பாவண்ணன்

இரும்புக்கோட்டை – பாவண்ணன் சிறுகதை

“என்ன கேட்டா செல்லப்பா தன் பேர தானே கெடுத்துக்கறான்னுதான் சொல்வன்” என்றார் முத்து. “ஜிம்னாஸ்டிக்ஸ் செல்லப்பா நம்ம சாந்தி சர்க்கஸ்ல ஒரு ஹீரோ மாதிரி. எப்பவும் க்ளைமாக்ஸ்ல அவன் சோலாவா பண்ற ரோல்தான் பவர்ஃபுல். போயும் போயும் ஒரு பொண்ணுக்காக இவ்ளோ தூரத்துக்கு அவன் எறங்கணுமான்னுதான் மனசுல ஒரு சங்கடம்.”

“மனசுக்கு புடிச்சவகிட்ட ஒன்ன எனக்கு புடிச்சிருக்குதுன்னு சொல்றது ஒரு தப்பா? பேர் கெடுத்துக்க இதுல என்ன இருக்குது?” என்றார் ராஜாங்கம்.

“இங்க பாரு ராஜாங்கம், நமக்கு சாதகமாவே எல்லாத்தயும் பாக்கக் கூடாது. அந்த லதா பொண்ணு புடிக்கலைனு சொன்னதும் உட்டுடறதுதான நாயம்? அதுக்கப்புறமும் இவன் எதுக்கு பின்னாலயே போறான்? அது தப்புதான? யாரா இருந்தா என்ன?” என்று சங்கடமான குரலில் கேட்டார் செந்தில்

“அவுங்க என்னப்பா இன்னைக்கு நேத்தா பழகறாங்க. எனக்கு தெரிஞ்சி நாம விழுப்புரத்துல கேம்ப் போட்டமே, அப்பவே இவுங்களுக்குள்ள ஒரு இது ஆரம்பிச்சிடுச்சி. உண்டா இல்லயா, அத சொல்லு?” என்றார் மாணிக்கம்.

“உண்மைதான், ரெண்டு பேருக்கும் அப்ப ஒரு நெருக்கம் இருந்திச்சி. நம்ம ஓனர்கூட என்னடா ஜோடிப்புறாக்கள் பறந்துடுமா இருக்குமானு கூட ஜாடமாடயா கேட்டதுண்டு.”

“கேட்டாரில்ல. அப்ப ரெண்டு பேருக்கு நடுவுல ஏதோ இருக்குதுனு மனசுல ஒரு புள்ளி விழுந்ததாலதான கேட்டாரு. அந்த விழுப்புரம் கேம்புக்கு அப்பறமா பண்ருட்டி, நெய்வேலி, நெய்வேலி, வடலூரு, கடலூருனு சுத்திட்டு இப்ப பாண்டிச்சேரிக்கே வந்துட்டம். நாலஞ்சி மாசமாச்சிம் ஆயிருக்காது?”

“ஆமா. இப்ப அதுக்கென்ன?”

“இவ்ளோ காலமா புடிச்சிருந்த ஆள திடீர்னு புடிக்கலைன்னு சொல்லணும்னா ஒரு காரணம் இருக்கணுமில்ல? அத வெளிப்படயா சொல்லிட்டா முடிஞ்சி போச்சி. எதுக்கு மென்னு முழுங்கணும். எதுக்கு பாக்கும்போதுலாம் தள்ளித்தள்ளி போவணும்? அதான் கேள்வி.”

“எதுக்குடா மூடி மூடி பேசறீங்க? பார் வெளயாட்டுக்கு புதுசா வந்திருக்கானே ஒரு புதுப்பையன். சிங்காரம். அந்த பையன் மேல இந்த பொண்ணுக்கு ஒரு கண்ணு. அதனால செல்லப்பாவ கழட்டி உடலாம்னு பாக்குது. அதான் விஷயம்” என்று அதுவரை அமைதியாக இருந்த துரைசாமி சொன்னார்.

“ஒனக்கு புரியுது. ஆனா புரிய வேண்டியவனுக்கு புரியலயே. எதயோ பறிகொடுத்தாப்புல ஆளே சோந்து கெடக்கறான். பாக்கறதுக்கே சங்கடமா இருக்குது. க்ளைமாக்ஸ் ரோல் பண்ற ஆளு ஒரு சுறுசுறுப்பு உற்சாகம் வேகத்தோட இருந்தாதான கச்சிதமா செய்யமுடியும்?” என்று மறுபடியும் முத்து பேசினார்.

“நம்ம செல்லப்பா எங்க? இந்த மணி எங்க? ரெண்டு பேருக்கும் ஏணி வச்சாகூட எட்டாதுடா. அவன்கிட்ட என்னத்த பாத்து மயங்கிச்சோ இந்த பொண்ணு. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்” என்று கசப்புடன் நாக்கை சப்புக்கொட்டினார் மாணிக்கம்.

நான் அவர்கள் மாறிமாறி உரையாடிக்கொள்வதைக் கேட்டபடியே சமையல்காரர் கெட்டிலில் கொடுத்தனுப்பிய சூடான டீயை கோப்பைகளில் ஊற்றி ஒவ்வொருவருக்கும் கொடுத்தேன். ஆண்களும் பெண்களுமாக மொத்தத்தில் ஐம்பத்தாறு ஆட்டக்காரர்கள் பத்து பதினைந்து கூடாரங்களில் தங்கியிருந்தார்கள். முதலாளிக்கு மட்டும் தனிக்கூடாரம். காலை, மாலை இரு வேளைகளிலும் டீயை மட்டும் கூடாரங்களுக்கே கொண்டு சென்று கொடுக்கவேண்டியது என் வேலை. சிற்றுண்டிக்கும் உணவுக்கும் அவர்களே சமையல்கூடத்துக்கு வந்துவிடுவார்கள்.

சாந்தி சர்க்கஸ்க்கு நான் முற்றிலும் புதிய ஆள். அவர்களைப்போல நான் திறமைசாலி இல்லை. எட்டாம் வகுப்பில் தோற்றுவிட்டு ஊரில் பெயிண்டிங் கான்ட்ராக்டர் சதாசிவத்திடம் பத்து ரூபாய் கூலிக்கு வேலை செய்துகொண்டிருந்தேன். அம்மாவும் மூன்று அக்காக்களும் வீட்டில் இருந்தார்கள். அப்பாவின் முகம் எனக்கு நினைவில் இல்லை. எனக்கு மூன்று வயதாகும்போது ஊருக்கு நாடகம் போட வந்த குழுவிலிருந்த ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டே போய்விட்டார். அவர் இருக்கிறாரா இல்லையா என்பதுகூட எங்களுக்குத் தெரியாது.

செல்லப்பா எங்கள் ஊர்க்காரர். சிதம்பரத்தில் எங்கள் தெருவிலேயே அவர் வீடு இருந்தது. சின்ன வயசிலிருந்தே அவரை சித்தப்பா என்று அழைத்துப் பழக்கம். ஆறேழு மாதங்களுக்கு முன்பாக அவர் ஊருக்கு வந்திருந்தபோது அம்மா அவரைச் சந்தித்தார். “இவன் கூட இருக்கறதுலாம் ஒரே குடிகாரக்கூட்டமா இருக்குது தம்பி. ஒவ்வொரு நாளும் பயத்துலயே செத்து செத்து பொழைக்கறன். இவன உன்கூட அழச்சிகினு போயி பொழைக்க ஒரு வழிய காட்டு தம்பி. ஒனக்கு கோடி புண்ணியம்” என்று சொல்லி அழுதார். அதனால் மனமிரங்கிய சித்தப்பா ஊரிலிருந்து புறப்படும்போது என்னையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். அவர் சொன்ன சொல்லை முதலாளி ஏற்றுக்கொண்டதும் சமையல்காரருக்கு உதவி செய்பவனாக சேர்ந்தேன்.

“இதோ நம்ம சுப்ரமணிகிட்ட கேட்டா சொல்லுவான். இவன் சித்தப்பன்காரன்தான அவன்? ஏன்டா மணி. ஒன் சித்தப்பனுக்கு இந்த உலகத்துல வேற பொண்ணே கெடைக்கலயா? வேணாம் வேணாம்னு தள்ளி உடறவ பின்னாலயே ஏன்டா சுத்தறான்?” என்று டீயை உறிஞ்சியபடியே கேட்டார் முத்து.

எனக்கு அதைக் கேட்கவே சங்கடமாக இருந்தது. சாந்தி சர்க்கஸில் சேர்ந்த புதிதில் அவர்கள் இருவரும் சேர்ந்து கொஞ்சிக்கொஞ்சிப் பேசியதை நானே என் கண்களால் பலமுறை பார்த்திருக்கிறேன். அவையெல்லாம் இன்று பழங்கதையாகப் போய்விட்ட செய்திகளைக் காதால் கேட்கும்போது எனக்கே வேதனையாக இருக்கும்போது சித்தப்பாவின் வேதனை கொஞ்சமாகவா இருக்கும்.

“சின்ன பையனுக்கு என்னப்பா தெரியும்? பொண்ணுங்க சூதுவாது பத்தி அவனுக்கு எங்க புரியப்போவுது?” என்று உடனே குறுக்கே புகுந்து தடுத்தார் மாணிக்கம்.

“செல்லப்பாவுக்கு டீ குடுத்துட்டியாடா?”

“இன்னும் இல்லண்ணே”

“குடுக்கும்போது சர்க்கஸ் ஆளுங்க எல்லாருமே உன்ன பத்திதான் பேசறாங்க. அந்த பொண்ண உட்டுத் தலமுழுவுங்கன்னு சொல்லு.”

அவர்கள் அதற்குப் பிறகு பாண்டிச்சேரியில் ரிலீசாகி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்த நினைத்தாலே இனிக்கும் படத்தைப்பற்றி பேசத் தொடங்கிவிட்டனர். எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் என்று ராகம் இழுக்காதவர்களே கூடாரத்தில் இல்லை.

ஒவ்வொரு கூடாரமாகச் சென்று டீ கொடுத்துவிட்டு ஆண்கள் வரிசையில் அடுத்த கூடாரத்துக்குள் சென்றேன். அது பார் விளையாடுபவர்களின் கூடாரம். எல்லோருக்கும் டீ வழங்கி முடிக்கும் நேரத்தில் சிங்காரம் உள்ளே வந்தார். குளித்து முடித்து துவட்டிய தலைமுடிக்குள் விரல்களை நுழைத்து உதறினார். தேக்குமரம் போல இருந்தது அவர் உடல். கோதுமை நிறம். என்னைப் பார்த்ததும் ”குட்மார்னிங் மணி. வா வா” என்று சொல்லிவிட்டு சிரித்தார். நானும் சிரித்துக்கொண்டே “குட்மார்னிங் சார்” என்றேன். கம்பத்தில் தொங்கிய கண்ணாடியில் முகம்பார்த்து தலைவாரியபோது கோப்பையில் டீ நிரப்பிக் கொடுத்தேன். ஆவி பறந்துகொண்டிருக்கும்போதே கோப்பையை உதடுகளுக்கிடையில் வைத்து ஒரு மிடறு உறிஞ்சி நாக்கிலேயே நிறுத்தி துளித்துளியாகச் சுவைத்தார். ”சக்கரய இன்னும் கொஞ்சம் கொறச்சிருக்கணும் மணி. மாஸ்டர்கிட்ட சொல்லு” என்றார். நான் கிளம்பும்போது “இரு இரு மணி” என தடுத்து “என்ன டிபன் இன்னைக்கு?” என்று கேட்டார். ”ரவா தோசை” என்றேன் நான். “தொட்டுக்க தேங்கா சட்னிதான?” என்று சிரித்தார். நான் திரையை விலக்கிக்கொண்டு வெளியே நடக்கும்போது “கூடுதலா ரெண்டு பச்சை மிளகா போட்டு அரைக்கச் சொல்லு மணி” என்று அவர் சொன்ன சொற்கள் காதில் விழுந்தன.

கடைசியாக இருந்த சித்தப்பா கூடாரத்துக்குச் சென்றேன். அவர் ஒரு மூலையில் அமர்ந்து யோகாசனப் பயிற்சியில் மூழ்கியிருந்தார். கூடாரம் அமைதியாக இருந்தது. நான் பார்த்தபோது மூச்சையடக்கி வயிற்றைச் சுருக்கி உள்ளே இழுத்து இரப்பையை மட்டும் மணியின் நாக்குபோல சுழலச் செய்துகொண்டிருந்தார். நான் அசையாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகே அவர் அந்தப் பயிற்சியை முடித்துவிட்டு கண்களைத் திறந்தார். உடம்பெங்கும் வழிந்த வேர்வையை துண்டெடுத்து துடைத்தார்.

என்னைப் பார்த்த்தும் “என்ன?” என்று கண்களாலேயே கேட்டார். நான் “டீ” என்றேன்.

“இன்னும் சிரசாசனம் பாக்கியிருக்குது. அங்க வச்சிட்டு போ. நான் அப்பறமா எடுத்துக்கறேன்”

கோப்பையில் டீயை ஊற்றி மேசைமீது மூடிவைத்தபடி “உங்க ஏழுமணிக் குருவி இன்னும் வரலையா சித்தப்பா? நான் லேட்டா, அது லேட்டா?” என்று பேச்சு கொடுத்தேன். வழக்கமாக அந்த நேரத்துக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குருவி வந்து போவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். “நான் தெனமும் யோகாசனம் செய்றனா இல்லயானு என் குரு குருவியா வந்து என்ன பாத்துட்டு போறாரு” என்று சித்தப்பா சொல்வது வழக்கம்.

“வரும், வரும், வராம எங்க போவும்? மனுஷங்களுக்குத்தான் பாத்ததயும் பழகனதும் மறக்கற குணம் உண்டு. பறவையினத்துக்கு அந்த குணம் கெடயாது மணி.”

அவர் சொல்லி முடிக்கும் தருணத்தில் கீச்கீச்சென்று சத்தமெழுப்பியபடி விர்ரென்று உள்ளே நுழைந்து சுற்றிச்சுற்றிப் பறந்துவிட்டு நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்து அவரைப் பார்த்தது.

“என்னடா சொல்ற இப்ப?” என்று புன்னகையுடன் கேட்டபடி அந்தக் குருவியின் திசையில் ஒருகணம் பார்த்தார். பிறகு கூடாரத்தின் நடுக்கம்பத்துக்கு அருகில் சென்று அதை ஒட்டியபடி குனிந்து தலையைத் தாழ்த்தி வைத்து கால்களை செங்குத்தாக மேலே உயர்த்தி நிறுத்தினார் சித்தப்பா. நான் வெளியே வந்து பெண்கள் கூடாரங்களுக்குச் சென்றேன்.

பார் விளையாடும் பெண்கள், சைக்கிள் ஓட்டும் பெண்கள், வளையங்களில் ஆடும் பெண்கள் என அனைவருமே தனித்தனிக் குழுவாக கூடாரங்களில் இருந்தார்கள். அனைவருக்கும் டீ கொடுத்துவிட்டு உலகப்பந்தை உருட்டி ஆடும் பெண்களோடு லதா தங்கியிருந்த கூடாரத்துக்குச் சென்றேன்.

“வா வா. உனக்காகத்தான் காத்திட்டிருக்கோம். குளிச்ச உடனே எனக்கு டீ குடிக்கணும் மணி. இல்லைன்னா தலவலியே வந்துடும்” என்றாள் ஒருத்தி. “நான் பாத்துட்டுதான் இருக்கேன். தெனமும் நீ இந்த பக்கமா கடைசியிலதான் எட்டிப் பாக்கற. நாளைக்கு லேடீஸ் பக்கம்தான் மொதல்ல வரணும். சரியா?” என்று அதட்டினாள் மற்றொருத்தி. “வெறும் டீ மட்டும் கொடுத்தா எப்படி மணி? ஏதாச்சிம் ஒரு பிஸ்கட் கொடுக்கலாமில்ல. மொதலாளிகிட்ட சொல்லு” என்றாள் இன்னொருத்தி.

லதா அந்தக் கூட்டத்துக்கு நடுவில் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். வட்டமான அவள் முகத்தில் கருகருவென அடர்த்தியாக வளைந்த அவளுடைய புருவங்களும் அழகான கண்களும் யாருக்கும் இல்லாத ஒரு வசீகரத்தை அவளுக்கு வழங்கின. மாந்தளிரின் நிறம். மூக்கின் கீழ்விளிம்புக்கும் உதட்டுக்கும் நடுவில் ஊசியால் தொட்டு பொட்டு வைத்ததுபோல ஒரு மச்சம். முடிச்சிட்ட கூந்தல் பளபளவென முதுகில் தொங்கியது.

கோப்பையை வாங்கி அருந்தி முடித்த லதா திரையை விலக்கி நான் வெளியேறும் சமயத்தில் பின்னாலேயே வந்து “மணி” என்று அழைத்து நிறுத்தினாள். அக்கம்பக்கத்தில் திரும்பிப் பார்த்து நடமாட்டமில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு “ஒங்க சித்தப்பாகிட்ட என் வழியில இனிமே வரவேணாம்ன்னு கொஞ்சம் சொல்லி வை மணி. நானும் பலமுறை ஜாடைமாடையா சொல்லிப் பாத்துட்டன். அவருக்கு புரியவே மாட்டுது. புரியலையா, புரிஞ்சிக்க விருப்பமில்லயான்னு தெரியலை” என்றார். அதைச் சொல்லும்போது அவர் முகம் சுருங்கி இருள் அடர்ந்துவிட்டது.

மற்றவர்கள் சொல்வதையெல்லாம் நான் நேரிடையாக சித்தப்பாவிடம் ஒருபோதும் சொல்லிவிட முடியாது. என் எல்லை எது என்பது எனக்குத் தெரியும். என்னமோ ஒரு ஆற்றாமையால் என்னைப் பார்த்ததும் சொல்கிறார்கள். காதுகொடுத்துக் கேட்டபடி போய்விட வேண்டியதுதான் என நினைத்துக்கொண்டேன். சரி என்று தலையசைத்துவிட்டு நகர்ந்தேன்.

சிறிது தொலைவில் மஞ்சள்நிறமும் நீலநிறமும் மாறிமாறி அமைந்த அறுபதடி உயர துணிக்கூடாரம் விரிந்திருந்தது. பாதி மைதானத்தை அது அடைத்துக்கொண்டிருந்தது. பார்வையாளர்கள் வருவதற்கும் வெளியேறுவதற்கும் வெவ்வேறு நுழைவாயில்களை மூங்கில் நட்டு உருவாக்கியிருந்தார்கள். அங்கங்கே நடப்பட்ட சவுக்கைக்கம்பங்களை இணைத்திருக்கும் கயிற்றில் அசையும் வண்ணக்காகிதத் தோரணங்கள். ஒவ்வொரு கம்பத்தையும் ஒட்டி கட்டிவைக்கப்பட்ட குழல்விளக்குகள். அதன் முகப்பில் இரு காவல்காரர்கள் உட்கார்ந்திருந்தனர். ”சீக்கிரம் வாப்பா” என்று அவர்கள் அங்கிருந்தே கையசைத்தார்கள். அவர்களுக்கும் டீ வழங்கிவிட்டு நான் திரும்பினேன். “முத்தம்மாவும் சந்திராவும் உள்ள கூட்டறாங்க. அவுங்களுக்கும் குடு. மறந்துராத” என்றார் ஒரு காவல்காரர்.

நான் கூடாரத்துக்குள் நுழைந்தேன். மேடையில் ஓரமாக இருந்த உலகப்பந்தை உருட்டிவிட்டு பெருக்கிக்கொண்டிருந்தாள் முத்தம்மா. “இதும் மேல நின்னுகிட்டு எப்பிடிடி அவளுங்க சிரிச்சிகினே ஆட்டம் போடறாளுங்க. வழுக்காதா?” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள். “அதுக்குலாம் ஒரு நேக்கு இருக்குது பாத்துக்கோ. அது தெரியலைன்னா கீழ உழுந்து கைய கால ஒடைச்சிக்க வேண்டிதுதான்” என்று பதில் சொன்னாள் சந்திரா. நான் அவர்களிடம் சென்று டீ ஊற்றிக் கொடுத்தேன்.

“ஏன்டா தம்பி, நீ இது மேல ஏறுவியா?” என்று உலகப்பந்தைச் சுட்டிக்காட்டி கேட்டாள் முத்தம்மா.

“அவன் ஏறுவான், ஏறமாட்டான். அதத் தெரிஞ்சி ஒனக்கு என்ன ஆவப்போவுது? வா இந்த பக்கம். அங்க பாரு, எவ்ளோ குப்ப. அத போய் கூட்டு” என்று அவளை அடக்கினாள் சந்திரா.

“நான் வாய தெறந்து பேசனாவே ஒனக்கு எங்கடி நோவுது?” என்றபடி டீ அருந்திமுடித்தாள் முத்தம்மா. அவள் கையை அசைக்கும்போதெல்லாம் அவள் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களின் ஓசை கேட்டது.

“எல்லாருமே பேசிக்கறாங்களே உண்மையாடா தம்பி?” என்று கேட்டாள் அவள்.

“என்ன?” என்றேன்.

“சிங்காரமும் லதாவும் செட்டாயிட்டாங்கன்னு”

“எனக்குத் தெரியாதுக்கா”

“செல்லப்பாவ கழட்டி உட்டுட்டாளாம்”

“அப்பிடியா?”

“என்னடா ஒன்னும் தெரியாதமாதிரி நடிக்கற? நாள்பூரா அவளுங்க கூடாரத்தயே சுத்திசுத்தி வர. ஒனக்கு ஒன்னும் தெரியாதா?”

“எனக்கு உண்மையாவே எதுவும் தெரியாதுக்கா.”

“சரி. இப்ப தெரிஞ்சிக்கோ. நீ போய் செல்லப்பாகிட்ட ஒரு வார்த்த சொல்லணும்”

“என்ன?”

“அந்த லதா போனா என்ன, இந்த முத்தம்மா இருக்கேன்னு போய் சொல்லு. என் கண்ணுக்குள்ள வச்சி காப்பாத்துவேன்னு சொல்லு.”

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன்.

அவள் புன்னகைத்துக்கொண்டே “அவன ராஜா மாதிரி உள்ளங்கையில வச்சி தாங்குவேன்னு சொல்லு. ராவும் பகலுமா பாடுபட்டு நான் அவனுக்கு கஞ்சி ஊத்துவேன்னு சொல்லு” என்றாள்.

நான் எந்தப் பதிலும் சொல்லாமல் காலியான கோப்பைகளை எடுத்து வாளிக்குள் வைத்தபோது சந்திராவே முந்திக்கொண்டு “தொடப்பக்கட்டை பட்டுக்குக்குஞ்சத்துக்கு ஆசப்பட்ட கதயா இருக்குதுடி நீ சொல்றது” என்று சொல்லிவிட்டு பெருக்கிக்கொண்டே திரும்பினாள்.

நான் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வெளியே வந்து சமையல் கூடத்துக்குச் சென்றேன். மாஸ்டர் என்னைப் பார்த்ததுமே “இப்படி ஆடி அசைஞ்சி வந்தா மிச்சமிருக்கற வேலய எப்படா முடிக்கறது? சீக்கிரம் எல்லாத்தயும் கழுவி கவுத்தி வச்சிட்டு வந்து தேங்கா துருவற வேலய பாரு” என்றார். அவர் கையில் நீண்ட தோசைக்கரண்டி இருந்தது. பெரிய செவ்வகம் போல இருந்த தோசைக்கல்லில் ஒரே நேரத்தில் ஆறு தோசைகள் வெந்துகொண்டிருந்தன. பிச்சாண்டி சின்ன உரலில் பொட்டுக்கடலையை அரைத்துக்கொண்டிருந்தான்.

கெட்டிலில் எஞ்சியிருந்த டீயை ஒரு கோப்பையில் ஊற்றி மெதுவாக அருந்தினேன். பிறகு காலி கோப்பைகளால் நிறைந்துவிட்ட வாளியையும் கெட்டிலையும் தண்ணீர்த்தொட்டிக்கு அருகில் வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக கழுவி சுவரோரமாக கவிழ்த்து அடுக்கிவைத்தேன்.

”என்ன மாஸ்டரே, டீ ஏதாச்சிம் மிச்சமிருக்குதா?” என்றபடி சமையல் கட்டுக்கு வெளியே நின்றபடி கேட்டாள் இஸ்திரி பொன்னம்மா. அவள் குரல் கேட்டதுமே மாஸ்டர் முகத்தில் புன்னகை சுடர்விட்டது.

“உள்ள வந்து பேசு பொன்னம்மா. நீ என்ன எப்ப பாத்தாலும் போஸ்ட்மேன் மாதிரி வாசலுக்கு வெளியவே நின்னு பேசற?” என்று அவளுக்குப் பதில் சொன்னபடி என்னைப் பார்த்தார். நான் உடனே “எல்லாமே தீந்துடிச்சி மாஸ்டர். இப்பதான் கழுவி முடிச்சி காயவைச்சிட்டு வரேன்” என்று உதட்டைப் பிதுக்கினேன்.

“ஒரு நிமிஷம் இரு பொன்னம்மா” என்றபடி ஏற்கனவே காய்ச்சி ஓரமாக மூடி வைத்திருந்த பாத்திரத்திலிருந்து ஒரு தம்ளரில் பால் எடுத்துவந்து பக்கத்தில் இருந்த ஸ்டவ்வை ஏற்றி டீ போடத் தொடங்கினார். நான் முறத்தில் அரிவாள்மனையை வைத்து தேங்காயைத் துருவி எடுத்துச் சென்று பிச்சாண்டியிடம் கொடுத்தேன்.

இஸ்திரி போடப்பட்ட ஆடைகளைக் கொண்ட மூட்டையை இடுப்பிலிருந்து இறக்கி கீழே வைத்தாள். எல்லாமே ஆட்டக்காரர்களின் ஆடைகள். மேடையில் அணிவதற்காகவே தைக்கப்பட்டவை. கால்களோடு ஒட்டிக்கொள்ளும் இறுக்கமான பேண்ட்டுகள். அதற்குமேல் அணியக்கூடிய கால்சட்டைகள். சட்டைகள்.

“நீ எதுக்கு பொன்னம்மா இம்மா நீளத்துக்கு பொடவய இடுப்பச் சுத்தி கட்டிகினு அவஸ்தைப்படற? இந்த செட்டுல ஏதாவது ஒரு ட்ரஸ்ஸ எடுத்து போட்டுக்கினா சிக்குனு இருக்குமில்ல?”

மாஸ்டர் கண்ணடித்தபடி கொதிக்கும் டீயை ஒரு கோப்பையில் ஊற்றி அவளிடம் கொடுத்தார். அவள் குடித்து முடிக்கும் வரைக்கும் மாஸ்டர் சரசப் பேச்சுகளை நிறுத்தவே இல்லை.

“பத்து நாளா ஒங்க கையால ருசியா டீ, ருசிய இட்லி தோசை, ருசிருசியா சோறு கொழம்புனு எப்படியோ பொழப்பு ஓடிட்டுது. நாளையோட எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துடும் இல்ல? அதுக்கப்புறம் என்னாவும்னு நெனச்சாதான் ஏக்கமா இருக்குது.”

“அவ்ளோ ஏக்கமா இருந்தா எங்க கூடவே வந்துடு பொன்னம்மா. கூட்டத்தோட கூட்டமா இருந்துக்கலாம்”

“புருஷன் புள்ளைங்கன்னு ஒரு குடும்பம் இருக்கும்போது அதெல்லாம் நடக்கற கதயா மாஸ்டர்? அடுத்து எந்த ஊரு?”

“திண்டிவனமோ வந்தவாசியோ. ஏதோ ஒன்னு., மொதலாளி என்ன முடிவு பண்ணியிருக்காரோ, அது. சரியா தெரியல.”

அவள் கோப்பையை வைத்துவிட்டு மூட்டையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றாள். அவள் மூன்று குழந்தைகளுக்கு தாய் என்று சொன்னால் யாருக்குமே நம்பிக்கை வராது. நல்ல இரும்புச்சிலைபோல இருந்தாள்.

சட்னியை தாளித்தபடியே மாஸ்டர் “மணி, போய் மணி அடிச்சிட்டு வா. டேபிள் நாற்காலிய இழுத்து சரியா போட்டு வை” என்றார். நான் மணியடித்து முடித்த ஐந்தாவது நிமிடம் ஆட்டக்காரர்கள் அனைவரும் கூடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டனர்.

நான் இலைக்கட்டை எடுத்துக்கொண்டு கூடத்துக்குச் சென்றேன். அகலமான தட்டில் அடுக்கிவைக்கப்பட்ட தோசைகளோடு வந்தார் மாஸ்டர். பிச்சாண்டி ஒவ்வொரு இலையிலும் சீராக சட்னி ஊற்றிக்கொண்டே வந்தான். தோசையின் மணமும் சட்னியின் மணமும் கூடத்தில் நிறைந்தது. அனைவரும் சிற்றுண்டி சாப்பிட்டு வெளியேறிய பிறகு நாங்கள் சாப்பிட உட்காரும்போது பத்துமணி ஆகிவிட்டிருந்தது.

சிலர் கூடாரத்துக்கு திரும்பிச் சென்று சீட்டாட உட்கார்ந்துவிட்டனர். சிலர் கேரம்போர்ட் ஆடத் தொடங்கினர். சிங்காரமும் அவருடைய நண்பர்களும் ஒரு குழுவாக ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காக புறப்பட்டுச் சென்றனர். “கடற்கரைக்கு போய்ட்டு வரன்” என்று சொன்னார் சித்தப்பா. ”வேணாம் வேணாம். நீ தனியா போவாத. நாங்களும் வரோம்” என்று மாணிக்கமும் முத்துவும் அவரோடு சென்றார்கள். மதிய உணவு தயாரிக்கும் வேலைகளில் நாங்கள் மூழ்கிவிட்டோம்.

சென்றவர்கள் அனைவரும் திரும்பி வரும்போது மணி ஒன்றரை ஆகிவிட்டது. உடனே சாப்பாடு பரிமாறும் வேலை. வெண்டைக்காய் பொரியல், புடலங்காய் கூட்டு, மணத்தக்காளி போட்ட வற்றல்குழம்பு, சாம்பார், ரசம், தயிர்,. வடை, அப்பளம், பாயசம் என ஏராளமான விஷயங்கள். ஒரு நொடி கூட நிற்க நேரமில்லை. பரபரப்பாகவே இருந்தோம்.

எல்லோரும் சாப்பிட்டு புறப்பட்டுச் சென்ற பின்னர் பிறகு நாங்களும் சாப்பிட்டு எழுந்தோம். நான் அரிசிமூட்டை வைத்திருந்த கூடாரத்திலேயே தார்ப்பாய் மீது படுத்து தூங்கிவிட்டேன். எழுந்தபோது மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. வேகமாக எழுந்து முகம் கழுவிக்கொண்டு கேன் எடுத்துச் சென்று பால் வாங்கிவந்தேன்.

மாஸ்டர் டீ போட்டு முடிப்பதற்குள் நான் சென்று குளித்துவிட்டு ஆடைமாற்றிக்கொண்டு திரும்பினேன். நெருப்பைக் கொட்டியதுபோல இருந்த வெப்பத்துக்கு அந்தக் குளியல் இதமாக இருந்தது. கெட்டிலையும் கோப்பைகள் நிறைந்த வாளிகளையும் எடுத்துக்கொண்டு கூடாரங்களுக்குச் சென்றேன். காலையில் லதாவின் கூடாரத்தில் இருந்த பெண் சொன்னது நினைவுக்கு வந்தது. லேடீஸ் கூடார வரிசையிலிருந்து தொடங்கி எல்லாக் கூடாரங்களுக்கும் சென்று டீ வழங்கினேன்,

ஆறரை மணி காட்சிக்கு ஆறு மணிக்கெல்லாம் டிக்கட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் ஒரு நாளில் சர்க்கஸ் முடிவடையப் போவதால் கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. ’விநாயகனே வினைதீர்ப்பவனே’ என்று பாட்டு ஒலிக்கத் தொடங்கியது. அது முடிந்ததும் ’ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே’ என்ற பாட்டு தொடங்கியது. அது முடிந்ததும் ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ ஒலித்தது. நான் அதைக் கேட்டபடி காய்களை நறுக்கத் தொடங்கினேன். அரிசி கழுவிக்கொண்டிருந்த பிச்சாண்டி “புது ரெக்கார்ட்லாம் வாங்கிட்டாரு போல, நல்லா புதுசுபுதுசா போடறாரு” என்று மகிழ்ச்சியில் பல்லைக் காட்டிச் சிரித்தான். ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ என்ற பாட்டு ஒலித்தபோது அவனால் தரையில் நிற்கவே முடியவில்லை.

முதல் காட்சி நடைபெறும் சமயத்தில் சமையல் வேலையில் நாங்கள் மூழ்கியிருப்போம். அதனால் ஒவ்வொரு நாளும் அச்சமயத்தில் மேடைக்குப் பக்கத்தில் சென்று நிற்கக்கூட எங்களுக்கு நேரமிருக்காது. துடிப்பும் வேகமும் நிறைந்த இசைக்கோவைகள் ஒலிப்பதை மட்டும் கேட்டபடி வேலையில் ஆழ்ந்திருப்போம்.

இரண்டாவது காட்சி எட்டரை மணிக்கு. அப்போதும் தொடக்கத்தில் இருந்து எங்களால் பார்க்கமுடியாது. ஓய்வு கிடைக்கும்போது ஓடிச் சென்று ஒருசில நிமிடங்கள் எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்புவோம். மேடையின் இரு பக்கங்களிலும் திரை மறைவில் இருள் குறைவான வாயில்கள் இருந்தன. ஆட்டக்காரர்கள் மேடைக்குச் செல்லவும் வெளியேறவும் உருவாக்கப்பட்ட வழிகள் அவை. அந்த இடங்களில்தான் மறைவாக நின்று பார்ப்போம்.

நான் நின்றிருந்தபோது என்னைக் கடந்து ஒருத்தி வாசலுக்கு அருகில் சென்றாள். அவள் பூசியிருந்த பவுடரின் வாசனையும் செண்ட் வாசனையும் பத்தடி தொலைவுவரைக்கும் பரவியிருந்தது. அதே நேரத்தில் மற்றொருத்தியும் எதிர்ப்புற வாயிலுக்கருகில் நின்றிருந்தாள். இருவரும் இசைக்காகக் காத்திருந்தனர். தாளம் ஒலிக்கத் தொடங்கியதுமே இருவரும் சீரான நடையில் உடலை வளைத்தும் குலுக்கியும் நடந்து சென்று மேடையில் நின்று கையை உயர்த்திச் சிரித்தார்கள். இருவரும் ஒரே நேரத்தில் கைகளை உயர்த்தினார்கள். இறக்கைகளை அசைப்பதுபோல இருபுறங்களிலும் அசைத்தார்கள். ஒரே புள்ளியில் நின்றபடி இடுப்புக்கு மேற்பட்ட பகுதியை மட்டும் சுழற்றினார்கள். சட்டென கைகளை கீழே ஊன்றி மூச்சடக்கி கால்களை மேலே உயர்த்தினார்கள். அப்போது தலைகீழாகத் திருப்பிவைக்கப்பட்ட பொம்மைபோல அவர்கள் தோற்றம் இருந்தது. கைகளை அங்குலம் அங்குலமாக நகர்த்தி இருவரும் நெருங்கிவந்தார்கள். பிறகு கால்களைமட்டும் சுழற்றினார்கள். அப்போது மூன்றாவதாக லதா மேடைக்குள் வந்தாள். பறவைபோல ஒரே கணத்தில் எம்பி அவர்கள் கால்மீது நின்றாள். கீழே கைகளை ஊன்றியிருப்பவர்கள் மெல்லமெல்ல ஒரு வட்டமடித்துத் திரும்ப, அவர்களுடைய கால்மீது நின்ற லதாவும் அவர்களுக்கு இணையாக கையை உயர்த்தி அசைத்தபடி வட்டமடித்தாள். அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது.

ஒரு நீண்ட கயிறு மேடைக்கு நடுவில் தொங்கியது. இசை ஒலிக்கத் தொடங்கியதும் சிங்காரம் ஓடி வந்து அந்தக் கயிற்றைப் பற்றினான். கயிறு மேலே செல்ல ஒரு குறிப்பிட்ட உயரத்தில் தொங்கினான். கயிறு முன்னும் பின்னும் அசைய ஆரம்பித்ததும் அவன் அதைப் பற்றியபடி புன்னகையுடன் ஊஞ்சலாடினான். இன்னும் சற்றே மேலேறி கயிற்றின் கீழ்முனையை வலது காலின் விரல்களுக்கிடையில் பற்றிக்கொண்டு, அடுத்த காலை அவன் அந்தரத்தில் சுழற்றியபடி சுற்றிச்சுற்றி வந்தான். இசை உச்சத்துக்குச் சென்றபோது லதா உள்ளே வந்தாள். கயிற்றில் தொங்கியபடியே அவள் கையைப் பற்றி தன்னை நோக்கி ஒரு தூண்டிலைப்போல இழுத்தான் அவன். அவள் சட்டென எம்பி அவனுடைய பாதத்தின் மீது தன் ஒரு காலைப் பதித்தபடி அவனுக்கு இணையாக நின்றுகொண்டாள். அடுத்த காலை காற்றில் வீசிவீசி சுழன்றாள். அரங்கமே கைதட்டி ஆரவாரம் செய்தது. இசை இன்னும் உச்சத்துக்குச் சென்றது. லதா உடனே தன் முதுகில் செருகியிருந்த குடையை எடுத்து விரித்து அதைத் தனக்கு மேலே பிடித்தாள். கயிறு சுழன்று சுழன்று வந்தபோது, கைதட்டல் விண்ணைப் பிளந்தது.

அடுத்த நிகழ்ச்சியில் இரண்டு கயிறுகள் தனித்தனியாக இறங்கின. இசை ஒலிக்கத் தொடங்கியதும் சிங்காரமும் லதாவும் மேடைக்கு ஓடி வந்தார்கள். அரங்கத்தினரை நோக்கி குனிந்து வணக்கம் சொல்லிவிட்டு அரங்கத்தின் வட்டப்பாதையிலேயே ஓடி ஆளுக்கொரு கயிற்றை எம்பிப் பற்றி ஊஞ்சலாடினார்கள். வலது கையும் வலது காலும் மட்டும் கயிற்றைப் பற்றியிருக்க இடது கையையும் காலையும் அந்தரத்தில் விரித்தபடி ஒரு குடையைப் போல சுழன்றார்கள். ஒரு கட்டத்தில் இருவருடைய கைகளும் கால்களும் பற்றிக்கொள்ள ஊஞ்சல் முன்னும் பின்னும் அசைந்தது. இசை உச்சத்துக்குச் சென்று அடங்கியது.

ஆளுயர வட்டவடிவ இரும்புச்சக்கரத்தோடு மேடையில் தோன்றி வணங்கினான் சிங்காரம். வெள்ளை வண்ணத்தில் காணப்பட்ட அச்சக்கரத்தை வட்டப்பாதையில் இசைக்குத் தகுந்தபடி உருட்டினான். சட்டென அரங்கத்தின் மையத்துக்கு வந்து அச்சக்கரத்தில் இரு கால்களையும் வைத்து ஊன்றினான். அதே கணத்தில் மேல் பகுதியில் கைகளால் பற்றிக்கொண்டான். சமநிலையில் அச்சக்கரம் நின்ற விசித்திரத்தைப் பார்த்து ஓவென சத்தமெழுப்பி கைத்தட்டினார்கள் பார்வையாளர்கள். பிறகு அச்சக்கரம் சமநிலையை இழக்காமலேயே மேடையில் உருளத் தொடங்கியது. கீழேயிருந்த தலை மேலே சென்றது. மேலேயிருந்த கால் கீழே வந்தது. பிறகு கால் மேலே சென்றது. தலை கீழே வந்தது. ஒரு ஊசி அளவுக்குக்கூட நகராத சக்கரம் சமநிலையில் சுழன்றபடியே இருந்தது. அரங்கத்தின் கைத்தட்டல் வெகுதொலைவு வரைக்கும் கேட்டது.

கைகளை உயர்த்தி இடுப்பை ஒயிலாக அசைத்தபடி மேடைக்குள் வந்த லதா சட்டென சுழலும் சக்கரத்தில் ஒட்டிக்கொண்டாள். அவன் தலை ஊன்றியிருக்கும் இடத்தில் லதா கால்களை ஊன்றியிருந்தாள். அவன் கால்களை வைத்திருக்கும் இடத்தில் லதா தன் தலையைப் பதித்திருந்தாள். அரங்கத்தில் இருப்பவர்களுக்கு இருவருடைய முகங்களும் மாறிமாறித் தோன்ற இசையும் கைத்தட்டலும் உச்சத்தை நோக்கிப் பாய்ந்தன.

ஒவ்வொரு இசைத்தட்டு மாறும்போதும் ஒரு புதிய நிகழ்ச்சி தொடங்கியது. ஒரு நிகழ்ச்சியில் இரண்டடி நீளமுள்ள உருண்ட தடியை தரையில் நிற்க வைத்துவிட்டு அதை இரு கைகளாலும் உறுதியுடன் பற்றிக்கொண்டு சிங்காரம் எம்பி நிற்க, அவன் உடலில் தொற்றி ஏறி, அவன் கால்களில் கைகளை ஊன்றி தலைகீழாக லதா நின்றாள். இன்னொரு நிகழ்ச்சியில் இந்தப்பக்கம் ஐந்துபேர் அந்தப்பக்கம் ஐந்து பேர் வரிசையில் நின்றிருக்க, லதா சட்டென எம்பி அவர்கள் தோள்மீது ஏறி நின்று வலம் வந்தாள்.. அடுத்த நிகழ்ச்சியில் அந்தப் பத்து பேரும் ஒரு மூங்கிலை உயர்த்திப் பிடிக்க, அதன் மீது ஏறி நின்று நடைபயின்றாள் அவள்.

சைக்கிளில் வட்டமடித்தல், ஒற்றைச்சக்கரம் ஓட்டுதல், பார் விளையாட்டு, நெருப்பு வளையங்களில் தாவுதல், என எண்ணற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இறுதி நிகழ்ச்சியாக செல்லப்பா தோன்றி ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து காட்டினார். இசை சீராக ஒலிக்கத் தொடங்கி சட்டென மேலெழுந்தது. அவர் உடலையும் கைகால்களையும் தலையையும் நினைத்த திசையில் திருப்பியதைக் கண்டு அரங்கம் எழுப்பிய மகிழ்ச்சிக் கூச்சல் எல்லாத் திசைகளிலும் எதிரொலித்தது. அவருடைய ஒவ்வொரு அசைவும் நடனத்தின் அசைவையும் வேகத்தையும் கொண்டிருந்தது.

பூமிப்பந்தின் மீது ஏறி நின்றபடி பந்தை காலால் உருட்டியவாறே மேடையின் வட்டப்பாதையில் வலம்வருவது செல்லப்பாவுடைய சிறப்பு நிகழ்ச்சி. ஒருகணம் கூட அவர் கவனம் சிதைந்ததில்லை. முதல் வட்டத்தில் அவர் கைகளை இருபுறமும் விரித்து புன்னகைத்தபடியே வந்தார். அடுத்த வட்டத்தில் அவரைத் தொடர்ந்து இரு பெண்கள் வந்தனர். ஒரு பெண் செல்லப்பாவை நோக்கி ஒரு சின்னப் பந்தை எறிந்தாள். உலக உண்டைப்பந்துமீது நின்றிருந்த செல்லப்பா அதை லாவகமாகப் பிடித்து அதே வேகத்தில் மறு கைக்கு மாற்றி அடுத்தவரை நோக்கி எறிந்தார். மூன்றாவது முறையாக வட்டப்பாதையில் வந்தபோது இரு புறங்களிலிருந்தும் பெண்கள் அவரை நோக்கி ஒரே சமயத்தில் சின்னப் பந்துகளை எறிந்தனர். அவர் அவற்றைச் சிக்கெனப் பிடித்து மறுகைக்கு மாற்றி பெண்களை நோக்கி எறிந்தார். ஒரு பந்துகூட பிசகவில்லை.

செல்லப்பாவின் தீப்பந்த நிகழ்ச்சி தொடங்கும்போதே கைத்தட்டல் தொடங்கிவிட்டது. அந்த அளவுக்கு அது மக்களிடையே பரவி செல்வாக்கு பெற்றிருந்தது. செல்லப்பா அவையைப் பார்த்து வணங்கியபடியே மேடைக்கு நடுவில் வந்து நின்றார். பிறகு முத்து, மாணிக்கம், ராஜாங்கம், செந்தில் நால்வரும் வந்து பக்கத்துக்கு இருவராக நின்றனர். ஒரு வரிசையில் ஐந்து பேர். இசை ஒலித்தபடி இருக்க, மேலும் நான்கு பேர் ஓடோடி வந்து ஐந்து பேர்களின் தோள்களில் ஏறி நின்றார்கள். அதற்குப் பிறகு மூன்று பேர் ஓடி வந்து கீழே இருந்தவர்களின் இடையையும் தோளையும் படிக்கட்டெனப் பற்றி ஏறி மேலே சென்றனர். பிறகு இருவர். இறுதியாக லதா.

லதா அனைவருக்கும் மேலே ஏறி நின்று கையசைத்தாள். அப்போது அவளை நோக்கி ஒரு தீப்பந்தம் எறியப்பட்டது. அவள் அதை வெற்றிகரமாகப் பிடித்து கையை உயர்த்தி அசைத்தாள். தீப்பந்தம் உச்சியை நோக்கி தழலாடியது. அடுத்தடுத்த பந்தங்களை பின்னலின் விளிம்பில் நிற்பவர்கள் பற்றி கையை உயர்த்தினார்கள். ஒரு கோணத்தில் அந்த மானுடப்பின்னலே ஒரு பெரிய தீப்பந்தம் போல சுடர்விட்டது. இசை மேலும் மேலும் உயர்ந்து உச்சத்தை நோக்கிச் செல்ல, கீழே நின்றிருக்கும் ஐந்து பேருடைய காலடிகளும் அங்குலம் அங்குலமாக நகர்ந்து வட்டமடித்தது. தீப்பந்தமே சுழல்வது போன்ற கண்மயக்கை அது அளித்தது. பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்றுவிட்டனர். கைத்தட்டல் ஓயவே இல்லை. தீப்பந்தம் ஒரு முழு வட்டமடித்ததும் முதலில் லதா இறங்கினாள். பிறகு ஒவ்வொரு அடுக்கிலும் நின்றிருந்தவர்கள் இறங்கினார்கள். இறுதியாக பதினைந்து பேரும் வரிசையில் நின்று அவையை வணங்கிவிட்டுக் கலைந்தார்கள்.

காட்சியின் கடைசி நிகழ்ச்சி. செல்லப்பா மட்டுமே அரங்கத்தின் மையத்தில் நின்றிருந்தார். சாந்தி சர்க்கஸில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி அது. இந்த ஒரு நிகழ்ச்சி வழியாக மட்டுமே ஒவ்வொரு ஊரிலும் செல்லப்பாவுக்குக் கிடைத்த பரிசுகளுக்கும் பாராட்டுகளுக்கும் அளவே இல்லை.

செல்லப்பா அரங்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து வணங்கியபோது ஒலிபெருக்கியில் குரல் எழுந்தது. ”மகாஜனங்களே, எங்களை வளர்த்து வாழவைக்கிற தெய்வங்களே. இதோ இங்கே நிற்பவர் எங்கள் உடற்பயிற்சிக் கலைஞர் செல்லப்பா. சாந்தி சர்க்கஸின் சொத்து. எங்கள் தங்கம். அஞ்சாத சிங்கம். இரும்புக்கோட்டை. அவர் உடல் தெய்வம் வாழும் கோவில். செஞ்சி தேசிங்கு ராஜாவின் வெற்றிக்கோட்டை. அவர் ஆற்றல் இந்த ஊருக்கே தெரிந்த விஷயம்.” என்று தொடங்கினார்.

“புதுச்சேரி பெருமக்களே, இதோ அவர் உங்கள் முன்னால் நிற்கிறார். அவர் நிற்கும் இடத்திலிருந்து அவருடைய உடலை கையால் ஓங்கிக் குத்தி ஒரே ஒரு அங்குலமாவது அசைத்து நகர்த்திவிடக் கூடிய ஆற்றல் தனக்கு உண்டு என்று நம்புகிறவர்கள் இங்கே மேடைக்கு தாராளமாக வந்துவிடலாம். போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு தக்க பரிசு உண்டு”

பார்வையாளர்கள் அனைவரும் ஒரே குரலில் “இல்லை” ”இல்லை” என்று ஓசையெழுப்பி ஆரவாரம் செய்தனர். ஒருவர் “செல்லப்பா வாழ்க” என்று முழக்கமெழுப்பினார். அவரைத் தொடர்ந்து பலரும் அந்த முழக்கத்துடன் சேர்ந்துகொண்டனர்.

“அன்பான பொதுஜனங்களே. கடந்த பத்து நாட்களாக இந்த ஒதியஞ்சாலை திடலில் சாந்தி சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நாளையே இறுதி நாள். முதல் நிகழ்ச்சியிலிருந்தே இந்தப் போட்டி நடந்து வருகிறது. இது வரை யாரும் செல்லப்பாவை வென்றதில்லை. அவரை வெல்லமுடியும் என நினைப்பவர்கள் மேடைக்கு வரலாம். தயக்கம் வேண்டாம். வருக வருக”

அரங்கத்தின் ஒரு மூலையிலிருந்து ஒருவர் கையை உயர்த்தியபடி எழுந்து நின்றார். உடனே அறிவிப்பாளரின் பார்வை அவர் மீது விழுந்துவிட்டது. ”இதோ எழுந்துவிட்டார் ஒரு வீரர். வருக வீரரே வருக. இந்த மேடை உங்களுக்காகக் காத்திருக்கிறது. தயவு செய்து, நண்பர் மேடைக்கு வருவதற்கு வழி விடுங்கள்”

அக்கணத்திலிருந்தே கைத்தட்டல் தொடங்கிவிட்டது. ஆரவாரத்துக்கு நடுவில் அவர் மேடையில் ஏறி செல்லப்பாவுக்கு அருகில் நின்றார்.

“நண்பரே, உங்கள் பெயர்”

“வைத்தியலிங்கம்”

“நல்லது திரு. வைத்தியலிங்கம் அவர்களே. இந்தப் போட்டியில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய நான்கு முக்கியமான விதிகள் உண்டு. முதல் விதி, நீங்கள் உங்களுடைய ஒரு கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரண்டாவது விதி, குத்து மட்டுமே இந்தப் போட்டியில் அனுமதிக்கப்படும். மூன்றாவது விதி, அவருடைய மார்பில் மட்டுமே நீங்கள் குத்த வேண்டும். நான்காவது விதி, உங்களுக்கு ஐந்து வாய்ப்புகள் உண்டு.”

செல்லப்பாவும் வைத்தியலிங்கமும் சிரித்து கைகுலுக்கிக் கொண்டார்கள். பிறகு குஸ்தி முறையில் செய்வதுபோல ஒருவர் கையை ஒருவர் தொட்டு குனிந்து வணங்கிவிட்டு விலகினார்கள்.

”போட்டி நேரம் முழுதும் இசை ஒலித்தபடி இருக்கும். இசை நிற்கும் சமயம் உங்களுக்கான நேரம் தொடங்குகிறது. அப்போது நீங்கள் அவரைக் குத்தவேண்டும்”

இசை ஒலிக்கத் தொடங்கியது. செல்லப்பா கால்களை மேடையில் அழுத்தமாக ஊன்றிக்கொண்டு நின்றார். வைத்தியலிங்கம் நம்பிக்கை தெரியும் முகத்துடன் கைகளைத் தேய்த்தபடி இருந்தார். பார்வையாளர்களிடையில் திடீரென அமைதி சூழ்ந்தது. நான் செல்லப்பாவின் மீது என் கவனத்தைக் குவித்திருந்தேன்.

சட்டென இசை நின்றது. வைத்தியலிங்கம் முன்னேறி செல்லப்பாவின் மார்பில் குத்தினார். அது அவருடைய உடலில் சின்ன அசைவைக்கூட ஏற்படுத்தவில்லை. அதைப் பார்த்ததுமே மக்களுடைய ஆரவாரம் பெருகத் தொடங்கியது. இரண்டு, மூன்று, நான்கு என எந்த வாய்ப்பிலும் செல்லப்பாவை அசைக்கமுடியவில்லை. ஒரு பாறைபோல அவர் உறுதியாக நின்றிருந்தார்.

வைத்தியலிங்கம் சற்றே பதற்றம் கொள்வதுபோலத் தோன்றியது. அறிவிப்பாளர் மீண்டும் இசையைச் சுழலச் செய்தார். நான் செல்லப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நான் அவர்மீது வருத்தம் கொண்டேன். சர்க்கஸ் நிகழ்ச்சியிலேயே இல்லாத ஒன்று இது. இதை வடலூரில் சர்க்கஸ் போட்ட சமயத்தில் அவராகவே ஒரு பரபரப்புக்காக சேர்த்துக்கொண்டார். விளம்பரம் கிடைக்கிறது என்பதால் முதலாளியும் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

இசை நின்றதும், வைத்தியலிங்கம் முன்னால் அடியெடுத்து வந்து செல்லப்பாவை குத்தி வீழ்த்த முயற்சி செய்தார். அப்போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

செல்லப்பா தன்னைத் தளர்த்திக்கொண்டு அவையினரைப் பார்த்து கைகளை அசைத்து வணங்கிவிட்டு, வைத்தியலிங்கத்தின் கைகளைப் பற்றி குனிந்து வணங்கிப் பிரிந்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் பார்வையாளர்கள் வெளியேறத் தொடங்கினர். ஆட்டக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் தத்தம் கூடாரத்தை நோக்கித் திரும்பி நடந்தனர். நான் வேகமாக சமையல் கூடத்துக்குச் சென்றேன். மாஸ்டர் வெறும் தரையில் துண்டை விரித்து காற்றாடப் படுத்திருந்தார். என்னைப் பார்த்ததுமே “என்னடா செல்லப்பாவுக்கு ஜெயம்தான?” என்று கேட்டார். நான் ஆமாம் என்று உற்சாகத்தோடு தலையசைத்தேன். ”அவன் வில்லாதிவில்லன்டா. அவன ஜெயிக்க உலகத்துல ஆளே இல்ல” என்றார் அவர்.

“சரி போய் மணி அடிச்சிட்டு வா. மேக்கப்ப கலச்சிட்டு இங்கதான் சாப்புட வருவாங்க. மொதல்ல எலயை எடுத்து கழுவு. ஓடு”

நான் வேகமாகச் சென்று இலைக்கட்டுகளை எடுத்துக்கொண்டு தண்ணீர்க்குழாய்க்கு அருகில் சென்றேன். பிச்சாண்டி மேசைகளைத் துடைக்க துணியை எடுத்துக்கொண்டு போனான். நான் இலையைப் பிரித்து மேசையில் வைத்ததும் அவன் தண்ணீர்த்தம்ளரை வைத்துக்கொண்டு சென்றான். மாஸ்டர் சோற்றுக்குண்டானுடன் வரும்போது கலைஞர்கள் ஒவ்வொருவராக உட்கார்ந்து விட்டார்கள். இரவு உணவுக்காக புதிதாக இரண்டு பொரியல்களை வைத்திருந்தார் மாஸ்டர். ஒன்று பீன்ஸ் பொரியல். இன்னொன்று பீட்ரூட் பொரியல். எல்லோரும் விரும்பி வாங்கிச் சாப்பிட்டார்கள். பருப்புரசத்தை கையைக் குழிவாக்கி வாங்கிக் குடித்தார்கள்.

சாப்பிட்டு முடித்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து பல இடங்களில் திட்டுத்திட்டாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். நான் இலைகளையெல்லாம் ஒரு கூடையில் எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியே சென்று குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வந்தேன். அதற்குள் பிச்சாண்டி மேசைகளையும் அறையையும் சுத்தம் செய்து முடித்திருந்தான்.

மாஸ்டர் ஒரு தட்டில் கொஞ்சமாக சோற்றை அள்ளிவைத்துக்கொண்டு ரசம் ஊற்றிக்கொண்டு சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார். நானும் பிச்சாண்டியும் தனித்தனி தட்டுகளில் போட்டுக்கொண்டு சாப்பிட்டோம். பிறகு தட்டுகளைக் கழுவி கவிழ்த்துவைத்துவிட்டு சமையலறைக்கு வெளியே மடிப்புக்கட்டிலை விரித்து உட்கார்ந்தோம். மாஸ்டர் வெற்றிலையை மடித்து சுண்ணாம்பு தடவினார்.

அப்போது வெளியே என்னமோ சத்தம் கேட்டது. அதைக் கேட்டு நான் சட்டென்று எழுந்து கூடாரப்பகுதியை நோக்கி ஓடிவந்தேன். பலரும் பல திசைகளிலிருந்து அதே கணத்தில் அந்த இடத்துக்கு வந்துவிட்டார்கள்.

“நல்ல மாட்டுக்கு ஒரு அடி. சூடு சொரண இருக்கற மனுஷனுக்கு ஒரு வார்த்த. ஒரு தரம் சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா நீ? ஆம்பளயா நீ?”

லதாவும் செல்லப்பாவும் நின்றிருப்பதைப் பார்த்து அனைவரும் திகைத்து நின்றுவிட்டார்கள். தொட்டாலே விழுந்துவிடுவது போல திகைத்து நிலைகுலைந்து காணப்பட்டார் செல்லப்பா. கண்களில் கசப்பும் சலிப்பும் அடர்ந்திருக்க லதா மூச்சு வாங்கியபடி நின்றிருந்தாள்.

மாஸ்டர் இருவரையும் ஒருகணம் மாறிமாறிப் பார்த்தார். அவர்களிடம் எந்த விளக்கத்தையும் கேட்க அவர் விரும்பவில்லை. “சரி சரி போங்கப்பா” என்று மாஸ்டர் அனைவரையும் அங்கிருந்து கலைத்து அனுப்ப முயற்சி செய்தார்.

“என்ன பிரச்சினை இங்க?”

“அதெல்லாம் ஒரு பிரச்சினயும் இல்லை. போங்கப்பா, போய் நேரத்தோடு படுங்க” என்று மீண்டும் மீண்டும் சொல்லி அனுப்பினார்.

கூட்டம் அவருடைய சொற்களுக்குக் கட்டுப்பட்டு விலகிச் சென்றது. யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்த நிலையில் செல்லப்பா தன் கூடாரத்தை நோக்கிச் சென்றார்.

திரும்பி வந்து கட்டிலில் படுத்தபோது மனபாரமாக இருந்தது. நட்சத்திரங்களையும் நிலாவையும் பார்த்தபடி எதைஎதையோ குழப்பத்துடன் நினைத்திருந்தேன். எப்போது தூங்கினேன் என்றே தெரியாதபடி தூக்கத்தில் அமிழ்ந்துவிட்டேன். விழிப்பு வந்தபோது, வெளிச்சம் பரவியிருந்தது. எழுந்து முகம் கழுவிவிட்டு பால் வாங்கிக்கொண்டு வந்து மாஸ்டரிடம் கொடுத்தேன். காலையிலேயே குளித்து உடைமாற்றிக்கொண்டு நெற்றி நிறைய பூசையோடு காணப்பட்டார் மாஸ்டர்.

நான் டீ நிரம்பிய கெட்டிலை எடுத்துச் சென்று எல்லோருக்கும் டீ விநியோகித்துவிட்டு வந்தேன். வழக்கமாக நிகழ்ச்சி நடைபெறும் கடைசி நாளில் எல்லோருமே ஏதோ பரபரப்பில் இருப்பார்கள். கலகலப்பாகப் பேசிச் சிரிப்பார்கள். புதிய ஊரில் அடுத்த காட்சி தொடங்கும் வரைக்கும் எல்லோருக்கும் விடுப்பு கிட்டும் என்பது ஒரு முக்கிய காரணம். ஊருக்குச் சென்று மனைவி பிள்ளைகளோடு பொழுதுபோக்கலாமே என்று பல திட்டங்களைப் பேசிப்பேசி வளர்த்துக்கொள்வார்கள். ஆனால் அன்று ஒருவருடைய முகத்தில் கூட உற்சாகம் தென்படவில்லை.

காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு பெஞ்சில் சுருண்டு படுத்தேன். காரணமே இல்லாமல் மனசுக்குள் அழுகை பொங்கியவண்ணம் இருந்தது. நான் அந்த இடத்திலேயே இருந்தால் ஒரே சிந்தனையில் மூழ்கி தடுமாறிக்கொண்டுதான் இருப்பேன் என நினைத்து சிறிது நேரம் காலார நடந்துவிட்டு வருவதாக மாஸ்டரிடம் சொல்லிவிட்டு வெளியே கிளம்பிப் போனேன். கடற்கரைக்குச் சென்று சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். சீற்றத்தோடு பொங்கி வந்து கரையை அறையும் அலையைப் பார்க்கும்போதெல்லாம் நேற்று இரவு பார்த்த லதாவின் தோற்றம்தான் நினைவுக்கு வந்தது. கடற்கரையிலிருந்து சர்க்கஸ் கூடாரத்துக்கு கால்நடையாகவே திரும்பி வந்தேன்.

இரவு முதல் நிகழ்ச்சி அதிகபட்சக் கூட்டத்தோடு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கிவிட்டது. கலைஞர்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்கள். காட்சிகளைக் காண எழும் ஒரு துடிப்பும் வேகமும் அன்று எனக்குள் எழவே இல்லை. செல்லப்பாவின் நிகழ்ச்சியைக் கூட பார்க்க விருப்பமில்லாமல் சமையல் கட்டிலேயே வளையவளைய வந்துகொண்டிருந்தேன். கண்கள் அடிக்கடி தளும்பிக்கொண்டே இருந்தன.

”ஏன்டா இப்பிடி உம்னு இருக்கற? செல்லப்பா ஜிம்னாஸ்டிக்ஸ்னா விடமாட்டியே நீ. இன்னைக்கு என்னாச்சி? இங்கயே உக்காந்திருக்க?” என்று கேட்டார் மாஸ்டர். “ஒன்னுமில்ல மாஸ்டர்” என்று எதையோ சொல்லி சமாளித்தேன்.

நான் என்ன நினைக்கிறேன் என்பதில் எனக்கே ஒரு தெளிவில்லை. செல்லப்பாவை நினைத்து உண்மையிலேயே வருந்துகிறேனா என்பதைக் கூட என்னால் சொல்லமுடியவில்லை. எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அவர். அவருடைய வாழ்க்கை அறுந்து துண்டாக நிற்பதை என்னால் பார்க்கமுடியவில்லை.

என் உறுதியெல்லாம் முதல் காட்சி நடைபெறும் வரைக்கும்தான் நீடித்தது. இரண்டாவது காட்சியில் செல்லப்பாவுக்காக தொகுப்பாளர் தெரிவிக்கும் அறிவிப்பையும் ”வருக வருக நாகராஜன்” என்று வரவேற்கும் அறிவிப்பையும் ஸ்பீக்கரில் கேட்கக்கேட்க என் உறுதி குலைந்தது. மாஸ்டரிடம் சொல்லிவிட்டு ஓடிச் சென்று நுழைவாயில் திரையின் மறைவில் நின்றுகொண்டேன்.

செல்லப்பாவுக்கு அருகில் நின்றுகொண்டிருப்பவரிடம் போட்டி விதிகளைப்பற்றி எடுத்துரைத்துக்கொண்டிருந்தார் தொகுப்பாளர். நான் அப்போதுதான் அந்த நாகராஜனைப் பார்த்தேன். செல்லப்பாவைவிட உயரமானவர். வாட்டசாட்டமான உடலுடையவர். அவரைப் பார்த்ததுமே ஓர் அச்சம் என் நெஞ்சில் பிறந்தது.

“நான் ஒன்று சொல்லலாமா?” என்று செல்லப்பாவைப் பார்த்துக் கேட்டார் அந்த நாகராஜன். ”சொல்லுங்கள்” என்றார் செல்லப்பா.

அந்த உரையாடலைக் கேட்டு அதுவரை ஆரவாரம் செய்துகொண்டிருந்த கூட்டம் அமைதியில் உறைந்துவிட்டது.

“உங்கள் உயரம்?”

“ஐந்து அடி. ஒன்பது அங்குலம்”

‘நான் ஆறு அடி. இரண்டு அங்குலம். உங்கள் எடை?”

“75 கிலோ”

“சரி, நான் 110 கிலோ”

“ஏன் இதையெல்லாம் என்னிடம் சொல்றீங்க?”

“ஒருவேளை நீங்கள் பின்வாங்குவதாக இருந்தால், இத்தருணத்தில் இப்போதே பின்வாங்கிக்கொள்ளலாம். அதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கட்டும் என்பதற்காகச் சொல்கிறேன்” என்று சிரித்தார் அவர். அவர் குரலில் ஆழமான தன்னம்பிக்கை ஒலித்தது.

“அவசியமில்லை நாகராஜன். நாம் தொடங்குவோம்.”

“பிறகு உங்கள் விருப்பம்” என்றபடி முன்னால் வந்து செல்லப்பாவோடு கைகுலுக்கினார். தொடர்ந்து தன் மரபுப்படி செல்லப்பா அவர் கைகளைத் தொட்டு வணங்கினார். அவரும் செல்லப்பாவின் கைகளைத் தொட்டு வணங்கினார்.

இசை ஒலிக்கத் தொடங்கியதும் நான் அமைதியிழக்கத் தொடங்கினேன். அரங்கம் முழுவதுமே அமைதியில் மூழ்கியிருந்தது. திடீரென நேற்று இரவு நான் கேட்ட லதாவின் சொற்கள் நினைவில் வந்து மோதின. என்னை அறியாமல் நான் செல்லப்பாவுக்காக வேண்டிக்கொண்டேன்.

காலை சற்றே அகட்டி பாதங்களை உறுதியாக ஊன்றிக்கொண்டு நின்றார் செல்லப்பா. இசை நின்ற கணத்தில் நாகராஜன் முன்னால் வந்து கையை ஓங்கி செல்லப்பாவின் மார்பில் குத்தினார். இரும்புக்கோட்டையில் அசைவே இல்லை. நாகராஜன் அடைந்த அதிர்ச்சியை அவர் முகத்தில் பார்க்கமுடிந்தது. காலடிகளை மாற்றிமாற்றி வைத்து குழப்பிக்கொண்டார்.

இசை மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. எந்தக் காலை முன்னால் வைத்து நகர்வது என்கிற தடுமாற்றத்தில் அவர் காலை முன்னோக்கி வைப்பதும் பிறகு எடுப்பதுமாக இருந்தார். அதற்கிடையில் மணியோசை நின்றது. அவரால் போதிய விசையுடன் குத்த முடியவில்லை. செல்லப்பா உடலில் ஒரு சிறு அசைவைக்கூட அந்த அடியால் ஏற்படுத்த முடியவில்லை. பார்வையாளர்கள் தம் பதற்றத்தை மறந்து கைதட்டிப் பாராட்டி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

இசை மீண்டும் ஒலித்தது. இப்போது சரியான திட்டமிடலோடு முன்வந்து செல்லப்பாவின் மார்பில் தாக்கினார் நாகராஜன். ஒரு பெரிய சம்மட்டியால் ஒரு பாறையை அடித்துப் பிளப்பதுபோல இருந்தது அந்த அடி. ஆனால் செல்லப்பாவின் நிலையில் ஒரு சிறிய சலனத்தைக்கூட அது ஏற்படுத்தவில்லை.

நான்காவது முயற்சியிலும் நாகராஜனின் வேகம் பலனளிக்கவில்லை. ஐந்தாவது முயற்சியில் கூடுதல் அழுத்தத்தோடு நாகராஜன் குத்திய போதும் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. வழக்கம்போல வெற்றி முழக்கம் அவையில் ஓங்கி ஒலித்தது.

நாகராஜனின் கைகளைப்பற்றி வணங்குவதற்காக செல்லப்பா நெருங்கியபோது, அவர் நிற்கமுடியாமல் தடுமாறுவதைப் பார்த்தேன். கால்மாற்றி நின்று கையை உதறிக்கொண்டே இருந்தார் அவர். “என்ன?” என்று கேட்டார் செல்லப்பா. “மணிகட்டு பிசகிடுச்சா, உடைஞ்சிடுச்சானு தெரியலை. நான் டாக்டர்கிட்ட போறேன். பெஸ்ட் ஆஃப் லக்” என்று சொல்லி வாழ்த்திவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்றார்.

ஆதூரம் தேடும் உள்ளங்கள் – பாவண்ணனின் சில கதைகள்

அஜய் ஆர்

பவன்னன்1

வலை‘ சிறுகதை தொகுப்பில் உள்ள ‘காலம்‘ கதையில் குழந்தை மீனுவை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று அதட்டும் கதைசொல்லி,   அவள் முகத்தில் சோகம் கவிவதைப் பார்க்கிறார். 10-15 நிமிடங்கள் கழிந்தபின் பார்த்தால் சோகம் எதுவும் இன்றி பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். 

தீ‘ கதையில்,  – உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத/ கொள்ள விரும்பாத அலுவலக மேலதிகாரிகளின் போக்கினால்மணமான மூன்று ஆண்டுகளில்  30 நாட்களுக்கும் குறைவாகவே மனைவியுடன் நேரம் செலவிட்டிருக்கும் கதைசொல்லி கொதி நிலையில்  உயரதிகாரியை அடித்து விடுகிறார்.

தன் சோகத்தை சில நிமிடங்களில் மறந்து தனக்கென்று ஒரு உலகை உருவாக்கிக்கொள்ளும் மீனுவின் குழந்தைமை என்ற  புள்ளியில் இருந்துஅந்தக் குழந்தைமையைத் தொலைத்துவிட்டு,   ‘முதிர்ந்தவர்கள்‘ என்ற அடையாளம் பெற்றாலும் தன்னிலை இழத்தல் என்ற புள்ளியை அடையும் வரையிலான  காலத்தினூடான பயண அனுபவத்தை  இந்தத் தொகுப்பில் உள்ள – சிறார்கள்/ முதிரா இளைஞர்கள்/ ஆண்கள்  பாத்திரங்கள் வாயிலாக நாமும் அடைகிறோம்.  

கீழ் மத்திய தர/ ஏழை என்ற பொருளாதார அடுக்கில் உள்ளவர்கள் இந்தக் கதைகளின்  பாத்திரங்கள். பல ஆண்டுகளாக அதே ஊரில் நடைபாதையில் துணி விற்கும் ராமசாமியின் மகன் (முத்து‘ சிறுகதை) முத்து தந்தையின் பாணியிலிருந்து விலகிவேறு இடத்தில்/ வேறு விதமாக  வியாபாரம் செய்ய முயல்கிறான். ராமசாமி அதை முதலில் எதிர்த்தாலும் (மகனை அதற்காக அடிக்கவும் செய்கிறான்),  முத்து தான் கற்பனை செய்திராத அளவிற்கு விற்பனை செய்ததை அறிந்து நெகிழ்ந்துதனக்கு உணவளிக்க வரும் மனைவியிடம் புள்ள சாப்டாம எனக்கெதுக்கடி சாப்பாடு?… சம்பாரிச்ச புள்ளக்கி போடாம கொஞ்ச வந்துட்ட எங்கிட்ட என்று (செல்லக்)  கோபம் கொஞ்சும் இடத்தில் தகப்பனின் பெருமிதத்தையும்குடும்ப அதிகார அடுக்கில் ஏற்பட்டுள்ள நுட்பமான இடமாற்றத்தையும் உணரலாம்.  முரடனாக முதலில் தோற்றமளிக்கும் ராமசாமி தன் மகன் தன்னைத் தாண்டிச் செல்வதைக் எதிர்கொள்ளும் விதத்தையும் , ‘தக்கையின் மீது நான்கு கண்கள்‘ கதையில் பேரன் தன்னை முந்தி விடுவானோ என்று மனம் கனிந்திருக்கும் வயதில்பேரனின் வெற்றி  தன் சுயத்தை இழக்கச் செய்வதாக உணர்ந்து பதற்றமடையும்  மாணிக்கம் தாத்தாவோடு ஒப்பிட்டு  அவற்றின் இடையே உள்ள வித்தியாசத்திற்கான  காரணங்கள் என்னவாக இருக்கும் என்றும் ஆராயலாம்.

மூவாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து மகனை பள்ளியில் சேர்த்து பெருமிதம் கொள்ளும் கதைசொல்லி (மையம்‘ ) பள்ளிப் பருவத்தில் நன்றாகப் படித்தவர்மாவட்ட ஆட்சியர் ஆகும் கனவுகள் கொண்டவர்.  அவர் வகுப்பில்தினமும் வில்வண்டியில் வந்துநடந்து செல்லும் சிறுவர்/ சிறுமிகளைப் பார்த்து கையசைத்துச் செல்லும்,  

 மாலினியும்  படிக்கிறாள். புத்திசாலி ஏழை மாணவன்பணக்காரப் பெண் என்றவுடன்நட்பு/ காதல் உருவாவது  என்பதெல்லாம் பாவண்ணனின் உலகில் நடப்பது இல்லைஅத்தகைய வழமையான ஆசுவாசங்களை அவர் வாசகனுக்கு அளிப்பதில்லை. உண்மையில்ஒரு சம்பவம் மூலம் கதைசொல்லிக்கு அவள் மீது வெறுப்பே ஏற்படுகிறது. மாலினியின் குறும்பு இதற்கு அடிததளமிட்டாலும்அவர்களுக்கிடையே உள்ள சமூக/ பொருளாதார இடைவெளியும்அதற்கேற்றப்படி ஆசிரியர் அந்தச் சம்பவத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதுமே (பெரும் பணக்காரரின்கிராமத்தில் செல்வாக்கானவரின் பெண்என ஆசிரியருக்கும் அதற்கான காரணங்கள் யதார்த்தத்தில் உள்ளன) முக்கிய காரணமாகின்றன.  அவர் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால்இருவரும் ஓரிரு நாட்களில் நடந்ததை மறந்திருப்பார்கள்துளிர் விடுவதற்கு முன்பே ஒரு நட்பு , மாலினியின் 

வண்டிப் பயணத்தில் அவள் கையசைப்புக்கள் பொருட்படுத்தாத பூக்களாய்..” உதிர்ந்திருக்காது.

இந்தப்  பகை  விலகாமல்உச்சகட்டமாகபள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று சான்றிதழ் வாங்கச் செல்லும்போதுஅங்கு வரும் மாலினியின் தந்தை பேசும் பொறாமை ததும்பும் சொற்கள் அவர் மனதில் நீங்கா  வடுவாக  தங்கி விடுகின்றன.   

மேலே படிக்க வைக்க முடியாத குடும்பச் சூழலில்கதைசொல்லியின் ஆட்சியர் கனவுகள் கலைகின்றனபெரிய போராட்டத்திற்குப் பின்சிறிய வேலை கிடைத்து தங்கைக்குத் திருமணம்பிறகு தன்னுடைய திருமணம் /குழந்தை என ஒருவாறு வாழ்வில் தன்னைப் பொருத்திக் கொள்கிறார். பெரிய பள்ளியில் சேர்த்த பெருமை நீடித்ததா என்றால்அதுவும் இல்லை. மகனை பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது காரில் செல்லும் சக மாணவி மைதிலியை நோக்கி மகன் கையசைப்பதைப் பார்த்தவுடன் , மாலினியின் நினைவு வந்து மனதைக் கீற  கதை முடிகிறது.

முதற் பார்வையில் இது நெகிழ்ச்சியைத் தூண்ட  வலிந்து திணிக்கப்பட்ட முடிவாகத் தெரியலாம்ஆனால் யதார்த்தம் இது தான். பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின் கதைசொல்லி தன் வாழ்க்கைச் சூழலில் முன்னேற்றம் அடைந்தாலும்மாலினி/ மைதிலி வசிக்கும் சூழலின்வில்வண்டியில்/ காரில் வரும்மையத்தின் விளிம்பில் தான் இருக்கிறார். சக மாணவியைப் பார்த்து  இப்போது உற்சாகமாக கையசைக்கும் கதைசொல்லியின்   மகனும்தந்தையைப் போலவே ஒரு நாள் இருவருக்குமிடையே உள்ள கடக்க முடியாத இடைவெளியை  உணரலாம்உணரலாமலும் போகலாம். கதைசொல்லியின் பேரன் தலைமுறையில் அவர்களும் மையத்திற்கு வரக்கூடும் என்ற நம்பிக்கை எழுந்தாலும்அன்றும் அவரின் வலி முற்றிலும் நீங்காது என்ற உணர்வும் நெருடிக்கொண்டே இருக்கிறது.

பால்யத்தின் நட்பை ‘பட்டம்‘/’சிலுவை‘ கதைகளில் பார்க்கிறோம். ‘பட்டம்’ கதையில் பள்ளியில் பலரால் கேலிக்குள்ளாக்கப்படும் கதைசொல்லியின் ரட்சகனாக வரும் தியாகராஜன் கதைசொல்லியை ஊக்கப்படுத்திதன்னம்பிக்கை கொள்ள வைக்கிறான்.  சராசரி மதிப்பெண் பெற்றே ஒவ்வொரு வகுப்பாகத் தாண்டிச் செல்லும்கேலி செய்யப்படும் நேரம் தவிர்த்து பிற சமயங்களில் பிறர் கண்களுக்குத் தென்படாதவனாக உலவும்   கதைசொல்லிக்கும்விளையாட்டில் தன்னையே கரைத்துக் கொள்ளும்அனைவரின் கவனத்தையும் இயல்பாக தன்பக்கம் ஈர்க்கும்  தியாகராஜனுக்கும் நட்பு உண்டாக பெரிய முகாந்திரம் ஒன்றும் இல்லை.  சரி/ தவறு என்று பார்க்காததாங்கள் செய்யும் செயல்களின் விளைவுகளைப் பொருட்படுத்தாத பால்யத்தின் நட்பிற்கு அது தேவையும் இல்லை. எனவேதான்தேர்வில் தியாகராஜனுக்கு உதவ முயன்று சிக்கிபிரம்பு முறியுமளவிற்கு கதைசொல்லி அடி வாங்கினாலும்தியாகராஜன் தானே இதற்கு காரணம் என்று கதைசொல்லிக்கு கோபம் வருவதில்லை மாறாக  தன்னால் தான் இருவரும் மாட்டிக்கொண்டோம்  என்று வருந்துகிறான்.  அவர்கள் நட்பில் எந்த விரிசலும் ஏற்படாமல்தேர்வில் கதைசொல்லிதியாகராஜனுக்கு உதவுவதில் வெற்றி பெற்றால்  

பரீட்சை முடிந்தபின் தியாகராஜன் செலவில் திரைப்படம் பார்ப்பதுமற்றும்  உணவு விடுதியில் ‘பிரியாணி‘ உண்பது என்ற தங்களின் முந்தைய முடிவைஇருவரும் மாட்டிக்கொண்டு அடிவாங்கினாலும் மீண்டும் உறுதிப் படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் இந்த நட்பு தொடராமல்தியாகராஜன் தற்கொலை செய்துகொள்கிறான். விளையாட்டு மைதானத்தில் கம்பீரமாக வலம் வந்த தியாகராஜனுக்கு தற்கொலை புரிய  தேர்வில் தோற்றுவிடுவோம் என்ற பயம் மட்டுமே காரணமாக இருக்குமா அல்லது ஆப்த நண்பனிடம் கூட சொல்ல முடியாத என்ன சிக்கல் இருந்திருக்கும்?

சிலுவை‘ கதையில்சிலுவையின் தொடர்  காதல் தோல்விகள் பற்றிய விவரணைகள் மெல்லிய நகைச்சுவையோடு இருந்தாலும்நிலையற்ற அலைகழிப்பாக உள்ள அவன் வாழ்வில் மாறாத அம்சம் கதைசொல்லிக்கும் அவனுக்கும் உள்ள நட்பு தான்.  நல்ல  உத்தியோகம் என்ற புருஷ லட்சணம்  இல்லாததால் இரண்டு வருடங்களுக்குப்  பிறகு மனைவியைத் தயங்கித் தயங்கி  நெருங்கி அவமானப்படுத்தப்பட்டுதற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலுவையை இரவில் பார்த்துக்கொள்ள அனைவரும் தயங்கும் நிலையில் கதைசொல்லி மட்டுமே  முன்வருகிறார். இயலாமையின் குற்றவுணர்வை சொல்லும் ‘கரையும் உருவங்கள்‘ கதையில் … அக்கா ஒக்காந்து பத்து வருஷம் ஆச்சு. ஏதாவது ஒன்னு கொறச்சிருக்கேனா?. ஆனாலும் நீ ரோஷக்காரண்டா என்று பாசத்தோடு அக்கா சொல்லும்போது உடன் உடைந்து விடும் சங்கரன் மட்டுமல்லமனைவியின் வெறுப்பின் சூடு பட்டுஅவள் தரப்பிலும் நியாயம் இருப்பதை உணர்ந்ததால் அவள் மீது கோபம் கொள்ளாமல்,   காறித் துப்பற மாதிரி கட்டன பொண்டாட்டியே பேசிட்டப்றம்  நா எதுக்கு வாழனும் சொல்லுடா.” என்று கேவும் சிலுவையின் அகம் கூட இயலாமையின் குற்ற உணர்வில் கரைந்து கொண்டே தான் இருக்கிறது. 

தன்னையோ , தன் நண்பனையோ இந்தக் கதைகளில் வாசகன் காணக்கூடுமென்றாலும் சுய அனுபவத்துடன் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும் கதைகளாக மட்டும் இவற்றை குறுக்கிக் கொள்ள முடியாது.  இந்த நிகழ்வுகள் எதையும் வாசகன் எதிர்கொள்ளவில்லை என்றாலும்இவற்றினூடாக தொக்கி இருக்கும் , ஒரு கட்டத்தில் வாழ்வை   எதிர்கொள்வதில் உருவாகும் இயலாமையின் கணங்களை  அனைவரும் எப்போதேனும் எதிர்கொண்டிருப்போம். 

அந்த வகையில் கதைகளை ஒவ்வொன்றாக உள்வாங்குவதுஅவற்றின் நிகழ்வுகளை/ பாத்திரங்களை விமர்சிப்பது இவற்றையெல்லாம் தாண்டி அனைவரும் தொடர்பு படுத்திக்கொள்ளக்கூடிய அம்சத்தை இவை கொண்டிருக்கின்றன. ஒரு பொதுப் பார்வையாய்இந்தக் கதைகளில் பெரும்பாலானவற்றில்   வாழ்வின் போக்கில் இந்தப் பாத்திரங்கள் – அவரவர் சூழல் உருவாக்கும் தடைகளின்தொடக்கூடிய எல்லைகளின்,  தோல்விகளின் துயர் – குறித்து ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வும்/ சகிப்புத்தன்மையும்அந்நேரத்தில் கிடைக்கும் அரவணைப்பு உண்டாக்கும் மன நெகிழ்வும் வெளிப்படுகின்றன என்று சொல்லலாம்.

வாசகனை  நெகிழச் செய்யும் விதமாக  திணிக்கப்பட்டவை ( emotional manipulation) என  எதுவும்   இக்கதைகளில் இல்லை.   வாசகனைப் போலவே ஒரு பார்வையாளனாக  இந்தப் பாத்திரங்களோடு பயணிக்கும்  பாவண்ணன் , ஒரு கட்டத்தில் 

முத்து பெரிய வியாபாரியாக உயர்வான்கதைசொல்லியின் மகன் ‘மையத்தை‘ அடைவான்  அல்லது சிலுவையின் வாழ்வு முழுதும் இனி துயரம் தான்போன்றெல்லாம் பாத்திரங்களின் வாழ்வின் அடுத்த கட்ட  பாதையைக்  காட்டாமல்   ‘முடிவு‘ என்று பொதுவாக  வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் கதைகள் முடிக்காமல்பாத்திரங்களுடனான தன்னுடைய  (வாசகனுடைய) பயணத்தை நிறுத்தி விடுகிறார். ஆனால் அப்படிச் செய்வது சடுதியில் முடிந்த உணர்வைத் தராமல்முடிந்து போன ஒரு சிறிய பயணத்தின்  நினைவுகளை அசைபோடச் செய்வதைப் போல்எந்த வலியுறுத்தல்களும் இல்லாமலேயே வாசகனின் உணர்வுகளை தன்னியல்பாகத் திரண்டெழச் செய்கின்றன.  தொடர் மன வாதையில் இந்தப் பாத்திரங்கள்  

இருந்தாலும்முற்றிலும் தோல்வியை/ அவநம்பிக்கையை வலியுறுத்தும் கதைகள் அல்ல இவை. கடற்கரையில் பொங்கி அழும் சிலுவையை பேச விட்டுவிழுந்து கொண்டிருக்கும் சூரியனைப் பார்த்தபடி மௌனமாக சிகரெட் பற்றவைக்கும் நண்பனும் , மைதிலியைப் பார்த்து கையசைக்கும் மகனை ஆதூரத்துடன் அணைத்துக்கொள்ளும் தந்தையும்நம் பாரங்களைச் சுமக்க உதவும் இன்னொரு தோள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார்கள். 

திண்ணை [பாவண்ணனின் புதிய சிறுகதை]

பாவண்ணன்

popsicle-stick-house

ஆறாவது வகுப்பு படிக்கிற பிள்ளைகள் மட்டுமே கலைப்பொருள் செய்யும் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்பது பள்ளிக்கூடத்தின்  விதிகளில் ஒன்று. ஆஸ்பெஸ்டாஸ் கூரையிட்ட ஒரு மேடைமீது நடக்கும் அந்தப் போட்டியை பிற வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளும் ஆசிரியர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். முதல் வகுப்பு படிக்கிற காலத்திலிருந்தே முத்துசாமிக்கு அந்தப் போட்டிமீது ஒரு ஈர்ப்பு இருந்தது. உண்மையிலேயே ஆறாவது வகுப்புக்குச் சென்ற பிறகு அவன் மனம் துடிக்காத நாளே இல்லை. பழைய துடிப்பு ஆயிரம் மடங்காகப் பெருகிவிட்டது.

போட்டியில் அவன் அழகான ஒரு வீடு செய்ய விரும்பினான். இருபுறமும் விரிந்த பறவையின் இறக்கைகள்போன்ற  கூரையைத் தாங்கியபடி வட்டவடிவமான சுவர்களைக் கொண்ட வீட்டை பல முறை அவன் கனவுகளில் கலைத்துக்கலைத்துக் கட்டினான். மூன்றாவது வகுப்பில் இருந்த அவனுடைய தம்பி கந்தசாமிஇங்க ஒரு ஜன்னல் வச்சா நல்லா இருக்கும், அங்க ஒரு கதவு வச்சா அருமையா இருக்கும்என்று புதுசுபுதுசாக எதையாவது சொல்லி, அவன் கற்பனையைத் தூண்டியபடியே இருந்தான்.

பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் திண்ணையில் வீடு கட்டி விளையாடுவதுதான் இரண்டு பேருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு. கந்தசாமிக்கு வலதுபக்கத் திண்ணை. முத்துசாமிக்கு இடதுபக்கத் திண்ணை. ஒருநாள் கல்வீடு. இன்னொருநாள் மண்வீடு. மற்றொரு நாள் அட்டைவீடு. தகடு, ஓடு, இலை, கம்பிகள், குச்சிகள் என கைக்கு எது கிடைத்தாலும் அதில் வீடு செய்துவிடுவார்கள்.

அது அவர்களுடைய பெரிய அத்தை வீட்டுத் திண்ணை. மூன்று அத்தைகளுக்கு அந்த வீடு என்றும் பக்கத்திலிருந்த காலிமனை அவர்களுடைய அப்பாவுக்கு என்றும் தாத்தாவின் காலத்துக்குப் பிறகு பாகப்பிரிவினை செய்யப்பட்டபோது, மற்ற அத்தைமார்களுக்கு பங்குப்பணத்தைக் கொடுத்துவிட்டு, பெரிய அத்தை முழு வீட்டையும் தன் பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார். அத்தைக்கு கதிர்காமத்தில் வேறொரு  வீடு இருந்ததால், அதைப் பூட்டு போட்டு வைத்திருந்தார். ஆள்நடமாட்டம் இல்லாத திண்ணை முத்துசாமிக்கும் கந்தசாமிக்கும் விளையாட்டுக் களமாக மாறியது. காலிமனையில் அவர்கள் அப்பா மாயாண்டி கட்டிய சிறிய கூரை வீட்டில் திண்ணை இல்லை என்பது முக்கியமான காரணம்.

கையில் எது கிடைத்தாலும் அதை வளைத்தும் நிமிர்த்தியும் எப்படியாவது ஒரு வீடாக மாற்றிவிடும் திறமையும் வேகமும் முத்துசாமியிடம் இயற்கையாகவே குடியிருந்தது.  இனிமேல் பயன்படவே பயன்படாது என்று அவன் அம்மா ஆண்டாள் தூக்கி வீசிய ஒரு பழைய காய்கறிக்கூடையை கவிழ்த்துப்போட்டு அழகான ஒரு வீடாக அரைமணி நேரத்தில் மாற்றிவிட்டான் அவன். கத்தரிக்கோலால் கச்சிதமாக வெட்டி அவன் உருவாக்கிய கதவு அருமையாக இருந்தது.  சின்ன துண்டுத்துணியால் அந்தக் கதவுக்கு ஒரு திரையைச் செய்து மாட்டினான். நீல நிறத்தில் அந்தத் திரை காற்றில் அசைவது வசீகரமாக இருந்தது. ஒரு மரப்பாச்சியை தரையில் கவிழ்த்து, அது ஊர்ந்து ஊர்ந்து வீட்டுக்குள் செல்வதுபோல தம்பியிடம் செய்து காட்டிச் சிரித்தான். “பாலைவனத்துல இப்பிடிதான்டா ஊட்டுக்குள்ள போவாங்களாம். டீச்சர் சொன்னாங்க  என்று சிரித்தான். “அண்ணே அண்ணே, நானும் ஒரு தரம் செஞ்சி பாக்கறேண்ணேஎன்று மரப்பாச்சியைக் கேட்டு வாங்கினான் கந்தசாமி. கவிழ்த்துப்போட்டு தள்ளும்போது ஆர்வத்தின் காரணமாக அவனும் தரையில் படுத்துக்கொண்டான். முருங்கை மரத்திலிருந்து கீரை பறித்துக்கொண்டு திரும்பிய ஆண்டாள்என்னடா செய்றிங்க?” என்று அதட்டினாள். “இங்க வந்து பாரும்மா. அண்ணன் பாலைவன வீடு கட்டிருக்கான்என்று எழுந்து குதித்தான் கந்தசாமி. “அது சரி, நாம இருக்கற நெலமயில பாலைவனத்துலயும் சுடுகாட்டுலயும்தான் ஊடு கட்டணும்என்று முனகிக்கொண்டே திரும்பினாள் ஆண்டாள்.

காற்று வேகத்தில் முருங்கை மரத்திலிருந்து ஏதோ விழும் சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். குச்சிகளாலும் செத்தைகளாலும் பின்னப்பட்ட ஒரு கூடு. முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஏ என்று கத்திக்கொண்டு அதைநோக்கி ஓடினார்கள். “டேய் தொடாதிங்கடா பசங்களாஎன்றபடி பின்னாலேயே ஓடிய ஆண்டாள் அந்தக் கூட்டில் களிமண் உண்டைகள்போல இரண்டு காக்கைக்குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் உச்சுக் கொட்டினாள். தீக்குச்சித்துண்டு போன்ற சின்ன அலகுகள். கருமணிக் கண்கள். பீதியில் அவை எழுப்பிய குரல் நெஞ்சைப் பிசைந்தது. வேகமாக வீட்டுக்குள் சென்ற ஆண்டாள் ஒரு முறத்தை எடுத்து வந்து, அதில் ரொம்பவும் கவனமாக கூட்டைத் தூக்கிவைத்தாள். ”எதுக்குமா மொறத்துல எடுக்கற?” என்று அதற்குள் பத்து முறை கேட்டுவிட்டான் கந்தசாமி. “தொணதொணக்காம சித்த நேரம் இருடாஎன அவனை அடக்கிவிட்டு வீட்டுக்கூரைமீது சமமான ஒரு இடம் பார்த்து முறத்தை வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். பிறகு பிள்ளைகளிடம்எட்ட போய் நில்லுங்கடா. அப்பதான் அம்மா காக்கா வந்து அதுங்கள தூக்கிட்டு போவும்என்று அதட்டினாள். அடுத்த கணமே கந்தசாமி, “அம்மா காக்கா வந்து எடுத்துப் போவலைன்னா, குஞ்சுங்கள நாமளே வளக்கலாமாம்மா?” என்று புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு ஆசையோடு கேட்டான். ஆண்டாள் பதில் சொல்லாமல் அவனை திரும்பிப் பார்த்து முறைத்தாள். “அம்மா சொல்லும்மா, நாமளே வளக்கலாமாம்மா?” என்று மறுபடியும் கெஞ்சினான் கந்தசாமி. “சரி, வளக்கலாம். போஎன்று அந்த இடத்திலிருந்து அவர்களை விரட்டினாள் ஆண்டாள்.

ஒருநாள் மாலை வழக்கம்போல வீடு கட்டும் விளையாட்டில் மூழ்கியிருந்தான் முத்துசாமி. உலர்ந்த குச்சிகள் மீது தேங்காய் ஓடுகளை வரிசையாக அடுக்கி கூரையை கட்டியெழுப்பும் சித்திரம் அவன் மனத்தில் இருந்தது. சாக்குப்பையில் சேமித்துவைத்திருந்த ஓடுகளை ஒவ்வொன்றாக எடுத்து எடுத்துக் கொடுத்தான் கந்தசாமி. ஒரு ஜீப் வேகமாக வந்து நின்ற சத்தம் கேட்டு இரண்டு பேரும் திரும்பிப் பார்த்தார்கள். ஆறேழு பேர்கள் வண்டியிலிருந்து இறங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் இரண்டு போலீஸ்காரர்களும் கருப்பு கோட் அணிந்த ஒரு வக்கீலும் இருந்தார்கள். கூட்டத்தில் இருந்த சந்தனப்பொட்டுக்காரரைப் பார்த்துவிட்டு சுவரோடு சாய்ந்து படுத்திருந்த மாயாண்டி ஓடிவந்து கைகளைக் கட்டிக்கொண்டு எதையோ சொல்லத் தொடங்கினான்.

சந்தனப்பொட்டுக்காரர் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து ஊதியபடி மாயாண்டியைப் பார்த்து  ஒன் பஞ்சப்பாட்டு எதுவும் எனக்கு வேணாம் மாயாண்டி. எனக்கு என் பணம்தான் வேணும். வேற எதயும் கேக்கறதுக்கு நான் தயாரா இல்ல. என்கிட்ட இன்னிக்கு நீ சொல்றதல்லாம் அன்னிக்கு அந்த சாரங்கபாணிக்கு ஜாமீன் கையெழுத்து போட்டியே, அப்ப யோசிச்சிருக்கணும். இப்ப பொண்டாட்டிய காட்டி என்ன பிரயோஜனம்? புள்ளய காட்டி என்ன பிரயோஜனம்? அவன் செத்ததலேருந்து நாலு மாசமா நானும் நடயா நடக்கறன். ஒரு வழியும் பண்ணமாட்டற நீ. அதான் கோர்ட் ஆர்டரோட வந்துட்டன். இனிமே நீயாச்சி, அவுங்களாச்சிஎன்றார். பிறகு பக்கத்தில் நின்றிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து கண்களை அசைத்தார். அவர்கள் தம்மோடு வந்த ஆட்களைப் பார்க்க, அவர்கள் ஒரே நொடியில் வேகமாக வீட்டுக்குள் புகுந்து சாமான்களையெல்லாம் எடுத்துவந்து வெளியே போட்டார்கள். ஆண்டாள் மார்பில் அடித்துக்கொண்டு ஐயோஐயோ என்று அலறி அழுதாள். முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஓடிவந்து ஆண்டாள் பின்னால் நின்றுகொண்டு அழுதார்கள். பத்து நிமிடங்களில் எல்லாப் பொருட்களையும் வாரி வெளியே போட்டுவிட்டு, கதவை இழுத்துப் பூட்டினார்கள். “ஐயா, ஐயாஎன்று மாயாண்டியும் ஆண்டாளும் அழுது அழுது வேண்டியதற்கு எந்தப் பயனும் இல்லை. அவர்கள் நெருங்கிவிடாதபடி சட்டென்று விலகிச் சென்ற சந்தனப்பொட்டுக்காரர் ஜீப் கதவைத் திறந்து ஏறி உள்ளே உட்கார்ந்துகொண்டார். மற்றவர்களும் ஒவ்வொருவராக ஜீப்புக்குள் ஏறினார்கள். ஒரு போலீஸ்காரன் தன் லத்தித்தடியால் திண்ணையில் முத்துசாமி கட்டியிருந்த ஓட்டு வீட்டைக் குத்தி இடித்துத் தள்ளினான். பிறகு சிரித்தபடி வண்டியில் ஏறினான்.

இருள் கவியும் வரைக்கும் எதுவும் பேசாமல் முருங்கை மரத்தடியில் போட்டிருந்த கல்மீது தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தான் மாயாண்டி. கண்ணீர் வழியவழிய ஆண்டாள் அவனை கண்டமேனிக்குத் திட்டினாள். அவள் கண்களில் கோபம் நெருப்பைப்போல எரிந்தது. இருண்ட பிறகு, சிதறிக் கிடந்த சாமான்களையெல்லாம் மெளனமாக எடுத்து வந்து திண்ணையில் அடுக்கி வைத்தான் மாயாண்டி. அழுது அடங்கிய ஆண்டாள் செங்கற்களை அடுக்கி அடுப்பு மூட்டி கஞ்சி காய்ச்சினாள். ஆளுக்கு இரண்டு தம்ளர் குடித்துவிட்டு மற்றொரு திண்ணையில் படுத்துவிட்டார்கள்.

திண்ணைகளே இருப்பிடமாக மாறிய பிறகு விளையாடுவதற்கு இடமில்லாமல் முத்துசாமியும் கந்தசாமியும் தவியாய்த் தவித்தார்கள். முருங்கைமரத்தின் பக்கம் நிழலே இருப்பதில்லை. சாயங்காமல் வரையில் அங்கே வெயிலே நிறைந்திருந்தது. தூங்குமூஞ்சி மரத்தடியில் தாராளமாக நிழல் இருந்தது. ஆனால் அந்த இடம் மொத்தத்தையும் ஆக்கிரமித்து பட்டாளத்துக்காரர் லாரிலாரியாக செங்கற்களையும் ஜல்லியையும் மண்ணையும் கொண்டு வந்து கொட்டியிருந்தார். கோயில் வாசலில் ஆடுவது  ஆண்டாளுக்கு சுத்தமாக பிடிக்காத காரியம். தப்பித்தவறி அவள் பார்வையில் பட்டால் முதுகுத்தோல் உரிந்துவிடும்படி அடித்துவிடுவாள். முகத்தில் சோகம் படர வாசலில் உட்கார்ந்துகொண்டு இருவரும் தெருவை வேடிக்கை பார்த்தார்கள்.

பழக்கடையில் குலைகுலையாய் தொங்கும் வாழைத்தார்களை வேடிக்கை பார்த்தபடி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய நாளொன்றில்அண்ணே அண்ணே, நம்ம திண்ணைக்கு முன்னால் ஒரு ஆட்டோ நிக்குதுஎன்று சுட்டிக் காட்டினான் கந்தசாமி. ஒருகணம் உற்றுப் பார்த்த முத்துசாமி, “நம்ம ஊடு இல்லடா அது. பக்கத்து ஊடுடாஎன்று சொல்லிவிட்டு வாழைத்தார்கள்மீது பார்வையை மறுபடியும் திருப்பினான். சில கணங்களுக்குப் பிறகுஇல்லண்ணே, நம்ம ஊடுதாண்ணே. அம்மா கூட பக்கத்துல நிக்கறாங்க. நல்லா பாருஎன்றான் கந்தசாமி. சலிப்போடு மீண்டும் அந்தத் திசையில் உற்றுப் பார்த்தவன் ஒரு கணம் திகைப்பில் உறைந்துவிட்டு மறுகணமேவாடா, வேகமா போயி பாக்கலாம்என்று ஓடினான். கந்தசாமியும் தோளில் தொங்கிய பள்ளிக்கூடப் பையை இறுக்கமாகப் பிடித்தபடி இறைக்க இறைக்க ஓடினான்.

ஆட்டோவுக்கு அருகில் பெரிய அத்தை நின்றிருந்தார். ஒரு கோயில் தூண்போன்ற உறுதியான உருவம். அவரிடம் மாயாண்டி என்னமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆண்டாள் தம் கண்களிலிருந்து கண்ணீர் சரிந்து விழுந்துவிடாதபடி உதடுகளை இறுக்கமாக கடித்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த முருங்கைமரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இரண்டு குருவிகள் நிலைகொள்ளாமல் கிளைகிளையாகத் தாவியபடி இருந்தன. ஆட்டோவுக்கு அருகில் அவர்கள் சென்று நின்றதை பெரிய அத்தை கவனிக்கவே இல்லை. அருவருப்பான பொருளுக்கு அருகில் நிற்பதுபோல முகத்தைச் சுளித்தபடி மாயாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டினார் அவர்.

கூறு கெட்டதனமா நீ செஞ்ச காரியத்துக்கு நான் என்னடா செய்ய முடியும், சொல்லு. என்னைக்காவது பத்து ரூபா சேத்து வச்சி ஒரு பொருள நீ வாங்கியிருந்தாதான அந்தப் பொருளுடைய அருமை ஒனக்கு தெரியும். அஞ்சு கழுத வயசாவுது. இன்னும் ஒனக்கு புத்தி வரலைன்னா யாரு என்ன செய்யமுடியும்?” தன் நெற்றியில் அடித்துக்கொண்டார் அத்தை.

நீ ஒரு வார்த்த அந்த சந்தனப்பொட்டுக்காருகிட்ட பேசனா கேட்டாலும் கேப்பாருக்கா…” என்று இழுத்தான் மாயாண்டி.

கேட்டு கிழிச்சிடுவாரு போ. எல்லாம் ஒன் நெனப்புதான் பொழப்ப கெடுக்குது. கோர்ட்டுக்கு வந்து நீ கட்டவேண்டிய பணத்த என்ன கட்டுன்னு சொல்வாரு. கட்ட சொல்றியா?”

மாயாண்டி ஒரு பதிலும் சொல்லாமல் அத்தையின் முகத்தையே பார்த்தபடி நின்றான்.

செத்துப்போன நாய்க்கு மண்டில நாப்பது பேரு கூட்டாளி இருக்கும்போது, அதுல ஒன்ன தேடி வந்து கையெழுத்து போடுன்னு ஏன்டா சொல்றான் ஒருத்தன்? கொஞ்சமாச்சிம் யோசிச்சியாடா நீ? புத்தி இல்லாத மடயனா நீ? ஒன்கிட்ட மட்டும்தான் சொத்துன்னு ஒன்னு இருக்குது. நாள பின்ன அவன் குடுக்கலைன்னாலும் ஒன்கிட்ட புடுங்கிடலாம்ன்னு இழுத்து உட்டுட்டான். அப்ப பெரிய தர்மப்பிரபாட்டம் கையெழுத்து போட்டுட்டு வந்து இப்ப நடுத்தெருவுல நிக்கற.”

அவ்ளோ விவரம்லாம் தெரியாதுக்கா எனக்குவிழிகளிலிருந்து உருண்ட கண்ணீரை மாயாண்டி தன் கையை உயர்த்தித் துடைத்துக்கொண்டான்.

என்னமோ அவசரத்துக்கு எல்லா சாமானயும் திண்ணையில கொண்டாந்து போட்டுகினதுலாம் சரிடா மாயாண்டி. சீக்கிரமா வேற எங்கனாச்சிம் வாடகைக்கு கீடகைக்கு எடம் பார்த்துட்டு கெளம்பி போவற வழிய பாரு. நாலஞ்சி பார்ட்டிங்க இப்பதான் நல்ல வெலையா சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. சரியா படியாமதான் தள்ளித்தள்ளி போவுது. ஒருதரம் எடத்த பார்க்கணும்ன்னு சொன்னாங்கன்னா, பார்ட்டிய கூப்டாந்து காட்டணுமில்ல? திண்ணைய இந்த கோலத்துல வச்சிருந்தா வர ஆளுங்க ரொம்ப கேவலம்ன்னு என் மூஞ்சியிலயே துப்பிட்டுதான் போவாங்க. எவ்ளோ சீக்கிரம் முடியுதோ, அவ்ளோ சீக்கிரமா வேற எடம் பாத்துகினு போயிடு. அப்பதான் இதுக்கு ஒரு வெல நல்லபடியா படியும்.”

நான் எங்கக்கா போவன்? எனக்கு ஒருத்தரயும் தெரியாதுக்கா…..”

பொறக்கும்போது எல்லாரும் எல்லாத்தயும் தெரிஞ்சிகிட்டாடா பொறக்கறாங்க.  முட்டி மோதி தெரிஞ்சிக்க வேண்டிதுதான்…..”

ஐயோ அக்கா

டேய், அக்காவும் இல்ல, சொக்காவும் இல்ல. ஒழுங்கா சொல்றத கேளு. போவும்போது முழுசா சுத்தம் பண்ணிட்டு போ. குப்ப கூளத்தயெல்லாம் போட்டது போட்டபடி போயிடாத.”

அத்தை விரலை ஆட்டிப் பேசிவிட்டு ஆட்டோவில் ஏறிக்கொண்டு போய்விட்டார். அவர் போன திசையைப் பார்த்தபடி தலையில் கைவைத்துக்கொண்டு வாசலிலேயே உட்கார்ந்துவிட்டான் மாயாண்டி. சத்தம் காட்டாமல் புத்தகப் பைகளை திண்ணையில் வைத்துவிட்டு முத்துசாமியும் கந்தசாமியும் புதருக்கு அருகில் ஓடும் அணில்களை வேடிக்கை பார்க்கச் சென்றுவிட்டார்கள்.

அத்தை சொன்னவை முழுக்க நாடகம் என்று  கஞ்சி குடிக்கும் சமயத்தில் சொன்னாள் ஆண்டாள். குடும்பத்தை திண்ணையிலிருந்து வெளியேற்றுவதற்காக அவள் போடும் திட்டம் என்றாள். கதிர்காமத்தில் மூன்று வீடுகளும் இரண்டு மனைகளும் வைத்திருப்பவருக்கு  இந்த வீட்டை விற்கும் அளவுக்கு பணமுடை எதுவும் இல்லை. திக்கில்லாதவர்களாக நாம் தெருவில் இறங்க இறங்க, அதைப் பார்க்கும்போது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றாள். அதற்குப் பிறகு ஆண்டாள் பேசவும் இல்லை, ஒரு வாய் கஞ்சியும் குடிக்கவில்லை. வெகுநேரம் அழுதபடியே இருந்தாள்.

அழாத ஆண்டாளு, சும்மா இரு ஆண்டாளு, எல்லாத்தயும் அந்த ஆண்டவன் பார்த்துக்குவான். உடுஎன்று மாயாண்டி தயங்கித்தயங்கி சொன்னான். இறுதியில் பெருமூச்சு வாங்கியபடி, “எல்லாம் என்னாலதான். எல்லாரயும் நல்லவங்கன்னு நெனச்சதுக்காக, எல்லாமே என் தலயில வெடிஞ்சிட்டுது. இந்த மண்ணுல நான் எப்பிடி தலய தூக்கி இனிமேல நடக்கப் போறனோ தெரியலைஎன்று தடுமாறித் தடுமாறிச் சொல்லிவிட்டு கையைக் கழுவினான். ஆண்டாள் அப்போதும் அழுதபடியே இருந்தாள். கொடியில் இருந்த துண்டை உருவி வாயைத் துடைத்த பிறகுநாளைக்கி சாயங்காலமா கொளத்தங்கர பக்கமா, ரைஸ்மில் ஸ்டோர் ரூம் பக்கமா எங்கனா பொறம்போக்குல எடம் கெடக்குதான்னு பார்த்துட்டு வரேன் ஆண்டாளு. இருந்தா ஒரு குடிச போட்டுக்கலாம்என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

மறுநாள் பள்ளியில் நீண்ட காலமாக எதிர்பார்த்துவந்த கலைப்போட்டிகள் பற்றிய அறிவிப்பு பிரார்த்தனை அரங்கத்தில் படிக்கப்பட்டது. அதைக் கேட்டு மகிழ்ச்சியில் துள்ளினான் முத்துசாமி. அந்தப் போட்டியில் வென்று மேடையில் ஏறி பரிசு பெறும் கனவு அக்கணத்திலேயே  அவன் மனத்தில் உதித்துவிட்டது. ’முதல் பரிசு பெறும் மாணவன் மா.முத்துசாமி, ஆறாம் வகுப்பு அ பிரிவுஎன்னும் அறிவிப்புக்குரல் அவன் அடிநெஞ்சில் சன்னமாக ஒலிக்கிறது. அவன் மனத்தில் உருவாக்கிய வீட்டை அவனுடைய வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் கண்விரிய ஆச்சரியத்துடன் பார்த்து கைதட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் அவனருகில் நின்று கையை வாங்கிக் குலுக்குகிறார்கள். பானுமதி டீச்சர் அவன் தலையை வருடி முடியை கலைத்துவிட்டு கன்னத்தில் தொட்டுக் கிள்ளி சிரிக்கிறார். சமூக அறிவியல் ராமலிங்கம் சார்ஜப்பான்காரன்லாம் ஒங்கிட்ட பிச்ச வாங்கணும் முத்துசாமிஎன்று சிரிக்கிறார். எல்லாரும் வாய் பிளந்தபடி பார்த்திருக்க சிறப்பு விருந்தினர் அவனை எதிர்காலக்கலைஞன் என்று சொல்லி பாராட்டுகிறார். கனவுகளில் மிதந்தபடி இருந்ததால் அவன் பசியையும் தாக்த்தையும் உணராதவனாக இருந்தான்.

மாயாண்டி மூட்டை தூக்கும் வேலையை பகலோடு முடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே புறம்போக்குப்பகுதிகளில் குடிசை கட்டுவதற்கு எங்காவது இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டு போனான். எந்த இடத்திலும் நாலடி இடம் கூட இல்லை. மாந்தோப்பைத் தாண்டி ஒரு பெரிய குப்பை மேடு இருந்தது. நெருக்கமுடியாத அளவுக்கு கெட்ட வாடை வீசியது. அந்த மேட்டைச் சுற்றி முப்பது நாற்பது வீடுகள் இருந்தன. இரண்டடி இடம் கூட இல்லை. ஏமாற்றத்தோடு திரும்பிய சமயத்தில்எங்க வந்தீங்கண்ணே, ஏன் கெளம்பிட்டிங்ண்ணே?” என்ற குரல் கேட்டு திகைத்துத் திரும்பியபோது ஒரு குடிசையின் வாசலில் குமாரசாமி கையசைப்பதைப் பார்த்தான். “நல்லா இருக்கியாடா?” என்று கேட்டபடி அவன் பக்கமாகச் சென்றான். பிறகு தயங்கித்தயங்கி தன் தேவையை முன்வைத்தான்.

என்னங்ண்ணே இது? ஒங்களுக்கு போயி இப்பிடி நடக்கலாமாண்ணே. நல்லதுக்கு காலமே இல்லாம போச்சிண்ணேஎன்றபடி நெற்றியில் அடித்துக்கொண்டான் குமாரசாமி. பிறகு ஒரு பெருமூச்சோடுஇங்க எல்லாமே பொறம்போக்குதாண்ணே. அந்த கல்யாண மண்டபத்துக்காரன் இது மேல ரொம்ப நாளாவே கண்ணு வச்சிருக்காண்ணே. காலிபண்ண சொல்லி அவன் ஆளுங்க அடிக்கடி வந்து மெரட்டிகினே இருக்கறாங்க. போதாகொறைக்கி புதுசா வந்த தாசில்தாரயும் வட்டத்துக்குள்ள வளச்சிபுட்டானுங்க. நாலு நாளைக்கி முன்னாலகூட ஆளுங்க வந்து ஒழுங்குமரியாதயா எல்லாத்தயும் அள்ளிகினு ஓடி போயிடுங்கடா, புல்டவுசர் வந்து அள்ளிச்சின்னு வை, ஒரு மண்ணும் கெடைக்காது. அப்பறம் ஒங்க இஷ்டம்னு மெரட்டிட்டு போனானுங்க. என்னா ஆவுமோ தெரியலைண்ணேஎன்று கைகளை விரித்தான். “சரிடா, வேற எங்கனாச்சிம் எடம் இருக்கற தகவல் தெரிஞ்சா சொல்லுடாஎன்றபடி மாயாண்டி திரும்பினான். அப்போதுஒங்களுக்கு நானு ஒரு முப்பது ரூபா தரணும்ண்ணே. ஊர உட்டு போவறதுக்குள தந்துடறண்ணேஎன்று இழுத்தான் குமாரசாமி. “நான் ஒன்னும் அதுக்கு வரலடா, போஎன்று தலையை அசைத்தபடி நடந்தான் மாயாண்டி.

அடுத்த நாள் வில்லியனூர் பக்கம் சென்று அலைந்துவிட்டுத் திரும்பினான். அதற்கும் மறுநாள் மூலகுளத்தைச் சுற்றிப் பார்த்தான். ஒரே ஒரு அடி மண் கூட எங்கும் இல்லை. எல்லா இடங்களிலும் அடைசலாக சின்னச்சின்ன குடிசைகள் ஒன்றையொன்று ஒட்டியபடி இருந்தன. பெண்கள் பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் சுமந்து நடந்து சென்றார்கள். நடைபாதைக்கு நடுவில் குச்சிகளை நிற்கவைத்துவிட்டு பத்து பன்னிரண்டு பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடினார்கள். ஒரு குடிசைக்குப் பக்கத்தில் இரண்டு எருமைகள் மண்தொட்டியில் தவிடு கரைத்த தண்ணீரை அருந்தியபடி நின்றிருந்தன. அவை கழுத்தை அசைக்கும்போதெல்லாம் அவற்றின் கழுத்து மணிகள் அசைந்து ஓசையிட்டன. அவன் நின்றுநின்று பார்ப்பதைப் பார்த்த ஒரு மூதாட்டிஎன்ன தம்பி? யாரு ஓணும்? யார தேடற?” என்று கேட்டாள். அவன் தலையை அசைத்தபடிகுடிச போட எங்கன எடம் கெடைக்குமான்னு பாக்கறன்ம்மாஎன்றபடி விவரம் சொன்னான். ”ஐய, இங்க எடமும் இல்ல மடமும் இல்ல. திரும்பி பாக்காம போயிகினே இருஎன்றாள் அவள்.

ஒருநாள் இரவில் கேழ்வரகு மாவில் செய்த அடையை ஆண்டாள் எல்லோருக்கும் சாப்பிடுவதற்கு வைத்தாள். எரியும் மண்ணெண்ணெய் விளக்கை நடுவில் வைத்துவிட்டு, அதைச் சுற்றி எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். இடம் தேடும் வேலையில் இறங்கிய பிறகு மாயாண்டியின் பேச்சு முற்றிலும் குறைந்துவிட்டது. திரும்பத்திரும்ப தோல்விக்கதைகளைச் சொல்லும்போது தன்னைப்பற்றிய ஒரு கசப்புணர்வு தன்னையறியாமல் ஊறுவதை உணர்ந்த பிறகு அவன் பேச்சைக் குறைத்துக்கொண்டான். அவன் தட்டு காலியானதைப் பார்த்துவிட்டு ஆண்டாள், “இன்னும் ஒரு துண்டு சாப்பிடறியா?” என்று எடுத்து வைக்கப் போனாள். “வேணாம் வேணாம்என்றபடி அவன் தட்டை பின்னால் இழுத்துக்கொண்டான். அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல்என்ன சாப்பாடு சாப்புடற நீ? இப்பிடி அரயும் கொறயுமா சாப்ட்டா சத்து எங்கேருந்து வரும் ஒனக்கு? ஒரு மூட்ட தூக்கற மனுசனுக்கு ஒடம்புல வலு வேணாமா?” என்று சத்தம் போட்டாள் ஆண்டாள். ”மனசுல வலு இருந்தா ஒடம்புல தானா வலு வரும், போஎன்று சிரித்தான் அவன். அந்த நேரத்தில்அண்ணே அண்ணேஎன்று வாசலில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. தட்டு வைத்திருந்த கையோடு எழுந்து சாக்குப்படுதாவை விலக்கிவிட்டு வெளியே பார்த்தான் மாயாண்டி. குமாரசாமியும் அவன் மனைவியும் நான்கு பிள்ளைகளும் இருட்டில் நின்றிருந்தார்கள். திகைப்புடன் திண்ணையை விட்டு இறங்கிய மாயாண்டி வேகமாக வாசலுக்குப் போனான். ஆண்டாளும் பிள்ளைகளும் எழுந்து வந்து பின்னால் நின்றார்கள்.

என்னடா குமாரசாமி, குடும்பத்தோட எங்க கெளம்பிட்ட? ஏதாச்சும் கோயில் பயணமா?” என்று கேட்டான் மாயாண்டி.

கோயிலும் இல்ல, கொளமும் இல்லண்ணே. சாய்ங்காலம் அந்த கல்யாணமண்டபத்து ஆளுங்க புல்டவுசர கொண்டாந்து நிறுத்திட்டாங்ண்ணே. ஒழுங்கு மரியாதயா காலி பண்ணுங்க. இல்லன்னா அவுங்கவுங்க அக்கா தங்கச்சிங்கள எனக்கு கூட்டி குடுங்கண்ணு ரொம்ப அசிங்கமா பேசிட்டாண்ணே. தடுத்து பேச ஒரு நாதியில்லண்ணே. அனாதயா போயிட்டம்ண்ணே. இனிமெ இந்த தெரு எதுக்கு? ஊரு எதுக்கு? அதான் கெளம்பிட்டம்ண்ணே

பக்கத்தில் வந்து அவன் கைகளை வாங்கி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அழுத்திக்கொடுத்தான் மாயாண்டி.

இப்ப போனா பெங்களூரு ரயில புடிச்சிரலாம்ண்ணே. அங்க எங்கனா கல்லுசட்டி மண்ணுசட்டி தூக்கி பொழச்சிக்குவம்ண்ணேஎன்றான்.

கனக்கும் மனத்துடன் அவன் முகத்தையே மெளனமுடன் பார்த்தான் மாயாண்டி. “ஒனக்கு ஒரு முப்பது ரூபா ரொம்ப நாளா பாக்கியாவே இருக்குதுண்ணே. இனிமே பாத்துக்குவமோ இல்லயோ, குடுத்துட்டு போவலாம்ன்னு வந்தண்ணேஎன்றபடி ரூபாய்த்தாளை எடுத்து அவனிடம் நீட்டினான் குமாரசாமி. அதைக் கேட்டு ஒரு அடி பின்வாங்கிய மாயாண்டி, “என் பணத்த குடுன்னு ஒங்கிட்ட நானு கேட்டனா? அதெல்லாம் ஒன்னும் வேணாம் போ. போயி புள்ளைங்களுக்கு எதாச்சிம் வாங்கி குடுஎன்றான். பிறகு எதையோ நினைத்துக்கொண்டவனாகசரி, ஒரு கம்பு அட சாப்பிடறியாடா?” என்று கேட்டுவிட்டு ஆண்டாளைப் பார்த்தான். “வேணாம்ன்ணே, சாப்ட்டுட்டுதான் கெளம்பணம்என்றான் குமாரசாமி. அவன் மனைவியிம் பிள்ளைகளும் அருகில் சிலைபோல குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தார்கள். தெருவிளக்கின் வெளிச்சம் ஒரு கோடாக குமாரசாமியின் முகத்தில் விழுந்தது. அவன் கண்களில் ஈரம் மின்னியது. பார்வையாலேயே விடைபெற்றுக்கொண்டு அவன் நடக்க, அவன் பின்னால் எல்லோரும் போனார்கள்.

புறம்போக்கில் இடம் தேடுவதை நிறுத்திவிட்டு, வாடகைக்கு வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தான் மாயாண்டி. ஆயிரம் ரூபாய் என்பதை ஒரு எல்லையாக வைத்துக்கொண்டு அறிவிப்புப்பலகை தொங்கும் வீடுகளை அணுகி பேசிவிட்டுத் திரும்பினான்.  பல இடங்களில் வாடகை அவனுடைய எல்லைக்கு மேல் இருந்தது. அவன் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஆயிரம் காரணம் சொல்லி தட்டிக் கழித்து திருப்பியனுப்பினார்கள். பழக்கமுள்ள வீட்டுத் தரகர் ஒருவர் மூலமாக எடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

வருத்தத்துடன் வீட்டுக்கு திரும்பும் சமயத்தில் மாயாண்டிக்கு சின்ன அக்கா ஞாபகமும் நடு அக்கா ஞாபகமும் வந்தது. நடு அக்கா தேங்காதிட்டிலும் சின்ன அக்கா நோணாங்குப்பத்திலும் குடியிருந்தார்கள். அவர்கள் வழியாக ஏதாவது வாடகை வீடு அமையக்கூடும் என்கிற எண்ணத்தில் திரும்பி டவுன்பஸ் பிடித்து அவர்களைப் பார்க்கச் சென்றான். பஸ்ஸில் அலைந்த அலைச்சல்தான் மிச்சம். நினைத்தது எதுவும் நடக்கவில்லை.

இருந்த சொத்த பறிகுடுத்துட்டு இப்பிடி அரிச்சந்திர ராஜாவாட்டம் வந்து நிக்கறியே, வெக்கமில்லையா?. போ, எங்கனா சுடுகாட்டுக்கு போயி எடத்த பாருஎன்றாள் நடு அக்கா. “இந்த ஏரியா முழுக்க சொந்த ஊட்டுல இருக்கறவங்கதான்டா. வாடகைக்கிலாம் இங்க எதுவும் கெடைக்காது. எங்கனா கெடைக்கற எடமா பாத்து போடாஎன்று அனுப்பிவைத்தாள் சின்ன அக்கா.

ஆண்டாள் அன்று இரவு  எல்லோருக்கும் நொய்க்கஞ்சி வைத்திருந்தாள். பொட்டுக்கடலையும் காய்ந்த மிளகாயையும் போட்டு அரைத்த சட்னியைத் தொட்டுக்கொண்டு எல்லோரும் சாப்பிட்டார்கள். வாடகைக்கு வீடு தேடிச் சென்ற இடங்களில் நடந்ததையெல்லாம் உணர்ச்சியற்ற குரலில் ஒவ்வொன்றாகச் சொன்னான் மாயாண்டி. இறுதியாக பெருமூச்சு வாங்கியபடிநா என்ன இவுங்ககிட்ட பிச்சயா கேட்டன்? வேற எடம் பாரு வேற எடம் பாருன்னு சொல்றதுக்கு. வாடகைக்கு வீடு வேணும்ன்னு கேக்கறதுகூட ஒரு குத்தமா ஆண்டாளு?” என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்துகொண்டான். சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் எதையோ சொல்ல வாய் திறந்துவிட்டு, பிறகு மனசுக்குள்ளேயே விழுங்கிக்கொண்டான்.

போட்டிக்கான நாள் நெருங்கநெருங்க முத்துசாமிக்கு மனம் பறந்தது. அவனுடைய வீடு கட்டும் திறமையை அவன் வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் தெரிந்துகொண்டார்கள். ஒரு கைப்பை நிறைய குச்சிகளை கொண்டுவந்து கொடுத்து தனக்கொரு வீட்டைக் கட்டிக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள் சீதாலட்சுமி. கரும்புக்கணுவில் ஒட்டியிருக்கும் விதைமுத்துபோன்ற அவளுடைய தெத்துப்பல் அழகாக இருந்தது. கால் மணி நேரத்தில் அவன் கட்டியெழுப்பிய வீட்டை ஒரு கோட்டையைப்போல கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் அவள். வகுப்புப்பிள்ளைகள் எல்லோரிடமும் அந்த வீட்டைக் காட்டி மகிழ்ச்சியடைந்தாள். கலைப்பொருள் போட்டியில் அவனுக்குத்தான் முதல் பரிசு காத்திருக்கிறது என்று எல்லோரும் வெளிப்படையாகவே பேசிக்கொண்டார்கள். அதையெல்லாம் கேட்கக்கேட்க முத்துசாமிக்கு ஆகாயத்தில் நீந்திப் போவதுபோல இருந்தது.

பள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது கந்தசாமி அவனிடம்நீ ஜெயிச்சா ஒனக்கு நெறயா பணம் குடுப்பாங்களா?” என்று கேட்டான்.

பணம்லாம் குடுக்கமாட்டாங்கடா. ஏதாச்சிம் பொருள்தான் குடுப்பாங்க. தட்டு, தம்ளர், கிண்ணம், சொம்பு. சோப்புடப்பா அந்த மாதிரி ஒன்னு

ரெண்டு தட்டு குடுத்தா எனக்கு ஒன்னு தருவியா?” என்று ஏக்கத்துடன் கேட்டான் கந்தசாமி.

ஒனக்கு எதுக்குடா தட்டு?”

என் தட்டுல ஓட்ட உழுந்துட்டுது. அம்மா ஊத்தற கஞ்சியில தண்ணியே நிக்கமாட்டுது. கீழயே தரதரன்னு ஒழுவி ஓடிடுது.”

முத்துசாமி அவன் முதுகில் ஆதரவோடு தட்டிக்கொடுத்தான். “அதுக்குலாமாடா கவலப்படுவ? ரெண்டு குடுத்தாலும் நீயே வச்சிக்க. ஒன்னு குடுத்தாலும் நீயே வச்சிக்க. போதுமா?” என்றான். அதைக் கேட்டு புன்னகையுடன் வேகமாக தலையை ஆட்டிக்கொண்டு நடந்தான் கந்தசாமி. வீட்டை நெருங்கும்போது பெரிய அத்தை வாசலில் நின்றபடி அம்மாவிடம் பேசுவதும் அம்மா குனிந்த தலை நிமிராமல் கேட்டுக்கொள்வதும் தெரிந்தது. வீடு நெருங்குவதற்குள் அத்தையை அழைத்துக்கொண்டு ஆட்டோ போய்விட்டது.

இரவில் ஆண்டாள் கிண்டிய சூடான கம்பங்களியை முத்துசாமியும் கந்தசாமியும் விரும்பிச் சாப்பிட்டார்கள். தொட்டுக்கொள்வதற்காக சுட்ட நெத்திலிக் கருவாடு அமுதமாக இருந்தது. களியின் ருசியைப்பற்றி பேசிக்கொண்டே இரண்டு பேரும் திண்ணையில் சாக்குகளை விரித்து ஓரமாக படுத்துக்கொண்டார்கள்.

வானத்தில் மேகங்களைக் கடந்து செல்லும் நிலவு தெரிந்தது. அதைப் பார்த்த வேகத்தில் அடுக்கடுக்காக நிலவுக்கதைகளை உருவாக்கி கந்தசாமிக்குச் சொன்னான் முத்துசாமி. இன்னும் இன்னும் என்று கதைகளுக்காக அவனைத் தூண்டிக்கொண்டே இருந்தான் கந்தசாமி. நிலாவில் காற்று இல்லை. ஒரே ஒரு அடி எடுத்துவைக்க அரைமணி நேரமாகும். நிலாவில் நடப்பது பறப்பதுபோல இருக்கும் என்று படுத்தவாக்கில் நெளிந்துநெளிந்து காட்டினான். கந்தசாமி கைதட்டி விழுந்துவிழுந்து சிரித்தான். எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே இரண்டு பேரும் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

விளக்கை சிறிதாக அடக்கிவிட்டு ஆண்டாளும் மாயாண்டியும் வெகுநேரம் அடங்கிய குரலில் பேசிக்கொண்டே இருந்தார்கள். மனம் பொங்கி ஆண்டாள் விழிகளில் கண்ணீர் தளும்பும்போது மாயாண்டி ஆறுதல் சொன்னான். சோர்வின் பாரம் தாளாமல் விரக்தியில் மாயாண்டி மெளனமாகிவிடும் தருணத்தில் ஆண்டாள் அவனை தோளோடு அணைத்துக்கொண்டாள்.

நள்ளிரவைக் கடந்த நேரம். நிலா உச்சிவானத்தைத் தொட்டுவிட்டு மறுபுறத்தில் சரியத் தொடங்கியிருந்தது.  முத்துசாமி கந்தசாமி, ஏந்திருங்கப்பாஎன்ற அழைப்பைக் கேட்டு மெதுவாகப் புரண்டு கண்விழித்தான் முத்துசாமி.  அவன் மனத்தில் ஓடிக்கொண்டிருந்த கனவிலிருந்து அவன் முற்றிலும் வெளிவராதவனாகவே இருந்தான். கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மறுபடியும் உருள ஆரம்பித்தான் கந்தசாமி.

டேய் பசங்களா, ஏந்துருங்கடா

முத்துசாமி சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். போட்டி, வீடு, பரிசு என்று துண்டுதுண்டாக வார்த்தைகள் தன்னிச்சையாக அவன் வாயிலிருந்து வெளிப்பட்டதை, மறுகணமே அவன் திகைத்து நிறுத்திக்கொண்டான். அப்போதுதான் அம்மாவும் அப்பாவும் எங்கோ கிளம்புவதற்குத் தயாராகி நிற்பதுபோல நிற்பதைப் பார்த்துக் குழம்பினான். படுக்கப் போகிற கணம் வரை நிகழ்ந்தவற்றையெல்லாம் அவன் மனம் வேகவேகமாக ஒருகணம் தொகுத்துக்கொண்டது.

முத்துசாமி, தம்பிய சீக்கிரம் எழுப்புப்பா, கெளம்பணும்டா

எங்கம்மா?” என்று தயக்கத்துடன் ஆண்டாளின் முகத்தைப் பார்த்தான் முத்துசாமி.

பெங்களூருக்குடா. குமாரசாமி சித்தப்பா போனாங்க இல்ல. அதுமாரி நாமளும் அங்க போயிடலாம்

திண்ணையிலிருந்து இரண்டு மூட்டைகளை மட்டும் இறக்கி வாசல்பக்கம் வைத்துவிட்டுத் திரும்பினான் மாயாண்டி. ஆண்டாளும் மாயாண்டியும் அடங்கிய குரலில் சிறிது நேரம் பேசிக்கொண்டார்கள். “எல்லாத்தயும் அங்க போயி பார்த்துக்கலாம்என்று திருப்பித்திருப்பிச் சொன்னான் மாயாண்டி.

கண்களைக் கசக்கியபடி எழுந்த கந்தசாமிஎன்னடா?” என்று கேட்ட தருணத்தில் தன் அம்மாவும் அப்பாவும் எதிரில் நிற்கும் தோற்றம் பார்வையில் பட்ட பிறகு சட்டென்று அமைதியானான்.

திடீரென நினைவுக்கு வந்தவனாக ஆண்டாளின் பக்கம் திரும்பிய முத்துசாமி, “அம்மா, நாளைக்கி ஸ்கூல்ல கலைப்பொருள் போட்டிம்மாஎன்று சொல்லிவிட்டு திகைத்து நின்றான். ஒருகணம் அவன் உடல் தூக்கிவாரிப் போட்ட மாதிரி அதிர்ந்து அடங்கியது. பதில் எதுவும் பேசாமல் ஆண்டாள் அவனையே ஒருகணம் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, பிறகு இருட்டான திண்ணையின் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். படுத்திருந்த போர்வைகளை மடித்துச் சுருட்டி பைக்குள் வைப்பதில் மும்முரமாக இருந்தான் மாயாண்டி. அக்கணத்தில் முத்துசாமியின் தூக்கம் முழுக்க கலைந்துவிட்டது.

எல்லோரும் திண்ணையிலிருந்து இறங்கி வாசலுக்கு வந்தார்கள். ஆண்டாள் மெதுவான குரலில்சின்ன மூட்டய நீ தூக்கு முத்துசாமி. பெரிய மூட்டய அப்பா தூக்கிக்குவாருஎன்றபடி கைப்பையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தாள். “நான் எதுவும் தூக்க வேணாமாம்மா?” என்று கையை விரித்துக்கொண்டு கேட்டபடி ஆண்டாள் பின்னால் ஓடினான் கந்தசாமி. ”வேணாம்டா. நீ அண்ணன் கைய கெட்டியா புடிச்சிகினு வா. போதும்என்றாள் ஆண்டாள். அவன் துள்ளிக்கொண்டு சென்று முத்துசாமியின் கைவிரலைப் பிடித்துக்கொண்டான். அடுத்த கணமே கண்ணில் தெரிந்த மின்மினிப்பூச்சியைப் பற்றியும் விளக்குக்கம்பத்துக்கு அருகில் உறங்கும் நாய்க்குட்டியைப் பற்றியும் பேசத் தொடங்கிவிட்டான். ஏதோ ஒரு தருணத்தில் வானத்தைப் பார்த்துவிட்டு, ”நிலா கூட நம்மகூடவே வருதுஎன்று சொல்லிவிட்டு சிரித்தான்.

முடிவுகள் – பதாகை சிறுகதைப் போட்டி 2015

இவ்வருடத்திற்கான சிறுகதைப் போட்டியை நண்பர்களின் ஒத்துழைப்பும், அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களான நடுவர்கள் திரு பாவண்ணன் மற்றும் திரு க மோகனரங்கன் அவர்களின் தனித்துவமிக்க மதிப்பீடுகளும் சிறப்பித்திருக்கின்றன.

story_competition_prizes

வெற்றி பெற்றச் சிலரைத் தவிர பங்கேற்ற பிறர் அனைவருக்கும் ஏமாற்றம் ஏற்படுவதை இது போன்ற போட்டிகளில் தவிர்க்க முடியாது. ஆனால் வெற்றி தோல்விகள் தனி நபர் படைப்பூக்கத்தின் விசையையோ அது வெளிப்படும் திசையையோ தீர்மானிப்பதாக இருக்க முடியாது. முடிவுகளுக்கு அப்பால் என்னவென்று யோசித்தால், புனைவு எழுதும் ஊக்கமும் புனைவிலக்கியம் குறித்த விமரிசனமும் இன்று மிகவும் அவசியப்படுகிறது. வெற்றி தோல்விகள் அல்ல, தொடர்ந்த இலக்கியச் செயல்பாடே அர்த்தமுள்ளதாக இருக்கும்.

போட்டிக்கு வந்த சிறுகதைகளை தங்களுக்கேயுரிய அளவீடுகளால் சீர்தூக்கிப் பார்த்து தங்கள் தேர்வை அறிவித்த நடுவர்களான திரு பாவண்ணன் அவர்களுக்கும், திரு க மோகனரங்கன் அவர்களுக்கும் பதாகை தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. பரிசுக்குரிய சிறுகதைகளை எழுதியவர்களுக்கு வாழ்த்துகள்.

judges_panel_2015

பரிசுப்பெற்ற கதைகளின் விவரம் பின்வருமாறு.

முதல் பரிசு (தலா ரூ3000/- பரிசு)

  • மாசாவின் கரங்கள் – தனா
  • யுகசந்தி – முகம்மது ஐஷ்வர்யன்

(வரும் 4-அக்-2015 இதழில் இவ்விரு கதைகளும் இடம்பெறுகின்றன)

இரண்டாம் பரிசு (தலா ரூ1500/- பரிசு)

  • விடுப்பு – கிஷோர் ஸ்ரீராம்
  • இரண்டு தோசைகள் – ராஜா (எ) இளமுருகு

(வரும் 11-அக்-2015 இதழில் இவ்விரு கதைகளும் இடம்பெறுகின்றன)

மூன்றாம் பரிசு (தலா ரூ750/-)

  • வண்ணத்துப்பூச்சிகளின் கோவில் – ஆ. ஜீவானந்தம்
  • தாலாட்டு – ரபீக் ராஜா

(18-அக்-2015 இதழில் இவ்விரு கதைகளும் இடம்பெறுகின்றன)

வெற்றிப் பெற்ற படைப்பாளிகளுக்கு பதாகையின் வாழ்த்துகள்.

எத்தனை எத்தனை மனிதர்கள்

பாவண்ணன்

paavannan

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் சு.வேணுகோபால் எழுதத் தொடங்கியபோது, தமிழ்ச்சிறுகதைகள் ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் தொட்டுவிட்டிருந்தன. அவற்றின் செழுமையும் வளமும் என்றென்றும் போற்றக்கூடிய தன்மையுடன் இருந்தன. சிறுகதைகள் புதிய தளங்களைக் கடந்து, புதிய எல்லைகளைத் தொட்டிருந்தன. குறிப்பிடத்தக்க ஆளுமைகள் உருவாகி நிலைபெற்றிருந்தார்கள். அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற சொல்லாடல்கள் உருவாக்கிய நட்பற்ற சூழலைக் கடந்து, சீரான இடைவெளிகளில் மிகச்சிறந்த சிறுகதைகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. கரிய ஏளனம் படிந்த குறுநகைகள் தோன்றித்தோன்றி நிராசைக்குள்ளாக்கி வந்த ஒருவித இறுக்கமான சூழலில், மன உறுதியும் தீராத வேட்கையும் கொண்டவர்கள் மட்டுமே படைப்புகளில் தம்மை இடைவிடாமல் வெளிப்படுத்தி வந்தார்கள்.

’நுண்வெளிக் கிரகணங்கள்’ என்னும் நாவல் வழியாக தொடக்கத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சு.வேணுகோபால், அடுத்தடுத்து சிறுகதை முயற்சிகளிலும் ஈடுபட்டார். வசீகரமான மொழியமைப்போடு எதார்த்தப் பின்னணியில் வாழ்வின் அவலங்களை அவருடைய சிறுகதைகள் முன்வைத்தன. அழிந்துகொண்டிருந்த விவசாயம், வாய்ப்புகளற்று கருகிச் சாம்பலாகிப் போகும் திறமைகள், சந்தர்ப்பங்கள் சார்ந்து நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறிமாறி நிறம்கொண்டு வாழும் தனிமனிதர்கள், எந்தப் பொதுஅறத்துக்கும் உட்படாத அவர்களுடைய மதிப்பீடுகள் என பல்வேறு தளங்களில் மாறிமாறி இயங்கிவந்த அவருடைய சிறுகதையுலகத்தின் நம்பத்தகுந்த தன்மையாலேயே, அக்கதைகள் உடனடியாக வாசகர்களின் கவனிப்பைப் பெற்றன. சிறந்த இளம்படைப்பாளுமைகளை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு பத்தியை தொடர்ந்து நான் அப்போது காலச்சுவடு இதழில் எழுதி வந்தேன். அந்த வரிசையில் நான் குறிப்பிட்டு எழுதிய அனைவருமே இன்று ஆளுமைகளாக மலர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கணிப்பு மெய்யாகியுள்ளது என்பதில் என் மனம் நிறைவடைகிறது. அந்தப் பட்டியலில் ஒரு பெயர் சு.வேணுகோபால்.

சு.வேணுகோபாலின் பெரும்பாலான சிறுகதைகள் இதழ்களில் பிரசுரமாகாமல் நேரடியாக புத்தக உருவத்தில் வெளிவந்தவை. வாழ்க்கை குறித்த ஆழமான பார்வையை அவருடைய படைப்புகள் கொண்டிருக்கின்றன. சம்பிரதாயமான கதைக்களங்களை நிராகரித்து, முற்றிலும் புதிய களங்களை அவர் கட்டியெழுப்பிக்கொள்கிறார். உரையாடல்கள் வழியாக கதையின் மையத்தை நோக்கி அவர் நிகழ்த்தும் பிரயாணம் மிகவும் சுவாரசியமானது. வாழ்க்கையில் மிகமிக இயற்கையாக மனிதர்களின் மேன்மை வெளிப்படும் தருணங்களை அடையாளப்படுத்துவதுபோலவே, மனிதர்களின் கீழ்மை வெளிப்படும் தருணங்களையும் அவருடைய படைப்புகள் முன்வைக்கின்றன. மேன்மைகளையும் கீழ்மைகளையும் எவ்வித சார்புகளும் அற்று மதிப்பிடும் பக்குவமும் முன்வைக்கும் தேர்ச்சியும் அவரிடம் ஒருங்கே காணப்படுகின்றன. அந்தக் குணமே, தமிழில் அவரைச் சிறந்த படைப்பாளியாக அடையாளப்படுத்த உதவும் பண்பாக இருக்கிறது.

எதிர்காலத்தில் சு.வேணுகோபாலின் பெயரை நிலைநிறுத்தப் போகும் சிறுகதைகளில் ஒன்று ’புத்துயிர்ப்பு’ என்னும் சிறுகதை. தல்ஸ்தோய் அடையாளப்படுத்தும் புத்துயிர்ப்பு வேறு. சு.வேணுகோபால் அடையாளப்படுத்தும் புத்துயிர்ப்பு முற்றிலும் வேறொரு தளத்தைச் சார்ந்தது. மழைபொய்த்து பூமியே வறண்டுபோன ஒரு கிராமம். ஆறும் காடும் வயல்களும் சூழ்ந்த கிராமமென்றாலும், எங்கும் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. ஒரே ஒரு பச்சைப்புல் கூட இல்லை. எங்கெங்கும் வறட்சி. இந்த வறட்சியின் பின்னணியில் இயங்கும் ஓர் விவசாயக்குடி இளைஞன் கோபாலின் இறுதிநாள் வாழ்வைப் படம்பிடிக்கிறது இக்கதை. ஒருபுறம் பிள்ளைத்தாய்ச்சியான மனைவி. இன்னொருபுறம், கன்றீனுவதற்காகக் காத்திருக்கும் வீட்டுப் பசு. பசுவுக்குத் தீவனம் கொடுக்க இயலாத ஊர்க்காரர்கள், வந்த விலைக்கு அதை விற்றுவிடுகிறார்கள். ஆனால், முதல் ஈத்தில் பதினேழு லிட்டர் பால் கறந்த பசு, இரண்டாவது ஈத்தில் அதற்குக் குறையாமல் கறக்கத் தொடங்கிவிட்டால் தான் பட்ட கஷ்டமெல்லாம் கரைந்துபோய்விடும் என்ற எண்ணத்தில் புல்லுக்கும் வைக்கோலுக்கும் அலைவதையே வாழ்க்கையாக கொண்டிருக்கிறான் கோபால். விலைக்குக்கூட அவனால் வைக்கோலை வாங்கமுடியவில்லை. ஒருநாள் முழுதும் அலைந்து திரிந்தும் வெறும் கையோடு திரும்ப நேர்கிறது. பசியோடு பசு நிலைகொள்ளாமல் தவிப்பதை அவனால் நேருக்குநேர் பார்க்கமுடியவில்லை. ஒரு வேகத்தில் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் கவுண்டர் தோட்டத்துக்குச் சென்று வைக்கோல் போரில் வைக்கோலைத் திருடி எடுத்துவர முயற்சி செய்தபோது பிடிபட்டு உதைபடுகிறான். அந்த அவமானத்தில் பூச்சிக்கொல்லியை எடுத்துக் குடித்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்கிறான். அப்போதுதான் அவன் மனைவிக்குப் பிரசவ வலி வந்து ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். பாசப்போராட்டத்தையும் பசிப்போராட்டத்தையும் மனப்போராட்டத்தையும் ஒரே கோட்டில் கொண்டு வந்து சித்தரித்திருக்கும் விதம் சு.வேணுகோபாலின் திறமைக்குச் சான்றாகும்.

இக்கதையின் இறுதியில், பிறந்த குழந்தையை வெயில் படும்படி சிறிது நேரம் பிடித்திருக்கும் சடங்கையொட்டி நகரும் சில கணங்கள் மிகமுக்கியமானவை. அந்தக் குழந்தையை வெயில் படும்படி பிடித்திருக்கும் ஒருத்தி, சுட்டெரிக்கும் சூரியனைப் பார்த்து ”கொஞ்சம்கூட இரக்கமே இல்லாமல் மேலே போகிற சூரியனே, இந்தா இந்தக் குழந்தையைப் பாரு” என்று மனவருத்தத்தோடு சொல்கிறாள். அத்தருணத்தில் அக்குழந்தை உடலை வளைத்து கையையும் காலையும் அசைக்கிறது. உதட்டோரம் ஒரு புன்னகை படர்கிறது. அந்தச் சிரிப்பை கடவுளைப் பார்த்து கேலியுடன் குழந்தை சிரிக்கும் சிரிப்பு என்று எழுதுகிறார் வேணுகோபால். அதையொட்டி, ஒரு மன எழுச்சியின் வேகத்தில் “குழந்தை தெய்வத்தின் தெய்வம், அது ஒருபோதும் எந்த அதிர்ச்சியையும் கண்டு பின்வாங்குவதில்லை” என்று ஒரு வாக்கியத்தை எழுதி கதையை முடித்துக்கொள்கிறார். தன்னிச்சையாக வந்து விழுந்திருக்கும் இந்த வரிதான் புத்துயிர்ப்பு கதையின் மையம் அல்லது கதை நிகழ்த்தும் அனுபவம் என்று சொல்லலாம். குழந்தை எந்த அதிர்ச்சியையும் கண்டு பின்வாங்குவதில்லை. ஆனால் மனிதர்கள் பின்வாங்குகிறார்கள். கோபம் கொள்கிறார்கள். அடித்துக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் கோழைகளாக உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஒருகணம், ஒரே ஒரு கணம் குழந்தை உள்ளத்தோடு அவர்கள் சூழலை எதிர்கொண்டிருந்தால், அவர்கள் பின்வாங்காமால் முன்னோக்கி நகர்ந்திருக்கக்கூடும். எனினும் அகம் கொந்தளிக்கும் மானுடம் என்பதே உலக நியதியாக இருக்கிறது.

வறட்சியின் கொடுமையைச் சித்தரிக்கும் ’உயிர்ச்சுனை’யும் முக்கியமான ஒரு சிறுகதை. மழை இல்லாததால் கிணற்றில் நீர்மட்டம் குறைந்துகுறைந்து ஒருநாள் இல்லாமலாகிவிடுகிறது. இன்னும் சில அடிகள் தோண்டி குழாய்களை இறக்கினால் ஒருவேளை நீர் வரலாம் என்னும் நம்பிக்கை பெரியவரிடம் இருக்கிறது. சொந்த மகளிடமே கடன் வாங்கி, அந்த விஷப்பரீட்சையில் இறங்குகிறார். அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்வி அடைந்துவிடுகிறார். தொடக்கத்தில் நீர் வருவதுபோல சில கணங்கள் இறைத்தாலும் அடுத்த சில கணங்களிலேயே நின்றுவிடுகிறது. தாத்தா துக்கத்தில் உறைந்து உட்கார்ந்துவிடுகிறார். கடன் கொடுத்த மகள் கோபத்தில் வெடிக்கிறாள். திருமணத்துக்குக் காத்திருக்கும் இன்னொரு மகள் அவநம்பிக்கையுடன் மெளனம் கொள்கிறாள். யாரும் கவனிப்பாரற்ற சூழலில் கீழே விழுந்து சிராய்ப்புடன் அழுதபடி எழுந்துவரும் பேரக்குழந்தையை அக்கறையோடு விசாரிக்க யாருமில்லை. யாராவது தன் சிராய்ப்பைப்பற்றி விசாரிக்கக்கூடும் என நினைத்த சிறுவன் ஒவ்வொருவரிடமும் சொல்ல முயன்று, தோல்வியில் துவண்டு, அழுகையுடன் நகர்ந்து அங்கிருந்த நாய்க்குட்டியிடம் சொல்லி அழுகிறான். இறுதியில் சொல்லின் பொருள் புரியாமல் ‘நான் செத்துப்போவப் போறேன்’ என்று அக்குட்டியிடம் சொல்லிவிட்டு நடந்துபோகிறான் அச்சிறுவன்.

புத்துயிர்ப்பு சிறுகதையில் இடம்பெற்றிருந்த குழந்தையின் பாத்திரத்துக்கு இணையாக, இக்கதையில் சிறுவனின் பாத்திரம் இடம்பெற்றிருக்கிறது. பெரியவர்களின் துக்கம் ஒரு முனையிலும் சிறுவனின் துக்கம் மற்றொரு முனையிலும் உள்ளது. பெரியவர்கள் தம் துக்கத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை. ஏதோ ஒரு தடை அவர்களைத் தடுக்கிறது. உள்ளுக்குள்ளேயே சுமந்து வருந்துகிறார்கள். பாரம் மென்மேலும் அதிகரிக்க வருத்தத்தில் மூழ்குகிறார்கள். தடை எதுவும் இல்லாத சிறுவன் தன் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள ஒவ்வொருவரையும் நாடுகிறான். ஆயினும் அதை காதுகொடுத்துக் கேட்க யாரும் தயாராக இல்லை. அதனாலேயே அவன் மனபாரம் இன்னும் அதிகரிக்கிறது. இருவித உயிர்ச்சுனைகளை சிறுகதை அடையாளம் காட்டுகிறது. ஒன்று பூமியின் ஆழத்தில் உள்ள உயிர்ச்சுனை. இன்னொன்று மன ஆழத்தில் உள்ள பரிவென்னும் உயிர்ச்சுனை. ஒன்றைக் காட்டும் விதத்தில் இன்னொன்றையும் உணரவைக்கும் மாயம் இச்சிறுகதையில் நிகழ்கிறது.

இன்னொரு அழகான சிறுகதை ‘வாழும் கலை’. வேலையற்ற கணவனையும் வேலை செய்யும் மனைவியையும் கொண்ட ஒரு குடும்பம். ஒரு காலத்தில் வேலை செய்து சம்பாதித்தவன் அவன். இப்போது வேலை இல்லை. அது ஒன்றே, அவன் மனைவிக்கு அவனை வெறுக்கவும் கண்டபடி பேசவும் போதுமான காரணமாக இருக்கிறது. அவனுடைய பெட்டியைத் தூக்கி வெளியே வீசுகிற அளவுக்கு அந்த வெறுப்பு வளர்ந்துவிடுகிறது. பணமில்லாதவன் பிணம் என்று அவள் சொன்ன சொல் அவனைச் சுடுகிறது. மனம் வெறுத்த சூழலால், அமைதியான இடம் தேடி வெளியே செல்கிறான் அவன். வாழும் கலையைப்பற்றி ஆழமான கருத்துகளைக் கொண்ட உரையைக் கேட்டறியும் ஆவலோடு கருத்தரங்கக்கூடத்தை அவன் நெருங்கிய சமயத்தில் நுழைவுக்கட்டணம் கட்டுகிறவர்களுக்கு மட்டுமே அங்கே அனுமதி உண்டு என்கிற உண்மை உணர்த்தப்பட்டதும் அவமான உணர்ச்சியோடு அங்கிருந்தும் வெளியேறுகிறான். ஏற்கனவே மனைவியால் விளைந்த அவமான உணர்ச்சி. பிறகு அந்தக் கருத்தரங்க அமைப்பினரால் விளைந்த அவமான உணர்ச்சி. மனம் கொந்தளிக்க நடந்துசெல்பவனின் கவனத்தை தெருவோரம் நடைபெறும் கழைக்கூத்தாட்டம் கவர்கிறது. நெருங்கிச் சென்று வேடிக்கை பார்க்கிறான். அங்கே ஆடுகிறவர்களும் பசிக்கொடுமையில் மூழ்கியவர்கள். வாழ்வதற்கான வழியைத் தேடுகிறவர்கள். முடிந்ததைச் சம்பாதிக்க முயற்சி செய்பவர்கள். சம்பாதிப்பதை பங்கிட்டுக்கொள்கிறவர்கள். எக்கருத்தரங்கத்திலும் கேட்டறியாத ஞானத்துடன் இயற்கையான ஞானத்துடன் வாழ்கிறார்கள் அவர்கள். யாருடைய சுட்டுதலும் இல்லாமல், இயற்கையிலேயே அவன் அந்த ஞானத்துடன் கரைந்துவிடுகிறான். தன் கையிலிருக்கும் நாணயத்தை, அக்கூத்தாடிகள் விரித்திருந்த சாக்கில் போட்டுவிட்டு, ஏதோ குடோன் பக்கம் நகர்ந்து வேலை தேடும் முயற்சியைத் தொடங்குகிறான். கதையின் இறுதிப்பகுதியில் சற்றே முற்போக்குக்கதையின் சாயல் படிந்திருப்பதுபோல ஒரு தோற்றம் காணப்பட்டாலும், அது உறுத்தலாக இல்லாத அளவுக்கு உள்ளொடுங்கியே இருக்கிறது. வாழும் கலையை கோட்பாடாகச் சொல்லும் ஒரு கோட்டையும் அதை வாழ்ந்து காட்டும் வாழ்க்கையாக இன்னொரு கோட்டையும் இழுத்து வைத்திருப்பதுதான் கதையின் சிறப்பாகும்.

சு. வேணுகோபாலின் சிறுகதையுலகில் விசித்திர மனிதர்களுக்குப் பஞ்சமே இல்லை. பிறந்த குழந்தையை யாரையும் தொடவிடாமலும் குழந்தையின் பசியை அடக்கத் தெரியாமலும் சாகடித்துவிட்டு, குழந்தை இறந்துவிட்டது என்னும் உண்மையைக்கூட உணரமுடியாமல் இறந்த குழந்தையுடன் திரிந்தலையும் பேதைத்தாய் ஒரு விசித்திரம். தன் இயலாமையை மதுவின் வழியாக மறைத்துக்கொண்டு வேலையற்றவனாகவும் யாருக்கும் பிடிக்காதவனாகவும் திரியும் கணவனை நெருங்கமுடியாதவள் தன்மீது சுமத்தப்பட்ட மலட்டுப்பட்டம் தீர மாமனாரை நெருங்கி நிற்கும் இளம்மருமகள் பாத்திரம் இன்னொரு விசித்திரம். தங்கைகளை ஒவ்வொருவராக கரையேற்றும் கடமையை உயிரென நினைத்து, அதற்காகவே தன் வாழ்நாளையெல்லாம் கழித்துவிட்டு, தன் பாலுணர்வுக்கு வடிகாலாக சகோதரியைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணும் சகோதரன் மற்றொரு விசித்திரமான பாத்திரம். அண்ணன் என்று வாய்நிறைய அழைக்கிற பக்கத்துவிட்டு இளம்பெண்ணை, தன் காமப்பசிக்கு உணவாக அழைக்க நினைக்கும் கணவன் பாத்திரமும் விசித்திரம் நிறைந்தது. அவர்கள் விசித்திரமான பாத்திரங்கள் என்பதற்காக அவர்களைப்பற்றி வேணுகோபால் எழுதவில்லை. அத்தகு விசித்திரங்களோடு அவர்கள் வாழ்ந்தே தீரவேண்டியதொரு துரதிருஷ்டவசமான சூழல்நெருக்கடிகளில் எப்படியெல்லாம் சிக்கி அகப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளும்பொருட்டு உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

ஏறத்தாழ இருபதாண்டுகளாக சு.வேணுகோபால் எழுதி வருகிறார். அவருடைய எழுத்துக்கு உரிய கவனம் கிடைக்காத நிலையிலும் அவர் வற்றாத ஆர்வத்துடன் தொடர்ந்து இயங்கிவருவது ஆறுதலாக உள்ளது. எந்தக் கட்டத்திலும் அவர் மனம் எங்கும் கசப்பையோ பெருமூச்சையோ வெளிப்படுத்தியதில்லை. எழுத்தை உயிராக நினைப்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். எழுத்தையொட்டி அவர் மனம் உருவாக்கிவைத்திருக்கும் நம்பிக்கை பாராட்டுக்குரியது. மிக அரிய பண்பு இது. வெற்றியோ தோல்வியோ அந்த நம்பிக்கையை ஒருபோதும் அசைத்துவிடமுடியாது.