என்னுடைய பதில்

‘ம்ம்….அது சரி…. அதுபோக்குல சுற்றி குட்டி போட்டு குடும்பம் பெருக்கி வீட்ட நாசம் பண்ணட்டும் சொல்றியா’ அம்மா என்னை முறைத்தபடி கேட்டாள்.

அம்மாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே நான் அதை விரட்ட, அது அடுக்களை வலது முக்கில் குவித்துப் போட்டிருந்த தேங்காய் குவியலுக்குள் மறைந்துக் கொண்டது. அங்கிருந்து எப்படியோ கஷ்டப்பட்டு விரட்ட அடுக்களையின் மறு முக்கில் வைத்திருந்த காலி சிலிண்டர் பின்னால் சென்று ஒளிந்துக் கொண்டது.

‘எம்மா, எங்க ஓடுதுனு பாத்துக்கோ’ என்றபடியே காலி சிலிண்டரை இடது கையால் ஒருபக்கமாக சுழற்றி தூக்கி பார்த்தபோது அது அந்த சுவர் முக்கில் இல்லை. ‘எங்க போச்சு பாத்தியாம்மா?’ நான் கேட்டதற்கு, அது அங்க இருந்து வெளிவரவில்லை என்று அம்மா சொன்னாள்.

‘அது எப்பிடி.. இங்கேயும் இல்ல…. மாயமாவா போகும். எங்கேயோ எஸ்கேப் ஆயிருச்சு பாரு… உன்ன கரெக்டா பாரு சொன்னம்ல’ அம்மாவை கடிந்து‌ கொண்டேன்.

அதன்பிறகு வாக்கிங்கில் இருந்து திரும்பி வந்த அப்பாவிடம் சொல்லி வீடு முழுவதும் தேடியும் அந்த ‘மூஞ்சி எலி’ அகப்படவில்லை.

‘அது நீங்க விரட்டினதுல பயந்து வெளிய ஓடிருக்கும்.நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க’ என்று முடித்துவிட்டு அப்பா அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து அடுக்களையில் துர்நாற்றம் அடிக்க, நானும் அம்மாவும் சுற்றி தேட ஆரம்பித்தோம். அதற்கு விடையாக செத்துப்போன மூஞ்சி எலியை காலி சிலிண்டர் அடியிலிருந்து கண்டெடுத்தோம். அன்று சிலிண்டரை ஒரு பக்கமாக தூக்கி பார்த்து போது இல்லாத மூஞ்சி எலி  எப்படி பிணமாக அங்கு மறுபடி வந்தது என்று எங்களுக்கு விளங்கவில்லை.

அம்மாவும் நானும் ஒருவர் முகத்தை ஒருவர் மெளனமாக பார்த்துக் கொண்டோம். இந்த மூஞ்சி எலி இங்கேயே சுற்றி குட்டி போட்டு குடும்பம் கூட பெருக்கியிக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அம்மா அதன் பிணத்தை மிகுந்த மரியாதையோடு அப்புறப்படுத்தினாள். இப்பொழுதெல்லாம் ‘ராதா கிருஷ்ணர்’ படத்தை பார்த்ததோடு பூஜை அறைக்கு செல்லாமலேயே அம்மா வாளி எடுத்துக் கொண்டு வாசல் தெளிக்கச் சென்று விடுகிறாள்.

 

பழுத்து சிதறிய இலைகள்  

பத்மகுமாரி

தடாலென்ற சத்தத்தோடு உரிக்கப்படாத ஒரு பச்சை தேங்காய் தேவியின்  கால் பெருவிரலுக்கு மிக நெருக்கத்தில் வந்து விழுந்தது. தேங்காயை தூக்கி எறிந்து விட்டு, மூச்சிறைக்க புறவாசலில் அரைத் துண்டோடு நின்று கொண்டிருந்த சுந்தரத்தை திரும்பிக்கூட பார்க்காமல், பால் பாத்திரத்தை எடுத்து வைத்து பாக்கெட் பாலை கத்தரித்து சிந்தி விடாதபடி கவனமாக ஊற்றினாள்.

“செய்யுறதையும் செஞ்சிட்டு வாய தொறக்காளா பாரு. வாயில மண்ண அள்ளி போட்டிருக்கா,” அடுத்த தேங்காயை உரிக்கும் கம்பியில் ஓங்கிக் குத்தினான் சுந்தரம். பால் பொங்கி மேலே வந்தது.

தேவிக்கும் சுந்தரத்திற்கும் கல்யாணம் முடிந்திருந்த மூன்றாவது மாதத்தில், கோபத்தில் சுந்தரம் தூக்கி எறிந்த சோற்றுப் பானை தேவியின் மூஞ்சிக்கு நேரே பறந்து வந்தபொழுது படாரென்று பிடித்துக் கொண்டாள். அவளுக்கு கல்யாணத்தின் பொழுது போடுவதாக பேசியிருந்த கணக்கில் அரை பவுன் குறைத்து போட்டுவிட்டது தெரிந்ததில் இருந்து சுந்தரம் அவள் மீது அடிக்கடி கோபப்பட ஆரம்பித்திருந்தான். அவளை அடிக்கவும் திட்டுவதற்கும் வேட்டை நாய் போல காரணங்களை துரத்தித் துரத்தி பிடித்தான்.

“நாலு கிராம் போட வக்கில்ல, தம்பி கல்யாணத்துக்கு அக்கா முந்தின நாளே வரணும்னு எந்த மூஞ்சிய வச்சிட்டு உங்க வீட்டுல கேக்குறாங்க”

“இப்ப என்ன உங்க அப்பனா செத்துப் போயிட்டான். ஒப்பாரி வச்சது போதும். எந்திரிச்சு சீலைய கட்டு,” படுத்திருந்த அவள் முடியைப் பிடித்து இழுத்து தள்ளினான்.

ஊரே உறங்கிப் போய் தெரு அமைதியாக இருந்தது. தூரத்தில் ஒற்றை நாய் ஊளையிடும் சத்தம் கேட்டது. “இந்நேரம் ஊரு அழைச்சு முடிச்சு இருப்பாங்க, தேவி வரலயான்னு கேட்ட ஊர்க்காரங்க முன்னாடி உங்க அப்பன் ஏமாத்துக்காரன் கூறிக் குறுகி போயிருப்பான்ல,” சுந்தரம் வெறி பிடித்தவன் மாதிரி அண்ணாந்து பார்த்து கத்தி சிரித்தான். காம்பவுண்டிற்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்த மாங்கிளை தேவியின் பின்னந்தலையை உரசி உரசி மேலும் கீழும் ஆடியது. திரும்பி அதைக் கைக்குள் ஒருநிமிடம் பொத்திப் பிடித்து விட்டுவிட்டு, உறுமிக் கொண்டிருந்த பைக்கின் பின்பக்கம் அவள் ஏறிக் கொள்ள, அவள் கைக்குள்ளிருந்து வெளி வந்த கிளை எம்பி மேலே ஒருமுறை போய்விட்டு, அதன் இடத்திற்கு வந்து லேசாக மேலும் கீழும் அசைந்தது.

பைக் உறுமிக் கொண்டு பறந்தது. சற்று நேரத்திற்கு முன் கைக்குள் அடங்கிக் கொண்ட மாங்கிளையை போல், கைக்குள் பொத்திக் கொள்ள ஒரு பிஞ்சு உயிர் இருந்திருந்தால் இந்த பயணம் கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும் என்று அவளுக்கு தோன்றியது.

அவள் பிறந்த வீட்டிற்கு அவர்கள் நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு வந்து இறங்கிய போது வாசல் திறந்து கிடக்க முற்றத்தில் காலை தொங்கப்  போட்டபடி, தேவியின் அம்மாவும் அப்பாவும் எதிர் எதிர் தூணில் சாய்ந்து, நகரும் மேகங்களை அண்ணாந்து பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள்‌.

சுந்தரம் தொண்டையை செருமி அவர்களுக்கு அவன் வருகையை சொன்னான். தேவியின் அம்மா அவளை ஓடிப் போய் கட்டிக்கொண்டாள். கல்யாணத்திற்காக வந்திருந்தவர்கள் முன் அறையில் ஜமுக்களத்தில் வரிசையாக படுத்திருந்தார்கள். ஒரு பத்து வயது குழந்தையின் பாதம் பக்கத்தில் படுத்திருந்த பெண்ணின் தொடையின் மேல் கிடந்தது.

“இல்லாத பாவத்துக்குத்தான தராம இருக்கோம். வச்சுக்கிட்டா இருக்கோம்,” தேவியின்‌ அம்மா அவளைக் கட்டிக் கொண்டபடியே குலுங்கி அழுதாள். சுந்தரம் திரும்பிப் பார்க்காமல் படுப்பறை ஓரத்தில் செருப்பை கழற்றி போட்டுவிட்டு நேராக உள் அறைக்கு சென்று விட்டான். தேவியின் அப்பாவின் கண்கள் பளபளத்திருந்தது நிலா வெளிச்சத்தில் தெரிந்தது.

மூணு பெண் பிள்ளைகள் பெற்றிருந்த தனக்கு ஒரு நிரந்தர வேலை அமையாமல் போனது தான் இத்தனைக்கும் காரணம் என்று தன்னையே அவர் நொந்துக் கொண்டார். அவர் அண்ணன் தம்பி தருவதாக சொன்னது, தேவியின் அம்மாவின் அண்ணன் தம்பி தருவதாக சொன்னது, தான் சேர்த்து வைத்திருந்தது என்று எல்லாத்தையும் கூட்டிப் பார்த்து தான் அவர் சபையில் வாக்கு கொடுத்திருந்தார்.

“ஒரு பவுன் தாரதா சொல்லிகிட்டு, இப்படி கல்யாணத்துக்கு தலைக்கநாள் அரை பவுன் கொண்டு நீட்டுறியே. கடைசி நேரத்தில நான் எங்கன போய் புரட்டுவேன்?”

“அது உம்ம பிரச்சனை. நீரு மூணு பொட்ட பிள்ளை பெத்து போட்டதுக்கு நான் மூணு பவுன் தண்டம் அழ முடியுமா. முதல்ல சொன்னேன். இப்போ இவ்ளோ தான் முடிஞ்சது,” தேவியின் தாய் மாமா சொன்னது.

எல்லாத்தையும் திரும்பவும் யோசித்த போது பாரம் ஏறி அவர் மூச்சு முட்டிக் கொண்டு பெருமூச்சாக வெளி வந்தது. தேவியைக் கூட்டிக் கொண்டு அம்மா முற்றத்தில் ஏறினாள்.

ஒருதடவை முன்கதவை திறந்த தேவியை உதைத்து உள்ளே தள்ளியபடி வீட்டுக்குள் நுழைந்தான் சுந்தரம். அவள் வயிற்றை பிடித்துக்கொண்டு சுருண்டு விழுந்தாள். சட்டையை கழற்றாமல் வலது முக்கில் கிடந்த மர நாற்காலியில் போய் அவன் அமர்ந்து கொண்டான். அவள் நெளிந்து எழுந்து முட்டைக் கட்டிக்கொண்டு அதே இடத்தில் இருந்தாள்.

““இருக்கத பாரு, பொம்மை மாதிரி. ஒன்னும் கொண்டு வரல. வயித்தையும் சேர்த்து கழுவிப் போட்டுட்டு வந்திட்டா. அவன் அவன் பிள்ளை குட்டி பெத்து , பொண்டாட்டி வீட்டு பிடிமானத்துல வீடு வாசல்ன்னு மேல ஏறுறான். நான் உன்ன கட்டிக்கிட்டு கிணத்துக்குள்ள கிடக்கேன். போய்  காப்பிய போடுடி.,” சேலை தலைப்பில் கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்து அடுக்களைக்குள் சென்றாள்.

சுந்தரத்தின் நட்பு வட்டாரத்தில் யாருக்கேனும் குழந்தை பிறந்திருக்கிறது அல்லது யாரேனும் புது வீடு கட்டி முடித்திருக்கிறார்கள் என்று அவள் புரிந்து கொண்டாள்.

காப்பியை அவன் கையில் கொண்டு கொடுத்தபொழுது டம்ளர் திரும்பி அவள் பக்கம் பறந்து வந்தது. அவள் இடப்பக்கமாக விலகிக் கொள்ள காப்பி ஒரு அமீபா வடிவத்தில் தரையில் பரந்து கிடந்தது. அவன் எழுந்து படுக்கறைக்கு சென்றான்.

திரும்பி  அதே மரநாற்காலியில் வந்தமர்ந்து கொண்டு, “ உன்னால ஒரு பிரயோசனமில்லை இந்த வீட்டுல. நல்லா என் காசுல ஏறி இருந்து தின்னுட்டு இருக்க,” அவன் முணுமுணுத்துக் கொண்டிருந்த பொழுது காப்பி உறிஞ்சியிருந்த அழுக்கு துணியை குழாய் தண்ணீரில் அவள் அலசிக் கொண்டிருந்தாள்.

“உன் அப்பன் உனக்கு மட்டும் நாமம் போட்டு விட்டுட்டான். இப்ப உன் தங்கச்சிக்கு மட்டும் உனக்கு போட்டத விட ஒரு பவுன் கூட போட்டு விடுறான். அது பொழைக்கத் தெரிஞ்ச பிள்ள. மாப்பிள வீட்டுக்கு இப்பமே கூடுதலா கேட்டு வாங்கி கொடுக்குது. உனக்கு மிச்சம் போட்டிருந்த நாலு கிராம திருப்ப வாங்கவே நாலு வருஷம் ஆச்சு. அதுவும் நீ எங்க வாங்கின. நான் போட்ட ஆட்டத்தில உங்க அப்பன் கொண்டு வச்சான் இல்லேனா நாமம் போட்டிருப்பான்,” மள மள என திட்டி முடித்து விட்டு சட்டையை மாற்றிக் கொண்டு வெளியே கிளம்பி சென்றான் சுந்தரம்.

அவன் போன பிறகு வெளியே வந்து மாங்கிளையை பிடித்தபடி கொஞ்ச நேரம் நின்றிருந்தாள் தேவி. கண்களில் இருந்து கோடு கோடாக கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.

பால் பொங்கி விடாமல் அவள் அடுப்பை நிறுத்திய பொழுது, அவன் தோடு உரித்திருந்த தேங்காய்களை பையில் எடுத்துக் கொண்டு வெளியே இறங்கிச்  சென்றிருந்தான். அவளிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. எப்பொழுதுமே அவளிடம் சொல்லிவிட்டு வெளியே போகிற பழக்கம் அவனுக்கு இருந்ததில்லை.

புறவாசலில் கிடந்த தேங்காய் சவுரி குவியலில் இருந்து ஒவ்வொன்றாக சாக்குப்  பையில் எடுத்து போட, “நமக்கு காசு பணம் இல்லாட்டியும் மானம் முக்கியம்மா. அந்த மனுசன் கோலம் நமக்கு தெரிஞ்சாச்சு. இந்த தடவ  மாமா எப்படியோ பேசி உன்ன திரும்ப கூட்டிட்டு போறதுக்கு ஒத்துகிட வச்சுட்டாங்க. எப்பவும் ஒண்ணு போல் இருக்காது.  கட்டிக் கொடுத்த மூத்த பிள்ளை வீட்டோட வந்து இருக்கு தெரிஞ்சா, அடுத்த ரெண்டு பொட்டப் பிள்ளைய வெளிய இறக்க முடியாது தாயி. அவர்கிட்ட எதிர்த்துலாம் பேசாத இனி. பேசுனா பேசிட்டு போட்டும். நம்ம மேலயும் தப்பு இருக்குல. பேசுனத பேசுனபடி செய்யாம போனது நம்ம தப்பு தான. அவர  அனுசரிச்சு போய் சூதானமா பொழச்சுக்கோ”  அம்மா வருஷங்களுக்கு முன்னாடி சொன்னது இப்பொழுது சொல்வது போல் வார்த்தை மாறாமல் காதுக்குள் ஒலித்தது. பதினைந்து என்று எண்ணி கடைசி தேங்காய் சவுரியை எண்ணிப் போட்டு சாக்கு மூட்டையை கட்டி முடித்தாள்.

“உன் ரெண்டாவது தங்கச்சிக்கு பேசி முடிச்சிருக்க இடம் என் தூரத்து சொந்தம்தான்,” ஒருவாரம் முன்னாடி சந்தையில் பார்த்த பொழுது லீலா அக்கா சொன்னதும் கூடவே சேர்ந்து ஞாபகம் வந்தது. எப்பொழுது எதைக் கொண்டு தர வேண்டும் என்று நமக்கே தெரியாமல் ஞாபகங்கள் கணக்கிட்டு வைத்து முன் நீட்டி விடுகின்றன.

கட்டிய சாக்கு மூட்டையை அவள் முக்கோடு எடுத்து வைத்த பொழுது, பழுத்த முருங்கை இலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக புறவாசலில் சிதறிக் கிடந்தன.